Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Muthusami’ Category

Ramanujam: Contemporary Performers, Modern Drama, Theater Scene in Tamil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

ஆவணம்: நாடக இராமானுஜம்!

நாடகங்கள் என்றதும் சபா நாடகங்கள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. நவீன நாடகங்கள் என்ற பிரயோகம் சிலருக்கு அறிமுகமாகியிருக்கலாம்.

“”நடிப்பவர் தனியாகவும் பார்வையாளர் தனியாகவும் இரண்டு பகுதிகளாகச் செயல்படுவதை நவீன நாடகங்கள் மாற்றுகின்றன. சொல்லப் போனால் பார்வையாளர்களையும் அந்த நாடகத்தின் ஓர் அங்கமாகவும் அவர்களையும் படைப்பாளியாகவும் மாற்றும் சக்தியாக நவீன நாடகங்கள் இருக்கின்றன”- என்கிறார் நவீன நாடகத்தின் முக்கிய நபரான சே. இராமானுஜம்.

இவரைப் பற்றி ஆவணப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. எழுதி இயக்கியிருப்பவர் சி.அண்ணாமலை. இந்த ஆவணப்படத்தைக் குறித்து அவரிடம் கேட்டோம்.

“”வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் என்பது போல இந்திய நாடக மேதையான இப்ராபீம் அல்காசியிடம் சிறந்த மாணவர் என்று பெயர் எடுத்தவர் இராமானுஜம்.<

நாடகம் என்பது இன்னொரு வாழ்க்கை. நாடகம் என்பது நாடக ஆசிரியன், நடிகன், பார்வையாளனை ஒருங்கிணைப்பது என்பது இவருடைய நாடகத் தன்மையின் முக்கியமான வித்தியாசம். கடந்த 45 ஆண்டுகளாக இவர் நவீன நாடகத்துக்காகப் பாடுபட்டுவருகிறார்.

ஷேக்ஸ்பியர், டி.எஸ். எலியட், பிரெக்ட், தாகூர், பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர், இந்திரா பார்த்தசாரதி, ஜி. சங்கரபிள்ளை, ந.முத்துசாமி, ஜெயந்தன் உள்ளிட்டோரின் நாடகங்களை இவர் இயக்கியிருக்கிறார்.

தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நாடகங்கள் இயக்கியிருக்கிறார். நாடகத்தை எழுத்தில் பார்ப்பதற்கும் நடிப்பில் கொண்டு வருவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நடிப்பு என்பது உடல் செயல்பாடு, உச்சரிக்கும் மொழியின் ஓசை, அதற்கான காட்சியின் பின்புலத்தில் நாடகம் நிகழ்த்தப்படுகிறது” என்கிறார் இராமானுஜம்.

பல மொழி நாடகங்களை இயக்கியிருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது “”நான் பல மொழி நாடகங்களை இயக்கி வருகிறேன். அத்தனை மொழிகளிலும் எனக்குப் பாண்டித்யம் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் அந்தந்த மொழியின் ஓசையை வைத்தே சரியாக வந்திருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என அவர் உறுதியாகக் கூறுகிறார்.

தேசிய நாடகப் பள்ளியில் முறையாகப் பயின்ற நாடக இயக்குநர்களில் முக்கியமானவராக இன்று நம்மிடையே இருப்பவர் ராமானுஜம்.

கேரளம், மைசூர், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் ஏராளமான நாடகங்களை அரங்கேற்றியவர்- பல நாடக எழுத்தாளர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர் என்பதால் அங்கெல்லாம் சென்று ஆவணங்கள் சேகரித்தோம். ஏறத்தாழ ஓராண்டுகாலத்துக்கு மேல் இந்த ஆவணத்துக்கு அவகாசம் தேவைப்பட்டது.

அவருடைய நாடகத்துக்கான நடிகர்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, கிடைத்த நடிகர்களை வைத்துதான் நாடகம் செய்கிறேன். ஒரு நடிகனைப் பிறக்க வைக்க முடியாது, உருவாக்கத்தான் முடியும். அவனிடம் மறைந்து இருக்கும் திறமைகளை வெளிக்கொணர பயிற்சி தேவைப்படுகிறது என்கிறார்.

நாற்காலிக்காரர், வெறியாட்டும், மெüனபுறம், கருப்புத் தெய்வங்கள் இவருடைய நாடகங்களில் முக்கியமானவை. இப்போது 400 ஆண்டு பழைமையான கைசீக நாடகத்தை ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஏகாதசி அன்று திருக்குறுங்குடி கோவிலில் அரங்கேற்றி வருகிறார். ஆண் டுதோறும் அந்த நாடகத்துக்கான பழைய வரலாறுகள் கிடைக்கும்போதெல்லாம் அவற்றையும் அதில் சேர்த்து வருகிறார்.

72 வயதான பேராசிரியர் ராமானுஜத்துக்கு உண்மையான காணிக்கை இந்தப் படம்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார் சி. அண்ணாமலை

. முத்தையா வெள்ளையன்

Posted in Contemporary, Drama, IPa, IPaa, Modern, Muthusami, Performance, Performers, Ramanujam, Stage, Theaters, Theatres | Leave a Comment »

Charukesi: Ramanujar & Muthusamy Dikshithar – Dinamani Theater Reviews

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

ராமானுஜரும், முத்துசாமி தீட்சிதரும்

ராமானுஜர் மதப்புரட்சி செய்த மகான். சாதிப் பாகுபாடுகளைத் தாண்டி எல்லோரையும் சமமாகப் பார்த்த சன்னியாசி.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் தமிழ் நாடகத்தின் ஆங்கில வடிவத்தை, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மாணாக்கர் சிலர், பேராசிரியர் ரஜானியின் இயக்கத்தில் நடித்தார்கள். ஆனால் ராமானுஜர் வேடத்தில் நடித்தவர் அம்ருதா கரயில் என்கிற இளம்பெண். குற்றவியல்துறை மாணவி. ஓர் ஆண் கூடவா ராமானுஜர் வேடத்தை ஏற்க முன்வரவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ராமானுஜர் வேடமேற்ற பெண் திருப்திகரமாக நடித்தார் என்பது மட்டும் நமக்குப் போதும்.

நாடக வடிவின் நூலைப் பெற்றுக்கொண்ட திருக்காட்டுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திரா பார்த்தசாரதியின் இருபது வருட நண்பராம். அவர் பேச்சு நவீன இலக்கியவாதியின் உரைபோல இருந்ததே தவிர, அரசியல்வாதியின் “நடை’யாக இருக்கவில்லை.

தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை, அவர் அந்தணர் அல்லாதவர் என்பதற்காக மனைவி அவரைத் திண்ணையில் அமரச் செய்து அமுது படைத்ததற்காக, ராமானுஜர் அவளுடன் தன் வாழ்க்கையையே முறித்துக்கொண்டு விடுகிற நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.

தனக்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பலரையும் மனம் மாறச் செய்து வெல்ல முடிந்த ராமானுஜரால், மனைவியின் மனத்தை மாற்ற முடிந்திருக்காதா? அவர் அப்படிச் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை, நூலை வெளியிட்ட “ஹிந்து’ ஆசிரியர் ரவியும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் எழுப்பினர். தம் உரையில் இந்திரா பார்த்தசாரதி இதற்கு பதில் ஏதும் தரவில்லை. “நாடகத்தைப் படைத்தேன்’ அத்தோடு என் பணி முடிந்தது என்றார்.

மொழிபெயர்ப்பில், குறிப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மகானின் வரலாறு பற்றிச் சொல்லும்போது, ஆங்கிலத்தில் எத்தகைய சொற்-சங்கடங்கள் எழுகின்றன என விவரித்தார் பேராசிரியர் ஸ்ரீமான். இவர் ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர். (ஆனால் மொழியாக்கம் தமக்குத் திருப்தி அளித்ததாகவே இந்திரா பார்த்தசாரதி அங்கீகரித்துவிட்டார்.)

ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸின் இந்திய படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் பணியை மேற்கொண்டிருக்கும் மினி கிருஷ்ணன் உரை “மினி உரை’ என்றால், நூலுக்கு நீண்ட முன்னுரை வழங்கியிருக்கும் ஆங்கிலப் பேராசிரியர் சி.டி.இந்திரா, இந்த நூல் வெளிவர, தாம் தில்லி வரை சண்டை போட்டுவிட்டு வந்த சரித்திரத்தை சாங்கோபாங்கமாக “மாக்ஸி உரை’யாக நிகழ்த்தினார். (நமக்குப் பொறுமையைச் சோதித்த பேச்சுதான். ஆனால் அவருடைய ஆதங்கத்தை இந்த இடத்தில் வெளியிடாமல் வேறு எங்கே, எப்போது வெளியிடுவார், பாவம்!)

“நந்தன் கதை’ போலவே “ராமானுஜரு’ம் இந்திரா பார்த்தசாரதியின் மனித சாதியிடையே பிரிவு காணலாகாது என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்பு. தமிழில் இந்த நாடகத்தை விரைவில் மேடையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கர்நாடக இசையின் சரித்திரத்தில், மூன்று கிறிஸ்துவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஒருவர் ஆபிரகாம் பண்டிதர். இன்னொருவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மூன்றாமவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர்தான் ஏ.எம்.சின்னசாமி முதலியார் என்கிற கத்தோலிக்க கிறிஸ்தவர். “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ என்ற தெலுங்கு நூலை வெளிச்சத்துக்கு கொண்டு வர தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்த அந்நாளைய அரசு ஊழியர். ஆங்கிலேய ஆட்சியில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பணிபுரிந்த இந்த அபூர்வ மனிதரைப் பற்றிய காலை நேரச் சொற்பொழிவு ஒன்றில், இணையற்ற ஆங்கிலப் பேச்சாளர் வி.ஸ்ரீராம் தொகுத்து அளித்த விவரங்கள் இதுவரை யாரும் அறியாதவை.

“சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ நூல் இசை மாணாக்கர்களுக்கு தேவையான ராக லட்சணங்களையும், ஸ்வரங்களையும், கமகங்களையும் அறிமுகப்படுத்தும் நூல். இவருக்குத் துணை நின்றவர் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதரின் மகன் சுப்பராம தீட்சிதர். ஒருசமயத்தில் எட்டயபுர சமஸ்தான வித்துவானாக இருந்தவர். (இவரைக் குறித்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கூட ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.)

மின்சாரம் கிடையாது, கம்ப்யூட்டர் கிடையாது, நவீன அச்சுக்கோக்கும் எந்திரம் கிடையாது. இத்தனை “கிடையாது’-களுக்கும் இடையே, மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமாகி, சென்னையை விட்டுப் புறநகர் போய் வசிக்கும் சூழ்நிலையிலும், சின்னசாமி முதலியார் மனம் தளர்ந்துவிடவில்லை. பென்ஷன் தொகை எல்லாம்கூட நூலுக்காகச் செலவிடுகிறார். கடன் ரூ.28000-த்தைத் தாண்டி விடுகிறது. மனைவியின் நகைகளை எல்லாம் விற்றுவிடுகிறார். ஆனால் அவர் குறிக்கோள் எல்லாம் எப்படியாவது நூல் வெளியாக வேண்டும் என்பதே.

கர்நாடக இசையின் பங்களிப்பில் பங்கு கொண்ட அத்தனை வாக்யேக்காரர்களின் பாடல்களையும் திரட்டி, அவற்றை ஆங்கில இலைக்கலைஞர்களும் பாடும் அல்லது வாசிக்கும் வகையில் ஸ்டாஃப் நொட்டேஷன் செய்து பரப்ப இவர் எடுத்துக் கொண்ட முயற்சி இவ்வளவு, அவ்வளவு அல்ல. “”ஜெயதேவர், புரந்தரதாசர், நாராயண தீர்த்தர், அருணாசலக் கவி ஆகியோரின் பாடல்களைவிட, நவீன ஓரியண்டல் இசை என்று எடுத்துக் கொண்டால், தியாகராஜ சுவாமிகளின் பாடல்களுக்குத்தான் முதல் இடம்’ என்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஐரோப்பிய வயலின் இசைக் கலைஞர்களைக் கொண்டு, நொட்டேஷன்-களின்படியே இசைக்கச் செய்து வெற்றி கண்டவர் இவர்.

முத்துசாமி தீட்சிதரின் கிருதிகளை வெளியே கொண்டு வர, சின்னசாமி முதலியார் பட்டபாடு இருக்கிறதே, அது “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ அச்சில் கொண்டு வர அவர் பட்ட பாட்டைப் போலவே உருக்கமானது.

இறுதியில் சுப்பராம தீட்சிதர் பணியாற்றிய எட்டயபுரம் சமஸ்தான மன்னரின் உதவியோடு, அங்கேயே அச்சகம் நிறுவச் செய்து, 1906-ல் சுப்பராம தீட்சிதரே அந்த நூலை வெளியிடும் சமயம், சின்னசாமி முதலியார் காலமாகிவிடுகிறார். ஆனால் அதற்காகப் பாடுபட்ட தன் நண்பரின் நினைவுக்கு அந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் சுப்பராம தீட்சிதர்.

முத்துசாமி தீட்சிதரின் பாடல்களை, அவர் தமது பிரதம சீடர்களான தஞ்சை நால்வர்களுக்கும், தேவதாசிகளுக்கும், நாதஸ்வர வித்துவான்களுக்கும் கற்றுக்கொடுத்தார். அதனால் ராமானுஜர் போலவே, முத்துசாமி தீட்சிதரும் சாதியுணர்வு தாண்டி நின்ற மேதை எனலாம்.

சாருகேசி

Posted in Authors, Books, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Dikshithar, Dinamani, Drama, Indira Parthasarathy, Indra Parthasarathy, IPa, IPaa, Literature, music, Muthusami, Muthusamy, Oxford, publications, Publishers, Ramanujam, Ramanujan, Ramanujar, Reviews, Saarukesi, Sarukesi, Shows, Stage, Tamil, Theater, Theatre, Translations, Works, Writers | Leave a Comment »