Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Mullai Periyar’ Category

Water supply & distribution in Tamil Nadu – Inter-state relations, Dam Construction, Rivers

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

மூன்று பக்கமும் துரோகம்; ஒரு பக்கம் கடல்!

கே. மனோகரன்

தமிழகம்போல இன்று தண்ணீருக்காகத் தவித்து நிற்கும் மாநிலம் இந்தியாவில் வேறொன்று இருக்க முடியாது.

கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன. நமக்குப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரே நீர்ஆதாரம் கடல்தான். தாகத்துக்கு கடல்நீரைக் காய்ச்சிக் குடிக்கலாம். ஆனால் விவசாயம் செய்ய முடியுமா?

தண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மல்லு கட்டுவதற்கே ஆண்டுகளை இழந்ததுடன், இருக்கும் ஏரி குளங்களையும் நாம் பாழாக்கி இழந்து வருகிறோம்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது பூண்டி நீர்த்தேக்கம். குசஸ்தலை ஆற்றிலிருந்துதான் இந்த நீர்த்தேக்கத்துக்குத் தண்ணீர் வரவேண்டும். இந்த ஆறு பள்ளிப்பட்டில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் 12 கி.மீ. தூரத்தில் தொடங்குகிறது.

அங்குள்ள அம்மபள்ளி என்ற இடத்தில் 1975-ம் ஆண்டு தொடங்கி 1982-ம் ஆண்டு வரை இருமலைகளையும் இணைத்து அணை கட்டும் பணி நடந்தது. ஆனால் இப்படி ஓர் அணை கட்டப்படுவதுகூட தெரியாமல் தமிழக அரசு அமைதியாக இருந்தது. அதன் பிறகு குசஸ்தலை ஆறு தமிழகத்துக்குத் தண்ணீர் தரவில்லை. தலைவலி தந்தது. வறண்டுபோனது பூண்டி நீர்த்தேக்கம்.

குசஸ்தலை ஆறு தடைபட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயம் குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பற்றித்தான் கவலைப்பட்டது. ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் பல கோடிகளை தமிழக அரசிடம் பங்குத்தொகையாகப் பெற்ற ஆந்திர அரசு, அந்த நிதியில் சித்தூர், கடப்பா போன்ற வறட்சியான மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள ஏரிகளைப் புனரமைத்தும், மிகப்பெரிய ஏரியான பிச்சாட்டூர் ஏரியை சீரமைத்தும், புதிய நீர்த்தேக்கங்களையும் கட்டி கால்வாய்கள் மூலம் இணைத்து தன்னை வளப்படுத்திக் கொண்டது.

சென்னைக்கு தண்ணீர் தருவதாகச் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் “ஜீரோ பாய்ண்ட்’ எனப்பட்ட கண்டலேறு வரை தண்ணீர் வந்ததே தவிர சென்னைக்கு வரவில்லை. இதனால் தவிர்க்க முடியாமல் புதிய வீராணம் திட்டத்தை தமிழகம் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் பாலாற்றுக்கு முதல் பாதிப்பை ஏற்படுத்தியது கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலா நீர்த்தேக்கம். கர்நாடகம் படிப்படியாக அதன் கொள்ளளவையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் பாலாற்றின் நீர்வரத்து குறைந்து போனது.

கர்நாடகத்துக்கும், தமிழக எல்லைக்கும் இடையில் பாலாற்றுக்கு வரும் உபநதிகளான மல்லிநாயக்கனஹள்ளி ஆறு, பெட்மடு ஆறு ஆகியவற்றின் குறுக்கே தலா 4 ஏரிகளை ஆந்திர அரசு கட்டிவிட்டது. இதேபோல் தமிழக எல்லையின் 3 கி.மீ. தூரத்தில் 2000-ம் ஆண்டில் பாலாற்றின் உப நதியான மண்ணாற்றின் குறுக்கே பெரியபள்ளம் என்ற இடத்தில் ரூ. 65 லட்சத்திலும், அதே நேரத்தில் எல்லையின் சில நூறு அடிகள் தூரத்தில் பிரம்மதேவர் கொல்லை என்ற லட்சுமிபுரத்தில் ரூ. 1.20 கோடியில் இருமலைகளை இணைத்து ஆந்திர அரசு அணைகளை கட்டியது.

இவற்றுக்கு எவ்வித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் தற்போது குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே பெரிய அளவிலான அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் தமிழக அரசு புதிய அணைத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் காவிரி வடிகாலில் கிடைக்கும் கூடுதல் நீர் சராசரியாக 30 டி.எம்.சி. கடலில் வீணாகக் கலக்கிறது. இந்த தண்ணீரில் மட்டுமே 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யலாம்.

ஆளியாறு மூலம் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காத கேரளம், முல்லைப் பெரியாறு அணையில் முரண்டு பண்ணிக்கொண்டு வருகிறது. சிறுவாணி அணைக்கு வரும் நீரின் அளவு குறையும் வகையில், அதன் துணைநதிகளை தனியார் குடிநீர் ஆலைகளுக்கு தாரை வார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது கேரளம்.

காவிரியை தமிழகத்தின் வாய்க்கால் போலக் கருதி, மிகைநீரை மட்டுமே வழங்குகிற திட்டத்தை கர்நாடகம் எப்போதோ தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறது.

தமிழகத்துக்கான நீர் ஆதாரங்கள் அனைத்தையும் இந்த மூன்று மாநிலங்களும் மறித்துக் கொண்டு வருகின்றன.

இழந்த தண்ணீரைப் பெற முடியாவிட்டாலும், கிடைக்கும் நீரையாவது உருப்படியாகப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும். இல்லையேல், தமிழர்களின் கண்ணீரால் கடல் நீர் மேலும் கரிக்கும்.

————————————————————————————————————————–
பாலாற்றில் விளையாடும் அரசியல்!

ஆர். ராமலிங்கம்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு விரைவில் அணை கட்டத் தொடங்கும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உறுதிபட கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.

அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய விவரம் கண்ணுக்கெட்டியதூரம் வரை தெரியவில்லை. தமிழக முதல்வரும் இவ்விஷயத்தில் நம்பிக்கையூட்டும் தகவலை இதுவரை தெரிவிக்கவில்லை.

இதை எதிர்க்கட்சிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலாறு விவகாரத்தில் ஆளும் திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்ற ரீதியில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற தோழமைக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றன.

கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 40 கி.மீ. தூரமும் ஆந்திரத்தில் 31 கி.மீ. தூரமும், தமிழகத்தில் 222 கி.மீ. தூரமும் பயணிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாக, அவ்வப்போது பெய்யும் கனமழைதான் தமிழக பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையை ஈரப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே பாலாற்றில் நீர்வரத்து இருந்துள்ளது.

பாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு பேத்தமங்கலத்தில் அணை கட்டியுள்ளது. அந்த மாநிலம் வெளியேற்றும் உபரி நீரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி ஆந்திர அரசு நீர்நிலைகளை நிரப்பி வருகிறது.

மழைக் காலங்களில் அதிர்ஷ்டவசமாக ஆந்திர எல்லையில் இருந்து ஒருசில தினங்கள் வரும் நீருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. கணேசபுரம் என்ற இடத்தில் ஆந்திர அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் பாலாறு பொய்த்துவிடுமே என தமிழகத்தின் வடமாவட்ட மக்களின் அச்சப்படுகின்றனர்.

தற்போது மணல் சுரண்டல், நீர்வளம் பறிபோதல், தோல் தொழிற்சாலைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் கழிவுநீரை வெளியேற்றுவதால் படுகை மாசுபடுதல் போன்ற மும்முனைத் தாக்குதலில் தமிழக பாலாற்றுப் பகுதி சிக்கியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1892-ல் தமிழகத்தில் பாயும் 12 ஆறுகளுக்கு நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அவற்றில் பாலாறும் இடம் பெற்றுள்ளது.

அன்றைய மைசூர் மற்றும் மதராஸ் அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தங்கள் 1952 வரை அமலில் இருந்தது. அன்றைக்கு சித்தூர் மாவட்டம், சென்னை மாகாணத்தில் இடம்பெற்றிருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது சித்தூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் பாலாற்று நீர்வளத்தில் ஆந்திர மாநிலத்துக்கும் பங்களிக்கும் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பாரம்பரிய உரிமை அடிப்படையில்தான் இன்றைக்கு தமிழகம் பாலாற்று பிரச்னையை அணுக வேண்டியுள்ளது.

இரு மாநில எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாலாற்று பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதில் பங்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, காவிரி நீர் பங்கீட்டை போன்று பாலாற்று நீரில் தனக்குள்ள பங்கீட்டு உரிமையை தமிழகம் நிலைநாட்டுவது ஒன்றே தீர்வாக அமையும்.

நதிநீர் பங்கீடு உரிமையை நிலைநாட்டுவதன் மூலம் பாலாற்று நீர்வரத்தில் 60 சதவீதத்தை தமிழகம் பெற வாய்ப்பு உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, மத்திய அரசு 1956-ல் கொண்டு வந்த நதிநீர் வாரியச் சட்டத்தை பயன்படுத்த முடியும். தமிழக அரசு மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இச்சட்டத்துக்கு உயிரூட்டலாம்.

மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை எழுந்தால் இச்சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு வாரியத்தை ஏற்படுத்த முடியும்.

அதன் மூலம் மாநிலங்களுக்கிடையே உள்ள நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்கு தக்க அறிவுரையை வழங்க முடியும். புதிதாக நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஒன்றையும் மாநிலங்களுக்கிடையே ஏற்படுத்த முடியும்.

தமிழக அரசியல் கட்சிகளிடையே மக்களின் பொதுப் பிரச்னைகளில் கூட ஒற்றுமையின்மை நிலவுவது உலகறிந்த உண்மை. இது அண்டை மாநிலங்களுக்கு பலமாக அமைந்துள்ளது.

பாலாறு விஷயத்தில் திமுக அரசும், எதிர்கட்சிகளும் ஒன்றையொன்று குறைகூறி அரசியலாக்குவதைத் தவிர்த்து ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இறங்கினால் மட்டுமே நதிநீர் பங்கீட்டில் அண்டை மாநிலங்களின் அடாவடித்தனத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நதிநீர் பிரச்னைகளில் தமிழகம் இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இதன் மூலம் பாலாற்று பிரச்னையில் மத்திய அரசும், நீதிமன்றமும் தலையிடுவதற்கான நெருக்கடியை தமிழகத்தால் ஏற்படுத்த முடியும்.

ஆர்ப்பாட்ட அரசியலைக் காட்டிலும், ஆரோக்கிய அரசியலே ஆபத்தைத் தடுக்க முடியும். தமிழக அரசியல் தலைவர்கள் சிந்திப்பார்களா?

—————————————————————————————————————–
மக்கள் திரள் போராட்டம்-காலத்தின் கட்டாயம்

பழ. நெடுமாறன்


தமிழ்நாட்டில் ஏரி, குளம், ஆறுகளுக்குப் பஞ்சம் இல்லை. காடுகள் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் உண்டு. தென்மேற்குப் பருவ மழை, வட கிழக்குப் பருவ மழை ஆகிய இரு பருவ மழைகள் ஒருபோதும் பொய்த்ததில்லை. முப்புறம் கடலும் உள்நாட்டில் ஏராளமான கனிம வளங்களும் உள்ளன. உழைப்பதற்குச் சலிக்காத மக்களும் உண்டு. அறிவாற்றலுக்குப் பஞ்சமில்லை. இத்தனை வளங்களும் நிறைந்திருந்த தமிழ்நாடு இன்றைக்கு என்னவாகியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வேதனையும் விரக்தியுமே மிஞ்சுகின்றன.

நீரில்லா ஆறுகள்

தமிழ்நாடு எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி மீள முடியாதபடி தவிக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதிப்பதற்கு கர்நாடகமும் கேரளமும் பிடிவாதமாக மறுக்கின்றன. பாலாற்றில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் வகையில் ஆந்திரம் தனது எல்லைக்குள் அணை கட்ட முற்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆறுகளின் மூலம் தமிழ்நாட்டில் இருபது மாவட்டங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் இப்போது இந்த மாவட்டங்கள் பாசனத்திற்குரிய நீரை இழந்து வறண்ட பகுதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக மாறினால் உணவுக்காக பிற மாநிலங்களிடம் தமிழகம் கையேந்தி நிற்கக்கூடிய நிலைமை உருவாகிவிடும்.

விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் போதுமான நீரில்லாமல் நாம் தவிக்கும்போது, ஆறுகளிலும் நிலத்தடியிலும் எஞ்சியுள்ள சிறிதளவு நீரையும் உறிஞ்சி எடுத்து விற்பனைப் பொருளாக “கோகோ கோலா’, “பெப்சி’ போன்ற அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அவலமும் நடைபெறுகிறது.

நகர்ப்புற மக்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கே குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மணல் கொள்ளை

அண்டை மாநிலங்களின் வஞ்சனையால் வறண்டுவிட்ட இந்த ஆறுகளிலிருந்து மணல் மிக எளிதாகக் கொள்ளை அடிக்கப்படுகிறது. எந்த மாநிலங்கள் நமக்குத் தண்ணீர் தர மறுக்கின்றனவோ அதே கேரள மாநிலத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் லாரிலாரியாகத் தமிழக ஆற்று மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல் கொள்ளை அடிப்பதற்கு வசதியாக இந்த ஆறுகளில் நீரோட்டம் இல்லாமல் அண்டை மாநிலங்கள் செய்து விட்டனவோ என்றுகூட சந்தேகம் எழுகிறது. இந்த ஆறுகள் வறண்டு போவதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் தமிழக அரசு இருப்பதற்கு இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பவர்கள் சென்ற ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி ஆளும் கட்சியினரே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழகத்தின் மற்ற ஆறுகளிலும் ஓடைகளிலும் மணல் அடியோடு சுரண்டப்படுகிறது. இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் தமிழக ஆறுகளின் இரு பக்கமும் உள்ள கிணறுகளும் நீரூற்றுகளும் வறண்டு போய் மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை உருவாகிவிடும். மேலும் இந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள், பாலங்கள் ஆகியவை மணல் கொள்ளையின் விளைவாக பலவீனம் அடைந்து இடியும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் சென்னைக்கு அருகே காரனோடை பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறையும் ஏரிகள்

ஆறுகளின் கதி இதுதான் என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சுருங்கி வருகின்றன. பல ஏரிகள் உண்மையிலேயே காணாமல் போய்விட்டன. தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமான 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன. தமிழக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு இந்த ஏரிகள் பாசன வசதி அளித்து வந்தன. இவற்றின் மூலம் பத்து லட்சம் ஹெக்டேர்கள் பயன் பெற்றன.

1980-ஆம் ஆண்டில் இந்த ஏரிகளின் பாசன வசதிகளை நவீனமயப்படுத்துவதன் மூலம் மேலும் 54 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பயன் பெறும் என மதிப்பிடப்பட்டது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ. 200 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டபோது அந்தத் தொகையை ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு தருவதாக ஒப்புக்கொண்டு இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 27 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்த வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இது ஏன் என்பதை ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.

தமிழ்நாட்டில் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள ஏரிகளைப் பொதுப்பணித்துறையும் அதற்குக் குறைவாக உள்ள ஏரிகளை ஊராட்சி ஒன்றியங்களும் நிர்வகித்து வருகின்றன. இவை தவிர அணை நீரைப் பெற்று பாசனம் செய்யும் 100 ஏக்கருக்கும் குறைவான சில ஏரிகளையும் பொதுப்பணித்துறை நிர்வகிக்கிறது. பொதுப்பணித்துறையின் கீழ் 12 ஆயிரம் ஏரிகளும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 27 ஆயிரம் ஏரிகளும் உள்ளன.

கடந்த நாற்பதாண்டுகளில் இந்த ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. ஏரிகளில் மட்டுமல்ல; ஏரிகளுக்கு மழை நீரைக் கொண்டு வரும் பகுதிகளும் ஏரியிலிருந்து நீரை நிலங்களுக்குக் கொண்டு செல்லும் கால்வாய்களும்கூட ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை. இதன் காரணமாக பல ஏரிகள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தனி நபர்கள் ஆக்கிரமித்த ஏரிகளை விட அரசுத் தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் இன்னும் அதிகமாகும். நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக் கூடங்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் ஏரிகளுக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ளன.

ஏரிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த உயர் நீதிமன்றத்தின் கட்டடமே உலகநேரி கண்மாயில் கட்டப்பட்டுள்ளது என்பது வேதனையான உண்மை.

ஊராட்சி ஒன்றியங்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த 27 ஆயிரம் கண்மாய்களில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் எல்லைகள் சுருங்கி அழிந்து வரும் அபாயம் உள்ளது. ஏரிகளிலும் கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சீரமைக்கவும் அதன் நீர் வழி எல்லைகளை வகுக்கவும் அண்மையில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்திருப்பவர்களை வெளியேற்றும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கோ அல்லது ஊராட்சித் தலைவர்களுக்கோ இல்லை.

ஆக்கிரமிப்புகள் திடீரென்று ஓரிரு நாள்களில் நடைபெற்றுவிடவில்லை. ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டோ அல்லது அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு கடமை தவறிய இந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற ஆணையில் எதுவும் கூறப்படவில்லை என்பது திடுக்கிட வைக்கும் உண்மையாகும்.

காடுகள் அழிப்பு

1967-ஆம் ஆண்டுக்கு முன், தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகள் 23 விழுக்காடாக இருந்தது. இப்போது தமிழகக் காடுகளின் பரப்பளவு என்பது 17 விழுக்காடாகும். 6 விழுக்காட்டிற்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுவிட்டன. காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளின் ஊழலால் இது நடைபெறுகிறது. அரசியல்வாதிகளின் ஒப்புதல் இல்லாமல் இது நடைபெறாது. இதன் விளைவாக பருவ மழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் ஆறுகள் வற்றத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் கடற்கரை 1000 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. பல இடங்களில் கரையோரமாக அலையாற்றுக் காடுகள் இருந்தன. தென் மாவட்டங்களில் கடற்கரை நெடுகிலும் தேரிகள் என அழைக்கப்படும் மணற்குன்றுகள் இயற்கையாக அமைந்திருந்தன. ஆனால் இந்தக் காடுகளையும் மரம் வெட்டுபவர்கள் விட்டு வைக்கவில்லை. மணற்குன்றுகளையும் சிதைத்து விட்டார்கள். இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சுனாமி அலைகள் வீசியபோது அவற்றைத் தடுக்கும் அலையாற்றுக் காடுகளும் தேரிகளும் இல்லாததன் விளைவாக பேரழிவு ஏற்பட்டது.

மோதல் சாவுகள்

காவல்துறை மக்களை வேட்டையாடும் துறையாக மாறிவிட்டது. ஆளும் கட்சியினரின் ஏவல்படையாக காவல்துறை மாற்றப்பட்டு நீண்ட நாள்களாகிவிட்டது. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களுக்கு எதிரான பல்வேறு வகையான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.

சொல்லாமலேயே மற்றொரு பெரும் கொடுமை தமிழகத்தில் தங்குதடையின்றி அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகள் எனக் குற்றம்சாட்டி இந்தக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க காவல்துறை முயல்கிறது. அது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் நீதிமன்றங்களிடமிருந்து காவல்துறை, தானே பறித்துக் கொண்டது. இந்தக் குற்றவாளிகளை உருவாக்கி வளர்த்துவிட்டதில் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதில் சமபங்கு காவல் துறைக்கும் உண்டு.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் ஆட்டிப் படைக்கப்படுகிறார்கள் – சுரண்டப்படுகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், சமூகவிரோதிகள் ஆகிய முத்தரப்பு கூட்டு உருவாகி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அக்கிரமங்களையும் தங்குதடையின்றி நடத்துகிறது.

மீறப்படும் சட்டமன்ற மரபுகள்

சட்டமன்றத்தில் இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருபவர்கள் பேச முடியாதபடி தடுக்கப்படுகின்றனர். வெவ்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி அரசுக்கு எதிராக யாரும் எதுவும் கூறிவிடாதபடி தடுக்க முயற்சி வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது.

ஆளும் கட்சிதான் இவ்வாறு சட்டமன்ற மரபுகளைத் துச்சமாகக் கருதி மதிக்காமல் போனால் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அவ்வாறே நடந்து கொள்கிறது. எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதே கிடையாது. வெளியே இருந்து கொண்டு ஆளும் கட்சியை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிடுவதோடு தன் ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். அவர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. கருணாநிதியும் சட்டமன்றக் கூட்டத்தை அறவே புறக்கணித்தார். முதலமைச்சராக இருந்தால்தான் சட்டமன்றத்திற்கு வருவது. இல்லையேல் வருவது தங்கள் கௌரவத்திற்கு இழுக்கு என்று இருவருமே கருதுகிறார்கள். சட்டமன்ற ஜனநாயகத்தை உண்மையிலேயே இவர்கள் மதிப்பவர்களாக இருந்தால் சட்டமன்ற கூட்டங்களில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். முடியவில்லை என்றால் தங்கள் பதவியை விட்டு விலகி வெளியேற வேண்டும்.

மக்கள் போராட்டம்

சட்டமன்ற மரபுகள் துச்சமாக மதிக்கப்பட்டு மக்கள் பிரச்னைகள் பற்றி அங்கே பேச முடியாத நிலைமையில் வெளியில் மக்கள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. மத்திய – மாநில அரசுகளின் ஜனநாயக விரோதப் போக்குகளையும் ஒடுக்குமுறைகளையும் சர்வாதிகார சட்டங்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது எழுந்துள்ளது.

பதவிகளைக் காப்பாற்றுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேர்தலுக்குத் தேர்தல் கொள்கையற்ற கூட்டணிகளை அமைத்துக்கொள்ளும் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

தமிழக அரசியல் சீர்கேடுகளை எதிர்த்தும் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்தும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் மக்கள் திரண்டு எழுந்து போராட முன்வர வேண்டும். அந்தந்த ஊரில் இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடினால், எத்தகைய அடக்குமுறையாலும் அப்போராட்டத்தை ஒடுக்க முடியாது.

1965ஆம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் ஒன்றுபட்டு நடத்திய போராட்டம் வரலாறு காணாத மக்கள் திரள் போராட்டமாக நடைபெற்றது. இந்தியை எதிர்த்த திராவிடக் கட்சிகள்கூட அந்தப் போராட்டத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முன்வராமல் பதுங்கின. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் அறிஞர்களான கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சி. இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்களே நடத்திய இந்தப் போராட்டம் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 1970களின் பிற்பகுதியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகளின் ஆதரவும் கிடைத்தது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடினார்கள். 1975ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் காக்கவும் ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம் தொடங்கியபோது மக்கள் பேராதரவு அளித்தனர். பெரும் தியாகசீலரும் தன்னலமற்றவருமான அவரை மக்கள் நம்பினார்கள். மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி இந்திராவின் சர்வாதிகார ஆட்சியை அகற்றி மீண்டும் ஜனநாயக ஆட்சியை அவர் நிலைநாட்டினார்.

மேற்கண்ட போராட்டங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து கொதிப்புணர்வுடன் போராடினார்கள். இந்த மக்கள் திரள் போராட்டங்களின் விளைவாகத்தான் ஆட்சியாளர்கள் அடிபணிய நேரிட்டது என்பதை நாம் மறக்கக் கூடாது. நாடு பூராவிலும் உள்ள மக்கள் ஒன்றுபட்டு திரண்டு எழுந்து போராடுவதென்பது அத்தனை எளிதானதல்ல. மக்கள் தங்கள் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல், கள்ளச் சாராயம், மணல் கொள்ளை, ஏரிகள் ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு, காவல் துறையின் காட்டாட்சி மற்றும் சமூகக் கேடுகளை எதிர்த்து அந்தந்தப் பகுதிகளில் மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் நாடு தழுவிய பெரும் போராட்டமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

மக்களுக்கு விழிப்புணர்வையும் ஊட்டி அவர்களைத் திரட்டி இத்தகைய வேண்டாத சக்திகளை எதிர்த்துப் போராட முயற்சி எடுக்க வேண்டிய கடமை தன்னலமற்ற மக்கள் தொண்டர்களுக்கு உண்டு.

ஜனநாயகச் சிதைவு, தமிழ்நாட்டின் உரிமைகளை இழந்து நிற்றல் போன்றவற்றிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமானால் தமிழக மக்களைத் திரட்டி மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்கள் திரள் போராட்டம் நமது கடமை மட்டுமல்ல. வரலாற்றுக் கட்டாயமும் ஆகும்.

இந்த வேலையை நாம் செய்யாமல் நமது சந்ததியினர் செய்யட்டும் என்று விட்டுவிடுவோமானால் எதிர்காலத் தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

Posted in Agreements, Agriculture, Alliance, Andhra, AP, Bengaluru, Bethamangala, Blind, Border, Cauvery, Center, Chennai, Construction, Dam, Distribution, DMK, Drink, Drinking, Drinking Water, Farming, Farmlands, Flood, Flow, Govt, Inter-state, Interstate, Intrastate, Karnataka, Kaveri, Kerala, Krishna, Kuchasthalai, Kusasthalai, Lakes, Limits, Madras, Management, Mullai, Mullai Periyar, Mullai Periyaru, Mysore, Nature, Nedumaaran, Nedumaran, Paalar, Paalaru, Palar, Palaru, peasants, Periyar, Periyaru, Pethamangala, Pichathoor, Pichathur, Pichatoor, Pichatur, Politics, Poondi, reservoir, River, Rivers, Sea, Shortage, State, Storage, Supply, Tamil Nadu, TamilNadu, TMC, TN, Waste, Water | Leave a Comment »

Exposing the double standards of Kerala Govt – Inaction, Hypocrisy, Bureaucracy

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

கடிதங்கள் | காலச்சுவடு

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

சக்கரியாவின் ‘மாயாவித் திருடர்கள்’ என்னும் கட்டுரை குறித்து:

கேரளாவில் மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறார்கள். பிளாச்சி மடையிலுள்ள கொக்கோகோலோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ தொழில் நிறுவனங்கள் மார்க்சிஸ்டுகளால் கேரளத்தை விட்டு ஓடிவிட்டன.

  • கெல்ட்ரான்,
  • ரேயன்ஸ் மில்,
  • புனலூர் காகித ஆலை,
  • அலகப்பபுரம் டெக்ஸ்டைல்ஸ்,
  • அப்போலோ டயர் தொழிற்சாலை

ஆகிய அனைத்தும் மூடப்படுவதற்குக் காரணமாயிருந்தவர்கள், தம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்டுகளே. கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூளை உழைப்பாளிகளாகவும் உடல் உழைப்பாளிகளாகவும் மற்ற மாநிலங்களுக்கும் அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கும் செல்லக் காரணகர்த்தாக்கள் மார்க்சிஸ்டுகளே.கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்னும் ஊரின் அருகேயுள்ள சம்றவட்டம் என்ற இடத்தில் பாரத புழா அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் தண்ணீரைத் தேக்கிவைக்கத் தடுப்பணையும் அதன்மேல் வாகனங்கள் செல்ல ஒரு பாலமும் கட்டத் திட்டமிட்டுக் கேரளாவில் மூன்று முதல்வர்கள் கடந்த 18 ஆண்டுகளில் மூன்று முறை கால்கோள் விழா நடத்தினார்கள். அத்திட்டத்தை என்ன காரணத்தினாலோ கைவிட்டார்கள்.

அந்தப் பாலம் அங்குக் கட்டப்பட்டால் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் தேவையும் நிறைவேறும் விவசாயம் செழிக்கும் வெயில் காலங்களில் நிலத்தடி நீரும் குறையாது. இது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் மார்க்சிஸ்டுகள் ஏமாற்றுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்தினால் அணை உடைந்து ஐந்து மாவட்டங்கள் நீரில் மூழ்கிவிடும் என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். 4 டி.எம்.சி. தண்ணீரால் 5 மாவட்டங்கள் எப்படித் தண்ணீரில் மூழ்கும்?

ஒரு வேளை மார்க்சிஸ்டுகள் கூறியபடியே நடந்தாலும், அந்த நீர் 70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு அல்லவா சென்றுவிடும்? கேரள மாவட்டங்கள் என்ன பூந்தொட்டிகளா, நீரில் மூழ்க? அப்படியிருக்கக் காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் கேரளாவிற்கு 30 டி.எம்.சி. வழங்கத் தீர்ப்பு கூறியுள்ளது.

எந்த ஆயக்கட்டு வசதியும் இல்லாமல் 30 டி.எம்.சி.யை எங்குத் தேக்குவார்கள்? அதுவுமில்லாமல் 30 டி.எம்.சி. நீர் தங்களது மாநிலத்திற்குப் போதாது என்றும் மேலும் தண்ணீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். இந்த 30 டி.எம்.சி. நீரால் கேரளா மூழ்காதா? மார்க்சிஸ்டுகள் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்த திருவனந்தபுரத்தைத் தனிக் கோட்டமாக்கியபோது தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால், சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டபோது மார்க்சிஸ்டு தொழிற்சங்கத்தினர் அம்மாநில மக்களைத் தேவையில்லாமல் தூண்டிவிட்டார்கள்.

கேரளாவில் உள்ள குருவாயூரிலிருந்து தானூர் என்னும் இடத்திற்குப் புதிய ரயில் பாதை அமைக்கக் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலத்தைக் கையகப்படுத்தாமல், அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

திருவனந்தபுரம் அருகே விழிஞம் என்னும் இடத்தில் அதிநவீனத் துறை முகம் அமைக்கப் பல வெளிநாட்டுக் கம்பெனிகள் முயன்றன. ஆனால், மார்க்சிஸ்டு அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை. எர்ணாகுளத்தை ஸ்மார்ட் சிட்டி ஆக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கும் மார்க்சிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்துத் திட்டத்தைக் கிடப்பில் போட்டிருக்கிறார்கள்.

கேரளா பொருளாதார வளர்ச்சி பெற்றுச் சிறந்த மாநிலமாக உருவெடுத்தால், மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை ஏமாற்ற முடியாது என்ற ஒரு காரணம்தான். இந்த ஆண்டு மார்ச் 14 அன்று மேற்கு வங்கம் நந்தி கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து 14 பேர் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். மார்ச் 14 நினைவுகூரத்தக்க தினம்தான்.

பொதுவுடமைச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் மார்ச் 14. மார்க்சிஸ்டுகளின் அந்நிய நாட்டு அடி வருடித்தனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் வரலாறும் மன்னிக்காது என்பது திண்ணம்.

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

—————————————————————————

தமிழகத்தின் உரிமைப் பிரச்னைகள்

பா. ஜெகதீசன்

தமிழகமும், கேரளமும் கடந்த பல தலைமுறைகளாகவே அண்ணன் – தம்பியைப் போன்ற உறவுடன் பாசத்துடன் பழகி வந்தன. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சமீபகாலத்தில் எழுந்த பிரச்னை விசுவரூபம் எடுத்து, இரு தரப்பினரையும் பகையாளிகளைப் போல பேச வைத்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைப் போல, மேலும் பல பிரச்னைகளில் இரு மாநிலங்களுக்கு இடையே “இழுபறி’யான ரீதியில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

உதாரணமாக, பரம்பிக்குளம் -ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை 1988-லிருந்து நீடித்து வருகிறது. 6.11.2004-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையை தொடருகின்றன.

கஜினி முகமது தொடர்ந்து படை எடுத்து வந்த வரலாற்றை முறியடிக்கும் வகையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காண இதுவரை சுமார் 20 முறைக்கும் மேல் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பாலாறு, ஆழியாறு ஆகியவற்றிலும், இவற்றில் இணையும் ஆறுகளிலும் உள்ள நீரை மின்சாரம் தயாரிக்கவும், பாசனம் மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்தவும் 9.11.1958 முதல் செயல்படக் கூடிய ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கும் இடையே கையெழுத்தானது.

9.11.1988-ல் இந்த ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை.

அதேபோல, பாண்டியாறு -புன்னம்புழா நதிகள் தமிழகத்தில் நீலகிரி மலையின் உயர்ந்த சிகரங்களில் தோன்றி, கூடலூருக்கு 5 கி.மீ. மேற்கே இணைகின்றன. இந்த இணைப்புக்குக் கீழே இந்த நதி புன்னம்புழா என்றே அழைக்கப்படுகிறது. கேரளத்தில் நீலாம்பூர் அருகே சாளியாற்றில் கலந்து, பேபூர் என்கிற இடத்தில் அரபுக் கடலில் இந்த நதி சங்கமம் ஆகிறது.

இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் கிடைக்கும் 14டி.எம்.சி. நீரில் குறைந்தபட்சம் 7 டி.எம்.சி.யையாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆற்றிலிருந்து கிழக்கு நோக்கி தண்ணீரைத் திருப்ப கேரளத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியைத் தமிழகம் மேற்கொண்டுள்ளது.

புன்னம்புழா திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை பவானி ஆற்றின் கிளை ஆறான மோயாற்றில் இணைத்து, கோவை மாவட்ட விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால், இந்தக் கனவு எப்போது நனவாகும் என்று தெரியவில்லை.

தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி – வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, அதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது. கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது என்பது அந்தத் திட்டத்தின் ஒரு பகுதி.

பம்பா -அச்சன்கோயில் -வைப்பாறு இணைப்புத் திட்டம் என்பது கேரளத்தில் உள்ள பம்பா -அச்சன்கோயில் ஆறுகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது ஆகும். இந்தத் திட்டத்தினால் சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், தென்காசி வட்டங்களில் உள்ள 91,400 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் என்பது சுமார் 2.5 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பம்பா – அச்சன்கோயில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் இது 20 சதவீதம் மட்டுமே.

மேலும் இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்சாரத்தையும் எளிதாக உற்பத்தி செய்ய இயலும்.

ஆனால், இதர திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டத்தையும் கேரள அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைக்கும் வகையில், கண்ணகி கோயில் பிரச்னை அமைந்துள்ளது.

உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள வண்ணாத்திப்பாறைக் காடு தமிழகத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியில்தான் கண்ணகி கோயில் உள்ளது.

ஆனால், கண்ணகி கோயில் தனது எல்லைக்குள் உள்ளதாக கேரள அரசு கூறி வருகிறது. அத்துடன், அங்கு வழிபாடு நடத்தச் செல்லும் தமிழக மக்களை கேரள அரசு தடுத்து, பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே உள்ள எல்லையின் நீளம் சுமார் 830 கி.மீ. இதில் சுமார் 250 கி.மீ. தூரத்துக்குத்தான் இரு மாநிலங்களின் அதிகாரிகளும் ஆய்வு செய்து, எல்லைகளை நிர்ணயித்துள்ளனர்.

கேரள அதிகாரிகள் சரியாக ஒத்துழைக்காததால், எஞ்சிய தூரத்துக்கு எல்லையை வரையறுக்க முடியாத நிலை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஆங்காங்கே தமிழகத்தின் பகுதிகளைத் தனது பகுதிகள் என்று கேரளம் கூறி போலியாக உரிமை கொண்டாடி வருகிறது.

கேரளத்துடன் நல்லுறவை வளர்க்கவே எப்போதும் தமிழகம் விரும்புகிறது. ஆனால், அந்த விருப்பம் ஈடேறத் தடைகற்களாக இத்தனை பிரச்னைகள் அமைந்துள்ளன. இந்தத் தடைகள் தகர்க்கப்பட்டு, நல்லுறவு மேம்பட கேரளத்தின் பெருந்தன்மையான ஒத்துழைப்பு அவசியம்.

———————————————————————————————————————————

முல்லைப் பெரியாறும்-கேரளமும்!

என். சுரேஷ்குமார்

திருநெல்வேலி மாவட்டம், சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு, பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோனி ஆறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு சுமார் 300 கி.மீ. தூரம் வடமேற்குத் திசையில் பாய்ந்து இறுதியில் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே கடலில் கலக்கிறது.

பெரியாறு தமிழக எல்லைக்குள் 56 கி.மீ. தூரமும் கேரள எல்லைக்குள் 244 கி.மீ. தூரமும் பாய்கிறது.

மக்களின் குடிநீர் தேவைக்கும் பாசனத்திற்காகவும் பெரியாறு திட்டத்திற்கு முதன்முதலில் செயல்வடிவம் கொடுத்தது ஆங்கிலேயர்கள்.

அதன்படி, 1808-ம் ஆண்டு ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்டத்தை ஆய்வு செய்து 1862-ல் 162 அடி உயர அணை கட்டும் திட்டம் மேஜர் ரைவீஸ் மற்றும் மேஜர் பேயின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1882-ம் ஆண்டு 175 அடி உயரத்தில் அணை கட்ட பென்னி குயிக் நியமிக்கப்பட்டார். அதற்கு திட்ட மதிப்பீடு ரூ.65 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி முல்லை ஆறும், பெரியாறும் இணையும் இடத்திற்கு அருகே அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. அணை கட்டப்படவிருந்த பகுதியான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகளாகும். தற்போதும் அப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலும் தமிழர்களே.

இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழ்நாட்டு பகுதியா, திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியா என்பதில் தெளிவில்லாத ஆங்கிலேய அரசு, அணை கட்டப்பட உள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி எனக் கொண்டு, 1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுக்கான ஒப்பந்தத்தை செய்தது.

மேலும், இந்த அணை நீரானது தமிழகத்திற்கு காலகாலத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசு 999 ஆண்டு ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்டது.

அதன்படி 1241 அடி நீளத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் அடித்தளத்திலிருந்து 172 அடி.

இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடி. ஆனால், திடீரென வரும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டது.

இந்த அணையில் தேங்கும் நீரை, கிழக்குத் திசையில் 5765 அடி நீளமும், 60 அடி ஆழமும், 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கொண்டுவந்து பின்பு அந்த நீரை மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 5345 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

அதற்குப் பிறகு 78 கி.மீ. நீளமுள்ள பெரியாறு கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. அணையிலிருந்து மேற்குறிப்பிட்ட சுரங்கத்தின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி அளவு தண்ணீரை மட்டுமே வெளியே எடுக்க முடியும்.

மேலும், 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடிவரை தேங்கும் நீரைத்தான் எடுக்க முடியும்.

பின்னர் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு அந்த அணையின் நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர்தான் கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையை முழுவதும் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது.

அதன்படி, 1956-ம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் வாழ்ந்து வந்த தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரளத்தோடு இணைக்கப்பட்டன.

1978-ம் ஆண்டு அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு பொய் செய்தியைப் பரப்ப ஆரம்பித்தது. அதன்மூலம் அணையின் நீர்மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டது.

பின்னர் அணை பலப்படுத்துவது தொடர்பாக கேரள- தமிழக அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, அணை பலப்படுத்தப்படும்வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையே பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் கெவி அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை, பம்பா அணை போன்ற அணைகளை கட்டியெழுப்பி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை கேரளம் குறைத்தது.

இதனால் ஒரு போகம் சாகுபடி செய்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறின.

1979 ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை 1985-ம் ஆண்டே முடித்த பின்பும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்தது.

இதனால் இப்பிரச்னையை தமிழக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை சார்ந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்ட பிறகு, அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன என்று சான்று வழங்கியது. மேலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரள அரசு சொன்ன காரணங்கள் பொய்யானவை என்று ஆணையம் தெளிவாகக் கூறியது.

அதன் அடிப்படையில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், கேரள அரசு 1979-ம் ஆண்டு தமிழகத்தோடு செய்த ஒப்பந்தத்தை மீறியதோடு, நிபுணர் குழு அறிக்கையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் உதாசீனப்படுத்தியது.

தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்து அதே ஆண்டு மார்ச் மாதத்தில் கேரள அரசு நீர்ப்பாசனம், நீர்வளம் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி பெரியாறு அணையையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இதன்மூலம் கேரள அரசு மேற்கொள்ளும் ஒரு தலைப்பட்சமான முடிவு நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக விடப்பட்டிருக்கும் அறைகூவல்.

மேலும், தற்போது பழைய அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு கேரள அரசு கட்டினால் தமிழகத்தின் உரிமை முழுமையாகப் பறிபோகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Posted in Agriculture, Apollo, Bureaucracy, Cauvery, Coke, cola, Communism, Communist, Communist parties, Communist Party of India, Congress, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Dam, Disaster, Drinking, Economy, Employment, Exports, Finance, Flood, GDP, Govt, Growth, Guruvaioor, Guruvaiyoor, Guruvaiyur, Guruvayoor, Guruvayur, Harbor, Harbour, Headquarters, Hype, Hypocrisy, Imports, Incentives, Industry, infrastructure, Integration, Irony, Irrigation, Jobs, Kaviri, Keltron, Kerala, Kozhikode, Labour, Literacy, Madurai, Malaappura, Malappura, Malappuza, Malappuzha, Malayalam, Manufacturing, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Mills, Mullai, Mullai Periyar, MullaiPeriyar, National, Palacaud, Palacaut, Palacode, Palaghat, Palagode, Palakode, Periyaar, Periyaaru, Periyar, Periyaru, Politics, Port, Prevention, Producation, promises, Railways, River, Salem, SEZ, Shipping, State, Tax, Textiles, THIRUVANANTHAPURAM, TMC, TN, Trains, Trivandrum | Leave a Comment »

Dam across Palar will affect farmers: Jayalalithaa

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்- ஜெயலலிதா அறிக்கை

சென்னை, ஜன. 30-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணையைக் கட்டப் போவதாகவும், அதற்கான பூமி பூஜையை பிப்ரவரி 1-ந் தேதி அன்று தொடங்கப் போவதாகவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களில் விவசாயத்திற்கு பெரும் நெருக்கடியும், பின்னடைவும், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவையும் சந்திக்க உள்ளார்கள்.

மேலும் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மற்றும் சென்னை புறநகர் பகுதி மக்களுக்கும் கடும் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படும்.

கர்நாடக மாநிலத்தோடு காவேரி தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை, கேரளா மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்துவதில் பிரச்சினை, இப்போது பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதில் ஆந்திராவோடு புதிய பிரச்சினை தொடங்கி இருக்கிறது.

பாலாறு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் உற்பத்தி ஆகின்றது. அது கர்நாடகாவில் சுமார் 35 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திர பகுதியில் 30 கிலோ மீட்டர் தூரமும் பயணித்து தமிழ்நாட்டை வந்தடைகிறது. ஆந்திராவில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் மட்டும்தான் பாலாறு பாய்கின்ற வழியில், “குப்பம்” என்ற பகுதியின் வழியாக தமிழ்நாட்டை வந்தடைந்து, செங்கல்பட்டு அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் அருகில் கடலில் கலக்கிறது.

தமிழ்நாட்டில் பாலாறு பாய்கின்ற தூரம் சுமார் 140 கிலோ மீட்டர் ஆகும். அந்த 140 கிலோ மீட்டர் தூரத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு ஜீவாதாரமாகப் பல்வேறு வகையில் விளங்குகிறது.

விவசாயம், குடிநீர் மற்றும் அங்குள்ள தொழிற் சாலைகளுக்குத் தண்ணீர் வசதி ஆகியவைகளை பாலாற் றின் வாயிலாகத்தான் அந்தந்த மாவட்ட மக்கள் பயன் பெறுகிறார்கள். கல்பாக்கம் அணு உலைக்கான நீர் ஆதாரமே பாலாறுதான். அந்த ஆற்றின் அமைப்பின்படி தமிழக நதிகளிலேயே பாலாற் றில்தான் நிலத்தடி நீர் அதிக மாக உள்ளது.

நான் முதல்-அமைச்சராக இருக்கும் போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி எடுக்கின்றது என்ற தகவல் கிடைத்தவுடனே, அவ்வாறு செய்யக்கூடாது என்று ஆந்திர முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் உடனே அழைத்துப் பல மணி நேரம் பல்வேறு முறை விரிவாக விவாதித்து 2006 பிப்ரவரி மாத இறுதி வாக்கில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதி மன்றத்தில் அசல் வழக்கு ஒன்றினை தமிழக அரசின் சார்பில் ஆந்திர அரசுக்கு எதிராக தாக்கல் செய்ய வைத்தேன்.

இவ்வழக்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம்தான் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வழக்கின் கோப்புகள் தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட உச்சநீதி மன்ற வழக்கறிஞர்களுக்கு மாற்றப்பட்டது.

தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் பாலாறு விஷயத்தில் இவர்கள் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றது.

சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பாலாறு பிரச் சினை சம்பந்தமாக அமைச் சர் துரைமுருகன் பேசும்போது, “உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடருவோம்” என்று சொல்லி இருந்தார். அதாவது இனிமேல்தான் வழக்கு தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவருக்கு இப்பிரச்சினை சம்பந்தமாக எனது ஆட்சிக் காலத்திலேயே உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள விவரம் கூடத் தெரியவில்லை.

ஆற்காடு வீராசாமி பேசும்போது, “தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜாவிடம் சொல்லி, பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் துறையின் அனுமதியைத் தராமல் தடுத்திடுவோம்” என்றார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜா அனுமதி தராமலா, ஆந்திர அரசு இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடான 270 கோடி ரூபா யில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கும்ப

மத்திய அரசின் அனு மதியைப் பெறாமல் இத்திட்டத்திற்கு ஆந்திர அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என்பது, ஒரு பரமரனுக்குக் கூடத்தெரியும். ஆனால் பல முறை அமைச்சராக இருந்திருக் கின்ற ஆற்காடு வீராசாமிக்கு தெரியாமல் போனதுதான் மிகவும் வேதனையாகவும், வியப்பாகவும் இருக்கிறது.

வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் உயிர் நாடிப்பிரச்சினைக்குக் கூட முக்கியத்துவம் தராமல், ஆந்திர மாநிலத்திற்கு சாதகமாக தடுப்பு அணை கட்ட அனுமதி கொடுத்த மத்திய மந்திரி ராஜா, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

பா.ஜ.க. கூட்டணி மத்திய ஆட்சியில் அ.தி.மு.க. மந்திரிகள் பங்கேற்றபோது, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்ய வற்புறுத்திய போது அதற்கு பணிய மறுத்து எனது கட்சி மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லி, தமிழக மக்கள் நலனே முக்கியம் என்று கருதி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டேன்.

ஆந்திர முதல்-அமைச்சராக இருக்கும் ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர். எனவே பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதற்கு சோனியாகாந்தி மூலம் மத்திய மந்திரி ராஜாவிடம் அனுமதி பெற சிரமம் ஏதும் அடைய வாய்ப்பில்லை. மத்திய ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதியும், ராஜாவும் தமிழக மக்களின் நலனைக் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.

மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி. மாநிலத்திலும் தி.மு.க.வின் ஆட்சி. ஆனால் விவசாய மக்களின், பொதுமக்களின் குடிநீர் மற்றும் கோடான கோடி மக்களை பாதிக்கும் விஷயங்களில் தி.மு.க. எந்த உறுதியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

3 அண்டை மாநிலங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மிகச் சாதூரியமான, சாணக்ச யத்தனமான, துணிச்சலான அணுகுமுறைகள் தேவை. எப்போது தி.மு.க. இந்த விஷயத்தில் வியாபார நோக்கோடு நடந்து கொள்ள ஆரம்பித்ததோ, அப்போதே தமிழகத்தின் நலன் பறிபோய் விட்டது. கருணாநிதி தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்கப் போகிறாராப என்பதை தமிழக மக்கள் பார்க்கத்தான் போகின்றார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை எதுவும் கட்டவில்லை: ஜெயலலிதாவுக்கு துரைமுருகன் பதில்

சென்னை, ஜன. 31-

பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு அணை கட்டப்போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலார் ஜெயலலிதா அவரது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றில் ஆந்திரஅரசு தடுப்பனை ஒன்று கட்டுகின்ற பிரச்சினை குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு தடுப்பு அணை கட்ட முயற்சி செய்கிறது என்ற செய்தி வந்தபோதே சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வேலூர் மாவட்டத்திலும் இந்த பிரச்சினை குறித்து பேசி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் நானும் ஒருவன்.

ஏன், வேலூர் மாவட்ட மக்களின் ஆர்ப்பாட்டமே என் தலைமையின் கீழ்தான் நடந்தது. அன்று இந்த பிரச்சினை குறித்து மெத்தனமாக இருந்துவிட்டு உப்புக்கு சப்பாணி என்பது போல பெயருக்கு ஒரு வழக்கு உச்சநீதி மன்றத்தில் கொடுத்து விட்டு அதிலும் நமக்கு உள்ள உரிமைகளை எடுத்து வைக்காமல் பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்று திரும்பியும் பார்க்காமல் வீட்டுக்கு போனவர் ஜெயலலிதா.

இந்த பிரச்சினை குறித்து ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்துக்கு ஓய்வு எடுக்க பல முறை சென்ற ஜெயலலிதா ஆந்திர முதல் மந்திரியிடம் அப்போது ஒரு முறையாவது விவாதித்தது உண்டாப

இல்லை எந்த அமைச்சரை யாவது ஆந்திராவிற்கு அனுப்பியது உண்டா?

ஆனால் கலைஞர் ஆட்சி அமைந்த பின் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் பொன்முடியும் ஐதராபாத் சென்று அந்த மாநில முதல் மந்திரியை சந்தித்து தடுப்பணை விவகாரமாக விவாதித்தது ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே மறந்து விட்டதா?

எந்த நடவடிக்கையும் ஆந்திரா அரசு இந்த பிரச்சினையில் எடுக்காது அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது குறித்து தமிழகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தியபின்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அந்த மாநில முதல் மந்திரி அன்று தமிழக அமைச்சர்களிடம் தெரிவித்து உள்ளார்.

அதையும் மீறி தடுப்பணை கட்ட முயன்றதாக செய்தி வந்ததும் நானே ஆந்திர நீர்பாசன துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆந்திர அரசோடு தொடர்பு கொண்டு இது குறித்து பேசி வருகிறார்.

தமிழக அரசு பொதுபணி துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டப்படும் என்று கூறப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று விசாரித்து உண்மை நிலையை அறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

ஆந்திர அரசு அப்படியொரு தடுப்பணையை கட்ட அதிகாரப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி அண்டை மாநில உறவு கெடாமல் தீர்வு காண்பதற்கு பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஆந்திர அரசு ஜெயலலிதா திராட்சை தோட்டத்தில் கைவைத்து விட்டது என்று செய்தி வந்ததும் அறிக்கை விடுகிறார். பாலாற்றில் தடுப்பு அணை கட்டுகிறது என்றும் அதை தமிழக அரசு தடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார். உண்மையான விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேய்வது என் பார்களே அது போன்ற நிலையில் விவாதத்தில் கலந்து கொள்வது ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான்.

சர்க்காரியா வழக்கை வாபஸ் வாங்குவதற்காக இந்திராகாந்தியிடம் பேரம் பேசியதாகவும் அதற்காக உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினை குறித்து தொடுக்கப் பட்ட வழக்கை வாபஸ் பெற்றோம் என்று தி.மு.க மீது பழிபோட்டு பேரவையில் அறிவித்துவிட்டு உடனடியாக காங்கிரஸ் கட்சி தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் குறுக்கிட்டு அது தவறான தகவல் என்று கூறியதும் நானும் மனுஷி தானே தவறாக பேசி விட்டேன் நாக்கு தவறிவிட்டது என்று சட்டமன்றத்தில் பேசி மன்னிப்பு கேட்டவர்தான் இந்த ஜெயலலிதா. ஒன்று மட்டும் ஜெயலலிதா உணரவேண்டும். இந்த பிரச்சினை ஜெயலலிதாவுக்கு ஒரு அரசியல். ஆனால் எங்கள் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் உயிர் பிரச்சினை, உரிமை பிரச்சினை நாங்கள் இந்த பிரச்சினையில் எப்படி இருப்போம் என்று நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆந்திரத்தில் பாலாற்றில் அணை கட்டும் இடத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

வேலூர், பிப் . 2: ஆந்திர மாநிலம், குப்பம் கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படவுள்ள பகுதியில் வியாழக்கிழமை பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூரிலிருந்து 15 கார்களில் குப்பம் கிராமத்திற்கு வந்த பாமக-வினர் 120 பேர், அணை கட்டும் மலைப்பகுதிக்கு கண்டன கோஷமிட்டபடி ஊர்வலம் போலச் சென்றனர். அணை கட்டப்படவுள்ள பகுதியில் சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பினர்.

பாமகவினர் வருகையை தெரிந்துகொண்ட சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராம ரெட்டி காவல்துறை அதிகாரிகளுடன் வந்து, பாமகவினரிடம் கடுமையாக வாதிட்டார்.

இப்பகுதியில் மிகமோசமான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. அதற்காக அணை கட்டியே ஆகவேண்டும். நீங்கள் தமிழக அரசியல் காரணங்களுக்காக இங்கே வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். ஆந்திர மாநில காவல்துறை அனுமதியின்றி, தகவலும் தெரிவிக்காமல் வந்திருக்கிறீர்கள் என்று வாதிட்டு, வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஜி.கே.மணி, இந்தப் பிரச்சினை தமிழகத்தில் 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும் என்பதால் நாங்கள் அக்கறையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்று அவரிடம் கூறினார்.

ஜெயராம ரெட்டியுடன் வந்தவர்கள், பாமகவினர் அப்பகுதியில் உள்ள மரங்களிலும், பாறைகளிலும் கட்டி வைத்திருந்த கொடிகளை எடுத்துக் கீழேபோட்டனர். ஆந்திர மாநில காவல்துறையினர் தலையிட்டு, பிரச்சினை பெரிதாகாமல் தடுத்தனர். பாமகவினருக்குப் பாதுகாப்பாக தமிழக எல்லை வரை வந்தனர்.

இதுகுறித்து ஜி.கே மணி கூறியது:

ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ.க்குள் 12 தடுப்பணைகளை ஏற்கெனவே உள்ளன. தற்போது குப்பம் பகுதியில் 110 மீட்டர் உயரத்தில் தடுப்பணையை கட்ட ஆந்திர அரசு கட்டவுள்ளது. வியாழக்கிழமை எளிய முறையில் அடிக்கல் நாட்டவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் இங்கு வந்தோம். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது அடிக்கல் நாட்டு விழா தள்ளிப் போடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை நேரடியாக சந்தித்து, பிரச்சினையை அவரிடம் எடுத்துரைத்து, திட்டத்தைக் கைவிடச் செய்வதுதான் பாமகவின் நோக்கம்.

நாங்கள் அணை கட்டவுள்ள பகுதியை வியாழக்கிழமை காலை பார்வையிட்ட போது, பாலாற்றின் குறுக்கே, அணை கட்டும் இடத்துக்குச் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு, பாறைகளில் பல இடங்களில் துளை இடப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆந்திர அரசு இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் சொல்வது பழைய செய்தி என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.எல். இளவழகன் (ஆர்க்காடு), டி.கே.ராஜா (திருப்பத்தூர்), மாநில துணைத் தலைவர் எம்.கே. முரளி, மாநில மகளிரணி தலைவி நிர்மலா ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், வேலூர் மாவட்ட பொருளாளர் கவிதா கோவிந்தன் உள்ளிட்டோர் பங்குகொண்டனர்.

பாலாற்றில் அணை: குப்பம் பகுதிக்குள் தமிழர்கள் நுழைந்தால் கைது செய்வோம்- ஆந்திர போலீஸ் அதிகாரி எச்சரிக்கை

பள்ளிப்பட்டு, பிப். 2-

வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட தமிழகத்தின் 5 வட மாவட்டங்களில் பாலாறு ஓடுகிறது. இந்த ஆறு ஆந்திராவில் இருந்து வருவதால், அவர்கள் தண்ணீர் திறந்து விட்டால்தான் பாலாற்றில் தண்ணீர் வரும். ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ. தூரத்தில் மட்டும் 12 தடுப் பணைகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது குப்பம் அடுத்துள்ள கணேசபுரத்தில் 110 மீட்டர் உயரத்தில் பெரிய அளவில் அணை ஒன்றை கட்ட உள்ளது. இந்த அணை கட்டினால் தமிழக பகுதியில் ஓடும் பாலாறு வறண்டு விடும் அபாயம் உள்ளது.

வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். எனவே அணை கட்டுவதற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணை கட்டுவதை தடுக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேலூரில் 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்.

இந்த நிலையில் நேற்று பாலாற்றில் அணை கட்டும் பகுதிக்குள் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை அறிந்ததும் சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராமரெட்டி தலைமையில் ஆந்திர விவசாயிகள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

பாலாற்று பகுதியில் உள்ள மரங்களில் பா.ம.க. வினர் தங்கள் கட்சிக் கொடிகளையும், “பாலாற்றில் அணை கட்டாதே” என்ற எதிர்ப்பு வாசகங்களையும் கட்டினார்கள். இதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த ஆந்திர விவசாயிகள் பா.ம.க.வினர் கட்டிய எதிர்ப்பு வாசகங்களை ஆவேசத்துடன் பிடுங்கி எறிந்தனர். கட்சி கொடிகளை சரமாரியாக கிழித்துப் போட்டனர். இதனால் அங்கு இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டது. ஆந்திர உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஜி.கே.மணியிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, “நாங்கள் இங்கு 110 மீட்டர் உயரத்தில் பெரிய அணை ஒன்றை கட்டியே தீருவோம்” என்றனர்.

பாலாற்றில் அணை கட்டும் பகுதி பதட்டமாக இருப்பதால் அங்கு ஆந்திர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்ட உள்ள குப்பம் தொகுதிக்குள் தமிழர்கள் யாராவது சித்தூர் மாவட்ட கலெக்டர் அனுமதி பெறாமல் நுழைந்தால் உடனே கைது செய்வோம்.

கணேசபுரம் பகுதியில் தமிழர்கள் கூட்டமாக வந்தால் விரட்டி அடிப்போம் வீணாக இங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது. தமிழர்கள் பாலாற்று பகுதிக்குள் நுழைந்ததால் ஆந்திர விவசாயிகள் கொதிப் படைந்துள்ளனர். இதனால் நாங்கள் தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.

பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்யவும் ஆந்திர போலீசார் அறிவு றுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது. குப்பம் தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தீட்டப்பட்டது.

தற்போது அடிக்கல் நாட்டு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அணை கட்டும் பணியை தொடங்கி விடுவோம். எங்களுக்கு மாநில மக்களின் நலன்தான் முக்கியம். இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால் இனியும் இந்த அணை கட்டும் திட்டத்தை தாமதப்படுத்த மாட்டோம்” என்றார்.

பாழாகும் பாலாறு

இராதாகிருஷ்ணன்

பாலாற்றுப் பிரச்சினை இன்றைக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பாலாற்றின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் சிக்பல்லபூர் வட்டத்தில் பல மலைகள் உள்ளன. இதில் சென்ன கேசவ மலையின் வடபகுதியில் தோன்றும் ஆறு உத்தரப்பிநாகினி. தென்பகுதியில் தோன்றும் ஆறு தட்சிணப் பிநாகினி. இவைதான் தமிழில் வடபெண்ணையாறு, தென் பெண்ணையாறு எனச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ஆறுகளுக்கும் இடையில் பாலாறு தோன்றுகிறது.

தற்போதைய பாலாற்றின் பயணம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

காவிரிப்பாக்கம் ஏரி மிகப் பெரியது. அந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், கொர்த்தலையாறு எனும் பெயரோடு கிழக்கில் பாய்கிறது. அது பயணிக்கும் வழியில் திருத்தணி கையாறு, நகரியாறு போன்றவற்றின் நீரைப் பெற்று, தற்போது சென்னைக்கு வடகிழக்கில், எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் சிலர், இக்கொர்த்தலையாறு பாயும் காவேரிப் பாக்கத்துப் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்திருத்தல் வேண்டும் என்று கருதுகின்றனர். இன்றைக்கும் பழைய பாலாறு என்ற பெயரில் சிற்றாறு ஒன்று இங்கு உள்ளது. அது கொர்த்தலையாற்றுப் படுகையையும் பாலாற்றுப் படுகையையும் இணைக்கும்படி அமைந்துள்ளது. இந்த சிற்றாறு சதுரங்கபட்டணம் அருகில் கடலில் சேர்கிறது. தமிழகத்தில் 140 கி.மீ. ஓடுகிறது.

கலிங்கத்துப்பரணியில் முதல் குலோத்துங்கனின் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான், காஞ்சியிலிருந்து கலிங்கத்திற்கு படையெடுத்துச் செல்லும்போது பல ஆறுகளைக் கடந்து சென்ற செய்தி பாடலின் வழி தெரிவிக்கப்படுகிறது. அதில் அவன் கடந்த முதல் ஆறு “பாலாறு’ என்று காட்டப்படுவதால், காஞ்சிக்கு வடக்கில் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் பாலாறு பாய்ந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய சான்றுகள் மூலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை பாலாறு, காஞ்சிக்கு வடக்கில் உள்ள திருமாற்பேறு, வடகிழக்கில் உள்ள திருப்பாசூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில் வழியாகச் சென்று சென்னைக்கு வடக்கே உள்ள எண்ணூருக்கு அருகில் கடலில் கலந்து இருக்குமெனத் தெரிகிறது.

ஆனால் இன்று பாலாறு, சென்னைக்குத் தெற்கே எங்கோ மாற்றம் கண்டிருக்கிறது. தற்போது பாலாறு பெரும்பாலும் வறண்டு போய், கனமழை பெய்தால் நீர் வரும் ஆறாக மாறியிருக்கிறது. வரும் கொஞ்ச நஞ்ச நீரையும் தமக்கே தேக்கி வைக்க ஆந்திர எல்லையில் அணை கட்டும் வேலையில் ஆந்திர அரசு ஈடுபட்டு வருகிறது.

800 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வடக்கிலும், தற்போது சென்னைக்குத் தெற்கில் பெயரளவில் நீர் பாயும் தடத்தையும் கொண்டிருக்கும் பாலாறு, மனிதர் மனத்தால் இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இப்படி ஓர் ஆறு இருந்தது என்று ஆராய்ச்சிக் கட்டுரையை யாரேனும் எழுதத் தூண்டலாம். இந்தத் துயர நிலையில் பாலாற்றுப் பிரச்சினையில் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

ஆந்திர அரசு, தமிழகம் பாதிக்கக்கூடிய அளவில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. கோலார் மாவட்டத்தில் துர்கா பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தை அடுத்து ஆந்திரம் வழியாக தமிழகம் வருகிறது பாலாறு. பாலாற்றுப் படுகையில் உள்ள 11 ஆயிரம் கி.மீ பரப்பில் உள்ள தமிழக விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலாற்று மூலம் பாசன வசதிகளைப் பெறுகின்றன.

ராணிப்பேட்டைக்கு அருகில் அணை கட்டப்பட்டு இந்த அணையிலிருந்து மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சங்கரமல்லூர், தூசி என்ற நான்கு கால்வாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்லப்படுகிறது. பல இடங்களுக்கு குடிநீர் வசதியும் பாலாறு மூலம் நீர்வரத்து கிடைக்கின்றது என்று கணக்கிடப்பட்டாலும் பாலாற்றின் நீர்வரத்து மழைக்காலத்தில்தான் அதிகமாக இருக்கும். பல சமயங்களில் தேவையான தண்ணீர் கூட வருவது இல்லை.

ஏனெனில் கர்நாடகமும் ஆந்திரமும் பாலாறு வரும் வழியில் வருகின்ற தண்ணீரை தாங்களே பயன்படுத்திக் கொள்கின்றன.

1850ல் இந்த ஆற்றின் குறுக்கே மண்ணாலான அணையைக் கட்டி காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீரைக் கொண்டு சென்றனர். நீண்ட கால கோரிக்கை ஏற்கப்பட்டு 1855-ல் ஒரு நிலையான அணையைக் கட்ட அரசு ஒப்புதல் அளித்தது. 1855ல் கட்டப்பட்ட அணை 1874ல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்தது. 1877ன் இறுதியில் வறட்சிப் பணிகளின் காரணமாக பாலாறு அணையை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 1920-ல் மைசூர் அரசாங்கம் திடீரென (சென்னை மாகாண – மைசூர் அரசாங்க) ஒப்பந்தத்தை மீறி புது ஏரிகளை உருவாக்கி பாலாற்று நீரைத் தடுத்து விட்டது.

இப் பிரச்சினை குறித்து சென்னை மாகாணக் கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. அதன்பின்பு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கர்நாடக அரசு அணைகள் கட்ட நீரைத் தடுத்து விட்டது என்று குறிப்பிடப்பட்டது.

இதுகுறித்து சென்னை அரசு மைசூர் அரசிடம் புகார் தெரிவித்ததும் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திட்டமிட்டு மைசூர் அரசு பாலாறில் ஓடிய தண்ணீரை வறண்ட நிலைக்கு உள்ளாக்கி விட்டது.

1802ல் சென்னை மாகாணம் – மைசூர் அரசுகளுக்கிடையே ஓடும் நதிகளின் நீரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஏற்பட்ட உடன்பாட்டின் 2வது பிரிவில் சென்னை மாகாணத்தின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிகளில் புதிய அணைகளையோ நீர்த்தேக்கங்களையோ அமைக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டது. மொத்தம் 15 முக்கிய நதிகள் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நதிகளில் 8வது நதியாக பாலாறு இடம் பெற்றது. இவ்வாறு உடன்படிக்கை இருந்தும் கர்நாடக அரசு தொடக்கத்திலிருந்தே உடன்படிக்கைக்கு மாறாக நடந்து வந்து கொண்டிருக்கிறது.

1954-ல் வடஆற்காடு – செங்கல்பட்டு விவசாயிகள் மாநாட்டில் பாலாற்று பிரச்சினை குறித்து தீர்மானத்தில் “”100 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சினையில் தீர்க்க வேண்டுமென்று மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தினர்”.

தென்பெண்ணை பாலாறில் இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் பாழ் மண்ணாகத்தான் இருக்கின்து. இந்நிலையில் ஆந்திரத்தை ஆளும் காங்கிரஸ் அரசு ரூ. 250 கோடி செலவில் 160 அடி உயரத்தில் கணேசபுரம் அணை கட்ட பணிகளைத் துவக்கி விட்டனர்.

இந்த அணையின் மூலமாக ஆந்திரப் பகுதியில் உள்ள குப்பம் பகுதியை ஒட்டியுள்ள 120 கிராமங்கள் பயன் பெறும். மேலும் இங்கு கால்வாய்கள் வெட்டப்பட்டு சித்தூர் – திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலை நீடித்தால் தமிழகத்துக்கு பாலாறு மூலம் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் தேக்க முடியாத மழைநீர்தான் எதிர்காலத்தில் கிடைக்கும். நியாயமற்ற முறையில் அணை கட்டப்படுவதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தும் மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருவது அதிருப்தி அளிக்கிறது.

(கட்டுரையாளர்: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்).

பாலாறு விவகாரம்: கருணாநிதிக்கு ஆந்திர முதல்வர் உறுதி

சென்னை, பிப். 5: தமிழக அரசைக் கலந்து பேசாமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்க மாட்டோம் என்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசி மூலம் உறுதி அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில், குப்பம் பகுதியில், பாலாற்றின் குறுக்கே, தடுப்பணை ஒன்றைக் கட்ட, அந்த மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக வரும் செய்தி குறித்து தமிழக முதல்வர் பிப்ரவரி 1-ம் தேதி ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் எழுதினார்.

அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை காலை ஆந்திர முதல்வருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருணாநிதி பேசினார். அப்போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எடுத்துவரும் முயற்சி குறித்து பேசினார்.

அப்போது, “”ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஹைதராபாதுக்கு வந்து சந்தித்தபோது அவர்களுக்கு அளித்த உறுதி மொழி காப்பாற்றப்படும்.

அவர்களிடம், கூறியபடி, தமிழக அரசை கலந்து பேசாமல் தடுப்பணை கட்டும் விஷயத்தில் ஆந்திர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையில் மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு பாதிக்கின்ற வகையில் ஆந்திர அரசு ஈடுபடாது.

இந்தப் பிரச்சினை தொடர்பான அனைத்து விவரங்களையும் தனது நேரடி கவனத்திற்குக் கொண்டு வரச் சொல்லி இருப்பதாகவும் கூறினார். அத்துடன் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரண்டு தினங்களில் விரிவான கடிதத்தை முதல்வருக்கு அனுப்பவிருப்பதாகவும் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.


பாலாற்றில் அணைகட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு

09 ஏப்ரல், 2007

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திரா வழியாக தமிழ்நாட்டிற்குள் பாயும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய அணை கட்டினால், அதை சட்ட ரீதியாக எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி தமிழக அரசு சந்திக்கும் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆந்திர அரசு, தமிழக எல்லையை ஒட்டிய சித்தூர் மாவட்டம் குப்பம் என்கிற இடத்திற்கு அருகே பாலாற்றின் குறுக்கே அணைக் கட்ட போவதாகவும், இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். ஆந்திர அரசு இந்த அணையை கட்டினால், தமிழ்நாட்டின் வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப் படும். என்றும் கவலை தெரிவித்தனர்.

தமிழக அமைச்சர் துரைமுருகன்
தமிழக அமைச்சர் துரைமுருகன்

இதற்கு பதிலளித்துபேசிய துரைமுருகன் பாலாற்றின் குறுக்கே அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு மிகவும் அக்கறையுடன் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஆந்திரா சென்று அம் மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசியதாகவும், அப்போது தமிழக மக்கள் நலனுக்கு எதிராக ஆந்திரா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று ஆந்திர முதல்வர் உறுதி அளித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.

நேற்று முன்தினம் இந்திய தலைநகர் டில்லியில் ஆந்திர முதல்வரை சந்தித்து பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுவதாக வெளியான செய்திகள் பற்றி தாம் கேட்ட போது, அடிக்கல் நாட்டுவதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை என்றும் முழு விவரம் தெரிந்ததும் தம்மிடம் தெரிவிப்பதாக ஆந்திர முதல்வர் தம்மிடம் தெரிவித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்திவருவதாக துரைமுருகன் தெரிவித்தார்.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை, திண்டிவனம் அருகே செண்டூர் கிராமத்தில் 17 பேர் பலியான வெடிவிபத்து பற்றி விசாரிக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையருமான எம்.எப்.பாரூக்கி, விபத்துக்குள்ளான ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பது குறித்தும் விசாரிப்பார் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பாக இன்று பேசிய எதிர் கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இந்த சம்பவத்திற்கு காரணமான வெடிமருந்து எம்மாதிரியான வெடிமருந்து என்பதையும் பாரூக்கி ஆய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த கருணாநிதி, தமது அரசு இந்த விடயத்தில் எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும், இந்த வெடிவிபத்துக்கு காரணமான வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பதையும் பரூக்கி விசாரிப்பார் என்றும் அறிவித்தார்.

 

——————————————————————————————————
மெல்லச் சாகிறது பாலாறு

எம். மதனகோபால்

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் – பாலாறு.

இந்த ஒரு நதியை நம்பி விவசாயமும் குடிநீர் வழங்கலும் தொழிலும் தடையின்றி நடைபெற்ற காலம் மறைந்து, இன்று தோல் தொழிலுக்கு மட்டுமே பாலாறு என்ற நிலைமையே மேலோங்கி இருக்கிறது.

மழைக்காலத்தில் பாலாற்றின் வெள்ளப் பெருக்கு தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு ஏரி, குளங்களை நிரப்புவதாலும், நிலத்தடி நீரை உயர்த்துவதாலும் இதுவரை பிரச்னை இல்லாமல் இருந்துவந்தது.

தற்போது ஆந்திர அரசு தமிழகத்தின் எல்லையில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டவுள்ளதால், தமிழகத்துக்கு கிடைத்துவரும் தண்ணீரில் ஆண்டுக்கு 450 மில்லியன் கனஅடி தண்ணீர் குறையும்.

இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்பது ஒருபுறம் இருக்க, குடிநீருக்கும் தட்டுப்பாடு உண்டாகும் என்பது நிச்சயம். தமிழகத்தில் தண்ணீர் வருவது கட்டுப்படுத்தப்படுவதால் ஏரி குளங்களுக்கு நீர் கிடைப்பது அரிது.

படிப்படியாக மூன்று மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் செய்ய முடியாத நிலைமை நிச்சயம் ஏற்படும். இதற்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

பாலாற்றில் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும்போது தண்ணீர் ஊறி பல மாதங்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்த நிலைக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாலாற்றின் படுகையில் மணல் வரம்புமீறி அள்ளப்படுவதுதான்.

ஆனால் பாலாற்றில் உள்ள மணலை கொள்ளையடிக்கிறார்கள். இதில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே தகராறும், லாரிகள் மறிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மணல் கொள்ளை நின்றபாடில்லை.

மிக நீண்ட தொலைவுக்கு வெள்ளை மணல் பரவிக்கிடந்த பாலாற்றுப் படுகையில் இப்போது புல்பூண்டுகள் முளைத்து செம்மண் நிலமாக காணப்படுகிறது. ஓர் ஆறு மறைந்து வருகிறது. இதற்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது?

மேலும் பாலாற்றுக் குடிநீர் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு, பழையசீவரம், வில்லியம்பாக்கம் பகுதி வழியாக குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த இடங்களில் உள்ள கிணறுகள் வறண்டு வருகின்றன. அதனால், இனிமேல் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு குடிதண்ணீர் கிடைக்காது. அதனால், அப்பகுதி மக்கள் புதிய வீராணம், கிருஷ்ணா நதி குடிதண்ணீர் கிடைக்கும் இடங்களுக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்படும்.

இன்றைய சூழ்நிலையில் காஞ்சி நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. எதிர்காலத்தில் முழுமையாக குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு காஞ்சி நகர மக்கள் குடிதண்ணீருக்காக சென்னையில் குடியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.

பாலாற்றுக் குடிநீர் என்பது மற்றவகை குடிநீரைவிட இயற்கையிலேயே கிடைக்கும் நிலத்தடி நீராகும். மிகவும் சுத்தமானது; சுவையானது.

இயற்கையாகவே கிடைக்கும் சுத்தமான பாலாற்றுக் குடிநீர், தற்போது வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று நகரங்களிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகளால் மாசுபட்டு இருக்கிறது. நிலத்தடி நீரும் கெட்டுள்ளது. பாலாற்றுப் படுகையையொட்டி நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீரில் ரசாயன நச்சு கலந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தோல்நோய், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுகள் இவை.

இப்போதைய அரசு, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையையும், ஆற்றில் ரசாயன நச்சுக் கழிவுகள் கலப்பதையும் தடுக்கும் வகையில், பாலாறு பாதுகாக்கப்பட்ட ஆறு என அறிவிக்க வேண்டும்.

பாலாறு தற்போது மத்திய அரசின் அட்டவணை-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அப்படியிருந்தும்கூட இந்த ஆறு பல்வேறு விதிமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு பாலாற்றுக்குத் தனி முக்கியத்துவம் தந்து பாதுகாக்கப்பட்ட ஆறு என்ற அறிவிப்பை செய்யத் தவறினால் விவசாயம் முற்றிலும் இயலாததாக மாறுவதுடன் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகும்.

மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களும், தோல் தொழிற்கூடங்களும் கேட்கும் கேள்விகள்என்னவென்றால் – மணல் இல்லாவிட்டால் எப்படி கட்டுமானப் பணிகள் நடக்கும்? தோல் தொழிலால் ரூ.5000 கோடி ஏற்றுமதி நடக்கிறது. இவை தடைபட்டால் பல லட்சம் மக்கள் வேலை இழப்பார்கள் என்பதே!

மணல் கொள்ளையர்களும் தோல் தொழிற்கூட உரிமையாளர்களும் குடிநீரை விலை கொடுத்து வாங்கக் கூடும். நோய்களுக்கு மிகப் பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடும். ஆனால் சாதாரண மக்கள் குடிநீருக்கும் தோல் அல்லது புற்றுநோய் சிகிச்சைக்கும் வழியின்றி சாவது மட்டுமே நிச்சயம்.

எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காரணம் காட்டி, அம்மக்களின் வாழ்க்கையை அழிப்பது எந்த வகையில் புத்திசாலித்தனமானது, நியாயமானது?

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

———————————————————————————————————–
ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டும் பணி தாற்காலிக நிறுத்தம்

வேலூர், ஆக. 9: பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் அணை கட்டும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பாமக தொடர்ந்த பொதுநல வழக்கைத் தொடர்ந்து இப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் எஸ். ராவட் புதன்கிழமை கூறியதாவது:

ரூ. 55 கோடியில் கட்டப்படும் தடுப்பணை திட்டம் நீதிமன்ற நடவடிக்கையால் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குப்பம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இந்த சிறிய திட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தீர்ப்பு ஆந்திர அரசுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறோம் என்றார்.

தற்போது உச்சநீதிமன்றத்தில் 4 வழக்குகள் இந்த அணை கட்டுமானப் பணியை எதிர்த்து தொடரப்பட்டுள்ளன. ஒரு வழக்கு அதிமுக அரசும், மற்றொரு வழக்கு திமுக அரசும் தொடர்ந்துள்ளன. பொதுநல வழக்குகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.எம். பஷீரும் தொடர்ந்துள்ளனர்.

———————————————————————————————————–

Posted in A Raja, ADMK, Agriculuture, AIADMK, Analysis, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Andhra Pradesh, AP, Arcot N Veerasamy, Backgrounder, Cauvery issue, Chennai, Chitore, Chittoor, Chittore, Chittur, Dam, Details, Developments, DMK, Duraimurugan, Environment Minister, Events, Farming, Floods, Future, Ganesapuram, GK Mani, Government, Happenings, History, Irrigation, Jayalalitha, Jayalalithaa, JJ, Kachipuram, KANCHEEPURAM, Kanchi, Kanjeepuram, Kerala, Kolar, Kuppam, Madras, MDMK, Mullai Periyar, Paalaar, Paalaaru, Paalar, Paalaru, Palar, PMK, Public Works, Public Works Department, PWD, PWD Minister, R&D, Rajasekara Reddy, Ramadas, Ramadoss, Research, River, solutions, Tamil Nadu, Thiruvalloor, Thiruvallur, Thiruvannamalai, TN, Vaaniyambadi, VaiKo, Vaniyambadi, Vellore, Water, YSR | 6 Comments »

Veera. Jeeva Prabhakaran: Kerala’s adamant attitude results in 40 acre of grains loss for Tamil Nadu – Mullai Periyar

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

பிடிவாதத்தால் கடலுக்குச் சென்றது 4 டி.எம்.சி. தண்ணீர்: 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு?

வீர. ஜீவா பிரபாகரன்

மதுரை, ஜன. 30: பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, நீர்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த கேரள அரசு மறுத்ததால் மதுரை மாவட்டத்தில் தற்போது 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து, கேரள அரசிடம் நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப். 27-ல் தீர்ப்பு அளித்தது.

ஆனால், இத்தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல் படுத்தாமல் காலம் தாழ்த்துவதற்கு ஏற்ற வகையில் கேரள சட்டப் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.

இரு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையின்போதும், உடன்பாடு காண்பதற்கான முயற்சியில் கேரள அரசு சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.

மேலும், பிரச்சினையைத் திசை திருப்பும் வகையில் கேரள முதல்வரின் இணைய தளத்தின் மூலம் பெரியாறு அணை குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டன. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கேரள அமைச்சர்களும் தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றனர்.

கடலுக்குச் சென்ற தண்ணீர்: பெரியாறு அணையின் இருபோக, ஒருபோக மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியைச் சேர்ந்த 1.45 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு கடந்த அக்டோபர் 23-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

உரிய நேரத்தில் பருவமழை தொடங்கியதாலும் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாலும், இந்த ஆண்டு போதிய பாசன நீர் கிடைக்கும் என்று எதிர்பார்த்து மதுரை மாவட்ட விவசாயிகள் நெல் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டினர்.

விவசாயிகள் எதிர்பார்த்தது போலவே, தொடர் மழையால் பெரியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. எனினும், 136 அடிக்கு மேல் நீர்தேக்க கேரள அரசு அனுமதி மறுத்ததால் 14.11.2006 முதல் 1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றது.

காய்ந்து வரும் நெற்பயிர்: கடந்த அக்.23-ல் தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், நவம்பர் முதல் வாரம் வரை பல்வேறு பகுதியிலும் நடவுப் பணிகள் படிப்படியாக நடைபெற்றன. நெற் பயிர் முழு விளைச்சல் பெற 120 நாள்களுக்குத் தண்ணீர் தேவை.

ஆனால், பெரியாறு, வைகை உள்ளிட்ட அணைகளில் போதிய நீர் இன்மையால் தற்போது பாசனப் பகுதிக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதுவும், பயிருக்குக் கடைசி வரை தண்ணீர் அளிக்க வாய்ப்பில்லை.

இந் நிலையில், மதுரை மாவட்டத்தில் தற்போது நெல் பயிரிட்டுள்ள 1 லட்சத்து 45 ஆயிரம் ஏக்கரில் 40 ஆயிரம் ஏக்கர் போதிய தண்ணீர் இன்றி பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் கேரள அரசின் மீது வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளோம். பெரியாறு அணைப் பிரச்சினை நாட்டின் வளர்ச்சி குறித்த கண்ணோட்டத்தில் பார்க்கப்படவில்லை. இப் பிரச்சினை கேரளத்தில் குறுகிய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது’ என்றும் பெரியாறு பாசன ஒருபோக சாகுபடி விவசாயிகள் சங்கத் தலைவர் எம். மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.

குறைந்தது நீர்மட்டம்: பெரியாறு அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 115.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 590 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 130.90 அடியாக இருந்தது.

அரசியலைத் தாண்டிய உறவு:

தமிழகத்தில் 1946-ல் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது குமுளியிலிருந்து கீழகூடலூரில் வந்து விழும் தண்ணீரிலிருந்து மின்சார உற்பத்தி செய்யும் திட்டம் தீட்டப்பட்டது.

அதற்கு, பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை எதிர்ப்புத் தெரிவித்தார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அவரது நண்பர் பி. ராமமூர்த்தியை முதல்வர் ராஜாஜி அனுப்பி வைத்தார்.

பேச்சுவார்த்தை நடத்திய ராமமூர்த்தி, கேரளத்திற்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 2 பைசா அளித்தால் அம்மாநில அரசு சம்மதிக்கும் என்ற கருத்தை அறிந்து ராஜாஜியிடம் தெரிவித்து, அதன்படி உடன்பாடு ஏற்பட்டு பெரியாறு மின்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

அன்று, இப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அரசியலைக் கடந்து தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டினர். இன்று அரசியல் ஆதாயமே பிரதானமாகிவிட்டது.

—————————————————————————————–

தொடர்கதையாகிவிட்ட முல்லைப் பெரியாறு பிரச்னை

பா. ஜெகதீசன்

கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1,300 அடி தூரத்தில் ரூ.216 கோடி செலவில் புதிய அணையைக் கட்டுவது தொடர்பான அறிவிப்பை கேரள சட்டப் பேரவையில் அந்த மாநில நீர் ஆதாரத் துறை அமைச்சர் என்.கே. பிரேமசந்திரன் வெளியிட்டுள்ளார்.

மூன்று தலைமுறைகளாக கேரளத்துடன் நீடித்து வரும் இந்த விவகாரத்தை இடியாப்பச் சிக்கலாக்கி, தொடர்கதையாக ஆக்கவே கேரளத்தின் இந்த அறிவிப்பு பயன்படும் என்பது தமிழகப் பாசனத் துறை வல்லுநர்களின் கருத்து.

கேரளத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி கடலில் கலக்கும் பெரியாறு, முல்லை ஆகிய நதிகளுக்கு இடையே அணை கட்டும் பணியை 1874-ல் பிரிட்டனைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் பென்னி குயிக் தொடங்கினார்.

அரசின் நிதி உதவியுடன், அடர்ந்த வனப் பகுதியில் சுமார் 3,500 அடி உயரத்தில் அணை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆரம்பநிலையில் இந்தப் பணி தோல்வி அடைந்தது. எனவே, அரசு தனது நிதி உதவியைத் தொடராமல் நிறுத்தி விட்டது.

எனினும், பென்னி குயிக் தனது சொத்துக்களையும், மனைவியின் நகைகளையும் விற்று, அணை கட்டும் பணியை தொடர்ந்தார்.

1895-ல் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது.

தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட இந்த அணை தற்போதும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் குடிநீர் -பாசன வசதி மேம்பாட்டுக்கு அடித்தளமாகத் திகழ்கிறது.

நூற்றாண்டு கொண்டாடிய இந்த அணையில் கசிவு ஏற்பட்டதாக கேரளத்தில் இருந்து வெளியாகும் சில இதழ்களில் (தவறான) செய்திகள் வெளியாகின.

1979-ல் அணையின் பாதுகாப்பு தொடர்பாக சில அச்சங்களை கேரள அரசு எழுப்பியது.

இதையடுத்து, அணையை மத்திய நீர்வளக் குழுமம் ஆய்வு செய்து, அணையைப் பலப்படுத்த 3 வகையான பணிகளை மேற்கொள்ளும்படி தமிழகத்துக்குப் பரிந்துரைத்தது.

அதன்பேரில் அணையின் நீர்மட்டம் அதன் முழு அளவான 152 அடியில் இருந்து தாற்காலிகமாக 136 அடியாகக் குறைக்கப்பட்டது.

தக்க பாதுகாப்பு -பலப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்து முடித்த பிறகு, நீர்மட்டத்தை 145 அடிக்கு உயர்த்தலாம் எனவும் குழுமம் பரிந்துரைத்தது.

பேபி டேம் எனப்படும் சிற்றணையைப் பலப்படுத்துதல், கைப்பிடிச் சுவற்றை 2 அடி உயர்த்துவது ஆகிய பணிகளைக் கேரள அரசு எதிர்த்ததால், முடிக்க இயலவில்லை.

குழுமம் கூறியபடி அணையைப் பலப்படுத்தும் இதர பணிகளைப் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசு நிறைவேற்றியது.

அதன்பிறகும், அணையின் நீர்த் தேக்கும் அளவை உயர்த்த கேரள அரசு முன்வரவில்லை.

இதுதொடர்பாக பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. தீர்வு மட்டும் கிடைக்கவில்லை.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த சிலரும், நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என வலியுறுத்தி கேரளத்தைச் சேர்ந்த சிலரும் (கேரளம் மற்றும் சென்னை) உயர் நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

பின்னர் இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்பேரில், 19.5.2000-ல் தமிழக -கேரள முதல்வர்களின் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது.

அந்தக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயவும், தக்க பரிந்துரைகளை அளிக்கவும், வல்லுநர் குழுவை மத்திய அரசு நியமித்தது.

அந்தக் குழு 2001 மார்ச்சில் அரசுக்கு அறிக்கை அளித்தது. “சிற்றணையைப் பலப்படுத்தும் பணி முடிந்த பிறகு, பெரியாறு அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி உயரத்துக்கு நீர் மட்டத்தை உயர்த்துவது பற்றி ஆய்வு செய்யலாம்.

அதற்கு முதற்கட்டமாக நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என அந்தக் குழு பரிந்துரை செய்தது. அதை தமிழகம் ஏற்றது.

இந்த நிலையில், அணையில் நீர் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து 2006 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்தத் தீர்ப்பு இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க பெரிதும் உதவும் என பாசனத் துறை வல்லுநர்கள் கருதினர்; அவர்களைப் போலவே, விவசாயிகளும் நம்பினர்.

அணையில் தேக்கப்படும் 142 அடி நீரில் 104 அடிக்கு மேல் உள்ள தண்ணீரை மட்டுமே பாசனத்துக்கு எடுக்க இயலும்.

பெரியாறு அணையில் கடந்த 25 ஆண்டுகளாக 136 அடிவரை மட்டுமே தேக்க அனுமதிக்கப்பட்டதால் 6 டி.எம்.சி. மட்டுமே நீரைத் தேக்க முடிந்தது. 152 அடிவரை நீரைத் தேக்க அனுமதிக்கப்பட்டால் 10.5 டி.எம்.சி. நீரைத் தேக்க முடியும்.

தற்போது 142 அடி நீரைத் தேக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் கூடுதலாக 1.54 டி.எம்.சி. நீரைத் தேக்க இயலும்.

பெரியாறு அணையின் நீர்த்தேக்கும் அளவை உயர்த்தும் பிரச்னையால் தமிழகத்துக்கு கடந்த 29 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு பயிர் இழப்பும், மின் உற்பத்தி இழப்பும் ஏற்பட்டுள்ளன.

கேரள அரசின் பிடிவாதத்தால் மழைக் காலங்களில் முழுமையாக நீரைத் தேக்க இயலாமல் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 35 டி.எம்.சி. தண்ணீர் வீணாகி, கடலில் கலந்தது.

மாநிலங்களுக்கு இடையே முற்றுப் பெறாத தொடர்கதையாக நீடிக்கும் இத்தகைய நதி நீர்ப் பகிர்வுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒரே வழிதான் உள்ளது.

தென்னிந்திய நதிகளை விரைந்து இணைப்பது ஒன்று தான் அந்த வழி.

————————————————————————————————————————————————–

பெரியாறு அணையா? தேசிய ஒருமைப்பாடா?

கடந்த 1979ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 28 ஆண்டுகளாக நீடித்து வரும் பெரியாறு அணைப் பிரச்னை இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

பெரியாற்றின் வடிமுகப் பரப்பில் தமிழ் நாட்டிலும் சில பகுதிகள் உள்ளன. இந்தப் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர். இது பெரியாறு அணையின் மொத்த வடிமுகப் பரப்பில் சுமார் 20 விழுக்காடு ஆகும். பெரி யாறு அணைக்கு வரும் நீரின் அளவில் 88.90 சதவிகிதம் நமது எல்லைக்குள்ளேயே பெய்யும் மழையினால் கிடைக்கிறது.

கேரள அரசு பெரியாற்றில் 16 அணைக ளைக் கட்டியுள்ளது. இந்த அத்தனை அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 9 சதவிகிதம் மட்டுமே பெரியாறு அணை யின் நீரில் பயன்படுத்த நாம் உரிமை பெற் றுள்ளோம். ஆனால் இந்தச் சிறு அளவைக் கூட கேரள அரசியல்வாதிகளால் பொறுக் கமுடியவில்லை.

பெரியாறு அணை உடன்பாட்டின்படி மீன்பிடிக்கும் உரிமையும் சுற்றுலாத் தளமா கப் பயன்படுத்தும் உரிமையும் தமிழகத் துக்கு உண்டு. ஆனால் அந்த உரிமைக ளைத் தமிழக அரசு கேரள அரசுக்கு விட் டுக்கொடுத்தது. இதன் மூலம் ஆண்டுதோ றும் கேரள அரசுக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. பெரியாறு அணை கட்டப்படாமல் இருந்தாலோ இந்த உரிமைகளைத் தமிழக அரசு விட்டுக் கொடுக்காமல் இருந்தாலோ இந்த வருமா னம் கேரள அரசுக்குக் கிடைக்காது.

பெரியாறு அணை பலவீனமாக இருப்ப தாகவும், எந்த நேரமும் இடிந்து விழக்கூடும் அபாயம் இருப்பதால் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்க வேண்டுமெனவும் கேரளம் பிடிவாதமாக வற்புறுத்தியதன் விளைவாக மத்திய நீர்ப் பாசன ஆணையம் தலையிட்டு அணை யைப் பலப்படுத்தும் வேலைகள் முடிவடை யும் வரை நீர்மட்டத்தைக் குறைக்கும்படி ஆணையிட்டது. இதன் விளைவாக கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாகப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியாக இருந்து வருகிறது. இதன் விளைவாகத் தமிழ்நாட்டில் பெரும் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி இல்லாமல் பெரும் பாதிப் புக்கு உள்ளாகின.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்க ளில் பெரியாறு நீரினால் பாசனம் செய்யப் படும் நிலத்தின் பரப்பளவு சுமார் 2 லட்சம் ஏக்கர் ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்ட தன் விளைவாக மேற்கண்ட நிலங்களில் பின்வருமாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தரிசாக மாறிய நிலப்பரப்பு 38,000 ஏக் கர் இருபோக சாகுபடியாக இருந்து ஒரு போக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86,000 ஏக்கர். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்குழாய் கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு – 53,000 ஏக்கர். ஆக மொத்தம் 2 லட்சம் ஏக்கரில் 1 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் பாதிப்புக்குள்ளாகிறது. இதன் விளைவாக விவசாய உற்பத்தியில் இழப்பு ஆண்டுக்கு ரூபாய் 55.80 கோடியாகும்.
மின் உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு ரூபாய் 75 கோடியாகும். ஆக மொத்தம் தமிழகத் துக்கு இழப்பு ஆண்டுக்கு ரூபாய் 130.80 கோடியாகும்.

1980ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டுவரை 28 ஆண்டுகாலமாக மொத்த இழப்பு 3662.40 கோடியாகும்.

1986ஆம் ஆண்டில் அணையைப் பலப்ப டுத்தும் வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற் கும் கேரளம் சம்மதிக்கவில்லை. இது சம் பந்தமாக கேரளம், தமிழகம் ஆகிய மாநி லங்களின் உயர் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக் குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டன. கடந்த 28-4-2000 அன்று இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசும்படி மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதற்கிணங்க 19-5- 2000 அன்று இரு மாநிலப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அணையின் வலிமையை ஆராய்வதற்காக ஒரு குழுவை அமைப்ப தென முடிவு செய்யப்பட்டது.

அதற்கிணங்க அமைக்கப்பட்ட குழு 2001 மார்ச்சில் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் எனப் பரிந் துரை செய்தது. மற்றுமுள்ள வேலைகளை முடித்தபிறகு 152 அடிவரை உயர்த்தலாம் என்று கூறியது. இந்தப் பரிந்துரை உச்ச நீதி மன்றத்திற்கு அளிக்கப்பட்டது. 27-2-2006 அன்று உச்ச நீதிமன்றம் இந்தப் பரிந்து ரையை ஏற்று அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிவரை உயர்த்த லாம் எனத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த கேரள அரசு 18-3-2006 அன்று கேரள சட்டமன் றத்தில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்து வதற்கு எதிரான சட்டம் ஒன்றை நிறைவேற் றியது. கேரள சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் இந் தச் சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட் டது என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

இதற்கு எதிராக தமிழக அரசு 31-3-2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை அளித்தது. கேரள சட்டத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் அணை யின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவ தைக் கேரளம் தடுக்கக்கூடாது என்றும் அந்த மனுவில் வேண்டிக் கொண்டது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கேரள அரசின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் 27-7-2006 அன்று தள்ளுபடி செய்தது. அத்துடன் இரு மாநில அரசுகளும் கூடிப்பேச வேண்டும் என்றும் அல்லது இந்திய அரசு தலையிட்டு இப்பிரச்னையைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கேட்டுக்கொண்டது. அதற்கி ணங்க 29-11-2006 அன்று புதுதில்லியில் இரு மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டத்தை மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கூட்டினார். அதில் எந்த முடி வும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பின்னர் 18-12-2006 அன்று இரு மாநில அமைச்சர் கள் கூட்டத்தை அவர் கூட்டினார். இந்த இருகூட்டங்களிலும் எத்தகைய முடிவும் ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு மனுவை அளித் திருக்க வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்னையைத் தீர்க்க வழி யில்லை என்பதால் உச்ச நீதிமன்றம் அளித் திருக்கிற தீர்ப்பை உடனடியாக நிறைவேற் றுமாறு மத்திய அரசுக்கும் கேரள அரசுக் கும் ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமி ழக அரசு அந்த மனுவில் வலியுறுத்தியி ருக்க வேண்டும்.
அல்லது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கி ணங்க அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்க வேண்டும். அதை கேரள அரசு தடுத்திருக்குமானால், அந்த அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக் கினை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்க வேண்டும். ஆனால் மேலே கண்ட இரண் டையுமே தமிழக அரசு இதுவரை மேற் கொள்ளவில்லை என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெரியாறு அணை நீரில் தமிழகத்திற்கு உள்ள சட்டப்படியான உரி மைகளை நிலைநாட்ட தமிழக அரசு அடி யோடு தவறிவிட்டது.

தமிழக அரசின் இந்தத் தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் புரிந்துகொண்ட கேர ளம் அடுத்த நடவடிக்கையை மேற்கொள் ளத் திட்டமிட்டது. சட்டப்படியும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவதை ஒருபோதும் தடுக்க முடி யாது என்பதை உணர்ந்துகொண்ட கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டும் என்ற திட்டத்தை வலியுறுத்தத் தொடங்கியது.

ஏற்கெனவே மத்திய நீர்ப்பாசன கமிஷன் அமைத்த நிபுணர் குழுக்களும் உச்ச நீதிமன் றம் அமைத்த நிபுணர் குழுவும், அணை பல மாக உள்ளது. எனவே நீர்மட்டத்தை உயர்த் தலாம் எனப் பரிந்துரைகள் வழங்கிய பிறகு கேரள அரசு தானாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து அணையை ஆய்வுசெய்யும்படி கூறியது. இது சட்டவிரோதமானதாகும்.
இந்த நிபுணர் குழு ஆய்வு செய்வதற்குத் தடைவிதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை தமி ழக அரசு அணுகியிருக்க வேண்டும். அவ் வாறு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.

பெரியாறு அணையில் கசிவு அதிகமாக இருக்கிறது என கேரள அரசு நியமித்த நிபு ணர் குழு கூறுவது முற்றிலும் பொய்யான தகவலாகும். கேரள மாநிலத்தில் பல்வேறு அணைகள் உள்ளன. இவற்றில் ஏற்படும் கசிவு நீரின் அளவு குறித்து கேரள மாநில அரசினால் அமைக்கப்பட்டுள்ள நீராதார வளர்ச்சி மற்றும் நிர்வாகம் குறித்த மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வருமாறு: 1895ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெரி யாறு அணையில் அதிகப்பட்ச கசிவு நிமி டத்திற்கு 89.371 லிட்டர் ஆகும். 112 ஆண் டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான அணையில் இந்த அளவுதான் கசிவு ஆகி றது.

1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட குட்டி யாடி அணையில் நிமிடத்திற்கு 249.77 லிட் டர் அளவுக்குக் கசிவு ஏற்படுகிறது. அதா வது 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புதிய அணையில் இவ்வளவு அதிகமான கசிவு ஏற்படுகிறது.

1966ஆம் ஆண்டு கட்டப்பட்ட பம்பா அணையில் நிமிடத்திற்கு 96.00 லிட்டர் அளவுக்குக் கசிவு ஏற்படுகிறது. அதாவது 41 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த அணை கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியாறு அணைக்குப் பிறகு கேரள மாநிலத்தில் கட்டப்பட்ட அணைகளில் இவ்வளவு அதிகமான அளவில் கசிவு ஏற்ப டும்போது அந்த அணைகளை இடிக்க வேண்டும் என்று கேரள அரசு கூறவில்லை.
மாறாக மேற்கண்ட அணைகளைவிட மிகக்குறைந்த அளவுக்கே கசியும் பெரி யாறு அணையை இடிக்க வேண்டும் என்று கூசாமல் கூறுகிறது.

கேரள அரசு அமைத்த நிபுணர் குழு எதிர்பார்த்ததுபோல அணை பலவீனமாக இருக்கிறது. அணையில் கசிவு அதிகமாகி யிருக்கிறது. எனவே இந்த அணையை முற் றிலுமாக இடித்துவிட்டு புதிய அணை கட் டவேண்டும் எனப் பரிந்துரை செய்துள் ளது. இந்தப் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக்கொண்ட கேரள அரசு அணை கட் டுவதற்கான அலுவலகத்தையும் திறந்துவிட் டது. இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? புதிய அணை கட்டுவதற்கு கேரள அர சுக்குச் சட்டப்படி உரிமை உண்டு. ஆனால் பழைய அணையும் இரு மாநிலங்களுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட 999 ஆண்டுகால உடன்பாடும் அதன்படி நமக் குள்ள சட்டப்பூர்வமான உரிமைகளும் நீடிக்கிறது என்ற நிலைப்பாட்டை வற்புறுத் தும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் ஏக மனதாகத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண் டும். இதில் தமிழகத்தில் உள்ள சகல கட்சிக ளும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும்.

பெரியாறு அணைக்குக் கீழே இடுக்கி அணைக்கு மேலே எந்த இடமும் புதிய அணை கட்டுவதற்கு ஏற்றதல்ல. ஏற்கெ னவே கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில் எத்தகைய கட்டட வேலையும் 3 ஆண்டுக ளுக்கு மேற்கொள்ளக்கூடாது என அர சாணை பிறப்பித்துள்ளது. தானே பிறப் பித்த இந்த ஆணையை மீறி அணை கட்ட முடியாது. இது கேரள அரசுக்கு நன்கு தெரியும். இருந்தாலும் வேண்டுமென்றே புதிய அணை கட்டப்போவதாக அறிவித்து கேரள மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சி நடைபெறுகிறது.

புதிய அணை கட்டப்படுவதற்கு கேரள அரசு தேர்ந்தெடுத்த இடம் வனப்பகுதிக் குள் அமைந்துள்ளது. அப்பகுதியில் அணை கட்டவோ அதற்கான ஆய்வு நடத் தவோ மத்திய வன அமைச்சகத்திடம் அனு மதி பெற வேண்டும். இதற்காக கேரள அரசு கேரள வனத்துறை மூலம் மத்திய வனத்துறை அமைச்சகத்திற்கு அனுமதி வேண்டி நவம்பர் முதல் வாரத்தில் கடிதம் அனுப்பியிருந்தது. மத்திய வனத்துறை அமைச்சகம் அளித்த பதிலில் “”புதிய அணை கட்டுவதற்குத் தேர்வு செய்யப் பட்ட இடம் வனவிலங்கு சரணாலயமாக உள்ளது. வனவிலங்கு சரணாலயத்தில் அணை கட்ட அனுமதிக்க முடியாது.
வனப்பகுதியில் ஆழமாகக் குழிதோண்டி ஆய்வு நடத்தவும் அனுமதிக்க முடியாது” எனத் திட்டவட்டமான பதிலை அனுப்பி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தச் செய்தியை அடியோடு மறைத்து கேரள அரசு புதிய அணை கட்டு வதற்கான அலுவலகத்தைத் திறந்து நாட கம் ஆடியுள்ளது.

இதன் மூலம் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுப்பதற்குத் திட்டமிட்டு கேரள அரசு செயல்படுகிறது.
இதைத் தமிழக அரசும் அனைத்து அரசி யல் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று முறிய டிக்க வேண்டும்.
புதிய அணை கட்டுவதை கேரளம் தொடர்ந்து வற்புறுத்துமானால் பரம்பிக்கு ளம் ஆழியாறு திட்டத்தில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 8 அணைகளுக்கு மேலாக மேலும் 2 அணைகளைக் கட்டும் வேலை யில் தமிழக அரசு ஈடுபடப்போவதாக அறி விக்கவேண்டும். இப்படிப் பதிலடி கொடுப் பதன் மூலம்தான் நாம் கேரளத்தின் தீய நோக்கத்தை முறியடிக்க முடியும்.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரள மாநி லத்தில் ஓடும் நதிகளுக்குத் தமிழகம் 93 டி.எம்.சி. நீரை அளிக்கிறது. இதற்குப் பதி லாக கேரளத்தில் உற்பத்தியாகி தமிழகத் திற்கு அளிக்கப்படும் நீரின் அளவு கீழே குறிக்கப்பட்டுள்ளது.
பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக் கப்பட்டால் நமக்கு 10.6 டி.எம்.சி. நீர் மட் டுமே கிடைக்கும்.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டப்படி நமக்கு 32.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கி றது.

Posted in Agriculture, Dam, Dinamani, Electricity, Farmer, Farming, Grain Fields, Grains, Growth, Impact, Integration, Irrigation, Karunanidhi, Kerala, Madurai, Malayalam, Monsoon, Mullai, Mullai Periyaar, Mullai Periyar, Mullai Periyaru, Paddy, Paddy Fields, Periyaar, Periyaaru, Periyar, Politics, Power, Rain, Rajaji, rice, River, State, Tamil Nadu, Vaigai, Vaikai, Veera. Jeeva Prabhakaran, Water | 2 Comments »

80 year old bridge over Nasuvini collapses in Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

80 ஆண்டு பழமையான பாலம் ஆற்றுக்குள் இடிந்து விழுந்தது

பட்டுக்கோட்டை, ஜன. 25: பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூர் நசுவினியாற்றில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலைப் பாலம் செவ்வாய்க்கிழமை மாலை இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

அப்போது எந்த வாகனமும் பாலத்தில் செல்லவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது.

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலத்தின் நீளம் 40 மீட்டர், உயரம் சுமார் 4 மீட்டர். இதில் சுமார் 25 மீட்டர் நீளத்துக்கு பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

இதனால் அதிராம்பட்டினம் -மன்னார்குடி (துவரங்குறிச்சி வழி) மார்க்கத்தில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

புதிய பாலம் கட்டப்படும் வரை இவ்வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்துக்காக இடிந்த பாலம் அருகில் இன்னும் 1 மாதத்தில் மாற்றுப் பாதை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Posted in Adhirampattinam, Bridge, Congestion, Dam, Floods, Issue, Mannargudi, Mannarkudi, Mullai Periyar, Nasuvini River, Palanjoor, Palanjur, Pattukkottai, Pattukottai, Pazhanjoor, Pazhanjur, Safety, Thuvarangurichi, Thuvarankurichi, Traffic, Water | Leave a Comment »

Karunanidhi ridicules Jayalalitha and Vaiko – Hurricane & Empty Gas

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

‘புயலும்’ காற்றும் கருணாநிதி கிண்டல்
ஜனவரி 04, 2007

சென்னை: ‘புயலையே’ பொடாவில் பிடித்து வேலூர் சிறையில் அடைக்கும்போது ‘காற்றை’ கைது செய்ய முடியாதா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக முரசொலியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்துள்ள பதில்:

கேள்வி: காற்றைக் கைது செய்யக் கழுதைகளால் முடியுமா என்று எதிர்க்கட்சிப் பேச்சாளர் ஒருவர் பேசியுள்ளாரே.?

கருணாநிதி: ஏன் முடியாது? பொடா சட்டத்தில் புயலையே கைது செய்து வேலூர் சிறையில் போட்டிருந்தார்களே.

கேள்வி: திரையரங்கக் கட்டணக் குறைப்பு குறித்து சில பத்திரிக்கைகள் சென்னையில் அதிகப்படியான வசதிகள் கொண்ட இரண்டே திரையங்குகளுக்கு மாத்திரம், உயர் வகுப்புக்கு மட்டும் கட்டணம் உயர்த்தியிருப்பதை பெரிதுபடுத்தி, அரசு சினிமாக்காரர்களுக்கு பணிந்தது என்றும், அரசு பல்டி என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்களே?

கருணாநிதி: இந்த அரசு ஏழை, எளிய சாதாரண சாமான்ய மக்களின் நலன் கருதி, திரையரங்கு கட்டணங்களைக் குறைத்து ஆணை பிறப்பித்ததிலிருந்து அணுவளவும் மாறவில்லை. அந்த ஆணை அப்படியே செயல்படுத்தப்படுகிறது.

அரசு குறியிட்டு வகுத்துள்ள 15 அல்லது 10 வசதிகள் கொண்ட திரையரங்குகள் இரண்டே இரண்டு மட்டும் சற்று கூடுதலாக அதாவது அடிப்படைக் கட்டணம் ரூ. 10 என்றும், அதிகபட்சக் கட்டணம் ரூ. 85 லிருந்து 120 ரூபாய் என்றும் கட்டணம் வசூலித்துக் கொள்ள சிறப்பு வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

குறைந்த கட்டணப் பயனை இரண்டாயிரம் திரையரங்குகளுக்கு செல்வோர் அனுபவிப்பதற்கு அரசின் 2வது அறிவிப்பால் எந்தத் தடையும் இல்லை. இதை விஷயமறிந்தோர் உணர்ந்தே இருக்கின்றனர்.

அவசரப்படுவோர், ஆத்திரத்தில் அம்மிக் குழவியால் குத்திக் கொண்டு அவதிப்பட்டால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? சொறி சிரங்கு பிடித்தவன், அரிப்பு தாங்காமல் உடம்பை பிராண்டிக் கொள்வான். அப்போது சுகமாக இருக்கும். சிறிது நேரம் கழித்து ரத்தம் கசியும், எரிச்சல் எடுக்கும். அப்போது பாவம், அவன் துடிப்பான். என்ன செய்வது, சிரங்கு பிடித்தவர் நிலையில் சிலர் இருக்கிறார்கள்.

பல்டி என்றும் பணிந்தது என்றும் தலையைப் பிய்த்துக் கொண்டு தலைப்பு போடுகிறார்கள். உண்மை தெரிந்தும் ஊமையாகி விடுகிறார்கள். அவர்களுக்காக அனுதாப்படுவோம்.

கேள்வி: முல்லைப் பெரியாறு அணையின் கைப்பிடிச் சுவரில் சேதம் ஏற்படுத்திய செய்தியை அறிந்ததும், உடனடியாக பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியிருந்த போதிலும் நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளாரே?

கருணாநிதி: தமிழக முதல்வர் உடனடியாக பிரதமருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்றும், பேச்சுவார்த்தை முறையாக இல்லாததால் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக அறிவித்திருக்கிறார் என்றும், அதுதான் பாராட்டுக்குரியது என்றுமா ஜெயலலிதா அறிக்கை விடுவார்?

எதிர்க்கட்சித் தலைவர் குறை சொல்லித்தானே ஆக வேண்டும். வேறு எதுவுமே அவரால் சொல்ல முடியாத நிலையில் இதையாவது சொல்லிக் கொண்டிருக்கட்டுமே என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கே:- ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கில் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறதே, அந்த வழக்கு எந்த ஆண்டிற்கான வருமானம் குறித்தது என்பதை கூற முடியுமா?

ப:- 1993-94 ஆம் ஆண் டுக்கான, அதாவது 13 ஆண்டு களுக்கு முந்தைய ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறியதாக வருமான வரி துறை கிரிமினல் நடவடிக்கையை 1996ம் ஆண்டு, பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. `

அதன் பின்னர் 1991-92 மற்றும் 1993ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே ஒருமுறை உச்ச நீதிமன்றம் வரை சென்று 3 மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றும், அன்றாடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதே வழக்கில்தான் தற்போது அதே உச்ச நீதிமன்றம் சென்னை நீதி மன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கிற்கு தடை விதித்துள்ளது.

Posted in ADMK, Disproportionate assets, DMK, Entrance Tickets, Fares, Jail, Jayalalitha, JJ, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MDMK, Movie Theater, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Mullai Periyar, Murasoli, POTA, Prison, Property, Q&A, Sasikala, TADA, Ticket pricing, Vai Gopalasami, Vai Kopalsamy, VaiGo, VaiKo | Leave a Comment »

CS Kuppuraj – Mullai Periyar Solutions : Kerala vs Tamil Nadu

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

முல்லைப் பெரியாறு – இரண்டாம் சமரசத் திட்டம்

சி.எஸ். குப்புராஜ்

முல்லைப் பெரியாறு அணை பற்றிய இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.

இந்தப் பிரச்சினையை சமரச முயற்சியின் மூலம் தான் முடிவு செய்ய முடியும். நீதிமன்றங்கள் மூலமும் மத்திய அரசு செலுத்தக்கூடிய அதிகாரத்தின் மூலமும் தீர்வு காண முடியாது என்பது தெளிவாகி விட்டது. கேரள மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே மனக்கசப்பும் பகைமை உணர்ச்சியும்தான் வளருமே தவிர சுமுகத் தீர்வு ஏற்படாது.

இதற்காக சமரச முயற்சியாகச் சென்ற மாதம் எழுதிய கட்டுரையில் ஒரு தீர்வு சொல்லியிருந்தேன்.

அதன்படி தமிழ்நாடு தனது சொந்தச் செலவில் ஒரு புதிய அணையைக் கட்டிக் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் அணையை ஒட்டினாற்போல் இப்போதைய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தற்காலத் தொழில் நுட்ப அடிப்படையில் 152 அடி தண்ணீரைத் தாங்கக் கூடிய பலத்துடன் அது வடிவமைக்கப்படுதல் வேண்டும்.

அதற்காகும் செலவை ஈடுகட்டுவதற்காகப் புதிதாக ஒரு டன்னலும் புதிதாக ஒரு மின்நிலையமும் தமிழ்நாடு தனது செலவில் அமைத்துக் கொள்ள வேண்டும். வைகை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு போதாது என்பதற்காக அதற்கு மேற்புறத்திலேயே ஒரு புதிய அணையைக் கட்டிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது சமரசத் திட்டம்: “”இப்போது இருக்கும் அணை 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக்கூடிய அளவுக்குப் பலம் பெற்றிருக்கவில்லை. அதனால் 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக் கூடாது” என்று கேரள அரசு சொல்கிறது.

இது உண்மை அல்ல; என்றாலும் அவர்களுடைய காரணமில்லாத பயத்தைப் போக்க, நீர்த் தேக்க அளவு எப்போதும் 136 அடிக்குமேல் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். அப்படி 136 அடி மட்டும் நீர்த்தேக்கும் பட்சத்தில், தமிழகம் முழுமையான பலன்களைப் பெற வேண்டுமெனில் அதற்கு சில வசதிகள் செய்து கொள்ள வேண்டும்.

இப்போதிருக்கும் டன்னலுக்குச் சற்று தூரத்தில் மற்றொரு டன்னல் அமைக்கப்படுதல் வேண்டும். அதன் அடிமட்டம் +80 அடியாக இருத்தல் வேண்டும். அதன் தண்ணீர் செலுத்தும் அளவு வினாடிக்கு 3000 கன அடியாக இருத்தல் வேண்டும்.

மற்றும் இந்த இரண்டாவது டன்னல் மூலம் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு இரண்டாவது மின்நிலையம் அமைக்கப்படுதல் வேண்டும். இதில் 60 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஐந்து ஜெனரேட்டர்கள் (மொத்தம் 300 மெகாவாட்) இருத்தல் வேண்டும்.

இரண்டாவது மின்நிலையத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரைத் தேக்கி வைக்க வைகை அணைக்கு மேற்புறத்தில் 8.0 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஒரு நீர்த்தேக்கம் அமைக்கப்படுதல் வேண்டும்.

இரண்டாவது டன்னலுக்கு 3000 கோடி ரூபாயும், இரண்டாவது மின்நிலையத்திற்கு 12,000 கோடி ரூபாயும், புதிய வைகை அணைக்கு 2000 கோடி ரூபாயும் செலவாகும். ஆக மொத்தம் இந்த மூன்று வேலைகளுக்கும் 17,000 கோடி ரூபாய் செலவாகும். இவ்வளவு செலவும் கேரளத்தின் அச்சத்தைப் போக்குவதற்காகவும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவை 136 அடிக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளவும்தான் தேவைப்படுகிறது.

எனவே இதற்கான செலவில் ஒரு பகுதியையாவது கேரளம் கொடுத்தால் நலமாக இருக்கும். அவர்கள் அச்சமின்றி இருக்கலாம். அவர்களது கற்பனை பயத்திலிருந்து விடுபடலாம். மேலே குறிப்பிட்ட மதிப்பீட்டுத் தொகைகள் மிகவும் தோராயமானவை. விவரமாக ஆராயும்போது கூடலாம் அல்லது குறையலாம். இதனால் தமிழ்நாட்டிற்கு கூடுதல் மின்சாரமும், கூடுதல் பாசன வசதிகளும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

இந்த இரண்டு சமரசத் திட்டங்களில் எதையாவது கேரளம் ஏற்கலாம். முதல் திட்டத்தில் அவர்கள் விரும்புவதுபோல் புதிய அணை கட்டிக் கொண்டு நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவதற்கு வசதி செய்தல்.

இரண்டாவது திட்டத்திலும் அவர்கள் விரும்புவதுபோல் அணையின் நீர்த் தேக்க அளவை 136 அடி வரை மட்டுமே நிறுத்திக் கொள்வது.

இவற்றிற்காகும் செலவுகளையும் செயல்பாடுகளையும் இப்போதிருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செய்தல் வேண்டும். திட்டப் பணிக்கான வசதிகளை கேரளம் செய்து தருதல் வேண்டும். அதற்காகத் துணை ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம்.

இரண்டு சமரசத் திட்டங்களுமே கேரளத்தின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யவே வகுக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டிற்கு ஏராளமான பொருள்செலவு ஏற்படும்.

இரண்டு திட்டங்களையுமே கேரளம் ஏற்க மறுத்தால், அது வீண்பிடிவாதமே தவிர வேறல்ல. அப்போது நாம் வேறு வழிகளை நாட வேண்டி வரும்.

Posted in Agriculture, CS Kuppuraj, Dam, Developments, Dinamani, Electricity, Future, History, hydro-electric, India, Interlink, Irrigation, Kerala, Megawatt, Mullai Periyar, Periyaar River, Periyaaru, Periyar, Power Generation, Power plant, solutions, Tamil Nadu, Water | Leave a Comment »

CS Kuppuraj – Mullai Periyar imbroglio :: Solutions

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2006

முல்லை பெரியாறு: பிரச்சினைக்குத் தீர்வு

சி.எஸ். குப்புராஜ்

பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் கூட கேரள அரசு அதனை ஏற்க மறுத்துவிட்டது. கேரள அரசு மறுபடியும் உச்ச நீதிமன்றத்தினை அணுகியபோது, பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டது.

இதற்கிடையில் கேரள முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், சகல கட்சி உறுப்பினர்களும் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து ஒரு மனு அளித்துள்ளார்கள். அதில் இப்போதிருக்கும் அணையில் 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தினை உயர்த்தினால் கேரளத்திற்கு ஏற்படக்கூடிய தீமைகளை எல்லாம் மிகைப்படுத்திக் கூறிய பின் அத் தீமைகளைத் தவிர்ப்பதற்குச் சில வழிமுறைகளைக் கூறி இருக்கிறார்கள்.

அவற்றில் ஒன்று, தமிழ்நாடு இந்தப் பழைய காலத்து அணைக்குப் பதிலாக ஒரு புதிய அணை கட்டிக் கொள்ளட்டும். அதற்கு நாங்கள் 1979-80 ஆம் ஆண்டுகளில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போதே சம்மதம் தெரிவித்துள்ளோம். தமிழ்நாடு ஒன்றுமே செய்யவில்லை. இப்போதாவது அதனை உடனே செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அம் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தமிழ்நாடு ஏற்றுக்கொண்டால் இப்போதிருக்கும் அணையினை ஒட்டினாற்போல அதன் கீழ்ப்புறத்தில் தற்காலத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய அணை கட்டிக் கொள்ளலாம். நில அதிர்வுகள் ஏற்படுவதாகக் கூறி பயமுறுத்துகிறார்களே, அவற்றையும் தாங்கும்படியாக அந்தப் புது அணையினை வடிவமைத்துக் கொள்ளலாம். அவ்வாறு புதிய அணை கட்டிவிட்டால் அதில் 152 அடி வரை பயமின்றி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம். இப்போது இருக்கும் அணை நீரில் மூழ்கிப் போகும்படி விட்டு விடலாம்.

இந்தப் புதிய அணையினை வடிவமைக்கவும், கட்டி முடிக்கவும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஆகலாம். கேரள அரசு இடைஞ்சல் ஏதும் செய்யாமல் ஒத்துழைக்குமானால் இது சாத்தியமாகும். இதற்குப் பல கோடி ரூபாய்கள் செலவாகும். இந்தச் செலவினை ஈடுகட்ட, சில புதிய வசதிகளைத் தமிழ்நாடு பெற வேண்டும்.

இரண்டாவது சுரங்கம் (Tunnel): இப்போது இருக்கும் டன்னல், அதிகப்படியாக வினாடிக்கு 1800 கன அடிதான் செலுத்தக் கூடியதாக இருக்கிறது. இதற்கு ஏற்ப நீர் மின் நிலையத்தில் 35 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நான்கு ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் வினாடிக்கு 400 கன அடி வீதம் மொத்தம் 1600 கன அடி பயன்படுத்தக் கூடியனவாக அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரினைக் கணக்கெடுத்துப் பார்த்தால் சராசரியாக விநாடிக்கு 5000 முதல் 6000 கன அடி வரை தண்ணீர் வருகிறது. எனவே இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளதைப் போன்ற நெருக்கடிகளும், சங்கடங்களும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் மற்றுமொரு டன்னல் தேவைப்படுகிறது.

1955-ம் ஆண்டு பெரியாறு மின் நிலையம் அமைப்பதற்கு ஆய்வுகள் மேற்கொண்ட போது இரண்டாவது டன்னல் அமைப்பதற்கான கூறுகள் ஆராயப்பட்டன. ஆனால் இருக்கும் டன்னலையே மேம்பாடுகள் (Improvement) செய்து அதன் திறனை வினாடிக்கு 1400 கன அடியிலிருந்து 1800 கன அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, இரண்டாவது டன்னல் யோசனை கைவிடப்பட்டது. இப்போது அதற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது டன்னல் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் செலுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படலாம். இப்போதிருக்கும் டன்னலில் அடிமட்டம் + 104 அடியாக உள்ளது. இதனால் அணையில் உள்ள நீரின் பெரும்பகுதி பயனற்றதாக (Dead Storage) போய் விடுகிறது. மொத்த கொள்ளளவாகிய 15.54 டி .எம்.சி.யில் 5.04 டி .எம்.சி. வீணாகிறது. 10.5 டி .எம்.சி. தான் பயன்படுகிறது. எனவே இரண்டாவது டன்னலின் அடிப்பாகத்தினை +80 அடியாக அமைத்துக் கொள்ளலாம். வீணாகப் போகும் நீரில் ஒரு பகுதியைப் பயன்படுத்தலாம்.

இரண்டாவது மின் நிலையம்: இரண்டாவது டன்னலின் மூலம் கிடைக்கும் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரினைப் பயன்படுத்துவதற்கு இரண்டாவது மின் நிலையம் அமைக்கப்படுதல் வேண்டும். அதில் 60 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து ஜெனரேட்டர்கள் அமைக்கப்படலாம். 300 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.

இரண்டாவது நீர்த்தேக்கம்: இப்போதுள்ள வைகை நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 6.8 டி.எம்.சி.தான் உள்ளது. வடமேற்குப் பருவக்காற்று மூலம் மழை வந்து வைகை அணை நிரம்பும்போதுதான் பெரியாறு அணையின் நீரினையும் பெற வேண்டியுள்ளது. கூடுதலாகத் தண்ணீர் வரும்போது இந்தக் கொள்ளளவு போதாது. எனவே புதியதோர் நீர்த்தேக்கம் 8 டி.எம்.சி. கொள்ளளவுடன் அமைக்கப்படுதல் வேண்டும். வைகை அணையின் மேற்புறத்தில் இதற்கான இடத்தினைத் தேர்வு செய்திடல் வேண்டும்.

இவ்வாறு இரண்டாவது டன்னல், இரண்டாவது நீர் மின் நிலையம், இரண்டாவது நீர்த்தேக்கம் ஆகியவற்றினை அமைத்தால் மட்டுமே, பெரியாறு அணையினை ஒட்டினாற்போல் புதிய அணை கட்டுவதற்கான செலவினை நியாயப்படுத்த முடியும். எனவே இந்த நான்கு அமைப்புகளையும் ஒரு தொகுப்பாக நிறைவேற்ற ஒப்புக்கொண்டால், இந்தச் சிக்கலான பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியும்.

Posted in Dam, Interlink, Kerala, Mullai Periyar, Periyaar, Periyar, Periyar River, River, Tamil Nadu | 1 Comment »

Mullai Periyar Dam Controversy – History & Backgrounder

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2006

காவிரி போல விசுவரூபம் எடுக்கும் பெரியாறு அணைப் பிரச்சினை

பா. ஜெகதீசன்

சென்னை, நவ. 24: தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே கடந்த 27 ஆண்டுகளாக இருந்து வரும் “முல்லைப் பெரியாறு அணைப்’ பிரச்சினை தற்போது பூதாகரமாக விசுவரூபம் எடுத்துள்ளது.

“காவிரி பிரச்சினையில் கர்நாடகம் கையாளுவதைப் போன்ற அணுகுமுறையை கேரளமும் பின்பற்றத் தொடங்கி உள்ளதோ? இதுவும் தீராத பிரச்சினையாக உருமாறி விடுமோ?’ என்கிற அச்சம் தமிழகத்தின் தென் மாவட்ட விவசாயிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் எழுந்துள்ளது.

1979-ல் இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக சில அச்சங்களை கேரள அரசு எழுப்பியது. இதையடுத்து, அணையை மத்திய நீர்வளக் குழுமம் ஆய்வு செய்து, அணையைப் பலப்படுத்த 3 வகையான பணிகளைத் தமிழகத்துக்குப் பரிந்துரைத்தது.

தாற்காலிக ஏற்பாடு: அதன்பேரில் அணையின் நீர்மட்டம் அதன் முழு அளவான 152 அடியில் இருந்து தாற்காலிகமாக 136 அடியாகக் குறைக்கப்பட்டது. தக்க பாதுகாப்பு -பலப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்து முடித்த பிறகு, நீர்மட்டத்தை 145 அடிக்கு உயர்த்தலாம் எனவும் குழுமம் பரிந்துரைத்தது.

பேபி டேம் எனப்படும் சிற்றணையைப் பலப்படுத்துதல், கைப்பிடிச் சுவற்றை 2 அடி உயர்த்துவது ஆகிய பணிகளைக் கேரள அரசு எதிர்த்ததால், முடிக்க இயலவில்லை.

வழக்குகள் வந்தன: இதர பலப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிவு அடைந்தாலும், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலேயே வைத்திருக்க வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வருகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி கேரளத்தைச் சேர்ந்த சிலரும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் (கேரளம் மற்றும் சென்னை) உயர் நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். பின்னர் இம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

முதல்வர்கள் பேச்சு வார்த்தை: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்பேரில், 19.5.2000-ல் தமிழக -கேரள முதல்வர்களின் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. அக்கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயவும், தக்க பரிந்துரைகளை அளிக்கவும், வல்லுநர் குழுவை மத்திய அரசு நியமித்தது.

அக்குழு 2001 மார்ச்சில் அரசுக்கு அறிக்கை அளித்தது. “சிற்றணையைப் பலப்படுத்தும் பணி முடிந்த பிறகு, பெரியாறு அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி உயரத்துக்கு நீர் மட்டத்தை உயர்த்துவது பற்றி ஆய்வு செய்யலாம். அதற்கு முதற்கட்டமாக நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என அக்குழு பரிந்துரை செய்தது.

இப்பரிந்துரையை ஏற்பதாக மத்திய அரசிடம் அப்போதே தமிழகம் தெரிவித்தது.

இந்நிலையில், அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள அனுமதித்து 27.2.2006-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இத்தீர்ப்பு உதவும் என பாசனத் துறை வல்லுநர்களும், விவசாயிகளும் நம்பினர்.

முரண்பட்ட கருத்து: ஆனால், அந்நம்பிக்கை பொய்த்துப் போகும் வகையில் கேரளத்தின் செயல்கள் தொடர்ந்தன.

“பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்பாகவே கேரள முதல்வர் அச்சுதானந்தன் முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, பேச்சு வார்த்தை நடத்த தில்லி செல்கிறோம்’ என முதல்வர் கருணாநிதி தெரிவித்து, தமிழகத்தின் நிலையை வெளிப்படுத்தி உள்ளார்.

அச்சுதானந்தனும், அவரது அமைச்சரவை சகாக்களும் அணையைப் பார்வையிட்டு, நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பேச்சுக்கே இடம் இல்லை என அறிவித்தனர்.

அணையைப் பார்வையிட தமிழகப் பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் சென்றபோது அவருக்கு எதிராக கேரளத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்களுக்கு கேரள காவல் துறை பாதுகாப்பு அளித்தது.

காலம் தாழ்த்தும் நடவடிக்கை: புதிய அணை கட்டுவதே பிரச்சினைக்குத் தீர்வு ஆகும் என அச்சுதானந்தன் கூறி உள்ளார். இது பிரச்சினையை மேலும் காலம் தாழ்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்று தமிழக விவசாயிகளும், பாசனத் துறை வல்லுநர்களும் கருதுகின்றனர்.

ஜெ., காங். கருத்து: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தான் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

“மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கேரள அரசு செயல்படுகிறது’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரச்சினைக்குத் தீர்வு காண தில்லியில் அடுத்த சில நாள்களில் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில், இரு மாநிலங்களிலும் எழுந்துள்ள சூழ்நிலைகள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடுமோ என்கிற அச்சம் இந்த அணையின் பாசன நீரை நம்பி உள்ள விவசாயிகள், குடிநீரை எதிர்நோக்கி உள்ள மக்கள் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளது.

Posted in Dam, Interlinking, Irrigation, Kerala, Mullai Periyar, Periyaar, Periyar, Periyar River, River water, Rivers, States, Tamil Nadu, Water Issues | 8 Comments »

CS Kuppuraj – Mullai Periyar imbroglio :: History, Currents

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

முல்லை பெரியாறு அணை – சிக்கல்

சி.எஸ்.குப்புராஜ்

1886}ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் நாள் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அது திருவாங்கூர் மன்னருக்கும் சென்னையில் இருந்த பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே பெரியாற்றில் ஓர் அணை கட்டவும், அதில் தேங்கும் நீரினை ஒரு குகை மூலமாகத் திருப்பி, சென்னை மாகாணத்தில் இருந்த மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் வறண்ட நிலங்களில் பாசனம் செய்யவும் வகை செய்தது. இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது.

அதன்படி 1895-ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. அறுபது ஆண்டுகள் எவ்வித சிக்கலும் இன்றி பாசனம் நடந்து வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அங்கே கேரள அரசு உதயமானது. இங்கே தமிழ்நாடு அரசு ஏற்பட்டது.

1955-ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது.

அதற்காக ஒரு புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்று முடிவாகி 1970-ம் ஆண்டு மே மாதம் 29-ம் நாள் கேரள அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே, பழைய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக புது ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. முதல் ஒப்பந்தத்தில் அணை கட்டுவதால் நீரில் முழ்கும் 8000 ஏக்கர் நிலத்துக்கு வாடகையாக ஆண்டுதோறும் ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் மொத்தம் 40,000 ரூபாய் பிரிட்டிஷ் நாணயமாக சென்னை அரசாங்கம் திருவாங்கூர் மன்னருக்குத் தர வேண்டும் என்று இருந்தது (திருவாங்கூர் சமஸ்தானத்தில் அப்போது சக்கரம் என்ற பெயரில் வேறு நாணயம் புழங்கி வந்ததால் பிரிட்டிஷ் நாணயம் என்று குறிக்கப்பட்டது).

மின் உற்பத்திக்காக போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தில், மூழ்கடிக்கப்பட்ட நிலம் 8000 ஏக்கருக்கு வாடகை 30 ரூபாய் என உயர்த்தப்பட்டது. அதன்படி 2,40,000 ரூபாய் ஆண்டுதோறும் கேரள அரசுக்குத் தமிழ்நாடு அரசு செலுத்தி வருகிறது.

கடந்த 27 ஆண்டுகளாக பெரியாறு அணையின் முழு நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டு விட்டதால், நீரில் மூழ்கும் நிலம் 8000 ஏக்கராக இல்லாமல் 4677 ஏக்கராகக் குறைந்துவிட்டது. இவ்வாறு வெளிப்பட்ட நிலங்களில் கேரள அரசு பலவிதமான சுற்றுலா கேளிக்கை சாதனங்களை நிறுவியுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு 8000 ஏக்கருக்கான வாடகைப் பணத்தினை தவறாமல் செலுத்தி வருகிறது.

முழு நீர்மட்டம் 16 அடி குறைக்கப்பட்டதால் (152 அடியிலிருந்து 136 அடிக்கு) நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 10.4 டி.எம்.சி.யிலிருந்து 6.4 டி.எம்.சி.யாகக் குறைந்துள்ளது. அதனால் பாசனப் பகுதி 1,25,000 ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது; 140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பெரியாறு மின் நிலையத்தில் 40 சதவீதம் உற்பத்திக் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு இந்த நஷ்டத்தினை தாங்கி வருகிறது. முழு நீர்மட்டம் குறைந்ததனால் அணையில் இருந்து வழிந்து போகும் நீர் அதே ஆற்றில் கட்டப்பட்டுள்ள இடுக்கி அணையில் போய்ச் சேருகிறது. அங்கு உற்பத்தியாகும் மின்சக்தி மீண்டும் தமிழ்நாட்டிற்கே விற்கப்படுகிறது.

தமிழ்நாடு தண்ணீர் இழப்பினால் ஏற்படும் நஷ்டத்தோடு, அத் தண்ணீரைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியினை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

இதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, தமிழ்நாடுதான் ஏதோ குற்றம் செய்துவிட்டதாக கேரள அரசு பேசி வருகிறது. அதற்கும் யாரும் பதில் சொல்லவில்லை.

முழு நீர்மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு கொடுத்த பின்பும், கேரள அரசு பணிய மறுக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யலாம் என்கிறது. பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை பயனற்றுப் போனதால்தான், தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தினை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பின்பும் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்றது. காலம் கடத்துவதற்கான தந்திரமே தவிர வேறில்லை. தமிழ்நாடு அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இவ்வளவு சிக்கலுக்குப் பின்னரும், நம்மால் கட்டப்பட்ட அணை, நமக்குப் பயன்தரும் அணை, கேரள அரசின் பாதுகாவலில் உள்ளது. கேரள காவல்துறையினர்தான் பாதுகாத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது விரும்பத்தக்கத்தல்ல. தமிழ்நாட்டு காவல்துறையினரும் அங்கே இருக்க வேண்டும். இதுவும் உடனே கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

Posted in Agriculture, Dam, Electricity, Farming, hydro-electric, Idukki Dam, Irrigation, Kerala, Madurai, Mullai Periyar, Periyar River, Ramanathapuram, Tamil Nadu, TN, Tourism, Travancore, Tunnel, Water | 5 Comments »

Mullai Periyar Dam Issue – PMK Ramadoss Condemns Kerala Attitude

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

முல்லைப் பெரியாறு விவகாரம்: ராமதாஸ் கண்டனம்

சென்னை, செப். 27: முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய நிபுணர் குழுவினர் அளித்த அறிக்கைக்கு ஏற்ப முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மதிக்காமலும் அதை எதிர்த்தும் சண்டித்தனம் செய்தது முந்தைய கேரள காங்கிரஸ் அரசு. மாநிலத்தில் உள்ள அணைகளை எல்லாம் ஓர் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதன் அனுமதியில்லாமல் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று சட்டம் இயற்றியது.

இந் நிலையில் ஆட்சி மாறி மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு அங்கே பதவிக்கு வந்தது. இவர்களாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பார்கள். அதை நடைமுறைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி அரசு நடந்து கொள்கிறது. அவர்களே பரவாயில்லை என்று கருத வைத்துவிடுவார்களோ என்ற அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் இடதுசாரி அரசு நடந்து கொள்வது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில் தான் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் மீண்டும் பேச்சுவார்த்தை என்ற ஒரு கபட நாடகத்தை இடதுசாரி அரசு அரங்கேற்றத் தொடங்கி இருக்கிறது. இப்போது உச்ச நீதிமன்றத்தையும் நம்ப வைத்திருக்கிறது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று முதலில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள் என்ற அறிவுரை கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது. முதலில் உத்தரவை அமல்படுத்துங்கள் என்று உத்தரவிட வேண்டிய உச்ச நீதிமன்றம், மீண்டும் பேச்சுவார்த்தை என்று புதிதாக அறிவுரை வழங்கியிருப்பது சரிதானா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் விளக்க வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று மாநில அரசுகளே பகிரங்கமாக அறிவிப்பதும் நீதிமன்ற உத்தரவை செல்லாததாக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

இத்தகைய போக்கை மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். அத்துடன் ஆண்டுக் கணக்கில் தீர்வு காணப்படாமல் இருக்கும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சட்டப்பூர்வ அமைப்பு முறையை ஏற்படுத்துவது குறித்தும் மத்திய அரசு சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் அளித்த உத்தரவை மதித்து முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை முதலில் 142 அடியாக உயர்த்த அனுமதிக்கும்படி கேரள அரசுக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அறிவுறுத்த வேண்டும். அதன் மூலம் தனித்தன்மை படைத்தவர்கள் என்பதையும் நீதிமன்றத்தை மதிப்பவர்கள் என்பதையும் அவர்கள் நிலைநாட்ட வேண்டும்.

இனி பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை என்ற நிலையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண முடியவில்லை என்ற நிலையில்தான் மூன்றாவது நபர் என்ற வகையில் உச்ச நீதிமன்றத்தை அணுகினோம். முதலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவர்கள் அமல்படுத்த வேண்டும். அதன் பிறகு உச்ச நீதிமன்ற அறிவுரை பற்றி நாங்கள் சிந்திக்கிறோம் என்ற நிலையை பகிரங்கமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அத்துடன் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து அவசரமாக விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Posted in Contempt, Dam, High Court, Kerala, Mullai Periyar, PMK, Ramadoss, River, Sharing, States, Supreme Court, Tamil, Tamil Nadu, TN, Water | 1 Comment »

Kerala’s Unreasonable Demands – Mullai Periyar Dam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

தடம் மாறும் வாதம்

“வெள்ளெரிக்காய் காய்ச்சது தோட்டத்துல, மூணு வெள்ளிக்கு விக்கச்சொன்னான் வெள்ளத்தொரை’ -என்று ஒரு நாட்டுப்பாடல். அதாவது, என் தோட்டத்தில் நான் விளைவித்த பொருளுக்கு வெள்ளைக்காரன் விலை நிர்ணயம் செய்கிறான் என்பதைக் கிண்டல் செய்யும் பாடல்.

இப்போது பெரியார் அணை விவகாரத்தில் இதே விஷயம் கொஞ்சம் தலைகீழாக மாறியுள்ளது. தமிழக நலனுக்காக வெள்ளைக்காரன் கட்டி வைத்த அணையில், 999 ஆண்டுகளுக்கு நமக்கு உரிமையுள்ள இடத்தில், தண்ணீரை எவ்வளவு உயரத்துக்கு நிறுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது கேரள அரசு.

பாதுகாப்பு என்ற அளவில் கேரள மாநில அரசின் வாதங்கள் நியாயமானவைதான். அதனால்தான் தமிழக அரசு பிரச்சினையைப் புரிந்து உடனடியாகச் செயல்பட்டது. நீர் தேக்கும் உயரத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்தது. நிபுணர்கள் குழுவும், நீதிமன்றமும் விதித்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து, அணையை பலப்படுத்திய பின்னரும், 142 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கி வைக்க நீதிமன்ற அனுமதி கிடைத்த பின்னரும் கேரள அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருவது வேதனைக்குரியது.

1850-களில் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நிலவிய பஞ்சத்தையும் வறட்சியையும் பார்த்தபின்னர் அப்பகுதியில் உள்ள 80000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன நீர் அளிக்கத்தான் பெரியாறு அணை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த அணை கட்டுவதில் தடைகள் வந்தபோது இதை ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குயிக் தன் சொத்துகளை விற்று கட்டினார். அவர் மீது தமிழர்கள் கொண்ட மரியாதை அளப்பரியது. அப்பகுதியில் பென்னி குயிக் பெயர் கொண்டவர்கள் இன்றும் உள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் கேரள அரசு, இப்போது புதிய வாதத்தை வைத்துள்ளது: “திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் 1947-லேயே காலாவதியாகிவிட்டது.’ இந்த வாதம் இந்திய ஒருமைப்பாட்டையே கொஞ்சம் அசைத்துப் பார்க்கின்ற வாதம். இதே வாதத்தை காவிரிப் பிரச்சினையில் கர்நாடகமும் கையில் எடுத்துக்கொள்ளலாம். ஒரு வீட்டை இன்னொருவர் வாங்கும்போது அதன் மீதான வங்கிக் கடனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லமுடியாது என்கிற சாதாரண நடைமுறையை, மிகச்சாதாரண மக்கள்கூட அறிந்திருக்கும்போது கேரள அரசுக்குத் தெரியாதா? அல்லது வழக்கை மேலும் சிக்கலாக்கவும் தாமதப்படுத்தவும் இந்த வாதத்தை முன்வைக்கிறார்களா?

கேரள மாநிலத்தில் எந்த நாளிலும் தண்ணீர் பிரச்சினை இருந்ததில்லை. அணை பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரள அரசின் அச்சம் தேவையற்றது. மேலும் தற்போதும்கூட மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசன நீர் இல்லாமல் விவசாயம் பாழ்பட்டு இருப்பதை எந்த நிபுணர் குழுவும் ஆய்வு நடத்தாமலேயே சொல்லிவிட முடியும்.

அணையில் நீரைத் தேக்கி வைக்கும் உயரத்தை உயர்த்தினால் மட்டுமே ராமநாதபுரத்தின் கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் கிடைக்கும். நீரை உயர்த்தப் போதுமான அளவு அணை பலப்படுத்தப்பட்டுவிட்டது. இனியும் கேரள அரசு மறுக்குமானால் தன் வீட்டையும் சொத்துகளையும் விற்று அணை கட்டிய பொறியாளர் பென்னி குயிக்-கின் தியாகம் அர்த்தமற்றதாகிவிடும்.

Posted in Agriculture, Cauvery, Dam, Farming, Inter-state, Irrigation, Kerala, Madurai, Mullai Periyar, Ramanathapuram, Tamil, Thiruvithangoor, Water | 1 Comment »