Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Mountain’ Category

Depletion of Rivers and Sand Theft – KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2007

தொடரும் மணல் கொள்ளை!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ஆற்று மணல் இயற்கையின் கொடை; நிலத்தடி நீர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மணல் அவசியமாகிறது. ஒரு செ.மீ. அளவுள்ள மணல் சேர பல ஆண்டுகள் ஆகும். ஆற்றுப்படுகைகளில் 30 அடி, 40 அடி மணல் படிந்துள்ளது என்றால் இதற்கு பல நூற்றாண்டுகள் பிடித்து இருக்கும். நீரில் கலக்கும் கழிவுகளை மணல்தான் வடிகட்டுகிறது. நீர்ப்பதத்தைச் சீரமைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே மணல் கொள்ளை ஆரம்பித்துவிட்டது. இயற்கையின் வரங்களான காடு, மலை, நீர் என்பவை சுயநல சக்திகளால் சூறையாடப்படுகின்றன.

ஆற்றுமணலைப் பொதுப் பணித் துறையே விற்பனை செய்கின்ற நிலையில், வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் மீது லாரிகளை ஏற்றி கொல்லும் சம்பவங்கள் நடந்துள்ளன. இது ஒரு தொடர் கதை. மணல் விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி சில நிபந்தனைகளுடன் உரிமம் வழங்க வேண்டும்:

பொதுப்பணித்துறையின் பார்வையில், அதன் நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் மணல் எடுக்க வேண்டும். மணலை வாரித்தான் எடுக்க வேண்டும். இயந்திரம் எதையும் பயன்படுத்த அனுமதி கூடாது. தரைமட்டத்திலிருந்து அரை மீட்டர் ஆழத்திற்குள்ளேதான் மணல் எடுக்க வேண்டும். நீர் மட்ட அளவுக்குக் கீழ் மணல் எடுக்கக் கூடாது. குடிநீர்க் கிணறுகள் மற்றும் பம்புகளிலிருந்து 500 மீட்டருக்குத் தொலைவில்தான் மணல் எடுக்க வேண்டும்.

ஆனால் மணல் எடுக்கும் இடங்களில் இந்த நடைமுறைகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டம் வைப்பாற்றில் இந்த நிபந்தனைகளை மீறி மணல் வியாபாரம் மும்முரமாக நடக்கிறது. ஒரு டிப்பர் லாரியில் ஏற்றப்படும் மணலின் மதிப்பு சுமார் ரூ. 1,300. எடுக்கப்படும் மணல் அருகில் உள்ள களத்தில் குவிக்கப்பட்டு பின் மணல் வியாபாரிகளின் விருப்பம்போல் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. எத்தனை தடவை என்ற அளவே கிடையாது. மணல் கொள்ளையால், நீர் மேலாண்மையும் பாதிப்புறுகிறது. ஆற்றின் வெள்ளைமணல் நிலத்தடிநீர் வளத்தைப் பாதுகாக்கிறது.

தரமான வெள்ளை மணலுடன் நிரப்பு மணலைக் கலந்து ஒரு சிலர் விற்கின்றனர். சில இடங்களில் விவசாய நிலங்களில் உள்ள துகள் மண்ணையும் எடுத்து விற்கத் தொடங்கியுள்ளனர்.

தாதுமணல் சட்டங்கள் மீறப்படுவதைக் கண்காணிக்க எந்த அமைப்பும் கிடையாது. உண்மையில் மணல் எடுக்க ஜே.சி.பி. – பொக்லைன் போன்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை.

தாமிரபரணி ஆற்று நீர் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசனமாகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள சுமார் 421 கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள சுமார் 50 லட்சம் மக்களின் தாகத்தைத் தீர்க்கிறது. தண்ணீர் ஓடிய ஆறுகளில் பல மாதங்கள் மணல் மட்டுமே காட்சி தருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் ஆற்று மணலில் தோரியம் என்ற அரிய தனிமம் உள்ளது. மணல் எடுப்பதால் தோரியம் தாது அழிந்து வருகிறது.

ஆற்றுப்படுகையில் 20 அடி 30 அடி ஆழம் இயந்திரங்களால் தோண்டி மணல் எடுக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி பகுதியில் உள்ள குடிநீர்க் கிணறுகளை ஒட்டியே மணல் எடுத்ததால் அத்தனை கிணறுகளும் பாதிப்படைந்துள்ளன. இந்த அத்துமீறலுக்கு ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றால்தான் பிரச்னை தீரும்.

10 டயர்கள் கொண்ட பெரிய லாரிகளில் பெருமளவில் பொருநை ஆற்று மணல் ஏற்றப்பட்டு கேரளத்துக்குக் கடத்தப்படுகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளம், முல்லைப் பெரியாறு அணைக்கு அருகில் கட்டுகின்ற புதிய அணைக்கு தேனி மாவட்டத்திலிருந்து மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இத்தனைக்கும் கேரளத்தில் நீர், மணல்வளம் குறைவில்லை. ஆனால் அங்கு மணல் எடுக்கத் தடை. வளம் குறைந்த தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு மணல் கடத்தப்படுகிறது.

தமிழகத்தில் ரூ. 1,300 பெறுமானமுள்ள மணல் கொச்சியில் ரூ. 32 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு, அங்கிருந்து கப்பல் மூலம் ஏற்றுமதியாகிறதாம். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அரிய தாதுக்கள் அடங்கிய மணல் சிறிது சிறிதாகக் கடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. கேரள ஆறுகளில் மணல் எடுத்தால் பொதுமக்களே விரட்டி அடிக்கிறார்கள். அதனால் பிளாச்சிமடவிலிருந்து பெப்சி தொழிற்சாலை விரட்டப்பட்டு, தமிழர்கள் ஏமாளிகள் எனக் கருதி கங்கைகொண்டானில் நமது தண்ணீரைக் கொள்ளை அடித்து நமக்கே விற்கின்ற துர்பாக்கிய நிலை உள்ளது. கேரளத்தில் உள்ள விழிப்புணர்வு தமிழகத்தில் இல்லை என்பதை நினைக்கும்போதே வெட்கமாக உள்ளது. மணல் கொள்ளைக்காக பல கோடி ரூபாய் கப்பம் கட்டப்படுகின்றது எனப் பரவலான குற்றச்சாட்டும் உள்ளது.

அரியநாயகிபுரம் அருகே தாமிரபரணியில் குளிக்கச் சென்ற 3 பேர் புதை குழியில் சிக்கி மாண்டனர். மணல் எடுத்த பள்ளத்தில் ஆழம் தெரியாமல் போனதால் மூன்று உயிர்கள் பறிபோயின. இதைக் கண்டித்து, மணல் எடுப்பதைத் தடுக்கப் பொதுமக்கள் போராடியபோது அப்பாவிகள் 16 பேரின் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளியதால், வலிமை மிகுந்த பாலம் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். அந்தப் பாலம் இடிந்துவிழக் காரணமாக இருந்த மணல் கொள்ளையர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு கரூர், முசிறி, தேனி, தஞ்சை, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், காஞ்சி மற்றும் வைகை, அமராவதி கரைகள் போன்ற இடங்களிலும் மணல் கொள்ளை நடக்கிறது. ஆனால், மாட்டு வண்டியில் மணலை சொந்தத் தேவைக்கு ஏழை விவசாயிகள் எடுத்துச் சென்றால் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அரசின் நிபந்தனைகளையும் சட்டங்களையும் மீறி மணல் எடுக்கும் “பிரமுகர்கள்’ மற்றும் அதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளியோரின் தேவை அறிந்து அவர்களுடைய கட்டுமானப் பணிகளுக்கு மணல் உரிய விலையில், எளிதில் கிடைக்க நடவடிக்கை அவசியம். குடிநீர்க் கிணறுகளிலிருந்து குறைந்தபட்சம் 500 மீட்டருக்கு அப்பால் மணல் எடுக்க வேண்டும் என்ற விதியைக் கடுமையாக்க வேண்டும். மணல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து கடுமையான சட்டங்களும், இதய சுத்தியான விழிப்புணர்வும் அவசியம். அண்டை மாநிலங்களுக்கு மணல் எடுத்துப் போவோர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். சமூக விரோதிகளின் ஆதிக்கத்திலிருந்து மணல் தொழிலை மீட்க வேண்டும்.

இயற்கை நமக்களித்த நதிச் செல்வங்களைக் காப்பது நமது கடமை. தொடரும் கொள்ளையால் மணல் வளம் குன்றாமல் தடுப்பது காலத்தின் கட்டாயம்.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in ADMK, Ariyanayagipuram, Ariyanayakipuram, Bribes, Cauvery, Cochin, Corruption, Dasani, DMK, Drink, Drinking, Environment, Exploit, Ganga, Ganges, Karunanidhi, Kaveri, kickbacks, Kosasthalai, Lorry, Mineral, Minerals, Mountain, Nature, Party, Pepsi, pilferage, Politics, Pollution, PWD, Quilon, River, Sand, Source, Stalin, Tamirabarani, Tamirabharani, Thamirabarani, Thamirabharani, Theft, Thiruvalloor, Thiruvallur, Thiruvaloor, Thorium, Truck, Vaigai, Vaikai, Water | Leave a Comment »

Ooty – Smoking Earth

Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007

நிலத்தில் வெளியேறும் புகை: பீதி வேண்டாம் புவியியல் துறை அதிகாரி தகவல்

உதகை, ஜூன் 5: தலைக்குந்தா வனப்பகுதியில் நிலத்திற்கடியிலிருந்து வெளிவரும் புகை 2 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தலைக்குந்தா வனப்பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதியிலிருந்து நிலத்திற்கடியிலிருந்து தொடர்ந்து புகைவெளிவருகிறது. இதில் கடந்த 2 நாட்களாக புகையுடன் தீக்கனல்களும் வெளிவந்ததால், அருகிலிருந்த செடி, கொடிகளும் அவ்வப்போது திடீரென தீப் பிடித்து எரிந்தன. இதனால், உதகை பகுதி மக்கள் பெரும் பீதியடைந்திருந்தனர்.

இது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தலைக்குந்தா வனப்பகுதியில் நிலத்திற்கடியில் படிந்த ஒரு வனப்பகுதி நாளடைவில் மட்கி ஒரு படிமம்போல உருவாகியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் ஏற்பட்ட வனத்தீயின் வெப்பத்தால் இப்பகுதி தூண்டப்பட்டு அதிலிருந்து தற்போது புகை வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய படிமங்கள் நிலத்திற்கடியில் சுமார் 300 மீட்டர் நீளம் வரை உள்ளது.

தற்போது நடத்தப்பட்ட சோதனையில் 2 மீட்டர் ஆழத்திற்கு கீழே நெருப்பு, சுட்ட மண் எதுவும் வராததால் அதற்கு கீழே புகை வர வாய்ப்பில்லை. எனவே, மொத்தமுள்ள 300 மீட்டர் நீள பரப்பளவிலிருந்தும் நிலத்திற்கடியிலேயே எரிந்து புகை வரும். அதன்பின்னரே இது முழுமையாக அணையும் என்றார் அவர்.

——————————————————————–

நெருப்புகிரியானதா நீலகிரி?
எரிமலை பீதியால் ஏற்பட்ட பரபரப்பு
குமுதம் ரிப்போர்ட்டர்
03.06.07

மூடுபனி முக்காடு போட்டிருக்கும் இடம் நீலகிரி. குளுகுளுவென குளிர் கூடாரம் போட்டுத் தங்கியிருக்கும் அங்கே நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு விபரீதம் நிகழ்ந்து வருகிறது. அங்கே பூமிப்பிளவு ஒன்று திடீரென கரியையும், புகையையும், சாம்பலையும் கக்கத் தொடங்கியிருப்பதால் எரிமலை பீதியில் உள்ளனர் நீலகிரி மக்கள். இது நீலகிரியா? நெருப்பு கிரியா? என்ற சந்தேகம் அவர்களிடம் உழன்று வருகிறது.

நீலிகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தலைகுந்தா. இங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றால் மீப்பி வனப்பகுதி. இதற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில் முத்தநாடு மந்து, அத்திக்கல் நீபி ஆகிய மலைவாழ் மக்களின் கிராமங்கள் உள்ளன.

மீப்பி வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அப்போது இந்தப் பகுதியில் அடர்ந்த கரும்புகை வருவதை மலைவாழ் மக்கள் பார்த்திருக்கிறார்கள். ‘கோடைக்காலம் இல்லையா? ஏதாவது காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும்!’ என்று, அவர்கள் அலட்சியமாக இருந்து விட்டனர்.

வழக்கமாக மழைக்குப் பிறகு காட்டுத்தீ அணைந்து விடும். ஆனால், இந்த மர்மப்புகை விடாமல் தொடர்ந்திருக்கிறது. கூடவே கடந்த 24_ம் தேதி பெய்த மழையின் போது காதைப் பிளக்கும் இடிச்சத்தம் கேட்டதோடு தீப்பிழம்பும் தெரிந்து, புகைமூட்டம் அதிகமாகியிருக்கிறது.

இதனால் பயந்துபோன முத்தநாடு மந்துவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அடுத்த நாள் அந்தப் பகுதிக்குப் போய் பார்த்திருக்கிறார்கள். அங்கு நடந்திருந்த பயங்கரத்தை அவர்களது கண்களே நம்ப மறுத்துவிட்டன. அங்கே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மரங்கள் வேரோடு சரிந்து பூமிப்பிளவுக்குள் சிக்கியிருக்க, அதிலிருந்து அக்னி குண்டம் போல புகையும், நெருப்பும் வந்து கொண்டிருந்தது. அரண்டு போன இளைஞர்கள், அதுபற்றி பக்கத்து ஊரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரும் இதை நேரில் பார்த்து விட்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

‘‘இது நிச்சயம் எரிமலைதான்!’’ என்று முடிவு கட்டிய அவர், ஊட்டியில் உள்ள தீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் ஓட்டமாய் ஓடி வந்திருக்கிறார்கள். பூமிப்பிளவுகளில் இருந்து வெளிவரும் புகையை ஒருவித மிரட்சியுடன் பார்த்த அவர்கள், அது கக்கிய கரி, மண் ஆகியவற்றை எடுத்து ஆராய்ந்திருக்கின்றனர். அந்த மண் சுண்ணாம்புப் பவுடர் போலவும், கரிக்கட்டைகள் நிலக்கரி போலவும் இருப்பதைப் பார்த்து நிலைகுலைந்த அவர்கள், மாவட்ட கலெக்டருக்கும், புவியியல்துறை நிபுணர்களுக்கும் தகவல் அனுப்பினார்கள்.

அதையடுத்து, குன்னூரில் உள்ள புவியியல்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம், அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார். அவர் நடத்திய முதல் கட்ட ஆய்வில் தெளிவாக எதையும் அறிவிக்க முடியவில்லை. அந்தப் பாறை இடுக்குகளிலிருந்து கந்தகம் போன்ற ஒருவித துர்நாற்றம் வீசியதால், ஒரு தீக்குச்சியை நீட்டி பாலசுப்ரமணியம் ஆராய்ந்திருக்கிறார். அது ‘பக்’கென பற்றிக் கொண்டு ஜூவாலை விட்டு எரிந்திருக்கிறது. ஆகவே, அங்கு மீத்தேன் வாயு கசிந்து கொண்டிருக்கலாம்’ என்றார் பாலசுப்பிரமணியம்.

அதுமட்டுமல்ல! ஒருவேளை உயரழுத்த மின்கம்பிகள் மண்ணில் புதைந்திருந்து அதன் காரணமாகக்கூட பூமி இப்படி புகை கக்கலாம் என்று இரண்டு விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார் பாலசுப்பிரமணியம். இதனால், அங்கு நின்ற இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் குழம்பிப் போனார்கள். ‘‘இது நிச்சயம் எரிமலைதான். மக்கள் பீதியடையக் கூடாது என்பதற்காகத்தான், இந்தத் தகவலை மறைக்கிறார்கள்’’ என அடித்துப் பேசினார்கள் அவர்கள்.

‘‘இங்குள்ள முத்தநாடு மந்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உசில்மேடு என்ற குன்று உள்ளது. அது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எரிமலையாக இருந்து அணைந்து போனது. அது நிச்சயம் ஒருநாள் மீண்டும் வெடித்து தீக்குழம்பைக் கக்கும். அதன் ஆரம்ப அறிகுறிதான் இது’’ என்றார் இயற்கை ஆர்வலர் ஒருவர். இதுபற்றி நிலவியல் நிபுணர்கள் உரிய விளக்கம் எதையும் சொல்லாததால், ‘இது எரிமலைதான்’ என்று மீடியாக்கள் எழுத, இந்தப் பகுதியில் பதற்றம் பந்தி போடத் தொடங்கி விட்டது.

இந்தச் செய்திகள் வெளியானதையடுத்து வெளிமாநில விஞ்ஞானிகள், சுற்றுலா வாசிகளின் படையெடுப்பு அங்கே தொடங்கி விட்டது. கல்லூரி மாணவ, மாணவிகளின் கூட்டமும் களை கட்ட ஆரம்பித்து அவர்கள் மண் மாதிரிகளையும், கரிக்கட்டிகளையும் ஓடி ஓடிச் சேகரிப்பதும், ஆராய்வதுமாக இருந்தனர். நில வெடிப்புகளில் இருந்து வெளிவந்து விழும் கரிக்கட்டிகளும் சாம்பலும் படுபயங்கர சூடாக இருந்தன. அவற்றைத் தொடக்கூட முடியவில்லை. அத்துடன் அந்தப் பகுதி நிலம் வெப்பத்தால் தகதகத்தது. பலர் புகையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மயக்கமடைந்து விழுந்து விட்டனர். இதையடுத்து அந்தப் பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு போலீஸ் காவல் போடப்பட்டு அந்நியர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா ஓர் அறிக்கை வெளியிட்டார், அதில் ‘‘நீலகிரியில் எரிமலை ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை. பூமியில் ஏற்பட்ட இந்த மாறுதல் குறித்து புவியியில் ஆய்வு மையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.

‘‘சரி! நீலகிரியில் தோன்றியிருப்பது எரிமலையின் அறிகுறியா?’’ இப்படியரு கேள்வி நம் கழுத்தைப் பிடித்து உந்த, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலத்தியல் பேராசிரியர் மணிமாறனிடம் இதுபற்றிப் பேசினோம். அவர் அழுத்தம் திருத்தமாக சில விவரங்களைத் தந்தார்.

‘‘நீலகிரியில் எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை. பூமியில் அடித்தட்டுகள் இரண்டு ஒன்றையன்று முட்டக்கூடிய இடத்தில்தான் எரிமலை ஏற்படும். ஆனால் நீலகிரி ஒரு மலைப்பகுதி என்பதுடன், அது நிலத்தட்டுகளுக்கு வெகு தூரத்தில் உள்ளது. ஆகவே அங்கு எரிமலை ஏற்பட நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை.

ஆனால், நீலகிரியில் இப்போது புகை வெளியாகிக் கொண்டிருக்கும் பகுதியில் நிலக்கரி, லிக்னைட் போன்றவற்றுக்கு முந்தைய கரிப்படிவம் இருக்க வாய்ப்புள்ளது. பூமியில் புதையும் மரங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் வெப்பத்தால் இறுகி நமக்கு நிலக்கரியாகக் கிடைக்கிறது. நிலக்கரிக்கு முந்தைய லிக்னைட் படிவமாகவும் நமக்குக் கிடைக்கிறது.

இப்படி பலகோடி ஆண்டுகளாக பூமிக்கு அடியில் இருக்கும் நிலக்கரி, லிக்னைட் போன்றவை எளிதில் தீப்பற்றக் கூடிய பாஸ்பரஸ், ஸல்ஃபர் போன்ற வேதியியல் பொருட்களை உருவாக்குகிறது. பூமிக்குள் கிடைக்கும் வெப்பத்தால் சிலவேளைகளில் இவை எரியவும் ஆரம்பிக்கின்றன. கோடை மழையின் போது பூமி நன்றாகச் சுருங்கி விரியும். அந்தத் தருணத்தில் எங்கே இடைவெளி கிடைக்கிறதோ அங்கே இவை பொத்துக் கொண்டு புகையாகவும், நெருப்பாகவும் தலைகாட்டுகின்றன.

இதை வைத்து, இந்தப் புகை வரும் இடத்துக்கு நேர் கீழே நிலக்கரி இருப்பதாகக் கருதிவிட முடியாது. நிலக்கரி, லிக்னைட் படிவங்கள் பல மைல்களுக்கு அப்பால் இருந்து பீறிட்டால் கூட புகையும் நெருப்பும் அந்தப் பகுதியில் தரைக்கு மேலே தலை நீட்ட முடியாமல் பல மைல்களுக்கு அப்பால் உள்ள ஓரிடத்தில் தலைகாட்ட வாய்ப்புள்ளது.

நிலத்துக்கு வெளியே இந்த மாதிரி வெளியாகும் புகையும், நெருப்பும் இரண்டு மாதங்கள் வரை கூட நீடிக்கும். அதன் பிறகு தானே அடங்கி விடும். பூமிக்குள் இப்படி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை, வெளிநாடுகளில் செயற்கைக் கோள் மூலம் படம்பிடித்துத் தெரிந்து கொள்கிறார்கள்!’’ என்றார் அவர். ஸீ

– கா.சு. வேலாயுதன்

Posted in Aravenu, Blue Mountains, Coimbatore, Disaster, Disasters, Dodabetta, Earth, Earthquake, Environment, Fire, Forest, Gudalur, industrialisation, Kattabettu, Kodanadu, Kotagiri, Kunjapanai, Land, Marlimundh, Mettupalayam, Mountain, Mudumalai, Munnamachi, Nature, Nilgiris, Ootacamund, Ooty, Padanthorai, Perar, Pollution, Protection, Recovery, Smoke, Srimadurai, ST, Thalaigunda, Thalaigundha, Thalaikunda, Thalaikundha, Thalaikuntha, theppakadu, Thorapalli, Threat, tribal, Ubrrani Hada, UDHAGAMANDALAM, Volcano, Warming, Water, WetLand, Wetlands | Leave a Comment »