Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Motors’ Category

Electricity Distribution and Power Generation in Tamil Nadu – Energy Crisis and its Impacts

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2007

கண்ணாமூச்சி ஆடும் மின்சாரம்

எஸ். ஜெய்சங்கர்

உலகமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு, வெளிநாடுகளுக்கு நமது சந்தையைத் திறந்துவிட்டாகிவிட்டது. வெளிநாட்டு முதலீடுகள் ஏராளமாகக் குவிகின்றன. தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியில் நமது நாடு 9 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளது என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் நம் நாட்டு வணிகர்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில், அனைத்து வசதிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்ட இந்திய நிறுவனங்கள் மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைத்து, உலகச் சந்தையில் காலூன்ற முடிகிறது.

சிறு, குறு நிறுவனங்களின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது. தொழிலை மிகுந்த லாபகரமாக நடத்தவும் முடியாமல், அதை விட்டு விலகவும் முடியாமல், புலி வாலைப் பிடித்த கதையாகிவிட்டது. இதில் தொழிலை நசுக்க, முன்னறிவிப்பற்ற மின்தடை எனும் இம்சை வேறு இவர்களை வாட்டத் தொடங்கிவிட்டது.

மின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்ளும் இந்த சிறு, குறு தொழிற்சாலைகள், தினசரி பல முறை ஏற்படும் மின்வெட்டால் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளன.

வேலையே நடக்காதபோது, தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாமல் தாற்காலிக விடுமுறைகளும் அறிவித்துள்ளன. மிகப்பெரிய தொழில் துறை நிறுவனங்களாக இருந்தாலும், ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி, உற்பத்திச் செலவை அதிகரிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறு, நடுத்தர தொழிற்சாலைகளின் தொகுப்புகள் கொண்ட தொழிற்பேட்டை பகுதிகள், நகர்ப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மின்தடையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவை அமைந்திருப்பது கிராமப் பகுதிகளிலா? நகரப் பகுதிகளிலா? என்பது நிச்சயம் அரசுக்குத் தெரியாமல் இருக்காது.

தமிழகத்தின் மின்தேவை தினசரி 8,500 மெகாவாட். இதுபோக, வெளிமாநிலத்துக்கு 500 மெகாவாட் மின்சாரத்தை விற்பனை செய்து வந்துள்ளது தமிழகம். ஆனால், இன்றைய நிலையில் மின் உற்பத்தி குறைந்து போனதால், வெளி மாநிலத்துக்கு விற்பனை செய்யப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டு, தமிழகத்துக்கு 7,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தினசரி வழங்கப்படுகிறது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தினசரி 1,500 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துபோய்விட்டது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என விளக்கம் அளிக்கிறது தமிழக அரசு.

உண்மையில், தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், தனியார் காற்றாலைகள், தனியார் தொழிற்சாலைகளில் இருந்து 10,500 மெகாவாட் மின்சாரத்தை தினசரி உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 7,500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தியாகிறது. எங்கு தவறு நடக்கிறது என்பது அரசுக்குத் தெரியும்.

இதனால், மாநகராட்சிப் பகுதிகளான சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மின்தடை ஏற்படுகிறது.

கிராமப்புறங்களில் மின் தடை ஏற்பட்டால், சிறிது நேரம் வீட்டுக்கு வெளியே காற்றாட இருக்க முடியும். தீப்பெட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது போன்ற குடியிருப்புகளில் வசிக்கும் நகர்ப்புற மக்கள், மின்தடையால் தங்களுக்கு ஏற்படும் “புழுக்கத்தை’ தீர்க்க எங்கு செல்வது? ஆனால், நகரில் மின்தடையே இல்லை என்கிறார் மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி.

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் துணை மின் நிலையங்களில், தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது என்ற விவரங்கள் நிச்சயம் அரசுக்குத் தெரிந்திருந்தும், “தமிழக நகரப் பகுதிகளில் மின்தடை இல்லை, கிராமப்பகுதிகளில் மட்டுமே மின்தடை’ எனும் பதிலைக் கூறியிருக்கிறது அரசு.

அரசின் கூற்றுப்படியே கிராமப் பகுதிகளில் மட்டும் மின்தடை என்றாலும், அங்கும் பாதிப்புகள் அதிகம் உள்ளன. இலவச மின்சாரம், மானிய விலையில் மின் மோட்டார் தந்த அரசு, அதை இயக்கத் தேவையான மின்சாரத்தைச் சரியாகத் தருவதில்லை. ஆற்றுப் பாசனம் அற்ற பகுதிகளில் கிணற்றுப் பாசனம் ஒன்றே வழி. இந்த விளை நிலங்களில் மோட்டார்களை இயக்க முடியாமல், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

கிராமப் பகுதிகளை ஒட்டிய ஆற்றுப் படுகைகளில் இருந்து, பெரிய மின் மோட்டார்கள் மூலம் நகருக்குக் கொண்டு வரப்படவேண்டிய குடிநீர் விநியோகமும் தடைப்படுகிறது.

தொடர்ந்து 24 மணி நேரமும் மோட்டார் இயங்கினாலே, நகர்ப்புற குடிநீர்த் தேவையைத் தீர்க்க முடியாத நிலையில், இந்த மின் துண்டிப்பால் 13 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டிய அவலநிலை. இது அரசுக்குப் பொதுமக்களிடையே அவப்பெயரைத் தேடித் தருகிறது.

இந்நிலை ஓரிரு நாள்களில் சரியாகும் எனத் தொடர்ந்து இரு மாதங்களுக்கும் மேலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.

சென்னை, மேட்டூர், குந்தா, தூத்துக்குடி, உடன்குடி ஆகிய இடங்களில் புதிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்து, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் தமிழகத்தின் எதிர்காலப் பற்றாக்குறையைத் தீர்க்கலாம்.

மக்கள் படும் துயரங்களைச் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுத் தீர்வு காணும் மனோதிடம் அரசுக்கு தேவை. முன்னறிவிப்பற்ற மின்தடை பிரச்னைக்கு தற்போதைய தேவை உடனடித் தீர்வு மட்டுமே. அரசின் மறுப்பறிக்கையும் விளக்கமும் அல்ல.

————————————————————————————————————
மின்வெட்டா, மின்னல் வெட்டா?

தொழில்துறையிலும் விவசாயத்திலும் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து விளங்குவதற்குக் காரணமே மின்சாரத்துறை என்றால் அது மிகையாகாது. அந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கும் ஆர்க்காடு என். வீராசாமி பழுத்த அரசியல்வாதி, நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகள் தெரிந்தவர்; எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சரின் நிழல் போன்றவர், முதல்வரின் மனம் அறிந்து செயல்படுபவர்.

இத்தனை பீடிகைகள் போடுவதற்குக் காரணமே, சமீப மாதங்களாக எல்லா மாவட்டங்களிலும் விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை வேதனையோடு பேசிவரும் அறிவிக்கப்படாத மின்சார வெட்டைக் குறைக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற கவலைதான்.

தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தித் திறன் 10,098 மெகாவாட். மின்தேவையின் உச்சபட்ச அளவு 8,800 மெகாவாட். ஆனால் இப்போது உற்பத்தி ஆவதோ 7,500 மெகாவாட்தான். எனவே அன்றாடம் சுமார் 2 மணி முதல் 8 மணி நேரம்வரை மின்சாரத் தடை ஏற்படுகிறது. சராசரியாக 4 மணி நேரத்துக்கு மின்சாரம் தடைபடுகிறது.

காற்றாலைகளிலிருந்து கிடைத்துவந்த மின்சாரம் குறைந்துவிட்டதால் 1,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரவரத்து குறைந்துவிட்டதாகவும், மத்திய தொகுப்பிலிருந்து இப்போது 1,000 மெகாவாட் கிடைக்காததாலும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் மின்சாரத் தேவை 4,000 மெகாவாட் அதிகரித்த நிலையில், மின்னுற்பத்தியோ 531 மெகாவாட் அளவுக்கு மட்டுமே அதிகரித்திருப்பதாக அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவிக்கிறார்.

புதிய தொழில்பிரிவுகளால் ஆண்டுக்கு 600 முதல் 700 மெகாவாட் வரை மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

மின்சார பற்றாக்குறையால் ஜவுளி ஆலைகளால் முழுத் திறனில் இயங்க முடியாமல் போனதாகவும் இதனால் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள காற்றாலைகளில் கிடைக்கும் மின்சாரத்தைத் தொகுப்பாகப் பெற, மாநில மின்சார வாரியம் நல்ல கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொண்டால் 3,686 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று அத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அறிவிக்கப்படாத மின்சார வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கோயமுத்தூர் மாவட்டமும் பின்னலாடைத் தொழில் கேந்திரமான திருப்பூரும்தான். கோயமுத்தூர் மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உயர் அழுத்த மின் இணைப்புகளாகும். கோவை மாவட்டத்தில் மட்டும் மின்நுகர்வு அளவு 1,200 மெகாவாட் ஆகும். இது மாநிலத்தின் மின் உற்பத்தியில் 13.5%.

இப்போதைய பிரச்னை மின்சார வெட்டு மட்டும் அல்ல, மின்வெட்டு எப்போது ஏற்படும் என்பது நிச்சயமாகத் தெரியாததும் ஆகும். இதனால் ஆலைகளில் உற்பத்தியைத் திட்டமிட முடிவதில்லை.

ஒரு நாளைக்கு 7,000 கிலோ நூல் இழை உற்பத்தி செய்த ஒரு ஜவுளி ஆலையில் இப்போது 600 கிலோ முதல் 1,000 கிலோ வரைதான் அதிகபட்சம் உற்பத்தி செய்ய முடிகிறது. 500-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளில் 40% அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு நூற்பாலை சங்கத் தலைவர் ஏ.பி. அப்பாகுட்டி வேதனையோடு தெரிவிக்கிறார்.

மின்வெட்டு காரணமாக டீசல் பம்புகள், ஜெனரேட்டர்கள் விற்பனை 100% அதிகரித்திருப்பது இந்த பிரச்னையின் பரிணாமத்தை இன்னொரு கோணத்தில் உணர்த்துகிறது.

அமைச்சரின் அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும் அந்தநேரச் சமாதானத்துக்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர, பிரச்னையை தீர்க்க உதவாது. நடுநிலைமையுடன் ஆலோசனை கூறக்கூடிய நிபுணரை நியமித்து, உரிய பரிந்துரையைப் பெற்று, அதை மின்னல் வேகத்தில் செயல்படுத்துவது ஒன்றே தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

—————————————————————————————————————————————————

தமிழகத்தை வாட்டும் மின்வெட்டு!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

பொன்விழா கொண்டாடிய தமிழ்நாடு மின்சார வாரியம், ஒரு காலத்தில் தேவைக்கு அதிகமாக மின்உற்பத்தி செய்து பிற மாநிலங்களுக்கு விற்று லாபம் ஈட்டியது. இன்றைக்குத் தமிழகம் தனக்குத் தேவையான மின்சாரம் கிடைக்காமல் அல்லல்பட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மின் வெட்டாலேயே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது. விவசாயிகள் மட்டுமல்ல, ஆலைத் தொழிலாளிகள், தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் எனச் சகலரும் பாதிக்கப்படுகின்ற நிலை. விவசாயிகள் எந்த நேரம் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு தங்களுடைய பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச தூக்கமும் உணவும் இல்லாமல் பம்ப்செட் அருகே காத்துக் கிடக்கின்ற நிலைமை. இரவு நேரங்களில் மின்சாரம் வந்தாலும் பாம்புகளுக்கும், நட்டுவாக்களிகளுக்கும் பயப்படாமல் கடும் இருட்டிலும் பாடுபடுகின்ற நிலையில் இன்றைக்கு விவசாயிகள் இருக்கின்றனர். வியர்வை சிந்தி வியர்வையை அறுவடை செய்யும் விவசாயிக்குப் பலமுனைத் தாக்குதல்கள். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு விலை இல்லை. உரத்தட்டுப்பாடு. இதற்குமேல் மின்வெட்டு. தலைநகர் சென்னையில் மின்சாரம் கிடைத்தாலும் மற்ற பகுதிகளில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு மேல் அரசுப் பரிவாரங்கள் பகலில் ஆலையை இயக்காமல் இரவில் ஆலைப் பணிகள் நடக்கட்டும், வாரத்திற்கு ஒரு நாள் ஆலையின் இயந்திரச் சக்தியை நிறுத்திவிடுங்கள் என்று கூறும் ஆலோசனைகள். இதெல்லாம் ஆலைகளில் பணியாற்றிவரும் தொழிலாளிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் பெரும் கேடு ஏற்படுத்தும்.

தமிழகத்தில் 10,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 55 சதவீதம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 28 சதவீதம் மத்திய அரசு உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 11 சதவீதம் தனியார் மூலமும், 3.5 சதவீதம் வெளிமாநிலங்களில் இருந்தும் கிடைக்கிறது. காற்றாலையின் மூலம் 3,000 மெகா வாட் தற்பொழுது கிடைக்கிறது.

இப்படி இருக்க, மின்வெட்டு, மின் தட்டுப்பாடு ஏன் என்று தெரியவில்லை. அதற்குக் காரணம் தமிழக அரசின் மெத்தனப் போக்கே ஆகும். பல ஆண்டுகளாக மின் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சரிசெய்யப்படவில்லை. பழுதுபட்ட இயந்திரங்களைத் திரும்பத் திரும்ப ஓட்டுவது, இயந்திரங்கள் பராமரிப்பில் சரியான கட்டுப்பாடு இல்லாதது, இந்தப் பணியில் நிரப்பப்பட வேண்டிய பொறியாளர்கள், பணியாளர்கள் நிரப்பப்படாமல் இருப்பது, இதற்குமேல் பல்துறை பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்துக்குப் படையெடுத்ததனால் மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தகவல், தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்க பல ஒப்பந்தங்கள் தொடர்ந்து கையொப்பமிடப்படுகின்றன. அதற்கேற்ப உரிய திட்டங்கள் இல்லை. 120 தொழிற்பூங்காக்களுக்கு மட்டுமே 700 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட குளறுபடிகளால்தான் இந்தத் தட்டுப்பாடு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் 0.4 சதவீத மின் உற்பத்தி தனியாரிடம் இருந்தது. தற்பொழுது தனியார் உற்பத்தி 28.18 சதவீதமாக உயர்ந்து விட்டதால் இதற்கான கட்டணங்களும் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. ஆண்டுக்கு ஒருமுறை மின்சாரத்தை வாங்க 12,016 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்து தமிழக அரசு கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளது. விவசாயம் மட்டும் இல்லாமல் நெசவுத் தொழிலும், விசைத்தறிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் போன்ற பகுதிகளில் சாதாரண நெசவாளிகள் தத்தளிக்கின்றனர். திருப்பூர் பின்னல் ஆடைதொழில்கூட ஓரளவுதான் ஜெனரேட்டர்களைக் கொண்டு இயங்க முடிகிறது. விசைத்தறி நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்தடையால் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கொங்கு மண்டலத்திலுள்ள ஆலைகள், நூற்பாலைகளில் எட்டு மணிநேரம் மின்வெட்டு உள்ளது என்று செய்திகள் வருகின்றன. திருப்பூரில் மட்டும் மின்வெட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். மின்சாரப் பாதிப்பால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. தாமிரபரணியில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் செயல்படாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல் இழந்து உள்ளன.

1991-இல் மின்துறையில் தனியார் மற்றும் அன்னிய மூலதனம் 25 சதவீதத்தை எட்டியது. அதில் ஐந்து மாநிலங்கள் குறிப்பிடும் அளவுக்கு ஆர்வத்தைச் செலுத்தின. மகாராஷ்டிரம் முதலிடமும் தமிழகமும் கர்நாடகமும் அதற்கு அடுத்த இடங்களையும் பிடித்தன. தமிழ்நாட்டில் மட்டும் இதற்காக முடக்கப்பட்ட மூலதனத்தின் பங்கு 8 சதவீதம்.

1995இல் ஒரிசா மாநிலத்திலும் 1998இல் ஆந்திர மாநிலத்திலும் மின்சாரக் கட்டுப்பாடு குழுமங்கள் அமைக்கப்பட்டன. இவை மின் விநியோகத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து அவற்றைத் தனியாருக்கு விற்கின்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன. இது தொடர்பான தனியார் அன்னிய மூலதனம் போன்றவற்றில் மின்துறை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒழுங்குபடுத்தும் சட்டத்தை 2006 மார்ச் மாதம் மத்திய அரசின் மின் அமைச்சகம் கொண்டு வந்தது. தமிழகம் இன்று சுமார் 17 கோடி குறைந்த அழுத்த மின் பயனீட்டாளர்களையும், சுமார் 6,000 உயர் அழுத்த மின் பயனீட்டாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சத்து 22 ஆயிரம் பேர் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழ்நாடு மின் வாரியத்தின் மொத்தத்தில் 58 சதவிகிதத்தை வழங்குபவர்களாக இருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தை அடுத்து மின்வாரியத்தில் பணியாற்றுகிறவர்கள் இங்குதான் அதிகம். 94 ஆயிரம் பேர் மின்வாரியத்தில் பணியாற்றுகிறார்கள்.

2003 – 2004 மின் கட்டுப்பாடுக் கழகத் தகவலின்படி யூனிட் விற்பனை கீழ்க்கண்டவாறு உள்ளது.

புனல் மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 0.59, தமிழ்நாடு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.09, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இருந்து அவசரத்திற்கு வாங்கிய மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.17, மத்திய அரசின் அனல் மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.22, பி.பி.என். பவர் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.56, தனியார் காற்றாலை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.70, அணுமின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.71, கரும்புச் சக்கை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.87, தமிழ்நாடு மின்வாரியத்தின் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.09, தனியார் அனல்மின் நிலையம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.99, தனியார் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 4.65

2003 – 2004இல் வசூல் கட்டணம் ரூ. 10,545 கோடி. மானியமும் ஏனைய வருமானங்களும் மொத்தத்தில் ரூ. 477 கோடி. அந்த ஆண்டின் இழப்புத் தொகை ரூ. 2,743 கோடி. இதனால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரைகள் எழுந்தன. அந்த ஆண்டின் இழப்பை ரூ. 663 கோடியாகக் குறைக்க வேண்டும் என்பதற்காக மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் மின்வாரியம் மின்சாரம் வாங்குவதற்கு 49 சதவீதமும், எரிபொருளுக்கு 24 சதவீதமும், வட்டிக்கு 7 சதவீதமும், பராமரிப்புக்கு 12 சதவீதமும் ஏனைய மற்ற செலவுகள் 8 சதவீதமுமாக மின்வாரியத்தில் செலவுக் கணக்கு இருந்தது.

தனியார்மயத்தில் 2007 வரை ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டு இன்றைக்கு பல தனியார்கள் மின் உற்பத்தித் துறையில் தங்கள் கால்களைப் பதிக்க அரசிடம் அணுகி உள்ளனர். 2003 – 2004 கணக்கின்படி ஒரு யூனிட்டுக்கு தனியாரிடம் இருந்து பெற்ற மின்சாரத்தின் விலை, தமிழ்நாடு மின் வாரியத்துக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் தயாரித்த மின்சாரத்தின் விலையைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருந்தது. இப்படித் தேவையில்லாமல் அதிகப்படியான செலவுகளை அரசு தனது தவறான அணுகுமுறையால் செய்ய வேண்டியுள்ளது. 1999-வது ஆண்டின்படி 2,564 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய தனியாருக்கு அனுமதி கொடுக்கலாம் என்ற நிலை வந்தால் தமிழக மின்வாரியம் கடனாளியாகி, திவாலாகி கதவைச் சாத்த வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்படும் என்ற பரிந்துரையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் அரசு மெத்தனமாக இருந்துள்ளது. 2001-ஆம் ஆண்டில் தனியார் மின்நிலையங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.25-க்கு மேல் தரமுடியாது என்று அரசு அறிவித்ததற்கு தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையாகப் போராடின.

இவ்வாறு பல எச்சரிக்கைகள், அறிக்கைகள் மூலம் தனியார் மயமாக்கப்படுவது சரியில்லை என்று தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டும் பாராமுகமாக இருப்பது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு மின்சாரக் கட்டுப்பாடுக் கழகத்தை எதிர்த்து இரண்டு வழக்குகள் தொடுத்தார். தனியார் நிறுவனங்களான பன்னாட்டு நிறுவனத்துக்கு நிதியமைச்சரின் துணைவியார் நளினி சிதம்பரம் வாதாடினார். இறுதியில் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மின்சார விலையைக் குறைக்க வேண்டும் என்பதே தீர்ப்பாக அமைந்தது.

தனியார் புகுந்ததால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. நெய்வேலியை ‘ஞ’ யூனிட் நடத்தி வரும் எஸ்.டி.சி.எம்.எஸ்., சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏசியா பிரௌன் பொவேரி, அமெரிக்காவின் சி.எம்.எஸ். போன்ற பன்னாட்டு மின் உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபத்துக்கு விற்கத் திட்டமிட்டாலும் முடியாமல் 2007-இல் ஒரு சில நிறுவனங்களை அபுதாபி நேஷனல் எனர்ஜி என்ற அமைப்புக்கு விற்றுவிட்டன. மகாராஷ்டிரத்தில் என்ரான் போன்று கொள்ளை அடிக்க முடியவில்லை என்ற விரக்தியில் ஒரு சில நிறுவனங்கள் விட்டுவிட்டு ஓடிவிட்டன. இப்படிப் பல நிறுவனங்கள் கால் வைத்ததும், மின்துறையில் நமக்கு ஏற்பட்ட பாதகங்களாக அமைந்துவிட்டன.

உத்தேசிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டதுதான் இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு காரணம்.

அத்திட்டங்கள்:

1. தூத்துக்குடியின் தமிழ்நாடு மின்சார வாரியமும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டங்கள் இருந்தபொழுதும் அதை நிறைவேற்றக்கூடிய வகையில் விரைவான செயல்பாடுகள் இல்லை.

2. ஜெயங்கொண்டான் தமிழ்நாடு மின்வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து 500 மெகா வாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

3. குந்தாவில் 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய அளவில் திட்டங்கள் இருந்தபொழுதும் தமிழ்நாடு மின்சார வாரியம் அதைக் கவனிக்காமல் இருக்கிறது.

4. நெல்லை மாவட்டம் உடன்குடியில் 1,500 மெகா வாட் உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறது.

5. வடசென்னை மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து மேலும் 600 மெகா வாட் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் இருந்தும் அதற்கான செயல்பாடுகள் இல்லை.

6. இதேபோன்று மேட்டூரிலும் 500 மெகா வாட் மின் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய சூழல் இருந்தும் தமிழ்நாடு அரசு பாராமுகமாக இருக்கிறது.

7. கோயம்பேடில் அன்றாடம் கிடைக்கின்ற காய்கறிக் கழிவில் இருந்து மரபுசாரா எரிசக்தி மூலம் 550 மெகா வாட் கிடைக்கக்கூடிய அளவுக்கு மின்உற்பத்தி செய்யலாம் என்ற திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.

8. தமிழகத்தில் உள்ள காற்றாலைகளுக்குத் தேவையான காற்று வீசவில்லை என்ற காரணத்தால் உரிய உற்பத்தி இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டாலும், இத்துறை தனியார் வசம் இருப்பதால் அதற்குத் தேவையான வசதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு செய்யாததால் காற்றாலைகள் மின்உற்பத்தி பின்தங்கியுள்ளன.

9. சூரியவெப்பம், கடல் நீர், நிலக்கடலைத் தோல் போன்றவற்றில் இருந்து மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை அறிய வேண்டும்.

காற்றாலைகள் மூலம் 3626 மெகாவாட், சர்க்கரை ஆலைக் கழிவுகள் மூலம் 213 மெகாவாட், தாவரங்கள் மூலம் (பயோமாஸ்) 99 மெகாவாட், குப்பைகள் மூலம் 4.25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது.

மரக்காணத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நீர்மின் குழுமம் மூலம் காவிரி புனல்மின் திட்டம், ஓகேனக்கல் புனல்மின் திட்டம் அமைக்கவும் இதன்மூலம் 390 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. காவிரிப் பிரச்னையைப் போல் இதிலும் கர்நாடகம் மூக்கை நுழைக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரில் அமைக்க இருந்த மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட்டுவிட்டது.

பல அணைகள் நிரம்பி இருந்தபொழுதும் மின்உற்பத்தி எப்படி முடங்கியது என்று தெரியவில்லை. அதைச் சரிசெய்ய அரசு கவனம் செலுத்தவில்லை.

தொலைநோக்குப் பார்வை இல்லாமல் மின்துறை சீரழிவை நோக்கிச் செல்கிறது.

Posted in Agriculture, Arcot, Commerce, Consumption, Distribution, DMK, Economy, Electricity, energy, Exports, Farmers, Farming, Finance, Fuels, Generation, Generators, Govt, Impact, Impacts, Industry, Inefficiency, Inverters, Kalainjar, Karunanidhi, Megawatts, MK, Motors, MW, NLC, Power, Power cut, Power Cuts, Powercut, Powercuts, Production, SEZ, Stalin, Sufficiency, Veerasamy, Water | 1 Comment »

Manmohan Singh’s Rural job guarantee scheme: S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி

எஸ். கோபாலகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.

தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.

பங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.

இத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்?

ரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.

அதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.

ஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.

வருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்!

தற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.

1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.

இதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.

இந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.

கிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

Posted in Agri, Agriculture, Assets, Auto, Automotive, Bangalore, Biz, Blr, Cement, Chennai, City, Commerce, computers, Currency, Deflation, Delhi, Economy, Employment, Exchange, Exports, Farmers, Farming, Fe, Finance, GDP, Globalization, Growth, hyd, Hyderabad, Imports, Industry, Inflation, Iron, IT, Jobs, Loans, Maa, Madras, Media, Medicine, Medicines, Metro, Motors, Naidu, Needy, Noida, Poor, Poverty, Rains, Recession, Rich, Rupee, Rural, Season, sectors, SEZ, Software, Spot, Stagflation, Steel, Suburban, Tech, Technology, Telecom, Television, TV, UP, Wealthy, Weather, Work, workers, Zones | Leave a Comment »

Foreign Instituitional Investors – Lucrative opportunities in Emerging Indian markets & sectors

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

முதலீடுகளுக்கு காத்திருக்கும் தொழில்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

சமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இவர்கள் யார்? “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.

இந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.

அந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.

இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது!

ஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன? மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.

அவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன? எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது?

இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன?

அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.

அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.

மாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.

உதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.

ஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.

இந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.

சரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன? மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.

அடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).

ஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.

இன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.

இந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.

தற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.

இந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.

கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது

மேலாளர்.)

Posted in Analysis, Auto, Backgrounders, Bonds, Brazil, BRIC, BSE, Bus, Cars, China, Defaltion, Deflation, Diversify, ECE, Economy, EEE, Electrical, Electronics, Emerging, Employment, Exchanges, Exports, FDI, FEMA, FERA, FII, Finance, Funds, GDP, Globalization, Growth, Imports, Index, Industry, Inflation, InfoTech, Instrumentation, investments, job, Leather, Luxury, Manufacturing, markets, Metro, MNC, Model, Motors, NIFTY, NSE, Op-Ed, Opportunities, Options, Outsourcing, pension, Primers, Recession, Retirement, revenue, Risk, Russia, sectors, service, Shares, Stagflation, Stats, Stocks, Taiwan, Tech, Technology, Telecom, Textiles, Trucks | Leave a Comment »

State Chennai Metropolitan Transport Corporation – Opportunity for Improvements

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

பிரச்சினை: ஓரம்போ… ஓரம்போ!!

க. ஆனந்த பிரபு

டபுள் டக்கர், வெஸ்டி புல், பளபளக்கும் நீல, சிவப்பு பஸ்கள் என புதுப்புது பஸ்களாகப் பறக்க விட்டாலும், கடைசி மூச்சை விடுவதற்காக காத்திருக்கும் “தள்ளுராஜா… தள்ளு’ பஸ்களும் சென்னையில் அதிகம் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.

அவை டெர்மினஸிருந்து முக்கி முனகிப் புறப்பட்டு லொடக்லொடக்கென்று ஓடி, போகிற வழியில் பிரேக் டவுனாகி வேறு பஸ் பிடித்து போவதற்குள் இன்டர்வியூவே முடிந்துபோகிற சோக அனுபவங்களும் பலருக்குத் தொடரத்தான் செய்கிறது.

ஒரு கற்பனைக்காக, எல்லாருமே புகைபிடிப்பதை விட்டு விட்டாலும், பஸ்கள் புகைபிடிப்பதை விடாது போலிருக்கிறது.

தேய்ந்துபோன டியூப் அடிக்கடி பஞ்சராகிக்கொண்டே இருப்பது போல போக்குவரத்துறையில் மட்டும் இதுபோன்ற கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க காரணம் என்ன?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அன்பழன் சொல்கிறார் :

சென்னை மாநகரத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 554 பஸ்கள் இருக்கின்றன. இதில் சுமார் ஆயிரத்து 700 முதல் ஆயிரத்து 800 பஸ்களே இயங்கும் நிலையில் உள்ளன. மீதமுள்ள சுமார் 700 பஸ்கள் பழுதடைந்து இயங்காத நிலையில் உள்ளன.

மத்திய அரசு போக்குவரத்துச் சட்டத்தின்படி ஒவ்வொரு பேருந்தும் அதிகபட்சமாக 6 லட்சம் கிலோ மீட்டர் அல்லது 6 ஆண்டு காலம் மட்டுமே இயக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்துப் பஸ்களும், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், 6 லட்சம் கிலோ மீட்டரைத் தாண்டியும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாகவே மாநகர பஸ்கள், பாதி வழியிலே நின்று விடுவதும், நிறைய பஸ்கள் புகைகளைக் கக்குவதுமாக இருக்கிறது. இது பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

மாநகரப் பேருந்துகளைப் பராமரிக்க போதுமான அளவு ஊழியர்கள் இல்லாமையாலும் போதுமான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இல்லாமையாலும் போக்குவரத்து கழகம் தினக்கூலி அடிப்படையில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி நடத்தி வருகிறது.

இதுமட்டுமல்லாமல் பேருந்துகளுக்கு ஏற்ற உதிரிப்பாகங்களும் இல்லை. அப்படியிருந்தாலும் அவற்றின் தரம், நிலைப்புத்தன்மை வெறும் பெயரளவிலேயே இருக்கிறது.

1970-ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஒரு ஆண்டுக்கு ஒரு வண்டிக்கு 7.5 பேர் வீதம், பணியாளர்களை நியமிக்கப் பட வேண்டும் என்று அப்பொழுதே மத்திய அரசால் அமைக்கப்பட்ட பட்டாபிராமன் குழு பரிந்துரை செய்தது. ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆள் குறைப்பின் காரணமாக அதை ஒரு வண்டிக்கு ஒரு நபர் வீதம் குறைத்து 6.5 பேர் வீதம் பணியாளர்களை மட்டும் வைத்து இன்றளவும் இயக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பலமுறை எழுத்து மூலமாகவும், போராட்டம் மூலமாகவும் எடுத்துக்கூறியும் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கத் தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது.” என்கிறார் அவர்.

இவரின் குரல்போலவே ஒரு பேருந்தில் பயணிக்கிறபோது நாம் கேட்ட சில ஆதங்கக் குரல்களையும் இங்கே தருகிறோம்:

“”பஸ் டிக்கெட் விலை ஏத்தலைன்னு சொல்லுறாங்க. ஆனா சாதா கட்டண பஸ்ûஸக் கண்ணுலையே காணோம். கூடுதல் காசு கொடுத்து போறதைத் தவிர எங்களுக்கு வேற வழி என்ன இருக்கு?” என்றனர் கோயம்பேட்டில் காய்கறி மார்க்கெட்டிற்குப் போகும் இரு பெண்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் ஆவேசத்தோடு, “”ராத்திரி பத்து மணிக்கு மவுண்ட்ரோடே கூட பஸ் இல்லாம அஸ்தமித்துப் போகிறது. ஒன்பதரைக்கே நைட் சர்வீஸ் ஆரம்பித்து ரெட்டைப் படி பிடுங்கிறது என்ன நியாயம்? எங்கே கூட்டம் அதிகம் இருக்கிறதோ அங்க குறைவான பஸ்ûஸ விடுறாங்கன்னா பாருங்களேன். தொழிலாளர் கூட்டம் நிரம்பி வழியும் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து தாம்பரத்துக்குப் போக ஒரே ஒரு பஸ்தான். அதுவும் ராத்திரியிலதான் தெரியுமா?” என்று உரக்கக் கத்தினார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொரும் தங்கள் சோகக் கதைகளை ஆவேசமாகச் சொல்லிக்கொண்டே இருந்தனர். லொடக்லொடக் என பஸ் போய்க்கொண்டே இருந்தது.

—————————————————————————————————

தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் டவுன் ஸ்களில் டிக்கெட் எந்திரம் அறிமுகம்

சென்னை, ஜுலை. 17-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. ஓட்டை உடைசலான பஸ்கள் ஒதுக்கப்பட்டு நவீன சொகுசு பஸ்கள் விடப்பட்டுள்ளன.

பயணிகள் நீண்ட தூரம் சொகுசாக பயணம் செய்ய ஏதுவாக `அல்ட்ரா டீலக்ஸ்’ பஸ்கள் விடப்பட்டுள்ளது.

டவுன் பஸ்கள் சொகுசு இருக்கைகளுடன் தற்போது விடப்படுகின்றன. சென்னை யில் புதிதாக விடப்பட்டுள்ள டவுன் பஸ்கள் அனைத்திலும் நவீன தொழில்நுட்பத்துடன் புகையை வெளியேற்றாத பாரத் நிலை மூன்று மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடக, கேரளா மாநில அரசு போக்குவரத்து கழகங்களில் கண்டக்டர்கள் டிக்கெட் கையால் எழுதியோ, அச்சடித்த டிக்கெட்டை கிழித்தோ கொடுப்பது இல்லை. சாப்ட் வேர் பொருத்தப்பட்ட கையடக்கமான சிறிய எலக்ட்ரானிக் எந்திரம் மூலம் டிக்கெட்

வழங்கப்படுகிறது.இந்த முறையை தமிழக அரசு போக்குவரத்து கழகங் களிலும் பின்பற்ற அமைச்சர் கே.என்.நேரு முடிவு செய்தார். அதன்படி பரீட்சார்த்த முறையில் சென்னையில் 5 பஸ்களில் டிக்கெட் எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.

கண்டக்டர் எளிதாகவும், விரைவாகவும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க உதவும் இந்த மெஷினின் மதிப்பு ரூ.8000. அரை கிலோ எடை கொண்ட மெஷினில் உள்ள பட்டனை அழுத்தினால் டிக்கெட் வெளிவரும்.

ஒவ்வொரு `ஸ்டேஜ்’-க்குரிய கட்டணம் அதில் சாப்ட்வேர் மூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கும். பயணிகள் எத்தனை டிக்கெட் கேட்டாலும் விரைவாக கொடுக்க முடியும்.

ஒவ்வொரு ஸ்டேஜ்க்கு உரிய கட்டணமும் தானாக மாறிக் கொண்டே இருக்கும். தனி நபருக்கு டிக்கெட் கொடுப்பதாக இருந்தாலும் குடும்பத்துக்கும் மொத்தமாக டிக்கெட் கொடுப்பதாக இருந் தாலும் இந்த முறை மிக எளிது. ஒரே டிக்கெட்டில் எத்தனை பேர் பயணம் செய்யவும் அதில் குறிப்பிட முடியும்.

கண்டக்டர் ஒவ்வொரு ஸ்டேஜிலும் வினியோகம் செய்யப்பட்ட டிக்கெட் எத்தனை, ஏறிய பயணிகள் விவரம் போன்றவற்றை எழுத தேவையில்லை. மெஷின் மூலம் டிக்கெட் வழங்கும் போது அதில் அனைத்து விவரங்களும் பதிவாகி விடும். டிக்கெட் பரிசோதகர் கூட மெஷினில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால் பயணிகள் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்ற விவரம் தெரிந்து விடும்.

டவுன் பஸ்களில் எவ்வளவு பேர் பயணம் செய்தாலும் நவீன டிக்கெட் மெஷின் மூலம் விரைவாக டிக்கெட் கொடுக்க இயலும்.

இந்த புதிய திட்டத்தை அனைத்து போக்குவரத்து கழகங்களிலும்நடை முறைப்படுத்த அமைச் சர் கே.என்.நேரு உத்தர விட்டுள்ளார். முதல் கட்டமாக 10 ஆயிரம் டவுன் பஸ்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.

அதைத்தொடர்ந்து புறநகர் பஸ்களிலும், விரைவு பஸ் களிலும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. பெங்களூர், ஐதராபாத் போன்ற நகரங்களில் இருந்து டிக்கெட் மெஷின் கொள்முதலுக்கான டெண்டர் கோரப்படுகிறது.

இன்னும் ஒரு மாதத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் எந்திரம் கொடுக்கும் போது, அதை கையாள்வது குறித்த பயிற்சியும் கண்டக்டர்களுக்கு அளிக் கப்படும். இந்த மெஷின் மூலம் 3 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை ஒரு நாளைக்கு வழங்க முடியும்.

————————————————————————————————–

நிறுத்தத்தில் நிற்க முடியாமல் பயணிகள் ஒதுங்கிச் செல்கின்றனர்.

ஆக்கிரமிப்புகளின் பிடியில் பஸ் நிறுத்தங்கள்

சென்னை, ஆக. 30: சென்னை நகரில் பெரும்பாலான பஸ் நிலையங்களும், நிறுத்தங்களும் ஆக்கிரமிப்புகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன.

பஸ் நிறுத்தங்களில் இருந்தும் விலகி நிற்கும் பயணிகள், பஸ்களை விரட்டிச் சென்று பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்த பஸ் நிறுத்த ஆக்கிரமிப்புகளால், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தினத்தோறும் அவதிப்படுகின்றனர்.

சென்னை நகரில் 1,200-க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பவை 364. மீதமுள்ளவை போக்குவரத்துத் துறையின் கீழ் வருகின்றன.

ஆனால், உண்மையில் இவற்றில் பெரும்பாலான பஸ் நிறுத்தங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் சிக்கியிருக்கின்றன.

கடைகளும், வாகனங்களும்… சென்னையில் ஜாம்பஜார், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல இடங்களில் கடைகளை ஒட்டியபடி, பஸ் நிறுத்தங்கள் அமைந்துள்ளன.

இதனால், கடைகளுக்கு வருவோர் மற்றும் அந்தக் கடைகளைச் சேர்ந்தவர்கள் தங்களது வாகனம் மற்றும் பொருள்களை பஸ் நிறுத்தத்திலேயே விட்டுச் செல்கின்றனர். இதனால் பஸ்

“”பஸ் நிறுத்தங்களை பைக்குகள் மட்டும் ஆக்கிரமிக்கவில்லை. ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களும் ஆக்கிரமிக்கின்றன. குறிப்பாக, எழும்பூர், கடற்கரை ரயில் நிலைய பஸ் நிறுத்தங்களில் நிற்பது ஆட்டோக்கள் தான்.

இதைக் காரணமாக வைத்துக் கொண்டு, பஸ் டிரைவர்கள் பஸ்ûஸ சிறு தூரம் தள்ளி நிறுத்துகின்றனர். இதை எதிர்பார்க்காத பயணிகள் ஓடிச் சென்று ஏறுகின்றனர். இன்னும் சில பஸ்கள் சாலையின் நடுவில் நிறுத்தப்படுகின்றன. இதனால், “திடீர்’ போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது” என்றார் ரயில் – பஸ் பயணிகள் நலச் சங்க தலைவர் ரவிக்குமார்.

குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட பெண்கள் அதிகம் வரும் இடங்களுக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தங்களில், அவர்கள் அமர்வதற்குக்கூட இடம் இருப்பதில்லை.

பஸ் நிலையங்களில்… பஸ் நிறுத்தங்கள் மட்டுமின்றி, சென்னை நகரின் சில பஸ் நிலையங்களும் கடும் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கின்றன. பிராட்வே பஸ் நிலையத்தின் உள்ளே இப்போது ஏராளமான கையேந்தி பவன்கள்.

கடையில் உள்ளவர்கள் தங்களது பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களைக் கழுவி பயணிகள் நிற்கும் இடத்திலேயே ஊற்றுகின்றனர். பஸ் நிலையத்தில் பெரும்பாலான கடைகள் இந்த முறையைத்தான் பின்பற்றுகின்றனர். இதைக் கண்டு, மிரளும் பயணிகள் வேறு இடம் நோக்கிச் செல்கின்றனர். பஸ் வரும் நேரத்தில் ஓடிவந்து ஏறுகின்றனர்.

பஸ் நிறுத்தங்கள் இல்லாமல் அவதி: பூந்தமல்லி, குமணன்சாவடி, போரூர் போன்ற சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் பஸ் நிறுத்தமே இல்லை என்பதும் மற்றொரு குறை.

காஞ்சிபுரம், வேலூர் போன்ற ஊர்களுக்குச் செல்ல பூந்தமல்லி விக்னேஸ்வரா தியேட்டர் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் காத்திருக்கின்றனர்.

இந்த நிறுத்தத்தில் நிழற்குடை உள்பட எந்த அடிப்படை வசதியும் கிடையாது. வெட்ட வெளியில் தான், நிற்க வேண்டிய அவலம் என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

புதிய பஸ் நிறுத்தங்கள் எப்போது?: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பஸ் நிறுத்தங்களை இடித்து விட்டு, புதிய பஸ் நிறுத்தங்கள் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கிறார் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி.

இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போதுதான் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

இந்த விஷயத்தில் மாநகராட்சியின் பணிகள் மந்தம் என்றால், பெரும்பாலான பஸ் நிறுத்தங்களைக் கையில் வைத்திருக்கும் போக்குவரத்துத் துறையோ கவலையே படாமல் இருக்கிறது. பஸ் பயணிகளின் பிரச்னையை புரிந்து கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் துறைகளை “உசுப்பி’ விடுமா அரசு நிர்வாகம்?.

———————————————————————————————–
ஏ.சி. வால்வோ பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் பஸ்களைவிட இரண்டரை மடங்கு கட்டணம்

சென்னை, செப். 13: தமிழகத்திலேயே முதன் முறையாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அதி நவீன குளிர்சாதன “வால்வோ’ பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

சென்னை கோயம்பேடு புறநகர் பஸ்நிலையத்தில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த பஸ் சேவையைத் தொடங்கி வைக்கிறார். தடம் எண் 21ஜி (தாம்பரம்-பிராட்வே), தடம் எண் 19ஜி (பிராட்வே-கோவளம்), தடம் எண் 70 (தாம்பரம்-ஆவடி), சென்னை விமான நிலையம்-பிராட்வே உள்ளிட்ட வழித்தடங்களில் முதல் கட்டமாக 5 பஸ்களும், பின்னர் 5 பஸ்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

முதல்வர் பார்வை:

இந்த நவீன பஸ்களில் இரண்டு பஸ்கள் செவ்வாய்க்கிழமை மாநகரப் போக்குவரத்துக்கழக அலுவலகத்துக்கு அருகில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் புதன்கிழமை தலைமைச் செயலகத்துக்கு வந்த பஸ்களை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார்.

ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என். நேரு, ஆர்க்காடு வீராசாமி, மாநகரப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் ஆர். பாலசுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர்.

இரண்டரை மடங்கு கட்டணம்:

ஏ.சி. பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் பஸ்களைக் காட்டிலும், இரண்டரை மடங்கு கட்டணம் வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 10-ம், அதிகபட்சம் ரூ. 50-ம் வசூலிக்கப்படும். ஒவ்வொரு வழித்தடத்திலும் இந்த பஸ்களை 12 நடைகள் இயக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டிங் மெஷின்கள் அறிமுகம்:

இந்த பஸ்கள் அனைத்திலும் டிக்கெட் வழங்குவதற்கு “டிக்கெட்டிங் மெஷின்கள்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளன. படிப்படியாக அனைத்து மாநகர பஸ்களிலும் டிக்கெட்டிங் மெஷின்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவீன கேமராக்கள்:

இந்த பஸ்ஸின் நடுப்பகுதி கதவு மற்றும் பின் பகுதியில் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எல்.ஈ.டி. திரை டிரைவர் இருக்கைக்கு முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ்ஸில் ஏறி, இறங்கும் பயணிகளையும், பின் பகுதியில் வரும் வாகனங்களையும் டிரைவர் கவனித்து, பஸ்ûஸ எளிதாக இயக்க முடியும்.

இந்த பஸ்களில் சென்சாருடன் கூடிய தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கதவுகள் மூடும்போது பயணிகளின் கை, கால், உடமைகள் சிக்கிக் கொண்டால் உடனே கதவுகள் தானே திறந்துவிடும்.

டிஜிட்டல் வழித்தட பலகைகள்:

பஸ்ஸின் முன் பகுதி, பின் பகுதி மற்றும் இடது பக்கவாட்டில் நவீன எல்.ஈ.டி. டிஜிட்டல் வழித்தடப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகளுக்கு சொகுசான பயணத்தை அளிக்கும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 41 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

மொபைல் ரீசார்ஜ் செய்ய வசதி:

இந்த பஸ்களில் லேப்டாப் உபயோகிப்பவர்களுக்காக சிறப்பு வசதியும், மொபைல் ரீசார்ஜ் செய்துகொள்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளுக்கு அவ்வப்போது தகவல்களை அளிக்கும் வகையில் மைக் மற்றும் ஆம்பிளிபையர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இனிமையான இசை ஒலிக்கவும் நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

45 டிரைவர்களுக்கு பயிற்சி:

தானியங்கி கியர் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட இந்த பஸ்களை திறம்பட இயக்குவதற்காக மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 45 டிரைவர்களுக்கு, வால்வோ நிறுவனம் 15 நாள்கள் பயிற்சி அளித்துள்ளது. இந்த டிரைவர்களுக்கு தொப்பியுடன் கூடிய தனிப்பட்ட சீருடை வழங்கப்பட்டுள்ளது.

இணையதள முன்பதிவு:

ஏ.சி. வால்வோ பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் அதே நாளில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இணையதள முன்பதிவு முறையும் அறிமுகப்படுத்ப்பட உள்ளது.

Posted in Analysis, Ashok Leyland, Auto, Automation, Bus, car, Chennai, Commute, Commuter, Conductor, Driver, Engines, Environment, Express, Fares, Govt, Home, Improvements, Insights, Internet, Interview, Madras, Maintenance, Metro, Motors, MTC, Nehru, Non-stop, Nonstop, Office, Operations, Opportunity, Pallavan, Pollution, PP, Private, Public, Railways, Repair, Rikshaw, Share autos, solutions, Spare parts, Spares, Suburban, Suggestions, TATA, Terminus, Ticket, Tickets, Trains, Transport, Transportation, Volvo, Work | Leave a Comment »