Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007
மக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி?
க. பழனித்துரை
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.
இந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.
பணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.
உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.
வாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.
மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை,
- திருவண்ணாமலை,
- கடலூர்,
- விழுப்புரம்,
- திண்டுக்கல்,
- நாகப்பட்டினம்,
- சிவகங்கை
ஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.
வட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இப்படி மத்திய அரசு தரும் நிதியை,
- பஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,
- இந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,
- பாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,
- புதிய கட்டடம் கட்டுதல்,
- பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்பு,
- விளையாட்டு மேம்பாட்டிற்கு வசதிகள்,
- கழிப்பறை,
- சுற்றுச்சுவர்,
- மேஜை, நாற்காலி வாங்குதல்
- மதிய உணவு சமையலறைக் கட்டடம்
உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.
மத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.
இந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.
பின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.
கருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.
ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.
அரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.
ஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.
இந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.
மாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.
—————————————————————————————————————————————————
ஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன?
எம். ரமேஷ்
ஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.
ஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.
இந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.
அந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.
10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.
இலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.
இதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.
தொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.
மாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.
ஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.
2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.
22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.
அனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.
தமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.
இதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.
அதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.
முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.
ஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.
எம். ரமேஷ்
Posted in 5, Administration, ADMK, Allocation, Appraisal, backward, Biz, BPO, Budget, Buildings, Caste, Census, Center, City, Community, Computer, Control, Council, Development, DMK, Economy, Education, Expenses, Exports, family, Finance, Fund, GDP, Governments, Govt, Grant, Growth, Homes, Housing, Hygiene, Improvements, Inaction, Income, Info, InfoTech, infrastructure, investments, IT, ITIS, JJ, Kalainjar, Karunanidhi, Kids, KK, local, Mani, Mani shankar, ManiShankar, Measures, Metrics, Money, NGO, Outsourcing, Panchayat, Panchayat Raj, Panchayath, parliament, Planning, Plans, Play, Playgrounds, Policy, Poor, Population, Progress, Refer, Reference, Region, Residences, Resources, Restrooms, Rich, Rural, Sanitary, Schools, Sector, Services, Software, Spend, Spending, Sports, Stalin, State, Statistics, Statz, Students, TamilNadu, Teach, Teachers, Technology, Telecom, TN, Toilets, Villages, Zones | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007
தலித் வழக்கறிஞரின் வாயில் மலம் திணிப்பு – மதுரையில் கொடுமை
மதுரையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரின் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது. இந்த மகா பாதகச் செயலைச் செய்த பாமக செயலாளர் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை சமயநல்லூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளவனுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது மோதல் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சுரேஷ் தனியே சென்றபோது அவரை வழிமறித்த கிள்ளிவளவன் மற்றும் மதுரை பாமக மாவட்ட செயலாளர் கிட்டு ஆகியோர் கொண்ட கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளது. அத்தோடு விடாமல் அவரது வாயில் மலத்தையும் திணித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சுரேஷ் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளன் மற்றும் அவரது அடியாட்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் பாமக மாவட்ட செயலாளர் கிட்டுவை போலீசார் கைது செய்யவில்லை. இந் நிலையில் பாமக தலைவர் ஜிகே மணி மதுரை வந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர் பாமக செயலாளரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார்.
Posted in Anbumani, Attorney, backward, BC, Caste, Community, Dalit, Discrimination, DPI, Elections, GK Mani, Harijan, Hindu, Hinduism, Law, Lawyer, Madurai, Mani, MBC, MLC, Mob, OBC, Oppression, Order, Panchayat, Panchayath, Panjayat, Panjayath, Party, PI, PMK, Police, Polls, Ramadas, Ramadoss, Religion, Reservations, Reserved, Samaianalloor, Samaianallur, Samayanalloor, Samayanallur, SC, scheduled castes, Supremacy, untouchable, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007
ஆசியக்கோப்பை: மணிசங்கர் அய்யர் மெüனம் காப்பது ஏன்?
வி. துரைப்பாண்டி
சர்வதேச அளவிலான போட்டியில் இதற்கு மேல் ஒரு வெற்றி வேண்டுமா என வியக்கும் அளவுக்கு எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த ஏழாவது ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய ஹாக்கி அணி, திறமையை வெளிப்படுத்தியது.
தொடர்ச்சியாக 7 நாடுகளை வீழ்த்தியது! இலங்கைக்கு எதிராக 20 கோல் போட்டு, அதிக கோல்கள் அடித்த சாதனையை சமன் செய்தது உள்பட 57 கோல்கள் இந்திய அணியின் கணக்கில். இவ்வளவுக்கும் பெனால்டி கார்னரில் இந்தியா “ஹீரோ’ அல்ல, ஏறக்குறைய ஜீரோதான். தட களத்தில்தான் வினாடிக்கு வினாடி எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், குழு விளையாட்டுப் போட்டியில் அதுமாதிரியான தருணத்தை காண்பது அரிது. ஆனால் இளமையும் முதுமையும் கலந்த இந்திய அணியினர், ஹாக்கியை தட களமாக மாற்றி, ரசிகர்களுக்கு உச்சக்கட்ட விருந்தளித்தனர். அனுபவ வீரர் பிரப்ஜோத் சிங், வேகத்தில் தன்ராஜ் பிள்ளையாகவே காணப்பட்டார். அவரது “ரிவர்ஸ் பிளிக்’ கோல் முயற்சி, நிச்சயம் ரசிகர்களுக்கு கூடுதல் விருந்து.
நீண்ட போட்டிகளுக்குப் பிறகு ஓர் அணியாக விளையாடியது இந்தியா. உச்சக்கட்டமாக, ஆசியாவில் புலியாகத் திகழும் கொரியாவை 7-க்கு 2 என்ற கோல் வித்தியாசத்தில் இறுதி ஆட்டத்தில் தோற்கடித்து உலக ஹாக்கி வட்டாரத்தை தலைதூக்கிப் பார்க்கச் செய்துள்ளது பிரப்ஜோத் திர்கே தலைமையிலான இந்திய அணி. இல்லை, பயிற்சியாளர் ஜோஹிம் கார்வலோ பார்வையிலான இந்திய அணி என்று சொல்வதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும்.
ஹாக்கியை “தேசிய விளையாட்டு’ எனக் கூறிவருகிறோம். ஆனால் அதற்கு சட்டபூர்வமாக எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் 1960-80-களில் இந்தியா குவித்த வெற்றிகளால், அப்போதிருந்த 80 கோடி மக்கள் இவ் விளையாட்டை ஜனரஞ்சகமான ஆட்டமாக ஏற்று, போற்றத் தொடங்கினர். அதனால், மற்ற விளையாட்டுகளைக் காட்டிலும் ஹாக்கி ஓங்கி ஒலித்தது, விளையாடப்பட்டது, மக்களும் ஏற்றுக்கொண்டனர், பின்தொடர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு காலப்போக்கில் அந்த அணி தீனி போடமுடியாதது வருத்தமான விஷயம்தான்.
கடைசியாக தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5-ம் இடம். அதற்கு முன்னர் வரை பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் ஏதாவது ஒரு பதக்கத்தைப் பெற்றுவந்த இந்திய அணியினர், நம்மிடம் பயின்ற சீனாவிடம் பெற்ற தோல்வி, அப் போட்டியில் அதளபாதாளத்துக்குத் தள்ளியது.
உதை மேல் உதை. ச்சீ… இதைப் போய் தேசிய விளையாட்டு என்று எப்படிச் சொன்னார்கள் என எள்ளிநகையாடாதவர்கள் குறைவு. 100 கோடிக்கும் மேலான மக்களைக் கொண்ட இந்தியாவில், ஐரோப்பிய நாடுகளை, ஏன் ஆசிய நாடுகளைக்கூட தோற்கடிக்கும் அளவுக்கு வலுவான, வீரமான 11 வீரர்கள் கிடைக்கவில்லையா என்ற ஆதங்கம் கடைக்கோடி மக்களிடம்கூட இருந்தது.
அதற்காக, இந்திய ஹாக்கி அமைப்பு என்னென்னவோ முயற்சிகளை மேற்கொண்டன. 1976-வரை கட்டாந்தரையிலேயே விளையாடி பழக்கப்பட்ட இந்தியர்களுக்கு, அதன் பிறகு வந்த ஆஸ்ட்ரோ டர்ப்பில் (செயற்கை புள்தரை) விளையாடுவதுதான் இந்த பின்னடைவுக்குக் காரணம் என்றார்கள். ராஜீந்தர் (சீனியர்), ஜெரால்டு ராச், ராஜீந்தர் (ஜூனியர்), கடைசியாக வி. பாஸ்கரன் என எத்தனையோ பயிற்சியாளர்கள் இந்திய அணியை சீர்தூக்கிப் பார்க்க முயற்சித்தனர். ஆனால் ஏற்றத்துக்குப் பதிலாக ஏமாற்றம்தான்.
ஆனால், பாஸ்கரனுக்குப் பிறகு அணியை செம்மைப்படுத்திவரும் முன்னாள் ஒலிம்பியன் கார்வலோ, தான் பொறுப்பேற்றது முதலே ஆக்கப்பூர்வமான முன்னேற்றம். கோலாலம்பூர், பூம் ஆகிய நகர்களில் நடந்த சர்வதேச போட்டிகளில் வெண்கலப் பதக்கம். தற்போது ஆசியக் கோப்பையில் தங்கப் பதக்கம். 9 மாத காலத்தில் நம்பிக்கையான பார்வை.
உலக மக்கள் தொகையில் இரண்டாவது மிகப் பெரிய நாடு என்ற பெயரைப் பெற்ற இந்தியா, ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இதுவரை ஒரு தங்கப் பதக்கத்தையும் பெறமுடியவில்லை. அதே சமயம் குழுப் போட்டியான ஹாக்கி, 8 முறை இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை தேடிக் கொடுத்துள்ளது.
ஆசியக் கோப்பையை மீண்டும் வென்றுள்ள இந்தியாவுக்கு அடுத்த இலக்கு பெய்ஜிங்கில் 2008-ம் ஆண்டில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதே. உலகத் தரவரிசையில் தற்போது 8-வது இடத்தில் இருந்தாலும் அதில் விளையாடுவதற்கு இன்னும் தகுதியைப் பெறவில்லை. ஆனால், சிரமம் இருக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ள கார்வலோ, அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 12 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. ஏற்கெனவே 8 நாடுகள் அதற்கான தகுதியைப் பிடித்துவிட்டன. மற்றைய நாடுகள் எவை என்பதைத் தீர்மானிக்க சிலி, நியூஸிலாந்து, ஜப்பான் ஆகிய இடங்களில் தகுதிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அவற்றில் ஒரு போட்டியில் இந்தியாவும் விளையாட உள்ளது.
இந்தியாவிலிருந்து அடுத்தடுத்து சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரே ஒலிம்பிக் விளையாட்டாகத் திகழும் ஹாக்கியை, முதன்மைப் பிரிவிலிருந்து மத்திய விளையாட்டு அமைச்சகம் அண்மையில் பொதுப் பிரிவுக்கு மாற்றியுள்ளது. ஆனால் ஹாக்கி வீரர்கள் அது குறித்து கவலைப் படவில்லை என்பதற்கு ஆசியக் கோப்பை வெற்றியே சாட்சி.
கோலாலம்பூரில் 2003-ல் முதன்முதலாகப் பெற்ற ஆசியக் கோப்பையை, இம்முறையும் இந்திய அணியினர் யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை. அதற்காக பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் இந்திய அணியைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய விளையாட்டு அமைச்சகத்தை கையில் வைத்துள்ள மணி சங்கர் அய்யர் மட்டும் மெüனம் காப்பது ஏன் என்பதுதான் ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்படும் கேள்வி.
Posted in Asia, Asiad, Chakde, Champion, Chennai, Coach, Cricket, Cup, Games, Goals, Hockey, Madras, Mani, ManiShankar, match, Minister, Olympics, Play, Players, Shahrukh, Sports | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007
திரைப்பட வரலாறு 708
இளையராஜா
இசை அமைக்க மறுத்த படங்கள்!
இளையராஜா:-
“எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, “நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்” என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டேன்! காரணம், “இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே!” என்ற எண்ணம்தான்.
இரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன்.
அப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து விடும்!
அப்படி வந்ததுதான் கே.பாக்யராஜின் முதல் படம் “ஒரு கை ஓசை” (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)
இப்படி, “நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்கப்போவதில்லை” என்று சொல்லி, நான் இசை அமைக்க மாட்டேன் என்று மறுத்து, வேறு ஒருவர் இசை அமைப்பில் படத்தை தயாரித்து வெளியிட்ட இருவர்:- நடிகர் பார்த்திபன் (படம் “புதிய பாதை”); அனந்த் (கே.பாலசந்தரின் உதவியாளர்). படம்: “சிகரம்.”
தீஸ்ரி மஞ்சில்
சாருசித்ரா சீனுவாசன், “தீஸ்ரி மஞ்ஜில்” என்ற இந்திப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்து, கமல் – ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்துவிட்டு என்னிடம் வந்தார். எனக்குப் படத்தைப் போட்டுக்காட்டினார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நான் கச்சேரி நடத்திய காலத்திலேயே, இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம். ஆர்.டி.பர்மன் அற்புதமாக இசை அமைத்திருந்தார்.
படம் முடிந்ததும், “இந்தப் பாடல்களைப்போல் என்னால் கம்போஸ் செய்ய முடியாது. வேறு யாரையாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டேன்.
சில பாடல்களுக்கு இணை கிடையாது. அதுபோல் இசை அமைக்க முயற்சி செய்யக்கூடாது. ஆர்.டி.பர்மன் இசை அமைத்த அந்தப் படத்தின் பாடல்களும் அந்த வகையைச் சேர்ந்தவை.
டைரக்டர்கள்
சினிமாவுக்கு கதை சொல்வது ஒரு தனி கலை. சிலர், கதையை சொல்லத் தெரியாமல் மூன்று – நான்கு மணி நேரம் சொல்வார்கள். சிலர், கதையைப் பிரமாதமாகச் சொல்லிவிட்டு, உப்புச் சப்பு இல்லாமல் படமாக்குவார்கள்.
என்னிடம், சொல்லியதை சொல்லியவாறே படம் எடுத்த டைரக்டர்கள் இரண்டே பேர்: பாலுமகேந்திரா, மணிரத்னம்.
கதையை மிகவும் சுருக்கமாகச் சொல்லும் இயக்குனர்களில் ஸ்ரீதர் அவர்களும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் தனி ரகம். இருவரும் 15 நிமிடங்களுக்குள் கதை சொல்லிவிடுவார்கள்.
காதல் ஓவியம்
பாரதிராஜா அவரது “காதல் ஓவியம்” படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.
நான் மூகாம்பிகையின் தீவிர பக்தன் என்பதால், “படத்தின் நாயகன் அம்பாளின் பக்தன் என்று சொன்னால், இளையராஜா நல்ல டிïன்களை எலலாம் போட்டுத்தருவார்” என்று பாரதியிடம் உதவியாளர்களாக இருந்த மணிவண்ணனும், கலைமணியும் சொல்லியிருப்பார்கள் போலும்.
நான் அப்படத்துக்கு இசை அமைத்தேன். ஒருநாள் மாலை நேரத்தில் ஆரம்பித்த பாடல் `கம்போசிங்’ அன்றே முடிந்துவிட்டது. படத்துக்கான எட்டுப்பாடல்களும் தயாராகிவிட்டன.
படம், பின்னணி இசை சேர்ப்புக்காக வந்தபோது, அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. பாரதியிடம், “படம் ரிலீஸ் ஆவதற்குள் நாம் இருவரும் குருவாïர் போய் வரலாம்” என்றேன். “சரி” என்றார். வேலை சரியாக இருந்ததால், நகர முடியவில்லை.
திடீரென்று ஒருநாள் கலைமணியை பாரதி கூப்பிட்டு, “ஏய்யா! படத்திலே ஏதோ ஒன்னு குறையுதே. உனக்குத் தெரியாதா? தெரிந்தா சொல்லு!” என்றார்.
“அது ஒன்றும் இல்லே சார். கதைதான் குறையுது!” என்று கலைமணி கூற, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கலைமணியை பாரதி அடிக்கப்போக, அவர் தப்பி ஓடிவிட்டார்.
படம் ரிலீஸ் ஆகியது. ஒரு வாரத்தில், படப்பெட்டிகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன.
பாரதி என்னிடம் வந்து, “வா, குருவாïர் போய் வரலாம்” என்றார். “படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பல்லவா போயிருக்க வேண்டும். இப்போது வேண்டாமே!” என்று கூறிவிட்டேன்.
“காதல் ஓவியம்” படம் சரியாகப் போகாததால், பாரதி மனம் சங்கடப்பட்டார். ரசிகர்கள் மீது கோபப்பட்டார்.
“பாரதி! ரசிகர்களை குறை கூறவேண்டாம். அவர்கள் எப்போதும் சரியாகவே இருப்பார்கள்” என்றேன்.
“உனக்குத் தெரியாது. இவர்களுக்கு எது வேணும் என்று எனக்குத் தெரியாதா? இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார்!” என்றார்.
அதற்கு நான், “யோசித்துப் பாருங்கள். 16 வயதினிலே படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அதற்கு இணையாக விட்டலாச்சாரியாவின் “ஜெகன்மோகினி” படம் ஓடியதல்லவா? அதற்காக, பாரதிராஜா, ஜெகன்மோகினி போல படம் எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. அதைவிட்டு எங்கும் போகவேண்டாம்” என்றேன்.
ஆனால் பாரதி தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.
ரசிகர்களுக்காகவே கீழே இறங்கி வந்து அவர் எடுத்த “வாலிபமே வா வா.” படம் ஓடவில்லை.
டைரக்டர் கங்கை அமரன்
“அலைகள் ஓய்வதில்லை” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆன பாஸ்கர், அடுத்து ஏதாவது படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் வந்தார். பஞ்சு சாரின் வீட்டில் இருதேன். அப்போது, அங்கே அமர் (கங்கை அமரன்) இருந்ததைப் பார்த்து, “அமர் டைரக்ஷனில் படத்தை எடு. படத்தின் பெயர் கோழி கூவுது’‘ என்றேன். மதுரையில் நாங்கள் நடத்திய நாடகத்தின் பெயர் அது.
நான் சொன்னதை அமர் ஏற்றுக்கொண்டு, ஒரு கதையை உருவாக்கி, பிரபுவை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தான். அவன் எனக்குப் போட்டியாக இசை அமைப்பாளராக வந்துவிடக்கூடாது என்பதற்காக டைரக்ட் செய்யச் சொன்னேன் என்று டெலிவிஷன் பேட்டிகளில் அமர் சொல்வது வழக்கம்.
அவன் எனக்குப் போட்டியா, இல்லையா என்பது அவனுக்கே தெரியும்!”
Posted in Amaran, Anandhu, Ananthu, Balumahendhira, Balumahendhra, Balumahendra, Balumahenthira, Barathiraja, Bharathiraja, Cinema, Directors, Films, Gangai Amaran, Ilaiaraja, Ilaiyaraja, Kaathal Oviyam, KSG, Mani, Manirathnam, Movies, MSV, music, Sigaram, Sikaram, Sridhar, Visvanathan, VIswanadhan, Viswanathan | 1 Comment »
Posted by Snapjudge மேல் மே 28, 2007
தேர்தல் தோல்வியால் தொழில்துறையினருக்கு பிரதமர் அறிவுரை வழங்கவில்லை: அம்பிகா சோனி
புதுதில்லி, மே 28: தேர்தல் தோல்வியாலோ அல்லது இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தினாலோ தொழிற்துறையினருக்கு பிரதமர் அறிவுரை வழங்கவில்லை என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதே நேரம், மத்திய அமைச்சரவையின் மாண்புகளை மணிசங்கர் அய்யர் உடைத்து விட்டார் என்று அவர் குற்றம்சாட்டினார்.
“தொழிற்துறையினருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை வழங்கியது என்பது தேர்தல் ஆதாயத்திற்காக என்று நான் கருதவில்லை. ஒரு பிரச்னை தொடர்பாக என்ன முடிவு எடுக்க வேண்டும், எப்போது எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தேர்தல் முடிவு விளங்குகிறது. இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தினாலும் பிரதமர் அவ்வாறு பேசவில்லை’ என்றார் அம்பிகா சோனி.
இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை புதுதில்லியில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி உதவி வழங்க தொழில்துறையினர் முன்வர வேண்டும், மாறாக உரிமையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துகளை அதிகரித்து காட்டுவதற்காக ஊதியத்தை உயர்த்திக் கொண்டே செல்லக் கூடாது என்றார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், இந்தியப் பொருளாதாரம் 9.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம், ஆனால் அதன் பலன் 10 அல்லது 15 சதவீத மேல்தட்டு மக்களை மட்டுமே அடைந்திருக்கிறதே தவிர சராசரி ஏழையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை ஆகியவற்றால் அடித்தட்டு மக்களின் விழிபிதுங்குகிறது, அரசுக்கு எதிரான அபாய மணி அலறுகிறது என்றார்.
சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான கரண் தபார் நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான அம்பிகா சோனி மேலும் கூறியது:
பொது இடத்தில் பிரதமர் பேசியதற்கும் மணிசங்கர் அய்யர் பேசியதற்கும் வேறுபாடு உள்ளது. மத்திய அமைச்சர் பதவியும், பிரதமர் பதவியும் ஒன்று அல்ல. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுக் கொண்டே இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் மணிசங்கர் எவ்வாறு இப்படி பேசலாம்?.
ஒரு பிரச்னை குறித்து அமைச்சரவைக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அது தொடர்பாக விவாதங்கள் கூட நடந்திருக்கலாம்.
அப்படி இருக்கையில் அதை வெளியிடங்களில் பேசுவது தவறு. இதன் மூலம் மத்திய அமைச்சரவையின் மாண்புகளை அய்யர் உடைத்துவிட்டார் என்றார்.
Posted in Aiyar, Ambiga, Ambika, Ambika Soni, Business, CEO, Comment, Communist, Compensation, Congress, CPI, Economy, Election, Employment, executive, executives, Finance, Government, Govt, Industry, Iyer, Jobs, Mani, Mani Shankar Aiyar, Manmohan, Marxist, Needy, Pay, PM, Poor, Prime Minister, Profit, Rich, Salary, Shares, Soni, Stocks, UPA, Wealth, Wealthy, Welfare | Leave a Comment »
Cut excessive pay to CEOs: Manmohan Singh – Ambika Soni defends Prime Minister’s premise
Posted by Snapjudge மேல் மே 28, 2007
தேர்தல் தோல்வியால் தொழில்துறையினருக்கு பிரதமர் அறிவுரை வழங்கவில்லை: அம்பிகா சோனி
புதுதில்லி, மே 28: தேர்தல் தோல்வியாலோ அல்லது இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தினாலோ தொழிற்துறையினருக்கு பிரதமர் அறிவுரை வழங்கவில்லை என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதே நேரம், மத்திய அமைச்சரவையின் மாண்புகளை மணிசங்கர் அய்யர் உடைத்து விட்டார் என்று அவர் குற்றம்சாட்டினார்.
“தொழிற்துறையினருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை வழங்கியது என்பது தேர்தல் ஆதாயத்திற்காக என்று நான் கருதவில்லை. ஒரு பிரச்னை தொடர்பாக என்ன முடிவு எடுக்க வேண்டும், எப்போது எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தேர்தல் முடிவு விளங்குகிறது. இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தினாலும் பிரதமர் அவ்வாறு பேசவில்லை’ என்றார் அம்பிகா சோனி.
இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை புதுதில்லியில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி உதவி வழங்க தொழில்துறையினர் முன்வர வேண்டும், மாறாக உரிமையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துகளை அதிகரித்து காட்டுவதற்காக ஊதியத்தை உயர்த்திக் கொண்டே செல்லக் கூடாது என்றார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், இந்தியப் பொருளாதாரம் 9.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம், ஆனால் அதன் பலன் 10 அல்லது 15 சதவீத மேல்தட்டு மக்களை மட்டுமே அடைந்திருக்கிறதே தவிர சராசரி ஏழையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை ஆகியவற்றால் அடித்தட்டு மக்களின் விழிபிதுங்குகிறது, அரசுக்கு எதிரான அபாய மணி அலறுகிறது என்றார்.
சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான கரண் தபார் நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான அம்பிகா சோனி மேலும் கூறியது:
பொது இடத்தில் பிரதமர் பேசியதற்கும் மணிசங்கர் அய்யர் பேசியதற்கும் வேறுபாடு உள்ளது. மத்திய அமைச்சர் பதவியும், பிரதமர் பதவியும் ஒன்று அல்ல. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுக் கொண்டே இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் மணிசங்கர் எவ்வாறு இப்படி பேசலாம்?.
ஒரு பிரச்னை குறித்து அமைச்சரவைக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அது தொடர்பாக விவாதங்கள் கூட நடந்திருக்கலாம்.
அப்படி இருக்கையில் அதை வெளியிடங்களில் பேசுவது தவறு. இதன் மூலம் மத்திய அமைச்சரவையின் மாண்புகளை அய்யர் உடைத்துவிட்டார் என்றார்.
Posted in Aiyar, Ambiga, Ambika, Ambika Soni, Business, CEO, Comment, Communist, Compensation, Congress, CPI, Economy, Election, Employment, executive, executives, Finance, Government, Govt, Industry, Iyer, Jobs, Mani, Mani Shankar Aiyar, Manmohan, Marxist, Needy, Pay, PM, Poor, Prime Minister, Profit, Rich, Salary, Shares, Soni, Stocks, UPA, Wealth, Wealthy, Welfare | Leave a Comment »