Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘male’ Category

The price of brides in Uttar Pradesh: Causes of the discrepancy in female-male Sex Ratio

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2007

விலை கொடுத்து வாங்கப்படும் மணமகள்கள்: உ.பி.,யில் அவல நிலை 

ஷாஜன்பூர்: பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததைத் தொடர்ந்து, மணமகளை வேறு மாநிலங்களில் இருந்து விலை கொடுத்து வாங்கும் மாநிலங்கள் வரிசையில் அரியானா, ராஜஸ்தானைத் தொடர்ந்து உ.பி.,யும் சேர்ந்துள்ளது.உ.பி., மாநிலம் ஷாஜன்பூர் மாவட்டத்தில் தான் ஆண்களை விட, பெண்களின் விகிதம் மிகக்குறைந்து உள்ளது. இங்குள்ள நகர்ப்புறங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 678 என்ற விகிதத்தில் பெண்கள் உள்ளனர். கிராமப்புற நிலை இன்னும் படுமோசம்.

இங்கு ஆயிரம் ஆண்களுக்கு 535 பெண்களே உள்ளனர். இந்த மாவட்டத்தில் தான், நாட்டிலேயே ஆண்களை விட, பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது.

இதனால், திருமண வயதுக்கு வரும் ஆண்கள், மணமகள் கிடைக்காமல் திண்டாடும் நிலை உருவாகி உள்ளது. மேற்கு வங்கம், ஒரிசா, ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து விலை கொடுத்து மணமகளை வாங்கி, திருமணம் செய்து கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. ரூ. 7,000 முதல் ரூ.10ஆயிரம் வரை மணமகளுக்கு விலை கொடுக்கப்படுகிறது.

ஷாஜன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் கிராமத்தில் வசிக்கும் 250 குடும்பத்தில் 60 சதவீதத்தினர் இது போலத் தான் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த கிராமத்தில் விசாரித்த போது பலரது, “சோகக் கதைகள்’ தெரியவந்தது. ஒரிசாவில் உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவரை, உ.பி., மாநிலம் ஷாஜன்பூர் மாவட்டம் ஷாகஞ்ச் கிராமத்தை சேர்ந்த மகிந்தர் என்பவர், ரூ.7,500 விலை கொடுத்து மணமகளாக வாங்கி வந்தார். மாமியாரையும் அழைத்து வந்து வீட்டில் உட்கார வைத்து சோறு போட்டு வருகிறார்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். கணவருடன் அனிதா சரிவர பேசுவதில்லை. காரணம்: இருவருக்கு இடையே உள்ள பாஷை பிரச்னை தான். மகிந்தர் பேசும் ஹிந்தி அனிதாவுக்கும், அனிதா பேசும் ஒரிய மொழி மகிந்தருக்கும் புரிவது இல்லை. பீகாரைச் சேர்ந்த மீரா தேவி என்ற பெண்ணின் கதை இன்னும் மோசம். இரண்டரை ஆண்டுக்கு முன் ராஜிவ் என்பவர் ரூ.8 ஆயிரம் விலை கொடுத்து மணமகளாக கொண்டு வந்தார். மீரா இன்னும் கர்ப்பம் தரிக்காததால், “வீணாக செலவு செய்துவிட்டோமோ’ என்று ராஜிவின் குடும்பத்தினர் வருத்தப்படுகின்றனர்.

இந்த கிராமத்தில், மனைவியை இழந்த பிராமணர், நாராயண் லால், மறுமணம் செய்து கொள்ளவிரும்பினார். ஆனால், மணமகள் கிடைக்கவில்லை. தேடித்தேடிப் பார்த்து, இறுதியில் கோல்கட்டாவை சேர்ந்த ஆஷா தேவி என்ற 45 வயது விதவையை ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்தார். அந்ததொகை ஆஷாதேவியின் மகனுக்கு கொடுக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக இவருடன் தான் குடும்பம் நடத்தி வருகிறார். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கோல்கட்டா சென்று தன் மகனை பார்த்து விட்டு வருகிறார் ஆஷா தேவி. இவருக்கு சரளமாக இந்தி பேச வராது. இருப்பினும், நாராயண் லாலின் குடும்பத்தினர் படித்தவர்கள் என்பதால், பெங்காலி மொழி பேசும் ஆஷா,, என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்கின்றனர்.

இதே போல, ராம்பஜன் என்பவரும் கோல்கட்டாவில் இருந்து அனிதா என்ற பெண்ணை, நான்கு ஆண்டுக்கு முன் ரூ.10 ஆயிரம் விலை கொடுத்து வாங்கினார். இவரும் விதவை தான். திருமணத்துக்கு பின் அனிதாவின் பெயரை ராம் லாலி என்று மாற்றிவைத்தார் ராம் பஜன். “”இந்த வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது. விதவையாக வீட்டில் முடங்கிக்கிடந்த எனக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. என் கணவர் கொடுத்த பணம், குடும்பத்தாருக்கும் உதவியாக உள்ளது,” என்கிறார், ராம் லாலி என்கிற அனிதா. சமூக சேவை அமைப்பைச் சேர்ந்த நீலம் சிங் என்பவர், “அடுத்து வரும் ஆண்டுகளில், பெண்சிசுக் கொலைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்காவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகிப்போகும்’ என்று கூறினார்.

Posted in Bridegrooms, brides, Death, Discrepancy, Economy, Female, male, Marriage, Price, Rates, ratio, sales, Sell, Sex, Society, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Wedding | Leave a Comment »

IPC 498A – Domestic Abuse, Dowry, Husband Rights, Family, Torture

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007

ஆண்களுக்கு சங்கம் தேவையா?

உ . நிர்மலா ராணி

பெண்கள் நலச்சட்டங்கள், குறிப்பாக வரதட்சிணைத் தடுப்புச் சட்டம், இ.பீ.கோ. பிரிவு 498-ஏ – மற்றும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் ஆகியவை பெண்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அவற்றிலிருந்து ஆண்களைக் காக்க சங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விவாதங்களும் ஊடகங்களில் இடம்பெறுகின்றன.

பெண்களுக்கெதிரான வன்முறை அதிக அளவு குடும்பம் என்ற அமைப்பில் தான் நடக்கிறது. இந்தியாவில் மட்டுமே மூன்றில் இரு பங்கு மணமான பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாவதாக ஐ.நா. சபை கூறுகிறது. இந்தக் குடும்ப வன்முறைக்குக் காரணம் வரதட்சிணை. பணத்தாசையையும் பொருளாசையையும் மனைவி வீட்டார் தீர்க்க இயலாதபோது, வேறு திருமணம் செய்து கொள்ள ஏதுவாகக் கணவர் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்ட யுக்தி தான் “”மனைவி எரிப்பு”. 1970 – 80களில் நாடெங்கிலும் இந்தச் சம்பவங்கள் அதிகம் நடந்தன. இவற்றில் 90 சதவிகிதம் தீ விபத்துகளாக முடிக்கப்பட்டன. 5 சதவிகிதம் வழக்குகள் தற்கொலைகளாக முடிந்தன. 5 சதவிகிதம் சம்பவங்களில் தடயங்களும் ஆதாரங்களும் கிடைக்காததால் குற்றவாளிகள் விடுதலையானார்கள்.

1961-ல் இயற்றப்பட்டு இரண்டு முறை திருத்தப்பட்ட வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தால் இந்தக் குற்றங்களின் தீவிரத்தைக் குறைக்கக்கூட முடியாதபோதுதான், பெண்களைக் கொடுமைப்படுத்துவது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் (இ.பீ.கோ.) 498-ஏ பிரிவும் வரதட்சிணைத் சாவுகளுக்காகத் தனியாக 304-பி என்ற பிரிவும் ஏற்படுத்தப்பட்டன. குற்றத்தின் விசேஷ தன்மை கருதி அதை நிரூபிக்க ஏதுவாக இந்திய சாட்சியச் சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்பட்டன.

இதன் பிறகும் கூட, இந்தியாவில் 102 நிமிடங்களுக்கு ஒரு பெண் வரதட்சிணைக்குப் பலியாவதாக அரசு புள்ளிவிவரமே கூறுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 14 பெண்கள் உயிர் துறக்கிறார்கள்.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவாக உருவான நுகர்பொருள் கலாசாரமும் வரதட்சிணைக் கொடுமையை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

நம்மில் பலருக்கு வரதட்சிணைக் கொடுமைதான் குற்றம் என்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்தான் கொடுமை என்றும் ஒரு தவறான பார்வை உள்ளது. இதற்கும் அப்பாற்பட்டு ஒரு மனைவி என்பவள் பல்வேறு காரணங்களுக்காகவும், உடல், மன, பாலியல், பொருளாதார ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள். நோய் மற்றும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளைவிட குடும்ப வன்முறையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 1.40 கோடி பெண்களில், பெரும்பான்மையினருக்கு வாழ்க்கைத் துணையால் தான் அந்தக் கிருமி தொற்றியிருக்கிறது என்பதையும் குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும்.

498-ஏ – பிரிவின் கீழ், கொடுமைப்படுத்தும் கணவருக்குத் தண்டனை உண்டு என்றாலும்கூட, புகார் கொடுக்கும் பெரும்பான்மையான பெண்கள் கணவரையோ அவரது வீட்டாரையோ சிறைக்கு அனுப்புவதை விரும்புவதில்லை. தங்களுக்கும் குழந்தைகளுக்கும் சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய சீர்பொருள்கள், நகைகள், ஜீவனாம்சம் மற்றும் குடியிருக்கும் உரிமை போன்ற நிவாரணங்களைத்தான் பெற விரும்புகிறார்கள்.

சில சமயங்களில் கணவர் வீட்டால் விரட்டப்பட்ட பெண்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கும் இந்தப் பிரிவைப் பயன்படுத்துகிறார்கள். வரதட்சிணை இல்லாமல் வேறுவித கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள்கூட வரதட்சிணை என்று சொன்னால்தான் அது குற்றமாகக் கருதப்படும் என்ற தவறான சட்ட ஆலோசனைகளால் வரதட்சிணைக் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

பதிவு செய்யப்படும் 80 சதவிகிதத்திற்கும் மேலான வழக்குகளில், சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டு ஏதாவது ஒரு காலகட்டத்தில் வழக்கு வாபஸ் பெறப்படுகிறது. சுமார் 12 சதவிகிதம் வழக்குகளில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குச் செல்கிறது. அவற்றிலும்கூட, பல சமூக காரணங்களால் பெண்கள் வழக்கைத் தொடர்ந்து நடத்த முடிவதில்லை. இதனாலேயே 80 சதவிகிதம் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில்தான், 2005-ல் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுமே தவிர, அடிப்படையில் இது ஒரு சிவில் சட்டமே. கொடுமையைத் தவிர்க்க பாதுகாப்பு உத்தரவு, மனைவி குழந்தைகளை நடுத்தெருவில் நிற்க வைக்காமலிருக்க குடியுரிமை உத்தரவு, அவர்களைப் பராமரிக்காமல் இருப்பதைத் தடுக்க ஜீவனாம்ச உத்தரவு, சீர்பொருள்களைத் திரும்பப்பெற உத்தரவு போன்றவற்றை, முழுமையான விசாரணைக்குப் பிறகு, குற்றம் நிரூபிக்கப்படுமானால் நீதிபதி பிறப்பிப்பார். இந்த உத்தரவுகளை மீறும்போதுதான் ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அளிக்கப்படும்.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்தாலும் நடைமுறையில் பயன்பட ஆரம்பிக்கவில்லை. நிரந்தரப் பாதுகாப்பு அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும். சட்ட செயல்பாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பவர்களோ அல்லது மனைவிகள் தான் கணவர்களைக் கொடுமைப்படுத்துவதாக கூறுபவர்களோ விஞ்ஞானபூர்வமாக ஆதாரங்களையோ புள்ளிவிவரங்களையோ முன்வைப்பது இல்லை.

பெண்கள் நலச் சட்டங்கள் துஷ்பிரயோகம் ஆவதே இல்லை என்று மாதர் அமைப்புகள் கூறுவதில்லை. எந்த ஒரு சட்டமும் துஷ்பிரயோகத்திற்கு விதிவிலக்கல்ல. இதுபோன்ற துஷ்பிரயோகத்தைத் தடுக்க வேண்டுமென்றால் சட்டத்தை முதலில் முறையாகப் பயன்படுத்த வேண்டும். சட்டத்தைச் செயல்படுத்தும் அரசு அமைப்புகள் கடமை உணர்வோடும் பாலினச் சமத்துவப் பார்வையோடும் புகாரைச் சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓர் ஆண், அவன் வகிக்கும் சமூகப்பாத்திரங்களில் பாதிக்கப்படும்போது, தன் உரிமைகளைப் பெற சங்கம் தேவைப்படுகிறது. பாலியல் ரீதியாக, ஆணாகப் பிறந்த காரணத்தாலேயே அவன் வன்முறையை அனுபவிக்க வேண்டி வருமானால், அதற்கு ஆண்களுடைய தாழ்ந்த சமூக அந்தஸ்து காரணமாக இருக்குமானால் அப்போது கண்டிப்பாக சங்கம் தேவை.

ஆனால் சர்வதேச அளவில் பாலின ரீதியான வன்முறை என்றாலே அதைப் பெண்கள்தான் அனுபவிப்பதாகவும் அதைத் தொடுப்பவர்கள் பெரும்பான்மையான ஆண்கள் என்றும் அரசு புள்ளிவிவரங்களும் சரி, ஐ.நா. சபை மற்றும் இதர நிறுவன அறிக்கைகளும் சரி அறுதியிட்டுக் கூறுகின்றன.

உலக நாடுகளில் சிலவற்றில் ஆண்கள் சங்கங்கள் இருக்கின்றன. கிளௌசெஸ்டர் ஆண்கள் சங்கத்தின் குறிக்கோளே குடும்ப வன்முறையை எதிர்ப்பதுதான். “”கைகள் அடிப்பதற்கு அல்ல! அரவணைப்பதற்கு, கொடுப்பதற்கு, உதவுவதற்கு, நம்பிக்கையை கூட்டுவதற்கு” என்ற கோஷத்தை அவர்கள் முன் வைத்துள்ளார்கள். கனடாவின் ஆண்கள் சங்கம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 6 வரை ஒவ்வோர் ஆண்டும் பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்த்துப் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். 1997-ல் பெண்களுக்கெதிரான வன்முறைத் தடுப்புப் பிரசாரத்தில் சர்வதேச விருது வாங்கியதே ஓர் ஆண்கள் சங்கம்தான்.

ஆகவே இந்தியாவிலும் ஆண்கள் சங்கம் தேவைதான் – குடும்ப வன்முறையிலிருந்து தங்கள் சகோதரிகளைக் காக்க! வரதட்சிணைக் கொடுமையிலிருந்து தங்கள் மகள்களை மீட்க! குடும்பம் என்ற அமைப்பை – அன்பும் பாசமும் பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையும் நிலவும் இடமாக மாற்றியமைக்க!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in 304B, 498-A, 498A, abuse, Accidents, Alimony, Death, Divorce, Dowry, family, Female, HR, Human, Husband, in-laws, IPC, Law, Life, Maculine, male, Marriage, rights, Suicide, Violence, Wedding, Wife, Women | Leave a Comment »

Teacher Suicide – Students, Sex Abuse, Law & Order

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2007

கேமிரா செல்போனில் குளிப்பதை படம் பிடித்ததால் ஆசிரியை தற்கொலை

நகரி, ஆக. 24-

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சிவானந்த புரத்தை சேர்ந்தவர் சுனிதா (27). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் நிரஞ்சன் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள மேல்கூரை இல்லாத குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் படிக்கும் மாணவர்கள் ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திரகுமார் ஆகியோர் பக்கத்து வீட்டு மாடியில் ஒளிந்திருந்து கேமிரா செல்போனில் படம் பிடித்த

னர்.பின்னர் அவர்கள் இருவரும் சுனிதாவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். அதில், “எங்களுக்கு ரூ.5 ஆயிரம் தரவேண்டும். இல்லை யென்றால் நீங்கள் குளித்த போது எடுத்த படங்களை இண்டர்நெட்டில் வெளியிடு வோம்” என்று எழுதி இருந்தனர்.

இதைப்பார்த்ததும் அதிர்ச்சி யடைந்த அவர் உடனே கணவரிடம் இதுபற்றி கூறினார். பின்னர் சின்ன சவுக்னார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் 2 மாணவர்களையும் அழைத்து கண்டித்து அனுப்பி விட்டனர். ஆனால் அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்யவில்லை.

இந்த நிலையில் ஆசிரியை சுனிதா தன்னை மாணவர்கள் நிர்வாணமாகபடம் எடுத்து விட்டார்களே என்று வேதனை யில் அழுதபடியே இருந்தார். வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திர குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

——————————————————————————————–

வீடியோ-செல்போனில் ஆசிரியையை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டல்: பல்கலைக்கழக பேராசிரியர் கைது

டேராடூன், ஆக. 24-

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் குருகுல் கங்கிரி சமஸ்கிருத பல்கலைக்கழகம் உள்ளது. 105 ஆண்டு பாரம் பரியமிக்க இந்த பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் அவ மான சம்பவம் நடந்தது.

இங்கு பேராசிரியர்களாக பணியாற்றுபவர்கள் அருண் குமார், ராஜீவ் சர்மா, மனோஜ்குமார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து குருகுல் பெண்கள் கல்லூரியில் பணி யாற்றும் ஆசிரியை ஒருவரை நிர்வாணப்படம் எடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது.

ஆசிரியையின் நிர்வாணப் படத்தை அவர்கள் சி.டி.க் களாக தயாரித்தனர். செல் போனிலும் அதை படம் பிடித்து எம்.எம்.எஸ்.மூலம் மற்றவர்களது செல்களுக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேராசிரியர்களில் ஒரு வரது மனைவி தனது கணவரின் செல்போனில் பெண்ணின் ஆபாசபடம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த படத்தில் இருப்பது கணவரது பல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரியின் ஆசிரியை என் பது தெரியவந்தது.

உடனே அவர் செல்போனில் இருந்த ஆபாச படத்தை சம்பந் தப்பட்ட ஆசிரியையிடம் காட்டி `உன்னை எப்படி என் கணவர் படம் எடுத்தார்’ என்று கேட்டு சண்டை போட்டார். இதனால் பிரச்சினை ஏற்பட்டு கல்லூரி முதல்வர் வரை சென்றது.

அவர் இது பற்றி சமஸ்கிருத பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் துணைவேந்தர் ஸ்வாந் திர குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்களும் உடன டியாக சஸ்பெண்டு செய்யப் பட்டனர். இவர்களில் ராஜீவ்குமார் என்பவர் தற்காலிக பேராசிரியராக பணியாற்றியவர் ஆவார். நிர்வாணப்படத்தில் வரும் ஆசிரியையிடம் துணைவேந்தர் விசாரணை நடத்தினார்.

நிர்வாணப் படத்தில் வரு வது நான் இல்லை என்றும் தனது முகத்தை கிராபிக்ஸ் மூலம் நிர்வாண படத்துடன் இணைத்துள்ளனர் என்றும், இந்தப் படங்களை காட்டி தன்னை 3 பேராசிரியர் களும் பல்வேறு விதத்தில் “பிளாக் மெயில்” செய்து மிரட்டி னார்கள் என்றும் கூறினார்.

பல்கலைக்கழக குழு விசாரணைக்குப் பின் போலீ சில் புகார் செய்யப்பட்டது. இதற்குள் 3 பேராசிரியர்களும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களில் மனோஜ்குமார் என்பவர் போலீசில் பிடி பட்டார். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார் கள்.

இதற்கிடையே இந்தசம் பவம் பல்கலைக்கழகம் முழு வதும் பரவியது. 3 பேராசி ரியர்களையும் கைது செய் யக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது 3 பேராசிரி யர் களின் கொடும்பாவியும் எரிக் கப்பட்டது.

Posted in abuse, Bath, Bathe, Bathing, Camera, Cell, Cellphone, Crime, Education, Exposure, Female, Hidden, Law, male, MMS, Mobile, Naked, Order, phone, Pressure, Professor, Se, Sex, Sexual, Sick, Society, Students, Suicide, Teacher, Torture, University, video | Leave a Comment »

Female Infanticide – Gender selections & Abortions in India: Law

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

பிறப்பது எங்கள் பிறப்புரிமை!

உ . நிர்மலா ராணி, வழக்கறிஞர்

கருவிலிருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரி மகாராஷ்டிர மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு தம்பதி பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற தாய், மூன்றாவது ஆண் குழந்தை பெற விரும்புவதில் என்ன தவறு என்று வினவியிருப்பது நாடெங்கிலும் அதிர்ச்சியையும், கண்டனக் குரல்களையும் எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு போடப்பட்ட ஓரிரண்டு தினங்களுக்குள் ஹைதராபாதின் ஒரு பகுதியில் தனது எட்டாவது மகளுக்குப் பிறந்த பெண் குழந்தையைச் சுமையாகக் கருதி அதை, அப்துல் ரஹீம் என்பவர் உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் நடந்திருக்கிறது. புதைக்கப்பட்ட குழந்தையின் கை வெளியே தெரிந்ததைப் பார்த்து, விவசாயி ஒருவர் காப்பாற்ற, அக்குழந்தை அதிசயமாய் உயிர் பிழைத்துக் கொண்டது.

இரண்டாவது சம்பவத்தில் குற்றம் நடந்து விட்டது. முதல் சம்பவத்தில் குற்றம் செய்ய கோர்ட் அனுமதி கேட்கப்படுகிறது. இவை இரண்டிலும் உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால் – மக்கள்தொகையில் பெண்ணினத்தின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் வழிவகுக்கும் காரணிதான் அது.

மக்கள்தொகையில் ஆண் பெண் விகிதம் என்பது 103:100 இருக்க வேண்டும். அதாவது 1000 ஆண் குழந்தைகளுக்கு 971 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஏனென்றால், ஆண் கரு, பெண் கருவை விட பலவீனமானது. உருவான ஓர் ஆண்டுக்குள் வியாதிகளால் இறந்துவிடக் கூடியது. அவ்வாறு இறந்துவிட்டால் ஆண் – பெண் விகிதம் சமநிலையை அடையும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் நமது நாட்டில் மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. 1901-ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 972 பெண் குழந்தைகள் இருந்தன. 1991-ல் 945 ஆக குறைந்து 2001-ல் 927-க்கு சரிந்துவிட்டது. பெண்களுக்கெதிராக இந்நாட்டில் நிலவும் பாரபட்சத்தால் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கான சர்வதேச நிறுவனமாகிய யூனிசெஃப்பும் இதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இவ்வாறு மாயமான பெண்களின் எண்ணிக்கை 5 கோடியாம்.

“லான்செட்’ என்ற இதழுக்காக இந்திய மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவிலுள்ள 11 லட்சம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுக்கு 5 லட்சம் பெண் குழந்தைகள் கருக்கொலை காரணமாகவும், கருவுறுவதற்கு முன்பே பாலினத்தைத் தேர்வு செய்யும் முறையாலும் அழிந்து போகின்றனர் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

இவ்வாறு பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கொள்ளை நோய்களாகக் கருக்கொலைகளும், சிசுக்கொலைகளும் சமுதாயத்தில் வெகுவேகமாகப் பரவி வருகின்றன. இந்த நோய்களை உற்பத்தி செய்யும் விஷக்கிருமிகள் நமது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் புரையோடிப் போயிருக்கின்றன.

வரதட்சிணை என்ற பெயரிலும், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரிலும், பெண்கள், பெற்றோர்களால் ஒரு பொருளாதாரச் சுமையாகவே கருதப்படுகிறார்கள். சொத்துரிமையும் பெற்றோருடனே வாழும் உரிமையும், இறுதிச்சடங்கு செய்யும் உரிமையும், ஆண்களுக்கே அளிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பெண்களைப் புறக்கணிக்கும் போக்கும் ஆண்குழந்தைகளை விரும்பும் மனப்பாங்கும் நியாயப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன.

முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்து, இரண்டாவது கருவும் பெண்ணாக உருவாகிவிட்டால் ஆண் குழந்தை வேண்டி கருக்கொலை செய்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் முதல் குழந்தை ஆணாக உருவானால் யாரும் பெண் குழந்தை வேண்டி ஆண் கருவை அழிப்பதில்லையே? “லான்செட்’ ஆய்வின்படி, முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது பெண் குழந்தைகளின் விகிதம் 759 ஆகவும் மூன்றாவது பெண் குழந்தைகள் விகிதம் 719 ஆகவும் குறைந்து விடுகின்றன. ஆனால் இதுவே முதல் குழந்தை ஆணாக இருந்துவிட்டால் அதன்பிறகு ஆண் பெண் விகிதம் சமமாகவே இருக்கிறது என்று அந்த ஆய்வு பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

பெண் கருக்கொலை, சிசுக்கொலை என்பது ஏதோ படிக்காத பாமர மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் அதிகம் என்பதில்லை. நாட்டின் வளமான மாநிலங்கள் என்று போற்றப்படும் பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், குஜராத்தில்தான் மிகக் குறைந்த பாலின விகிதத்தில் பெண்கள் பிறக்கிறார்கள்.

தனிநபர் வருமானத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ள தில்லியில் பெண்களின் விகிதம் 868. மகாராஷ்டிரத்தில் 1991-ல் 946 ஆக இருந்த விகிதம் இன்று 913 ஆக மாறிவிட்டது. மகாபாரதப் புகழ் குருஷேத்ரத்தில் பாலின விகிதம் 770. எங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் அதிகமிருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

“”பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் தொழில் நுட்பம் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதலைத் தடுக்கும்) சட்டம்” 1994-ல் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஸ்கேன் மையங்கள் அரசிடம் பதிவு செய்யப்பட வேண்டும். கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இதைப் பற்றி விளம்பரம் செய்தாலும் அது குற்றம். முதல் 10 ஆண்டுகளுக்கு எவ்வித அசைவுமில்லை. உச்ச நீதிமன்றத் தலையீட்டிற்கு பிறகு ஓரளவு முன்னேற்றம் உள்ளது. இந்நிலையில்தான் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போடப்பட்டுள்ளது.

“”ஆணும் பெண்ணும் சமம்” என்கிறது அரசியல் சட்டம். ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்கிறது சமூகச் சட்டம். நீதி பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியல் சட்டத்தைத்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டுமே தவிர சமூகச் சட்டத்தை அல்ல. ஒரு சட்டம் எந்தப் பின்னணியில் யாருக்காக உருவாக்கப்பட்டது என்பதை உணராமல் எதிர்மறையான கருத்துகளைக் கூறும்போது சமூகத்தில் குற்றத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு அவை ஒரு வழிகாட்டுதலாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது.

சீனாவிலும் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2020-க்குள், திருமணம் செய்ய முடியாத 3 கோடி ஆண்கள் இருப்பர் என்று கூறப்படுகிறது. அங்கும் பாலினத் தேர்வு தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த “”நாமிருவர் நமக்கொருவர்” போன்ற திட்டங்களைக் கடைப்பிடித்ததில் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளன.

ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தை விரும்பும் போக்கு மக்களிடம் இல்லாததால் பிரச்னை இல்லை. கரு உருவாவதற்கு முன்னரே பாலினத்தைத் தேர்வு செய்து உருவாக்கிக் கொள்ளும் முறைப்படி, வர்ஜினியாவில் 11 பெற்றோர்களில் 10 பேர் பெண் குழந்தையைத்தான் தேர்வு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பல, பாலினத் தேர்வு செய்யும் முறையைத் தடை செய்துள்ளன.

சமூகவியலாளர், அமித்தாய் எட்ஸியோனி கூறுகிறார்: “”பாலினத் தேர்வு என்பது பாலின விகிதாசாரத்தில் ஒரு கடுமையான அசமத்துவ நிலையை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான ஆண்களைப் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளாக்கும் அல்லது பிரம்மசாரிகளாக்கும்.” ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவாள்; கடத்தப்படுவாள்; மறுத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவாள்.

இந்நிலையில், இந்தியாவில் பெண் குழந்தைகளின் சமூக அந்தஸ்து உயர்த்தப்பட வேண்டும். பாதகமான சமூகப் பழக்கவழக்கங்களை, சடங்கு சம்பிரதாயங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். பெண் குழந்தைகளைக் காக்க, அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை கருவிலே அழிக்கப்பட்டாலும், பூமிக்குள் புதைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் எழுவோம் – ஃபீனிக்ஸ் பறவைகளாய்!

———————————————————————————————————————————————–

ஆண்டுக்கு 10 லட்சம் பெண் கருக்கள் அழிக்கப்படுகின்றன: மத்திய சமூகநல வாரியத் தலைவி தகவல்

புதுச்சேரி, நவ. 4: இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர் என்று மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில சமூக நல வாரியம் சார்பில் பெண் கரு பாதுகாப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை புதுவை முதல்வர் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் பேசியது:

21-ம் நூற்றாண்டில் நாம் இதுபோல் ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டியிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவது குறித்து மார்ச் 8-ம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசப்பட்டது.

இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். கருவில் இருக்கும் பெண் ஆணா, பெண் என்பதை கண்டறிவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்தும், அதிலிருந்து தப்பிக்க டாக்டர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். 2020-ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் என்று கூறுகின்றனர். பெண் விகிதம் 50 சதவீதம் இல்லாமல் இந்தியா வல்லரசாகி என்ன பயன்? தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் ஓரளவு உயர்ந்துள்ளது. ஆனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் உயரவில்லை என்றார்.

புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பேசும்போது, புதுச்சேரியில் 1000 ஆண்களுக்கு 1001 பெண்கள் உள்ளனர். பெண்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரியில் பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் நிறுவனங்களை நிறுவினால் 25 சதவீதம் மானியம் அளிக்கிறோம். தலித் பெண்களின் முன்னேற்றத்துக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம் என்றார்.

சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி பேசும்போது, பெண்கள் கருவுறும் நாளில் இருந்து இறக்கும் வரை அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு நாளாக அறிவிக்க உள்ளோம். அந்த நாளில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம் என்றார்.

இக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், எம்எல்ஏ ஆர்.விசுவநாதன், புதுச்சேரி சமூக நல வாரியத் தலைவி ழான் பூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“பொறுப்பும் செயல்திறனும் கொண்ட தன்னார்வ அமைப்புகளை அரசு தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் பெண் குழந்தை பிறப்பை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். கிராமப் புறங்களில் தன்னார்வ அமைப்புகள் மூலம் பெண் சிசுக்கள் கொல்லப்படுவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிறந்தது முதல் பெண் குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டம் இயற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் கல்வியுடன் இணைந்த வாழ்க்கை கல்வியை பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியே 8-ம் வகுப்பு முதல் கற்றுத்தர வேண்டும்’ உள்ளிட்ட கருத்துக்கள் இக் கருத்தரங்கில் பரிந்துரைக்கப்பட்டன.

———————————————————————————————————————————————————–

ஆடாமல் நிற்குமா அரசுத் தொட்டில்?

எஸ். ஜெய்சங்கர்

உள்ளாட்சி முதல் உலக அளவில், பல நிலைகளில் பெண்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் எனப் பல துறைகளில் காலடி எடுத்து வைத்துள்ளனர். வர்த்தக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளனர். பாரத நாட்டின் முதல் குடிமகள் முதல் நாட்டின் பல்வேறு பொறுப்புகளைப் பெண்கள் வகித்து வருகின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்றாலும், பாரதியின் கனவை நனவாக்க, விண்கலமேறி விண்வெளிக்குப் புறப்பட்ட கல்பனா சாவ்லா, திரும்பி வரும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், காற்றோடு கலந்தார். அவரது வரிசையில் சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்பத்தையும் தாண்டி வெற்றி பெற்றார். இந்திய நாடே அவரைப் போற்றுகிறது. இது பெண்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் செய்தி.

அண்டவெளியில், காற்றில்லா இடத்தில், காலடி எடுத்து வைத்து, நடைபழகிய பெண்கள் நம் பாரதப் பெண்கள் என எண்ணி மகிழ்ந்தாலும், தாயின் கருப்பை எனும் இருண்ட பிரதேசத்தில் தோன்றி, வெளிச்சத்தைப் பார்த்தும், பார்க்காமலும் கருகிய மொட்டுகள் நம் தமிழகத்தில் ஏராளம்.

மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில், 1999 ஆம் ஆண்டு 657 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டன. 2000 ஆம் ஆண்டு 439 பெண் சிசுக்கள் உயிரிழக்க நேரிட்டது. மற்ற மாவட்டங்களிலும் இச்சம்பவங்கள் நிகழ்ந்தன.

தமிழகத்தின் ஆண் -பெண் குழந்தைகளின் விகிதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாறுதல், பெண் சிசுக்கொலை ஆகியவை தமிழக அரசை கவலையடையச் செய்தது.

இதன் விளைவாக, 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டம், முழுவீச்சில் 2001 ஆம் ஆண்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. திட்டம் தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகும், தருமபுரியில் 2001 ஆம் ஆண்டு 178 பெண் சிசுக் கொலைகள் நடந்துள்ளன எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பெண் சிசுவைக் கொல்வோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதை அறிந்த பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து, விரும்பாத பெண் சிசுக்களை அரசுத் தொட்டிலில் போட்டுச் சென்றுவிட்டனர். அக்குழந்தைகளைப் பராமரிக்கும் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம், விரும்புவோருக்குத் தத்து கொடுக்கிறது.

மேலும், 2-வது பிரசவத்தைக் கண்காணிப்பது, பெண் குழந்தை பிறந்தால் பெற்றோருக்குக் கவுன்சலிங் தந்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்கு அறிவுறுத்துவது போன்றவற்றால் பெண் சிசுக்கொலைகள் படிப்படியாகக் குறைந்தன.

பெண் சிசுக்கொலை குறைந்தாலும், தொட்டிலுக்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அண்மையில் 1000-மாவது தொட்டில் குழந்தையைப் பெற்றுள்ளது தருமபுரி அரசுத் தொட்டில் குழந்தைகள் மையம். இதில் சுமார் 120 குழந்தைகள் மட்டுமே ஆண் சிசுக்கள். ஆண் சிசுக்கள் தொட்டிலுக்கு வந்ததற்கும் சமுதாயச் சீர்கேடே காரணம்; தவறான உறவால் பிறந்த குழந்தைகளை வெளிக்காட்ட முடியாமல், அவை தொட்டிலில் போடப்பட்டன.

பெண் குழந்தை விஷயத்தில், அவர்களைப் படிக்க வைத்து, வரதட்சிணை, நகை எனச் செலவு செய்து திருமணம் செய்து வைக்க வேண்டும்; ஆண் குழந்தையாக இருந்தால், மாற்றான் வீட்டுப் பெண் மூலம் குடும்பத்துக்கு வரவு என வரவு- செலவு கணக்கு பார்க்கும் எண்ணம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களிடமும், கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகம். அதனால், பெண் குழந்தை என்றால் வளர்ப்பது கடினம் என்ற சலிப்பு. தொட்டில் குழந்தைகள் மையம் தொடங்கப்பட்டு, தருமபுரியில் மட்டுமே 1000 குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறோம் எனும் தகவல் பெண்ணினத்துக்குப் பெருமை அளிப்பதாக இல்லை. காரணம், பெண் சிசுவைக் கொன்றால் சிறைத்தண்டனை உறுதி என்ற பயம் மட்டுமே, சிசுக்கொலைகளைக் குறைத்து, அவற்றை அரசுத் தொட்டிலில் போடச் செய்திருக்கிறது.

சிசுக்கொலைகளைத் தடுக்கவும்; பெண் குழந்தைகளைத் தத்து பெறவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் முதல்கட்ட நடவடிக்கைகளே. பெண் குழந்தைகளைத் தத்து பெறுவதோடு தனது கடமை முடிந்தது என அரசு ஒதுங்கிக்கொள்ளாமல், அரசுத் தொட்டிலுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான, ஆக்கபூர்வ முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான அடுத்தகட்ட திட்டங்கள் தேவை.

மேலும், பெண் குழந்தைகளை அரசுத் தொட்டிலில் போடுவதைத் தவிர்க்கும் எண்ணம் பெற்றோருக்கு வர வேண்டும். இதற்கு, சமூக, பொருளாதார மாற்றம் மிக அவசியம். பொருளாதார வசதி கொண்ட எவரும் தங்களது பெண் சிசுக்களைக் கொல்வதும், அரசுத் தொட்டிலில் போடுவதும் கிடையாது. வருவாயற்ற ஏழைகளே பெரும்பாலும் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.

அரசின் முயற்சியாலும், பொதுமக்களிடையே ஏற்படும் மன மாற்றத்தாலும், “அரசுத் தொட்டிலுக்கு பெண் சிசுக்கள் வருவது நின்று 1000 நாள்களாகின்றன’ என்ற அறிவிப்பு வெளியாகுமானால், அது நிச்சயமாக பெண் சமுதாயத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கும்.

Posted in Abortion, Analysis, Backgrounders, Birth, Census, Child, Childbirth, Children, Conservative, Culture, Disease, Equal, Female, Feminism, Gender, Growth, Health, Infanticide, Insights, Kids, Law, Liberal, male, Malnutrition, Needy, Op-Ed, Opportunities, Opportunity, Order, parents, Poor, Population, ratio, Rich, rights, Sex, solutions, State, Stats, Statz, Values, Wealthy | Leave a Comment »

Health Education – Teaching about adulthood, sex & biology to Students

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

அலசல்: பட்டாம்பூச்சிகளின் மேல் கல்லை வைக்கலாமா?

ரவிக்குமார்

பாரம்பரியத்திலும் கலாசாரப் பெருமையிலும் ஊறிய இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5.7 மில்லியன் என அலறுகிறது ஒரு புள்ளிவிவரம்.

பெண் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான இந்திய அமைப்பு இந்தியாவில் 53 சதவிதம் குழந்தைகள் பால் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தியாவையே கலக்கியது ஒரு மல்ட்டி மீடியா மெசேஜ் (எம்.எம்.எஸ்). எட்டாவது படிக்கும் மாணவன் அவனுடைய சக மாணவியிடம் நடத்தியிருக்கும் பால் ரீதியான குறும்புகளை அவனே செல்போனில் படம் எடுத்த காட்சிகள்தான் அவை.

மேற்சொன்ன கொடுமைகளிலிருந்து எதிர்கால இந்தியாவின் இளைய தலைமுறையைக் காப்பாற்றுவதற்கு என்ன வழி? என்று யோசித்த அரசாங்கம், இந்த ஆண்டு முதல் யுனிசெஃப் அமைப்பால் வடிவமைக்கப்பட்ட (ஏ.இ.பி.) வளர்இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தக் கல்வித் திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக விஷயங்களைப் பற்றி சிலரிடம் கேட்டோம்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம், பால் ரீதியான விழிப்புணர்வை வழங்கி வரும் சென்னையைச் சேர்ந்த “துளிர்’ அமைப்பின் இயக்குனர் வித்யா ரெட்டி, “”வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை அவர்களிடம் ஆலோசிக்காமல் வடிவமைக்கக் கூடாது. இன்னொரு விஷயம், இந்தக் கல்வித் திட்டத்தை குழந்தைகளின் பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், உளவியல் அறிஞர்கள் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் கல்வித் திட்டத்தைச் சாதாரணமாக மற்ற வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது பத்தோடு, பதினோராவது வகுப்பாக முடிந்துவிடும்.” என்றார்.

“”நமக்கென்று ஒரு கலாசாரப் பின்னணி இருக்கிறது. அதன் அஸ்திவாரத்தையே ஆடவைக்கும் பல வேலைகளில் ஒன்றாகத்தான் இதையும் பார்க்கிறேன். வளர் இளம் பருவத்தினருக்கான இந்தக் கல்வித் திட்டத்தை பெற்றோர்களின் வழிகாட்டுதலோடுதான் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகத்தான் போய் முடியும். முதலில் பெரியவர்களுக்கே பால் ரீதியான கல்வியில் பெரியதாகத் தெளிவு இல்லாதபோது, குழந்தைகளுக்கு அது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” என்றார் சுயம் அறக்கட்டளையின் தாளாளரான உமா.

“”இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி ஒருசில வீடுகளில் தான் இருக்கும். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. குடிதண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படும் கிராமங்களில் கூட வீட்டுக்கு வீடு பெரும்பாலும் டிவி இருக்கிறது. கூடவே கேபிள் கனெக்ஷனும். நாளுக்கு நாள் மீடியாவில் விதவிதமான திரைப்பாடல்கள் எந்தவிதமான சென்சாரும் இல்லாமல் அரைகுறை ஆடைகளுடன் அப்படியே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோதாததற்கு செல்போன், இன்டர்நெட்… என்று எத்தனையோ தகவல் தொடர்புச் சாதனங்கள். அதைப் பயன்படுத்தி எந்த மாதிரியான தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை. மீடியா இன்றைக்கு எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் தற்போதுள்ள சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்கள் படிக்கும் முறை, மிகவும் தாராளமாக அவர்களிடம் புழங்கும் செல்போன்கள் எல்லாமே அடுத்தகட்டத்துக்கு அவர்களை மிக அவசரமாகத் தூண்டுபவையாக இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு வளர் இளம் பருவத்தினருக்கான பால்ரீதியான விழிப்புணர்வுக் கல்வி அவசியம் என்றுதான் நினைக்கிறேன். இந்த பருவத்தின் வாயிலில் இருப்பவர்களுக்குத்தான் நிறைய குழப்பங்கள் இருக்கும். பால் ரீதியான அவர்களின் குழப்பங்களுக்குச் சரியான விளக்கங்களை அவர்களுக்கு பெற்றோர்களும் விளக்குவதற்கு முன்வரமாட்டார்கள். பருவ வயதை அடையும் பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாறுபாடுகளை “இது இயல்பான ஒன்றுதான்’ என்று பெண்ணுக்கு எடுத்துச் சொல்வதற்கு யோசிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? பெண்களுக்கு இப்படி என்றால், ஆண் பிள்ளைகளுக்கும் உடலில் இயல்பான மாற்றங்கள் நடக்கும். இந்தச் சமயத்தில் பெற்றோர்களின் அனுசரனை இல்லாதபோது,

அவர்களுக்கு கேட்காமலேயே கிடைப்பது சக நண்பர்களிடம் கிடைக்கும் ஆலோசனைகள்தான். அவை பெரும்பாலும் தவறான அறிவுரைகளாகவே இருக்கும். முதலில் அவர்களின் உடலை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நல்லவிதமான தொடுதல் என்பவை எது, கெட்டவிதமான தொடுதல் என்பவை எவை என்ற புரிதல்கள் எல்லாம்,இந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் அறிவுறுத்தப்படவேண்டும். கலாசாரம், பாரம்பரியம் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு இந்த விஷயத்தை அணுகாமல், அடுத்த தலைமுறைக்கு இன்றைய சமூகத்தில் இருக்கும் ஆபத்துகளை எதார்த்தமான முறையில் நாம் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார் உளவியல்பூர்வமான ஆலோசனைகளை கிராமத்தில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்துவரும் சி.ஆர். செலின்.

“”ஸ்டேட்-போர்டு, மெட்ரிகுலேஷன் போர்ட் என எல்லா வகையான கல்வி அமைப்பிலும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை வழங்குவதில் தவறில்லை. இதனால் எண்ணற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பெரிதும் பயன் விளையும். பொதுவாக மேல்தட்டு மக்கள் பெருவாரியாகப் படிக்கும் பள்ளிகளில், வளர் இளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கு “கவுன்சலிங்’ கொடுப்பதற்கென்றே தனியாக வசதி செய்திருப்பார்கள். வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை தகுந்த அறிதலுடன் அறிவியல் பூர்வமான புரிதல்களுடன் கற்றுக்கொடுப்பதற்கு ஆசிரியர்கள் ஆத்மார்த்தமான பங்களிப்பை அளிக்கவேண்டும். அதேநேரத்தில் எல்லா பள்ளிகளிலும் நிச்சயமாக “புகார் பெட்டி’ வைக்கப்படவேண்டும். அவை மாவட்ட கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். கல்வித் துறையில் ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே இதை வலியுறுத்துகிறோம்.” என்றார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்வா.

“”பட்டாம்பூச்சியின் மேல் கல்லை வைப்பது போன்ற செயல்தான் இது. நாகரிகத்தில் நம்மை விட முன்னேறிய நிலையில் இருக்கும் மகாராஷ்டிரம் மாநிலத்திலேயே இந்தச் செக்ஸ் கல்விக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு, அன்னிய நாடுகளின் இத்தகைய கல்வி முறைகள் தேவையே இல்லை. நம் வீடுகளிலேயே நாம் காலம்காலமாக கடைப்பிடிக்கும் ஒழுக்கமுறைகள் அப்படியேதான் இருக்கின்றன. இத்தகைய செக்ஸ் எஜுகேஷன்களால் தேவையில்லாத சந்தேகங்கள்தான் மாணவர்களிடேயே ஏற்படும். அப்படி பால் ரீதியான சந்தேகத்தை செக்ஸ் எஜுகேஷன் தெளிவுபடுத்துவதாகவே இருக்கட்டும். ஆறாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாத தெளிவுதானே? குழந்தைகள் பால் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகும் கொடுமையைக் காரணம் காட்டி செக்ஸ் எஜுகேஷனை ஆதரிக்க முடியாது. வெளிநாடுகளில் கூட இத்தகைய செக்ஸ் எஜுகேஷன் எதிர்மறையான விளைவுகளையே அளித்திருக்கிறது. இந்த கல்வித் திட்டத்துக்குப் பின், முறைகேடான பால் உறவுக்குப் பின் காலை வேளையில் கர்ப்பத் தடைக்காக தயாரிக்கப்பட்ட மாத்திரைகளின் விற்பனையும், அதையும் தாண்டி இளம் குழந்தைத் தாய்மார்களின் எண்ணிக்கையும்தான் செக்ஸ் எஜுகேஷனால் வெளிநாட்டிற்கு கிடைத்த பரிசு என்பது “ரெட் அலர்ட்’ என்னும் புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கே பதினெட்டு வயது ஆனவுடன்தான் அனாடமி வகுப்புகள் நடக்கின்றன. ஆறாம் வகுப்பிலேயே இதைத் தெரிந்து கொள்ளட்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?” என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை செüந்தரராசன்.

“”அடலசன்ட் எஜுகேஷன் புரோக்ராம் என்பது செக்ஸ் எஜுகேஷன் அல்ல என்பதை சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இன்னமும் இதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்படவில்லை. இந்த ஆண்டே பள்ளிகளில் இந்தத் திட்டத்தை தொடங்குவார்களா என்றும் தெரியாது. அதற்குள் இவ்வளவு எதிர்ப்புகள்.” என்றார் டி.ஏ.வி. பள்ளியின் முதல்வரான டாக்டர் சதீஷ்.

– எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் சாதகமான விஷயங்களும் பாதகமான விஷயங்களும் நிச்சயம் இருக்கும். அதிலிருக்கும் குறைகளைப் போக்கிவிட்டால் எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் திட்டங்கள்தான்.

Posted in A, abuse, adult, adulthood, Adults, AIDS, Awareness, Biology, Boy, Brain, Censor, Chat, Children, Cinema, Computer, Condom, Controversy, Culture, Development, discussion, Education, Exposure, Female, Formal, Gentleman, Girl, Glamour, Health, HIV, Imagination, Insights, Intercourse, Interview, Issue, Kid, Kiss, Lady, Love, Lust, male, masturbate, masturbating, Mature, Media, menstruation, MMS, Movies, NC-17, Opinions, Period, PG, Physchology, PMS, Private, Rape, Rating, Sex, SMS, solutions, Students, Suggestions, Tamil, Teachers, Teen, Teenage, Textbooks, Thamizh, TV, UNICEF, Violence, VT, Vulgar, WHO | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to increase Sperm Count

Posted by Snapjudge மேல் மே 23, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடற்சூட்டால் வரும் கேடு!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, சரத்பேட்டை- 602 103.

எனக்கு வயது 35. மனைவிக்கு வயது 22. மூன்று வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. எங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் புண்ணியம் இல்லை. எனக்கு விந்தணுக்கள் குறைவாக உள்ளது. சிறு குழந்தைகளைக் கண்டால் கண்களில் நீர் நிறைந்து விடுகிறது. ஏக்கமும் அழுகையும் கட்டுப்படுத்த முடியவில்லை. என் மனைவிக்கும் மாதவிலக்கு நாட்கள் அதிகமாக இருப்பதால், அவளுடைய உடல் நலம் தேறவும், என் உடல் நிலை கோளாறையும் சரி செய்ய என்ன வழி?

எஸ்.ராஜேஷ், மதுரை.

ஆண்கள் பலருக்கும் விந்தணு குறைபாடு இன்று அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு எனும் பூமியின் வெப்பம் அதிகரித்திருப்பதை ஒரு காரணமாகக் கூறுகின்றனர். மனிதனின் தனிப்பட்ட செயல்களாலும் உடற் சூடு அதிகரிக்கக் கூடும். புகைப் பழக்கம், மதுபானம் அருந்துதல், நிதானமற்ற பதட்டமான சூழ்நிலையில் அலுவல் வேலை, சிறு விஷயங்களுக்குக் கூட வீட்டில் கடும் கோபம் கொள்ளுதல், உணவில் அதிகம் காரம், புளி, உப்பு, காரம்மசாலா சேர்த்தல், ஆவக்காய், மாங்காய் ஊறுகாய் அதிகமாகச் சாப்பிடுதல், இரவில் அதிக நேரம் கண் விழித்தல், குழந்தை வேண்டுமே என்ற ஏக்கத்தில் அதிகமான தாம்பத்ய உறவு, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருத்தல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பேதி மருந்து சாப்பிடாதிருத்தல் என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாம் உண்ணும் உணவு அனைத்தும் ஏழு தாதுக்களால் ஜீரணம் செய்யப்படுகின்றன. உணவின் சாரத்தை முதலில் பெறும் ரஸதாது தனக்கு வேண்டிய சாரத்தைப் பெற்று, கபத்தைக் கழிவாக வெளியேற்றுகிறது. அடுத்த சாரத்தை ரத்தம் ஜீரணம் செய்து தன் பகுதியைப் பெற்றுக்கொண்டு, பித்தத்தைக் கழிவாக வெளியேற்றுகிறது. மாமிசம் உணவின் சாரத்தை உறிஞ்சி, உடலின் உட்புற துவாரங்களில் கழிவைச் சேர்க்கிறது. மேதஸ் எனும் தாது தன் பங்காகிய உணவின் சாரத்தை உறிஞ்சி, வியர்வையைக் கழிவாக வெளியேற்றுகிறது. எலும்பு, உணவின் போஷகாம்சத்தைப் பெற்று நகம், தலைமுடி ஆகியவற்றைக் கழிவாகவும், மஜ்ஜை உணவுச் சத்தை உறிஞ்சி, தோல், கண் பகுதியில் எண்ணெய்ப் பசையைக் கழிவாகவும், இறுதியாக விந்து, உணவின் சாரத்தைப் பெற்று “ஓஜஸ்’ எனும் உடலின் சாராம்சத்தையும் ஏற்படுத்துகிறது. உண்ணும் உணவின் மிகவும் சூட்சமமான சாரத்தைப் பெறும் விந்து, அணுக்களை உற்பத்தி செய்வதில் முழுவதுமாக உணவை நம்பித்தான் இருக்கிறது. நிலம் மற்றும் நீரின் அம்சம் அதிகம் கொண்ட இனிப்புச் சுவை விந்தணுக்களின் உற்பத்திக்கு அதிக அளவில் உதவி செய்கிறது. அதிரஸம், பாயசம், சர்க்கரை கலந்த பாலுடன் உளுந்துக் கஞ்சி, உளுந்து வடை (பசு நெய்யில் பொரித்தது), சர்க்கரைப் பொங்கல் போன்றவை விந்தணுக்களை அதிகப்படுத்துபவை. கீழ்காணும் மூலிகை மருந்துகளை நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கி நன்றாக அரைக்கவும்.

அமுக்கராக் கிழங்கு, பூனைக் காலி விதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, பால் முதுக்கன் கிழங்கு, நெரிஞ்சில் விதை, அதிமதுரம், பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரப் பருப்பு.

மேற்கண்ட பருப்புகளையெல்லாம் வகைக்கு 100 கிராம். அரைத்ததை துணியால் சலித்து, கண்ணாடி பாட்டிலில் காற்று புகாதபடி மூடிவைக்கவும். 5 கிராம் சூரணத்தில் 10 மிலி பசு நெய்யும் (உருக்கி), 5 மிலி தேனும் குழைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடவும். விந்தணுக் குறைபாட்டை இம்மருந்து தீர்க்கக் கூடும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடவும்.

உங்கள் மனைவியின் மாதவிலக்கு நாட்கள் அதிகம் ஏற்படுவதற்கான காரணத்தை அறிவது நலம். இருப்பினும் பொதுவாக புஷ்யானுகம் சூரணம் சாப்பிட நல்லது. 5 கிராம் சூரணம் 1 1/2 ஸ்பூன் (7.5 மிலி) சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர், 1/2 ஸ்பூன் தேன் குழைத்து காலையில், மாலையில் உணவிற்கு 1 மணிநேரம் முன்பாகச் சாப்பிடலாம். சதாவரீகுலம், அசோகாரிஷ்டம், பலசர்ப்பிஸ், குமார்யாஸவம் போன்ற மருந்துகள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு கருப்பையின் வலுவை அதிகப்படுத்தலாம்.

Posted in Alternate, Ayurvedha, Birth, Child, conceive, conceiving, conception, Count, couple, couples, Expect, Female, fertile, fertility, Gene, Health, Help, male, Medicines, Natural, Parent, Pregnancy, Pregnant, Sex, Sperm, Suggestions, Swaminathan, Therapy | Leave a Comment »

Pakistan ‘same-sex’ couple jailed

Posted by Snapjudge மேல் மே 22, 2007

பாகிஸ்தான் திருமணம் ஒன்றில் சர்ச்சை

பிரச்சினையை எதிர்நோக்கும் தம்பதிகள்
பிரச்சினையை எதிர்நோக்கும் தம்பதிகள்

பாகிஸ்தானில் திருமணம் செய்து கொண்ட இருவரில், கணவனாகக் கருதப்பட்டவர் உண்மையில் ஒரு பெண் என்று தீர்ப்பளித்த லாகூர் நீதிமன்றம் ஒன்று, அந்த இருவரையும் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.

கணவர் என்று சொல்லிக் கொள்பவரது பாலின மாற்று அறுவை சிகிச்சை சரியாக, முறையாக நடக்காத நிலையில், இந்த இருவரும், அவரது பாலினத்தைப் பற்றி பொய் சொல்லிவிட்டார்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மணப்பெண்ணின் தந்தை, இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொள்வது என்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என்ற காரணத்தால், தனது மகளின் திருமணம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கோருகிறார்.

Posted in couple, Female, Gender, GLBT, Husband, Identity, Islam, Law, legal, Lesbian, male, Marriage, Muslim, Nikkah, Operation, Order, Pakistan, Relation, Relationship, same-sex, Sex, sex-change, Spouse, surgery, Transgender, Wedding, Wife | 1 Comment »

Panikkudam – Tamil Magazine Details

Posted by Snapjudge மேல் மே 3, 2007

Thozhi.com

பெண்ணியச் சிந்தனைகளையும் பெண் எழுத்தையும் கலந்து தருகிறது பனிக்குடம் இதழ்

– இளமதி

எண்ணற்ற நாளிதழ்களும் வார, மாத இதழ்களும் வாசிப்புத் தளத்திற்கும் அறிவுத் தளத்திற்கும் வளம் சேர்க்கும் விதமாய்த் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. கலைச் சேவை செய்யப் பிறந்த பத்திரிகைகள்கூட வியாபார ரீதியாக வெற்றி பெறப் பரபரப்பைத் தேடித் தேடி எழுதிக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய வியாபாரமும் பரபரப்பும் ஒரு புறம். மறுபுறம் உலக இலக்கியத்தைத் தமிழ் மக்களின் இலக்கிய அறிவுக்கு எட்டச் செய்வதற்காகவே தொடங்கப்பட்டு இரண்டு, மூன்று இதழ்களோடு நின்றுபோகும் சிறுபத்திரிகைகள். இவற்றில் சில பத்திரிகைகள் மட்டுமே வியாபாரமயமாகிப்போன இந்தப் பத்திரிகை உலகில் தமது இருப்பை நிலைநிறுத்திக்கொண்டிருக்கின்றன. சில பத்திரிகைகள் படைப்புலகில் நிலைபெறத் தமது நோக்கங்களையும் லட்சியங்களையும் சமரசம் செய்துகொண்டு தொடர்ந்து வெளிவருகின்றன

சிறுபத்திரிகைத் தளத்தில் புதிதாகச் செயல்படும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனென்றால், தனக்கு முன்பாக வந்து நின்றுபோன இதழ்களின் வெற்றியும் தோல்வியும் எந்தத் தயக்கத்தையும் இந்தப் பத்திரிகைக்கு ஏற்படுத்தவில்லை.

இன்றைய சிற்றிதழ்களின் வரிசையில் பனிக்குடம் என்ற காலாண்டிதழ் குறிப்பிடப்பட வேண்டியது. பனிக்குடத்தின் ஆசிரியர், கவிஞர் குட்டி ரேவதி. இது வரை ஆறு இதழ்கள் வெளிவந்திருக்கின்றன.

“பெண் எழுத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வடிவங்களைப் பதிப்பிக்கும் முயற்சி”யைப் பனிக்குடம் தொடர்வதாகக் கூறுகிறது இந்த இதழின் ஆசிரியர் குறிப்பு.

பெண் வெளி, பெண்ணியம், பண்போவியம், நேர்காணல், உரையாடல், நூல் அறிமுகம், மதிப்புரை, கவிதை, சிறுகதை, இதழியல் பார்வை, புகைப்படம், ஓவியக் கலைஞர்களின் அறிமுகம் என்று பல்வேறு பகுதிகள் இந்த இதழில் இடம்பெற்றிருக்கின்றன.

புகைப்படம், ஓவியம் என்ற இரண்டு துறைகளிலும் உள்ள பெண் கலைஞர்களைப் பற்றிய அறிமுகப் பக்கம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. இது மேலைநாட்டுக் கலைஞர்களைப் பற்றிய அறிமுகமாக இருக்கிறது. அம்பை, மகாஸ்வேதாதேவி போன்றவர்களுடைய நேர்காணல்களும் குறிப்பிடத்தக்கவை.

இது வரை வந்த இதழ்களில்

  • அம்பை,
  • கமலா தாஸ்,
  • வ. கீதா,
  • க்ருஷாங்கினி,
  • பூரணி,
  • பாமா,
  • சிவகாமி,
  • பிரசன்னா ராமசாமி,
  • கனிமொழி,
  • வெண்ணிலா,
  • சல்மா,
  • உமா மகேஸ்வரி,
  • சுகிர்தராணி,
  • தமிழச்சி,
  • தமிழ்ச் செல்வி,
  • புதிய மாதவி,
  • காயத்திரி காமஸ்,
  • சி.பி. கிருஷ்ணப்பிரியா,
  • குட்டி ரேவதி போன்ற குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் பங்களித்திருக்கிறார்கள்.

நல்ல நவீன கவிதைகளின் பொருட்செறிவைக் கொண்ட நவீன ஓவியங்களைத் தாங்கிய பனிக்குடத்தின் முன் அட்டைகள் மீண்டும் கவனிக்க வைப்பவை.

பெண் எழுத்தைத் தனது இயக்கக் களமாகக் கொண்டு வெளிவரும் பனிக்குடம் இதழில், ‘இதழியல் பார்வை’ என்னும் பகுதி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் இதழியல் துறையில் (குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிக்கைகளில்) பங்களித்த பெண் ஆளுமைகள் குறித்த அரிய தகவல்களைத் தருகிறது. நேர்காணல்கள் இடம்பெறும் ‘பண்பாளுமை’ பகுதியில் பெண் படைப்பாளிகள் மற்றும் ஆளுமைகளின் விரிவான வெளிப்பாட்டைக் காண முடிகிறது.

‘பெண்வெளி’ என்ற பகுதியில் சிறப்பான விவாதங்கள், ஆரோக்கியமான உரையாடல்கள் தரப்பட்டிருக்கின்றன. பனிக்குடத்தில் இடம்பெறும் மொழிபெயர்ப்புகளைக் கொண்டு, இந்தப் பத்திரிகை தமிழ்ப் பெண் எழுத்துக்கான வெளியைக் கடந்து பிற மொழி எழுத்துக்குமான வெளியாகவும் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பெண் இலக்கிய உலகிற்குப் பனிக்குடம் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறது.

பனிக்குடம்
பனிக்குடம் பதிப்பகம்,
பெண்ணிலக்கிய வெளியீட்டாளர்,
137 (54), இரண்டாம் தளம்,
ஜானி ஜான் கான் சாலை,
சென்னை – 14.
விலை: ரூ. 10

Posted in Female, Feminism, Feminist, Journal, Lady, magazine, male, Panikkudam, Panikudam, Read, Tamil, Women, Zine | Leave a Comment »

Sri Lanka to ban thinly clad models from Ads

Posted by Snapjudge மேல் மார்ச் 15, 2007

விளம்பரங்களில் நிர்வாணத்திற்கு இலங்கை அரசு தடை

மாடல் அழகி ஒருவர்
மாடல் அழகி ஒருவர்

இலங்கையில் விளம்பரங்களின் போது ஆபாசமாக, அதாவது நிர்வாண, அரைநிர்வாண பெண்ணையோ அல்லது ஆண்களையோ பயன்படுத்தப்படுவதற்கு எதிராக இலங்கை அரசு தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பு கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் பத்திரிகைகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆபாச விளம்பரங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களிற்காகவே அரசு இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள கலாச்சார அமைச்சு பொது விளம்பரங்களின் போது நிர்வாண அல்லது அரைநிர்வாணக் கோலத்தில் மாடல் அழகிகள்/இளைஞர்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Posted in 1984, Ad, Ads, Advertisement, Agency, Ban, Billboards, Cloth, Clothes, Clothless, Culture, Female, Force, Immoral, Judgmental, Law, male, Model, Moral, Nude, Order, Policing, Pose, Publishers, Seminude, Sexy, Sri lanka, Srilanka, Values | Leave a Comment »

Kalki & Nellai Su Muthu – Women’s Day Special

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007

பெண் தெய்வங்கள் இருக்கும் திக்கு நோக்கி, பயபக்தியுடன் தண்டம் சமர்ப்பிக்கும் அடியார்களில் அடியேனும் ஒருவனாகிச் சிறிது
காலமாயிற்று.

என்னைப் பொருத்த அளவில், உலகில் சாதாரண ஸ்திரீகள் யாருமே
கிடையாது. எல்லாரும் மாதரசிகள், பெண்மணிகள், ஸ்திரீ ரத்தினங்கள், பெண் தெய்வங்கள், இன்ப விளக்குகள், இளங்குயில்கள், பொன்
மயில்கள்தான். உலகம் இத்தகைய ஆனந்தக் காட்சியாக அடியேனுக்குத் தோற்றம் அளிப்பதற்கு முக்கியக் காரண புருஷர்கள் கவி சுப்பிரமணிய பாரதியும், திரு.வி.கலியாண சுந்தர முதலியாருமேயாவர். படிக்கப் படிக்க, மிகவும் சாதாரண ஸ்தீரிகளெல்லாம் என் கண்முன்னே தெய்வ மகளிராகக் காட்சி தரலாயினர்.

ஆரம்பத்தில், மேற்கூறிய பெரியார்களுடனே நான் முற்றும் மாறுபட்ட குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.

‘‘நல்ல
காதல் புரியும் அரம்பையர்
போலிளம்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு’’

எனும் பாரதியார் பாட்டின் அடிகளை முதன்முதலில் நான் கேட்டபோது, இதைப் போன்ற வெள்ளைப் புளுகு அல்லது பச்சைப் பொய் – உலகில் வேறொன்றும் கிடையாது என்று எண்ணினேன். தற்கால தமிழ்நாட்டின் இளங்கன்னியர் அரம்பைகளல்லர் என்பது சர்வ நிச்சயம். அவர்கள் காதல் புரிவதில்லையென்று கோயிலில்
விளக்கு வைத்து அணைப்பேன்.
தமிழ்நாடு மற்ற எத்தனையோ
துறைகளில் மேன்மை பெற்றிருக்கலாம். ஆனால், பெண்களின் அழகுக்கு நமது நாடு பெயர் போனதல்ல. இச் சிறப்பை கேரளம், சிந்து, காஷ்மீரம் போன்ற நாடுகளுக்குக் கொடுத்து விடத் தான் வேண்டும். மேலும், இந் நாளில் நமது பெண்களுக்குக் கன்னிப் பருவத்தில் காதல் புரியும் சந்தர்ப்பம்தான் ஏது? ‘பாரதியார் ஏன் இவ்வளவு பச்சைப் பொய் சொல்கின்றார்?’ என்று இவ்வாறு சிந்திக்கலானேன்.

ஸ்திரீகளைப் ‘‘பெண்மணிகள்’’ என்றும், ‘‘பெண் தெய்வங்கள்’’ என்றும் ‘‘மாதரசிகள்’’ என்றும் திரு.வி.க. முதலியோர் புதுத் தமிழில்
சொல்கின்றார்கள் என்னும் சந்தேகமும் முதலில் எனக்கிருந்தது.
ஆண்களைப் பற்றிச் சொல்லுங்கால், ‘‘ஆடவ தெய்வங்கள்’’ என்றாவது, ‘‘ஆண்மணிகள்’’ என்றாவது, ‘‘ஆணரசர்கள்’’ என்றாவது சாதாரணமாகச் சொல்கிறோமா? கிடையாது. பழைய நூல்களிலே ‘‘புருஷ வியாக்ரம்’’, ‘‘ஆண் சிங்கம்’’, ‘‘இளங்காளை’’ போன்ற சொற்றொடர்கள் வருவது உண்மை. ஆனால் ஆண்மகனுக்கு இவையெல்லாம் சிறப்பா, இழிவா என்பதே ஐயத்துக்கிடமானது. அறிவுக்கே சிறப்பு மிகுந்த இந்நாளில் யாரையாவது பார்த்து ‘‘அடே ஆண் புலியே! ஏ இளம் மாடே!’’ என்று அழைப்போமாயின் அவன் உண்மையிலேயே புலியின் குணமும், மாட்டின் குணமும் பெற்று அறையவோ, முட்டவோ வந்தால்
ஆச்சரியப்படுவதற்கில்லை. நல்ல வேளையாக, இவ்வழியில்
ஆண்களைச் சிறப்பிப்போர் இந் நாளில் யாரும் கிடையாது.

பாரத நாட்டில் நான் அறிந்த வரையில் புருஷர்களுக்குள்ளே
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒருவர்தான் ‘‘தேவர்’’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளார். ஆனால் ஸ்திரீகளிலென்றால், எல்லாரும் கமலாதேவி, விமலாதேவி, லக்ஷ்மிதேவி, பார்வதி தேவி, ருக்மணி தேவி, சகுந்தலா தேவிதான். ஏன்?

பெண் தெய்வங்காள்! மன்னியுங்கள். இந்தச் சந்தேகங்களெல்லாம்
பின்னால் எனக்குப் பூரணமாய் நிவர்த்தியாகிவிட்டனவென்று
தெரிவித்துக் கொள்கிறேன். எப்படியிருந்தாலும் தமிழ்நாடு நமது நாடு. தமிழ்நாட்டுப் பெண்கள் நமது சகோதரிகள். எனவே, பாரதியார்
பாடியதில் தவறு என்ன? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? ‘‘மணி’’ என்றால் பொன் மணியாய்த்தான் இருக்க வேண்டுமா? கருமணி அல்லது நீலமணியாகவும் இருக்கலாமன்றோ? பார்க்கப் போனால், ரூப சௌந்தரியத்தில் என்ன இருக்கிறது? குண சௌந்தரியமன்றோ உண்மை சௌந்தரியமாகும்! கல்வியழகே யழகு! கற்பின் புகழே புகழ்! நமது இளங்கன்னியர் புரியும் காதலைப் பாடியபோது, பாரதியார் கேவலம் கீழ்த்தர நாவல்களில் காணப்பெறும் இழிவான காதலையா குறிப்பிட்டார்? இல்லை; இல்லை. தமிழ்ப் பெண்களின் காதல், இல்வாழ்க்கையோடியைந்த உயர் காதலாகும் _ என் உள்ளத்திலே பெரியதொரு புரட்சி உண்டாயிற்று. எவ்வளவு பெரிய புரட்சியெனில் வங்கத்தின் பிரபல நாடகாசிரியரான துவிஜேந்திரலால் ராய் என்பவர் ஓரிடத்திலே,

‘‘பகவானே! பெண் தெய்வங்களைப் படைத்து இவ்வுலகை இன்பமயமாக்கிய நீ, அவ்வின்பத்தைக் கெடுப்பதற்கு இந்த ஆண்
மிருகங்களை ஏன் படைத்தாய்?’’

என்று எழுதியிருந்ததைப் படித்தபோது, ‘‘உண்மை! உண்மை!’’ என்று கதறினேன்.

ஏ! ஆண் மிருகங்காள்! பெண் தெய்வங்களைப் போற்றுங்கள்.

– ‘பெண் தெய்வங்கள்’
வானதி வெளியீடு

======================================================

அறியாப் பெண்களின் அறிவியல் முகங்கள்

நெல்லை சு. முத்து

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நோபல் பரிசு பெற்ற உலகின் முதலாவது பெண் விஞ்ஞானி மேரி ஸ்கலோதோவ்ஸ்கா கியுரி (1867 – 1934). ரேடியம், பொலோனியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்தவர்.

முதன்முறையாக இரண்டு தடவை பரிசு வென்ற முதல் பெண்ணும் இவர்தான். இயற்பியலுக்கும் (1903) வேதியியலுக்கும் (1911) பரிசுகள். இத்தனைக்கும் நான்கு வயதிலேயே தாயை இழந்தவர்.

ஆனால், உலக வரலாற்றில், அறிவியல் துறையில், முதல் “முனைவர்’ பட்டம் பெற்றவரும் இவரே. பாரீஸ் பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியர். இவரது கணவர் பியரி கியுரியும் நோபல் விருது பெற்றவர். மகள் ஐரின் கூட 1935 ஆம் ஆண்டு வேதியியலில் நோபல் வென்றவர். உன்னத நோபல் குடும்பம்.

பிரெஞ்சு அறிவியல் அகாதமிக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரது போட்டியாளர் எட்வார்டு பிரான்லி என்கிற கத்தோலிக்க வேட்பாளரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். காரணம் அவர் ஒரு யூதப் பெண்மணியாம். நிறுவன அதிபர் எம். அமாபாத், “பெண்கள் பிரெஞ்சு நிறுவனத்தில் அங்கம் வகிக்கக் கூடாது’ என்றே அறிவித்தார். ஆயினும் மேரி கியுரி தன் அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்தார். நீண்டகாலமாக கதிர்வீச்சுப் பொருள்களுடன் ஆய்வு நடத்தியதால் கண்புரை, விரல் சிதைவு, ரத்தசோகை போன்ற நோய்கள் பாதித்து மரணம் அடைந்தார்.

இன்னொரு வகையில் ஆராய்ந்தால் நோபல் பரிசைப் பொருத்தமட்டில் ஆணாதிக்கம் சொல்ல வேண்டியது இல்லை. 671 முறை ஆண் விஞ்ஞானிகள். வெறும் 29 முறை மட்டுமே பெண் விஞ்ஞானிகள். இவர்களில் கூட சமாதானத்திற்காகவும், இலக்கியத்திற்காகவும் முறையே 10, 9 பெண்மணிகள் புகழ் பெற்றனர். ஏனையோரில் 5 பேர் மருத்துவம், இருவர் வேதியியல், ஒருவர் இயற்பியல், ஏற்கெனவே குறிப்பிட்ட கியுரி அம்மையார் மட்டும் இரண்டு முறை.

ஏனோ தெரியவில்லை. இன்றுவரை பொருளாதாரத் துறைக்கு நோபல் பரிசு பெறவில்லை என்பது ஒரு வினோதக் குறிப்பு.

உலக அளவிலும் பெண் விஞ்ஞானிகள் ஓரங்கட்டப்படுவது ஓர் அதிர்ச்சித் தகவல். நோபல் தகுதி கொண்டு இருந்த ராச்சேல் கார்சன் என்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர் பெண்ணை யாருக்கும் தெரியாது. அணுகுண்டு சோதனைக்குத் தடை விதிக்கப் பாடுபட்டு 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லினஸ் பாலிங் தெரியும். அவருடன் ஊர்ஊராகப் பிரசாரம் செய்த துணைவியார் அவாஹெலன் தனியே சிறப்புப் பெறவில்லை.

பிரான்சிஸ் எச்.க்ரிக், ஜேம்ஸ் டி வாட்சன், மௌரிஸ் எச். வில்கின்ஸ் ஆகியோர் கண்டு துலக்கிய டி.என்.ஏ. மரபணுவின் ஏணித் தோற்றம் மரபியலில் பிரபலம். மூவருக்கும் 1962 ஆம் ஆண்டு உடலியங்கியல் அல்லது மருத்துவம் என்கிற பிரிவின்கீழ் நோபல் பரிசு வழங்கப் பெற்றது.

ஆனால் டி.என்.ஏ. கட்டமைப்பு குறித்த எக்ஸ்கதிர் படிகவியல் நிரூபணம் வழங்கியவரை உலகம் அறியாது. உண்மையில் 1962 ஆம் ஆண்டின் நோபல் பரிசு ரோசலிண்ட் எல்சி ஃப்ராங்ளின் என்னும் பெண் விஞ்ஞானிக்கும் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் அவரும் அதற்குள் 37ஆம் வயதிலேயே புற்றுநோயால் இறந்து போனார்.

விண்வெளியில் அண்டக் கதிர்வீச்சு மற்றும் துடிப்பு விண்மீன்களைக் கண்டறிவதற்காக அந்தோனி ஹூவிஷ், மார்ட்டின் ரைல் ஆகியோருக்கு 1974 ஆம் ஆண்டு நோபல் பரிசு. அவர்களின் முன்னோடியாக முதலில் இவற்றைக் கண்டுபிடித்த மாணவி ஜோசிலைன் பெல் நிலை கேள்விக்குறிதான்.

அது மட்டுமா; 1944 ஆம் ஆண்டு அணுக்கருப் பிளவு குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கு நோபல் பரிசு வென்றவர் ஓட்டோ ஹான். அமெரிக்காவின் மன்ஹாட்டன் திட்டத்தில் அவருடன் பணியாற்றிய லீஸ் மெய்த்னர் அங்கீகாரம் பெறவே இல்லை.

நம் நாட்டிலோ நோபல் பரிசு பெற்ற இந்தியக் குடிமக்கள் நால்வர். சர் சி.வி. ராமன் (இயற்பியல், 1930), ரவீந்திரநாத் தாகூர் (இலக்கியம், 1913), அமார்த்திய சென் (பொருளாதாரம், 1998), அன்னை தெரசா (சமாதானம், 1979) ஆகியோர். அதிலும் இந்தியாவின் ஒரே ஒரு நோபல் பரிசுப் பெண் என்ற பெருமைக்கு உரியவர் துருக்கியில் பிறந்தவர். இந்தியக் குடியுரிமை பெற்றவர். இவர்கள் நால்வருக்குமே பெரும்பாலும் வங்காளம் அல்லது கோல்கத்தாதான் பணிக் களம்.

எப்படியோ, சர்வதேச அளவில் இன்னோர் உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் சார்ந்த பருவங்கள், நோய் சார்ந்த மருந்துகள், மூளை சார்ந்த எண்ணங்கள் அனைத்திலும் குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் உண்டு.

இதனாலேயே 1991 ஆம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவின் “மகளிர் உடல்நல முன்நடவடிக்கை’ என்கிற தொலைநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் ஐம்பதுக்கும் எண்பதுக்கும் உள்பட்ட 1.61 லட்சம் தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்டு விட்டனர். நம் நாட்டின் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.

ஐரோப்பாவின் வாலென்டைன் நினைவுதாம் முக்கியமா? இந்த வாலென்டைன் யார் என்றுதானே. ரோம் நாட்டில் இரண்டாம் கிளாடியஸ் அரசருக்குத் தெரியாமல் உள்ளூர் வாலிபர்களுக்குத் திருட்டு விவாகம் நடத்தி வைத்த புண்ணியவான். ராஜத் துவேஷச் செயலில் ஈடுபட்டவர்தான் இந்த வாலென்டைன்.

அவர் நினைவு 1700 ஆண்டு நீள் உறக்கத்தில் இருந்த இந்தியக் காதலர்களுக்கு இப்போதுதான் பொத்துக் கொண்டு வந்தது. இன்று நாய்க்குட்டியிடம் அன்பு செலுத்தவும் வாலென்டைன் ஆசீர்வாதம் வேண்டிக் காத்து இருக்கிறோம். உயிர்களிடத்து அன்பு வேணும் என்கிற பாரதி தெரியாது. வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடிய வள்ளலார் அன்பு தினம் அறியோம். மக்கள்தொகைப் பெருக்கும் காதலர் தினம் மட்டும் கடற்கரையில் கற்போம். வேறு வழியே இல்லை பாருங்கள்.

இளைஞர்களே, இரவில் கண்விழித்துப் பாடம் படித்தால் உழைப்பு. படம் பார்த்தால் கொழுப்பு. நடுமூளையில் பீனியல் சுரப்பி ஒன்று ஒவ்வொருவர் மண்டைக்கு உள்ளும் இருக்கிறது. அதில் இருந்து சுரக்கும் மெலாட்டோனின் ஹார்மோன் நீர் பெருகினால் உறக்கம் கண்ணைச் சொக்கும். விடலைப் பருவத்தினருக்கு அது நடுராத்திரியில் தாமதமாகச் சுரக்கிறதாம். அதனாலேயே இரவு எல்லாம் கண் துஞ்சாமல் காலையில் உறங்குகிறார்கள் என்றோர் ஆய்வு.

ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் வருகிறது. ஆனால் “ராமன் விளைவு’ பற்றி ஊடகங்கள் எதுவும் கண்டு கொண்டதாக இல்லை. “வாலென்டைன் விளைவு’ காதலர் தினம் கொண்டாடினால் தான் அன்பு மலர்கிறதாம். சின்னக் கடைகளுக்கு வாழ்த்து அட்டைகள் வியாபாரம்.

சொந்தச் செலவில் வெளிநாட்டுப் “பெரிய சகோதரர்கள்’ வீட்டில் தங்கி அவமானப்படுவதே நம் பாரத வீராங்கனைகளின் சாதனை. மானம் கெட்டுப்போய் பரிசு வாங்குவதுதான் இனவெறித் தாக்குதலுக்கு எதிரான வெற்றியாமே.

பொதுவாக, ஆண்கள் தங்களை ஒரு பெரும் சமூக அமைப்பின் அங்கமாகக் கருதுவர். சராசரி விகிதாசார அளவில் ஆண்களே மதம், கட்சி, மொழி என்று ஒரு சமூக ஆதாரம் சார்ந்து தான் கூடுதல் ஆவேசப்படுகிறார்களாம். பெண்கள் குடும்பச்சூழல் அடிப்படையிலேயே இயங்குகின்றனர். அமெரிக்காவில் சார்லோத்தெஸ்வில்லி நகரில் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மனநோய் மருத்துவர் ஆண்டர்சன் தாம்சன் கருத்து இது.

ஜே.அண்டர்சன் தாம்சன் ஜூனியர் அறிவித்த ஆய்வு முடிவு பெண்கள் மனத்தில் பொறி கிளப்புகிறது. உலகின் பல்வேறு தீவிரவாதத் தற்கொலைப் படைகளில் பெரும்பான்மை பெண்களாம். மிக்சிகன் மாகாணத்தில் டெட்ராயிட் நகரில் நடைபெற்ற பன்னாட்டு மனித இனவியல் கழக மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்து இது.

அறியா விடலைப் பருவத்தில் கற்பு இழப்பு, கனவு கண்ட திருமண வாழ்க்கை அமையாத ஏமாற்றத்தால் விவாகரத்து, எதிரிகளால் கணவர் அல்லது சகோதரர்கள் கொலையுண்ட பரிதவிப்பு என ஏதேனும் ஒரு காரணம் போதும். பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுதல் எளிதாம்.

(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா).

Posted in Analysis, Awards, Backgrounder, Chauvinism, Discoverer, Doctor, Equal Opportunity, Facts, Famous, Females, History, Information, Inventor, Kalki, Lady, male, Men, Nobel, Ph.d, Prizes, Professor, Research, Science, scientist, Scientists, Woman, Women | Leave a Comment »

Celebrate Women’s Day – Ve Ganesan: Notable milestones in Feminism

Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007

“என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்’வெ. கணேசன்

மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கொண்டாடப்படுவதன் வரலாற்றுப் பின்னணி, நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலம். மேலை நாடுகள் பலவற்றில் தொழில் புரட்சி தோன்றி இருந்தது. அதன் எதிரொலியால், புதுப்புது ஆலைகள் தோன்றியிருந்தன.

ஆலை ஊழியர்களில், ஆண், பெண் இன பேதம் வெகு பிரசித்தம். நாள்தோறும் 16 மணி நேர வேலை. “”சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பது அங்கேயும் அரங்கேறியது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக, வெடித்துக் கிளம்பியதுதான் அமெரிக்காவின் நியூயார்க் வீதிகளில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும்.

1857-ம் ஆண்டு அங்கே, நெசவு ஆலைப் பெண்களுக்கு ஊதியத்தில் பாரபட்சம், உழைப்பதற்கு தோதாக, சுகாதாரச் சூழல் இல்லாத, அருவருக்கத்தக்க சுற்றுச்சூழல் மறுபக்கம். நாளும் வாட்டி வதைக்கிற இந்த அவலங்களை எதிர்த்து, ஓங்கி ஒலித்தது உரிமைக்குரல்.

அதற்கடுத்த இரண்டே ஆண்டுகளில், கீழ்வானில் ஜொலித்துக் கிளம்பும் விடிவெள்ளியாய் “”உழைக்கும் மகளிர் இயக்கம்” எனும் அமைப்பு உருவானது. மகளிர் சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு இது ஒரு மைல்கல்.

1899-ல், “”டென்மார்க்கில்” முதல் சர்வதேச பெண்கள் மாநாடு கூடியது. உழைப்பாளிகளின் சங்கமிப்பை உலகே வியந்து பார்த்து மகிழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து 1908-ம் ஆண்டு 15 ஆயிரம் பெண்கள் ஒன்று கூடி குறைந்த வேலை நேரம், ஆண்களுக்குச் சமமான ஊதியம் மற்றும் மகளிர் வாக்குரிமை ஆகியவற்றை வலியுறுத்தி நியூயார்க் நகரில் மாபெரும் போராட்டம் நடத்தினர். இது மனித சமுதாயத்தில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக 1910ல் கோபன்ஹேகனில் மற்றொரு மாநாடு. அம் மாநாட்டில் தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த “”சர்வதேச மகளிர் தினம்” மார்ச் 8-ம் தேதி கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. அதுதான் காலம் காலமாக இன்றளவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

“என்றைக்கு உடல் முழுக்க நகைகள் அணிந்து, ஒரு பெண் நள்ளிரவு நேரத்திலும் அச்சம் இன்றி, வீதிகளில் நடக்க முடிகிறதோ, அன்றுதான் நமது நாட்டுக்கு உண்மையான சுதந்திரம்’ என முழங்கினார் அண்ணல் மகாத்மா.

பெண்கள் மீதான வன்முறை, மனித உரிமை சம்பந்தப்பட்டது. சமூகம், பொருளாதாரம், சமயம், கல்வி என பலப்பல நிலைகளிலும், பெண்களுக்கான உரிமை மறுக்கப்படும் அவலம்தானே இந்நாள் வரையும் இங்கே நடக்கிறது.

நவீன உலகின் காவலராக, பாவலராக, நாவலராக, புடம் போட்ட தங்கமாய் ஜொலித்து நிற்கும் பெண்கள் நிறையவே உண்டு. கோவையில் எழுபது சதவிகிதப் பெண்கள், இன்று தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர்.

கல்வி, பொருளாதாரச் சுதந்திரம் ஆகிய இரண்டையும் பெண்கள் எட்டி விட்டால் அரசை ஆளலாம். ஏன், வானம் வரை கூட உயரலாம். அதற்கான வழிவகைகளை உருவாக்கித் தருவதே இன்றைய மனித சமுதாயத்தின் முதல் கடமை.

கென்யா நாட்டின் வாங்காரி மூட்டா மத்தாய் என்பவர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பசுமைப் பரப்பு இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவரது இயக்கம் 3 கோடி மரங்களை நட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள இதர 12 நாடுகளிலும் இந்த இயக்கம் பரவி, வேரூன்ற வழி பிறந்துள்ளது.

ஏழைப் பெண்களின் பொருளாதார நிலைமையை எப்படி உயர்த்த முடியும். சமுதாயத்தை மேம்படுத்த முடியும் என்று சிந்தித்து, அதைச் செயலில் வடித்தவர் மத்தாய் என்பது அடுத்த குறிப்பிடத்தக்க விஷயம். இதனால் 80 ஆயிரம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.

“அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்’ என்கிற பெருமை மத்தாய்க்கே உரித்ததாகும். ரைட் லவ்லி ஹீட் விருது, கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது, பிரான்ஸ் நாட்டின் தேசிய விருது ஆகியவை இவரைத் தேடிச் சென்று, தம்மை கௌரவித்துக் கொண்டன. நமது நாடும் தனது பங்காக, “ஜவாஹர்லால் நேரு’ விருதுக்கு இவரைத் தேர்ந்தெடுத்தது.

“”சாவின் முனை தொட்டு விடும் தூரம் தான்” எனத் தெரிந்தும், சாகசங்கள் செய்தே தீர்வது என்கிற துணிச்சலில் களமிறங்கி, விண்வெளியில் நடப்பதில் உலக சாதனை புரிந்தவர் இந்திய வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.

கடந்த 2003-ம் ஆண்டில், அமெரிக்க கொலம்பியா ஷட்டில்கலம் கீழே இறங்குகையில், நடுவானில் வெடித்தது. அப்போது உயிரிழந்த ஏழுபேரில், நமது நாட்டு வீரப் பெண்மணி கல்பனா சாவ்லாவும் ஒருவர்.

மொத்தம் 22 மணி 27 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, அதிக நேரம் நடந்த பெண் வீராங்கனை என்கிற உலக சாதனை புரிந்துள்ளார், சுனிதா வில்லியம்ஸ்.

அகிம்சைப் பாதையில் அறவழிப் போராட்டம் நடத்தி வருபவர் டாஆங்சன்சூகி. யங்கோனில் பிறந்த சூகி, பர்மிய விடுதலைக்கு முயற்சி செய்து, படுகொலை செய்யப்பட்ட ஜெனரல் ஆங் சன்னின் மகள். 1988ல் ஜனநாயகத்திற்கான தேசியக் கூட்டமைப்பை மியான்மரில் ஏற்படுத்தினார். இதனால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1990-ல் இராணுவ ஆட்சி நடத்திய பொதுத் தேர்தலில், அவருடைய ஜனநாயகக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனாலும், அடக்குமுறை ராணுவ ஆட்சி, தேர்தல் முடிவுகளை ரத்து செய்தது. சூகியிடம் ஆட்சியைத் தர மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து 1991-ல் “அமைதிக்கான நோபல் பரிசு’ சூகிக்கு வழங்கப்பட்டது. அதனால் கிடைத்த பெருந்தொகையைக் கொண்டு, மியான்மர் மக்களுக்கான சுகாதாரம் மற்றும் கல்வி அறக்கட்டளையை ஏற்படுத்தினார்.

கர்நாடகத்தில், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சுதா நாராயணமூர்த்தி. மாதச் சம்பளத்தில் நாள்களை நகர்த்தும் சராசரிப் பெண்ணாய்தான் தன்னுடைய குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டார். அயராத உழைப்பையும், தன்னம்பிக்கையையும் மூலதனம் ஆக்கினார்.

“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது அவரது வாழ்விலும் நிரூபணம் ஆகியது. இன்று இந்தியாவின் முன்னணித் தொழில் அதிபர்களில் ஒருவராக, கம்ப்யூட்டர் துறை சாதனைப் பெண்மணியாய் ஜொலிக்கிறார். சிறந்த சமூக சேவகி, படிப்பாளி, உழைப்பாளி, நிர்வாகி, குடும்பத் தலைவி என பன்முகம் கொண்டவர். அவர் ஒரு படைப்பாளியும்கூட.

நமது நாட்டின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்கு உரியவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. பெண்கள் படிப்பதே அபூர்வமாக இருந்த அக்காலத்தில், புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் 1907-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்த முத்துலெட்சுமி ரெட்டி தங்கப் பதக்கங்களைப் பெற்று, 1912ல் டாக்டர் ஆனார். தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் கொண்டு வரக் காரணமாக இருந்தவரும் இவர்தான்.

ஹைதராபாதைச் சேர்ந்த டென்னிஸ் புயல் சானியா மிர்சா, மிகச்சிறந்த வீராங்கனை. லட்சியத்தை எட்ட, வேகமாக முன்னேற்றப் படிகளில் ஏறி வருபவர். தரவரிசைப் பட்டியலில் 497 புள்ளிகளுடன், உலகின் 46வது இடத்தில் அவர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இவரையும் எதிர்ப்பு அலைகள் பலங்கொண்ட மட்டும் தாக்கியது மதமென்னும் போர்வையில். இவரைக் கரை ஒதுக்க முயன்று, அது நிறைவேறாது எனத் தெரிந்ததும், இருட்டில் ஓடி மறைந்து கொண்டது.

உயர்ந்த சிந்தனையில் ஈர்க்கப்பட்டு, இடைவிடாத சமூகப்பணிகளை மேற்கொண்டு, முற்போக்குச் சிந்தனைக்கு வித்திட்டவர் ரூத் மனோரமா. கடந்த 30 ஆண்டுகளாக கர்நாடகத்தில் சமூகப் பணிகளைச் சிறப்பாக ஆற்றி வருகிறார். இப்பணிகளைப் பாராட்டி, 2006-ம் ஆண்டுக்கான “”வாழ்வாதார உரிமைக்கான விருது”, சுவீடன் நாடாளுமன்றத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. நோபல் பரிசுக்கு இணையான விருதாகும் இது.

அடுத்து, பெண்கள் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டு பிரதமர் கையால் விருது பெற்ற மதுரையைச் சேர்ந்த சுயஉதவிக் குழு “”சின்னப்பிள்ளை”யும் சாதனைப் பெண்மணிதான். சுயமாய் நின்று, சமுதாயத்தில் அங்கீகாரம் பெற்ற பெண்கள் எல்லோரும் போராளிகளே.

அவர்களுக்கு நாடும், நாமும், சீரான பாதையை ஏற்படுத்திக் கொடுப்பதே சுதந்திரம் வாங்கியதன் லட்சியம். அந்த லட்சியப்பாதைக்கு இன்றே, இப்போதே அடித்தளம் இடுவோம். அயராது பாடுபடுவோம்.

பெண் உரிமைகளை மீட்போம். பொன் மயமாய் ஒளிர்வோம்!

(கட்டுரையாளர்: பாண்டியன் கிராம வங்கி தொழிலாளர் சங்க இணைப் பொதுச்

செயலர்).

=======================================================

பெண்ணின் பெருந்தக்க யாவுள…

செ. செல்வராணி

பெண்களின் சமுதாயப் படிநிலை இன்று எல்லாத் துறைகளிலும் உயர்ந்திருக்கிறது.

கல்வித்துறை, பொருளாதாரத்துறை, சமூகத்துறை, தொழிற்துறை என்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பதவி வகிக்கின்றனர். சமூக அந்தஸ்து என்பது எந்த அளவுக்கு பெண்களின் முன்னேற்றம் இருக்கிறதோ அதைப் பொறுத்து அமைவது.

காந்தியடிகள் “”பெண்கள் ஒரு அடி முன்னேறினால் அந்த நாடு பத்து அடிகள் முன்னேறுகிறது” என்று பெண்கள் முன்னேற்றத்தின் இன்றியமையாமையை விளக்குகிறார். சென்ற பத்தாண்டுகளில் பெண்களின் கல்வி வளர்ச்சி 1 விழுக்காடு அதிகரித்த போது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 விழுக்காடு அளவுக்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இது தேசப்பிதாவின் கூற்றை மெய்ப்பிக்கிறது.

விவேகானந்தர், “”முதலில் பெண்களுக்கு கல்வியறிவை அளியுங்கள், பின் அனைத்தையும் அவர்களிடம் விட்டு விடுங்கள். முன்னேறுவதற்கான தேவைகளை அவர்கள் கூறுவார்கள்” என்று கூறியுள்ளார். ஒரு பெண் சுயமாகச் சிந்தித்துச் செயல்பட, சொந்தக் காலில் நிற்க கல்வி மிகவும் அவசியம்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்துப் பெண்களும் அடிப்படைக் கல்வியையாவது கற்றால்தான் நாடு தன்னிறைவு பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே கல்வி கற்றதாக ஆகும். அடிப்படைக் கல்வி என்பது கையெழுத்துப் போடத் தெரிந்திருப்பது மட்டும் அல்ல. ஓட்டுரிமை, அடிப்படைச் சுகாதாரம், சுயமாகச் சிந்திக்கும் திறன், மக்கள்தொகை பற்றிய விழிப்புணர்வு, குடும்பநலத்திட்டம் போன்ற முக்கியமான விஷயங்கள் பற்றி அறிந்திருத்தல் ஆகும்.

இன்று பெண்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பதவி வகிக்கின்றனர். மாநில முதல்வர்களாக, பல்கலைக் கழக துணை வேந்தர்களாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக, மருத்துவத்துறை அதிகாரிகளாக, விஞ்ஞானிகளாக, பிரபல நிறுவனங்களில் இயக்குநர்களாக என பல துறைகளிலும் உயர் பதவிகளை வகித்து சாதனைகள் புரிந்து வருகின்றனர்.

இன்று நம்நாட்டில் 25 பிரபல நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர்களாக பெண்கள் பதவி வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். தொழிற்கல்வி பயின்று, தொழில் துறையில் பெண்கள் மேலும் முன்னேற வேண்டும். ஜப்பானியப் பெண்களில் பெரும்பாலோர் தொழில் முனைவோர்களாக உள்ளனர். நம் நாட்டிலும் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவது மிகவும் அவசியம்.

“சிவில் சர்வீஸ்’ துறையில் பெண்களின் பங்கு 10 சதவீதத்திலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 சதவீதமாக அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. நீதித்துறை, அரசியல்துறை போன்ற துறைகளிலும் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் இட ஒதுக்கீட்டையே நம்பியிருக்கக் கூடாது. பெண்கள் முயன்றால் தங்கள் அறிவால், ஆற்றலால், உழைப்பால், சொந்தத் திறமையால் அனைத்தையும் அடைய முடியும். வெற்றி பெற முடியும். இன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் செயலாற்றும் பெண்கள் சுயமாகச் சிந்தித்துச் செயல்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

நம் வரலாற்று ஏடுகளைப் புரட்டினால் வீரமிக்க மங்கையர் ராணி லஷ்மிபாய், அகல்யா பாய், துர்கா தேவி போன்ற சாதனைப் பெண்களைக் காணலாம். நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னிபெசன்ட், முதல் பெண் ஆளுநர் கவிக்குயில் சரோஜினி நாயுடு ஆகியோரும் சாதனை படைத்த மங்கையர்களே.

மேலும் அயராத உழைப்பால் புற்றுநோய்க்குத் தீர்வு கண்டு நோபல் பரிசு பெற்ற மேடம் கியூரி, கருணையுள்ளம் கொண்ட அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா, ஆங்கிலத் துறையில் அளிக்கப்படும் உலக அளவிலான புக்கர் பரிசைப் போற்ற அருந்ததி ராய், விண்வெளியில் பறந்து தீபமாய் ஒளிர்விடும் கல்பனா சாவ்லா, திகார் சிறையில் சாதனைகள் பல புரிந்த கிரண் பேடி, இசைத்துறையில் பிரகாசிக்கும் லதா மங்கேஷ்கர், இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா என்று சாதனை புரிந்த, புரிந்து கொண்டிருக்கின்ற பெண்களின் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவர்கள் அனைவரும் இன்றைய பெண்களுக்கு முன்மாதிரிகள்; வழிகாட்டிகள்.

பெண்களுக்கு வழிகாட்டவும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்றவற்றைக் கேட்டு உதவி புரியவும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் கீழ்க்கண்ட பெண்கள் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

பெண்களுக்கான தேசிய பொறுப்பாண்மைக் குழு, சுயவேலை பார்க்கும் பெண்கள் அமைப்பு, அகில இந்திய மக்களாட்சியைச் சார்ந்த பெண்கள் அமைப்பு, மகிழ தக்ஷாடா சங், பணியிலிருக்கும் சென்னைப் பெண்களின் பொது அமைப்பு ஆகியவை பெண்களுக்கு உதவி புரிந்து வருகின்றன.

“”உன் பெண்மையின் லட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறந்து விடாதே” என்ற விவேகானந்தரின் சொற்கள் ஒவ்வொரு பாரதப் பெண்ணின் உள்ளத்திலும் பதிய வேண்டும்.

“பாரத நாடு புண்ணிய பூமி’ என்ற பெயரைப் பெற்றுள்ளது. பெண்மையைப் போற்றுவது நம் பாரதப் பண்பாடு. இந்த நாட்டின் பண்பாடு, கலாசாரம், நாகரிகம், நன்னெறிகள் அனைத்துமே பெண்களின் கைகளில்தான் உள்ளது. குழந்தைகள் வளர்ப்பில் பெண்களின் பங்கு மிக மிக இன்றியமையாதது. நல்ல மக்களைக் கொண்ட சமுதாயம் அமைதல் என்பது குழந்தைகளை தாய்மார்கள் வளர்க்கும் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறது. தாய்மை என்பது புனிதமான, உன்னதமான போற்றுதலுக்குரிய ஒன்று. ஒரு நல்ல தாயினால்தான் நல்ல மகனை உருவாக்க முடியும். எனவே நல்ல பண்பாடு மிக்க பெண்களால்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.

அன்பு, அடக்கம், அமைதி, கற்பு, வீரம், தியாகம், மனத்திட்பம் முதலிய நன்னெறிகளின் வடிவமாகப் பெண்கள் திகழ வேண்டும். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று பாடினார் பாரதி. ஆனால் இன்று விளம்பரம் மற்றும் திரைப்படத் துறைகளில் பெண்களே பாரத கலாசாரத்திற்கு முரண்பாடு கொண்ட உடைகள் அணிந்தும், நடித்தும், நம் பண்பாட்டையே இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய பெண்கள் திருந்தினால்தான் நமது கலாசாரத்தைப் பாதுகாக்க முடியும்.

இளம்பெண்களும், மாணவிகளும் அறிவு சார்ந்த நூல்களையும் கல்வி, சமூகம், அறிவியல் மற்றும் அரசியல் துறைகளில் சாதனை புரிந்த பெண்களின் வரலாறுகளையும் படித்தார்களேயானால் அவர்களும் சாதனை படைக்கலாம்.

ஒவ்வொரு பெண்ணும் நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்து, தன்னிகரற்ற பாரதத்தைப் படைக்க உறுதி ஏற்போம்.

(கட்டுரையாளர்: முதல்வர், ஸ்ரீசாரதாநிகேதன் மகளிர் கல்லூரி, அமராவதிபுதூர்).

=================================================================

ஆணுக்குப் பெண் நிகரானால் குழந்தைகளுக்கும் நல்வாழ்வு

என். கங்கா

பெண்களே நாட்டின் கண்கள்! இந்தக் கூற்று முற்றிலும் உண்மை!

பெண்ணியவாதிகள், அறிவியல் வல்லுநர்கள், சமூக இயல் வல்லுநர்கள், தேசப்பற்று கொண்டவர்கள், பொருளாதார வல்லுநர்கள், மருத்துவர்கள், திட்டமிடுபவர்கள், அரசியல்வாதிகள் ஆகிய எல்லா தரப்பினருக்கும் இதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. பெண்களின் சம உரிமையும், குழந்தைகளின் நல வாழ்வும் கைகோத்து நடைபோடுகின்றன. பெண்களுக்கு எல்லா கோணங்களிலும் சம உரிமை வழங்கப்பட்டு பெண்களின் நிலை முன்னேற்றம் அடைந்தால் பெண்களின் நல்வாழ்வும், குழந்தைகளின் நல்வாழ்வும் உறுதி செய்யப்படும்.

உலக சுகாதார நிறுவனம் புத்தாயிரம் ஆண்டில் முன்னேற்றத்தின் குறிக்கோள் என்று 10 கருத்துகளை அறிவுறுத்தியிருக்கிறது. அதில் மூன்றாவது குறிக்கோளாக பெண்களுக்கு சம உரிமை மற்றும் பெண்கள் மேம்பாடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக நடந்தேறினால் இரட்டை அறுவடை பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்!

ஆண்-பெண் சமத்துவத்தின் இரட்டைப் பலன்கள் என்பதை 2007ன் கருத்தாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் அமைப்பு யுனிசெப் வலியுறுத்துகிறது.

2007ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் கருத்து – மகளிருக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்குச் சட்டப்படி ஒரு முடிவு என்பதாகும்.

உலக அளவில் பெண்களுக்கு சம உரிமை பெரிய அளவில் பேசப்பட்டாலும் கோடிக்கணக்கான பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. சிறு வயதில் திருமணம், தாய்மார்கள் இறப்பு, செய்யும் வேலைக்கு குறைவான சம்பளம், உடல் மற்றும் பாலியல் ரீதியான கொடுமைகள், பணி இடத்தில் இகழ்ச்சி, தகுந்த பாதுகாப்பும், நீதியும் கிடைக்காத நிலை என்ற பற்பல அம்புகள் ஒரே நேரத்தில் பெண்களைத் தாக்குகின்றன.

இரட்டைப்பலன் எப்படிக் கிடைக்கும்? ஆரோக்கியமான, படித்த, சக்தி படைத்த பெண்ணுக்கு ஆரோக்கியமான, அறிவுள்ள, திட சிந்தனையுள்ள, மகனும், மகளும் அமைவார்கள்! அந்தப் பெண்ணிற்கு குடும்பத்தில் முடிவு எடுக்கும் உரிமை இருந்தால் குடும்பத்தின் ஊட்டச்சத்து, நல்வாழ்வு, மருத்துவ சேவைகளைத் தகுந்த நேரத்தில் அடைதல், பொருளாதார மேம்பாடு என்ற பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் சிக்கல்களும் போராட்டங்களும்தான்! இந்த பாரபட்சம் பிறக்கும் முன்பே ஆரம்பித்து இறுதிநாள் வரை தொடர்கிறது. பெண் கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை. இது இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய தீமை!

பெண் குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி கூட முழுமையாகக் கிடைக்கவில்லை. தொடக்கப்பள்ளியில் சேரும் 5 பெண்களில் ஒரு பெண்ணுக்கு ஆரம்பக் கல்விகூட கிடைப்பதில்லை. அவள் 5ஆம் வகுப்பு வருவதற்குள் பள்ளியில் இருந்து நிறுத்தப்படுகிறாள். 15 சதவீதம் பெண்கள் மட்டுமே கல்லூரி படிப்புக்குச் செல்கிறார்கள்!

18 வயதிற்குக் குறைவான பெண்ணுக்குத் திருமணமும், குழந்தைப் பிறப்பும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 30 சதவீதம் பெண்களுக்கு முதல் குழந்தை 18 வயதிற்குக் கீழ் பிறந்து விடுகிறது. கருப்பை மற்றும் இடுப்பு எலும்புகள் முழு வளர்ச்சி அடையாத நிலையில், வாழ்க்கையை எதிர்கொள்ள உரிய மனமுதிர்ச்சியும் அடையாத பெண்ணுக்குக் குழந்தை பிறப்பு! இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மரணம் அடைவது அதிகமாகிறது.

தாய் கருவுற்ற சமயத்தில் இரண்டு உயிர்களுக்கு ஊட்டச்சத்துக் கிடைக்காததால் தாய் மேலும் உடல் மெலிந்து அடிக்கடி நோய்வாய்ப்படுகிறாள். அந்தத் தாய்க்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. குழந்தை எடை குறைவாக, குறைமாதமாக, எதிர்கால வளர்ச்சித் திறன் குறைவாகப் பிறக்கிறது. அந்தக் குழந்தை பெண் குழந்தையானால், வளர்ச்சி குறைவாக எதிர்ப்பு சக்தி இல்லாத, ஒல்லியான பெண்ணாக வளர்ந்து அது பேறு காலத்தை எட்டும்போது நிறைய இன்னல்களை அனுபவிக்க வேண்டி வருகிறது. இது ஒரு தொடர்பிரச்சினையாகி விடுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் 5 லட்சம் பெண்கள் தாய்மைப்பேற்றின்போது இறக்கிறார்கள்! அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு தாய்! வளர்ந்து வரும் ஏழை நாடுகளில் இந்த இறப்பு இன்னும் அதிகம்! 2000-ம் ஆண்டில் உலக அளவிலான தாய்மார்கள் இறப்பில் 25 சதவீதம் இந்தியாவில். என்ன கொடுமை!

வளர்ந்த நாடுகளில் 4 ஆயிரம் தாய்க்கு ஒரு தாய் என்ற அளவில் இறக்கிறார்கள்! அடிப்படை பேறுகாலக் கவனிப்பு இருந்தாலே இந்த இறப்புகளைப் பெரிய அளவில் தவிர்க்க முடியும்! தாய் இறந்த பிறகு அந்தக் குழந்தைகளிடையே இறப்பு விகிதம் அதிகம்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

வயது முதிர்ந்த பிறகு பெண்களுக்குப் பிரிவினையும், பாகுபாடும் தொடர்கிறது. இயற்கையாகவே பெண்கள் அதிக நாள்கள் உயிர் வாழ்கிறார்கள். வயது முதிர்ந்து உழைக்கத் திறனின்றி, வருவாய்க்கும் வழியின்றி, நோய்நொடியுடன், கடமைக்கு உணவு அளிப்பவர் மத்தியில் வாழும் முதிய பெண்மணிகள் மனத்தளவில் இறந்தவர்கள் தான். அரசு மூலமும், சட்டரீதியாகவும், இவர்களுக்கு பாதுகாப்பு குறைவு!

எங்கெங்கு ஆணுக்குச் சரிநிகர் சமமாகப் பெண்கள் நடத்தப்பட வேண்டும்?

வீட்டுப்பொறுப்புகளில், வீட்டை நிர்வகிப்பதில், வீட்டு நிதி நிர்வாகத்தில் மகளிருக்கு சம உரிமை இருக்குமானால், வேலைக்குத் தகுந்த கூலி பெண்களுக்கும் கிடைக்குமானால், அவளது குடும்பம் மேன்மேலும் உயரும். தான் ஈட்டிய பணத்தை எப்படிச் செலவிடுவது, குழந்தைகளுக்கும் கணவருக்கும், முதியவர்களுக்கும், தகுந்த பாதுகாப்பு, குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, எதிர்காலச் சேமிப்பு போன்ற எல்லா கோணங்களிலும் பெண்களின் பங்களிப்பு இருந்தால் குடும்பம் உயர்வடையும்.

பெண்கள் அரசியலில் இருந்தால் நாட்டின் அமைதி, பாதுகாப்பு, வளமை வலுப்பெறுகிறது என்பதும், நாட்டில் அமைதிப் பேச்சு வார்த்தையில் பெண்கள் இருந்தால் அதன் முடிவு நாட்டிற்குச் சாதகமாக இருக்கிறது என்றும் நிரூபித்து இருக்கிறார்கள். என்று அடங்கும் இந்த ஆண்களின் ஆதிக்கம்?

பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுவதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் உலக அளவில் ஒன்றாகத்தான் இருக்கிறது!

உலக அளவில் 150 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி ஆண்களின் கருத்து என்ன தெரியுமா? ஆண்கள் தான் சிறந்த அரசியல் தலைவர்களாகச் செயலாற்ற முடியுமாம்! நிறைய பணியிடங்களில் ஆண்கள்தான் அமர்த்தப்பட வேண்டும். பணி வாய்ப்புகள் குறைவாக இருக்கும்போது ஆண்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். பெண்களைவிட பல்கலைக்கழகப் படிப்பு ஆண்களுக்குத்தான் முக்கியம்.

இந்த நிலை என்று மாறும்?

7 முக்கிய அம்சங்கள் மூலமாக பெண்களுக்குச் சம உரிமை என்ற குறிக்கோளைப் படிப்படியாக அடையலாம் என்று உலகளாவிய அமைப்புகள் தெரிவிக்கின்றன.

கல்வி, பொருளாதாரச் சீரமைப்பு, சட்டங்கள், ஆட்சியில் அதிக பங்கு, பெண்கள் முன்னேற்றத்தில் ஆண்களை ஈடுபடுத்துதல், பெண்களே பெண்களின் ஆக்கசக்தியை ஊக்குவித்தல், தேவைப்பட்ட அளவு ஆராய்ச்சிகளும், புள்ளிவிவரங்களும் சேகரித்து – அதன் அடிப்படையில் முன்னேற வழி வகுத்தல், திட்டமிடுதல். பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட்டால் பெண்களின் திறன் அதிகரிக்கும்! பெண்களின் திறன் அதிகரித்தால்தான் குழந்தைகளுக்கு நல்வாழ்வு கிட்டும். இது இரட்டிப்புப் பலன் அல்லவா?

பெண்களின் சக்தியை ஓங்க வைத்து, அதைத் தகுந்த அளவில் பயன்படுத்தினாலன்றி, எந்த ஒரு சமுதாயமும், நாடும், நிலைத்த, நீடித்த வளர்ச்சியை அடைய முடியாது. பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்கும் பெண்களுக்கு சம உரிமை அளிப்பதைத் தவிர வேறு ஓர் ஆயுதம் இருக்க முடியாது!

கொள்கைகளை ஏற்படுத்தி, அறிவித்து கூட்டங்கள் நடத்துவதால் மட்டும் பெண்கள் முன்னேற்றம் கைகூடி விடாது. பெண்களுக்கு நல்ல கல்வி, அரசில் பங்கு, பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகள், நல்ல மருத்துவ சேவைகள், உடல் மற்றும் மனரீதியான சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் நாள் எந்நாளோ, அந்தப் பொன்னான நாளில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்விற்கு ஏற்ற உலகம் அமையும்.

(கட்டுரையாளர்: பேராசிரியர், தஞ்சை மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர்).

Posted in Analysis, Anniversary, Backgrounder, Benefit, Celebration, Child, Children, Dinamani, Economy, Education, Empowerment, Female, Feminism, Freedom, Function, Ganga, Health, Healthcare, History, Independence, Kid, Lady, male, milestones, Op-Ed, Opinion, Planning, Refer, Ritual, Schemes, Sex, solutions, Tamil, Welfare, WHO, Women | Leave a Comment »

Sex-change operation to be done for free in Chennai GH for Transgenders

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

அரவாணிகளின் பாலின மாற்றுச் சிகிச்சை குறித்த செவ்வி

பிரியா பாபு
பிரியா பாபு

மூன்றாம் பாலினமான அரவாணிகள், மருத்துவ ரீதியில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பினால், தமிழகத் தலைநகர் சென்னையிலிருக்கும் அரசாங்க பொது மருத்துவமனையில், இலவசமாக பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் வகையில், தமிழக அரசு சமீபத்தில் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

இது போன்ற சலுகை தங்கள் சமூகத்துக்கு வேண்டும் என்று, தமிழக அரவாணிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கோரி வந்தனர்.

அந்த சங்கத்தை சேர்ந்தவரும் அரவாணிகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருபவருமான பிரியா பாபுவிடம் தமிழக அரசின் சமீபத்திய அரசாணையின் முக்கியத்துவம் குறித்து நமது செய்தியாளர் எல்.ஆர்.ஜெகதீசன் கண்ட செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 

Posted in Ali, BBC, Chennai, Eunuch, Female, General Hospital, GH, Hijra, male, Operation, Priya Babu, Sex, surgery, Transgender | 5 Comments »

Population control tactics & carrots in China: $75 for 60+

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2006

சீனாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தினை கட்டுப்படுத்த புதிய முயற்சிகள்

சீன நாட்டவர்கள்
சீன நாட்டவர்கள்

சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மேலும் ஒரு நடவடிக்கையாக, கிராமப் புறங்களில் உள்ள மக்கள் குறைந்த அளவில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டு புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளன.

மக்கள் தொகை ஏறுமுகமாக உள்ள நிலையில், ஒரே ஒரு ஆண் குழந்தையோ அல்லது இரண்டு பெண் குழந்தைகளோ கொண்ட கிராமப் புறங்களில் உள்ள பெற்றோர்களுக்கு, அவர்கள் 60 வயதை எட்டும் போது மாதம் ஒன்றுக்கு 75 டாலர்கள் வழங்கப்படவுள்ளது.

இந்தத் தொகை, சராசரியாக ஒரு விவசாயி ஆண்டு ஒன்றுக்கு சம்பாதிப்பதில் ஐந்துக்கும் ஒரு பங்கு அளவை விட குறைவானதே.

இந்த உதவித் தொகை அங்கு பாரம்பரியமாக நிலவி வரும் ஆண் வாரிசுக்கான ஆதரவைச் சமன் செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சீனாவில் பாரம்பரியமாக ஆண் வாரிசுகள் குடும்பப் பெயரைத் தாங்கியும், வயதான பெற்றோர்களை பராமரிப்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

30 ஆண்டுகளுக்கும் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட “ஒரு குழந்தை” கொள்கையின் அடிப்படையில், சில அரிதான விதிவிலக்குடன் பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.

Posted in 60+, Benefits, Child, Children, China, Dollar, Female, Growth, Kids, male, Population, ratio, South Asia, tactics | Leave a Comment »