Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Mahatma’ Category

Burmese Human Rights Activist Daw Aung San Suu Kyi – Myanmar: Biosketch

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

புரட்சிப் பெண்: வீட்டுச் சிறையில் “இரும்புப் பெண்மணி’!

முத்தையா வெள்ளையன்

சின்னத் திரைச் சிறையில் அடைபட்டிருக்கும் பெண்களுக்கு, நாட்டின் விடுதலைக்காக ஏறக்குறைய 18 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலிருக்கும் ஆங் சூயியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங் சூயியின் போராட்டச் சுருக்கம் இது:

ஜெனரல் ஆங் சாங்கின் மகள் ஆங் சூயி. இரண்டாவது வயதில் தன்னுடைய தந்தையை இழந்தவர் இவர். 1940 ஆம் ஆண்டில் பர்மாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் இவருடைய தந்தை பங்கேற்றவர்.

1945-ம் ஆண்டு பிறந்த ஆங் சூயி புத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் படித்தது கிறிஸ்துவ கத்தோலிக்க பள்ளியில். 1960-ம் ஆண்டில் இவருடைய தாய் இந்தியாவில் பர்மாவின் தூதுவராகப் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் வசித்துள்ளார் ஆங் சூயி.

தம்முடைய உயர் கல்வியை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அங்கு மைக்கேல் ஆரிச் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அலெக்ஸôண்டர், கிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இங்கிலாந்தில் ஒரு சாதாரண குடும்பப் பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருந்தார். பர்மாவில் இராணுவ ஆட்சி பல கொடுமைகளைச் செய்து மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. உலகத்தின் எந்த பகுதியிலிருந்தும் சுதந்திரமாக மியான்மருக்குப் போய்விடமுடியாது. மிகவும் பழைமையும், மூடநம்பிக்கையும் உள்ள மக்களாக பர்மிய மக்கள் இருந்தனர். தெற்காசியாவில் 45 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக பர்மா விளங்குகிறது. “இம்’ என்றால் சிறைவாசம், “ஏன்’ என்றால் வனவாசம்… என்ற நிலைமை பர்மாவில் இருந்த சூழ்நிலையில்தான் ஆங் சூயியின் அன்னையான டான் கிம்கிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரைப் பார்க்க இங்கிலாந்திலிருந்து 1988-ல் கணவரையும் குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பர்மாவுக்குத் திரும்பினார் ஆங் சூயி.

தாய்நாடு திரும்பிய ஆங் சூயியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. பர்மாவில் அப்போது சுதந்திர ஜனநாயக இயக்கம் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் வெகுவாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தில் ஆங் சூயி தன்னை இணைத்துக் கொண்டார். இந்த இயக்கம் அப்போது ஜனநாயக ரீதியாக ஒரு போராட்டத்தை அறிவித்தது. ஆட்சியாளர்களால் போராட்டம் நசுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போயினர்.

போராட்டம்…

1990-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பர்மாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆங் சூயி என்.எல்.டி. கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றியை இராணுவ அரசு ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி பெற்ற ஆங் சூயி வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அன்றையிலிருந்து இன்னமும் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு 1991-ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பதினெட்டு ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் இருக்கும் ஆங் சூயியின் விடுதலையை பர்மா மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

வீட்டிற்குள்ளேயே ஆங் சூயியைப் பூட்டி வைத்தாலும், அடக்குமுறையை மீறி அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்திய சம்பவமும் உண்டு. அந்தச் சம்பவம் இதுதான்:

உலகப் பெண்கள் மாநாடு 1995-ல் பீஜிங்கில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கெடுக்க ஆங் சூயியிக்கு பர்மிய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் ஆங் சூயி தன்னுடைய பேச்சைப் பதிவு செய்து, அந்த வீடியோவை ரகசியமாக வெளியே அனுப்பினார். அந்த வீடியோ, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பேச்சின் சாரம்சத்தை அரசியல் பார்வையாளர்கள் பின்வருமாறு கூறினர்:

அவருடைய பேச்சு அமைதியாகவும், நிதானமாகவும், புத்தமத, காந்திய தன்மையை இருந்தது. அவரின் பேச்சில் “”எந்தப் போரையும் பெண்கள் தொடங்கவில்லை; ஆனால் போரின் கொடுமைகளை அனுபவிப்பது பெண்களும், குழந்தைகளும்தான்” என்றார். அவரின் முழுப் பேச்சும் ஆளும் எஸ்.எல்.ஓ.ஆர்.எஸ். அமைப்பை மறைமுகமாகத் தாக்குவதாக இருந்தது.

கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கூட மனிதாபிமானத்தோடுதான் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் ஆங் சூயியின் விஷயத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. 1999-ல் ஆங் சூயியின் கணவர் கான்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் தன் மனைவியைப் பார்ப்பதற்கு பர்மிய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். அதற்கு பர்மிய அரசு, “”நீங்கள் இங்கு வந்தால், உங்கள் நோய்க்கான சிகிச்சை வசதிகள் எங்கள் நாட்டில் இல்லை. உங்கள் மனைவியை வேண்டுமானால் நீங்கள் அழைத்துக் கொள்ளலாம்” என்றது.

இதற்கு ஆங் சூயி, “”ஒருமுறை பர்மாவை விட்டு வெளியேறினால் திரும்ப பர்மாவுக்குள் வர எனக்கு அனுமதி கிடைக்காது. அதனால் நான் செல்லப் போவதில்லை” என்று உறுதியாக இருந்தார். அவருடைய கணவர் தம் 54-ம் வயதில் மரணமடைந்தார். கடைசிவரை அவருடைய கணவரின் ஆசை நிறைவேறவே இல்லை. இப்போது அவருடைய மகன்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பர்மாவுக்கு சுதந்திரம் வேண்டும். ஆங் சூயி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை ஐ.நா. சபையில் வைத்துள்ளது. ஐ.நா.வின் தூதர் நேரடியாக பர்மாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

அங்குள்ள புத்தபுக்குகள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயகம் வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆங் சூயி என்ற “இரும்பு பெண்மணி’ விடுதலை செய்யப்படுவாரா, பர்மாவுக்கு ஜனநாயகம் கிடைக்குமா? 1992-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அமைதிப் பரிசு இந்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. ஆங் சூயி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவருவதும், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதும்தானே அவரின் அமைதிக்கான உரிய பரிசாக இருக்கமுடியும்?!

Posted in Activist, Activists, AngSan, Arrest, AungSan, Biosketch, Buddhism, Burma, Democracy, Faces, Fight, Freedom, Gandhi, Independence, Liberation, Mahatma, Mandela, Myanmar, names, Oppression, people, SuKyi, SuuKyi, Violence | Leave a Comment »

Writer Tha Naa Kumarasamy – Biosketch, Profile: Charukesi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

தொடர்கட்டுரை  – எழுதுங்கள் ஒரு கடிதம்!

சாருகேசி

தமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

த.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.

“”த.நா. குமாரசுவாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது!” என்றார் சா. கந்தசாமி.

இன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.

வங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.

ஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.

நேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)

அவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்!)

காந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.

“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.

“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே? “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை!” என்கிறார் கந்தசாமி, தன் கட்டுரையில்.

காஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.

சுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.

தேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபாவளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.

தாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.

இத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.

“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.
———————————————————————————————————————————————-

சாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.

லட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.

ஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்!

இரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.

மூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்துகிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.

புரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன?)

ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்!

Posted in artists, Arts, Author, Biosketch, Chaarukesi, Charukesi, Coomarasaami, Coomarasaamy, Coomarasami, Coomarasamy, Devan, Display, Exhibitions, Faces, Famous, Gallery, Gandhi, Kumarasaami, Kumarasaamy, Kumarasami, Kumarasamy, Kumaraswami, Kumaraswamy, Mahatma, names, Painters, Paintings, people, profile, Translations, Translator, Works, Writer | Leave a Comment »

Indian Freedom Fighters: Joseph George – Pazha Athiyaman in Dinamani Kathir

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

முகங்கள்: “”மாறாமல் இருப்பது மைல்கல்லும் மதியீனனும்தான்!”

மோதிலால் நேரு, காந்தி, நேரு, ராஜாஜி, பெரியார் போன்ற பெருந்தலைவர்களின் பேரன்புக்குப் பாத்திரமான இந்திய அளவில் காங்கிரஸ் இயக்கத்துக்காகப் பாடுபட்ட தலைவர் ஜோசப் ஜார்ஜ். வரலாற்று மாணவர்களின் பார்வைக்கும் சிக்காமல் காணாமல் போய்விட்ட இவரைப் பற்றி சமீபத்தில் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். எழுதியிருப்பவர் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சி (திருப்பதி) அமைப்பாளர் பழ. அதியமான். எழுத்தாளர் வ.ரா. வின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதும் எழுத்தாளர் தி.ஜ.ர. பற்றி இவர் எழுதிய நூல் சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டிருப்பதும் இவருடைய சிறப்புகள். அவரைச் சந்தித்தோம்.

இந்திய விடுதலை வரலாற்றில் ஜோசப் ஜார்ஜின் இடம்?

மைய நீரோட்ட அரசியலில் கிறித்துவர்களின் பங்கேற்பு அவ்வளவாக இல்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைப்பதாக இருக்கிறது ஜார்ஜ் ஜோசப்பின் இந்திய விடுதலைப் போராட்டப் பங்களிப்பு. மகாத்மா காந்தி, “”ஜார்ஜ் ஜோசப் என்னுடைய நெருக்கமான தோழர்களுள் ஒருவர். நான் எரவாடா சிறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது யங் இந்தியாவின் ஆசிரியர். அதற்கு முன்னால் என் விருப்பப்படி (மோதிலால் நேருவின்) “தி இண்டிபென்டன்ட்’ பத்திரிகையின் ஆசிரியர். நாட்டுக்காக வருமானமுள்ள வழக்கறிஞர் தொழிலைத் துறந்தவர். சிறை சென்றவர். உற்சாகமுள்ள நாணயமான தேசியத் தொண்டர்.” இது ஜார்ஜ் ஜோசப் வாழும் காலத்திலேயே காந்தி (1929)யிடமிருந்து அவருக்குக் கிடைத்த பாராட்டு.

காந்தி பாராட்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஜோசப், தீவிர அரசியல்வாதியாக, தொழிற்சங்கவாதியாக, வழக்கறிஞராக தமிழக தேசிய அரசியலில் 25 ஆண்டு காலம் செயல்பட்டார். ஆலைத் தொழிலாளர், குற்றப் பரம்பரையினர், வரதராஜுலு நாயுடு மீதான வழக்கு போன்றவற்றில் ஜார்ஜ் ஜோசப்பின் பணி மிகுதி. வ.ரா. சொன்னது போல ஜோசப்பும் ராஜாஜியும்தான் 1910-லிருந்து 1938 வரை ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் தமிழக காங்கிரசின் வேலைத் திட்டங்களை யோசித்துத் தீர்மானித்தனர். 100 ஆண்டுகால காங்கிரஸ் வாழ்க்கையில் நான்கில் ஒரு பகுதி. ஆனால் ஜார்ஜ் ஜோசப் என்றால் யார் என்று கேட்கும்படிதான் நிலைமை இருக்கிறது.

ஜோசப் பரவலாக அறியப்படாததற்கு விடுதலைக்கு முன்பே மறைந்துவிட்டதுதான் காரணமாக இருக்குமா?

அப்படித் தோன்றவில்லை. பாரதி, சத்தியமூர்த்தி, வ.உ.சி. போன்றவர்கள்கூட சுதந்திரத்துக்கு முன்பு இறந்தவர்கள்தானே? ஜார்ஜ் ஜோசப் சிறுபான்மைச் சமூகத்தில் பிறந்ததும் அரசியல் வாரிசோ, குடும்ப வாரிசோ தொடர்ந்து அவரைப் பற்றிச் சமூகத்தில் பேச்சலைகளை உருவாக்காததும் காரணங்களாக இருக்கலாம். ஆனால் சரியாக மனசாட்சிப்படி செயல்பட்டால் காலம் கடந்தாவது அறிவுலகத்திலாவது நினைக்கப்படுவார்கள் என்பது ஓர் உண்மை.

தன் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டிருந்தார் ஜோசப்… காந்திக்கு நெருக்கமாக இருந்து பின்பு அவருடன் முரண்பட்டு நீதிக்கட்சியில் இணைந்து செயல்பட்டு மீண்டும் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்த மாற்றங்கள் அவருடைய செல்வாக்கைக் குறைத்திருக்குமா?

இருக்கலாம். கருத்துகளை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தவர் என்றொரு கருத்து உண்டு. அதைப் பற்றி வ.ரா. இப்படிச் சொல்கிறார்: “”மைல் கல்லும் மதியீனனும்தான் மாறாம இருப்பாங்க”.

ஜோசப் அறிவாளி. காந்தி கருத்தை மாற்றிக் கொள்ளவில்லையா? கலப்பு மணத்துக்கு முதலில் காந்தி ஒப்புக் கொள்ளவில்லையே. சுதேசா- கிருபளானி கலப்பு மணத்துக்கு உடனே வா ஒப்புக் கொண்டார் காந்தி?

“மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பார்கள் கம்யூனிஸ்டுகள்’ என்ற புகழ் பெற்ற பத்திரிகை வாசகத்தை கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக எழுதின மாஜினி பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறவில்லையா? மாறுவது, முரண்படுவது அறிவுக்கு இயல்பு. ஜோசப்பின் முரண்பாடுகளைத் தவறென்று சொல்ல முடியாது.

அப்படி மாறுவதற்கு அவருக்குப் போதுமான காரணங்கள் இருந்தனவா?

காந்தி, நேரு ஆகியோருடன் நெருக்கமாக இருந்த ஒருவர், அவர்கள் படுவேகமாக அரசியல் களத்தில் செல்வாக்குடன் வளர்ந்து வருவதைக் கண்டும் ஜோசப் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அதில் அவருடைய சுயநலம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது அப்போதைய அரசியல், சமூக சூழ்நிலையைப் பொறுத்தே அமைந்திருந்தது. சில நேரங்களில் அறிவுப் பூர்வமாகவும் சில நேரங்களில் உணர்ச்சிபூர்வமாகவும் அவர் முடிவெடுத்திருக்கிறார்.

குற்றப் பரம்பரையினர் என்று ஆங்கிலேய ஆட்சியில் சட்டத்தின் பிடியில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஜோசப் பாடுபட்டது குறித்து?

குற்றப் பரம்பரையினருக்கு ஜோசப் அனுசரணையாகச் செயல்பட்டது பற்றி இந்த நூலில் மிகக் குறைவான தகவல்களே தந்திருக்கிறேன். அவர் மறைந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் மதுரையில் இருக்கும் அவருடைய கல்லறையில் நினைவு தினத்தன்று குறிப்பிட்ட பிரிவினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதிலிருந்தே அவர்களுக்கு ஜோசப் எந்த அளவுக்குப் பாடுபட்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

Posted in 1947, Adhiaman, Adhiyaman, Athiaman, Athiyamaan, Athiyaman, Biography, Biosketch, British, Congress, Dinamani, Faces, Fighters, Freedom, Gandhi, Gandi, George, Independence, India, Joseph, Joseph George, Kaalchuvadu, Kalchuvadu, Kathir, Mahathma, Mahatma, Pazha Athiyaman, people, Research, Unknown | 1 Comment »

Srinivasa Sasthri – Faces: Biosketch by V Sundaram

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர்

வி. சுந்தரம்

“வெள்ளி நாக்கு படைத்த பேச்சாளர்’ (Silver tongued orator) என பிரசித்தி பெற்ற ரைட் ஆனரபிள் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி பார்க்காத உயர்ந்த பதவியில்லை – சிறந்த ஆசிரியர், சிறந்த “பார்லிமெண்டேரியன்’, சிறந்த ராஜதந்திரி, சிறந்த தூதுவர்..

1869 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் நாள் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள வலங்கைமான் கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சங்கரநாராயண சாஸ்திரியின் மூத்த குமாரரான இவர் குடும்பத்தின் வறுமையை சிறு வயதிலேயே கண்டார். சட்டையை வெளுக்க சவுக்காரம் கூட வாங்க முடியாத வறுமை, இலவசமாகக் கிடைத்த மாங்காய்களை ஊறுகாய்போட தேவையான உப்பைக்கூட வாங்க முடியாத ஏழ்மை.

கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பு பின்னர் கல்லூரியில் படிக்கும்போது இரவில் தெருவிளக்கின் வெளிச்சத்தில் பாடங்களைப் படிக்கும்படி செய்த பணமின்மை! இப்பேர்ப்பட்ட குடும்ப நிலையிலிருந்து ஒரு பெரிய பேச்சுவன்மை நிறைந்த உலகம் போற்றும் ராஜதந்திரியாக மலர்ந்தது ஒரு சுவையான கதை.

பி.ஏ. தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்று, சட்டக் கல்வி பயில பணமின்மையால் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். பிறகு பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபின் சென்னை ஹிந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரானார்.

ஆங்கிலம், சமஸ்கிருதம் இவைகளைப் போதிப்பதில் சிறந்த ஆசிரியராகப் புகழ்பெற்றதுடன் மற்ற இரு தொண்டுகளிலும் புகழ் பெற்றார். ஒன்று ஆசிரியர்களின் நன்மைக்காக முதன்முறையாக ஒரு சங்கம் நிறுவியது (Madras Teacher’s Guild) மற்றொரு தொண்டு – இன்று பல கிளைகளுடன் கொழிக்கும் திருவல்லிக்கேணி அர்பன் கோவாப்பரேடிவ் சொûஸட்டி (Triplicane urban Co-operative Society)

கல்விப் பணியில் ஈடுபட்ட சாஸ்திரியாருக்கு தேசப்பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தது. தேசத் தொண்டில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சியளிக்க தேச பக்தர் கோபாலகிருஷ்ண கோகலே இந்திய ஊழியர் சங்கம் (Servants of India Society) என்ற ஒரு ஸ்தாபனத்தை நிறுவியிருந்தார். கோகலேயின் நோக்கத்தால் கவரப்பட்ட சாஸ்திரியார், தன் நல்ல சம்பளத்தையும் பெரிய குடும்ப நிர்வாகப் பொறுப்பையும் விட்டுவிட்டு, நாட்டுப்பணியில் கோகலே அளித்த உதவித் தொகையை ஏற்றுக்கொண்டது மிக வியப்புக்குரிய செய்கையாகும்.

இச்சங்கத்தில்தான் பயிற்சிக்கு வந்த காந்திஜியை முதன்முதலில் சந்தித்தார். சாஸ்திரியின் ஆங்கில அறிவு காந்திஜியைக் கவர்ந்தது. பிற்காலத்தில் தான் தொடங்கிய “யங் இந்தியா’ என்ற பத்திரிகையின் முதல் பிரதியை சாஸ்திரியாரின் அபிப்ராயத்தை அறிய அனுப்பினார். அதில் 17 நுண்ணிய இலக்கணத் தவறுகளைச் சுட்டிக்காட்டினார். காந்திஜிக்கு சாஸ்திரியாரிடம் இருந்த மதிப்பு அதிகமாயிற்று.

மற்றொரு சமயம் தான் தொடங்க இருந்த சட்ட மறுப்பு போராட்டத்தைப் பற்றிக் கூறி சாஸ்திரியாரின் கருத்தைக் கேட்டார். இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்த சாஸ்திரியார், நோக்கம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் சட்டத்தை மீறிப் போராடுவது எதிர்காலத்தில் ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கை எவ்வளவு தீர்க்கதரிசனமுள்ளது என்பதை இப்பொழுது காண்கிறோமல்லவா!

சாஸ்திரியார் தன் சொற்பொழிவாற்றும் திறமையை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தினார். உலக அரங்கில் இந்தியாவுக்கு சுய ஆட்சி அளிக்க வேண்டுமென்று முதன்முதலில் பேசியவர் அவரே.

உலகில் எங்கெங்கெல்லாம் தீமைகள் நடந்தனவோ அவைகளுக்குப் பொறுப்பான நாடுகளை சாடினார்.

பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளுக்கு பிரயாணம் செய்து அங்கு லட்சக்கணக்கில் வாழும் இந்தியர்களுக்கு சமஉரிமை கிடைக்குமாறு செய்தார். இந்தியாவின் பெருமைகளை உலகம் அறியுமாறு செய்த முதல் இந்தியர் இவரே.

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி பிடித்த முன்னாள் பிரதமர் ஸ்மட்ஸ் அங்கு லட்சக்கணக்காக வசிக்கும் தமிழர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரிப் படிப்புக்கு எவ்வித வசதியும் செய்து தரவில்லை. சாஸ்திரியார் அங்குள்ள நகரங்களுக்குச் சென்று தன்னுடைய சொற்பொழிவுத் திறமையால் பல ஆயிரம் ரூபாய் வசூலித்து ஒரு கல்லூரியை நிறுவினார். அக்கல்லூரி டர்பன் நகரில் “சாஸ்திரி காலேஜ்’ என்ற பெயரில் சிறந்த பணி செய்து வருகிறது.

பிரிட்டிஷ் அரசு அவர் பணியைப் பாராட்டி “ரைட் ஆனரபிள்’ என்று அழைக்கப்படும் மன்னரின் “பிரிவிகவுன்சில்’ என்ற ஆலோசனை சபையின் அங்கத்தினராக்கியது.

மேலும் அவருடைய இனிய குரலில் அழகான ஆங்கிலத்தில் மயங்கிய பிரிட்டிஷ் மக்கள் “வெள்ளி நாக்கு படைத்த சொற்பொழிவாளர்’ என்று அழைத்தனர். சாஸ்திரியாரின் சொற்பொழிவு தங்குதடையற்ற பிரவாகமாகவும், பொதுவாகவும், தெளிவாகவும், வெள்ளி மணிகளின் ஓசைபோலவும் இனிய குரலில் அமைந்திருக்கும்.

அவர் பேச்சை முதன்முறையாக ஜெனிவாவில் கேட்ட பால்ப்ளோர் பிரபு (Lord Balflour) “எங்கள் இங்கிலீஷ் பாஷை மேன்மை எவ்வளவு உயரம் செல்லும் என்பதைப் புரிந்து கொண்டேன்’ என்று கூறுகிறார்.

ஒரு தடவை சாஸ்திரியாரின் சொற்பொழிவைக் கேட்க அழைக்கப்பட்டார் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மெக்டொனால்ட். ஐந்து நிமிஷமே இருக்க முடியும் என்று சொன்ன அவர் சாஸ்திரியாரின் பேச்சு முடியும் வரை இருந்தார் என்பது வியப்பளிக்கும் செய்தியாகும்.

சாஸ்திரியார் கடைசியாக வகித்தது அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியாகும். அங்கு அப்பதவிக்குரிய சம்பளத்தைப் பெறாமல் இந்திய ஊழியர் சங்கத்தில் சேரும்போது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கிணங்க ரூ. 500 மட்டுமே கௌரவப்படியாக பெற்றுக்கொண்டார். அந்தத் தொகையிலும் பாதியை ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காகவும் விடுதிச் செலவுக்காகவும் தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு கொடுத்து விடுவார்.

கல்வி கற்பிப்பதில் விருப்பம் கொண்ட அவர் தன் தள்ளாத வயதில் ஆங்கில மொழிநடையைக் கற்பிப்பார். அந்த வகுப்புகளுக்கு முதல் வரிசையில் இடம் பிடிக்க மாணவர்களாகிய எங்களுடன் ஆசிரியர்களும் ஓடி வருவது வேடிக்கையாக இருக்கும்.

சாஸ்திரியாரின் கடைசித் தொண்டு மைலாப்பூரில் அவர் நிகழ்த்திய பிரசித்தி பெற்ற ராமாயண சொற்பொழிவுகளேயாகும். அவைகளும் அவருடைய பேச்சுகளும் எழுத்துகளும் அவர் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷங்களாகும்.

லண்டன் மாநகரில் உள்ள “கில்ட் ஹால்’ என்ற பிரசங்க மண்டபத்தில் நாடுகளின் தலைவர்கள் மட்டுமே பேசலாம். அங்கு பேசியவர்களின் பட்டியலில் சாஸ்திரியாரின் பெயர் முதலிடம் வகிக்கிறது. அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அவருடைய பெரிய உருவப்படத்தின் கீழ் காணப்படும் வாக்கியம் “ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர்’.

(சாஸ்திரியாருக்கு நினைவாலயம் பல இடங்களில் இருப்பினும் அவர் பிறந்த வலங்கைமானில் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கும் விஷயமாகும். மக்களின் விருப்பம் என்று நிறைவேறுமோ?)

Posted in AICC, Attorney, Biosketch, British, Commonwealth, Congress, Durban, Education, England, English, Faces, Gandhi, Gokale, Gokhale, Instructor, Law, Lawyer, Leaders, legal, Mahathma, Mahatma, Orator, parliament, Parliamentarian, people, Sanskrit, Sasthri, Sastri, Shasthri, Shastri, Speech, Srinivas, Srinivasa, Srinivasan, Sundaram, Teacher, Vice-chancellor | 1 Comment »

Shalle we name the Vice President of India? – AB Bardhan, general-secretary CPI

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2007

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இடதுசாரி வேட்பாளராவதற்கு பரதனுக்கு நல்ல வாய்ப்பு

சந்தோஷ்பக்கங்கள்: 203. பரதன் இந்த பொழப்புக்கு நல்லா வாயில வருது

புது தில்லி, ஜூலை 11: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் தரப்பில் யாராவது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவர் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் ஏ.பி.பரதனாக இருக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பெரிய அணி இடதுசாரிகள்தான். குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பதை முடிவு செய்யும் விஷயத்தில் இடதுசாரி கட்சிகள் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியுள்ளன.

என்றாலும் அதிகாரபூர்வமாக எதையும் அவை வெளிப்படுத்தவில்லை. ஏ.பி.பரதனை தவிர,

  • இடதுசாரி சித்தாந்தத்தில் நன்கு ஊறிய இர்பான் ஹபீப்,
  • மேற்கு வங்க சட்டப் பேரவைத் தலைவர் ஹஷீம் அப்துல் ஹலீம் ஆகியோரும் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடிய வாய்ப்புடையவர்கள்.

“குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பிரதிபா பாட்டீலுக்கு நாங்கள் ஆதரவு தருவதால் அதற்கு ஈடாக குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதை எங்களிடம் விட்டு விடுங்கள்’ என இடதுசாரிகள் ஏற்கெனவே தெளிவாக அறிவித்து விட்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முகம்மது சலீம் கூறியதாவது: குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை நாங்கள் விவாதிக்கவில்லை. ஜூலை 19-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. அதற்குப் பிறகே இந்த பிரச்னை பற்றி முழுமையாக விவாதிக்கப்படும். குடியரசுத் துணைத் தலைவர் பதவி வேட்பாளராக பரதன் நிறுத்தப்படுவாரா என்பதெல்லாம் அந்த கூட்டத்தில்தான் விவாதிக்கப்படும் என்றார்.

பார்வர்டு பிளாக் பொதுச்செயலர் தேவவிரத பிஸ்வாஸ் கூறியதாவது: பரதனை நிறுத்துவது என்பது நல்ல யோசனைதான். எனினும் பரதனுக்கு பதிலாக வேறு யாரையாவது வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்துமா என்பதையும் யோசனை செய்ய வேண்டியுள்ளது என்றார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விஷயத்தில் தற்போதைக்கு பட்டென கருத்து கூறுவதை தவிர்க்க விரும்புகிறது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் ஜூலை 12-ம் தேதி தொடங்கும் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தனது நிலையை அது எடுத்துவிடும்.

இடதுசாரி சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த தலைவர் ஒருவரையே குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பது ஒரு சாராரின் யோசனை. ஆனால். அரசியல் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளில் அத்துப்படியானவரை வேட்பாளராக நிறுத்தலாம். மாநிலங்களவையையும் தலைமை ஏற்று நடத்தவேண்டியவர் குடியரசுத் துணைத்தலைவர் என்பதால் இது அவசியம் என்பது மற்றொரு சாராரின் கருத்து.

இந்த தகுதிகளை கருத்தில் கொண்டால், பரதன் பொருத்தமானவராக உள்ளார் என்று இடதுசாரி தலைவர்கள் தெரிவித்தனர்.

—————————————————————————————————-

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணிக்கும் ஏற்புடைய வேட்பாளர்: ஏ.பி.பரதன் தகவல்

புதுதில்லி, ஜூலை 16: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஏற்புடைய வேட்பாளரை இடதுசாரிகள் நிறுத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் தேசியக் குழு கூட்டம் முடிவடைந்ததை ஒட்டி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தன்னை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக கருத்தொற்றுமை எட்டப்பட்டாலும் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார் பரதன்.

வேட்பாளராக என்னை அறிவிக்கவும் மாட்டார்கள்; இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு அது ஏற்புடையதாகவும் இராது என்பது எனக்குத் தெரியும்.

என்னுடைய பெயரை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி. இதுபோன்ற விஷயங்களுக்காக கட்சியின் பொதுச் செயலாளரை முன்னிறுத்துவதை கட்சி அனுமதிக்காது. அடுத்த ஆண்டு மார்ச்சில் ஹைதராபாதில் கட்சி காங்கிரûஸ கூட்ட வேண்டிய உள்ளது. அதுவரை பொதுச் செயலராக ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என்றார் அவர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பரதன், வியாழக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக 4 இடதுசாரிக் கட்சிகளும் கூடி முடிவெடுக்க உள்ளன என்றார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தரும் ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றால் மட்டும் தங்களது ஆதரவு கிடைக்கும் என மூன்றாவது அணி கூறியுள்ளது. அவர்கள் அப்படிச் சொல்லிவிட்டதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உடனான உறவுகளை முறித்துக் கொள்ள முடியாது. மேலும் அது ஜெயலலிதாவின் அறிக்கைதானே ஒழிய, மூன்றாவது அணியின் ஒட்டுமொத்தக் கருத்து அல்ல.

காங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவரை நிறுத்த இடதுசாரிக் கட்சிகள் முயற்சி செய்யும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்படுத்தவும் முயற்சி செய்வோம். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியையும் இதற்கு ஆதரவாக மாற்ற முடிந்தால் மகிழ்ச்சி அடைவோம் என்று கூறியுள்ளார் பரதன்.

பரதனை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்துவதில் ஆட்சேபணை இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சனிக்கிழமை கூறியிருந்தது. இந்தக் கருத்துக்கு முரண்படும் வகையில் பரதன் ஞாயிற்றுக்கிழமை பேசியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக வருபவர் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; அவர் வரலாற்றாளராக, கல்வியாளராக அல்லது பொருளாதார அறிஞராகக் கூட இருக்கலாம் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிராகாஷ் காரத் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.

Posted in AB Bardhan, AB Bharadhan, Abdul Haleem, ADMK, Aligarh, Anbalagan, Anbalakan, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Andhra, AP, Barathan, Bardan, Bardhan, Barthan, Benegal, Bengal, Bharadhan, Chatterjee, Chatterji, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI(M), DMK, Elections, Forward Bloc, Forward Block, Gandhi, Gandi, Gopal, Gopal Gandhi, Hindu, Irfan Habib, Islam, Jamia Millia, JJ, Jothibasu, KK, Left, Lok Saba, LokSaba, LokSabha, Mahatma, Manmohan, Marx, Marxists, Mohammad Salim, Mushirul Hasan, Muslim, N Ram, Naidu, Nandhigram, Nandigram, National Democratic Alliance, Nayudu, NDA, parliament, Polls, Pradhiba, Pradhibha, Prathiba, Prathibha, Pratiba, Pratibha, President, Professor, Rajeev, Rajiv, Rajiv Gandhi, Rajmogan, Rajmohan, Rajmohan Gandhi, Ram, Revolutionary Socialist Party, RSP, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Shyam Benegal, Somnath, Somnath Chaterjee, Sonia, Speaker, TDP, The Hindu, United Progressive Alliance, University, UPA, UPA-Left, VC, Vice-chancellor, vice-president, VP, WB, West Bengal, WestBengal | 1 Comment »

Madurai Vaidyanatha Iyer – Temple entry anniversary of dalits

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

வரலாறு படைத்த ஆலயப் பிரவேசம்!

வி.கே. ஸ்தாணுநாதன்

நம் நாட்டின் வரலாற்றில் – குறிப்பாக, தமிழக வரலாற்று ஏடுகளில் ஜூலை மாதம் 8-ஆம் நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். பழம்பெருமை வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரபல காந்தியவாதியான அமரர் எ. வைத்தியநாத அய்யர் துணிவுடன் ஹரிஜன சகோதரர்களை வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்த ஆலயப் பிரவேசம் காலம்காலமாக ஹரிஜன சகோதரர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த உரிமையை வழங்க வழிவகுத்தது.

தீண்டாமையை ஒழிக்கவும் ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்காகவும், அமரர் வைத்தியநாத அய்யர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்கா. 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்தார். தீண்டாமைக் கொடுமையால் துன்புற்று வந்த ஹரிஜனங்களுக்காக அயராது பாடுபட்டு வந்தார்.

பல்லாண்டுகளாக வழக்கத்திலிருந்த மரபு காரணமாக அந்நாள்களில் ஹரிஜனங்கள் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. 1937ம் ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கத் தொடங்கிய பிறகு விரைந்து ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு வழிவகுக்கும் சட்டத்தை இயற்ற வேண்டுமென அய்யர் வலியுறுத்தி வந்தார்.

உயர் ஜாதி இந்துக்கள் இவ்விஷயத்தில் அக்கறை கொள்ளச் செய்ய பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிரமாகப் பிரசாரம் செய்தார். மதுரை மீனாட்சி கோயில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரைக் கலந்து ஆலோசித்து அவர்களுடைய ஒத்துழைப்பையும் உறுதி செய்து கொண்டார். 1939-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ஆம் நாள் நான்கு ஹரிஜன சகோதரர்கள் மற்றும் அந்நாளில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்கள் சிலருடன் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரவேசித்து அன்னையின் அளவிலா அருளைப் பெற்றார். தமிழக ஆலய வழிபாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது.

அய்யரின் துணிச்சலான இச் செயலைப் பாராட்டிய அண்ணல் காந்தியடிகள் 22-7-1939 ஹரிஜன இதழில் பின்வருமாறு எழுதினார்:

“இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமையை எதிர்த்து நடைபெற்று வரும் பிரசாரத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே. ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்கள் கருத்தின் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். இவ்விஷயத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்க அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் மற்றும் அவரது சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.’

ஆலயப் பிரவேசத்திற்குப் பின் சிலர் ஏற்படுத்திய தடங்கல்கள் காரணமாக அன்றாட ஆலய வழிபாடு நடைபெறுவதில் சில சிக்கல்கள் தோன்றின. இவற்றைத் தீர்த்து அன்றாட வழிபாடு சுமுகமாக நடைபெற அய்யர் அயராது பாடுபட வேண்டி இருந்தது. ஆலயப் பிரவேசம் செல்லாது என அறிவிக்கக் கோரி சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அன்றைய முதல்வராக விளங்கிய ராஜாஜி விரைந்து செயல்பட்டு ஆலயப் பிரவேசத்தை முறைப்படுத்தும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தை ஆளுநர் மூலம் பிறப்பிக்க வழிவகுத்தார். இதன் காரணமாக வழக்கு தள்ளுபடி ஆனது. பின்னர் இந்த அவசரச் சட்டம் முறையான சட்டமாக சட்டசபையில் நிறைவேறியது.

வைத்தியநாத அய்யர் துணிவுடன் செய்த ஆலயப் பிரவேசமே பின்னர் சட்டமாக உருவெடுத்து ஹரிஜனங்கள் ஆண்டவனின் சன்னதிக்குத் தங்கு தடையின்றி செல்ல வழிவகுத்தது.

1939-ம் ஆண்டில் இரண்டாவது உலகப் போர் மூண்டது. இந்தியாவின் விருப்பத்திற்கு எதிராகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆங்காங்கு காங்கிரஸ் அமைச்சரவைகள் ஒட்டுமொத்தமாக அக்டோபர் மாதத்தில் ராஜிநாமா செய்தன. அய்யர் அன்று மட்டும் ஆலயப் பிரவேசத்தைத் துணிவுடன் செய்திராவிடில் ஹரிஜனங்கள், அனைவருடனும் சரிசமமாக ஆலயத்திற்குள் நுழைந்து ஆண்டவனை வழிபடுவது என்பது பல ஆண்டுகள் தள்ளியே நடந்திருக்கும். ஏனெனில் 1939க்கு பின்னர் பொதுமக்கள் கருத்தின் மூலம் உருவான அரசு மீண்டும் 1946-ம் ஆண்டுதான் பதவியேற்றது.

ஹரிஜன ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தால்தான் ஆலயங்களுக்குள் வழிபாடு செய்யச் செல்வது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார். தாமும் மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனை வழிபட எண்ணிணார். எனினும் இரண்டாம் உலகப் போர், “வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ போன்றவைகளால் அந்த எண்ணம் தள்ளிப்போயிற்று. 1946-ஆம் ஆண்டு சென்னையில் தக்கர் பாபா வித்யாலயா புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்ட வந்தபோது, இதற்காகவே மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 8-ஆம் நாள் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியின் முக்கியமான நாளாகும். இந்நாளில் அமரர் வைத்தியநாத அய்யருக்கும் அவருக்கு உறுதுணையாக விளங்கி இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அனைவருக்கும் சிரம் தாழ்த்தி கரம் குவித்து அஞ்சலி செய்வோம்!

(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தக்கர் பாபா வித்யாலயா, சென்னை.)

———————————————————————————————————

மீனாட்சி அம்மன் கோயிலில்- 68 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமையை அகற்றிய அரிஜன ஆலயப் பிரவேசம்


மதுரை, ஜூலை 8: ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைக்குப் போராடும் நேரத்தில் நமது நாட்டில் இருந்த சமூக அவலமான தீண்டாமையை எதிர்த்துப் போரிடும் உன்னதப் பணியில் முத்தாய்ப்பாக நடத்தப்பட்டதுதான் அரிஜன ஆலயப் பிரவேசம்.

காந்தியடிகளின் அறிவுரையை ஏற்று செயல்படுத்துவதில் மதுரையில் அவரின் மறுபதிப்பாகத் திகழ்ந்தவர் வைத்தியநாத ஐயர். இளம் வயது முதல் சாதிப் பாகுபாடுகளை வெறுத்தவர்.

கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்ற சமூகக் கொடுமையைப் போக்க அவரது தலைமையில் 8.7.1939-ம் தேதி காலையில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம் நடக்கும் என அவர் அறிவித்தார்.

இதற்கு ஒருசாரார் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பாளர்களின் கிளர்ச்சியை முறியடிப்போம், ஆலயப் பிரவேசத்தை வரவேற்கிறோம் என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறிக்கை வெளியிட்டார். இது எதிர்ப்பாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து திட்டமிட்டபடி பூஜை பொருள்களுடன் அரிஜன சேவா சங்கத் தலைவர் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் சிலர் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு கோயிலின் அறங்காவலர்களில் ஒருவரான ஆர்.எஸ்.நாயுடு அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

முதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, பின்னர் மீனாட்சி அம்மன் சன்னதி சென்று வழிபட்டனர். இதையடுத்து கோயிலிலிருந்து வெளியே வந்து அரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தது என அறிவித்தனர்.

இந்த நிலையில், சட்டத்தை மீறி ஆலயப் பிரவேசம் செய்ததாக சிலர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி, ஆளுநர் மூலம் ஓர் அவசரச் சட்டத்தை முன்தேதியிட்டு பிறப்பிக்கச் செய்து ஆலயப் பிரவேசத்தை சட்டப்படி செல்லத்தக்கதாக்கினார். இதனால் ஆலயப் பிரவேசம் தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. ஆலயப் பிரவேசம் நடந்து ஞாயிற்றுக்கிழமையோடு (ஜூலை 8) 68 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், வரலாறும் மறக்கவில்லை. மக்களும் மறக்கவில்லை.

Posted in Aiyangaar, Aiyankaar, Aiyer, Anniversary, Archakar, backward, Brahmin, Caste, Civil, Community, Dalit, Deity, Evils, Forward, Freedom, Gandhi, Gita, Harijan, Hinduism, Hindutva, HR, Independence, isolation, Iyangaar, Iyangar, Iyankaar, Iyer, Keeripatti, Madurai, Mahatma, Manu, Meenakshi, Oppression, Papparappatti, Pooja, Rajaji, Religion, Reservation, rights, SC, Society, ST, Temple, Tolerance, Untouchability, vaidhiyanatha aiyer, vaidhiyanatha iyer, vaidhyanatha aiyer, vaidhyanatha iyer, vaidiyanatha aiyer, vaidyanatha aiyer, vaidyanatha iyer, Vaithyanatha Aiyar, Veda, Vedas, Vedha, Worship | 2 Comments »

Waste Management – Power generation from Garbage

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

நகர்ப்புற திடக்கழிவுகளிலிருந்து எரிசக்தி!

என். விட்டல்

அரசியல்வாதிகளுக்கும் காந்தியவாதிகளுக்கும் கிராமப்புறங்கள் புனிதமானவை. கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்று உணர்ந்ததால், இந்தியாவின் எதிர்காலத்தையே கிராம ராஜ்யத்தின் வலுவோடு வளப்படுத்த காந்திஜி கனவுகண்டார்.

பெரும்பாலான வாக்காளர்கள் இன்னமும் கிராமங்களில்தான் வாழ்கின்றனர் என்பதால் நமது அரசியல்வாதிகளுக்கும் கிராமப்புறம் புனிதமானதாகத் திகழ்கிறது.

எது எப்படியிருந்தாலும் இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் நகர்மயமாதல் அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு நகரங்களில்தான் என்பதால் நம் நாட்டின் 40 சதவிகித மக்கள் நகரங்களில்தான் இப்போது வசிக்கின்றனர். எல்லா ஊர்களிலும் பெரு நகரங்களிலும் சேரிப்பகுதிகள் வளர்ந்து கொண்டே வருவது இதற்கு நல்ல ஆதாரம்.

நகர்ப்புற வசதிகளைக் கிராமங்களிலேயே ஏற்படுத்தினால், நகர்ப்புறமயத்தைத் தடுக்கலாம் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் ஐ.ஐ.டி.யின் பேராசிரியர் பி.வி. இந்திரேசனும் எப்போதிருந்தோ கூறி வருகின்றனர். இருந்தாலும், இந்தியா மேலும் மேலும் நகர்மயமாவதைத் தடுக்க முடியாது. நகர்ப்புறப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றைத் திறமையாக, ஒழுங்காக நிர்வகிப்பது எப்படி என்று ஆலோசிப்பதே இப்போதைய தேவை.

நகரப்பகுதிகளுக்கு மிகவும் சவாலான பணியாக இருப்பது, குப்பைகளை எப்படி அகற்றுவது அல்லது பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்பதுதான். நகரங்களில் சேரும் குப்பைகளின் அளவும், தரமும் நகரவளர்ச்சியோடு நேரடியாகத் தொடர்பு உடையது என்பது வேடிக்கையானது! இந்தியாவில் நகர்ப்புறங்களில் ஒரு நாளில் ஒரு நபருக்கு 400 கிராம் வீதம் குப்பைகள் சேருவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் நபர் வாரி குப்பை அளவு தலா ஒன்றரை கிலோ முதல் 2 கிலோ வரை இருக்கிறது. இதுதான் உலகிலேயே அதிகபட்ச அளவாகும்.

இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் வீதம் குப்பை சேருகிறது. இதில் பெரிய நகரங்களின் பங்கு 60 சதவிகிதத்துக்கும் மேல். அதாவது 40 சதவிகித மக்கள்தொகை 60 சதவிகித குப்பைகளைக் கொட்டுகின்றனர்.

குப்பைகளை அகற்றுவதும், அவற்றைப் பயனுள்ளதாக மாற்றுவதும் நகர நிர்வாகங்களுக்குச் சவால் விடும் வேலையாகும். பொதுவாக நகர்ப்பகுதிகளில் குப்பைகளை அகற்றினால் அவற்றைத் திறந்த வெளியில் எங்காவது பள்ளம் பார்த்து கொட்டி நிரப்புவதே நடைமுறையாக இருக்கிறது.

இப்படி குப்பைகளைத் திறந்தவெளிப் பள்ளங்களில் கொட்டி நிரப்பிய பிறகு அடுத்த சுகாதார பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. அவற்றைப் பெருச்சாளிகளும் பன்றிகளும் தோண்டி துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குப்பைகளிலிருந்து வடியும் கழிவுநீர் நிலத்தில் ஊறி, நிலத்தடி நீர்மட்டத்தையும் தரைக்கடியில் உள்ள நீரோட்டத்தையும் பாழ்படுத்துகிறது. அதுமட்டும் அல்ல, “”குப்பையை எங்கள் பகுதியில் கொட்டாதே!” என்று ஆங்காங்கே போர்க்குரல்கள் எழுகின்றன. எங்கு பணக்காரர்கள் இல்லையோ, எங்கு செல்வாக்கானவர்கள் இல்லையோ அந்த இடம் பார்த்து குப்பைகளைக் கொட்டிவிடுகின்றனர் உள்ளாட்சிமன்ற அதிகாரிகள்.

குப்பைகளை அகற்றுவதற்கு 3 வழிகள் உள்ளன.

1. குப்பைகளை எரிப்பது. அதன்மூலம் 90 சதவிகித குப்பைகளைக் குறைத்துவிடலாம்.

2. மண்புழுக்கள் போன்றவை மூலம் குப்பைகளை மக்கவைத்து எருவாக மாற்றுவது.

3. குப்பைகளைத் தொட்டியில் போட்டு, வெளிச்சமும், காற்றும் படாமல் மறைத்து அதிலிருந்து மீத்தேன் வாயுவைத் தயாரிப்பது.

இதே குப்பை மலைபோலக் குவிந்தால் இந்த மூன்று முறையில் ஏதாவது ஒன்றை கடைப்பிடிப்பது கூட கடினமான பணிதான்.

இப்படி குப்பைகளைப் பரத்தி கொட்டவும் பிறகு வேறு வடிவத்துக்கு மாற்றவும் நிறைய நிலப்பகுதியும் ஆள்பலமும் தேவை. அவை உள்ளாட்சி மன்றங்களிடம் இல்லை. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, வேறு வடிவத்துக்கு மாற்றவும் எரிபொருளாகப் பயன்படுத்தவும் முன்னுரிமை தரவேண்டும்.

மேலை நாடுகளில் குளிர்காலத்தின்போது வீடுகளை கதகதப்பாக வைத்திருக்க எரிபொருள்களைப் பயன்படுத்துகின்றனர். அந்த எரிபொருளை உள்ளாட்சி மன்ற நிர்வாகம் குப்பைகளிலிருந்து தயாரித்து குழாய் வழியாக எல்லா வீடுகளுக்கும் அனுப்புகிறது. இதனால் குப்பையும் பயனுள்ள பொருளாகிறது, எரிபொருள் செலவும் மிச்சப்படுகிறது. பெட்ரோல், டீசல் போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் செலவும் கணிசமாக மிச்சப்படுகிறது.

ஐரோப்பா முழுவதும் 5 கோடி டன் எடையுள்ள குப்பைகளை, 400 சிறு ஆலைகள் மூலம் எரிபொருளாக மாற்றிப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் மக்கள் நெருக்கமாக வாழும் நகரங்களில் இந்த வழியையே பின்பற்றுகின்றனர். அமெரிக்காவில் உள்ள இத்தகைய 100 ஆலைகள் 2,800 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கின்றன. இதனால் 104 கோடி காலன் எரிபொருள் மிச்சப்படுகிறது. 2002-ல் அமெரிக்காவின் 15 மாநிலங்கள், இத்தகைய எரிசக்தி ஆலைகளுக்கு 85 சதவிகித குப்பைகளை அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குப்பையை எரிபொருளாக மாற்றுவது இரண்டு நிலைகளைக் கொண்டது. முதல் பகுதி கழிவுகளிலிருந்து எரிபொருளைத் தயாரிப்பது. கரி உருண்டைகளைப் போல சிறு கழிவு உருண்டைகளைத் தயாரிப்பது முதல் கட்டம். நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கு இந்த கரி உருண்டைகள் மிகவும் பயன்படும்.

உதாரணத்துக்கு ஹைதராபாதில் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.1,800. குப்பையிலிருந்து பெறப்படும் கரி உருண்டையின் விலை ரூ.1,000. இதை ஹைதராபாத் பகுதி தொழிற்சாலைகளும் ஏழைகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த உருண்டைகளைத் தயாரிக்கும் ஆலைகள் டன்னுக்கு ரூ.200 கூடுதலாக விலை வைத்தாலும் வாங்குகிறவர்களுக்கு அது குறைந்த விலைதான். கரி உருண்டையைத் தயார் செய்யும் ஆலைக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

தொழில்நுட்ப வளர்ச்சி வாரியம் என்ற உயர் அமைப்பு ஆந்திரத்தின் ஹைதராபாத், விஜயவாடா ஆகிய இரு நகரங்களில் சோதனை அடிப்படையில் இத்தகைய கரி உருண்டைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ஆலையை நிறுவியது. இரண்டின் உற்பத்தித்திறன் தலா 6 மெகாவாட். இதில் ஹைதராபாத் ஆலை 50 சதவிகிதம் திறனுடனும், விஜயவாடா ஆலை 80 சதவிகிதம் திறனுடனும் செயல்படுகின்றன. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கரி உருண்டைகளைத் தயாரிப்பது, மின்சாரத்தைத் தயாரிப்பதைவிட லாபகரமானது.

இதேபோன்ற ஆலைகளை நாடு முழுவதும் நிறுவி, அன்றாடம் 50 டன் குப்பைகளைக் கையாண்டு கரி உருண்டைகளைத் தயாரித்தால் 20 டன் எடையுள்ள கரி உருண்டைகளைப் பெறலாம். இது ஒவ்வொன்றும் 10 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும். இந்த ஆலைக்கு மிகக்குறைந்த நிலப்பரப்பு இருந்தால் போதும். இதனால், சுகாதாரம் சீர்கெடுவதும் தடுக்கப்படும்.

50 டன் எடையுள்ள குப்பைகளை அன்றாடம் கையாளும் திறன் உள்ள எரிபொருள் தயாரிப்பு ஆலையை நிறுவ ரூ.80 லட்சம் செலவாகும். கரி உருண்டைகளை டன் ரூ.1,000 என்று விற்கலாம். இந்த ஆலை மழைக்காலத்தில் செயல்படாது. எனவே ஆண்டில் 10 மாதங்கள்தான் இதில் உற்பத்தி இருக்கும். அன்றாடம் 20 டன் கரி உருண்டைகளைத் தயாரிக்க முடியும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் இதில் வருமானம் கிடைக்கும்.

இந்த ஆலையின் வடிவமைப்பு, இயங்கு திறன் ஆகியவற்றை மேலும் சீரமைத்து, ஆலைக்கான பாகங்களை நல்ல தரத்தில் தயாரித்து நாடு முழுவதும் வழங்கினால் இதன் உற்பத்தித்திறன் பலமடங்கு அதிகரிக்கும். அடுத்து இந்த ஆலையை நிறுவ வங்கிகளைத் தேர்வு செய்து அல்லது நிதியங்களை நியமித்து அவற்றின் மூலம் முதலீடு செய்யலாம்.

மாநில அரசுகளும் உள்ளாட்சி மன்றங்களும் இதில் தீவிர அக்கறை காட்டி, அன்றாடம் 50 டன் குப்பைகளைக் கையாளும் எரிபொருள் உற்பத்தி ஆலைகளை நிறுவலாம். குப்பைகள் கிடைப்பதைப் பொருத்து இந்தத் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம். காலவரம்பு நிர்ணயித்து இதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் நிர்வாகத்துடன் ஊழியர்களும் லாபத்தைப் பகிர்ந்துகொள்ளும் அதே வழிமுறையைக் கையாண்டால் இந்த ஆலைகளால் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பும் நல்ல வருவாயும் கிடைக்கும். நகர்ப்புற திட்டமிடலில் தொடர்புள்ள அனைவரும் இதில் கவனம் செலுத்துவது நல்ல பொருளாதார பலன்களைத் தரும்.

(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்.)

Posted in Alternate, Andhra, AP, APJ, Bhogi, Bogi, Burn, City, Coal, Disposal, Electricity, Employment, energy, Factory, Fuel, Gandhi, Garbage, Gas, Hyderabad, Jobs, Kalam, Mahathma, Mahatma, Management, Megawatt, Methane, Metro, Municipality, MW, Pongal, Poor, Power, Recycle, Rich, Rural, Sprawl, Suburban, Trash, Vijayawada, Villages, Waste, Water | 6 Comments »

Lamenting the corrupt Political Powers – Uttar Pradesh to Tamil Nadu & its Party Leaders

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

கோடிக் கோடி இன்பம் பெறவே…

இரா.சோமசுந்தரம்

“”ரூ. 52 கோடியும் தொண்டர்கள் கொடுத்த பணம்”

உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி இதைச் சொன்னபோது இந்தியாவின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் நெஞ்சமும் குளிர்ந்திருக்கும். சிலர் ஆனந்த நடனமாடியிருப்பார்கள். எங்கும் நிம்மதிப் பெருமூச்சு!.

ஏனென்றால் எல்லாக் கட்சித் தலைவர்களின் சொத்துக் குவிப்பையும் மாயாவதி ஒரே வரியில் நியாயப்படுத்தி விட்டார், எல்லா கறுப்பு பணத்துக்கும் “மஞ்சள் நீர்’ தெளித்து வெள்ளைப்பணமாக மாற்றிவிட்டார்.

இந்த வாதம் எல்லா முதல்வர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். எல்லாமும் தொண்டர்கள் கொடுத்தது என்று எளிதாகச் சொல்லிவிடலாம். எல்லாம் அவன் (தொண்டன்) செயல்!

தற்போது கட்சிக்குத் தரும் பணம் மட்டும்தான் யார் கொடுத்தது என்ற கணக்கு வழக்கு இல்லாமல் வந்து குவியும் நிலைமை இருந்து வருகிறது. ஒரு மாநாடு நடத்தி, கட்சி நிதியாக ரூ.5 கோடியை அளித்தால் அது அந்த மாநாட்டில் தொண்டர்கள் தந்ததாக வரவு வைக்கப்படும்.

ஆனால், அமெரிக்காவில் தேர்தல் நிதி திரட்டும் ஒவ்வொரு வேட்பாளரும் கணக்கு காட்ட வேண்டும். 200 டாலர்களுக்கு அதிகமாக நன்கொடை அளித்தவர் பெயர், முகவரி, அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் அந்த நடைமுறை இல்லை. ஆகவே தொல்லையில்லை.

கட்சி வளர்ச்சி நிதியைப் போலவே, இனிமேல் கட்சித் தலைமை வளர்ச்சி நிதிக்கும் கணக்கு கேட்கக் கூடாது என்பதாக மாயாவதியின் பதில் அமைந்துள்ளது.

ஒரு முதல்வர் பேசியது இப்படி என்றால், பிரதமர் பேச்சு இதற்கு ஒரு படி மேலே.

“”பிரதிபா பாட்டீல் மீது காழ்ப்புணர்ச்சியால் சேறு பூசுகிறார்கள். அவரது சர்க்கரை ஆலை வங்கிக் கடனை (பல கோடி ரூபாய்) “சூழ்நிலை காரணமாகச்’ செலுத்தவில்லை. மகாராஷ்டிரத்தில் இப்படிக் கடனைச் செலுத்தத் தவறிய 72 சர்க்கரை ஆலைகளை ஜனசத்தா நாளிதழ் பட்டியலிட்டுள்ளது” என்று பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறியிருக்கிறார் பிரதமர்.

இதை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சொல்லியிருந்தால் அது வெறும் பதில் என்பதாக மட்டுமே முடிந்துபோகும். ஆனால் நாட்டின் பிரதமர் இத்தகைய பதிலை சொல்வது முறையல்ல.

வங்கிக் கடனைத் திருப்பித் தர முடியாத தொழில் நெருக்கடி இயல்பானது ஒன்றுதான். ஒரு சாதாரண நபர் வங்கிக் கடன் வாங்கி, தொழில் தொடங்கி, நலிந்து போகும்போது பிணையாக வைக்கப்பட்ட சொத்துகள் ஏலத்தில் விடப்படுகின்றன. ஆனால், பிரதிபா பாட்டிலுக்கு இப்போது சொத்து எதுவுமே இல்லை எனச் சொல்ல முடியுமா?

“கடனைத் திருப்பிச் செலுத்தாத 72 ஆலைகளில் பிரதிபா பாட்டீலின் ஆலையும் ஒன்று’ என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்வது, ஒரு தவறை வலிந்து நியாயப்படுத்துவதாக உள்ளது.

மகாத்மா காந்தி சென்ற இடமெல்லாம் பெண்களும், நாட்டுப் பற்றாளர்களும் தங்கள் உடைமைகளையும் பொன்நகைகளையும் அள்ளிக் கொடுத்தனர். அவை அவரிடம் கொடுக்கப்பட்டவை. அவர் மீது நம்பிக்கை வைத்து கொடுக்கப்பட்டவை. அதை அவர் விருப்பம்போல செலவிடலாம் என்ற உரிமையையும் சேர்த்துக் கொடுத்த பொருள்கள்தான். ஆனால் காந்தி அவற்றை தனது சொத்தாக மாற்றிக் கொள்ளவில்லை.

வினோபா பவே இந்தியா முழுவதும் நடையாய் நடந்து பெரும் பணக்காரர்களிடம் பூமிதானம் பெற்றார். அதில் ஒரு சிறு பகுதியைக்கூட அவர் பெயரில் மாற்றிக் கொள்ளவில்லை.

காமராஜர் கை காட்டினால் கொண்டு வந்து கொட்டித்தர ஆட்கள் இருந்தனர். அவரும் கை காட்டினார். ஆனால் அது தனக்காக அல்ல, கட்சிக்காகவும், கட்சித் தொண்டர்களுக்காகவும் மட்டுமே. சத்தியமூர்த்தி பவனும், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானமும் அதற்கு சாட்சி.

அண்ணா துரை முதல்வர் ஆன பின்னரும் எளிய மனிதர்தான். பெரும் சொத்துகளுக்குச் சொந்தக்காரர் அல்லர். அவரது வளர்ப்பு மகன் டாக்டர் என்ற போதிலும் சென்னையில் பெரிய மருத்துவமனையைக் கட்டி, மருத்துவக் கல்லூரியாக மாற்றிக்கொள்ள எந்த ஏற்பாடும் அவர் செய்யவில்லை.

இப்படியான தலைவர்களின் வரிசையில், மாயாவதி தனது சொத்து ரூ.52 கோடிக்கு கணக்கு சொல்லியிருக்கும் விதமும், பிரதீபா பாட்டிலின் சர்க்கரை ஆலைக்குப் பிரதமரின் நியாயப்படுத்தலும் இந்திய அரசியலமைப்பை கேலி செய்வதாக இருக்கிறது. நமது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றியும் அவர்களது வாரிசுகளையும், நண்பர் வட்டங்களையும் பற்றி புத்தகமே போடலாம்.

அரசு ஊழியர் ஒருவரோ, பொதுமக்களில் ஒருவரோ தனது வருமானத்துக்கு மீறிய சொத்து குறித்த கேள்விக்கு மாயாவதியின் பதிலைச் சொல்ல முடியுமா? “என் நண்பர்கள் கொடுத்தது’ என்றும், “எனக்குக் கிடைத்த அன்பளிப்புகள்’ என்றும் அவர் சொன்னால் அரசு ஏற்குமா?

ஆனால் அரசியல் கட்சித் தலைவர்களால் சொல்ல முடியும்.

ஏனெனில், இந்தியக் குடிமகன் சட்டத்துக்கு கட்டுப்பட்டவன். ஆனால், இந்திய அரசியல்வாதிக்கு சட்டம் கட்டுப்பட்டது.

எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வல் எழுதிய அரசியல் அங்கதச் சுவை நாவல் “அனிமல் ஃபார்ம்’. இதில் இடம்பெறும் சொற்றொடர் என்றைக்கும் பொருத்தமானது: “”எல்லாரும் சமம். சிலர் மற்றவர்களைவிட கூடுதல் சமம்”. (All are equal. But some are more equal than others).

Posted in abuse, Anna, BJP, Bribes, Camapign, Contributions, Corruption, Finance, Gandhi, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, kickbacks, Law, Mahatma, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Mulayam, NGO, Order, Politics, Power, Prathiba, Pratiba, Pratibha, Pratibha Devisingh Patil, Pratibha Patil, reforms, Sonia, SP, UP, Vinoba, Vinobha, Yadav | Leave a Comment »

Notable Women series in Kumudham: Thiruvengimalai Sarvanan – Padmasri Ambujammal

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

குமுதம்
மறக்க முடியாத மங்கைகள்
‘பத்மஸ்ரீ’ அம்புஜம்மாள்
திருவேங்கிமலை சரவணன்

இந்த வாரம் நாம் சந்திக்கப் போகும் மறக்க முடியாத மங்கை ‘பத்மஸ்ரீ’ அம்புஜம்மாள். எல்லோரும் அவரை அம்புஜம்மாள் என்றழைத்தாலும் மகாத்மா காந்திஜி மட்டும் ‘அம்புஜம்’ என்று அன்பாய் அழைப்பார்.

காந்திஜியின் அன்புக்கே பாத்திரமாய் இருந்த அம்புஜம்-மாளுக்கு இளமைப் பருவத்தில் அத்தனை அன்பு கிடைக்கவில்லை. பிறந்ததுமே உற்றார், உறவினர்களால் தூற்றப்பட்ட பெண்தான் அம்புஜம்மாள். காரணம் பெண்ணாகப் பிறந்தது.

1899_ம் வருடம், சென்னை சீனிவாச அய்யங்கார், ரங்கநாயகி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார் அம்புஜம்மாள், மூன்றாவது பெண் குழந்தையாக. இதில் குடும்பத்தாருக்கு வெறுப்பு. மூன்றும் பெண் குழந்தையாகிவிட்டதே. அதிகம் வளர்ச்சியுறாத காலகட்டம் அது என்றாலும், அம்புஜம்மாள் பிறந்தது சாதாரண குடும்பமல்ல. தாய்வழி தாத்தா சர்.வி.பாஷ்யம் அய்யங்கார் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். சென்னையில் முதல் பெண்களுக்கான பள்ளியை நிறுவியவர். இன்று அந்தப் பள்ளி லேடி சிவஸ்வாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி என்ற பெயரில் புகழ் பெற்று விளங்குகிறது. அதேபோல், திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு அவரது முயற்சியில் உருவானதுதான்.

தாத்தா அப்படியென்றால், தந்தை சீனிவாச அய்யங்காரும் லேசுப்பட்டவர் அல்ல. புகழ் பெற்ற வழக்கறிஞர். சென்னை மாநில அட்வகேட் ஜெனரலாகப் பணி புரிந்தவர். இத்தனை பாரம்பர்யம், பின்னணி இருந்தும் இளமையில் அம்புஜம்மாளுக்குப் பிரச்னை. அவர் பிறந்த சில மாதங்களிலேயே அவருக்கு தோல்வியாதி வந்து பார்க்கவே படுபயங்கரமாகி விட்டார். மற்ற குழந்தைகளைப் பாசத்துடன் கொஞ்சுபவர்கள்கூட குழந்தை அம்புஜம்மாளை நெருங்கத் தயங்கினார்கள். இதற்கிடையே, அம்புஜம்மாளின் அக்கா இறந்துவிட அதற்கும் அம்புஜம்மாள்தான் காரணமாக சொல்லப்பட்டார்! ‘பிறந்த ராசி அக்காவை சாப்பிட்டுட்டா’ என்று ஒதுக்கினார்கள்.

சென்னை வெயில் ஒத்துக்கொள்ளாததால்தான் தோல் வியாதி என்று கண்டறிந்து அம்புஜம்மாளை பெங்களூரில் உள்ள உறவினர் இல்லத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அங்குதான் அம்புஜம்மாள் வளர்ந்தார். தோல் நோய் குணமாகியதும் சென்னை கூட்டி வரப்பட்டார். இதற்கிடையே, ரங்கநாயகிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குடும்பத்தில் எல்லோருக்கும் சந்தோஷம். அம்புஜம்மாளுக்கும் தம்பி வந்ததில் மகிழ்ச்சிதான். ஆனால், அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. குடும்பத்தின் ஆண் குழந்தையை எல்லோரும் கொண்டாட மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டார் அம்புஜம்மாள்.

தம்பி பார்த்தசாரதிக்கு ஏழு வயதாகும்போது, அவனை பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால், மூத்தவள் அம்புஜம்மாளை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். அது அவரை மிகவும் பாதித்து விட்டது. படித்தவர்கள், உயர் வகுப்பினர் என்று சொல்லப்பட்டவர்கள்_ ஆனால் அவர்கள் குடும்பத்திலும் ஆண் பெண் பேதமிருந்தது. மகனின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிய குடும்பத்தினர் மகளின் பிறந்தநாளை மறந்து விடுவார்கள்.

ஆனாலும் அம்புஜம்மாளுக்குப் படிக்க வேண்டும் என்று ஆர்வம். அம்மா_அப்பாவைக் கெஞ்சினார். தாத்தாவிடம் கேட்டார். மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு அனுமதி கிடைத்தது. பள்ளிக்கூடம் போக அல்ல, வீட்டிலேயே படிக்க. அம்புஜம்மாளுக்கு வீட்டிலேயே பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்-மணியை வேலைக்கு அமர்த்-தினார்கள்.

இப்படியே போய்க் கொண்டி-ருந்த அம்புஜம்மாளின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை சம்பவம் நிகழ்ந்தது.

அம்புஜம்மாளின் தந்தை சீனிவாச அய்யங்கார் காங்கிரஸ் தலைவர்-களிடம் நெருங்கிப் பழகுபவர். ஒருமுறை ராஜாஜி இங்கிலாந்து சென்று திரும்பினார். அவருக்கு ஒரு விருந்துக் கொடுத்தார் சீனிவாச அய்யங்கார். இதையறிந்ததும் அம்புஜம்மாளின் பாட்டிக்குக் கோபம். ‘கடல் கடந்து போய் வந்தவருக்கு விருந்தா? நம் ஆச்சாரமே போச்சு. இனி நான் இந்த வீட்டில் தண்ணீர்கூட குடிக்க மாட்டேன்’ என்று கிளம்பிப்போய்விட்டார். இது அம்புஜம்மாளின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வீணான மூட நம்பிக்கைகள் மீதும் பழக்க வழக்கங்கள் மீதும் கோபம் ஏற்பட்டது. தன் வாழ்க்கை இவர்களைப் போல் அமைந்து விடக் கூடாது என்று எண்ணினார்.

ஆனால் அத்தனை சுலபமல்ல. அதுவும் அந்த வயதில் பழக்க வழக்கங்களை மாற்றுவது எளிதாக இல்லை. அந்தக் கால வழக்கப்படிதான் அம்புஜம்மாளுக்குத் திருமணம் நடந்தது. பால்ய விவாகம். அப்போது அவருக்கு பன்னிரண்டு வயதுதான். மணமகன் தேசிகாச்சாரி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். திருமணத்துக்குப் பிறகு, சில ஆண்டுகளில் அவரது வாழ்க்கை மாறியது. சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. வீட்டருகே இருந்த பெண்கள் சங்கத்தில் சேர்ந்தார். இந்தச் சமயத்தில் முதல் உலகப் போர் வந்தது. சென்னையிலும் குண்டுகள் விழுந்தன. அந்தச் சமயத்தில் உலகப் போரில் போரிட்டுக் கொண்டிருந்த இந்திய ராணுவத்தினருக்கு உதவ பெண்கள் சங்கத்தினர் விரும்பினார்கள். துணிகள், மருந்துகள், போன்ற-வற்றைச் சேகரித்து போர் முனையிலிருக்கும் ராணுவத்-தினருக்கு அனுப்பினர். நிதியும் திரட்டிக் கொடுத்தார்கள். அப்போது அம்புஜம்மாளுக்கு பதினைந்து வயதுதான். இந்தச் சமயத்தில் அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

சரி, வாழ்க்கை இனிய பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்ற நேரத்தில் அவருக்குத் திடீர் சோதனைகள் தோன்றின, அம்புஜம்மா¬ காசநோய் தாக்கி-யது. ஒன்பதாம் வகுப்பு படித்துக்-கொண்டிருந்த தம்பி பார்த்தசாரதிக்கு இடுப்பில் அடிப்பட்டு ஒரு பக்கம் சாய்ந்து நடப்பது போல் ஆகிவிட்டது. ஏற்கெனவே, அவனுக்கு லேசான இளம்பிள்ளை-வாதம் உண்டு. தாய் ரங்கநாயகிக்கு இதய நோய் வந்து படுத்த படுக்கையாகிவிட்டார். தாய் வழி தாத்தா திடீரென மறைந்தார்.

இந்தக் கவலைகள் எல்லாம் அம்புஜம்மாளைத் தாக்கின.

ஒரே ஒரு, சந்தோஷமான விஷயமும் நடந்தது. தந்தை சீனிவாச அய்யங்காருக்கு அட்வகேட் ஜெனரல் பதவி கிடைத்தது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்த காந்திஜி, விடுதலைப் போராட்டத்தை துவக்கியிருந்தார். சென்னைக்கும் வந்து அம்புஜம்மாளின் இல்லத்தில்தான் தங்கியிருந்தார். காந்திஜியின் எளிமையான பழக்க வழக்கங்களை நேரில் பார்த்த அம்புஜம்மாளுக்கு ஆச்சர்யமாயிருந்தது. காந்திஜியின் கொள்கைகள் மீதும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மீதும் அவருக்கு ஈடுபாடு வரத் துவங்கியது.

இந்தச் சூழலில் சென்னையில் ‘இந்தியர்களுக்கு சுயாட்சி’ என்ற இயக்கத்தை துவக்கினார் அன்னிபெசன்ட் அம்மையார். அந்தக் கூட்டங்களுக்கு தந்தைக்குத் தெரியாமல் அம்புஜம்மாளும் சித்தி ஜானம்மாளும் சென்று வந்தார்கள். தந்தை சீனிவாச அய்யங்காருக்கு அன்னிபெசன்ட் அம்மையாரைப் பிடிக்காது. இங்கிலாந்து அரசுக்கு விரோதமாக செயல்படுவதால் அவரைக் கைது செய்ய அரசு உத்தரவிட்டது. ‘கைது வேண்டாம். ஊட்டியில் வீட்டுக் காவலில் வைக்கலாம்’ என்று அரசுக்கு யோசனை சொன்னார் அட்வகேட் ஜெனரலாக இருந்த சீனிவாச அய்யங்கார். இது அம்புஜம்மாளுக்குப் பிடிக்காமல் மன வேதனையுற்றார். இதே போல் தந்தை மேல் கோபமுற்ற இன்னொரு சம்பவமும் உண்டு.

ஆங்கில அரசு சென்னையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குத் தடையுத்தரவு போட்டிருந்த காலம், அம்புஜம்மாளும் அவரது பெண்கள் சங்கமும் மார்கழி மாத பக்தி பாடல்கள் என்று சொல்லி, நாட்டுப்பற்று பாடல்களையும், உரிமை கீதங்களையும் பாடி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலைச் சுற்றிவருவார்கள். முதலில் கண்டுபிடிக்காத காவல்துறை பிறகு கண்டுபிடித்துப் பெண்கள் சங்கத்தினரைக் கைது செய்தார்கள். , அம்புஜம்மாளை கைது செய்யவில்லை. காரணம், அவர் தந்தையின் செல்வாக்கு. தன்னை போலீஸ் கைது செய்யாததற்குக் காரணம் தன் அப்பா என்று தெரிந்து விட்டு வீட்டுக்குச் செல்லாமல் சித்தி வீட்டில் தங்கிவிட்டார்.

1932. கள்ளுக் கடை மறியல், அந்நிய துணிக் கடை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு பலர் சிறைக்குச் சென்றனர். இதில் அம்புஜம்மாளும், ஜானம்மாளும் ஆறுமாத சிறைவாசம் வேலூர் சிறையில் இருந்தனர். சிறையிலிருந்து விடுதலையான பின் மீண்டும் கதர் விற்பனை, காங்கிரஸ் கூட்டங்களை நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டார் அம்புஜவல்லி. பம்பாய் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று காந்திஜியைக் கண்டு மகிழ்ந்த அம்புஜவல்லி அவருக்கு நாள் முழுவதும் பணிவிடை செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அந்த சமயத்தில் அம்புஜவல்லி என்ற பெயர் நீளமாக இருப்பதாகக் கூறி அம்புஜம் என்று காந்திஜி அழைக்கத் துவங்கினார். காந்திஜியின் அருகில் அமர்ந்து கொண்டு அவருக்கு விசிறிக் கொண்டிருப்பதும், அவர் பேசுவதை கவனிப்பதிலும், அம்புஜம்மாளுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. காங்கிரஸ் மாநாடு முடிந்து சென்னை திரும்பும் போது, நவம்பர் 1_ஆம் தேதி ‘வார்தா’ ஆசிரமத்திற்கு வர முடியுமா? என்று காந்திஜி கேட்டார்.

கொஞ்சம் கூட யோசிக்காமல் ‘ஓ கட்டாயம் வருகிறேன்’ என்று கூறிவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தவுடன் தந்தையிடம் அனுமதி கேட்டபோது, தந்தையார் மறுத்து விட்டார். இதனால் மூன்று நாட்கள் வீட்டிற்குள்ளே உண்ணாவிரதம் இருந்தார். பிறகு பெற்றோர் சம்மதித்து ஆசிரமம் சென்றார். தந்தையார் மறைந்த போது சென்னை திரும்பினார்.

அம்புஜம்மாள் பள்ளியில் சேர்ந்து நன்கு படித்து முறையாகத் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், தமது முயற்சியாலும், ஆர்வத்தினா-லும் புலமை பெற்று விளங்கினார். பல இந்தி கதைகளை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, துளசி ராமாயணத்தை இசையுடன் பாடினார். வடநாட்டு கிராம மக்களிடையே பிரபலமாகியிருந்த துளசி ராமாயணப் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும்படி அம்புஜம்மாளைக் கூறியிருந்தார் காந்திஜி அவர் சொன்னபடி துளசி ராமாயணத்தின் முதல் இரண்டு காண்டங்களை வசன நடையில் மொழி பெயர்த்தார் அம்புஜம்மாள்.

காந்திஜி விரும்பியபடி சென்னையில் பெண்கள் சேர்ந்து படிக்கும் கல்வி நிலையம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்காக ஏற்கெனவே தமது சொந்த செலவில் தமது சகோதரனின் மனையில் ரூ.15,000 செலவில் கட்டி முடித்தார். சீனிவாச காந்தி நிலையம் அதில் அமைந்தது.

சுமார் 7 ஆண்டு காலம் தமிழ் நாட்டின் சமூக நல வாரியத் தலைவியாக பொறுப்பேற்றிருந்த அம்புஜம்மாள்.

அவரது சாதனைகளுக்காக மத்திய அரசு 1964_ம் வருடம் பத்மஸ்ரீ பட்டத்தை வழங்கியது. அதன் பிறகும் தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அம்புஜம்மாள், தனது எண்பத்திரண்டாவது வயதில் காலமானார். இந்தியா தனது இனிய புதல்விகளில் ஒருவரை இழந்தது.

Posted in Ambujam, Ambujam Ammaal, Ambujam Ammal, Ambujammal, Biosketch, Congress, Faces, Fighter, Freedom, Gandhi, Independence, Kumudam, Leaders, Liberation, Mahatma, people, Series, Welfare, Women | Leave a Comment »

65 Year old Youth imbibes invigorating new spirit among Village Youth

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2006

இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு ஒரு வழிகாட்டி: கிராமங்களில் “அறிவு விதை’ விதைக்கும் 65 வயது “இளைஞர்’

ப. இசக்கி

திருநெல்வேலி, டிச. 10: கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் புத்தகக் கட்டுகளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று விற்பனை செய்து பொருள் ஈட்டி வருகிறார் 65 வயது “இளைஞர்’ ரா.சண்முகவேல் (65).

இதில் என்ன இருக்கிறது? என நினைப்பவர்களுக்கு புதைந்திருக்கும் செய்தி ஒன்றல்ல, இரண்டு உண்டு. “வேலை இல்லை’ என முடங்கி கிடக்கும் சில இளைஞர்களுக்கு, இப்படியும் ஒரு வேலை இருக்கிறது என்பது முதல் பாடம்; தற்போதைய தொலைக்காட்சி யுகத்தில் கிராமத்து மக்களையும் படிக்கத் தூண்டும் வகையில் புத்தம் புது புத்தகங்களை அவர்களது இல்லங்களுக்கே கொண்டு சேர்த்து அறிவுப் பசியாற்றும் ஒரு வகை சேவை என்பது இரண்டாவது பாடம்.

ஒரு பாடத்தையும் போதித்து, “சேவை’யையும் செய்து வருபவர், ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த இடதுசாரி இயக்கத் தொண்டரான ரா.சண்முகவேல்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பள்ளி படிப்பு மட்டுமே படித்துள்ள இவர், இளம் வயதில் இயக்கப் பணிகளையும், குடும்பத் தொழிலான விவசாயத்தையும் பார்த்து வந்தார். இடதுசாரி இயக்கத்தில் கொண்ட தீவிர பற்றின் காரணமாக, “சோவியத் ரஷ்யா’ வெளியீடுகளுக்கு சந்தாதாரராகி புத்தகங்களைப் பெற்றார். அதைக் கொண்டு உள்ளூரில் ஜீவா படிப்பகத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து புத்தகங்கள் மீது ஏற்பட்ட நாட்டத்தால், அருகில் உள்ள கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று இடதுசாரி சிந்தனை புத்தகங்களை விற்றார். நாள்கள் செல்லச்செல்ல வாடிக்கையாளர்கள் விரும்பிக் கேட்கும் புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்தார். அதில் ஒரு பிடிப்பு ஏற்படவே அதுவே அவரது நிரந்தர தொழிலாகிவிட்டது.

சண்முகவேல், கிராமம் கிராமமாக சைக்கிளில் சென்று புத்தகம் விற்கத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் 25 வயது இளைஞர் போல நாளொன்றுக்கு 100 முதல் 120 கி.மீ. தூரம் சைக்கிளில் சுற்றி வந்து புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார் இந்த “செஞ்சட்டை’ சண்முகவேல். இதில் இவருக்கு மாத வருமானம் ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை கிடைக்கிறதாம்.

“”பாலியல் புத்தகங்கள் தவிர அனைத்து வகை புத்தகங்களையும் வாங்கி விற்கிறேன். ஆசிரியர்கள், பெரிய மனிதர்கள், வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் என்னிடம் புத்தகங்களை வாங்குவார்கள். நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு. பெண்கள் அதிக புத்தகங்களை வாங்குவார்கள். கடனும் உண்டு, சில வேளைகளில் தள்ளுபடியும் உண்டு. காந்திஜியின் “சத்திய சோதனை’க்கு இன்னும் கிராக்கி உள்ளது.

வாடிக்கையாளர்கள் கேட்கும் புத்தகங்கள் திருநெல்வேலி, மதுரை என எங்கிருந்தாலும் அதையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். பள்ளி, கல்லூரிகளிலும் விற்பனை செய்வேன்.

புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, நகரங்களுக்குச் சென்றால்தான் புத்தகங்கள் கிடைக்கும் என்றல்ல. அவர்களது வீட்டுக்கே புதிய புதிய புத்தகங்களை கொண்டு சேர்க்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் புத்தகங்களைப் படித்துவிடுவேன். அப்போதுதான் வாடிக்கையாளர்களிடம் பேச முடியும்.

இத் தொழிலை நான் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். ஒரு குறையும் இல்லை. எனது 2 மகள்களை படிக்கவைத்து திருமணமும் முடித்துவிட்டேன் என் மனைவி லட்சுமி, உள்ளூர் அஞ்சல் நிலையத்தில் கிளை அஞ்சல் அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.

இத் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கிறது. வேலை இல்லை, வேலை இல்லை என சொல்பவர்கள் இப்படி புத்தகங்களை வாங்கி ஊர் ஊராகச் சென்று விற்றாலே நிறைய சம்பாதிக்கலாம். இந்தக் காலத்து இளைஞர்கள் இதுபற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும்” என மடை திறந்த வெள்ளமாய் பேசிவிட்டு புத்தக விற்பனைக்குப் புறப்பட்டார் சண்முகவேல்.

Posted in Action, Bicycle, Bike, Books, Bookseller, City, Doer, Gandhi, Good, Great, Icon, Inspiration, Jobs, Leader, Mahathama Gandi, Mahatma, MK Gandhi, Motivation, Old, Shanmugavel, Suburban, True, unemployment, Village, Words, Young | Leave a Comment »