Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ma Po Sivanjaanam’ Category

Ve Saaminatha Sharma – Biosketch by Vikraman

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மறக்கமுடியா அரசியல் அறிஞர்!

விக்கிரமன்

பேரறிஞர், மூதறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் பெயர் சொன்னால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது “பிளாட்டோவின் அரசியல்’ என்ற அவரது நூலாகும். பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த நூலை இன்று படிப்பவர்களும் அவரது தெளிந்த தமிழ் நடையைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.

தமிழில் அரசியல் நூல்களை எழுதி வெளியிட்ட முன்னோடி சர்மா. “கார்ல் மார்க்ûஸ’ அறிமுகப்படுத்தினார். “புதிய சீனாவைப்’ புரிய வைத்தார். லெனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கினார். ரஷியப் புரட்சியை எடுத்துக் கூறினார். கிரீஸ் வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டினார்.

வெ. சாமிநாத சர்மா அப்போதைய “வட ஆர்க்காடு’ மாவட்டத்திலுள்ள வெங்களத்தூரில் 1895-ல் செப்டம்பர் 17-ல் பிறந்தார். தந்தை முனுசாமி அய்யர். தாயார் பார்வதி அம்மாள். செங்கல்பட்டிலுள்ள நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற சர்மா ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். இளம் வயதிலேயே தேசபக்தி, எழுத்தார்வம் மிகுந்த சர்மா தமது பதினேழாம் வயதில் – 1914 ஜூலையில் “கௌரிமணி’ எனும் சமூக நாவலை எழுதி வெளியிட்டார். அப்போது விலை மூன்றணா!

தேசிய இயக்கம் கொழுந்துவிடத் தொடங்கிய காலம். சர்மா “பாணபுரத்து வீரன்’ எனும் நாடகத்தை எழுதினார். டி.கே.எஸ். சகோதரர்கள் “தேசபக்தி’ எனும் பெயரில் அதை நாடகமாக நடத்தினார்கள். அந்த நாடகம் அக்கால மாணவரிடையே தேசபக்தியை எவ்வாறு வளர்த்தது என்பதை டி.கே. சண்முகம் நமது “நாடக வாழ்க்கை’ நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.

ம.பொ. சிவஞானம் தமது “விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு’ எனும் நூலில் பாராட்டியுள்ளார். தமிழக அரசு முன்னாள் செயலர் க. திரவியம் தமது “தேசியம் வளர்த்த தமிழ்’ என்று நூலில் “தேசிய இலக்கியம்’ என்று அதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பகாலத்தில் “இந்து நேசன்’ “சுல்பதரு’ போன்ற பத்திரிகைகளில் சர்மா பணியாற்றினார். ஆனால், 1917-ல் தமிழ்த் தென்றல் திரு.வி.க. தொடங்கிய “தேசபக்தனில்’ தொண்டாற்றத் தொடங்கியது அவரது வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது பெரிய தேசபக்தர்களான சுப்ரமணிய சிவா. வ.வே.சு. அய்யர், மகாகவி பாரதியார் போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது. “கல்கி’ சர்மாவுடன் பணியாற்றினார். பின்னர் திரு.வி.க.வின் “நவசக்தி’யில் அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. சுவைமிகுந்த இலக்கியத் தொடர்களை, கட்டுரைகளைப் படைத்தார். செய்தித் தலைப்புகளை அமைப்பதில் சர்மா திறமை மிக்கவர்.

சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டினின்று பர்மா சென்றுவிட்ட சர்மா, 1937 – 42-ல் ரங்கூனில் “ஜோதி’ என்ற மாத இதழைத் தொடங்கித் திறம்பட நடத்தினார். பிற்காலத்தில் “சக்தி’ போன்ற சிறந்த மாத இதழ் தோன்றக் காரணமாயிருந்தது ஜோதியே. 1942-ல் ஜப்பானியர் பர்மாவில் குண்டு வீசத் தொடங்கியபோது சர்மாவும், அவரது துணைவியாரும் தமிழகம் திரும்பினர். பர்மாவினின்று நடந்தும், காரிலும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்த அனுபவத்தை “பர்மா நடைப்பயணம்’ எனும் நூலில் எழுதி வைத்தார்.

சர்மா சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் மட்டுமல்ல; அவர் முற்போக்குக் கருத்தும் கொண்டவர். வரதட்சிணை எதிர்ப்பு சங்கத்தை நிறுவினார். 1914-ல் நண்பர்கள் உதவியுடன் சென்னை செந்தமிழ்ச் சங்க சங்கத்தை ஆரம்பித்தார். தமிழ்த்தாத்தா உ.வே.சா.வைத் தலைவராக இருக்குமாறு அணுகினாராம்! 1958-ல் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தார்.

1914-ஆம் ஆண்டில் மங்களம் என்ற பெண்மணியை மணம் புரிந்துகொண்டார். தம் துணைவியாரையும் இலக்கிய, தேசியத் தொண்டில் சமமாக ஈடுபாடு கொள்ளச் செய்திருக்கிறார். சர்மாவின் இலக்கியத் தொண்டுக்கு அம்மையார் 1956-ல் மறையும் வரை உறுதுணையாக இருந்திருக்கிறார். சர்மாவும் மங்களம் அம்மாளும் பெற்றெடுத்தவை அருமையான நூல்களே. மனைவியை இழந்த துக்கத்தில் அவர் எழுதிய “அவள்பிரிவு’ என்ற கடித நூல் கடிதக் கலையில் சிறந்ததாகும்.

திட்டமிட்ட வாழ்க்கையை உடையவர் சர்மா. ஆனால் கருணை உள்ளம் நிறைந்தவர். ஒழுக்கம், தமிழ்ப்பற்று இரண்டும் கலந்த உருவமே வெ. சாமிநாத சர்மா.

“உலகம் சுற்றும் தமிழர்’ என்ற புகழ்ப் பெயர் கொண்ட காந்தி திரைப்படச் சிற்பி ஏ.கே. செட்டியார் தொடங்கிய “குமரி மலர்’ எனும் மாத இதழின் ஆசிரியராக 1945-46ல் பணியாற்றினார். அப்போதுதான் அவரைச் சந்தித்தேன். தியாகராய நகரில் அவர் நடத்திய இலக்கியச் சொற்பொழிவுகளில் கலந்துகொண்டேன். உஸ்மான் சாலையிலுள்ள பர்ணசாலை போன்ற குடிலில் நான் ஆசிரியராக இருந்த இதழுக்குக் கட்டுரை கேட்டுப் பெறச் சந்தித்தேன். 1978 ஆம் ஆண்டு நண்பர் பெ.சு. மணியுடன், கலாúக்ஷத்ரா விடுதியில் சந்தித்தேன். முதுமையும் நோயும் வாட்டிய நிலையிலும் தமிழ் வளர்ச்சியைப் பற்றியே அவர் பேசினார்.

பர்மா நடைப்பயணக் கையெழுத்துப் பிரதியை பெ.சு. மணி தேடி எடுத்து என்னிடம் தந்தார். தன் நூல்களை வெளியிடும் உரிமையை, சர்மாஜி அவரிடம் அளித்திருந்தார். நான் அப்போது ஆசிரியராக இருந்த “அமுதசுரபி’ மாத இதழில் வெளியிடச் சம்மதித்தேன். கட்டுரை தொடங்கப் போகும் அறிவிப்பைப் பார்த்து அந்த மூதறிஞர் மகிழ்ச்சியடைந்தார். முதல் இதழ் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு இரு நாள்களுக்கு முன்பே அவர் மறைந்தார்.

“பர்மா வழி நடைப்பயணத்தை’ தமிழ் மக்களுக்கு வெளியிட்டுப் படிக்கச் செய்தது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பேறு.

பர்மா வழி நடைப்பயணத்தைப் படிக்கும்போது நாம் சர்மாவுடன் அந்தப் பகுதியில் அவருடன் சேர்ந்து பயணம் செய்த உணர்வை அடைந்திருக்கிறோம். அறிஞர் சர்மா பயணக் கட்டுரையாக எழுதியிருந்தாலும் இந்த நூல் ஒரு வரலாற்று நூலாகும்.

தமிழ்நாட்டிற்குக் கிடைத்த பேரிலக்கியம் அந்தப் பயணக் கட்டுரை. மறைந்த பேரெழுத்தாளர் கு. அழகிரிசாமி, சர்மாவைப் பற்றி 54 ஆண்டுகளுக்கு முன்பு பாராட்டி எழுதினார்.

“”தமிழகத்தில் ஆங்கிலம் தெரியாத தமிழர்களும் அரிஸ்டாட்டிûஸப் பற்றித் தெரிந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பிளேட்டோவையும் ரூúஸôவையும் அரிஸ்டாட்டிலையும் அறிமுகப்படுத்தியவர் சர்மாதான். தமிழ்ச் சமுதாயத்திற்கு எப்பேர்ப்பட்ட பேருபகாரம் இது!

வெ. சாமிநாத சர்மா சிறிது குள்ளமாக இருப்பார். ராஜகோபாலச்சாரியாரைப் போல் மொட்டைத் தலை. சிவந்த மேனி, கதர்வேட்டியும் கதர்ஜிப்பாவும் இவருடைய உடை. சிலசமயங்களில் நேருஜியைப் போல் அரை கோட் அணிந்திருப்பார். தொலைவில் பார்த்தால், திரு.வி.க.வின் தோற்றத்தில் இருப்பார். இவரது எளிய வாழ்க்கைக்கு மகாத்மாவின் எளிய வாழ்க்கையைத்தான் உவமையாகக் கூற முடியும்.

அன்பென்ற மலர், இதழ் விரித்துப் பூத்தது போன்ற தெய்வீகச் சிரிப்பு. சாந்தி பொலியும் முகம். அன்பு சுரக்கும் இனிய சொற்கள். அவர்தான் சர்மாஜி.

செப்டம்பர் 17 ஆம் நாள் அவருடைய பிறந்த நாள். ஒழுக்க சீலரான, பண்பாட்டுக் காவலரான, எழுத்துக்காக வாழ்ந்தவரான சர்மாஜி 1978 ஜனவரி 7ஆம் தேதி, கலாúக்ஷத்ராவில் தன் இறுதி மூச்சு நிற்கும்வரை, தமிழ் மொழியின் உயர்வைப் பற்றி மட்டுமே நினைத்தவரை, தமிழ் உள்ள வரை மறக்க முடியாது.

(இன்று அரசியல் அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் 112ஆவது பிறந்த நாள்)

(கட்டுரையாளர்: அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர்).

Posted in Alagirisami, Alakirisami, Amudhasurabhi, Amudhasurabi, Amuthasurabhi, Amuthasurabi, Arcot, Author, Azhagirisami, Azhakirisami, Biosketch, Books, Burma, China, Cinema, Congress, Drama, Faces, Films, Gandhi, Greece, History, Integration, journalism, journalist, Kadhar, Kalashethra, Kalashetra, Lenin, Literature, Ma Po Sivanjaanam, Mag, magazine, MaPoSi, Marx, Media, Movies, MSM, Nation, National, people, Person, Plato, Rajaji, Read, Russia, Saaminadha, Saaminatha, Saaminatha Sharma, Saminatha, Saminatha Sharma, Sharma, Sivajaanam, Sivanjaanam, Tamil, Theater, Theatre, TKS, Tour, Travel, Ve Saaminatha Sharma, Vigraman, Vikraman, VSS, Writer | Leave a Comment »

Golden Jubilee of Tamil Nadu state formation – History & Memoirs

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

பொன் விழா கொண்டாடும் தமிழ் மாநிலம்: எல்லை காக்க 50 ஆண்டுகளுக்கு முன் நடத்திய போராட்டம்

பா. ஜெகதீசன்

சென்னை, நவ. 1: “தமிழ் மாநிலம்’ அமைந்த பொன் விழாவை தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தற்போது கொண்டாடுகின்றன.

சென்னையையும், தனது எல்லைகளையும் காக்க சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் நடத்திய போராட்டங்களும், அவற்றில் ஈடுபட்டவர்கள் செய்த தியாகங்களும் மறக்க முடியாதவை.

சுதந்திரம் அடைந்தபோது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் தமிழகப் பகுதிகளும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்டவற்றின் சில பகுதிகளும் இடம் பெற்றிருந்தன.

தமிழகத்தின் வடக்கு எல்லை திருப்பதி வரை பரவி இருந்ததாகப் பண்டைய இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரு காலகட்டம் வரை வடார்க்காடு மாவட்டத்தில் தான் திருப்பதி இருந்தது.

நாடு சுதந்திரம் அடைந்த மறுநாள் (16.8.1947) ம.பொ. சிவஞானம் தனது ஆதரவாளர்களுடன் திருப்பதிக்குச் சென்றார். “திருப்பதி தமிழர்களுக்கே சொந்தம்’ என முழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் ம.பொ.சி.க்கு எதிராகப் பதில் போராட்டம் நடத்தினர்.

“தமிழகத்திடம் இருந்து சென்னையையும் மீட்போம்’ என ஆந்திரத் தலைவர்களில் ஒருவரான என்.ஜி.ரங்கா அப்போது பிரகடனம் செய்தார்.

ஒருமித்த எதிர்ப்பு: சென்னை ராஜதானியில் இருந்து ஆந்திரப் பகுதிகளைப் பிரித்து தனி மாநிலத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

சென்னை நகரத்தைத் தங்களுக்குத் தரும்படி ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். இதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமே குரல் கொடுத்தது.

தங்களது இடைக்காலத் தலைநகராக சிறிதுகாலத்துக்கு சென்னையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி ஆந்திரம் கேட்டது. அதை தமிழகம் ஏற்கவில்லை.

ம.பொ.சி. நடத்திய வடக்கு எல்லைப் போராட்டம்: தனி ஆந்திர மாநிலம் உருவானபோது அதுவரை தமிழகத்தில் இடம் பெற்றிருந்த சித்தூர் மாவட்டம் ஆந்திரத்தின் வசம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

அதை எதிர்த்து 1953 மே மாதத்தில் திருத்தணியில் ம.பொ.சி. மறியல் செய்தார். காவல் துறையின் தடியடியையும் பொருட்படுத்தாது, எல்லையை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் அவர். பின்னர் ராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தைத் தாற்காலிகமாக ஒத்தி வைத்தார்.

இதற்கிடையே, திருத்தணியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆந்திரத்தைக் கண்டித்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் புகுந்து, பொருள்களை உடைத்தனர். ரயில் நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். வன்முறையை ஒடுக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

பின்னர் ம.பொ.சி. விடுத்த வேண்டுகோளையடுத்து, அங்கு வன்முறை நின்றது.

தமிழகத்தின் வடக்கு எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணாததைக் கண்டித்து, அதே ஆண்டு ஜூலை 3-ம் தேதி திருத்தணியில் ம.பொ.சி. தடையை மீறி மறியல் செய்தார். கைது செய்யப்பட்ட அவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கமிஷன்கள் அமைப்பு: அப்போது பிரதமராக இருந்த நேருவிடம் முதல்வராக இருந்த ராஜாஜி பேசினார். “இரு மாநிலங்களின் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எல்லைக் கமிஷன் அமைக்கப்படும். எனவே, போராட்டங்களை நடத்த வேண்டாம்’ என நேரு வேண்டுகோள் விடுத்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, சில நாள்கள் சிறை வாசத்துக்குப் பிறகு ம.பொ.சி. விடுதலை ஆனார்.

எல்லைப் பிரச்சினையை தமிழகமும், ஆந்திரமும் சுமுகமாகப் பேசித் தீர்க்க முன் வந்தன. எனவே, எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க முதலில் அமைக்கப்பட்ட பசல் அலி கமிஷன் எத்தீர்வையும் தரவில்லை.

மேலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையில் உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே, புதிதாக படாஸ்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. 1.4.1960-ல் அக்கமிஷன் தனது தீர்ப்பை அளித்தது. அதன்படி திருத்தணி தாலுகா அப்படியே தமிழகத்துக்கு கிடைத்தது. அதேபோல, ஆந்திரத்தின் புத்தூர், சித்தூர் ஆகிய தாலுகாக்களில் இருந்தும் சில பகுதிகள் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன.

தெற்கு எல்லைப் போராட்டம்: அக்காலத்தில் திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தானத்தில் இடம் பெற்றிருந்த தமிழர் வாழும் பகுதிகளை மீட்க பெரும் போராட்டம் நடைபெற்றது.

1954 ஜூனில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நேசமணி தலைமை ஏற்று, போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். அவரது அழைப்பை ஏற்று, ம.பொ.சி. மூணாறுக்குச் சென்றார். அவரது முன்னிலையில் எல்லை மீட்கும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தது.

11 பேர் உயிர்த் தியாகம்: நேசமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 11.8.1954-ல் தென் திருவிதாங்கூரில் கல்குளம் தாலுகாவில் பேரணி நடைபெற்றது. மலபார் ரிசர்வ் போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பேரணியைக் கலைத்தனர். இதில் 11 தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.

இதையடுத்து திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தானத்தில் பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.

மாநிலங்களின் எல்லைகளைத் திருத்தி அமைக்க மத்திய அரசு அமைத்திருந்த பசல் அலி கமிஷன் 1955-ல் தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்தது. கல்குளம், செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு ஆகிய தாலுகாக்களை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என அந்த கமிஷன் கூறியது.

தமிழர்கள் அதிகம் வாழும் பீர்மேடு, தேவிகுளம் ஆகிய தாலுகாக்களைத் தமிழகத்துக்கு அளிக்க அந்த கமிஷன் மறுத்து விட்டது.

நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக நாட்டின் தெற்கு எல்லையான குமரி முனை தமிழகத்துக்குக் கிடைத்தது.

Posted in 50, Andhra Pradesh, Chithoor, History, Kanniyakumari, Kerala, Kumari, Ma Po Si, Ma Po Sivanjaanam, Nesamani, Puthoor, Rajaji, State, Tamil Nadu, Thirupathy, Thiruthani, TN | Leave a Comment »