Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘London Diary’ Category

London Diary – Era Murugan: Covent Garden Literary Acts

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

லண்டன் டைரி: கோவண்ட் தோட்டத்துப் படைப்புகள்!

இரா. முருகன்

வெல்லிங்டன் தெருவில் நடக்கும்போது, வெள்ளைக்காரத் துரைகளைப் பின்னால் தள்ளிக்கொண்டு மனதின் உள்ளறையிலிருந்து, “”எப்படிடா இருக்கே?” என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறவன் தடிராஜா. ரொம்ப வருடம் முன்னால் பள்ளிக்கூடத்தில் கூடப்படித்தவன். புத்தகம் சேகரிப்பில் பேய்த்தனமான ஆசை. எல்லாமே சோனியான சினிமா பாட்டுப் புத்தகங்கள். அட்டையில் மசமசவென்று படத்தின் ஒரு ஸ்டில் போட்டு, உள் அட்டையில் நாலுவரி திரைக்கதை எழுதி, “மீதியை வெள்ளித்திரையில் காண்க’ என்று தவறாமல் அச்சடித்திருக்கும். மீதிப் பக்கங்களில், அந்தச் சினிமாவில் இடம் பெற்ற பாடல்கள், நடுநடுவே “ஜிஞ்ஜின்னாக்கடி ஜிஞ்ஜின்னாக்கடி’, “கும்தலக்கா கும்தலக்கா கும்மா’ போன்ற அரிய இசைக்குறிப்புகளோடு வெளியாகியிருக்கும் வயசாகி, பைண்ட் செய்த அந்தப் பாட்டு புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொண்டு கொஞ்சமும் அபஸ்வரம் விலகாத குரலில் அதிலிருந்து நேயர் விருப்பமாக எனக்குக் கொஞ்சம் பாடிக்காட்டினான். அந்த நினைவு வெல்லிங்டன் தெருவில் இப்போது எழக் காரணம் இல்லாமல் இல்லை.

கிட்டத்தட்ட இருநூறு வருடம் முன்புவரை லண்டன் கோவண்ட் தோட்டப் பகுதி நாடகக் கொட்டகைகள் தினசரி அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலில் சக்கைப்போடு போட்டது உண்மைதான். ஆனால் ரசிகர்கள் அந்த நாடகங்களைப் பார்த்து ரசித்துவிட்டு மனதில் அசைபோட்டபடி வீட்டுக்குப் போகத்தான் முடியும். நாடகத்தைப் புத்தகமாக அச்சடித்து விற்கத் தடை இருந்ததால், வீட்டில் ஓய்வாக வசனத்தைப் படித்து ரசிக்கவோ, பலகுரலில் நடித்து மற்றவர்களை இம்சிக்கவோ முடியாத சூழ்நிலை. 1830-ம் ஆண்டு தாமஸ் லேக்கி என்ற புத்தக வெளியீட்டாளர் அரும்பாடுபட்டு இதை மாற்றி, வெல்லிங்டன் தெருவில் நாடகங்களை அச்சுப்போட்டு, மலிவுப் பதிப்பாக விற்க ஆரம்பிக்க, அவருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. தமிழ் சினிமாவுக்கு முதல் பாட்டுப் புத்தகம் போட்டவரை நாம் மறந்துவிட்டாலும், தாமஸ் லேக்கியை கோவண்ட் தோட்டம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறது.

இந்தக் கோவண்ட் தோட்டம் தலைசிறந்த ஆங்கில இலக்கியப் படைப்புகள் பலவற்றிலும் இடம் பெற்றிருக்கிறது. காரணம் அந்தக் கால இலக்கியப் பிரபலங்கள் பலரும் இந்தப் பேட்டையில் வசித்திருக்கிறார்கள். அல்லது தினசரி ஒரு தடவையாவது இங்கே வந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு, சக எழுத்தாள நண்பர்களோடு கோஷ்டியாகக் கடையில் ஏறி ஆளுக்கு ஒரு கிளாஸ் பியரோ அல்லது ஒரு கப் காப்பியோ குடித்தபடி சண்டை போட்டு, சமாதானமாகித் திரும்பிப் போயிருக்கிறார்கள். ஹென்றி ஃபீல்டிங்க் என்ற எழுத்தாளர் இந்தச் சண்டைகளுக்காகவே கோவண்ட் தோட்ட மதுக்கடைகளை நித்தியப்படி சுற்றி வருவாராம். (அந்தக் காலத்தில் சண்டை போட்டுக்கொள்ள இலக்கியச் சிற்றிதழ் போன்ற வசதிகள் இல்லையோ என்னமோ). வயதாகி நடை

தளர்ந்து சண்டை போடமுடியாமல் போனபோதும் இவர் அசரவில்லை. காசு கொடுத்து யாரையாவது கூட்டிவந்து தன் சார்பில் பொறிபறக்க மோதவைத்துவிட்டு, ஓரமாக ஸ்டூலில் உட்கார்ந்து பியர் குடித்துக்கொண்டு உற்சாகமாக வேடிக்கைப் பார்ப்பாராம்.

புகழ்பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் கோவண்ட் தோட்டப் பகுதிவாசி. அவருடைய “ஆலிவர் டுவிஸ்ட்’ நாவலில் லண்டனுக்கு வரும் அனாதைச் சிறுவன் ஆலிவர் போய்ச்

சேரும் இடம் கோவண்ட் கார்டன்தான். கோவண்ட் தோட்டப் பகுதியில் சார்லஸ் டிக்கன்ஸ் வசித்த வீட்டைத் தேடியலைகிறேன். “குடும்பத்தைப் பராமரிக்கச் சாமர்த்தியம் போதாது’ என்ற வினோத காரணத்துக்காக இந்தப் பிரபல எழுத்தாளர் அவருடைய மனைவியை விவாகரத்து செய்தபோது எழுதிய கடிதம், அவருடைய நாவல்களின் கையெழுத்துப் பிரதிகள், இவற்றோடு அவருடைய மைத்துனிக்கு எழுதிய அன்புக் கடிதங்களும் இங்கே காட்சியாக வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல். கதை அப்படிப் போகிறதாக்கும்.

இலக்கிய மேதை பெர்னார்ட்ஷா எழுதிய புகழ்பெற்ற நாடகமான “பிக்மாலியன்’ கோவண்ட் தோட்டம் ராயல் ஓபரா வாசலில்தான் தொடங்குகிறது. எலிசா டூலிட்டில் என்ற பூ விற்கும் ஏழையான இளம்பெண்ணை ஒரு பேராசிரியர் நாகரீக சீமாட்டியாக்கும் கதை இது. இந்த நாடகத்தின் அடிப்படையில் சோ தமிழில் எழுதிய “மனம் ஒரு குரங்கு’ கோவண்ட் தோட்டச் சூழ்நிலைக்குப் பொருத்தமான கொத்தவால்சாவடிப் பகுதியில் தொடங்குகிறதா என்பது நினைவில் இல்லை.

பழைய லண்டன் டவர் மிருகக்காட்சி சாலையைச் சுற்றிவந்து “புலிக்கவிதை’ எழுதிய கவிஞர் வில்லியம் ப்ளேக்கும் இன்னொரு கோவண்ட் தோட்டவாசிதான். “ஆவிகளோடு பேசுவதில்’ ஈடுபட்டிருந்த இவர், தனக்கு நூறு வருடம் முன்னால் இறந்துபோன மகாகவி மில்டனின் ஆவியோடு தொடர்பு கொண்டு, அவர் சொல்லச் சொல்ல எழுதியதாக, ஒரு காவியம் வெளியிட்டார். ஆனால் கவிதை ரசிகர்களோ, ஆவி ஆராதகர்களோ அதில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லையாம்.

ஆவி என்றதும் அடுத்து நினைவுக்கு வருகிறவர், திடுக்கிட வைக்கும் திகில் சினிமாப் படங்களை இயக்கிய ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். இந்தப் பிரசித்தி பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் கோவண்ட் தோட்டக் காய்கறிக்கடை வியாபாரி ஒருவரின் மகன். சின்ன வயதில் அப்பாவுக்கு உதவியாகக் கடையில் இருந்ததோடு கோவண்ட் தோட்டத்தையும் இண்டு இடுக்கு விடாமல் சுற்றி வந்த ஹிட்ச்காக், தன்னுடைய “பிரன்ஸி’ படத்தில் சாப்பாட்டிலும், கொலையிலும் விருப்பம் கொண்ட கதாநாயகனாக்கியது ஒரு கோவண்ட் தோட்டக் காய்கறிக் கடைக்காரரைத்தான்.

ஹிட்ச்காக்கின் மற்ற படங்களைப் பற்றி யோசித்தபடி லைசியம் தியேட்டரைக் கடக்கிறேன். நீலக் கோட்டும் டையும் அணிந்த ஒரு மத்திய வயசு வெள்ளைக்காரர் மணி கேட்கிறார். கைக்கடியாரத்தைப் பார்ப்பதற்கு முன், எனக்கு முன்னால் ஒரு கத்தை டிக்கெட்டுகள் நீட்டப்படுகின்றன. கோவண்ட் தோட்ட, மற்றும் பக்கத்து ஸ்ட்ராண்ட் பகுதி நாடகக் கொட்டகைகளில் இன்று மாலைக்காட்சிக்கான நுழைவுச் சீட்டுகள். லைசியம் அரங்கத்தில் பத்து பவுண்டுக்கு “சிங்க அரசன்’ பகல் காட்சிக்கே கிடைக்கிறது. இருபது வருடமாக லைசியம் தியேட்டரில் தொடர்ந்து நடக்கிற இசை நாடகம். ஒரு வாரம் முன்னால்தான் இன்னோர் இசை நாடகமான ஈவிதா பார்த்ததால் “லயன் கிங்’ பார்க்கும் படலத்தைச் தள்ளிப்போட உத்தேசித்திருப்பதாக அவரிடம் மரியாதையோடு தெரிவிக்கிறேன். கோட் பாக்கெட்டிலிருந்து வேறு எதையோ எடுத்து நீட்டும் முன்னால் கொஞ்சம் நடையை எட்டிப் போட்டு கோவண்ட் தோட்ட ரயில் நிலையத்தை நோக்கித் திரும்புகிறேன்.

லண்டனில் எங்கெங்கோ எல்லாம் இருந்து புறப்பட்டு பெருவெள்ளமாக ஒரு ஜனக்கூட்டம் ரயில்நிலையத்தை விட்டு வெளியேறி கோவண்ட் தோட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறது. இதில் எதிர் நீச்சல் போட்டு உள்ளே நுழைவது சிரமம். கொஞ்சம் காலாற நடந்தால் சாரிங் கிராஸ் தெரு வரும். அங்கே பழைய புத்தகக்கடைகளை மேய்ந்துவிட்டு சாரிங் கிராஸ் ஸ்டேஷனில் ரயிலைப் பிடிக்க வேண்டியதுதான். பழைய புத்தகக் கடையில் தேடினால் பழைய சினிமா பாட்டுப் புத்தகம் கிடைக்கக் கூடும். பெர்னார்ட் ஷாவின் பிக்மேலியனை இசைச் சித்திரமாக எடுத்த “மைஃபேர் லேடி’, டிக்கன்ஸ் கதையான “ஆலிவர்!’, யூல் பிரின்னர் நடித்த “கிங்க் அண்ட் ஐ’, ஜாலி ஆண்ரூஸின் “சவுண்ட் ஆஃப் ம்யூசிக்’… “கர்ணன்’கூடக் கிடைக்கலாம். தடிராஜா கலெக்ஷனில் அந்தச் சினிமாப் பாட்டுப்புத்தகம் மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறான்.

=======================================================

லண்டன் டைரி: விறைபேபான ‘பிக்கடில்’ !

இரா. முருகன்

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் சென்னைக்குக் குடியேறிய புதிதில், சமர்த்தாக ஆபீஸ் போய்க்கொண்டிருந்தேன். மிச்ச நேரம் புதுக்கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். அஞ்சலில் அனுப்பினால் போய்ச்சேர நாளாகிவிடும் என்பதால், கவிதை எழுதிய காகிதத்தைச் சுருட்டிப் பிடித்துக்கொண்டு ஜெமினி பக்கம் தொடங்கி, அண்ணாசாலை நெடுக நடந்து, அந்தக் கோடியில் அண்ணாசிலைக்கு அருகேயிருந்த பத்திரிகை அலுவலகத்துக்குப் போகிற வழக்கம். சென்னை மாநகரின் பரபரப்பும் இரைச்சலும் வேகமும் நிறைந்த இதயத் துடிப்பை ஒளி, ஒலி, வாடை ரூபமாக நெருக்கத்தில் இருந்து அனுபவித்துக்கொண்டு மூச்சு வாங்கப் பத்திரிகை ஆபீஸ் படியேறிய அந்தக் கணங்களைக் கொஞ்சம்போல் லண்டனில் இப்போது திரும்ப அனுபவிக்கிறேன். லண்டன் மாநகரின் இதயமான பிக்கடலியின் மேற்குப் பக்கத்து கிரீன்பார்க் ரயில் நிலையத்தில் தொடங்கி, கிழக்கே பிக்கடலி சதுக்கத்தை நோக்கி அந்தி சாய்கிற நேரத்தில் ஓய்வாக ஒரு நடை.

“பிக்கடலி’ இந்த வார்த்தை காதில் விழுந்ததும், உலகம் முழுக்கக் கடைவீதி, ஒட்டுச் சந்து, வீட்டுத் திண்ணைகளில் தையல் மிஷினுக்கு முன்னால் உட்கார்ந்து மும்முரமாகத் தைத்துக்கொண்டிருக்கும் லட்சக் கணக்கான தையல்காரர்கள் ஒரு நொடி இயந்திரத்தை நிறுத்திக் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு பெருமைப் பட்டுக்கொள்ளலாம். காரணம், தையல் இல்லாவிட்டால் பிக்கடலி இல்லை.

பிக்கடில் என்பது விறைப்பான சட்டைக் காலருக்கான பெயர். பிக்கடில்களைத் தயாரித்து விற்றுப் பெரும் பணம் சம்பாதித்த ராபர்ட் பேக்கர் 1612-ல் வெற்று வெளியாகக் கிடந்த இந்தப் பகுதியில் முதல் வீட்டுமனை வாங்கிக் கட்டிக் குடிபோனாராம். அவர் தயாரித்த காலர் நினைவாக, இந்தப் பிரதேசமே பிக்கடலி என்று நாமகரணம் செய்யப்பட்டது என்று லண்டன் சரித்திரம் தெரிவிக்கிறது. காலர் மட்டும் தயாரித்தே இப்படி ஒரு பெரிய பிரதேசத்துக்குப் பெயர் கொடுத்த அந்தத் தையல்காரர் சட்டை, பேண்ட், பிளவுஸ் என்று தைத்துத் தள்ளியிருந்தால், லண்டன் நகரத்துக்கே தையல்கடை என்று பெயர் மாற்றியிருப்பார்களோ என்னமோ.

ராபர்ட் பேக்கர் டெய்லர் பிக்கடலியின் குடிபுகுந்த முகூர்த்தம், உள்நாட்டுக் கலகம், சண்டை சச்சரவெல்லாம் ஓய்ந்து நாட்டில் அமைதி நிலவ ஆரம்பித்திருந்தது. பரம்பரைப் பணக்காரர்களான ரோத்சைல்ட், ரோத்மன், பர்லிங்டன் போன்ற பிரபுக்களும் இங்கே வசிக்க ஆரம்பிக்க, பிக்கடலி நவநாகரிகமான பிரதேசமானது. அடுத்த முன்னூறு வருடத்தில் பழைய பங்களாக்கள் இருந்த இடத்தில் பெரிய கடைகள் எழுந்து நிற்க, நகரின் முக்கியமான வியாபார கேந்திரமாக பிக்கடலி மாறியது. இதற்கு வழி செய்தவர் பர்லிங்டன் பங்களாவாசியான கேவண்டிஷ் பிரபு.

“”ஏங்க, நிதம் இங்கே தொந்தரவாப் போச்சு. ஊர்லே திரியற வேலைவெட்டியில்லாத ஆளுங்க சதா அழுகின முட்டை, நத்தை ஓடு, செத்தை குப்பைன்னு வீட்டுக்குள்ளே விட்டெறிஞ்சுட்டுப் போறாங்க. வேலைக்காரங்க சுத்தம் செய்யறதை மேற்பார்வை செஞ்சு செஞ்சு உடம்பெல்லாம் வலிக்குது. இதை உடனே நிறுத்த ஆம்பளையா லட்சணமா ஏதாவது வழி பண்றீங்களா இல்லே…”

காவண்டிஷ் பிரபுவின் வீட்டம்மா மிரட்டியிருக்கலாம். அவர் உடனே விரைவாகச் செயல்பட்டு, பர்லிங்க்டன் பங்களாவை ஒட்டி பர்லிங்டன் ஆர்க்கேட் என்ற கடைப் பகுதியை உருவாக்கினார். கடைகளுக்கு வாடகையாகக் கணிசமான வருமானம். பணப் புழக்கம், வரி என்பதால் அரசாங்க ஆதரவு. கடைச் சிப்பந்திகளுக்கு வேலைவாய்ப்பு என்ற ஜனரஞ்சகமான ஏற்பாடு. அங்காடிக்குக் கடைக்காரர்கள் செலவில் இருபத்துநாலு மணிநேரமும் கட்டுக்காவல் என்பதால் அதை ஒட்டிய தன் வீட்டில் அழுகிய முட்டை விழுவது நிறுத்தம். இப்படி ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய்களைக் குறிவைத்து 1819-ல் உருவான இந்த பர்லிங்டன் ஆர்க்கேட் தான் லண்டனின் நாகரீகமான பெரிய கடைகள் நிறைந்த முதல் அங்காடி.

இதைக் கட்டிமுடிக்க அந்தக் காலத்திலேயே கிட்டத்தட்ட அரைக்கோடி ரூபாய் செலவு. மொத்தம் நாற்பத்தேழு கடை. ஒரு கடைக்கு அறுபது பவுண்ட் வருட வாடகை. காவண்டிஷ் பிரபு அங்காடியைக் கட்டும்போது, இதைப் பெண் வணிகர்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடுவேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். நகை விற்கிற கடை, புகையிலை விற்கிற கடை, துணிக்கடை, தொப்பி விற்கிற கடை, துப்பாக்கிக் கடை, புத்தகக் கடை என்று நாற்பத்தேழு கடைகளையும் குத்தகைக்கு எடுத்தவர்களில் பெண்களைவிட ஆம்களே அதிகம். என்ன போச்சு? பர்லிங்டன் ஆர்க்கேடில் கடைபோட்ட அய்யாக்களும் அம்மணி(மேடம்) என்றே அழைக்கப்பட, காவண்டிஷ் பிரபுவின் நிபந்தனை நிறைவேறியது.

இங்கே கடை வைத்தவர்கள் கடைக்கு மேலேயே நெருக்கியடித்துக் குடும்பம் நடத்திக் கீழ்த்தளத்தில் வியாபாரம் செய்து வந்ததாகத் தகவல். இங்கிலாந்து ராஜ குடும்பம் இங்கே பல கடைகளின் வாடிக்கையாளராகச் சுருட்டும், துணியும் தொப்பியும் வாங்கியிருக்கிறது. வாடகை அதிகம் என்றாலும் முடிதிருத்தும் நிலையம்கூட நூற்றெழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இங்கே இருந்திருக்கிறது. ” எங்க கடையில் முடிவெட்டினால், ஒவ்வொருத்தருக்கும் புதுச்சீப்பு’ என்று அவர்கள் 1851-ல் “தினச் செய்தி’ பத்திரிகையில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். சவுரிமுடி, விக் விற்பனையும் கடையில் அமோகமாக நடந்ததாகத் தெரிகிறது.

மேட்டுக்குடிக்கான கடைப்பிரதேசமான இங்கே ஹாலிவுட் கனவுக்கன்னி இன்கிரிட் பெர்க்மென் (உத்தேசமாக நம் நாட்டியப் பேரொளி பத்மினி, சாவித்திரி காலம்) ஷாப்பிங் செய்ய வந்தபோது, கூட்டம் கூடாமல் தடுக்க, அங்காடியின் வெளிக்கதவை அடைத்து வைத்திருந்தார்களாம். அதையும் மீறி உள்ளே நுழைந்து துணிக்கடையில் படியேறிய ஒரு மூதாட்டியிடம் வெளியே நின்ற கடைச்சிப்பந்தி பெருமையாகச் சொன்னார்- “”உள்ளே பாருங்க, யார் இருக்காங்கன்னு..” பாட்டியம்மா கண்ணை இடுக்கி உள்ளே பார்த்துவிட்டு முணுமுணுத்தாராம்- “”ஆமா, தொந்தியும் தொப்பையுமா உங்க முதலாளி யாரோ ஒல்லியா ஒரு பொண்ணு கூடப் பேசிட்டு நிக்கறார். இந்தக் கண்றாவியை எல்லாம் வெளியேபோய் வைச்சுக்கக் கூடாதா? வியாபார நேரத்திலே எதுக்கு?” இன்க்ரிட் பெர்க்மென் கேட்டிருந்தால் தரைக்கு இறங்கியிருப்பார்.

பர்லிங்டன் ஆர்க்கேட் உள்ளே நுழைகிறேன். அதிக விலைக்குச் செருப்பு, கூடுதல் விலைக்கு நகைநட்டு, வாசனை திரவியம், பளிங்கு சமாச்சாரங்கள், ஓவியம், சிற்பம், வெள்ளிப் பாத்திரம் என்று விற்கிற கடைகள் வரிசையாக வரவேற்கின்றன. சமாதானமும் சந்தோஷமுமாகச் சாமானிய வாழ்க்கை நடத்த எதெல்லாம் தேவையில்லை என்று மனதில் பட்டியல் போட இந்த அங்காடி உதவி செய்கிறது.

தங்கக் கலர் ரேக்கு வைத்த நீளத் தொப்பி அணிந்த காவலர்கள் பர்லிங்டன் அங்காடியைச் சுற்றிவந்து காவல் காக்கிறார்கள். லண்டன் மாநகரின் முதலும் கடைசியுமான தனிநபர் காவலர்படை இவர்களுடையது. காவண்டிஷ் பிரபு “பீடில்’ என்ற இந்தக் காவலர்களை நியமித்துக் கடந்த இருநூறு வருடமாக இந்த மரபு தொடர்ந்து வருகிறது.

வெளியே வருகிறேன். அடுத்த கட்டடமான ராயல் அகாதமி சுவரில் மாபெரும் நடராசர் ஓவியம் கண்ணில் படுகிறது. இடது பாதம் தூக்கி ஆடும் பெருமான் பிக்கடலியில் என்ன செய்துகொண்டிருக்கிறார்? அறிய ஆவலாக, அகதாமிக்கு உள்ளே நடக்கிறேன்.

Posted in Covent, Covent Garden, Dinamani, England, Era Murugan, Garden, Journal, Kathir, London, London Diary, Murugan, Tour, Tourist, Travelog, Travelogues, UK | Leave a Comment »

London Diary – Ira Murugan: Maiden Lane Visitor

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

லண்டன் டைரி: புரட்சியாளர் வாழ்ந்த மெய்டன் தெரு!

இரா. முருகன்

மூக்கு வழியே மூளையிலும் மனதிலும் புகுந்து கிறங்கடிக்கிற வாடையைச் சுற்றிலும் கிளப்பிக்கொண்டு பொன்னிறமாக வறுத்து, கையால் சுற்றும் இயந்திரத்தில் கரகரவென்று அரைத்து, கொதிக்கக் கொதிக்க வென்னீர் சேர்த்து “திக்’கான டீக்காஷனை ஃபில்ட்டரில் இறக்கி, பத்து நிமிஷத்துக்கு முன்னால் கறந்த பசும்பால் காய்ச்சிச் சேர்த்து, வில்லை வளைக்கிறதுபோல வீசி ஆற்றி, நுரைக்க நுரைக்க டம்ளரில் ஊற்றி நீட்டுகிற அற்புதமான காப்பிக் கடைகள் லண்டனில் திறந்தது கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கதி. விக்டோரியா மகாராணி இங்கிலாந்தை ஆண்டபோது நாடு முச்சூடும் மும்முரமாக காப்பி குடித்துக் கொண்டிருந்தது. அல்லது மதுபானம் பருகிக் கொண்டிருந்தது. பல குடிமக்கள் பகல், இரவு என்று நேரத்தைப் பிரித்துக்கொண்டு இரண்டு கட்சியிலும் அரும்பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

கோவண்ட் தோட்டச் சுற்றுவட்டாரத்தில் அப்போது காப்பிக் கடை இல்லாத சந்து பொந்து ஒன்று கூடக் கிடையாது. பரபரப்பான போட்டிக்கு நடுவே காப்பிப் பிரியர்களைக் கடைக்கு வரவழைக்கப் புதுமையான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

“எங்க கடையில் காப்பி குடித்தால், ஒரு சுருட்டு இலவசம்’ என்று விளம்பரம் செய்கிற கடைக்கு நேர் எதிரே, “காப்பி குடித்தபடியே இலவசமாக தினசரிப் பத்திரிகை படியுங்கள்’ போர்ட் வைத்த கடை. “பெரிய சைஸ் டம்ளர் காப்பி ரெண்டு சல்லி, சின்ன சைஸ் டம்ளர் ஒரே ஒரு சல்லி’ என்று மினி மார்க்கெட்டிங்கில் காசை அள்ளிய கடை இப்படிப் பல. பால் பவுடர் என்ற சமாச்சாரத்தைக் கண்டுபிடித்ததும் அந்தச் சமயத்தில்தான். “”என்னத்துக்கு மெனக்கெடணும்? லண்டன் பால்காரங்களைக் கேட்டா சொல்லுவாங்களே, சுண்ணாம்புக் கட்டியைக் கரைச்சுத் தண்ணியை ஊத்திக் கொஞ்சம் பாலைச் சேர்த்தாப் போதுமே” என்று அந்தக்கால நகைச்சுவை பத்திரிகை “பஞ்ச்’ நையாண்டிக் கட்டுரை எழுதியதும் அப்போதுதான்.

கோவண்ட் தோட்டத்திலிருந்து தெற்கு வசமாகத் திரும்பி, ஒரு காலத்தில் காப்பிக் கடைகள் செழித்தோங்கிய மெய்டன் சந்தில் நடக்கிறேன். முட்டுச் சந்தாக முடிந்த இந்த மெய்டன் சந்து இரண்டு பக்கத்திலும் திறந்து, பக்கத்து சவுத்ஹாம்ப்டன் வீதியில் முடிய வழிவகுத்தவர் விக்டோரியா மகாராணி. நாடக ரசிகையான அவர் கோவண்ட் தோட்டப் பக்கத்து நாடகக் கொட்டகைக்கு சாரட் வண்டியில் வந்துவிட்டுத் திரும்பப் போக வசதியாக இப்படி மெய்டன் சந்துக்கு ராஜபாட்டை அந்தஸ்து ஏற்பட்டதோடு அந்தத் தெரு கூடுதல் பரபரப்புக்கு இடமானது.

நான் இப்போது நிற்கும் மெய்டன் சந்து முழுக்க சாப்பாட்டுக் கடைகள். அங்கங்கே வக்கீல் ஆபிஸ்கள். மெக்சிகோ, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ் என்று எல்லாத் தேசத்து உணவுக்கும் இந்தத் தெருவுக்கு வந்தால் போதும். பழைய காலக் காப்பிக் கடை ஏதும் மிச்சமிருக்கிறதா என்று ஒவ்வொரு வாசலிலும் ஆர்வத்தோடு நோக்கினால் ஏமாற்றம்தான். காப்பிக் கடைகள் எல்லாம் நம்மூருக்குக் குடிபெயர்ந்து ஏழெட்டு மாமாங்கமாவது ஆகியிருக்கும்.

எதிர்வசத்து ரூல்ஸ் ஓட்டல் போர்ட் கவனத்தை ஈர்க்கிறது -“லண்டனிலேயே பழைய ஓட்டல்’. 1798-ல் தொடங்கியதாம். அப்போது தயாரித்த மைசூர்பாகு எதுவும் ஷோகேஸில் தட்டுப்படவில்லை என்றாலும் இது உண்மையாக இருக்குமென்று நம்பலாம். சார்லஸ் டிக்கன்ஸ், கிரகாம் கிரீன் போன்ற பெரிய எழுத்தாளர்கள் வந்து இருந்து சாப்பிட்டுவிட்டுப் போன கடை என்று எழுதி வைத்திருக்கிறது. டிக்கன்ஸ் நாவல் எழுதியதோடு நிற்கவில்லை. மேடை போட்டு, தான் எழுதிய கதைகளை அதன் பாத்திரங்களாக மாறி வாசித்துக் காட்டவும் செய்தார். வாசகர்கள் காசு கொடுத்து டிக்கெட் எடுத்துக் குழுமி, அரங்கு நிறைந்து நடந்த இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கான பழைய நோட்டீசுகளை ரூல்ஸ் ஓட்டலில் காட்சியாக வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம், பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட ஏழாம் எட்வர்ட் மன்னன் தன் காதலியான நாடக நடிகை லில்லி லாங்ட்ரீயை பிரதிதினமும் அந்தி சாய்ந்த பின்னர் இந்த ஓட்டலில் வைத்துத்தான் சந்திப்பானாம்.

“”நாலாவது டேபிள் தாடிக்காரப் பெரிசுக்கு மட்டன் சாப்ஸ், ரெண்டாவது டேபிள் இங்கிலாந்து ராஜாவுக்கும் அவருடைய ஜோடிக்கும் சிக்கன் ரோஸ்ட், எட்டாவது டேபிளுக்கு தக்காளி சூப்.” என்று அந்தக்கால ஓட்டல் வெயிட்டர்கள் மேற்படி ராஜரகசியத்தை சகஜமாக எடுத்துக்கொண்டு நடமாடியிருப்பார்கள் என்ற நினைவோடு நடையை எட்டிப் போடுகிறேன்.

மெய்டன் சந்து பத்தாம் எண் வீட்டு வாசலில் ஒரு வினாடி நிற்கிறேன். வால்ட்டேர் இருந்த வீடு என்று வெளியே பலகை அறிவிக்கிறது. பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்ட்டேர் அது வெடிப்பதற்கு முன்னால் அகதியாகத் தஞ்சம் புகுந்தது லண்டனில்தான். அதுவும் இந்த கோவண்ட் கார்ட்டன் பகுதியும், மெய்டன் சந்து சூழ்நிலையும் ரொம்பப் பிடித்துப் போகவே இந்த வீட்டில் ஒரு வருடம் குடக்கூலி கொடுத்து வசித்து லண்டன் வாழ்க்கையை அனுபவித்தபடி சொந்த நாட்டில் புரட்சிக்குத் திட்டம் தீட்டியிருக்கிறார். ஒரு தேசத்தின் தலைவிதியையே மாற்றப்போகிற மனுஷர் நம்மிடையே இருக்கிறார் என்று தெரியாத அந்தக்கால மெய்டன் சந்துவாசிகள் அவரை அடிக்க ஒருதடவை படை பட்டாளமாகக் கிளம்பியிருக்கிறார்கள். பிரஞ்சுக்காரர்கள் தொடங்கி அன்னிய தேசத்துக்காரர்கள் யாரையும் கூடியிருக்கச் சம்மதிக்காத மனநிலையே இதற்குக் காரணம். இந்தச் சகிப்பின்மை இப்போதும் அவ்வப்போது ஷில்பா ஷெட்டி விவகாரம் போல் தலைகாட்டிக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

மெய்டன் சந்தில் மணக்க மணக்க செண்ட் விற்கிற பென்னலிஹன் கடை கண்ணில் படுகிறது. இதுவும் நூற்றுச் சில்லறை வருடம் முற்பட்டதுதான். உள்ளே வாக்கிங் ஸ்டிக்கை அப்படியும் இப்படியும் வீசியபடி அலமாரிகளில் அடைத்து வைத்திருந்த செண்ட் போத்தல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கனவான் கூடக் கடை திறந்த நாள் முதல் வாடிக்கையாளராக இருப்பவர் என்று தோன்றுகிறது. கடைக்குள்ளே நுழைந்து ஒரு சுற்று சுற்றி வருகிறேன். இரண்டாம் உலக மகாயுத்த காலத்துச் சூழல் கனமாகச் சூழ்ந்து நிற்கிற பிரமை. தஞ்சாவூர் அத்தர்க் கடை, கோபுலு வரைந்த தில்லானா மோகனாம்பாள் ஓவியம், வாசனைப் புகையிலை, சர்ச்சிலின் சுருட்டு வாடை, ராத்திரி முழுக்க நடக்கிற நாதஸ்வரக் கச்சேரி என்று நான் பிறப்பதற்கு முந்திய 1940-கள் மாயமாகக் கிளர்ந்தெழுந்து புலன்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. மெய்டன் சந்தில் காலம் உறைந்து கிடக்கிறது.

மெல்ல நடந்து சவுத்ஹாம்ப்டன் தெருவில் திரும்புகிறேன். எதிரே நிற்கிற பழைய கட்டடம் ஒரு பத்திரிகை அலுவலமாக இருந்தது. ஆமாம், நூறு வருடம் முன்னால்தான். ஆர்தர் கானன்டாயில் உருவாக்கிய பிரபலமான துப்பறியும் நிபுணரான ஷெர்லாக் ஹோம்ஸ் கதாநாயகனாக இடம்பெற்ற கதைகள் வெளியான “தி ஸ்ட்ராண்ட்’ பத்திரிகை இந்தக் கட்டடத்திலிருந்துதான் பிரசுரமானது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதை வாசிக்க ஆர்வமான ரசிகர்கள் இங்கிலாந்திலும், கடல் கடந்து அமெரிக்காவிலும் அதிகம் என்பதால், கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் விற்ற பத்திரிகை அது. ஸ்ட்ராண்ட் பத்திரிகை அடித்து ஓய்ந்த நேரத்தில் அச்சு யந்திரத்தை சும்மா வைத்திருக்க வேண்டாமே, இன்னும் நாலு காசு பார்க்கலாமே என்ற நல்லெண்ணத்தோடு அங்கேயிருந்து ஒரு கிசுகிசு பத்திரிகையும் வெளியாகிக் கொண்டிருந்ததாம். அதை ஆரம்பித்தபோது முதல் நாள் கிசுகிசுவாக, “ஏழாம் எட்வர்ட் மன்னருக்குப் பிரபல நடிகையோடு தொடர்பு’தான் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.

லண்டன் டைரி: பிசாசு பாடும் ராயல் ஓபரா ஹவுஸ்!

இரா.முருகன்

எட்டாம் ஹென்றி மன்னன் கொஞ்சம் அசடு. ஒன்றல்ல, நாலு முறை இந்தப் பேர்வழி கல்யாணம் செய்துகொண்டான் என்பதே போதும் இதை நிரூபிக்க. நாலு மாமியார்! இதிலும் உச்சகட்டக் கொடுமை அந்த நாலாவது மாமியார் அவ்வப்போது கனகுஷியாக ராகம் இழுத்துப் பாட வேறு செய்வார். பாட்டுப் பாடுவதில் ஆசை தீராமல், இறந்துபோன பின்பும் கூட, அதாவது இன்னமும் அவ்வப்போது நடுராத்திரி நேரத்தில் பிசாசாக அலைந்து மேடையேறிப் பாடிக்கொண்டிருக்கிறார். லண்டன் கோவண்ட் கார்டன் அருகே, ராயல் ஓபரா ஹவுஸ் என்ற பரந்து விரிந்த இசை நாடக அரங்கத்தில்தான் அந்தம்மா அவ்வப்போது நடுராத்திரிக் கச்சேரி நிகழ்த்திக் கொண்டிருப்பதாக லண்டன் வாழ் பிசாசு ரசிகர்கள் திடமாக நம்புகிறார்கள்.

கோவண்ட் தோட்டத்திலிருந்து தெற்கு நோக்கிப் போகும்போது கண்ணிற்படுகின்ற கட்டடம் ராயல் ஓபரா ஹவுஸ். நாட்டு மக்களுக்கு இசை நாடகம்(ஓபரா) என்ற நுண்கலையில் தேர்ந்த ரசனை ஏற்படுத்தும் நல்லெண்ணத்தில் அரசு உதவிப் பணம் கொடுக்க, இங்கே இருநூறு வருடத்துக்கு மேலாக அரங்கு நிறைந்த காட்சிகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. அப்படியான நிகழ்ச்சிகள் முடிந்து ராத்திரியில் ரசிகர்கள் ரயிலை, பஸ்ûஸப் பிடித்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததற்கு அப்புறம் ஆளில்லாத அரங்கத்தில் எட்டாம் ஹென்றியின் மாமியார் ஆவி ரூபமாக உலவியபடி பாடுகிறாராம். ஆனால் அதைக் கேட்க அதிர்ஷ்டம் இல்லாத ரசிகர்கள் கச்சேரி முடிவதற்கு முன்பே கிளம்பிவிடுகிறார்கள். “அந்தத் தாட்டியான அம்மா பாடினாத்தான் முடிஞ்சதுன்னு அர்த்தம்’ (  It’s not over until the fat lady sings) என்பது அவர்களுக்குத் தெரியாதோ என்னமோ.

ராயல் ஓபரா ஹவுஸ் வாசலில் நிற்கும்போது நினைவுக்கு வரும் ஆங்கிலச் சொலவடை இது. இரண்டு அணிகள் பொறி பறக்க மோதும் விளையாட்டுகளின் போது, வர்ணனையாளர்கள் தோற்கிற மாதிரித் தோன்றும் தரப்பை உற்சாகப்படுத்த உதிர்க்கும் வாக்கியம். “இன்னும் நம்பிக்கை இருக்கு’ என்று இதற்குப் பொருள். ஓபரா ஹவுஸ் வாசலில் டிக்கட் வாங்க நிற்கும் டூரிஸ்டுகளின் நீண்ட க்யூவை ஆயாசத்தோடு பார்க்கிறேன். இன்றைய நிகழ்ச்சிக்கு டிக்கட் கிடைத்து, அது முடிந்து இங்கேயே தங்கியிருக்க சந்தர்ப்பமும் கிடைத்து, மாமியார்ப் பிசாசு பாடுவதைக் கேட்க வாய்ப்பும் எனக்குக் கிட்டும் என்ற நம்பிக்கை இல்லாததால் தெருவைக் கடக்கிறேன்.

ஓபரா ஹவுஸýக்கு எதிரே ஒரு பழைய அரசாங்கக் கட்டடம் அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறது. தூசியடைந்து கிடக்கும் இது ஒரு காவல் நிலையம். லண்டனில் ஏற்பட்ட முதல் அல்லது இரண்டாவது போலீஸ் ஸ்டேஷன் இந்த இடத்தில்தான் இயங்கிக் கொண்டிருந்ததாகத் தகவல்.

வில்லியம் அட்கின்ஸன் என்ற லண்டன் போலீஸ்காரர் காவல் துறையின் சரித்திரத்தில் மட்டுமில்லை, உலகச் சாதனையாளர்கள் பட்டியலிலும் இடம்பெற வேண்டியவர். 1829-ல் இவரை அரசு காவலராக நியமித்தபோது வழங்கப்பட்ட எண் கான்ஸ்டபிள் நம்பர் ஒன். “”எய்ட் நாட் டூ, இந்த ஆளை லாக்-அப்பிலே தள்ளு, த்ரீ நாட் செவன் ஜீப்புலே ஏறு” என்று சினிமா கிளைமாக்சில் காக்கியுடை இன்ஸ்பெக்டர்கள் அவசர வசனம் பேசுகிறபோது, இப்படி ஒற்றைப்படையில் “கான்ஸ்டபிள் நம்பர் ஒன்’ என்று கூப்பிட்டால் சகிக்காதுதான். அது தெரிந்தோ என்னமோ, இந்த முதல் கான்ஸ்டபிள் நியமனமான கொஞ்ச காலத்தில் பதவி விலகிவிட்டார். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் அது. மிடுக்காகப் புத்தம்புது யூனிபாரம் அணிந்து, கோவண்ட் கார்டனைச் சுற்றி “பாரா உஷார்’ என்று ஜேப்படிக்காரர்களையும் இதரக் குற்றவாளிகளையும் தேடி மனுஷர் ரெண்டு மணி நேரம்தான் நடந்தார். கொஞ்சம் களைப்பு ஏற்படவே, எதிரே தெரிந்த கடையில் படியேறி குடிக்கத் தண்ணீர் கேட்டிருக்கிறார், பாவம். அவர் நுழைந்த இடம் மதுக்கடையானதால் பியர், விஸ்கி, பிராந்தி என்று பாட்டிலில் அடைத்துவரும் தண்ணீர்தான் கிடைத்தது. நிறுத்தி நிதானமாகத் தாகசாந்தி செய்துகொண்டு தள்ளாடியபடி நடந்து கடமையைத் தொடர்கிற நேரத்தில், அதிகாரிகள் கண்ணில் அவர் பட நேர்ந்தது துரதிர்ஷ்டம்தான். “நீ வேலைக்குச் சரிப்பட மாட்டே, வீட்டுக்குப் போய்யா..’ என்று முதல்நாள் வேலை முடிவதற்குள் சீட்டுக் கிழித்து அனுப்பப்பட்ட வில்லியம் அட்கின்ஸன் நினைவில் கண்கள் குளமாக, அடைத்துக் கிடக்கும் பழைய காவல் நிலையத்தைப் பார்க்கிறேன்.

“”இப்படி ஒரு புராதனமான கட்டடத்தைச் சும்மா அடைத்துப் பூட்டி வைத்திருக்காமல், மராமத்து செய்து இங்கே போலீஸ் மியூசியம் அமைக்கலாம். இல்லை இதை இடித்துவிட்டு, காவலர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டலாம். அரசு அலட்சியமாக இருப்பது ஏன்?” தொப்பியும் கம்பளிக் கோட்டும் தரித்த ஒரு நோஞ்சான் மனிதர் பூட்டிய காவல் நிலையப் படியில் நின்றபடி உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரவர் தன்பாட்டுக்குத் தெருவில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே நின்று இப்படி தொண்டைத் தண்ணீரை வற்ற அடித்துக் கொள்ளாமல், பக்கிங்ஹாம் அரண்மனைப் பக்கம் ஹைட் பார்க் போய், அங்கே ஈசான மூலையில் பேச்சாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பூங்கா பெஞ்சில் ஏறிநின்று இவர் சொற்பொழிவாற்றினால் ஒரு பத்து பேராவது கூடிநின்று கேட்பார்களே என்ற யோசனையோடு மருந்துச் சந்தில் (ட்ரூயரி லேன்) நுழைகிறேன்.

பிரிட்டனில் ஒரு பேட்டை பாக்கியில்லாமல் சூப்பர் மார்க்கெட் நடத்தும் செயின்ஸ்பரி நிறுவனம் முதன்முதலாகக் கடை போட்டது இங்கேதான். அந்தக் காலத்தில் இந்த மருந்துச் சந்தில் அங்கங்கே மாடு வளர்த்துப் பால் வியாபாரம் செய்துவந்திருக்கிறார்கள். மாட்டுச் சாணமும், வைக்கோலும் நிறைந்த இங்கே 1829-ல் சுத்தமும் சுகாதாரமுமாகப் பால் விற்கக் கடைதிறந்த பால்காரர்தான் செயின்ஸ்பரி. நகர எல்லைக்கு வெளியே மாடு வளர்த்துக் கறந்து, இங்கே கொண்டுவந்து நேர்த்தியாகப் போத்தலில் அடைத்து விற்பதோடு, புதிதாகச் சுட்ட ரொட்டி, நயம் வெண்ணெய் என்று சாப்பாட்டுச் சமாச்சாரங்களையும் அவர் விற்க ஆரம்பிக்க, அது நூற்றுக்கணக்கான செயின்ஸ்பரி கடைகளும், கோடிக்கணக்கில் பிசினசுமாகப் பெருகி வளர அதிக நாள் பிடிக்கவில்லை.

மருந்துச் சந்தின் அருகே பெட்ஃபோர்ட் தெருவில் இன்னொரு போட்டி சூப்பர் மார்க்கெட் நிறுவனமான டெஸ்கோவின் பரபரப்பான கடைவாசலில் நிற்கிறேன். என் கையில் இருக்கும் லண்டன் சரித்திரப் புத்தகத்தில் இந்த இடத்தைப் பற்றிக் குறித்திருக்கக் காரணம் டெஸ்கோ இல்லை. சூப்பர் மார்க்கெட் வருவதற்கு முன்னால் இங்கே வெற்றிகரமாக மோசஸ் சகோதரர்கள் நடத்தி வந்த தையல்கடையில் துணி தைத்துக் கிடைத்த வருமானத்தைவிட, சூட்டும் கோட்டும் வாடகைக்கு விட்டு அள்ளிய காசு கணிசமானதாம். கோவண்ட் தோட்டத்தைச் சுற்றியுள்ள நாடக, இசை அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும், நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்தப் பகுதி ஓட்டல்களில் ராத்திரிச் சாப்பாட்டுக்குப் போகும் மேட்டுக்குடி மக்கள் உயர்தரமான சாயந்திர உடை தரித்துத்தான் வருவது வழக்கம். கணிசமான பணம் செலவழித்து இப்படி உடுப்பு வாங்க வசதியில்லாத சாமானியர்கள் வருடத்தில் ஒருமுறை, இரண்டு முறை இப்படி ஓபரா போகிறபோது, ஓட்டலில் படியேறி ரசித்துச் சாப்பிடும்போது மேட்டுக்குடியாகத் தங்களைக் காட்டிக் கொள்வதில் மும்முரமாக இருந்தார்கள். வாடகைக்கு உடுப்பு கொடுத்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்த நிறுவனம் மூடப்பட்டதோடு ஒருநாள் கூத்து பார்க்க கனவான் வேடம் போடச் சந்தர்ப்பம் கிடைக்காமல் சாமானிய ரசனை ஓபராவையும், பாலேயையும் விட்டுவிலகி, கால்பந்தாட்டத்தில் புகுந்தது. ஒருவேளை டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் நினைத்தால் இங்கே திரும்ப வாடகை உடுப்பு வசதி வந்து, ராயல் ஓபரா ஹவுஸில் உள்ளூர்க் கூட்டம் திரும்பவர வாய்ப்பு கிடைக்கலாம். டோனி பிளேரைப் பார்க்கும்போது அவசியம் சொல்லவேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டு வெலிங்க்டன் தெருவில் திரும்புகிறேன்.

Posted in Britain, Dickens, England, Era Murugan, Era Murukan, Hotel, Ira Murugan, Ira Murukan, Literature, London, London Diary, Opera, Queen, Rayarkaapiklub, Rayarkapiklub, RKK, Royal, Tourist, Travel, Travelog, Travelogue, UK | Leave a Comment »

London Diary – Era Murugan: Jacket Potato

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

லண்டன் டைரி: ஜாக்கெட் பொட்டேடோ!

இரா. முருகன்

“”இது யேது கண்றாவியை வில்க்கறதுக்குக் கடய் பரத்தியிருக்கானாம்?” அழுத்தமான பாலக்காட்டு உச்சரிப்பில் தமிழ்க்குரலைக் கேட்டபடி கோவண்ட் கார்டன் ஆப்பிள் மார்க்கெட் பகுதியில் நுழைகிறேன். காஞ்சிபுரம் பட்டுப் புடவை. காலில் கான்வாஷ் ஷூ, ஸ்வெட்டர், தலையில் பனிக்குல்லாய் தரித்த பாலக்காட்டு மாமி மெல்ல நடந்துகொண்டிருக்கிறார். இரண்டு பக்கத்திலும் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போவது ஜீன்ஸ், பிளேசர் அணிந்த மருமகளும் மகனும்.

முன்னால் “ஜாக்கெட் பொட்டேடோ -ஹாட் ஹாட்’ என்று சாக்குக் கட்டியில் பலகை வைத்த கடையில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. நானும் அதில் கலக்கிறேன்.

“”போன வாரம் ஸ்காட்லாந்துலே இப்படித்தான் எய்ட் யார்ட்ஸ்னு போர்ட் போட்ட கடைக்குப் போனது ஓர்மை இருக்கோ. இதென்னவாக்கும் ஆறு கெஜமும் இல்லாதே, ஒன்பது கெஜமும் இல்லாதே நடுவாந்திரமா எட்டு கெஜத்திலே புடவையான்னு பார்த்தால், ஆம்பிளைகள் கட்டிக்கற பாவாடை விக்கற இடமாம்”.

ஸ்காட்லாந்து தேசிய உடையான எட்டு முழநீள கில்ட் விற்கிற கடையில் பாலக்காட்டம்மாள் நிற்கிறதைக் கற்பனை செய்தபடி இரண்டு பவுண்ட் கொடுத்து ஜாக்கெட் பொட்டேடோ வாங்குகிறேன். கையில் சுடச்சுட பிளாஸ்டிக் வட்டிலில், வேகவைத்த உருளைக்கிழங்கும் தயிரும். தோலை உரிக்காமல் வேகவைத்த உருளைக்கிழங்குதான் ஜாக்கெட் பொட்டேடோ என்ற பெயர் ரகசியம் புலனாகிறது…

நடைபாதையில் பரத்திய கடைகளும், கட்டடத்தில் அடுக்கிய கடைகளுமாக கோவண்ட் கார்டன் சனிக்கிழமை பிற்பகல் பரபரப்பில் மூழ்கிக் கிடக்கிறது. ஜூப்ளி மார்க்கெட், ஆப்பிள் மார்க்கெட் என்று பிரிந்த பகுதிகளில் சட்டென்று கண்ணில் படுவது சாப்பாடு விற்கும் கடைகள்தான். மார்க்கெட்டிலும், சுற்றுவட்டாரத் தெருக்களிலுமாகக் கிட்டத்தட்ட ஆயிரம் இடங்களில் வயிற்றுக்குத் தீனி கிடைக்கும் என்று நம்பகமான வட்டாரங்கள் திருப்தியாக ஏப்பம் விட்டபடி தகவல் தெரிவிக்கின்றன.

பியாஸô என்ற விஸ்தாரமான மார்க்கெட் முன் சதுக்கத்தில் ஆற அமர நடக்கிறேன். எல்லா ஐரோப்பிய நாட்டுத் தலைநகரங்களிலும், மாநகரங்களிலும் ரொட்டீன் விஷயமான இந்தமாதிரி நடைபாதை லண்டனுக்கு ரொம்பவே தாமதமாக, 1630-ல் தான் வந்தது. இனிகோ ஜோன்ஸ் என்ற கட்டடக்கலை நிபுணர் கோவண்ட் கார்டனை வடிவமைத்தபோது அதில் முக்கிய அங்கமானது பியாஸô. சாயந்திரம் ஒயிலாக நடைபயில இந்த விதானம், கடைகள், கோவண்ட் மார்க்கெட் பிரதேசம் முழுவதும் அமைந்த நாடகக் கொட்டகைகள், ஏற்கனவே சொல்லப்பட்ட சாப்பாட்டுக் கடைகள்…இப்படியான சமாச்சாரங்களுக்காகவே இந்தப் பகுதி அப்புறம் பிரசித்தமானது. அந்தப் பிரபலம் முன்னூறு வருடம் கழித்தும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மார்க்கெட் வளாகத்தில் ஒரு கடை வாசலில் “விர்ஜின் ஆலிவ் ஆயில்’ விளம்பரம். அறுபது வருடமாக அங்கே கன்னித்தன்மை மாறாத ஆலிவ் எண்ணெய் விற்கிறார்களாம். மேல்விவரம் அறிய உள்ளே நுழைகிறேன். விர்ஜினிட்டி என்ற சொல் கன்னிமை ஆலிவ் எண்ணெயின் பரிசுத்தத்தைக் குறிக்கும் பரிபாஷையாம். “நயம் ஆலிவ் எண்ணெய் விலை சகாயமாகக் கிடைக்குது. வாங்கிட்டுப் போங்க’ என்கிறாள் கடையில் விற்பனைப் பெண். வாங்கி? “”சமைக்கலாம். மாலிஷ் செய்து குளிக்கலாம்.” சரிதான், சீயக்காய்த் தூள் இருக்கா என்று விசாரிக்கிறேன். இல்லையாம்.

“”மந்திரமில்லே, மாயமில்லே..” ஆங்கிலத்தில் உரக்கக் குரல் விட்டுக் கொண்டு கோட்டு சூட்டு அணிந்த ஒரு வித்தைக்காரர் கோவண்ட் கார்டன் நடைபாதையில் கூட்டம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் சின்னதாக ஒரு பழைய பெட்டி. “” சிகரெட் குடிக்கிறவங்க ஆளுக்கு ஒரு சிகரெட்டை விட்டெறியுங்க.” வித்தைக்காரர் கேட்டுக்கொண்டபடி ஏழெட்டு சிகரெட் முன்னால் விழுகிறது. எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அதில் ஒன்றைப் புகைத்து உள்ளங்கையில் வைத்து அழுத்துகிறார். கையை விரிக்கும்போது சிகரெட் மாயமாக மறைந்துவிட்டிருப்பதைப் பார்த்துக் கூட்டம் கை தட்டுகிறது. பெட்டியில் பத்து பென்ஸ், ஐந்து பென்ஸ் என்று சில்லறை விழுகிற சத்தம். “” பாதி வித்தைக்கு நடுவிலே போகாதே…” நழுவுகிற பார்வையாளர்களைப் பார்த்துச் சத்தம் போடுகிறார் வித்தைக்காரர். “”போனா, ரத்தம் கக்கிச் செத்துடுவீங்க, ஆமா!” நான் சேர்த்துக் கொள்கிறேன். அடுத்த தாயத்து விற்பனை தொடங்குவாரோ என்று யோசித்தபடி நடையை எட்டிப் போடுகிறேன்.

டீத்தூள் மட்டும் விற்க என்று ஒரு கடை. சீனாவிலிருந்து வந்த மல்லிகைப்பூ வாசம் அடிக்கும் டீ, தாய்லாந்து கிராம்பு டீ, கொழும்பு டீ என்று அடுக்கிய கடையில் இரண்டு பெரிய அலமாரி முழுக்க அசாம், டார்ஜிலிங், நீலகிரி என்று சகலவிதமான இந்திய டீத்தூளும் கொஞ்சம் அதிக விலைக்குக் கிடைக்கிறதாகத் தெரிகிறது. பக்கத்துக் கடையில் சக்கரம் வைத்த வண்டியில் வித்தியாசமாக ஏதோ கண்ணில்பட ஒரு வினாடி நிற்கிறேன். நாற்காலியில் உட்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிக்கொண்டிருக்கும் வயதான பெண்மணிகள். நாயைக் கையில் பிடித்துக் கூட்டிக்கொண்டு வாக்கிங் ஸ்டிக்கோடு நடக்கிற வயோதிகர்கள், நீளத் தொப்பி தரித்த கனவான்கள், தரையில் புரளும் பாவாடை தரித்த அழகிய கன்னியர். எல்லோரும் நூறு வருடத்துக்கு முற்பட்டவர்கள். முக்கால் அடி உயரத்துக்கு மேல் யாரும் இல்லை. தத்ரூபமான இந்த மரச் சிற்பங்களை வண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருக்கும் கடைக்காரரை விலை விசாரிக்கிறேன். ஒவ்வொன்றும் முப்பது பவுண்டாம். மூவாயிரம் ரூபாய்க்குப் பொம்மை வாங்கி விளையாடுகிற வயசா என்ன? மேலே நடக்கிறேன்.

கோவண்ட் கார்டனுக்கு மேலதிக அழகு சேர்க்கும் லண்டன் போக்குவரத்து மியூசியம் அடைத்துப் பூட்டியிருக்கிறது. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு லண்டன் தெருக்களை அவற்றின் கூட்டம், குதிரை பூட்டிய கோச், டிராம் வண்டிகளோடு தத்ரூபமாகச் சித்திரிக்கும் மியூசியத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆனாலும் மியூசியம் கடை திறந்திருக்கிறது. பழைய சிவப்பு லண்டன் மாநகர பஸ் படம் போட்ட டீ ஷர்ட் விலை விசாரிக்கும்போது -அதுவும் மூவாயிரம் ரூபாய் சொச்சம்தான். கடைக்குள் ஒரு சென்டிமீட்டர் விடாமல் ஆக்கிரமித்துக்கொண்டு சகலமானதும் வாங்குகிறவர்கள் எந்த நாட்டு டூரிஸ்டுகள்?

போக்குவரத்து மியூசிய வாசலில் சீன இசைக் கலைஞர் ஒருத்தர் முன்னால் பெட்டியைத் திறந்துவைத்துவிட்டு, புல்லாங்குழலில் இசை பொழிந்து கொண்டிருக்கிறார். காதல் தோல்வியில் முடிந்த சோகத்தையோ, அல்லது கல்யாணத்தில் தொடர்ந்த மகா சோகத்தையோ உருக்கமாக இசைக்கும் அவருக்கு விழுந்த காசுகள் மொத்தமே ஐம்பது பென்ஸ்தான் என்பது இன்னொரு சோகம்.

ஆனாலும் கோவண்ட் தோட்டத்துக்கு வெளியே, பாதாள ரயில் நிலையத்துக்குப் போகிற வழியில் நிற்கிற சிலைக்கு முன்னால் ஏகப்பட்ட கூட்டம். அலுமினியம் பெயின்ட்டைப் பூசிக்கொண்டு ஆடாமல் அசங்காமல் மணிக்கணக்காகச் சிலையாக நிற்கும் கலைஞருக்கு முன் காசுகள் விழுந்தபடி இருக்கின்றன.

“”உங்க அப்பா திண்ணையிலே பரப்பிரம்மா, அனங்காதே உக்கார்ந்து பேப்பர் வாசிக்கிற மாதிரி இருக்கு, கேட்டியோ..”-பின்னால் குரல். பாலக்காடுதான்.

Posted in Britain, Engaland, Era Murugan, Era Murukan, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, London Diary, Marketplace, markets, Potato, Sellers, Shops, Tour, Travleog, Travleogue, UK | 1 Comment »

London Diary – Era Murugan: Kothavalsavadi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

லண்டன் டயரி: லண்டன் கொத்தவால்சாவடி!

இரா.முருகன்

ஒரு மாநகரம். தலைநகரும் கூட. அங்கே போக்குவரத்தும் , ஜன நெருக்கடியும் இரைச்சலும் பரபரப்புமாகச் சதா இருக்கப்பட்ட வீதிகளை ஒட்டி ஒரு பெரிய சந்தை. நகர் முழுவதற்கும் காய்கறியும், பழமும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்க ஏற்படுத்தப்பட்ட அந்த மார்க்கெட் கிட்டத்தட்ட முன்னூறு வருடம் அதே இடத்தில்தான் இருந்தது. இனியும் நெரிசல் தாங்காது என்ற நிலைமை ஏற்பட, அதை ஏகப்பட்ட எதிர்ப்புகளுக்கு இடையே இடம் மாற்றினார்கள்.

லண்டன் டயரியில் சென்னை கொத்தவால் சாவடி நுழைந்த காரணம் புரியாமல் விழிக்க முற்படுவதற்கு முன்பாக ஒரு வார்த்தை. இது கொத்தவால் சாவடி பற்றிய தகவல் இல்லை. கோவண்ட் தோட்டம் என்ற லண்டன் கோவண்ட் கார்டன் சந்தை பற்றியது. ஆதியில் அதாவது எழுநூறு வருடம் முன்னால் கோவண்ட் தோட்டம் கான்வென்ட் தோட்டமாகத்தான் இருந்தது. தேவ ஊழியத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட கிறிஸ்துவப் பாதிரியார்கள் தங்கியிருந்த இடம் “கான்வென்ட்’ என்று அழைக்கப்பட்டது. அந்தத் துறவிகள் பிரார்த்தனைக்கு மிஞ்சிய நேரத்தில் குழந்தைகளைக் கூட்டிவைத்துக் கொண்டு அங்கேயே கல்வி கற்பிக்கத் தொடங்கியபோது, மேற்படி பள்ளிகளின் பெயரில் கான்வென்ட் ஒட்டிக் கொண்டது. லண்டன் கான்வெண்ட் தோட்டத்துக்கு அந்தப் பெயர் ஏற்படக் காரணம், அந்தக் காலப் பாதிரியார்கள் மடாலயத்துக்குத் தேவைகளுக்காக நகருக்கு நடுவே காய்கறித் தோட்டம் போட்டு கத்தரிக்காயும், முள்ளங்கியும், தக்காளி, வெண்டையும் பயிர் செய்ததுதான்.

தேம்ஸ் பாசனம், அற்புதமான மண். போட்டது எல்லாம் பொங்கிப் பூரித்து அமோகமாக விளைய, மடாலயத் தேவைக்கு மிஞ்சிய காய்கறி, பழத்தை எல்லாம் நகர மக்களுக்கு விற்க ஆரம்பித்தார்கள். “தினசரி மூணு வேளையும் வெண்டைக்காய்க் குழம்புதானா? ரெண்டு பக்கமும் வெண்ணெய் தடவி மொறுமொறுவென்று தணலில் வாட்டிய ரொட்டி கிடைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்’ என்று புதிய , பழைய மடாலயவாசிகள் உரக்க முணுமுணுக்க ஆரம்பித்திருக்கலாம். ரொட்டியும் வெண்ணையும் வாங்க, மடாலயத்தில் நிதி நிலைமை சரியில்லாத காரணத்தால் காய்கறிக்கடை நடத்த ஆரம்பித்து, அந்தக் காலத்திலேயே இருபது பவுண்ட் மாத வருமானம், அதாவது இன்றைய கணக்குக்குக் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய்.

லாபம் எல்லாம் சரிதான். ஆனால் காய்கறி பயிரிட, களையெடுக்க, பறித்து எடுத்துப் போய்க் கடையில் குவித்து வைக்க, விற்றுக் காசை எண்ணிக் கல்லாவில் போட்டுக் கணக்குப் பார்க்க இப்படியே பொழுது கழிந்ததால் பிரார்த்தனைக்கு நேரம் சரியாகக் கிடைக்காமல் போனது. இது சரிப்படாது என்று முடிவு செய்து, கோவண்ட் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டு , மடாலயத்துக்குச் சப்ளை செய்து, மிஞ்சியதைப் பொதுமக்களுக்கு விற்று வருமானத்தை ஒப்படைக்கும் காரியம் குத்தகைக்கு விடப்பட்டது. காண்ட்ராக்ட் எடுக்க ஏகப்பட்ட போட்டி. எடுத்தவர்கள் தொப்பையும் தோல்பையும் பெருத்து வளைய வருவதை அன்றைய இங்கிலாந்து அரசன் எட்டாம் ஹென்றி அரண்மனைக்குள் இருந்து பெருமூச்சோடு பார்த்தான். இந்தப் புண்ணியவான்தான் கட்டிய பெண்டாட்டி ஆன்போலின் அரசியை லண்டன் டவர் வளாகத்தில் வைத்து நோகாமல் தலையை வெட்டிவிட்டுச் சற்றும் தாமதியாமல் அடுத்த கல்யாணம் செய்து கொண்டான் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நினைவு.

ஆன்போலின் அரசியின் தலையை வெட்டியதுபோல் ஏகப்பட்ட மடாலயத் துறவிகளை வரிசையாக நிற்க வைத்துத் தீர்த்துக் கட்டுவது கொஞ்சம் சிரமமான காரியம். மக்கள் எதிர்ப்பும் கூடுதலாக இருக்கும். எனவே எட்டாம் ஹென்றி ரொம்ப யோசித்து, ஓர் அவசரச் சட்டம் போட்டான். கோவண்ட் தோட்டம் அடுத்த நாள் காலையில் அரசுடமை ஆனது. அங்கே பயிர் செய்த காய்கறி, பழங்களைச் சில்லறை, மொத்த விற்பனை செய்வதும் கஜானாவுக்குக் காசு சேர்க்கும் விஷயமானது. நாளடைவில் அவ்

விடத்தில், காய்கறிச் சாகுபடியைவிட, நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வண்டிகளிலும் , கால்நடையாகவும் கொண்டு வந்த சரக்கை நிறைத்து வைத்து விற்பனை செய்வது பிரதானமான பணியாக மாறியது.

ஆமை புகுந்த வீடு பற்றிய அனுபவம் இல்லாத இங்கிலாந்து மக்கள், அரசாங்கம் புகுந்த தோட்டம் என்ன ஆகும் என்று நோக்க அடுத்த சிலபல வருடங்களில் சந்தர்ப்பம் கிடைத்தது. பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட கோவண்ட் தோட்டம் அரசாங்கத்து வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. சும்மா இல்லை. பிரதியுபகாரமாக அவர்கள் சிம்மாசனத்துக்கு அடியிலும், மேலேயும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசனுக்கு ஆள், அம்பு , பட்டாளம் , தங்கக்காசு, வெள்ளியில் அண்டா குண்டா என்று சேவை சாதித்து, அனுபோக பாத்தியதையாகக் கிடைத்த சொத்தை அனுபவிக்க வேண்டும். இந்த ஆள் நம்ம கட்சியில் இல்லை, அல்லது எதிர்ப்பு அறிக்கை விடுக்கத் தயாராகிறான் என்று அரசருக்குப் பட்டால் உடனே அந்தப் பிரமுகரின் கழுத்து அளவு எடுக்கப்பட்டு , கத்தி தயாரிக்கப்படும். அன்னாரை லண்டன் டவர் சிறையில் தற்காலிகமாக ஓய்வெடுக்க வைத்துவிட்டு , அவருக்கு வழங்கப்பட்ட தோட்டம் துரவு பிடுங்கப்பட்டு, அரசரின் புது ஜால்ராவுக்கு அன்பளிக்கப்படும். அந்தக் கால அரசியல் நிலைமை அப்படி.

ஆனாலும் ஆயிரத்து எழுநூறாம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து அரசியல் அமைதி ஏற்பட, இந்தக் களேபரம் ஓய்ந்து, கோவண்ட் தோட்டத்தில் நகர் முழுவதற்கும் காய்கறி, பழம் சப்ளை செய்யும் பேரங்காடி எழுந்தது. பெட்போர்ட் வம்ச நாலாம் பிரபுவான பிரான்சிஷ் ரஷ்ஷல் ஏற்படுத்திய இந்த அங்காடி அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குத் தினசரி மும்முரமாக வியாபாரம் நடக்கும் இடமாக மாறியது. வருடம் ஒரு முறை கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் விடுமுறை. மற்றபடி முன்னூற்று அறுபத்து நாலு நாளும் விற்பனை என்று தொடர்ந்து முன்னூறு வருடம் சாதனை படைத்த மார்க்கெட் இது. 1877 – ல் காய்கறி லோடு ஏற்றி வந்த வண்டிகளில் இருந்து சரக்கு இறக்கிக் கடைகளுக்கு எடுத்துப் போக மட்டும் இங்கே கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பாரம் சுமக்கும் தொழிலாளிகள் இருந்தார்கள். பழைய கொத்தவால் சாவடியைவிட இது பத்து மடங்கு அதிகம் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

கோவண்ட் தோட்டக் காய்கறி, பழ அங்காடியை இடம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஒரு முப்பது வருடத்துக்கு முன் பூதாகரமாக உருவெடுத்தது. மார்க்கெட் நெரிசல் மட்டும் இல்லை இதற்குக் காரணம். இந்தப் பகுதியில் ஏகப்பட்ட நாடகக் கொட்டகைகள், பிரசித்தமான உணவு விடுதிகள், தினசரி லட்சக்கணக்கில் வருமானம் நிறைய, சகலவிதமான பொருட்களையும் விற்கும் கடைகள், போக்குவரத்துச் சிக்கல், அசுத்தமடையும் சூழல் என்று ஏகப்பட்ட மற்ற விஷயங்களும்தான்.

1974 – ல் கோவண்ட் தோட்ட அங்காடியை அங்கேயிருந்து மூன்று மைல் தொலைவில் இடம் மாற்றிய போது முன்னூறு வருடப் பரபரப்பு ஓய்ந்த மயான அமைதியில் கிடந்த அந்தப் பெரிய நிலப்பரப்பையும், காலியான கட்டடங்களையும் பார்க்க லண்டன் மக்களுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. நகருக்கு மத்தியில் நடுநாயகமாக இத்தனை அழகும் பாரம்பரியப் பெருமையும் கம்பீரமும் நிறைந்த இடத்தைச் சும்மா கிடக்க விடலாமா என்று எல்லாரும் ஒருமித்து அரசாங்கத்தை நோக்கிக் கோரிக்கை எழுப்பினார்கள். ஆக, எட்டே வருடத்தில் அந்த இடம் திரும்பவும் சுறுசுறுப்பும் பரபரப்பும் ஆனது. புதுப்பிக்கப்பட்ட அந்தக் கோவண்ட் தோட்டத்தில்தான் இப்போது நின்று கொண்டிருக்கிறேன்.

Posted in England, Era Murugan, Era Murukan, Guide, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kothavalsavadi, London Diary, Tour, Traveler, Travelogues, UK | Leave a Comment »

London Diary – Era Murugan: London Fire & Memorial

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

லண்டன் டைரி: நெருப்பின் சின்னம்!

இரா. முருகன்

நினைவுச் சின்னத் தெருவும் மீன் தெருவும் சந்திக்கிற தெருவில் இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். எதிரே நீட்டி நிமிர்ந்து நிற்கிறது 1666-ம் வருடத்து லண்டன் தீவிபத்தின் நினைவாக எழுப்பப்பட்ட கோபுரம். அறுபத்தொன்று மீட்டர் உயரம். அருகே, துல்லியமாகச் சொல்லவேண்டுமென்றால், கோபுரத்திலிருந்து அதே அறுபத்தொன்று மீட்டர் தொலைவில் தீ தொடங்கிய இடமான புட்டுச்சந்து ரொட்டிக்கடை இருந்த இடம் சிமென்ட் கோபுரத்தின் உச்சியில் நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. நிஜ நெருப்பு இல்லை. கோபுரக் கலசத்தில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் சிற்பம்.

“”மேலே போகமுடியுமா?” வாசலில் காவலரை விசாரிக்கிறேன். “”ரெண்டு பவுண்ட் டிக்கெட் எடுத்து, முன்னூத்துப் பதினோரு படி ஏறினா, உங்க மாமா பேரு பாப்” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரிக்கிறார் அவர். அத்தனை படி ஏறி மேலே போனால் என் மாமா பெயர் ஏன் திடீர் என்று மாறவேண்டும் என்று குழப்பத்தோடு அவரைப் பார்க்கிறேன். “”Bob’s your uncle” என்ற பிரிட்டீஷ் சொலவடைக்கு, “அம்புட்டுத்தான், ரொம்ப ஈஸி’ என்ற அர்த்தம் என்று அப்புறம்தான் நினைவு வருகிறது.

மூச்சு வாங்க, அந்தக் குறுகிய படிகளில் ஏற ஆரம்பிக்கிறேன். மனம் இன்னும் பற்றி எரிந்துகொண்டிருக்கும் லண்டன் மாநகர நெருப்பிலேயே பிடிவாதமாகப் படிந்து கிடக்கிறது. நான்கு நாள் தொடர்ந்து எரிந்த பெருந்தீ அது.

பிரெஞ்சுக்காரர்கள்தான் தீவைத்ததாக வதந்தி பரவ, எதிர்ப்பட்ட பிரெஞ்சுக்காரர்களை எல்லாம் அடித்து உதைத்துச் சிறையில் வைத்தார்கள். கடியாரத் தயாரிப்பாளரான ஒரு பிரெஞ்சுக்காரரைச் சித்தரவதை செய்து அவர்தான் புட்டுச் சந்தில் தீவைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவைத்து, பகிரங்கமாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றினார்கள். அந்த அப்பாவி மனிதர் தீவிபத்து தொடங்கி இரண்டு நாள் கழித்துதான் லண்டன் நகருக்குள் நுழைந்தார் என்ற விஷயம் அப்புறம்தான் தெரியவந்தது.

தீ பிடித்த மூன்றாம்நாள் லண்டன் பங்கு சந்தை, பக்கத்து சீப்சைட் பகுதியில் பெரிய கடைகள் இருந்த அங்காடி. நாடு முழுக்க தபால் போக்குவரத்தை நடத்தும் ஊசி நூல் தெரு தபால் ஆபீஸ் என்று வரிசையாகத் தீக்கிரையாகிக் கொண்டிருந்தன. பிரம்மாண்டமான செயிண்ட் பால் தேவாலயத்திலும் தீ நுழைந்தது. வீடு இழந்து ஓடி வந்த குடிமக்கள் பலரும் எரியும் நெருப்பிலிருந்து காப்பாற்றி எடுத்து வந்த மூட்டை முடிச்சுகளோடு அங்கே தஞ்சம் புகுந்திருந்தார்கள். முக்கியமாக, தேவாலயப் பக்கத்துத் தெருக்களில் இருந்த புத்தக விற்பனையாளர்கள் ஸ்டாக்கில் இருந்த புத்தகம் முழுவதையும் மாதா கோவிலுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள். காகிதம், துணி என்று இருந்த இந்தக் குவியலில் தீ பரவி, ஒரு மணி நேரத்தில் கோவிலின் உலோகக் கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. ஜனக்கூட்டம் தேம்ஸ் நதிக்கரைக்கு ஓட, கோவில் கூரையிலிருந்து ஈயம் உருகித் தெருமுழுக்க உலோக ஆறு. தேவாலயத்துக் கருங்கல் பாளங்களும் வெடித்துச் சிதறி நாலு திசையிலும் விழ, உக்கிரமான உஷ்ணத்தோடு நெருப்பு முன்னேறிக் கொண்டிருந்தது.

இந்தக் களேபரத்துக்கு நடுவிலும் ஊசிநூல் தெரு அரசாங்க அச்சகத்தில் மும்முரமாக அச்சுக்கோர்த்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கம் வெளியிடும் வாராந்திர செய்தித்தாளான “லண்டன் கெசட்’ பத்திரிகை அந்த வாரம் அச்சுக்குப் போகவேண்டிய தினம். துரைகள் மற்றும் சீமாட்டிகளின் போக்குவரத்து, வீட்டு விசேஷங்களை ஆதியோடந்தமாக எடுத்துச் சொல்ல நடத்தப்பட்ட பத்திரிகை லண்டன் கெசட். எந்தத் துரை எந்தச் சீமாட்டியை எப்போது கல்யாணம் செய்துகொள்ளப் போகிறார். கல்யாணமான சீமாட்டிக்குக் குழந்தை பிறந்த விவரம், காலமானார் பட்டியலில் புதிதாகச் சேர்ந்த மேட்டுக்குடிப் பிரமுகர்கள் பற்றிய தகவல் என்று தலைபோகிற செய்திகளைப் போட்டு நிரப்பி, கடைசிப் பக்கத்தில் ஓரமாக “லண்டன் மாநகரத்தில் தீவிபத்து. ஊர் முழுக்க எரிந்து கொண்டிருக்கிறது’ என்று சம்பிரதாயமாக இரண்டு வரி சேர்த்து அச்சடித்து இறக்கி எடுத்துக்கொண்டு பத்திரிகையின் ஆசிரியரும் மற்ற ஊழியர்களும் வெளியே ஓடும்போது, பத்திரிகை ஆபீஸ் வாசலில் தீ பரவிக்கொண்டிருந்தது. சுடச்சுட செய்திகளைத் தருவது 1666-லேயே தொடங்கிவிட்டது என்பது நினைவில் வைக்கவேண்டிய சங்கதி…

மாநகரத் தீயணைப்புப்படை தீயணைப்பு முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி அடைய, சார்லஸ் மன்னன் ராணுவத்தை மாநகராட்சிக்கு ஒத்தாசையாக அனுப்புவதாகச் சொன்னபோது நகரப் பிரமுகர்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். அரசவை இருந்த வெஸ்ட்மின்ஸ்டர், அரண்மனை இருந்த வொய்ட்ஹால் பகுதிகளுக்கும் தீ பரவும் அபாயம். இனியும் தாமதித்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று அதிரடி நடவடிக்கை எடுத்தான் அரசன். ராணுவம் நகருக்குள் நுழைந்து, தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. சார்லஸ் மன்னன், “வாய்யா ஜேம்ஸ்’ என்று அவன் சகோதரன் ஜேம்ûஸயும் கூட அழைத்துக்கொண்டு போய் நேரடியாக மேற்பார்வை செய்ய ஆரம்பித்தான். அவன் கட்டளைப்படி, லண்டன் டவரில் ஏகப்பட்ட வெடிமருந்தைக் கொளுத்தித் தீயைத் தீயால் அணைக்க எடுத்த நடவடிக்கை பெருவெற்றியில் முடிந்தது.

பதிமூன்றாயிரம் வீடுகள், எண்பது தேவாலயங்கள், கடைவீதிகள், அரசாங்க அலுவலகங்கள் என்று கிட்டத்தட்ட எண்பது சதவிகிதம் லண்டன் நகரை அழித்துவிட்டுத் தீ அடங்கியபோது வெஸ்ட்மின்ஸ்டர், அரண்மனை இவற்றோடு நகரை ஒட்டி இருந்த கீழ்த்தட்டு மக்களின் இருப்பிடங்கள் மட்டும் மிச்சம் இருந்தன. அடுத்த எட்டு ஆண்டுகளில் அந்த அரசன் குடிமக்களின் ஒத்துழைப்போடு நகரத்தை திரும்ப உருவாக்கினான். பழைய அமைப்பிலேயே தெருக்கள், மாதாகோவில்கள் இவற்றோடு செயிண்ட் பால் தேவாலயமும் திரும்பக் கம்பீரமாக எழுந்து நின்றது. இந்தத் தேவாலயமும் தீவிபத்தை நினைவுகூர எழுப்பிய நினைவுச் சின்னமும் கிறிஸ்டோஃபர் ரென் என்ற பிரபல கட்டிடக் கலைஞரால் கட்டப்பட்டவை.

நினைவுச் சின்னத்தின் கடைசிப்படி ஏறிக் கோபுர உச்சிக்குப் போய் மூச்சுமுட்ட நிற்கிறேன். கிழக்கே லண்டன் டவர், டவர் பாலம், நங்கூரம் பாய்ச்சி நிற்கும் எச்.எம்.எஸ் பெஸ்பாஸ்ட் கப்பல் எல்லாம் பொம்மை மாதிரி தெரிகின்றன. மேற்கே செயிண்ட் பால் தேவாலயம் வெயிலில் பிரகாசிக்கிறது. என் பக்கத்தில் பைனாகுலரை வைத்துச் சுற்றிலும் உன்னிப்பாகப் பார்த்தபடி இருந்த முதியவர் என்னைப் பார்த்து, “”இந்தியாவா?” என்று கேட்கிறார். பாகிஸ்தான்காரர் அவர். கணிதப் பேராசிரியர். அடுத்த வருடம் ரிடையர் ஆகிச் சொந்த ஊர் லாகூரில் செட்டில் ஆக உத்தேசமாம். “”எப்படி இருக்கு நம்ம பக்கமெல்லாம்?” என்று அந்நியோன்னியத்தோடு கேட்கிறார். சென்னைக்கு வெகு அருகில் லாகூர் இல்லை என்பதை அவருக்கு அன்போடு நினைவூட்டுகிறேன். “”யார் சொன்னது? ஒரு காலத்துலே, அதாவது 1929-ல் லாகூருக்கும் மேட்டுப்பாளையத்துக்கும் நடுவிலே ரயில் ஓடினது தெரியுமா? இப்ப உங்க சென்னைக்கும் தில்லிக்கும் இடையே ஓடுற கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்தான் அது”. பாகிஸ்தானியப் பேராசிரியர் சொல்கிறதை நம்ப முடியாத ஆச்சரியத்தோடு கேட்கிறேன். லாகூரில் இருந்த பிரிட்டீஷ் துரைகள் மேட்டுப்பாளையத்தில் இறங்கி ஊட்டிக்குப் போக ஏற்படுத்தியதாம் அந்த ரயில் பாதை.

சென்னையிலிருந்து லாகூருக்கு ரயிலில் போவதாகக் கற்பனை செய்துகொண்டு மெல்லப் படி இறங்குகிறேன் நான்.

Posted in Dinamani, Era Murugan, Era Murukan, Fire, Guide, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London Diary, Memorial, Raayar kaapi klub, Raayarkaapiklub, Rayar kapi klub, Rayarkaapiklub, RKK, Tourist, Travelogue, UK | Leave a Comment »

London Diary – Era Murugan: Fire, Curfew, Floods

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

லண்டன் டைரி: வெள்ளத்திலும் “ஃபயர்’!

இரா. முருகன்

“”ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி அடுப்பை அணைச்சுட்டுப் படுத்துக்கணும்.” இது வீட்டுத் திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்து, வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியபடி அந்தக்கால மாமியார் தன்னுடைய மருமகளுக்கு அவ்வப்போது தவணைமுறையில் நல்கிய உபதேசம் இல்லை. ஓர் அரசாங்கமே சட்டம் போட்டு அறிவித்த விஷயம். இங்கிலாந்தை ஆக்கிரமித்து ஆண்ட வில்லியம் மன்னன் நாட்டு மக்களுக்கு விடுத்த அரச கட்டளை -“கவர் ஃபயர்’. அதாவது ராத்திரியில் முதலில் வீட்டு அடுப்பில் நெருப்பை அணைத்துவிட்டு இதர விஷயங்களில் கவனம் செலுத்தவும்.

ஊர் முழுக்கக் கடைப்பிடிக்கவேண்டி ஆயிரம் வருடத்துக்கு முந்திப் போடப்பட்டது அந்த “கவர் ஃபயர்’ சட்டம். கவர் ஃபயர் நாளடைவில் திரிந்து கர்ஃப்யூ என்ற ஊரடங்கு உத்தரவு ரூபத்தில் இன்னும்கூட எல்லா அரசாங்கங்களாலும் அவ்வப்போது அமுலாக்கப்படுகிறது என்பது உண்மை. மேற்படி சட்டப்படி அடுப்பை அணைக்க ஒரு குடிமகன் மறந்துபோனதால் லண்டன் மாநகரமே முன்னூறு வருடம் முன்னால் மாபெரும் தீவிபத்தில் அழிந்து போனது என்பதும் உண்மைதான்.

லண்டன் பாலத்திலிருந்து திரும்பி நகருக்குள் நடந்து, இதையெல்லாம் யோசித்தபடி நான் நிற்கிற இடம் புட்டுச் சந்து. அதாவது புட்டிங் லேன். டூரிஸ்டுகளை ஏற்றி வருகிற சிவப்பு பஸ் ஒன்று அரை நிமிடம் சந்து முனையில் தயங்கி நிற்க, பஸ் மேல்தளத்தில் வழிகாட்டிப் பெண் 1666 என்று சொல்கிற சத்தம் காற்றில் மிதந்து வருகிறது. ஆயிரத்து அறுநூற்று அறுபத்தாறு. லண்டன் நகரமே பற்றி எரிந்த வருடம் அது. அந்த நெருப்பு தொடங்கிய இடம் இந்தப் புட்டுச் சந்துதான்.

லண்டனுக்குச் சோதனையான காலம் இதற்கு ஒரு வருடம் முன்பே தொடங்கிவிட்டது. 1665-ம் வருடம் தொடர்ந்து ராப்பகலாகப் பெருமழை பெய்தது. நசநசவென்று நனைந்து ஊறி அசுத்தமாகக் கிடந்த ஊரில் எலித் தொல்லை பெருகியது. அது கொள்ளை நோயில் கொண்டுபோய் விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரைக் காவு கொண்டு அந்த நோய் போய்ச் சேர்ந்த அடுத்த வருடமே ஊரை அழிக்கிற மாதிரி ஒரு மாபெரும் தீவிபத்து. இரண்டுமே ஜனத்தொகைப் பெருக்கத்தின் விளைவு.

தேம்ஸ் நதிக்கரையை ஒட்டி ஆரம்பித்து, ரோமானியப் பேரரசு காலத்து நகர எல்லைச் சுவர் வரை நீண்ட லண்டன் நகரத் தெருக்களில் கீழ்த்தட்டு, நடுத்தர மக்கள் நெருக்கியடித்து இருந்து, தொழில் செய்து, வியாபாரம் நடத்திக் குடியும் குடித்தனமுமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிரபுக்கள் இந்த ஜன நெரிசலிலிருந்து விலகி, இன்னும் தூரத்தில் வெஸ்ட்மின்ஸ்டரிலோ அல்லது தேம்ஸ் நதிக்கு அக்கரையில் புறநகர்ப் பகுதிகளிலோ சுகபோகமாக வசித்துக் கொண்டிருந்தார்கள். இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்லஸýக்கும் லண்டன் நகருக்கும் சுமூகமான உறவு இல்லாத நேரம் அது. மன்னராட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்த குடியரசுத் தலைவர்களின் நிர்வாகத்தில் லண்டன் மாநகராட்சி இருந்தது.

பெருகிவரும் ஜனத்தொகையை இருக்கப்பட்ட இடத்திலேயே குடியிருத்த வேண்டிய நிர்ப்பந்தம். வீடுகள் தரைமட்டத்தில் சிறுத்தும், மேலே அகன்று விரிந்தும் கூடுதல் இடவசதிக்காக மாற்றியமைக்கப்பட, தெருவின் இரண்டு பக்கத்திலும் ஒன்றை ஒன்று தொடுகிற மாடிகள் காற்றையும் வெளிச்சத்தையும் தடைசெய்தன. அசம்பாவிதமாக ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் இந்தத் தெருக்களில் உயிர்ச்சேதமும் பொருள் சேதமும் அதிகமாக இருக்கும் என்பதால் நகரம் முழுக்க அந்தந்தப் பேட்டை தேவாலயங்கள் தீயணைப்புக் கேந்திரமாகச் செயல்படத் திட்டம் அமுலாகியது.

கிட்டத்தட்ட இருநூறு தேவாலயங்களில் நெருப்பை அணைக்கத் தயாராகத் தண்ணீர் வாளி, எரிகிற கூரையைப் பிடுங்கி எரிய துரட்டி மாதிரியான உபகரணங்கள், ஏணிகள் என்று சேமித்து வைத்தார்கள். எங்கேயாவது தீப்பிடித்தால், அர்த்தராத்திரி என்றாலும் தேவாலய மணி முழக்கப்படும். கேட்டு ஓடிவந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அந்தந்தப் பேட்டை மக்களின் கடமை.

இப்படி விலாவாரியாக முன்னேற்பாடு எல்லாம் இருந்தாலும், புட்டுச் சந்தில் ரொட்டிக்கடை வைத்திருந்த தாமஸ் பரினர் மூலம் விதி விளையாடியது. 1666-ம் வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதி சனிக்கிழமை ராத்திரி அவர் ரொட்டி சுடும் அடுப்பை அணைக்க மறந்து தூங்கப் போய்விட்டார். நடுராத்திரியில் அடுப்பிலிருந்து நெருப்பு வீடு முழுக்கப் பற்றிப் பிடித்து, அடுத்த வீடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

பொதுமக்கள், லண்டன் மேயரை அவர் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பி விஷயத்தைச் சொன்னார்கள். “”அட போங்கப்பா, நாலு பேர் வரிசையா நின்னு ஒன் பாத்ரூம் போனா தீ அணைஞ்சு போயிடும். உப்புப் பெறாத இந்த விஷயத்துக்காக ராத்திரி என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க” என்று கொட்டாவி விட்டபடி அவர் இழுத்துப் போர்த்திக் கொண்டு மறுபடி தூங்க ஆரம்பித்தார். மாண்புமிகு மேயர் காலையில் சாவகாசமாக விபத்து நடந்த ஸ்தலமான புட்டுச் சந்துக்கு வந்தபோது, நெருப்பு அடுத்த தெரு, மூன்றாம், நான்காம் தெரு என்று கிடுகிடுவென்று பரவிக்கொண்டிருந்தது.

“”தெருவை அடைச்சு நிக்கற கட்டிடத்தை எல்லாம் இடிச்சுட்டா, நெருப்பு பரவாது” யாராரோ ஆலோசனை சொன்னார்கள். “”இடிக்கறதா? அப்புறம் கார்ப்பரேஷன் தான் திரும்பக் கட்டித் தரணும்னு கேட்பீங்க. யார் செலவு பண்றது? அதெல்லாம் வேலைக்காகாது”

மேயர் மறுத்துக்கொண்டிருந்தபோது, மற்ற எல்லோரும் எரிகிற வீடுகளுக்குள் இருந்து கூடிய மட்டும் முக்கியமான பொருட்களை எடுத்துச் சுமந்துகொண்டு தீயிலிருந்து தப்பித்து ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள். அதில் கொஞ்சம் பேராவது பக்கத்து தேம்ஸ் நதியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து எரிகிற வீடுகளில் கொட்டியிருந்தால் தீ அணைந்திருக்கும். தேம்ஸ் நதியிலிருந்து குழாய் மூலமாகத் தண்ணீர், நகரம் முழுவதும் விநியோகிக்கப்படுவது அப்போதே இருந்தது. அந்தத் தண்ணீர்க் குழாயை அங்கங்கே திறந்து தண்ணீரை விசிறியடித்திருக்கலாம். அதற்கும் ஆள் இல்லை.

நெருப்பு கிடுகிடுவென்று பரவி, தேம்ஸ் நதிக்கரையில் நகருக்குத் தண்ணீர் விநியோகம் செய்ய ஆற்று நீரை இறைத்துத் தொட்டிகளில் தேக்கி வைக்கும் யந்திரங்களை எரித்து நாசமாக்கியது. ஆக, ஆறு முழுக்க வெள்ளம் போனாலும், ஊரென்னவோ பற்றி எரிந்தபடிதான் இருந்தது.

அந்தக்காலத்திலேயே தீயணைக்கும் இயந்திரம் வழக்கத்தில் வந்திருந்தது. ஆனால் ஒரே ஒரு சிக்கல். நடுவிலே பெரிய பீப்பாயில் தண்ணீரும், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நாலைந்து குழாயுமாக இருந்த இந்த இயந்திரங்களை ஓட்டிப் போகமுடியாது. நாலைந்து பேர் பின்னால் இருந்து தள்ள, இன்னும் சிலர் முன்னால் இருந்து இழுத்துக்கொண்டு போய்த்தான் தீப்பிடித்த இடத்தில் நிறுத்தவேண்டும். இழுத்துப் போனார்கள். அப்புறம்தான் இயந்திரங்களில் தண்ணீர் இல்லாதது தெரியவந்தது. தேம்ஸ் நதிக்கரைக்குத் தண்ணீர் நிரப்ப அவற்றைத் திரும்பவும் உருட்டிப் போனார்கள். நதிக்கரை மணலில் நிற்கவைத்துத் தண்ணீர் நிரப்பும்போது அந்த யந்திர வண்டிகள் குடைசாய்ந்து ஆற்றுக்குள் விழுந்துவிட்டன. நெருப்பு எந்தத் தடையும் இல்லாமல் இன்னும் தீவிரமாக எரிந்து கொண்டிருந்தது.

Posted in 1666, Cover Fire, Curfew, England, Era Murugan, Era Murukan, History, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London Diary, Plague, Thames, Tour, Tourist, UK | Leave a Comment »

Ira Murugan – London Diary: Thames Dames, England Coovum

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

லண்டன் டைரி: நடந்தாய் வாழி தேம்ஸ்!

இரா. முருகன்

சாயந்தரமும் ராத்திரியும் சந்தித்துக் கைகுலுக்கிக் கொள்ளும் நேரம். மெல்லப் படர்ந்து கொண்டிருக்கும் இருட்டில் லண்டன் நகருக்குக் குறுக்கே கோடு கிழித்தபடி நீண்டு விரிந்து கிடக்கும் தேம்ஸ் நதி. கரை நெடுக நியான் விளக்குகளும், மெர்க்குரி வேப்பர் குழல் விளக்குகளும் பிரகாசிக்கும் கட்டிடங்களிலிருந்து கசியும் ஒளி. அது நதியலைகளில் பிரதிபலித்தும் மறைந்தும் போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. நதிக்கரையில் ஒரு மதுக்கடை. பின்வரிசை நாற்காலியில் நான். மற்றும் இத்தாலிய, பிரெஞ்சு நண்பர்கள் இருவர்.

விடுமுறை நாள் இது. காலையிலிருந்து திரைப்பட விழா கொண்டாடி, ராபர்ட்டோ ரோஸலினி, லூயி புனுவல் பெட்ரோ ஆல்மடோவார் என்று திரையுலகச் சிற்பிகளின் படங்களை வரிசையாகப் பார்த்து முடித்து, விவாதித்தபடியே மதுக்கடையில் நுழைந்திருக்கிறோம்.

“”மதுக்கடை வினாடிவினா நடக்கப் போகிறது. நீங்களும் பங்கேற்கிறீர்களா?” என்று விசாரிக்கிறார் கடை உபசரிப்புப் பெண். “”இல்லை; ஆளுக்கொரு கோப்பை ஒயின் போதும்” என்று சிரித்தபடி தலையசைக்கிறார் நண்பர் பாஸ்க்யூல். இத்தாலிய உச்சரிப்பில் அவருடைய ஆங்கிலம் மென்மையான சங்கீதம் போல் ஒலிக்கிறது.

“”லூயி புனுவல் சினிமாவின் விஷுவல் சர்ரியலிசத்தில் சால்வடார் டாலி ஓவிய பாதிப்பு”. பிரெஞ்சு நண்பர் அந்த்வான் விவாதத்தைத் தொடர, நான் கைகாட்டி நிறுத்துகிறேன். “”இன்றைக்கு முழுக்க இலக்கியத்தரமான சினிமாவைச் சுவாசித்து. பகல் சாப்பாட்டோடு மென்று, குடிதண்ணீரோடு கலக்கிக் குடித்தாகிவிட்டது. வேறே ஏதாவது பேசலாமே. உதாரணமாக இந்த மதுக்கடை பற்றி, அந்த தேம்ஸ் நதி பற்றி”.

“”அது தேம்ஸ் இல்லை, டெம்ஸ்”, இத்தாலிய நண்பர் சிரித்தபடி குவளையை உயர்த்துகிறார். சினிமா வரலாற்றோடு, லண்டன் சரித்திரமும் முழுக்கத் தெரிந்தவர்.

“”ஒண்ணாம் ஜார்ஜ் மன்னனின் அம்மா ஜெர்மனியிலிருந்து வந்தவராம். ஜார்ஜ்க்கு தேம்ஸ் என்று சொல்ல நாக்குப் புரளவில்லை. ஜெர்மன் மொழி உச்சரிப்பில் டெம்ஸ் என்று அரசன் சொல்ல, என்னத்துக்கு வம்பு என்று அரசவையில் எல்லோருமே மரியாதையை உத்தேசித்து அதேபடி டெம்ஸ் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்”. ராஜா உச்சரிச்சா அது ராங்காப் போனதில்லை என்பதால் இன்றைக்கும் அதிகாரப்பூர்வமான உச்சரிப்பு டெம்ஸ்தான்.

இளங்கோவடிகள் இங்கிலாந்தில் பிறந்திருந்தால், “நடந்தாய் வாழி தேம்ஸ்’ என்று அந்த நதியைப் பெண்ணாக உருவகித்துப் பாடியிருக்க முடியாது. காரணம், இந்த நாட்டுப் பாரம்பரியப் பிரகாரம் தேம்ஸ் நதி ஆண். நதியம்மா இல்லை. நதியப்பா.

அப்பாவோ, அம்மாவோ, ஆயிரம் வருடத்துக்கு மேலாக தேம்ஸ் நதிக்கரையில் மக்கள் குடியிருக்கிறார்கள். அதில் படகு ஓட்டிப் போகிறார்கள். நூற்றைம்பது வருடம் முன்புவரை தேம்ஸில் குளித்திருக்கிறார்கள். மீன் பிடித்திருக்கிறார்கள். கரையில் பல தொழில் நடத்தி, நதியை அங்கங்கே தேங்கி நிற்கச் செய்திருக்கிறார்கள்.

1666-ம் வருடம் லண்டனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு மூன்று நாள் தொடர்ந்து ஊரே பற்றி எரிந்தது. அப்போது கூட இருக்க இடம் கிடைக்காமல், லண்டன் பாலத்தில் இரு பக்கத்திலும் வரிசையாகக் கூரை எழுப்பிக் கீழ்த்தட்டு மக்கள் வசித்திருக்கிறார்கள். பாலத்தில் வீடு கட்டி தண்ணீருக்கு மேல் இருந்ததாலோ என்னமோ ஊரை எல்லாம் அழித்த அந்த நெருப்பு, பாலத்தில் ஏறாமல் நின்றுவிட்டது. ஆனால் நதிக்கரையிலும், நதிக்கும் குறுக்கே ஆற்றுப் பாலத்தில் சகலரும் இஷ்டத்துக்கு அசுத்தம் செய்ய, அந்தக் கால தேம்ஸ் இந்தக் காலக் கூவம் போல் மணக்க ஆரம்பித்தது. காற்று அதிகமான நேரங்களில் லண்டன் முழுக்க இந்தச் சுகந்த பரிமள வாசம் நிறைந்து பரவ, மக்கள் மூக்கைக் கையால் பொத்திக்கொண்டு நடைபயில வேண்டிப் போனது. அந்தப்படிக்கே சாப்பிடவோ அல்லது அதைவிட முக்கியமாக மதுக்கடையில் பியர் குடிக்கவோ கஷ்டமாக இருந்ததால் அரசாங்க அலுவலகங்களில் புகார் மனுக்கள் குவிந்தன. 1858-ம் வருடம் ஒரு பகல் பொழுதில் தேம்ஸ் நதியில் எழுந்த உச்சபட்ச வாடை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் புகுந்து அடர்த்தியாகக் கவிய, எதிர்க்கட்சி மட்டுமில்லை, ஆளுங்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து உடனடியாக வெளிநடப்பு அல்லது வெளியோட்டம் செய்ய வேண்டி வந்தது. உலக சரித்திரத்திலேயே கழிவுநீர் வாடை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டிவந்தது முதல் தடவையாக அப்போதுதான்.

இத்தாலிய நண்பர் டெம்ஸ் நதியின் பழங்கதையைச் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டிருக்க, எந்த வாடையும் இல்லாது, பளிங்கு போல் தண்ணீரோடு சுத்தபத்தமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தக்கால தேம்ûஸ நினைத்துப் பார்க்கிறேன். இருபது கோடி லிட்டர் சுத்த நீர். காஸ்டோல்ட் பகுதியில் பிறந்து வடகடலில் கலக்கிறவரை மாசுமறுவற்று ஓடுகிற ஆற்றில் ஒரு தேங்கலோ அடைப்போ அசுத்தமோ கிடையாது என்று நண்பர் சொல்லும்போது “எங்க தலைநகரத்துலேயும் இப்படி ஓர் ஆறு இருக்கு’ என்கிறேன். இத்தாலிய நண்பர் இப்போதைக்கு சென்னை வரப்போவதில்லை என்பதில் ஓர் ஆறுதல்.

மதுக்கடையில் “பப் க்விஸ்’ என்ற வினாடிவினா ஆரம்பமாகிறது. மைக்கைப் பிடித்தபடி ஒருத்தர் குடிமக்களுக்கு முன்னால் மேடையில் கேள்வி கேட்கத் தயாராக நிற்கிறார். சுற்றிலும் பார்க்கிறேன். முட்டக் குடித்தபடி இருக்கும் இந்த ஜனக்கூட்டத்திடம் என்ன க்விஸ் நடத்தப் போகிறார்? இரண்டு விரலை விரித்துக் காட்டி இது எத்தனை என்று கேட்டு, உத்தேசமாகச் சரியாக மூணு என்று சொன்னவர்களுக்குப் பரிசாக இன்னொரு கோப்பை பியர் கொடுப்பார்களோ?

“”தேம்ஸ் நதியில் ஒரு காலத்தில் மீன் பிடிக்கும் தொழில் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. பெரிய வலை விரித்துப் பெரிய மீனைப் பிடிப்பது போதாமல், ஆகக் குறுகிய வலை நெய்து சின்னச் சின்ன, வயதுக்கு வராத மீனை எல்லாம் வாரி எடுப்பது தொடர்ந்தது. சட்டம் போட்டு வலை சைஸ் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள். இப்போது தேம்ஸில் மீனே கிடைப்பதில்லை. ஆனால் அன்னப்பறவை அவ்வப்போது தட்டுப்படும். அதை வேட்டையாடத் தடை உத்தரவு அமலில் உள்ளது. அன்னப்பறவை மாமிசம் சாப்பிட இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மட்டுமே அனுமதி உண்டு. எலிசபெத் ராணியின் அம்மா மகாராணி இரண்டு வருஷம் முன்னால் அன்னம் ரோஸ்ட் சாப்பிட்டுவிட்டுத்தான் கடைசி மூச்சை விட்டார்” நண்பர் தேம்ஸ் கதையைத் தொடர்கிறார். அந்த அன்னத்துக்குப் பதிலாக சுடச்சுட சீரகச் சம்பா அன்னம், சாம்பார், கீரை மசியல் சாப்பிட்டிருந்தால் ராணிப்பாட்டி இன்னும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்திருப்பார் என்று தோன்றுகிறது.

“”சுட்டுக் கொல்லப்பட்ட இங்கிலாந்து பிரதமர் யார்?” மதுக்கடை வினாடிவினா நடத்துனர் நிறுத்தி நிதானமாகக் கேட்கிறார். சாயந்திரம் பத்திரிகை படிக்காமல் போனது நினைவு வர, பதறுகிறேன்.

“”1812-ம் வருடம் மே பதினொன்றாம் தேதி நாடாளுமன்ற வராந்தாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்பென்சர் பெர்சிவல்” விக்கலுக்கு நடுவே ஒரு குடிமகன் பியர் கோப்பையை உயர்த்திச் சொல்லிய விடை சரியானதாக அறிவிக்கப்படுவதைக் கேட்டபடி வெளியே வருகிறேன்.

Posted in Books, Buffs, Coovum, England, Era Murugan, Era Murukan, Films, History, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Literature, London Diary, Pub, River, Riverbanks, Riverside, Thames, UK | Leave a Comment »

London Diary – London Eye: Eraa Murugan

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

லண்டன் டைரி: “லண்டன் ஐ!’

இரா. முருகன்

தேம்ஸ் நதிக்கரை எம்பாங்க்மெண்ட் படித்துறையில் படகு காத்திருக்கிறது. உள்ளே நுழைந்தபோது, கீழ்த்தட்டில் ஒரு கூட்டம் முந்திய நாள் வெஸ்ட்ஹாம் மைதானத்தில் நடந்த கால்பந்து விளையாட்டைப் பற்றி உரக்க விவாதிக்கும் இரைச்சல். மத்திய வயசு ஆண்கள். எல்லோர் கையிலும் பியர் குவளை. எனக்கு முன்னால் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு கையில் ஜபமாலையோடு நடந்து கொண்டிருந்த கன்னியாஸ்திரிகள் ஒரு வினாடி தயங்கி, கப்பலின் மேல்தட்டுக்குப் படியேறுகிறார்கள். நானும்தான். பெரிய பறவைபோல் இரண்டு தடவை ஒலியெழுப்பிவிட்டுப் படகு நதியில் மெல்ல நகர்கிறது.

கரையில் பிக்பென் கடியாரக் கோபுரத்தைக் கழுத்து வலிக்கப் பார்க்கும் சகபயணிகளைக் கவனிக்கிறேன். ஜெர்மானிய டூரிஸ்ட்டுகள். அவர்கள் மொழியில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வழிகாட்டி. ரொம்பக் கடுமையாகக் காதில் விழுகிற மொழி அது. “”உன்னைக் காதலிக்கிறேன்” என்று காதலியிடம் அன்போடு சொல்வது கூட ஜெர்மன் பாஷையில்,

“”நமூனாவை மூணு காப்பி எடுத்து ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, தாசில்தாரிடம் அட்டஸ்டேஷன் வாங்கி ஒரு வாரத்துக்குள் அனுப்பிவைக்காவிட்டால், அபராதம் செலுத்தவேண்டிவரும்”

என்று அரசாங்க அறிவிப்பைக் கேட்கிறமாதிரி இருக்கும். முன்வரிசை ஜெர்மன் யுவதி காதலன் காதில் ஏதோ சொல்ல அவன் ஆற்றில் குதிப்பதுபோல் போக்குக்காட்டுகிறான். ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கிவரச் சொல்லியிருப்பாள்.

கன்னியாஸ்திரீகளின் கைகள் ஜபமாலையை நிதானமாக உருட்டிக் கொண்டிருக்க, நதிக்கரையில் வலதுபுறம் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடம் கடந்துபோகிறது. பக்கத்தில்தான் அந்தக்கால லண்டன் கார்ப்பரேஷன் என்ற கவுண்டி ஹால் இருந்ததாம். கவுன்சிலர்களின் சத்தம் தாங்காமலோ என்னமோ, அதை இடித்துவிட்டு அங்கே அடுக்குமாடிக் குடியிருப்பையும், கீழ்த்தளத்தில் மீன் காட்சி சாலையையும் கட்டிவிட்டார்கள். மீன்கள் சத்தம் எழுப்பாமல் வாயைத் திறந்துகொண்டிருக்க, கவுன்சிலர்கள் வேறு இடத்தில் சண்டையைத் தொடர்கிறார்கள்.

அடுத்து வருவது லண்டன் ஐ. இது “மெட்ராஸ் ஐ’ போல கண் சிவந்து ரெண்டு நாள் காஷுவல் லீவு போட்டுவிட்டு கறுப்புக் கண்ணாடியோடு வீட்டில் உட்கார்ந்து கேபிள் டிவி பார்க்கிற சமாச்சாரமில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆண்டு 2000 பிறந்து, இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடங்கியதைக் கொண்டாட எழுப்பப்பட்டது “லண்டன் ஐ’. பொருட்காட்சி ஜயண்ட் வீலுக்குச் சத்துணவு கொடுத்து இன்னும் முப்பது மடங்கு பெரிதாக்கப்பட்டதுபோல சுழலும் இந்த “லண்டன் கண்’ சக்கரத்தில் ஏறி நின்றால் முழு லண்டனையும் சுற்றுப்புறத்தையும் தெளிவாகப் பார்க்கலாம். எனக்கென்னமோ, இந்தச் சக்கரம் லண்டனின் பாரம்பரியம் மிக்க சரித்திரத்தோடு ஒட்டாமல் தனியாக நிற்பதுபோல் தோன்றுகிறது. யார் கண்டது? இன்னும் இருநூறு வருடத்தில், இதுவும் புராதனப் பெருமையோடு சுழலலாம்.

“”கிளியோபாத்ரா மூக்கு”. ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்த ஒரு கன்னியாஸ்திரி சொல்கிறார். உலகப் பேரழகி கிளியோபாத்ராவும் அவளுடைய மூக்கும் திடீரென்று இவருக்கு நினைவுவரக் காரணம் என்னவாக இருக்கும்? என்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறேன். அவர் கரையில் நீட்டி நிமிர்ந்து நிற்கும் ஒரு கருங்கல் தூணை மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார். மூவாயிரத்து ஐந்நூறு வருடம் முன்னால் எகிப்தில் உருவாக்கிய இந்த நீளமூக்குத் தூணை, வெறும் இருநூறு வருடம் முன்னால் எகிப்திய மக்கள் இங்கிலாந்துக்கு அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்கள். ஈராக் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று அந்தக் காலத்திலேயே பிரிட்டனிடம் சூசகமாகச் சொல்லியிருப்பார்களோ என்னமோ.

சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் கன்னியாஸ்திரிகள் நெஞ்சில் சிலுவை வரைந்துகொள்கிறார்கள். நதிக்கரையை ஒட்டி கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது செயின்ட் பால் தேவாலயம். 1666-ம் ஆண்டு லண்டன் மாநகரத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் பழைய ஆலயம் சேதமடைய, இரண்டாம் சார்லஸ் மன்னன் கட்டுவித்தது. பக்கத்திலேயே ஆங்கில நாடக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்புகளை அரங்கேற்றிய க்ளோப் தியேட்டர். அதுவும் பழைய வனப்பு சேதமடையாமல் புத்தம் புதியதாக எழுந்து நிற்கிறது. வெகு அருகில் டேட் ஓவிய, சிற்பக் கூடம். நவீனப் படைப்புகளுக்கான அரங்கம் இது. புதுமையில் எனக்கு விருப்பம் உண்டுதான். ஆனாலும் இந்த டேட் காலரியில் ரொம்பவே புதுமையாக சில மாதங்கள் முன்னால் இடம் பெற்ற படைப்பு -அழுக்கான அசல் கழிப்பறைப் பீங்கான் , உபயோகித்த சுவட்டோடு சிறுநீர் கழிக்கும் கோப்பை, தகர டப்பாவில் மனிதக் கழிவு, கூடவே, வாடை எல்லாம் போக, எதிரே ஒரு பெரிய மின்விசிறியின் ஓவியம்.

உலகின் பழைய மதுக்கடையைக் கடந்து படகு முன்னே போய்க்கொண்டிருக்கிறது. நங்கூர மது அரங்கம் என்ற இந்த ஆங்கர் டேவர்னில் நங்கூரமிட்டு சுதி ஏற்றிக்கொண்டுதான் ஷேக்ஸ்பியர் சாகாவரம் பெற்ற நாடகங்களை எழுதியிருக்கிறார். இங்கே கோப்பையும் கையுமாகக் குடியிருந்துதான் இலக்கிய மேதை சாம்யுவெல் ஜான்சன் ஆங்கிலப் பேரகராதியைத் தொகுத்திருக்கிறார். கொஞ்சம் படகை நிறுத்தினால் நானும் இறங்கிப்போய் ஒரு காப்பியம் எழுத முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது. தமிழ் இலக்கியத்துக்கு அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் படகு நிற்காமல் விரைகிறது.

டவர் பாலம் பக்கம் பெரிய கப்பல் ஒன்று ஓய்வெடுத்துக்கொண்டு நிற்கிறது. எச்.எம்.எஸ். பெல்ஃபாஸ்ட் என்ற போர்க் கப்பல் அது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் இங்கிலாந்து கடற்படையில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, ஜெர்மனியை முறியடித்த 1944 ஜூன் மாத இறுதிக்கட்டப் போரில் இந்தக் கப்பலுக்கும் பெரும் பங்கு உண்டு. தற்போது ரிடையராகி தேம்ஸ் நதியில் நங்கூரம் பாய்ச்சி நின்றாலும், இங்கிலாந்து அரசுக்கு இந்தக் கப்பலால் அதிக வருமானமே தவிர ஒரு காசு பென்ஷன் செலவு கிடையாது. கிட்டத்தட்ட ஆயிரம் போர் வீரர்கள் தங்கிப் போரிட்ட கப்பல் தற்போது யுத்தகால அருங்காட்சி சாலையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. “இரண்டாம் உலக யுத்தம் முடிந்தது -இங்கிலாந்து வெற்றி’ என்று இன்றைக்குக் காலையில்தான் பத்திரிகையில் படித்த பரபரப்போடு ஒரு பெரிய கூட்டம் கப்பலுக்குள் விரைந்து ஏறிப் போய்க்கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. “”நெசம்தான்” என்று ஆமோதித்தபடி இன்னொரு கூட்டம் வெளியே வந்துகொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டும் மூன்று லட்சம் பேர் இப்படிக் காசு கொடுத்து கப்பலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, உள்ளே ஓட்டலில் சூடாக ஒரு காப்பி குடித்துவிட்டு இறங்கியதாகத் தகவல்.

“”இது கக்கோல்ட் முனை”. ஏதோ உலக ரெக்கார்டை ஏற்படுத்தப் போவதுபோல் தொடர்ந்து பியர் குடித்தபடி கீழ்த்தளத்திலிருந்து மேலே வந்த கூட்டத்திலிருந்து ஒரு குரல். “”சொல்பேச்சு கேட்காத பெண்டாட்டியை வில்லியம் கக்கோல்ட் இங்கேயிருந்துதான் பிடிச்சுத் தள்ளிவிட்டானாம். திரும்பிப் பார்த்தால், பெரிய கும்பல். என் வீட்டுக்காரியையும் தள்ளி விட்டுடுய்யான்னு அவனவன் க்யூவிலே நின்னு கெஞ்சறான். நோ ப்ராப்ளம்னு ஒருத்தருக்கு ஒரு பென்ஸ் காசு கூலி வாங்கிப் போட்டுக்கிட்டு அப்புறம் அவன் முழுநேரம் இதே உத்தியோகம்தான் பார்த்தானாம்”.

“”தனியாளாக ரொம்பக் கஷ்டப்பட்டு உழைச்சிருப்பான் பாவம்”. கையில் பிடித்த பியர் தரையில் சிந்த, சிரிப்புச் சத்தம் உயர்கிறது. இவர்களைப் பிடித்துத் தேம்ஸ் நதியில் தள்ளிவிட்டால் என்ன என்று யோசித்தபடி டவர் பிரிட்ஜ் படித்துறையில் இறங்குகிறேன்.

Posted in Cruise, England, Era Murugan, Era Murukan, Experiences, German Language, Ira Murugan, Ira Murukan, London Diary, Raayar kaapi klub, Raayarkaapiklub, Rayar kapi klub, Rayarkaapiklub, RKK, St Paul Church, Thames, Tour, Tourists, UK | Leave a Comment »

London Diary – Counting the Crows by Cutting the Feathers to maintain Freedom

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

லண்டன் டைரி: ராஜவம்சம்போல காக்கா வம்சம்!

இரா. முருகன்

“”லண்டன் டவர் வளாகத்தில் நாங்க என்ன வளக்கறோம் தெரியுமா?” யோமன் காவல்காரர் கேட்கிறார். அங்கே தங்கியிருந்து தாடி வளர்க்கிறார் என்பது தவிர வேறே எதுவும் எனக்குப் புலப்படவில்லை. “”இதெல்லாம் நாங்க வளக்கறதுதான்” என்று பக்கத்தில் கைகாட்டுகிறார் அவர். அங்கே இரண்டு அண்டங்காக்கைகள்.

“”இங்கிலாந்து ராஜவம்சம் போல, இங்கே டவர்லே காக்கா வம்சம் ஐநூறு அறுநூறு வருஷமாத் தொடர்ந்து இருக்கு. இப்போ மொத்தம் எட்டுக் காக்கா. இதுங்க எல்லாம் எப்போ லண்டன் டவரை விட்டுப் பறந்து போகுதோ அன்னிக்கு இங்கிலாந்து சாம்ராஜ்யத்துக்கு அழிவு

காலம் ஆரம்பமாயிடும்னு நம்பிக்கை. இப்படித்தான் பாருங்க, ரெண்டாம் உலகப்போர் சமயத்துலே நாலுநாள் காக்கா உஷ். எல்லாம் காணாமப் போச்சு. சொன்னா நம்பமாட்டீங்க, அப்போ நிஜமாகவே இங்கிலாந்து யுத்தத்திலே தோத்துப் போகிற சூழ்நிலை. நல்லவேளை. சீக்கிரமே காக்காயெல்லாம் திரும்பிவர வெற்றி எங்களுக்குத்தான்” காவலர் அன்போடு காக்கைகளைச் சீட்டி அடித்துக் கூப்பிடுகிறார். டூரிஸ்ட்டுகள் எடுக்கும் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதில்லை என்று சங்கம் வைத்துத் தீர்மானித்த மாதிரி அவை விருட்டென்று பறந்து போகின்றன. “”ஐயய்யோ, டவரை விட்டு வெளியே பறந்துடப்போறது.” கூட வந்த அமெரிக்க அம்மா பதறுகிறார். இன்னும் அரைமணி நேரத்தில் இங்கிலாந்து சாம்ராஜ்யம் அழிந்தால் அவர் எப்படி ஏர்போட்டுக்குப் போய் அமெரிக்காவுக்கு விமானம் ஏறமுடியும் என்ற பயம் முகத்தில் தெரிகிறது. “”அதெப்படி வெளியே போகுமாம்? ரொம்பப் பறக்க முடியாதபடி இறக்கையை அப்பப்போ வெட்டிவிடறோமில்லே” காவல்காரர் பரம ரகசியமாகச் சொல்கிறார். காக்காப் பிடித்து கத்திரிக்கோலால் இறகு வெட்டிப் பராமரிக்கிற அவருடைய சேவைக்கு சல்யூட் அடிக்கிறேன்.

“”இதுபோல வேறென்ன நம்பிக்கையெல்லாம் இருக்கு?” காவலரைக் கேட்கிறேன்.

“”ஆன்போலின் மகாராணியைத்தான் கேட்டுச் சொல்லணும். வெட்டி விழுந்த அவங்க தலையைக் கையிலே தூக்கிக்கிட்டு நடுராத்திரிக்கு இங்கே ஆவியா நடந்து வர்றாங்க.”

சிங்கவாசலில் நிற்கிறோம். வாசல் மட்டும்தான். சிங்கக் கோபுரம் என்ன ஆச்சு? நான் விசாரிக்க வருவேன் என்று தெரியாமல் இருநூறு வருடங்களுக்கு முன்னாலேயே இடித்துவிட்டார்களாம். அந்தக் கோபுரத்தில் மிருகக் காட்சிசாலை இருந்ததாகத் தகவல். 1235-ம் வருஷத்தில் மூன்றாம் ஹென்றி மன்னனுக்குத் திருமணப் பரிசாக அப்போதைய ரோமானியப் பேரரசு மூன்று சிங்கங்களை அனுப்பி வைத்தது.(கல்யாணப் பரிசாகக் கொடுக்க அந்தக் காலத்தில் மில்க் குக்கர் இல்லை என்பதை நினைவில் வைக்கவேண்டும்). வந்த சிங்கத்தை வைத்து, சீட்டுக் கிழித்து, காசு வாங்கிப்போட்டு கண்காட்சி நடத்த ஆரம்பித்த பிரிட்டீஷ் அரச வம்சம் இதில் வரும் வருமானம் கணிசமாக இருந்ததாலோ என்னமோ, இன்னும் நிறைய மிருகங்களை இங்கே அடைத்துவைத்து 1835-ம் வருடம் வரை அதைத் தொடர்ந்திருக்கிறது.

பிரபல ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக் “புலி’ என்ற தலைப்பில் எழுதிய “கண் சிவந்து ஒளிரும் புலி’ பற்றிய பிரபலமான கவிதையை நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது உருப்போட வேண்டியிருந்தது. அதைப் பற்றி “”காட்டில் திரியும் புலியை நேருக்கு நேர் கண்ட கவிஞனின் பிரமிக்கத்தக்க உணர்ச்சி வெளிப்பாடு” என்று நாகராஜன் சார் சொல்லிக்கொடுத்தபடி பதினைந்து வரிக்கு மேற்படாமல் பரீட்சைப் பேப்பரில் மாய்ந்து மாய்ந்து எழுதி மார்க் வாங்கியதும் மறக்கவில்லை. இந்தக் கண்காட்சி சாலைக்கு வந்து போனதுக்கு அப்புறம்தான் வில்லியம் பிளேக் புலிக்கவிதை எழுதினாராம். காகிதப் புலியான இந்தக் கவிதைப் புலியை நாங்களும், எங்க வாத்தியாரும் மாத்திரமில்லை, எழுதிய கவிஞரும்கூட காட்டுக்கெல்லாம் போகாமல், பத்திரமாகக் கூண்டுக்கு அந்தப் பக்கம் இருந்து பார்த்தவர்தான் என்று கேட்கும்போது இனம்புரியாத நிம்மதி.

டவர் வளாகம் வாட்டர்லூ பார்க்ஸ் பகுதியில் “ஜுவல் ஹவுஸ்’ உள்ளே நுழைகிறேன். பிரிட்டீஷ் அரச வம்சம் காலாகாலமாகச் சேமித்து வைத்த நகைகள், விலையுயர்ந்த வைரங்கள் எல்லாம் காட்சிக்கு வைத்திருக்கும் இடம். இதில், அரச வம்சம் காசு கொடுத்து வாங்கியது சொற்பம். மற்றதெல்லாம் சூரியன் மறையாத அந்தக்கால பிரிட்டீஷ் சாம்ராஜ்ய அடிமை நாடுகளிலிருந்து கிட்டிய கட்டாய அன்பளிப்பு. இந்தியாவிலிருந்து வந்த கோஹினூர் வைரம் இங்கேதான் இருக்கிறது. எடுத்துக்கொண்டு போகும்போது மறக்காமல் தாங்க்ஸ் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். பிரிட்டீஷ் நாகரீகம் மரியாதைக்குப் பெயர்போனதாக்கும்.

நகை இல்லத்தில் நடக்கவேண்டியதே இல்லை. நகரும் கன்வேயர் பெல்ட்டில் ஏறி நின்றால் ஒரு பிரதட்சணம் செய்து பார்க்க வேண்டியதைப் பார்த்துவிட்டு வெளியே வந்துவிடலாம். நகைநட்டைப் பார்த்து மெய்மறந்து அங்கேயே நின்று எத்தனை சவரன் தேறும் என்று சந்தோஷமாக சர்ச்சை செய்யும் அம்மணிகளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் ஏற்படலாம்தான்.

பிரிட்டீஷ் அரசவம்ச நகைகளை 1303-ம் வருடம் முதல் இங்கே டவரில் தான் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் வைத்திருந்தபோது அத்தனையும் கொள்ளை போய்விட்டதாம். கிட்டத்தட்ட அதையெல்லாம் மீட்டு (சொச்சத்தை வேறே இடங்களில் அன்பளிப்பாக வாங்கி) இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்.

கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்தபடி நகைகளைக் கவனித்துப் பார்க்கிறேன். மணிமகுடம். வைரம் பதித்த அரச வாள். அரசச் சின்னமான செங்கோலில் பதித்த உலகிலேயே பெரிய வைரமான குல்லியன் என்று கண்ணைப் பறிக்கிறது. நகை இல்லச் சுவரில் பெரிய திரைகளில் கேவா கலர் படமாக, ஐம்பது வருடம் முன்னால் எலிசபெத் மகாராணியார் முடிசூடிய காட்சி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் முகத்தில் இனம் புரியாத சங்கடம். மகுடம், செங்கோல், காசுமாலை என்று கிலோக் கணக்கில் சுமந்துகொண்டு நடமாடும் நகைக்கடையாக வலம் வருகிற சங்கடம் அது என்று தோன்றுகிறது.

கன்வேயர் பெல்ட் கோஹினூர் வைரம் வைத்த பெட்டிப்பக்கம் வருகிறது. என் நாடித்துடிப்பு அதிகமாகிறது. மனதில் கட்டபொம்மன் சிவாஜி மீசை துடிக்க “”வரி, வட்டி, வைரம்…எதற்காகக் கவர்ந்து போனாய்?” என்று சிம்மக்குரலில் கர்ஜிக்கிறார். “”கொடுத்திடுங்க, ப்ளீஸ், அது எங்களோடது. கொடுத்தீங்கன்னா, ரசீது தருவேன். பத்திரமா எடுத்துப்போய் அப்துல் கலாம் சார்கிட்டே கொடுத்து தில்லி ராஷ்ட்ரபதி பவன்லே வச்சுடச் சொல்றேன். நீங்க எப்போ வேணும்னாலும் உங்க செலவிலே டில்லிக்கு விசிட் அடிச்சுப் பார்த்துட்டு வரலாம். கொடுத்திடுங்க.” வாய்க்குள் என் குரல் கரைய கன்வேயர் பெல்ட் அறைக்கு வெளியே என்னை நகர்த்துகிறது.

டவரிலிருந்து வெளியே வரும்போது இதமான சாயங்கால வெயில். நடுக்கோபுரப் பக்க மேடையில் ஒற்றைக் காக்கை “என்னைப் படம் எடு’ என்று சாவதானமாக உட்கார்ந்திருக்கிறது. பக்கத்துச் சுவரை ஒட்டிச் சிரிப்புச் சத்தம். ஆன்போலின் அரசி. பிரஞ்சுக் கொலைக்காரன். ஓரமாக சிகரெட் பற்றவைத்தபடி அரசன், மதகுரு அடுத்த தலைவெட்டுக் காட்சிக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். கொலைக்காரன் ஆன்போலின் இடுப்பை இறுக்கமாக அணைத்துக் காதில் ஏதோ சொல்ல அவள் சிரித்துவிட்டு உதட்டுச் சாயத்தைப் பூசிக்கொள்கிறாள். அரசியின் தலை அவள் கழுத்துக்கு மேல் பத்திரமாக இருக்கிறது.

Posted in Cutting Crows, England, Era Murugan, Era Murukan, Ira Murugan, Ira Murukan, Jewel House, Jewels, Kohinoor, Literary, London Diary, Museum, UK | Leave a Comment »

London Diary: Ira Murugan – Indian Food, Desis in UK

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2006

லண்டன் டைரி: ஈஸ்ட் ஹாம் கடைவீதியும்… மாம்பலம் ரங்கநாதன் தெருவும்!

இரா. முருகன்

சுரங்கப்பாதை கும்மிருட்டு வழியாக இரண்டு ஸ்டேஷன், அப்புறம் மேலே தரைக்கு வந்து, வெய்யில் காய்ந்து கொண்டிருக்கிற அடுத்த ஸ்டேஷன், திரும்ப சுரங்கம் என்று குஷியாகக் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு லண்டன் டிஸ்ட்ரிக்ட் லைனில் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரயில் பெட்டியில் நான். மற்றும், போன ஸ்டேஷனில் குழந்தையோடு ஏறிய ஒரு பெண்.

குழந்தையைத் தோளில் சார்த்தியபடி, அந்தப் பெண் கையில் காகிதக் காப்பிக் கோப்பையோடு என்னை நோக்கிப் புன்னகையுடன் நடந்து வருகிறாள். பக்கத்தில் வந்து கோப்பையைக் குலுக்கியபடி, “”சில்லறை இருந்தா போடு, ப்ளீஸ்” என்கிறாள். போலந்து தேசத்திலிருந்து வந்திருக்கிறாளாம். சிநேகிதன் கைவிட்டுவிட்டு ஒரு சீனப் பெண்ணோடு போய்விட்டானாம். தடுமாறும் ஆங்கிலத்தில் அவள் சொல்லும்போது குழந்தை விழித்துக்கொண்டு அழ ஆரம்பிக்கிறது. நான் சட்டைப் பையில் தேடிப் பார்த்து ஒரு பவுண்ட் நாணயத்தைக் குவளையில் போடுகிறேன். அடுத்த ஸ்டேஷன் வரும்போது குவளை கைப்பையில் மறைய, குழந்தையைச் சமாதானம் செய்தபடி அவள் இறங்குகிறாள்.

ஈஸ்ட் ஹாம் ரயில் நிலையத்துக்கு வெளியே வருகிறேன். லண்டனின் புறநகர்ப் பகுதி இது. ஐம்பது அறுபது வருடம் முன்னால் கிட்டத்தட்ட கிராமம் தான். அப்போது வெறும் ஆறாயிரம் பேர்தான் மொத்த ஜனத்தொகையே. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஜெர்மன்காரர்கள் வெறியோடு இங்கே குண்டு வீசித் தாக்கி விளைவித்த சேதம் கணிசமானது. ஆனாலும் இப்போதைய ஈஸ்ட் ஹாமில் ஜனத்தொகை பழையதைவிடக் கிட்டத்தட்டப் பத்து மடங்கு அதிகம். இதில் பெரும்பகுதி சுறுசுறுப்பான தமிழர்கள்.

ஈஸ்ட் ஹாம் கடைவீதி கொஞ்சம் விஸ்தாரமான, அதிகம் கூட்டமில்லாத மாம்பலம் ரங்கநாதன் தெரு போல் விரிந்து கிடக்கிறது. தமிழில் பெயர் எழுதிய ஜவுளிக் கடை வாசல் கண்ணாடிக் கூண்டில் சிக்கென்று புடவை கட்டிய விளம்பரப் பொம்மைப் பெண் கை கூப்பித் திரும்பத் திரும்ப வணங்குகிறாள். அசல் தங்க நகை (சேதாரம், செய்கூலி என்ன ஆச்சு?) விற்கிற கடை. சீடை முறுக்கு, சாம்பார்ப்பொடி, ரசப்பொடிக் கடை. தெருவிலிருந்து கொஞ்சம் விலகி மகாலட்சுமி அம்மன் கோயில். அங்கே இன்றைக்கு ராத்திரி “ருக்மிணி கல்யாணம்’ பக்திப் பேருரை என்று அறிவிக்கும் நோட்டீசு ஒட்டிய சுவரில் பக்கத்திலேயே பாப் மியூசிக் நிகழ்ச்சிக்கான சுவரொட்டி.

வீடியோ, ஆடியோ காசெட் விற்கிற கடையில் “அவளுக்கென்ன அம்பாசமுத்திரம் ஓட்டல் அல்வா’ என்று என்னத்துக்காகவோ ஆக்ரோஷமும் அவசரமுமாக ஒலிக்கிற சினிமாப் பாட்டின் அடுத்த வரியை எதிர்பார்த்தபடி பத்திரிகைக் கடையில் நுழைகிறேன். கொஞ்சம் ஆறிப்போன சரக்குகள். அதாவது போன வாரத்திய தமிழ் வாரப் பத்திரிகைகள், முந்தா நாளைய சென்னைப் பதிப்பு, தினசரிகள். ஆச்சரியகரமாக, இலக்கியச் சிற்றிதழ் ஒன்று. “”மூணு பவுண்ட் சார்”. கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ரூபாய். சென்னையில் இருக்கும்போது அந்தப் பத்திரிகை ஆசிரியர் “ஆண்டு சந்தாவைப் புதுப்பிக்க நூற்றிருபது ரூபாய் அனுப்பவும்’ என்று அவ்வப்போது அனுப்பிய தபால் அட்டைகளைக் கண்டுகொள்ளாமல் விட்ட குற்றத்துக்குத் தண்டனையாக மூன்று பவுண்ட் கொடுத்து, ஓரத்தில் பழுப்பேறிய ஒரு பிரதியை வாங்குகிறேன். “”பஞ்சாங்கம் வேணுமா சார்?”. எடுத்துப் புரட்டிப் பார்க்கிறேன். லண்டன் அட்சரேகை தீர்க்கரேகைக்குப் பிரத்தியேகமான திருக்கணிதப் பஞ்சாங்கம். இலங்கை மட்டுவில் பகுதியில் கணித்து வெளியிடப்பட்டது. ஈழத் தமிழர்களை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ரங்கநாதன் தெரு பிரமையை இன்னும் கொஞ்சம் அசலாக்குகிறதுபோல, பக்கத்திலேயே “சரவண பவன்’ ஓட்டல். லண்டன் கிளை. ஜவுளிக் கடையில் ஷிபான் சாரி. மேட்சிங் பிளவுஸ் பீஸ், மல்வேட்டி வாங்கிவிட்டு, நகைக்கடையில் அட்டிகை விலை விசாரித்துவிட்டு, பாத்திரச் சீட்டுக் கட்டிய பிறகு, சரவண பவனில் படியேறி மசால் தோசைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிற ஒரு கூட்டம் உள்ளே நிரம்பியிருக்கும் என்பது நிச்சயம். அங்கே மட்டுமில்லாமல், கொஞ்ச தூரத்தில் “சென்னை தோசா’, இன்னும் தெருவோடு நடந்தால் இரண்டு சாப்பாட்டுக் கடைகள் என்று ஈஸ்ட் ஹாம் முழுக்க சாம்பார் வாடை கமகமக்கிறது.

லண்டனில் இந்தியச் சாப்பாடுக்கு நிறைய வரவேற்பு. “டாமரிண்ட்’, “இம்லி’ என்று பெயரிலேயே புளி அடைத்த இந்திய ஓட்டல்கள் மதிய நேரங்களில் லண்டன் அலுவலகங்களுக்குச் சுடச்சுட டிபன் பாக்ஸில் சாப்பாடு அனுப்பி வைக்கிற பிசினஸ் சக்கைப்போடு போடுகிறதாம். இன்டர்நெட்டில் தோசை ஆர்டர் செய்தால் வீடு தேடிவந்து டெலிவரி செய்ய தோசைக்கடைக்காரர்கள் ஏற்பாடு செய்வதாகக் கேள்வி.

இனிப்பு, இரண்டு இட்லி, பொங்கல், தோசை, வடை, காப்பி எல்லாம் சேர்த்து காலைச் சாப்பாடு ஐந்து பவுண்ட் மட்டும் என்று தகவல் தரும் ஓட்டலில் நுழைகிறேன். கேபிள் டிவி தமிழ் திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளில் மாறிமாறி விவேக்கும் வடிவேலுவும். நடுவில் ஐந்து நிமிடத்துக்கு பழைய படத்தில் செந்தில் கவுண்டமணியிடம் உதை வாங்கிவிட்டு ஓடுகிறார். “கேபிள் டிவி சந்தாவைப் புதுப்பித்தால் எம்.பி த்ரீ பிளேயர் இலவசம்’ என்ற அறிவிப்பு திரையின் கீழே ஓடியபடி இருக்கிறது. ஓட்டல் கல்லாவில் விநாயகர் படம், லட்சுமி படம். தமிழ் நாட்காட்டி, ஊதுபத்திப் புகை. சாப்பிட்டவர்கள் பணத்தோடு கொடுத்துவிட்டுப் போகிற பில்லைக் குத்தி வைக்கிற கழுமரம் மாதிரியான இரும்புக் கம்பி ஒன்று இருந்தால் அபாரமாக இருக்கும் எப்படி மறந்தார்கள் என்று தெரியவில்லை.

“”டாடி, எதுக்கு இங்கே வந்து சாப்பிடணும்னு அடம் பிடிக்கறே? வீட்டிலே இருந்து ஃபோன் செஞ்சா, கொண்டு வந்து கொடுத்திட மாட்டாங்களா?” மேசை மேசையாகக் கையில் எடுத்துச் சாப்பிட்டபடி இருக்கும் கூட்டத்தைப் பார்த்தபடி லேசான முகச் சுளிப்போடு அடுத்த டேபிளில் ஒரு சிறுமி முனகுகிறாள். தோசையைக் கத்தியால் குத்தி முள் கரண்டியால் பிய்த்து சாம்பாரில் தோய்க்க முயன்று தோற்றுப் போனவள், அப்பா வற்புறுத்தியபடிக்கு அப்புறம் கையால் சாப்பிட ஆரம்பிக்கிறாள்.

“”ரேபு சிரஞ்சீவி பிலிம். வெங்கடராவ் டிவிடி இச்சாரு”. எதிர் டேபிள் ஆந்திர இளைஞர்கள் முகத்தில் தீர்க்கமான மகிழ்ச்சி. அது இட்லியைத் தொட்டுக்கொண்டு கார சட்னி சாப்பிடுகிற சந்தோஷமா, ரகசியமா டிவிடி கிடைத்து லேடஸ்ட் தெலுங்குப் படம் பார்க்கப் போகும் மகிழ்ச்சியா என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

“”எதுக்குய்யா பாங்குலே போய்ப் பணம் அனுப்பறே. நான் சொல்ற இடத்துலே கட்டு. கம்மி சார்ஜ். உத்தரவாதமா, நாளைக்கு சாயந்திரம் மண்ணடியிலேருந்து உங்க வீட்டுக்குப் போய்ச் சேந்திடும்.” அடுத்த மேஜையில் டிபன் சாப்பிட்டபடி ஒருத்தர் சிநேகிதரிடம் அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறார். “ஹவாலா வேணாம்’ என்று சர்வர் கொண்டு வந்த ஹல்வாவை ஒதுக்கிவிட்டு இட்லியோடு யுத்தம் புரிய ஆரம்பிக்கிறேன்.

Posted in Dinamani, England, Era Murugan, Era Murukan, Experiences, Ira Murugan, Ira Murukan, Kathir, London Diary, UK | Leave a Comment »

Ira Murukan – Kensington Gardens, Indian Kidnappers, Sangitha Kalanidhy

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

லண்டன் டைரி: லண்டன் இசைவிழா!

இரா. முருகன்

ஒரு பத்து வருடம் முன்னால், நம் ஊரில் பரபரப்பான பகுதியில் ஒரு கிரவுண்ட் இடம் சும்மா கிடந்தால் என்ன நடந்திருக்கும்? சடசடவென்று ஒரு நாலு மாடிக் கட்டடம் உயரும். கேபிள் டிவியின் விளம்பர நச்சரிப்புத் தாங்காமல் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் பந்து மித்திரர்களோடு அங்கே படையெடுப்போம். இருபது சதவிகித வட்டிக்கு பிக்செட் டெபாசிட். மாதம் ரெண்டாயிரம் ரூபாய்க்கு நகைச்சீட்டு என்று ஆரம்பித்துவிட்டு வெள்ளி முலாம் பூசிய வெங்கடாஜலபதி டாலர், காமாட்சி விளக்கு என்று எதையாவது பரிசாகப் பெற்று பெருமையோடு தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேருவோம். அப்புறம் மூன்று வருடம் கழித்து பனகல் பார்க் பெஞ்சில் கூட்டம் போட்டு, போட்ட பணத்தில் முப்பத்திரண்டு சதவீதமாவது கிடைக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிப்போம். ஒரு கிரவுண்ட் இல்லாமல் இருநூற்றெழுபத்தைந்து ஏக்கர் இப்படிச் சும்மா கிடந்திருந்தால்? அந்த மீட்டிங்கை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்த வேண்டியிருக்கும் என்பதைத் தவிர வேறே வித்தியாசம் இருந்திருக்காது.

லண்டனில் ஓர் இருநூற்றெழுப்பத்தைந்து ஏக்கர் செல்வச் செழிப்பு மிகுந்த கென்சிங்டன் பகுதியில் இருநூறு வருடத்துக்கு முன்னால் சும்மா கிடந்தது. அப்போது டிவியும் அதில் விளம்பரமும் இல்லாததாலும், பிரிட்டீஷ் அரச வம்சத்துக்கு இலவச காமாட்சி விளக்கு ஆசை இல்லாத காரணத்தாலும், கென்சிங்டனில் அந்தப் பெரிய நிலப்பரப்பை கொப்பும் குழையும் புல்தரையும் பூச்செடியுமாக மாற்றி, கென்சிங்டன் தோட்டம் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்தியாவையும் சேர்த்த சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட விக்டோரியா மகாராணி இந்தத் தோட்டத்தை அடுத்த கென்சிங்டன் அரண்மனையில்தான் பிறந்து வளர்ந்ததாக அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது.

கென்சிங்டன் பூங்காவில் இப்படி ஓர் அறிவிப்புப் பலகை கூட விடாமல் படித்துக்கொண்டு நடந்துகொண்டிருக்கிறேன். ஓர் அரை டஜன் மோட்டா சர்தார்ஜிகள் உற்சாகமாகப் பேசிக்கொண்டு, அவ்வப்போது புல்தரையில் குட்டிக்கரணம் அடித்து எழுந்து நின்று முன்னால் நகர்ந்தபடி இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளும் ஒரு பெரிய நாயுமாக வந்த வெள்ளைக்காரத் தம்பதி குழந்தைகளை ஓடக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடுகிறது. அவர்கள் சர்தார்ஜிகளையும் என்னையும் பார்க்கிற பார்வையில் நாங்கள் எல்லோரும் பிள்ளை பிடிக்கிறவர்கள் என்ற பலமான சந்தேகம் தெரிகிறது. குழந்தைகள் அடக்கமாக பூங்கா சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து சாண்ட்விச் சாப்பிட ஆரம்பிக்க கட்டவிழ்த்து விட்ட அவர்களுடைய நாய் மண்ணில் புரண்டுவிட்டு எதிரில் கால்வாய்க்குள் புகுந்து ஒரு நிமிடம் நீந்தி, திரும்ப ஈரத்தோடு மண்ணில் புரள ஓடிவருகிறது. மேலே விழுந்து பிடுங்குவதுபோல் பாய்ந்த அந்த இங்கிலீஷ் நாயின் பரம்பரையை பஞ்சாப் பாஷையில் திட்டியபடி ஒரு சர்தார்ஜி, நாய்க்கார தம்பதியிடம் நல்ல இங்கிலீஷில் புகார் சொல்கிறார். “நீங்கதான் பாத்து நடக்கணும்’ அந்தம்மா சாண்ட்விச்சில் பாதியை விண்டு நாய்க்குக் கொடுத்துவிட்டு மீதியை வாயில் போட்டுக் கொள்கிறார்.

கென்சிங்டன் பூங்காவில் இருந்து வெளியே வரும்போது பிரம்மாண்டமாக முன்னால் நிற்கிறது ராயல் ஆல்பர்ட் அரங்கம். இறந்துபோன தன் கணவர் ஆல்பர்ட் இளவரசர் நினைவாக விக்டோரியா மகாராணி கட்டியது. இந்திரா காந்தி சர்க்கார் தில்லியில் கவிழ்ந்து அல்பாயுசாக ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து குஷியாக உள்குத்து நடத்திக் கொண்டிருந்த 1977-ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய இந்த ராயல் ஆல்பர்ட் ஹாலில் மேற்கத்திய சாஸ்தீரிய சங்கீத நிகழ்ச்சியிலிருந்து, ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட விழா, அரசியல்வாதிகள், அறிவியல் துறை அறிஞர்களின் சொற்பொழிவு என்று எத்தனையோ இந்த நூற்று முப்பது வருடத்தில் நடந்திருக்கிறது. தற்போது வருடா வருடம் பிரிட்டீஷ் ஒலி, ஒளிபரப்பு நிறுவனமான பி.பி.சி கோடைகால இசைவிழாவான ப்ராம் என்ற ப்ரொமனேட் விழா நடத்துகிறது இங்கேதான்.

ப்ரொமனேட் என்றால் நடந்துகொண்டே இசை கேட்கிறது என்று பொருளாம். ஆல்பர்ட் ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடக்கமுடியாது. ஆனாலும் அரங்கத்தில் நின்றபடிக்கு இசை நிகழ்ச்சியை ரசிக்கலாம். ஒருத்தருக்கு ஒரு டிக்கெட்டுக்கு மேல் கண்டிப்பாக வழங்கப்படமாட்டாது.

நீண்ட க்யூவில் நின்று அன்றைய ப்ராம் நிகழச்சிக்கான நுழைவுச்சீட்டுக்காகக் காத்திருக்கிறேன். பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த இசைக்குழு மேற்கத்திய இசைமேதை மோசர்ட்டின் இருநூற்றைம்பதாவது பிறந்த ஆண்டு நிறைவை ஒட்டி முழுக்க மோசர்ட் இசையமைத்த படைப்புகளை வழங்கும் நிகழ்ச்சி. நாலைந்து வெள்ளைக்காரர்கள் சுறுசுறுப்பாக பிளாக்கில் டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சாஸ்திரீய சங்கீதத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்பதை முதன்முதலாக ஆச்சரியத்தோடு பார்க்கிறேன்.

பிளாக்கில் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஒயிட்டிலேயே கிடைத்துவிடுகிறது டிக்கெட். ஐந்தே பவுண்ட்தான் செலவு. மூவாயிரம் பேர் நிற்கிற பெரிய அரங்கத்தில் புகுந்து நானும் நின்றபடி மேடையைக் கவனிக்கிறேன். பிபிசி டெலிவிஷன் காமிராக்கள் அவை பக்கம் திரும்பி அழகான வெள்ளைக்காரப் பெண்களைத் தேடிக்கொண்டிருக்க, நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. சாவு நிகழ்ந்தபோது வாசிக்க ஏதுவாக மோசர்ட் எழுதிய மேசானிக் ப்யூனரல் மற்றும் ரெக்யூம் என்ற இரண்டு படைப்புகள் மேடையேற்றப்படும் என்று அறிவிப்பு தொடர்கிறது.

இருபது வயலின், ஏழெட்டு புல்லாங்குழல், டிரம்பெட், வெள்ளைச் சீருடை அணிந்த பத்து பாடகர்கள், அக்கார்டியன், பியானோ என்று மேடை நிறைந்து சோகமயமான இழவு இசையைப் பொழிய இசைக்குழு நடத்துனர் ஆவேசமாகக் கையை இப்படியும் அப்படியும் அசைத்து இன்னும் உற்சாகமோ சோகமோ படுத்துகிறார். என் பக்கத்தில் ரெக்சின் பையைப் காலடியில் வைத்துவிட்டு ஒரு வெள்ளைக்கார முதியவர் இசைக்குறிப்பு எழுதிய புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு இசைக்குழு கூடவே மெல்ல வாய்க்குள் பாடியபடி சங்கீதத்தில் முழ்கியிருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது, “”தனிப்பாடல் பாடகிகள்லே ரெண்டு பேர் ஸ்ருதி சேராமக் கஷ்டப்படுத்திட்டாங்க. பின்வரிசை ரொம்ப சுமார்தான்” என்றபடி பக்கத்தில் நடந்தவரிடம் சொன்னபடி வந்தவர் கூறியது அட்சரம் பிசகாமல் அடுத்த நாள் கார்டியன் பத்திரிகை இசை விமர்சனத்தில் வந்திருந்தது.

“”போன மாதம் ப்ராம் நிகழ்ச்சிக்கு லண்டனில் கச்சேரி செய்ய வந்திருந்த கர்னாடக சங்கீத வித்துவான் மணக்கால் ரங்கராஜனைக் கூட்டிப் போனேன்” என்று நண்பர் லண்டன் பத்மநாப ஐயர் சொல்கிறார். சென்னை சங்கீத சீசனில் சபா எதிலும் தட்டுப்படாத மணக்கால் லண்டனில் அண்மையில் அவை நிறைந்த இரண்டு கச்சேரி நடத்தி இருக்கிறார் என்பதை அறிந்து இன்னொரு தடவை ஆச்சரியப்படுகிறேன்.

அடுத்த ஆண்டு டிசம்பர் சங்கீத விழாவில் மேலும் ஆச்சரியகரமாக, லண்டன் ப்ராம் போல் பிரெஞ்சி இசைக்குழு சென்னை மியூசிக் அகாதமியில் மோசர்ட் இசை நிகழ்ச்சி நடத்தலாம். அல்லது லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நித்யஸ்ரீ கச்சேரிக்கு வெள்ளைக்காரர்கள் ப்ளாக்கில் டிக்கெட் விற்கலாம். இது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் ஆச்சரியமாக, அகாதமிக்காரர்கள் மணக்கால் ரங்கராஜனுக்கு சங்கீத கலாநிதி பட்டம் வழங்க முடிவெடுக்கலாம்.

Posted in BBC, Era Murugan, Humor, Ira Murukan, Iraa Murugan, Kensington Gardens, London Diary, London Iyer, Mathalarayar, Mozart, music, Orchestra, Padmanabha Iyer, Performance, Raayarkaapiklub, Sangeetha Kalanithi, Sangitha Kalanidhi, Summer, Symphony, Tamil Literature, Travel Notes, UK | 1 Comment »

Iraa Murugan: Ironing Pants, Kensington, London Idly kadai

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

லண்டன் டைரி: எங்குமேயில்லாத ஒரு டுபாக்கூர் மிஷின்!

இரா. முருகன்

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கிற பிரதேசம் போல் லண்டன் கென்சிங்டன் பகுதி ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் வெறிச்சோடிக் கிடக்கிறது. இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் லட்சுமி மிட்டலின் அரண்மனை போன்ற பங்களாவில் தொடங்கி, தனிக்குடித்தனமாக எலிசபெத் அரசியாரின் மகன் சார்லஸ் இளவரசரும் இப்போதைய மனைவி கமீலா பார்க்கர் அம்மையாரும் வசிக்கிற அரதப் பழசு கென்சிங்டன் அரண்மனை வரை, இங்கிலாந்தின் பெரும் பணக்காரச் சீமான்கள் மாடி மேலே மாடி கட்டி வசதியாகக் குடியிருக்கிற பகுதி இந்தக் கென்சிங்டன். கூப்பிடு தூரத்திலேயே தினசரி முப்பது பவுண்ட் வாடகைக்கு சாமானியர்களுக்கான லாட்ஜ்களும் உண்டு.

அந்த மாதிரிப்பட்ட லாட்ஜில் ஒரு கீகடமான அறையில் ஓட்டை டெலிவிஷன் பெட்டியில் பி.பி.சி. சானலைப் பிடிக்க அரைமணி நேரம் முயற்சி செய்கிறேன். எந்தச் சானலைத் திருப்பினாலும், ரோமானியப் பேரரசு காலத்தில் முள்ளங்கி சாப்பிட்டார்களா என்பதுபோல் எதோ தலைபோகிற விஷயத்தை விவாதித்தபடி டை கட்டிய வயதான கும்பல் ஒன்று கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

டிரவுசர் பிரஸ் யந்திரத்தில் செருகியிருந்த நீல ஜீன்ûஸ எடுக்கிறேன். பிரிட்டீஷ்காரர்களின் தொழில் நுட்பத் திறமையை எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து உருவாக்கப்பட்ட இந்த விநோத மிஷினை உலகில் வேறே எங்கேயுமே பார்த்ததாக ஞாபகம் இல்லை. சுவரில் நீளவாட்டில் ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு மரப் பலகை. இரண்டுக்கும் நடுவில் பேண்டைச் செருகிவிட்டு சுவிட்சைப் போட்டால். கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு பலகைக்கும் நடுவே இடைவெளி குறைந்து, ஸ்லோ மோஷனில் இறுக்கம் அதிகரிக்கும். பத்து நிமிடம் கழித்து சுவிட்சை அணைத்து விட்டு வெளியே எடுத்தால், முன்விரோதமுள்ள சலவைக்காரர் அல்லது மாமனார் அயர்ன் செய்து கொடுத்ததுபோல் கீழிருந்து மேலே முக்கால் பாகம் வரை ஏதோ பெயருக்கு உடுப்பு சீராகி இருக்கும். அதுக்கு மேலே இருக்கும் பகுதி போட்டது போட்ட மாதிரி சுருக்கத்தோடு இருந்தாலும், சட்டை, கோட், பிளேசர் என்று மாட்டி மறைத்துக் கொண்டு வெளியே திரியும்போது மடிப்புக் கலையாத பேண்ட் போல் பாவ்லா காட்டிவிடலாம்.

நீல ஜீன்ஸில் புகுந்து கொள்கிறேன். ஒரு மடிப்பு இருக்க வேண்டிய இடத்தில் நாலு மடிப்பும், காலைச் சுற்றி சதுரமாகச் சுருட்டியும் சந்திரமண்டல சஞ்சாரிகளின் உடை போல் டிரவுசர் பிரஸ் புண்ணியத்தில் நீல ஜீன்ஸ் உருமாறி இருக்கிறது. இந்த மாதிரி ஒரு டுபாக்கூர் மிஷினை உற்பத்தி செய்வது மட்டுமில்லாமல், இங்கிலாந்து முழுவதும் இருக்கப்பட்ட லாட்ஜ்களில் அறைக்கு அறை நிறுவ வைத்துக் கோடீஸ்வரரான ஆசாமியும் இந்தக் கென்சிங்டனில்தான் ஏதோ பங்களாவில் குடியிருப்பான் என்று மனதில் பட்சி சொல்கிறது. அந்த ஆள் மட்டும் கையில் மாட்டினால் டிரவுசர் பிரஸ்ஸில் நடுவிலே நிற்க வைத்து சுவிட்சைத் தட்டிவிட நான் ரெடி.

ஒரு கோப்பை காப்பி வயிற்றில் இறங்க வேண்டும். இரண்டு பக்கத்திலும் மாட மாளிகையும் கூடகோபுரமுமாக ஹாலிவுட் படத்துக்குப் போட்ட நிஜ செட் போல் கென்சிங்டன் அமைதியில் உறைந்து நிற்க, கிராம்வெல் வீதியில் மெல்ல நடக்கிறேன். பத்து அடி நடந்ததும் பிளாட்பாரத்தில் டெலிஃபோன் பூத் திறந்து கிடக்கிறது. பிறந்த குழந்தை “ங்கா’ என்று பேச ஆரம்பித்ததுமே கையில் மொபைல் தொலைபேசியைத் திணிக்கிற இந்தக் காலத்தில் தெருமுனையில் காசுபோட்டுத் தொலைபேசி உபயோகிக்கிறவர்கள் யார்? அதுவும் இங்கிலாந்தில்? என்று யோசித்தபடி கதவைத் திறந்து அந்தச் சிவப்புக் கூண்டுக்குள் நுழைகிறேன். காலி பியர் பாட்டில், மொட்டைத் தலை பாப் பாடகர்களின் நிகழ்ச்சிக்கு அழைக்கும் பிட் நோட்டீசுகள் என்று தரையில் இரைந்து கிடக்கின்றன. தொலைபேசியைச் சுற்றிலும் கண்ணாடிச் சுவரில் பெயர், விலாசம், படம் போட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டியிருக்கின்றன. ஸ்பெயின், பிரான்சு, சீனா, கொலம்பியா, பல்கேரியா, உக்ரைன் என்று எல்லா நாடுகளிலிருந்தும் வந்திருக்கும் பெண்கள் அந்தப் படங்களில் பரிதாபமாகச் சிரிக்கிறார்கள். “திருப்தி இல்லையேல் பணம் வாபஸ்’ என்று ஒரு விளம்பரம் அறிவிக்கிறது. ஒரு மூலையில்”யேசு வருகிறார்‘ என்று அறிவிக்கும் விளம்பரம்.

ரயில் நிலையத்துக்கு எதிரே தாட்டியான நான்கைந்து நடுத்தர வயது குஜராத்தி பெண்மணிகள் டிராக் சூட் அணிந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது கொஞ்சம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். “”பிங்கி பள்ளிக்கூடத்திலே கூடப் படிக்கிற வெள்ளைக்காரப் பையன் தினசரி சாயந்திரமாச்சுன்னா வீட்டுக்கு வந்து கும்மாளம் போட்டுட்டிருக்கான். சாரதாபெஹன் கண்டுக்கறதே இல்லே”. காதில் குண்டலம் அசைந்தாட புறணி பேசியபடி ஓடிவந்த அம்மாள் என்னைப் பார்த்ததும் சட்டென்று நிறுத்திக் கடந்து போகிறாள். பிங்கியின் வெள்ளைக்கார பாய் ஃப்ரண்டின் அம்மா வேறே எங்கேயோ யாரிடமோ இந்த நிமிடத்தில் “”இந்தியாக்காரப் பொண்ணு கூட இந்தப் பொறுப்பில்லாத பயபுள்ளை திரிஞ்சுக்கிட்டிருக்கான்” என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பாள். அல்லது தாமதமாக எழுந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் சாண்ட்விச் தின்றபடி பேசிக்கொண்டிருப்பார்கள்.

கிளஸ்டர் வீதி பழைய புத்தகக் கடை அடைந்து கிடக்கிறது. லண்டனுக்கு வரும்போதெல்லாம் தவறாமல் படியேறுகிற இடம். புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் கிரகாம் கிரீனின் மருமகப்புள்ளை நடத்தும் கடை. கிரகாம் கிரீனும் நம்மூர் ஆங்கில இலக்கியப் பெரிசு ஆர்.கே.நாராயணும் உற்ற நண்பர்கள் என்பது தெரிந்திருக்கலாம். போன தடவை கடைக்குப் போனபோது ஆர்.கே.நாராயணின் “சுவாமியும் சிநேகிதர்களும்’ புத்தகம் அவருடைய சகோதரர் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மணின் கோட்டுச் சித்திரங்களுடன் வந்த பழைய பதிப்பு கிடைத்தால் எடுத்து வைக்கும்படி கடைக்காரரிடம் சொல்லியிருந்தேன். அடைத்த கதவுகளுக்கு உள்ளே அது பத்திரமாக ஞாயிற்றுக்கிழமை உறக்கத்தில் இருக்கக்கூடும்.

கிளஸ்டர் வீதியில் ஒரே ஒரு கடை திறந்திருக்கிறது. காப்பிக்கடை. “”காப்பியோடு இரண்டு க்ராய்சண்ட் பன்னும் இலவசம்” என்று அவசரமாக சாக்குக் கட்டியால் கிறுக்கிய பலகை தெருவைப் பார்த்துத் திரும்பி இருக்கிறது. இந்த ஓட்டல், டீக்கடை வாசல் “சுடச்சுட இட்லி, காப்பி’ ரக போர்ட் விளம்பரம் நம்மிடமிருந்து லண்டன் போனதா அல்லது அங்கே இருந்து மாம்பலம், மந்தவெளி வந்ததா என்று தெரியவில்லை.

ஒரு காப்பிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு நாற்காலியில் உட்கார்ந்தபடி நோட்டம் இடுகிறேன். நேர் முன்னால் அழுக்கு ஓவர்கோட்டும், சர்ச்சில் காலத் தொப்பியும், முகத்தில் நாலுநாள் தாடியுமாக ஒருத்தர் கோப்பையிலிருந்து சத்தமாக உறிஞ்சிக் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார். எனக்கு காப்பியும் தட்டில் பன்னும் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போகிற சர்வர் பெண்ணை நிறுத்தி, “”பன் எனக்கு வரல்லே” என்று முறையிடுகிறார். “”உங்களுக்கு ஏற்கனவே கொடுத்தாச்சு” அந்தப் பெண் கண்டிப்பாகப் பதில் சொல்லிவிட்டு நடக்கிறாள். எனக்கு முன்னால் வைத்த தட்டை அவருக்கு நீட்டுகிறேன். “”நான் பிச்சை கேட்கலே” சொல்லியபடி எழுகிறார். காப்பி குடித்து முடித்து கிளஸ்டர் வீதியில் நடக்கும்போது தானியங்கிக் காசு வழங்கும் யந்திரப் பொந்துக்குப் பக்கத்தில் தற்செயலாகப் பார்க்கிறேன். குளிருக்கு அடக்கமாகப் போர்வையைப் போர்த்தியபடி “”சில்லறை இருந்தாப் போடுங்க” என்று கேட்டபடி அவர் தரையில் குந்தி உட்கார்ந்திருக்கிறார்.

Posted in Bookshops, Coffee shop, England, Era Murugan, Free Croissants, Gloucester Bookstore, Graham Greene, Ira Murukan, Iraa Murugan, Iron Board, London Diary, RK Narayan, Sandwich, Trouser Press | 1 Comment »