Archive for the ‘Literary’ Category
Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007
அக்கரை சந்தை:உலக மொழிகளில் தமிழ் நாவல்கள்!
ஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி.
உலகமெங்கும் உள்ள பல் மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கூடும் இடமாக இருக்கிறது இக் கண்காட்சி. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இக் கண்காட்சி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்ரி.
“”இது புத்தகப் பதிப்பாளர்களுக்கான கண்காட்சி என்பதுதான் சரியாக இருக்கும். புதன் கிழமை ஆரம்பிக்கும் இச் சந்தை ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறது. இதன் முதல் மூன்று நாட்கள் பதிப்பாளர், அச்சிடுவோர், விநியோகஸ்தர் ஆகியோருக்கானது. சனி, ஞாயிறு தினங்களில் பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
புத்தக உரிமை, மொழி பெயர்ப்பு உரிமை, ஒப்பந்தங்கள் சம்பந்தமான வர்த்தக பரிவர்த்தனைகள்தான் இக் கண்காட்சியின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு “கெஸ்ட் ஆஃப் ஹானர்’ என்று கெüரவிக்கப்படும். கடந்த ஆண்டு நான் முதல் முறையாகக் கலந்து கொண்ட போது இந்தியாவுக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது.
ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன். மற்ற தமிழ்பதிப்பகங்கள் எதுவும் இதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், இது புத்தக விற்பனைக்கான சந்தையாக இல்லாமல் பதிப்பாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கலாம். ஒரு முறை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுத் திரும்புவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எந்த விதத்திலும் நம் புத்தகங்கள் விற்பனை அந்த அளவுக்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் இதனால் வேறு மாதிரியான வர்த்தக விரிவாக்கங்களுக்கு முயற்சி செய்ய முடியும் என்பதுதான் என் கருத்து.
இப்போது நம் தமிழ்ப் புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறோம். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், யூமா வாசுகி போன்றோரது 20 நாவல்களை இப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இவற்றை அக் கண்காட்சியில் இடம் பெற்ற இங்கிலாந்து பதிப்பகத்தார் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். “இந்தியன் ரைட்டிங்ஸ்’ என்ற பிரிவின் கீழ் எங்கள் பதிப்பகத்தில் இவற்றை வெளியிடுகிறோம். அதே போல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நம் எழுத்தாளர்களின் இந்த நாவல்களை மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் முயற்சி செய்கிறோம். இது இக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட திருப்பம். நாம் இங்கிருந்து போனில் பேசுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியாது. நேரில் பேச வேண்டும்; நம் புத்தகங்களின் சாம்பிள்களைக் கொடுக்க வேண்டும். இப் பயணத்தின் மூலம் உலக நூல்களை, இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்ய முடியும். முஷாரப்பின் “தி லைன் ஆஃப் ஃபயர்’ நூலை வெளியிட்டது அத்தகைய முயற்சிதான்.
நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஆயினும் இத்தகைய அமைப்புகளும் இதைச் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை” என்ற வருத்தக் கேள்வியோடு சொன்னார் அவர்.
“”தமிழ்நூல்களுக்கு நூலக ஆணை மட்டுமே பிரதான வரவாக இருக்கும் சூழ்நிலையில் இப்படியான முயற்சிகளில் இறங்குவது எப்படி?” என்றோம்.
“”நூலகங்களில் புத்தகம் வாங்குவது வருமானத்தின் ஒரு பகுதி மட்டுமே. பொது மக்கள்தான் எங்கள் நிலையான வாங்கும் சக்திகள். நாம் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும் சென்று சேருவதற்காக 30 மாவட்டங்களிலும் விற்பனைக் கூடங்கள் வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி நூல்விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி பல சிறிய கடைகளிலும் எங்கள் புத்தகங்களை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆயிரம் பிரதிகள் விற்பதற்கே அல்லல் படும் நிலையிருந்தும் சோம வள்ளியப்பனின் “அள்ள அள்ள பணம்’ என்ற நூலை இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்திருக்கிறோம். பதிப்பு முறையிலும் விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்தினால் புத்தக விற்பனை வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்கிறார் நம்பிக்கையுடன்.
தமிழ்மகன்.
Posted in Agents, Annual, audiobooks, Authors, Books, Business, Catalan, Catalonia, Channels, classics, Deals, Deutsch, Deutschland, Distribution, English, EU, Events, Exhibition, exhibitors, Faces, Fair, Fiction, forum, Frankfurt, German, Germany, India, Industry, Interview, Kilakku, Kizakku, Kizhakku, Language, Literary, Literature, Marketing, Media, Meet, Multilingual, NBT, network, Networking, New Horizon, Novels, Outlets, people, publications, Publishers, Reach, Read, Reader, Readers, Reports, sales, Sell, Spain, Story, Sura, Tamil, Trade, Translations, Translator, wholesalers, Works, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007
பழனியப்பா செட்டியார் நினைவு சிறுவர் இலக்கியச் சிறுகதைப் போட்டி
சென்னை, பிப்.23: புகழ்பெற்ற பதிப்பகமான பழனியப்பா பிரதர்ஸ், அதன் நிறுவனர் செ.மெ.பழனியப்ப செட்டியார் நினைவாக, மாணவப் படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக, செ.மெ.பழனியப்பா செட்டியார் நினைவுச் சிறுவர் இலக்கியச் சிறுகதைப் போட்டியை அறிவித்திருந்தது.
அதில், பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும், அக்கதைகளைத் தொகுத்து கண்ணன் கண்ட சொர்க்கம் எனும் நூல் வெளியீட்டு விழாவும், சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
நிறுவனர் நாளாக நடைபெற்ற இவ்விழாவில் பிரபல எழுத்தாளர்கள் கே.ஆர்.நரசய்யா எழுதிய மதராசப்பட்டினம், ப.முத்துக்குமாரசுவாமி எழுதிய அம்பிகை ஆகிய இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டன.
நல்லி குப்புசாமி செட்டியார் நூல்களை வெளியிட்டார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ம.இராசேந்திரன் பெற்றுக் கொண்டார்.
சிறந்த கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் சை.வே.சிட்டிபாபு மாணவப் படைப்பாளிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.
விழாவில் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ம.இராசேந்திரன் “மதராசப்பட்டினம் என்ற நூல் பல அரிய செய்திகளை உள்ளடக்கிய ஒரு வரலாற்று ஆவணம். சென்னையைப் பற்றிய வரலாற்று ஆவணம், முன்னோர்கள் நினைவு கூறும் ஆன்மிகம், வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் மாணவர் இலக்கியம் என மூன்று வழிகளில் சிந்தித்து, மூன்று நூல்களை பழனியப்பா பிரதர்ஸ் தந்திருப்பது பாராட்டத்தக்கது’ என்றார்.
விழாவில் 2006-ம் ஆண்டு 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 6 மாணவ, மாணவியரை உருவாக்கிய தமிழாசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அம்மாணவர்களை உருவாக்கிய பள்ளிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவ எழுத்தாளர்களை உருவாக்கும் திட்டத்தின் அடுத்தபடியாக, மாணவ எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை ஒன்றைத் தொடங்க இருப்பதாக பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ப.செல்லப்பன் தெரிவித்தார்.
Posted in Children, Competition, Contest, Events, Happenings, Kid, Literary, Memorial, Nalli, Nalli Kuppusami, Nalli Kuppusamy, Narasayya, Palaniappa, Pazhaniappa, Pazhaniappa brothers, Prize, Winner, Writer | 1 Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007
தேவமகள் இலக்கிய விருதுக்கு தேர்வான கவிஞர்கள் அறிவிப்பு
கோவை, பிப். 22: கவிஞர் தேவமகள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளுக்கு கவிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
கவிச்சிறகு விருது: மூத்த கவிஞரைப் பாராட்டும் வகையில் இவ் விருது வழங்கப்படுகிறது. ரூ.10 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்று வழங்கப்படும்.
தூத்துக்குடியைச் சேர்ந்த கவிஞர் தேவதேவன் இவ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- குளித்துக் கரையேறாத கோபியர்கள்,
- மின்னற்பொழுதே தூரம்,
- மாற்றப்படாத வீடு உள்பட இவரது 15 கவிதை நூல்கள் வெளி வந்துள்ளன.
மேலும் “தேவதேவன் கதைகள்’ என்ற சிறுகதை தொகுப்பு, “அலிபாபாவும் மோர்ஜியானாவும்’ என்ற நாடகநூல், கவிதை பற்றிய உரையாடல் என்ற கட்டுரைநூல் ஆகியனவும் வெளிவந்துள்ளன.
இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. கல்லூரிகளில் பாடமாகவும் உள்ளன. இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
கவித்தூவி விருது: இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 2 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
திருநெல்வேலி பத்தினிப்பாறையைச் சேர்ந்த கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா (நூல்-வலியோடு முறியும் மின்னல்), சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவிஞர் தென்றல் (நூல்-நீல இறகு) ஆகியோர் கவித்தூவி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மார்ச் 10-ம் தேதி கோவை ஆருத்ரா அரங்கில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
கவிஞர் தேவமகள் அறக்கட்டளை அமைப்பாளர் ஆர்.நித்திலன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
Posted in Awards, Devadevan, Devamagal, J Francis Kruba, J Francis Krupa, Kavithoovi Award, Literary, Literature, Prizes, R Nithilan, Tamil, Thendral, Thenral | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007
லண்டன் டைரி: ராஜவம்சம்போல காக்கா வம்சம்!
இரா. முருகன்
“”லண்டன் டவர் வளாகத்தில் நாங்க என்ன வளக்கறோம் தெரியுமா?” யோமன் காவல்காரர் கேட்கிறார். அங்கே தங்கியிருந்து தாடி வளர்க்கிறார் என்பது தவிர வேறே எதுவும் எனக்குப் புலப்படவில்லை. “”இதெல்லாம் நாங்க வளக்கறதுதான்” என்று பக்கத்தில் கைகாட்டுகிறார் அவர். அங்கே இரண்டு அண்டங்காக்கைகள்.
“”இங்கிலாந்து ராஜவம்சம் போல, இங்கே டவர்லே காக்கா வம்சம் ஐநூறு அறுநூறு வருஷமாத் தொடர்ந்து இருக்கு. இப்போ மொத்தம் எட்டுக் காக்கா. இதுங்க எல்லாம் எப்போ லண்டன் டவரை விட்டுப் பறந்து போகுதோ அன்னிக்கு இங்கிலாந்து சாம்ராஜ்யத்துக்கு அழிவு
காலம் ஆரம்பமாயிடும்னு நம்பிக்கை. இப்படித்தான் பாருங்க, ரெண்டாம் உலகப்போர் சமயத்துலே நாலுநாள் காக்கா உஷ். எல்லாம் காணாமப் போச்சு. சொன்னா நம்பமாட்டீங்க, அப்போ நிஜமாகவே இங்கிலாந்து யுத்தத்திலே தோத்துப் போகிற சூழ்நிலை. நல்லவேளை. சீக்கிரமே காக்காயெல்லாம் திரும்பிவர வெற்றி எங்களுக்குத்தான்” காவலர் அன்போடு காக்கைகளைச் சீட்டி அடித்துக் கூப்பிடுகிறார். டூரிஸ்ட்டுகள் எடுக்கும் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதில்லை என்று சங்கம் வைத்துத் தீர்மானித்த மாதிரி அவை விருட்டென்று பறந்து போகின்றன. “”ஐயய்யோ, டவரை விட்டு வெளியே பறந்துடப்போறது.” கூட வந்த அமெரிக்க அம்மா பதறுகிறார். இன்னும் அரைமணி நேரத்தில் இங்கிலாந்து சாம்ராஜ்யம் அழிந்தால் அவர் எப்படி ஏர்போட்டுக்குப் போய் அமெரிக்காவுக்கு விமானம் ஏறமுடியும் என்ற பயம் முகத்தில் தெரிகிறது. “”அதெப்படி வெளியே போகுமாம்? ரொம்பப் பறக்க முடியாதபடி இறக்கையை அப்பப்போ வெட்டிவிடறோமில்லே” காவல்காரர் பரம ரகசியமாகச் சொல்கிறார். காக்காப் பிடித்து கத்திரிக்கோலால் இறகு வெட்டிப் பராமரிக்கிற அவருடைய சேவைக்கு சல்யூட் அடிக்கிறேன்.
“”இதுபோல வேறென்ன நம்பிக்கையெல்லாம் இருக்கு?” காவலரைக் கேட்கிறேன்.
“”ஆன்போலின் மகாராணியைத்தான் கேட்டுச் சொல்லணும். வெட்டி விழுந்த அவங்க தலையைக் கையிலே தூக்கிக்கிட்டு நடுராத்திரிக்கு இங்கே ஆவியா நடந்து வர்றாங்க.”
சிங்கவாசலில் நிற்கிறோம். வாசல் மட்டும்தான். சிங்கக் கோபுரம் என்ன ஆச்சு? நான் விசாரிக்க வருவேன் என்று தெரியாமல் இருநூறு வருடங்களுக்கு முன்னாலேயே இடித்துவிட்டார்களாம். அந்தக் கோபுரத்தில் மிருகக் காட்சிசாலை இருந்ததாகத் தகவல். 1235-ம் வருஷத்தில் மூன்றாம் ஹென்றி மன்னனுக்குத் திருமணப் பரிசாக அப்போதைய ரோமானியப் பேரரசு மூன்று சிங்கங்களை அனுப்பி வைத்தது.(கல்யாணப் பரிசாகக் கொடுக்க அந்தக் காலத்தில் மில்க் குக்கர் இல்லை என்பதை நினைவில் வைக்கவேண்டும்). வந்த சிங்கத்தை வைத்து, சீட்டுக் கிழித்து, காசு வாங்கிப்போட்டு கண்காட்சி நடத்த ஆரம்பித்த பிரிட்டீஷ் அரச வம்சம் இதில் வரும் வருமானம் கணிசமாக இருந்ததாலோ என்னமோ, இன்னும் நிறைய மிருகங்களை இங்கே அடைத்துவைத்து 1835-ம் வருடம் வரை அதைத் தொடர்ந்திருக்கிறது.
பிரபல ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக் “புலி’ என்ற தலைப்பில் எழுதிய “கண் சிவந்து ஒளிரும் புலி’ பற்றிய பிரபலமான கவிதையை நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது உருப்போட வேண்டியிருந்தது. அதைப் பற்றி “”காட்டில் திரியும் புலியை நேருக்கு நேர் கண்ட கவிஞனின் பிரமிக்கத்தக்க உணர்ச்சி வெளிப்பாடு” என்று நாகராஜன் சார் சொல்லிக்கொடுத்தபடி பதினைந்து வரிக்கு மேற்படாமல் பரீட்சைப் பேப்பரில் மாய்ந்து மாய்ந்து எழுதி மார்க் வாங்கியதும் மறக்கவில்லை. இந்தக் கண்காட்சி சாலைக்கு வந்து போனதுக்கு அப்புறம்தான் வில்லியம் பிளேக் புலிக்கவிதை எழுதினாராம். காகிதப் புலியான இந்தக் கவிதைப் புலியை நாங்களும், எங்க வாத்தியாரும் மாத்திரமில்லை, எழுதிய கவிஞரும்கூட காட்டுக்கெல்லாம் போகாமல், பத்திரமாகக் கூண்டுக்கு அந்தப் பக்கம் இருந்து பார்த்தவர்தான் என்று கேட்கும்போது இனம்புரியாத நிம்மதி.
டவர் வளாகம் வாட்டர்லூ பார்க்ஸ் பகுதியில் “ஜுவல் ஹவுஸ்’ உள்ளே நுழைகிறேன். பிரிட்டீஷ் அரச வம்சம் காலாகாலமாகச் சேமித்து வைத்த நகைகள், விலையுயர்ந்த வைரங்கள் எல்லாம் காட்சிக்கு வைத்திருக்கும் இடம். இதில், அரச வம்சம் காசு கொடுத்து வாங்கியது சொற்பம். மற்றதெல்லாம் சூரியன் மறையாத அந்தக்கால பிரிட்டீஷ் சாம்ராஜ்ய அடிமை நாடுகளிலிருந்து கிட்டிய கட்டாய அன்பளிப்பு. இந்தியாவிலிருந்து வந்த கோஹினூர் வைரம் இங்கேதான் இருக்கிறது. எடுத்துக்கொண்டு போகும்போது மறக்காமல் தாங்க்ஸ் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். பிரிட்டீஷ் நாகரீகம் மரியாதைக்குப் பெயர்போனதாக்கும்.
நகை இல்லத்தில் நடக்கவேண்டியதே இல்லை. நகரும் கன்வேயர் பெல்ட்டில் ஏறி நின்றால் ஒரு பிரதட்சணம் செய்து பார்க்க வேண்டியதைப் பார்த்துவிட்டு வெளியே வந்துவிடலாம். நகைநட்டைப் பார்த்து மெய்மறந்து அங்கேயே நின்று எத்தனை சவரன் தேறும் என்று சந்தோஷமாக சர்ச்சை செய்யும் அம்மணிகளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் ஏற்படலாம்தான்.
பிரிட்டீஷ் அரசவம்ச நகைகளை 1303-ம் வருடம் முதல் இங்கே டவரில் தான் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் வைத்திருந்தபோது அத்தனையும் கொள்ளை போய்விட்டதாம். கிட்டத்தட்ட அதையெல்லாம் மீட்டு (சொச்சத்தை வேறே இடங்களில் அன்பளிப்பாக வாங்கி) இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்.
கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்தபடி நகைகளைக் கவனித்துப் பார்க்கிறேன். மணிமகுடம். வைரம் பதித்த அரச வாள். அரசச் சின்னமான செங்கோலில் பதித்த உலகிலேயே பெரிய வைரமான குல்லியன் என்று கண்ணைப் பறிக்கிறது. நகை இல்லச் சுவரில் பெரிய திரைகளில் கேவா கலர் படமாக, ஐம்பது வருடம் முன்னால் எலிசபெத் மகாராணியார் முடிசூடிய காட்சி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் முகத்தில் இனம் புரியாத சங்கடம். மகுடம், செங்கோல், காசுமாலை என்று கிலோக் கணக்கில் சுமந்துகொண்டு நடமாடும் நகைக்கடையாக வலம் வருகிற சங்கடம் அது என்று தோன்றுகிறது.
கன்வேயர் பெல்ட் கோஹினூர் வைரம் வைத்த பெட்டிப்பக்கம் வருகிறது. என் நாடித்துடிப்பு அதிகமாகிறது. மனதில் கட்டபொம்மன் சிவாஜி மீசை துடிக்க “”வரி, வட்டி, வைரம்…எதற்காகக் கவர்ந்து போனாய்?” என்று சிம்மக்குரலில் கர்ஜிக்கிறார். “”கொடுத்திடுங்க, ப்ளீஸ், அது எங்களோடது. கொடுத்தீங்கன்னா, ரசீது தருவேன். பத்திரமா எடுத்துப்போய் அப்துல் கலாம் சார்கிட்டே கொடுத்து தில்லி ராஷ்ட்ரபதி பவன்லே வச்சுடச் சொல்றேன். நீங்க எப்போ வேணும்னாலும் உங்க செலவிலே டில்லிக்கு விசிட் அடிச்சுப் பார்த்துட்டு வரலாம். கொடுத்திடுங்க.” வாய்க்குள் என் குரல் கரைய கன்வேயர் பெல்ட் அறைக்கு வெளியே என்னை நகர்த்துகிறது.
டவரிலிருந்து வெளியே வரும்போது இதமான சாயங்கால வெயில். நடுக்கோபுரப் பக்க மேடையில் ஒற்றைக் காக்கை “என்னைப் படம் எடு’ என்று சாவதானமாக உட்கார்ந்திருக்கிறது. பக்கத்துச் சுவரை ஒட்டிச் சிரிப்புச் சத்தம். ஆன்போலின் அரசி. பிரஞ்சுக் கொலைக்காரன். ஓரமாக சிகரெட் பற்றவைத்தபடி அரசன், மதகுரு அடுத்த தலைவெட்டுக் காட்சிக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். கொலைக்காரன் ஆன்போலின் இடுப்பை இறுக்கமாக அணைத்துக் காதில் ஏதோ சொல்ல அவள் சிரித்துவிட்டு உதட்டுச் சாயத்தைப் பூசிக்கொள்கிறாள். அரசியின் தலை அவள் கழுத்துக்கு மேல் பத்திரமாக இருக்கிறது.
Posted in Cutting Crows, England, Era Murugan, Era Murukan, Ira Murugan, Ira Murukan, Jewel House, Jewels, Kohinoor, Literary, London Diary, Museum, UK | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006
மனித சமூகத்தை மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம் “தமிழ்’- இலக்கிய கருத்தரங்கில் கலாம்
கோவை, டிச. 19: மனித சமுதாயத்தைச் சிறப்புடன் மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம் என்று தமிழுக்குப் புகழாரம் சூட்டினார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
கோவையில் காலச்சுவடு அறக்கட்டளை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் திங்கள்கிழமை தொடக்கி வைத்து அவர் பேசியது:
பாரதியார் 125 ஆண்டுகளாக நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எழுத்தாளர் புதுமைப்பித்தன் 100 ஆண்டுகளாகவும், சுந்தரராமசாமி 75 ஆண்டுகளாவும் நமது நினைவில் இருக்கின்றனர்.
1910-ல் பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் “இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென…’ என்ற கவிதையை சரஸ்வதி வந்தனமாகப் பாடுகிறார். இதன் அறிவியல் கருத்து என்னவெனில், “பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. அதேபோல சூரியன், பூமி அனைத்தும் சுழற்சியின் இயக்கத்தில் அண்டசராசரத்தில் சுழன்று கொண்டே இருக்கின்றன. ஓயாது, ஒழியாது இச் சுற்றல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதைப்போல நாமும் ஓயாது, துவளாது முயற்சி செய்தால் இறையருளால் நம்நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை’ என்பதாகும். ஒரு விஞ்ஞானியைப் போல கவிதை பாடியுள்ளார் பாரதியார்.
பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து பரவிய தமிழ்மொழி இன்னும் புதுமையாக, இளமையாக இருக்கிறது. பல நாடுகளில் தமிழ் மொழி கொழிக்கிறது; பல்வேறு துறைகளில் தமிழர்கள் சிறப்பு பெறுகிறார்கள்; அவர்களின் மொழியன்பு தமிழை மேலும் மேலும் ஜொலிக்க வைக்கிறது.
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள் என்று இணையதளங்களில் தமிழ் பரிமாணிப்பது புது மகிழ்ச்சியைத் தருகிறது.
தமிழ் ஒரு பிரதேச மக்களின் மொழி மட்டுமில்லை. மனித வாழ்வை மேம்படுத்தி மனித சமுதாயத்தை சிறப்புடன் மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம். இதை நினைவுகூர்ந்து படைப்பாளிகள் தங்களது படைப்புகளைச் செய்தால் உலகுக்கு மிகவும் நன்மை கிடைக்கும் என்றார் கலாம்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறப்புரையாற்றினார். ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Posted in A P J Abdul Kalam, APJ Abdul Kalaam, Coimbatore, Jeyaganthan, Jeyakanthan, Kaalachuvadu, Kalachuvadu, Kovai, Krishna Sweets, Literary, Puthumaipithan, S Kannan, Subhramanya Bharati, Sundara Ramasamy, Tamil, Tamil Literature, Thamizh, YS Rajan | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2006
நினைவலைகள்: வல்லிக்கண்ணனுடன் இரு நீண்ட பயணங்கள்
அசோகமித்திரன்

(இடமிருந்து) வல்லிக்கண்ணன், நடராஜன், ஞானக்கூத்தன், சேவற்கொடியோன், அசோகமித்திரன், “தீபம்’ நா. பார்த்தசாரதி (மடியில் அவர் மகன்), மு. மேத்தா.
வல்லிக்கண்ணனைப் பற்றி நினைக்கும்போது தி.க.சி.யைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. தி.க.சி. என்றவுடன் எனக்கு அவருடன் வரும் இன்னும் சிலர் பற்றியும் நினைக்க வேண்டிவரும். ஆ. பழனியப்பன் என்ற மிகச் சிறந்த இலக்கியவாதியும் இலக்கிய ஆராய்ச்சியாளர். இரண்டாவது கந்தர்வன். கடைசியாக என்.ஆர். தாசன்.
தி.க.சி.தான் என்னை வல்லிக்கண்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அன்று வல்லிக்கண்ணன் ராயப்பேட்டை அமீர் மகால் அருகில் ஒரு வீட்டில் குடியிருந்தார். (அதாவது அவருடைய சகோதரர் கோமதிநாயகம் வீட்டில்.) வல்லிக்கண்ணன் நான் எழுதியிருந்த “மஞ்சள் கயிறு’ கதையைப் படித்திருந்தார். அதன் பிறகு அவரை நா. பார்த்தசாரதியின் “தீபம்‘ இதழின் அலுவலகத்தில் பலமுறை சந்தித்துப் பேச வாய்ப்பிருந்தது. தி.க.சி. சில விஷயங்களை அடித்துக் கூறுவார். வல்லிக்கண்ணன் புன்னகை புரிவார்.
ஒருமுறை “இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பு சென்னை மத்திய நூலகத்தில் நா. பார்த்தசாரதியின் புதிய நாவல் “ஆத்மாவின் ராகங்கள்’ பற்றி ஒரு விவாதக் கூட்டத்தை நடத்தியது. அந்த நாவலை எழுதி வரும்போது அதன் கதையை பார்த்தசாரதி என்னிடம் கூறினார். அவர் சொன்ன கதை மிகவும் உருக்கமாக இருந்தது. ஆனால் சொல்லுக்கும் எழுத்துக்கும் இடைவெளி உண்டல்லவா? விவாதத்தில் வல்லிக்கண்ணன் சிறிது அழுத்தம் தந்தே பேசினார். ஆனால் எல்லோருமே பக்குவப்பட்ட மனதுடையவர்கள். ஆதலால் உறவுகள் தொடர்ந்தன. நா. பார்த்தசாரதியின் அயராத தூண்டுதலில்லாமல் புதுக்கவிதையின் வரலாறு, சரஸ்வதி காலம் போன்ற தொடர்களை வல்லிக்கண்ணன் எழுதியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.
நா. பார்த்தசாரதிக்கு நிறைய அபிமானிகள் உண்டு. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு அவர் வாய்ப்பு ஏற்படுத்தி விடுவார். கல்கத்தா தமிழ் மன்றம் அதன் வெள்ளி விழாவுக்குச் சென்னையிலிருந்து ஒரு குழுவை அழைத்து வரப் பார்த்தசாரதிக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. வருடம் 1977. “எமர்ஜென்சி’ வந்து சில மாதங்கள் ஆகின்றன. பார்த்தசாரதியுடன் வல்லிக்கண்ணன், ஞானக்கூத்தன், சேவற்கொடியோன் (கோவை), மு. மேத்தா மற்றும் நான் நவம்பர் 27-ம் தேதி காலை கொரமாண்டல் எக்ஸ்பிரஸில் ஏறினோம். வழியெல்லாம் மழை. அடுத்த நாள் பகல் கல்கத்தா அடைந்தோம். அதற்கடுத்த நாள்தான் எங்களுக்குத் தெரிந்தது நவம்பர் 27-ம் தேதி ஒரு மிகப் பெரிய புயல் ஆந்திரக் கடற்கரையை மீது வீசியிருக்கிறது என்று. ரயில் நிலையங்கள் தூக்கி எறியப்பட்டிருந்தன. காவலி என்னும் இடத்தில் கடல் உள்புகுந்து பல கிராமங்களைத் தரை மட்டமாக்கி விட்டிருந்தது. அதன் பிறகு பல நாட்கள் சடலங்களை அகற்றுவது பெரும் பிரச்சினையாயிற்று. ஆந்திர அரசு சில ஆயுள் கைதிகளைப் பயன்படுத்தியது குறித்து நிறையக் கண்டனம் கூறப்பட்டது.
நாங்கள் ஒரு வாரம் கல்கத்தாவில் இலக்கியப் பாராட்டும் இலக்கியக் கண்டனமும் வாரி வழங்கினோம். எங்கள் குழுவின் நட்சத்திரப் பேச்சாளர் சேவற்கொடியோன். வரிக்கு வரி கைதட்டல்.
நாங்கள் ஊர் திரும்பும் நாள் வந்தபோது ரயில் பாதை ஒரு மாதிரி சீரமைக்கப்பட்டிருந்தது. புயலின் சீற்றத்தை விஜயவாடா தொடங்கி ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பார்க்கக் கிடைத்தது.
வல்லிக்கண்ணனும் நானும் இன்னொரு முறை ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எப்படியெல்லாமோ வற்புறுத்திப் புதுமைப்பித்தனுக்கு புதுதில்லியில் ஒரு தேசியக் கருத்தரங்குக்குக் க.நா.சு. ஏற்பாடு செய்திருந்தார். என் கட்டுரை ஆங்கிலத்தில். வல்லிக்கண்ணன் மற்றும் சா. கந்தசாமி தமிழில் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். அந்தக் கருத்தரங்கில் மேலும் ஆங்கிலத்தில் கட்டுரை அளித்தவர்கள் வலம்புரி ஜான் மற்றும் க.நா.சு. கருத்தரங்கில் நா. பார்த்தசாரதியும் கலந்துகொள்வதாக இருந்தது. இல்லை. அதன்பிறகு அவர் எந்தக் கருத்தரங்கிலும் கலந்துகொள்ள முடியாது போயிற்று. அதற்கடுத்த ஆண்டு க.நா.சுவின் மரணமும் நேரிட்டது.
வல்லிக்கண்ணனின் நீண்ட வாழ்க்கையில் ஏராளமான பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவருக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றிற்று. அது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே நடந்துவிட்டது.
அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்த சமயத்தில் அவருடைய நாவல்களையும் ஒரு பதிப்பாளர் மறுபதிப்பு செய்திருந்தார். ஒரு பழைய மாளிகை பற்றி ஒரு நாவல். அதில் சில இடங்கள் மிகவும் நன்றாக இருந்ததாக எனக்குத் தோன்றிற்று. புனைகதை தொடர்ந்து எழுதத் தேவைப்படும் அனுபவங்களை ஓர் எழுத்தாளர் போற்றி ஏற்க வேண்டும்.
நான் கடைசியாக செப்டம்பர் மாதம் அவரைப் பார்த்தேன். அவர் முடிவு இவ்வளவு அருகில் இருந்தது என்று தெரியவில்லை.
Posted in Anjali, Asogamithiran, Asokamithiran, Asokamithran, Asokamitran, Dheepam, Emergency, Gandharvan, Gomathinaayagam, Gomathynaayagam, Gomathynaayakam, History, Ka Naa Su, Literary, Magazines, Meet, Memoirs, Mu Mehtha, Na Pa, Na Parthasarathy, Naa Pa, Naa Paa, Njaanakkoothan, Njaanakoothan, NR Dasan, Sa Kandhasami, Saa Kandasami, Saa Kandhasamy, Sahithya Academy, Sahitya Academy, Sevarkodiyon, Tamil, Thi Ka Si, Thi Ka Sivasankaran, TK Sivasangaran, Valli kannan, Vallikannan, Vallikkannan, Writings | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 4, 2006
இலக்கியச் சந்திப்பு
புலம்பெயர் தமிழ் படைப்பாளிகளின் 33வது இலக்கியச் சந்திப்பு செப்டம்பர் 23 ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெற்றது.
கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் நடந்த இந்தச் சந்திப்பின் முக்கிய தொனிப்பொருளாக ‘’இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மனித உரிமைகள்’ என்ற விடயம் அலசப்பட்டது.
1988ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடந்துவரும் இந்த இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகளில் இலங்கை, இந்தியா உட்பட உலகின் பல பாகங்களிலும் இருந்து வரும் தமிழ் படைப்பாளிகள் கலந்துகொண்டு வருகிறார்கள்.
இலங்கையின் தற்கால நிகழ்வுகளால் விழிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின், சமூக அவலங்களினால் மிகவும் மோசமாகப் பாதிப்படையும் நிலையில் உள்ள, புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களின் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்புகளில் தாம் அதிக கவனம் செலுத்துவதாக இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகம்.
Posted in Dalit, Desiyam, Eezham, Islamic Tamils, Literary, London, Meet, Rasjeswari Balasubramaniam, Sri lanka, Tamil, Tamil Thesiyam, Women Rights | Leave a Comment »