Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Literacy’ Category

Child and juvenile labour force in Tamil Nadu – Dinamani Op-ed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

இது நியாயமா?

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், நாளைய தலைமுறை கல்வியறிவும் ஆரோக்கியமும் உடைய சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான, கிராமப்புற வளர்ச்சி பெரிய அளவில் ஏற்படாத நாடுகளில் தவிர்க்க முடியாத களங்கம் ஒன்று இருக்குமேயானால், அது கல்வி கற்க வேண்டிய வயதில் எடுபிடி வேலைகளைச் செய்யும் நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுவதுதான்.

சமீபத்தில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களது மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய குற்றத்திற்காக 28 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 68 வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகவே அமைக்கப்பட்ட 32 கல்விச்சாலைகளில், மீட்கப்பட்ட 1,198 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப்படுவதாக அந்த மாவட்டச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக முனைப்பாகச் செயல்படுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இது ஏதோ தமிழகமோ, இந்தியாவோ மட்டுமே எதிர்நோக்கும் பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் – அதாவது, பின்தங்கிய நாடுகளில் – ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள 25 கோடிக் குழந்தைகள், கல்வி கற்க முடியாமல் ஏதாவது வேலையில் ஈடுபட்டு வருவதாக 1998-ல் வெளியான ஐ.நா. செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிவரப்படி உலகில், எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தனது வருங்காலத்தை வளமாக்க முடியாத, கல்வி கற்க முடியாத நிலைமை.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியில்லாமல், குடும்பத் தொழிலிலோ அல்லது வேறு ஏதாவது வேலையிலோ ஈடுபடுத்தப்படுவதாகவும், தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இன்னும் கல்விச்சாலைகளுக்குச் செல்லாமல் ஏதாவது வேலை செய்து குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பல சட்டங்களை இயற்றி வந்திருக்கிறோம். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வியறிவு அளிப்பதற்கு நிதிநிலை அறிக்கைகளில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்காக 228 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்பாகச் செயல்பட்டு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் நல்கி வருகின்றன என்பதுதான் உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டமும் சரி, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை செய்தும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஏன் கட்டுப்படுத்தவோ, முற்றிலும் அகற்றவோ முடியவில்லை? குழந்தைகள் படித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் ஏன் பெற்றோர் மத்தியில் ஏற்படவில்லை?

இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.

முதலாவது காரணம், கிராமப்புற வறுமை. விவசாயம் வெற்றிகரமாக நடக்காத வரையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியாது. வறுமை இருக்கும்போது குழந்தைகளைக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதைவிட, குடும்ப வருமானத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவதற்குத்தான் பெற்றோர்கள் முயல்வார்கள் என்பது இயல்பு. இந்த விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள்தான் நல்ல தீர்வைத் தர முடியும்.

இரண்டாவது காரணம், இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் படித்தவர்கள் மத்தியில் இல்லாதது. குழந்தைத் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிற மனப்போக்கிலேயே தவறு இருக்கிறது. குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர்களைச் சமுதாயம் புறக்கணிக்க முற்படுமேயானால், இந்த சமூகக்கேடு பெரிய அளவில் தடுக்கப்படும். நாமே மறைமுகமாக இந்தக் கொடுமையை அங்கீகரிக்கிறோமே, இது நியாயமா?

Posted in Center, Centre, Child, Children, City, Dharmapuri, Education, Employment, Exploit, Exploitation, Females, Food, girls, Govt, Hotels, Hunger, Hungry, Illiteracy, Income, juvenile, Kids, Labor, Labour, Literacy, Metro, Needy, Policy, Poor, Read, Restaurants, Rich, Rural, She, State, Student, Suburban, Tharmapuri, Village, Wealthy, Women, Work, Worker | Leave a Comment »

3 Rs – Read, wRite & liteRacy: Basic Education is a must

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2007

முன்னேற்றத்தின் முதற்படி எழுத்தறிவு!

உதயை மு. வீரையன்

“”இருட்டைக் கண்டு குழந்தை பயப்படுகிறது; அதை மன்னித்து விடலாம். ஆனால் வெளிச்சத்தைக் கண்டு பயப்படும் மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை எப்படி மன்னிப்பது?” என்று கேட்டார்~ பிளேட்டோ! அறியாமை இருளை ஓட்டி, எழுத்தறிவு என்னும் வெளிச்சத்தை அடைவதற்கு எவ்வளவு காலம், எத்தனை போராட்டங்கள்! இந்த வெளிச்சத்தை ஏற்றும் விளக்குகளாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்.

கல்வியானது அறியாமை இருளை அகற்றுவது; சிந்தனைத் திரியைத் தூண்டி விடுவது; வளர்ச்சிக்கு வாசல் திறப்பது.

மனித சமுதாயத்தையே மாற்றியமைக்கும் ஆற்றல் அதற்கு மட்டுமே உண்டு என்பதால்தான் கடந்த காலங்களில் கல்வி பலருக்கு மறுக்கப்பட்டது. சிலருக்கு மட்டுமே சொந்தமானது. இந்த நிலை இனியும் தொடர்வதைத் தவிர்க்கவே, விடுதலை பெற்ற நாடு, “”அனைவருக்கும் கல்வி” என்பதைச் சட்டமாக தீட்டியது. இந்திய மக்கள்தொகை 2015-ல் 1224 மில்லியன் ஆகவும், 2030-ல் 1398 மில்லியனாகவும் பெருகும் என பொருளியல் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். 26 சதவிகித மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர்.

மத்திய திட்டக்குழு, 8 சதவிகித வளர்ச்சி இலக்கினை எட்ட, சமுதாய – பொருளாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது கண்காணிக்கத் தகுந்த சில இலக்குகளை நிர்ணயித்துள்ளது. அதில், பள்ளி செல்லும் வயதில் உள்ள அனைத்து குழந்தைகளும் 2003-ஆம் ஆண்டுக்குள் கட்டாயம் பள்ளி செல்ல வேண்டும்; 2007-ஆம் ஆண்டிற்குள் 5 ஆண்டுகளாவது குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் எழுத்தறிவு 75 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

உலகின் மக்கள்தொகை 630 கோடி. இதில் எழுத்தறிவே இல்லாத மக்கள் 100 கோடி பேர். கல்வியில் பயன்படுத்தப்படாத மொழிகளைப் பேசுவோர் 138 கோடி என்பதால், தாய்மொழிவழிக் கல்வி மறுக்கப்பட்டோரே உலகில் எழுத்தறிவில்லாத மக்களில் பெரும்பாலோராக இருப்பது தெரிகிறது. எனவே கல்லாமை அல்லது எழுத்தறிவின்மை இன்னும் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம், கல்வியில் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படாதது எனக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

ஐ.நா. குழந்தைகள் நிதியம் – “யுனிசெப்’ 1999-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை, “”மாணவ மாணவிகளுக்கு முதன்முதலாக அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும்போதுதான், அவர்கள் விரைவாகக் கற்றுக் கொள்கின்றனர். கல்வித் திறமைகளை விரைவாகப் பெறுவதும், தாய்மொழி மூலம்தான் என்பதை ஏராளமான ஆராய்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன…” எனக் கூறியுள்ளது.

இது, இந்தியாவில் – குறிப்பாகத் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தாய்மொழி படிக்காமலேயேகூட பட்டம் வாங்கும் நிலை இன்னும் தொடர்கிறது. இதுபற்றி அரசும், கல்வி நிறுவனங்களும் சீரிய அக்கறை காட்டவில்லை.

அத்துடன் தொடக்கக் கல்வி முதல் தொழிற்கல்வி வரை இலவசக் கல்வி என்பது இல்லாமல் போய், கல்வியே லாபகரமான வணிகமாகிவிட்டது. இதனால் “அனைவருக்கும் கல்வி’ என்பது மறுக்கப்படுகிறது.

கல்வியளிப்பது அரசாங்கத்தின் கடமையாக இருந்தபோதும், அதற்கு உற்ற துணையாக இருக்க வேண்டியது பெற்றோரும் ஆசிரியருமே! ஆனால் கிராமப்புறங்களில் இருக்கும் பல பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமையால் மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. தொடக்க நிலையில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 ஆக இருந்ததை, அரசு படிப்படியாக அதிகரித்து தற்போது இது 1:50 என்ற நிலையை எட்டச் செய்துள்ளது.

ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் தொடக்கக் கல்வியிலிருந்துதான் தொடங்குகிறது. உறுதியான அடித்தளமில்லாத மாளிகை உருக்குலைந்து போகும். உண்மையான கல்வி தரப்படாத தேசமும் அப்படித்தான். கிராமம், நகரம் என்றும், வளமை, வறுமை என்றும் பிரிந்து கிடப்பது ஆரம்பக் கல்வியை அழித்துவிடும்.

தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வி முறையே பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. நர்சரி – மெட்ரிகுலேஷன் என்றும், ஆங்கிலோ இந்தியன் என்றும், ஓரியண்டல் என்றும், மாநில வாரியம் என்றும் ஒரே கல்வித்துறையின்கீழ் வேறுபட்டுக் கிடப்பதுதான் வேடிக்கை! இதனால்தான் சமச்சீர் கல்விமுறை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சமச்சீர் கல்விமுறை வலியுறுத்தப்படுவதன் நோக்கமே, பல பிரிவுகளால் ஏற்படும் சமச்சீரின்மையைப் போக்குவதாகும்!

பாடச்சுமையைப் பற்றிப் பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட யஷ்பால் குழு, தமது 1993 ஆம் ஆண்டு அறிக்கையில், “மத்திய அரசு நேரடியாக நடத்தும் கேந்திரிய வித்யாலயம் மற்றும் நவோதயா பள்ளிகளில் மட்டும் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் இருக்க வேண்டும். மற்ற எல்லாப் பள்ளிகளும் மாநில அரசின் பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளது.

எனவே தமிழக அரசு இதனைப் பற்றிப் பரிசீலிப்பதற்காக முத்துக்குமரன் தலைமையில் ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்தது. இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆசிரியர், பெற்றோர், கல்வியாளர்களைச் சந்தித்து, அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது பற்றிய தமது அறிக்கையை தமிழக முதல்வரிடம் அளித்துள்ளது.

இந்நிலையில் “செயல்வழிக் கற்றல்’ என்ற புதிய பாடமுறையை அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட இயக்குநர் அறிமுகப்படுத்தியுள்ளார். அதுவும் எல்லாப் பள்ளிகளுக்கும் என்றில்லாமல் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு எனத் தேர்ந்தெடுத்து இவ்வாண்டு முதல் நான்கு வகுப்புகளுக்கு மட்டும் நடைமுறைப்படுத்துவது தமிழகக் கல்வியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தாதா என்ற கேள்வி எழுகிறது.

சமச்சீரான கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில், இப்போது இருக்கும் பாடத்திட்டத்தையும் பாடப்புத்தகத்தையும் விட்டுவிட்டு அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு கற்பிப்பது தரமான பள்ளிகளோடு போட்டி போடுவதற்குத் தடையாக இருக்காதா? இது, அரசு மற்றும் ஒன்றியப் பள்ளி மாணவர்களை மற்ற தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கே பெற்றோர்களைத் தூண்டிவிடும்.

“ஆசிரியர், மாணவர், பெற்றோர், கல்வியாளர்’ என்னும் தூண்களே கல்வி மாளிகையைத் தாங்குகின்றன. இவர்களுடைய கருத்தறியாமல் செயல்படும் கல்வி சென்று சேர வேண்டிய இலக்கினை அடைய இயலாது.

ஆசிரியர்களிடம் சமுதாயம் அதிகம் எதிர்பார்க்கிறது. காரணம், நமது கல்வியின் ஆரம்பம் குருகுலவாசமாக இருந்ததுதான். ஆசிரியர்களில் சிலர் தங்களை அப் பணிக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டாலும் பலர் அவ்வாறு இல்லாதது கவலை தரும் போக்காகும். அவர்களது முழுமையான சேவையை நாடும், நாமும் எதிர்பார்ப்பது நியாயமே!

ஒவ்வொருவரும் முன்னேற பல படிகள் இருக்கின்றன. ஆனால் எழுத்தறிவே முன்னேற்றத்தின் முதற்படி. இதனை நினைவில் நிறுத்துவது இக்காலத்துக்கு மட்டுமல்ல, எக்காலத்துக்கும் நல்லது.

(இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்).

Posted in Education, Literacy, Study | Leave a Comment »

Exposing the double standards of Kerala Govt – Inaction, Hypocrisy, Bureaucracy

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

கடிதங்கள் | காலச்சுவடு

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

சக்கரியாவின் ‘மாயாவித் திருடர்கள்’ என்னும் கட்டுரை குறித்து:

கேரளாவில் மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறார்கள். பிளாச்சி மடையிலுள்ள கொக்கோகோலோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ தொழில் நிறுவனங்கள் மார்க்சிஸ்டுகளால் கேரளத்தை விட்டு ஓடிவிட்டன.

  • கெல்ட்ரான்,
  • ரேயன்ஸ் மில்,
  • புனலூர் காகித ஆலை,
  • அலகப்பபுரம் டெக்ஸ்டைல்ஸ்,
  • அப்போலோ டயர் தொழிற்சாலை

ஆகிய அனைத்தும் மூடப்படுவதற்குக் காரணமாயிருந்தவர்கள், தம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்டுகளே. கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூளை உழைப்பாளிகளாகவும் உடல் உழைப்பாளிகளாகவும் மற்ற மாநிலங்களுக்கும் அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கும் செல்லக் காரணகர்த்தாக்கள் மார்க்சிஸ்டுகளே.கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்னும் ஊரின் அருகேயுள்ள சம்றவட்டம் என்ற இடத்தில் பாரத புழா அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் தண்ணீரைத் தேக்கிவைக்கத் தடுப்பணையும் அதன்மேல் வாகனங்கள் செல்ல ஒரு பாலமும் கட்டத் திட்டமிட்டுக் கேரளாவில் மூன்று முதல்வர்கள் கடந்த 18 ஆண்டுகளில் மூன்று முறை கால்கோள் விழா நடத்தினார்கள். அத்திட்டத்தை என்ன காரணத்தினாலோ கைவிட்டார்கள்.

அந்தப் பாலம் அங்குக் கட்டப்பட்டால் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் தேவையும் நிறைவேறும் விவசாயம் செழிக்கும் வெயில் காலங்களில் நிலத்தடி நீரும் குறையாது. இது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் மார்க்சிஸ்டுகள் ஏமாற்றுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்தினால் அணை உடைந்து ஐந்து மாவட்டங்கள் நீரில் மூழ்கிவிடும் என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். 4 டி.எம்.சி. தண்ணீரால் 5 மாவட்டங்கள் எப்படித் தண்ணீரில் மூழ்கும்?

ஒரு வேளை மார்க்சிஸ்டுகள் கூறியபடியே நடந்தாலும், அந்த நீர் 70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு அல்லவா சென்றுவிடும்? கேரள மாவட்டங்கள் என்ன பூந்தொட்டிகளா, நீரில் மூழ்க? அப்படியிருக்கக் காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் கேரளாவிற்கு 30 டி.எம்.சி. வழங்கத் தீர்ப்பு கூறியுள்ளது.

எந்த ஆயக்கட்டு வசதியும் இல்லாமல் 30 டி.எம்.சி.யை எங்குத் தேக்குவார்கள்? அதுவுமில்லாமல் 30 டி.எம்.சி. நீர் தங்களது மாநிலத்திற்குப் போதாது என்றும் மேலும் தண்ணீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். இந்த 30 டி.எம்.சி. நீரால் கேரளா மூழ்காதா? மார்க்சிஸ்டுகள் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்த திருவனந்தபுரத்தைத் தனிக் கோட்டமாக்கியபோது தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால், சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டபோது மார்க்சிஸ்டு தொழிற்சங்கத்தினர் அம்மாநில மக்களைத் தேவையில்லாமல் தூண்டிவிட்டார்கள்.

கேரளாவில் உள்ள குருவாயூரிலிருந்து தானூர் என்னும் இடத்திற்குப் புதிய ரயில் பாதை அமைக்கக் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலத்தைக் கையகப்படுத்தாமல், அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

திருவனந்தபுரம் அருகே விழிஞம் என்னும் இடத்தில் அதிநவீனத் துறை முகம் அமைக்கப் பல வெளிநாட்டுக் கம்பெனிகள் முயன்றன. ஆனால், மார்க்சிஸ்டு அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை. எர்ணாகுளத்தை ஸ்மார்ட் சிட்டி ஆக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கும் மார்க்சிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்துத் திட்டத்தைக் கிடப்பில் போட்டிருக்கிறார்கள்.

கேரளா பொருளாதார வளர்ச்சி பெற்றுச் சிறந்த மாநிலமாக உருவெடுத்தால், மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை ஏமாற்ற முடியாது என்ற ஒரு காரணம்தான். இந்த ஆண்டு மார்ச் 14 அன்று மேற்கு வங்கம் நந்தி கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து 14 பேர் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். மார்ச் 14 நினைவுகூரத்தக்க தினம்தான்.

பொதுவுடமைச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் மார்ச் 14. மார்க்சிஸ்டுகளின் அந்நிய நாட்டு அடி வருடித்தனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் வரலாறும் மன்னிக்காது என்பது திண்ணம்.

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

—————————————————————————

தமிழகத்தின் உரிமைப் பிரச்னைகள்

பா. ஜெகதீசன்

தமிழகமும், கேரளமும் கடந்த பல தலைமுறைகளாகவே அண்ணன் – தம்பியைப் போன்ற உறவுடன் பாசத்துடன் பழகி வந்தன. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சமீபகாலத்தில் எழுந்த பிரச்னை விசுவரூபம் எடுத்து, இரு தரப்பினரையும் பகையாளிகளைப் போல பேச வைத்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைப் போல, மேலும் பல பிரச்னைகளில் இரு மாநிலங்களுக்கு இடையே “இழுபறி’யான ரீதியில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

உதாரணமாக, பரம்பிக்குளம் -ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை 1988-லிருந்து நீடித்து வருகிறது. 6.11.2004-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையை தொடருகின்றன.

கஜினி முகமது தொடர்ந்து படை எடுத்து வந்த வரலாற்றை முறியடிக்கும் வகையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காண இதுவரை சுமார் 20 முறைக்கும் மேல் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பாலாறு, ஆழியாறு ஆகியவற்றிலும், இவற்றில் இணையும் ஆறுகளிலும் உள்ள நீரை மின்சாரம் தயாரிக்கவும், பாசனம் மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்தவும் 9.11.1958 முதல் செயல்படக் கூடிய ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கும் இடையே கையெழுத்தானது.

9.11.1988-ல் இந்த ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை.

அதேபோல, பாண்டியாறு -புன்னம்புழா நதிகள் தமிழகத்தில் நீலகிரி மலையின் உயர்ந்த சிகரங்களில் தோன்றி, கூடலூருக்கு 5 கி.மீ. மேற்கே இணைகின்றன. இந்த இணைப்புக்குக் கீழே இந்த நதி புன்னம்புழா என்றே அழைக்கப்படுகிறது. கேரளத்தில் நீலாம்பூர் அருகே சாளியாற்றில் கலந்து, பேபூர் என்கிற இடத்தில் அரபுக் கடலில் இந்த நதி சங்கமம் ஆகிறது.

இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் கிடைக்கும் 14டி.எம்.சி. நீரில் குறைந்தபட்சம் 7 டி.எம்.சி.யையாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆற்றிலிருந்து கிழக்கு நோக்கி தண்ணீரைத் திருப்ப கேரளத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியைத் தமிழகம் மேற்கொண்டுள்ளது.

புன்னம்புழா திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை பவானி ஆற்றின் கிளை ஆறான மோயாற்றில் இணைத்து, கோவை மாவட்ட விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால், இந்தக் கனவு எப்போது நனவாகும் என்று தெரியவில்லை.

தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி – வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, அதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது. கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது என்பது அந்தத் திட்டத்தின் ஒரு பகுதி.

பம்பா -அச்சன்கோயில் -வைப்பாறு இணைப்புத் திட்டம் என்பது கேரளத்தில் உள்ள பம்பா -அச்சன்கோயில் ஆறுகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது ஆகும். இந்தத் திட்டத்தினால் சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், தென்காசி வட்டங்களில் உள்ள 91,400 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் என்பது சுமார் 2.5 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பம்பா – அச்சன்கோயில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் இது 20 சதவீதம் மட்டுமே.

மேலும் இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்சாரத்தையும் எளிதாக உற்பத்தி செய்ய இயலும்.

ஆனால், இதர திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டத்தையும் கேரள அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைக்கும் வகையில், கண்ணகி கோயில் பிரச்னை அமைந்துள்ளது.

உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள வண்ணாத்திப்பாறைக் காடு தமிழகத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியில்தான் கண்ணகி கோயில் உள்ளது.

ஆனால், கண்ணகி கோயில் தனது எல்லைக்குள் உள்ளதாக கேரள அரசு கூறி வருகிறது. அத்துடன், அங்கு வழிபாடு நடத்தச் செல்லும் தமிழக மக்களை கேரள அரசு தடுத்து, பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே உள்ள எல்லையின் நீளம் சுமார் 830 கி.மீ. இதில் சுமார் 250 கி.மீ. தூரத்துக்குத்தான் இரு மாநிலங்களின் அதிகாரிகளும் ஆய்வு செய்து, எல்லைகளை நிர்ணயித்துள்ளனர்.

கேரள அதிகாரிகள் சரியாக ஒத்துழைக்காததால், எஞ்சிய தூரத்துக்கு எல்லையை வரையறுக்க முடியாத நிலை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஆங்காங்கே தமிழகத்தின் பகுதிகளைத் தனது பகுதிகள் என்று கேரளம் கூறி போலியாக உரிமை கொண்டாடி வருகிறது.

கேரளத்துடன் நல்லுறவை வளர்க்கவே எப்போதும் தமிழகம் விரும்புகிறது. ஆனால், அந்த விருப்பம் ஈடேறத் தடைகற்களாக இத்தனை பிரச்னைகள் அமைந்துள்ளன. இந்தத் தடைகள் தகர்க்கப்பட்டு, நல்லுறவு மேம்பட கேரளத்தின் பெருந்தன்மையான ஒத்துழைப்பு அவசியம்.

———————————————————————————————————————————

முல்லைப் பெரியாறும்-கேரளமும்!

என். சுரேஷ்குமார்

திருநெல்வேலி மாவட்டம், சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு, பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோனி ஆறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு சுமார் 300 கி.மீ. தூரம் வடமேற்குத் திசையில் பாய்ந்து இறுதியில் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே கடலில் கலக்கிறது.

பெரியாறு தமிழக எல்லைக்குள் 56 கி.மீ. தூரமும் கேரள எல்லைக்குள் 244 கி.மீ. தூரமும் பாய்கிறது.

மக்களின் குடிநீர் தேவைக்கும் பாசனத்திற்காகவும் பெரியாறு திட்டத்திற்கு முதன்முதலில் செயல்வடிவம் கொடுத்தது ஆங்கிலேயர்கள்.

அதன்படி, 1808-ம் ஆண்டு ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்டத்தை ஆய்வு செய்து 1862-ல் 162 அடி உயர அணை கட்டும் திட்டம் மேஜர் ரைவீஸ் மற்றும் மேஜர் பேயின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1882-ம் ஆண்டு 175 அடி உயரத்தில் அணை கட்ட பென்னி குயிக் நியமிக்கப்பட்டார். அதற்கு திட்ட மதிப்பீடு ரூ.65 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி முல்லை ஆறும், பெரியாறும் இணையும் இடத்திற்கு அருகே அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. அணை கட்டப்படவிருந்த பகுதியான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகளாகும். தற்போதும் அப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலும் தமிழர்களே.

இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழ்நாட்டு பகுதியா, திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியா என்பதில் தெளிவில்லாத ஆங்கிலேய அரசு, அணை கட்டப்பட உள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி எனக் கொண்டு, 1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுக்கான ஒப்பந்தத்தை செய்தது.

மேலும், இந்த அணை நீரானது தமிழகத்திற்கு காலகாலத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசு 999 ஆண்டு ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்டது.

அதன்படி 1241 அடி நீளத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் அடித்தளத்திலிருந்து 172 அடி.

இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடி. ஆனால், திடீரென வரும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டது.

இந்த அணையில் தேங்கும் நீரை, கிழக்குத் திசையில் 5765 அடி நீளமும், 60 அடி ஆழமும், 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கொண்டுவந்து பின்பு அந்த நீரை மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 5345 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

அதற்குப் பிறகு 78 கி.மீ. நீளமுள்ள பெரியாறு கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. அணையிலிருந்து மேற்குறிப்பிட்ட சுரங்கத்தின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி அளவு தண்ணீரை மட்டுமே வெளியே எடுக்க முடியும்.

மேலும், 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடிவரை தேங்கும் நீரைத்தான் எடுக்க முடியும்.

பின்னர் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு அந்த அணையின் நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர்தான் கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையை முழுவதும் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது.

அதன்படி, 1956-ம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் வாழ்ந்து வந்த தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரளத்தோடு இணைக்கப்பட்டன.

1978-ம் ஆண்டு அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு பொய் செய்தியைப் பரப்ப ஆரம்பித்தது. அதன்மூலம் அணையின் நீர்மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டது.

பின்னர் அணை பலப்படுத்துவது தொடர்பாக கேரள- தமிழக அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, அணை பலப்படுத்தப்படும்வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையே பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் கெவி அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை, பம்பா அணை போன்ற அணைகளை கட்டியெழுப்பி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை கேரளம் குறைத்தது.

இதனால் ஒரு போகம் சாகுபடி செய்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறின.

1979 ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை 1985-ம் ஆண்டே முடித்த பின்பும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்தது.

இதனால் இப்பிரச்னையை தமிழக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை சார்ந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்ட பிறகு, அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன என்று சான்று வழங்கியது. மேலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரள அரசு சொன்ன காரணங்கள் பொய்யானவை என்று ஆணையம் தெளிவாகக் கூறியது.

அதன் அடிப்படையில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், கேரள அரசு 1979-ம் ஆண்டு தமிழகத்தோடு செய்த ஒப்பந்தத்தை மீறியதோடு, நிபுணர் குழு அறிக்கையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் உதாசீனப்படுத்தியது.

தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்து அதே ஆண்டு மார்ச் மாதத்தில் கேரள அரசு நீர்ப்பாசனம், நீர்வளம் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி பெரியாறு அணையையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இதன்மூலம் கேரள அரசு மேற்கொள்ளும் ஒரு தலைப்பட்சமான முடிவு நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக விடப்பட்டிருக்கும் அறைகூவல்.

மேலும், தற்போது பழைய அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு கேரள அரசு கட்டினால் தமிழகத்தின் உரிமை முழுமையாகப் பறிபோகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Posted in Agriculture, Apollo, Bureaucracy, Cauvery, Coke, cola, Communism, Communist, Communist parties, Communist Party of India, Congress, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Dam, Disaster, Drinking, Economy, Employment, Exports, Finance, Flood, GDP, Govt, Growth, Guruvaioor, Guruvaiyoor, Guruvaiyur, Guruvayoor, Guruvayur, Harbor, Harbour, Headquarters, Hype, Hypocrisy, Imports, Incentives, Industry, infrastructure, Integration, Irony, Irrigation, Jobs, Kaviri, Keltron, Kerala, Kozhikode, Labour, Literacy, Madurai, Malaappura, Malappura, Malappuza, Malappuzha, Malayalam, Manufacturing, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Mills, Mullai, Mullai Periyar, MullaiPeriyar, National, Palacaud, Palacaut, Palacode, Palaghat, Palagode, Palakode, Periyaar, Periyaaru, Periyar, Periyaru, Politics, Port, Prevention, Producation, promises, Railways, River, Salem, SEZ, Shipping, State, Tax, Textiles, THIRUVANANTHAPURAM, TMC, TN, Trains, Trivandrum | Leave a Comment »

OBCs make up 41% of India’s population

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்டோர் 41 சதவீதமே!

சாம்பிள் சர்வே தகவல்

புதுதில்லி, நவ. 2: இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 41 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பு (என்எஸ்எஸ்ஓ) நடத்திய மாதிரிக் கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அறிவித்தார்.

அது முதற்கொண்டு நாட்டில் இதர பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகை தொடர்பான பொது விவாதம் நடைபெற்று வந்தது. இதர பிற்படுத்தப்பட்டோர் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் உள்ளனர் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கு பலதரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

கிராமப்புறங்களில் 79,306 வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 45,374 வீடுகளிலும் இந்த மாதிரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டோர் 20 சதவீதமும் பழங்குடியினர் 8 சதவீதமும் உள்ளதாக மாதிரிக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27.5 சதவீதம் வழங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனுக்களை கடந்த மாதம் 16ம் தேதி விசாரித்த நீதிபதிகள் அரிஜித் பசாயத், எல்.எஸ். பாண்டா ஆகியோரடங்கிய பெஞ்ச், “1930ம் ஆண்டுக்குப் பிறகு இதர பிற்படுத்தப்பட்டோரைக் கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை; இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கை எவ்வாறு அறிவிக்கப்பட்டது’ என்று கேள்வி எழுப்பியது.

“இட ஒதுக்கீடு தொடர்பான முழு விவரங்களைக் கையில் வைத்திராமல் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அறிவிக்கலாமா? இது விதிகளை அறிவிக்காமல் விளையாட்டில் இறங்கியது போன்றது’ எனவும் நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர்.

இதர பிற்படுத்தப்பட்டோரில் 65 சதவீதம் பேரும் பழங்குடியினரில் 52 சதவீதம் பேரும் இதர வகுப்புகளைச் சேர்ந்த 78 சதவீதம் பேரும் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 34 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்களாக உள்ளதாகவும் மாதிரிக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Posted in Creamy Layer, India, Literacy, Mandal Commission, National Sample Survey Organisation, NSSO, OBC, Other Backward Classes, Population, Reservation, SC/ST, scheduled castes, scheduled tribes, Statistics, VP Singh | Leave a Comment »

Literacy Development in India

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

எழுதப் படிக்கத் தெரிவதே எழுத்தறிவா?

ஆர். இராஜன்

சமீபத்தில் மாவட்ட அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்கல்வி / எழுத்தறிவு மையங்களை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலான மையங்களில் பெண்கள், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களே பயனாளிகளாக இருந்தனர். முதல் மையத்தில் கற்போரிடம் கலந்துரையாடினேன்.

ஏன் எழுத்தறிவு? எழுத்தறிவு பெறுவதால் என்ன பயன்?

இதுதான் கேள்வி. படிப்பதால் ஊர் பேர் படித்து பஸ்ஸில் ஏறலாம். அருகில் உள்ள ஊருக்குச் சென்று வரலாம் என்றனர் ஒரு சிலர். மற்றொரு பிரிவினர் – கடிதம் எழுதலாம் அல்லது நமக்கு வரும் கடிதங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்றனர். அடுத்த சிலர் நம்மைச் சுற்றி நடைபெறும் அன்றாடச் செய்திகள் / நாட்டு நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம் என்றனர். ஆனால் ஒரு பெண்மணி, தற்போது எங்கள் பகுதி மக்களுக்குக் கடிதம் எழுதும் வாய்ப்போ, கடிதம் வரும் வாய்ப்போ பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம். ஏன் எனில், இது தொலைபேசி யுகம். எங்கு பார்த்தாலும் “செல்’ அல்லது பொதுத் தொலைபேசி இல்லாத கிராமமே இல்லை. இதன் மூலமே அனைத்துத் தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறோம் என்றார்.

அடுத்து பேச வந்த பெண்மணி செய்திகள் / நாட்டு நிலவரம் பற்றி கூறினார். ஐந்து அல்லது பத்தாண்டுகளுக்கு முன்னர்தான் இது ஒரு பிரச்சினை எனலாம். அதனால் தற்போது எங்கு பார்த்தாலும் கேபிள் டிவிக்கள், பல்வேறு சேனல்கள். இது தவிர செய்திகளுக்கே எனத் தனிச் சேனல்கள். அப்படியிருக்க எழுதப் படிக்கத் தெரிந்தால்தான் இதை அறிய முடியும் என்று எப்படி கூற முடியும் என்று கேட்டார்.

நம்மில் பெரும்பாலோருக்கு இதே மாதிரி எண்ணங்களே. “எழுத்தறிவு’ என்பதை வெறுமனே எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வது என்ற குறுகிய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளக் கூடாது. “செயல்முறை எழுத்தறிவு’ என்ற பரந்த அர்த்தத்தில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். “தேசிய எழுத்தறிவு இயக்கம்’ “எழுத்தறிவை’ வரையறுக்கும்போது செயல்முறை எழுத்தறிவு ( Functional Literacy) என்று வலியுறுத்துகிறது.

* “செயல்முறை எழுத்தறிவு’ என்பது~

எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திறன்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதில் சுயசார்பு அடைதல்.

தங்களின் ஏழ்மை நிலைக்கான காரணங்களைப் புரிந்து கொண்டு சிறுசிறு குழுக்களாக ஒன்று சேர்ந்து அமைப்பு ரீதியாக வளர்ச்சித் திட்டங்களைத் திட்டமிடுவது முதல் செயல்பாட்டில் ஈடுபடுதல் வரை முழுமையாகப் பங்கேற்றுத் தங்கள் நிலையை மேம்படுத்த முயலுவது.

பொருளாதார அந்தஸ்து (அல்லது) தமது வருவாயைப் பெருக்கும் வகையில் ஏற்கெனவே செய்து வரும் தொழிலிலோ, புதுத் தொழிலிலோ ஈடுபட்டு தம் வருமானத்தைப் பெருக்குதல்.

தேசிய ஒருமைப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆண் / பெண் சமத்துவம் போன்ற தேசிய நலன் சார்ந்த பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல்.

எழுதப் படிக்கத் தெரியாதவர்களைவிட எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்குத் தன்னம்பிக்கையும் சொந்தக் காலில் நிற்கும் திறனும் அதிகம். எழுதப் படிக்கத் தெரிவதால் தனக்குக் கிடைக்கும் தகவல்களைப் பகுத்துப் பார்த்துச் சொந்தமாக முடிவு எடுக்கும் ஆற்றல் ஏற்படுகிறது. எல்லாவற்றையும்விட முக்கியமாகத் தன்னைப் பற்றிய சுயமதிப்பும் ஆற்றல் உணர்வும் அதிகரிக்கிறது.

தற்போதைய வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுக்குத் தேவையான திறமைகளான தன்னைத் தாமே அறிந்து கொள்ளுதல், பிரச்சினைக்குத் தீர்வு காணல், முடிவு எடுக்கும் திறமை, நேர மேலாண்மை, தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளுதல், சகிப்புத் தன்மை, தோல்விகளையும் பிறர் விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளுதல், குழுவாகச் சேர்ந்து பணியாற்றுதல், சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளுதல் போன்ற பண்புகளை உள்ளடக்கியதாக எழுத்தறிவு மற்றும் கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியுள்ளது. அரசு கிராமப்புற மக்களுக்காக, பின்தங்கிய மக்களுக்காக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்ற மக்களுக்காக, பெண்களுக்காக, எத்தனைத் திட்டங்கள் போட்டாலும் அவை முழு அளவில் அவர்களைச் சென்றடைவதில்லை. அவர்களுக்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பது தெரியாமலேயே இன்றும் அந்தக் குறிப்பிட்ட சமுதாய மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களிடையே உள்ள எழுத்தறிவின்மைதான்.

1965 செப்டம்பர் 8ஆம் நாள் டெஹரான் நகரில் உலக அளவிலான கல்வி அமைச்சகர்கள் மாநாடு கூட்டப்பட்டது. எழுத்தறிவின்மையால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் நாளை உலக எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும் என்பது முக்கியத் தீர்மானமாகும்.

எல்லோருக்கும் கல்வி தந்து இந்த நாட்டினை உயர்த்திட வேண்டும் என்றார் மகாகவி பாரதியார். கல்வி ஒன்றினால்தான் சமுதாயத்தில் நிலையான மாற்றத்தினைக் கொண்டு வர முடியும். முறையான கல்வியின் மூலம் ஏற்படுகின்ற மாற்றங்களே நிலையானவை என சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். அதனைக் கருத்தில்கொண்டே “எல்லோருக்கும் கல்வி’ என்ற நோக்கில் தேசிய / மாநில அளவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுதந்திரம் பெற்ற நாள் முதல் நம் நாட்டில் கல்விக்காக குறிப்பாக அடிப்படை எழுத்தறிவு அளிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திட்டங்களில் மிக முக்கியமானவை.

  • 1952 – சமுதாயக் கல்வித் திட்டம்;
  • 1967 – உழவர் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம்;
  • 1975 – பள்ளிசாராக் கல்வித் திட்டம்;
  • 1978 – தேசிய வயதுவந்தோர் கல்வித் திட்டம்;
  • 1985 – மக்கள் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம்;
  • 1988 – தேசிய எழுத்தறிவு இயக்கம்;
  • 1990 – முழு எழுத்தறிவு இயக்கம் (அல்லது) அறிவொளி இயக்கம்;
  • 1992 – தொடர்கல்வித் திட்டம்;
  • 1998 முதல் – வளர்கல்வித் திட்டம்.

இந்திய அளவில் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டோர் நிலை பெருகிக் கொண்டே வந்தாலும் பெண்களில் பெரும்பகுதியினர் இன்னமும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர்.

தேசிய அளவில் நூற்றுக்கு 53.66% பெண்களுக்கு மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும் என்றாலும் தமிழகத்தில் நூற்றுக்கு 64.43% பெண்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும் தமிழகத்தில் கிராமப்புறப் பெண்களில் நூற்றுக்கு 55.28% மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும். பெரும்பாலான மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட பெண்களின் மத்தியில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. மனித உரிமைகளில் முதன்மையானது கல்வி பெறும் உரிமை. கல்வி ஒன்றினால்தான் மனித உரிமையைக் காக்க முடியும்.

இதனைக் கருத்தில்கொண்டு பெண்களிடையே எழுத்தறிவுச் சதவீதத்தினை உயர்த்துவதற்கு மத்திய / மாநில அரசுகள் இணைந்து மகளிருக்கு என சிறப்பு மகளிர் எழுத்தறிவுத் திட்டத்தினைத் தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 2007க்குள் பெண்களின் எழுத்தறிவு சதவீதத்தை 75க்கு மேல் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் தீவிர முயற்சிகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. “அறிவு’ என்பது ஓர் ஆயுதம் என்கிறார் திருவள்ளுவர். “கல்லாதவன் வாழும் வீடு வெளிச்சமில்லா இருண்ட வீடு’ என்று கூறினார் பாரதிதாசன். அறியாமை இருளை அகற்றினால்தான் இந்தியா உண்மையான சுதந்திர நாடாக மாற முடியும்.

Posted in backward, Economic, Education, Functional Literacy, Learn, Literacy, Oppressed, Self Actualization, Self Actulaization, Self realization, Tamil | 2 Comments »