Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Lifesketch’ Category

Justice KG Balakrishnan sworn-in as Chief Justice of India

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் கே.ஜி. பாலகிருஷ்ணன்

புது தில்லி, ஜன. 15: உச்ச நீதிமன்றத்தின் 37-வது தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணன் (61) பதவியேற்றார்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவருக்குப் பதவிப் பிரமாணம், ரகசிய காப்புப் பிரமாணம் செய்துவைத்தார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்கும் முதல் தலித் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2010 மே 12-ம் தேதி வரை இப்பதவி வகிப்பார். சமீபத்திய ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அதிக ஆண்டுகள் பதவியில் இருக்கப் போவது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தில் பிறந்து, சட்டம் பயின்று வழக்கறிஞராகத் தொழில் தொடங்கி பிறகு படிப்படியாக உயர்ந்து மாவட்ட முன்சீப், உயர் நீதிமன்ற நீதிபதி, தமிழ்நாடு, குஜராத் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியானவர் பாலகிருஷ்ணன். நண்பர்கள் இவரை பாலா என்றே செல்லமாக அழைப்பர்.

பதவியேற்பு விழாவைக் காண அவருடைய தாயார் கே.எம். சாரதா சக்கர நாற்காலியில் வந்திருந்தார். பாலகிருஷ்ணனின் மனைவி நிர்மலாவும் உடன் இருந்தார்.

குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், ஏ.கே. அந்தோனி, லாலு பிரசாத், ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ், சுசீல்குமார் ஷிண்டே, ராம்விலாஸ் பாஸ்வான், மீரா குமார், கபில் சிபல், ஓய்வுபெறும் கே.என். சபர்வால் மற்றும் ஏற்கெனவே ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.என். சிங், ஏ.எம். அகமதி, ஏ.எஸ். ஆனந்த், வி.என். கரே, ஆர்.சி. லஹோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாழ்க்கைக் குறிப்பு: கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தின் தாலயோலபரம்பு கிராமத்தில் 1945 மே 12-ம் தேதி பிறந்தார். எர்ணாகுளம் மகாராஜா சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். கொச்சியில் 1968 மார்ச் 16-ம் தேதி வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு பணியைத் தொடங்கினார்.

1973 ஜனவரி 10-ல் கேரள நீதித்துறையில் முன்சீஃபாக நியமிக்கப்பட்டார். 1982 ஜூலை 23-ல் உதவி செஷன்ஸ் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். பிறகு கேரள உயர் நீதிமன்றத்தின் துணை பதிவாளராகப் பணியாற்றினார். 1985 செப்டம்பர் 26-ல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1986 ஜூலை 11-ல் நிரந்தரமாக்கப்பட்டார்.

குஜராத் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 1998 ஜூலை 16-ல் நியமிக்கப்பட்டார்.

பிறகு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 1999 செப்டம்பர் 9-ல் நியமிக்கப்பட்டார்.

நீதித்துறை- நாடாளுமன்றம் இடையே நெருங்கிய உறவு ஆபத்தானது: ஓய்வுபெறும் தலைமை நீதிபதி சபர்வால் கருத்து

புதுதில்லி, ஜன. 14: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் நீதித்துறைக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். நீதிமன்றங்கள் சுதந்திரமாகத் தீர்ப்பு வழங்குவதைப் பாதிக்கும் என்று கருத்துத் தெரிவித்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்கே. சபர்வால்.

சனிக்கிழமையுடன் பதவி ஓய்வு பெறும் நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் சபர்வால். நீதித்துறைக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டதற்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். விவரம்:

தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், பல பிரச்சினைகளைச் சந்தித்து தீர்வு கண்டிருக்கிறேன். திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன்.

நீதி வழங்குவதில் காலதாமதம் இருக்கக் கூடாது என்பது எனது கருத்து. அதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். கீழ் நீதிமன்றங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் பத்து ஆண்டுகள் கூட தேங்கிக் கிடக்கின்றன. இருபது ஆண்டுகளைக் கடந்து, நிலுவையில் உள்ள வழக்குகளும் இருக்கின்றன. அதனால், நீதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றோருக்கு எதிராக உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்குக் கூட கடிதம் எழுதியிருக்கிறேன்.

பிறழ் சாட்சிகளால் வழக்குகள் மேலும் காலதாமதமடைவதைத் தடுக்கும் வகையில், சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தங்களது முந்தைய நிலையிலிருந்து மாறும் சாட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

வாக்குமூலங்களை ஒளி, ஒலிப்பதிவு செய்ய கூடுதல் மாஜிஸ்திரேட்டுகள், நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்ட வேண்டும். நீதிமன்றங்களுக்கு போதிய கட்டமைப்பு வசதிகளைச் செய்துதர வேண்டும்.

நீதித்துறைக்கு நிதி சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான், நீதித்துறை முழுத்திறமையுடன் செயல்பட முடியும். வேறு துறைகளில் ஒதுக்கீட்டைக் குறைத்துக் கொண்டு, நீதித்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள கே.ஜி. பாலகிருஷ்ணன், மிகவும் திறமையான நீதிபதி. ஏற்கெனவே துவக்கப்பட்ட திட்டங்களை அவர் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.

நீதித்துறையில் கறுப்பு ஆடுகள்: நீதித்துறையில் ஊழல் இன்னொரு கவலை தரக்கூடிய விஷயம். எல்லோர் மீதும் களங்கம் இல்லாவிட்டாலும், ஒரு சில கறுப்பு ஆடுகளும் உள்ளன. அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

நீதித்துறைக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவதாகக் கருத்து நிலவுகிறது. ஒவ்வொரு துறையும் தங்கள் அதிகார வரம்புக்கு உள்பட்டு பணியாற்றினால் எந்த மோதலும் வர வாய்ப்பில்லை. தற்போதைய நிலையில் எந்த உரசலும் இருப்பதாக நான் கருதவில்லை.

நீதிபதிகள் நியமனத்தில் தற்போது வெளிப்படையான அணுகுமுறை உள்ளது.

ஊடகங்கள், ஊழலை அம்பலப்படுத்துவதில் தவறில்லை. அதே நேரத்தில், அது நீதிபதிகளின் தீர்ப்பைப் பாதிக்கும் வகையில் இருந்தால், அதைவிட மோசமானது ஏதும் இருக்க முடியாது.

எந்த ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் சட்ட உதவி மறுக்கப்படக்கூடாது. வழக்கறிஞர்கள் தனிப்பட்ட கருத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல், யாரும் சட்ட உதவி கிடைக்காமல் தனிமைப்படுத்தக்கூடாது என்ற உணர்வுடன் தொழிலை மட்டும் கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் சபர்வால்.

Posted in APJ Abdul Kalam, Biography, Biosketch, Chief Justice of India, Corruption, Dalit, election commission, Ernakulam, Government Law College, Judge, Judiciary, Jury, Justice, K J Gopinathan, Kerala, Kerala High Court, KG Balakrishnan, KM Saradha, Konakuppakattil Gopinathan Balakrishnan, Kottayam, Law, Legislature, Lifesketch, Newsmakers, Nirmala, Order, people, Supreme Court | Leave a Comment »

Ambedkar’s 50th Anniversary – Biosketch

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2006

சமூக நீதி சக்திகள் ஒருங்கிணைப்பு

இரா.சிசுபாலன்

“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.

டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.

1930-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட மக்களின் மாநாட்டுக்கு தலைமையேற்ற டாக்டர் அம்பேத்கர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிடுகையில், “அரசியல் அதிகாரம், நமது எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விடாது. நமது பிரச்சினை சமூக உயர்வில் அடங்கியுள்ளது. நமது கெட்ட பழக்க வழக்கங்களைக் கைவிட வேண்டும். நாம் கல்வி கற்க வேண்டும். எழுதப் படிக்கக் கற்றால் மட்டும் போதாது. பலர் உயர் கல்வி கற்றால்தான் சமுதாயம் முழுவதையும் மேலே இட்டுச் செல்ல முடியும். பிறரும் கௌரவிப்பார்கள்’ என்றார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.

இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே “புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.

வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951-ம் ஆண்டு “இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் காலமானார்.

தேச விடுதலைப் போராட்டத்திலும், விடுதலைக்குப் பின்னரும் சாதியக் கொடுமைகள் ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் சவாலாய் விளங்கி வருகின்றன. தேசிய இயக்கமும், திராவிட இயக்கமும், சமூக நீதி இயக்கங்களும், பொதுவுடமை இயக்கமும் ஒன்றுபட்டு நின்று, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது.

காலம் காலமாக சமூக ரீதியாகப் பின் தங்கியுள்ள மக்களைக் கைதூக்கி விடக் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு, அடித்தட்டு மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஓரளவுக்கு முன்னேற வாய்ப்பளித்துள்ளது. அதே சமயம் கல்லாமை இருளில் மூழ்கியுள்ள தலித் மக்கள், குறிப்பாக தலித் பெண்கள் இதனால் போதிய பலன் அடையவில்லை. இந்நிலையில் இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் நிலையில் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வரும் நீதிமன்றத் தீர்ப்புகளால் இதன் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. உலகமயமாக்கல் பின்னணியில் இட ஒதுக்கீடு மூலம் வேலை வாய்ப்பளிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், வேலை வாய்ப்பு பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகமயமாக்கல் எதிர்ப்புப் போராட்டத்தில் சமூக நீதிக்காக போராடும் சக்திகளும் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனம் தலித் மக்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனாலும், சட்ட உரிமைகள் மீறலும், மனித உரிமை மீறலும், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் தொடர் கதைகளாக உள்ளன. இதனை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்.

தலித் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், குடியிருப்புகள் என ஒருங்கிணைந்த வகையில் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை முழுமையாக அமலாக்கப்பட வேண்டும். இப்பகுதி மக்களுக்கென ஒதுக்கப்படும் நிதி முழுமையாக செலவழிக்கப் பட வேண்டும். இவர்களின் நில உரிமை காக்கப்பட வேண்டும். சமூக சமத்துவம் மலர பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுவே டாக்டர் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

(இன்று அம்பேத்கரின் 50-வது நினைவு நாள்).

Posted in Ambedkar, Babasaheb, Bioigraphy, Biosketch, British India, Buddhism, Casteism, Columbia University, Dalit, Dravidian Movement, Feminism, Freedom, Harijan, Hinduism, Human Rights, Independence, Law, Lifesketch, Mahathma, MK Gandhi, SC, SC/ST, Socialism, ST, Untouchability, Varnasramam | Leave a Comment »

Tribal Leader Shibu Soren – Biography

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

மகன் கொலைக்காக போராடிய தாய்: சிபுசோரன் சிக்கியது எப்படி?

புதுடெல்லி,நவ. 29- கொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் மத்திய மந்திரி சிபு சோரன் நேற்று உடனடியாக கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

63 வயதாகும் சிபுசோரனை கம்பி எண்ண வைத்திருக் கும் கொலை வழக்கு தீர்ப்பு 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளது. இதில் அவர் எப்படி சிக்கினார் என்ற விபரம் இப்போது தெரிய வந் துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

1993-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் நரசிம்மராவ் பெரும்பான்மை பலம் இல்லாமல் தவிக்க நேரிட்டது. எனவே ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக ஜார்க்கண்ட்முக்தி மோர்ச்சா கட்சித்தலைவர் சிபுசோரனுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது.

லஞ்சப்பணத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று சிபுசோரனின் உதவியாளர் சசிநாத் ஜா கேட்டார் .அவருக்கு ரூ.15லட்சம் சிபுசோரன் கொடுத்தார். அதன்பிறகு மீண்டும் பணம் வேண்டும் என்று சசிநாத் ஜா கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிபுசோரன் 1994-ம் ஆண்டு மே மாதம் சசிநாத் ஜாவை விருந்துக்கு அழைத்தார். பிறகு அவரை தெற்கு டெல்லியில்இருந்து ராஞ்சிக்கு கடத்திச் சென்றனர். அங்கு சசிநாத்ஜா கொலை செய்யப்பட்டார். இதுபற்றி சசிநாத்ஜா சகோதரர் அமர்நாத் ஜா பாராளுமன்ற போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடந்து வந்தது. ஆனால் அதில் வேகம் இல்லாமல் இருந்தது.

இதையடுத்து சசிநாத்ஜா தாய் பிரியம்வதாதேவி டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் அவர் தன் மகன் கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடப்பட்டது.

சி.பி.ஐ. தீவிரவிசாரணை நடத்தி சசிநாத்ஜா கொலை சதி திட்டங்களை வெளிச்சத் துக்கு கொண்டு வந்தது. சிபுசோரனின் தூண்டுதல் பேரில் திட்டமிட்டு கொலை நடந்து இருப்பதையும் கண்டு பிடித்தது. அதோடு சசிநாத்ஜா பிணத்தை தோண்டி எடுத்து சிபிஐ விசாரித்தது.

சசிநாத்ஜா எலும்புக்கூடு பல்வேறு நிலைகளில் டிஎன்ஏ சோதனை மூலம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மண்டைஓடு “சூப்பர் இம்போசிங்” முறைப்படி பரிசோதிக்கப்பட்டது. அப்போது அந்த மண்டை ஓடு சசிநாத் ஜா உடையது என்பது உறுதியானது.

சசிநாத்ஜாவின் எலும்புக்கூடுகளில் நடந்த அதிநுட்ப தடயவியல் சோதனைகள் மூலம் அவர் படுகொலை ஆனதும் உறுதியானது. மண்டை ஓடு, எலும்புக்கூடு ஆகிய இரு சோதனைகளும் சிபுசோரன் சிக்க முக்கிய கார ணமாக அமைந்தது.

இந்த விபரங்களை சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டு கோர்ட்டில் ஒப்படைத்தது. கொலைக்கான வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சிபுசோரனால் தப்ப இயல வில்லை.

மொத்தம் 47 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்கள் அளித்த சாட்சியங்களும் சி.பி.ஐ. விசாரணை முடிவுகளும் முழு அளவில் ஒத்துப்போனது. இதனால் சிபுசோரன் மீது விழுந்த பிடி இறுகியது.

இந்த வழக்கில்

  • சிபு சோரன்,
  • நந்தகிஷோர்,
  • அஜய்குமார்மேத்தா,
  • சைலேந்திரபட்டாச்சார்யா,
  • பசுபதிநாத், மேத்தா ஆகிய 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியது. இவர்கள் 5 பேரும் நேற்றே கோர்ட்டு உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டனர்.

சிபுசோரனுக்கும் மற்றும் 4பேருக்கும் என்ன தண்டனை வழங்கப்படும் என்பது நாளை தெரிய வரும். அவருக்கு ஆயுள்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“குருஜி” சிபுசோரனின் எழுச்சியும்-வீழ்ச்சியும் 12 ஆண்டுகள் காட்டில் வசித்தவர்

“கொலையாளி” என்று நிரூபிக்கப்பட்டதன் மூலம் இந்திய அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியையும், தலை குனிவையும் ஏற்படுத்தி விட் டார் சிபுசோரன்.

வட மாநில அரசியலில் ரவுடியிசம் என்பது அதிகம்… கொலை, ஆள் கடத்தல் என்பதெல்லாம் அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு “சும்மா” பொரி கடலை சாப் பிடுவது மாதிரி சாதாரண சமாச்சாரம்.

ஆனால் ஒரு கட்சிக்கு தலை வராக இருப்பவர் கொலை, ஆள் கடத்தல், சொத்துக் குவிப்பு என பலதரப்பட்ட வழக்குகளில் சிக்கியது இது வரை கேள்விப்படாத ஒன்று. அந்த சிறுமையை ஏற்படுத்தி இருப்பவர் சிபுசோரன்.

1942ம் ஆண்டு இவர் பீகார் மாநிலம் கஜிரிபாத் அருகே உள்ள சந்தல் எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆசிரியர்கள் மலைவாழ் இனத்தை சேர்ந்த வர்கள்.

சிபுசோரனுக்கு 10 வயது இருக்கும் போது அவர் தந்தை இறந்தார். இது அவரது வாழ்க்கைப் பாதையை புரட் டிப் போட்டு விட்டது.பணக்காரர்கள், ஜமீன் தாரர்களுக்கு எதிராக இவர் ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினார். 1952-ம் ஆண்டு அவரது இந்த போராட் டம் தொடங்கியது.

ஜார்க்கண்ட் இன மலை வாழ் மக்களின் முன்னேற்றத் துக்காக போராடுவதாக இவர் அறிவித்தார். ஜமீன்தாரர்களை தாக்கி விட்டு காட்டுக்குள் ஓடி விடுவார். 1970-ம் ஆண்டு வரை அவர் வாழ்க்கை இப் படித் தான் கழிந்தது.

அதன் பிறகு ஜார்க்கண்ட் இன மக்களுக்காக ஒரு அமைப்பை தோற்றுவிக்க வேண்டும் என்று சிபுசோர னுக்கு தோன்றியது. 1973-ம் ஆண்டு அவர் வக்கீல் வினோத் பிகாரி மகோதா என்பவருடன் சேர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) எனும் அமைப்பை தொடங்கினார். பிறகு இது அரசியல் கட்சியாக மாறியது.

இந்த நிலையில் ஜே.எம்.எம்.மின் முக்கிய தலைவராக திகழ்ந்த மகோதா படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகே சிபுசோரனின் நடவடிக்கைகள் முழுமையாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது.

ஜார்க்கண்ட் மக்களுக்காக அவர் பேரணி போன்றவை நடத்தி மக்கள் கவனத்தை கவர்ந்தார். இதனால் பீகா ரில் அவர் வளர்ச்சி தடுக்க முடியாதபடி இருந்தது. மலை வாழ் இன மக்கள் இவரை “குருஜி” என்று அழைத் தனர்.

பெரும்பாலான மலைவாழ் இன மக்கள் வீடுகளில் இவரது படத்தை கடவுள் படங்களுக்கு இÛணையாக வைத்து பூஜித்தனர். இதனால் ஜார்க்கண்டில் இவர் அசைக்க முடி யாத சக்தியாக மாறினார். இவரை எதிர்த்தவர்கள் கடத் தப்பட்டனர். கொல்லப்பட் டனர்.

சரியோ, தவறோ இவரது பெயர் பரபரப்பாக நாடெங் கும் பேசப்பட்டது. 1980ம் ஆண்டு இவரும் இவரது ஆதரவாளர்களும் பாராளு மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது. அதன் பிறகு சிபுசோரனின் அரசியல் ஆவேசமும் ஆதிக்கமும் அதி கரித்து விட்டது. அவரது தகாத செயல் களுக்கு சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாததால் அவர் இதுவரை தப்பித்து வந்தார். ஆனாலும் அவர் மீது தற்போதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதில் 2 கொலை வழக்கு கள் சிபுசோரனின் மறுபக்க வாழ்க்கையை தோலுரித்து உலகிற்கு காட்டி விட்டது. 1975-ம் ஆண்டு சிருடி என்ப வரை கொலை செய்த வழக் கில் இவர் சிக்கினார். மந்திரி பதவியையும் ராஜினாமா செய்தார். ஆனால் தண்ட னையில் இருந்து தப்பி விட் டார்.என்றாலும் 1994-ல் தன் உதவியாளர் சசிநாத் ஜாவை கொலை செய்த வழக் கில் அவர் வசமாக சிக்கிக் கொண்டார். சி.பி.ஐ. அதிகா ரிகள் மண்டை ஓட்டை வைத்து நடத்திய திறமையான ஆய்வு சிபுசோரனுக்கு “ஆப்பு” அடித்து விட்டது.

சிபுசோரன் பற்றிய நிஜமுகம் தெரிய வந்ததும் ஜார்க்கண்ட் மக்களும் அவரை வெறுக்கத் தொடங்கி விட்டனர்.
குருஜி என்று மரியாதையாக அழைத்து வந்த மக்கள் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அவரை குப்புற தள்ளி விட்டனர். தன் மகனை எப்படி யாவது ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ஆக்கி விட வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் ஜார்க்கண்ட் மக்கள் அவர் மகனை வெற்றி பெற கூட செய்யவில்லை.

இந்த வீழ்ச்சிக்கிடையே தற்போது சிபுசோரன் சிறைக் குள் தள்ளப்பட்டுள்ளார். அரசியலில் இனி அவர் கதை முடிந்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

கொலைகாரன் என்ற தீர்ப்பு காரணமாக பதவி விலகிய முதல் மத்திய மந்திரி என்ற கறை முத்திரையை அவர் பதித்துள்ளார். துடைக்க முடியாத களங்க முத்தி ரையால் சிபுசோரன் மீண்டு எழ முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

நாளை (வியாழக்கிழமை) டெல்லி கோர்ட்டு வழங்கும் தண்டனை தான் சிபுசோரனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். எனவே அந்த தீர்ப்பை ஜார்க்கண்ட் மாநில மக்கள் படபடப்புடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Posted in Bihar, Biography, Biosketch, CBI, Corruption, Jha, JMM, Lifesketch, Memoirs, Murder, Narasimha Rao, Ranchi, Secretary, Shibu Soren, Sibu Soren | Leave a Comment »

G Varalakshmi – Biography

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்தார்: 9 வயதில் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி மரணம்

சென்னை, நவ. 27- பழம்பெரும் நடிகை ஜி.வர லட்சுமி சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. வரலட்சுமி ஆந்திராவை சேர்ந்தவர். அங்குள்ள பிரகாசம் மாவட்டத்தில் 27.9.1927-ல் பிறந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 80 படங்கள் நடித்துள்ளார். இவரது முதல் படம் பக்தபிரகலாதா. தனது 9வது வயதில் குழந்தை நட்சத் திரமாக இதில் அறிமுகமானார். கதாநாயகியாக நடித்த முதல் படம் துரோகி. இப்படத்தில் எல்.வி.பிரசாத் கதாநாயகனாக நடித்தார்.

தமிழில் குழந்தையும் தெய்வ மும், நான் பெற்ற செல் வம், அரிச்சந்திரா ஆகிய படங்க ளில் நடித்துள்ளார். குலேபகா வலியில் எம்.ஜி.ஆருக்கு இவர் ஜோடி. அரிச்சந்திராவில் சிவாஜி ஜோடியாக நடித் தார். அரிச்சந்திரா படம் வரலட்சுமியின் சொந்த படம். இது `சென்சார்’ பிரச்சினையில் சிக்கி ரொம்ப நாள் ரிலீசாகாமல் இருந்தது. ரிலீசான பிறகும் சரியாக ஓடவில்லை.

இவர் நடித்த `அண்ணி’ படம் தமிழ், தெலுங்கில் தயாரானது. வளர்ப்புத்தாய் கேரக்டரில் இதில் நடித்தார். இப்படம் இரு மொழிகளில் அதிக நாட்கள் ஓடி சக்கை போடு போட்டது.

வரலட்சுமி இளம் வயதில் மல்யுத்த போட்டி பிரியையாக இருந்தார். அந்த காலத்தில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தினமும் மல்யுத்த போட்டிகள் நடக்கும்.

இப்போட்டியை காண மைதானம் நிரம்பி வழியுமாம். இங்கு நடைபெறும் தாரா சிங், கிங்காங் மல்யுத்த சண்டைக்கு தனி மவுசு உண்டு. இந்த போட்டிகளை காண வரலட்சுமி தினமும் செல்வாராம். தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவும் செய்துள்ளார்.

பிரபல டைரக்டர் கே.எஸ்.பிரகாஷ்ராவை திருமணம் செய்து கொண்டார். பிரகாஷ் ராவ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத் தக்கது.

குழந்தை நட்சத்திரம், கதா நாயகி, வில்லி கேரக்டர் களில் நடித்த வரலட்சுமியின் கடைசி படம் வேதமனசுலு. அந்த படத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.

இவரது மகன் பிரகாஷ் பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 30வது வயதில் அவர் மரணம் அடைந்தார்.

கடைசி காலத்தில் பெசன்ட் நகரில் உள்ள மகள் கனகதுர்கா வீட்டில் தங்கி இருந்தார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று மரணம் அடைந்தார்.

பெசன்ட் நகர் மயானத்தில் இன்று மாலை உடல் தகனம் நடக்கிறது.

Posted in Andhra Pradesh, AP, Biosketch, G Varalakshmi, Kollywood, Lifesketch, Memoirs, Tamil Actress, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Telugu Actress, Telugu Cinema | Leave a Comment »

G Varalakshmi passes away – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

பழம்பெரும் நடிகை வரலட்சுமி காலமானார்

சென்னை, நவ. 27 உடல்நலக் குறைவு காரணமாக பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகை ஜி. வரலட்சுமி (80) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மகள் கனகதுர்கா வீட்டில் அவர் காலமானார்.

  • அண்ணி,
  • குலேபகாவலி,
  • நான் பெற்ற பிள்ளை,
  • நல்ல தங்காள்,
  • அரிச்சந்திரா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவரது கணவர் கே.எஸ். பிரகாஷ் ராவ் “வசந்த மாளிகை’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Anjali, Biosketch, Lifesketch, Memoirs, Tamil Actress, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Telugu Cinema, Tollywood, Varalakshmi | 1 Comment »

Vallikkannan Memoirs – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2006

“நவீன இலக்கிய ரிஷி’

சு. நயினார்

எண்ணத்தையும் எழுத்தையும் உயர்வாகப் போற்றிய வல்லிக்கண்ணன் எழுதுவதும் சொல்வதும் போலவே இறுதிவரை வாழ்ந்தவர். இன்றைய ஆரவாரமிக்க உலகில் ஆடாமல் அமைதியான முறையில் ஓர் எழுத்துப் புரட்சியைத் தோற்றுவித்த படிப்பாளியும் படைப்பாளியுமாவார். இவர் சிரிக்காமல் சிந்தித்து தரமிக்க இலக்கியங்களைத் தமிழுலகிற்கு வழங்கியவர். வல்லிக்கண்ணன் தமிழ் இலக்கிய வகைமைகள் பலவற்றினுள் – வசனகவிதை, புதுக்கவிதை, நாடகம், சிறுகதை, புதினம், வாழ்க்கை, இலக்கிய வரலாறு, இதழியல், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம், கட்டுரை – தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தடம் பதித்தவர்.

கொள்கை – கோட்பாட்டிலிருந்து விலகாத வல்லிக்கண்ணன் எழுபத்தைந்து ஆண்டுகளாக இலக்கிய வாழ்வை மேற்கொண்ட “நவீன இலக்கியரிஷி’. இவர் மண்ணின் மனத்தைப் படைப்புகளாக்கினார். புதுக்கவிதை முன்னோடிகள் நால்வருள் ஒருவரான வல்லிக்கண்ணன், அறிவாளிகள் எதிர்பார்க்கும் உன்னதமான படைப்புகள் பலப்பல படைத்தவர். பணத்தையும் புகழையும் விரும்பாதவர். பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்குவதில் சமூகப் பொறுப்பாளியாகச் செயல்பட்ட இவரை எந்த இயக்கமும் ஒதுக்கியதில்லை எனலாம்.

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய மேம்பாட்டிற்கு இவர் செய்திருக்கும் பணி வரலாற்றில் சுட்டத்தக்கன. சாதி, மத, இன உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட வல்லிக்கண்ணன் எந்தவொரு நச்சு – நசிவு இயக்கத்திற்காக நின்று இயங்கியதும் – இயக்கியதும் இல்லை. இவர் எழுத்துச் செல்வராக இலக்கிய ரிஷியாக, கவிஞராக, சிறுகதை – புதின ஆசிரியராக, கட்டுரையாளராக, விமர்சகராக, இதழாசிரியராக, வரலாற்றாய்வாளராக, ஒப்பீட்டாளராக, மொழி பெயர்ப்பாளராக… பன்முகத் தன்மையில் தமிழ் இலக்கியப் போக்கினை உணர்த்திய விடிவெள்ளி! பேராண்மை மிக்கவர்! நல்ல நினைவாற்றல் மிக்க இவர் சிறு பத்திரிகைகளின் “தகவல் களஞ்சியம்’ எனில் மிகையன்று! ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு எழுதினாரில்லை! நடப்பியல் உண்மைகளை நயமாக எடுத்துக்காட்டவும் இவர் தயங்கினாரில்லை. நான்கு தலைமுறை எழுத்தாளர்களின் நிலைப்பாடுகளுள் “”வல்லிக்கண்ணனின் ஆளுமை வெளிப்பாடும் விலகல் மனோபாவமும்’ பலருக்கு வியப்பளிக்கும்.

இவருக்கு எவற்றினுள் பற்று ஏற்பட்டதோ அவை இவரது வெளிப்பாடாக மலர்ந்தன. புதுமை இலக்கியம் படைக்கும் எழுத்து, இளம் எழுத்தாளர்களை அரவணைப்பது, வரலாற்று நோக்கு (புதுக்கவிதை, சிற்றிதழ், வாசகர், விமர்சகர்கள் உரைநடை), மறுமலர்ச்சிப்போக்கு, எளிமையை விரும்புதல் போல்வனவற்றுடன் மிகுதியான பற்றுக் கொண்டவர்.

வல்லிக்கண்ணனின் பற்றின்மை: விளம்பரப்புகழ், பணம், மது, குடும்பவாழ்வு, அரசியல் சார்பு, மதம், திரையுலக வாழ்வு, ஜனரஞ்சகப் பத்திரிகை போன்றவற்றில் பற்றில்லாமல் விலகி இருந்த நிலை எண்ணற்குரியது; எவரிடத்தும் இத்தனைப் பற்றின்மைகளைக் காண்பதரிது!

பள்ளியிறுதி வகுப்பை முடித்து 1937-ஆம் ஆண்டில் அரசுப் பணியில் சேர்ந்த இவருக்கு எழுத முடியாத சூழல். அவ்வேலையை உதறித் தள்ளிவிட்டு எழுத்தையே வாழ்க்கையாக்கிக் கொண்ட வல்லிக்கண்ணன் ஒருபோதும் பிற்போக்கு இலக்கியவாதிகளின் தாக்கங்களுக்குட்பட்டு பணம் சம்பாதிக்க வேண்டும்; புகழ் பெற வேண்டும்; வசதியாக வாழ வேண்டும் என்று எண்ணியதோ – செயல்பட்டதோ இல்லை. தனிமரமாக நின்ற வல்லிக்கண்ணன் வறுமையிலே உழன்றாலும் செம்மையாக வாழ்ந்தார். இவர் யாரிடமும் கையேந்தாமல் கொள்கைப் பிடிப்புடன் – வைராக்கியத்துடன் வாழ்ந்த இலக்கியப்பித்தன். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் இவரும் இடம் பெறத்தக்கவராவார். இவரது முதல் பாகச் சுயசரிதம் பலருக்குப் பயனளிக்கும். இராசவல்லிபுரத்தில் 12-11-1920-இல் பிறந்த வல்லிக்கண்ணன் 10-11-2006-இல் இறந்துவிட்டார். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டி, அவரிட்டுச் சென்ற பணியினைத் தொடருவோமாக.

Posted in Anjali, Biosketch, Lifesketch, Memoirs, Tamil Literature, Vallikkannan | Leave a Comment »

EV Saroja – Lifesketch

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

ஈ.வி.சரோஜா!

எஸ்.விஜயன்


தமிழ் திரைப்பட ரசிகர்களின் முன்னாள் கனவு கன்னியரில் ஒருவர் நடிகை ஈ.வி. சரோஜா. கடந்த நவ., 3, ’06 அன்று காலமான அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி, “தஞ்சை மாவட்டத்தில் நான் வாழ்ந்த திருவாரூருக்கு அருகில் உள்ள எண்கண் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஈ.வி.சரோஜா!’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஐந்தாம் வகுப்பு வரை படித்த சரோஜா, தன் ஆறாவது வயதிலேயே நடனம் பயின்று அரங்கேற்றம் செய்தவர். 1948ல் தன் 13வது வயதில் சென்னை வந்தவர், 1952ல், தன் 15வது வயதில் “என் தங்கை’ யில் அறிமுகமானார். அதில், அவர் எம்.ஜி. ஆருக்கு தங்கையாக நடித்தார். இதற்கு பின் சரோஜா நடனத்திற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களாகவே பார்த்து நடித்தார். குலேபகாவலி சந்திர பாபு, காத்தவராயன், மதுரை வீரன், (“வாங்க… மச்சான் வாங்க வந்து வழியைப் பார்த்து போங்க…’ என்ற பாடல் பெரிதும் பிரபலம்) புதுமைப் பித்தன், படிக்காத மேதை (சிவாஜிக்கு தங்கை), பாக்யலட்சுமி (ஜெமினி ஜோடி) பிள்ளைக்கனியமுது மற்றும் மணப்பந்தல் (எஸ்.எஸ். ஆர்.ஜோடி) நல்லவன் வாழ்வான் (நம்பியார் ஜோடி)

“வீரத்திருமகன்’ (புரட்சிப் பெண்ணாக வருவார். “கேட்டது கிடைக்கும்… “பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…’ ஆகிய பாடல்களில் வரும் சரோஜாவின் நடனம் பிரபலம்) ஆகிய தமிழ்ப் படங்களிலும், தெலுங்கில் 30 படங்களிலும், கன்னடம், சிங்களம் (வட இந்திய நடனக் கலைஞர் கோபி கிருஷ்ணா நடித்த படம்) ஆகிய மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். நாகேஸ்வர ராவுடன் மட்டும் 10 படங்களில் நடித்திருக்கும் சரோஜா, “இத்ரு மித்ரலு’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

மீன்களை போன்ற கண்கள் என்பார்களே… அது ஈ.வி. சரோஜாவுக்கு இருந்தது. அவரது கண் அசைவுக்கே, அதிலும் புருவங்களை அவர் ஏற்றி இறக்கும் போது ரசிகர்களெல்லாம் ஆர்ப்பரிப்பர். நடனத்தில் அவரது வேகம் அபாரமானது. “குலேபகாவலி’யில், “குல்லா போட்ட நவாப்பு… செல்லாதுங்க ஜவாப்பு…’ என்ற பாடலில் சந்திர பாபுவுடன் அவரது நடன அசைவுகள் ரசிகர்களையும் ஆடச் செய்யும். எத்தகைய நடனப் பாடல் என்றாலும் அதில் சரோஜாவின் நடன அசைவுகளில் துளியும் விரசம் இருக்காது.


“உத்தம புத்திரன்’ படத்தில் சிவாஜியுடன், “யாரடி நீ மோகினி…’ பாடலில் ஹெலன் நடனம் ஆடியிருப்பார். அந்தப் பாடலில் நடிக்க முதல் அழைப்பு வந்தது ஈ.வி. சரோஜாவுக்குத் தான். அதில், ஆடை கொஞ்சம் குறைந்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட போது, மறுத்து விட்டார் சரோஜா.

சரோஜா நல்ல அழகி என்பதால் அவருக்கு கதாநாயகியாக நடிக்க ஆரம்பம் முதலே வாய்ப்புகள் வந்தன. ஆனால், பெரும்பாலும் அவற்றை தவிர்த்து வந்திருக்கிறார்.

கதாநாயகர்களுடன் டூயட் பாடுவது, நெருங்கி நடிப்பதிலெல்லாம் அவருக்கு உடன்பாடில்லை. அவரிடம் இருந்த கூச்ச சுபாவமும் அதற்கு ஒரு காரணம், அவர் கடைசியாக நடித்த படம், “கொடுத்து வைத்தவள்!’ அவரது சகோதரர் ஈ.வி. ராஜன், ஈ.வி.ஆர்., பிக்சர்ஸ் என்ற பேனரில் தயாரித்த இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். தன் சகோதரருக்காக எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுக்கிறார் என்பதால் நாயகியாக நடிக்க சம்மதித்தார் சரோஜா.

உலகமெங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை மேடையில் நடத்தியிருக்கிறார் சரோஜா. இயக்குனரும், டி.ஆர்.ராஜகுமாரியின் தம்பியுமான டி.ஆர்.ராமண்ணாவை திருமணம் செய்து கொண்டார்.

பொது நிகழ்ச்சிகளில் சரோஜா பங்கேற்று வந்தாலும், மேடையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாமல் கடைசி வரை தவிர்த்தே வந்திருக்கிறார்.

Posted in Anjali, Biosketch, EV Saroja, Kollywood, Lifesketch, Madurai Veeran, Memoirs, MGR, Sivaji, Tamil Cinema, Tamil Movies, TR Rajakumari, TR Ramanna | Leave a Comment »

K.P. Kottarakara passes away – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

பழம்பெரும் தயாரிப்பாளர் கே.பி.கொட்டாரக்கரா மரணம்

சென்னை, நவ.21 பழம்பெரும் சினிமா தயாரிப்பாளர் கே.பி.கொட்டாரக்கரா (85) ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

கே.பி.கொட்டாரக்கரா சிவாஜிகணேசன் நடித்த “பாசமலர்’, “ஆண்டவன் கட்டளை‘ படங்களுக்கு கதை எழுதியவர்.

எம்.ஜி.ஆர். நடித்த “பரிசு’, கமல்ஹாசன் மலையாளத்தில் நடித்த “மதுர சொப்னம்’, விஜயகாந்த் நடித்த “நீதி பிழைத்தது’ உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் சுமார் 47 படங்களைத் தயாரித்தவர்.

மலையாளத்தில் மட்டும் மறைந்த பிரபல நடிகர் பிரேம் நசீரை வைத்து 17 படங்கள் தயாரித்தவர். கே.பி.கொட்டாரக்கராவுக்கு சாரதா என்ற மனைவியும், கணேஷ், ரவி என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

கொட்டாரக்கரா உடலுக்கு முதல்வர் கருணாநிதி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கேஆர்.ஜி., தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சென்னை அண்ணாநகரில் உள்ள மின்சார மயானத்தில் கே.பி.கொட்டாரக்கராவின் உடல் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.

Posted in Aandavan Kattalai, Biosketch, Kottaarakara, KP Kottarakara, Lifesketch, Memoir, Paasa Malar | Leave a Comment »

‘Oli’ Yuga Chirpi passes away – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

காலமானார் கவிஞர் யுகசிற்பி

நாகப்பட்டினம், நவ. 20: கவிஞர் யுகசிற்பி (சுரேந்திரன்) (53) நாகப்பட்டினத்தில் மாரடைப்பால் சனிக்கிழமை இரவு காலமானார்.

  • மின்னல் விதைகள்,
  • ரதி சம்ஹாரம்,
  • எழுதாச் சிலம்பு,
  • காலச்சிறகுகள் ஆகிய கவிதை நூல்களும்
  • உயிர்வேலி சிறுகதை நூலும்,
  • இனி ஒரு விதி செய்வோம்,
  • இந்திய வாழ்க்கையும் ஆன்மிகமும்,
  • தியான பூமி ஆகிய கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் புலமைமிக்கவர். ஆன்மிகப் பொதுவுடைமை சார்ந்த கருத்தியல் கொண்ட “ஒளி‘ என்னும் இதழை நடத்தி வந்தார்.

இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Posted in Anjali, Biosketch, Lifesketch, Memoirs, Oli, Surendiran, Tamil Literature, Thamizh, Yugachirpi | Leave a Comment »

Puthucehrry’s First CM – Pakkiri Saami Pillai

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

சொந்தச் செலவில் இலவச அரிசி வழங்கிய முதல்வர்

சோ. முருகேசன்

முதன்முதலில் ஏழைகளுக்கு இலவச அரிசியைத் தனது சொந்தச் செலவில் வழங்கினார் ஒரு முதல்வர். அவர் புதுவையின் முதலாவது முதலமைச்சரான சா. பக்கிரிசாமிப்பிள்ளை. 1955இல் ஏகமனதாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1906ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி காரைக்காலில் பிறந்தவர்.

பிரெஞ்சிந்திய விடுதலைக்குப்பின், 1955 ஜூலையில் நடந்த புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களையும், மக்கள் முன்னணி 21 இடங்களையும் கைப்பற்றின. பின்னர் சில உறுப்பினர்கள் அணி மாறியதன் விளைவாக இறுதியாகக் கட்சிகளின் பலம் – காங்கிரûஸ ஆதரித்து 20 உறுப்பினர்கள், மக்கள் முன்னணியை ஆதரித்து 19 உறுப்பினர்கள் என்ற நிலை ஏற்பட்டது.

அப்போது புதுச்சேரியில் கூடிய சட்டசபை காங்கிரஸ் கமிட்டி சா. பக்கிரிசாமிப்பிள்ளையைக் கட்சித் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது. புதுச்சேரி மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பிள்ளையவர்கள் ஆகஸ்ட் 13இல் பதவியேற்றார். அவருடன் ஐவர் அமைச்சராகப் பணியேற்றனர் –

  1. எதுவார் குபேர்,
  2. தியாகராஜ நாயக்கர்,
  3. சந்திரசேகர செட்டியார்,
  4. முகமது யூசுபு,
  5. எஸ். தட்சணாமூர்த்தி முதலியார் ஆகியோர்.

1955இல் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கிரிசாமிப்பிள்ளை 1946ஆம் ஆண்டு முதல், காரைக்கால் கொம்யூன் மேயராகத் தொடர்ந்து பணியாற்றி மக்களிடம் பெயரும் புகழும் பெற்றவராவார்.

“”ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கலாம்” என்ற எண்ணமே நாட்டில் ஏற்படாத காலத்தில், மழைக்காலங்களில் பசியால் அவதியுறும் ஏழை மக்களுக்கு இலவசமாக இவரது சொந்தச் செலவில் அரிசி விநியோகம் செய்து மக்களின் உள்ளத்தில் இடம்பெற்றவர் பிள்ளையவர்கள். தீபாவளியின்போது ஏழைகளுக்கு இலவச வேட்டி, புடவை வழங்குதல் இவரது வாழ்க்கையில் ஓர் அங்கம்.

இதேபோன்று ஆண்டுதோறும் இவர் நடத்தும் கிருஷ்ணஜெயந்தி விழாவின்போது, அரண்மனை போன்ற தனது வீட்டின் உள்ளே ஏழை, பணக்காரர், உயர் சாதி, தாழ்ந்த சாதி என்ற எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவருக்கும், நெய் சொட்டச் சொட்ட சர்க்கரைப் பொங்கல் சமபந்தி போஜனம் நடத்தியவர் பிள்ளையவர்கள்.

1947இல் நடந்த சேனாத்தேர் (செனட்டர்) தேர்தலில் பக்கிரிசாமிப்பிள்ளை வெற்றி பெற்று, பாரீசிலுள்ள மேல்சபை உறுப்பினராக 1954 வரை சிறந்த பணியாற்றியுள்ளார். இவர் சேனாத்தேராக இருந்த காலத்தில் பிரெஞ்சிந்தியாவின் அரசியலமைப்பு சட்டங்களில் பல மக்களாட்சிக் கொள்கைகளைப் புகுத்தியுள்ளார்.

இவரது சேனாத்தேர் பதவிக் காலத்தில்தான், பிரெஞ்சிந்திய விடுதலை பற்றிய பேச்சுவார்த்தைகள் இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே பாரீசில் நடைபெற்றன. அமைதியான முறையில் “”கத்தியின்றி ரத்தமின்றி”ப் பிரெஞ்சிந்தியா புதுச்சேரி மாநிலமாக மாறியது இவரது இராஜதந்திரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. இக்காலக்கட்டத்தில், பண்டித நேருவின் நெருங்கிய தொடர்பையும், அவரது நன்மதிப்பையும் பெற்றார்.

பிள்ளையவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் மக்கள் மறக்க முடியாத பல செயல்கள் செய்துள்ளார். அவைகளில் “”எல்லோருக்கும் கல்வி” என்ற அடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள எல்லா குக்கிராமங்களிலும், சரியான போக்குவரத்து இல்லாத எல்லா சிற்றூர்களிலும் நூற்றுக்கணக்கில் “”ஓராசிரியர் பள்ளிகள்” புதுச்சேரியிலும், காரைக்காலிலும், மாஹேயிலும், ஏனாமிலும் தொடங்கப்பட்டன. இந்த ஓராசிரியர் பள்ளிகள் இன்று உயர்நிலைப் பள்ளிகளாகவும், மேனிலைப் பள்ளிகளாகவும் காட்சியளிக்கின்றன!

பிள்ளையவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடந்த மற்றொரு மாபெரும் சிறப்பு நிகழ்ச்சி, பாரதப் பிரதமர் பண்டித நேரு 1955 அக்டோபர் 3இல் காரைக்காலுக்கு வருகை தந்ததாகும். அன்று மாலை தோமாஸ் பிள்ளைத் திடலில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய பண்டித நேரு, இம்மாநில வளர்ச்சிக்கும், மக்கள் மகிழ்ச்சிக்கும் நடுவண் அரசு அனைத்தையும் செய்யும் என்று உறுதியளித்தார். இம் மாநிலத்தில் பன்னெடுங்காலமாக நிலவி வரும் பிரெஞ்சு மொழி மற்றும் பண்பாடு, மாநிலத்தில் நிலவி வந்த தனிச்சலுகைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என முழக்கமிட்டார்.

புகழேணியின் உச்சியில் வீற்றிருந்த பக்கிரிசாமிப்பிள்ளை, 1956 ஜனவரி 13இல், நகராட்சி மன்றத்தில் தனது கடமைகளை ஆற்றிவிட்டு வீடு திரும்பியவர் திடீரென மாரடைப்பால் பகல் 1.30 மணியளவில் காலமானார்.

(இன்று பிள்ளையவர்களின் நூற்றாண்டு நாள்.)

Posted in Biography, Biosketch, CM, Colony, Congress, France, French India, Lifesketch, Makkal Munnani, Memoir, Pakkiri Saami Pillai, Pondicherry, Puthucehrry, Senator, Tamil | 1 Comment »

Jeeva – Lifesketch

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 21, 2006

ஜீவா எனும் குறிஞ்சிப்பூ

இரா. நாறும்பூநாதன்

“”ஜீவா உங்களுக்கு என்ன சொத்து இருக்கும்?” காரைக்குடி வந்த தேசப்பிதா காந்திஜி, ராஜாஜியை அழைத்துக்கொண்டு, சிராவயலில் இருந்து காந்தி ஆசிரமத்தை நடத்திக் கொண்டிருந்த 20 வயது இளைஞன் ஜீவாவைப் பார்க்கச் சென்றபோது கேட்ட கேள்வி இது.

“”சொத்தா.. அது கோடிக்கணக்கில் உள்ளது…” என்று சிரித்தார் ஜீவா.

“”புரியும்படி சொல்லுங்கள்…” என்றார் காந்திஜி.

“”இந்தியாதான் எனது சொத்து” என்று கூறினார் ஜீவா. “”இல்லை ஜீவா! நீங்கள்தான் இந்தியாவின் சொத்து…” நெஞ்சாரப் பாராட்டினார் காந்திஜி.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்படும்போது, செய்தித்தாள்களைப் படிக்கும் இளைஞர்கள் ஆவேசப்படுகிறார்கள். சாதாரணப் பொதுமக்கள் பொருமுகிறார்கள். “அரசியலே சாக்கடை’ என்று வியாக்யானம் செய்கிறார்கள். “இந்தியாவின் சொத்து’ என்று காந்தியடிகளால் புகழப்பட்ட ஜீவாவும் இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர்தான்!

சென்னை வீதியில் கையில் ஒரு துணிப்பையுடன் வேகவேகமாய் நடந்து செல்லும் ஜீவாவைப் பார்த்து எதிரே வந்த நண்பர் கேட்டார், “”தோழர் ஜீவா! ஏன் நடந்து செல்கிறீர்கள்?”

“”பஸ்ஸில் செல்வதற்கு காசில்லை. அதான் நடந்து செல்கிறேன்” என்றார் ஜீவா.

நண்பர் விடவில்லை. “”கையிலே என்ன வைத்திருக்கிறீர்கள்?”

“”அதுவா? தோழர்கள் கொடுத்த கட்சி நிதி. கட்சி அலுவலகத்திற்குத்தான் கொண்டு போகிறேன்” என்றார் ஜீவா.

“”பஸ்ஸிற்குத் தேவையான காசை அதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்றார் நண்பர்.

“”கட்சி நிதி என்று தோழர்கள் தந்த பணமுடிப்பிலிருந்து ஒரு சல்லிக்காசு எடுத்தால்கூட அது பெரிய குற்றம். அந்தக் கணக்கை அப்படியே கட்சி அலுவலகத்தில் ஒப்படைப்பதுதானே சரி” நடந்தபடியே கூறினார் ஜீவா.

உதிரம் சிந்தித் தந்த தொழிலாளர்களின் நிதியை, சொந்த உபயோகத்திற்காக சல்லிக்காசு எடுக்கத் துணியாத ஜீவானந்தம் போன்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய பெருமை தமிழகத்திற்கு உண்டு.

கம்பராமாயணத்திலிருந்தும், திருக்குறளிலிருந்தும் மேற்கோள்காட்டி அற்புதமாய் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர் தோழர் ஜீவா. 1952 சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களைக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றபோது, வடசென்னை வேட்பாளராக வெற்றி பெற்ற ஜீவா, சட்டமன்றத்தில் பேச ஆரம்பித்தால் வெளியே நிற்கும் உறுப்பினர்களும் உள்ளே வேகவேகமாய் வந்து அமர்வார்களாம். “”பயிற்று மொழி தமிழாய் இருக்க வேண்டும்” என்று அப்போதே சட்டமன்றத்தில் முழங்கினார். 1956-லேயே சென்னை மாகாண அரசு தமிழை ஆட்சிமொழியெனப் பிரகடனம் செய்தது. எல்லாம் ஏட்டிலேயே இருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

மாநில முதல் அமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்குமான உறவு அன்று எப்படிப்பட்டதாக இருந்தது?

ஜீவாவின் வீட்டருகே உள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு முதல்வர் காமராஜரும், அன்றைய செங்கல்பட்டு மாவட்டக் கலெக்டர் திரவியமும் போகும்போது ஜீவாவையும் அழைத்துச் செல்ல எண்ணி அவரது குடிசை வீட்டிற்கு காரில் சென்றனர்.

“”ஜீவா! அருகில் உள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகிறீர்களா?” என்றபடியே உள்ளே நுழைந்தார் காமராஜர்.

“”நான் வர வேண்டுமென்றால், கால் மணி நேரம் நீங்கள் காத்துக் கிடக்க வேண்டும்” என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

உள்ளே ஜீவா, ஈர வேட்டியை உலர்த்தியபடி நின்று கொண்டிருந்தார். மாற்று வேட்டி கூட இல்லாமல், துவைத்த கதர் ஆடை காயும் வரை இடுப்பில் துண்டு கட்டிய நிலையில் நின்ற ஜீவாவைப் பார்த்து காமராஜர் திகைத்துப் போனார்.

“”ஜீவா! எவ்வளவு நாளைக்கு இதே குடிசையில் இருப்பது?” என்று கேட்டார்.

பளிச்சென்று பதில் கூறினார் ஜீவா. “”மக்களெல்லாம் மாடி வீட்டில் வாழ்கின்றபோது நானும் மாடி வீட்டில் வாழ்வேன்”.

கோடிக்கணக்கில் தன் பெயரிலும், குடும்பத்தாரின் பெயரிலும் ஏனைய பினாமிகள் பெயர்களிலும் சொத்து சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? ஜீவா எங்கே?

காந்திஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் இயக்கத்திலும், பின்னர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும், இறுதியில் பொதுவுடைமை இயக்கமே மனித குல விடுதலைக்கு மாற்று என பொதுவுடைமை இயக்கத்திற்கு வந்தபோதும், இறுதிவரை கதராடையையே உடுத்தி வந்தார். அவரது அன்னையார் இறந்தபோது ஈமக்கிரியை சடங்கிற்காக கதராடை கொடுக்காமல் மில் துணியைக் கொடுத்ததால், தாய்க்கு கொள்ளி வைக்க மறுத்து விட்டார் ஜீவா.

1946-ல் அவரது தலைமறைவு வாழ்க்கையின்போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். ராதா, டி .கே. பகவதி மற்றும் குத்தூசி குருசாமி போன்றோர் அவருக்கு உதவி செய்தனர்.

தமிழகத்தின் பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் ஒருவரான சிங்காரவேலரின் தொடர்பு கிட்டியபோது, பகத்சிங்கின் “”நான் ஏன் நாத்திகனானேன்?” என்ற நூலை மொழிபெயர்த்து வெளியிட்டதற்காக காரைக்குடியில் போலீஸôர் அவரது காலில் விலங்கிட்டு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.

குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்ற சிற்றூரில் பிறந்த சொரிமுத்துப்பிள்ளை என்ற மூக்காண்டி, ஜீவானந்தமாகப் பரிணமித்து, தமிழக அரசியலுக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுக்கும் வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரது நூற்றாணடு தொடங்கும் இந்நாளில் அவரது எளிய வாழ்க்கை, சோர்வுற்ற இளைஞர் களுக்கு நம்பிக்கையளிக்கட்டும்!

————————————————————————————————————————————————

ஜீவாவின் வாழ்வும் வழியும்

ஆர். நல்லகண்ணு

2007 ஆகஸ்ட் 21. பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப. ஜீவானந்தம் நூற்றாண்டு நிறைவு நாள்.

ஓராண்டாக ஜீவா எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வந்துள்ளது; விடுதலைப் போராட்டமே அவருடைய முதல் மூச்சாக வெளிப்பட்டது. தன்னைப் பெற்ற தாயின் இறுதிச் சடங்கு முடிந்து வீடு திரும்பிய வேளையில் உறவு முறையினர் கொடுத்த புதுத் துணியும் கதராகத்தானிருக்க வேண்டுமென்று பிடிவாதம் செய்தவர்.

அவர் பிறந்த “பூதப்பாண்டி’யில் கட்டுப்பாட்டை மீறி, தலித் சிறுவர்களை மேல் ஜாதிக்காரர் தெருக்களில் அழைத்துச் சென்றதற்காகக் கல்லெறியும் அடியும் மிதியும் பட்டவர்.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும், இவருடைய செயலுக்கு அச்சிற்றூர் இடம் கொடுக்காததைக் கண்டு ஊரைவிட்டு வெளியேறினார்; செட்டிநாட்டுக்குச் சென்றார்; “சிராவயல்’ என்ற ஊரில் “ஆசிரமம்’ நடத்தினார். எல்லா ஜாதி சிறுவர்களுக்கும் படிப்பு சொல்லிக் கொடுத்தார்.

ஜீவாவின் “ஜாதி மறுப்புக் கொள்கையும்’ “தலித்’ மக்களின் மீதுள்ள பற்றையும் கடிதங்கள் மூலம் தொடர்புகொண்ட மகாத்மா காந்தி தமிழகம் வந்தபோது ஜீவானந்தம் என்ற இளைஞனைப் பார்க்க விரும்பினார்; காரைக்குடியின் காங்கிரஸ்காரர்களிடம் தெரிவித்தார்; “சிராவயலில் இருக்கிறார்; அவரை அழைத்து வருகிறோம்’ என்று சொன்னதும் மகாத்மா காந்தி மறுத்துவிட்டார்; அந்த இளைஞனைத் தாமே போய்ப் பார்க்க வேண்டுமென்று சொன்னதும், காந்தியை சிராவயலுக்கு அழைத்துச் சென்றார்கள். ஜீவாவைச் சந்தித்து உரையாடினார்; ஆசிரமம் நடத்த உமக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா? என்று மகாத்மா கேட்டதும் ஜீவா “”இந்த நாடு தான் என் சொத்து” என்றாராம்.

மகாத்மா பெருமகிழ்ச்சியடைந்தார்; “ஜீவா’ நீதான் இந்த நாட்டின் மதிப்புமிக்க சொத்து’ என்று தட்டிக்கொடுத்துப் பாராட்டினார்; இந்நிகழ்ச்சி 1930-ல் நடந்தது.

பெரியார் நடத்திய வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்திலும் சிறுவனாகவே ஜீவா கலந்துகொண்டார். சேரன்மாதேவி பரத்வாஜ் ஆசிரமத்தில் ஜாதி வேற்றுமையை எதிர்த்து நடந்த சம்பவத்திலும் பங்கேற்றார்.

சுதந்திரம், ஜாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பும் அவர் உள்ளத்தில் ஊற்றெடுத்துக் கிளம்பிய உயிர்மூச்சாகும். பெரியாருடன் சேர்ந்து பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கத்திலும் ஈடுபட்டார்.

தன்னுடைய சுதந்திர வேட்கையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் தனக்குச் சரியான புரிதலைத் தேடி அலைந்தார்.

தமிழ் இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள், கம்பராமாயணம் மற்றும் பக்தி இலக்கியங்கள் போன்ற அனைத்து தமிழ் இலக்கியங்களையும் படித்து உள்வாங்கிக் கொண்டார்.

அரசியலில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறியடிப்பது முதல் கடமை; ஏகாதிபத்திய அரணை உடைத்துவிட்டால், மானிட சக்தி விலங்கொடித்து, வீறுகொண்டெழுந்துவிடும் என்று உணர்ந்தார்.

இரண்டாவது உலகப்போரில் சோவியத் எழுச்சி உலக இளைஞர்களுக்கு வழிகாட்டியது; ஜீவாவை ஒத்த வயதுடைய இளைஞன் மாவீரன் பகத்சிங். நவயுக சோஷலிஸ்ட் சமிதியை அமைத்தார்.

லாகூர் சதி வழக்கில் சிறை வைக்கப்பட்டபோது “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற நூலை எழுதினார். அதை ஜீவா தமிழாக்கம் செய்து வெளியிட்டார். அந்நூலில் “பிரிட்டிஷ் ஷார் நம்மை ஆள்வது ஆண்டவன் அருளால் அல்ல; நம்மிடையே உள்ள பிளவைப் பயன்படுத்தி பிரித்தாலும் சூழ்ச்சியால் இரு நூற்றாண்டுகளாக ஆண்டு வருகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பகத்சிங்கின் அந்த ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்ததால் ஜீவாவுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது; “குடியரசு’ப் பதிப்பாசிரியருக்கு அபராதமும், தண்டனையும் வழங்கப்பட்டன.

பகத்சிங்கின் வழக்கில் தண்டிக்கப்பட்டு பட்டுகேசுவர தத் மற்றும் சிலர் சென்னை சிறையில் இருந்தார்கள்; அவர்களோடு ஜீவாவும் சிறையிலிருந்தார்; தத் மூலம் கிடைத்த மார்க்சிய நூல்களை ஜீவா கற்றுத் தேர்ந்தார்; ஜீவா சிறந்த மார்க்சிய அறிஞராக வெளியே வந்தார்.

1937-ல் சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனசக்தி வார இதழ் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியராக ஜீவானந்தம் பொறுப்பேற்றார். அன்றிலிருந்து 1963 ஜனவரி 18-ல் ஜீவா மறையும் வரை அவரே ஆசிரியராகச் செயல்பட்டு வந்தார்; அவர் தொடங்கிய அதே ஜனசக்திதான் 70-வது ஆண்டில் தின இதழாக இப்போது நடத்தப்பட்டு வருகிறது.

ஜீவா முற்போக்கு இயக்கத்தில் பன்முகப் போராளியாகத் திகழ்ந்து வந்தார்.

இலக்கியத்தில் கலை, கலைக்காகவே என்ற கருத்து நிலவி வந்த காலம்; ரசனைக்காகவே கலை பயன்பட வேண்டுமென்று கருத்து வலுவாக இருந்த காலத்தில் “கலையும் இலக்கியமும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் இயக்கங்களில் நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும்’ என்று வாதிட்டு நிலைநிறுத்தினார்.

கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் என்று பாரதி பாடியதை ஆதாரமாகக் கொண்டார். மானுடத்தின் மேன்மைகளை விளக்கினார். வள்ளலாரின் “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ என்பதையும், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகு இயற்றியான் என்ற திருக்குறளையும் “அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்’ என்ற சிலப்பதிகாரத்தின் அடிகளையும் தனது பொதுவுடைமைக் கருத்துகளுக்கு ஆதரவாக மக்களிடம் பரப்பி வந்தார்.

பாரதியின் பெருமையைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பினார்; “பாரதியைச் சிலர் இழிவுபடுத்திய காலத்தில் பாரதியை “மகாகவி’ என்று உலகறியச் செய்த பெருமை, ஜீவா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், வ.ரா., திரு.வி.க., வெ. சாமிநாதசர்மா ஆகியோருக்கு உண்டு. தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்ததில் ஜீவா, பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ் மூவரும் மூலவர்களாக விளங்கினார்கள்.

ஜீவாவின் பாடல்களுக்கு முன்னுரை எழுதிய சாமிநாத சர்மா “ஜீவா சிறந்த கவிஞர் மட்டுமல்ல, கர்மயோகி’ என்று பாராட்டினார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், “துன்பச் சுமைதாங்கும் அன்புத் தோழன் ஜீவானந்தம்’ என்று தனது இரங்கற்பாவில் குறிப்பிட்டார்.

முற்போக்கான அரசியல்வாதி, ஜாதிமறுப்பு, பகுத்தறிவு சிந்தனையாளர், மார்க்சிய அறிஞர், தொழிலாளர், விவசாயிகள் போராட்டங்களில் களம் கண்டவர்; இலக்கிய வழிகாட்டி ஜீவா, தாம் வாழ்ந்த காலத்தில் எல்லாத் தளங்களிலும் தடம் பதித்தவர்; ஜீவாவின் வாழ்வும் வழியும் புதிய தலைமுறைக்கு ஒளிவீசும் கலங்கரை விளக்காகும்.

(கட்டுரையாளர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்).

Posted in Bio, Biography, Independence, India, Jeeva, Jeevanandham, Jeevanantham, Kumari, Lifesketch, Old, Politics, Tamil, Tamil Nadu, TN | 1 Comment »