Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Leo Rodrigo’ Category

Waiting Youth Congress leaders – Neeraja Chowdhury

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006

காங்கிரஸில் காத்திருக்கும் இளந்தலைவர்கள்

நீரஜா சௌத்ரி
தமிழில்: லியோ ரொட்ரிகோ

காங்கிரஸ் கட்சியில் உள்ள இளம் தலைவர்கள் பதவிகளைப் பெறுவதற்கு முன், இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டும்; இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்; இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார் அக் கட்சித் தலைவர் சோனியா காந்தி.

ஆனால் 2004-ல் மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த இளைஞர் படையைச் சரியான முறையில் கட்சி பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதைப் பலரும் ஒப்புக்கொள்கின்றனர். காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளை ஏற்க புதிய தலைமுறை தயாராகிவிட்டதாகக் கூறப்பட்டபோதிலும், எதிர்பார்த்தபடி கட்சி அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

  1. ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட்,
  2. முரளி தேவ்ராவின் மகன் மிலிந்த் தேவ்ரா,
  3. ஜிதேந்திர பிரசாத்தின் மகன் ஜிதின் பிரசாத்,
  4. ஜிண்டாலின் மகன் நவீன் ஜிண்டால்,
  5. ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்,
  6. ஹரியாணா முதல்வர் பி.எஸ். ஹுடாவின் மகன் ரந்தீப் ஹுடா,
  7. ஜோதிர் ஆதித்ய சிந்தியா… என பலரும் மூத்த தலைவர்களின் வாரிசுகளாகவே இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தகுதியும் திறமையும் உடையவர்களாகவே கருதப்படுகின்றனர்.

மூத்த தலைவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் தலைமுறையின் கையில் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்று வாதிடப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இளைய தலைமுறையினருக்கு இடம் அளிக்கப்படவில்லை என்று பத்திரிகைகள் விமர்சித்தபோது, ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றவர்களைக் கருத்தில் கொண்டே அவை குறிப்பிடப்பட்டன.

இப்போதைய மத்திய அமைச்சரவையின் சராசரி வயது 64 ஆக இருக்கக்கூடும். ஆனால் நாட்டு மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் 35 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்கும்போது, அதை அரசு பிரதிபலிக்க வேண்டாமா என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அனுபவசாலிகளோடு இளம் தலைமுறையினரையும் கொண்டதாக அமைச்சரவை இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இளைஞர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறினால், “பிரச்சினைகளைக் கையாள்வதற்கான பக்குவம்’ அவர்களுக்கு இருக்காது என்று எதிர்ப்புக் குரல்கள் எழக்கூடும். கட்சியில் அனுபவம் மிக்க தலைவர்கள் பலர் இருக்கும்போது அவர்களது அனுபவத்தை ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது?

முதல் முறையாக எம்.பி. ஆகியிருப்பவர்களுக்கோ, 30 வயதுகளில் இருப்போருக்கோ அமைச்சர் பதவி கொடுக்காததைப் பெரும் தவறு என்று கூற முடியாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்த பொழுதே, ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்தார் மன்மோகன் சிங். ஆனால், துதிபாடிகளைக் கொண்ட ஒரு கட்சியில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காதது சரியான நடவடிக்கைதான். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால், அது அரசு நிர்வாகத்தில் போட்டி அதிகார மையத்தை உருவாக்குவதில் போய் முடிந்திருக்கும்.

இளம் எம்.பி.க்கள் பகிரங்கமாக என்ன பேசினாலும், உள்ளூர அவர்களுக்கு வருத்தம்தான். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் குறித்து சில கேள்விகளை அவர்கள் எழுப்புகின்றனர். மிகுந்த தயக்கம் காட்டிய பிரணப் முகர்ஜியை பாதுகாப்புத் துறையிலிருந்து வெளியுறவுத் துறைக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன? காங்கிரஸ் வசமிருந்த கேரளம் கைநழுவிப் போய்விட்டது; அதற்குப் “பரிசா’க ஏ.கே. அந்தோனிக்கு அமைச்சர் பதவியா என்று அவர்கள் கேட்கின்றனர். ராணுவத்துக்குப் பலநூறு கோடி மதிப்புக்குத் தளவாடங்கள் வாங்கவிருக்கும் நிலையில், கை சுத்தமானவர் என்பதால் பாதுகாப்புத் துறை அந்தோனியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினால், 40-க்கு மேற்பட்ட அமைச்சர்கள் குழுவுக்குத் தலைமை வகித்துவருபவரான பிரணப் முகர்ஜிக்கு இழுக்கு ஏற்படுத்துவதாகும் அது.

வட இந்திய மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் வரவிருக்கும் நேரத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த மூவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டிருப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை.

2004-லேயே அந்த இளம் எம்.பி.க்களை உத்தரப் பிரதேசத்தில் களம் இறக்கி, கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு, தமது திறமையை நிரூபிக்குமாறு அவர்களைப் பணித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அது காங்கிரஸýக்கு பலன் அளிப்பதாக இருந்திருக்கும். 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, இப்போதுகூட அவர்களைக் களத்தில் இறக்கலாம்.

அமைச்சரவையில் அவர்களுக்கு இடம் அளிக்காவிட்டாலும்கூட, கட்சிப் பணிகளுக்கு அவர்களைப் பயன்படுத்தி இருக்கலாம். ஹிந்தி பேசும் மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்தவில்லையெனில், அடுத்து வரும் தேர்தலில் முக்கிய இடத்தை காங்கிரஸ் பிடிக்க முடியாது என்பது திண்ணம்.

தமிழில்: லியோ ரொட்ரிகோ

Posted in Cabinet, Cong(I), Congress(I), Jithin Prasad, Jyothir Aathithya Scindia, Leo Rodrigo, Manmohan Snigh, Milind Deora, Ministers, Naveen Jindal, Neeraja Chowdhury, Randheep Huda, Sachin Pilot, Sandeep Dixit, Sonia Gandhi, Youth Congress | Leave a Comment »

External Affairs Minstry – Conundrum for Prime Minister

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

யார், புதிய வெளியுறவு அமைச்சர்?

நீரஜா செüத்ரி :: தமிழில்: லியோ ரொட்ரிகோ

அணிசாரா நாடுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பியதும் வெளியுறவுத் துறைக்குப் புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என்று உறுதி அளித்திருந்தார் பிரதமர். அதைத் தொடர்ந்து, அப் பதவியைப் பிடிப்பதற்கான போட்டியும் நெருக்குதல்களும் காங்கிரஸ் கட்சியில் அதிகரித்துவிட்டன.

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு உறுதியாகும் வரையில் வெளியுறவு இலாகாவைத் தன் வசமே வைத்துக்கொள்ளவே பிரதமர் விரும்புவார் என பலர் கருதுகின்றனர். நேரம் வரும்போது புதியவரின் பெயரையும் அறிவித்து நியமனமும் செய்துவிட்டுப் போகலாம். முன்னறிவிப்பை வெளியிட்டதன் மூலம் பல்வேறு தரப்புகளில் இருந்தும் நெருக்குதல்களை வரவழைத்துக் கொண்டுவிட்டார் பிரதமர்.

இது ஒருபுறம் இருக்க; அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டைப் பொருத்தவரை, அது வெற்றி பெற்றால், பிரதமரின் கிரீடத்தில் வைத்த வைரக்கல்லாக அது கருதப்படும். ஒருவேளை தோல்வி அடைந்தாலும், “அமெரிக்க நெருக்குதலுக்கு அடிபணிந்துவிடவில்லை’ என்ற பெருமை அவருக்குக் கிடைத்துவிடும். அதனால் அவரது மதிப்பும் உயர்ந்துவிடும். நாடாளுமன்றத்தில் திட்டவட்டமான உறுதிமொழியை அளித்திருக்கும் அவரால், அதிலிருந்து பின்வாங்குவது இயலாத காரியம்.

மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றம் எதையும் மேற்கொள்ளும் உத்தேசம் பிரதமருக்கு இல்லை. ஏனென்றால், ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து நெருக்குதல்களை வரவழைப்பதாக அது அமைந்துவிடும்.

பாதுகாப்புத் துறை அமைச்சரான பிரணப் முகர்ஜி வெளியுறவுத் துறைக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார்; அனுபவத்தில் மூத்தவர், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட 35-க்கு மேற்பட்ட அமைச்சரவைக் குழுக்களுக்குத் தலைமை வகித்திருப்பவர்; எதிரும் புதிருமாக நாடுகள் அணி சேர்ந்திருக்கும் இன்றைய உலகச் சூழலில், இந்தியாவுக்கு வரக்கூடிய நெருக்குதல்களைச் சமாளிக்கக்கூடியவர். ஆனால், பாதுகாப்புத் துறையிலிருந்து வெளியுறவுக்கு மாற்றப்படுவதை அவர் விரும்பவில்லை.

தெளிவாகச் செயல்படக்கூடிய ப. சிதம்பரமும் அப் பொறுப்புக்குப் பொருத்தமானவர்தான். ஆனால், தமிழரான அவருக்கு, இலங்கை தொடர்பான கொள்கையை ~ அதிலும் குறிப்பாக அங்கு நிலைமைகள் மேலும் சிக்கலடைந்துள்ள நேரத்தில் ~ கையாள்வது சங்கடமானதாக இருக்கக்கூடும். அதோடு, நிதித் துறையை அவர் கையாள்கிற விதமும் பிரதமருக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது.

புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக கரண் சிங், எஸ்.எம். கிருஷ்ணா, கமல் நாத், கபில் சிபல் ஆகியோரில் யாராவது ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அண்மைக் காலமாக அரசியல் வட்டாரத்தில் அடிபட்டுக்கொண்டு இருந்தது. சிதம்பரத்துக்கு எப்படி இலங்கை விவகாரமோ, அதேபோல கரண் சிங்குக்கு பாகிஸ்தான் விவகாரம். காங்கிரஸ் கட்சியின் வெளியுறவு விவகாரக் குழுவுக்கு அவர்தான் தலைவர்; அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவர்; பிரதமரின் தூதராக நேபாள விவகாரத்தைத் திறமையாகக் கையாண்டவர். இருந்தபோதிலும், அவர் ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற அம்சம் அவருக்குப் பாதகமாக இருக்கிறது.

வெளியுறவுத் துறையில் புத்தெழுச்சியுடனும் உத்வேகத்துடனும் செயல்படக் கூடியவர்தான் கபில் சிபல். பிரதமரின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. கூர்மையாகவும் சிந்தனைத் தெளிவுடனும் செயல்படக்கூடியவர்; சட்டம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அறிவும் அவருக்கு இருக்கிறது. பாரம்பரியமாக இந்தியாவின் நண்பர்களாக இருப்பவை இஸ்லாமிய நாடுகள்; ஆயினும், அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு, ஈரான் விவகாரம் ஆகியவற்றில் இந்தியா எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக அவை அதிருப்தி அடைந்துள்ளன. எனவே, அவற்றுடன் மீண்டும் நெருங்கிய உறவை ஏற்படுத்துவது புதிய அமைச்சருக்கு முன்னுள்ள சவால்களில் ஒன்று. கபில் சிபலுக்கு சிறுபான்மைச் சமுதாயத்தினருடனும் நல்ல உறவு இருக்கிறது. ஆனால், அப் பதவிக்கு நியமிக்கும் அளவுக்கு அவர் மூத்தவரல்லர்; பலருக்கு “இளையவர்’ என்று கருதப்படுவதான் அவருக்கு உள்ள சிக்கல். அதோடு, கட்சியில் அவருக்கு எதிராக இருக்கும் சக்திகளும் பலமாக உள்ளன.

அனுபவத்தால் மெருகேறிய, மகாராஷ்டிரத்தின் ஆளுநராக இருக்கும் எஸ்.எம். கிருஷ்ணா, வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அண்மைக் காலத்தில் அடிபட்டது. மத்திய அரசியலில் தீவிரமாக இறங்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு சில காலமாக இருந்துவருகிறது. ஆனால், அவருக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர், அண்மைக் காலத்தில் மத்திய அரசியலில் செல்வாக்கும் பலமும் மிக்கவராக உருவெடுத்திருக்கும் வீரப்ப மொய்லி ஆவார். பல்வேறு கமிட்டிகளின் தலைவராக, பிரதமரால் நியமிக்கப்பட்டிருப்பவர் அவர். கர்நாடகத்தைச் சேர்ந்த இருவர், ஒரே நேரத்தில் தில்லி அரசியலில் அதிகார மையங்களாகச் செயல்பட முடியாது.

கடைசியாக வெளியுறவுத் துறைப் பொறுப்புக்கு காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்ட பெயர் சிவராஜ் பாட்டீல்; உள் துறையில் குறிப்பிடும்படி செயல்படாத அவர், வெளியுறவுத் துறைப் பொறுப்புக்கு மாற்றப்பட்டு, தற்போது மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் சுஷில் குமார் ஷிண்டே, உள் துறை அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என்ற பேச்சு அடிபட்டது.

கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே பிரதமர் செயல்பட வேண்டியுள்ளது. பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷி, சைபுதீன் சோஸ் உள்பட 8 மத்திய அமைச்சர்கள் தமது துறைச் செயலர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இப்போது அந்த வேலையில் இறங்கினால், அது குழவிக்கூட்டைக் கலைத்தது போலாகிவிடும் என்று அதைத் தவிர்த்துவருகிறார் பிரதமர்; எனவே, அமைச்சரவையில் மாற்றத்தைச் செய்வது அதைவிடச் சிக்கலானதாகிவிடும்.

இருந்தபோதிலும், வெளியுறவுத் துறைக்குப் புதிய அமைச்சரை நியமிக்கும் விஷயத்தைக் காலவரையின்றி மன்மோகன் சிங் தள்ளிப்போட முடியாது. வெளியுறவுத் துறை அமைச்சரின் பணிகளை பிரதமர் கவனித்துக் கொண்டிருக்க முடியாது; இந்தியாவுக்கு வருகை தருகின்ற பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை மன்மோகன் சந்தித்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், ஒரு நாட்டுக்கு வரும் வெளியுறவுத் துறை அமைச்சரை அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்தான் சந்திக்க வேண்டும் என்பது அரச நடைமுறையாகும். எனவே, இந்தியாவுக்கு வரக்கூடிய வெளிநாட்டு வெளியுறவு அமைச்சர் எவரும், இணை அமைச்சரைச் சந்திப்பதை விரும்ப மாட்டார்கள்.

இராக்கிய எண்ணெய்க்கு உணவுத் திட்ட ஊழல் தொடர்பாக விசாரித்த விசாரணைக் குழு, “நட்வர் சிங் குற்றமற்றவர்‘ என்று அறிவிக்கும் பட்சத்தில், அப் பொறுப்புக்கு அவர் மீண்டும் நியமிக்கப்படுவார் என்பதை அவருக்குத் தெரிவித்து, அவரை அமைதிப்படுத்தும் நோக்கத்தில்தான், முதலில் அப் பதவி நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிலைமைகள் வேறு விதமாக அமைந்துவிட்டன. நேரு, இந்திரா காந்தி, நரசிம்ம ராவ் போன்றவர்கள் நீண்ட காலத்துக்கு வெளியுறவுத் துறைப் பொறுப்பையும் சேர்த்துக் கவனித்து வந்திருக்கின்றனர். ஆனால், அக் காலச் சூழல் வேறு. இன்று, வெளியுறவுக் கொள்கையானது மிகவும் சிக்கலானதாகிவிட்டது; அப் பொறுப்பைக் கவனிக்கத் தனியாக ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுவும், பிராந்திய வல்லரசாக இந்தியா உருவெடுத்துவரும் நிலையில் அதற்கான அவசியம் மேலும் அதிகரித்திருக்கிறது.

தமிழில்: லியோ ரொட்ரிகோ

Posted in Analysis, Cabinet, Dinamani, External Affairs, India, Kamal Nath, Kapil Sibal, Karan Singh, Leo Rodrigo, Manmohan Singh, Minsiter, Minstry, NAM, Neeraja Chowdhry, Op-Ed, Pa Chidambaram, Pakistan, Pranab Mukherjee, Prime Minister, SM Krishna, Sri lanka, Tamil | Leave a Comment »