Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘legs’ Category

Ayurvedha Corner – How to avoid knee pains & Arthritis cure: S Swaminathan

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூட்டு வலி குணமாக…

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

வயது 56. தொழுகையின்போது தரையில் தலை வைத்து எழுந்திருக்கும் போது, இருகால் முட்டியில் சத்தம் வருகிறது. வலியும் இருக்கிறது. குளிர் நாட்களில் மூட்டுக்கு மூட்டு வலி உள்ளது. தொண்டை கரகரப்புக்கு மருந்து சாப்பிடாவிட்டால் இருமல், தும்மல், மூச்சிரைப்பு ஏற்படுகிறது. இவை நீங்க மருந்து கூறவும்.

மூட்டுக்கு மூட்டு வலி வருவது இன்று பெருமளவில் காணப்படுவதற்கான காரணத்தை ஆயுர்வேதம் கீழ்க்காணும் வகையில் கூறுகிறது.

உப்பையும் புளியையும் காரமான சுவையையும் உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கும், சூட்டைக் கிளப்பும் உணவுப் பண்டங்களுடன் எண்ணெய்யைக் கலந்து அஜீரண நிலையில் சாப்பிடுவது, அதாவது மசாலா பூரி, பேல் பூரி, சமோஸô போன்றவை, குடலில் பிசுபிசுப்பை ஏற்படுத்தும் பிரட், சாஸ் வகைகள், நீர்ப்பாங்கான நிலைகளில் வாழும் உயிரினங்களை மாமிச உணவாகச் சாப்பிடுதல், புண்ணாக்கு, பச்சை முள்ளங்கி, கொள்ளு, உளுந்து, அவரைக்காய், தயிர், புளித்த மோர் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிடுதல், கடுங்கோபத்துடன் உள்ள மனநிலையில் உணவைச் சாப்பிடுதல், சாப்பிட்ட பிறகு பகலில் படுத்து உறங்குதல், இரவில் கண்விழித்து தூக்கத்தை கெடுத்துக் கொள்ளுதல் போன்றவை நம் உடலில் ரத்தத்தை கெடுக்கும். அதன்பிறகு செய்யப்படும் சைக்கிள் சவாரி, பஸ்ஸில் நின்றுகொண்டு செய்யும் பயணம் ஆகியவற்றால் ஏற்படும் வாத தோஷத்தின் சீற்றம், கெட்டுள்ள ரத்தத்துடன் கலந்து கால்பாதத்தின் பூட்டுகளில் தஞ்சம் அடைந்து பூட்டுகளில் கடும் வலியை ஏற்படுத்துகின்றன.

சூடு ஆறிப்போன பருப்பு வடை, பஜ்ஜியை சாப்பிட்டு, அதன்மேல் சூடான டீ குடித்து, சிகரெட் ஊதுபவர்கள் இன்று அதிகமாக டீ கடைகளில் காணப்படுகின்றனர். இவர்களுக்கு விரைவில் ரத்தம் கேடடைந்து மூட்டு வலி வர அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பூட்டுகளின் உள்ளே அமைந்துள்ள சவ்வுப் பகுதியும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயாமலிருக்க அவற்றின் நடுவே உள்ள எண்ணெய்ப் பசையும் தங்கள் விஷயத்தில் வரண்டுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு ஆகும் பட்சத்தில் எலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டு, அவை ஒன்றோடு ஒன்று உரசும் தருவாயில் வலியை ஏற்படுத்துகின்றன. பூட்டுகளின் அசைவுகள் எளிதாக இருக்க அதனைச் சுற்றியுள்ள தசை நார்கள் உதவி செய்கின்றன. குளிர்நாட்களில் தசை நார்கள் சற்றே இறுக்கம் கொள்வதால் பூட்டுகளின் அசைவுகள் எளிதாக இல்லாமல் மேலும் வலியை அதிகப்படுத்துகின்றன. நம் உடல் பாரத்தை தாங்குவதற்கான வேலையை கால் முட்டிகளும், கணுக்கால் பூட்டுகளும் முக்கியமாகச் செய்வதால் அவைகளை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய உடல் பகுதிகளாகும்.

உங்களுக்கு தொண்டை கரகரப்புக்கு மருந்து சாப்பிட வேண்டிய நிர்பந்தமும் உள்ளது. பூட்டுகளில் ஏற்பட்டுள்ள வலியும் போக வேண்டும். வாத-கப தோஷங்களின் சீற்றத்தை அடக்கி அவைகளை சம நிலைக்குக் கொண்டு வரும் மருந்துகளால் உங்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், ரத்தத்தில் உள்ள கேட்டையும் அகற்ற வேண்டும். அவ்வகையில் ஆயுர்வேத கஷாயமாகிய மஹாமஞ்சிஷ்டாதி சாப்பிட நல்லது. 15 மிலி கஷாயத்தில், 60 மிலி கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். குறைந்தது 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை மருந்தைச் சாப்பிடவேண்டும். முதல் பாராவில் குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்கவேண்டும்.

குளிர் நாட்களில் வலி கடுமையாக இருந்தால் முருங்கை இலை, எருக்கு இலை, புளி இலை, வேப்பிலை, ஆமணக்கு இலை, நொச்சி இலை, ஊமத்தை இலை, ஆமணக்கு இலைகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டுக் காய்ச்சிய வென்னீர் ஒத்தடம் கொடுக்க நல்லது. நொச்சி இலை, ஊமத்தை இலை, ஆமணக்கு இலை இம்மூன்றையும் நன்கு சிதைத்து வேப்பெண்ணெய்யுடன் விட்டுப் பிசிறி அடுப்பின் மேல் இரும்பு வாணலியிலிட்டு சிறிது வேகும்படி பிரட்டி, இளஞ்சூட்டுடனிருக்கும் போது அப்படியே வலியுள்ள பூட்டுகளில் வைத்துக் கட்ட வலி குறையும். வீக்கம் இருந்தால் அதுவும் வாடிவிடும்.

முட்டைக் கோஸ் இலை இலையாகப் பிரியக் கூடியது. ஒரு இலையை லேசாக தோசைக் கல்லில் சூடாக்கி முட்டியில் வலி உள்ள பகுதியில் போட்டு, 15, 20 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடவும். இது நல்ல வலி நிவாரணியாகும். பக்கவிளைவில்லாத எளிய சிகிச்சை முறையாகும். காலை இரவு உணவிற்கு முன்பாக இதுபோல செய்வது நலம்.

நீங்கள் உணவில் பருப்பு வகைகளைக் குறைக்கவும். குளிர்ந்த நீரைக் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்த வேண்டாம். வென்னீர்தான் நல்லது. பகலில் படுத்து உறங்கக் கூடாது. தினமும் சிறிது விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் சமமாகக் கலந்து இளஞ்சூடாக மூட்டுகளில் தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகுக் குளித்து வர, முட்டிகளில் சத்தம் வருவது நிற்பதோடு, வலியும் நன்றாகக் குறைந்து விடும்.

Posted in Advice, Alternate, arthritis, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, cure, Doc, Doctor, Fat, Herbal, Joints, Knee, legs, Medicine, Natural, pains, Swaminathan, Therapy | 2 Comments »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to stregthen the Legs

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கால்கள் வலுப்பெற…

என் வயது 80. நாற்பது ஆண்டுகளாக மலக்கட்டு உள்ளவன். மூன்று ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. ஆங்கில மருத்துவமனையில் 15 நாள் இருந்தேன். குணமான பின் இடுப்புக்குக் கீழ் இரு கால்களும் வலுவிழந்துவிட்டது. கோலூன்றி நடக்கின்றேன். கால்கள் பலம்பெற வழிகள் என்ன?

தலைக்கும் காலுக்கும் நரம்பு மூலம் நேர்முகமான ஓர் இணைப்பு இருப்பதை மேல்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேதம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அடிப்படையின் மேல் ஆரோக்கிய பாதுகாப்பு முறைகளை உபதேசித்துள்ளது.

கால்களை அடிக்கடி பரிசுத்தமாய் அலம்பிக் கொள்ளுதல், கால்களுக்கு எண்ணெய் தேய்த்தல், பூட்ஸ் -செருப்பு போன்ற காலணிகளை அணிந்து கொண்டு நடத்தல் போன்ற பாதுகாப்பான நடவடிக்கைகளால் பாதங்கள் பாதுகாக்கப்படுகின்றன. பாதங்களின் பராமரிப்பால் உடலின் மற்ற அங்கங்களுக்கும் பலவிதமான நன்மை ஏற்படுகின்றன. அதிலும் கண்களுக்கு விசேஷமான பலத்தையும் தெளிவையும் அளிக்கின்றன. பாதங்களை இவ்விதம் கவனிக்காமல், எண்ணெய்த் தேய்க்காமல், செருப்பில்லாமல் நடப்பதினால், உடலின் மற்ற அங்கங்களில் கெடுதல் அதிகம் விளையும். சுத்தமான தண்ணீரால் கால்களை அடிக்கடி அலம்புவதால் தலையில் இருக்கும் மூளையின் மேதா சக்தியை வளர்க்கிறது. “”தாரணாவதீ தீ: மேதா”- ஒரு தரம் படித்ததைக் கேட்டதை ஸ்திரமாய் நினைவில் வைத்திருக்கும் புத்தி சக்தி -மேதை.

கால் பெருவிரலின் உள் பக்கவாட்டிலிருந்து மூளைக்கும், கண்கள் முதலிய தலைக்குள்ளிருக்கும் இந்திரியங்களுக்கும் நேர் இணைப்பு கொண்ட நாடி இருப்பை மிகப்பழைய ஆயுர்வேதம் கூறுவதால், நீங்கள் கால்கள் வலுப்பெற, மூளை நரம்புகளை வலுப்பெறச் செய்யவேண்டும். ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய க்ஷீரபலா அல்லது சுத்தபலா தைலத்தைத் தலையில் தடவி, சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து, இடுப்பு கால் பகுதியில் பலா அஸ்வகந்தாதி குழம்பு அல்லது மஹாமாஷ தைலத்தை இளஞ்சூடாக மேலிருந்து கீழாகத் தேய்த்து ஊறவிடவும். மூளைக்கும் கால் நரம்புகளுக்கும் நல்ல பலத்தை இந்த மூலிகைத் தைலங்கள் ஏற்படுத்தித் தரும்.

உடல் நேராக நிமிர்ந்து தள்ளாடாமல் துவண்டு விடாமலிருக்க தலையின் மூளைப் பகுதியைச் சார்ந்த செரிபெல்லம் எனும் பகுதியும், முதுகுத் தண்டு வடமும் முக்கியமானவை. முதுகுத் தண்டுவடத்தின் உள்வட்டப் பாதை சுருங்கினால் ஸ்பைனல் கார்டில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும் கால்கள் வலுவின்றி நடக்கும்போது தள்ளாட்டத்தைத் தரும். வாயு தோஷத்தின் குணங்களாகிய வறட்சி, லேசானதன்மை, குளிர்ச்சி, மொரமொரப்பு, நுண்ணியது, அசையும் தன்மை ஆகியவற்றால் வயோதிகத்தில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்படுவதால் கூன் விழுதல், எலும்பு பலஹீனம், உடல் தள்ளாட்டம் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. பஞ்சமஹா பூதங்களில் வாயுவும் ஆகாசமும் அதிக அளவில் வாயு தோஷத்தில் உள்ளன. அதைச் சரியான அளவில் நிலைநிறுத்த மற்ற மூன்று மஹா பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு ஆகியவற்றை அதிகம் கொண்ட இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளை உணவில் சமச் சீரான அளவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளவேண்டும். மேலும் மருந்துகளிலும் இந்த மூன்று மஹாபூதங்களை அதிக அளவில் சேர்த்துள்ள விதார்யாதி கஷாயம், அப்ரக பஸ்மம், தசமூல ரஸôயனம் போன்றவற்றைத் தகுந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு நீங்கள் கால்கள் வலுப்படும்படி செய்து கொள்ளலாம்.

Posted in Aches, Alternate, arthritis, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Body, Calf, diabetes, Head, Heart, heart attack, insulin, Knee, legs, medical, Medicines, Muscles, Natural, oil, Pain, Spasm, Strain, Sugar, Swaminathan | Leave a Comment »

Elephantiasis gene secrets mapped – BBC Tamil

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2007

யானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது கால்கள்
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது கால்கள்

உலக அளவில் பல நாடுகளில் லட்சக் கணக்கான மக்களை தாக்கும் யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம், யானைக்கால் நோய்க்கான மருந்துகள் அல்லது நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க வழிபிறக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

உலக அளவில் இந்த நோயின் காரணமாக, 13 கோடி மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்புக்கு அடுத்தபடியாக உலக அளவில் வலது குறைவுக்கான, இரண்டாவது காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் உலகில் 80 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. கொசுக்கடி காரணமாகவே இந்த நோய் பரவுகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சிகள் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலும், மேலும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிலும் நடைபெற்றபோதே இந்த நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம், அந்த மரபணுவில் எவ்வகையான புரதங்கள் உள்ளன என்று தெரியவந்திருப்பதாகவும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தடுப்பு முறைகளை முன்னெடுக்கவும் பெரும் வாய்ப்பு ஏற்படும் என இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் குய்லியானோ கூறியுள்ளார்.

இந்த முடிவுகள் மேலும் பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பலருக்கு தங்களது ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Posted in aanaikkaal, aanaikkal, Bacteria, Biotech, Blockbuster, Burkina Faso, Cases, Challenged, Chemists, China, cure, disability, Disabled, Disease, DNA, doctors, Drugs, Elephantiasis, eradicate, Eradication, genes, Genetic, Genetics, genitals, genome, immunisation, India, infected, Infection, legs, Medicine, Mosquito, parasite, R&D, Research, RnD, Science, Scientists, Sri lanka, Srilanka, Treatment, Vaccines, Viral, Virus, worms, yaanaikkaal, Yaanaikkal | Leave a Comment »

Depletion of world Mineral reserves – Consumption of Antimony, Gallium, Tantalum, Indium

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்

நெல்லை சு.முத்து

பூமி சூடேறி வருவதால் பனிப்படலங்கள் வட துருவப் பிரதேசத்தில் இருந்து உருகி அட்லாண்டிக் கடலில் கலக்கின்றன. இது பழைய செய்தி. ஆனால் ஒவ்வொரு 40 மணி நேரமும் கிரீன்லாந்து பனிப்படலங்கள் ஒரு கன கிலோமீட்டர் அளவுக்குக் கரைந்து வருகிறதாம். பாசதேனாவில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் எரிக் ரிக்னாட் தரும் தகவல் இது.

இந்த நீர், சென்னை போன்ற பெரு நகரங்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் தண்ணீர் அளவுக்குச் சமம். தமிழ்நாடு முழுவதும் 8 மில்லிமீட்டர் தண்ணீர் நிறைந்த மாதிரி. சென்னையில் மட்டும் இந்த வடதுருவப் பனி உருகிய நீரைக் கொண்டு வந்து ஊற்றினால் இரண்டு மாடி வீடுகள் நீருக்குள் மூழ்கிவிடும்.

சுற்றுச்சூழல் என்றதுமே நம்மவர் நினைவுக்கு வருவது

  • ஓசோன்,
  • கரியமில வாயு,
  • வாகனப்புகை – உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுச் சமாச்சாரங்கள் மட்டும்தாம். எல்லாரும் இன்று வாகனப்புகை பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறோம். “”மீட்டர் போட்ட ஆட்டோ வேண்டும். புகைவிடாத லாரி வேண்டும்” என்று புதுக்கவிதை பாடுகிறோம். ஆனால் அதைக் காட்டிலும் இன்னோர் அபாயம் காத்திருக்கிறது.

தர்மம் தலைகாக்கும் என்ற நம்பிக்கை இங்கு பலருக்கு இல்லை. தலைக்கவசம் அணிந்துதான் பயணம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 67 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவற்றால் சாலைகளில் பெரும் போக்குவரத்து நெருக்கடி.

இங்கிலாந்தில் கார்டிஃப் பல்கலைக் கழகத்தின் புவிவளப் பேராசிரியை ஹேசல் ப்ரிச்சார்டு என்ற பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். “”இங்கு தெருவெல்லாம் இவ்வளவு சுத்தமாக இருக்குதே” என்று அசந்து போனார். சாலையில் ஒரு வண்டி கூட இல்லையே என்ற அர்த்தத்தில் அல்ல. வியப்புக்குக் காரணம்- வீதி உண்மையிலேயே துடைத்துப் போட்ட மாதிரி இருந்ததாம். தெருவின் புழுதி எல்லாம் பாதசாரிகளின் காலணிக்குள் அல்லவா தஞ்சம் புகுந்து இருந்தது.

காலுறைகளில் வெறும் வியர்வை நாற்றம்தான்; ஆனால் காலணியின் புறப்பகுதியில் சகதி, சாணி போன்றவை ஒட்டி இருக்கும். அவர் காலணியிலோ கொஞ்சம் பிளாட்டினம் படிந்து இருந்ததாம். காலில் வெள்ளிக் கொலுசு அணியலாம். தங்கக் காப்பு கூட தரிக்கிறார்கள். ஆனால் பிளாட்டினம் அணிந்த உலகின் முதல் பெண்மணி ஹேசல் ப்ரிச்சார்டு. பிளாட்டினம் உண்மையில் மிகவும் அரிய வகை உலோகம். பூமியில் பிளாட்டினமோ, ரேடியமோ, சுமார் 79,840 டன்கள் செறிந்து உள்ளது. 89,700 டன்கள் தங்கம்; ஆனால் பிளாட்டினத்திற்குத் தங்கத்தைக் காட்டிலும் விலை அதிகம்.

அது சரி, இந்தப் பிளாட்டினம் காலில் ஒட்டியது எப்படி? வேறு என்ன, வாகனப் புகைதான். பெட்ரோல், டீசல் எரிவாயுக்களால் ஏற்படும் மாசு மட்டுமே நம்மை மூச்சு முட்டப் பண்ணுகிறது. அந்த வாயுக்களை வாகன எஞ்ஜினில் எரியச் செய்யும் மின்பொறியில் பிளாட்டினம் தகடு இருப்பது நமக்குத் தெரியாது. அதனைக் காற்றில் புகையுடன் கலக்கப்போவது யாரு? நீங்கள்தாம். ஒவ்வொரு முறையும் ஸ்கூட்டர், கார், லாரி, ஆட்டோக்களை இயக்கும்போது பிளாட்டினம் தேய்ந்து காற்றில் கலக்கிறதாம்.

இந்தத் தகவல் அதிர்ச்சி அளிக்கிறதா? ஆனால் சமையல் மணக்கச் செய்யும் வனஸ்பதி தயாரிப்புத் தொழில்துறையில் கிரியா ஊக்கியே இந்தப் பிளாட்டினம்தான். பூமியில் இந்த உலோகப் புதையல் வறண்டு வருகிறது. ஏறத்தாழ 50 கோடி வாகனங்களை இத்தகைய எரிமின் கலன்களில் இயக்கினால் அவ்வளவுதான். அடுத்த 15 ஆண்டுகளில் பிளாட்டினம் இல்லாத பாலைவனம் ஆகிவிடும் நம் பூமி. பூமியில் கையிருப்பே 79,840 டன்கள்தான்.

பிளாட்டினம் மட்டுமா, வேறு பல அரிய உலோகங்களையும் நாம் சுரண்டி வருகிறோம். மணல் முதல் சணல் வரை அனைத்து வணிக ஒப்பந்தங்களும் கட்சிக்காரர்களுக்கே வாய்க்கும். உலோகச் சுரங்கம் தோண்டலில் மட்டும் கட்சி பேதம் இல்லை.

உலகில் வறண்டு வரும் மற்றோர் அரிய உலோகம் இண்டியம். இது ஏறத்தாழ 6000 டன்கள் செறிந்து உள்ளது. ஆனால் இன்று இந்த உலோகத்தைத் தகவல் தொழில்நுட்பக் கருவிகளுக்கான எல்.சி.டி தயாரிக்கும் துறை விழுங்கி வருகிறது. நவீனத் தொலைக்காட்சி, கணினித் திரைகள் வடிவமைப்பில் இடம்பெறும் திரவப் படிக ஒளிர் முனையங்கள் இவை. அடுத்த பத்தாண்டுகளில் இண்டியம் வளமும் மறையும் நிலை என்கிறார் ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானி.

2003 ஜனவரியில் கிலோ 60 டாலருக்கு விற்ற இண்டியம் இன்று 1000 டாலர். நான்கே ஆண்டுகளில் பதினாறு மடங்கு விலையேற்றம். இதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படும் நிலை இல்லை.

பூமி கஜனாவில் காலியாகிவரும் இன்னோர் அரிய உலோகம் காலியம். சூரிய மின்கலன்கள் தொழில்நுட்பத்தின் இதயம் போன்றது இது. இண்டியம் – காலியம் ஆர்சனைடுப் பொருளால் ஆனவையே. மின்னணுவியலில் பெரிதும் பயன்படுவது. இனி வரும் காலங்களில் சூரிய மின்கலன்களின் ஒரு சதவீதத் தேவைக்கு மட்டுமே இந்த காலியம், இண்டியம் உலோகங்கள் கைகொடுக்கும். நெதர்லாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழக நிபுணர் ரேனே க்ளெய்ஜின் கணிப்பு இது.

கணிப்பொறித் திரைதான் பூமியை விழுங்கி ஏப்பம் விடுகிறது என்றால் நம் காதோரம் நெருங்கி உறவாடும் செல்ஃபோன் கூட பூமியின் வளத்தைப் பறித்து வருகிறதாம். என்ன செல்பேசித் தொழில்துறையினர் டான்டலம் என்கிற மற்றோர் அரிய உலோகத்தை இதற்காக அபகரித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் உலோகத் தாதுக்களில் பாதி டான்டலம் தானாம். அடுத்தபடி யுரேனியம். நாலில் ஒரு பங்கு. ரஷியாவிலோ அங்குள்ள உலோகங்களில் ஆறில் ஒரு பங்கு யுரேனியம். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் உலோகச் செல்வத்தில் பத்தில் ஒரு பங்கு யுரேனியம். உலகின் யுரேனிய வளம் 33 லட்சம் டன்கள். அணுமின் சக்தித் துறையினால் இந்த யுரேனியத்தின் பற்றாக்குறை வேறு தலைவிரித்து ஆடப்போகிறது.

உலகில் மிக அதிகமாகக் காணப்படும் உலோகத் தாதுக்களில்

  1. முதலிடம் பெறுவது அலுமினியம் -அதாவது 3235 கோடி டன்கள்.
  2. அடுத்தபடி தாமிரம் (94 கோடி டன்கள்),
  3. குரோமியம் (78 கோடி டன்கள்),
  4. துத்தநாகம் (46 கோடி டன்கள்),
  5. நிக்கல் (14 கோடி டன்கள்) போன்ற புழக்கத்தில் உள்ள உலோகங்களுக்கும் அடுத்த தலைமுறைக்குள் தட்டுப்பாடு வரும். ஆன்டிமனிக்கும் இதே முடிவுதானாம். அடுத்த பத்தாண்டுகளில் இதன் வளமும் வறண்டுவிடும்.

இன்று – “கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்’ என்று தலைவாழையில் உலோகங்களை உண்ணும் பகாசுரர்கள் யார்?

அமெரிக்காவில் 30 கோடி மக்கள். ஒவ்வொருவரும் ஆண்டுதோறும்

  • 107 கிலோ பாஸ்வரம்,
  • 20.3 கிலோ அலுமினியம்,
  • 8.1 கிலோ தாமிரம்,
  • 4.5 கிலோ துத்தநாகம்,
  • 5.3 கிலோ காரீயம் உண்டு வருகிறார்கள்.

நாமோ “பிளாட்டினம் இட்லி, வெள்ளித் தோசை, தங்கச் சோறு, பாஸ்வரச் சாம்பார், குரோமியக் குழம்பு, காரீயச் சட்னி, துத்தநாகத் துவையல்’ எல்லாம் சாப்பிடப் போவது மாதிரி நடந்து கொள்கிறோம். துறைதோறும் பணத்தைச் சுரண்டுவதற்கே வாதங்கள் புரிகிறோம். சுற்றுச்சூழல் என்ற உச்சரிப்பிலேயே “ஊழல்’ ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் எப்படி கனிமவள வறட்சியைத் தடுக்கப்போகிறோம் என்பதே இப்போதைய கேள்வி.

Posted in Air, Alloys, Aluminium, Antimony, Arctic, Auto, Automotive, Carbon, Cars, Cell, Cellphone, Chromium, Cooking, Copper, Earth, emissions, Empty, Environment, Expiry, Exploration, Gallium, Gas, Indium, Land, legs, Metals, Minerals, mines, Mobile, Natural, Nickel, oil, Ozone, Phones, Platinum, Pollution, Protection, Research, Rich, Shoes, Slippers, Socks, Surface, Tantalum, tantulum, Traffic, Warming, Water, Zinc | 1 Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid swelling in legs

Posted by Snapjudge மேல் மே 31, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் : “கால்’ வீக்கம் முழு நீக்கம்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)

இருதய வியாதிக்குப் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டவர் என் தம்பி. மேலும் சர்க்கரை வியாதிக்கு இன்சுலின் 2 வேளையும் போட்டுக்கொள்கிறார். இரண்டு பாதங்களிலும் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறது. நடக்கமுடியவில்லை. வயது 72. விரைவில் குணமடைய வைத்திய ஆலோசனை கூறவும்.

என்.ஆர்.சீனுவாசன், பண்ருட்டி.

கால் பகுதியில் சேரும் நீரின் அம்சங்களை ரத்தம் தன் அணுக்களின் சக்தியால் குழாய்களின் மூலம் எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஏற்படும் செயல்களின் தொய்வு இது போன்ற நீர்த்தேக்கத்தை கால்களில் ஏற்படுத்துகிறது. இருதயப் பகுதியில் ஏற்பட்டுள்ள பலவீனம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த செயற்கையான மருந்துகளின் உட்சேர்க்கை போன்றவற்றாலும் திசுக்களின் செயல்பாடுகளின் தொய்விற்கு வழி வகுக்கும்.

தசைகள், வியர்வைக் கோளங்கள், சிறுநீரகம், ரத்தஅணுக்கள், திசுக்கள் போன்ற பகுதிகள் வலுப்பெறும் மருந்துகளால் மட்டுமே உங்கள் தம்பிக்கு கால் வீக்கம் வராமல் பாதுகாக்க முடியும். நெருஞ்சி விதையை 10 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டிச் சாப்பிட்டால் கால் வீக்கம் வடியும்.

வாழைத் தண்டின் நீரைப் பருக நீர்ச்சுருக்கு, நீர்க்கல்லடைப்பு, சிறுநீரக அழற்சி, எலும்புருக்கி இவற்றில் குணம் கிட்டும். பசளைக் கீரை உணவில் அதிகம் சேர்க்க சிறுநீரை அதிகம் வெளியேறச் செய்யும். மலமிளக்கியாகவும் செயல்படும். பருப்புக் கீரையும் சாப்பிட நல்லது.

பழைய புழுங்கலரிசியை சிறிய அளவில் சாதமாக வடித்து அதில் பயித்தம் பருப்புக் கஞ்சியும், சுக்கு, மிளகு திப்பிலி ஆகியவற்றை வகைக்கு ஒரு கிராம் பொடித்துக் கலந்து, சிறிதளவு இந்துப்பு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நல்ல உணவாகும். மதிய வேளையில் ஒரு கிளாஸ் (250-300 மிலி) கொள்ளு ரசத்துடன், சிட்டிகை திப்பிலி சூரணத்தைக் கலந்து வெதுவெதுப்பாகக் குடிக்கலாம். புளிப்பில்லாத மோர் அருந்த வீக்கம் வடியும். மதிய உணவாக கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட சுக்கா ரொட்டியும் வெந்த காய்களுடன் சாப்பிட நல்லது.

கால் வீங்கியுள்ள பகுதியில் எருக்கு இலை போட்டுக் காய்ச்சிய தண்ணீரை வெதுவெதுப்பாக விடவும். பஞ்சாம்ல தைலம் எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தை காலை மாலை உணவிற்கு முன்பாக கால்களில் வீக்கம் உள்ள பகுதிகளில் தடவி அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊறி அதன் பின்னர் எருக்கு மூலிகைத் தண்ணீரால் கழுவி விடுவதும் நல்லதே.

முருங்கைப் பட்டையைப் பசு மூத்திரத்துடன் அரைத்து வீக்கம் வந்துள்ள பகுதியில் இரவில் பூச, வீக்கம் வலி குறைந்து விடும்.

தவிர்க்கப்பட வேண்டியவற்றில் புலால் உணவு, உலர்ந்த கறிகாய் எனக் கலக்கப்பட்ட சாதம், வெல்லம் கலந்த நீர், மாவுப் பண்டங்களாகிய இட்லி, தோசை போன்றவை, தயிர், அதிக உப்புக் கலந்த பொருட்கள், வெண்ணெய், நெய், புளிப்பான மதுவகை, எண்ணெய்யில் பொரித்தவை, எளிதில் ஜீரணிக்காததும், பழக்கமில்லாததும், நெஞ்செரிவு உண்டாக்கக்கூடியதுமான உணவு, பகல் தூக்கம், பெண் சேர்க்கை ஆகியவை முக்கியமானவை.

ஆயுர்வேத மருந்துகளில் பலாபுனர்நவாதி கஷாயமும், பிருகத்யாதி கஷாயமும், கோகிலாக்ஷம் எனும் கஷாயமும் சிறந்தவை. வகைக்கு 5 மிலி எடுத்து 60 மிலி சூடானதைத் தண்ணீருடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். நல்ல பசியிருந்தால், தசமூலஹரீதகீ லேஹ்யம் ஒரு ஸ்பூன் (5 கிராம்), காலை இரவு -உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிடவும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Foot, Health, Healthcare, insulin, legs, Medicines, Natural, Sugar, surgery, Swaminathan, Swell, swelling | Leave a Comment »