என்னை கலியுகக் கண்ணன் என்று வருணித்த அமைச்சர் சக்ரவர்த்திக்கு மூளை பிசகிவிட்டது: ஜோதிபாசு
கோல்கத்தா, செப். 20: என்னை கலியுகக் கண்ணன் என்று வருணித்த போக்குவரத்து அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்திக்கு மூளை பிசகிவிட்டது என்று மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசு கூறினார்.
மேற்கு வங்க மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி. இவர் சமீபத்தில் வங்க மொழிப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவை “கலியுகக் கண்ணன்’ என்று வருணித்திருந்தார். இதன்மூலம் அவர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கோல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய ஜோதிபாசுவிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டனர்.
“என்னை கலியுகக் கண்ணன் என்று அமைச்சர் சக்ரவர்த்தி கூறி வருணித்துள்ளார். அதை ஏற்கமுடியாது. சமீபகாலமாக மனம்போனபடி அவர் பேசி வருகிறார். அவருக்கு மூளை பிசகிவிட்டது போல் தெரிகிறது’ என்று ஜோதிபாசு கூறினார்.
சமீபத்தில் பிர்பும் மாவட்டம், தாரபீடத்தில் உள்ள காளி கோயிலுக்குச் சென்று வந்த சுபாஷ் சக்ரவர்த்தி, “நான் முதலில் ஹிந்து, பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவன்; அப்புறம்தான் கம்யூனிஸ்ட்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இதுதொடர்பாக கட்சியின் மாநில செயலர் பிமன் போஸ் கருத்து தெரிவிக்கையில், மத நம்பிக்கை உள்ள ஒருவரை கட்சியிலிருந்து விலக்கி வைக்க கட்சி விதிகளில் இடமில்லை. ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்த ஒருவர் மார்க்சீய, லெனினீய கொள்கைகளை பற்றி நடப்பதுதான் சரியான முறையாகும் என்று கூறியிருந்தார்.
இப்போது ஜோதிபாசுவை கலியுகக் கண்ணன் என்று கூறியதன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் சுபாஷ் சக்ரவர்த்தி.
“முடிந்தால் வெளியேற்றுங்கள்’: மேற்குவங்க அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி
கோல்கத்தா, செப். 20: முடிந்தால் என்னை கட்சியிலிருந்து வெளியேற்றட்டும் என்று மேற்குவங்க மாநில போக்குவரத்து அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி கூறினார்.
“மகாபாரதத்தில் கிருஷ்ணன் எப்படியோ அதுபோல மார்க்சிஸ்ட் கட்சிக்கு தலைவர் ஜோதிபாசு கலியுகக் கண்ணனாக இருக்கிறார்’ என்று தான் நான் குறிப்பிட்டேன்.
ஆனால், நான் எந்த அர்த்தத்தில் சொன்னேன் என்பது புரியாமல் ஜோதிபாசு என்னை மூளையில்லாதவன் என்று கூறியுள்ளார். எனக்கு மூளை இல்லை என்று கட்சி கருதுமானால் என்னை கட்சியிலிருந்து வெளியேற்றட்டும். மூளையில்லாதவன் எப்படி கட்சியிலிருந்து செயல்பட முடியும் என்றார் சுபாஷ் சக்ரவர்த்தி.