Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Kalchuvadu’ Category

Indian Freedom Fighters: Joseph George – Pazha Athiyaman in Dinamani Kathir

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

முகங்கள்: “”மாறாமல் இருப்பது மைல்கல்லும் மதியீனனும்தான்!”

மோதிலால் நேரு, காந்தி, நேரு, ராஜாஜி, பெரியார் போன்ற பெருந்தலைவர்களின் பேரன்புக்குப் பாத்திரமான இந்திய அளவில் காங்கிரஸ் இயக்கத்துக்காகப் பாடுபட்ட தலைவர் ஜோசப் ஜார்ஜ். வரலாற்று மாணவர்களின் பார்வைக்கும் சிக்காமல் காணாமல் போய்விட்ட இவரைப் பற்றி சமீபத்தில் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். எழுதியிருப்பவர் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சி (திருப்பதி) அமைப்பாளர் பழ. அதியமான். எழுத்தாளர் வ.ரா. வின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதும் எழுத்தாளர் தி.ஜ.ர. பற்றி இவர் எழுதிய நூல் சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டிருப்பதும் இவருடைய சிறப்புகள். அவரைச் சந்தித்தோம்.

இந்திய விடுதலை வரலாற்றில் ஜோசப் ஜார்ஜின் இடம்?

மைய நீரோட்ட அரசியலில் கிறித்துவர்களின் பங்கேற்பு அவ்வளவாக இல்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைப்பதாக இருக்கிறது ஜார்ஜ் ஜோசப்பின் இந்திய விடுதலைப் போராட்டப் பங்களிப்பு. மகாத்மா காந்தி, “”ஜார்ஜ் ஜோசப் என்னுடைய நெருக்கமான தோழர்களுள் ஒருவர். நான் எரவாடா சிறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது யங் இந்தியாவின் ஆசிரியர். அதற்கு முன்னால் என் விருப்பப்படி (மோதிலால் நேருவின்) “தி இண்டிபென்டன்ட்’ பத்திரிகையின் ஆசிரியர். நாட்டுக்காக வருமானமுள்ள வழக்கறிஞர் தொழிலைத் துறந்தவர். சிறை சென்றவர். உற்சாகமுள்ள நாணயமான தேசியத் தொண்டர்.” இது ஜார்ஜ் ஜோசப் வாழும் காலத்திலேயே காந்தி (1929)யிடமிருந்து அவருக்குக் கிடைத்த பாராட்டு.

காந்தி பாராட்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஜோசப், தீவிர அரசியல்வாதியாக, தொழிற்சங்கவாதியாக, வழக்கறிஞராக தமிழக தேசிய அரசியலில் 25 ஆண்டு காலம் செயல்பட்டார். ஆலைத் தொழிலாளர், குற்றப் பரம்பரையினர், வரதராஜுலு நாயுடு மீதான வழக்கு போன்றவற்றில் ஜார்ஜ் ஜோசப்பின் பணி மிகுதி. வ.ரா. சொன்னது போல ஜோசப்பும் ராஜாஜியும்தான் 1910-லிருந்து 1938 வரை ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் தமிழக காங்கிரசின் வேலைத் திட்டங்களை யோசித்துத் தீர்மானித்தனர். 100 ஆண்டுகால காங்கிரஸ் வாழ்க்கையில் நான்கில் ஒரு பகுதி. ஆனால் ஜார்ஜ் ஜோசப் என்றால் யார் என்று கேட்கும்படிதான் நிலைமை இருக்கிறது.

ஜோசப் பரவலாக அறியப்படாததற்கு விடுதலைக்கு முன்பே மறைந்துவிட்டதுதான் காரணமாக இருக்குமா?

அப்படித் தோன்றவில்லை. பாரதி, சத்தியமூர்த்தி, வ.உ.சி. போன்றவர்கள்கூட சுதந்திரத்துக்கு முன்பு இறந்தவர்கள்தானே? ஜார்ஜ் ஜோசப் சிறுபான்மைச் சமூகத்தில் பிறந்ததும் அரசியல் வாரிசோ, குடும்ப வாரிசோ தொடர்ந்து அவரைப் பற்றிச் சமூகத்தில் பேச்சலைகளை உருவாக்காததும் காரணங்களாக இருக்கலாம். ஆனால் சரியாக மனசாட்சிப்படி செயல்பட்டால் காலம் கடந்தாவது அறிவுலகத்திலாவது நினைக்கப்படுவார்கள் என்பது ஓர் உண்மை.

தன் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டிருந்தார் ஜோசப்… காந்திக்கு நெருக்கமாக இருந்து பின்பு அவருடன் முரண்பட்டு நீதிக்கட்சியில் இணைந்து செயல்பட்டு மீண்டும் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்த மாற்றங்கள் அவருடைய செல்வாக்கைக் குறைத்திருக்குமா?

இருக்கலாம். கருத்துகளை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தவர் என்றொரு கருத்து உண்டு. அதைப் பற்றி வ.ரா. இப்படிச் சொல்கிறார்: “”மைல் கல்லும் மதியீனனும்தான் மாறாம இருப்பாங்க”.

ஜோசப் அறிவாளி. காந்தி கருத்தை மாற்றிக் கொள்ளவில்லையா? கலப்பு மணத்துக்கு முதலில் காந்தி ஒப்புக் கொள்ளவில்லையே. சுதேசா- கிருபளானி கலப்பு மணத்துக்கு உடனே வா ஒப்புக் கொண்டார் காந்தி?

“மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பார்கள் கம்யூனிஸ்டுகள்’ என்ற புகழ் பெற்ற பத்திரிகை வாசகத்தை கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக எழுதின மாஜினி பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறவில்லையா? மாறுவது, முரண்படுவது அறிவுக்கு இயல்பு. ஜோசப்பின் முரண்பாடுகளைத் தவறென்று சொல்ல முடியாது.

அப்படி மாறுவதற்கு அவருக்குப் போதுமான காரணங்கள் இருந்தனவா?

காந்தி, நேரு ஆகியோருடன் நெருக்கமாக இருந்த ஒருவர், அவர்கள் படுவேகமாக அரசியல் களத்தில் செல்வாக்குடன் வளர்ந்து வருவதைக் கண்டும் ஜோசப் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அதில் அவருடைய சுயநலம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது அப்போதைய அரசியல், சமூக சூழ்நிலையைப் பொறுத்தே அமைந்திருந்தது. சில நேரங்களில் அறிவுப் பூர்வமாகவும் சில நேரங்களில் உணர்ச்சிபூர்வமாகவும் அவர் முடிவெடுத்திருக்கிறார்.

குற்றப் பரம்பரையினர் என்று ஆங்கிலேய ஆட்சியில் சட்டத்தின் பிடியில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஜோசப் பாடுபட்டது குறித்து?

குற்றப் பரம்பரையினருக்கு ஜோசப் அனுசரணையாகச் செயல்பட்டது பற்றி இந்த நூலில் மிகக் குறைவான தகவல்களே தந்திருக்கிறேன். அவர் மறைந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் மதுரையில் இருக்கும் அவருடைய கல்லறையில் நினைவு தினத்தன்று குறிப்பிட்ட பிரிவினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதிலிருந்தே அவர்களுக்கு ஜோசப் எந்த அளவுக்குப் பாடுபட்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

Posted in 1947, Adhiaman, Adhiyaman, Athiaman, Athiyamaan, Athiyaman, Biography, Biosketch, British, Congress, Dinamani, Faces, Fighters, Freedom, Gandhi, Gandi, George, Independence, India, Joseph, Joseph George, Kaalchuvadu, Kalchuvadu, Kathir, Mahathma, Mahatma, Pazha Athiyaman, people, Research, Unknown | 1 Comment »

‘Rasavathy’ Book review – Na Kavitha (Thozhi.com)

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2007

 

புத்தக அறிமுகம்: பௌலோ கொய்லோவின் ரஸவாதி

– ந. கவிதா

பஞ்சதந்திரக் கதைகள், சிந்துபாத், கன்னித்தீவு என்று நமது குழந்தைமையின் கதைச் சூழலையும் கற்பனையையும் வளப்படுத்திய கதைகள், இன்று புதிய பரிமாணத்தில் தத்துவம் சார்ந்தும் அறம் சார்ந்தும் அணுகும் விதம் கதை சார்ந்த தேடலை இன்னும் அதிகப்படுத்தலாம்.

ரஸவாதியும் அத்தகைய பல பரிமாணங்களைத் தரும் கதைதான். ஸ்பெயின் நாட்டுக் கதை இது. ஆங்கிலத்தில் ‘The Alchemist’ என்று மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல் நாற்பத்தி இரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புடையது. உலகில் அதிகம் விற்பனை ஆன நாவல்களின் வரிசையில் நான்காம் இடத்தைப் பிடித்தது இந்தப் புத்தகம்.

1987ஆம் ஆண்டு இந்நாவல் வெளியானபோது, கவனம் பெறவில்லை. பதிப்பகத்தார் இந்தப் புத்தகத்தை வாபஸ் பெற்றுவிடலாமென்று நினைக்குமளவிற்கு இருந்த விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, 18 நாடுகளில் அதிகம் விற்பனையான நாவல்களின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.

ஆடு மேய்க்கும் சிறுவன் சந்தியாகு இயற்கையின் மீது அதீதக் காதல் கொண்டவன். அதே அளவிலான காதல் பயணம் செய்வதிலும் உண்டு. ஆடுகள் தான் சொல்வதைக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் கூடியவை என்று நம்பும் இந்தச் சிறுவன், தான் வாசிக்கும் புத்தகங்களில் பிடித்த வரிகளை ஆடுகளுக்கும் வாசித்துக் காட்டுவான்.

ஒரு புதையலைப் பற்றி இரு முறை கனவு கண்ட சந்தியாகுவுக்கு அந்தக் கனவின் பலனை ஒரு நாடோடிப் பாட்டி சொல்கிறாள். அதற்குக் கைமாறாக, கிடைக்கவிருக்கும் புதையலில் தனக்கும் ஒரு பங்கைக் கேட்கிறாள்.

சந்தியாகு அதற்குச் சம்மதித்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்கிறான். வழியில் கிழட்டு ராஜா ஒருவரைச் சந்திக்கிறான். அவரும் புதையலைத் தேடிச் செல்லும் ஆர்வத்தை அவனுக்கு ஏற்படுத்தி எகிப்தியப் பிரமிடுகளை நோக்கிப் பயணப்படச் செய்கிறார். இரண்டு சகுனக் கற்களையும் சிறுவனுக்குப் பரிசளிக்கிறார். அதற்கு ஈடாக ஆறு ஆடுகளைப் பெற்றுக்கொள்கிறார். “உண்மையில் நீ ஒன்றை விரும்பினால், இந்தப் பிரபஞ்சமே உனக்கு அதைத் தரும்” என்கிறார் அந்தக் கிழட்டு ராஜா.

எகிப்தியப் பிரமிடுகளை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆட்டு மந்தைகளை விற்கிறான் சந்தியாகு. அந்தப் பணத்தையும் ஏமாந்து இழக்கிறான். ஒரு வேளை உணவிற்காக, பளிங்குக் கடைக்காரர் ஒருவரிடம் உதவியாளாய்ச் சேரும் சந்தியாகு, அவரது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறான். ஓராண்டு பணிசெய்த பின் தன் ஆட்டு மந்தையைத் திரும்ப வாங்குமளவிற்கும் ஊருக்குத் திரும்புமளவிற்கும் அவனிடம் பணம் சேர்கிறது.

சந்தியாகுவுக்குள் பழைய தேடல் மீண்டும் உருப்பெற, பாலைவனப் பயணத்தைத் தொடங்குகிறான். வழியில் ஆங்கிலேயர் ஒருவரைச் சந்திக்கிறான். அவர் ரஸவாதம் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு ரஸவாதியைத் தேடிச் சென்றுகொண்டிருக்கிறார். அவரும் சந்தியாகுவும் நண்பர்களாகிறார்கள்.

பாலைவனப் பயணத்தில் சந்தியாகு, பாத்திமாவைச் சந்திக்கிறான். காற்று தன்னிடம் கொண்டுவந்து சேர்த்த பெண்ணின் வாசம் அவளுடையதுதான் என உணர்கிறான் அவன். அவளிடம் காதல் கொள்கிறான். சந்தியாகு பாலைவனச் சோலையில் வாழும் பழங்குடி மக்கள் தலைவனுக்குப் போர் பற்றிய சகுனத்தைச் சொன்னதால் நன்மை விளைகிறது. தலைவன் பரிசும் பதவியும் கொடுத்துக் கௌரவிக்க, அங்கேயே பாத்திமாவுடன் வாழ்ந்துவிடத் தீர்மானிக்கிறான். அந்தச் சமயத்தில் அவன் ரஸவாதியைச் சந்திக்கிறான். ரஸவாதி, “உனது இலட்சியம் எகிப்துப் பிரமிடுகளில் இருக்கிறது” என்று இலக்கை நோக்கி அவனைச் செலுத்துகிறார்.

“உன் இதயம் சொல்வதைக் கவனி. அதற்கு எல்லாம் தெரியும். உன் இதயம் எங்கேயிருக்கிறதோ அங்கே உனக்கான புதையலும் இருக்கிறது” என்று ரஸவாதி சொல்ல, சந்தியாகு பிரமிடை அடைகிறான். சந்தியாகு தேடி வந்த புதையல் தொடக்கத்தில் அவன் இருந்த பாழடைந்த தேவாலாயத்தில் இருந்தது. அப்பொழுது அவன் கையில் மண்வெட்டி இருந்தது என்று நாவல் முடிவடைகிறது.

அவனது லட்சியப் புதையல் எகிப்துப் பிரமிடுகளில் இருந்ததா இல்லையா என்பதைவிட, அதற்கென அவன் தீர்மானித்த பயணம், அந்தப் பயணம் அவனுக்குத் தந்த அனுபவப் பாடங்கள், பிரபஞ்சம் கற்றுத் தந்த ஆன்மாவின் மொழி, இவையெல்லாம் இக்கதையில் முக்கியமானவை. சகுனங்களின் மீதுள்ள நம்பிக்கை, விதியின் தீர்மானம், இவற்றை மையச்சரடாகக் கொண்டு அமைந்த இந்த நாவல், தத்துவம் சார்ந்த பல பரிமாணங்களை வாசக மனத்திற்குத் தருகிறது.

உண்மையில் ஒன்றை விரும்பும்போது பிரபஞ்சமே அதைத் தரும் என்ற ரஸவாதியின் வார்த்தைகளை, நாம் அதற்காக எடுத்துக்கொள்ளும் முயற்சியில், இடைவிடாத் தேடலில் கிடைக்கும் வெற்றியாகப் புரிந்துகொள்ளத் தோன்றுகிறது. இயற்கையைப் புரிந்துகொண்டால் உலகின் மொழியை, பிரபஞ்சத்தின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள முடியும் என்ற வரிகளைத் தத்துவம் சார்ந்தவையாக மட்டுமின்றி யதார்த்தம் சார்ந்தும் அறிவியல் சார்ந்தும்
பொருள்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது.

வாழ்வின் பாதையில் மிகச் சரியாகப் பயணப்பட வேண்டுமென்றால், இதயம் சொல்வதைக் கவனமாகக் கேள் என்ற இந்நாவலின் கருத்து, சகுனங்களின் மீது நம்பிக்கையற்றவர்கள், சகுணங்களைத் தமது உள்ளுணர்வுகளாகப் புரிந்துகொள்வதற்கான தளத்தைத் திறந்துவைக்கிறது.

மிக அழகிய மொழி நடையில் அமைந்த ரஸவாதி, இயற்கையை அழகியலோடும் தத்துவத்தோடும் இணைத்துக் காட்டுகிறது. தமிழில் மொழிபெயர்த்த பொன். சின்னத்தம்பி முருகேசனின் பணி சிறப்பானது.

கனவுகளையும் அவை தரும் பயணங்களையும் எப்பொழுதும் வாழ்விற்கு வளம் சேர்க்கும் கூறுகள் என்னும் ரஸவாதி, கனவாக இருந்தாலும் அதற்கான தேடலையும் நம்பிக்கை இழையோடும் சந்தியாகுவின் அன்பைச் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. விதியின் வழி தீர்மானிக்கப்பட்டுவிட்ட வாழ்க்கைப் பயணத்தில், மனித அற்புதங்களை விட இயற்கையின் அற்புதத்தையும் எதிர்காலம் ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது ரஸவாதி.

ரஸவாதி
– பௌலோ கொய்லோ
ஆங்கிலம் வழித் தமிழில்:
பொன். சின்னத்தம்பி முருகேசன்
விலை: ரூ. 80.
வெளியீடு: காலச்சுவடு, நாகர்கோவில்.

Posted in Coelho, Kaalchuvadu, Kalchuvadu, Literature, Paulo, Paulo Coelho, Rasavaathi, Rasavaathy, Rasavathi, Rasavathy, Tamil, The Alchemist, Translation | 3 Comments »