நீதிமன்றத்துக்கு விமோசனம் எப்போது?
ஜி.சுந்தரராஜன்
சிதம்பரம், அக்.17: சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோயில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ரூ.11,500 வாடகையில் பெரியகுளம் வடக்குத் தெருவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்த கட்டடத்தில் போதுமான வசதி இல்லாததால் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் அவதியுற்று வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் வழக்கறிஞர் சங்கம் இயங்கி வந்த கட்டடம் இடிந்து விழுந்தது. பின்னர் அக்கட்டடம் கட்டப்பட்டது. 3 கழிவறைகளில் இரு கழிவறைகள் இடிந்து விழுந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. நீதிமன்ற வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த இடம் கிடையாது.
பொதுமக்கள் வெயில், மழை ஆகியவற்றுக்கு ஒதுங்கக்கூட இடம் கிடையாது. நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என காட்டுமன்னார்கோயில் வழக்கறிஞர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கோரிக்கை விடுத்னர். அதையடுத்து புதிய இடம் வாங்கி கட்டடம் கட்ட உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதற்காக காட்டுமன்னார்கோயில் உடையார்குடி ரம்சான் தைக்கால் என்னுமிடம் தேர்வு செய்யப்பட்டது.
மேற்கண்ட இடம் சிதம்பரம் – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ளது. சுமார் 100 சென்ட் வரை எவ்வித உபயோகமும் இன்றி உள்ளது. இந்த இடம் ரம்சான் தைக்கால் பள்ளிவாசலுக்கு சொந்தமானது. இந்த பள்ளிவாசல் சொத்து அனைத்தும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் உள்ளது. இந்த சொத்தை வக்ஃப் வாரியத்திடம் இருந்து விலைக்கு வாங்கி புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட அனுமதி வழங்கி கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு கடந்த 23-06-2006 அன்று சென்னை உயர் நீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.
ஏழை பாமர மக்கள் வசிக்கும் பகுதியான காட்டுமன்னார்கோயிலில் பெண்கள் அதிக அளவில் தங்கள் பிரச்னைகளுக்கு மனுக்கள் கொடுத்து நிலுவையில் இருந்து வருகிறது. பெண் வழக்கறிஞர்கள் இருந்தும் மகளிருக்கான சமரச மையம் இந்த நீதிமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காட்டுமன்னார்கோயில் நகர எல்லைக்குட்பட்ட பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் அரசால் கட்டப்பட்ட திருமண மண்டபம் எந்த உபயோகமும் இல்லாமல் மூடப்பட்டு கிடக்கிறது. அனைத்து வசதிகளும் உள்ள இந்த இடத்துக்கு நீதிமன்றத்தை மாற்றலாம். இல்லையென்றால் தற்போது தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு மாற்றம் செய்யப்படவுள்ளது.
எனவே பழைய தாலுகா அலுவலக கட்டடத்தில் நீதிமன்றத்தை மாற்றலாம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே 1977 வரை அங்கு நீதிமன்றம் இயங்கி வந்தது. அந்த நீதிமன்றம் பின்னர் பரங்கிப்பேட்டைக்கு மாற்றப்பட்டது.
எனவே காட்டுமன்னார்கோயில் நீதிமன்றக் கட்டடம் கட்ட மாவட்ட ஆட்சியர் இடத்தை விரைவில் தேர்வு செய்து அளித்தால் நீதிமன்றத்துக்கு விமோசனம் கிடைக்கும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.