Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Jeyaganthan’ Category

‘I have no difference of opinion with writer Jeyaganthan’ – Karunanidhi

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

ஜெயகாந்தனுடன் எனக்கு முரண்பாடு கிடையாது: முதல்வர்

சென்னையில் முரசொலி அறக்கட்டளையின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விருது பெற்ற சிலம்பொலி செல்லப்பன், ஜெயகாந்தன், மனோரமா, முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை, ஜன. 24:எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் தனக்கு ஒருபோதும் முரண்பாடு ஏற்பட்டதே கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

முரசொலி அறக்கட்டளை சார்பில் கலைஞர் விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

தலா ரூ. 1 லட்சம் பொற்கிழி, பாராட்டுப் பத்திரம், கேடயம் ஆகியவற்றை உள்ளடக்கிய “கலைஞர் விருது’ எழுத்தாளர் ஜெயகாந்தன், சிலம்பொலி செல்லப்பன், நடிகை மனோரமா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவற்றை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியது:

எனக்கும் ஜெயகாந்தனுக்கும் இருந்த பகை தற்போது ஓடி ஒளிந்துவிட்டது போல பலரும் பேசினர். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததே அன்றி முரண்பாடு ஏற்பட்டது கிடையாது. அவருக்கும் எனக்கும் இடையிலான நட்பு பாலும் தண்ணீரும் போன்றது. இரண்டும் சேர்ந்தால் அதைப் பிரிப்பது கடினம். இதுதான் வேறுபாடு. ஆனால் எங்களுக்குள் தண்ணீரும் எண்ணெயும் போல முரண்பாடு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

1980-ம் ஆண்டு எனது பிறந்த நாளன்று ஜெயகாந்தன் ஒரு புத்தகத்தை பரிசாக அளித்தார். 1980-ம் ஆண்டிலேயே நண்பர்களாக இருந்தவர்கள், இப்போதா மாறியிருக்கப் போகிறோம். ஜெயகாந்தனின் எழுத்துகளை எந்த நிலையிலும் நேசிப்பவன். இன்னும் ஒருபடி மேலே சொல்வதானால் காதலிப்பவன்.

தற்போது நடைபெறும் சட்டப் பேரவை தொடரிலே, ஆளுநர் உரையில் கூட காலத்துக்கேற்ற வகையில் அரசியல் சாசனத்தில் மாறுதல் செய்ய வேண்டும், தேவைப்பட்டால் முழுமையாக திருத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம்.

இதேகருத்தை ஜெயகாந்தன் தனது நூலான “வாக்குமூலத்தில்’ பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளார்.

“”மத்திய அரசு யாருடைய பிரதிநிதி. மாநிலங்களுக்கு சுய நிர்ணய சாசனம் இல்லாத நிலையில் அது வெறும் அடிமைச் சாசனமே” என்று குறிப்பிட்டுள்ளதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அரசியல் ரீதியாக ஒன்றுபடக்கூடிய எழுத்து மற்றும் கருத்துகளை எப்போதும் ஆணித்தரமாக வெளிப்படுத்தக் கூடியவர் ஜெயகாந்தன்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியபோது, அதை எதிர்த்து பொதுக்கூட்டங்களில் முழங்கியவர் ஜெயகாந்தன். அப்படிப்பட்டவர் இந்த விருதை ஏற்றுக் கொண்டதிலிருந்தே எங்களுக்கிடையே உள்ள நட்பு புரியும் என்றார் கருணாநிதி.

நிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விருது பெற்ற சிலம்பொலி செல்லப்பன், ஜெயகாந்தன், மனோரமா ஆகியோர் ஏற்புரை வழங்கினர். திராவிடர் கழக பொதுச் செயலர் கி. வீரமணி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் இராம. வீரப்பன், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் விருது பெற்றவர்களை பாராட்டிப் பேசினர்.

Posted in Jeyagandhan, Jeyaganthan, Jeyakanthan, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, K Veeramani, Ka Anbalagan, Ka Anbhazhagan, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, manorama, MK Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murasoli, RM Veerappan, Silamboli Chellappan, Silamboli Sellappan | Leave a Comment »

Kalam opens Kaalachuvadu Literary meet

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

மனித சமூகத்தை மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம் “தமிழ்’- இலக்கிய கருத்தரங்கில் கலாம்

கோவை, டிச. 19: மனித சமுதாயத்தைச் சிறப்புடன் மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம் என்று தமிழுக்குப் புகழாரம் சூட்டினார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

கோவையில் காலச்சுவடு அறக்கட்டளை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் திங்கள்கிழமை தொடக்கி வைத்து அவர் பேசியது:

பாரதியார் 125 ஆண்டுகளாக நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எழுத்தாளர் புதுமைப்பித்தன் 100 ஆண்டுகளாகவும், சுந்தரராமசாமி 75 ஆண்டுகளாவும் நமது நினைவில் இருக்கின்றனர்.

1910-ல் பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் “இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென…’ என்ற கவிதையை சரஸ்வதி வந்தனமாகப் பாடுகிறார். இதன் அறிவியல் கருத்து என்னவெனில், “பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. அதேபோல சூரியன், பூமி அனைத்தும் சுழற்சியின் இயக்கத்தில் அண்டசராசரத்தில் சுழன்று கொண்டே இருக்கின்றன. ஓயாது, ஒழியாது இச் சுற்றல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதைப்போல நாமும் ஓயாது, துவளாது முயற்சி செய்தால் இறையருளால் நம்நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை’ என்பதாகும். ஒரு விஞ்ஞானியைப் போல கவிதை பாடியுள்ளார் பாரதியார்.

பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து பரவிய தமிழ்மொழி இன்னும் புதுமையாக, இளமையாக இருக்கிறது. பல நாடுகளில் தமிழ் மொழி கொழிக்கிறது; பல்வேறு துறைகளில் தமிழர்கள் சிறப்பு பெறுகிறார்கள்; அவர்களின் மொழியன்பு தமிழை மேலும் மேலும் ஜொலிக்க வைக்கிறது.

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள் என்று இணையதளங்களில் தமிழ் பரிமாணிப்பது புது மகிழ்ச்சியைத் தருகிறது.

தமிழ் ஒரு பிரதேச மக்களின் மொழி மட்டுமில்லை. மனித வாழ்வை மேம்படுத்தி மனித சமுதாயத்தை சிறப்புடன் மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம். இதை நினைவுகூர்ந்து படைப்பாளிகள் தங்களது படைப்புகளைச் செய்தால் உலகுக்கு மிகவும் நன்மை கிடைக்கும் என்றார் கலாம்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறப்புரையாற்றினார். ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Posted in A P J Abdul Kalam, APJ Abdul Kalaam, Coimbatore, Jeyaganthan, Jeyakanthan, Kaalachuvadu, Kalachuvadu, Kovai, Krishna Sweets, Literary, Puthumaipithan, S Kannan, Subhramanya Bharati, Sundara Ramasamy, Tamil, Tamil Literature, Thamizh, YS Rajan | Leave a Comment »

Ilaiyaraja starts a Tamil Ilakkiya Manram with Jeyaganthan as Head

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

தமிழ் அறிஞர்களைக் கௌரவிக்க புதிய இலக்கிய மன்றம்- இளையராஜா தொடங்குகிறார்

சென்னை, நவ.7: சிறந்த தமிழ் அறிஞர்களைக் கெüரவிப்பதற்காக இசையமைப்பாளர் இளையராஜா புதிய இலக்கிய மன்றத்தை தொடங்குகிறார்.

இதுகுறித்து இளையராஜா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வரும் அறிஞர்களை கெüரவிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதன்படி பலருடன் கலந்தாலோசித்து ஓர் இலக்கிய மன்றத்தை உருவாக்கியிருக்கிறோம்.

இந்த மன்றத்துக்கு அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க “இசைஞானி இலக்கிய மன்றம்‘ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் தொடக்க விழா வரும் டிசம்பர் 2-ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

  • இதற்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைவராகவும்,
  • ஆறு அழகப்பன் செயலாளராகவும் இருப்பார்கள்.
  • அப்துல் ரகுமான்,
  • வாலி,
  • மு.மேத்தா,
  • முத்துலிங்கம்,
  • ஞானசுந்தரம்,
  • திருப்பூர் கிருஷ்ணன்,
  • ரவி சுப்ரமணியம் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

சிறந்த படைப்புகளைப் படைக்கும் அறிஞர்களுக்கும், புதியவர்களுக்கும் இந்த மன்றத்தின் பெயரில் ரொக்கப் பணமும், பரிசுகளும் வழங்கப்படும்.

இவை “பாவலர் வரதராஜன் நினைவுப் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.

என்னுடைய இசையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் “அஜந்தா‘ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் அதே நாளில் பொதுமக்கள் முன்னிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் வரும் லாபத்தை ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக அளிக்கவிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கர். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்றார் இளையராஜா.

Posted in Abdul Rehman, Ajantha, Charity, Ilaiyaraja, Ilakkiya Manram, Isainjaani, Jeyaganthan, Jeyakanthan, Kavikko, Literature, Madurai, Mu Mehtha, Muthulingam, Paavalar, Pavalar Varadarajan, Ravi Subramaniam, Tamil Poets, Thamizh, Thamukkam, Thiruppur Krishnan, Vaali | Leave a Comment »

Jeyakaanthan – Maanpumigu Manithargal

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 4, 2006

புதுமைப் பித்தனுக்குப் பிறகு, தமிழ்ச்சிறுகதை உலகில் மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்; எழுத்தாளர்கள் ஐம்பது வயதிலடையும், அனுபவங்களையும் புகழையும் தன் முப்பதாவது வயதிலேயே அடைந்தவர். சாகித்ய அகாடமி விருதும், இந்திய எழுத்தாளர்களின் உச்சக் கனவான ஞானபீட விருதையும் பெற்று தமிழ் இலக்கியத் தரத்தை உலகுக்குணர்த்தியவர். பேச்சாளர்; அரசியல்வாதி; இன்னும் நிறைய நிறைய எழுதலாம். ஆனால், அவற்றையெல்லாம் ஒரே வார்த்தையில் குறிப்பிட வேண்டுமென்றால் _ ‘ஜெயகாந்தன்!’. இயற்பெயர் முருகேசன்.

பழைய தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கடலூர் _ மஞ்சக்குப்பம்தான் ஜெயகாந்தன் பிறந்த ஊர். பெற்றோர் : தண்டபாணிப்பிள்ளை, மகாலட்சுமி அம்மாள். பிறந்த நாள் 24.4.1934.

குடும்பத்தார் பலரும் அரசியலில் ஈடுபட்டிருந்ததால் அவரையும் சிறுவயதிலேயே அரசியல் ஆர்வம் பிடித்துக்கொண்டது. சுதந்திரப் போராட்டத்தின்போது, ஜெயகாந்தன் குடும்பத்தினர் எல்லோரும் ஜெயிலுக்குப் போனார்கள். சிலர் காங்கிரஸ்காரர்களாக ஜெயிலுக்குப் போனார்கள். சிலர் கம்யூனிஸ்ட்களாக. காங்கிரஸ்காரர்கள் சிறையிலிருந்து வெளியே வரும்போது கம்யூனிஸ்ட்கள் சிறையேகுவர். கம்யூனிஸ்டுகள் வெளியே வரும்போது, காங்கிரஸ்காரர்கள் சிறை செல்வர். காங்கிரஸார் சிறையிலிருந்து வெளிவரும்போது, கம்யூனிஸ்ட்களை ‘துரோகி’ என்பார்கள்.

இவை, ‘நான் ஒரு தேசபக்தன். காந்தியத் தொண்டன்’ என்ற ஜெயகாந்தனின் கொள்கை உணர்வுகளை அசைத்துப் பார்த்தது, ‘கம்யூனிஸ்ட்களைத் துரோகி என்று சொல்வது தவறு. அவர்கள் உலகத்தைக் காப்பாற்றுவதற்காக ஜெயிலுக்குப் போனவர்கள்’ என்ற எண்ணம் அந்தச் சிறுவனின் மனதில் குமிழியிட, சிந்தனைகளில் சிவப்பு நிறம் ஏறத் தொடங்கியது.

காம்ரேட்!

அந்தக் காலக்கட்டத்தில் விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. ஆனால், சிறுவர்களை எந்தக் கட்சியிலும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்ற நிலை. மாறாக, ஜெயகாந்தனை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்துக் கொண்டார்கள். இவர் அங்கு சேர்ந்ததும், இவருக்காகவே பாலர் சங்கம் என்று புதிய பிரிவு தொடங்கப்பட்டது. அதில் இவர் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

1946_ல் ஒரு பெரிய ரயில்வே ஸ்ட்ரைக் நடந்தது. அதை அடக்க காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. இதனால், ஜெயகாந்தன், விழுப்புரம் கம்யூனிலிருந்து சென்னை கம்யூனுக்கு வர நேர்ந்தது. சென்னையில் ஜனசக்தி அச்சகத்தில் கம்போஸிங் செக்ஷனில் போட்டார்கள். பிறகு, கட்சி ஆபீஸில் ஆபீஸ் பையன் வேலை. அப்போது, ஜனசக்தியில் நிறைய எழுத்துப் பிழைகள் வரும். அவற்றை இவர் கிண்டல் செய்து கொண்டிருப்பார். இதனையட்டி, இவருக்கு பிழை திருத்தும் பணி வழங்கப்பட்டது. அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்ததால் இவருக்கு நல்ல பெயர்.

இந்த வாழ்க்கை நீண்ட நாட்கள் ஓடவில்லை. காரணம், அப்போது சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதன்பிறகு, தலைமறைவு வாழ்க்கை. தலைமறைவு வாழ்க்கையில் தோழர்களின் கடிதங்கள், பொருட்கள் பரிமாற்றம் ஜெயகாந்தன் வசம் ஒப்படைக்கப்பட்டது.

கட்சியின் தடை நீக்கப்பட்ட பிறகு, 1952_ல் தனது பதினெட்டாவது வயதில் மீண்டும் கட்சி அலுவலகப் பிரவேசம். அவரை ஜனசக்தி ஆசிரியர் குழுவில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டார்கள்.

கம்யூனிஸ்ட்களால் வளர்க்கப்பட்டு, கல்வி அளிக்கப்பட்டு, அங்கேயே வாழ்ந்து கொண்டிருப்பதால் மட்டுமே ஒருவர் கம்யூனிஸ்ட்டாகிவிட முடியாது. ஒரு நேர்மையான இலக்கியவாதி, அரசியல்வாதியாக இருக்க முடியாது என்ற அடிப்படை மனோதத்துவமும், எதிலும் சமரசம் செய்து கொள்ளாத கொள்கை நெறியும் இவரை கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து 1964_ல் வெளியே அழைத்து வந்தது. எல்லோரும் கட்சியில் சேரும் வயதில் அவர் கட்சியிலிருந்து வெளியே வந்தார்.

படைப்புப் பட்டறை!

1950_ல் எழும்பூரில் அவரது மாமா வீடுதான் இவரது படைப்புப் பட்டறையாக இருந்தது. இங்கிருந்துதான் இவரது சிறுகதைகள் சூறாவளியாய்ச் சுழன்றெழுந்தன. இவர் எழுதி முதன்முதலில் பிரசுரமான கதை சௌபாக்கியம் இதழில் வெளியானது. அதன்பிறகு, ஏகப்பட்ட சிறுகதைகள், ஏகப்பட்ட நாவல்கள், குறு நாவல்கள், அதிரடி கட்டுரைகள்! அனைத்திலும் ஜெயகாந்தனின் தனித்துவம் தலைநிமிர்ந்து நின்றது.

ஜெயகாந்தன் கூறுகிறார். ‘‘நான் தனிமனிதனேயல்ல. பிறருடைய துயரம், வாழ்க்கைப் பிரச்னைகள் என்னை நீதிபதி ஸ்தானத்தில் அமர்த்தி, நீதி வழங்குமாறு கேட்கிறது. பக்கத்து வீட்டில் ஒரு பெண்ணைப் போட்டு அடிக்கிறார்கள். அதுதான் அக்னிப் பிரவேசம். நான் ஒரு நீதிபதியாக நின்று அதில் யோசிக்க வேண்டியதிருக்கிறது. உயர்வில்லை; தாழ்வில்லை எல்லாம் ஒரு நிறை என்பதுதான் நம்முடைய விதி. இதைப்புரிந்து கொள்ளாமலிருப்பது ஒரு விபரீதம். ஆகவே, இந்தச் சமத்துவப் பார்வையும் சமநோக்கும் எனக்கு எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்தன.’’

குடும்பம்!

இந்த ஞானச்சூரியனின் துணைவி _ ஞானாம்பிகை. ஆசிரியை. 1956_ல் திருமணம். ஜெயகாந்தனின் பெற்றோர் செய்துகொண்டது சீர்த்திருத்த திருமணம். ஜெயகாந்தன் செய்து கொண்டதோ வைதீகத் திருமணம். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். காதம்பரி, ஜெயசிம்ஹன், தீபலட்சுமி.

வாழ்வியல் ஞானி!

ஜெயகாந்தன் படித்தது ஐந்தாம் வகுப்புவரைதான். அதையும் மூன்று முறை படித்தார். இதற்குக் காரணம், வறுமையோ, வாய்ப்பில்லாமல் போனதோ, படிக்க வைக்க ஆள் இல்லாததோ அல்ல. சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் கற்றுக் கொள்வதற்குப் பள்ளிக்கூடம் தடையாக இருந்தது. வகுப்பறைகளில் கற்காத கல்வியையும் அனுபவங்களையும் நடைமுறை வாழ்க்கையில் கற்றறிந்தார். ‘இது எல்லோருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு’ என்கிறார் ஜெயகாந்தன்.

ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர், ஆசிரியராக இருந்த பத்திரிகைகள் ஏராளம்.

ஜெயக்கொடி, ஜெயபேரிகை, ஞானரதம், கல்பனா, நவசக்தி போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக இவர் இருந்தபோதும், அவற்றில் தொடர்ந்து நீடிக்கவில்லை. ஓர் இலக்கியவாதி அரசியல்வாதியாக இருப்பதில் இருக்கும் தடைகள்தான் பத்திரிகையாளராக இருப்பதிலும் இருந்திருக்கவேண்டும்.

ஜெயகாந்தனின் நாவல்கள் படமாயின. உன்னைப்போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள், கருணை உள்ளம் போன்ற படங்கள் சிறந்த படம், கதைகளுக்கான தேசிய, தமிழகஅரசு விருதுகளையும் பெற்றன. எடுக்கப்பட்ட சில படங்கள் வெளியிடப்படாமல் நிற்கின்றன என்பது ஒரு தமிழ் அவலம்!

ஏன் நிறுத்தினார்?

திடீரென்று ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தியபோது திகைத்தது தமிழ்கூறு நல்லுலகு. சஹ்ருதயர்கள் அவரை மீண்டும் எழுதச் சொல்லி வலியுறுத்தியபோது, அவரிடமிருந்து புன்னகையையே பதிலாகப் பெற முடிந்தது. இது குறித்துப் பல்வேறு இடங்களில் ஜெயகாந்தன் பேசியிருக்கிறார்.

‘‘வேலையில் இருக்கறவங்க வி.ஆர்.எஸ். வாங்கலாம்; ஓர் எழுத்தாளன் வி.ஆர்.எஸ். வாங்கக்கூடாதா?’’ என்று ஒரு முறை கூறினார்.

‘‘எழுதுவது போலவே எழுதாமல் இருக்கவும் ஓர் எழுத்தாளனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.’’ என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார்.

காவ்யா பதிப்பகம் நடத்திய ஒரு கூட்டத்தில் இப்படிப் பேசினார். ‘‘என்னை ஓர் அர்த்தமுள்ள சக்தி எழுதும்படி வைத்தது. அதே சக்திதான் என்னைப் பிடித்து நிறுத்தியும் இருக்கிறது. எழுதமாட்டேன் என்று சொல்ல மாட்டேன்; நேரம் வரும்’’

அந்த நேரத்துக்காகத்தான் தமிழர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாலை நேர மகோன்னதங்கள்!!

கே.கே. நகரிலிருக்கும் ஷெயகாந்தன் வீட்டின் இரண்டாவது மாடி. கூரை வேயப்பட்டு ஒரு பர்ணசாலை மாதிரி காட்சியளிக்கும். இங்குதான் மாலை நேரங்களில் ஷெயகாந்தனின் சஹ்ருதயர்களின் சந்திப்பு நடக்கும். அவை மகோன்னதப் பொழுதுகள். கற்றாய்ந்த அறிஞராய் இருந்தாலும், ஆட்டோ ஓட்டுநராய் இருந்தாலும் எல்லோருக்கும் அங்கே சம அந்தஸ்து.

சில நேரங்களில் மீசையைத் திருகிக் கொண்டே பாட ஆரம்பித்து விடுவார் ஷெயகாந்தன். பாட ஆரம்பித்தால் நிறுத்தமாட்டார். பெரும்பாலும் பாரதியார், பாரதிதாசன் பாடல்களாகவே அவை இருக்கும். சில நேரங்களில் தன்னுடைய சினிமாப் பாடல்களையும் பாடுவார்.

ஷெயகாந்தனின் நண்பர் கே.எஸ். சுப்பிரமணியன், அந்தச் சந்திப்புகள் பற்றி இப்படிக் கூறுகிறார். ‘‘இவை மிகவும் சுவையான அர்த்தமுள்ள, இனிமையான ‘மாலை’ நேரங்கள். ஏழு மணியளவில் தொடங்கி காலை ஒன்று இரண்டு வரை நீளும். இலக்கியப் பரிமாற்றம்; அக்னிக் குஞ்சுகளின் ஒளிர்வு; அறிவுச் சீற்றத்தின் மின்னல் வெட்டு; சுருள் சுருளாகக் கிளர்ந்தெழும் புதுமைக் கோணக் கருத்துக்களின் எழில் நடம்; இயல்பான பிசிறில்லாத ஷிமீஸீsமீ ஷீயீ லீuனீஷீuக்ஷீன் பல விகஸிப்புகள்; ‘ஸவிஸ்தகுருடு’ (எங்கள் பரிபாஜையில் மதுவின் மறுபெயர்) வின் துணை; மருந்துப் புகையும் என் எதிரில் கமழும். ஆனால், கொச்சையான புரிதலோ, வக்கிரமான அணுகலோ அந்தச் சூழ்நிலையைச் சிறிதும் வடுப்படுத்த இயலாது…’’

மனசாட்சியின் குரலை எந்த மேடையாக இருந்தாலும் ஷெயகாந்தன் ஒலிக்கத் தயங்குவதில்லை. 1959_ம் ஆண்டு திருச்சியில் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு, தந்தை பெரியார் மாநாட்டின் திறப்பாளர். ஷெயகாந்தன் மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர். மாநாட்டை ஆரம்பித்து வைத்துப் பேசிய பெரியார், நமது இதிகாச புராணங்களையும், இந்து மதத்தையும், பிராமணர்களையும் தனது பாணியில் விளாசினார்.

ஷெயகாந்தனால் பெரியாரின் வாதங்களை ஏற்க முடியவில்லை. பெரியாரை மறுத்துப் பேச வேண்டாம் என்று மாநாட்டுத் தலைவர் வேண்டுகோள் வைத்தபோதும், ஷெயகாந்தன் எது பகுத்தறிவு, எது மூடத்தனம் என்றெல்லாம் ஆணித்தரமான வாதங்களை முன் வைத்தார். திராவிடர் கழகத்தினர் அவரது பேச்சால் கோபமடைந்தபோதும் வெளிப்படையான ஷெயகாந்தனின் பேச்சு பெரியாரை மகிழ்ச்சியடையவே செய்தது.

_ பெ. கருணாகரன்

Posted in Biography, Jeyagandhan, Jeyaganthan, Jeyakaanthan, Kumudam, Tamil | Leave a Comment »