Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008
தேடல்: புத்தரைத் தேடி..!
எந்தக் காரியத்தையும் ஆதாய நோக்கத்தோடே பார்த்துப் பழகிய நம் சமூகத்தில் ஓர் ஆய்வாளராக இருப்பது பெரிய பாடுதான். அதுவும் வயல்களிலும் மரத்தடிகளிலும் தலை தனியாக முண்டம் தனியாக அடையாளம் சிதைந்து புதைத்துக் கிடக்கும் சிலைகளைப் பற்றியும் அதை ஆய்வு செய்துகொண்டிருப்பவரைப் பற்றியும் அரசுக்கோ சமூகத்துக்கோ என்ன அக்கறை இருக்கிறது; ஆதாயம் இருக்கிறது?!
தமிழ்நாட்டில் பழங்கால சிலைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. யாரோ ஓர் ஆய்வாளர் சிலையைக் கண்டறிகிறார்; குறிப்பெடுக்கிறார். நம் ஆள்கள், அட அப்படியா! என வாய் பிளந்துவிட்டு வேறு வேலையைப் பார்க்க சென்றுவிடும்போதும் ஆய்வாளர்கள் தன் வேலையைத் தொடருகிறார்கள்.
முனைவர் பா. ஜம்புலிங்கமும் அப்படிதான். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்கிறார். கண்காணித்தோமா போனோமா என “சாமர்த்தியமாக’ இல்லாமல் சோழ நாட்டில் பெüத்த சமயம் வேரூன்றியது குறித்து ஆய்வு செய்திருக்கிறார். இதுவரைக்கும் 64 புத்தர் சிலைகளை அவர் கண்டறிந்திருக்கிறார்.
ஜம்புலிங்கத்துக்குப் பூர்வீகம் கும்பகோணம். சின்ன வயதிலிருந்தே வரலாற்றில் ஆர்வமாக இருந்திருக்கிறார். ஏதோ ஓர் ஆய்வு செய்வோம் என்றிருந்த அவரிடம் எங்கிருந்தோ வந்து புத்தர் ஒட்டிக்கொள்ளவும் இப்போது புத்தரைத் தேடி ஊர் ஊராக அலைந்துகொண்டிருக்கிறார் அவர்.
ஜம்புலிங்கம் சொல்கிறார்: “”என்ன தகவல் கிடைத்தாலும் குறித்து வைத்துக்கொள்வேன். வார விடுமுறை நாள்களில் கிளம்புவேன். பஸ்ஸில், சைக்கிளில், நடையில் எனத் தொடரும் பயணம். புத்தர் சிலைகள் பெரும்பாலும் ஊரை ஒட்டியுள்ள வயல்களிலும் மரத்தடியிலும்தான் கிடைக்கின்றன. சிலை சேதமடைந்திருந்தாலும் உச்சிக்கொண்டை, நீள செவிகள், ஆடை, தியான நிலை, நெற்றித் திலகம் என ஏதாவது ஓர் அடையாளம் புத்தரைக் கண்டறிவித்துவிடும்.
சில இடங்களில் புத்தர் எனத் தெரிந்து வழிபடுகிறார்கள். சில இடங்களில் இன்ன சிலை என்றே தெரியாமல் வழிபடுகிறார்கள். மங்கலம் என்ற ஊரில் மீசை உள்ள புத்தரைக் கண்டறிந்தோம். உள்ளூர் மக்கள் அதை செட்டியார் என்ற பெயரில் வழிபட்டு வந்தனர். இதேபோல் முனிசுவரர், அம்மணசாமி என்ற பெயர்களில் வணங்கப்படும் புத்தர் சிலைகளும் உண்டு. இங்குள்ள சிலைகள் பெரும்பாலும் கி.பி. 10, 11-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாக உள்ளன.
தமிழகத்தில் சங்கக் காலத்தில்தான் புத்த சமயம் வேரூன்றியதாகக் கருதப்படுகிறது; ஆனால், மயிலை சீனி. வேங்கடசாமி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டதாகக் குறிப்பிடுகிறார். கி.பி. 6-ம் நூற்றாண்டில் செழித்தோங்கிய புத்த மதத்தின் தாக்கம் 16-ம் நூற்றாண்டு வரை இங்கு இருந்திருக்கிறது. எனவே, இன்னும் நிறைய சிலைகள் இருக்கக் கூடும். அவையெல்லாம் கண்டறியப்பட்டால் பெüத்த சமய வரலாற்றுக்குப் புதிய தகவல்கள் கிடைக்கும்” என்கிறார் ஜம்புலிங்கம்.
ஜம்புலிங்கத்தின் ஆய்வுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. தமிழகத்திலேயே காவிரி கரையோர – கடலோரப் பகுதிகளில்தான் பெüத்த மதம் செழித்திருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, அப்பகுதியில் இவர் ஆய்வு மேற்கொண்டிருப்பது தமிழக பெüத்த வரலாற்றுக்கு நல்ல பங்களிப்பாகும்.
சிலைகள் மதம் சார்ந்தவை மட்டுமல்ல; கலை, பண்பாடு, கலாசாரம் எனக் காலம் உறைந்த – புதையுண்டுக் கிடக்கும் வரலாறுகள். ஜம்புலிங்கம் போல் தனித்தனியே வெவ்வேறு ஆய்வாளர்கள் கண்டறிந்த சிலைகள், அவை தொடர்புடைய செய்திகள் எல்லாம் ஒன்றாக தொகுக்கப்பட்டு பெரியளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் தமிழகப் பெüத்த வரலாற்றில் புதிய கோணம் புலப்படலாம். நம் சமூகத்தில் இதெல்லாம் பெரிய கனவுதான். புத்தரை வேண்டிக்கொள்வோம்!
Posted in Ancient, Archeology, Buddha, Buddhism, Culture, Heritage, Hindu, Hinduism, Hindutva, History, Idols, inscriptions, Religion, Religious, Research, Rural, Saivite, Scriptures, Statues, stones, Tamil Nadu, TamilNadu, Traditions, Vaishnavite, Villages | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 7, 2007
வாலாஜா அருகே சோழர்கால அரிய தானிய உறை
வேலூர், ஆக. 8: வேலூர் மாவட்டம், வாலாஜா அருகேயுள்ள அவரைக்கரை-நவ்லாக் அருகில் எழுத்துகளுடன் அரிய சோழர்கால தானிய உறை கிடைத்துள்ளது.
நவ்லாக் அரசு தோட்டப் பண்ணை அருகே செங்கல் சூளைக்காக மண் எடுக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது இந்த உறை 10 அடி ஆழத்தில் காணப்பட்டது.
உறையின் மேல்பகுதி நாலரை அடி சுற்றளவும், கீழ்ப்பகுதி 11 அடி சுற்றளவும், உயரம் 3 அடி கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது சுடுமண்ணால் செய்யப்பட்டதாகும்.
உறையின் கழுத்துப் பகுதியை சுற்றிலும் அலைவரிகளும், சிறிய மணி வரிகளும் காணப்படுகின்றன. உறையின் விளிம்பில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. விளிம்புக்கு கீழே புடைப்புச் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.
தற்போது உறையின் பாதி பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. மீதமுள்ள பகுதி பூமியில் புதைந்துள்ளது.
உறையின் 8 செ.மீ விளிம்பைச் சுற்றி சோழர்கால பாணியில் “ஸ்வஸ்திஸ்ரீ கடக்கங் கொண்டான் அகமுடையான் துக்கையாண்டி தன்மம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
உறையில் காணப்படும் பெயருடையவர் ஊர்ப் பொதுமக்களுக்கோ அல்லது கோயிலுக்கோ இந்த தானிய சேமிப்பு உறையை தானமாக அளித்திருக்கக் கூடும். “அகமுடையான் துக்கையாண்டி’ என்பவர் சோழர் காலத்தில் அப்பகுதி படைத் தலைவராக விளங்கியதும் கல்வெட்டில் இருந்து தெரிகிறது.
உறையில் உள்ள புடைப்பு சிற்பங்கள் 5 தொகுதிகளாகக் காணப்படுகின்றன. முதல் தொகுதியில் அமர்ந்த நிலையில் விநாயகரும், வலப்புறத்தில் மூஞ்சூரும், இடப்புறத்தில் பக்தரின் உருவமும் இடம்பெற்றுள்ளன.
இரண்டாவது தொகுதியில் குதிரை வீரனும், மூன்றாவது தொகுதியில் தோளுடன்தோள் சேர்ந்த மங்கையர் மூவரும். அவர்களில் நடுவில் உள்ள மங்கையை கர்ப்பிணியாகவும் புடைப்பு சிற்பத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. மங்கையருக்கு வலப்புறம் நின்ற நிலையில் மாருதி ஒன்று காணப்படுகிறது.
நான்காவது தொகுதியில் வலப்புறமாக திரும்பி நிற்கும் யானை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 5-வது தொகுதியில் மத்தளம் கொட்டும் ஆடவன், நடனமாடும் மங்கை, தாளம் போடும் பெண் ஆகியன இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் கிடைத்துள்ள முதல் தானிய உறை இதுவே என்கிறார் தொல்லியல் துறை, ஆர்க்காடு அகழ்வைப்பக காப்பாட்சியர் மா. கலைவாணன்.
Posted in Agriculture, Ancient, Anthropology, antiquarian, antique, antiques, archaeologist, Archaeology, Archive, Arts, Avaraikkarai, Brick, Cabinet, Chola, Choza, Chozha, Citizen, Cover, cultures, Dukkaiaandi, Dukkaiandi, dynasty, Elephant, evidence, Farmer, Farming, Ganapathy, Ganesha, Gods, Governor, Grain, Granary, History, Hold, inscriptions, Jacket, Kiln, Kings, Minister, Museum, Navlak, Navlaq, peasant, pottery, Protect, Rare, Recovery, Reside, rice, Rulers, Sand, Stone, Temple, Tools, Vallaja, Vallajah, Vellore, Vellur, Velore, Vinayak, Wallaja, Wallajah, Wheat | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007
முழுமையான அறிவியல் ஆய்வுக்குப் பின்பே சிந்துவெளி எழுத்து குறித்து ஆராய வேண்டும்
சென்னை, ஜன. 27: சிந்துவெளி எழுத்துகள் குறித்து அறிவியல் அடிப்படையில் முழுமையான ஆய்வு நடத்த வேண்டும்; அதன் பிறகே அந்த எழுத்துகள் எந்த மொழியுடன் தொடர்புடையது என்பது ஆராயப்பட வேண்டும் என்று தொல்லியல் வல்லுநரும் “தினமணி’ முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் வலியுறுத்தினார்.
தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஓர் அங்கமாக சிந்துவெளி பண்பாட்டு ஆய்வு மையத்தை அவர் வியாழக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:
சிந்துவெளி எழுத்துகள் வலமிருந்து இடமாக அமைந்துள்ளது. அது இடமிருந்து வலமாக உள்ளதாகக் கூறுவது பொருத்தமற்றது.
திராவிட மொழிகளைப் போல் சிந்துவெளி எழுத்து வாசகங்களில் விகுதிகள் மட்டுமே உள்ளன என்பதை கம்ப்யூட்டர் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
தொல்லியல் கூறுகளைக் கருத்தில் கொண்டு, சிந்துவெளி எழுத்துகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும். கொள்கை சார்ந்த நிலையைத் தவிர்க்க வேண்டும்.
1) சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் போல் நகர்ப்புற நாகரிகம் சார்ந்தது. ஆரிய நாகரிகம் போல் கிராமப்புற நாகரிகம் சார்ந்தது அல்ல.
2) சிந்துவெளி இலச்சினைகளில் குதிரைகள் இடம்பெறவில்லை.
3) ஹரப்பா மத வழிபாட்டு முறையில் காணப்படும் பெண்தெய்வ வழிபாடு, அரச மர வழிபாடு, பாம்பு வழிபாடு போன்றவை ரிக் வேத வழிபாட்டில் இல்லாதவை.
இக்காரணங்களால் சிந்துவெளி எழுத்துகள் திராவிட எழுத்துகள் என்றும் குறிப்பிட இயலாது. எனினும் முழுமையான ஆய்வு தேவை.
இந்த ஆய்வு மையம் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் வல்லுநர்கள் பங்கேற்று ஆய்வுரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்படும்.
ஆய்வாளர்களின் ஆய்வேடுகள், நூல்களை தொகுத்து வெளியிட பண்பாட்டு ஆய்வு மையம் நடவடிக்கை எடுக்கும்.
இது போன்ற ஆய்வு மையங்கள் தங்களிடம் உள்ள ஆய்வேடுகள், ஆய்வு நூல்கள் ஆகியவற்றின் பிரதிகளை இந்த ஆய்வு மையத்துக்கு அனுப்பவேண்டும்.
மொழியியல் தொடர்பான ஆய்வுகளையும் இந்த ஆய்வு மையம் மேற்கொள்ளும் என்றார் ஐராவதம் மகாதேவன்.
ஆய்வு மையத்துக்கு நன்கொடை: இந்த ஆய்வு மையத்துக்கு ஐராவதம் மகாதேவன் தனது ஆய்வு நூல்களையும் இலச்சினைகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளார். அதைப் போல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் மறைந்த பேராசிரியர் கிஃப்ட் சிரோமணியின் ஆய்வுக் கட்டுரைகளை அவரது மனைவி ராணி சிரோமணி வழங்கினார்.
சிந்துவெளி பண்பாடு கி.மு.2600-ம் ஆண்டு முதல் கி.மு. 1900 வரை தழைத்தோங்கியது.
தமிழகத்தில் காவிரிப் படுகையில் மயிலாடுதுறை அருகே செம்பியன் கண்டியூர் கிராமத்தில் கிடைத்த கற்கோடரிகளில் சிந்துவெளி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. இது வணிகத் தொடர்பைக் காட்டுகிறது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பத்திரிகையாளர் என். ராம் ஐராவதம் மகாதேவனின் தொல்லியல் நிபுணத்துவதைப் பாராட்டினார். பத்திரிகை ஆய்வாளர் எஸ்.முத்தையா வரவேற்றார். ரோஜா முத்தையா நூலக அறங்காவலர் சுந்தர் நன்றி கூறினார்.
Posted in Archaeology, Civilizations, Culture, Dravidian Languages, Ervatham Mahadevan, Events, Evolution, History, Indus Valley, inscriptions, Iravatham Mahadevan, Research, Roja Muthiah Research Library, Sindhu Valley, Speech | Leave a Comment »