Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Inflation’ Category

Sixth Pay Panel recommends hefty pay hikes for government staff: Deficit may widen

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

மத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீதம் ஊதிய உயர்வு: 6-வது ஊதியக் குழு பரிந்துரை

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 6 வது ஊதியக்குழுத் தலைவர் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா.

புதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

புதிய ஊதிய விகிதத்தை 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

முன் தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி, இரு தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஊதியக் குழு தனது பரிந்துரைகளை நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.

இந்தப் பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஆய்வு செய்து அதை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். மத்திய அமைச்சரவை இப் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தும்.

இதன் மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

புதிய ஊதிய உயர்வு விகிதப்படி மத்திய அமைச்சரவைச் செயலரின் ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செயலரின் ஊதியம் ரூ. 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அதன் அடிப்படையில் புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 2.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

திறமைக்குப் பரிசு: திறமையான ஊழியர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையில் “திறமை அடிப்படையிலான ஊதிய உயர்வு’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

வீட்டு வாடகைப்படி: வீட்டு வாடகைப்படி உள்பட பெரும்பாலான படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. குழந்தைகளின் கல்வி செலவு உதவித் தொகை ரூ. 50-லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் 40 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் உள்ள 35 கிரேடுகளை (பணி நிலை) 20 கிரேடுகளாக குறைக்கவும் ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஊதியம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ வீரர்களுக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஊதியக் குழு சிபாரிசு செய்துள்ளது.

ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு இணையான பதவி வரை மாதப்படி ரூ. 6000- ஆக உயர்த்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியக் குழு பரிந்துரைகளால் அரசுக்கு 2008 – 09 நிதியாண்டில் ரூ. 12,561 கோடி கூடுதல் செலவாகும்.

முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி தொகைக்கு ஆகும் செலவு ரூ. 18,060 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

* அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் உயர்வு

* 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி

யிலிருந்து அமல்படுத்த வேண்டும்.

* முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி இரு தவணை

களாக வழங்கப்பட வேண்டும்.

* அதிகபட்சமாக அமைச்சரவை செயலரின் ஊதியம் ரூ. 90,000

* கீழ்நிலை ஊழியரின் குறைந்தபட்ச

சம்பளம் ரூ. 6600

* ஓய்வு பெறும் வயது 60 என்பதில் மாற்றமில்லை

* பணி நிலை 35 கிரேடுகள் என்பது 20 கிரேடுகளாக குறைப்பு

* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவத்தினருக்கும் ஊதியம்

* பிரிகேடியர் பதவி வரை மாதப் படி

ரூ. 6000-ஆக உயர்வு

* வார வேலை நாள் 5 என்பதில் மாற்றமில்லை

* ஆண்டுதோறும் ஊதிய உயர்வு 2.5 சதவீதம்

* திறமை அடிப்படையில் கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு

* மத்திய அரசு ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு

* வீட்டு வாடகைப் படி உள்பட பெரும்பாலான படிகள் இரு மடங்காக உயர்வு

* குழந்தைகளின் கல்விச் செலவுக்கான உதவித் தொகை ஆண்டுக்கு 50-திலிருந்து ரூ. 1000-ஆக உயர்வு

* விடுதி மானியம் ரூ. 3 ஆயிரமாக உயர்வு

* ஒரு பணி நிலையில், அதிகபட்ச ஊதியத்தை எட்டிய ஓராண்டுக்கு பிறகு, அவருக்குப் பதவி உயர்வு வழங்காவிட்டாலும் அடுத்த பணி நிலைக்கு உரிய ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.

—————————————————————————————————————————————————–
உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு

புதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள 6500 – 10,500 என்ற சம்பள விகிதத்தை 8700 – 34,800 என்று மாற்றி கிரேடு சம்பளம் ரூ. 4600-வுடன் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர் பணிகளை இணைத்து அப் பதவிகளுக்கான ஊதிய விகிதம் 18,400 – 22,400 தற்போது 39,200 – 67,000 என்று உயர்த்தி கிரேடு ஊதியம் 9 ஆயிரத்துடன் வழங்கப்படும்.

4 ஆண்டுகள் பணி முடிந்த சீனியர் ஜூடிசியல் உதவியாளர், சீனியர் தனி உதவியாளர், ரீடர், சீனியர் ஜூடிசியல் மொழி பெயர்ப்பாளர், நீதிமன்ற அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஊதியம் 6,500 – 10,500 என்பது தற்போது 8,000 – 13,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்று பல்வேறு பணிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————–
முப்படைத் தளபதிகளுக்கு ரூ. 90,000 ஊதியம்

புதுதில்லி, மார்ச் 24: தரைப்படை, விமானப் படை, கடற்படை தளபதிகளுக்கு ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.

தற்போது முப்படைத் தளபதிகளுக்கும் மாத ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 60 ஆயிரம் உயர்த்தி மொத்தம் ரூ. 90 ஆயிரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் மத்திய அமைச்சரவை செயலருக்குத்தான் ரூ. 90 ஆயிரம் வழங்க ஊதியக்குழு சிபாரிசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த ராணுவ வீரர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————–
ஆணையத் தலைவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை ஊதியம்

புதுதில்லி, மார்ச் 24: பங்கு பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் “செபி’ அமைப்பு, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்கு முறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களின் தலைமைப் பதவிகளுக்கு மாத ஊதியம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தி 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

திறமையான நபர்களை வெளியிலிருந்து இப் பதவிக்கு ஈர்க்கும் நோக்கில் ஊதியம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஊதியக் குழு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.

இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ. 1.5 லட்சமும் ஆணையத்தின் தலைவருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கார் மற்றும் வீடு அளிக்கப்படாவிட்டால் தலைமைப் பதவிக்கு ரூ. 3 லட்சமும் உறுப்பினர் பதவிக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க குழு சிபாரிசு செய்துள்ளது.

—————————————————————————————————————————————————–
வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட்

ஹைதராபாத், மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கருத்துக் கூறியுள்ளது.

மத்திய அரசுப் பணி நிலைகள் 35 கிரேடுகளில் இருந்து 20 கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.

மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு வெகுவாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு கணிசமாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்தியா போன்ற ஏழை நாடுக்கு இது தேவையில்லை என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
ஊதியக் குழு பரிந்துரைகள்: மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம்

சென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் கூறினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

எங்களுடைய அனுபவத்தில் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும் ஊதியக் குழு அறிக்கையாக இது இருக்கிறது. நான்காம் நிலை ஊழியருக்கும், உயர்நிலை அதிகாரிக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு 12 விழுக்காடு அளவுதான் இருக்க வேண்டும் என்றபோதிலும், அந்தக் கோட்பாடு இப்போது மீறப்பட்டுள்ளது.

நான்காம் நிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு 18 முதல் 25 விழுக்காடு வரைதான் உள்ளது. அமைச்சரவைச் செயலர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வரும் காலத்திற்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ.17 லட்சம் வரை வரும்.

சமூகத்தில் மிகவும் பின்தங்கியோர் அதிக அளவில் வேலைபார்க்கும் நான்காம் நிலை ஊழியர் பணிகள் இனிமேல் இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் காப்பீடு, வங்கித் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம் செய்யப்படுகிறது. அவருடைய மேற்பார்வையில் இயங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியத் திருத்தம் செய்யப்படுகிறது. அதிலும்கூட நான்காம் நிலை ஊழியர்களுக்கு 18 விழுக்காடுதான் உயர்வு கிடைத்துள்ளது.

விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது மிகவும் ஏமாற்றமான விஷயம்தான்.

இதைக் கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக அகில இந்திய அளவில் ஆலோசனை செய்து, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
6-வது ஊதியக் குழு பரிந்துரை: “தனியாருடன் ஒப்பிடக் கூடாது’

சென்னை, மார்ச் 24: நிதித்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்:

இந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடும் வகையில் ஏதும் இல்லை. தேர்தல்கால அறிவிப்புகள் போலத்தான் இதுவும் இருக்கிறது. உயரதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு நன்றாக இருக்கிறது என்றாலும், கீழ்நிலை அலுவலர்களுக்கு அதைப் போன்ற நிலை இல்லை. அதனால் அவர்கள் போராடக் கூடிய நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை. நான்காம் நிலை பணியிடங்களை ஒழித்துவிட மறைமுகமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பொருத்தவரை, தனியார் துறையில் தரப்படும் ஊதியத்துடன் ஒப்பிடக் கூடாது. அரசுப் பணியில் உள்ளவரை, வீட்டு வசதி, மருத்துவ வசதி, வாகன வசதி, கல்வி வசதி போன்றவை இருப்பதை மறந்துவிடக் கூடாது. பணிக் காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனியார் துறையில் இதைப் போன்ற எந்த வசதியும் கிடையாது.

எனவே, அரசுத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனியார் துறைக்குப் போய்விடுவார்கள் என்பதில் உண்மை ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தரும் சம்பளம் மிகவும் குறைவுதான்’

நமது சிறப்பு நிருபர்

சென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி பெரும்பாலான அதிகாரிகளுக்கு உயர்த்தப்படும் ஊதியத்தில் 33 சதவீதம் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்பதால், அவர்களின் கைக்குக் கிடைக்கும் கூடுதல் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர்.

மத்திய அரசில் வருவாய்த் துறைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற எம்.ஆர். சிவராமன் (படம்) இதுபற்றிக் கூறியதாவது:

இப்போது உயர்த்தப்படும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் போக அரசுச் செயலாளர்களுக்கு ஏறத்தாழ ரூ.13,000 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். அதன்படி பார்த்தால், அறிக்கையில் உள்ளவாறு நிறைய ஊதிய உயர்வு தரப்படுவதைப் போலத் தோன்றினாலும், வருமான வரி மூலமாக கணிசமான தொகை அரசுக்கே திரும்பச் சென்றுவிடும். அதனால், அரசுக்கு நிகர செலவு என்பது குறைவாகத்தான் இருக்கும்.

இயக்குநர், செயலாளர், இணைச் செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் ஏறத்தாழ 14 மணி நேரம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டியுள்ளது. அவர்கள் மீது நிறைய பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊதியம் நிர்ணயித்திருக்க வேண்டும்.

தனியார் துறையில் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட இது மிகவும் குறைவானதாகும். செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்களின் செயல்பாடுகளுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் என சம்பளம் தரலாம்.

இதுபோன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு முன்பாக, பொதுமக்கள் முன்பாக நிறுத்தி, அவரின் சொத்து விவரம், பணித் திறன் போன்றவற்றைக் கேட்டுப் பதிவு செய்யலாம். அதில் திருப்தி ஏற்பட்டால் அப் பதவிக்கு நியமிக்கலாம். தகுதி, பணித் திறன் அடிப்படையில் அதிகமான சம்பளத்தைத் தரலாம் என்பதுதான் சரியானதாக இருக்கும்.

வெளிநாடுகளில் உயரதிகாரிகளுக்கு வாகனங்கள் தரப்படுவதில்லை. இந்தியாவில் வாகனங்கள், அதற்கு ஓட்டுநர்கள் என தேவையற்ற செலவுகள் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரு சம்பளத்தை உயரதிகாரிக்குக் கொடுத்துவிட்டால், வாகன ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்பு போன்ற செலவுகள் அரசுக்கு மிச்சமாகும்.

மேலும், சில துறைகளில் செயலர் அந்தஸ்துக்கு மேல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் இருப்பது தேவையற்றது என்று அவர் கூறினார்.

தற்போது தமிழக அரசுப் பணியில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியதாவது:

15 முதல் 20 ஆண்டு வரை அனுபவம் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் தருவதற்குத் தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந் நிலையில் இப்போது செயலர் அளவில் ரூ.80 ஆயிரம் என சம்பளம் நிர்ணயித்திருப்பது போதுமானதல்ல. இதில் வரிகள் பிடித்தம் போக ரூ.50 ஆயிரம் அளவுக்குதான் கைக்கு வரும். ஆக, ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருப்பதைவிட கூடுதலாக ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.

அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தச் சம்பள விகிதம் உதவாது. ஊதியக் குழு அறிக்கை அமலுக்கு வருவதற்காக பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்து, நிலுவைத் தொகைகள் கைக்கு வந்ததும் சில மாதங்களில் அவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்வார்கள்.

வெளியில் மாதம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதிலும் பெரும் பகுதி வருமான வரி பிடித்தத்தில் வராத வகையில் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். அதனால், அதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.

20 ஆண்டு அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளியேறினால், அதிக அனுபவம் இல்லாத, புதிய அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசு நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.

எனவே, அனுபவம் பெற்றவர்கள் வெளியேறாமல் தடுக்க வேண்டுமானால், தனியார் துறையில் உள்ள சம்பளத்துக்கு இணையான அளவுக்கு சம்பளம் தர அரசு முன் வர வேண்டும். ஏனெனில், 20 வருட அனுபவம் பெற்றவர்களை திடீரென உருவாக்கிட முடியாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் துறையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்ப்பதே சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

—————————————————————————————————————————————————–
ஊதியக் குழு பரிந்துரை: “பண வீக்கம் அதிகரிக்கும்’

சென்னை, மார்ச் 24 : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவருமான என். முருகன் கூறினார்.

ஊதியக் குழு பரிந்துரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள்:-

“”மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விலைவாசி வெகுவாக உயர்ந்துவிட்டது. மேலும் பண வீக்கமும் 4 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக அதிகரித்துவிட்டது. ஊதியக் குழு பரிந்துரை அமலாகும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும். இது தன்னிச்சையாக ஏற்படும்.

சம்பள உயர்வு அவசியம்: இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சம்பளக் கமிஷன்கள், விலைவாசி உயர்வு, தகுந்த ஊதிய ஊக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு விகிதத்தை பரிந்துரை செய்தன.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலக தாராளமயமாக்கலுடன் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டு விட்டதாலும் தனியார் துறையில் மிக அதிக அளவு தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகள் பெருகியதாலும் அவற்றில் வேலை செய்வோருக்கு சம்பள விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன.

இதனால் பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு தனியார் வேலைக்குப் போக துணிந்து விட்டனர். அரசு வேலையில் சம்பளம் எனும் விஷயம்போக, சம்பளம் அல்லாத பல சலுகைகள் (உதாரணம்: பங்களா வசதி, வாகன வசதி உள்ளிட்டவை) இருப்பதால் கவர்ச்சி இருந்தது. ஆனால், தனியாரும் இத்தகைய வசதிகளைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

எனவே இந்த ஊதிய உயர்வு பரிந்துரை மிகவும் தேவையான ஒன்று. இந்த ஊதிய உயர்வாவது இல்லையெனில் அரசுப் பணிக்கு திறமையானவர்கள் வர மாட்டார்கள்.

ஊதியக் குழு பரிந்துரை காரணமாக அரசுக்கு ரூ.12,561 கோடி செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. விவசாயக் கடன் ரூ.60,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி, வருமான வரி வரம்பை அதிகரித்தது போன்ற சலுகைகளைக் கணக்கில் கொள்ளும்போது இது ஒன்றும் பெரிய செலவு அல்ல.

குறிப்பாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 3.2 கோடி சம்பளதாரர்களுக்கு அளிக்கப்பட்ட வருமான வரி வரம்பு உயர்வுச் சலுகையினால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய இழப்பு ரூ.30,000 கோடி.

ஆனால், இந்த சம்பள உயர்வு பரிந்துரையைப் பார்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஊழியர்களுக்கும் அதே விகிதத்தில் மாநில அரசுகள் கொடுத்து விடும். இதுதான் நமது பழைய அனுபவம்.

இவ்வாறு கொடுப்பது மாநில நிதி நிலைமையை வெகுவாகப் பாதிக்கும். ஏனெனில் மத்திய அரசின் பொருளாதார நிலை வேறு, மாநில அரசுகளின் பொருளாதார நிலை வேறு” என்றார் முருகன்.

—————————————————————————————————————————————————–

Posted in 6, Army, Bonus, Bribery, Bribes, Commission, Compensation, Corruption, defence, Defense, Deficit, Economy, employee, Employers, Employment, Females, Finance, Flexitime, Government, Govt, hikes, Hours, Income, Increases, Increments, Inflation, job, kickbacks, Ladies, Military, Navy, panel, Pay, pension, Raises, recommendations, Remuneration, retrospective, salaries, Salary, She, SriKrishna, Staff, Timings, Women | Leave a Comment »

Indian Budget 2008 by P Chidhambaram: Finance, Economy, Analysis, Taxes, Exemptions

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

குறையுமா வரிச்சுமை?

எஸ். கோபாலகிருஷ்ணன்

புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்நிலையில், பலர் மனதில் எழும் கேள்வி, “”வரிச்சுமை குறையுமா?” என்பதே.

மக்களவைக்கு திடீர் தேர்தல் வரக்கூடும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நேர்ந்திருந்தால், இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க ஒரு “தேர்தல் பட்ஜெட்’ ஆக இருந்திருக்கும். சலுகைகளுக்கும் பஞ்சம் இருந்திருக்காது. ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று! குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நிலைமையை மாற்றிவிட்டன. மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னர் மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இத்தகைய சூழலில் தற்போதைய மக்களவைக்கு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் வர இருக்கும் பட்ஜெட்டாகத்தான் இருக்கும்.

ஏற்கெனவே, விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்கள், பட்ஜெட் சுமை தங்களை மேலும் வாட்டாமல் இருக்க வேண்டுமே என்று அஞ்சுவது இயல்பு.

இதை மனதில்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சர் சிதம்பரம் தனது பட்ஜெட்டில் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

அரசியல் தேவைகள் ஒருபுறம் இருக்க, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையிலும் புதிய பட்ஜெட் சற்று மென்மையாக இருக்க வேண்டும். காரணம், தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டியுள்ளது. நடப்பாண்டில் மட்டுமல்லாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக ஜி.டி.பி. விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது. வளர்ச்சி, ஏதோ மின்னல்போல் தோன்றி மறையாமல் ஸ்திரமடைந்து வருகிறது.

மற்றொரு சாதகமான அம்சம், கடந்த சில ஆண்டுகளாக வரி வசூல் படிப்படியாக அதிகரித்து, இப்போது கணிசமாகவே உயர்ந்துள்ளது. துல்லியமாகச் சொல்லுவதானால், 2003 – 04ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 302 லட்சமாக இருந்தது. 2006 – 07ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 320 லட்சமாகப் பெருகியுள்ளது.

வருமான வரியை மட்டும் எடுத்துக்கொண்டோமானால், இதே காலத்தில், வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 235 லட்சத்திலிருந்து, 275 லட்சமாக அதிகரித்துள்ளது.

ஆக, தனிநபர் வருமான வரித்தொகையும் சரி, கம்பெனிகளின் வருமானவரித் தொகையும் சரி, சமீபகாலமாக அபரிமிதமாகப் பெருகி வருகிறது. மொத்தத்தில் வருமான வரியாக வசூலிக்கப்படும் தொகை ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து வருகிறது.

இதற்கு பொருளாதார வளர்ச்சியும், நிதி அமைச்சகம் எடுத்துக்கொண்ட முயற்சியும் ஒரு காரணம் ஆகும்.

அத்துடன், வரிவிகிதங்கள் நியாயமாகவும், மக்களின் சக்திக்கு ஏற்பவும் இருக்குமானால், வரி ஏய்ப்பு நிச்சயமாகக் குறையும். அதேநேரம், மக்கள் தானாக முன்வந்து வரி செலுத்துகையில், வரிச்சுமை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாமல் போனால், தானாக முன்வந்து வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறையக் கூடும். அரசு இதனைக் கருத்தில்கொண்டு செயல்படுவது அவசியம்.

கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்ததுபோலவே இந்த ஆண்டும், நிதி அமைச்சர் விவசாயம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோருடன் பட்ஜெட் குறித்து ஆழமாகக் கலந்து ஆலோசிப்பார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் இழப்புக்கு ஈடுசெய்யும் வகையில் உற்பத்தி வரி உள்ளிட்ட வரிவிகிதங்கள் குறைக்கப்படக் கூடும். ஏற்றுமதி குறைவதால் வேலைவாய்ப்பும் கடுமையாகக் குறைகிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் ரூ. 53 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சரே அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்தியநாதன் குழுவின் பரிந்துரையின்படி விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கலாம்.

இதுதவிர, உணவு மற்றும் உரம் சார்ந்த மானியங்கள், எளிய மக்களைப் பாதிக்காதவண்ணம், திருத்தி அமைக்கப்படக்கூடும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. இது உலக வங்கியைத் திருப்தி செய்வதற்காக அல்லாமல், உண்மையிலேயே மானியத் தொகை உரியவர்களைச் சென்றடையும் வகையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

வருமான வரித் துறையில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பிரிவினரும் உள்ளனர். உதாரணமாக, மூத்த குடிமக்கள். ஒரு பக்கம் சராசரி வயது உயருகிறது. இன்னொரு பக்கம் விலைவாசி மற்றும் அதிகரிக்கும் மருத்துவச் செலவு. இவர்களுக்குக் கடந்த ஓரிரு ஆண்டுகளில் எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை.

இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், தற்போது வழங்கப்படும் சொற்ப சலுகைகள் நியாயமான அளவு விரிவுபடுத்தப்பட வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாத ஒருநிலையில் இது உடனடித் தேவை.

அடுத்து, சிறு முதலீட்டாளர்களுக்கும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஊக்குவிப்பு அளிக்கப்படவில்லை. 80இ பிரிவின்படி, ஒரு லட்சம் ரூபாய்வரை சில குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால், அந்தத் தொகையை வருவாயிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்தச் சலுகை சிறு முதலீட்டாளர்கள் என்ற பெயரில், பங்குச் சந்தையில் பெரும்பாலும் முதலீடு செய்பவர்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது.

அஞ்சல் அலுவலக முதலீடுகளுக்கும் 5 ஆண்டுகளுக்குக் குறைவான வங்கி முதலீடுகளுக்கும் நீண்டகாலமாக இருந்து வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன என்பதே உண்மை.

5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வங்கி முதலீடுகளுக்கு 80 இ பிரிவின்கீழ் வருமான வரிச்சலுகை அளித்திருப்பது வங்கிகள் டெபாசிட் திரட்டுவதற்கு உதவுகிறது. ஆனால், சிறு முதலீட்டாளர்களுக்கு உதவக்கூடியதாகத் தெரியவில்லை.

அனைத்துக்கும் மேலாக, சிறு முதலீட்டாளர்கள் முக்கியமாக எதிர்பார்ப்பது தற்போதுள்ள E.E.E. (Exempt, Exempt, Exempt) முறை தொடர வேண்டும் என்பதே. அதாவது முதலீடு செய்யும்போது, வரிவிலக்கு. இதைத்தான் ‘E’ (Exempt) என்ற வார்த்தை குறிக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரிவிலக்கு. இதை இரண்டாவது ‘E’ (Exempt) என்ற சொல் குறிக்கிறது. கடைசியாக, முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போதும் வரிவிலக்கு கிடைக்கிறது. இதனை மூன்றாவது ‘E’ (Exempt) குறிக்கிறது.

உதாரணமாக, பொது வருங்கால வைப்புநிதி (PPF), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC.) இன்சூரன்ஸ் ஆகிய பெரும்பாலான முதலீட்டுத் திட்டங்கள் EEE. என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன. இது தொடர வேண்டும்.

ஆனால், EET. (Exempt, Exempt, ், Tax) என்ற புதிய முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் சிதம்பரம் முன்னதாக அறிவித்திருந்தார். இந்த உத்தேச முறையின் கீழ், மூன்றாவது கட்டத்தில், அதாவது முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போது, அதற்கு வரி செலுத்த வேண்டும். இதைத்தான் T(Tax) என்ற சொல் குறிக்கிறது.

இத்திட்டத்தை கேல்கர் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு கேல்கர் குழுவினர் கூறிய காரணங்கள் விசித்திரமானவை. “”பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு இடையே நிலவும் பாகுபாட்டை அகற்றுவது என்பது ஒன்று. இரண்டாவது, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் இந்த முறை ஏற்கெனவே அமல் செய்யப்பட்டுள்ளது” என்பதுதான் அது.

நம் நாட்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டால் சிறு முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்தப் பரிந்துரையை நிதி அமைச்சர் ஏற்கலாகாது.

ஏட்டளவில் பணவீக்கம் 3.5 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், வரிச்சுமையாவது குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

————————————————————————————————————————————————————

சீனாவின் சவாலை எதிர்கொள்ள…

புது பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் முன்னர் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்த முன்னணி தொழிலதிபர்கள் வழக்கமான வரிச்சலுகைகளுடன் கூடுதலாக ஒரு வரம் கேட்டுள்ளனர். அது, சீனத்திலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீது 150 சதவீத “இறக்குமதி வரி’ விதிக்க வேண்டும் என்பது.

தசரதனிடம் கைகேயி கேட்ட வரம்போல அல்ல என்றாலும் சீனத்துப் பண்டங்களால் இந்தியத் தொழிலதிபர்களின் தூக்கம் கெட்டு வருவதை இது நன்கு உணர்த்துகிறது. பொம்மை, பேட்டரி, சைக்கிள், மோட்டார் சைக்கிள், டெலிவிஷன், செல்போன், காகிதம், அச்சு இயந்திரம், ஆலைகளுக்கான இயந்திரங்கள், உதிரி பாகங்கள் என்று எல்லா துறைகளுக்கும் தேவைப்படும் பொருள்களைத் தயாரித்து அதை மிகக் குறைந்த விலையில் உலகச் சந்தையில் கொண்டுவந்து குவிக்கிறது சீனா.

தனிநபர் வருமான வரிவிகிதத்தை 30%-லிருந்து 25% ஆகக் குறைக்க வேண்டும், வருமான வரி விலக்கு வரம்பை ஒரேயடியாக

5 லட்ச ரூபாய் வரைக்கும் உயர்த்த வேண்டும், கம்பெனிகள் மீதான வரியை இப்போதுள்ள நிலையிலேயே அனுமதித்துவிட்டு, “”சர்-சார்ஜ்” எனப்படும் கூடுதல் தீர்வையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று நமது தொழிலதிபர்கள் கேட்டிருக்கிறார்கள்.

கம்பெனிகள் தாங்களே மேற்கொள்ளும் ஆராய்ச்சி-வளர்ச்சிகளுக்கான செலவுக்குத் தரும் வரிச்சலுகையை, வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கியமான கோரிக்கையாகும்.

மக்களவைக்குப் பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தொழிலதிபர்கள் கேட்ட வரங்களில் பெரும்பாலானவற்றை “சிதம்பரசாமி’ அருளக்கூடும். ஆனால் சீனாவின் சவாலை எதிர்கொள்ள என்ன செய்யப் போகிறார்?

சீனாவில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டும் அங்கு உற்பத்திக்குச் சாதகமாக அமைந்துவிட முடியாது. கட்டுப்படுத்தப்பட்ட சோஷலிச முறை உற்பத்தி, விநியோகம் எல்லாம் டெங் சியோ பெங் காலத்திலிருந்து படிப்படியாக நீங்கி, உலக அளவில் போட்டி போடத்தக்க கட்டமைப்பு அங்கே வளர்ந்து வந்திருக்கிறது. சீனத்தின் “பட்டுத் திரை’க்குப் பின்னால் நடந்தவை என்னவென்று உலகம் இதுவரையில் புரிந்து கொள்ளவே இல்லை.

சீனத்திலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இருக்கின்றன. அங்கும் தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுகிறது. சொந்த வீடு, நகை, வெளிநாட்டு உல்லாசப் பயணம் என்று சீனர்களால் மெல்லமெல்ல வெளியில் வரமுடிகிறது. சீனத்தில் ஒரே சமயத்தில் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தாராளமயம், உலகமயமாக்கலின் சிற்பி என்று இந்தியாவில் நாம் சிலரை அடையாளம் கண்டு பாராட்டி (அல்லது வசைபாடி) வரும் நிலையில், சீனா உண்மையிலேயே விசுவரூபம் எடுத்து நிற்கிறது.

நம் நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் இன்னமும் பெரும் அளவுக்கு லாபகரமாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தில் நல்ல படிப்பும் பயிற்சியும் பெற்ற தொழில்நுட்ப நிபுணர்களும், தொழில்திறன் உள்ள தொழிலாளர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த அறிவும்-ஆங்கிலத்தைச் சிறப்பாகக் கையாளும் திறன் உள்ளவர்களும் ஏராளமாக இருக்கின்றனர். இவர்களைப் பயன்படுத்தி, நமது பொருளாதாரத்தை மேலும் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லாமல், அடுத்தடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களையும், மத்திய பட்ஜெட்டையுமே மையமாக வைத்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதால், நாம் செக்குமாடு போல ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறோம்.

சீனாவுக்கு இணையான தொழில்வளத்தை நாமும் அடையத் தடையாக இருப்பது எது என்று ஆராய்ந்து, அதை நீக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் தொடர்ந்து பின்தங்கியே இருப்போம்; சீனா, அமெரிக்காவையே மிஞ்சிவிடும்.

———————————————————————————————————–
சிதம்பர ரகசியம்

விவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட வேண்டும், முடிந்தால் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் உலக வங்கியும், சர்வதேச நிதியமும் இந்திய அரசை மீண்டும் மீண்டும் வற்புறுத்தும் விஷயம். இதை மாநிலங்களுக்காகத் தரப்படும் நிதி கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கச் செலவிடப்பட வேண்டும் என்பது அவர்களது அபிப்பிராயம்.

மக்கள் நிர்வாகம், தேச நிர்வாகம் போன்ற விஷயங்கள் வியாபார ரீதியாகச் செய்யப்படுபவை அல்ல. லாப நஷ்டங்களை மட்டும் கணக்கில்கொண்டு அரசு செயல்பட முடியாது. குறிப்பாக, இந்தியா போன்ற விவசாயம் சார்ந்த நாடுகள் வேலைவாய்ப்பை மட்டுமல்லாமல் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வேளாண் தொழிலை நம்பி இருக்கும் நிலையில், விவசாய மானியங்களை அகற்றுவது என்பது, இந்தியாவை சோமாலியா ஆக்கும் முயற்சி. அது விபரீதத்தில் முடிந்துவிடும்.

அதேநேரத்தில், அரசின் மானியங்கள் சேர வேண்டிய விவசாயிகளைப் போய்ச் சேர்கிறதா என்பதும், மானியம் பயனுள்ளதாக அமைந்து விவசாய உற்பத்தி பெருக வழிவகுக்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய உர அமைச்சகம் நடப்பு ஆண்டுக்குத் தரப்படும் உர மானியம், அடுத்த நிதியாண்டில் இரட்டிப்பு செய்யப்பட்டு சுமார் 50,000 கோடி ரூபாயாக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறது. நிதியமைச்சகம் இந்தக் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது வேறு விஷயம்.

யூரியா போன்ற உரங்களுக்கான உற்பத்திச் செலவில் பாதிக்கும் குறைவான விலையைத்தான் விவசாயிகள் தருகிறார்கள் என்றும், தங்களுக்குத் தரப்படும் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உரத் தயாரிப்பாளர்கள் மத்திய உர அமைச்சகத்தின் மூலம் கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள். தற்போது, மானியம் விவசாயிகளுக்கு நேரடியாகத் தரப்படாமல் உர உற்பத்தியாளர்களுக்குத் தரப்படுகிறது. அவர்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குகிறார்கள். அதனால், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும், 100 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும் ஒரே விலையில்தான் உரங்கள் தரப்படுகின்றன.

பெரிய நிலச்சுவான்தார்களுக்கு இந்த மானியத்தின் பயன் சென்றடைய வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க, மானியத்தின் பயன் உர உற்பத்தியாளர்களுக்குத்தான் அதிகம் கிடைக்கிறது என்பது அதைவிட வேதனையான விஷயம். தங்களுடைய நிர்வாகச் செலவுகளை அதிகரித்து மானியத்தின் பெரும்பகுதி பயனை உரத் தயாரிப்பாளர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள்.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது, மானியம் நேரடியாக விவசாயிகளைப்போய் சேரும்படியான வழிமுறைகள் செய்யப்படும் என்று நிதியமைச்சர் கொடுத்த உறுதிமொழி, செயல்படுத்தப்படவே இல்லை. உரத் தயாரிப்பாளர்கள் அதைச் செயல்படுத்தவிடவில்லை என்றுகூடக் கூறலாம். அப்படிச் செய்திருந்தால், பெரிய நிலச்சுவான்தார்கள் மானியம் வழங்கும் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டிருப்பார்கள். சுமார் எட்டு கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகள் பயன்பெற்றிருப்பார்கள்.

தற்போது விவசாயிகள் தாங்கள் எந்த உரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். மானிய விலையில் உரத் தயாரிப்பாளர்கள் வழங்கும் யூரியா போன்ற உரங்களைத் தான் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு. மானியம் நேரடியாக அவர்களைச் சேர்கிறது எனும்போது, தங்களது பயிறுக்கு ஏற்ற கலவை உரங்களைப் பெறும் வசதி அவர்களுக்கு ஏற்படும். விவசாய உற்பத்தி பெருகும்.

சிறு விவசாயிகளை எப்படி அடையாளம் காண்பது? அதில் முறைகேடுகள் இல்லாமல் எப்படித் தடுப்பது?~ இதைக்கூடச் செய்ய முடியாவிட்டால் இந்த அரசும், நிர்வாக எந்திரமும், அதிகாரிகளும் எதற்கு?

விவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்படவோ, நிறுத்தப்படவோ கூடாது. மாறாக, முறைப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் பெயரைச் சொல்லி பெரிய உர நிறுவனங்கள் மானியத்தை விழுங்குவது தடுக்கப்பட வேண்டும். சேர வேண்டியவர்களைப்போய் மானியங்கள் சேராமல் இருப்பதற்கு யார் காரணம்? நிதியமைச்சருக்குத்தான் வெளிச்சம்!

————————————————————————————–

நிதியமைச்சரை நம்புவோமாக!

உலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் என்று இந்தியப் பொருளாதாரம் திசைதிரும்பிய நாள் முதல், பல்வேறு தரப்பிலிருந்தும் எச்சரிக்கைக் குரல் ஒலித்த வண்ணம் இருக்கிறது. பலமான பொருளாதார அடித்தளம் என்பது ஒரு தேசத்தின் அன்னியச் செலாவணி இருப்பும், ஏற்றுமதியும் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தன்னிறைவும்கூட என்பதைத்தான் இந்த எச்சரிக்கைக் குரல்கள் வலியுறுத்தின.

பங்குச் சந்தைப் பொருளாதாரம் என்பது, தனியார்மயம், உலகமயம் போன்ற கொள்கைகளிலிருந்து இணைபிரிக்க முடியாத விஷயம். சந்தைப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆபத்தே, ஒரு சில தனிநபர்களின் அதிபுத்திசாலித்தனம் பங்குச் சந்தையில் பூகம்பத்தை ஏற்படுத்தி அப்பாவி முதலீட்டாளர்களை ஓட்டாண்டிகளாக்கி விடும் என்பதுதான். ஹர்ஷத் மேத்தா மற்றும் யு.டி.ஐ. மோசடிகள் எத்தகைய மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின என்பதைத் தங்களது சேமிப்புகளை ஒரே நொடியில் இழந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் சோகக்கதைதான் எடுத்துரைக்கும்.

பங்குச் சந்தைப் பொருளாதாரத்தின் இன்னொரு மோசமான பரிமாணத்தை விரைவில் இந்தியா சந்திக்க இருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவால், உலக அரங்கில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களும், பிரச்னைகளும் எந்த அளவுக்கு இந்தியாவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பும் என்பதை நாம் சந்திக்க இருக்கிறோம்.

அமெரிக்கப் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்க இருக்கிறது என்பதை உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் மட்டுமன்றி, அமெரிக்க அரசே உணர்ந்திருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட இருக்கும் பின்னடைவைச் சரிக்கட்ட, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 140 பில்லியன் டாலர் திட்டமொன்றை அறிவித்திருக்கிறார். வரிக்குறைப்பு மூலம் அமெரிக்கப் பொதுமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதுதான் இதன் நோக்கம். வாங்கும் சக்தி அதிகரிப்பதால் விற்பனையும், அதன் மூலம் உற்பத்தியும் அதிகரிக்கும் என்பதுதான் அதிபர் புஷ்ஷின் எதிர்பார்ப்பு.

பொருளாதாரப் பின்னடைவின் விளைவால், உற்பத்தி குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விடும் என்பதுதான் அவர்கள் கவலை. ஏற்கெனவே புஷ் நிர்வாகத்தின்மீது காணப்படும் அதிருப்தி, இதுபோன்ற வேலைக்குறைப்பு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விஷயங்களால் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவின் தலைவலி அது.

பெரிய அளவில் அமெரிக்காவுக்கு நமது நாட்டிலிருந்து ஏற்றுமதி இல்லை என்பதால் அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு நம்மைப் பாதிக்காது என்று வாதிடுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். நமது ஐ.டி. நிறுவனங்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்காவை நம்பித் தொழில் செய்பவர்கள். நமது இந்தியப் பங்குச் சந்தை மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் அன்னிய மூலதனத்தில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, டாலர்களாக வந்தவை என்பதை மறந்துவிடக் கூடாது.

அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு, அங்குள்ள முதலீட்டாளர்களைத் தங்களது மூலதனத்தை இந்தியாவுக்குத் திருப்பவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதுபோன்ற முதலீடுகள் திடீரென திரும்பப் பெறப்படும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் நமது பொருளாதாரத்தையே தகர்த்துவிடும் தன்மையது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவின் விளைவுகள் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல், அமெரிக்காவைச் சார்ந்த அத்தனை நாடுகளும் குழம்பிப் போயுள்ளன.

இந்தியப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அமெரிக்கப் பின்னடைவு நம்மைப் பெரிய அளவில் பாதிக்காது என்றும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் உறுதி கூறியிருக்கிறார். நமது அடிப்படைப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அதனால் முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் தைரியம் கூறியிருக்கிறார். நல்லது, நம்புவோம். ஆனாலும் சிறு சந்தேகம்.

ஆறு மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கப் பொருளாதாரமும் பலமாகத்தானே இருந்தது? எல்லா விஷயங்களிலும் அமெரிக்காவைச் சார்ந்து இருக்கிறோமே, அமெரிக்கா ஆட்டம் கண்டால் நாமும் ஆட்டம் காண மாட்டோமா?

—————————————————————————————-

நேர்முகமா, மறைமுகமா?

மத்திய பட்ஜெட் தயாராகி வருகிறது. வழக்கம்போல தொழில்துறையினர், சேவைத்துறையினர், பொருளாதார நிபுணர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோரை நிதியமைச்சர் ப.சிதம்பரம் அழைத்துப் பேசி ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்.

ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், கணினித்துறையில் ஈடுபட்டோர், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள், மருந்து-மாத்திரை தயாரிப்பாளர்கள், புத்தக பதிப்பாளர்கள், தகவல் தொடர்பில் முதலீடு செய்தோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், கட்டுமானத் துறையில் உள்ளோர், கணக்கு தணிக்கையாளர்கள், மருத்துவத் தொழிலைச் செய்வோர், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்களை நடத்துவோர் என்று வசதி படைத்தவர்களே பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.

“”மோரீஷஸிலிருந்து முதலீடு செய்தால் வரி விதிப்பு கிடையாது” என்ற மொட்டையான சலுகையைப் பயன்படுத்தி ஏராளமான தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்று “”சமீபத்தில்தான்” நிதி அமைச்சக அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைத் தடுக்க இந்த பட்ஜெட்டில் உறுதியான நடவடிக்கை வருமாம். மத்திய பட்ஜெட் என்பதே பணக்காரர்கள், வசதி படைத்தவர்களின் நலனுக்காக ஏழைகள் மீது வரியைச் சுமத்தி கறாராக வசூலிப்பதற்குத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவாரா மாட்டாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு ஊதியம் இருந்தால் எல்லோருக்குமே 30%தான் வருமான வரி என்பது எந்த ஊர் நியாயம்? 20 லட்சம் சம்பாதித்தாலும் 20 கோடி சம்பாதித்தாலும், 200 கோடி சம்பாதித்தாலும் உச்ச பட்சம் 30% தான். வாழ்க மத்திய அரசின் சோஷலிசம்.

ஏழைகள், நடுத்தர மக்களின் குடும்பங்களில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வயதான பெற்றோர்கள், கவனித்தே தீர வேண்டிய ஊனமுற்ற குடும்ப உறுப்பினர்கள், விதவையர், நிரந்தர நோயாளிகள் என்று பல பிரச்னைகள் உண்டு. சம்பாதிக்கும் பணம் போதாமல் கடன் வாங்குவதே இவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. வருமான வரிச் சலுகைக்காக வீடு கட்ட ஆரம்பித்தவர்களின் நிலைமை வெளியில் சொல்லும்படியாக இல்லை. நம் நாட்டின் மருத்துவ இன்சூரன்ஸ் லட்சணம் மற்ற எல்லோரையும்விட சிதம்பரத்துக்கே தெரியும். ஆயினும் நடுத்தர வர்க்கத்துக்கு அவர் தரும் நிவாரணம் என்ன?

நடுத்தர வர்க்கத்தின் சேமிக்கும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தேசிய புள்ளிவிவர நிறுவனம் சமீபத்திய கணக்கெடுப்பிலிருந்து அறிந்து அரசுக்கு அறிக்கை தந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான அம்சம். நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பினால்தான் எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்று வருகின்றன. அந்தத் தொகையிலிருந்துதான் அரசு, தனக்கு முக்கியச் செலவுகளுக்குக் கடன் பெறுகிறது. விதை நெல்லைப் போன்றதுதான் நடுத்தர மக்களின் சேமிப்பு. அதற்கு வழி இல்லாமல் வருமானம் ஒட்டத்துடைக்கப்படுகிறது என்றால் நிதி நிர்வாகம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம்.

விலைவாசி உயர்வு, ஊதியக் குறைவு, நுகர்வு கலாசாரம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. முதல் இரண்டுக்கும் மத்திய, மாநில அரசுகளும் நம் நாட்டுத் தொழில்துறையும் காரணம். மூன்றாவதற்கு வெளிநாட்டு தனியார் வங்கிகளும் அவர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கிவிட்ட நம் நாட்டு நிதி நிறுவனங்களும் காரணம்.

உலகமயம், பொருளாதார தாராளமயம் ஆகியவற்றிலிருந்து நாம் ஒதுங்கியிருக்க முடியாது என்று கூறி சுங்கவரி, உற்பத்தி வரி, இறக்குமதி வரி ஆகியவற்றைக் கணிசமாக குறைக்கிறார் நிதியமைச்சர். வெளிநாடுகளிலிருந்து வரும் தேவையற்ற இறக்குமதியைக்கூட தவிர்க்க முடியவில்லை என்று சொல்கிறார். ஆனால் நேர்மையாக உழைத்து, வருமானத்தை மறைக்க முடியாத நிலையில் உள்ள மாதச் சம்பளக்காரர்களுக்கு சலுகை காட்டுவதை, தேவையற்ற செயல் என்று கருதுகிறார்.

வீட்டு வாடகை, மளிகைச் செலவு, வைத்தியச் செலவு ஆகிய மூன்றும் மாதாமாதம் விஷம்போல ஏறிக் கொண்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை; அவர்களுக்குத் தேவையான அளவுக்கு சம்பளத்தை அவர்களே கூட்டிக்கொண்டுவிடலாம். வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகளுக்கு “”அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்” அளவுக்கு இது தீவிர பிரச்னை கிடையாதே? எல்லாம் நம் தலையெழுத்து!

———————————————————————————————————————–
“சிதம்பர’ ரகசியம் எடுபடுமா?

எம். ரமேஷ்

இம்மாத இறுதியில் மத்திய பட்ஜெட் வெளியாக உள்ளது. தொழில்துறையைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்கள் பட்ஜெட்டை ஒரு பொருட்டாகக் கண்டு கொள்வதில்லை.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இது. லீப் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் வரிசையில் சிதம்பரமும் இடம்பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முழு பட்ஜெட் இது.

பட்ஜெட்டின் இறுதிப் பலன் பெருவாரியான நடுத்தர மற்றும் சாதாரணப் பிரிவு மக்களின் வாழ்க்கையைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதாக அமைவதில்லை. பல சமயங்களில் பட்ஜெட், இருக்கின்ற நிலைமைக்கும் வேட்டு வைப்பதாகத்தான் இருக்கிறது.

பட்ஜெட்டிற்கு முன்பும் பின்பும் விலைகள் உயரும். சராசரி இந்தியனுக்குச் சுமை கூடும். அறிவிப்புகள் நிறைய இருக்கும். ஆனால் அதனால் யாருக்குப் பலன் என்பது மட்டும் புரியாத “சிதம்பர’ ரகசியமாய் இருக்கும்.

கூடுதல் வரிச் சுமையில் சிக்காமல் தப்பித்தால் போதும் என்று நடுத்தரப் பிரிவு மக்கள் நினைக்கின்றனர். நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்ற சலிப்பே அடித்தட்டு மக்களிடம் அதிகம் நிறைந்திருக்கிறது.

பொதுவாக தாராளமயமாக்கலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அனைத்துமே நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு சுமையாகத்தான் இருந்துள்ளது.

நாடுகளிடையே தங்கு தடையற்ற வர்த்தக உறவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகமயமாக்கலின் ஓர் அங்கமான தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 1991-ல் நிதியமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தினார். அவரை அடியொற்றி சிதம்பரமும் பின்பற்றி வருகிறார். அந்த வகையில் தாராளமயம் தொடரும் என்பது உறுதி.

தாராளமயப் பொருளாதாரம் வேளாண் துறையை அறவே ஒதுக்கிவைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்தப் பட்ஜெட்டில் வேளாண்துறை பக்கம் சிதம்பரம் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

இருப்பினும் இந்தப் பட்ஜெட்டை சுமையில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யவே சிதம்பரம் விரும்புவார். ஏனெனில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்தித்தாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

அதேசமயம், சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அதற்கான கூடுதல் செலவினம், 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் முதலாவது ஆண்டுக்கான ஒதுக்கீடு போன்ற பல பிரச்னைகள் சிதம்பரம் முன் நிற்கும் சவால்களாகும்.

வேளாண் துறை வளர்ச்சி தற்போது 2 சதவீதமாக உள்ளது. வேளாண் உற்பத்தியை 4 சதவீதமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் பல நடவடிக்கைகளை சிதம்பரம் எடுத்தாக வேண்டியுள்ளது.

விவசாயக் கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பல முனைகளிலிருந்து வலுத்து வருகிறது.

அதேபோல வருமான வரி செலுத்தும் மாத சம்பளதாரர்களிடையே வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 29,200 கோடி டாலர் உள்ளது. அதேபோல பணவீக்கமும் 4.35 சதவீதமாக கட்டுக்குள் உள்ளதும் திருப்திகரமான விஷயம்.

தொழில்துறை வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு 13.4 சதவீதத்திலிருந்து தற்போது குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கை எட்டவேண்டுமானால் வேளாண் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடு அவசியமாகிறது.

முந்தைய பட்ஜெட்டுகளைப் போலவே மூன்று முக்கிய விஷயங்களுக்கு மட்டும் சிதம்பரம் முன்னுரிமை அளிப்பார் என்பது திண்ணம். ஒன்று நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது, இரண்டு, கட்டமைப்புத் துறையை விரிவாக்குதல், மூன்று, வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவையே.

வெறுமனே அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதிலோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதிலோ பொருளாதார வளர்ச்சியை எட்டிவிடமுடியாது.

கல்வி, இன்றைய நிலைமைக்கேற்ப வேலைவாய்ப்புப் பயிற்சி, ஆய்வு, புத்தாக்கம் உள்ளிட்ட விஷயங்கள்தானே நீண்டகாலத்தில் உண்மையான, உறுதியான வளர்ச்சிக்கு வித்திட முடியும்? வரும் பட்ஜெட்டில் இதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பதே பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

கிராமப்புற வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி மேம்பாடு, வறுமை ஒழிப்பு, விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்றம் போன்றவையெல்லாம் தாராளமய அலையில் எங்கோ தள்ளப்பட்டு விட்டன.

காங்கிரஸ் கூட்டணிக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வதுடன் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைத் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் சிதம்பரத்துக்கு உள்ளது.

வேளாண்மை மற்றும் மகளிர்க்கு இந்தப் பட்ஜெட்டில் அதிக சலுகை காட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். எனவே அவரது வார்த்தைகளைப் பூர்த்தி செய்ய சில நடவடிக்கைகளை சிதம்பரம் எடுப்பார் என உறுதியாக நம்பலாம்.

மற்றபடி, கிட்டத்தட்ட இன்னொரு மன்மோகன் சிங் பட்ஜெட்டாகவே இது இருக்கும் என்று நம்பலாம்.

Posted in 2008, America, Analysis, Balance, Budget, Business, Cheap, Chidambaram, Chidhambaram, China, Chithambaram, Commerce, Corporate, Currency, Deflation, Dollar, Economy, Exchange, Exempt, Exemptions, Expenses, Exports, Finance, Imports, Income, India, Industry, Inflation, Loss, Monetary, Profit, Recession, Rupees, sectors, SEZ, Tax, Taxes, US, USA | Leave a Comment »

Pension will exceed the Salaries – Government Job retirees pension income

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

ஊதியத்தை மிஞ்சும் ஓய்வூதியம்

புதுதில்லி, டிச. 9: அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது.

2006-07 நிதியாண்டில் 39,074 கோடி ரூபாயை ஓய்வூதியமாக வழங்கியுள்ளது மத்திய அரசு.

இதே நிதியாண்டில் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு 40,047 கோடி ரூபாய் ஊதியம் வழங்கியுள்ளது மத்திய அரசு.

இதேநிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஊதியத் தொகையை விட ஓய்வூதியத்தொகை பலமடங்கு அதிகரித்து விடும் என்று கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தொகை ஆண்டுக்கு 5.47 சதவீதமாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஓய்வூதியத்தொகை ஆண்டுக்கு 16.20 சதவீதமாக அதிகரித்து வருகிறது.

இந்தியர்களின் ஆயுள்காலம் அதிகரிப்பு, ஓய்வு வயதை அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் ஓய்வூதியத்துக்கான செலவு அதிகரித்து கொண்டே செல்வதாக கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2001 புள்ளி விவரப்படி மத்திய அரசு நிறுவனங்களில் 38 லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றினர். இந்த எண்ணிக்கை 1995-ல் 39 லட்சத்து 82 ஆயிரமாக மட்டுமே உயர்ந்தது.

ஆனால் 1999-2000 நிதியாண்டில் 38 லட்சத்து 3 ஆயிரமாக இருந்த ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை, 2006-07-ல் 45 லட்சத்து 5 ஆயிரமாக அதிகரித்தது.

இந்நிலையில், ஓய்வூதிய செலவைக் குறைப்பது குறித்து ஆராய 6-வது ஊதிய கமிஷன் சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.

இக்குழு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தனது பரிந்துரைகளை சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted in 401(k), 58, 65, Babyboomers, Budget, Economy, employee, Employment, Factor, family, Finance, Forecasting, Generation, Govt, Impact, Income, Inflation, Jobs, Monetary, Money, Multiply, pension, Poor, Projection, Reduction, Retirement, Rich, Rupees, safety nest, Salary, Savings | Leave a Comment »

Nothing macho about India’s forex reserves – Impact on growth and prices: Varadharajan

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007

அன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’?

உ .ரா. வரதராசன்

“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போற்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.

உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.

1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.

  • 1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;
  • ஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.
  • நிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி!
  • இது டாலர் கணக்கில் 944 கோடி.
  • இதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;
  • டாலர் கணக்கில் இந்தப் பற்றாக்குறை 5,184 கோடியாகும்.

கடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை.

இந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்!)

இப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே!

சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செலாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.

இந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.

இவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.

நேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.

இரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது! இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது!

இதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்!

இந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை!

இந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை!)

இந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.

1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது! இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.

சென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை!

எனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே!

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது!

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

Posted in ADR, Agflation, America, APR, Balance, Balance sheet, Balancesheet, Banks, Benefits, Budget, Conversion, Currency, Deficit, Deflation, Dollar, Economy, Exchange, Exports, FDR, Finance, financial, forex, Funds, GDP, Growth, Imbalance, IMF, Impact, Imports, Index, India, Indices, Inflation, Interest, investments, Loans, Loss, markets, MNC, Monetary, Numbers, PC, Policy, Prices, Profit, Rates, RBI, reserves, Return, ROI, Shares, Statistics, Statz, Stocks, Tariffs, Tax, US, USA, Varadharajan, Varadharasan, WB | Leave a Comment »

Probing the rice seizures in Tamil Nadu – AK Venkatasubramanian

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

இரண்டு ரூபாய் அரிசி
மின்சார அதிர்ச்சி
அதிரடித் தகவல்கள்

கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று புதுச்சோரி மாநில உணவுக் கடத்தல் தடுப்புப் பி¡ரிவு போலீஸார், புதுச்சோரி ரயில் நிலையத்தில் வழக்கமான கண்காணிப்பை மேற்கொண்ட போது, 40 வேகன்களில் அ¡ரிசி ஏற்றப் பட்டு, ஒரு சரக்கு ரயில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அனுப்பப்படும் சரக்கு, அ¡ரிசி என்றதும் சற்று விழித்துக்கொண்டது போலீஸ். ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் 2,400 டன் அ¡ரிசி அந்த வேகன்களில் ஏற்றப்பட்டு, ஆந்திராவில் உள்ள பிக்காவொலு என்ற இடத்துக்கு அனுப்புவதற்காகப் பதிவு செய்யப்பட்டது தொரிய வந்தது.

“யார் பதிவு செய்தது; பதிவு செய்தவர்களுக்கு அ¡ரிசி எப்படி வந்தது; முறையான அத்தாட்ச யுடன் அ¡ரிசி செல்கிறதா?” என்று கேள்விகள் தொடர்ந்தன. விசாரணையில் பெங்களூரூவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்ததாகத் தொரிய வந்தது. ஆனால், விதி முறைகளுக்கு உட்பட்டு எடுத்துப் போகப்படும் அ¡ரிசி’ என்று சொல்லும் ஆவணங்கள், ரயில்வே துறையிடம் இல்லை.

கடத்தவிருந்த சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் இன்னமும் துருவியபோது அம்பலமானதுதான், இப்போது தமிழகம் மற்றும் புதுவையில் அலசப்படும் மெகா அ¡ரிசிக் கடத்தல் விவகாரம்.

தொடர்ந்து மேற்கொண்ட அதிரடி விசாரணையில், அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. கடத்தப்படவிருந்த அ¡ரிசி பொது விநியோகத்துக்கு வழங்கப்பட்ட, முன்பே நான்கு முறை புதுச்சோரி ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்டிருக்கிறது! கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக 39 வேகன்களில் 2,340 டன் அ¡ரிசி வங்க தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அடுத்து, அதே செப்டம்பர் மாதம் 20 வேகன்களில் 1,247 டன் அ¡ரிசி அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் என்ற இடத்துக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மொத்தம் 60 வேகன்களில் 3,765 டன் அ¡ரிசி அஸ்ஸாம் கவுகாத்திக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்தக் கிடங்கிலிருந்து கொண்டு வரப்பட்டது என்று புலனாய்வு செய்ததில், புதுவையில் உள்ள மா புட்ஸ் மற்றும் ஜே.ஆர். புட்ஸ் என்ற நிறு வனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சேகாரிக்கப்பட்டு கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்தக் கிடங்குகளைச் சோதனை செய்ததில் 3,500 டன் அ¡ரிசி சிக்கியது.

சென்னை சேத்துப்பட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அன்னம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் போலியான முகவாரியைக் கொடுத்து நடத்தி வந்த நிறுவனமாம் இது. ஆறுமுகம் ‘ஓஹோ’ வென்று அ¡ரிசி வியாபாரம் செய்வதாகச் சொல்லி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 2005ஆம் வருடம், நவம்பாரில், பத்து கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கிறார். அவர் பெயருக்கு ஐந்து கோடி, நிறு வனத்துக்கு ஐந்து கோடி!

2006-ஆம் வருடம், மார்ச் மாதம், பத்து கோடியையும் வழங்கிவிட்டது வங்கி. ஆனால், மாதத் தவணை திருப்பிக் கட்டப்படாததால் கவலையடைந்த வங்கி, ஒரு கட்டத்தில், இந்த நிறுவனம் சேகாரித்து வைத்திருந்த அ¡ரிசியைக் கைப்பற்றி ஏலம் விட்டு விட்டது.

ஏலத்தில் அ¡ரிசியை எடுத்த பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் ரயிலில் அனுப்பும்போதுதான் மாட்டிக்கொண்டது. இந்த முக்கியக் கதையில் சில கிளைப் பாத்திரங்களும் உண்டு. வங்கிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டது, மும்பையைச் சேர்ந்த நேஷனல் கொலட்ரல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம். அ¡ரிசிக் கடத்தல் விவகாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு குறித்துத் தீவிர விசாரணை நடக்கிறது. தவிர, விசாரணை வலை இறுகும்போது ரயில்வே ஊழியர்களும் சிக்குவார்கள் என்று தொரிகிறது; இதுவரை ஆறு பேர் கைதாகியிருக்கிறார்கள்.

ரயில்வே ஊழியர்கள் சரக்கைப் பதிவு செய்யும்போது, உ¡ரிய ஆவணங்களை ஏன் கேட்டுப் பெறவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒரு பொருளை ரயிலில் அனுப்பப் பதிவு செய்யும் போது, அந்தப் பொருள் அனுப்பும் நபருடையதுதான் என்று நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் கொடுக்க வேண்டும். அதிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பும் போது, ரயில்வேயிடம் வழங்கும் மனுவில் உ¡ரிய அதிகா¡ரியின் அத்தாட்சி குறிப்பிடப்பட வேண்டும். அ¡ரிசி, கோதுமை என்றால் வட்டார வழங்கல் அதிகா¡ரி அல்லது வரு வாய்த்துறை அதிகா¡ரிகளிடம் அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும். ரயில்வே அதிகா¡ரிகள் துணையில்லாமல் இந்தக் கடத் தல் நடந்திருக்க முடியாது.

இப்போது மற்றொரு முக்கியக் கேள்வி எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. கடத்தப்பட்ட அ¡ரிசி எந்த மாநிலத்தை சேர்ந்தது? “பிரச்னையில் சிக்கிய நிறுவனம் சென்னை முகவாரியைக் கொடுத்துச் செயல்பட்டிருக்கிறது. எங்கள் மாநிலத்தில் பொது விநியோகத்துக்கு வெளி மார்க்கெட்டிலிருந்து அ¡ரிசி வாங்குகிறோம். எனவே, தமிழ்நாட்டிலிருந்து தான் இந்த அ¡ரிசி கடத்தி வரப்பட்டிருக்கக்கூடும்” என்று உறுதியாகச் சொல்கிறார்கள் புதுவை அதிகா¡ரிகள். ரேஷனில் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கப் படும் அ¡ரிசி, கடத்தப்பட்டு வடகிழக்கு மாநிலங்களை அடையும்போது கிலோ இருபது ரூபாயாக எகிறுகிறது. இந்தத் தகவலே மின்சார அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த விவகாரமும் 2006-ஆம் வருடம் மே மாதத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. இருந்தாலும், ‘முழு உண்மையைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணை கோ¡ரியிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறது தமிழக அரசு. சி.பி.ஐ. விசாரணை கோ¡ரினாலும், தமிழக அரசின் சிவில் சப்ளை போலீஸ் துறை தனியாக, தீவிரமாக விசாரணை நடத்தி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளைக் கண்டறிந்துள்ளதாக, கோட்டை வட்டாரம் சொல்கிறது.

“2006ம் வருடம் மே மாதத்துக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பொது விநியோகத் துறை முடுக்கிவிடப்பட்டது. உணவு அமைச்சரே மாநிலம் முழுவதும் இரவும், பகலும் சுற்றி ரேஷன் அ¡ரிசி கடத்தல்காரர்களை வேட்டையாடினார். இதுவரை 45 கடத்தல்காரர்கள் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் குண்டர்கள் சட்டத்தில் இருக்கிறார்கள். நிறைய லா¡ரிகள் கைப்பற்றப் பட்டன.

கடத்தலுக்குத் துணைபோன ஊழியர்கள், அதிகா¡ரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் 40 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்தப் போலி கார்டுகள் மூலம் வாங்கப்பட்ட அ¡ரிசியே சேகாரிக்கப் பட்டுக் கடத்தப்பட்டது. ஒரு கோடியே 94 லட்சம் கார்டுதாரர்களுக்கு முறையே மாதம் 20 கிலோ அ¡ரிசி தவறாமல் வழங்கிவிடுகிறோம்.

அதேசமயம் முன்பு, அ.தி.மு.க. ஆட்சியில் உணவுக் கழகத்திடம் கொள்முதல் செய்த அ¡ரிசியின் அளவு மூன்று லட்சம் டன். நியாயமான கார்டுதாரர்களின் எண்ணிக்கை கொஞ்சம் உயர்ந்த போதும் இப்போது கொள்முதல் செய்யும் அளவு இரண்டேமுக்கால் லட்சம் டன்தான்.

இதில் இடைப்பட்ட அளவு உள்ள அ¡ரிசியே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட் டது. இப்போது உணவுக் கழகத்திட மிருந்து அ¡ரிசி கொள்முதல் செய்த லா¡ரி, எந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதையும் மானிட்டர் செய்யும் வசதி இருக்கிறது. கடந்த ஆட்சியில் ஓர் அமைச்சரே தினசாரி 20 லா¡ரிகளில் ரேஷன் அ¡ரிசியைக் கடத்தியிருக்கிறார் என்பது தொரிய வந்திருக்கிறது” என்ற திடுக் தகவலுடன் முடித்தார் அந்தத் துறை சார்ந்த இந்நிலையில், அதிகா¡ரி ஒருவர்.

புதுவையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கிடங்குகள் ஒரு வருடத்துக்கு முன்புதான் எடுக்கப்பட்டதாக ஜெயலலிதா சொல்கிறார். இப்போதைய தி.மு.க. ஆட்சியில் கடத்தல் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுவது எந்த வகையில் சமாதானமாக அமைய முடியும்!

யாருமே அ¡ரிசி கடத்தல் அதிகாரித்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பொதுவிநியோகம் என்றாலே ஊழலுடன் கைகோத்துக்கொண்டு தான் நடக்கிறது. ஒன் றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பான விவகாரம் இது. சி.பி.ஐ. விசாரணை, ‘கடத்தல் நடந்த கால கட்டத்தை’ கண்டு பிடித்து வெளியிடும்போது, யார் யார் தலை உருளுமோ?

– ஸ்ரீநி
——————————————————————————————————–

“பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் அ¡ரிசி கடத்தப்பட்டு, வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது ஒரு தொடர்கதையே” என்று சொல்லி நம்மை திடுக்கிட வைக்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகா¡ரி, அ.கி.வேங்கட சுப்பிரமணியம். பல ஆண்டுகள் உணவு மற்றும் பொது விநியோகத் துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர்.

“நமது நாட்டில் ஏறத்தாழ ஐந்து லட்சம் நியாய விலைக் கடைகள் மூலம், 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 20,000 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசி, கோதுமை, மண் ணெண்ணெய் ஆகியவை தீய சக்திகளால் கடத்தப்படுவது பல்லாண்டுகளாக நடந்து வரும் ஒரு விஷயம்.

1998-ஆம் வருடம் நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது குறித்த ஆய்வை எடுக்குமாறு டாடா நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அந்த ஆய்வின்படி தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசியில் மூன்றில் ஒரு பாகம் கடத்தப்படுகிறது என்பது தொரிய வந்தது. மாதம் ஒன்றுக்கு விநியோகிக்கப்படும் சுமார் மூன்று லட்சம் டன் அ¡ரிசியில், ஒரு லட்சம் டன் அ¡ரிசி கடத்தப்படுகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் லாபம் அடிக்கும் பட்சத்தில், வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி, கடத்தல்காரர்களின் பாக்கெட்டுகளுக்குப் போகிறது.

கடத்தலைக் கண்டுபிடிக்க சிவில் சப்ளை போலீஸ் இருக்கிறது. ஆனால், ஒரு கடத்தல் லா¡ரியைப் பிடித்து விட்டால் அதிலுள்ள ஆட்களைக் கைது செய்து, லா¡ரியைப் பறி முதல் செய்து வழக்குப் பதிவு செய்கிறார்களே தவிர, அந்தக் கடத்தலுக்கு மூலம் யார்? அ¡ரிசி எங்கு போகிறது என்றெல்லாம் ‘பல காரணங்களால்’ ஆய்வு செய்வதில்லை.

கடத்தலுக்கு முக்கிய காரணம் போலி ரேஷன் கார்டுகளும், அ¡ரிசி வாங்காத கார்டுகளும்தான். இதைக் கண்டுபிடிப்பது எப்படி? 1997-ஆம் ஆண்டு தமிழக அரசின் உணவுத் துறை (எ..225) ஆணை ஒன்று போட்டிருக்கிறது. அதன்படி ஒருவர், ரேஷன் கடைக்குச் சென்று கார்டுதாரர்கள் பட்டியலைக் கொண்ட ¡ரிஜிஸ்டரைப் பார்வையிட்டு, நகல் எடுக்கலாம். அதே போல் ஸ்டாக் ¡ரிஜிஸ்டரையும் சோதிக்கலாம். பேட்டை ரவுடிகள், அரசியல்வாதிகள் மிரட்டல் மற்றும் அராஜகம் காரணமாக, தனி மனிதர்கள் இந்த வேலைகளில் ஈடுபடத் துணிய மாட்டார்கள். கார்டுதாரர்களின் பட்டியலை எடுத்து ஏ¡ரியாவில், வீடு, வீடாகச் சோதனைச் செய்து, போலி கார்டுகளின் பட்டியலை உ¡ரிய அதிகா¡ரிக்குக் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம். இதனால் ஊழல் ஒழிய வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அ.கி.வேங்கடசுப்ரமணியம்.

————————————————————————————————————————-
விலைக் கொள்கையில் நெல்லும் கோதுமையும்

ஆர்.எஸ். நாராயணன்

தேசிய விவசாய விளைபொருள் விலை நிர்ணயக் கொள்கை விவசாய உற்பத்தி வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

ஏனெனில் விலை என்பது கேள்வியின் ஆற்றலுக்கும் வழங்கலின் விளைவுக்கும் இடைப்பட்ட ஒரு சமரசக்குறியீடு. இது வளர்ச்சியைக் கண்காணிக்கும் குறியீடும் ஆகும். கேள்வியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த விலைக்குறைப்பை ஏற்படுத்தியும், விலையை உயர்த்தி வழங்கலையும் பெருக்க வேண்டும்.

திட்ட நிர்ணயப்படி விளைபொருள் உற்பத்தி உயரும்போது வழங்கல் அதிகமாகும். வழங்கல் கூடினால் விலை வீழ்ச்சியுறும். விலை வீழ்ச்சியுற்றால் உற்பத்தி குறையும். திட்டமிட்டபடி உற்பத்தியை உயர்த்த விலை நிர்ணயம் தேவை. எனவே, உணவு உற்பத்தியை உயர்த்தும் ஒரு மார்க்கமாகவே விலை நிர்ணயக் கொள்கை உதவி வந்துள்ளது.

இருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு – குறிப்பாக நமது பொதுவிநியோகத்துக்கு வழங்கும் நெல், கோதுமை விவசாயிகளுக்கு – மத்திய அரசு வழங்கி வரும் ஊக்க விலைக்கும் மொத்தவிலைக்குறியீட்டு எண் காட்டும் விலைக்கும் உள்ள சமச்சீர்மை என்றோ தொலைந்துவிட்டது.

நெல் அல்லது அரிசியில் வெளிஅங்காடி வழங்கல் கூடுதலாகவும் கோதுமையில் வெளிஅங்காடி வழங்கல் குறைவாகவும் உள்ளது. அரிசியில் ஏற்றுமதி உள்ளது. கோதுமையில் இறக்குமதி உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு 2007 – 08-க்கான அரசின் நெல், கோதுமை விலைகளால் இரு தரப்பு விவசாயிகளும் நொந்து போயுள்ளனர்.

வடக்கே – குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உ.பி. ஆகிய மாநிலங்களின் விவசாயிகளே அரிசி மற்றும் கோதுமைகளை மத்தியத் தொகுப்புக்கு வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றனர். இம்மாநில விவசாயிகளின் கோரிக்கைகளை வைத்துத்தான் மத்திய அரசின் விலைநிர்ணயம் உருப்பெருவதாகத் தோன்றுகிறது.

கடந்த 9-10-2007 அன்று நடப்புப் பருவத்திற்குரிய வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை மத்திய அமைச்சரவைக்குழு அறிவித்தது.

அதன்படி, கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000, “ஏ’ ரக நெல் ரூ. 725 என நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த பருவத்தைவிட நடப்புப் பருவத்திற்கு (2007 – 08) கோதுமைக்கு ரூ. 150 உயர்த்தப்பட அதேநேரம் நெல்லுக்கு ரூ. 30 மட்டுமே உயர்த்தப்பட்டது. இந்த வித்தியாசம் ஒருபுறம் இருக்கட்டும்.

கோதுமையுடன் நெல்லை ஒப்பிடும்போது கோதுமையை அப்படியே மாவாக (ஆட்டாவாக) மாற்றி சமைத்து விடலாம். கழிவும் அற்பமே. ஆனால் நெல்லை அரிசியாக மாற்றித்தான் சமைக்க முடியும். நெல்லில் மூன்றில் ஒரு பங்கு உமியாகவும் தவிடாகவும் மாறிவிடும். எனினும் தவிட்டுக்கு விலை உண்டு. குருணைக்கும் விலை உண்டு.

நெல்விலை என்றால் 66.6 சதவீத அரிசி விலைக்குச் சமம். 100 சதவீதம் அரிசி என்பது ரூ. 966 என்றாலும் ரூ. 34 குறைகிறது.

நெல் விலையையும் கோதுமை விலையையும் சமவிகிதத்தில் உயர்த்தாமல் விலை நிர்ணயம் செய்துள்ள விவசாய விலை மதிப்பீட்டு விலைக்குழு பாரபட்சம் காண்பிப்பது ஏன்?

மத்திய அரசின் மத்தியத் தொகுப்புக்கு குறைந்த அளவுக்கு வழங்கல் செய்யும் தமிழ்நாட்டு விவசாயிகள் இப்போது கிளர்ந்தெழுந்துள்ளனர். அதேசமயம் விலைநிர்யணமாவதற்கு முன்பே வடக்கில் பாரதிய விவசாயிகள் சங்கம் கிளர்ந்தெழுந்துவிட்டது.

பொதுவாக ஒப்பிடும்போது கோதுமை விலையில்தான் பிரச்னை அதிகம். உலகச் சந்தையில் கோதுமையின் விலை ரூ. 1,600. மத்திய அரசு (உணவுக் கார்ப்பரேஷன்) இவ்வளவு அதிகமான விலை கொடுத்து சுமார் 10 லட்சம் டன் வரை கோதுமையை இறக்குமதி செய்துள்ளது.

கோதுமையில் உள்ள பற்றாக்குறை அரிசியில் இல்லை. அரிசி ஏற்றுமதியாகிறது. கோதுமையோ இறக்குமதியாகிறது. கோதுமை உள்ளூர் வியாபாரத்திலும் உணவுக் கார்ப்பரேஷன் ஏகபோகம் செய்கிறது.

கோதுமையின் வெளிச்சந்தைக்கும் உணவுக் கார்ப்பரேஷனே வழங்கல் செய்கிறது. அரிசியில் வெளிச்சந்தை தெளிவாக உள்ளது.

ஆகவே, பாரதிய விவசாயிகள் சங்கம் கோதுமைக்கு உலகச் சந்தையில் உள்ள விலையை வழங்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தும் கிடைத்த விலை ரூ. 1000 மட்டுமே.

இப்போது கோதுமை விவசாயிகள் ரூ. 1,240 தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்கின்றனர். கோதுமை விலையை மொத்த விலைக்குறியீட்டெண் அடிப்படையில் நிர்ணயம் செய்யாததால் கடந்த 25 ஆண்டுகளில் கோதுமை விவசாயிகளின் இழப்பு ரூ. 20,000 கோடி என்று பாரதிய விவசாயிகள் சங்கம் ஒரு புள்ளிவிவரத்தை மத்திய அரசின் அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பியுள்ளது.

பாசுமதி அரிசி தவிர்த்த இதர ரக அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுவும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பஞ்சாபில் குருதாஸ்பூர், பெரோஸ்பூர், அமிருதசரஸ் மாவட்டங்களில் விளையும் சர்பதி, பூசா சன்னரகம் ஏற்றுமதி காரணமாக ரூ. 1,600 என விற்ற விலை இன்று ரூ. 1,200-க்கு இறங்கிவிட்டது.

ஆகவே பாசுமதி சாராத இதர அரிசி ரகங்களின் ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு கூடியுள்ளது.

மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கிரிக்கெட் போதையில் உள்ளார். விவசாயப் பிரச்னையைவிட வெங்சர்க்கார் விலகல் பிரச்னைதான் இப்போது அவருக்கு முக்கிய விஷயமாகிவிட்டது!

கடந்த பல ஆண்டுகளாக வேளாண்மை உற்பத்தி மதிப்பு சரிந்துவிட்ட சூழ்நிலையில் கொள்முதல் விலைக்கும் சாகுபடிச் செலவு மதிப்புக்கும் இடைவெளி மிகவும் குறுகிவிட்டது.

எனினும், விவசாய விலை மதிப்பீட்டுக் குழு பின்வரும் பத்து விலை நிர்ணய ஆக்கக் கூறுகளை, ஜா கமிட்டி பரிந்துரைத்தபடி பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. அவையாவன:

1. சாகுபடிச் செலவு மதிப்பு.

2. பயிர் முதலீடுகளின் விலை மாற்றம்.

3. பயிர் முதலீட்டுப் பொருள் விலைக்கும் உள்ள இணைவீதம்

4. அங்காடி விலைகளின் போக்கு.

5. கேள்வியும் வழங்கலும்

6. சகபயிர் விலைகள்

7. தொழில்துறை செலவு மதிப்பின் மீது ஆதரவு விலை ஏற்படுத்தும் விளைவு.

8. பொதுவான விலைவாசி ஏற்படுத்தும் விளைவு.

9. வாழ்க்கைச் செலவு மீது ஏற்படுத்தும் விளைவு.

10. அகில உலகச் சந்தை விலை.

இவற்றில் முதல் ஐந்து ஆக்கக் கூறுகளுடன் வாழ்க்கைச் செலவு – விவசாயிகளின் வாழ்க்கைச் செலவையும் – ஒட்டிப் பின்பற்றினால் வேளாண் உற்பத்தி மதிப்பு உயர வழி உள்ளது.

சரி. இதில் தமிழக அரசின் பங்கு என்ன? வேளாண்மை, உணவு எல்லாம் அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று கூறி, திமுக அரசு உணவுக் கார்ப்பரேஷனுக்கு இணையாக தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனைத் தோற்றுவித்து உணவுக் கார்ப்பரேஷன் வரம்பைக் கட்டுப்படுத்தியுள்ளது.

இதே மனஉணர்வை மனத்தில்கொண்டு உயிர்ப்பாதுகாப்புக்கு உறுதுணையாயுள்ள உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு உயர்ந்தபட்சமாக நெல் விலையை ரூ. 1200க்கு உயர்த்தத் தமிழ்நாடு அரசு முன்வருமா?

நெல் கொள்முதலில் ஏகபோகம் செய்வது தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் சப்ளை கார்ப்பரேஷன் என்பதால் நெல் விலையை உயர்த்தும் ஒரு கடமை மாநில அரசுக்கு இல்லையா?

(கட்டுரையாளர்: இயற்கை வேளாண்மை பொறியியல் நிபுணர்)

Posted in abuse, ADMK, Agriculture, Ask, Bid, Biz, Black markets, Bribery, Bribes, Business, Capture, Commodites, Commodity, Consumption, Contracts, Corruption, Council, Deflation, Demand, Distribution, DMK, Economy, Exports, FAO, Farming, Food, Futures, GDP, godowns, Govt, Growth, Hijack, Illegal, Imports, Inflation, Investigation, kickbacks, Law, Loss, markets, Options, Order, organic, P&L, Paddy, PDS, PnL, Policy, Power, Prices, Production, Profit, Reliance, retail, retailers, rice, seize, Shipments, Storage, Supply, Wheat | Leave a Comment »

Economic Survey: Central Pay Commission Report – Indiscriminate salary raises?

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஊதிய உயர்வும் நிதிச் சுமையும்!

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 2008-ல், இந்தியா முழுவதும் மாநில அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களும் அதிகரிக்கும். வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பரிசைப் போல அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்படவிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

1997 வாக்கில் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான 5-வது ஊதியக் கமிஷனின் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டபோது, அப் பணியில் நானும் ஈடுபட்டிருந்தேன். அந்த ஊதிய உயர்வுப் பரிந்துரைகளை அமல்படுத்தியதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நிதிச் சுமையை அவை சரிக்கட்டுவதற்கு நான்கைந்து ஆண்டுகளுக்குமேல் ஆனது. வரும் ஆண்டுகளில் அதே நிலைமை மீண்டும் ஏற்படும்.

இன்றைய சூழலில், புதிய ஊதியக் குழு பரிந்துரையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்றே தெரிகிறது. தனியார் துறையில் உள்ள அதிகாரிகளின் ஊதியங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. எனவே தனியார் துறைக்கு இணையாக அரசு அதிகாரிகளுக்கும் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன.

இதில் முக்கியமான பிரச்னை என்னவென்றால், அரசுத் துறைகளைப் பொருத்தவரை, பெருந்தொகையை ஊதியமாகவும் கொடுத்துக்கொண்டு, பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களையும் வைத்துக்கொண்டு இருக்க முடியாது என்பதுதான். ஏனென்றால், அரசுத் துறைகளில் இப்போது பல லட்சம் பேர் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றனர். அதில் 90 சதவிகிதமாக இருக்கும் சி மற்றும் டி பிரிவுகளில் தேவைக்கு அதிகமாக ஏராளமானோர் பணியில் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும். அரசுத் துறைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதுடன், ஒரே வேலையையே வேறு ஊழியர்கள் திரும்பவும் செய்வதையும் தவிர்த்துவிட்டால், பணித் திறனும் வேகமும் அதிகரிக்கும்.

நவீன தகவல் தொடர்பு முறைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு வேலைத்திறனைப் பெருமளவில் அதிகரிக்க முடியும். ஆனால், அதற்கான முயற்சி நடைபெறுவதாகத் தெரியவில்லை. அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முன்வராமல், தனியார் துறைக்கு இணையாக அரசு அலுவலர்களின் ஊதிய விகிதங்கள் மட்டும் உயர வேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. ஏற்கெனவே, பல மாநில அரசுகளின் நிர்வாகச் செலவினங்கள் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன. எனவே, அரசு ஊழியர்களின் ஊதியம் இன்னும் அதிகரித்தால் கூடுதல் நிதிச் சுமையை அவற்றால் தாங்கிக்கொள்ள முடியாது. அதற்காக, அரசு ஊழியர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வை வழங்கக் கூடாது என்று இங்கு வாதிடவில்லை; மாறாக, சி மற்றும் டி பிரிவு ஊழியர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கலாம்.

“உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதியம்’ குறித்து அவ்வப்போது பேசப்பட்டுவருகிறது. மத்திய, மாநில அரசுத் துறைகளில் நடைபெற்றுவரும் பல்வேறு விதமான பணிகளைக் கருத்தில் கொண்டால், அவற்றை வகைப்படுத்தி, அந்த ஊழியர்களின் உற்பத்தித் திறனை வரையறுக்க ஒரு திட்டவட்டவமான உத்தியை வகுப்பதென்பது அனேகமாக இயலாத காரியமென்றே தோன்றுகிறது.

எடுத்துக்காட்டாக, காவல் துறை ஆய்வாளரின் உற்பத்தித் திறனை வரையறுப்பது எப்படி? அவர் எத்தனை குற்ற வழக்குகளில் புலனாய்வை முடித்திருக்கிறார் என்பதைக் கொண்டு அவருக்கு ஊதியத்தை வழங்குவதாக வைத்துக்கொள்வோம். அவர் புலனாய்வு செய்த வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வருவதற்குள் 10 ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கும்; வழக்குகளைச் சரியாகப் புலனாய்வு செய்யாததால், நீதிபதியின் விமர்சனத்துக்கும் அவர் உள்ளாகியிருக்கக்கூடும். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே “புலனாய்வுத் திறமை’க்காக அந்த ஆய்வாளர் ஊக்கத்தொகையையும் பெற்று, அதன் காரணமாகவே பதவி உயர்வும் பெற்றுச் சென்றுவிட்டிருப்பார்.

ஒரு மாவட்ட ஆட்சியரின் உற்பத்தித் திறனை எவ்வாறு வரையறுக்க முடியும்? அந்த மாவட்டத்தில் சில விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்கள்; எனவே அந்த மாவட்ட ஆட்சியரின் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது என்ற முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால் விவசாயி தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் அவர் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகும்.

தனியார் துறையில் லாபமே நோக்கம். எனவே, அதே அளவுகோலைப் பயன்படுத்தி அரசுத் துறை ஊழியரின் பணியை வரையறுக்க முடியாது.

எடுத்துக்காட்டாக, மத்திய அரசின் பெட்ரோலியத் துறைச் செயலரை எடுத்துக்கொள்வோம். அவர் செய்யும் அதே பணியை தனியார் துறையில் அவர் செய்துகொண்டு இருந்தால், அவரது ஆண்டு ஊதியம் ரூ.5 கோடியாகவோ அல்லது ரூ.10 கோடியாகவோ இருக்கக்கூடும். ஆனால் அரசுத் துறையில் அந்த ஊதியத்தை வழங்குவது குறித்து யோசிக்க முடியுமா?

இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் அரசு ஊழியர்களுக்கு “உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதிய’ முறையை அமல்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறுவது அர்த்தமற்ற வாதம். ஏனென்றால், அத்தகைய வளர்ந்த நாடுகளில் இருந்து, இந்தியவைப் போன்று, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் இடையே வேறு வகையான உறவு நிலவும் நாடுகள் முற்றிலும் மாறுபட்டவை.

நம் நாட்டில், “ஆண்டுதோறும் பணியை மதிப்பிடும் முறை’ ஒன்று ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அது இப்போது செயலற்றுப் போய்விட்டதற்கு இன்றைய பணி நிலைமைகளும், அரசுப் பணிகளில் நிலவும் அரசியல் செல்வாக்கும் தலையீடுகளுமே முக்கிய காரணங்கள். எனவே, “உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதிய முறை’யால், இப்போதைய குறைபாடுகளைப் போக்கிவிட முடியாது.

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்பது கேடு விளைவிக்கும் யோசனையாகும். 1997-ல் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிய பொழுதே அதை நான் எதிர்த்தேன். ஆனால், அதன் பிறகு புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, ஊழியர் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திவிட்டது.

ஊழியர்கள் 2 ஆண்டுகள் தாமதமாக ஓய்வுபெறுவர் என்பதால், அவர்களது வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை (கிராஜுட்டி) போன்றவற்றை இரு ஆண்டுகள் கழித்துக் கொடுத்தால் போதும். எனவே புதிய அரசின் முதல் ஆண்டு பட்ஜெட்டில் நிதிச் சுமை குறைவாக இருக்கும். அது புதிய அரசுக்கு உதவியாக இருக்கும் என்று காரணம் கூறப்பட்டது. இந்த வகையான குறுகியகாலப் பயனைக் கருத்தில் கொண்டு ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவது மிகத் தவறானது.

ஓய்வுபெறும் வயது வரம்பு உயர்த்தப்படுவதால், ஏராளமான இளைய வயதினருக்கு பதவி உயர்வுகள் தள்ளிப்போகின்றன. அது அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும். திறமை குறைந்த ஏராளமான பணியாளர்கள் மேலும் 2 ஆண்டுகளுக்குப் பணியில் தொடரும் நிலை ஏற்படும். அடுத்த நிலையில் இருப்போருக்கு அவர்கள் தடைக்கற்களாகவும் மாறிவிடுவார்கள். எனவே, ஓய்வுபெறும் வயதை உயர்த்தக் கூடாது.

நிர்வாகச் சீர்திருத்தம் குறித்தும் கூறப்படுகிறது. ஆனால், ஊதியக் கமிஷனின் பரிந்துரையில் நிர்வாகச் சீர்திருத்தம் இடம்பெறுமா என்பது தெரியவில்லை. ஆனால் நிர்வாகச் சீர்திருத்தம் என்று கூறும்பொழுது, பெரும்பாலும் அது தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருக்கிறதே தவிர, நடைமுறைச் செயல்பாடுகளின் தரத்தை உயர்த்த எந்த வகையிலும் உதவவில்லை. அரசியல்வாதிகள் ~ அதிகாரவர்க்கத்துக்கு இடையிலான உறவுகள்தான் நிர்வாகச் சீர்கேட்டுக்குக் காரணமாகும். அதைக் களையாமல் சீர்திருத்தங்களால் எந்தப் பயனும் விளையாது.

உற்சாக மிகுதியில், மாநில அரசுகளால் தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு அபரிமிதமான ஊதிய உயர்வை ஊதியக் குழு பரிந்துரைக்காது என எதிர்பார்ப்போம். அதேபோல, அதை தேர்தலுக்கு முன் கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதி, அரசியல் நோக்கத்தில், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளை மத்திய அரசும் வாரி வழங்கிவிடாது என்று நம்புகிறோம்; இல்லையெனில், அவை மாநில அரசுகளின் நிதி நிலைமைமீது பெருத்த அடியாக அமைந்துவிடும்.

    (Rs. in crores)

 

Year

Gross Revenue

Interest payment per year
Crore

Net
Receipt Pay

Pay
Allowances

% of net
revenue

 


  Pay Bill Pension Bill

Posted in AG, Allowance, Appraisal, Attorney, Budget, Cabinet, Collector, Commission, Compensation, Economy, employee, Expenditure, Expenses, Finance, Govt, Growth, Increase, Inflation, Jobs, Merit, Pandian, Pay, Performance, Price, PSU, PWD, Raise, Rathnavel, Rathnawel, Ratnavel, Recession, recommendations, responsibility, Rise, Roles, Salary, Tariff, Tax | Leave a Comment »

Hike in petro prices: Work out strategy that will not burden common man & nature

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

குன்றிவரும் எண்ணெய் வளம்

என். ரமேஷ்

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு தற்போது இல்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா அண்மையில் தெரிவித்தார். ஆனால், விலைஉயர்வை நீண்ட காலத்துக்குத் தள்ளிப்போட வாய்ப்பில்லை.

கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் இதுவரை கண்டிராத அளவுக்கு – ஒரு பீப்பாய் (159 லிட்டர்) 92 அமெரிக்க டாலர் என்ற அளவை எட்டியது.

1978 ஆம் ஆண்டு 13 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, 2007 அக்டோபரில் 92 டாலரை எட்டியுள்ளது. இது விரைவில் 100 டாலரை எட்டக்கூடும். இந்த விலைஉயர்வுக்கு ஈரான்மீது அமெரிக்கா அறிவித்த பொருளாதாரத் தடை காரணமாகக் கூறப்பட்டாலும், எண்ணெய் நிறுவனங்கள், அரசுகள் வெளிப்படையாக கூறத்தயங்கும் உண்மை ஒன்று உள்ளது.

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்ட “எரிசக்தி கண்காணிப்புக் குழு’ என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கை, உலகின் உச்சபட்ச பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தி அளவு 2006 ஆம் ஆண்டிலேயே எட்டப்பட்டுவிட்டது; இனி ஆண்டுதோறும் சரிவைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கிறது.

தற்போதைய உற்பத்தி அளவான நாளொன்றுக்கு 8.10 கோடி பீப்பாய்கள் என்பது 2030 ஆம் ஆண்டில் 3.9 கோடி பீப்பாய்களாகக் குறையும் என அந்த அறிக்கை கூறுகிறது. இது ஏறத்தாழ 1980 ஆம் ஆண்டு உற்பத்திக்குச் சமம். ஆனால், அப்போதைய மக்கள்தொகையைக் காட்டிலும் 2030-ல் உலக மக்கள்தொகை இரு மடங்காகியிருக்கும்.

நிலம், கடல், ஆர்க்டிக் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் 1,25,500 கோடி பீப்பாய் அளவு எண்ணெய் இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் மதிப்பிட்டிருந்தாலும் இந்த அளவு 85,400 கோடி பீப்பாய்களாக மட்டுமே இருக்கும் என இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

எண்ணெய் உற்பத்தியின் சரிவு காரணமாக விலைஉயர்வு இனி தொடரும். மிக மோசமான பொருளாதார, அரசியல், சமூக விளைவுகள் உண்டாகும் எனப் பல வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அமெரிக்காவின் இராக் போருக்குக் காரணம் பெட்ரோலியம்தான் என்பதை அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன் உள்ளிட்டோர் ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான். (தினமும் 2.06 கோடி பீப்பாய்களை நுகரும் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி, 83.67 லட்சம் பீப்பாய்கள்தான்).

பெட்ரோலியப் பொருள்களின் விலைஉயர்வால் மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி, டீசல் என்ஜின் ரயில்களின் போக்குவரத்து குறைவது மட்டுமல்ல; மிகப் பெரும் உணவுப் பஞ்சம், அதைத் தொடர்ந்து சமூகச் சீர்குலைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களது உற்பத்தியைக் குறைக்க நேரிட்டால், பற்றாக்குறை பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் தொழில்துறையில் பாதிப்புகளும் வேலையிழப்புகளும் ஏற்படலாம்.

உலகின் மிகப்பெரிய உணவு ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, தனது உள்நாட்டுத் தேவை காரணமாக, 2025-ல் உணவு ஏற்றுமதியை நிறுத்திவிடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், தற்போது பெட்ரோலியப் பொருள்களின் உதவியால், ஒருவருக்குத் தேவையான உணவை 20 நிமிஷ உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்ய முடிகிறது. பெட்ரோலியம் இல்லையெனில் மூன்று வாரம் பாடுபட்டுத்தான் ஒரு நாள் உணவை உற்பத்தி செய்ய முடியும். மற்ற நாடுகளின் நிலையும் ஏறக்குறைய இதேபோலத்தான்.

எனவே, அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகளால் அனுபவித்து வரும் நெருக்கடிபோக, கடும் உணவு நெருக்கடியையும் சந்திக்க உள்ளன.

இந்த நிலைமையைச் சமாளிக்க அரசிடம் திட்டங்கள் இல்லை. தங்களது லாபம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், உருவாகி வரும் நெருக்கடியை மறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முயலுகின்றன.

இவையாவும் சில “சுற்றுச்சூழல் ஆர்வலர்களின்’ அதீத கற்பனை என யாரும் கூற முடியாத அளவுக்கு காரணிச் சான்றுகள் பெருகி வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களால் பெரிய அனுகூலங்களைப் பெற்ற அமெரிக்க அதிபர் புஷ்ஷின் பண்ணை வீடு, நாட்டின் மின்சாரத் தொகுப்புடன் இணைக்கப்படவில்லை; முழுக்க முழுக்க காற்றாலைகள், சூரிய ஒளித் தகடுகள் போன்ற மரபுசாரா வளங்களிலிருந்து எரிசக்தி பெறுகிறது! துணை அதிபர் டிக் செனியோ, எண்ணெய் நிறுவனங்களிலிருந்த தமது முதலீடுகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டார்.

Posted in Commerce, Deora, Diesel, Economy, energy, Environment, Food, Freight, Gas, GDP, Gulf, Hike, Inflation, Kerosene, LPG, Murali, Natural, Nature, oil, ONGC, Op-Ed, Petro, Petrol, Petroleum, Pollution, Products, Pumps, Resources, Shortage, Solar, Strategy | Leave a Comment »

Don’t rush to cut policy rates: Monetary, fiscal recipe for overheating India

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

வங்கிகளில் அரசு தலையீடு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.

அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.

வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.

இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.

விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.

வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.

நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.

அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.

ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.

இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.

இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?

நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in Agriculture, Assets, Auto, Automotive, Banking, Banks, BOB, Bonds, BSE, Cars, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chit Funds, Chitfunds, Chithambaram, Commerce, Cooperative, Credit, CRR, Deflation, Deposits, Dollar, Economy, Enforcement, Exchange, Farmers, FD, Finance, Financing, fiscal, Govt, HDFC, ICICI, Index, Indices, Inflation, Insurance, Interest, investments, IOB, KVB, Land, liquidity, Loans, markets, Micro-financing, Microloans, Minister, Monetary, Motor, NIFTY, NSE, Overnight, Overnite, Parts, Policy, Property, Rates, RBI, reserves, ROI, Rupee, Rupees, Rupya, SBI, Schemes, Shares, Spare, Stocks, Student, Treasury | Leave a Comment »

Textile Industry: Current Trends, analysis – S Gopalakrishnan (Garment Exports)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

ஜவுளித்துறையில் “கோட்டா’ முறை முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகளாகப் போகிறது. ஜவுளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் என்ன நிலைமை இருந்தது?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகளை ஒரே நாட்டிலிருந்து வாங்குவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகித அடிப்படையில் இறக்குமதி செய்து வந்தன. இதனால், இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த கோட்டா முறை 2005 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இந்திய ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. “”இனி தேவையெல்லாம், வணிகத்திறன் மட்டுமே. அதாவது, சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தகுந்த சிறப்பான தரம், நியாயமான விலை, குறிப்பிட்ட தேதியில் ஏற்றுமதி செய்தல் ஆகியவையே. இனி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம்” என்று ஜவுளித்துறையில் பேசப்பட்டது.

2005-ல் வெளியான முக்கிய ஆய்வறிக்கைகள், 2003 – 04-ல் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி 2010-ல் 50 பில்லியன் டாலராக உயரும் என்று தெரிவித்தன. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அதேபோல், 2012-ம் ஆண்டில் 55 பில்லியன் டாலராகவும் 2014-ம் ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும் ஜவுளி ஏற்றுமதி உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இணையாக ஜவுளித்துறை உத்வேகம் அடையும் என்றும் பேசப்பட்டது.

ஆனால், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் டாலராகவே இருக்கும் என்று தெரிகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் இலக்கைவிட குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டும் இலக்கைவிட 2 பில்லியன் டாலர் குறைவாகவே ஏற்றுமதி இருந்தது.

எனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவு, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.

சீனா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டு கோட்டா முறை ரத்தான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 சதவிகிதம்தான்; ஆனால் சீனாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம்.

இந்தியாவைப் பொருத்தவரை, ஜவுளித்துறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்றரை கோடி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவிகிதத்தினருக்கு ஏற்கெனவே வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஒரு துறை.

மத்திய அரசு அண்மைக்காலமாக சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையில் புதிதாக முதலீடுகள் வரவேண்டும் என்ற நோக்கில், 1999-ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையில் தொழிலியல் மேம்பாடு நிதித் திட்டத்தை (பங்ஷ்ற்ண்ப்ங் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ர்ய் ஊன்ய்க் நஸ்ரீட்ங்ம்ங்) உருவாக்கி தொழிலியல் ரீதியான மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்காக நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டம் நடப்பாண்டில் முடிவடையும் நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாட் (யஹப்ன்ங் அக்க்ங்க் பஹஷ்) உள்ளிட்ட வரிச்சலுகைகள், நவீன இயந்திரங்கள் இறக்குமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறுதொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பின்னலாடை போன்ற சில பிரிவுகளை பிற தொழிற்கூடங்களுக்கு அனுமதித்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்ச வரம்பை 100 சதவிகிதமாக உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

எனினும் ஜவுளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. தொழிலியல் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் பயனாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் புதிய முதலீடுகளை ஜவுளித் துறையில் செய்து வருகின்றனர்.

அதேநேரம், ஜவுளி ஏற்றுமதியில் அனுபவமும், ஆற்றலும் பெற்றுள்ள சில தொழில் முனைவோர் வங்கதேசம் சென்று, ஏற்றுமதி செய்ய முற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த நாட்டில் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் குறைவு என்பதே இதற்கு காரணம்.

இது ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. மற்ற ஏற்றுமதியாளர்களைப்போலவே, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இந்த டாலர் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ. 1,400 கோடியில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இது போதுமானது அல்ல என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்து.

இந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை மட்டும் நம்பியிராமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். எனினும், அமெரிக்கச் சந்தையின் தேவையைவிட ஐரோப்பிய நாடுகளின் தேவை மிகக் குறைவு என்பதால், இது ஒரு தாற்காலிக நிவாரணமாகவே அமையும்.

அதேபோல், அமெரிக்காவின் புதிய ஆர்டர்களுக்கு 3 சதவிகித அளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஜவுளித்துறையில் நீண்டகாலத்துக்கு உத்வேகம் ஏற்பட வேண்டுமானால், தொழிலியல் ரீதியாக நவீனமயமாக்கல், கட்டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்துக்கேற்ற புதிய புதிய வணிக உத்திகள் ஆகியவை உடனடித் தேவை. அத்துடன், நெசவு முதல் ஆடைகளைத் தைத்து முடிப்பதுவரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு, சர்வதேசத் தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத்திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்களை அமைக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 1,055 கோடி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in America, Bangladesh, Budget, Capital, Cash, China, Commerce, Conversion, Dollar, Dress, Dresses, Economy, Employment, EU, Europe, Exchange, Exports, Factory, Fashion, Garments, GDP, Govt, Honduras, Imbalance, Incentives, Income, Indonesia, Industry, Inflation, Jobs, Knit, Loss, Monetary, Money, Nicaragua, Profit, revenue, Rupee, Srilanka, Tariffs, Tax, Textiles, Thirupoor, Thiruppoor, Thiruppur, Thirupur, Tirupoor, Tiruppoor, Tiruppur, Tirupur, Trade, US, USA | Leave a Comment »

Impact of MNCs and pricing pressures by Govt. Policy – Harming the local farmer

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2007

ஊருக்கு இளைத்தவன்…

உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.

உலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.

தோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.

தில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.

உலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

உலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.

10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.

வாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.

யூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.

கார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.

கார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.

இந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.

கோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.

மத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.

Posted in Agriculture, Banana, Biz, Brookebond, Brookebonds, Business, Cadburys, Chips, Commerce, Consumer, Copyrights, Customer, Dalit, Deflation, DNA, Doha, Economy, Exports, Farmer, Farming, Fertilizer, Food, Foodgrains, Genetic, harvest, Imports, Inflation, markets, MNC, Monsanto, Natural, Needy, organic, peasant, Poor, Potato, Prices, Pricing, Recession, rice, Rich, Seeds, Shares, Shopping, Shweppes, Sivaji, Statistics, Stats, Stocks, Subsidy, Suicide, Suicides, Talks, Tax, Tea, Trade, Trademark, Unilever, Urea, Vidharaba, Vidharabha, Vitharabha, Wal-Mart, Walmart, Wealthy, Weeds, Wheat, WTO | Leave a Comment »

Manmohan Singh’s Rural job guarantee scheme: S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி

எஸ். கோபாலகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.

தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.

பங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.

இத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்?

ரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.

அதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.

ஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.

வருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்!

தற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.

1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.

இதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.

இந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.

கிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

Posted in Agri, Agriculture, Assets, Auto, Automotive, Bangalore, Biz, Blr, Cement, Chennai, City, Commerce, computers, Currency, Deflation, Delhi, Economy, Employment, Exchange, Exports, Farmers, Farming, Fe, Finance, GDP, Globalization, Growth, hyd, Hyderabad, Imports, Industry, Inflation, Iron, IT, Jobs, Loans, Maa, Madras, Media, Medicine, Medicines, Metro, Motors, Naidu, Needy, Noida, Poor, Poverty, Rains, Recession, Rich, Rupee, Rural, Season, sectors, SEZ, Software, Spot, Stagflation, Steel, Suburban, Tech, Technology, Telecom, Television, TV, UP, Wealthy, Weather, Work, workers, Zones | Leave a Comment »

International Financial Instituitions and their influence in Indian Govt Policymaking

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2007

வரலாறு திரும்பிவிடக் கூடாது!

அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம் என்று ஓர் ஆய்வுக் குறிப்பு கூறுகிறது. இப்படி ஓர் ஆய்வுக் குறிப்பைச் செய்திருப்பது ஏதாவது அரசியல் கட்சியா, அரசியல் ஆய்வாளரா அல்லது பத்திரிகையாளரா என்றால் இல்லை. ஒரு நிதி நிறுவனம், அதிலும் ஒரு சர்வதேச வங்கியின் தனியார் நிதி நிறுவனம்தான் இப்படி ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்து, எல்லா நாளேடுகளுக்கும் பத்திரிகைக் குறிப்பாக அனுப்பி இருக்கிறது.

அடுத்த நிதிநிலை அறிக்கையில் பல சமூக நலத் திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மக்களின் நல்லெண்ணத்தை மன்மோகன் சிங் அரசு பெற முடியும் என்று அந்த அறிக்கை யோசனை கூறுகிறது. தங்களது நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற இடதுசாரிகளும் எதிர்க்கட்சிகளும் முட்டுக்கட்டை போடுகின்றன என்கிற ஆதங்கத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கருதுவதாகவும் அந்தக் குறிப்பு மேலும் விவரிக்கிறது.

விஷயம் அத்துடன் முடிந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை. தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனது வளர்ச்சித் திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்த மக்கள் ஆதரவளிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பையும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிரான கொள்கைகளை உடைய இடதுசாரிகளும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கையையும் அந்தக் குறிப்பு கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச நிதி நிறுவனங்களும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் மிகப்பெரிய முதலீடுகளுடன் இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தபோது எழுப்பப்பட்ட முதல் எச்சரிக்கை என்ன தெரியுமா? “அன்னிய நிதி நிறுவனங்களை இங்கே தங்குதடையின்றி செயல்பட அனுமதிக்கும்போது, அவை நமது நாட்டு நிர்வாக விஷயங்களிலும், அரசியலிலும் தங்குதடையின்றி செயல்படும் உரிமையைப் பெற்றுவிடும் என்பதுதான். தங்களது முதலீட்டுக்கான அதிகபட்ச லாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துச் செயல்படும் வியாபார நிறுவனங்கள் அவை என்பதை மறந்துவிடலாகாது!’ என்கிற எச்சரிக்கையை நாடாளுமன்றத்திலேயே பல முதிர்ந்த அரசியல் தலைவர்கள் எழுப்பியது இப்போது நினைவில் நிழலாடுகிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் பத்து கோடி ரூபாய் என்று நிதி ஒதுக்கி, போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம், பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்களை வருங்காலத்தில் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்கிவிடாது என்பது என்ன நிச்சயம்? கணிசமான உறுப்பினர்களைத் தங்களது வலையில் வீழ்த்தி, இந்திய அரசையே நமது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஆட்டிப் படைக்க நினைத்தால் அதை எப்படித் தடுக்க முடியும்?

இந்திய அரசியலின் போக்கு எப்படி இருக்க வேண்டும், நமது அரசின் திட்டங்கள் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்திய வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வியாபாரம் செய்ய வருகின்ற அன்னிய நிதி நிறுவனங்களும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் நிச்சயிக்கும் நிலைமை ஏற்படுவது இந்திய இறையாண்மைக்கே ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு, அன்னிய முதலாளிகளால் அன்னிய முதலீட்டாளர்களுக்காக நடத்தப்படும் அரசாக மாறிவிடுமோ என்கிற பயத்தை அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் சுற்றறிக்கை ஏற்படுத்துகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடத்தை நாம் மறந்துவிட மாட்டோம் என்கிற நம்பிக்கைதான் இப்போதைக்கு ஒரே ஒரு ஆறுதல்!

——————————————————————————————————————

அமெரிக்காவைப் பின்பற்றலாமே…!

ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை என்பது பொருளாதார நிபுணர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விஷயமாகி விட்டது.

மற்ற நிதி நிறுவனங்களும், அமைப்புகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒன்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தாலும், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி 2007-08-க்கான வளர்ச்சி 8.5 சதவிகிதம் என்றுதான் அறிவிக்கிறது. கடந்த ஆண்டு 9.4 சதவிகிதமும் அதற்கு முந்தைய ஆண்டு 9 சதவிகிதமும் இருந்த வளர்ச்சி 8.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதே என்று வருத்தப்படத் தேவையில்லை. கடந்த நான்கு ஆண்டு சராசரி வளர்ச்சி 8.6 சதவிகிதம்தான் என்பதால், இந்த வளர்ச்சியே நல்ல அறிகுறி என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த அறிக்கையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், நமது விவசாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு. எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவின் மொத்த வருமானத்தில் 40 சதவிகிதம் இருந்த விவசாயத்தின் பங்கு இப்போது வெறும் 20 சதவிகிதமாகக் குறைந்துவிட்டிருக்கிறது. விவசாய வளர்ச்சி 2.8 சதவிகிதத்திலிருந்து இப்போது 3.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது என்று நாம் பெருமைபட்டுக்கொள்ளலாமே தவிர, அடிப்படையில் விவசாயமும் விவசாயிகளும் மற்ற துறைகளின் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது மிகவும் பின்தங்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, விவசாயிகளின் பிரச்னைகளை ஆராய சிண்டிகேட் வங்கித் தலைவர் சி.பி. ஸ்வர்ஸ்கர் தலைமையில் அமைத்த குழுவின் அறிக்கையும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. விவசாயிகளுக்கு எளிய முறையில் எப்படிக் கடன் வழங்குவது என்பதைப் பரிசீலித்து, வழிமுறைகளை ஏற்படுத்துவதுதான் இந்தக் குழுவின் நோக்கம்.

தற்போதைய நிலையில் உயர்ந்த கூலியும், அதிகரித்த உர விலையும், போதுமான அளவு தண்ணீர் இல்லாததும் விவசாயிகளை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. விளைபொருள்களுக்குப் போதிய விலை இல்லை என்பது மட்டுமல்ல, அரசுத் தரப்பில் சரியான நேரத்தில், நஷ்டம் ஏற்படாத விலையில் கொள்முதல் நடைபெறாமல் இருப்பதும் விவசாயிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றன.

ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது உணவு உற்பத்தியில் அந்த நாடு தன்னிறைவு அடைவதில்தான் இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதனால்தான், தனது நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை அமெரிக்கா அதிக விலை கொடுத்து வாங்கி கடலில் கொட்டுவது, நெருப்பிட்டுக் கொளுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. விவசாயி தனது விளைபொருள்களை விற்க முடியாமல் நஷ்டப்படக் கூடாது என்பதுதான் அதன் அடிப்படை நோக்கம். மானியமாக அதிகப் பணம் போனாலும், விவசாய உற்பத்தி குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் முனைப்பாக இருக்கின்றன.

8.6 சதவிகித வளர்ச்சி என்று மேலெழுந்தவாறு பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. பெருவாரியான மக்கள் விவசாயம் சார்ந்து கிராமப்புறங்களில்தான் இன்றும் வசிக்கிறார்கள். விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சியும், கிராமப்புற வளர்ச்சியும் அதனால் ஏற்படும் தன்னிறைவும்தான் உண்மையான வளர்ச்சியே தவிர அன்னியச் செலாவணி இருப்பும், மேலெழுந்தவாரியான பொருளாதார வளர்ச்சியும் அல்ல.

தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் அமெரிக்காவையும், வளர்ச்சி அடைந்த நாடுகளையும் பின்பற்றத் துடிக்கும் நமது மத்திய அரசின் பொருளாதார நிபுணர்கள், இந்த விஷயத்தில் அமெரிக்காவைப் பின்பற்ற முயலாதது ஏன்? நல்ல விஷயங்கள் நமக்கு வேண்டாம் என்பதாலா?

——————————————————————————————————————

Posted in Agriculture, Assets, bank, Banking, Banks, Big, City, Commerce, Deflation, Dept, Development, Economy, Farming, Foreign, GDP, Govt, Growth, History, Index, Indices, Inflation, Loans, Metro, nexus, Opportunity, Policy, Poor, RBI, Recession, Rich, Rural, solutions, Stagflation, Suburban, Syndicate, Village, WB, World | Leave a Comment »

Rupee full convertibility – American sub-prime Mortgage Loan imbroglio: Economic Analysis

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007

ரூபாய் முழு மாற்றம்-தேவை நிதானம்

எஸ். கோபாலகிருஷ்ணன்

நல்லதோ, கெட்டதோ, உலகமயமாக்கலின் தாக்கம், வேறு எந்த தொழிலில் தெரிகிறதோ இல்லையோ, முதலீட்டுத் துறையில் நன்றாகவே தெரிகிறது!

அண்மையில், இந்திய பங்குச் சந்தையில், கடுமையாக ஏற்பட்ட சரிவுக்குக் காரணம், அமெரிக்காவில் வீட்டுக் கடன் வழங்குவதில் ஏற்பட்ட வீழ்ச்சி என்றால் விந்தையாகத்தான் உள்ளது. அது மட்டுமல்லாமல், இந்தியாவில் இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத ஓர் ஆங்கிலச் சொல்லாடல் ஒரே நாளில் முதலீட்டாளர்கள் முதல், இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் பரிச்சயமாகிவிட்டது! ஆம். “சப்-பிரைம்’ (Sub-Prime)) கடன் என்றால் என்ன? தர நிர்ணய அடிப்படையில், நிதிவலிமை குறைந்த தரப்பினருக்கு வீட்டுக் கடன் கொடுப்பதைத்தான், “சப்-பிரைம்’ (Sub-Prime)) அடமானம் என்கிறார்கள். இந்த பிரிவினருக்கு ஏன் கடன் கொடுக்கிறார்கள் என்றால், இது போன்ற கடன்களுக்கு அமெரிக்காவில், கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கும் பழக்கம் நிலவுகிறது.

இப்படி கூடுதல் வட்டி விகிதத்தில் சற்று நலிவடைந்த பிரிவினருக்குக் கொடுக்கும் வீட்டுக் கடன் பத்திரங்களை அந்த வங்கிகள், “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ என்னும் நிதி அமைப்புகளிடம் விற்று விடுகிறார்கள். இந்தக் கடன் வாராக் கடனாக மாறினால், வங்கிகள் மட்டுமல்லாமல் “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ போன்ற, நிதிச் சந்தையின் இதர பிரிவுகளையும் பாதிக்கிறது.

ஆக, அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்படும் ஒரு பின்னடைவு, இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பங்குச் சந்தையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது என்பது என்னவோ உண்மை.

இன்னோர் உதாரணம் : 1997-ல் சில ஆசிய நாடுகளிடையே கடும் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கிய தருணம். பல நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி இந்தோனேஷியாவுக்கு ஏற்படாது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள். காரணம், இந்தோனேஷியாவின் பொருளாதார அடிப்படைகள் அப்போது வலுவாக இருந்தன. பணவீக்கம் குறைவு; சர்வதேச வர்த்தகத்தில் சாதகமான நிலைமை; அந்நியச் செலாவணி கையிருப்பு உபரியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த நாட்டு வங்கிகள் வலுவான நிலையில் இருந்தன.

ஆனால், விரைவிலேயே பொருளாதாரம் சீர்குலைந்தது. கடும் நிதி நெருக்கடியின் விளைவாக, கலவரம் மூண்டது. இதில், சிறுபான்மையினரான சீன வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர். இறுதியாக சுகார்தோ அரசு கவிழ்ந்தது. நிதி நெருக்கடி எந்த நேரத்தில், எந்த நாட்டில் தலைதூக்கும் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவில் ஏற்பட்ட “சப்-பிரைம்’ வீட்டுக் கடன் பிரச்னை, அமெரிக்க பங்குச் சந்தையை மட்டும் அல்லாமல், பல நாட்டுப் பங்குச் சந்தைகளையும் பாதிக்கிறது. ஐரோப்பா ரிசர்வ் வங்கிகள், ஜப்பானிய ரிசர்வ் வங்கி ஆகியவை விரைந்து செயல்பட்டு பணச் சந்தையில் பணப்புழக்கம் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளன. ஒரு வேளை, பணப்புழக்கம் குறைந்தால், பொருளாதார மந்தநிலை தலைதூக்கி விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

1997-லும் சில ஆசிய நாடுகள் சந்தித்த கடும் பொருளாதார நெருக்கடியைப் போல், இந்தியாவில், ஏதும் நேரவில்லை. அப்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் குறைந்தது. ஆனால் இன்று நிலைமையோ வேறு. 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. 1997-ல் வெறும் 26 பில்லியன் டாலர்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தது. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).

கடந்த சில ஆண்டுகளாக, பரபரப்புடன் விவாதிக்கப்படும் விஷயம் – “இந்திய நாணயம் சர்வதேச அளவில் முழுமையாக மாற்றிக் கொள்ளப்படலாம்’ என்பது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் (Full Convertibility of Capital Account)) என இது அழைக்கப்படுகிறது. இத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.

பொருளாதார வல்லுநர் எஸ்.எஸ்.தாராப்பூர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கெனவே இத்திட்டத்துக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டது. தற்போது இந்த குழு, மாற்றத்துக்கான வழிமுறைகளையும், அதற்கான கால அட்டவணையையும் நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அந்நியச் செலாவணி பரிமாற்றத்தில் பல காலமாக இருந்து வந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவிட்டன. இதன் பயனாக, நடப்புக்கணக்கில் (Current Account)) இந்திய ரூபாய் நாணயம் மாற்றப்படுவதற்கு 1994-ம் ஆண்டு முதல் வழி செய்யப்பட்டு விட்டது. இதனால், இந்தியக் குடிமக்கள் மற்றும் கம்பெனிகள், கல்வி மற்றும் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அந்நியச் செலாவணியை எளிதாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது.

வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற வேண்டும். காரணம் இந்த நடவடிக்கைகள் மூலதனக் கணக்குத் தொடர்புடையவை எனக் கருதப்படுகின்றன. “மூலதனக் கணக்கு முழு மாற்றம்’ அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவையில்லை.

இதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முழு மாற்றம் நிகழ்வதற்கு இந்தியாவிலிருந்து ரூபாய் வெளியேறுவதற்கு நாம் அனுமதிப்பது எப்படி அவசியமோ, அதே போல், வெளிநாட்டவர்கள் தங்கள் மூலதனத்தில் ஒரு பகுதியை இந்திய ரூபாயாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதையும் பொருத்திருக்கும்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் (Foreign Direct Investment)) முதலீடு செய்வதற்கு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமாக உச்சவரம்பு உள்ளது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் என்னும் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னரும், மேற்கூறிய கட்டுப்பாடுகள் தொடரும்; தொடர வேண்டும்.

மூலதனக் கணக்கு முழு மாற்றத்தினால் நேரக்கூடிய உடனடி அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, இது ஊக பேரப் புள்ளிகளின் (Speculators)) முறைகேடான போக்குகளுக்கு வழிவகுக்கக்கூடும். இதைத் தடுக்கும் முறைகளை வகுக்க வேண்டும். இந்தியாவில், வெளிநாட்டு முதலீடு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அல்லது வெளியேறலாம் என்ற நிலை ஏற்பட்டால், எதிர்பாராத வகையில் ஒரு நிதி நெருக்கடி ஏற்படும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், “அற்ற குளத்து அருநீர்ப் பறவை போல்’ வெளியேறி விடுவார்கள். இன்று நாட்டில் நுழையும் முதலீடுகள் நாளையோ, நாளை மறுதினமோ வெளியேறினால், பங்குச் சந்தையில் நிகழும் திடீர் ஏற்ற இறக்கங்கள் போல், ஒட்டு மொத்த இந்திய நிதி நிலையில் திடீர் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?

எனவே, வங்கிகள் மேலும் வலுப்படுத்தப்படுவதும், முறையான நிதித் தகவல்கள் அறிக்கை பற்றிய விதிமுறையும் முழு மாற்றத்துக்கு முன்னோடியாக அமைதல் வேண்டும். தேவையான பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொண்ட பின்னரே, மூலதனக் கணக்கு முழு மாற்றம், நிதானமாக, படிப்படியாக, அமல்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, இதில் அவசரத்துக்கு துளியும் இடம் அளிக்கக் கூடாது.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா).

Posted in America, Analysis, Assets, Banks, Cash, Commerce, Deflation, Economics, Economy, Inflation, Loan, Loans, Mortgage, Recession, Rupee, Rupees, Stagflation, USA | Leave a Comment »

Controlling Inflation & Avoiding Recession – RBI & Stagflation

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

ரிசர்வ் வங்கியின் கை வைத்தியம்!

ரிசர்வ் வங்கிக்கு உள்ள பல கடமைகளில் தலையாய கடமை, பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான் என்பது அதன் சமீபகால நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது எளிதில் புலனாகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5%-க்கும் மேல் இருக்கிறது, பணவீக்க விகிதம் 5%-க்கும் குறைவாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலத்தில் அதிகரித்து சராசரியாக 40 ரூபாயாக இருக்கிறது. வங்கிகளிடம் டெபாசிட் பணம் அபரிமிதமாக இருக்கிறது. இத்தனை இருந்தும் மக்களிடம் நிம்மதியோ, வாங்கும் சக்தியோ குறிப்பிடும்படி இல்லை.

“”மக்கள்” என்று இங்கே நாம் குறிப்பிடுவது பெரும்பாலானவர்களான நடுத்தர, ஏழை மக்களைத்தான். நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கே சவால் விடுவதைப் போல தங்கத்தின் விலையும், நிலத்தின் விலையும் (வீட்டுமனை) உயர்ந்துகொண்டே வருகின்றன. இந்நிலையில் அவர்களுடைய சேமிப்பைப் பாதுகாக்கவும், அதற்கு சுமாரான வருமானத்தையும் தருவது வங்கிகள் தரும் வட்டிவீதம்தான். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த வட்டிவீதத்துக்குத்தான் ரிசர்வ் வங்கி குறிவைக்கிறது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.

உலக அரங்கில், இந்தியப் பொருளாதாரத்தின் வலிமைக்கான காரணங்களாக உள்ள அம்சங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்துக்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவின் ஏழைகளிடம்கூட இருப்பதையும், அதைச் செயல்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, பாராட்டியுள்ளனர். ரிசர்வ் வங்கி இந்த சேமிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க முயல வேண்டுமே தவிர, மக்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டக் கூடாது.

நஷ்டம் வரக்கூடாது என்று மத்திய அரசே முனைப்புக் காட்டி வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைப்பதும், வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டியைக் குறைப்பதும் நல்லதல்ல. அந்த நடவடிக்கைகளை நடுத்தர, ஏழை மக்களின் சேமிப்பு மீதான “”மறைமுக வரி” என்றே கூற வேண்டும்.

வங்கிகளிடம் மிதமிஞ்சி சேர்ந்துவிட்ட டெபாசிட்டுகளால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உபரிப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதை உறிஞ்சுவதற்காக, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை மேலும் 0.5% அதிகரித்து, 7% ஆக்கியிருக்கிறது. இப்படி ரொக்கக் கையிருப்பு விகிதத்தை உயர்த்திய பிறகும்கூட அதிகபட்சம் 16 ஆயிரம் கோடி ரூபாயைத்தான் புழக்கத்திலிருந்து உறிஞ்ச முடியும். வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.4,90,000 கோடியாகும்.

வீடுகட்ட கடன் வாங்கியவர்களும், இனி வாங்க நினைப்பவர்களும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் மனம் தளர்ந்து போய்விட்டார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து, வீடமைப்புத் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்வேகத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது பொய்த்துவிட்டது. இனி வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்தாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.

விலைவாசியைக் கட்டுப்படுத்த, பண அச்சடிப்பைக் கட்டுப்படுத்துவது ஒரு வழி என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியைப் பெருக்குவதும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதும்தான் உற்ற வழிகள்.

இடைத்தரகர்கள், ஊகபேர வியாபாரிகள், கள்ளச்சந்தைக்காரர்கள், முன்பேர வர்த்தகர்கள் ஆகியோரை ஒடுக்காவிட்டாலும், எச்சரிக்கும் விதத்திலாவது ஓரிரு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.

சிக்கனத்துக்கும் சேமிப்புக்கும் பெயர்பெற்ற இந்தியர்களைக் கடன் சுமையில் ஆழ்த்தவே பன்னாட்டு வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் 24 மணி நேரமும் தீவிரமாக உழைக்கின்றன. நம் மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கியாவது செயல்படலாம் இல்லையா? இதனால் சில நூறு கோடி ரூபாய்கள் வருமானம் குறைந்தாலும்கூட அதைப் பெரிய இழப்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கருதலாமா?

————————————————————————————————–
கவலைப்பட யாருமே இல்லையா?

Dinamani op-ed (August 7 2007)

வீட்டுக் கடன்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். பணவீக்க விகிதம் குறைந்தால் மட்டுமே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்றும் கூறியிருக்கிறார்.

இருக்க இடம் என்பது, உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் இயற்கையான லட்சியம். ஆனால், சொந்த வீடு என்கிற இந்த கனவு நனவானதுடன் நிற்காமல், ஒரு நிரந்தர நரகமாகவும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? வீட்டுக் கடன் வாங்கிக் கனவு நனவானவர்களின் நிலைமை அதுதான்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர், அத்தனை வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வீட்டுக் கடன் வழங்க முன்வந்தன. நகர்ப்புறங்களில் திரும்பிய இடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் காளான்கள்போல முளைத்தன.

வாடிக்கையாளர்களிடம் இரண்டு வகையான வீட்டுக் கடன் வசதி முன்வைக்கப்பட்டது. முதலாவது வகை வீட்டுக் கடனில் வட்டி விகிதம் அதிகம். ஆனால், கடன் அடைந்து முடியும்வரை இந்த வட்டி விகிதம் மாறாது என்பதால் திருப்பி அடைக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையும் மாறாது. ஆனால், இரண்டாவது வகை வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், அவ்வப்போது வங்கியின் வட்டிவிகித ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றபடி மாறும் தன்மையது. இதற்கான வட்டி குறைவு என்பதால், பலரும் இந்த முறையிலான வீட்டுக் கடனையே விரும்பி ஏற்றனர்.

அப்போதிருந்த நிலையில், வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்து வந்த நேரம். அதனால், மேலும் வட்டி குறையும்போது அதன் பயன் கிடைக்குமே என்கிற நம்பிக்கையில் இந்த முறை வட்டிக் கடனைத் தேர்ந்தெடுத்தவர்களே அதிகம். ஆனால், இப்போது இந்த இரண்டாவது வகை வீட்டுக் கடன் முறையைத் தேர்ந்தெடுத்து வீடு வாங்கியவர்கள் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.

வட்டி விகிதம் குறைவதற்குப் பதிலாக, வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டிருக்கின்றன. அதனால், வீட்டுக் கடன் வாங்கியவர்கள் உடனடியாக தங்களது கடனில் ஒரு பகுதியைத் திருப்பிக் கட்டினால் ஒழிய, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே முடியாது. இந்தத் தவணைகள் வட்டிக்குத்தான் சரியாக இருக்குமே தவிர அசல் குறையாது. அதாவது, வாழ்நாள் முழுவதும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. 6.5 சதவிகிதத்திலிருந்து இப்போது 11 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில், அதிகரித்த வட்டி விகிதத்தை ஈடுகட்ட வங்கிகள் தவணைகளை அதிகப்படுத்தின. இன்றைய நிலையில், தவணைகள் 25 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டாலும் கடன் அடைந்து தீராது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

மாறும் வட்டி விகித முறையில், ஒரு லட்ச ரூபாய்க்கான 20 ஆண்டு வீட்டுக் கடனுக்கு 7.25% வட்டியானால் மாதாந்திரத் தவணை ரூ. 790. இப்போதைய 11.25% வட்டிப்படி கணக்கிட்டால், மாதாந்திரத் தவணைத்தொகை ரூ. 900. ஆரம்ப ஆண்டுகளில், சுமார் ஐந்து ஆண்டு வரை, ஒருவர் அடைக்கும் ரூ. 790 தவணைத்தொகையில் அசலுக்குப் போகும் பணம் வெறும் ரூ. 79 மட்டுமே. அதனால், இப்போது வட்டி விகிதம் அதிகரித்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் வாங்கிய பலருடைய அசல் தொகையில் பெரிய அளவு பணம் திருப்பி அடைக்கப்படாத நிலைமை.

வீட்டுக் கடன் வாங்கிய லட்சக்கணக்கான மத்தியதர வகுப்பினர் மனநிம்மதி இழந்து, தூக்கம்கெட்டுத் தவிக்கும் நிலைமை. வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் அழுபவர்கள் பலர். இதற்கெல்லாம் காரணம், சராசரி மனிதனின் உணர்வுகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ளாத மத்திய நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் வங்கித் துறையும்தான்.

இந்த நிலைமையைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லையா?

Posted in Ahluwalia, APR, Balance, bank, Banking, Biz, Budget, Business, Center, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Commerce, Common, Consumer, Control, Currency, Customer, Deposits, Dinamani, Dollar, Economy, Exchanges, Expenses, Exports, Finance, fiscal, GDP, Governor, Govt, Growth, Homes, Houses, Imports, Industry, Inflation, Insurance, Interest, Land, Loans, Loss, Manmohan, Monetary, Money, Op-Ed, PPP, Profit, Property, Rates, RBI, Real Estate, Recession, Revenues, Rupee, Spot, Stagflation, USD | Leave a Comment »

Chennai Overbridge & Flyover Construction Delays – Status Report

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

பாதியில் முடங்கிய 3 மேம்பாலங்கள்: ரூ. 42 கோடி வீணாகும் அவலம்

சென்னை, ஆக. 2: சென்னை தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை காரணமாக ரூ. 42 கோடியில் தொடங்கப்பட்ட 3 மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

  • தாம்பரம் சானடோரியம்,
  • பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை,
  • பல்லாவரம் திரிசூலம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படவில்லை.

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து இங்குள்ள குரோம்பேட்டை நியூகாலனி குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் வி. சந்தானத்துக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறையினர் அளித்துள்ள பதில் விவரம்:

சானடோரியம் மேம்பாலம்:

ரூ. 14.40 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த மேம்பாலப் பணிகள் திட்டமிட்டபடி 2005 ஜூனில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

70 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது, கிழக்குத் தாம்பரம் பகுதியில் இறங்குதளம் அமைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றால் இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி 2008 டிசம்பருக்குள் இந்த மேம்பாலப் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

பல்லாவரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலம்:

ரூ. 22 கோடி திட்ட மதிப்பீட்டில் 2004 பிப்ரவரியில் இந்த திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.

திட்ட மதிப்பீட்டில் ரூ. 20 கோடி, நிலம் கையகப்படுத்தவே செலவிடப்பட்ட நிலையில் இதுவரை 53 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 723 சதுர மீட்டர் நிலம் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 2006 பிப்ரவரியில் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி 2008 ஜூனில் இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிக்கப்படும் என தெரிகிறது.

பல்லாவரம்- திரிசூலம் மேம்பாலம்:

ரூ. 5.75 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 நவம்பரில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

இதுவரை 40.55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புத்துறை நிலத்தை ஒப்படைக்காததால் திட்டமிட்டபடி 2005-ல் இந்த மேம்பாலப் பணிகள் முடிக்கப்படவில்லை.

பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் கிடைத்த நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் இதன் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமதம் ஏன்?:

இந்த மூன்று மேம்பாலங்களும் பாதியில் முடங்கியதற்கு இவற்றுக்கு தேவையான நிலத்தை பெறுவதில் ஏற்பட்ட பிரச்னையே காரணம்.

பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்களுக்கு முக்கியத் தேவை நிலம். ஆனால், இந்த திட்டங்களை உருவாக்கிய அரசு அதிகாரிகள் தேவையான நிலத்தை பெறுவதற்கான வழிமுறைகளை தெளிவாக வகுக்கவில்லை.

தனியார் பயன்பாட்டுக்கான பெரிய திட்டங்களுக்கு சாதாரண மக்களின் நிலங்கள் தேவை என்றால் விரைந்து செயல்பட்டு நிலத்தை கையகப்படுத்தும் அரசு நிர்வாகம், மக்களின் திட்டங்களுக்காக சில தனியாரிடம் இருந்து நிலத்தை பெறுவதில் மட்டும் ஆமை வேகத்தில் உரிய அக்கறை இன்றி செயல்படுவதே இத்தகைய திட்டங்கள் முடங்க முக்கிய காரணம் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Posted in activity, ADMK, Airport, Auto, Bridge, Bus, Cars, Chennai, Commuter, completion, Construction, Dam, Data, Delays, DMK, Engineering, Expenses, flyover, Inflation, Information, infrastructure, L&T, Labor, laborers, Larsen, Larsen and Toubro, larsentoubro, Lights, Madras, Mayor, Overbridge, Pallavaram, Politics, Progress, Projection, Projects, Record, Roads, RTI, Scooter, Signal, Stalin, Stall, Statz, Surface, Tambaram, Thambaram, Thrisoolam, Thrisulam, Time, Toll, Toubro, Track, Transport, Trisoolam, Trisulam | Leave a Comment »