Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Infections’ Category

Ayurvedha Corner: How to overcome hiccups & Sore Throat: Asthma, Infections

Posted by Snapjudge மேல் திசெம்பர் 28, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆஸ்துமாவுக்கு ஆவிச் சிகிச்சை!

எனக்கு வயது 75. தொடர்ச்சியாக விக்கல் வந்து கொண்டேயிருக்கிறது. தொண்டையில் எரிச்சல் உள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்து கூறவும்.

விக்கலும் மூச்சிரைப்பும் (ஆஸ்துமா) ஒரே வகையைச் சார்ந்தவை என்று சரக ஸம்ஹிம்தை எனும் ஆயுர்வேத நூலில் காணப்படுகிறது. இவ்விரு உபாதைகளும் வருவதற்கான 21 காரணங்களை சரகர் கீழ்காணும் வகையில் குறிப்பிடுகிறார்.

1. தூசி, புகை, குளிர்காற்று ஆகியவற்றை அடிக்கடி சுவாசிக்க நேரிடுதல்.

2. வீட்டில் தரை மற்றும் சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருத்தல், குளிர்ந்த நீரை குடிக்கவும் குளிக்கவும் பயன்படுத்துதல்.

3. உடற்பயிற்சி, உடலுறவு, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தன் உடல் வலிமைக்கு மீறி செய்தல்.

4. வறட்சி தரும் உணவுப் பண்டங்களை அதிகம் உட் கொள்ளுதல்.

5. முன் உண்ட உணவு செரிக்கும் முன்னரே அடுத்த உணவை சிறிய அளவிலோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுதல்.

6. வயிற்றில் மப்பு நிலை- அஜீரண நிலையை உதாசீனப்படுத்துதல்.

7. மலச்சிக்கலும் குடலில் காற்றும் அதிகரித்த நிலை.

8. உடல் வறட்சி;

9. அதிக பட்டினி.

10. உடல் பலஹீனம், மர்ம உறுப்புகளில் அடிபடுதல்.

11. ஒவ்வாமை உணவுகளைச் சேர்த்துச் சாப்பிடுதல். உதாரணமாக இட்லியுடன் பால், தயிர்வடை சாப்பிட்ட பிறகு காப்பி குடித்தல்.

12. பேதி மருந்து சாப்பிட்டு குடலை சுத்தம் செய்து கொள்கிறேன் என்று எண்ணி அதிக அளவில் மலக்கழிவை ஏற்படுத்தி உடலை பலஹீனமாக்கிக் கொள்ளுதல்.

13. முன்பு ஏற்பட்ட பேதி, காய்ச்சல், வாந்தி, இருமல், காசநோய், ரத்தக் கசிவு நோய், காலரா, ரத்த சோகை, விஷ உபாதை போன்றவற்றின் பின் விளைவால்.

14. உணவில் அடிக்கடி அவரைக்காய், உளுந்து, நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுதல். மாடு சாப்பிடும் புண்ணாக்கைச் சாப்பிடுதல்.

15. மாவுப் பண்டம், குடலில் வாயுவை அதிகப்படுத்தும் கடலை, மொச்சை, கிழங்குகள், குடல் எரிச்சலைத் தூண்டும் கரம் மசாலா, ஊறுகாய், எளிதில் செரிக்காத உணவு வகைகளை அதிகம் சாப்பிடுதல்.

16. நீர் மற்றும் குளிர்ச்சியான நிலத்தைச் சார்ந்த மாமிச உணவுகளை அதிகம் சாப்பிடுதல்.

17. தயிர், பாலைக் கொதிக்க வைக்காமல் சாப்பிடுவது.

18. வெல்லம், கரும்புச்சாறு போன்ற குடலில் பிசுப்பிசுப்பைத் தோற்றுவிக்கும் வகையறாக்களை விரும்பிச் சாப்பிடுதல்.

19. கபத்தின் சீற்றத்தை அதிகப்படுத்தும் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை ஆகியவற்றை எந்நேரமும் சாப்பிடுதல்.

20. தொண்டை மற்றும் நெஞ்சுக்கூட்டில் அடிபடுதல்.

21. உடல் உட்புற குழாய்களில் ஏற்படும் பல வகையான அடைப்புகள்.

மேற்குறிப்பிட்ட காரணங்களின் விளைவாக நெஞ்சுப் பகுதியிலுள்ள வாயுவின் சீற்றம் மூச்சுக் குழாய்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி கபத்தைச் சீற்றமடையச் செய்கிறது. இந்த வாயு- கபத்தின் சீற்றமே விக்கல் மற்றும் ஆஸ்துமா நோய்களுக்கு மிக நெருங்கிய காரணமாக இருக்கின்றன.

பிராண- உதக- அன்னவஹ ஸ்ரோதஸ் எனப்படும் மூச்சு, நீர், உணவை ஏந்திச் செல்லும் குழாய்களில் ஏற்படும் பாதிப்பை விக்கலாக உருவாக்கி பெரும் உபாதையைத் தோற்றுவிக்கிறது.

தேகராத தைலம் எனும் மூலிகைத் தைலத்தை முன் கழுத்து, நெஞ்சுக்கூடு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள எலும்புகளுக்கு நடுவே வெதுவெதுப்பாகத் தடவி, பிரஷர் குக்கரின் உள்ளே ஆமணக்கு, நொச்சி, புங்கை, யூகாலிப்டஸ்,கல்யாண முருங்கை போன்ற இலைகளைப் போட்டு தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். குக்கரின் மேலே உள்ள குழாய் வழியாக வரும் நீராவியை ஒரு ரப்பர் குழாயின் வழியாக, நெஞ்சில் எண்ணெய் தேய்த்துள்ள பகுதிகளில் இதமாகப் படுமாறு செய்ய, நன்கு வியர்வையை உண்டாக்கும். இதன் மூலம் நெஞ்சினுள்ளே கபம் உருகி, வாயுவின் தடை நீங்க உதவிடும். வாயுவின் சீரான செயல்பாடு தங்கு தடையின்றி நடைபெற இந்தச் சிகிச்சை தங்களுக்கு உதவக்கூடும்.

அதன் பிறகு பார்லி அரிசியில் சிறிது நெய் பிசறி தணலில் போட, அதிலிருந்து வரும் புகையை வாய் வழியாக உள்ளே இழுத்து வெளிவிட, மூச்சுக் குழாயின் உட்புறச் சுவர்களில் படிந்துள்ள கபம் வரண்டு விடுவதால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிராணவாயுவின் தடை நீங்கி விக்கல் குணமடைய வாய்ப்புள்ளது.

காலை உணவாக முருங்கை இலையை தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிட்டு, வடிகட்டி, கஞ்சிபதத்தில் சிட்டிகை இந்துப்பு கலந்து சாப்பிட நல்லது.

பழைய அரிசி, கோதுமை, பார்லி போன்றவை சாப்பிட நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் தசமூலசட்யாதி எனும் கஷாயம் சாப்பிட உகந்தது. தங்களுக்கு தொண்டை எரிச்சல் மாற நெல்லிக்காய் சூரணம் 5 கிராம் எடுத்து ஒண்ணரை ஸ்பூன் (7.5 மிலி) தாடி மாதி கிருதம் எனும் நெய் மருந்தைக் குழைத்து அதில் 1/2 ஸ்பூன் தேனும் கலந்து காலை இரவு உணவுக்குப் பிறகு நக்கிச் சாப்பிடவும். ஒரு வாரம் முதல் 21 நாட்கள் வரை சாப்பிடலாம்.

இரவில் படுக்கும் முன் சிட்டிகை வெல்லம் கலந்த சுக்குப் பொடி சாப்பிடவும்.

Posted in Alternate, Asthma, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, hiccups, Infections, medical, Throat | Leave a Comment »

Assam violence – Plantation workers’ protests continue

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

கொஞ்சம் பொறுங்கள்

அசாம் மாநிலத்தில், குவாஹாட்டியில் ஊர்வலம் நடத்திய அசாம் ஆதிவாசி மாணவர்கள் சங்கத்தினரை பொதுமக்கள் தாக்கியதில் பலர் இறந்துள்ளனர். ஒருவர் மட்டுமே இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால் பத்திரிகைகளும் ஊடகங்களும் 12 பேர் இறந்ததாகச் சொல்கின்றன.

பழங்குடியினரான தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரிய இந்த ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், 60 பேருந்துகளில் இவர்கள் வந்திறங்கியபோதே காவல்துறை தடுத்திருக்க வேண்டும். காவல்துறையும் மாநில அரசும் அதைச் செய்யவில்லை.

ஊர்வலத்தில் சில இளைஞர்கள் கடைகளையும் சாலையில் இருந்த வாகனங்களையும் கல்லெறிந்து சேதப்படுத்தியதால்தான் பொதுமக்கள் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அசாம் மாநிலத் தேயிலைத் தோட்டங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காததால் நீரினால் பரவும் நோய்களால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ள சூழலில், தொழில் பின்னடைவு காரணமாகத் தேயிலை நிறுவனங்கள் தங்கள் மருத்துவமனைகளைப் புறக்கணித்துவிட்டதால் மருத்துவத்துக்கும் வழியில்லாத சூழலில், நகர்ப்புறத்தில் கிடைக்கும் வசதிகள் மீது ஏற்பட்ட எரிச்சல்தான் இந்த வன்முறைக்கு காரணம். அதற்காக இதை நியாயப்படுத்த முடியாது.

ஆனால், இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறையே தவிர, பொதுமக்கள் அல்ல. மேலும், வலிய வன்முறையில் ஈடுபடும் கும்பலுக்கு அடிபடாமல் தப்பிச் செல்லும் போக்குகள் தெரியும். காவல்துறையிடமும் பொதுமக்களிடம் அடிபடுவோரில் பெரும்பாலோர், வியூகத்தைவிட்டு வெளியேறும் வழி அறியா அபிமன்யு-க்கள்தான்.

சட்டத்தை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துக் கொள்ளலாம் என்ற சூழ்நிலையில், உண்மையான குற்றவாளிகளைவிட அப்பாவிகளும், மிகச் சாதாரண குற்றம் புரிந்தவர்களுமே கொடுமைக்கு ஆளாகிறார்கள். தம்மைவிட மெலிந்தவர்கள் சிக்கும்போது அங்கே மனிதம் விரைவில் மறைந்து போகிறது.

பிடிபட்ட திருடர்களைக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் கொல்வதும், மந்திரக்காரி என்று கருதப்படும் பெண்ணின் மீது கல்லைப்போட்டு சாகடிப்பதும், பேருந்தில் திருடியதாகக் கருதப்படும் பெண் ஆடைக்குள் எந்தப் பொருளையும் ஒளித்து வைத்திருக்கவில்லை என்பதை பொதுஇடத்திலேயே நிரூபிக்கச் சொல்வதும்… என எல்லாமும் உடைமை இழந்தவனின் இயல்பான மனவெழுச்சியாக எடுத்துக்கொளளப்படுகிறது. சமுதாயத்தினுடைய தார்மிகக் கோபத்தின் வெளிப்பாடாக “மதிக்க’வும் படுகிறது.

ஒரு பாம்பு அல்லது தேளை அடித்துக் கொல்வதைப் போன்ற மிக இயல்பாக நடத்தப்படும் இந்த வன்மத்தை சமூகத்தின் கோபமாக நியாயப்படுத்த முடியாது. சமூகம் என்பது நாலு பேர் என்பதற்காக, நாலு பேரின் கோபம் சமுதாயத்தின் கோபமாக மாறிவிட முடியுமா என்ன?

அரசு அலுவலகங்களிலிருந்து அரசியல் கட்சிகள் வரை நிலவும் ஊழல்களின் மீதும், அரசாங்க செயல்பாடுகளில் காணப்படும் முறைகேடுகளின் மீதும் சமுதாயத்துக்கு ஏற்படாத கோபம் இங்குமட்டும் எப்படி சாத்தியமாகிறது? அல்லது, அவற்றின் மீது கோபம் கொள்ள முடியாத இயலாமைதான் இந்த எளிய குற்றவாளிகள் மீது காட்டப்படுகிறதா? கணவனை உதைக்க முடியாத இயலாமையில் குழந்தையை அடித்து நொறுக்கும் தாயின் உளவியல் கோளாறு போன்றதுதானா இவையும்?

சட்டத்தைத் தனியொரு மனிதன் அல்லது ஒரு கும்பல் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதும், அதை மீறிச் செயல்பட்டால் அதிகம் பாதிக்கப்படப்போவது தாங்கள்தான் என்பதும் புரியும் வரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்.

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லாத பேருந்தை நிறுத்தி அதன் ஓட்டுநரை அடித்தால், அந்த வழித்தடத்தில் பேருந்தே வராது என்கிற உண்மை புரிகிறபோது, அந்தக் கோபம் சாலைமறியலாக மாறி, ஒரு மணி நேரத்தில் தணிகிறது. இதேபோன்ற புரிதலை சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஏற்படுத்த முடியும். அதைச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

குற்றம் புரிந்தவர் எத்தகைய தவறைச் செய்திருந்தாலும், சட்டம்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கான அதிகாரம் இல்லாத நபர் சட்டத்தைத் தன் கையில் எடுத்தால் அது கையைச் சுடும் என்பது உணர்த்தப்பட வேண்டும்.

Posted in adivasis, Assam, Bandh, clash, Clashes, dead, Disease, Drink, Employment, Guwahathi, guwahati, Hygiene, Infections, Jobs, Law, Mills, Order, Police, Protests, Reservations, SC, ST, Tamil, Tea, Tribals, Violence, Water, workers | Leave a Comment »

New Delhi hosts World Toilet Summit: India’s sanitation struggle

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

தில்லியில் உலக கழிவறை வசதி மாநாடு துவங்கியது

உலக மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதி வழங்கும் சவாலை எப்படி எதிர்கொள்வது, 2015-ம் ஆண்டில் அனைவருக்கும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து கொடுப்பது என்று ஐ. நா. மன்றம் நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக, உலக கழிவறை வசதி மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமை துவங்கியது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், சீனா, ரஷ்யா, இலங்கை, இந்தியா உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன், புதுடெல்லியை மையமாகக் கொண்ட, சுலாப் இண்டர்நேஷனல் என்ற தன்னார்வ அமைப்பு இந்த மாநாட்டை நடத்துகிறது.

உலக அளவில், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது எவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறை வசதி செய்து கொடுப்பதும் பெரிய சவாலாக உள்ளது.

உலக மக்கள் தொகையில் 40 சதவீதம், அதாவது 2.6 பில்லியன் மக்கள், கழிவறை வசதி இல்லாமல், திறந்த வெளிகளிலும் சுகாதாரமற்ற இடங்களிலும் தங்கள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் மட்டும் 700 மில்லியன் மக்கள் முறையான கழிவறை வசதி இல்லாமல் இருக்கிறார்கள்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ போதிய கழிவறை வசதி உள்ள நிலையில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் சுகாதாரமான கழிவறை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளன. ஆனால், வளரும் நாடுகளில் அனைவருக்கும் கழிவறை வசதி செய்து தருவதற்கு போதிய தொழில்நுட்பமும், நிதி ஆதாரமும் பெரும் பிரச்சினையாக உள்ளது.

Posted in Bathrooms, Clean, Conf, Conference, Crap, Dalit, Delhi, Disease, Disposal, Hygiene, hygienic, India, Infections, Ladies, Morning, Oppressed, Pay, Railway, Railways, Restrooms, sanitation, Scarcity, She, Shit, Shulab, Shulabh, squat, struggle, Sulab, Sulabh, Sulabh International, Summit, Toilet, Trains, Urine, Use, Water, Women | Leave a Comment »