Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Industrialization’ Category

V Krishnamoorthy: Protecting the Marshy swamp grounds

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2008

சதுப்பு நிலங்களைப் பாதுகாப்போம்!

வி. கிருஷ்ணமூர்த்தி


உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.

அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

பிரத்யேக குணங்கள் கொண்ட புல் செடிகள், அரிய வகை மரங்கள், நீர் நிலைப் பறவைகள், சில வகை விலங்குகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து வாழும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உள்ளன.

சதுப்பு நிலங்களில் காணப்படும் ரீடு எனப்படும் பிரத்யேக புல் செடிகள் வெள்ள நீரைத் தடுத்து அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளச் சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. கடலோரப் பகுதிகளில் உள்ள அலையாத்திக் காடுகள் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது கரையோரப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கின்றன. மேலும், அந்தந்தப் பகுதியில் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாத்து மறுசுழற்சி செய்வதில் சதுப்பு நிலங்களின் பங்களிப்பு அடிப்படை அம்சமாகியுள்ளது.

இந்தியாவில் 27,403 சதுப்பு நிலங்கள் உள்ளன. இதில் 23,444 சதுப்பு நிலங்கள் உள்பகுதியில் அமைந்துள்ளன. 3,959 சதுப்பு நிலங்கள் மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கோவா, மகாராஷ்டிரம், அந்தமான் – நிகோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோரங்களில் அமைந்துள்ளன. இதன் பரப்பு 6,750 சதுர கிலோ மீட்டர். இதில் 80 சதவீத சதுப்பு நிலங்கள் அலையாத்திக் காடுகளாக உள்ளன.

ஆசிய சதுப்பு நில இயக்ககத்தின் அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் உள்ள நிலத்தில் 18.4 சதவீதம் சதுப்பு நிலங்களாக உள்ளன. 70 சதவீத சதுப்பு நிலங்கள் நெல் சாகுபடி உள்ளிட்ட தேவைகளுக்காக விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியைக் காரணம்காட்டி விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே சதுப்பு நிலங்கள் குறைய முக்கியக் காரணமாக உள்ளது.

கேரளத்தில் அஸ்தமுடி, சாஸ்தம் கோட்டா, வெம்பானாடு உள்ளிட்ட சில சதுப்பு நிலங்கள் கடலோரப் பகுதிகளில் மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு சிறந்த உதாரணங்களாகக் கூறப்படுகின்றன.

19 இடங்களில் சதுப்பு நிலங்கள் பறவைகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு, மேம்பாட்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மொத்த சதுப்பு நிலங்களில் 50 சதவீதம் மட்டுமே தற்போது உள்ளது. இவையும் ஆண்டுக்கு 4,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வீதம் குறைந்து வருகின்றன. இதன் மூலம் மொத்த சதுப்பு நிலங்களில் ஆண்டுக்கு 3 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது என ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எவ்வித திட்டமிடலும் இல்லாமல் வேகமாக அதிகரித்துவரும் நகரமயமாக்கல், வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அணைகள் உள்ளிட்ட கட்டுமானத் திட்டங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்காக ஆக்கிரமிப்பு செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் இயற்கையின் கொடையான சதுப்பு நிலங்கள் பாழாகி வருகின்றன.

இதனால், வீணாகக் கடலில் கலக்கும் நன்னீரின் அளவு அதிகரிக்கும், நிலத்தடி நீரின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும்போது சதுப்பு நிலங்கள் இல்லாத பகுதிகளில் கடலில் இருந்த உவர்நீர் ஊடுருவல் ஏற்படும். இது தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதும், கோடைக்காலங்களில் வறட்சி மற்றும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்படும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு, பாழாகிவரும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க 1971-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்களிடம் பரப்புவது, இதற்காக உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. இதுவே ராம்சார் பிரகடனம் எனப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட 135 நாடுகள் இந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் தொடர் நடவடிக்கையாக இந்தியாவில் வெம்பாடு, சில்கா ஏரி உள்பட உலகம் முழுவதும் இருந்து 1,235 சதுப்பு நிலங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின் படி இந்தியாவில் உள்ள சதுப்பு நிலங்கள் அரியவகை பறவைகளை பாதுகாப்பதற்கான இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் ஆந்திரத்தின் ஒரு பகுதியில் பரந்து விரிந்திருக்கும் பழவேற்காடு ஏரியை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம் தேதி உலக சதுப்பு நில தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சதுப்பு நிலங்களின் அவசியம், சூழலியல் மாற்றங்களால் சதுப்பு நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அதனால் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் நாளில் கூடி சதுப்பு நிலங்கள் குறித்து பேசிவிட்டு சென்றுவிடாமல், சதுப்பு நிலங்களை சார்ந்து அதன் அருகில் வசிக்கும் மக்களிடம் அவற்றின் பயன்பாடு, முக்கியத்துவம் குறித்து விளக்கங்கள் அளித்தால் மட்டுமே அடுத்த தலைமுறையினர் சதுப்பு நிலங்களை பார்க்க முடியும்.

Posted in Backwaters, encroachments, endangered, Environment, Flood, Florida, Forests, Industrialization, Lakes, Land, mangrove, Nature, Pollution, Ponds, Protection, Rain, Rainforest, Rivers, Sea, SEZ, subtropical, swamps, Tropical, Water, Wilderness | 1 Comment »

When Sparklers Light Up Diwali Sky – Sivakasi Fireworks & Manual Labor: Need for the automation in Industrialization

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2007

பட்டாசுத் தயாரிப்பில் இயந்திரமயம் காலத்தின் கட்டாயம்

சிவகாசி, நவ. 5: பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்பைத் தடுக்க அந்தத் தொழிலில் இயந்திரமயமாக்குவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முழுவதும் தனிநபர்களின் முதலீடுதான் உண்டு. சிறுசிறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வர்த்தகத்தின் அளவு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.

சிவகாசியில் தொடக்க காலத்தில் கலர் மத்தாப்பு தயாரிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொழில் வளர்ச்சி அடைந்து இப்போது ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

சுமார் 600-க்கும் மேல் பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. இந்தத் தொழிலில் நேரடியாக சுமார் 1.30 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 1 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த 25 சதவீத தொழிலாளர்கள் வேறு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தொழிலில் சுமார் 70 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆலைகளில் 18 வயது முதல் 22 வயது வரை உள்ள பெண்களை பணியில் அமர்த்தி 3 ஆண்டு கழித்து ரூ. 1.50 லட்சம் வரை பணம் கொடுப்பதால் இங்கிருந்து பலர் அங்கு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

தொழிலாளர் பற்றாக்குறையால் பட்டாசு ஆலைகளில் தயாரிப்பு இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு பட்டாசு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையும் அதிகரித்துவிட்டது.

பட்டாசு முழுக்க கையினால் தயாரிக்கப்படுகிறது. தீப்பெட்டித் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து பல ஆலைகள் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி பெருகியதுடன் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. எனவே இப்போது தொழில் நலிவடைவதைத் தடுக்க பட்டாசு ஆலையில் இயந்திரமயமாக்கல் காலத்தின் கட்டாயம் என்றாகிவிட்டது.

சரவெடி பின்னுவதற்கு தொழிலாளர் கிடைக்காததால் இப்போது சரவெடி பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. சீனாவில் பட்டாசு தயாரிப்பில் இயந்திரம் புகுத்தப்பட்டு தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

சிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சீனத் தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே போல பட்டாசு ஆலைகளிலும் ஒரு சில பணிகளுக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் திப்பெட்டி தொழிலாளர் சிஐடியு சங்கத் தலைவர் ஜே.லாசர் கூறியது:

பல தொழிலாளர்கள் வேறுபணிக்கு சென்றுவிட்டனர் என்பது உண்மைதான். பட்டாசு தொழிலாளர்களுக்கு கூலி குறைவாகக் கிடைக்கிறது. ஆண்களுக்கு தினசரி சம்பளமாக ரூ. 40, பெண்களுக்கு ரூ.30 தான் கிடைக்கிறது.

பட்டாசு தயாரிப்பில் ஒப்பந்தமுறை உள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தொழிலாளர் தங்கள் தேவையை நிறைவேற்றும் பணிக்கு செல்லத் தொடங்கிவிட்டனர் என்றார்.

பட்டாசு ஆலை அதிபர் சீனிவாசன் கூறியது:

தீப்பெட்டி ஆலைகளில் இயந்திரம் வைக்க சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.

எனவே நினைத்தவுடன் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த இயந்திரத்தை அமைக்க ஆலையின் உள்கட்டமைப்பை மாற்ற வேண்டும். இது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு முடியாத காரியம். எனினும் படிப்படியாக இயந்திரமயமாக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.

Posted in Activists, Automation, Ban, Biz, Business, Child, Compensation, Crackers, Deepavali, Deepavalli, Diwali, Economy, employees, Factory, Fire works, Fireworks, Govt, Hours, Industrialization, Industry, Inhumane, Jobs, Labor, rules, Sector, Sivagasi, Sivakasi, Sparklers, Work, workers | Leave a Comment »

Pa Ilankumaran: World Forests day – City Gardens & Wild woods

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

நகர வனம் நன்மை தரும் வனப்பு

ப. இளங்குமரன்

இயற்கையின் எதிர்விளைவால் பூமியின் பயன்பாட்டு அளவு சுருங்கிக்கொண்டு வருகிறது.

இதனால் எரிமலைகள் உமிழ்தல், கடல் நீர் உட்புகுந்து பூமி பரப்பு குறைதல், ஏரிகள் அளவு குறைதல், நில நீர் மட்டம் தாழ்ந்து பாலைவனமாக மாறுதல், வளி மண்டலத்தில் பழுப்பு மேகம் மூலம் அமில நீர் பொழிவு, பருவ நிலையில் கோளாறு, உயிரின மண்டலம் பரிதவிப்பு, உயிரினங்கள் அழிவு என பல்வேறு பாதக விளைவுகள்.

மனிதன் நாகரிக காலத்தில் என்று அடி எடுத்து வைத்தது முதல் இயற்கைக்கும் உயிரினச் சுற்றுச்சூழல் மூலாதாரங்களுக்கும் சீர்கேடுகளை உருவாக்கத் தொடங்கினான். இதன் பலன் புவி வெப்பமுறல், காலச்சூழ்நிலையின் மாற்றம், வெள்ளம், பூகம்பம், வறட்சி போன்றவையுடன் மண்ணில் உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், நீர்நிலைகள், அவற்றின் தனித்தன்மையை இழந்து ஆறுகள் நீர் அற்றனவாகவும், பனிமலைகள் வறண்டும் காடுகள் அழிந்தும் காணப்படுகின்றன.

காடுகள் சுரண்டப்பட்டதன் விளைவு மண்ணின் மகத்துவ குணம் மாறி வருகிறது.

உலக நாடுகளில் நகரங்களினால் உருவாக்கப்பட்ட இயந்திரத் தொழிற்சாலைகளில் இயற்கைச் சூழல் கட்டமைப்பு சிதைந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு மூலகாரணமாகச் சமன் செய்யக்கூடிய வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என்றும் வாகனப் போக்குவரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர்.

தற்போது நகரங்களின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெப்பம் அதிகரிப்பு, மன உளைச்சல், வெப்ப நோய்கள் இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. உலகத்தில் சராசரி வெப்ப நிலை 1950 ஆம் ஆண்டு 13.83 செல்சியஸ் அளவு இருந்தது. இன்று 14.36 செல்சியஸ் அளவுக்கு மேற்பட்டு வருகின்றது.

நகர வனம் என்பது நகரப் பகுதிகளில் சாலை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பது மட்டுமல்லாமல் “மாதிரிக் காடுகளை’ குறைந்த பரப்பளவில் ஏற்படுத்துவதும் ஆகும்.

நகரை ஒட்டிய பகுதிகளில் சுமார் 100 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் வனங்களை உருவாக்குவது ஆகும். இந்த வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இப்பகுதிகளில் கசிவு நீர் குட்டைகளையும் உருவாக்க வேண்டும்.

இம்மாதிரி வனப்பகுதிக்கான நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். தற்போது அரசு கட்டடம், சாலைகள், பேருந்து நிலையம், அரசு தொழிற்சாலைகள் அமைக்க எவ்வாறு நிலங்களை கையகப்படுத்துகிறோமோ அதைப்போன்றே நகரவனம் உருவாக்க நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.

“நகர வனத்தில்’ நீண்ட நாள்கள் மற்றும் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களை நட வேண்டும். சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் வனம் ஏற்படும்போது நகரின் வெப்பம் குறையும். நகரின் காற்றுமாசு சமன் செய்யப்படும்.

நிலைத்து நீடிக்கும் சுற்றுச்சூழலை உருவாக்க இதுபோன்ற வனம் பல வழிகளில் உதவி செய்யும். உயிரின மாற்றம் ஏற்பட்டு மனித சுகாதாரம் மேம்பாடு அடையும். நகரின் காற்று சீர்பட்டு தரமான காற்றை சுவாசிக்க முடியும். நகரின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

நீர்வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்ணின் உயிரின சூழல் பாதுகாக்கப்படும். மரங்களின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.

செழிப்பான பூமி என்பது இயற்கை சீர்கேடு விளைவிக்கும் காரணிகளை வேரறுத்து வனப்புமிக்க மரங்களை நடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

நாம் இன்றைய தினம் இயந்திரத் தொழில் நுட்பத்தில் முன்னேறிச் சென்றாலும் இயற்கை பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பின்னடைந்து வருகிறோம்.

எனவே இயற்கை மூலாதாரங்களைப் பெருக்கும் வகையில் இயற்கை மறுசீரமைப்பு பணிகளில் பயணிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

(இன்று உலக காடுகள் தினம்).


குடிநீர் வள நெருக்கடி அதிகரிக்கிறது, ஐ.நா மன்றம் எச்சரிக்கை

குடிநீர் நெருக்கடி
தண்ணீரைத் தேடி….

உலக குடிநீர் தினமான இன்று ஐ.நா மன்றம் வெளியிட்ட ஒரு எச்சரிக்கையில், முக்கியமான இந்த குடிநீர்வளம் வழங்கப்படுவது எல்லாக் கண்டங்களிலும் கடும் அழுத்தத்தில் வருவதாக கூறியுள்ளது.

உலகின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், அதாவது, 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்று மிகச்சமீபத்திய ஐ.நா மன்ற புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

சீதோஷ்ண மாற்றம் வறட்சியை அதிகரித்து, மழை பெய்யும் பருவங்களை மாற்றி, மலைகளின் பனிமுகடுகளிலிருந்து பனி உருகி தண்ணீர் கிடைப்பதைக் குறைக்கும் நிலையில் , இந்த நிலைமை அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் மோசமடையக்கூடும் என்று ஐ.நா மன்றம் கூறுகிறது.

2025ம் ஆண்டு வாக்கில் பூமியில் உள்ள மக்களில் மூன்றில் இரு பங்கினர் குடிநீர் பற்றாக்குறையில் வாழக்கூடும் என்று அது கூறுகிறது.

இந்த ஆண்டின் நீர் தினத்தன்று தண்ணீரை சேமிப்பதன் அவசியம் மற்றும் கிடைக்கும் தண்ணீரை அனைவரும் நியாயமாக பகிர்ந்து கொள்வதன் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.


துருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும்

இரா. நல்லசாமி

ஆண்டுதோறும் மார்ச் 23-ஆம் நாளை உலக வானிலை ஆய்வுக் கழகமும் அதன் 187 உறுப்பு நாடுகளும் “உலக வானிலை ஆய்வு நாளாக’ கொண்டாடுகின்றன.

1950-ல் உலக வானிலை ஆய்வுக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1951 முதல் ஐக்கிய நாட்டு சபையின் சிறப்பு முனையமாக அங்கீகரிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்நாள் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும். இவ்வாண்டின் மையக்கருத்து “துருவப் பகுதி வானிலையும் அதன் உலகளாவிய தாக்கமும்’ என்பதாகும்.

2007 – 08 உலக துருவப் பகுதி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துருவப் பகுதி ஆண்டு அனுசரிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். துருவப் பகுதிகளின் வானிலை ஏனைய உலகப் பகுதிகளின் வானிலையோடு நுணுக்கமான தொடர்புடையது.

1882 – 83ஐ முதல் துருவப்பகுதி ஆண்டாகவும், 1932 – 33ஐ இரண்டாம் துருவப்பகுதி ஆண்டாகவும் அனுசரிக்கப்பட்டது. மேலும் 1957 – 58இல் “உலக மண்ணியற்பியல் ஆண்டு’ கொண்டாடப்பட்டது.

துருவப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி குறைவாகையால் வானிலை ஆய்வு நிலையங்களும் குறைவு. எனவே இப்பகுதிகளின் வானிலையைப் பற்றி அறிய “துருவசுற்று செயற்கைக்கோள்களையே’ பெரிதும் நம்பியிருந்தனர். துருவப்பகுதிகளில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாகவும், அடுத்த ஆறு மாதங்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும்.

தற்போது செயற்கைக்கோள்களில் சிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகளின் மூலம் தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரையிலான துருவப் பகுதிகளின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் திசைவேகம், உறைபனிப் பாறைகளின் அளவு, அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற வழியேற்பட்டுள்ளது.

மேலும் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் மேலும் பல தகவல்களைத் தருகின்றன.

துருவப் பகுதி வானிலை ஆய்வுகளுடன் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தொடர்பு 1981-ல் தொடங்கியது. இந்தியாவின் முதல் “அண்டார்டிகா அறிவியல் பயணம்’ அந்த ஆண்டு தொடங்கியது. அண்டார்டிகாவில் “தக்ஷிண்கங்கோத்ரி’ என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஒரு தாற்காலிக வானிலைக் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

தரைநிலை வானிலைத் தகவல்கள், பனிப்படலத்தின் இயற்பியற் தன்மைகள், பெறப்படும் சூரிய வெப்பம், பனிப்படலங்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி ஆகியவை அந்நிலையத்தில் அளந்தறியப்பட்டது.

1984-ம் ஆண்டு முதல் “ஆண்டு முழுவதும் துறை அதிகாரிகளால் பராமரிக்கப்படும் நிலையமாக’ இது செயல்படத் தொடங்கியது. இரண்டாவது வானிலை கண்காணிப்பு நிலையம் அண்டார்டிகாவின் கிர்மேகர் மலைப்பகுதியில் “மைத்ரி’ என்ற இடத்தில் 1988 – 89-ல் அமைக்கப்பட்டது.

ஒன்பதாவது அண்டார்டிகா அறிவியல் பயணத்தின்போது தொடங்கப்பட்ட இந்நிலையம் ஒரு நிரந்தர வானிலை நிலையமாகும். 1990 முதல் “மைத்ரி’யில் மட்டும் நமது வானிலைக் கண்காணிப்பு நிலையம் செயல்படுகிறது “தக்ஷிண்கங்கோத்ரி’ நிலையம் மூடப்பட்டுவிட்டது.

உலக வானிலையோடு தொடர்புடைய பல தகவல்கள் “மைத்ரி’ வானிலைக் கண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படுகின்றன. “மைத்ரி’ நிலையத்தின் முக்கியமான பணிகள் வருமாறு:

தரைநிலை வானிலைத் தகவல்களைச் சேகரித்தல், சேகரிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் உலக வானிலை மையங்களுக்கு அனுப்புதல். தரைநிலை ஓசோன் மற்றும் வளிமண்டல ஓசோன் பற்றிய கணிப்புகளைச் சேகரித்தல். இதற்கென வளிமண்டலத்தில் பலூன் அனுப்பித் தகவல் சேகரிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.

கதிரவனின் பல்வேறு கதிர்வீச்சுகளால் வளிமண்டலத்தில் ஏற்படும் “வெப்பக் கலப்பு’ எவ்வளவு என்பதை “சன் – போட்டோமீட்டர்’ கொண்டு அளக்கப்படுகிறது.

துருவசுற்று செயற்கைக்கோள் மூலமாக மேகங்கள் பற்றிய தகவல்களும் வளிமண்டல வெப்பம், காற்று பற்றிய தகவல்களும் சேகரித்தல், பனிப்புயல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல். 1981-ல் தொடங்கி 2000 முடிய இருபது “அண்டார்டிகா அறிவியல் பயணங்கள்’ மேற்கொள்ளப்பட்டுள்ளன.

துருவப் பகுதி வானிலையை அறிய வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.

துருவப் பகுதிகள் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் கணிசமான அளவில் கிடைக்கும் இடங்களாகும். இது சம்பந்தமான பணிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகள் தேவைப்படுகின்றன. அங்கு வாழும் “எஸ்கிமோக்கள்’ போன்ற பழங்குடியின மக்களையும் “பனிக்கரடி’, “பென்குயின்’ ஆகிய துருவப் பகுதி விலங்குகளையும் பாதுகாக்க வானிலை ஆய்வுகள் பயன்படுகின்றன.

மேலும் பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் குழுக்கள் துருவப் பகுதிகளில் பல்துறை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பான பயணம், வாழ்க்கை ஆகியவற்றுக்கும் துருவப் பகுதி வானிலை பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன.

மேலும் துருவப் பகுதிகளின் வானிலை உலகின் ஏனைய பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. பூமத்தியரேகைப் பகுதி, துருவப் பகுதிகளைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிக சூரிய வெப்பசக்தியைப் பெறுகிறது.

இதன் தொடர்வினையாக பெருங்கடல்களும் வளிமண்டலமும் இவ்வெப்பச் சக்தியை துருவப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் துருவப் பகுதியின் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் உருகும்போது, கடல் நீரோட்டங்களின் தன்மை மாறிவிடும் அபாயம் உள்ளது. கடல் நீரோட்டங்களின் தன்மை மாறும்போது உலக வானிலையில் பெருமாற்றங்கள் தோன்றலாம். சுருங்கிவரும் பனிப்படலத்தின் காரணமாக கடல்நீரின் மட்டம் உயரக்கூடும்; உப்புத்தன்மை குறையக்கூடும்; கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும்; உறைபனி, துருவப்பகுதி வானிலை மாற்றத்தால் உருகத்தொடங்கும்போது பசுங்குடில் வாயுக்களில் ஒன்றான “மீத்தேன்’ வெளியிடப்படும். இது ஓசோன் படலத்தில் மாறுதல்களையும் அதன் தொடர்ச்சியாக உலகளாவிய வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

வரையறுக்கப்படாத எல்லைகளை உடைய அறிவியல் துறைக்கு “வானிலையியல்’ ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். “துருவப்பகுதி வானிலை’ இவ்வாண்டில் இயற்பியல், உயிரியல், வானிலையியல் மற்றும் சமூகவியல் அறிஞர்களால் மிக நுணுக்கமாக ஆராயப்படும் என்பதே இதனை நன்கு புலப்படுத்தும்.

உலகம் வளர்ச்சி பெற, துருவப்பகுதி வானிலையைக் கண்காணித்தலும், சரிவரப் புரிந்துகொள்வதும் மிக மிக அவசியமாகும். அதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

(கட்டுரையாளர்: உதவி வானிலை விஞ்ஞானி, மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை).

Posted in Acid Rain, Air, Antarctica, Arctic, Building, Carbon, City, Climate, Concerns, Drought, Dry, Earth, Earthquakes, emissions, Environment, Extinct, Floods, Forests, Gardens, Greenery, Ice, Impact, Industrialization, Issue, Kyoto, Lakes, Land, Nature, Ozone, Plants, Pollution, Population, Quality, Research, Rivers, satellite, Science, Snow, Trees, Village, Warming, Water, Weather | 5 Comments »

Economic impact of Industrialization of Agricultural Farmlands

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

தொடரும் நிலப் பறிப்பால் துன்புறும் மக்கள்

மா.பா. குருசாமி

தொழில் வளர்ச்சி என்ற பெயரால் நாட்டின் பல்வேறு இடங்களில் வேளாண் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமன்றி வேளாண்மையைச் சார்ந்து வாழும் மக்களும் பெருத்த இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பாதிக்கப்படும் மக்கள் வலுவற்றவர்களாக இருந்து வருவதால் அவர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதில்லை; ஆனால் தற்போது நிலைமை சற்று மாறிவருகிறது. நிலத்தை இழந்த விவசாயிகள் வீதிக்கு வந்து பெரும் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

விவசாயிகளை திடீரென நிலமற்ற நாடோடிகளாக விரட்டியடிப்பது பெரிய சிக்கலின் தொடக்க வெளிப்பாடாகும். இதைத் தடுக்காவிட்டால் கிராம மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

கிராம மக்களின் வாழ்க்கை ஆதாரத்தையே இழக்கச் செய்யும் ஒரு “வளர்ச்சி’ முறையை ஆதரிக்கின்றவர்கள் இந்தச் சிக்கலை மேலோட்டமாகப் பார்க்கின்றனர். நிலத்தை மதிப்புள்ள ஒரு சொத்தாக மட்டும் கருதி, அதற்கு இழப்பீடு கொடுத்து விட்டால் போதுமென்று கருதுகின்றனர்.

இந்தியா தொழில்மயமான நாடாக மாற, சில தியாகங்கள் செய்ய வேண்டுமென்றும் அப்படிப்பட்ட தியாகங்களில் ஒன்றுதான் சில கடைநிலை விவசாயிகள் நிலத்தை இழப்பதும் என்று வாதிடுகின்றனர்.

சின்னஞ்சிறு விவசாயிகளுக்கு நிலம் வெறும் சொத்து மட்டுமல்ல; அது அவர்களுக்கு அமுதசுரபி. ஆண்டாண்டு காலமாக அந்த பூமித்தாயை நம்பித்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு குடும்பத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம், இரண்டு காளை மாடுகள், நான்கைந்து பசு – எருமை மாடுகள் இருந்தால் உழைப்பை நம்பி, வளமாகவும் நலமாகவும் வாழ்ந்த காலம் இருந்தது. கிராம வாழ்வின் ஆதாரமாக வேளாண்மையும், வேளாண்சார் தொழில்களும் இருந்தவரை வாழ்க்கை ஒரு சீராக இருந்தது.

இந்நிலையில், நகரங்களின் விரிவாக்கமும், தொழிற்சாலைகளின் பெருக்கமும் நகரங்களை ஒட்டிய வேளாண் நிலங்களை விழுங்கத் தொடங்கின.

வீட்டடி நிலத்திற்காக இருபோகம், முப்போகம் விளைந்த நிலங்கள் வாங்கப்பட்டன. நிலத்தை வாங்கி விற்பவர்கள் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலத்தை வாங்கி, வளைத்துப் போட்டு, வீட்டுமனைகளாக்கி, அவற்றை விற்று, கோடி கோடியாகப் பணம் குவிப்பதும், அடுத்தடுத்து இருக்கும் நிலங்களை, அக்கம் பக்கம் தெரியாமல் வாங்கிச் சேர்ப்பதும் தொடர்ந்து நடக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பெருஞ் செல்வந்தர்கள் தங்களது கருப்புப் பணத்தை வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக நிலத்தில் முதலீடு செய்கின்றனர். நிலத்தின் மதிப்பு நாளுக்குநாள் கூடுவது இதனை ஊக்குவிக்கிறது. தங்கத்துக்கு அடுத்தபடியாக நிலமுதலீடுதான் கருப்புப் பணத்தைக் கவர்ந்து ஈர்த்தது.

குடியிருப்புக்கு அடுத்து வாணிப, தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் வேளாண் நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்கின்றன. நிலத்தை வாங்க, விற்க உரிமை இருப்பதால் இதில் யாரும் தலையிட முயல்வதுமில்லை; முடிவதுமில்லை.

மேலும் நமது நாட்டில் நிலத்தை இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமென்ற கொள்கை இதுவரை உருவாகவில்லை. ஆதலால் நிலத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துகின்றனர்.

கணிசமான கிராம மக்கள் சொந்த நிலத்தை, வாழ்வை இழந்து வெளியேறுவதை “வளர்ச்சிப் போக்கு’ என்று அரசியல்வாதிகள் வாதிடுகின்றனர்.

நமது நாட்டில் சராசரி நில உடைமையளவு 1.41 ஹெக்டேர். இது ஒரு வேளாண் குடும்பத்துக்கு வாழ்வளிக்காது. இப்பொழுது 74 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர்.

வேளாண்மையை நம்பி இருக்கின்றவர்களில் 20 சதவீத மக்களை வேறு துறைகளுக்கு மாற்ற வேண்டுமென்று வற்புறுத்துகின்றனர். எப்படி, எந்தத் துறைக்கு மாற்றுவதென்று யாரும் திட்டவட்டமாகக் கூறவில்லை; கூற முடிவதில்லை.

இந்நிலையில் பொருளாதாரச் சிறப்பு மண்டலங்களை அமைத்து கிராமங்களைத் தொழில் மயமாக்க அரசு முயன்று வருகிறது. பொருளாதாரச் சிறப்பு மண்டலங்களை அமைக்கும் பொறுப்பு நமது உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில்தான் மேற்கு வங்கத்தில் சிங்குரில் டாடா கார் தொழிற்சாலைக்கும், மிதுனபுரி மாவட்டம் நந்தி கிராமத்தில் இந்தோனேசியா நிறுவனத்துக்கும் நிலத்தைக் கையகப்படுத்துவதில் மேற்குவங்க அரசு முனைப்புக்காட்டி வருகிறது.

இப்பொழுது அனுமதி பெற்றிருக்கிற 237 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குத் தரப் போகிற நிலம் 37,400 ஹெக்டேர். இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டங்கள் 340. மேலும் 300 திட்டங்கள் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றன. இவற்றில் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்யப்பட உள்ளது என்றும் எராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென்றும் உறுதி கூறுகின்றனர்.

நிலத்தை இழக்கின்றவர்களுக்கெல்லாம் இந்த நிறுவனங்களில் வேலை கிடைக்கப் போவதில்லை. இவர்களில் சிலருக்கு தொடக்க காலத்தில் உடல் உழைப்புச் செய்யும் பணிகள் கிடைக்கலாம். ஆனால் இவற்றில் தொடர்ந்து வேலை செய்யக்கூடியவர்கள் திறன்மிக்க பயிற்சி பெற்ற தொழிலாளர்களாகத்தான் இருப்பார்கள்.

நமது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 63 சதவீதம் நிலத்தில்தான் வேளாண்மை செய்கிறோம். இன்னும் 37 சதவீத நிலம் மேய்ச்சல் நிலமாக, தரிசு நிலமாக, வேளாண்மை செய்யத் தகுதியற்ற நிலமாக இருக்கிறது. தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சாகுபடி செய்யும் நிலத்தின் அளவைக் கூட்டி, உணவு உற்பத்தியைப் பெருக்க முயல்கிறோம்.

இந்நிலையில் ஏராளமாக இருக்கும் சாகுபடி செய்ய முடியாத இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவலாம். ஆனால் பெரிய தொழில் நிறுவனங்கள் அகக் கட்டுமானங்கள் உள்ள நகரங்களை அடுத்த கிராமப்புறங்களை விரும்புமே தவிர, தூரத்திலுள்ள இடங்களை நாடாது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் மத்திய, மாநில அரசுக்கு, “”பொது நோக்கிற்காகவும், நிறுவனங்களுக்காகவும், இழப்பீடு அளித்து கையகப்படுத்தும் முழு உரிமையை அளிக்கிறது”. இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் இப்பொழுது மாநில அரசுகள் நிலத்தின் விலையை நிர்ணயித்து வேளாண் நிலத்தைக் கைப்பற்றுகின்றன.

இந்தச் சட்டம் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய நிறுவனங்களுக்கு மொத்தமாக நிலத்தைத் தாரை வார்க்க உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இப்பொழுதும் நமது விவசாயிகளை மொட்டையடிக்க இந்தச் சட்டம் பயன்படுவது வேடிக்கை.

இப்படிக் கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை (விலையை) மாவட்ட ஆட்சியாளர் நிர்ணயம் செய்கிறார். அது நடைமுறை பத்திரப்பதிவு விலையாக இருக்கும். அந்த நிலம் தொழில் நிறுவனத்திற்குக் கை மாறியபின் எத்தனை மடங்கு உயரும் என்பதைக் கூற முடியாது.

இழப்பீடாக பல ஆயிரம் ரூபாய் பெறுகிற விவசாயியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? அவன் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கிப்போட்ட செடியாக இருப்பான். உடனே வேறு இடத்தில் நடப்பட்டால் செடி தழைக்கும். இல்லையேல் காய்ந்து கருகிப் போகும். கையிலுள்ள பணம் செலவானபின் விவசாயி வெறும்கையுடன் வேலை தேடி அலைய வேண்டும். லஞ்ச ஊழல் நிர்வாகத்தில் நிர்ணயிக்கப் பெற்ற இழப்பீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்குமென்ற உறுதிப்பாடும் இல்லை.

2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 6,38,365 கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் 5,93,643 கிராமங்களில்தான் மக்கள் வாழ்கின்றனர். மேலும் இரண்டு லட்சம் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களில் குடியேறுவதாக வைத்துக் கொள்வோம். நகரங்கள் எல்லாம் நரகங்களாகும் நிலை தானே ஏற்படும்.

நிலத்தை – வேளாண்மையை – நம்பியிருக்கின்ற மக்களுக்கு வாழ மாற்று ஏற்பாடு செய்யாமல் நிலத்தை இழந்து வெளியேறச் செய்வது குளவிக்கூட்டில் கல்லெறிந்து கூட்டைக் கலைப்பதைப் போன்ற விளைவை ஏற்படுத்தும்.

சரியான பொருளாதார வளர்ச்சியை முறையாக மேற்கொண்டு எல்லா மக்களையும் வாழ வைப்பதுதான் நல்ல, ஏற்றுக்கொள்ளத்தக்க வளர்ச்சியாக இருக்கும்.

Posted in Agriculture, Analysis, Asset, City, Commerce, Dinamani, Economy, encroachment, Farmers, Farmlands, Finance, Globalization, Growth, Industrialization, Industry, Land, Op-Ed, Opinion, peasants, Property, Rural, Urbanization, Village | 1 Comment »

Mamata’s hunger strike enters eleventh day over TATA car project Singur issue

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2006

திசைமாறும் போராட்டம்

மம்தா பானர்ஜி 11 வது நாளாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் ஹூப்ளி மாவட்டத்தில் சிங்குர் என்ற இடத்தில் டாடா நிறுவனம் தொடங்கவுள்ள சிறு கார் தொழிற்சாலைக்காக விவசாயிகளை மாநில அரசு கட்டாயப்படுத்தி நிலத்தைக் கையகப்படுத்துகிறது என்பது மம்தாவின் குற்றச்சாட்டு.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அக்கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் 12,000 விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி 1000 ஏக்கர் நிலத்தை வாங்குவது நியாயமா? என்பது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேள்வி.

இதனை மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ய மறுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விரிவான “கட்டுரை-பதில்’ கொடுத்துள்ளார். “”மம்தாவின் குற்றச்சாட்டு உண்மையல்ல. அனைவரும் நிலத்தை விற்க ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர். சுமார் 9000 விவசாயிகள் ரூ.131 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர். இந்த நிலம் ஒரு போகம் விளையும் பூமிதான். சிங்குரில் விவசாய நிலங்கள் விற்கப்படுவது புதிதல்ல. கடந்த ஆண்டில் 572 பேர், 300 ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார்கள். சிங்குரில் நிலத்தை விற்க யாரும் விரும்பவில்லை, நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது பொய்” என்று விரிவான ஆதாரங்களுடன், புள்ளிவிவரங்களுடன் பதில் கொடுத்துள்ளார். இனி, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அனுமதிக்கப் போகும் மாநிலங்கள், பிருந்தா காரத்தின் பதில்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால் ஆச்சரியமில்லை.

மாநில அரசுக்கு எதிரான போராட்டத்திலிருந்து இப்போது பிரச்சினை வர்த்தக திசைக்குப் பாய்ந்துள்ளது. டாடா பொருள்களைப் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார் மம்தா.

விவசாயிகளுக்கு ஆதரவாக, மாநில அரசுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனத்துக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பது யாரும் எதிர்பார்க்காதது. இந்த போராட்டத்துக்கு முன்பே, நிருபர்களிடம் பேட்டி அளித்த மம்தா, தாங்கள் டாடா நிறுவனத்தையோ தொழில்மயமாக்கலையோ எதிர்க்கவில்லை என்றார்.

டாடா நிறுவன பொருள்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்படும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு டாடா கார் தொழிற்சாலையின் பங்குகளைத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

சிங்குர் பகுதியில் நிலத்தை இழப்போர், வேலையிழக்கும் விவசாயத் தொழிலாளர்கள் என சுமார் 35000 பேர் வேறு இடங்களுக்குச் செல்ல நேரிடும். விவசாயத்தை மட்டுமே அறிந்த, வேறு தொழில் தெரியாத இந்த ஏழை மக்களின் கைகளில் இழப்பீட்டுத் தொகை வெகுசீக்கிரத்தில் கரைந்துவிடும். மீண்டும் வறுமையில் வாடுவார்கள்.

டாடா நிறுவனம் பல தொழில்களில் முன்னணியில் உள்ள பெரிய நிறுவனம். இரும்புத் தொழிலை உலக அளவில் விரிவு செய்யவுள்ளது. நிலத்தை விற்கும் மற்றும் வேலைவாய்ப்பை இழக்கும் விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகையில் 75 சதவீதத்தை சம-பங்குகளாக டாடா நிறுவனம் வழங்க வலியுறுத்தினால், அது உண்ணாவிரதம், புறக்கணிப்பு இவற்றைவிட உண்மையான காந்தியமாக அமையும்.

1000 ஏக்கரில் சிங்குர் கார் தொழிற்சாலை நில குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது டாடா நிறுவனம்

கோல்கத்தா, மார்ச் 10: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், ரூ. 1 லட்சம் சிறிய கார் தொழிற்சாலை அமைப்பதற்கான 997 ஏக்கர் நில குத்தகை ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது.

ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் சார்பில் அதன் துணைத் தலைவர் (நிதி) ஆர்.எஸ். தாக்குர், மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கார்ப்பரேஷன் சார்பில் மாநில தொழில்துறைச் செயலர் சபியாசச்சி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

நிலக்குத்தகை ஒப்பந்த விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்தக் கார் தொழிற்சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக பயிர் செய்யும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, 25 நாள்களுக்கு மேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

உண்ணாவிரதத்தை மம்தா பானர்ஜி ஜனவரி 25-ம் தேதி கைவிட்ட ஒரு வாரத்தில், கார் தொழிற்சாலை அமைக்க நிலத்தை சமன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் டாடா நிறுவனத்தை மேற்கு வங்க அரசு அனுமதித்தது.

திரிணமூல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் போராட்டம் படிப்படியாக வலுவிழந்த நிலையில், நில குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட 997.11 ஏக்கர் நிலத்துக்காக ரூ. 120 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மத்தியில் ரூ. 1 லட்சம் கார் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in Agriculture, Communism, Communists, CPI, CPI (M), deal, Displaced, Economy, Factory, Farmers, Farming, Industrialization, Kolkata, Mamata Banerjee, Mamtha, Marxist, Marxist Communist, Medha Patkar, peasants, Pozhichaloor, Protest, residents, Singur, Strikes, Tamil, TATA, TMC, Trinamool Congress, Trinamul, WB, West Bengal, workers | 1 Comment »