Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Indhira’ Category

Tamil New Year: Thai Pongal or Chithirai First Day? – S Ramachandran

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2008

சித்திரையில்தான் புத்தாண்டு

எஸ். ராமச்சந்திரன்

இக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் – சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடியோன்” – புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.

பூம்புகாரில் இந்திர விழாவின்போது “”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.

பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? இவை இரண்டிற்குமே தெளிவான விடை “”அல்ல” என்பதுதான்.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை – 360 பாகைகளை – 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.

சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் “”இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்” என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).

தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.

வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.

“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.

இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவேனில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை “”வியாழ வட்டம்” (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த’, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா “”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற” காலகட்டத்தில், “”நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “”தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர’மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: “”சித்திரையில்தான் புத்தாண்டு”.

(கட்டுரையாளர்: தொல்லியல் ஆராய்ச்சியாளர்)
—————————————————————————————————————————-
தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு

தமிழண்ணல்

இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் – வானநூல். கணியின் – வான நூல் வல்லவன்.

கணியர் – சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்; கணி – சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார்.

பதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர்.

சேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).

குறுந்தொகையில், கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.

மாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் – இன்று பக்கம் என்பதையே – பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.

இவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.

நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.

கோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.

ஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர். இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.

சித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர்; வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் (தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.

காதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும், பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.
மகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா – காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.

அதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.

இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் – தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது – ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு – முன்பு யாடு என்றே வழங்கியது.

இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர்.

அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு – மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.

மேஷம் என்பதற்கு – முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி – யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும். சித்திரை முதல்நாள் – இளவேனிலின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.

தமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந் நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.

——————————————————————————————-

அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்

பழ. நெடுமாறன்



தமிழர் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் என்பதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க ஒரேமனதாக நிறைவேற்றுவதற்கு வழிசெய்த முதல்வர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன்.

தொன்மை வாய்ந்த மொழியான தமிழுக்கும், மூத்த குடியினரான தமிழர்களுக்கும் தனியாகப் புத்தாண்டு என்பது இல்லையா? காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

சங்ககாலத் தமிழர் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தன. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்தினை மரபின் அடிப்படையாகும்.

குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்லத் தொடங்கும் (உத்தராயணம்) நாளையும் இணைத்துக் கொண்டாடினர். இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றது.

தமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய, கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்டதும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும், கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படையாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும், வியாழ ஆண்டை பாண்டியர்களும், சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர் க. நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர். 1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளியில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது. அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 14-10-85ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது. பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது. இந்த முறை கி.பி. 312ஆம் ஆண்டில் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது.

ஞாயிற்று ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாள்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம்.

சாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாகக் கொண்டிருந்தது. இதுதவிர பசலி, கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன.

பண்டைத் தமிழ் மக்கள் ஒரு தலைநகரின் தோற்றம் அல்லது பேரரசன் பிறப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடராண்டு கணித்து வந்தனர் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்த குறிப்புகளால் அறிய கிடக்கிறது என புலவர் இறைக்குருவனார் கருதுகிறார்.

அரசர்கள் முடிசூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வரசர் பெயரோடு ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் மரபு பிற்காலச் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.

தமிழ்நாட்டிற்கு ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு கிரிகேரியன் ஆண்டு என அழைக்கப்படும் கிறித்துவ ஆண்டுமுறை பழக்கத்திற்கு வந்தது.

கிசிரி முகமதிய ஆண்டுமுறை நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினாவுக்குப் புறப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட ஒன்றாகும். புத்த மதத்தவர் புத்தர் முக்திபெற்ற நாளின் அடிப்படையில் ஆண்டுமுறையை வகுத்துக் கொண்டுள்ளனர். அதைப்போல மகாவீரர் முக்தி பெற்ற நாளினை அடிப்படையாகக் கொண்டு மகாவீரர் நிர்வாண ஆண்டு சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

எனவே தமிழர்களுக்கு தொடர் ஆண்டு இல்லாத குறைபாட்டினை போக்குவதற்காக கி.பி. 1921ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவராண்டு முறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென முடிவு செய்தனர்.

திருவள்ளுவர் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு என கொண்டு கி.மு. 31ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுமுறை வகுக்கப்பட்டது. ஆனாலும் பிற்காலத்தில் கிடைத்துள்ள பல்வேறு புதிய சான்றுகளின் மூலம் திருவள்ளுவரின் காலம் இன்னும் பழமையானது எனக் கருதும் அறிஞர்களும் உள்ளனர்.

6-12-2001 அன்று மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் தை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்க நாள் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் இறுதியான முடிவு தெரியும்வரை மறைமலையடிகள் தலைமையில் வகுக்கப்பட்ட திருவள்ளுவராண்டு கணக்கினை தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.

1972ஆம் ஆண்டில் முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்தபோது திருவள்ளுவராண்டு முறையினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அரசிதழிலும் அரசு வெளியிட்ட நாள்காட்டி, நாள்குறிப்பு ஆகியவற்றிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1983ஆம் ஆண்டில் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டினை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும் தமிழர் ஆண்டு என்ற பெயரில் வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுப்பெயர்கள் கடைப்பிடிக்கப்பட்டன. சித்திரை முதல் நாள் தமிழாண்டு பிறப்பு என்பதும் தொடர்ந்தது. இதன் விளைவாக திருவள்ளுவராண்டு வகுக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அதனை அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் அது செயலுக்கு வரவில்லை.

எனவே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் சித்திரை முதல்நாளா, தை முதல்நாளா என்ற குழப்பம் நிலவியது.

தமிழறிஞர் கா. சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் ஆவணி மாதமே பண்டைத் தமிழ்நாட்டில் ஆண்டுத் தொடக்க மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டது என கருதினார்கள்.

இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை சட்டப்பூர்வமாக ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் உலகத் தமிழர்களைக் கணக்கிலோ கவனத்திலோ எடுத்துக்கொள்ளப்படாமல் தமிழக சட்டமன்றத்தில் மட்டும் இத்தகைய சட்டமுன்வடிவு ஏற்கப்படுவது முறையானது அல்ல.

தமிழர் பண்பாட்டுத் தளத்தில் மிக முக்கியமான முடிவு இதுவாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தலைமுறைதலைமுறையாகத் தமிழர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதுமாகும்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பழமையான அமைப்புகளான மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச்சங்கம், தமிழகப் புலவர் குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர்கள், தமிழ் வரலாற்று அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு அறிஞர்கள் மற்றும் இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் கூட்டி தை திங்கள் முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை நன்கு ஆராய்ந்து ஏற்கச் செய்து அதன்பிறகு இதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால் அவரது பெருமையும் உயர்ந்திருக்கும். உலகத் தமிழர்களும் இதை மகிழ்ச்சியுடன் பின்பற்றத் தொடங்கியிருப்பார்கள்.

1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் உரையாற்றிய கூட்டத்தின் முடிவில் மாணவர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் அது. அந்த மாணவர் அது குறித்து கேள்வி கேட்டார்.

“”தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்திருக்கிறீர்களே ஏன் எங்களைக் கேட்கவில்லை. தமிழ் உங்களுக்கு மட்டுமே சொந்தமா?” என்ற கேள்வியை அவர் எழுப்பியபோது நான் ஒரு கணம் திகைத்துப்போனேன். ஆனால் மறுகணமே அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை, தவிப்பை உணர்ந்தேன்.

“தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவிப்பதற்கு முன்னால் ஈழத்தமிழ் அறிஞர்களையும், பிறநாட்டுத் தமிழ் அறிஞர்களையும் அழைத்துக் கலந்துபேசி முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை அந்த மாணவரின் கேள்வி எனக்கு உணர்த்திற்று. தமிழகத்திற்கு நான் திரும்பி வந்தபோது, தமிழக சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினேன். பேரவையில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்னை அழைத்துப் பேசி முழு விவரத்தையும் கேட்டறிந்தார். எழுத்துச் சீர்திருத்தம் பிரச்னையில் மட்டுமல்ல. தமிழில் கலைச்சொற்கள், அறிவியல் சொற்கள் போன்றவற்றின் உருவாக்கத்திலும் உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்தினேன். இல்லையென்றால் வெவ்வேறு விதமான கலை, அறிவியல் சொற்கள் உருவாகிவிடக்கூடிய அபாயத்தையும் சுட்டிக்காட்டினேன். எனது கோரிக்கையின் நியாயத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உணர்ந்தார். உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.

திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள் எது என்பதை முடிவு செய்யும் உரிமையும் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலகத்தமிழர்களுக்கும் சொந்தமானது. அவர்களையும் கலந்துகொண்டு செய்திருந்தால் மட்டுமே அந்த முடிவு நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

Posted in 60+, Ambedkar, Ancient, Anniversary, Aries, Arya, Aryan, Astronomy, Beeshma, Beeshmar, Belief, Bheeshma, Bheeshmar, Bhishma, Bhishmar, Bishma, Bishmar, Brahminism, Calendar, Celebrations, Cheran, Chithirai, Cholan, Cholas, Chozan, Chozhan, Chozhas, Culture, Customs, Days, Devas, DMK, Dravida, Dravidian, Dravidianism, Events, EVR, Festivals, first, Functions, Greece, Greek, Hindu, Hinduism, Hindutva, History, Holiday, Horoscope, Indhira, Indhiran, Indhra, Indhran, India, Indiran, Indra, Indran, Inthiran, Issues, January, Jovian Circle, Kural, Leave, Literature, months, Moon, New, Paappaan, Pandian, Pandias, Pandiyan, Pandiyas, Pappaan, Parsian, Periyaar, Periyar, Persia, Persian, Pisces, Pongal, Poombugar, Poombuhar, Poombukar, Poompugar, Poompuhar, Poompukar, Religion, Roman, Sangam, Sangamam, Sanskrit, Seasons, Signs, Sithirai, Spring, Summer, Sun, Temples, Thai, Thamil, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TN, Tradition, Valluvar, Winter, Year, Years | 3 Comments »

Former Prime Minister Chandrasekhar – Biosketch, Anjali

Posted by Snapjudge மேல் ஜூலை 8, 2007

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவு

புதுதில்லி, ஜூலை 9: முன்னாள் பிரதமர் சந்திரசேகர் (80) ஞாயிற்றுக்கிழமை காலை, தில்லியில் காலமானார்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரசேகர், 3 மாதங்களுக்கு முன் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மறைந்த சந்திரசேகருக்கு 2 மகன்கள் உள்ளனர். சந்திரசேகரின் தில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

1927-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவர், 1950-ல் ஆச்சார்யா நரேந்திர தேவால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக பிரஜா சோசலிஸ்ட் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965-ல் காங்கிரஸில் இணைந்து கட்சியில் “இளம் துருக்கியராக’ இருந்தார். பின்னர், நெருக்கடி நிலையின்போது கைது செய்யப்பட்டார்.

ஜனதா கட்சி நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர். பின்னர், அக் கட்சியின் தலைவரானார். 1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கினார். 1990-ல் பிரதமரானார். சுமார் 6 மாதம் காலம் அவர் பிரதமராக பதவி வகித்தார்.

8 முறை எம்.பி.யாக இருந்தவர்:

அவர் இதுவரை 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். எந்தவொரு மத்திய அமைச்சரவையிலும் அவர் அமைச்சராக பணியாற்றாமலே பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த சந்திரசேகரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தில்லியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜெயில் சிங், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் ஆகியோரின் நினைவிடங்களுக்கு அருகில், சந்திரசேகரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

7 நாள் அரசு துக்கம்:

7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தில்லியில் திங்கள்கிழமை மதியம் 1 மணி முதல் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.

——————————————————————————————————————-
“கிளார்க் பணிக்கு’ முயற்சித்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

பாலியா, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் வயது குறைவால் கிளார்க் பணி வாய்ப்பை இழந்தார் என அவரது குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சந்திரசேகர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவரின் மாமாவின் நண்பர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்ஷியாக பணியாற்றினார். அவர் மூலம் நீதிமன்றத்தில் கிளார்க் பணியில் சேர சந்திரசேகர் முயற்சித்தார்.

கிளார்க் பணியில் சேர குறைந்தபட்சம் 18-வயது நிரம்பியிருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது.

ஆனால், சந்திரசேகருக்கு பிற தகுதிகள் அனைத்தும் இருந்தும் அப்போது 18-வயது நிரம்பாததால், கிளார்க் பணி கிடைக்கும் வாய்ப்பை இழந்தார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

அரசியலைப் போல் கலைத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சந்திரசேகர், அவரது கிராமத்தில் ராமலீலா பண்டிகை கொண்டாட்டத்தின் போது குரங்காகவும், கரடியாகவும் வேடம் தாங்கி நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

——————————————————————————————————————-

சந்திரசேகர் ~ எனது பேட்டியிலிருந்து…

சென்னை, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கடந்த 30 ஆண்டுகளில் அளித்த பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்த கருத்துகளில் இருந்து சில பகுதிகள்:

பிரதமர் பதவி:

4 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றியமைத்துவிட்டதாக நான் கூறிக்கொள்ள முடியாது. ஆனால் அந்த 4 மாதங்களில், நாட்டில் எழுந்த சூடான பிரச்னைகளைத் தணிக்க முயற்சி செய்திருக்கிறேன். நான் பிரதமராக பதவி ஏற்றபோது கிட்டத்தட்ட 80 அல்லது 90 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இரண்டு நாட்களில் (அமைதி ஏற்படுத்தப்பட்டு) ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

பெரும்பான்மையான மக்களிடம் பற்றிக் கொண்ட “மண்டல்’ மற்றும் “அயோத்தி’ பிரச்னைகளால் மொத்த தேசமும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. அப்போது இருந்த ஒரே கேள்வி பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பதே. அதற்கு முன் இருந்த அரசு தானே உருவாக்கிவிட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த ஒரே ஒரு மாற்று தேர்தல்தான்.

அத்தகைய சூழ்நிலையில் நான் ஆட்சி அமைத்தது சந்தர்ப்பவாதம் அல்ல; நாடு தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னர் மக்கள் மத்தியில் இருந்த கொதிப்பு அடங்க வேண்டும் என நான் உறுதியாக நம்பினேன். அதனால்தான் காங்கிரஸ் வெளியிலிருந்து தரும் ஆதரவுடன் ஆட்சி அமைத்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

பிரதமர் பதவி பேரங்களுக்கு அப்பாற்பட்டது. என்னைப் பொருத்தவரையில் பிரதமராக இருப்பதே வெற்றி அல்ல. எதுவும் செய்யாமல் அல்லது கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு அதிகாரத்தில் இருப்பதால் என்ன பயன்? ஒரு பிரதமராக, பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக ஒருமுறைகூட நான் சமரசம் செய்துகொண்டதில்லை.

முடிவெடுக்கும் அதிகாரத்தில் சமரசம் செய்துகொண்டு, கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டு ஒருவர் அரசாங்கத்தை நடத்த முடியாது; வேண்டுமானால் வெறுமனே பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். ஒரு அரசியல்வாதி அரசாங்கத்தை நடத்தும் முறைக்காகத்தான் பாராட்டப்பட வேண்டுமே தவிர, பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக அல்ல.

அயோத்திப் பிரச்னை:

பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில் அதன் பிறகு தீர்வுக்கு வழியே இல்லாமல் போய்விடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொறுமைதான் கைகொடுக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் மற்றும் சரியான அணுகுமுறையைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என எனக்கு எல்லா வகையிலும் நம்பிக்கை உள்ளது.

பிரதமராக இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாக ஒரு தீர்வு கண்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். அப்படி ஒரு தீர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் பலருடைய எண்ணமாக இருந்தது.

இடஒதுக்கீடு:

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் எனத் தீர்மானிப்பதற்கு அறிவியல் ஆய்வுமுறை ஏதும் இல்லை என மண்டல் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது சமூக, பொருளாதார அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.

கருத்துக்கள்:

சிக்கலான சூழ்நிலைகளில் நான் கருத்துச் சொல்லத் தயங்கியதில்லை. அதே நேரம் மக்கள் மீது எனது கருத்துகளை திணிப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆலோசனைகளைத்தான் கூற முடியும். அவை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அதை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிரச்னைகள் எல்லை கடந்து போகும்போது கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

போஃபர்ஸ்:

1989 பொதுத்தேர்தலில் போஃபர்ஸ் விவகாரத்துக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவிட்டது. நாம் கவனம் செலுத்த வேண்டிய வேறு முக்கியப் பிரச்னைகள் உள்ளன; அரசியல் கட்சிகளுக்கு இது முக்கிய பிரச்னை அல்ல என நான் அப்போதே எடுத்துக் கூறினேன். சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற வெளிநாடுகளின் கையில் சிக்கிக்கொண்டுள்ள பிரச்னை போஃபர்ஸ். பிறகு எந்த அடிப்படையில் போஃபர்ஸ் பேரத்தின் மூலம் லாபம் பெற்றவர்களை அடையாளம் காட்டுவதாக மக்களுக்கு உறுதியளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

பன்னாட்டு நிறுவனங்கள்: இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் தனித்திருக்க முடியாது. சில முக்கியமான -முதுகெலும்பு போன்ற -துறைகளில் கூட்டுமுயற்சிகளை நாம் நாட வேண்டும். அதே சமயம் நமக்கான எல்லை எது என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கூட்டணி அரசுகள்:

மாநிலங்களில் கூட்டணி அரசுகள் செயல்படுவது போல், மத்தியில் கூட்டணி அரசுகள் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது. பிராந்தியக் கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகள், கூட்டணி அரசு சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கும். குறைந்தபட்ச செயல்திட்டம், கொள்கைகள் இல்லாமல் ஒரு அரசு பொறுப்பேற்றுக்கொள்வது, நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.

வகுப்புவாதம்:

மத அடிப்படைவாதம் நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்றால், மத அடிப்படையிலான அரசியல் அதைவிட அபாயகரமானது. மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் அக்கறையில்லாமல், சாதி, மதம், மொழி போன்ற மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் விஷயங்களை அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.

ஏழை பணக்காரர்:

இந்த நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்ல உணவு, பாதுகாப்பான குடிநீர், தேவையான மருத்துவ வசதி, உடை, உறைவிடம், கல்வி அளிக்க வேண்டியது அவசியமாகும். ஏழைகளுக்கு இந்த வசதிகள் சென்று சேருவதற்கு, வசதி படைத்தோர் சில தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.

உலகிலேயே அரசிடம் வெறும் அடிப்படை வசதிகளை மட்டும் எதிர்பார்க்கும் மக்கள் இருப்பார்களேயானால் அது நமது இந்திய மக்கள் மட்டும்தான். இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, குடிக்க நீர், அடிப்படை சுகாதார வசதி, ஆரம்பக் கல்வி, தெருவிளக்கு, சாலைகள் இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இதைக்கூட நம்மால் இதுவரை முழுமையாகத் தர இயலவில்லை என்பது வருத்தமான விஷயம்.

ஐனதா அரசு:

மக்களாட்சியை மலரச் செய்யும் நோக்கில்தான் ஜனதா கட்சி உருவானது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மக்களின் அதீத எதிர்பார்ப்புகளை ஜனதா அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. என்னைப் பொறுத்தவரையில் ஜனதா கட்சியின் சோதனை முயற்சி தோற்றுப்போகவில்லை.

அன்னிய முதலீடு:

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின் உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நுகர்வோர் சந்தை உள்ளிட்டவற்றில் அன்னிய முதலீடு தேவையில்லாதது. இது இப்படியே தொடர்ந்தால், வர்த்தகர்களாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர், நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்குப் போனார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.

கார்கில்:

கார்கில் வெற்றியைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்ததுபோலக் கூறுகிறார்கள். ஆனால், நமது எல்லைக்குள் இத்தனை தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள் என்றோ, முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் என்றோ யாரும் கேட்பதில்லை. அரசுக்கும் அரசின் உளவுத் துறைக்கும் ராணுவத்துக்கும் கொஞ்சம்கூட சந்தேகம் ஏற்படவில்லை என்றால் அது அரசின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடே தவிர வெற்றியல்ல. எல்லையில் ஏற்பட்ட ஊடுருவலைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் ஓர் அரசின் செயல் மன்னிக்கக் கூடியதல்ல.

தங்கத்தை அடமானம் வைத்தது ஏன்?

எனது அரசு நாட்டின் தங்கத்தை எல்லாம் அடமானம் வைத்துவிட்டது, விற்றுவிட்டது என்றெல்லாம் தவறான செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நாங்கள் அடமானம் வைத்தது நம்மிடமிருந்த கையிருப்புத் தங்கத்தை அல்ல. வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை நமது சுங்க இலாகா பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கம்தான் அடமானம் வைக்கப்பட்டது.

எதற்காக அடமானம் வைக்கப்பட்டது? என்று கேட்பீர்கள். அந்த நேரத்தில் எனது அரசு காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். நமது அரசு வாங்கியிருந்த கடன்களுக்கு வட்டி கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது. முந்தைய அரசு அதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யாமல் விட்டுவிட்டது. காபந்து அரசு என்றால் எந்தவிதக் கொள்கை முடிவுகளும் எடுக்க முடியாது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடியாது. ஏதாவது முடிவு எடுத்து குறித்த நேரத்தில் வட்டியைக் கட்டாமல் விட்டால், உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பலேறி விடும்.

அப்படி ஓர் இக்கட்டான நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை அடமானம் வைத்து நிலைமையைச் சமாளிப்பது என்று முடிவெடுத்தோம். அந்த முடிவினால் இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் காப்பாற்றினோம் என்பதை மறந்து, எனது அரசு தங்கத்தை விற்றுவிட்டது என்று அவதூறு சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற முடிந்தது என்று பெருமைப்படுகிறேன்.

ஊழல்:

ஊழல் பெருகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம். இந்தக் கூக்குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியா ஒரு லஞ்ச ஊழல் மலிந்த நாடு என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள்தான் இந்த லஞ்ச ஊழலில் ஈடுபடுகிறார்களே தவிர, சாதாரண விசவாயியோ, ஏழைத் தொழிலாளியோ, மாதச் சம்பளம் வாங்கும் பணியாளியோ லஞ்சம் பெறுவதுமில்லை, கொடுப்பதுமில்லை. அவர்களது எண்ணிக்கைதான் இந்தியாவில் அதிகம். ஒரு சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்காக இந்தியாவே லஞ்ச ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது என்பது பொறுப்பற்ற பேச்சு.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே லஞ்ச ஊழலை அகற்றிட போராட்டம் நடத்த வேண்டும் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. லஞ்ச ஊழல் இல்லாமல் நிர்வாகம் நடத்துவது அவர்களது பொறுப்பு. இதை எதிர்த்துப் போராடுவது என்றால், அவர்களை எதிர்த்து அவர்களே போராடுவது என்றுதானே அர்த்தம்?

இந்தியாவின் எதிர்காலம்:

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் பெற்று ஜனநாயம் சீராக சிறப்பாக செயல்படும் ஒரே நாடு இந்தியாதான். இந்தப் புகழ் இந்திய மக்களின் மேதமையையே சாரும். அரசியல்வாதிகள் தோற்றிருக்கலாம். நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளின் தோல்வி இந்த நாட்டின் தோல்வி அல்ல.

நமது மக்களின் திறனில் வைத்துள்ள உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்க்க முடியும். 1947-ல் நாம் ஒரு ஆணியைக்கூட உற்பத்தி செய்யவில்லை. ஆனால் 1994-ல், உலகின் 13 முக்கிய தொழில்துறை நாடுகளில் நமது நாடும் ஒன்று. கிட்டத்தட்ட நாம் எல்லாவற்றையுமே உற்பத்தி செய்கிறோம். விவசாயத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.

இந்தியாவின் மிகப்பெரிய பலம் இந்தியக் குடிமகன்தான். அவன் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் புத்திசாலி. நமது அரசியல்வாதிகள் அவனை ஏமாற்றுவதாக நினைத்தால் முதலில் ஏமாறப்போவது அவர்கள்தான். இந்தியாவால் மட்டும்தான் உலகுக்கு வழிகாட்ட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி படையெடுத்தது ஏன்? அது உலகமே பார்த்து பிரமித்த பொருளாதாரமாக இருந்ததால்தான். அதே நிலைமை விரைவிலேயே திரும்பும். நாளைய தலைமுறை இளைஞர்களிடம் இருக்கும் தேசப்பற்று இந்தியாவுக்கு அதன் இழந்த அருமை பெருமைகளை மீட்டெடுத்துத் தரும். இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது.

—————————————————————————————————————
சந்திரசேகரின் வாழ்க்கைக் குறிப்பு…

1927-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள இப்ராஹிம்பாடியாவில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அலாகாபாத் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோதே, பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்.

1950-ம் ஆண்டுகளில் ஆச்சார்யா நரேந்திர தேவின் கருத்துகளால் கவரப்பட்ட சந்திரசேகர், பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பில் 1962-ல், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965-ல் காங்கிரஸில் இணைந்தார். சில ஆண்டுகளில் அவர், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாளித்துவத்தை எதிர்த்து மக்களவையில் குரல் கொடுத்தார் சந்திரசேகர். காங்கிரஸில் “இளம் துருக்கியர்’ என்றழைக்கப்பட்ட அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இவருடன் மோகன் தாரியா, ராம் தன் உள்ளிட்ட எம்.பி.க்கள் இணைந்து காங்கிரஸின் தலைமையை எதிர்த்து வந்தனர். இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி கூட, இந்த இளம் துருக்கியர் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1975-ல் நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான இயக்கத்தில் இணைந்து நெருக்கடி நிலையை எதிர்த்தார். இதையடுத்து ஜனதா கட்சி உருவானது. இக் கட்சிக்கு ஏர் உழவன் சின்னம் கிடைத்தது.

1977-ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது.

அதே ஆண்டில், ஜனதா கட்சியின் தலைவராக சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1977-ல் இருந்து அனைத்து மக்களவைத் தேர்தலிலும் (1984-ல் இந்திரா காந்தி மறைவின்போது நடந்த தேர்தலைத் தவிர) வெற்றிப் பெற்றார்.

1980-க்கு முன் ஜனதா கட்சி உடைந்ததும், அக் கட்சியின் தலைவராகவே 1989-வரை நீடித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1983-ல் காஷ்மீரில் தொடங்கி தில்லி வரை பல ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.

1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கி காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தார். பிரதமராக வேண்டிய வாய்ப்பு கிடைக்காததால் அவர் அமைச்சர் பதவியையும் மறுத்தார்.

1990-ல் மண்டல் கமிஷன் விவகாரத்தால் ஆட்சியை இழந்தார் வி.பி.சிங்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் 1990-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.

6 மாத காலம் பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தில்லி வீட்டை சில் போலீஸôர் வேவு பார்த்ததாக எழுந்த விவகாரத்தால் அவரது ஆட்சிக்கு ஆதரவை விலக்கி கொண்டது காங்கிரஸ்.

1991-ம் ஆண்டு மார்ச் 6-ல், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் சந்திரசேகர். அன்று அவர் நாடாளுமன்றக் கட்டத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தனியாக நடந்து சென்று ராஜிநாமா கடிதத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர், அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், 2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

கடந்த 1-ம் தேதி (1-7-2007) தனது 80-வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.

தேசியத் தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் துணைத் தலைவர்: குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனக்கு நல்ல நண்பராக இருந்தவர். சோசலிஷ கொள்கையிலும், ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஏழைகளின் வாழ்வு உயர இறுதி வரை உழைத்தவர் சந்திரசேகர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்: காந்தியக் கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டவர். கிராமப் புற மக்கள், கிராமத் தொழில்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறைக் கொண்டவர்.

பிரதமர் மன்மோகன் சிங்: மதசார்பற்ற தேசியவாதி. மக்களின் தலைவராக மதிக்கப்பட்டவர். சிறந்த அரசியல்வாதியை நாடு இழந்து விட்டது. அரசியலிலும், ஆட்சியிலும் பல புதுமைகளை கொண்டு வந்தவர்.

முன்னாள் பிரதமர் வாஜபேயி: நீண்ட நாள் அரசியல் நண்பர். அச்சற்ற முறையில் எதற்கும் துணிந்து போராடக் கூடியவர். நீதிக்காக குரல் கொடுத்தவர்.

முன்னாள் பிரதமர் குஜ்ரால்: நாடு நல்ல தலைவரை இழந்து விட்டது. அவருடைய அரசியல் வாழ்க்கை துணிச்சல் மிக்கது.

சோம்நாத் சாட்டர்ஜி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில் மிகச் சிறந்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: அரசியலில் துணிச்சலுடன் போராடியவர். இளம் வயதில் அரசியலில் பங்கேற்று நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்: தனது கொள்கைகளை என்றைக்குமே அவர் விட்டுக் கொடுத்ததில்லை. பல்வேறு தரப்பு மக்களுக்காக குரல் கொடுத்தவர்.

லாலு பிரசாத்: விடுதலைக்காக போராடிய வீரர். நெருக்கடி நிலைக் காலத்தில் அவரது பங்கு மகத்தானது.

சீதாராம் யெச்சூரி: பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்தவர் சந்திரசேகர். கூட்டணி ஆட்சிக்கு வழிவகை கொடுத்தவர்.

சரத் யாதவ்: இந்திய ஜனநாயகத்தின் தூணாக விளங்கியவர் சந்திரசேகர்.

————————————————————————————————

Dinamani op-ed

தேசிய இழப்பு!

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!

சுதந்திர இந்திய வரலாறு பல பிரதமர்களைச் சந்தித்துவிட்டது. சந்திக்கவும் இருக்கிறது. அந்தப் பதவியை அலங்கரித்த ஒவ்வொரு பிரதமருக்கும் ஒரு தனித்தன்மை இருந்தது என்பது மட்டுமல்ல; அந்தப் பதவியில் அமர்ந்தவர்கள், அவரவர் வகையில் சிறப்புகள் சேர்த்தனர். இந்த விஷயத்தில் சதானந்த்சிங் சந்திரசேகர் விதிவிலக்கல்ல.

மிகக் குறைந்த நாள்களே பிரதமராக இருந்தபோதிலும், அவரது பதவிக்காலம் இரண்டு மிகப்பெரிய பிரச்னைகளின் வேகத்தைத் தணித்து, இந்தியாவில் இனக்கலவரம் ஏற்படாமல் பாதுகாத்தது என்று வரலாறு நிச்சயமாக சந்திரசேகருக்குப் புகழாரம் சூட்டும். ஒருபுறம் மண்டல் கமிஷன் அறிவிப்பின் எதிரொலியாக வடமாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த வன்முறைகள்; மறுபுறம், அயோத்திப் பிரச்னையால் ஏற்பட்ட மதக்கலவரங்களும், அதனால் ஏற்பட்ட இனவாத விரோதங்களும்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்த வேளையில், இனியும் ஒரு பிரிவினைக்கால மதக்கலவரச் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று சந்தேகப்பட்ட சூழ்நிலையில் சந்திரசேகரின் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. அப்படியொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், ஜாதிக் கலவரங்கள் ஒருபுறமும், மதக்கலவரங்கள் மறுபுறமும் என்று உள்நாட்டுக் கலகமே வெடித்திருக்கும் சாத்தியம் நிலவியது. சந்திரசேகர் பதவியில் தொடர்ந்திருந்தால் அயோத்திப் பிரச்னைக்கு சுமுகமான முடிவு ஏற்பட்டிருக்கும் என்பதுதான் நமது கருத்து.

தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிலருக்கு சந்திரசேகர் மீது மனவருத்தம் இருக்கலாம். ஆனால், பிரதமர் என்ற முறையில் சந்திரசேகர் எடுத்த எந்தவொரு முடிவுமே பாரபட்சமற்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு என்று சொல்ல முடியாதது.

பதவியில் இருந்தபோதும் சரி, பதவியை இழந்த பிறகும் சரி, சந்திரசேகர் என்கிற பெயர் தனி அந்தஸ்துடனும், மரியாதையுடனும்தான் வலம் வந்தது. என்னதான் கூச்சலும் குழப்பமும் இருந்தாலும் சந்திரசேகர் பேச எழுந்தார் என்றால் நாடாளுமன்றம் கப்சிப்பென்று நிசப்தமாகிவிடும். பிரதமர் தொடங்கி அத்தனை உறுப்பினர்களும் அவரிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். கட்சி பேதமின்றி எந்த ஓர் உறுப்பினரும் இடைமறித்துப் பேசாத ஒரே ஒரு பேச்சாளர் நாடாளுமன்றத்தில் இருந்தார் என்றால் அது சந்திரசேகர் மட்டும்தான்.

வீம்புக்காரர், முன்கோபி, பிடிவாதக்காரர் – என்ற கோணங்களில் அவரைப் பார்ப்பவர்கள் உண்டு. அத்தனையும் உண்மையும்கூட. அதேசமயம், எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க விரும்புபவர் என்பது மட்டுமல்ல, எதிர்தரப்பு வாதத்தில் நியாயமிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கு இருந்தது. எந்தவொரு காரணத்துக்காகவும் தனது தன்மானத்தையும் தனக்குச் சரியென்றுபட்ட கொள்கையையும் விட்டுக்கொடுக்காத அவரது பிடிவாதம், சந்திரசேகரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபட வைத்தது. அவருக்குப் பல எதிரிகளையும் ஏற்படுத்தியது.

“”நான் எத்தனை நாள்கள் பிரதமராக இருந்தேன் என்பதைவிட பிரதமராக எப்படிச் செயல்பட்டேன் என்பதுதான் முக்கியம்”~சந்திரசேகர் தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறும் விஷயம் இது. “”எந்தவொரு காரணத்துக்காகவும் பிரதமர் பதவியின் மரியாதையும் கௌரவமும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்குக் களங்கம் வரும் விதத்தில் நான் செயல்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு எனது ஒரே பதில் – எனது ராஜிநாமா கடிதம்தான்” – தனக்கு ஆதரவளித்த ராஜீவ் காந்தியிடம் சந்திரசேகர் சொன்ன விஷயம் இது.

அறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றின் ஏடுகளை யார் புரட்டிப் பார்த்தாலும், சிறிது காலமே பிரதமராக இருந்த சந்திரசேகரின் கருத்துகளும், பிரச்னைகளுக்கு அவர் எடுத்த தீர்வுகளும் ஒவ்வொரு பக்கத்திலும் நிழலாடும். இந்திய ஜனநாயகம் அழிந்துவிடாமல் பாதுகாத்த பெருமைக்குரிய தலைவர்களில் அவரது பங்கு கொஞ்சநஞ்சமல்ல.

இளம் துருக்கியராக, ஜனதா கட்சியின் தலைவராக, பிரதமராக, மூத்த அரசியல்வாதியாக எல்லாவற்றுக்கும் மேலாக கொள்கைப் பிடிப்புள்ள ஒரு தலைவராக, அன்புடனும் பாசத்துடனும் பழகும் மனிதனாக வாழ்ந்து மறைந்துவிட்டார் சதானந்த்சிங் சந்திரசேகர்.

எந்தவொரு விஷயத்திலும் தீர்க்கமான சிந்தனையும், தெளிவான தீர்வும் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவு, ஈடுகட்ட முடியாத தேசிய இழப்பு!

Posted in Agriculture, Allahabad, Alliance, Anjali, Ayodhya, Biography, Biosketch, BJP, Bofors, Bribery, Bribes, Cabinet, Capitalism, Cargil, Caste, Chandrasekar, Chandrasekhar, CharanSingh, Chat, Coalition, Communism, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corrupt, Corruption, Democracy, Economy, Emergency, Faces, Farming, FDI, Feroze, Finance, Freedom, Fundamentalism, Gandhi, Govt, Incidents, Income, Independence, Indhira, Indira, Indra, infrastructure, Inquiry, Interview, investments, Jan Morcha, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JanSakthi, JanSakti, JanShakthi, JanShakti, JP narayan, Kargil, kickbacks, Liberation, Life, LokSaba, LokSabha, Mandal, Manmohan, Marxism, MNC, Morarji, MP, Musharaf, Musharaff, Narain, Narasimha Rao, Narasimharao, Narayan, Nehru, NRI, Opinions, Pakistan, people, PM, Poor, Praja Socialist, PVNR, Rajeev, Rajiv, Rajya Sabha, Rajyasabha, Religion, Republic, Reservations, Rich, Socialism, Sonia, Tax, UP, Uttar Pradesh, UttarPradesh, VP Singh, Wealth | Leave a Comment »