Archive for the ‘Index’ Category
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008
பங்குச் சந்தையும் பசித்த வயிறுகளும்
உ . ரா. வரதராசன்
இன்று ஆட்சியிலிருப்போரின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருவதும் ஊடகங்களின் வணிகச் செய்திப் பகுதியை ஆக்கிரமித்து நிற்பதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணின் ஏற்ற இறக்க சதிராட்டம்தான்.
கடந்த 2007ம் ஆண்டில் இந்த சென்செக்ஸ் புள்ளிகள் 45 சதவீத உயர்வையும் தாண்டியது. மும்பை பங்குச் சந்தையில் அன்றாடம் வாங்கி விற்கப்படும் 30 பெரும் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பை மட்டுமே வைத்து இந்த சென்செக்ஸ் குறியீட்டுப் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன. 21,000 புள்ளிகளைத் தொட்டு சாதனையை நிகழ்த்திய இந்த சென்செக்ஸ் இப்போது 14,000 புள்ளிகளாகச் சரிந்தும், பின்னர் ஏறுவதுமாக இருக்கிறது.
இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற 2004-ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான நான்காண்டுகளில் மும்பை மற்றும் தில்லி பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகத்தின் அளவு 286 சதவீதம் (சுமார் 3 மடங்கு) உயர்ந்துள்ளதாக சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களின் ஊஞ்சலாட்டத்தை உற்றுக் கவனிப்பதிலேயே நாட்டின் நிதியமைச்சர் குறியாக இருக்கிறார்.
இப்போது வெளிநாட்டு மூலதனம் வரவு அதிகரிப்பதானாலும், சர்வதேச அளவில் டாலர் மதிப்பு சரிந்ததானாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து வருவது, நிதியமைச்சருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சமாளிப்பதற்காகக்கூட அன்னிய நிதி மூலதனத்தின் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்க மத்திய அரசு முனையவில்லை. மாறாக இந்திய நாட்டுக் கம்பெனிகள் அயல்நாடுகளில் வாங்கும் கடன் தொகைகளை இந்தியாவுக்குக் கொண்டு வரக்கூடாது. வெளிநாட்டிலேயே மூலதனச் செலவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நம் நாட்டவர்களே வெளிநாட்டில் கடன் வாங்கி அன்னியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டு வருவது தடுக்கப்பட்டுள்ளது. அதே கடன் தொகைகள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மூலம் பங்குச் சந்தைக்கு வந்து போவது என்பது இப்போதும் நடந்து வருகிறது.
நம் நாட்டின் நிதியமைச்சரின் பார்வை பங்குச் சந்தை வர்த்தகத்திலேயே பதிந்து கிடப்பது, நிதியமைச்சகம் கவலையோடு பரிசீலிக்க வேண்டிய எண்ணற்ற பிரச்னைகள் குறித்துப் பாராமுகம் காட்டுவதில் முடிந்திருக்கிறது.
இந்த ஆண்டின் பட்ஜெட்டில்தான் (அரசியல் காரணங்களுக்காகவேனும்) விவசாயக் கடன் ரத்து போன்ற சில அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. எனினும், பங்குச் சந்தையில் சரிவு ஏற்படுகையில் கம்ப்யூட்டரில் முகம் பதித்திருக்கும் தரகர்களின் முகத்தில் தெரியும் கவலைக்குறிகள் நிதியமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, ஒவ்வொரு நாளும், பசித்த வயிறுகளோடு இரவில் படுக்க நேரிடும் கோடானகோடி சாமானிய இந்தியர்களின் துயரந்தோய்ந்த முகங்கள் ஈர்க்கவில்லை என்பது வருந்தத்தக்கது.
வளரும் நாடுகளில் பசித்த வயிறுகளின் சவால் பற்றிய ஓர் ஆய்வறிக்கை, உலகப் பட்டினிக் குறியீட்டெண் 2007 என்ற பெயரில் வெளியாகியுள்ளது. 2000 – 2005ம் ஆண்டுகளில் 118 வளரும் நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தப் பட்டினிக் குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் 21ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்முயற்சியில் 189 நாடுகளின் ஆட்சியாளர்கள் கூடி விவாதித்து அடுத்த இரண்டாயிரமாவது ஆண்டின் வளர்ச்சி இலக்குகளை வரையறுத்து வெளியிட்டனர். 1990-ல் தொடங்கி 2015-க்குள் எட்டப்பட வேண்டிய இந்த இலக்குகள், கடுமையான வறுமையையும் பட்டினியையும் ஒழிப்பது, அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகள், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பது, தாய்மைக் காலத்தில் பெண்கள் ஆரோக்கியம், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை எதிர்கொள்வது போன்றவற்றை உள்ளடக்கி அமைந்தன. இந்த இலக்குகளைப் பாதியளவாவது 2003-ம் ஆண்டுக்குள் எட்டிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படவும் முடிவெடுக்கப்பட்டது. இதை மையமாக வைத்து மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த உலகப் பட்டினிக் குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது.
1. ஒரு நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஊட்டச்சத்து குறைவான மக்கள் எண்ணிக்கையின் விகிதம் (உட்கொள்ளும் உணவின் அளவு உடலின் தேவைக்குக் குறைவாக உள்ள மக்கள்தொகைகளின் எண்ணிக்கை).
2. ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை (வளர்ச்சி குறைந்த, சோகை பிடித்த குழந்தைகளின் சதவிகிதம்).
3. பிறந்த ஐந்தாண்டுகளுக்குள் இறந்துவிடும் குழந்தைகளின் (ஆரோக்கியமற்ற சூழல், போதுமான உணவு இல்லாமை காரணமாக நேரிடும் குழந்தைச் சாவுகளின்) எண்ணிக்கை.
இந்த மூன்று அளவுகோல்களை வைத்துக் கணக்கிட்டு 118 நாடுகளில் நிலவும் நிலைமைகளை இந்தப் பட்டினிக் குறியீட்டெண் படம்பிடித்துள்ளது. இதில் குறைவான புள்ளிகள் முன்னேற்றமான நிலையையும் கூடுதலான புள்ளிகள் மோசமான நிலையையும், சுட்டிக்காட்டுவதாக அமையும். 10 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ள நாடுகளின் நிலைமை மோசமானது என்றும் 20 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ள நாடுகளின் நிலைமை கவலைக்குரியது என்றும் 30-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெறும் நாடுகள் கடும் கவலைக்குரியது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தக் குறியீட்டு எண்ணில் இந்தியா பெற்றுள்ள புள்ளிகள் 25.03.
118 நாடுகளின் பட்டியலில் இந்தியா 94வது கவலைக்குரிய கட்டத்தில் இடம் பெற்றுள்ளது. கடும் கவலைக்குரிய நாடுகளின் எண்ணிக்கை வெறும் 12 மட்டுமே. நமது அண்டை நாடுகள் சிலவற்றின் இடங்கள் நம்மைவிட மேலான நிலையில் இலங்கை – 69, பாகிஸ்தான் – 88, நேபாளம் – 90 என்றுள்ளன. பங்களாதேஷ் மட்டுமே நமக்குப் பின்னால் 103வது இடத்தில் உள்ளது. 0.87 என்ற மிகக் குறைவான புள்ளியோடு லிபியா என்ற சின்னஞ்சிறிய நாடு முதலிடம் பெற்றுள்ளது.
இந்தியா பட்டினிக் குறியீட்டில் இவ்வளவு தாழ்வான நிலையில் இருப்பதற்குக் காரணத்தைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. இந்தியக் கிராமங்களைக் கவ்விப் பிடித்துள்ள துயரம்; பொருளாதார வளர்ச்சி விகிதம் பற்றிய ஆரவாரத்திற்கிடையிலேயும், விவசாயத்துறை மிகவும் பின்தங்கியுள்ள பரிதாப நிலை; சாதிய ஒடுக்குமுறை மற்றும் சிறுபான்மையருக்கு எதிரான பாரபட்சங்கள் காரணமாகக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கணிசமான மக்கள் பகுதி புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ள அவலம்; குடும்பத்தில் ஆண்மக்கள் உண்டதுபோக மிச்சமிருப்பதைப் பங்கிட்டுக் கொள்ளும் பெண்களின் உடல்நலம் குன்றல்; அத்தகைய பெண்களுக்குப் பேறுகாலத்தில்கூட ஊட்டச்சத்து குறைவாக அமைவதால் பிள்ளைப்பேற்றின்போதே குழந்தை இறப்பதும், பிறக்கும் குழந்தைகள் சவலையாக இருப்பதுமான சோகம்; எல்லாவற்றுக்கும் மேலாகப் பொது விநியோக (ரேஷன்) முறை, கல்வி, சுகாதாரம் இவற்றுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் அற்பமாகவே அமைந்துள்ளவை. எல்லாம் சேர்ந்துதான், இந்திய மக்களில் பெரும் பகுதியினரைப் பசித்த வயிற்றோடும், நோய்களுக்கு எளிதில் இலக்காகும் சோகைபிடித்த உடல் நிலையோடும் நிறுத்தி வைத்துள்ளன.
பங்குச் சந்தையில் சூதாடுபவர்களில் பெரும்பாலோர் கொழுத்த பணமுதலைகளும், வெளிநாட்டு மூலதனச் சொந்தக்காரர்களும்தான். ஆட்சியாளர்கள் அவர்கள் மீது மட்டுமே பதிந்துள்ள தங்கள் பார்வையைச் சற்றே முகம் திருப்பி, பசித்த வயிறுகளுக்கு மட்டுமே “சொந்தம்’ கொண்டாடும் நம் நாட்டின் பாவப்பட்ட ஜென்மங்களைக் கண் திறந்து பார்ப்பார்களா?
Posted in Agriculture, BSE, Budget, Capital, Currency, Dow, Economy, Employment, EPS, Exchanges, Farmers, Farming, Finance, Hunger, Index, Jobs, Malnutrition, markets, Money, Needy, Poor, Rich, Sensex, Shares, Stocks, Wealthy | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007
அன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’?
உ .ரா. வரதராசன்
“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போற்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.
உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.
1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.
- 1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;
- ஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.
- நிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி!
- இது டாலர் கணக்கில் 944 கோடி.
- இதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;
- டாலர் கணக்கில் இந்தப் பற்றாக்குறை 5,184 கோடியாகும்.
கடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை.
இந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்!)
இப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே!
சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செலாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.
இதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.
இரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.
இந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.
இவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.
நேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.
இரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது! இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது!
இதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்!
இந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை!
இந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை!)
இந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.
1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது! இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.
சென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை!
எனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே!
பொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது!
(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)
Posted in ADR, Agflation, America, APR, Balance, Balance sheet, Balancesheet, Banks, Benefits, Budget, Conversion, Currency, Deficit, Deflation, Dollar, Economy, Exchange, Exports, FDR, Finance, financial, forex, Funds, GDP, Growth, Imbalance, IMF, Impact, Imports, Index, India, Indices, Inflation, Interest, investments, Loans, Loss, markets, MNC, Monetary, Numbers, PC, Policy, Prices, Profit, Rates, RBI, reserves, Return, ROI, Shares, Statistics, Statz, Stocks, Tariffs, Tax, US, USA, Varadharajan, Varadharasan, WB | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007
வங்கிகளில் அரசு தலையீடு?
எஸ். கோபாலகிருஷ்ணன்
வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.
அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.
வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.
இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.
விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.
வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.
பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.
நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.
இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.
அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.
ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.
முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.
இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.
இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?
நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.
(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).
Posted in Agriculture, Assets, Auto, Automotive, Banking, Banks, BOB, Bonds, BSE, Cars, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chit Funds, Chitfunds, Chithambaram, Commerce, Cooperative, Credit, CRR, Deflation, Deposits, Dollar, Economy, Enforcement, Exchange, Farmers, FD, Finance, Financing, fiscal, Govt, HDFC, ICICI, Index, Indices, Inflation, Insurance, Interest, investments, IOB, KVB, Land, liquidity, Loans, markets, Micro-financing, Microloans, Minister, Monetary, Motor, NIFTY, NSE, Overnight, Overnite, Parts, Policy, Property, Rates, RBI, reserves, ROI, Rupee, Rupees, Rupya, SBI, Schemes, Shares, Spare, Stocks, Student, Treasury | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007
பாடாய்ப்படுத்தும் பங்குச்சந்தை!
பங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.
செவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.
கடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.
இந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.
போக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
இப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா?
Posted in ADR, Assets, Biz, Bonds, Brokers, BSE, Commerce, crash, DJIA, Economy, FII, Finance, fiscal, Foreign, Funds, GE, GM, Goldman Sachs, Govt, Index, Indices, Infy, Interest, International, investors, Invsetors, IPO, Loss, markets, Merryll Lunch, MF, MNC, Morgan Stanley, NRI, NSE, PE, PIO, Planning, Portfolio, Profit, Rates, ratio, Shares, Stocks, Traders, Trading, Wipro, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2007
வரலாறு திரும்பிவிடக் கூடாது!
அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம் என்று ஓர் ஆய்வுக் குறிப்பு கூறுகிறது. இப்படி ஓர் ஆய்வுக் குறிப்பைச் செய்திருப்பது ஏதாவது அரசியல் கட்சியா, அரசியல் ஆய்வாளரா அல்லது பத்திரிகையாளரா என்றால் இல்லை. ஒரு நிதி நிறுவனம், அதிலும் ஒரு சர்வதேச வங்கியின் தனியார் நிதி நிறுவனம்தான் இப்படி ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்து, எல்லா நாளேடுகளுக்கும் பத்திரிகைக் குறிப்பாக அனுப்பி இருக்கிறது.
அடுத்த நிதிநிலை அறிக்கையில் பல சமூக நலத் திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மக்களின் நல்லெண்ணத்தை மன்மோகன் சிங் அரசு பெற முடியும் என்று அந்த அறிக்கை யோசனை கூறுகிறது. தங்களது நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற இடதுசாரிகளும் எதிர்க்கட்சிகளும் முட்டுக்கட்டை போடுகின்றன என்கிற ஆதங்கத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கருதுவதாகவும் அந்தக் குறிப்பு மேலும் விவரிக்கிறது.
விஷயம் அத்துடன் முடிந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை. தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனது வளர்ச்சித் திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்த மக்கள் ஆதரவளிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பையும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிரான கொள்கைகளை உடைய இடதுசாரிகளும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கையையும் அந்தக் குறிப்பு கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச நிதி நிறுவனங்களும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் மிகப்பெரிய முதலீடுகளுடன் இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தபோது எழுப்பப்பட்ட முதல் எச்சரிக்கை என்ன தெரியுமா? “அன்னிய நிதி நிறுவனங்களை இங்கே தங்குதடையின்றி செயல்பட அனுமதிக்கும்போது, அவை நமது நாட்டு நிர்வாக விஷயங்களிலும், அரசியலிலும் தங்குதடையின்றி செயல்படும் உரிமையைப் பெற்றுவிடும் என்பதுதான். தங்களது முதலீட்டுக்கான அதிகபட்ச லாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துச் செயல்படும் வியாபார நிறுவனங்கள் அவை என்பதை மறந்துவிடலாகாது!’ என்கிற எச்சரிக்கையை நாடாளுமன்றத்திலேயே பல முதிர்ந்த அரசியல் தலைவர்கள் எழுப்பியது இப்போது நினைவில் நிழலாடுகிறது.
பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் பத்து கோடி ரூபாய் என்று நிதி ஒதுக்கி, போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம், பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்களை வருங்காலத்தில் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்கிவிடாது என்பது என்ன நிச்சயம்? கணிசமான உறுப்பினர்களைத் தங்களது வலையில் வீழ்த்தி, இந்திய அரசையே நமது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஆட்டிப் படைக்க நினைத்தால் அதை எப்படித் தடுக்க முடியும்?
இந்திய அரசியலின் போக்கு எப்படி இருக்க வேண்டும், நமது அரசின் திட்டங்கள் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்திய வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வியாபாரம் செய்ய வருகின்ற அன்னிய நிதி நிறுவனங்களும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் நிச்சயிக்கும் நிலைமை ஏற்படுவது இந்திய இறையாண்மைக்கே ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல்.
மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு, அன்னிய முதலாளிகளால் அன்னிய முதலீட்டாளர்களுக்காக நடத்தப்படும் அரசாக மாறிவிடுமோ என்கிற பயத்தை அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் சுற்றறிக்கை ஏற்படுத்துகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடத்தை நாம் மறந்துவிட மாட்டோம் என்கிற நம்பிக்கைதான் இப்போதைக்கு ஒரே ஒரு ஆறுதல்!
——————————————————————————————————————
அமெரிக்காவைப் பின்பற்றலாமே…!
ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை என்பது பொருளாதார நிபுணர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விஷயமாகி விட்டது.
மற்ற நிதி நிறுவனங்களும், அமைப்புகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒன்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தாலும், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி 2007-08-க்கான வளர்ச்சி 8.5 சதவிகிதம் என்றுதான் அறிவிக்கிறது. கடந்த ஆண்டு 9.4 சதவிகிதமும் அதற்கு முந்தைய ஆண்டு 9 சதவிகிதமும் இருந்த வளர்ச்சி 8.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதே என்று வருத்தப்படத் தேவையில்லை. கடந்த நான்கு ஆண்டு சராசரி வளர்ச்சி 8.6 சதவிகிதம்தான் என்பதால், இந்த வளர்ச்சியே நல்ல அறிகுறி என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த அறிக்கையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், நமது விவசாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு. எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவின் மொத்த வருமானத்தில் 40 சதவிகிதம் இருந்த விவசாயத்தின் பங்கு இப்போது வெறும் 20 சதவிகிதமாகக் குறைந்துவிட்டிருக்கிறது. விவசாய வளர்ச்சி 2.8 சதவிகிதத்திலிருந்து இப்போது 3.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது என்று நாம் பெருமைபட்டுக்கொள்ளலாமே தவிர, அடிப்படையில் விவசாயமும் விவசாயிகளும் மற்ற துறைகளின் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது மிகவும் பின்தங்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி, விவசாயிகளின் பிரச்னைகளை ஆராய சிண்டிகேட் வங்கித் தலைவர் சி.பி. ஸ்வர்ஸ்கர் தலைமையில் அமைத்த குழுவின் அறிக்கையும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. விவசாயிகளுக்கு எளிய முறையில் எப்படிக் கடன் வழங்குவது என்பதைப் பரிசீலித்து, வழிமுறைகளை ஏற்படுத்துவதுதான் இந்தக் குழுவின் நோக்கம்.
தற்போதைய நிலையில் உயர்ந்த கூலியும், அதிகரித்த உர விலையும், போதுமான அளவு தண்ணீர் இல்லாததும் விவசாயிகளை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. விளைபொருள்களுக்குப் போதிய விலை இல்லை என்பது மட்டுமல்ல, அரசுத் தரப்பில் சரியான நேரத்தில், நஷ்டம் ஏற்படாத விலையில் கொள்முதல் நடைபெறாமல் இருப்பதும் விவசாயிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றன.
ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது உணவு உற்பத்தியில் அந்த நாடு தன்னிறைவு அடைவதில்தான் இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதனால்தான், தனது நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை அமெரிக்கா அதிக விலை கொடுத்து வாங்கி கடலில் கொட்டுவது, நெருப்பிட்டுக் கொளுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. விவசாயி தனது விளைபொருள்களை விற்க முடியாமல் நஷ்டப்படக் கூடாது என்பதுதான் அதன் அடிப்படை நோக்கம். மானியமாக அதிகப் பணம் போனாலும், விவசாய உற்பத்தி குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் முனைப்பாக இருக்கின்றன.
8.6 சதவிகித வளர்ச்சி என்று மேலெழுந்தவாறு பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. பெருவாரியான மக்கள் விவசாயம் சார்ந்து கிராமப்புறங்களில்தான் இன்றும் வசிக்கிறார்கள். விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சியும், கிராமப்புற வளர்ச்சியும் அதனால் ஏற்படும் தன்னிறைவும்தான் உண்மையான வளர்ச்சியே தவிர அன்னியச் செலாவணி இருப்பும், மேலெழுந்தவாரியான பொருளாதார வளர்ச்சியும் அல்ல.
தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் அமெரிக்காவையும், வளர்ச்சி அடைந்த நாடுகளையும் பின்பற்றத் துடிக்கும் நமது மத்திய அரசின் பொருளாதார நிபுணர்கள், இந்த விஷயத்தில் அமெரிக்காவைப் பின்பற்ற முயலாதது ஏன்? நல்ல விஷயங்கள் நமக்கு வேண்டாம் என்பதாலா?
——————————————————————————————————————
Posted in Agriculture, Assets, bank, Banking, Banks, Big, City, Commerce, Deflation, Dept, Development, Economy, Farming, Foreign, GDP, Govt, Growth, History, Index, Indices, Inflation, Loans, Metro, nexus, Opportunity, Policy, Poor, RBI, Recession, Rich, Rural, solutions, Stagflation, Suburban, Syndicate, Village, WB, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007
பலே தென்னிந்தியா!
“”வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்றது அந்தக் காலம். “”வடக்கு வாடுகிறது, தெற்கு ஓடுகிறது” என்பதே இந்தக் காலம்.
இந்தியத் தொழிலகங்களின் இணையம் (சி.ஐ.ஐ.) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் காணப்படும் பொருளாதார, சமூக அளவீடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்கள் கல்வி, வருமானம், நபர்வாரி மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றில் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பது புலனாகிறது. அத்துடன் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களின் எண்ணிக்கையும் இந்த மாநிலங்களில், வட இந்திய மாநிலங்களைவிடக் குறைவாக இருக்கிறது.
கல்வி, சுகாதாரம், தொழில், விவசாயம் ஆகியவற்றில் பாரம்பரியமாகவே தென் மாநிலங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து வருகின்றன. அதிலும் அரசு நிர்வாகம் என்பது தென் மாநிலங்களில் வட இந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாகவே இருக்கின்றன.
தகவல் தொழில்நுட்பத் தொழில்களில் அடுத்த தலைமுறைத் தொழில்களை ஊக்குவிக்கவும், சென்னை தவிர மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற இரண்டாவது நிலை நகரங்களுக்கு அவற்றைக் கொண்டு செல்லவும் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
வேளாண் தொழிலிலும் வேளாண்மை சார்ந்த தொழில்களிலும் முதலீட்டை ஊக்குவிக்க ஆந்திரம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடகமும் கேரளமும் தங்கள் மாநிலங்களில் ஏற்கெனவே உள்ள தொழில்களை வலுப்படுத்துவதுடன் சுகாதாரம் சார்ந்த சுற்றுலாவை வலுப்படுத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. புதுச்சேரியும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சிறு தொழில்களை வளப்படுத்தவும் முதலீடுகளுக்கு ஊக்குவிப்பை அளிக்கிறது.
மோட்டார்வாகனத் தொழிற்சாலைகள், கணினிசார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தல்-தின்பண்ட தயாரிப்பு ஆலைகள், மருந்து-மாத்திரை தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றைத் தங்கள் மாநிலங்களுக்கு ஈர்த்துவிட வேண்டும் என்ற ஆரோக்கியமான போட்டி தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றிடையே தீவிரம் அடைந்திருக்கிறது.
இதையொட்டியே விமான நிலைய விரிவாக்கம், துறைமுக மேம்பாடு, மேம்பாலங்கள், நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகள், புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றைத் தங்கள் மாநிலங்களுக்கென்று பெற இவை போட்டிபோடுகின்றன.
மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப்-ஹரியாணா-புதுதில்லி ஆகிய பாரம்பரியமான வளர்ச்சிப் பிரதேசங்களும் தொழில் முதலீட்டுக்கான பந்தயத்தில் பின்தங்க விரும்பாமல் அந்நிய நேரடி முதலீட்டையும் உள்நாட்டு முதலீடுகளையும் சலுகைகளையும், வரிவிலக்குகளையும் அளித்து ஈர்த்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) அதன் தென்னிந்தியக் கிளை மூலம், தென்னிந்தியாவிலேயே இதுவரை தொழில் வளர்ச்சியில் அதிகம் வளர்ச்சி காணாத பகுதிகளுக்கு முக்கியத்துவம் தர தனித்திட்டம் வகுத்து வருகிறது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், வடக்கு கேரளம், ஆந்திரத்தின் அனந்தப்பூர்-சித்தூர்-கடப்பை மண்டலம், கர்நாடகத்தின் வடக்குப் பகுதி ஆகியவற்றுக்கு ஏற்ற தொழில்பிரிவுகளையும் முதலீட்டு வசதிகளையும் அடையாளம் காணும் பணியைத் தென் மண்டல இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தொடங்கியிருக்கிறது. இதற்கு மாநில அரசுகள் மட்டும் அல்லாமல், சம்பந்தப்பட்ட பகுதியின் தொழில்-வர்த்தக சபைகளும், தன்னார்வக் குழுக்களும் உதவிக்கரம் நீட்டினால் தொழில்வளம் என்பது சமச்சீராகப் பரவி வளத்தை ஏற்படுத்தும்.
எப்போதும் இல்லாத வகையில் தென் மாநிலங்களுக்கு அரசியல் ரீதியாகவும் இப்போது அதிக முக்கியத்துவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் வரலாறு நம்மை வாழ்த்தும்.
Posted in Agriculture, Auto, Commerce, Compensation, Consumer, Customer, Development, Economy, Econpmy, Education, Employment, family, Finance, GDP, Globalization, Govt, Growth, Income, Index, Indicators, Industry, Infrtastructure, Jobs, Malls, Motor, North, Power, Ranks, Region, Roads, South, States, Statistics, Statz, Tour, Tourism, Tourist, Transport, Zones | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007
முதலீடுகளுக்கு காத்திருக்கும் தொழில்கள்
எஸ். கோபாலகிருஷ்ணன்
சமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இவர்கள் யார்? “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.
இந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.
அந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.
இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது!
ஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன? மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.
அவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன? எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது?
இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன?
அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.
அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.
கடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.
மாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.
உதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.
ஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.
இந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.
சரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன? மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.
அடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).
ஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.
இன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.
இந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.
தற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.
இந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.
கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.
(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது
மேலாளர்.)
Posted in Analysis, Auto, Backgrounders, Bonds, Brazil, BRIC, BSE, Bus, Cars, China, Defaltion, Deflation, Diversify, ECE, Economy, EEE, Electrical, Electronics, Emerging, Employment, Exchanges, Exports, FDI, FEMA, FERA, FII, Finance, Funds, GDP, Globalization, Growth, Imports, Index, Industry, Inflation, InfoTech, Instrumentation, investments, job, Leather, Luxury, Manufacturing, markets, Metro, MNC, Model, Motors, NIFTY, NSE, Op-Ed, Opportunities, Options, Outsourcing, pension, Primers, Recession, Retirement, revenue, Risk, Russia, sectors, service, Shares, Stagflation, Stats, Stocks, Taiwan, Tech, Technology, Telecom, Textiles, Trucks | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007
சீனப் பங்குச் சந்தை விலையில் பாரிய வீழ்ச்சி
 |
 |
பங்குச் சந்தையின் அடிப்படை இன்னமும் பலமாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் |
சீனப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பாரிய விலை வீழ்ச்சியை அடுத்து உலகெங்கும் பங்கு விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சீனப் பங்குச் சந்தையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சி இதுவாகும்.
ஷாங்காய் பங்குச் சுட்டெண்ணில் ஏற்பட்ட 9 வீத வீழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கு 100 மில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் தடவையாக இந்தச் சுட்டெண்கள் 3000 புள்ளிகளை விட அதிகமாக வளர்ந்த மறுதினம், இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இரு வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலைக்கு இந்தச் சுட்டெண்கள் தற்போது சென்றுள்ளன.
Posted in Bonds, BSE, China, Currency, DJIA, Economy, Exchange, Finance, Futures, Global markets, Hongkong, Index, Indices, markets, NSE, Options, plunge, Prices, Profits, Shanghai, Shares, Shenzhen, Stock Exchange, Stocks, World | 1 Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007
மீண்டும் பணவீக்கம்
எஸ். ஜானகிராமன்
மீண்டும் பணவீக்கப் பிரச்சினை இந்தியப் பொருளாதாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
1960ல் தொடங்கி 2000 – 01ஆம் ஆண்டுவரை 8 முதல் 9 சதவீதமாக இருந்த பணவீக்க அளவு, மத்திய அரசின் விரைவான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் 4லிருந்து 5 சதவீதமாகக் குறைந்தது.
தற்போது மிக அதிக அளவிலான பணஅளிப்பு மற்றும் வங்கிக்கடனில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக பணவீக்கம் 6 சதவீதத்தைத் தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
பங்குச் சந்தையின் தொடர்ந்த ஏறுமுகம் மற்றும் அசையா சொத்துகளின் அபரிமித விலைஉயர்வு ஆகியன இதன் விளைவே என்பதில் ஐயமில்லை.
தற்போதைய பணவீக்கப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் மத்திய அரசு, அதாவது நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் எதிர்கொண்டுள்ள சவால்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
ஒன்று, இந்த பணவீக்க உயர்வை எவ்வாறு கட்டுப்படுத்துவது; அடுத்து 9 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காதவண்ணம் பணவீக்கத்தை எங்ஙனம் கட்டுப்படுத்துவது என்பதாகும்.
அடிப்படையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு பொதுவாக நான்கு வித நடவடிக்கைகளை எடுப்பதுண்டு. அவை
- பணக்கொள்கை,
- நிதிக்கொள்கை,
- வர்த்தக மற்றும்
- செலாவணிக் கொள்கை என்பவை ஆகும்.
பணக்கொள்கை தொடர்பான நடவடிக்கையின் மூலம் பண அளிப்பையோ அல்லது வட்டி விகிதத்தையோ கட்டுப்படுத்த இயலும்.
நிதிக்கொள்கை தொடர்பான நடவடிக்கையின் மூலம் தீர்வை தளர்வுகளுக்கு வழிவகுப்பது; வர்த்தகக் கொள்கையின் மூலம் ஏற்றுமதி, இறக்குமதிக் கட்டுப்பாடு மற்றும் தளர்வுக்கு வழிகோலுவது; செலாவணிக் கொள்கையின் மூலம் ரூபாய் மதிப்பை வலுப்படுத்தி, இறக்குமதிப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது ஆகும்.
பணவீக்கத்திற்குக் காரணமான பணசுழற்சி மற்றும் பண உருவாக்கம், பொருள்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது என்பது பரவலான கருத்து. ஆகவே பணவீக்கப் பிரச்சினையை பணவளர்ச்சியை மட்டுப்படுத்துவதன் மூலமோ அல்லது வட்டி விகிதத்தின் மூலமோதான் கட்டுப்படுத்த இயலும்.
அண்மையில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கையும் இதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
அதேவேளையில், தற்போதைய பணவீக்கம் சந்தைத் தேவையின் அடிப்படையில் எழுந்த காரணியாக இல்லாமல் சந்தை அளிப்பின் பின்புலத்தால் எழுந்த காரணியாக இருப்பதால் இதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி பெரிய அளவில் பங்களிப்பது என்பது இயலாத செயலாகும்.
ஆகவே நிதியமைச்சகத்தின் நிதிக்கொள்கை தொடர்பான நடவடிக்கைகள் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
சிமெண்ட், அலுமினியம், ரசாயனப் பொருள்கள் மற்றும் சில குறிப்பிட்ட மூலதனப் பொருள்களின் மீதான சுங்கத் தீர்வையை ஏற்கெனவே கணிசமாகக் குறைத்ததன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் நிதியமைச்சகமும் களத்தில் இறங்கியுள்ளது ஆரோக்கியமான சமிக்ஞையாகும்.
இதன் மூலம் உயரும் பணவீக்கத்தின் எதிர்மறையான தாக்கத்தை வெகுவாகக் குறைக்க முடியும்.
இதுபோன்ற பன்முக நடவடிக்கைகளால் சில நேரங்களில் பணவீக்கம் காணாமல்போய் பணவாட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.
ஆனால் இன்றைய அளவில் பணவீக்கம் என்பது உலகளாவிய பிரச்சினை. வளர்ந்த, வளர்ச்சியடைந்து வரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் உள்ள மத்திய வங்கிகள் அனைத்தும் பணக்கொள்கையின் மூலம் பணவீக்கத்தை அணுகும் போக்கு தொடர்ந்து வருகிறது.
அதேவேளையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவிகிதத்தை உயர்த்துவது என்ற வழக்கமான நடவடிக்கையைத் தாண்டி சிந்திக்கவும், செயல்படவும் தொடங்க வேண்டியது அவசியமாகும். இந்தியா இதற்கு விதிவிலக்கல்ல.
மேலும் வட்டி விகித உயர்வு என்ற நடவடிக்கையைப் பெருமளவு சார்ந்திருப்பது என்பது பொருளாதாரத்தை இறக்கநிலைக்குக் கொண்டு செல்லும் என்ற வாதத்தை இந்தியா கடந்த காலங்களில் நிரூபணமாக்கியுள்ளது.
பொருளாதார உண்மை நிலவரம் பற்றிய முழுமையான தகவல்கள் ரிசர்வ் வங்கியிடம் இல்லாதது பணக்கொள்கையைக் கொண்டு மட்டும் தற்போதைய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என்ற வாதத்தைப் பொய்யாக்குகிறது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் இந்தியாவின் 10 சதவீத வளர்ச்சி இலக்கு பாதிக்கப்படும் என்ற ஐயத்துக்கும் அடிப்படை இல்லை.
இருப்பினும் 9 சதவீத பொருளாதார வளர்ச்சி, 6 சதவீத பணவீக்கம் என பயணத்தைத் தொடங்கியுள்ள இந்தியா, 10 சதவீத வளர்ச்சி மற்றும் 2 சதவீத பணவீக்கம் என 10 ஆண்டுகளாகப் பயணத்தைத் தொடர்ந்து வரும் சீனாவிடமிருந்து கற்க வேண்டியது நிறையவே உள்ளது.
(கட்டுரையாளர்: விரிவுரையாளர், திருவள்ளூர்).
Posted in Analysis, APR, Background, Banks, BSE, Business, Commerce, Commerce Goals, Customs, Deflation, Economy, Exports, FDI, Finance, Finance Ministry, Financial Policy, Foreign Exchange, Imports, Index, India, Inflation, Interest Rates, Invsetments, Loans, Monetary Policy, NSE, Op-Ed, Opinion, Primer, RBI, Recession, Reserve Bank of India, Rupee, Shares, Stock market, Tax | Leave a Comment »