Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ilaiyaraja’ Category

Balu Mahendira’s Vanna Vanna Pookkal – Interview with Producer Thaanu

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

திரைப்பட வரலாறு :(881)
“வண்ண வண்ண பூக்கள்”
பாலு மகேந்திரா டைரக்ஷனில் தாணு தயாரித்த படம்


பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பாலுமகேந்
திராவின் இயக்கத்தில், “வண்ண வண்ணப்பூக்கள்” என்ற படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார்.

இந்தப் படத்தை தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி தாணு கூறியதாவது:-

பாலு மகேந்திரா சந்திப்பு

“எனது அலுவலகம் அப்போது தி.நகரில் இருந்தது. ஒருநாள் காலை நான் அலுவலகத்தில் இருந்தபோது, டைரக்டர் எம்.ஆர்.பூபதி டைரக்டர் பாலு மகேந்திராவை அழைத்துக்கொண்டு வந்தார்.

நான் அவர்களை வரவேற்று உபசரித்தேன்.

பாலுமகேந்திரா இயக்கிய படங்களை பார்த்திருக்கிறேனே தவிர, அவர் இயக்கிய படம் எதையும் தயாரித்ததில்லை. என்ன நோக்கத்துக்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்று நான் யோசித்த நேரத்தில் பாலு மகேந்திராவே என்னிடம், “தாணு சார்! நான் இதுவரை இயக்கிய படங்களில் ஒரு கமர்ஷியல் தயாரிப்பாளரை தேர்வு செய்யாமல் இருந்து விட்டேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு. அதன் விளைவாக இன்று நான் கஷ்டத்தை அனுபவிக்கும் நிலைக்கு வந்துவிட்டேன். எனது ஆபீசுக்கு 6 மாத வாடகை பாக்கி என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. இந்த நேரத்தில் எனக்கு ஒரு படம் கொடுத்தீர்களானால், காலத்துக்கும் மறக்கமாட்டேன். இப்போது நீங்கள் எனக்கு அட்வான்சாக ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், அது எனக்கு ஒரு லட்சம் மாதிரி” என்று கூறினார்.

ஒரு பெரிய இயக்குனர் இப்படி தன் நிலை பற்றி வெளிப்படையாகப் பேசியதில், எனக்கு மனம் பதறிவிட்டது. அப்போதே அவரிடம், “சார்! என் தயாரிப்பில் ஒரு படம் இயக்குங்கள்” என்றேன்.

“ஒரு கதை வைத்திருக்கிறேன். 26 லட்ச ரூபாய் பட்ஜெட். படத்தில் விக்னேஷ், ஆதித்யா, மவுனிகா, வினோதினி நடிக்கிறார்கள். இவர்களுக்கு இந்தக் கதையை சொல்லி, வீட்டிலேயே ரிகர்சல் வைத்து ஷுட் பண்ணியும் இருக்கிறேன். ஏற்கனவே கதையின் கேரக்டர்கள் இவர்களுக்கு அத்துபடி என்பதால், சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்துவிடுவேன்” என்றார். அதோடு அவர் சொன்ன நட்சத்திரங்கள் நடித்த சில காட்சிகளுக்கான ஸ்டில்களையும் காண்பித்தார்.

பெரிய டைரக்டர் இப்படி சொன்னதும் நான் உடனே `கேஷ் பாக்சை’ திறந்து ஒரு தொகையை அவர் கையில் கொடுத்து “கவலைப்படாதீங்க சார்! நாம படம் பண்றோம்” என்றேன்.

இளையராஜா

அப்போதே அவர் படத்தின் டெக்னிஷியன்கள் பட்டியலையும் சொன்னார். அதில் இசை என்ற இடத்தில் இளையராஜா பெயர் இருந்தது. அந்தப் பெயரை பார்த்ததும் என் மனது மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறந்தது.

என் மகிழ்ச்சிக்குக் காரணம் இருந்தது. என் தயாரிப்பில் இரண்டாவது படமாக உருவான “நல்லவன்” படத்துக்கு இசைஞானி இளையராஜாவே இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினேன். அதற்காக அவரது தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரனுடன் சென்று சந்தித்தேன். என் விருப்பம் சொன்னதும் நான் எதிர்பார்த்திராத ஒரு தொகையை சம்பளமாக சொன்னார். அவர் கேட்ட தொகையினால், நான் அதிர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டவர், “பொட்டி (ஆர்மோனியம்) போடத் தெரியாதவங்களே உங்க கிட்ட அதிகம் கேட்டு வாங்கும்போது நான் கேட்டாலென்ன?” என்றார்.

அவர் குறிப்பிட்டுச் சொன்ன அந்த இசையமைப்பாளருக்கு, நான் பலமுறை பல சூழ்நிலைகளில் உதவியிருக்கிறேன். அவர் இயக்கிய முதல் படம் ரிலீசின்போது பணப்பிரச்சினை. படத்தை வெளியிட முடியாத நிலையில் என்னிடம் வந்தார். 11/2 லட்சம் ரூபாய் பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து, ரிலீசுக்கு ஏற்பாடு செய்தேன்.

அடுத்த படத்துக்கு பூஜை போடும்போதே பிரச்சினை. பூஜைக்கான பணத்துக்காக எனக்கு போன் போட்டார். அப்போது எனது வினியோகத்தில் ஆவடி ராமரத்னா தியேட்டரில் “எங்கேயோ கேட்ட குரல்” படம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே போய் 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தேன். மூன்றாவதாகவும் ஒரு படத்துக்கு ரிலீசின்போது பிரச்சினை நேர, அப்போது 2 லட்சத்துக்காக ஓடோடி வந்தார். அதையும் பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து சரி செய்தேன்.

இப்படி வெவ் வேறு சமயங்களில் என்னிடம் உதவி பெற்றவர், நான் தயாரிப்பாளர் ஆனதும் “உங்கள் படத்துக்கு நானே இலவசமாக இசையமைத்துத்தருவேன். உங்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இதுவாகத்தான் இருக்கும்” என்று உருக்கமாகப் பேசியதன் பேரில் இசை வாய்ப்பை அவருக்கு வழங்கினேன். அப்போதும் அவர் தனது அப்பாவுக்கு உடல் நலமில்லை என்று கூறி “ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதும்” என்றார்.

இதுவரை நன்றாக இருந்த அவர் பேச்சு, படத்தின் வியாபாரத்தை நான் பேசி முடித்தபோது மாறிவிட்டது. படம் நல்ல விலைக்கு போயிருப்பதை தெரிந்து கொண்டவர், படத்தின் ஹீரோ வாங்கும் சம்பளம் அளவுக்கு தனக்கும் தந்தால்தான் ஆயிற்று” என்று அடம் பிடித்தார். “இது கூட நானல்ல! என் மனைவியின் கட்டாயத்துக்காகவே வாங்க வேண்டியிருக்கிறது” என்று அப்போதும் அவர் சொன்னதுதான் ஹைலைட்.

இந்த விஷயம் இசை ஞானியின் காதுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர் எடுத்த எடுப்பில் அதிக சம்பளம் கேட்டு அதிர வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு அவரை வற்புறுத்த விரும்பாமல் அப்போது நான் திரும்பி வந்துவிட்டேன்.

அதற்குப்பிறகு இப்போதுதான் அவரது இல்லத்தில் காலெடுத்து வைத்திருக்கிறேன். அவருக்கே உரிய பாணியில் வரவேற்றவர், “உங்களுக்கு இசையமைக்கிறேன். டைரக்டர் யார்?” என்று கேட்டார்.

நான் பாலுமகேந்திராவின் பெயரை சொன்னேன்.

இப்போது அவர் முகத்தில் சின்னதாய் ஒரு மாறுதல் தெரிந்தது.

“தாணு! `ரத்த சம்பந்தலு’ன்னு ஒரு தெலுங்குப்படத்தை பாலுதான் பண்ணினார். பானுசந்தர் – அர்ச்சனா நடிச்சாங்க. 2 வருஷம் ஆகியும் படம் இன்னும் ரிலீஸ் ஆகலை.”

பதிலுக்கு நான், “சார்! இப்ப அவரே என்கிட்ட அவரோட நிலை பற்றி உருக்கமா சொன்னதாலதான் அவரை வெச்சு படம் பண்றதா வாக்குக் கொடுத்திட்டு அட்வான்சும் கொடுத்திட்டு நேரா உங்க கிட்ட வந்திருக்கிறேன்” என்றேன்.

அப்போதும் அவர் இசையமைக்க யோசித்தார்.

நான் பலவாறாக சமாதானப்படுத்தி, அவர் மனதை மாற்றினேன்.

இளையராஜா இசையமைக்க சம்மதம் தந்ததும் மறுநாளே பாலு மகேந்திரா இளையராஜாவை சந்தித்தார். தனது படத்தின் கதை பற்றி விளக்கினார்.

மெட்டுகள்

மறுநாள் காலை 7 மணிக்கு பாடல் கம்போசிங்கிற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள `பிஷர்மேன் கேவ்’ போனோம். 8 1/2 மணிக்கு ஊதுபத்தி ஏற்றி வைத்து ஆர்மோனியத்தை தொட்டதும் முதல் பாட்டு `கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி’ என்ற பாட்டு பிய்த்துக்கொண்டு வந்தது. அடுத்து `இளம் நெஞ்சே வா’ பாட்டு. அதையடுத்து `சின்னமணி கோவிலிலே’, `ஜின்ஜினாக்கடி’ என தொடர்ந்து மதியத்திற்குள் 6 பாடல்களுக்கான அற்புதமான டிïன்கள் போட்டுக் கொடுத்து விட்டார், இளையராஜா.

அவர் ஆர்மோனியத்தில் இசையமைத்தபோது பாலு மகேந்திரா ஒரு படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை பெயிண்ட் பண்ணி எனது அன்பளிப்பாக இளையராஜாவுக்குக் கொடுத்தேன். இந்த பெயிண்ட் நூறு வருஷத்துக்கும் மேலாக புகைப்படத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இளையராஜா தன்னை மறந்து இசையமைக்க, அவரது தாயார் தனது மகனை பார்த்து ரசிப்பது போல அந்த புகைப்படம் இப்போதும் அவரது இல்லத்தில் இருக்கிறது.

திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கியது. பாலு மகேந்திராவிடம் ஏற்கனவே இந்த கதைக்காக நடிப்புப் பயிற்சி பெற்ற நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். 10 நாள் படப்பிடிப்பு தடங்கலின்றி போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடீர் என்று ஒரு சிக்கல் ஏற்பட்டது. நடிகை அர்ச்சனாதான் அந்த சிக்கலை உருவாக்கினார்.

தேசிய விருது கிடைத்தது!

பாலு மகேந்திரா டைரக்ஷனில் கலைப்புலி தாணு தயாரித்த “வண்ண வண்ணப்பூக்கள்” படத்துக்கு பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்தப் படத்தைத் தயாரித்தபோது, சில சிக்கல்களை தாணு சந்திக்க வேண்டி இருந்தது.

அதுபற்றி அவர் கூறியதாவது:-

அர்ச்சனா கோபம்

“வண்ண வண்ணப்பூக்கள்” பத்தாவது நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, நடிகை அர்ச்சனா வேகமாக காரில் இருந்து இறங்கி செட்டுக்குள் வந்திருக்கிறார். “நான் சிபாரிசு செய்த ஆதித்யாவை, விக்னேஷ் நடிக்கிற கேரக்டரில் நடிக்க வைக்கவில்லையே, ஏன்?” என்று பாலு மகேந்திராவிடம் கோபம் கோபமாக பேசிவிட்டுப் போயிருக்கிறார்.

இந்த சம்பவம், என் காதுக்கு வந்திருந்தது.

மறுநாள் காலையில் டைரக்டர் பாலு மகேந்திரா என்னைப் பார்க்க வந்தார். “சார்! நான் எதிர்பார்த்த அளவுக்கு விக்னேஷ் நடிப்பு அமையவில்லை. அதனால் அவரை மாற்றிவிட்டு, வேற ஹீரோவைப் போடலாம்” என்றார்.

முந்தின நாள் அடித்த புயலுக்கு இன்று ரியாக்ஷனா? நடந்தது எதுவும் எனக்குத் தெரியாதது போல காட்டிக்கொண்டு, “நடிகர்களுக்கெல்லாம் ஏற்கனவே பயிற்சி கொடுத்து வைத்திருந்ததாகத்தானே சொன்னீர்கள்! இப்போது படப்பிடிப்பு தொடங்கி 10 நாள் கழித்து, நடிப்பு வரவில்லை என்று சொன்னால் எப்படி?” என்று கேட்டேன்.

எனக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பதை புரிந்து கொண்டவர், “அந்தப் பையனுக்கு காய்ச்சல். குளிர் வந்து கஷ்டப்படற மாதிரி தெரியுது” என்றார்.

புது ஹீரோ

இதற்கு மேல் அவரிடம் பேசிப் பயனில்லை என்று புரிந்து கொண்டு, “இப்போது, புதிதாக ஒரு ஹீரோ வேண்டும், அதானே சார்?” என்றேன். “அதேதான் சார்” என்றார், அவரும்.

அப்போது “வைகாசி பொறந்தாச்சு” என்ற படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அதுதான் முதல் படம் என்பதால், எங்கள் படத்தில் நடிக்க வைக்க விரும்பி பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜனை சந்தித்தேன்.

விஷயத்தைச் சொன்னதும் அவருக்கு சந்தோஷம். “உங்கள் படங்களின் பிரமாண்ட விளம்பரங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். “வண்ண வண்ணப் பூக்கள்” படத்துக்கான உங்கள் விளம்பரம் பார்த்தபோது “இந்த படத்தில் என் பையன் இருந்தால் எப்படிப்பட்ட `பப்ளிசிடி’ கிடைத்திருக்கும்” என்று கூட யோசித்திருக்கிறேன். இப்போது உங்களின் அதே படத்துக்கு என் பையனை அழைக்கிறீர்கள். அவன் இனி உங்க வீட்டுப்பிள்ளை” என்று அப்போதே சம்மதம் தந்தார்.

பிரசாந்த் நடிப்பில் படப்பிடிப்பு தொடர்ந்தது. பாதிப்படம் வளர்வதற்குள் பாலுமகேந்திரா முதலில் சொன்ன முழுப்படத்துக்குமான பட்ஜெட்டை தாண்டியது. முழுப்படத்துக்கு அவர் போட்டுக்கொடுத்த பட்ஜெட் 26 லட்சம் ரூபாய். இப்போதோ பாதி படத்துக்குள் 27 லட்சம் செலவாகியிருக்கிறது.

10 நாள் படப்பிடிப்பை நடத்திவிட்டு, மறுபடியும் அதே காட்சிகளை படம் பிடித்ததில் செலவு அதிகமாகியிருக்கிறது.

பாடல் காட்சி

படத்தில் வரும் “இளம் நெஞ்சே வா” பாட்டு, சைக்கிள் ஓட்டிக்கொண்டே பிரசாந்த் பாடும் பாட்டு. இந்தப் பாடல் பதிவு நடந்த நேரத்தில், நான் கோவையில் இருந்தேன். இப்போது ஒகனேக்கல்லில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தபோது பாட்டைக் கேட்கிறேன். எனக்கு அதிர்ச்சி. உடனே நான் டைரக்டரிடம், “சார்! இந்தப்பாட்டு சைக்கிளில் போகிற மாதிரியாக வரும் பாட்டுத்தானே! அன்றைக்கு ராஜா சார் இந்தப்பாட்டுக்கு போட்ட டிïன் இது இல்லையே! இது நடந்து போகும்போது பாடுகிற மாதிரியல்லவா இருக்கிறது” என்று கேட்டேன்.

நான் இப்படிக் கேட்டதும் பாலு மகேந்திரா கண் கலங்கி விட்டார். “சார்! ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு! 3 நாளைக்கு முன்னாடி திடீர்னு என் அப்பா இறந்து போனதால், பாட்டெழுத வந்த வாலி சாரிடம் `டிïன் கேசட்டை’ மாற்றிக்கொடுத்து விட்டேன்” என்றார்.

என்றாலும் ஜேசுதாஸ் பாடிய அந்தப்பாடல் `ஸ்லோ மெலடியிலும்’ கேட்க இனிமையாகவே அமைந்திருந்தது.

ரூ.60 லட்சம்

ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. 26 லட்சத்தில் போடப்பட்ட பட்ஜெட், 60 லட்சத்தில் வந்து நின்றிருந்தது! அதோடு படத்தில் ஏற்கனவே சொன்ன காமெடி சீன் எதுவும் எடுக்காமல் விட்டுவிட்டார்.

படம் இளையராஜாவின் பின்னணி இசைக்காக (ரீ ரிக்கார்டிங்) வந்தது. நான் இசைக் கூடத்தில் இளையராஜாவை சந்தித்தேன். என்னைப் பார்த்ததுமே, “என்ன தாணு! நான் சொன்னது நடந்ததா?” என்று கேட்டார்.

இசை அமைக்க ஒப்புக்கொண்டபோது, “இந்தப் படத்தால் ரொம்ப கஷ்டப்படுவீங்க” என்று அவர் சொன்னது என் நினைவில் இருந்தது. பட்ஜெட்டைவிட இரண்டு மடங்கு செலவானதைத் தெரிந்து கொண்டுதான் இளையராஜா இப்படிக் கேட்டார்.

நான் அவரிடம், “நீங்க சொன்னீங்க. நானும் படத்தை எடுத்து முடிச்சிட்டு வந்துட்டேன்” என்றேன்.

படம் தயாரானதும் கலைஞருக்கு போட்டுக்காட்டினேன். படம் முடிந்ததும் “இளமை எழுதிய ஓவியம்; காமிரா எழுதிய காவியம்” என்று பாராட்டி, எழுதித் தந்தார்.

தேசிய விருது

படம் ரிலீசானபோது வசூல் ரீதியாக தோல்விப்படமானது. எனக்கும் கணிசமான நஷ்டம். ஆனாலும் சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான மத்திய அரசின் “தேசிய விருது” கிடைத்து என் நஷ்டத்தை மறக்க வைத்தது.

விருது பற்றிய தகவல் கிடைத்ததும் கலைஞரை சந்தித்தேன். “வருக, வருக! வாழ்த்துக்கள்” என்றார். அப்போது முரசொலி பதிப்பகத்தில் இருந்து வந்து கொண்டிருந்த “தமிழன்” நாளேட்டில் இந்த விருது செய்தியை தலைப்புச் செய்தியாக்கினார்கள்.

படம் விருது பெற்ற பிறகு என்னை சந்தித்த பத்திரிகையாளர்களிடம், “பங்கு பெற்ற கலைஞர்களுக்கு களிப்பை தந்த படம். வினியோகஸ்தர்களுக்கு கவலையை தந்த படம்” என்று சொன்னேன்.

நான் இப்படி சொன்னதற்காக பாலு மகேந்திரா என்னிடம், “இப்படி சொல்லியிருக்க வேண்டுமா?” என்று வருத்தப்பட்டார். நான், “உண்மையைத்தானே சொன்னேன்” என்று அவருக்கு வருத்தத்துடன் மறுமொழி சொன்னேன்.

காயத்துக்கு மருந்து

என்றாலும் டெல்லியில் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமனிடம் சிறந்த பிராந்திய படத்துக்கான தேசிய விருது பெற்றபோது, இந்தப் படத்தயாரிப்பில் ஏற்பட்டிருந்த என் மனக் காயத்துக்கு மருந்து தடவியது போலிருந்தது.”

இவ்வாறு தாணு கூறினார்.

Posted in Balu Mahendhira, Balu Mahendira, Balu mahendra, Balu Mahenthira, Balu Mahenthra, Cinema, Dhaanu, Dhanu, Films, Ilaiaraja, Ilaiyaraaja, Ilaiyaraja, Interview, IR, Movies, Producer, Thaanu, Thanu | Leave a Comment »

‘TV Gopalakrishnan is my Guru’ – Ilaiyaraja

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை: டி.வி.கோபாலகிருஷ்ணன் நெகிழ்ச்சி

“மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை’ என்று இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணனின் 70 ஆண்டு இசை வாழ்க்கையை பாராட்டும் வகையில் அவரது சிஷ்யர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில், “குரு சேவா 70′ நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் “ஸ்கார்ப்’ அமைப்பிற்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். “யுவர் வாய்ஸ்’ நுõலினை டி.வி.கோபாலகிருஷ்ணன் வெளியிட இசையமைப்பாளர் இளையராஜா பெற்றுக் கொண்டார். “தி கிங் ஆப் பெர்கூசன்மிருதங்கம்’ புத்தகத்தை மியூசிக் அகடமி தலைவர் என்.முரளி வெளியிட கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா பெற்றுக் கொண்டார். “மகிமா’ இசை “சிடி’யை இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா வெளியிட கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன் பெற்றுக் கொண்டார்.

கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பேசுகையில், “இசையின் அடிப்படையை தெரிந்து கொண்டால் எல்லா இசையும் ஒன்று தான். தென்னிந்திய இசையிலிருந்தே எல்லா இசைகளும் வருகின்றன. டி.வி.கோபாலகிருஷ்ணன் பல இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார்’ என்றார். இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா பேசுகையில், “தனது திறமையால் முன்னேறி, பல்வேறு திறமையான இசைக் கலைஞர்களை உருவாக்கி வருகிறார். அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம்’ என்றார்.

சென்னை சபாக்கள் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், “நாரதகான சபா ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் பல வித்வான்களை அறிமுகப்படுத்தி, அவர்களுடன் உட்கார்ந்து வாசித்து, அவர்களையும், எங்கள் சபாவையும் வளர்த்த பெருமை டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு. அவர் இசை உலகிற்கு செய்த பணி மகத்தானது’ என்றார்.

இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், “கம்ப்யூட்டர், கிரிக்கெட் உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு, இசையை மட்டும் எடுத்து விட்டால் உலகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். நான் சினிமாவில் பிரபலமாக இருந்தபோது, இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரையும், மீண்டும் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எனக்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் சங்கீதம் கற்றுத் தந்திருக்கிறார். சங்கீத உலகிற்கு அவர் போல ஒருவர் கிடைப்பது அபூர்வம்’ என்றார்.

கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன், கர்நாடக கலாசார அமைச்சர் பேபி, மியூசிக் அகடமியின் தலைவர் என்.முரளி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையாற்றிய இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன், “மனிதனுக்கு புத்தி தான் வழிகாட்டி. மனது நல்லபடியாக இருக்க வேண்டும். அதற்கு இசை அவசியம். மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை. ஒரு பாடலை கேட்கும் போது, அதோடு உங்கள் குரலில் பாடி வருகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் என்றும் இசை பாடிக் கொண்டிருக்க வேண்டும்’ என்றார்.

Posted in Audio, Bala murali krishna, Balamurali krishna, Balamuralikrishna, BGM, Carnatic, CD, Chennai, Cinema, City, Classical, Events, Films, Gopalakrishnan, Guru, Guru Seva 70, Ilaiyaraja, ilayaraja, Instructor, IR, Kalakshethra, Kalasethra, Kalasetra, Kalashethra, Kalashetra, Live, Madras, MD, Movies, music, NGO, Performance, Raja, release, SCARF, service, Shows, Stage, Teacher, Theater, Theatre, TV Gopalakrishnan, TVG, Your voice | Leave a Comment »

Ilaiyaraja’s son & Music Director Yuvan Shankar Raja files for Divorce

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 7, 2007

Yuvan shankar raja marriage Wedding snapஇளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா விவாகரத்து வழக்கு : விருப்பத்துடன் பிரிகிறார்கள்

சென்னை, ஆக. 7-

இசைஞானி இளையராஜா வின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா. இவரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

யுவன்சங்கர் ராஜா 2002-ம் ஆண்டு லண்டனில் `பிரண்ட்’ என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த லண்டனை சேர்ந்த சந்திரன் சுஜாயா என்ற பெண்ணுடன் யுவன்சங்கர் ராஜாவுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க

தொடங்கினார்கள்.வீட்டிற்கு தெரியாமலே இருவரும் 3.9.03-ம் ஆண்டு லண்டனில் பதிவுத்திருமணம் செய்து கொண்டார்கள். இந்த விஷயம் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இரு வீட்டாரும் பேசி முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி 21.3.05-ம் ஆண்டு இந்து வைதீக முறைப்படி சென்னையில் திருமணம் நடந்தது.

யுவன்சங்கர் ராஜா-சந்திரன் சுஜாயா தம்பதிகளுக்கு இது வரை குழந்தை இல்லை.

கடல் கடந்து தொடங்கிய இவர்கள் காதல் இரண்டு ஆண்டுகளிலேயே கசந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர்.

பிரபல இசை அமைப்பாள ராகதிகழும் யுவன்சங்கர் ராஜா வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய சினிமா பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் சமரச முயற்சி வெற்றி பெறவில்லை. இருவரும் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர்.

இருவரும் பிரிய விரும்புவ தாக பரஸ்பர புரிந்துணர்வுபடி விவாகரத்து பெற முடிவு செய்து இன்று ஐகோர்ட்டில் உள்ள குடும்ப நல கோர்ட்டுக்கு வந்தார்கள். விவாகரத்து கோரி இருவரும் ஒன்றாக சேர்ந்து மனு தாக்கல் செய்தனர்.

கோர்ட்டுக்கு வந்த யுவன் சங்கர் ராஜாவும் அவரது மனைவி சந்திரன் சுஜாயாவும் கோர்ட்டுக்குள் ஒன்றாகவே அமர்ந்து இருந்தனர். அப்போது எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் சிரித்து பேசியபடி இருந்தார்கள்.

Posted in Affair, Alimony, Arranged, Audio, Celebrity, Cinema, Divorce, Faces, Famous, Films, Ilaiaraja, Ilaiyaraaja, Ilaiyaraja, IR, Isai, Legends, London, Love, Marriage, MD, Movies, music, Music Director, Notable, people, Raja, Reception, ShankarRaja, UK, Wedding, YSR, Yuvan, Yuvan Shankar Raja | Leave a Comment »

Ilaiyaraja – Gangai Amaran, Bharathiraja & declined projects

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

திரைப்பட வரலாறு 708
இளையராஜா
இசை அமைக்க மறுத்த படங்கள்!


இளையராஜா:-

“எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, “நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்” என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டேன்! காரணம், “இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே!” என்ற எண்ணம்தான்.

இரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன்.

அப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து விடும்!

அப்படி வந்ததுதான் கே.பாக்யராஜின் முதல் படம் “ஒரு கை ஓசை” (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)

இப்படி, “நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்கப்போவதில்லை” என்று சொல்லி, நான் இசை அமைக்க மாட்டேன் என்று மறுத்து, வேறு ஒருவர் இசை அமைப்பில் படத்தை தயாரித்து வெளியிட்ட இருவர்:- நடிகர் பார்த்திபன் (படம் “புதிய பாதை”); அனந்த் (கே.பாலசந்தரின் உதவியாளர்). படம்: “சிகரம்.”

தீஸ்ரி மஞ்சில்

சாருசித்ரா சீனுவாசன், “தீஸ்ரி மஞ்ஜில்” என்ற இந்திப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்து, கமல் – ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்துவிட்டு என்னிடம் வந்தார். எனக்குப் படத்தைப் போட்டுக்காட்டினார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நான் கச்சேரி நடத்திய காலத்திலேயே, இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம். ஆர்.டி.பர்மன் அற்புதமாக இசை அமைத்திருந்தார்.

படம் முடிந்ததும், “இந்தப் பாடல்களைப்போல் என்னால் கம்போஸ் செய்ய முடியாது. வேறு யாரையாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டேன்.

சில பாடல்களுக்கு இணை கிடையாது. அதுபோல் இசை அமைக்க முயற்சி செய்யக்கூடாது. ஆர்.டி.பர்மன் இசை அமைத்த அந்தப் படத்தின் பாடல்களும் அந்த வகையைச் சேர்ந்தவை.

டைரக்டர்கள்

சினிமாவுக்கு கதை சொல்வது ஒரு தனி கலை. சிலர், கதையை சொல்லத் தெரியாமல் மூன்று – நான்கு மணி நேரம் சொல்வார்கள். சிலர், கதையைப் பிரமாதமாகச் சொல்லிவிட்டு, உப்புச் சப்பு இல்லாமல் படமாக்குவார்கள்.

என்னிடம், சொல்லியதை சொல்லியவாறே படம் எடுத்த டைரக்டர்கள் இரண்டே பேர்: பாலுமகேந்திரா, மணிரத்னம்.

கதையை மிகவும் சுருக்கமாகச் சொல்லும் இயக்குனர்களில் ஸ்ரீதர் அவர்களும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் தனி ரகம். இருவரும் 15 நிமிடங்களுக்குள் கதை சொல்லிவிடுவார்கள்.

காதல் ஓவியம்

பாரதிராஜா அவரது “காதல் ஓவியம்” படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.

நான் மூகாம்பிகையின் தீவிர பக்தன் என்பதால், “படத்தின் நாயகன் அம்பாளின் பக்தன் என்று சொன்னால், இளையராஜா நல்ல டிïன்களை எலலாம் போட்டுத்தருவார்” என்று பாரதியிடம் உதவியாளர்களாக இருந்த மணிவண்ணனும், கலைமணியும் சொல்லியிருப்பார்கள் போலும்.

நான் அப்படத்துக்கு இசை அமைத்தேன். ஒருநாள் மாலை நேரத்தில் ஆரம்பித்த பாடல் `கம்போசிங்’ அன்றே முடிந்துவிட்டது. படத்துக்கான எட்டுப்பாடல்களும் தயாராகிவிட்டன.

படம், பின்னணி இசை சேர்ப்புக்காக வந்தபோது, அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. பாரதியிடம், “படம் ரிலீஸ் ஆவதற்குள் நாம் இருவரும் குருவாïர் போய் வரலாம்” என்றேன். “சரி” என்றார். வேலை சரியாக இருந்ததால், நகர முடியவில்லை.

திடீரென்று ஒருநாள் கலைமணியை பாரதி கூப்பிட்டு, “ஏய்யா! படத்திலே ஏதோ ஒன்னு குறையுதே. உனக்குத் தெரியாதா? தெரிந்தா சொல்லு!” என்றார்.

“அது ஒன்றும் இல்லே சார். கதைதான் குறையுது!” என்று கலைமணி கூற, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கலைமணியை பாரதி அடிக்கப்போக, அவர் தப்பி ஓடிவிட்டார்.

படம் ரிலீஸ் ஆகியது. ஒரு வாரத்தில், படப்பெட்டிகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன.

பாரதி என்னிடம் வந்து, “வா, குருவாïர் போய் வரலாம்” என்றார். “படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பல்லவா போயிருக்க வேண்டும். இப்போது வேண்டாமே!” என்று கூறிவிட்டேன்.

“காதல் ஓவியம்” படம் சரியாகப் போகாததால், பாரதி மனம் சங்கடப்பட்டார். ரசிகர்கள் மீது கோபப்பட்டார்.

“பாரதி! ரசிகர்களை குறை கூறவேண்டாம். அவர்கள் எப்போதும் சரியாகவே இருப்பார்கள்” என்றேன்.

“உனக்குத் தெரியாது. இவர்களுக்கு எது வேணும் என்று எனக்குத் தெரியாதா? இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார்!” என்றார்.

அதற்கு நான், “யோசித்துப் பாருங்கள். 16 வயதினிலே படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அதற்கு இணையாக விட்டலாச்சாரியாவின் “ஜெகன்மோகினி” படம் ஓடியதல்லவா? அதற்காக, பாரதிராஜா, ஜெகன்மோகினி போல படம் எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. அதைவிட்டு எங்கும் போகவேண்டாம்” என்றேன்.

ஆனால் பாரதி தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.

ரசிகர்களுக்காகவே கீழே இறங்கி வந்து அவர் எடுத்த “வாலிபமே வா வா.” படம் ஓடவில்லை.

டைரக்டர் கங்கை அமரன்

“அலைகள் ஓய்வதில்லை” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆன பாஸ்கர், அடுத்து ஏதாவது படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் வந்தார். பஞ்சு சாரின் வீட்டில் இருதேன். அப்போது, அங்கே அமர் (கங்கை அமரன்) இருந்ததைப் பார்த்து, “அமர் டைரக்ஷனில் படத்தை எடு. படத்தின் பெயர் கோழி கூவுது’‘ என்றேன். மதுரையில் நாங்கள் நடத்திய நாடகத்தின் பெயர் அது.

நான் சொன்னதை அமர் ஏற்றுக்கொண்டு, ஒரு கதையை உருவாக்கி, பிரபுவை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தான். அவன் எனக்குப் போட்டியாக இசை அமைப்பாளராக வந்துவிடக்கூடாது என்பதற்காக டைரக்ட் செய்யச் சொன்னேன் என்று டெலிவிஷன் பேட்டிகளில் அமர் சொல்வது வழக்கம்.

அவன் எனக்குப் போட்டியா, இல்லையா என்பது அவனுக்கே தெரியும்!”

Posted in Amaran, Anandhu, Ananthu, Balumahendhira, Balumahendhra, Balumahendra, Balumahenthira, Barathiraja, Bharathiraja, Cinema, Directors, Films, Gangai Amaran, Ilaiaraja, Ilaiyaraja, Kaathal Oviyam, KSG, Mani, Manirathnam, Movies, MSV, music, Sigaram, Sikaram, Sridhar, Visvanathan, VIswanadhan, Viswanathan | 1 Comment »

Tamil Nadu Murpokku Ezhuthalargal Sangam expresses regret for Ilaiyaraja’s decison

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006

“பெரியார்’ திரைப்பட விவகாரம்: இளையராஜாவுக்கு பகிரங்க வருத்தம் தெரிவிக்க த.மு.எ.ச. முடிவு

திருநெல்வேலி, நவ. 15: “பெரியார்’ திரைப்படத்திற்கு இசை அமைக்க மறுத்த இளையராஜாவுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக, அதன் பொதுச் செயலர் ச. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இசை அமைப்பளர் இளையராஜா, “பெரியார்’ திரைப்படத்துக்கு இசை அமைக்க மறுத்து கோபமாக பேசிய வார்த்தைகள் முற்போக்கு எண்ணம் கொண்ட அத்தனை தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் பெருத்த வேதனையை உண்டாக்கியுள்ளது.

அவர் ஆத்திகராக இருப்பதும், எந்த ஒரு படத்துக்கும் இசை அமைக்க மறுப்பதும் அவரது ஜனநாயக உரிமை. ஆனால், ஆத்திகராக இருப்பதால், “பெரியார்’ படத்துக்கு இசை அமைக்க மாட்டேன் என கூறியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

மேலும், அவரது கருத்துக்கு ஆதரவாக மதவாத சக்திகள் குரல் கொடுப்பது தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகுந்த கவலை அளிக்கிறது.

எனவே, நல்லெண்ணத்தின் அடிப்படையில் எங்களது வருத்தத்தை பகிரங்கமாக இளையராஜாவுக்கு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். அதை அவர் புரிந்து கொண்டு மக்களின் பக்கம் நிற்க வேண்டும்.

நடிகை ராதிகாவுக்கு கண்டனம்: தமிழக மக்களின் மனங்களில் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையாக இடம் பெற்றிருக்கும் திரைப்படக் கலைஞர் ராதிகா, கோக கோலா குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன.

எந்த நிறுவனத்தின் விளம்பரத்திலும் நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை. கோக கோலாவுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையிலும், அதைக் குடிக்கச் சொல்லி ஒரு விளம்பரத்தில் நடிப்பது கூட அவரது சுதந்திரம்தான். ஆனால், அறிவியல் பூர்வமாக அந்த குளிர்பானத்தை குடிப்பது ஆபத்தில்லை என்று சொல்ல ஒரு விஞ்ஞானிக்குத்தான் உரிமை உண்டு. ராதிகா ஒரு விஞ்ஞானியைப் போல அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகப் பேசி இருப்பது கண்டனத்திற்குரியது.

எனவே, ராதிகா அவ்வாறு நடித்திருப்பதைக் கண்டித்தும், அந்த விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், அவர் வீட்டுக்கு தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான அஞ்சல் அட்டைகளை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

இலங்கைத் தமிழர் துயரம்: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது குண்டு மழை பொழியும் அந்நாட்டு ராணுவத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டக் குழுவினர், அந்தந்த மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படம்: கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் சிறந்த படமாக இயக்குநர் சேரன் இயக்கிய “தவமாய்த் தவமிருந்து’ செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பரில் நடைபெறும் விழாவில், அதற்கான பரிசு வழங்கப்படும் என்றார் தமிழ்ச்செல்வன்.

Posted in Advertisement, BJP, Coke, cola, Eezham, EVR, Ila Ganesan, Ilaiyaraja, Isainjaani, music, Periyar, Politics, Radhika, Religion, Religion/Politics, Sa Thamizhselvan, Tamil, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu Murpokku Ezhuthalargal Sangam | Leave a Comment »

Ilaiyaraja starts a Tamil Ilakkiya Manram with Jeyaganthan as Head

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

தமிழ் அறிஞர்களைக் கௌரவிக்க புதிய இலக்கிய மன்றம்- இளையராஜா தொடங்குகிறார்

சென்னை, நவ.7: சிறந்த தமிழ் அறிஞர்களைக் கெüரவிப்பதற்காக இசையமைப்பாளர் இளையராஜா புதிய இலக்கிய மன்றத்தை தொடங்குகிறார்.

இதுகுறித்து இளையராஜா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வரும் அறிஞர்களை கெüரவிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதன்படி பலருடன் கலந்தாலோசித்து ஓர் இலக்கிய மன்றத்தை உருவாக்கியிருக்கிறோம்.

இந்த மன்றத்துக்கு அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க “இசைஞானி இலக்கிய மன்றம்‘ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் தொடக்க விழா வரும் டிசம்பர் 2-ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

  • இதற்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைவராகவும்,
  • ஆறு அழகப்பன் செயலாளராகவும் இருப்பார்கள்.
  • அப்துல் ரகுமான்,
  • வாலி,
  • மு.மேத்தா,
  • முத்துலிங்கம்,
  • ஞானசுந்தரம்,
  • திருப்பூர் கிருஷ்ணன்,
  • ரவி சுப்ரமணியம் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

சிறந்த படைப்புகளைப் படைக்கும் அறிஞர்களுக்கும், புதியவர்களுக்கும் இந்த மன்றத்தின் பெயரில் ரொக்கப் பணமும், பரிசுகளும் வழங்கப்படும்.

இவை “பாவலர் வரதராஜன் நினைவுப் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.

என்னுடைய இசையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் “அஜந்தா‘ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் அதே நாளில் பொதுமக்கள் முன்னிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் வரும் லாபத்தை ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக அளிக்கவிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கர். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்றார் இளையராஜா.

Posted in Abdul Rehman, Ajantha, Charity, Ilaiyaraja, Ilakkiya Manram, Isainjaani, Jeyaganthan, Jeyakanthan, Kavikko, Literature, Madurai, Mu Mehtha, Muthulingam, Paavalar, Pavalar Varadarajan, Ravi Subramaniam, Tamil Poets, Thamizh, Thamukkam, Thiruppur Krishnan, Vaali | Leave a Comment »

Ilaiyaraja Lifesketch – Maanbiku Manidhargal

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 4, 2006

சீர்காழி _ ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டியதென்றால், பண்ணைபுரம் இளையராஜாவுக்கு இசைப்பால் ஊட்டியது. பண்ணைபுரம் _ மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் தவழும் கிராமம்.

தந்தை: எம்.ஆர்.ராமசாமி, தாய்: சின்னத்தாயி. பாவலர் வரதராசன், ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் என்று சகோதரர்கள்.

ராஜாவுக்கு அந்தச் சிறுவயதிலேயே இசைமீது இனம்புரியா ஆர்வம். ஓடைக்கரைகளும், சாலை மதில்களும், பள்ளிமரத்தடிகளும் சிறுவயதிலேயே ராஜா அகார சாதகம் செய்த சங்கீதக் கலா சாலைகள். அங்கு, சத்தங்களைச் சுரம்பிரித்து, இயற்கையிடம் இசைப்பாடம் பயின்றான் அந்தச் சிறுவன்.

ஒவ்வொரு துளைகளுக்கும் நடுவே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்ற இலக்கண மெல்லாம் தெரியாமலேயே, மூங்கிலில் தோராயமாகத் துளைகள் போட்டு அவன் தயாரித்த புல்லாங்குழல் _ சரியான கனகச்சிதமான இலக்கணத்தோடு அமைந்ததுதான் ஆச்சரியம்!

பாவலர்!

அண்ணன் பாவலர் வரதராசன் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்பெற்ற பிரசாரப் பாடகர். பாவலரின் பாடல்கள் ராஜாவின் சங்கீதப் பாதையை முறைப்படுத்தியது.

ராஜா ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, கம்யூனிஸ்ட் இயக்க நிகழ்ச்சி ஒன்று. அந்த நேரத்தில் பாவலருக்கு உடல் நிலை சரியில்லை. ராஜாவைத் துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை.

திருச்சி _ திருவெறும்பூரில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு நல்ல கூட்டம். பாவலருக்கு ஓய்வுதர _ இடை இடையே ராஜாவும் தன் பிஞ்சுக் குரலெடுத்துப் பாடினார். அவரது பாட்டுகளுக்குக் கைதட்டல்கள் மூலம் கௌரவம் செய்தனர் மக்கள். அதன்பிறகு, கச்சேரிக்குச் செல்லும்போதெல்லாம் அவ்வப்போது, இந்த ‘இலக்குவணனை’யும் உடனழைத்துச் செல்ல ஆரம்பித்தார் பாவலர்.

விளைவு… பாட்டு, இசை, கச்சேரி என்று ஓடிய வாழ்க்கையில் படிப்பு, பள்ளி ஆகியவை மறந்து போயின.

அந்த வயதில் ராஜாவின் குரல் பெண் சாயலுடையதாக இருக்கும். பாவலருடன் ஜோடியாகப் பாட ஏற்ற குரல்! ராஜா தொடர்ந்து கச்சேரிகளுக்குப் போய்க் கொண்டிருந்த நிலையில், மகரக்கட்டு ஏற்பட்டு, குரல் உடையத் தொடங்கியது. அதனால், பாவலர், ராஜாவை வீட்டில் விட்டு விட்டு, தம்பி கங்கை அமரனை உடனழைத்துச் சென்றார்.

பிரதர்ஸ்!

அண்ணன் ஊருக்குச் செல்லும் நேரங்களிலெல்லாம் அவரது ஆர்மோனியப் பெட்டியைத் தனியாக வாசித்துப் பழக ஆரம்பித்தார். அண்ணனுக்கு, தன் ஆர்மோனியப் பெட்டியை யாரும் தொடக்கூடாது. தொட்டால் கோபம் வரும். பிரம்பெடுத்துப் புறங்கையில் டிரம்ஸ் வாசித்துவிடுவார்.

பாவலருக்கு விஷயம் தெரியவந்தபோது, ராஜாவின் திறமை கண்டு வியந்தார்; மகிழ்ந்தார்! அதன்பிறகு, பாவலர் கச்சேரிகளில் ஆர்மோனியம் வாசிக்கும் பொறுப்பு ராஜாவுக்கு. ஆர்.டி. பாஸ்கர் தபேலா. பாவலரும், கங்கையமரனும் பாடுவார்கள். பாவலர் இசைக்குழு, பாவலர் பிரதர்ஸ் இசைக்குழுவானது.

பாரதிராஜா!

1963 _ வாக்கில் நடிப்பில் ஆர்வம் கொண்ட மலேரியா இன்ஸ்பெக்டர் ஒருவர் பண்ணைபுரத்துக்கு வந்தார். பெயர், அல்லி நகரம் சின்னசாமி. பாரதிராஜா. தேனி, மதுரை முதலிய பகுதிகளில் பாரதிராஜா நாடகம் போட்டபோது _ இசைப் பொறுப்பு, ராஜாவுக்கு.

1965_ல் சினிமாவில் சாதிக்கும் துடிப்புகளுடன் பாரதிராஜா சென்னை கிளம்பினார். 1967_ல் ராஜா, பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோர் சென்னைக்குப் புறப்பட்டனர்.

வடபழனியில் ஒரு சிறு அறையில் வாழ்க்கை; வயிற்றில் பசி; மனதிலோ தாகம்; அது, இசை தாகம்! வாய்ப்பு தேடியலைந்தார் ராஜா. நடுநடுவே நாடகங்களுக்கு இசையமைத்தார். பசி, வறுமையுடன் எட்டாண்டுகள் ஓடின. வறுமைக்கு நடுவிலும் ராஜா இசை பயிலத் தவறவில்லை. லஸ் கார்னரில் தங்கியிருந்த தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசை கற்றுக் கொண்டார்.

அன்னக்கிளி!

வாய்ப்பு தேடி அலைந்து காய்ப்பு ஏறிய பாதங்கள்; ஆனாலும், மனம் முழுக்க நம்பிக்கை நந்தவனம்.

அது, 1975. ஒரு நாள் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தை ராஜா பாம்குரோவில் சந்தித்தார். வாய்ப்பு கேட்டார். எதிரில் ஒல்லியாக வெட வெடவென்றிருந்த அந்த இளைஞரை நம்பிக்கையில்லாமல் பார்த்த பஞ்சு, ‘‘நாளை ஆர்மோனியப் பெட்டியோடு வந்து ட்யூன் போட்டுக் காட்டுங்க’’ என்றார்.

‘‘நாளை எதுக்கு? இப்பவே பாடிக் காட்டறேன்’’ என்ற ராஜா, ‘அன்னக்கிளி’ படத்தில் இடம்பெற்ற பாடல்களின் மெட்டுகளை உருக்கமாகப் பாடினார். அவை, பஞ்சு அருணாசலத்துக்குப் பிடித்துப்போக, அன்னக்கிளி வாய்ப்பு ராஜாவுக்குக் கிடைத்தது. ராஜையா என்ற பெயரை இளையராஜா என்று மாற்றியவரும் பஞ்சுதான்.

ராஜாவின் ராஜாங்கம்!

1970_களில் தமிழ் சினிமா இசையில் ஒரு தேக்கநிலை! அந்த வெற்றிடத்தை இந்திப் பாடல்கள் இட்டு நிரப்பின. அந்தச் சமயத்தில்தான் அன்னக்கிளி ரிலீஸானது. தென்றலின் இனிமையோடும் புயலின் வலிமையோடும் வெளிப்பட்ட பாடல்களைக் கேட்ட தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

அன்னக்கிளி, பத்ரகாளி என்று வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத்தொடங்கினார் இந்த ட்ரெண்ட் செட்டர். அதன் பிறகு, தமிழ் சினிமா இசையின் வசந்த காலம்! 80_களுக்குப் பிறகு வெளிவந்த பெரும்பாலான படங்கள் ராஜாவின் இசையில் வெளிவந்தன. வருடத்துக்கு முப்பதிலிருந்து ஐம்பது படங்கள்! ராஜாவின் இசை, இந்திப் பாடல்களை மீண்டும் மும்பைக்கே விரட்டியடித்தன.

பாடல்களிலும், ரீ ரெக்கார்டிங்குகளிலும் பல புதுமைகள்; பல சோதனை முயற்சிகள்!

ராஜாவின் இசைப் பாடல்களால் மட்டுமல்ல; பின்னணி இசையாலும் மனதைத் தொட்டன. நடிகர்கள் நடிக்க முடியாத நுணுக்க உணர்வுகளையும் அவரது பின்னணி இசை நடித்துக் காட்டியது.

நடிகர் கால்ஷீட் இருந்தால் போதும் என்ற நிலைமாறி ராஜாவின் கால்ஷீட் இருந்தால் போதும் என்ற நிலை. ஃபைனான்ஸியர்களும், டிஸ்ட்ரிபியூட்டர்களும் ராஜாவை முழுதாக நம்பினர்.

ஏராளமான தேசிய விருதுகளும், தமிழக அரசு விருதுகளும் இவரது வரவேற்பறையை அலங்கரிக்கத் தொடங்கின.

பரம்பொருள்!

இசைப் பணியால் பொருள் சேர்ந்தது. அதில் பொருளற்ற தன்மை இருப்பதை மனம் உணர்ந்தது. பரம் பொருள் தேடி மனம் விரைந்தது. சிறு வயதில் நாத்திகராகவும், சாமி கும்பிடுபவர்களைக் கிண்டல் செய்து கொண்டுமிருந்த ராஜாவுக்குள் இறையருள் புகுந்தது. 1986_ம் ஆண்டு களில் அந்த மாற்றம் நிகழ்ந்தது.

அன்னை மூகாம்பிகையின் தீவிர பக்தரானார். ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் உட்பட பல கோயில்களுக்குக் கோபுரம் கட்ட உதவியதன் மூலம், இறைவன் தனக்களித்ததை அவனிடமே அர்ப்பணித்தார். இந்த இசை ஞானிக்குப் பிடித்த ஞானி: ஸ்ரீரமணர். பிடித்த நூல் ரமணரின் ‘அருண்மொழித் தொகுப்பு!

சிம்பொனி!

சினிமா, இசை, பாட்டு என்று ஓடிக்கொண்டிருந்த ராஜா 1987_ல் ‘ஹெள டு நேம் இட்’ என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். 1988_ல் ஹரிப்பிரசாத் சௌராஷ்யா புல்லாங்குழலில் ‘நத்திங் பட் விண்ட்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட மிகப் பெரும் இந்தி இசையமைப்பாளர் நௌஷாத், ‘இளையராஜாவிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு உடல்நிலை சரியாக இருந்து _ நேரமும் இருக்குமானால், இந்த இளைஞனிடம் உட்கார்ந்து கற்றுக் கொள்ளத் தயங்க மாட்டேன்’ என்றார் நெகிழ்ச்சியாக.

இதற்கெல்லாம் மகுடம் வைப்பது போல், ஆசியாவிலேயே ‘சிம்பொனி’ இசையமைத்த மேதை என்ற சிறப்பும் ராஜாவையே சேரும். அவரது வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்கள் சாதனைகளால் நிறைந்தவை. லேட்டஸ்ட் சாதனை திருவாசகத்துக்குப் புதிய பாணியில் இசையமைத்தது.

ராஜா கூறுகிறார்: ‘எதையும் நான் செய்யவில்லை. இங்கிருந்ததை மீண்டும் எடுத்துக் கொடுக்கிறேன்!’ அட!

அடக்கம் அமரருள் உய்க்கும்!

இசையுலகில் இளையராஷா ஓர் ஆல் ரவுண்டர். மெட்டு போடுவது, பாடுவது, கருவிகள் இசைப்பது எல்லாம் அவருக்குக் கைவந்த கலை. இவர் பாடலாசிரியரும் கூட. நிறைய பாடல்களை எழுதியிருக்கும் இவர் நிறைய கவிதைகளும் எழுதியிருக்கிறார்.

‘வெட்டவெளியில் கொட்டிக் கிடக்குது’ என்பது இவர் எழுதிய வசன கவிதைத் தொகுதி. மரபுக் கவிதைகளும் இவருக்கு அத்துப்படி. எல்லாப் புலவர்க்கும் புலியான வெண்பா இவரிடம் பூனைக்குட்டியாய் பணிந்து கிடந்தது. இவரது வெண்பாக்களை அ.ச.ஞான சம்பந்தன், ஷெயகாந்தன், பெரும்புலவர் நமசிவாயம் ஆகியோர் வியந்து புகழ்கிறார்கள்.

தமிழில் புகுந்து விளையாடும் ராஷாவுக்கு, சமஸ்கிருதமும் தெரியும். இதுதவிர, இவருக்கு ஓவியமும் வரைய வரும்; கூடவே நல்ல புகைப்படக் கலைஞரும் கூட. இவர் எடுத்த புகைப்படங்களை வைத்து, மிக விரைவில் ஒரு கண்காட்சி நடந்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

_பெ.கருணாகரன்

Posted in Biosketch, Ilaiyaraaja, Ilaiyaraja, Kumudam, Tamil | Leave a Comment »