Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘IIM’ Category

Employment Opportunities & Education Facilities – Job Guarantee Schemes & Export Processing Zones

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

பகல் கனவாகும் வேலை வாய்ப்பு

ப.செ. சங்கரநாராயணன்

ஆண்டுக்கு 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறப்படும் இந்தியாவில், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மாநிலங்களவையில் அண்மையில் எம்.பி.க்களின் கூச்சல், குழப்பத்துக்கிடையே (மக்களவைத் தலைவருக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது) தாக்கல் செய்யப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் 61-வது அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், 55 கோடிப் பேர் 30 வயதுக்கு உள்பட்டவர்கள். அதில், வேலையில்லாதோர் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்துவரும் தகவல் கவலையளிப்பதாக உள்ளது.

1999-2000-ம் ஆண்டில் வேலையில்லாதோர் சதவிகிதம் 7.3 ஆக இருந்தது. 2004-2005-ல் 8.35 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக, (வளர்ச்சி விகிதத்தை விடக் குறைவு) மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், உழைக்கும் வயதுப் பிரிவினர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம் என்கிறார். (உழைக்காமல் திரிகிறவர்களைச் சேர்க்கவில்லை)

இதற்காக அமைப்புசாரா தொழில்துறையில், புதிய வேலை வாய்ப்புகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்பயிற்சி மையங்களை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் விவசாயத்தை விட்டு நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களை நாடுவோர் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்விளைவாக, உணவு உற்பத்தி குறைந்து, 2015-ல் உள்நாட்டு தேவைக்கு பெருமளவிலான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும் என, மூத்த விவசாய விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள ஆயிரக்கணக்கான கோடி கடன் தள்ளுபடி மட்டும், விவசாயிகளை ஒருபோதும், அவர்கள் சந்தித்து வரும் உண்மையான அவலங்களில் இருந்து மீட்டெடுக்காது.

தில்லி இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.என். ராஜசேகரன் பிள்ளை, நாட்டில் 836 மில்லியன் மக்கள் தினமும் ரூ. 20 வருவாயுடன், சுகாதாரமற்ற சூழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 546 மில்லியன் பேர் வேலையின்றித் தவிக்கின்றனர்.

33 சதவிகிதம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்கள். 12 சதவிகிதம் பேர் மட்டுமே, பள்ளிக் கல்வி முடித்தவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் ஏறத்தாழ 400 பல்கலைக்கழகங்கள் இருந்தும் (போலிப் பல்கலைக்கழகங்கள் தனி), 10 சதவிகிதம் பேர் மட்டும் கல்லூரிக் கல்வி பயிலும் நிலை வேதனையளிப்பதாக உள்ளது என்கிறார் ராஜசேகரன் பிள்ளை.

உயர்கல்வியை 11 சதவிகிதம் பேர் பெற்றுள்ளனர். அதில் 4.3 சதவிகிதம் பேர் பெண்கள்.

இதில் ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வோரில் 90 சதவிகிதம் பேர் பன்னாட்டு நிறுவனங்களில் சேர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில், 2007-ம் ஆண்டில் நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுப் பணிக்குச் செல்வோர் 28 சதவிகிதமாகவும், உயர்கல்வி கற்கச் செல்வோர் 33 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டனர். தாராளமயமாக்கல் கொள்கைகளால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பது, இன்னும் அறிக்கை அளவிலேயே உள்ளது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 34,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவிகிதத்துக்கும் குறைவே. (ராணுவத் துறைக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல்).

இந்தியாவின் 2.5 லட்சம் உள்ளாட்சிகளில் அடிப்படைக் கல்வியை மேம்படுத்தாமல் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாலோ, தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தாமல் எண்ணிக்கையை உயர்த்துவதாலோ எவ்விதப் பலனும் ஏற்படப் போவதில்லை.

குறிப்பாகத் தமிழகத்தில் பாலிடெக்னிக்குகளை விட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதற்குக் காரணம் முற்றிலும் வணிகமயமாகி விட்ட உயர் கல்விதான்.

சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் கிடைக்கும் ஊதியமும், அத்துறையில் எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளை நுழைக்க விரும்பும் பெற்றோர்களின் ஆசையும் ஒரு காரணம். அனைத்துத் துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் தொடங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இத்துறையில் வேலைவாய்ப்பு குறையும் நிலையும் உள்ளது.

இந்நிலையில், அதிகமாக வெளிவரும் அரைகுறை பொறியாளர்களால், வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.

பொறியியல் கல்வி முடித்து வெளிவருவோரில் 22 சதவிகிதம் பேர் மட்டுமே, வேலைக்கான தகுதியுடன் உள்ளதாக, கல்வியாளர் மு. அனந்தகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

மத்திய அரசு அடிப்படைக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் முழுமையான திறன்களை மேம்படுத்தும் பாடத் திட்டங்களையும் அமைத்தால்தான், உயர்கல்வியின் நோக்கம் நிறைவேறும் என்பதை மறுப்பதற்கில்லை. அத்துடன் மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பிற்கான பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களையும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

அதுவரை தினம் ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என, அரசு பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது பகல் கனவுதான்.

Posted in Agriculture, City, Contract, Contractors, Education, Employment, EPZ, Export, Farmers, Farming, IIM, IIT, Industry, Jobs, Loans, Metro, MNC, Opportunities, SEZ, Suicides, Union, Villages, Work | Leave a Comment »

Dyslexia & Taare Zameen Par – Raman Raja

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

நெட்டில் சுட்டதடா..: சிதைந்த சொற்களால் கலைந்த கனவுகள்!


எலிமெண்டரி பள்ளிக் கூட ஆசிரியர்கள் அனைவரும் – வேறு வழியே இல்லாவிட்டால் திருட்டு விசிடியிலாவது – பார்த்தே ஆகவேண்டிய இந்திப்படம் ஒன்று வந்திருக்கிறது. அமீர் கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்’ (மண்ணிற்கு வந்த விண்மீன்கள்) என்ற படம்தான் அது. படத்தின் நாயகன், எட்டுவயதுப் பல் நீண்ட பையன் ஒருவன். சம்பிரதாயமான சினிமாவுக்குத் தேவையான காதல், மோதல், சாதல் எதுவுமற்ற இந்தப் படத்தின் மையக் கரு, டிஸ்லெக்ஸியா ( Dyslexia) என்ற வியாதி பற்றியது.

டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரையும் போன்ற புத்திசாலித்தனத்துடன்தான் இருப்பார்கள். ஆனால் எழுதப் படிக்க மட்டும் லேசில் வராது. உதாரணமாக “அ’ என்று கரும்பலகையில் எழுதினால் அதன் வரி வடிவத்தையும், மனத்தில் அதன் உச்சரிப்பையும் தொடர்புப்படுத்தி, இதுதான் “அ’ என்று புரிந்து கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருக்கும். நிறைய ஸ்பெல்லிங் தப்பு செய்வார்கள். ஒரே மாதிரி தோற்றமளிக்கும் க்ஷ, க் போன்ற எழுத்துக்களை நிரந்தரமாகக் குழப்பிக் கொள்வார்கள். ஒரு வார்த்தையின் பகுதிகள் இடம் வலமாக இடம் மாறும்.

பச்சைக் கிளி என்பது சப்பைக் கிளியாகும். அவர்கள் எழுதிய ஆங்கிலத்தைப் பார்த்தால் அசப்பில் ரஷ்ய மொழி போல இருக்கும். என்னுடன் நாலாம் வகுப்புப் படித்த இப்ராகிம், நடுநடுவே சில எழுத்துக்களைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உல்ட்டாவாக எழுதுவான். (அன்று அவனுடைய டிஸ்லெக்சிஸியாவைப் புரிந்து கொள்ளாமல் சாமிநாதனுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ததற்கு இன்று உண்மையிலேயே வருந்துகிறேன். ஸôரிடா இப்ராகிம்!)

டிஸ் என்றால் “சிதைந்த’. லெக்ஸிஸ் என்றால் “வார்த்தை’. தமிழாசிரியர்கள் அனுமதித்தால், டிஸ்லெக்ஸியாவிற்கு “சொற்சிதைவு ‘ என்று வைத்துக் கொள்கிறேன். டிஸ்லெக்ஸியா என்பது மனநோய் அல்ல. இந்தக் கணத்தில் உலகத்தில் நூறு கோடிப் பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிஸ்லெக்ஸியா குழந்தைகளில் சிலருக்குக் கண்ணும் கையும் ஒத்துழைக்க மறுக்கலாம். வீசி எறியப்பட்ட பந்தை காட்ச் பிடிப்பதில் சிரமம் இருக்கலாம். பந்தின் சைஸ், அதன் வேகம், திசை என்று ஒரே நேரத்தில் மூளையைத் தாக்கும் பல விஷயங்களை அலசிப் புரிந்து கொண்டு கையை நீட்டுவதற்குள் பந்து பவுண்டரியைத் தாண்டிவிடும். சில சமயம் நீண்ட சங்கிலித் தொடரின் ஆணைகளை நினைவு வைத்துக் கொள்வதில் பிரச்சினை. “”வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயி, பொட்டிக் கடையிலே வத்திப் பெட்டியும் மெழுகுவர்த்தியும் வாங்கிட்டு, அப்படியே சிவமணி வீட்டுலேர்ந்து தினமணி வாங்கிட்டு வந்துடு” போன்ற வாக்கியங்களின் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து புரிந்து கொள்வதற்குள் பொழுது விடிந்துவிடும். இதே போன்ற மற்றொரு வியாதி, டிஸ்கால்குலியா ( Dyscalculia). இவர்கள் படிப்பது, எழுதுவது எல்லாம் பண்டிதத்தனமாகச் செய்வார்கள். ஆனால் கணிதம் மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது!

சொற்சிதைவு ஏன் என்பதற்கு, ஒருவாரம் லீவு போட்டுவிட்டுப் படிக்க வேண்டிய அளவுக்குக் காரணங்கள் சொல்கிறார்கள். எழுதுவது, படிப்பது எல்லாம் மனிதனின் இயற்கையான திறமைகள் அல்ல. பல லட்சம் வருடப் பரிணாம வளர்ச்சியில் , மிகச் சமீபத்தில்தான் அவன் கற்றுக் கொண்ட வித்தைகள் இவை. எனவே பலருடைய மூளைகள் இன்னும் பள்ளிக் கூடத்திற்குப் போகத் தயாராகவில்லை என்பது ஒரு கட்சி. மற்றொரு பக்கம், மரபியல் காரணங்கள், நரம்பியல் நிபுணர் ஒருவர், டிஸ்லெக்ஸியா பையனின் மூளையை ஸ்கான் எடுத்து “”அங்கே பார், இங்கே பார்” என்று குச்சியால் சுட்டிக் காட்டினார். என் பாமரக் கண்ணுக்கு சிவப்பும் பச்சையுமாக ஏதோ பாசிதான் தெரிந்தது.

சொற்சிதைந்த குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படுவது, அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்தான். கை நிறைய மார்க் வாங்குவதில்லை என்ற ஒரே காரணத்தால் இந்தக் குழந்தைகளை முட்டாள், தத்தி, சோம்பேறி என்று பெற்றோர்களே சுலபமாக முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை, தன்மானம் எல்லாவற்றுக்கும் சாவுமணிதான். அதிலும் நன்றாகப் படிக்கும் அண்ணனோ தம்பியோ இருந்துவிட்டால் போச்சு! இதழாகப் பிய்த்துப் போட்டு விட்டுத்தான் மறுவேலை. ஹோம்வொர்க் எழுதவில்லை என்று தினசரி காதுகள் திருகப்பட்டு மணிக்கட்டுகள் நொறுக்கப்படுவதில் , இந்தக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுவதில் ஆச்சரியமில்லை. தினசரி காலையில் ஸ்கூலுக்குப் போக மறுப்பு, அடம், வகுப்பறை ஜன்னல் வழியே எகிறிக் குதித்துக் காணாமல் போய்த் தெருவில் பாம்பாட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது, சதா கனவு மேகங்களில் சஞ்சரிப்பது போன்றவை டிஸ்லெக்ஸியாவின் பக்க விளைவுகள்.

சொற்சிதைவுக்கு ஆளான குழந்தைகள் எந்த வகையிலும் அறிவிலோ, திறமையிலோ குறைந்தவர்கள் அல்ல. சொல்லப் போனால் பல மனவியல் டாக்டர்கள், “”டிஸ்லெக்ஸியாவை ஒரு வியாதி என்று வகைப்படுத்துவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஓர் ஊனமோ, குறைபாடோ அல்ல. நாம் எல்லாருமே எல்லாப் பரீட்சையிலுமே முதல் ராங்க்கா எடுக்கிறோம்? படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம்? அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. (  reading disability) என்று கூப்பிடலாமே?” என்கிறார்கள்.

டிஸ்லெக்ஸியா குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. எதிர்காலத்தில் உங்கள் குழந்தை இவர்களைப் போலப் புகழ் பெற்றால் போதுமா பாருங்கள்:

விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைன், எடிசன்?

பிரதமர் சர்ச்சில்?

எழுத்தாளர் அகதா கிறிஸ்டி?

ஐஸ்வர்யா கணவர் அபிஷேக் பச்சன்?

போதும் என்றால், கவலையை விடுங்கள். மேற்குறிப்பிட்ட அத்தனை பேரும் ஆரம்பக் காலத்தில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அரசியல்வாதிகள், ஓவிய மேதைகள், தொழிலதிபர்கள் என்று சொற்சிதைவை வென்று புலிக் கொடி நாட்டிய பிரபலங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

டிஸ்லெக்ஸியாவின் பரிதாபத்தையும் தங்களுக்குக் கொழுத்த வியாபாரமாக்கிக் கொண்டுவிட்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பிரத்யேகமாகத் தயாரித்த டப்பா உணவுகள், பத்தியங்கள், சூரியகாந்தி சிகிச்சை, முதுகுத் தண்டைப் பிசையும் ஆஸ்டியோபதி வைத்தியம் என்று அப்பாவி அப்பாக்களிடம் சக்கையாகப் பணம் கறப்பவர்கள் இவர்கள். மற்றொருபுறம், சொற்சிதைவை சமாளிக்க ஆசிரியர்களும் டாக்டர்களும் சேர்ந்து பல உபயோகமான பாடத்திட்டங்கள் தயாரித்திருக்கிறார்கள். இவற்றில் பலவற்றை நாமும் பைசா செலவில்லாமல் பின்பற்ற முடியும். எழுத்துக்களை உடல்ரீதியாக உணர்ந்து கொள்வதற்கு, மணலில் விரலால் எழுதிப் பழகுவது முதல் கட்டம். (நம் முன்னோர்கல் தெரியாமலா எழுதி வைத்தார்கள்!) களிமண்ணில் பொம்மை பொம்மையாக எழுத்து வடிவங்களை உருவாக்குவது, ஒரே மாதிரி சப்த அமைப்பு உள்ள வார்த்தைகளை (தகரம், நகரம், நரகம்) ஒன்றாகத் தொகுத்துப் படிப்பது என்று பல வழிகள் இருக்கின்றன. டிஸ்லெக்ஸியா சொûஸட்டியில் கேட்டால் ஆலோசனைகள் நிறையக் கிடைக்கும். பெற்றோர்கள்தான் இதையெல்லாம் பொறுமையாகச் செய்ய வேண்டும். ஐம்பது பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் ஆசிரியர்களால் இப்படி தனிக் கவனம் செலுத்த முடியாதுதான். ஆனால் அவர்கள் சொற்சிதைந்த குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்டு திட்டாமல் மிரட்டாமல் அரவணைத்துப் போனாலே பெரிய உதவியாக இருக்கும். மற்றபடி குழந்தையிடம் இருக்கக் கூடிய ஓவியம், இசை போன்ற திறமைகளைக் கண்டுபிடித்துத் தூண்டிச் சுடர் விடச் செய்தால் குழந்தையின் சுய மதிப்பீடு உயரும்.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட விண்மீன்கள் படத்தில் அமீர்கான் பேசும் ஒரு வசனம், எதிலும் எப்போதும் தன் குழந்தைதான் முதலில் வர வேண்டும் என்ற வெறியில் அவர்கள் வாயில் நுரைதள்ளும் வரை ஓட வைக்கும் பெற்றோர்கள் பற்றியது: “” இவர்களுக்கெல்லாம் ரேஸ் ஓட விட்டுப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குப் போய் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்? பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே?”

Posted in +2, 10, Aamir, Aamir Khan, Achievements, Achievers, Arts, Biz, Books, Business, Challenged, Child, Children, Cinema, Cognition, Colleges, Commerce, Communication, disability, Dyscalculia, Dyslexia, English, entrepreneurs, entrepreneurship, Fashion, Films, Fun, Games, Grades, IIM, IIT, Innovation, Ishaan, Ishan, Khan, Kids, Learn, Learning, Marks, Maths, Merit, Movies, Painting, Professors, Raman Raja, Rank, Reading, Schools, Shrewd, Sports, Students, Teachers, Value | 2 Comments »

The cost of Engineering Admissions – Reservations, Wealthy vs Needy

Posted by Snapjudge மேல் மே 22, 2007

விலைபோகும் கம்ப்யூட்டர் படிப்புகள்

சென்னை, மே 22: பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் விற்பனையாகிக் கொண்டிருப்பது ஒரு புறம் இருக்க, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விலை போகின்றன என்பது அதிர்ச்சியான உண்மை.

“பிளஸ் 2′ தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே பல பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகளையே பெரும்பாலான மாணவர்கள் விரும்புகிறார்கள்.

காரணம், சாஃப்ட்வேர் தொழிலில் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதே. அத்துடன், பொறியியல் கல்லூரிகளில் படிப்போருக்கு “கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் வேலை கிடைக்க சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில வேலைவாய்ப்பு மையம் ஏற்பாடு செய்து வருகிறது.

பி.இ. படித்தால், நிறைய சம்பளத்துடன் நிச்சயம் நல்ல வேலை என்ற நிலை உருவாகியுள்ளதால், இப்படிப்புகளில் சேர ஆண்டுதோறும் ஆயிரம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதன் விளைவாக நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நிறைய பேர் போட்டியிடுகிறார்கள். எனவே, அதற்கு “விலை’ என்ற ரீதியில் நன்கொடைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சில முன்னணிக் கல்லூரிகளில் மேற்கண்ட படிப்புகளில் சேர கல்விக் கட்டணம் நீங்கலாக ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையில் வசூலிக்கிறார்கள். தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே இக் கல்லூரிகளில் ரூ.25 ஆயிரம் வரை கொடுத்து தங்களுடைய இடங்களை முன் பதிவு செய்து கொள்கிறார்கள்.

இவ்வாறு நிர்வாக இடங்களில் மாணவர்கள் சேர கட்டணம் வசூலிப்பது, பதிவு செய்து கொள்வது குறித்து தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, “”அவ்வாறு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. அவர்கள் எங்கள் கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் நடத்தப்படுகின்றன என்று விசாரித்து வருகிறார்கள். அவ்வளவுதான் பதிவு செய்வில்லை” என்றனர்.

“பிளஸ் 2′ தேர்வு முடிவு வெளியாகும் முன்பு பல பொறியியல் கல்லூரிகளில் முன்பதிவு செய்வதற்காக ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம் எனப் பல பெற்றோர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு பதிவு செய்த மாணவர்களில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அந்தப் பதிவுக் கட்டணம் திருப்பித் தரப்படுவதாகச் சில பெற்றோர்கள் கூறினர்.

பிளஸ் 2 தேர்வு வெளியான பின், மிக நல்ல மதிப்பெண்ணைப் பெற்றவர்களையே சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் இவ்வாறு செய்கிறார்கள் என்பது விசாரித்தபோது தெரியவந்தது.

இதனிடையில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் ஒற்றைச் சாளர முறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாகவே, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களிடம் வசூலித்த “முன்பதிவுக் கட்டணத்தை’ கல்லூரி நிர்வாகங்கள் திருப்பித் தருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் வழக்கம்போல், சிவில், மெக்கானிக்கல் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு இத்தகைய கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. காரணம், இப்படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் மிக மிகக் குறைவு.

Posted in +2, Affordability, BE, BITS, Bribe, Bribery, BSc, BTech, Campus, Colleges, Computer, Doctor, Donation, DOTE, ECE, Education, EEE, Employment, Engg, Engineering, Entrance, Gentleman, HSC, IIM, IIT, InfoTech, Interview, IT, Jobs, kickbacks, Marks, medical, Merit, Money, MSc, Plus Two, Poor, Price, professional, Ranking, REC, Reservation, Rich, Scholarship, Schools, Science, Score, seat, Self-financed, Software, Students, Technology, University, Wealthy | Leave a Comment »

Engineering, Medical Professional courses Entrance Exams – Analysis, Options

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

இன்னொரு கோரிக்கை உண்டு

தொழிற்கல்வி படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு உண்டா, இல்லையா என்று குழம்பிக் கொண்டிருந்த மேனிலைப் பள்ளி மாணவர்களை, குறிப்பாக பெற்றோர்களை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்துள்ளது குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஒப்புதல்.

பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யும் சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏறக்குறைய இரு மாதங்கள் ஆன பின்பே ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த ஒப்புதல் இன்னும்கூட சற்று முன்னதாகவே கிடைத்திருந்தால் தேவையற்ற மன உளைச்சல் தவிர்க்கப்பட்டிருக்கும்.

இப்போது, நுழைவுத் தேர்வு முறை கிடையாது என்பது சட்டப்பூர்வமாக உறுதியாகிவிட்டது. இனி பொதுப் போட்டியில் வாய்ப்பு இழந்த கிராமப்புற மாணவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை மலரும் நேரத்தில், சில நெருடலான நிகழ்வுகளும் நடக்கவே செய்கின்றன.

பொது நுழைவுத் தேர்வு முறையை அரசு ரத்து செய்துவிட்டாலும் தமிழகத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் (நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்) நுழைவுத் தேர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 15 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு பாடப் பிரிவுகளில் 30 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க முடியும்.

ஒரு மாணவன் எத்தனை தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவுத் தேர்வு எழுத முடியும்? ஒவ்வொரு நுழைவுத் தேர்வுக்கு அல்லது விண்ணப்பத்துக்கு குறைந்தது ரூ.500 செலவிட்டாக வேண்டும் என்றால், ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு இது எப்படி சாத்தியமாகும்?

இந்த தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழக அரசு வலியுறுத்தும் ஒற்றைச் சாளர முறைக்கு உடன்பட வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில், 2001-ம் ஆண்டு இதே போன்ற பிரச்சினையின்போது, தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் நுழைவுத் தேர்வு முறை ரத்துக்கு ஒப்புக்கொண்டாலும் நிர்வாக ஒதுக்கீட்டில் தங்களை அரசு கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றன.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) நோக்கமே மேலும் மேலும் தனியார் (நிகர்நிலை) பல்கலைக்கழகங்களை உருவாக்குவதுதான். ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இத்தகைய தனியார் பல்கலைக்கழகங்கள் பெருகியுள்ளன.

நுழைவுத் தேர்வு முறை அமல் செய்யப்பட்ட காலத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன. எனவே, மாணவர்களை வடிகட்டுவதற்கு ஓர் வழிமுறையாக நுழைவுத் தேர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 250 ஆகிவிட்டது. போதிய அளவு மாணவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகிறது. எனவே, நுழைவுத் தேர்வு முறை தேவையில்லை என்ற கல்வியாளர்களின் கருத்தும் கவனிக்கத் தக்கது.

அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே ஐஐடி, என்ஐடி-யில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 50 சதவீதம் அந்த மாநிலத்து மாணவர்களுக்கும் மீதி 50 சதவீதம் வெளிமாநில மாணவர்களுக்கும் என ஒதுக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் இந்தியா முழுவதும் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர வாய்ப்பு உள்ளது.

இதே போன்று தனியார் (நிகர்நிலை) பல்கலைக்கழகங்கள் ஒரே அமைப்பாக, இந்தியா முழுமைக்கும் ஒரேயொரு பொது நுழைவுத் தேர்வை நடத்தினாலும் வரவேற்கக் கூடியதே.

Posted in Abdul Kalam, Analysis, Anna University, APJ, Backgrounder, Education, Engineering, Entrance, Exam, History, IIM, IIT, JEE, Kalam, Law, medical, Options, President, professional, REC, Research, solutions, Suggestions, Tamil, Technology, Tests, UGC, University | Leave a Comment »