Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ice’ Category

Pa Ilankumaran: World Forests day – City Gardens & Wild woods

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

நகர வனம் நன்மை தரும் வனப்பு

ப. இளங்குமரன்

இயற்கையின் எதிர்விளைவால் பூமியின் பயன்பாட்டு அளவு சுருங்கிக்கொண்டு வருகிறது.

இதனால் எரிமலைகள் உமிழ்தல், கடல் நீர் உட்புகுந்து பூமி பரப்பு குறைதல், ஏரிகள் அளவு குறைதல், நில நீர் மட்டம் தாழ்ந்து பாலைவனமாக மாறுதல், வளி மண்டலத்தில் பழுப்பு மேகம் மூலம் அமில நீர் பொழிவு, பருவ நிலையில் கோளாறு, உயிரின மண்டலம் பரிதவிப்பு, உயிரினங்கள் அழிவு என பல்வேறு பாதக விளைவுகள்.

மனிதன் நாகரிக காலத்தில் என்று அடி எடுத்து வைத்தது முதல் இயற்கைக்கும் உயிரினச் சுற்றுச்சூழல் மூலாதாரங்களுக்கும் சீர்கேடுகளை உருவாக்கத் தொடங்கினான். இதன் பலன் புவி வெப்பமுறல், காலச்சூழ்நிலையின் மாற்றம், வெள்ளம், பூகம்பம், வறட்சி போன்றவையுடன் மண்ணில் உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், நீர்நிலைகள், அவற்றின் தனித்தன்மையை இழந்து ஆறுகள் நீர் அற்றனவாகவும், பனிமலைகள் வறண்டும் காடுகள் அழிந்தும் காணப்படுகின்றன.

காடுகள் சுரண்டப்பட்டதன் விளைவு மண்ணின் மகத்துவ குணம் மாறி வருகிறது.

உலக நாடுகளில் நகரங்களினால் உருவாக்கப்பட்ட இயந்திரத் தொழிற்சாலைகளில் இயற்கைச் சூழல் கட்டமைப்பு சிதைந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு மூலகாரணமாகச் சமன் செய்யக்கூடிய வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என்றும் வாகனப் போக்குவரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர்.

தற்போது நகரங்களின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெப்பம் அதிகரிப்பு, மன உளைச்சல், வெப்ப நோய்கள் இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. உலகத்தில் சராசரி வெப்ப நிலை 1950 ஆம் ஆண்டு 13.83 செல்சியஸ் அளவு இருந்தது. இன்று 14.36 செல்சியஸ் அளவுக்கு மேற்பட்டு வருகின்றது.

நகர வனம் என்பது நகரப் பகுதிகளில் சாலை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பது மட்டுமல்லாமல் “மாதிரிக் காடுகளை’ குறைந்த பரப்பளவில் ஏற்படுத்துவதும் ஆகும்.

நகரை ஒட்டிய பகுதிகளில் சுமார் 100 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் வனங்களை உருவாக்குவது ஆகும். இந்த வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இப்பகுதிகளில் கசிவு நீர் குட்டைகளையும் உருவாக்க வேண்டும்.

இம்மாதிரி வனப்பகுதிக்கான நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். தற்போது அரசு கட்டடம், சாலைகள், பேருந்து நிலையம், அரசு தொழிற்சாலைகள் அமைக்க எவ்வாறு நிலங்களை கையகப்படுத்துகிறோமோ அதைப்போன்றே நகரவனம் உருவாக்க நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.

“நகர வனத்தில்’ நீண்ட நாள்கள் மற்றும் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களை நட வேண்டும். சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் வனம் ஏற்படும்போது நகரின் வெப்பம் குறையும். நகரின் காற்றுமாசு சமன் செய்யப்படும்.

நிலைத்து நீடிக்கும் சுற்றுச்சூழலை உருவாக்க இதுபோன்ற வனம் பல வழிகளில் உதவி செய்யும். உயிரின மாற்றம் ஏற்பட்டு மனித சுகாதாரம் மேம்பாடு அடையும். நகரின் காற்று சீர்பட்டு தரமான காற்றை சுவாசிக்க முடியும். நகரின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

நீர்வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்ணின் உயிரின சூழல் பாதுகாக்கப்படும். மரங்களின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.

செழிப்பான பூமி என்பது இயற்கை சீர்கேடு விளைவிக்கும் காரணிகளை வேரறுத்து வனப்புமிக்க மரங்களை நடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

நாம் இன்றைய தினம் இயந்திரத் தொழில் நுட்பத்தில் முன்னேறிச் சென்றாலும் இயற்கை பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பின்னடைந்து வருகிறோம்.

எனவே இயற்கை மூலாதாரங்களைப் பெருக்கும் வகையில் இயற்கை மறுசீரமைப்பு பணிகளில் பயணிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

(இன்று உலக காடுகள் தினம்).


குடிநீர் வள நெருக்கடி அதிகரிக்கிறது, ஐ.நா மன்றம் எச்சரிக்கை

குடிநீர் நெருக்கடி
தண்ணீரைத் தேடி….

உலக குடிநீர் தினமான இன்று ஐ.நா மன்றம் வெளியிட்ட ஒரு எச்சரிக்கையில், முக்கியமான இந்த குடிநீர்வளம் வழங்கப்படுவது எல்லாக் கண்டங்களிலும் கடும் அழுத்தத்தில் வருவதாக கூறியுள்ளது.

உலகின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், அதாவது, 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்று மிகச்சமீபத்திய ஐ.நா மன்ற புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

சீதோஷ்ண மாற்றம் வறட்சியை அதிகரித்து, மழை பெய்யும் பருவங்களை மாற்றி, மலைகளின் பனிமுகடுகளிலிருந்து பனி உருகி தண்ணீர் கிடைப்பதைக் குறைக்கும் நிலையில் , இந்த நிலைமை அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் மோசமடையக்கூடும் என்று ஐ.நா மன்றம் கூறுகிறது.

2025ம் ஆண்டு வாக்கில் பூமியில் உள்ள மக்களில் மூன்றில் இரு பங்கினர் குடிநீர் பற்றாக்குறையில் வாழக்கூடும் என்று அது கூறுகிறது.

இந்த ஆண்டின் நீர் தினத்தன்று தண்ணீரை சேமிப்பதன் அவசியம் மற்றும் கிடைக்கும் தண்ணீரை அனைவரும் நியாயமாக பகிர்ந்து கொள்வதன் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.


துருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும்

இரா. நல்லசாமி

ஆண்டுதோறும் மார்ச் 23-ஆம் நாளை உலக வானிலை ஆய்வுக் கழகமும் அதன் 187 உறுப்பு நாடுகளும் “உலக வானிலை ஆய்வு நாளாக’ கொண்டாடுகின்றன.

1950-ல் உலக வானிலை ஆய்வுக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1951 முதல் ஐக்கிய நாட்டு சபையின் சிறப்பு முனையமாக அங்கீகரிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்நாள் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும். இவ்வாண்டின் மையக்கருத்து “துருவப் பகுதி வானிலையும் அதன் உலகளாவிய தாக்கமும்’ என்பதாகும்.

2007 – 08 உலக துருவப் பகுதி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துருவப் பகுதி ஆண்டு அனுசரிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். துருவப் பகுதிகளின் வானிலை ஏனைய உலகப் பகுதிகளின் வானிலையோடு நுணுக்கமான தொடர்புடையது.

1882 – 83ஐ முதல் துருவப்பகுதி ஆண்டாகவும், 1932 – 33ஐ இரண்டாம் துருவப்பகுதி ஆண்டாகவும் அனுசரிக்கப்பட்டது. மேலும் 1957 – 58இல் “உலக மண்ணியற்பியல் ஆண்டு’ கொண்டாடப்பட்டது.

துருவப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி குறைவாகையால் வானிலை ஆய்வு நிலையங்களும் குறைவு. எனவே இப்பகுதிகளின் வானிலையைப் பற்றி அறிய “துருவசுற்று செயற்கைக்கோள்களையே’ பெரிதும் நம்பியிருந்தனர். துருவப்பகுதிகளில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாகவும், அடுத்த ஆறு மாதங்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும்.

தற்போது செயற்கைக்கோள்களில் சிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகளின் மூலம் தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரையிலான துருவப் பகுதிகளின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் திசைவேகம், உறைபனிப் பாறைகளின் அளவு, அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற வழியேற்பட்டுள்ளது.

மேலும் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் மேலும் பல தகவல்களைத் தருகின்றன.

துருவப் பகுதி வானிலை ஆய்வுகளுடன் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தொடர்பு 1981-ல் தொடங்கியது. இந்தியாவின் முதல் “அண்டார்டிகா அறிவியல் பயணம்’ அந்த ஆண்டு தொடங்கியது. அண்டார்டிகாவில் “தக்ஷிண்கங்கோத்ரி’ என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஒரு தாற்காலிக வானிலைக் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

தரைநிலை வானிலைத் தகவல்கள், பனிப்படலத்தின் இயற்பியற் தன்மைகள், பெறப்படும் சூரிய வெப்பம், பனிப்படலங்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி ஆகியவை அந்நிலையத்தில் அளந்தறியப்பட்டது.

1984-ம் ஆண்டு முதல் “ஆண்டு முழுவதும் துறை அதிகாரிகளால் பராமரிக்கப்படும் நிலையமாக’ இது செயல்படத் தொடங்கியது. இரண்டாவது வானிலை கண்காணிப்பு நிலையம் அண்டார்டிகாவின் கிர்மேகர் மலைப்பகுதியில் “மைத்ரி’ என்ற இடத்தில் 1988 – 89-ல் அமைக்கப்பட்டது.

ஒன்பதாவது அண்டார்டிகா அறிவியல் பயணத்தின்போது தொடங்கப்பட்ட இந்நிலையம் ஒரு நிரந்தர வானிலை நிலையமாகும். 1990 முதல் “மைத்ரி’யில் மட்டும் நமது வானிலைக் கண்காணிப்பு நிலையம் செயல்படுகிறது “தக்ஷிண்கங்கோத்ரி’ நிலையம் மூடப்பட்டுவிட்டது.

உலக வானிலையோடு தொடர்புடைய பல தகவல்கள் “மைத்ரி’ வானிலைக் கண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படுகின்றன. “மைத்ரி’ நிலையத்தின் முக்கியமான பணிகள் வருமாறு:

தரைநிலை வானிலைத் தகவல்களைச் சேகரித்தல், சேகரிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் உலக வானிலை மையங்களுக்கு அனுப்புதல். தரைநிலை ஓசோன் மற்றும் வளிமண்டல ஓசோன் பற்றிய கணிப்புகளைச் சேகரித்தல். இதற்கென வளிமண்டலத்தில் பலூன் அனுப்பித் தகவல் சேகரிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.

கதிரவனின் பல்வேறு கதிர்வீச்சுகளால் வளிமண்டலத்தில் ஏற்படும் “வெப்பக் கலப்பு’ எவ்வளவு என்பதை “சன் – போட்டோமீட்டர்’ கொண்டு அளக்கப்படுகிறது.

துருவசுற்று செயற்கைக்கோள் மூலமாக மேகங்கள் பற்றிய தகவல்களும் வளிமண்டல வெப்பம், காற்று பற்றிய தகவல்களும் சேகரித்தல், பனிப்புயல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல். 1981-ல் தொடங்கி 2000 முடிய இருபது “அண்டார்டிகா அறிவியல் பயணங்கள்’ மேற்கொள்ளப்பட்டுள்ளன.

துருவப் பகுதி வானிலையை அறிய வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.

துருவப் பகுதிகள் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் கணிசமான அளவில் கிடைக்கும் இடங்களாகும். இது சம்பந்தமான பணிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகள் தேவைப்படுகின்றன. அங்கு வாழும் “எஸ்கிமோக்கள்’ போன்ற பழங்குடியின மக்களையும் “பனிக்கரடி’, “பென்குயின்’ ஆகிய துருவப் பகுதி விலங்குகளையும் பாதுகாக்க வானிலை ஆய்வுகள் பயன்படுகின்றன.

மேலும் பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் குழுக்கள் துருவப் பகுதிகளில் பல்துறை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பான பயணம், வாழ்க்கை ஆகியவற்றுக்கும் துருவப் பகுதி வானிலை பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன.

மேலும் துருவப் பகுதிகளின் வானிலை உலகின் ஏனைய பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. பூமத்தியரேகைப் பகுதி, துருவப் பகுதிகளைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிக சூரிய வெப்பசக்தியைப் பெறுகிறது.

இதன் தொடர்வினையாக பெருங்கடல்களும் வளிமண்டலமும் இவ்வெப்பச் சக்தியை துருவப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் துருவப் பகுதியின் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் உருகும்போது, கடல் நீரோட்டங்களின் தன்மை மாறிவிடும் அபாயம் உள்ளது. கடல் நீரோட்டங்களின் தன்மை மாறும்போது உலக வானிலையில் பெருமாற்றங்கள் தோன்றலாம். சுருங்கிவரும் பனிப்படலத்தின் காரணமாக கடல்நீரின் மட்டம் உயரக்கூடும்; உப்புத்தன்மை குறையக்கூடும்; கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும்; உறைபனி, துருவப்பகுதி வானிலை மாற்றத்தால் உருகத்தொடங்கும்போது பசுங்குடில் வாயுக்களில் ஒன்றான “மீத்தேன்’ வெளியிடப்படும். இது ஓசோன் படலத்தில் மாறுதல்களையும் அதன் தொடர்ச்சியாக உலகளாவிய வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

வரையறுக்கப்படாத எல்லைகளை உடைய அறிவியல் துறைக்கு “வானிலையியல்’ ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். “துருவப்பகுதி வானிலை’ இவ்வாண்டில் இயற்பியல், உயிரியல், வானிலையியல் மற்றும் சமூகவியல் அறிஞர்களால் மிக நுணுக்கமாக ஆராயப்படும் என்பதே இதனை நன்கு புலப்படுத்தும்.

உலகம் வளர்ச்சி பெற, துருவப்பகுதி வானிலையைக் கண்காணித்தலும், சரிவரப் புரிந்துகொள்வதும் மிக மிக அவசியமாகும். அதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

(கட்டுரையாளர்: உதவி வானிலை விஞ்ஞானி, மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை).

Posted in Acid Rain, Air, Antarctica, Arctic, Building, Carbon, City, Climate, Concerns, Drought, Dry, Earth, Earthquakes, emissions, Environment, Extinct, Floods, Forests, Gardens, Greenery, Ice, Impact, Industrialization, Issue, Kyoto, Lakes, Land, Nature, Ozone, Plants, Pollution, Population, Quality, Research, Rivers, satellite, Science, Snow, Trees, Village, Warming, Water, Weather | 5 Comments »

Lake Irrigation – Agriculture water sources: Backgrounder, Analysis & History

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

ஏரிகள் காப்போம்

திண்டிவனம் பஸ் நிலையத்தை ஏரியில் அமைப்பது தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் காரசாரமான அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விஷயத்தில் அரசியலை ஒதுக்கிவிட்டு தமிழக ஏரிகளின் இன்றைய நிலைமை, அதன் முந்தைய பயன், ஏரிகளை அரசும் மக்களும் புறக்கணித்ததால் ஏற்பட்டு வரும் இழப்புகள் ஆகியவற்றை ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏரிகள் உள்ளன. ஒவ்வொரு ஏரியும் நிரம்பியவுடன் மதகுகள் திறக்கப்பட்டு அடுத்த ஏரிக்குத் தண்ணீர் செல்லும்படியான அமைப்புகள் கொண்டவை. இந்தத் தொடர்ச்சி குறைந்தபட்சம் 15 ஏரிகள் வரையிலும்கூட இருக்கும்.

ஒவ்வொரு ஏரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெக்டேர் விவசாய நிலத்துக்குத் தண்ணீர் தரவல்லவை. இவற்றைப் பராமரிக்கும் பணி பயனாளிகளான மக்களிடம் அல்லது பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த ஏரிகள் ஆண்டுதோறும் நிரம்புபவை அல்ல. 5 ஆண்டுகளில் சராசரியாக 3 முறை மட்டுமே நிரம்பின. இதையெல்லாம் மனத்தில் வைத்து, அந்த ஏரிக்குரிய விவசாயிகள் பயிர்களை வகைப்படுத்திக் கொண்டார்கள். நீரைப் பகிர்ந்து கொண்டார்கள்.

தமிழகத்தில் 1960-ம் ஆண்டில்

  • ஆறு, வாய்க்கால் பாசனத்தின் மூலம் 881 ஆயிரம் ஹெக்டேர் (36 சதவீதம்)
  • ஏரிப் பாசனத்தில் 936 ஆயிரம் ஹெக்டேர் (38 சதவீதம்)
  • கிணற்றுப் பாசனத்தில் 597 ஆயிரம் ஹெக்டேர் (24 சதவீதம்)
  • மற்ற பாசனங்களில் 46 ஆயிரம் ஹெக்டேர் (2 சதவீதம்) என
  • மொத்தம் 2462 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயம் நடைபெற்றது.

புள்ளியியல்துறை தகவலின்படி ஏறக்குறைய அதே பரப்பளவில்தான் 2003-ம் ஆண்டிலும் விவசாயம் நடைபெற்றுள்ளது. ஆனால்,

  • 38 சதவீதமாக இருந்த ஏரிப் பாசனம் 18 சதவீதமாகவும்
  • ஆறு, வாய்க்கால் பாசனம் 26 சதவீதமாகவும் குறைந்துவிட்டது.
  • 24 சதவீதமாக இருந்த கிணற்றுப் பாசனம் 54 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

அதாவது ஆறு, வாய்க்கால் பாசனத்தில் குறைந்த 10 சதவீதமும் ஏரிப் பாசனத்தில் குறைந்த 20 சதவீதமும் சேர்ந்து 30 சதவீதம் விளைநிலங்கள் கிணற்றுப் பாசனத்துக்கு மாறியுள்ளன.

தமிழக விவசாயத்தில் 30 சதவீதம் கிணற்றுப் பாசனத்துக்கு மாறியுள்ளதால், பம்புசெட் மூலம் நீர் இறைக்கும் இலவச மின்சாரத்தின் அளவு உயர்ந்து மானியத்தின் அளவும் ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.

தமிழக அரசு- இதில் கட்சிப் பாகுபாடே வேண்டாம்- ஏரிகளைப் பாதுகாத்திருந்தால் 20 சதவீதம் விளைநிலங்களைக் கிணற்றுப் பாசனத்துக்கு மாறாமல் தடுத்திருக்க முடியும்.

1980 முதல் 2005 வரை பல்வேறு அமைப்புகள் மூலம் தமிழகத்தில் 2136 ஏரிகள் ரூ.473 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. இதில் உலக வங்கியும் நபார்டும் மட்டுமே ரூ. 150 கோடி வரை செலவிட்டுள்ளன. மாநில அரசு 290 ஏரிகளுக்காக ரூ.62 கோடி செலவிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரமே, அரசு ஏரிகளைக் காப்பதில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு ஒரு சான்று.

ஏரிகள் என்பவை பாசன நீருக்காக மட்டுமல்ல. மண் இழப்பைத் தடுத்தல், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பயன்பாடுகளும் ஏரிகளால் உள்ளன.

இன்று சேலத்தில் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் ஒரு ஏரிதான். அதன் பெயரே- பஞ்சம்தாங்கி ஏரி. எத்தகைய கடுமையான பஞ்சம் வந்தபோதும் வற்றாத ஏரி என்ற பொருளில் அவ்வாறு அழைத்து வந்தனர். ஆனால் அதற்கான நீர்வரத்துப் பாதைகளை அடைத்துவிட்டு, பல காலமாக நிரம்பாமல் வீணாகக் கிடக்கிறது என்று பொதுப்பணித்துறையின் சான்று பெற்று, பஸ் நிலையமாக மாறிவிட்டது.

இப்படியாகத்தான் எல்லா ஏரிகளையும் இழந்தோம், இழந்து வருகிறோம். இன்றைய தேவை “ஏரி காக்கும் அரசு’

மழைக் காலத்தில் சென்னை நகர் மிதந்ததைக் கண்ட பின்னும் ஏரிகள் மீது அக்கறை செலுத்தாமல் இருக்கலாமா?

====================================================

நன்னீர் பற்றாக்குறையால் திணறும் ஆசியா

கே.என். ராமசந்திரன்

திபெத் பீடபூமியில் ஏராளமான பனி குவிந்து கிடக்கிறது. அது உருகிப் பத்து பெரிய ஜீவநதிகளாகப் பாய்கிறது. திபெத்தின் சராசரி வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதன் காரணமாக அதிக அளவில் பனி உருகி அந்த ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். கொஞ்ச காலத்துக்குப் பிறகு எல்லாப் பனியும் உருகித் தீர்ந்து அந்த ஜீவநதிகள் மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஓடும் நதிகளாகிவிடக் கூடும். அதன்பின் மழை பொய்த்தால் வறட்சிதான்.

காடு அழிப்பு, கால்நடைகள் அளவுக்கு மீறி மேய்தல், தவறான நதிநீர் மேலாண்மை, தவறான நீர்ப்பாசன உத்திகள், நீர் மாசு போன்ற காரணங்களால் ஆசியாக் கண்டம் நன்னீர்ப் பற்றாக்குறையால் திணறுகிறது. அளவுக்கு மீறி நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுச் சுற்றுச்சூழல் சிதைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவும் சீனாவும் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளைப் பெருமளவில் சார்ந்திருக்கின்றன. அவற்றில் நீர் வரத்து குறைந்தால் இரு நாடுகளுக்குமிடையில் தண்ணீர்ப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவை நதிகளின் போக்கை மாற்றியமைக்க முனைந்தால் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகள் சண்டைக்கு வரும்.

இப்போதே சீனா சட்லஜ் நதி உற்பத்தியாகும் இடத்துக்கருகில் ஓர் அணையைக் கட்டியிருக்கிறது. அத்துடன் பிரம்மபுத்ரா நதியிலிருந்து வடக்கேயுள்ள மஞ்சள் நதிக்கு நீரை எடுத்துச் செல்லவும் திட்டமிடுகிறது. சீனாவின் நீர்த்தேவை முழுவதையும் திபெத்திலிருந்து நிறைவு செய்து கொள்ள அது முனையும்போது, இந்தியாவுடன் மோதல் ஏற்படுவது உறுதி.

ஆசிய நாடுகள் எல்லாவற்றிலுமே இதேபோன்ற எல்லைப் பிரச்சினைகளும் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளும் எழும். நாடுகளுக்கிடையில் போர்கள் கூட மூளலாம்.

திபெத்தில் சீனா ஏராளமான கனிமச் சுரங்கங்களைத் தோண்டி வருகிறது. அத்துடன் அங்குள்ள பனிமலைகள் மறைந்து தண்ணீர்ப் பஞ்சமும் ஏற்பட்டால் திபெத்தின் சுற்றுச்சூழலே முற்றிலுமாக வீணாகிப் போகும்.

இந்தியாவின் கங்கை – காவிரி இணைப்புக் கனவும் ஈடேறாது. உலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாக இந்தியத் துணைக் கண்டத்தில் சராசரி மழையளவு பன்மடங்கு அதிகமாகும் என்று சொல்லப்படுவது ஓர் ஆறுதலான செய்தி. அதை வீணாகாமல் சேகரித்து வைக்க பெரிய ஏரிகளையும் அணைகளையும் உடனடியாக உருவாக்கியாக வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

உலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாகக் கடல் நீர் மட்டம் உயர்ந்து உள்நாட்டுக்குள் பரவுவது, பெருமழையால் ஏற்படும் வெள்ளங்கள், கோடைகளில் கடும் வறட்சி போன்ற பேரிடர்கள் ஏற்படும் என்று சொல்கிறார்கள். அதன் காரணமாக மக்கள், குறிப்பாக ஏழை எளிய மக்கள் உள்நாட்டில் பத்திரமான இடங்களுக்குக் குடிபெயர்வார்கள். அது பல சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். இப்போதே வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகச் சுமார் இரண்டு கோடி மக்கள் இந்தியாவில் குடியேறியிருக்கிறார்கள். கடல் மட்டம் உயர்ந்தால் வங்கதேசம் முழுவதுமே மூழ்கிப் போகலாம். அதேபோல மாலத்தீவுகளும் மூழ்கி விடும்.

நெய்தல் நிலப்பகுதி வேலைவாய்ப்புகளும், உற்பத்திகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். டெல்டா பகுதிகளிலும், தாழ்வான நிலப்பகுதிகளிலும் நடைபெற்று வந்த விவசாயம் அழியும் ஆபத்தும் உண்டு. அதன் காரணமாக வேலையிழக்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கிப் படையெடுப்பார்கள். அவர்கள் வழக்கம்போல ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்துக் குடியேறுவார்கள். குளிர்காலங்களில் குளிர் குறைவாவது நோய்க்கிருமிகளைப் பரப்பும். கொசு போன்ற பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கும் உதவும். மேலும் கதகதப்பான வானிலையை உண்டாக்கும். நோய்கள் பெருகி அரசின் சுகாதாரப் பராமரிப்புச் சுமையை அதிகமாக்கும். தொழிலாளர்களும் பணியாளர்களும் நோய்வாய்ப்பட்டு சேவைத் துறைகளும் உற்பத்தித் துறைகளும் முடங்கும்.

உலகளாவிய வெப்பநிலை 6 செல்சியல் டிகிரி வரை உயர முடியும் எனப் பயமுறுத்துகிறார்கள். பசுங்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவைதான் உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்குக் காரணம். அந்த வாயுக்களை வளிமண்டலத்தில் பரப்புவதை நிறுத்திவிட்டால் கூட, இன்று வரை வளிமண்டலத்தில் கலக்கப்பட்டிருக்கிற கரிம வாயுக்கள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு வளிமண்டல வெப்பநிலையைத் தொடர்ந்து உயர வைத்துக் கொண்டேயிருக்கும்.

2099-ம் ஆண்டுக்குள் உலகளாவிய வெப்பநிலையில் 1.1 செல்சியஸ் டிகிரி வரை உயர்வு ஏற்படுவதைத் தடுக்கவே முடியாது.

Posted in ADMK, Agriculture, AIADMK, Analysis, Backgrounder, Bus Stand, China, Dhindivanam, Dindivanam, Dinduvanam, DMK, Drought, Environment, Farming, Global Warming, Himalayas, History, Ice, Irrigation, Lake, Lakes, Land, Pollution, Pumpset, River, Salem, Scarciity, SEZ, Snow, Statistics, Sutlej, Thindivanam, Tibet, Water, WB, Well water, world bank | Leave a Comment »