Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008
நிழற் படங்களல்ல… நிஜப்படங்கள்!
யுகன்
ஒரு கேனன் 5ஈ கேமிரா, ஒரு ஆப்பிள் லேப்-டாப் கம்ப்யூட்டர், ஏராளமான தன்னம்பிக்கையுடன் விமானமேறிய சாய் கிருஷ்ணன் என்னும் இளைஞர் போலியோவால் பாதிக்கப்பட்டவர், சமீபத்தில் ஜப்பானின் ஷிஷோகா நகரத்தில் நடந்த ஏழாவது சர்வதேச அளவிளான எபிலிம்பிக்ஸ் போட்டியில், புகைப்படப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றிருக்கிறார். சர்வதேச அளவில் உடல் திறன் குறைந்தவர்களுக்காக நடத்தப்படுவது எபிலிம்பிக்ஸ். இதில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது வரையான சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் சாய் கிருஷ்ணா பகிர்ந்து கொண்டதிலிருந்து…
“”எனக்குச் சின்ன வயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வத்தை வளர்த்தவர் என் தந்தை. அவர்தான் நான் ஏழாவது படிக்கும்போதே எனக்கு ஒரு ஹாட்-ஷாட் கேமிராவை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தாலும் இது மிகவும் காஸ்ட்லியான ஹாபியாக இருப்பதால், என்னுடைய முயற்சிகளுக்குப் பொருளாதார ரீதியிலான வேகத்தடை நிச்சயம் இருந்தது. இதையும் தாண்டி நான் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு எனக்கு உதவியாக இருந்தது வித்யாசாகர் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்.
தேசிய அளவில் நான் உடல் திறன் குறைந்தவர்களுக்கான போட்டியில் பங்கெடுப்பதற்கு, “ஆம்பிஷன் ஃபோட்டோகிராஃபி அகடமி’யின் நிறுவனரான ராஜா பொன்சிங் எனக்கு நிறைய நுட்பங்களைக் கற்றுத் தந்தார். இவரைத் தவிர, ஷரத் அக்ஷர், ராஜீவ் மேனனின் “மைன்ட்ஸ்க்ரீன் ஃபோட்டோகிராஃபி இன்ஸ்டிட்யூட்’டின் முதல்வரான ஞானசேகரன் மற்றும் சுரேஷ், குமாரசுவாமி போன்றவர்களின் வழிநடத்துதலுடன்தான் நான் தேசிய அளவிலான போட்டிகளில் ஜெயித்தேன்.
ஜப்பானில் நடந்த எபிலிம்பிக்கைப் பொறுத்தவரை இது சர்வதேச அளவில் நடக்கும் போட்டி என்பதால் அதற்குத் தகுந்த தொழில்நுட்பத்துடன் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் போட்டிக்காக நான் பணிபுரியும் ஹெச்.சி.எல். நிறுவனமே கேனன்5டி கேமிராவையும், ஆப்பிள் லேப்-டாப்பையும் வழங்கியது. மத்திய அரசு மற்றும் தேசிய எபிலிம்பிக் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் உதவியுடன்தான் என்னால் ஜப்பானுக்குப் போய் இந்தப் போட்டியில் பங்கேற்க முடிந்தது.
உலகம் முழுவதுமிருந்தும் பேச்சுத் திறன், செவித் திறன், கை, கால் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளில் குறையுள்ள 400க்கும் மேற்பட்டவர்கள் 120 நாடுகளிலிருந்து பங்கேற்றனர். புகைப்படப் போட்டியில் 25 நாடுகளிலிருந்து 26 பேர் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து புகைப்படப் போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நானும்,
கோவையைச் சேர்ந்த ஹரி என்பவரும்தான்.
டெய்லரிங், மோட்டார் ஆக்டிவிடி, எலக்ட்ரானிக்ஸ் அசெம்பிளிங், ஸ்வெட்டர் பின்னுவது, கணிப்பொறியிலேயே வரைவது… என்று பல வகையான போட்டிகளும் நடந்தபடி இருக்கும். இந்தப் போட்டியில் பங்கெடுப்பவர்களையே, அந்தச் சூழ்நிலையின் பின்னணியோடு, பிரம்மாண்டத்தோடு எத்தனை படம் வேண்டுமானாலும் எடுக்கலாம்.
இறுதியாக நாம் எடுத்தவற்றிலிருந்து ஐந்து புகைப்படங்களை நாமே தேர்ந்தெடுத்து, அதற்குப் பொருத்தமான “கமெண்ட்’ டையும் எழுதிச் சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச அளவில் புகைப்படம் எடுப்பதில் புகழ்பெற்ற நடுவர்களைக் கொண்ட குழு இறுதி முடிவை எடுக்கும். என்னைப் பொறுத்தவரை நான் எப்போதுமே சப்ஜெக்ட்டிற்குத்தான் படமெடுக்கும்போது முன்னுரிமை கொடுப்பேன். பின்னணிக்கு அல்ல. இந்த அடிப்படையில் “வெளிச்ச துவாரம்’ என்னும் தலைப்பில் நான் எடுத்த உடல் திறன் குன்றியவரின் திறனும், ஸ்வெட்டர் பின்னும் கைகளின் திறனை வெளிப்படுத்தும் புகைப்படமும், “அசெம்பிளிங்’ செய்யும் பெண்ணின் பார்வைக் கூர்மையை விளக்கும் புகைப்படமும் எனக்கு இந்தப் பரிசை வாங்கித் தந்ததாக நம்புகிறேன்.
புகைப்படம் எடுப்பதற்கு நாம் தேர்ந்தெடுத்த கோணம், நாம் முன்னிலைப்படுத்தியிருக்கும் சப்ஜெக்ட், குறிப்பிட்ட புகைப்படம் ஒட்டுமொத்தமாகத் தெரிவிக்கும் செய்தி… போன்ற விஷயங்களின் அடிப்படையில் 26 போட்டியாளர்களிலிருந்து மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தனர். நான் வெள்ளிப் பதக்கம் பெற்றேன். கோவையிலிருந்து வந்திருந்த ஹரி வெண்கலப் பதக்கம் பெற்றார். பங்கேற்ற 26 பேரில் 21 பேர் தொழில்முறைப் புகைப்படக்காரர்கள் என்பது முக்கியமான விஷயம். கடந்த இரண்டு முறையாக இந்தச் சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆஸ்திரிய நாட்டின் போஸ்க்தான் இந்தமுறையும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் இந்தமுறை ஆறாவது இடத்திற்குப் போய்விட்டார். தற்போது ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவர்தான் தங்கம் வென்றார்.
உலக அளவிளான எபிலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்றுத் திரும்பியிருக்கிறோம். அரசு சார்பாகவும் சரி, தனியார் சார்பாகவும் சரி எந்த பாராட்டும்,அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை. எவ்வளவோ விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரும் பத்திரிகைகளும் ஊடகங்களும் கூட எங்களைத் திரும்பிப் பார்க்காமல் இருப்பதுதான் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. மற்றபடி, சாமான்ய மக்களின் வாழ்க்கை அனுபவங்களை நிழற் படங்களாக அல்ல… நிஜப்படங்களாகப் பதிவு செய்யவேண்டுமென்று பெரிய திட்டமே இருக்கிறது. பார்க்கலாம்…” என்றார் நெகிழ்ச்சியுடன் சாய் கிருஷ்ணன்.
Posted in 5MP, Abilympics, Achievements, Achievers, Camera, Cannon, Canon, Challenged, Coimbatore, disabilities, disability, Disabled, Faces, Films, handicap, Handicapped, Hari, HCL, Human Resources, IAF, India, International, Kovai, NAAI, Notable, people, Photographer, Photographs, Photos, Pictures, Polio, Saikrishnan, Shizuoka, Skills, Sponsors, Sponsorships, Sponz, Vidyasagar, vocational, World | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007
வானில் ஓர் எல்லைப் பிரச்னை!
வி. கிருஷ்ணமூர்த்தி
இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பு வகிக்கும் பாதுகாப்புத் துறைக்கும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே தற்போது எல்லைப் பிரச்னை எழுந்துள்ளது.
இவை இரண்டும் தனித்தனித் துறைகள்தான் என்றாலும் இரண்டுக்கும் களம் (AIRSPACE) ஒன்றுதான். இமயம் முதல் இந்தியப் பெருங்கடல்வரையும், அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடாவரையும் பெரும்பாலான வான்பகுதி இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதிகளில் பறக்கும் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்புத் துறையின் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது. இதுதவிர நாட்டில் பல்வேறு பயிற்சித் தளங்கள் உள்பட சுமார் 60 இடங்களில் தரைத் தளங்கள் விமானப்படையின்கீழ் செயல்படுகின்றன.
இந்த விமானத் தளங்கள் உள்ள பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பல்வேறு பிரச்னைகள் எற்படுகின்றன. உதாரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானில் பெரும் பகுதி, தாம்பரம் விமானப் படைத்தளம் மற்றும் அரக்கோணத்தில் கடற்படையின் விமான தளம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றின் எல்லைகளுக்கு அப்பால் மீதம் உள்ள வான்பகுதியை நம்பியே சென்னை விமான நிலையம் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய வான்பகுதி எல்லைப் பிரச்னை காரணமாக சென்னைக்கு கிழக்கே புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டமே கைவிடப்பட்டது.
நாட்டில் தற்போது 13 சர்வதேச விமான நிலையங்கள் உள்பட 126 விமான நிலையங்கள் உள்ளன. நாட்டின் மொத்த வான்பகுதியில் 28 லட்சம் சதுர கடல்மைல் (நாட்டிக்கல் மைல்) மட்டுமே விமானப் போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர விமான நிலையங்கள் இல்லாத இடங்கள் உள்பட 28 விமானப் படைத் தளங்களில் சிவில் விமானங்களுக்கென தனிப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறிய விமான நிலையங்கள், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு இல்லாததால் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டும் தற்போதைய தேவை மற்றும் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டும் விமானப் போக்குவரத்துக்கான புதிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது.
இதில், பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல வான்பகுதிகளை சிவில் விமானப் போக்குவரத்துக்கு அளிக்க வேண்டும். நாட்டின் வான் பகுதியில் விமானப் படையின் கட்டுப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில அம்சங்கள் பாதுகாப்புத் துறைக்கும் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே வெளிப்படையான மோதலுக்கு வழிவகுத்துள்ளது.
இதுதவிர, விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், இந்தத் துறையின் செயலர், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் தொடர்ந்து வான் பகுதி தொடர்பான பிரச்னையில் பாதுகாப்புத் துறையை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் இத்தகைய வெளிப்படையான விமர்சனங்கள் பாதுகாப்புத் துறை தரப்பை ஆத்திரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி வரைவு விமானப்போக்குவரத்துக் கொள்கை தொடர்பான ஆட்சேபனைகளைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். விமானப்போக்குவரத்தில் பல்வேறு நிலைகளில் படிப்படியாகத் தனியார்மயத்தை ஊக்குவித்துவரும் விமானப்போக்குவரத்துத் துறையை நம்பி விதிகளை தளர்த்த முடியாது என்பதே அந்தோனியின் வாதம். பாதுகாப்புத் துறையின் எதிர்ப்பை அடுத்து விமானப் போக்குவரத்துக்கான வரைவுக் கொள்கை இறுதி வடிவம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் இரு முக்கியத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இத்தகைய பிரச்னைக்குத் தீர்வுகாண வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் பல்வேறு துறை அமைச்சர்கள் அடங்கிய உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 1999-ல் ஏற்பட்ட கார்கில் சண்டைக்குப் பின்னர் வான்பகுதி மேலாண்மைக்கான ஓர் அதிகார அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டம் முறையாக நிறைவேறாததே தற்போதைய பிரச்னைக்குக் காரணம்.
1995-ல் ரஷிய விமானங்கள் புருலியாவில் ஆயுதங்களைக் கொட்டின, 2001 செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் உலக வர்த்தக மையம், ராணுவத் தலைமையகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த சிறிய ரக பயணி விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, அண்மையில் இலங்கையில் விடுதலைப்புலிகள் வான்தாக்குதலைத் தொடங்கி இருப்பது, சில பயங்கரவாத இயக்கங்கள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பது ஆகியவை நாட்டின் வான்பாதுகாப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால்தான் நாட்டின் வான்பகுதி எல்லைப் பிரச்னைக்குச் சரியான தீர்வைக் காண முடியும். நாட்டின் பாதுகாப்பா, விமானப் போக்குவரத்து வளர்ச்சியா? என்றால் பாதுகாப்பான விமானப்போக்குவரத்து என்பதே அனைவரின் கருத்தாகும்.
விமானப்படை, விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் அடங்கிய வான்பகுதி மேலாண்மைக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்துவதே தற்போதைய பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்து.
Posted in AAI, Aeronautics, Air, Aircraft, Airforce, Airport, Airports, airspace, AK Antony, Analysis, Antony, ATC, Attacks, aviation, Backgrounder, Boeing, Cabinet, Civil, commercial, Courier, defence, Defense, Domestic, Eelam, Eezham, Fighter, Flights, Fly, Freight, Govt, HAL, IAF, International, Jets, Kargil, LTTE, Management, Marshal, Marshalls, Meenambakkam, MIG, Military, Navy, Op-Ed, Opinion, passenger, Patel, Pilots, Planes, Policy, Praful Patel, Protection, Share, Strategy, Terrorism, Thrisoolam, Trisoolam, World, Zone | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007
பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: விமானி சாவு
பெங்களூர் எலகங்கா விமானப் படை பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கிக் கிடக்கும் விமானப் படை ஹெலிகாப்டர். இவ் விபத்தில் ஒரு விமானி உயிரிழந்தார்.
பெங்களூர், பிப். 3: கர்நாடக மாநிலம், பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானப்படை விமானி இறந்தார்; மற்றொரு விமானி காயமடைந்தார்.
பெங்களூர் எலகங்கா விமானப்படை பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டரில் (ஏஎல்எச்) விமானப்படை விமானிகள் பிரியே சர்மா, வி.ஜெய்டெலே ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டு 9-வது ஓடு பாதையில் தரையில் விழுந்து நொறுங்கியது. உடனடியாக தீப்பிடித்துக் கொண்டது. இதைக் கண்காணித்த விமானப்படையினர் தீயணைப்பு வாகனத்துடன் ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரியே சர்மாவையும், ஜெய்டேலேயையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
ஆனால் பிரியே சர்மா வழியிலேயே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெய்டேலே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்பரை ஓட்டிச் சென்ற விமானிகள் இருவரும் விமானப்படையில் சாகசங்கள் நிகழ்த்தும் “சரங்க்’ படைப்பிரியைச் சேர்ந்தவர்கள்.
பெங்களூரில் பிப்ரவரி 7-ம் தேதி சர்வதேச விமான கண்காட்சி துவங்குவதையடுத்து சரங்க் படைப் பிரிவினர் எலகங்கா விமான பயிற்சி நிலையத்தில் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டபோதுதான் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
இதுகுறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நீதிமன்றம் (சிஓஐ) விசாரணை நடத்தும். இந்த விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றார்.
Posted in advanced light helicopter, Air Force, ALH, Bangalore, Chopper, crash, Defense, Dhruv, HAL, Helicopter, Hindustan Aeronautics Limited, IAF, Indian Air Force, pilot, Priye Sharma, rehearsals, Squadron Leader, Training, V Jetley, Wing Commander, Yelahanka | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007
இந்திய விமானப் படையின் புதிய தலைமைத் தளபதி ஃபாலி எச் மேஜர்
புதுதில்லி, ஜன. 31: இந்திய விமானப் படையின் அடுத்த தலைமைத் தளபதி(ஏர் சீஃப் மார்ஷல்)-யாக ஃபாலி எச் மேஜர் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டார்.
விமானப்படையின் கிழக்குப் பிரிவின் தலைமைத் தளபதியாக அவர் தற்போது இருந்து வருகிறார். தலைமைத் தளபதியாக பொறுப்பேற்க இருக்கும் முதல் “ஹெலிகாப்டர் பைலட்’ இவர்தான்.
தற்போது விமானப் படை தலைமைத் தளபதியாக இருக்கும் எஸ்.பி.தியாகி வரும் மார்ச் 31-ல் ஓய்வு பெறுகிறார். அதன்பிறகு மேஜர் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.
இவரைத் தேர்வு செய்ததன் மூலம், போர் விமான பைலட்டுகள்தான் இந்திய விமானப் படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்க முடியும் என்ற மரபு மாற்றப்பட்டுள்ளது.
Posted in Air Chief Marshal, Air Marshal, Defense, Fali H Major, fighter pilots, Helicopter pilot, IAF, India, Indian Air Force, Pakistan, S P Tyagi, seniority | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007
5 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரியஆயுதச் சந்தையாக மாறும்: அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனம் தகவல்
புதுதில்லி, ஜன. 31: உயர் ரக போர் ஆயுதங்களை இந்திய ராணுவத்துக்கு விற்கத் தயாராக இருப்பதாக அமெரிக்காவின் முன்னணி ஆயுத தயாரிப்பு நிறுவனமான ரேதியான் கூறியுள்ளது.
5 ஆண்டுகளில் ரேதியான் நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பதற்கான மிகப்பெரிய, மிகமுக்கியமான சந்தையாக இந்தியா மாறும் எனவும் அந் நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்ட ஆயுத நிறுவனம் ரேதியான். அந் நிறுவனத்தின் ஆசிய விற்பனைப் பிரிவு தலைவர் அட்மிரல் (ஓய்வு) வால்டர் எஃப் டோரன், தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தட்டுப்பாடின்றி கிடைக்கக் கூடிய உயர் ரக போர்த் தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதில் எவ்விதத் தயக்கமும் இல்லை. அமெரிக்க ஏவுகணைகள், விண்வெளி சாதனங்கள் மற்றும் பிற முன்னணி தொழில்நுட்பங்களை இந்திய ராணுவத்திற்கு வழங்க ரேதியான் விருப்பம் கொண்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் ரஷிய தொழில்நுட்பங்களே பெருமளவு இடம்பெற்றுள்ளன. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் தயாரிப்பு போர்த் தளவாடங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் மிகப்பிந்தி நுழைந்துள்ள அமெரிக்க நிறுவனங்களால் இந்திய ஆயுதச் சந்தை மிகவும் போட்டி மிகுந்ததாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் மாற்றமடையும்.
தற்போது ரேதியான் நிறுவனத்தின் இந்திய விற்பனை ரூ.135 கோடி அளவில்தான் உள்ளது. ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் எங்கள் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறும் என்றார் டோரன். இது குறிப்பாக எந்த அளவு வளர்ச்சி அடையும் என்பதைத் தெரிவிக்க மறுத்த டோரன், பல நூறு கோடி அமெரிக்க டாலர்கள் அளவில் விற்பனை இருக்கும் என வல்லுநர்கள் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
Posted in armed forces, Arms, Army, Boeing, Bombs, cruise missiles, F-16, F-18/A, F18, IAF, India, Lockheed-Martin, Massachusetts, Military, Missile, missile shield, Pakistan, Patriot II, Raytheon, Technology, weapon | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006
இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது: பைலட் தப்பினார்
சிலிகுரி (மேற்கு வங்கம்), அக். 20: இந்திய விமானப்படையின் மிக் 27 ரக போர் விமானம் ஜல்பைகுரி மாவட்டத்தில் வயல் ஒன்றில் வியாழக்கிழமை விழுந்து நொறுங்கியது. எனினும் பைலட் உயிர் தப்பினார்.
இந்த ஆண்டில் விபத்துக்குள்ளாகும் 6-வது போர் விமானம் இது. உயிர்தப்பிக்க விமானத்திலிருந்து வெளியேறியபோது பைலட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர் ஹசிமாரா விமான தள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வயலில் விழுந்த உடனேயே அந்த விமானம் தீப்பற்றி எரிந்தது. விமானம் விழுந்ததால் அந்த பகுதி வீடுகள் ஏதாவது சேதம் அடைந்தனவா அல்லது யாராவது உயிரிழந்தனரா என்பது பற்றி உடனடியாக தகவல் இல்லை.
Posted in Aamir Khan, Air Force, crash, Defense, IAF, India, maadhavan, MiG-27, Military, Rang de basanthi, West Bengal | Leave a Comment »