Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Hundi’ Category

Protect the Hindu Temples and cherish the Heritage – KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

திருக்கோயில்களைக் காப்போம்!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான கோயில்கள் உள்ளன; அதாவது, சுமார் 32,000 கோயில்கள் இருக்கின்றன. மடாலயங்கள், சமய அறக்கட்டளை போன்ற இந்து சமய அமைப்புகளின் எண்ணிக்கை 34,160. இவற்றின் சொத்துகள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 20 கோடிக்குமேல் வருவாய் கிட்ட வேண்டும். ஆனால் கிடைக்கும் வருமானம் மிகக்குறைவே. இந்தச் சொத்துகளை, இடையே இருப்பவர்கள் அனுபவித்து வருகின்றனர்.

இத்திருக்கோயில்கள் கடந்தகாலங்களில் மன்னர்களாலும் ஜமீன்தார்களாலும் வணிகர்களாலும் கட்டப்பெற்றவை. கோயில்களின் நிர்வாகம், பூஜைகள் தங்குதடையின்றி நடக்கக்கூடிய வகையில், மானியங்கள், கட்டளைகள் நிறுவப்பட்டன.

சிற்பம், ஓவியம், சமயசாஸ்திரம், கலை, இலக்கிய ஆராய்ச்சி போன்ற அனைத்துக் கலைகளையும் வளர்க்கும் அமைப்புகளாக கோயில்கள் இருந்தன. பஞ்சநிவாரணப் பணிகளைக் கோயில் நிர்வாகம் மேற்கொண்டது என வரலாறு கூறுகிறது. கோயில்களின் சமுதாயப் பணி குறித்தும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கோயில்களில் கொள்ளை தொடர்பான செய்திகளும் தொடர்கின்றன:

  • குமரி மாவட்டம், திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் கலசங்கள், கிரீடம் திருட்டு;
  • களக்காட்டில் ஒரு கோடி பெறுமான கோயில் நகைக் கொள்ளை;
  • திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் காணாமல் போனது;
  • ராமனைக் கண்விழித்துப் பாதுகாத்த லட்சுமணனின் சிலை, ராமேஸ்வரத்தில் களவு போனது;
  • 1971-ல் திருவெள்ளரை ஸ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம், குத்தகை வருமானம் சரியில்லையென்று காரணம்காட்டி குறைந்தவிலைக்கு அரசியல் கட்சிக்காரர்களுக்கு விற்கப்பட்டது;
  • தஞ்சை மாவட்டம் பத்தூர் விசுவநாதசாமி ஆலயத்தில் ரூ. 3 கோடி பெறுமான நடராஜர் விக்ரகம் திருடப்பட்டது; பின்னர் லண்டனுக்குக் கொண்டுசெல்லப்பட்டு மீட்கப்பட்டது;
  • தஞ்சை அரண்மனை தேவஸ்தான பொறுப்பில் உள்ள 88 கோயில்களிலும் களவு;
  • வறுமை தாங்காமல் 3 அர்ச்சகர்கள் தற்கொலை;
  • சமயபுரம் உண்டியலில் தங்கக் காசுகள் மாயம்; மன்னார்குடி கோயிலில் நகைத் திருட்டு; நாகை, நீலாயதாட்சி அம்மன் கோயிலில் “கோமேதக லிங்கம்’ களவு போனது; புதுக்கோட்டை திருப்புனவாசல் கோயில் கலசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கலசம் மாயம்; நெல்லையப்பர் கோயில் நகைக் கொள்ளை – நிர்வாக அதிகாரியே உடந்தை;
  • காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் நகைத் திருட்டு;
  • மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 112 கிரவுண்டு நிலத்தைக் குறைந்தவிலைக்கு அரசாங்கத்திற்கு பட்டா செய்து தந்ததில் கோயிலுக்கு இழப்பு;
  • கோவில்பட்டியில் சிவஞானபுரம் பத்ரகாளியம்மன் கோயில் கொள்ளை;
  • விருதுநகர் மாவட்டம், முத்துராமலிங்கபுரம், கங்காபரமேஸ்வரி கோயில் கொள்ளை என – பட்டியல் நீள்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மனுக்குச் சாற்றப்பட்ட நகைகளை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று அதைப்போல் நகைசெய்துவிட்டு திருப்பித் தருவதாக விக்டோரியா மகாராணி குடும்பத்தினர் கேட்டபோது, கோயில் நிர்வாகம் சம்மதிக்கவில்லை. நகைகளை புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொள்ள அனுமதித்தனர். மத உணர்வுகளை அரச குடும்பத்தினர் அன்று மதித்தனர்.

கோயில்களில் பல கோடி பெறுமான நகைகள், சிலைகள் கொள்ளை போகின்றன. இதைத் தடுக்க ஆட்சியாளர்கள் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோயில் நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பார்வையில் இருந்தது. அதற்குப் பின்பு மடாதிபதிகள், ஜமீன்தார்கள், உள்ளூர் வணிகர்கள், செல்வந்தர்கள் பொறுப்பில் நிர்வாகம் அளிக்கப்பட்டது. சொத்துகளைக் கண்காணிக்க சுயஅதிகாரம் கொண்ட குழுவிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. நீதி கட்சி ஆட்சிக்காலத்தில், கோயில் பாதுகாப்புச் சட்டம் வந்தது. ஆணையர் தலைமையில் வருவாய் வாரியம் நிறுவப்பட்டது.

கோயில் வரவு – செலவுக் கணக்குகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டன. 1940-ல் ஆர்.பி. கிருஷ்ண அய்யர் தலைமையில் ஒரு குழு, 1943, 1944, 1946, 1954, 1956, 1981-ல் இந்து அறநிலையச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்தது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நீதிபதி கிருஷ்ணசாமிரெட்டி தலைமையில் கோயில் நிர்வாகச் சீர்திருத்தங்களை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. பல்வேறு பரிந்துரைகளை அக்குழு அளித்தது.

தஞ்சை பெரியகோயிலுக்கு மன்னன் ராஜராஜனால் 12,000 வேலி நிலம் கொடையாக வழங்கப்பட்டது என்பது கல்வெட்டு செய்தி. ஆனால் இந்த நிலம் தற்போது அக்கோயிலுக்குச் சொந்தமில்லை என்பது அதிர்ச்சிதரும் செய்தி. திருச்செந்தூர் கோயில் வேல் திருட்டு தொடர்பாக நீதிபதி பால் குழு சில பரிந்துரைகளைச் செய்தது:

அறங்காவலர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், மக்களால் மதிக்கப்படுபவர்களாகவும், பொருளாதார வசதி உடையவர்களாகவும், சமயப்பற்று உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அறங்காவலர் குழுத்தலைவர் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கோயில் அமைந்துள்ள அப்பகுதியில் வசிப்பவரே அறங்காவலர் குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அதிக வருமானம் உள்ள பெரிய கோயில் உண்டியல்களுக்கு இரட்டைப்பூட்டு முறை உள்ளது. ஒரு கொத்துச்சாவி நிர்வாக அதிகாரியிடம், மற்றொன்று அறங்காவலர் குழுத் தலைவரிடமும் உள்ளன. இதனால், நிர்வாக அதிகாரியும், குழுத்தலைவரும் ஒன்று சேர்ந்து தவறுசெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஒரு சாவிக்கொத்தை உதவிஆணையாளரிடம் அல்லது துணைஆணையாளரிடம் கொடுக்க வேண்டும். உண்டியலைத் திறக்க, சாவிக்கொத்தை அனுமதியளிக்கப்பட்ட ஆய்வாளர் மூலம் அவர்கள் கொடுத்து அனுப்பலாம்; அந்த ஆய்வாளர் உண்டியல் திறக்கும்போதும், எண்ணும்போது இருக்க வேண்டும்.

உண்டியல்களில் இரட்டைப்பூட்டின் ஒரு சாவிக்கொத்தை அறங்காவலர் குழுத்தலைவரிடமிருந்து வாங்கி அதனை வட்டாட்சியாளர் அல்லது கோட்டாட்சி ஆட்சியாளர் பாதுகாப்பில் வட்டக் கருவூலத்தில் வைத்திருப்பது நலம்.

சரிபார்ப்பு அதிகாரி ஒவ்வொருவரும் ஒரு தனி முத்திரையை வைத்திருப்பது அவசியம். அம்முத்திரை குறிப்பிட்ட அதிகாரியின் முத்திரை என்பதுதான் என்பதைக் காட்டும்வகையில், அம்முத்திரைகளின் அடையாளக் குறியீடுகள் அமைந்திருக்க வேண்டும். காணிக்கை எண்ணும்போது பொதுமக்கள் பிரதிநிதிகள் இரண்டு பேராவது இடம்பெற வேண்டும்.

1960-ம் ஆண்டு மத்திய அரசு சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் ஒரு குழு கோயில் நிர்வாகத்தை ஆராய அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் அறநிலைய ஆணையர், பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் போன்று சுயஅதிகாரம் கொண்டவராக நியமிக்கப்பட வேண்டும். அறநிலையப் பிரச்னைகளைத் தீர்க்க ஒரு தீர்ப்பாயமும் அமைக்க வேண்டும் என்று பரிந்துரையும் செய்தது. இந்தப் பரிந்துரைகளை எந்த மாநிலமும் இதுவரை செயல்படுத்தவில்லை.

கோயில்கள், ஊழல்பெருச்சாளிகளின் கூடாரங்களாக மாறும்முன், அவற்றின் கலைச்செல்வங்களையும், சொத்துகளையும் பாதுகாக்க வேண்டும். அதை அழிக்கின்ற சூழ்நிலையை நாம் அனுமதிக்கக்கூடாது. எனவே, கோயில்கள் அனைத்தும் சுயஅதிகார அமைப்புக் குழுவின்கீழ் கொண்டு வரப்பட வேண்டும். நீதிபதிகளின் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும்.

கோயில்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு அகராதியை அரசு வெளியிட வேண்டும். தலவரலாறு, சமயநூல்களை மலிவு விலையில் வெளியிட வேண்டும். கோயில் வளாகங்களில் சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். அதிக வருமானமுள்ள ஆலயங்களில் அனாதை இல்லங்கள், பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளிகளை ஏற்படுத்தலாம். அர்ச்சகர்கள், ஓதுவார்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பண்டைய அரசர்கள் கட்டிய பல கோயில்கள் அழிந்துவிட்டன. பல கோயில்களில் வெளவால்கள், பெருச்சாளிகள் பெருகியுள்ளன. புதர்கள் மண்டியுள்ளன. தெப்பங்களும் சீர்கேடடைந்துள்ளன. இவற்றைச் சீரமைக்க வேண்டும். சில தனியார் நிறுவனங்கள் ஆலயப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

1984-ல் கோயில் சிலைகளை அமெரிக்காவுக்கு எடுத்துச்செல்ல முயற்சி நடந்தபோது நாடாளுமன்றத்தில் வைகோ கண்டனக் குரல் எழுப்பினார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இதுகுறித்து பழ. நெடுமாறன் எடுத்துரைத்தார்.

ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; நமது வரலாற்றைச் சொல்லும் அற்புதக் கொடைகளும் ஆகும். இவற்றைக் காப்பது நம் கடமை!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in CE, Culture, Devasthanam, Devaswom, Heritage, Hindu, Hinduism, HR, Hundi, Income, Money, priests, Protect, Protection, Radhakrishnan, Religion, Security, Temples | Leave a Comment »

TTD vs Himalaya Sampadha Samratchana Samithi

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

திருப்பதி தேவஸ்தான நிலத்துக்கு ஆபத்து!

ஹைதராபாத், ஜூன் 13: திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமாக ரிஷிகேசத்தில் உள்ள நிலங்களைக் கைப்பற்ற நில ஆக்கிரமிப்பாளர்களும், “”ரியல்-எஸ்டேட் மாஃபியா”க்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

70 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலங்களைக் காப்பாற்ற, இவற்றுக்கு வேலி அமைப்பது என்ற முடிவை தேவஸ்தானம் எடுத்திருக்கிறது.

ஆஸ்ரம வரலாறு:

ஸ்வாமி சச்சிதானந்த சரஸ்வதி என்பவர் ஆந்திர ஆஸ்ரமத்தை 1942-ம் ஆண்டு ரிஷிகேசத்தில் தொடங்கினார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆஸ்ரமத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பொறுப்பில் ஒப்படைத்தார். சமீபத்தில் அந்த இடங்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் மாற்றப்பட்டன.

இந் நிலையில், ஆந்திர ஆஸ்ரமத்தில் உள்ள நிலங்களையும் கட்டடங்களையும் மேம்படுத்தியும் புதிதாக வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடப்போவதாகவும் உள்ளூரைச் சேர்ந்த சில நிறுவனங்கள் சமீபகாலமாக விளம்பரப்படுத்த ஆரம்பித்தன.

தேவஸ்தானத்துக்கு நிதிச்சுமை இல்லாமல் நன்கொடைகளைத் திரட்டி இப் பணிகளைச் செய்யப்போவதாகவும் அவை கூற ஆரம்பித்தன. இப்போது இந்த நிலங்களுக்கும் கட்டடங்களுக்கும் பொறுப்பாளராக உதவி செயல் அதிகாரி ஒருவர் தேவஸ்தானத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சமிதியின் விஷமம்:

ரிஷிகேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும், “”இமாலய சம்பாத சம்ரட்சண சமிதி” என்ற அமைப்பு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு நிதிச்சுமை ஏற்படாமல் 200 கடைகளை அந்த ஆஸ்ரமத்தில் கட்டித்தர விரும்புவதாக 2004 செப்டம்பரில் தெரிவித்தது.

வியப்பைத் தரும் வகையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகக்குழுவில் முன்னர் பணியாற்றிய உறுப்பினர் ஒருவர் அந்த யோசனையைப் பரிசீலிக்கலாம் என்று தேவஸ்தானத்துக்குப் பரிந்துரை செய்தார்.

தேவஸ்தானத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக்கூட அவர் அந்த சமிதியுடன் செய்துகொண்டார்.

ஊழல் வாடை:

திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியான ஏ.பி.வி.என். சர்மா இதில் ஏதோ ஊழல் வாடை தெரிகிறதே என்று சந்தேகப்பட்டார். இணை நிர்வாக அதிகாரி அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரியை ரிஷிகேசத்துக்கு உடனே சென்று விசாரித்து நேரில் வந்து அறிக்கை தருமாறு பணித்தார். அவரும் அவ்விதமே விசாரணை நடத்திவிட்டு வந்து அறிக்கை தந்தார்.

“இமாலய சம்பாத சம்ரட்சண சமிதி’ என்ற அமைப்புக்கு நிதி ஆதாரம் ஏதும் கிடையாது; தேவஸ்தான அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அதை வெளியில் காட்டி நிதி வசூலிக்க திட்டமிட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். இதனால் தேவஸ்தானத்துக்குக் கெட்ட பெயர் வரும் என்பதையும் உணர்ந்து கொண்டார். தேவஸ்தானம் வசம் உள்ள நிலங்களைச் சுற்றி உடனே வேலி அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

இதற்காக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அத்துடன் ஆஸ்ரமத்துக்குப் பின்னால் உள்ள காலி இடத்தில் தேவஸ்தான ஊழியர்களுக்குக் குடியிருப்பு வீடுகளைக் கட்டித்தரவும் உத்தேசித்திருக்கிறது.

இந்த நிலங்களை தேவஸ்தானத்தின் செலவிலேயே மேம்படுத்துவதா அல்லது பொது ஏலம் மூலம் நிலங்களை விற்றுவிடுவதா என்ற முடிவை தேவஸ்தானம் பிறகு மேற்கொள்ளும்.

வரவு எட்டணா, செலவு பத்தணா?

ரிஷிகேசத்தில் உள்ள ஆந்திர ஆஸ்ரமத்தின் ஆண்டு வரவு ரூ.5.73 லட்சம்தான். ஆனால் செலவு ரூ.52.32 லட்சம்! எனவே இதன் வருவாயைப் பெருக்கும் வழிகளை யோசிக்குமாறு தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான போர்டு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Posted in Andhra, Andhra Pradesh, Andhrapradesh, AP, Apartments, Ashram, Assets, Bribery, Bribes, Chamundi, Complex, Construction, Corruption, Devasthanam, Devaswom, Don, Expenses, Flats, Ganga, Ganges, Haridhwar, Haridwar, Himalaya, Himalayas, Himalya, Hindu, Hinduism, Hrishikesh, Hundi, Imalaya, kickbacks, Land, Loss, mafia, Malls, Naidu, Plots, Profit, Property, Rao, Real Estate, Religion, Revenues, Rishikesh, Rowdy, Sambadha, Sambatha, Samithi, Samithy, Sampadha, Sampatha, Samratchana, Shakthi sthal, Shopping, TD, Temple, Thirumala, Thirupathi, Thirupathy, TTD, UP, Utharkhand, Uttar Pradesh, Uttarkhand, YSR | Leave a Comment »

Nilakkottai Local Body President & Muthalamman Temple Hundi Collections

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

வாண வேடிக்கைக்குப் பதில் துப்பாக்கிச்சூடு!, கற்பூரப் புகைக்குப் பதில் கண்ணீர்ப்புகை, கோலாட்டம், கும்மியாட்டத்துக்குப் பதிலாக தடியடி! இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள விளாம்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா.

சுத்துப்பட்டியில் உள்ள

  • சித்தர்கள் நத்தம்,
  • நல்லி செட்டிபட்டி,
  • மட்டப்பாறை,
  • ராமராஜபுரம்,
  • எத்திலோடு,
  • பிள்ளையார் நத்தம்,
  • அணைப்பட்டி போன்ற பல ஊர்களுக்கு முக்கியக் கோயிலாக விளங்குவது விளாம்பட்டி முத்தாலம்மன் கோயில்தான்.

கடந்த ஏப்ரல் மாதம் கோயில் திருவிழா தொடங்கும் முன்பே அறங்காவலர்கள் நியமன பிரச்னை அங்கே ஆரம்பித்து விட்டது. ஆளுங்கட்சியான தி.மு.க. அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி

  • ஆவுடையம்மாள்,
  • திரிபுரசுந்தரி

என்ற இரண்டு அறங்காவலர்களை அதிரடியாக அறிவிக்க, மாணிக்கம் என்பவரது தரப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது ‘திருவிழா முடிஞ்சதும் பேசித் தீர்த்துக்கலாம். இப்ப பிரச்னை பண்ண வேண்டாம்’ என பெரியவர்கள் சொல்ல, பிரச்னை தாற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
ஊர்கூடி ஒன்றாக நோன்பு காப்பு கழற்றப்பட்டதும் முத்தாலம்மன் கோயில் இருதரப்பினர் முன்னிலையில் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டது. ‘‘இனி பேச்சுவார்த்தை முடிந்த பின்னால்தான் கோயில் திறப்பு’’ என முடிவு செய்து விளாம்பட்டி காவல்நிலையத்தில் கோயில் சாவி ஒப்படைக்கப்பட்டது.

மே 16_ம் தேதி!

முருகன் _ மணிமாலா தம்பதியரின் பத்து வயது மகள் அபிநிஷாவுக்கு திடீரென அம்மன் அருள் வந்து விட்டதாக விளாம்பட்டியே பரபரப்பானது. அம்மன்போல் அலங்கரித்துக் கொண்டு வெறும் மஞ்சள் நீரை மட்டும் ‘மடக் மடக்’ என்று குடித்துக் கொண்டு ஊஞ்சலில் ஆடியபடி குறிசொன்னாள் அபிநிஷா. ‘‘வைகாசி பொறந்தாச்சு. கோயிலைத் திறந்து எனக்கு பூசை பண்ணுங்கடா!’’ என்று அம்மன் வாய்ஸில் அபிநிஷா பேச, ஆத்தா உத்தரவால் அரண்டு போனது விளாம்பட்டி.

சிறுமி அபிநிஷாவை யாரும் போட்டோ கூட எடுத்துவிடாமல் பொத்திப் பொத்தி பாதுகாத்தனர் ஊர்க்காரர்கள். அதோடு, பேச்சுவார்த்தையை உடனே ஆரம்பித்து கோயிலைத் திறக்க வேண்டும் என்று பரபரத்தார்கள். ஆனால், விளாம்பட்டிக்காரர்களின் கூக்குரல் எதுவும் தி.மு.க. வினர் மற்றும் போலீஸார் காதில் விழவேயில்லை.

இந்த நிலையில் 29.05.07 அன்று அம்பாசிடர் கார்களில் ஆவுடையம்மாள், திரிபுர சுந்தரி ஆகியோருடன் சோழவந்தானைச் சேர்ந்த அறநிலையத்துறை அதிகாரிகள் விளாம்பட்டிக்கு வந்தனர். ‘‘கோயில் உண்டியல் இரண்டு வருடமாகவே எண்ணப்படாமல் இருக்கிறது. பணத்தை எண்ணி பேங்க்கில் போட வேண்டும்’’ என்று கூறி, கோயில் சாவியை போலீஸாரிடம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

அவர்கள் கோயிலைத் திறக்க முயன்றபோது கொதித்துப் போனார்கள் விளாம்பட்டி மக்கள். ‘‘பிரச்னை இன்னும் இருக்கும்போது ஏன் கோயிலைத் திறக்கிறீங்க? சாவி யார் தந்தது?’’ என்று சண்டைக்கு வந்த அவர்கள், இதன் பின்னணியில் நிலக்கோட்டை யூனியன் சேர்மன் (தி.மு.க.) கோட்டைசாமி இருப்பதாக ஊகித்துக் கொண்டு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அதுமட்டுமல்ல, அறங்காவலர்களையும், அதிகாரிகளையும் அள்ளிப்போய் விளாம்பட்டி காவல் நிலையத்தில் போட்டு போலீஸாரிடம் விளக்கம் அளித்தனர்.

போலீஸார் விளாம்பட்டி மக்களின் விளக்கம் எதையும் காதில் வாங்கவில்லை. அறங்காவலர்கள், அதிகாரிகள் மீண்டும் கோயிலைத் திறக்க வழியேற்படுத்தித் தந்தனர். கோயில் திறக்கப்பட்டது மட்டுமல்ல, ஊர் மக்கள் யாருமில்லாமல் உண்டியலும் திறக்கப்பட்டதால் கொதித்தெழுந்தனர் விளாம்பட்டியினர். அறங்காவலர்கள் வந்த அம்பாசிடர் கார்களை அப்பளம் போல் அடித்து நொறுக்கினர். கண்ணாடிகள் பறந்தன. காவல் நிலையம் மீதும் கல்வீச்சு நடந்தது.

திண்டுக்கல் எஸ்.பி. பாரிக்கு இந்தத் தகவல் தெரியவர அவர் ஆர்.டி.ஓ. பேச்சியம்மாள், நிலக்கோட்டை தாசில்தார் கந்தசாமி ஆகியோருடன் வந்து பேச்சு நடத்தினார். அப்போதும் மக்கள் அடங்கவில்லை. எட்டு போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களின் ஆவேசத்தைத் தாங்க முடியாமல் போலீஸ் திணற ஆரம்பித்தது. இந்த சந்தடியில் கோயில் உண்டியல் கொள்ளை போனது. தி.மு.க.வினர் மீதும் தாக்குதல் நடந்தது.

மதுரை, தேனி, திண்டுக்கல்லில் இருந்து வந்த ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் ஆரம்பத்தில் தடியடி, கண்ணீர்ப்புகை வீச்சு நடத்திவிட்டு, கடைசியில் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினார்கள். அதில் காயமடைந்த குணசுந்தரி, சிவபிரகாஷ் போன்றவர்கள் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு விடியட்டும் என்று காத்திருந்த போலீஸார் விடியும் தறுவாயில் விறுவிறுவென செயலில் இறங்கினார்கள். விளாம்பட்டியில் அங்கங்கே மின்சாரத்தை அணைத்து விட்டு வீடு புகுந்து ஆண்கள், பெண்கள் என்று பார்க்காமல் அனைவரையும் அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள். வீடுகளில் இருந்த டி.வி. பீரோ, ஃபிரிட்ஜ்களை உடைத்துப் பந்தாடினார்கள். விளாம்பட்டி கிராமம் அவர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானம் போல ஆகியது.

இந்தத் தாக்குதலின் போது போலீஸாருக்கு ‘எதிர்சேவை’யும் நடந்தது. அதில் டி.எஸ்.பி.க்கள் ருத்ரசேகர், போஸ் மற்றும் மூன்று பெண் போலீஸார் காயமடைந்தனர். அதனால் ஆவேசமடைந்த போலீஸார் 30_ம் தேதி முடிவதற்குள் விளாம்பட்டி கிராமத்தை போட்டுப் புரட்டி ஆண்கள் அத்தனை பேரையும் அமுக்கிப் பிடித்தனர், அவர்களை நிலக்கோட்டை, திண்டுக்கல் போன்ற இடங்களுக்குக் கொண்டு சென்றனர். இப்படிப் பிடிபட்ட ஆண்களில் பெரும்பாலானோர் பிளஸ் டூ, பத்தாவது முடித்த மாணவர்கள் என்பதுதான் பரிதாபம். பிடிபட்டவர்களில் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும் அடங்குவார்கள். வேறு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக இவர்கள் உடனே விடுவிக்கப்பட்டனர்.

போலீஸாரின் ‘நள்ளிரவு வேட்டை முடிந்த பின்னர் புலம்பலுடன் விளாம்பட்டி கிராமத்தில் பொழுது விடிந்தது. தாசில்தார் கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை குற்றவாளிகளாகக் கணக்குக் காட்டி அதில் எழுபது பேரை போÊலீஸார் 30_ம் தேதி ரிமாண்ட் செய்தனர்.

ஆண்கள் நடமாட்டமே இல்லாமல் ஏற்கெனவே வெறிச்சோடிக் கிடந்த விளாம்பட்டியில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. நாம் விளாம்பட்டிக்குச் சென்று அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

‘‘எப்பவுமே முத்தாலம்மன் கோயில் உண்டியலை தண்டோரா போட்ட பிறகுதான் திறந்து எண்ணுவாக. ஆனால் இப்ப நிலக்கோட்டை யூனியன் சேர்மன் கோட்டைசாமி சொன்னார்னு ஆட்கள் வந்து திறந்ததால் பிரச்னை வந்திருச்சு. போலீஸில் புகார் சொன்னோம். அவுக காதிலேயே வாங்கலை. அப்புறம்தான் கலவரம் முத்திப் போச்சு. காரை அடிச்சாங்க. போலீஸ் ஸ்டேஷன் மீது கல் வீசினாங்க.

எங்க வீட்டிலேயிருந்த நாலு ஆம்பிளைகளை போலீஸ் அள்ளிட்டுப் போயிட்டாக. இங்கே இப்ப ஆம்பிளையே இல்லைன்னு சொன்னால், அப்புறம் உனக்கு எதுக்கு சேலைதுணின்னு அசிங்கம் பண்ணினாங்கனு வீட்டு சாமான், டி.வி. பொட்டி எல்லாத்தையும் போலீஸ் போட்டு உடைச்சுது. இவங்க பண்ணின தப்பை மறைக்க இப்படி வெறியாட்டம் போடுறாக’’ என்றார்.

முத்தாலம்மன் கோயில் பிரச்னைக்கு முக்கியக் காரணமாக கருதப்படும் நிலக்கோட்டை சேர்மன் கோட்டை சாமியிடம் பேசினோம்.

‘‘என் மேல் எந்தத் தப்பும் இல்லை. இருந்தும் என்னை கல்லால் அடித்து காயப்படுத்தி விட்டாங்க. எல்லாவற்றுக்கும் காரணம் அந்த ஊர்க்காரர்கள்தான். அவர்கள் எப்படியாவது அறங்காவலர் ஆகணும் என்கிற வெறியில் ஊரைத் தூண்டி விட்டு வன்முறையில் இறங்க வைத்துவிட்டாங்க.

கோயில் உண்டியலை, இப்போ திறக்க வேண்டாம் என்றுதான் நான் சொன்னேன். மீறித் திறந்ததால் இந்த விபரீதம் நடந்து போச்சு. இப்போது இந்த கலவரத்துக்கே நான்தான் காரணம் என்று கதை கட்டி விடுறாங்க!’’ என்றார் அவர்.

விளாம்பட்டியில் போலீஸ் நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் எஸ்.பி. பாரியிடம் நாம் கேட்டோம்.

‘‘இப்போது விளாம்பட்டியில் முழு அமைதி ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறோம். எழுபது பேரை கைது செய்திருக்கிறோம். விரைவில் மாமூல் நிலை திரும்பி விடும்’’ என்றார்.

30_ம் தேதி திண்டுக்கல் கலெக்டர் வாசுகியும் விளாம்பட்டிக்கு நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். அவரிடம் போலீஸார் செய்த அட்டூழியங்களை பொதுமுக்கள் புகாராகக் கூறியிருக்கிறார்கள்.

கோட்டையில் ராஜாங்கம் செய்தால் மட்டும் போதாது. கோயில்களிலும் ராஜாங்கம் செய்ய வேண்டும் என்று அரசியல்வாதிகள் நினைப்பதால் விளாம்பட்டி போன்ற விபரீதங்கள் மேலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். விளாம்பட்டி இப்போது அமைதியாகத்தான் இருக்கிறது. ஆனால் அது மயான அமைதி.

– மருது


Author – Unknown

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திலுள்ள விளாம்பட்டி கிராமம் கள்ளர் பிரிவைச் சேர்ந்த முக்குலத்தோர் அதிகம் உள்ள ஒரு கிராமம். கிராமத்தின் முக்கிய தெய்வமான முத்தாலம்மன் கோயில் திருவிழா வருடாவருடம் அமர்க்களமாய் நடக்கும் ஒன்று.

இந்த வருடம் நிலக்கோட்டை கவுன்ஸிலராக (?) இருக்கும் கோட்டைச்சாமி என்பவர் கோயில் உண்டியலை உடைத்து அனைத்து வசூலையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதை தடுத்தவர்களையெல்லாம் அடித்து விரட்டிவிட்டு இந்தச் செயலை செய்துள்ளார். போராட்டம் நடத்திய மக்கள்மேல் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்து சிலர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த பிரச்சினையை தடுக்க விளாம்பட்டி கிராமத்திலுள்ள அனைத்து ஆண்களையும் பிடித்து சிறையில் அடைத்துவருகிறார்கள். விளாம்பட்டியிலுள்ள ஆண்கள் தப்பிப்பதற்கு வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள்.

கிராமத்திற்கு மின்சாரம், தண்ணீர் முதலானவை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெண்களும் வேறு வழியின்றி உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

அதாவது ஒரு ஊரே, ஒரு கொள்ளையை தடுக்க இயலாமல் எதிர்த்ததால் ஊரைவிட்டு விரட்டப்படுகின்றனர்.

இந்த விஷயத்தைப் பற்றி ஜெயா டிவி மட்டுமே செய்திகள் வெளியிட்டு
வருகின்றது.

ஹிந்து சமுதாயத்திற்கும், ஆன்மீக விடுதலைக்கும் போராடுவதாகச்
சொல்லிக்கொள்ளும் எந்த ஹிந்து அமைப்பும் இந்த பிரச்சினையில்
தலையிட்டதாகத் தெரியவில்லை.

கோட்டைச்சாமி அவர்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவராக உள்ளார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Posted in Avadi Amman, AvadiAmman, Charitable, Charity, Corruption, Council, Councillor, DMK, Hindu, HR&CE, Hundi, Jaya TV, Jeya TV, Law, Local Body, Muthalamman, Nilakkottai, Nilakottai, Order, Police, President, Religion, Religious, Temple, Velasundur, Vilaampatti, Vilampatti, Vilampatty, Village, Violence | Leave a Comment »