Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Human’ Category

Safe Disposal of Medical Waste: Biological hazards – ☣

Posted by Snapjudge மேல் திசெம்பர் 27, 2007

அச்சுறுத்தும் மருத்துவக் கழிவுகள்!

சா. ஜெயப்பிரகாஷ்

மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், கால்நடை சிகிச்சை மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றிலிருந்து மனித, கால்நடைகளின் உறுப்புகள், ரத்தம் மற்றும் திரவங்கள், அவற்றைத் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட பஞ்சு உள்ளிட்ட திடப் பொருள்கள், காலாவதியான மருந்துகள், உடைந்த ஆய்வகக் கண்ணாடிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கழிவுகளாக நாள்தோறும் வெளியேறுகின்றன.

மாநிலம் முழுவதும் இவ்வாறு வெளியேறும் மருத்துவக் கழிவுகள் நாளொன்றுக்கு மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் கிலோ என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இவற்றை அழிக்கும் முறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மனித உள்ளுறுப்புகளின் கழிவுகள், திசுப் பகுதிகள், கால்நடை மருத்துவமனைகளில் வெளியாகும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு பொசுக்க வேண்டும் அல்லது ஆழமான குழியில் புதைக்க வேண்டும்.

நுண்ணுயிரியல் ஆய்வகங்களில் இருந்து வெளியாகும் கழிவுகள், மனித மற்றும் விலங்கு செல்களின் “கல்சர்’ பொருள்கள் போன்றவற்றை “ஆட்டோ கிளேவ் அல்லது மைக்ரோ வேவ்’ ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.

கூர்மையான ஊசிகள், கத்திகள், கண்ணாடி- கண்ணாடித் துகள்கள் ஆகியவற்றை உடைத்துத் தூளாக்கி அழிக்க வேண்டும். காலக்கெடு முடிந்த மருந்துப் பொருள்களை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆழமான குழியில் இட்டு அழிக்க வேண்டும்.

ரத்தத்தால் மாசுபட்ட பொருள்கள், உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள் துடைக்கப்பட்ட பஞ்சு, காரத்துணி, அழுக்கான துணிகள், படுக்கைகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆட்டோகிளேவ், மைக்ரோ வேவ் ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.

இவை மட்டுமல்ல… மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் திரவக் கழிவுகளையும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிட்டு கழிவுநீர்க் கால்வாய்களில் வெளியேற்ற வேண்டும் என்றும் விதிகள் கடுமையாக எச்சரிக்கின்றன.

ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட முறையில் வெப்ப உலையில் இட்டு அழிக்கும்போது ஏற்படும் சாம்பலையும் நகராட்சிக் கழிவு உரக் கிடங்கில் ஆழமாகக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்றும் எச்சரிக்கைகள் நீள்கின்றன. ஆனால், இந்த எச்சரிக்கைகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன? சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள உயிரி மருத்துவக் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகளின்படி, விதிகளை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகும் விதிமீறல் தொடரும் என்றால், ஒவ்வொரு நாளைக்கும் ரூ. 5000 வீதம் அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது. ஆனால், மாநிலத்தின் எந்த ஒரு தனியார் மருத்துவமனை மீதும் இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், எல்லா நகரங்களிலும் குப்பைக் கழிவுகளுக்கிடையே பஞ்சுகளையும், சிரிஞ்சுகளையும் மிகச் சாதாரணமாகப் பார்க்க முடிகிறதே எப்படி?

அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பரிசோதனைக் கூடப் பணியாளர்கள் போன்றோருக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகளை அளிக்கவும், கண்காணிப்புக் குழுக்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இவை எதுவும் மாநிலத்தின் எந்த மூலையிலும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

மாநிலத்தின் 5 மையங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, கழிவுகளைப் பெற்று, அழிக்கப்படுகின்றன.

அரசு மருத்துவமனைகளுக்கு இந்த வாய்ப்புகள் கிடையாது. இதற்கென அரசு தனியாக நிதி ஒதுக்கவில்லை. ஏற்கெனவே இவர்கள் செய்து வந்த அரைகுறை முறையும் சுகாதாரமற்றது என்று தடை செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில், உலக வங்கியின் உதவியுடன் “சுகாதார முறைகளை மேம்படுத்தும் திட்டம்’ தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, மாவட்டத்திலுள்ள அரசு மருத்துமனைக் கழிவுகளை தனியாரிடம் ஒப்படைத்து அழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

என்றாலும், திட்டங்கள் தொடங்கப்படும் போது இருக்கும் வேகம் நிறைவு பெறும் போதும் அதே அளவுக்கு வேகத்துடன், எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுத்தப்படுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.

தமிழகத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதனைப் பார்க்கும்போது அப்போதுமட்டும் “மூக்கைப் பொத்திக் கொண்டு’ செல்லும் நம்மவர்களின் மன நிலை மாற வேண்டும்.

சுருங்கச் சொல்லவேண்டுமானால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு தேவை.

Posted in Animals, Bacteria, bacterial, biohazard, Biological, CDC, Disease, diseases, Disposal, Doc, Doctor, Environment, Harmful, hazard, Hazards, hazmat, Health, Hospital, Human, Infection, Infectious, medical, microorganism, Microwave, Needles, organism, Precautions, Risk, Safe, Safety, Threat, Toxin, Viral, Virus, Warfare, warning, Waste | Leave a Comment »

IPC 498A – Domestic Abuse, Dowry, Husband Rights, Family, Torture

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007

ஆண்களுக்கு சங்கம் தேவையா?

உ . நிர்மலா ராணி

பெண்கள் நலச்சட்டங்கள், குறிப்பாக வரதட்சிணைத் தடுப்புச் சட்டம், இ.பீ.கோ. பிரிவு 498-ஏ – மற்றும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் ஆகியவை பெண்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அவற்றிலிருந்து ஆண்களைக் காக்க சங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விவாதங்களும் ஊடகங்களில் இடம்பெறுகின்றன.

பெண்களுக்கெதிரான வன்முறை அதிக அளவு குடும்பம் என்ற அமைப்பில் தான் நடக்கிறது. இந்தியாவில் மட்டுமே மூன்றில் இரு பங்கு மணமான பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாவதாக ஐ.நா. சபை கூறுகிறது. இந்தக் குடும்ப வன்முறைக்குக் காரணம் வரதட்சிணை. பணத்தாசையையும் பொருளாசையையும் மனைவி வீட்டார் தீர்க்க இயலாதபோது, வேறு திருமணம் செய்து கொள்ள ஏதுவாகக் கணவர் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்ட யுக்தி தான் “”மனைவி எரிப்பு”. 1970 – 80களில் நாடெங்கிலும் இந்தச் சம்பவங்கள் அதிகம் நடந்தன. இவற்றில் 90 சதவிகிதம் தீ விபத்துகளாக முடிக்கப்பட்டன. 5 சதவிகிதம் வழக்குகள் தற்கொலைகளாக முடிந்தன. 5 சதவிகிதம் சம்பவங்களில் தடயங்களும் ஆதாரங்களும் கிடைக்காததால் குற்றவாளிகள் விடுதலையானார்கள்.

1961-ல் இயற்றப்பட்டு இரண்டு முறை திருத்தப்பட்ட வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தால் இந்தக் குற்றங்களின் தீவிரத்தைக் குறைக்கக்கூட முடியாதபோதுதான், பெண்களைக் கொடுமைப்படுத்துவது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் (இ.பீ.கோ.) 498-ஏ பிரிவும் வரதட்சிணைத் சாவுகளுக்காகத் தனியாக 304-பி என்ற பிரிவும் ஏற்படுத்தப்பட்டன. குற்றத்தின் விசேஷ தன்மை கருதி அதை நிரூபிக்க ஏதுவாக இந்திய சாட்சியச் சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்பட்டன.

இதன் பிறகும் கூட, இந்தியாவில் 102 நிமிடங்களுக்கு ஒரு பெண் வரதட்சிணைக்குப் பலியாவதாக அரசு புள்ளிவிவரமே கூறுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 14 பெண்கள் உயிர் துறக்கிறார்கள்.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவாக உருவான நுகர்பொருள் கலாசாரமும் வரதட்சிணைக் கொடுமையை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

நம்மில் பலருக்கு வரதட்சிணைக் கொடுமைதான் குற்றம் என்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்தான் கொடுமை என்றும் ஒரு தவறான பார்வை உள்ளது. இதற்கும் அப்பாற்பட்டு ஒரு மனைவி என்பவள் பல்வேறு காரணங்களுக்காகவும், உடல், மன, பாலியல், பொருளாதார ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள். நோய் மற்றும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளைவிட குடும்ப வன்முறையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 1.40 கோடி பெண்களில், பெரும்பான்மையினருக்கு வாழ்க்கைத் துணையால் தான் அந்தக் கிருமி தொற்றியிருக்கிறது என்பதையும் குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும்.

498-ஏ – பிரிவின் கீழ், கொடுமைப்படுத்தும் கணவருக்குத் தண்டனை உண்டு என்றாலும்கூட, புகார் கொடுக்கும் பெரும்பான்மையான பெண்கள் கணவரையோ அவரது வீட்டாரையோ சிறைக்கு அனுப்புவதை விரும்புவதில்லை. தங்களுக்கும் குழந்தைகளுக்கும் சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய சீர்பொருள்கள், நகைகள், ஜீவனாம்சம் மற்றும் குடியிருக்கும் உரிமை போன்ற நிவாரணங்களைத்தான் பெற விரும்புகிறார்கள்.

சில சமயங்களில் கணவர் வீட்டால் விரட்டப்பட்ட பெண்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கும் இந்தப் பிரிவைப் பயன்படுத்துகிறார்கள். வரதட்சிணை இல்லாமல் வேறுவித கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள்கூட வரதட்சிணை என்று சொன்னால்தான் அது குற்றமாகக் கருதப்படும் என்ற தவறான சட்ட ஆலோசனைகளால் வரதட்சிணைக் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

பதிவு செய்யப்படும் 80 சதவிகிதத்திற்கும் மேலான வழக்குகளில், சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டு ஏதாவது ஒரு காலகட்டத்தில் வழக்கு வாபஸ் பெறப்படுகிறது. சுமார் 12 சதவிகிதம் வழக்குகளில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குச் செல்கிறது. அவற்றிலும்கூட, பல சமூக காரணங்களால் பெண்கள் வழக்கைத் தொடர்ந்து நடத்த முடிவதில்லை. இதனாலேயே 80 சதவிகிதம் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில்தான், 2005-ல் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுமே தவிர, அடிப்படையில் இது ஒரு சிவில் சட்டமே. கொடுமையைத் தவிர்க்க பாதுகாப்பு உத்தரவு, மனைவி குழந்தைகளை நடுத்தெருவில் நிற்க வைக்காமலிருக்க குடியுரிமை உத்தரவு, அவர்களைப் பராமரிக்காமல் இருப்பதைத் தடுக்க ஜீவனாம்ச உத்தரவு, சீர்பொருள்களைத் திரும்பப்பெற உத்தரவு போன்றவற்றை, முழுமையான விசாரணைக்குப் பிறகு, குற்றம் நிரூபிக்கப்படுமானால் நீதிபதி பிறப்பிப்பார். இந்த உத்தரவுகளை மீறும்போதுதான் ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அளிக்கப்படும்.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்தாலும் நடைமுறையில் பயன்பட ஆரம்பிக்கவில்லை. நிரந்தரப் பாதுகாப்பு அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும். சட்ட செயல்பாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பவர்களோ அல்லது மனைவிகள் தான் கணவர்களைக் கொடுமைப்படுத்துவதாக கூறுபவர்களோ விஞ்ஞானபூர்வமாக ஆதாரங்களையோ புள்ளிவிவரங்களையோ முன்வைப்பது இல்லை.

பெண்கள் நலச் சட்டங்கள் துஷ்பிரயோகம் ஆவதே இல்லை என்று மாதர் அமைப்புகள் கூறுவதில்லை. எந்த ஒரு சட்டமும் துஷ்பிரயோகத்திற்கு விதிவிலக்கல்ல. இதுபோன்ற துஷ்பிரயோகத்தைத் தடுக்க வேண்டுமென்றால் சட்டத்தை முதலில் முறையாகப் பயன்படுத்த வேண்டும். சட்டத்தைச் செயல்படுத்தும் அரசு அமைப்புகள் கடமை உணர்வோடும் பாலினச் சமத்துவப் பார்வையோடும் புகாரைச் சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓர் ஆண், அவன் வகிக்கும் சமூகப்பாத்திரங்களில் பாதிக்கப்படும்போது, தன் உரிமைகளைப் பெற சங்கம் தேவைப்படுகிறது. பாலியல் ரீதியாக, ஆணாகப் பிறந்த காரணத்தாலேயே அவன் வன்முறையை அனுபவிக்க வேண்டி வருமானால், அதற்கு ஆண்களுடைய தாழ்ந்த சமூக அந்தஸ்து காரணமாக இருக்குமானால் அப்போது கண்டிப்பாக சங்கம் தேவை.

ஆனால் சர்வதேச அளவில் பாலின ரீதியான வன்முறை என்றாலே அதைப் பெண்கள்தான் அனுபவிப்பதாகவும் அதைத் தொடுப்பவர்கள் பெரும்பான்மையான ஆண்கள் என்றும் அரசு புள்ளிவிவரங்களும் சரி, ஐ.நா. சபை மற்றும் இதர நிறுவன அறிக்கைகளும் சரி அறுதியிட்டுக் கூறுகின்றன.

உலக நாடுகளில் சிலவற்றில் ஆண்கள் சங்கங்கள் இருக்கின்றன. கிளௌசெஸ்டர் ஆண்கள் சங்கத்தின் குறிக்கோளே குடும்ப வன்முறையை எதிர்ப்பதுதான். “”கைகள் அடிப்பதற்கு அல்ல! அரவணைப்பதற்கு, கொடுப்பதற்கு, உதவுவதற்கு, நம்பிக்கையை கூட்டுவதற்கு” என்ற கோஷத்தை அவர்கள் முன் வைத்துள்ளார்கள். கனடாவின் ஆண்கள் சங்கம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 6 வரை ஒவ்வோர் ஆண்டும் பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்த்துப் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். 1997-ல் பெண்களுக்கெதிரான வன்முறைத் தடுப்புப் பிரசாரத்தில் சர்வதேச விருது வாங்கியதே ஓர் ஆண்கள் சங்கம்தான்.

ஆகவே இந்தியாவிலும் ஆண்கள் சங்கம் தேவைதான் – குடும்ப வன்முறையிலிருந்து தங்கள் சகோதரிகளைக் காக்க! வரதட்சிணைக் கொடுமையிலிருந்து தங்கள் மகள்களை மீட்க! குடும்பம் என்ற அமைப்பை – அன்பும் பாசமும் பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையும் நிலவும் இடமாக மாற்றியமைக்க!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in 304B, 498-A, 498A, abuse, Accidents, Alimony, Death, Divorce, Dowry, family, Female, HR, Human, Husband, in-laws, IPC, Law, Life, Maculine, male, Marriage, rights, Suicide, Violence, Wedding, Wife, Women | Leave a Comment »

Gliese 581c – A New Planet on the Horizon

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 26, 2007

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கோள் கண்டுபிடிப்பு

வானியல் அறிஞர்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புவியைப் போன்றபுதிய கோள் (இடது). இது சூரிய குடும்பத்துக்கு அருகில் அமைந்துள்ள கிளீஸ்-581 என்ற விண்மீனைச் சுற்றி வருகிறது. இதில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த விளக்கப் படத்தை ஐரோப்பிய தெற்கு வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

நியூயார்க், ஏப். 26: உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடையது எனக் கருதப்படும் புதிய கோள் ஒன்றை வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் இந்தக் கோள் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல. வேறொரு விண்மீன் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

புவியை போன்ற இந்த கோளில் தற்போது ஏதேனும் உயிரினங்கள் வசித்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

புவியைப் போல 5 மடங்கு நிறைகொண்ட இந்த புதிய கோள், சூரிய குடும்பத்தில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் (ஒளி 20 ஆண்டுகளில் பயணம் செய்யக் கூடிய தொலைவில்) அமைந்துள்ளது. “துலாம்’ என்ற விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ள “கிளீஸ் 581′ விண்மீனை சுற்றி வருகிறது.

சூரிய குடும்பத்துக்கு அருகாமையில் உள்ள இந்த கிளீஸ் 581 விண்மீன், “சிவப்புக் குள்ளன்’ என்ற வகையைச் சேர்ந்ததாகும். மங்கலான சிவப்பு நிற விண்மீன் இது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்டிபான் உட்ரி குழுவினர் இந்தக் கோளைக் கண்டுபிடித்துள்ளனர். கிளீஸ் விண்மீன் மீது இந்தக் கோள் ஏற்படுத்தும் ஈர்ப்பு விளைவுகளை வைத்து அதைக் கண்டுபிடித்துள்ளனர்.

நெருக்கமான கோள்: கிளீஸ் விண்மீனுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது இப் புதிய கோள். அதாவது, இரண்டுக்கும் இடையில் உள்ள தூரம், சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தூரத்தில் 14-ல் ஒரு பங்குதான்.

கிளீஸ் “”சிவப்புக் குள்ளன்” வகையைச் சேர்ந்த விண்மீன் என்பதால் சூரியனைவிட குறைவான ஒளியையும், வெப்பத்தையுமே வெளியிடுகிறது. எனவே புதிய கோள் நெருக்கமாக அமைந்திருந்தாலும் கூட வாழத் தகுதியுள்ளதாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

கோளின் வெப்பநிலை: வேற்றுக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த புவிக்கோளின் வெப்ப நிலை 0 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். எனவே அங்கு நீர்ம வடிவில் நீரும், உயிரினங்களும் இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், கோளின் வெப்பநிலை பற்றிய இந்தக் கணிப்புகள் துல்லியமானவை அல்ல என்கிறார் உட்ரியின் கூட்டாளியும், வானியல் அறிஞருமான மைக்கேல் மேயர்.

கூடுதல் விவரங்கள் இல்லாமல் நீர் உள்ளதா இல்லையா என்பது பற்றி அவ்வளவு விரைவாக முடிவுக்கு வரமுடியாது என புதிய கோளைக் கண்டுபிடித்த டாக்டர் உட்ரி குழுவினரும் கூறியுள்ளனர்.

வியாழன் கோளைவிட அதிக நிறைகொண்ட வளிமண்டலம் அமைந்திருந்தால், கோளின் பரப்பு மிக அதிக வெப்பநிலை கொண்டதாக இருக்கும். அந்த நிலையில் நீர்ம வடிவில் நீர் இருக்க முடியாது என்கிறார் மசாசூசெட் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த கோள் அறிஞர் சாரா சீகர்.

இரு நூற்றில் ஒன்று: இந்த பேரண்டத்தில் புவியைப் போலவே உயிரினங்கள் வசிக்கும், அல்லது உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற கோளை பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் தேடி வருகின்றனர். இப்புதிய கோள் அதுவாகக் கூட இருக்கலாம் என்கிறார் மசாசூசெட்ஸில் உள்ள ஹார்வர்டு-ஸ்மித்சோனியன் மையத்தைச் சேர்ந்த வானியல் அறிஞர் டேவிட் சார்போன்.

புதிய கோள், புவியைப் போலவே நிலத் தரை கொண்ட திண்மக்கோள் எனில் நீர்ம நிலையில் உள்ள நீரும், உயிரினங்களும் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்தக் கோள் வாயு உருண்டையாக இருந்தால் உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக இருக்கும். ஆனால் இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இதைப் பற்றி மேற்கொண்டு முடிவுக்கு வர, கோளைச் சுற்றிலும் வளிமண்டலம் அமைந்துள்ளதா என்பது போன்ற தகவல்கள் தேவை. அதுவரை வேறு எந்த முடிவுக்கும் வருவது கடினமே என்கிறார் டேவிட் சார்போன்.

சூரிய குடும்பத்துக்கு வெளியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள சுமார் 200 கோள்களில் மிகச்சிறியது இப்புதிய கோள். ஆனால் புவிக்கு நெருக்கமான நிறை (ஙஹள்ள்) கொண்ட கோள் இது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது கண்டுபிடிப்பு: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கீளீஸ் 581-ஐ சுற்றி வரும் 2 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை புவியைப் போல 8 மற்றும் 11 மடங்கு நிறை கொண்டவை. இவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக, புவிக்கு நெருக்கமான நிறை கொண்ட இப்புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய கோளைக் கண்டுபிடித்துள்ள உட்ரி குழுவினர், வானியல் தொடர்பான “ஜர்னல் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸ்’ பத்திரிகையில் தங்கள் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்துள்ளனர்.

Posted in 581c, Astronomy, Discovery, dwarf, Earth, Gliese, Greenhouse, Human, Life, Liquid, Moon, Planet, Science, Solar, Star, Water | Leave a Comment »

Dharmapuri – Superstitious builders try to do Human Sacrifice for successful completion of the Construction

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

தருமபுரி அருகே பாலம் கட்டும் பணிக்கு 3 சிறுவர்களை நரபலியிட முயற்சி?

சிறுவர்களை நரபலியிட முயன்ற சம்பவத்தால் ஆத்திரம் அடைந்து தனியார் நிறுவன கிடங்குக்கு தீயிட்டுக் கொளுத்தும் பொதுமக்கள். (உள்படம்) நரபலியிட முயன்ற கும்பலிடம் இருந்து தப்பிய சிறுவர்கள் (இடமிருந்து) தமிழரசு, சந்திரபாபு, சிவமணி.

தருமபுரி, மார்ச் 16: தருமபுரி அருகே 4 வழிச்சாலை பாலப் பணிக்காக பள்ளிச் சிறுவர்கள் 3 பேரை தனியார் நிறுவன ஊழியர்கள் நரபலியிட முயன்றதாகக் கூறி, கொந்தளித்த மக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். தனியார் நிறுவன கிடங்குக்கும் ஒரு ஜேசிபி இயந்திரத்துக்கும் தீ வைத்தனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிப் பாதையாக மாற்றும் பணியை ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பூலாப்பட்டி ஆத்துப்பாலம், பெரியாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணியிலும் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பூலாப்பட்டி ஆத்துப்பாலம் அருகிலும் பிற இடங்களிலும் கூடாரங்கள் அமைத்து, அந் நிறுவனம் அமைத்துள்ள கிடங்குப் பகுதியிலேயே தங்கியுள்ளனர்.

இந்நிலையில் பூலாப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயவேலின் மகன் சிவமணி (13), குமாரசாமி மகன் தமிழரசு (12), சிங்காரம் மகன் சந்திரபாபு (11) ஆகிய 3 சிறுவர்களும் வழக்கம்போல் பெரியாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை காலையில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளனர். சாலையோரம் நடந்து சென்ற 3 சிறுவர்களையும் 5 பேர் கொண்ட கும்பல், வாயைப் பொத்தி தூக்கிச் சென்றுள்ளனர். தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த கிடங்கில் பிற்பகல் வரை சிறுவர்களின் கையைக் கட்டி அமர வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

பிற்பகலில் பாலம் நடைபெறும் இடத்துக்கு 3 சிறுவர்களையும் அழைத்து வந்து அங்கு பூஜைகள் செய்ததாகவும், நிலைமையை உணர்ந்த சிறுவன் சிவமணி தன்னை பிடித்திருந்த நபரின் கையை கடித்துவிட்டு தப்பி ஓடி வந்ததாகவும், அதே நேரத்தில் மற்ற சிறுவர்களும் அவர்களிடம் இருந்து தப்பி ஓடி வந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்த தகவல் கேட்டு சுற்றுப் பகுதி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதுடன் அந்த தனியார் நிறுவனக் கிடங்குக்கு தீயிட்டுக் கொளுத்தியது. அதில் கிடங்கும் ஜேசிபி இயந்திரமும் தீக்கிரையானது.

Posted in Bridge, Builder, Child, Children, completion, Construction, Constructor, Dharmapuri, Dharmapury, flyover, Human, Kid, Sacrifice, success, Tharmapuri | Leave a Comment »