Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘HIV’ Category

Inter News Network consultant Dr. Jeya Sridhar Interview – State of HIV+ and AIDS patients

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

விழிப்புணர்வு: பயமுறுத்துவது பிரசாரமல்ல!

பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் “எய்ட்ஸ் எரிமலை’ என்னும் தலைப்பில் டாக்டர் ஜெயா ஸ்ரீதர் எழுதிய எயிட்ஸ் விழிப்புணர்வுக் கட்டுரைகளின் தொகுப்பு, தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக பல ஆய்வுகளுக்குக் காரணமாக இருந்தது.

தற்போது 55 நாடுகளில் எச்.ஐ.வி. விழிப்புணர்வு அளிக்கும் “இன்டர் நியூஸ் நெட்வொர்க்’ என்னும் உலகளாவிய அமைப்பின் மருத்துவ ஆலோசகராக இருக்கிறார் டாக்டர் ஜெயா ஸ்ரீதர். எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், அவர் சார்ந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு, விரிவாக அவர் அளித்த பதில்கள்…

இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு கடந்த சில வருடங்களாக குறைந்திருப்பதால், இது குறித்த விழிப்புணர்வும் குறைந்திருக்கிறது. எதிர்காலத்தில் எத்தகைய விளைவை இது ஏற்படுத்தும்?

இந்தியாவில் எத்தனையோ பன்னாட்டுக் குளிர்பானங்கள் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் எந்த காலத்திலும் அவர்களின் விளம்பரங்களைக் குறைத்துக் கொண்டதே இல்லை. குளிர்பானத்திற்கே விளம்பரம் முக்கியம் என்னும்போது, உயிரையே குடிக்கும் எய்ட்ஸýக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தை நாம் குறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் நியாயமாகாது. இன்னமும் போலியோவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களை நாம் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறோம். குறைந்திருக்கிறது என்பதற்காக எச்.ஐ.வி. விழிப்புணர்வுப் பிரசாரங்களை குறைத்துக் கொள்ளக்கூடாது. சமூகத்தில் எச்.ஐ.வி. குறித்த உண்மை நிலையைத் தொடர்ந்து பிரசாரங்களின் மூலமாகத்தான் அளிக்கமுடியும்.

பள்ளிகளில் வரப்போகும் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி இதற்குத் தீர்வாகுமா?

பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டமாக இதைக் கொண்டு வரவிருக்கின்றனர். முதலில் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளை மனதில் கொண்டு உருவாக்கியதற்குத்தான், நம் நாட்டில் பரவலான எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டு கலாசாரத்துக்கு ஏற்றவகையில் உருவாக்கியிருக்கும் இந்த முறைக்கு பரவலான ஆதரவு பெருகியுள்ளது. வளர் இளம் பருவத்தினருக்கு இத்தகைய விழிப்புணர்வு தேவையான ஒன்றுதான். அவர்களின் வயதுக்கே உரிய சந்தேகங்களை அனுசரிப்போடு கற்றுத் தருவதற்கு ஆசிரியர்களை விடச் சிறந்தவர்களாக யார் இருப்பார்கள்?

திருமணத்திற்குப் பின், எச்.ஐ.வி. பாதிப்புடன், கணவனையும் இழந்து தவிக்கும் இளம் விதவைகளின் எண்ணிக்கை குறைவதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத்தின் நம்பிக்கை மையங்கள் பரவலாகச் செயல்படுகின்றன. இங்கு முழுக்க முழுக்க இலவசமாகவே எச்.ஐ.வி. ரத்தப்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முப்பது நிமிடங்களில் ரத்தப் பரிசோதனை செய்த முடிவுகளும் கிடைத்துவிடும். திருமணத்திற்கு முன்பே, ஆண், பெண் இருபாலரும் ரத்தப்பரிசோதனையைச் செய்து கொள்வது நல்லது. மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் இடைவெளியில் இரண்டு முறை ஒருவர் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். எச்.ஐ.வி. கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்பணுக்கள் உருவாவதற்கான கால அளவைத்தான் சாளரக் காலம் என்கிறார்கள். இந்த சாளரக் காலத்திற்குள் ரத்தப் பரிசோதனை செய்யும்போது, அதில் எச்.ஐ.வி. எதிர்ப்பணுக்கள் தெரியாது.

அப்படியென்றால், சாளரக் காலத்திற்குள் ரத்த வங்கியிலிருந்து ஒரு நோயாளிக்கு ரத்தத்தை பயன்படுத்துவதில் எச்.ஐ.வி. பரவும் அபாயத்தை எப்படித் தவிர்ப்பது?

அரசு மருத்துவமனைகளில் காசுக்காக ரத்தத்தை விற்பவர்களை ஆதரித்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எந்த மருத்துவமனையிலும் ரத்தத்தை விற்பவர்களை ஆதரிப்பதில்லை. மூன்று முறை எல்லிசா பரிசோதனை செய்வதன் மூலம், எச்.ஐ.வி. பாதிப்பில்லாத ரத்தம்தான் என்பதை தற்போது உறுதி செய்கின்றனர். அதோடு ரத்த வங்கியிலிருந்து முழுமையாக ரத்தம் ஒருவருக்கு ஏற்றப்படுவது குறைவு. தற்போது ரத்தத்திலிருக்கும் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், பிளாஸ்மா போன்ற கூறுகளை தனித்தனியாகப் பிரித்தே சேமித்து வைக்கின்றனர். இதுதவிர, ஹீட் ட்ரீட்மென்ட் போன்ற முறைகளால் வங்கியிலிருந்து பெறப்படும் ரத்தம் பரிசோதிக்கப்படுகிறது.

வெஸ்டன்-பிளாட் சோதனை செய்யும் வசதி தற்போது எல்லா மாவட்டத்திலிருக்கும் அரசுப் பொது மருத்துவமனைகளிலும் இருக்கிறதா?

இல்லை. மூன்று கட்டங்களாக எல்லிசா பரிசோதனையின் மூலமாகவே அரசு மருத்துவமனைகளில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுகின்றது.

கூட்டு மருந்து சிகிச்சையில் முதல் கட்டம், இரண்டாவது கட்டம் என்பது என்ன?

எச்.ஐ.வி. கிருமி நம் உடலின் தற்காப்பு மண்டலத்தை செயலிழக்கவைப்பதால், பலவகையான நோய்கள் நம்மைத் தாக்கும். நமது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதுடன், பலவிதமான நோய்களை எதிர்ப்பதற்கான மருந்தையும் சேர்த்து வழங்குவதுதான் கூட்டு மருந்து சிகிச்சை. இந்த மருந்தை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஒரு நாள், ஒரு வேளை கூட மறக்காமல் சாப்பிடவேண்டும். ஒரு வேளை தவறினாலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். முதல் கட்ட சிகிச்சையைச் சரியாகத் தொடராதவர்களுக்குத்தான் இரண்டாவது கட்ட சிகிச்சை அளிக்கப்படுகின்றது. முதல் கட்ட கூட்டு மருந்து சிகிச்சை தமிழகம் முழுவதும் பரவலாக இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. இரண்டாவது கட்டத்தையும் இலவசமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை இந்தாண்டு அரசு பரிசீலிக்கும் என்று நினைக்கிறேன்.

உங்கள் ஆலோசனையின் கீழ் செயல்படும் “இன்டர் நியூஸ் நெட்ஒர்க்கின்’ செயல்பாடுகள் என்ன?

எய்ட்ஸ் தொடர்பான எத்தகைய விழிப்புணர்வு அளிக்கும் செய்திகளாக இருந்தாலும் அதை முறையாக, எங்கள் அமைப்பில் பாதுகாத்து வருகிறோம். இந்த அமைப்பு முழுக்க முழுக்க பத்திரிகையாளர்களுக்காக, பத்திரிகையாளர்களின் உதவியோடே செயல்படும் அமைப்பு. எய்ட்ஸ் தொடர்பான எத்தகைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவதாக இருந்தாலும் சரி, அல்லது வானொலி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்வதாக இருந்தாலும் சரி, அதற்கு தேவையான ஆவணங்களையும், புள்ளிவிவரங்களையும், எப்படிச் சேர்க்கலாம், எந்த மாவட்டத்தில் யாரைச் சந்திக்கலாம் என்பது போன்ற விவரங்களையும் எங்களின் அமைப்பின் மூலம் பெறலாம். கல்லூரிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாய வானொலிகளுக்கும் எச்.ஐ.வி. விழிப்புணர்வுக் கருத்துக்களை, நாடகம், இசைப் பாடல் போன்ற எந்த வடிவத்தையும் எங்களின் “மினி’ ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யும் வசதி உள்ளது.

பொதுவாகவே மருத்துவம் சார்ந்த துறைகளில் ஆங்கிலத்தில்தான் செய்திக் குறிப்புகளும், தகவல்களும் அளிக்கப்படுகின்றன. ஆகவே இந்தத் துறையில் எச்.ஐ.வி. குறித்த செய்திகளை தமிழில் எழுதும் போது எத்தகைய சொற்களைப் பயன்படுத்தலாம் என்பதை தமிழ்ப் பத்திரிகையாளர்களைக் கொண்டு வரையறுத்த வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட இதழாளர்களுக்கான கையேடை நாங்கள் வெளியிட்டுள்ளோம். “ரிசப்டார்ஸ்’ என்னும் ஆங்கில வார்த்தைக்கு “ஏற்பி’ என்று தமிழில் வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற பத்து வார்த்தைகளை தமிழ்ப் பத்திரிகையாளர்களே உருவாக்கியிருக்கின்றனர்.

எச்.ஐ.வி. பாதித்தவர் என்ற காரணத்தால் ஆந்திராவில் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றதையும், கேரளத்தில் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்காமல் இருக்கும் செய்திகளையும் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

செய்தி, மக்கள் தொடர்புச் சாதனங்களிலும் ஊடகங்களிலும் “எய்ட்ஸ் அரக்கன்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பதன் விளைவுதான் இது. தவறான பிரசார யுக்திகளால் ஏற்படும் விளைவுகள் இவை. மக்களை பயமுறுத்துவது நல்ல பிரசார முறையாகாது.

எய்ட்சுக்கான மருந்தை எப்போது மருத்துவ உலகம், மனித குலத்துக்கு வழங்கப்போகிறது?

அதற்கான ஆராய்ச்சி உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. எச்.ஐ.வி. தடுப்பு மருந்து பரிசோதனை கூட தற்போது சென்னையில் நடந்துகொண்டிருக்கின்றது.

Posted in activism, AIDS, Awareness, Bacteria, Blood, Campaigns, Checks, Condoms, cure, Disease, diseases, doctors, Donors, Education, HIV, Hospitals, Infection, Inn, Inter News Network, Interview, Jaya Sridhar, Jeya Sridhar, medical, Medicine, NGO, patients, Pharmaceuticals, Plasma, Red Ribbon, Sex, Sridhar, Tests, Transfusion, Trials, Virus | 1 Comment »

Red cross questions Doctor for treating HIV+ patients: Deivanayagam – President, Health India Foundation

Posted by Snapjudge மேல் ஜனவரி 9, 2008

எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதா?: டாக்டருக்கு செஞ்சிலுவைச் சங்கம் நோட்டீஸ்

ஜே. ரங்கராஜன்

சென்னை, ஜன. 8: எச்ஐவி, எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் டாக்டரின் கிளினிக்கை உரிய காரணம் எதுவும் இன்றி மூடுமாறு இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழ்நாடு கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை மாண்டியத் சாலையில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளை வளாகத்தில் நெஞ்சக நோய் மருத்துவ நிபுணரும் இந்திய நலவாழ்வு நல்லறம் (“ஹெல்த் இந்தியா ஃபவுண்டேஷன்’) அமைப்பின் தலைவருமான டாக்டர் செ. நெ. தெய்வநாயகம் சிறிய புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவை 2002-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

அரசுப் பணியில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள டாக்டர் செ.நெ.தெய்வநாயகம், எச்ஐவி நோயாளிகள் உள்பட இதுவரை மொத்தம் 6,045 நோயாளிகளுக்கு இந்த புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்துள்ளார். மொத்த நோயாளிகளில் 3,000 பேர் எச்ஐவி நோயாளிகள். திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை இந்த இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்த கிளினிக்கில் மருத்துவ ஆலோசனைக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பதிவுக் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளி அளிக்கும் ரூ.50 பதிவுக் கட்டணத்திலிருந்து, ரூ.10-ஐ செஞ்சிலுவைச் சங்கத்துக்கு வாடகையாக அளித்து வந்தனர்.

அலோபதி – சித்த மருத்துவ கூட்டு சிகிச்சை முறையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மீதமுள்ள கட்டணத்தில் இரண்டு சித்த மருத்துவர்களுக்கு மாதம் தலா ரூ,.8,000, ரூ.5,000 சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. அலோபதி மருத்துவ நிபுணரான செ.நெ.தெய்வநாயகம், சித்த மருத்துவ நிபுணர்களான ஜி.சிவராமன், தெ. வேலாயுதம் ஆகியோர் ஊதியம் பெறாமல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தனர்.

திடீர் நோட்டீஸ்:

இந் நிலையில் கடந்த ஜன.2-ம் தேதியன்று இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளையின் தலைவராக உள்ள டாக்டர் விமலா ராமலிங்கத்திடமிருந்து அவரது செயலர் மூலம் டாக்டர் தெய்வநாயகத்துக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

“”அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம், இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கம், ஜெர்மனி செஞ்சிலுவைச் சங்கம், ஸ்வீடன் செஞ்சிலுவைச் சங்கம், இங்கிலாந்து செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்டவை நிதியுதவி செய்யும் திட்டங்களைச் செயல்படுத்த போதிய இடம் இல்லாததால் உங்களது இடத்தை புதன்கிழமை (9.1.2008) முதல் காலி செய்து விடுங்கள்” என்று அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆளுநர், முதல்வருக்கு பேக்ஸ்:

இதையடுத்து ஆளுநரும் இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளையின் தலைமை காப்பாளருமான பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு டாக்டர் தெய்வநாயகம் பேக்ஸ் அனுப்பியுள்ளார்.

“இறக்கும் நிலையில் உள்ள எச்ஐவி நோயாளிகளுக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் செஞ்சிலுவைச் சங்கம் விடுதி நடத்துகிறது; தென்னாப்பிரிக்கா கேப்டவுனில் குழந்தை எச்ஐவி நோயாளிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மருத்துவமனை நடத்துகிறது. இந் நிலையில் தமிழக செஞ்சிலுவைச் சங்கம் செய்ய வேண்டிய பணியைச் செய்துவரும் “ஹெல்த் இந்தியா பவுண்டேஷன்’ சிகிச்சைப் பிரிவு மூடும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த பேக்ஸ் செய்தியில் டாக்டர் தெய்வநாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Posted in AIDS, Allegations, Deivanayagam, Deivanayangam, Deiyvanayagam, Dheivanayagam, Dheiyvanayagam, Doctor, Fear, Health India Foundation, HIV, Hospital, Law, medical, Order, patients, Red Cross, Theivanayagam, Theivanayangam, Theiyvanayagam, Treatment | Leave a Comment »

‘Uyir’ & ‘Mirugam’ director Sami vs Tamil Actress Padmapriya

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

டைரக்டருக்கு கீழ் பணியாதவர்
“பத்மப்ரியா நல்ல நடிகை-ஆனால் நல்ல குணம் கிடையாது”
டைரக்டர் சாமி சொல்கிறார்


“பத்மப்ரியா நல்ல நடிகை. ஆனால் நல்ல குணம் கிடையாது. டைரக்டருக்கு கீழ் பணியாதவர், அவர்” என்று டைரக்டர் சாமி கூறினார்.

கணவன்-மனைவி கதை

`உயிர்’ படத்தை டைரக்டு செய்தவர், சாமி. மைத்துனரை, அண்ணி காதலிப்பது போலவும், அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவது போலவும் கதை அம்சம் உள்ள படம், `உயிர்.’ அந்த படத்தில், காமவெறி பிடித்த அண்ணியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார், சங்கீதா.

அந்த படத்தை அடுத்து டைரக்டர் சாமி, `மிருகம்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் புதுமுகம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார். கொடூர குணமும், ரவுடித்தனமும் கொண்ட அவர், கொடூர நோயினால் பாதிக்கப்படுவது போலவும், அவருடைய வக்கிரங்களையும், அக்கிரமங்களையும் தாங்கிக்கொண்டு கடைசிவரை கணவருக்கு பணிவிடை செய்யும் பரிதாபத்துக்குரிய மனைவியாக பத்மப்ரியா நடிக்கிறார்.

தகராறு

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அப்போது பத்மப்ரியா படப்பிடிப்புக்கு தினமும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. கதைக்கு ஏற்ப, டைரக்டர் சாமி சொல்லிக்கொடுத்தபடி பத்மப்ரியா நடிக்க மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பொறுமை இழந்த டைரக்டர் சாமி, பத்மப்ரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த பிரச்சினை, பெரும் விவகாரமானது. பத்மப்ரியா நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளில் புகார் செய்தார். மூன்று சங்கங்களும் சேர்ந்து டைரக்டர் சாமியிடம் விசாரணை நடத்தினார்கள்.

தடை

அப்போது டைரக்டர் சாமி, பத்மப்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார்.

சாமி, புதிய படங்களை டைரக்டு செய்வதற்கு, ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.

`மிருகம்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அந்த படத்தின் பாடல் காட்சிகளையும், `டிரைலரை’யும் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய், டைரக்டர் சாமி ஆகிய இருவரும் நிருபர்களுக்கு திரையிட்டு காண்பித்தார்கள்.

அதன்பிறகு டைரக்டர் சாமி `தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“மிருகம் படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. படம் திரைக்கு வந்தபின், என் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை தானாகவே விலகிவிடும் என்று நம்புகிறேன். அடுத்து இதே படத்தை நான் தெலுங்கில் டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். `மிருகம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவரே, தெலுங்கு படத்திலும் கதாநாயகனாக நடிப்பார்.

கதாநாயகி மாற்றம்

கதாநாயகி மட்டும் மாறுவார். பத்மப்ரியாவுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகி நடிப்பார். பத்மப்ரியா நல்ல நடிகை என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவரிடம் நல்ல குணம் கிடையாது. டைரக்டரின் `ஸ்கிரிப்ட்’ (திரைக்கதை)க்கு கீழ் பணியாத ஒரு நடிகை.

`மிருகம்’ படத்தின் முதல் பிரதியை, தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் பார்த்துவிட்டு, “இந்த வருடத்தின் சிறந்த படம்” என்று பாராட்டினார். படத்தின் கடைசி மூன்று ரீல்கள் மிரட்டலாக இருக்கும்.”

இவ்வாறு டைரக்டர் சாமி கூறினார்.

Posted in abuse, Action, Actress, AIDS, Allegations, Andhra, AP, Apology, Ban, Callsheet, Cinema, Condemn, Director, Faces, Films, Hero, Heroine, Hit, HIV, Hype, Interview, Investigation, journalism, Kerala, Kisu Kisu, Kisukisu, Malayalam, Media, Mirugam, Mirukam, Mollywood, Movies, News, Padma priya, Padmapriya, Pathma priya, Pathmapriya, people, Product, Promotions, Protest, Reel, release, Reports, Rumor, Rumors, Rumour, Saami, Saamy, Sami, Samy, Sangeetha, Sangitha, Screenplay, Sex, Slap, Sorry, Strike, Telugu, Theater, Theaters, Theatres, Tollywood, Torture, Uyir, video | Leave a Comment »

Ven Kushtam? Disorder Awareness – Melanin deficiency

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

விழிப்புணர்வு: வெண்குஷ்டம் அல்ல… வெண்புள்ளிகள்

ரவிக்குமார்


“”எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி நடத்தவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் நீண்ட காலமாக சருமத்தில் வெண்புள்ளிகளுடன் இருப்பவர்களை, இன்னமும் இந்தச் சமூகம் “வெண்குஷ்டம்’ வந்தவர்கள் என்ற தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறது. இதை வெண்புள்ளிகள் என்று அழைப்பதுதான் சரி. நோயே இல்லாத இதை தொழுநோய் என்று அழைப்பது தவறு.” என்று தன்னுடைய ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தினார், கே.உமாபதி. இவர், “வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்- இந்தியா’ என்னும் அமைப்பின் பொதுச் செயலாளர். இவரும் இந்தப் பாதிப்போடு இருப்பவர்தான். வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் ஏற்படுத்துவதுடன், வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தகுந்த சிகிச்சை முறைகளை அறிவுறுத்தி வருகிறார் கே.உமாபதி. வெண்புள்ளிகள் இயக்கத்தின் செயல்பாடுகளைக் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“”நம் உடலின் மிகப் பெரிய உறுப்பே தோல்தான். தோலில் உள்ள “மெலனின்’ என்ற நிறமி இழப்பினால் சருமத்தில் உண்டாவதுதான் இந்த வெண்புள்ளிகள். இந்த மெலனினை நம் உடலில் உற்பத்தி செய்வது தோலில் உள்ள “மெலனோûஸட்’ என்ற பெயருடைய அணுக்களின் வேலை.

நம் உடலில் கிருமிகளின் பாதிப்பு வரும்போது, அதை எதிர்ப்பது ரத்த வெள்ளை அணுக்களின் வேலை. இதனால் இந்தச் செல்களை “மிலிட்டரி செல்கள்’ என்று அழைப்பர். இந்த மிலிட்டரி செல்கள், கிருமி என நினைத்து “மெலானோûஸட்டை’ அழிக்கின்றன. அவ்வாறு மெலனோûஸட் செல்கள் அழிக்கப்படும் இடங்களில் வெண்புள்ளிகள் தோன்றி அது அப்படியே பரவத் தொடங்கும்.

இந்த வெண்புள்ளிகள் பாதிப்பு எந்த வயதிலும், யாருக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் வெண்புள்ளிகள் பாதிப்புக்கு உள்ளானோர்கள் 18 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பார்கள். இந்தியா முழுவதும் சுமார் 4 கோடி பேருக்கு இருக்கும். உலக மக்கள் தொகையில் இரண்டு சதவிகிதம் பேருக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருக்கின்றது.

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்களே வித்தியாசமாக நடத்தும் நிலை மாறவேண்டும். குறிப்பாக இந்தப் பாதிப்புடன் இருக்கும் பெண்களை குடும்பத்தின் விசேஷங்களில் பங்கேற்காமல் ஒதுக்கி வைப்பது, தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்தால் அவர்களிடமிருந்து விலகி இருப்பது போன்ற செயல்களால், உளவியல்ரீதியாகப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெண்புள்ளிகள் தொற்றக்கூடியதோ, பரம்பரையாகத் தொடரும் பிரச்சினையோ இல்லை என்பதை மக்கள் கூடும் பொதுஇடங்களிலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வுப் பிரசாரங்களைச் செய்துவருகிறோம். வெண்புள்ளிகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துகளை விளக்கும் வகையில், சமீபத்தில் கூட, பள்ளி மாணவர்களைக் கொண்டு 9 கி.மீ. தூரத்துக்கு மனிதச் சங்கிலி அமைத்தோம்.

ஓர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரிக்கு இந்த வெண்புள்ளிகள் பாதிப்பு இருந்தது. ஆனால் அவரது மனைவிக்கோ, அவரின் இரண்டு பெண்களுக்கோ இந்தப் பாதிப்பு இல்லை. ஒரு பெண் எம்.பி.ஏ.வும், இன்னொரு பெண் எம்.சி.ஏ.வும் படித்திருந்தனர். அப்பாவுக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பதால் அவரின் பெண்களுக்கு பல வருடங்களாகத் திருமணம் ஆகாமலேயே இருந்தது. மனம் வெறுத்துப் போன அந்தப் பெண்களின் தந்தை, “”உங்கள் திருமணம் தடைபடுவதற்குக் காரணமாக நானே இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லி திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இப்படி வெண்புள்ளிகளின் பாதிப்பால் விளைந்த வேதனையான நிஜச் சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால் பெண்கள் அவர்களை அனுசரித்துப் போவதைப் பரவலாகப் பார்க்கமுடிகிறது. அதுவே பெண்ணுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால், அந்தப் பெண்ணின் வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடுகிறது. வேலை வாய்ப்பில் தொடங்கி, திருமணம் ஆவதற்கே கூட தடையாக இருக்கிறது. இதனால் நாங்கள் வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பவர்களுக்குள்ளாகவே பேசி, இதுவரை எட்டு திருமணங்களை நடத்தியிருக்கிறோம். வெண்புள்ளி பாதிப்பு இருந்தாலும் இந்த சாதியில்தான் பெண் வேண்டும், பையன் வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பவர்களுக்கு நாங்கள் உதவமுடியாதுதான். வெண்புள்ளிகளை விடவும் சமூகத்தில் புரையோடிப் போயிருப்பது சாதிதானே!

வெண்புள்ளி பாதிப்பிற்கு என்னைப் பொறுத்தவரையில் அலோபதி மருத்துவம் சரிப்படாது. சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை வைத்தியம் போன்ற வைத்திய முறைகளில் இதை பரவாமல் தடுப்பதற்கு வழியிருக்கிறது. அதிலும் பஸ்பம் (மெட்டல்) கலக்காத மருந்தைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம். சித்தா மற்றும் பரம்பரையாக மருத்துவம் பார்க்கும் நிபுணர்களை ஒன்றிணைத்து உருவாக்கியிருக்கும் மருத்துவக் குழுவினரின் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளை எங்களிடம் ஆலோசனைக்கு வருபவர்களுக்குப் (தொலைபேசி எண்: 044-65381157) பரிந்துரைக்கிறோம்.

பல நிறுவனங்களோடு பேசி வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம். வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் யாரிடமும் நன்கொடை பெறக்கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. எங்களுக்கு எந்த வகையிலாவது உதவவேண்டும் என்று நினைப்பவர்கள், வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்துகளை, இந்த பாதிப்பு இருப்பவர்களிடமும், இல்லாதவர்களிடமும் கூட கூறுங்கள். விழிப்புணர்வு- பாதிப்பு இருப்பவர்களுக்கும் தேவை. இல்லாதவர்களுக்கும் தேவைதானே!” என்றார் உமாபதி.

Posted in Advice, AIDS, albinism, Awareness, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bias, Blood, cancer, Cells, Color, Colour, cure, Deficiency, disadvantage, Discoloration, Disease, Disorder, Dots, genes, Genetic, Hereditary, HIV, hypomelanism, hypomelanosis, inferiority, Kushtam, Leper, Leprosy, medical, Melanin, melanocytes, Oppression, pigment, privilege, Race, racialism, racism, Racist, RBC, Skin, Society, Status, superiority, unaani, Unani, Venkushtam, Vennkushtam, WBC, White, Yunaani, Yunani | 20 Comments »

Thulir Foundation – AIDS awareness message among Transgenders

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

சடங்கு: சுகன்யாவாகிய நான்…

திரு

சென்னை, ஜி.எஸ்.டி. சாலையிலிருக்கும் அந்த சுமாரான திருமண மண்டபத்திற்குள், கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தனர் அரவாணிகள். அவர்கள் மட்டுமல்ல ஆண்களும், பெண்களும் கூட பெருமளவில் திரண்டிருந்தனர் அந்த மண்டபத்திற்குள். யார் வீட்டில் என்ன விசேஷம்? என்று கூட்டத்திலிருப்பவர்களிடம் கேட்டோம். “”சந்தோஷிமாதாவுக்குப் பால் ஊத்துற விழா நடக்குது” என்றனர் கோரஸôக. “”விழாவின் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே…” என்றோம். “”எதுக்கு இந்த விழான்னு தெரிஞ்சா இன்னமும் வித்தியாசமா இருக்கும்?” என்ற சிலர் நம்மை, அந்தப் பகுதியிலிருக்கும் அரவாணிகளின் தலைவியிடம் அழைத்துச் சென்றனர். ராஜேஸ்வரி என்னும் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து…

“”துளிர்’ அறக்கட்டளையின் மூலமாக எயிட்ஸ் விழிப்புணர்வு பிரசாரங்களை மிகவும் பின்தங்கிய மக்களின் இடங்களுக்கே சென்று செய்து வருகிறோம். சமூகத்தில் எங்களுக்கான உரிமைகளுக்காக போராடும் அதேவேளையில், எயிட்ஸôல் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் கருணையோடு அணுகவேண்டியதின் அவசியத்தையும் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

இந்த விழா எதற்காக என்பதைச் சொல்லுகிறேன். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சுகன்யா, ஹேமா, சத்யா, சிவகாமி ஆகியோர் தங்களை முழுமையாகப் பெண்ணாக மாற்றிக் கொள்வதற்கான அறுவை சிகிச்சையை செய்துகொண்டனர். ஏறக்குறைய பதினைந்தாயிரம் ரூபாய் செலவாகும் இந்த அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் தான் செய்துகொண்டிருக்கிறோம். அரசு பொது மருத்துவமனைகளில் இலவசமாக செய்து கொள்ளும் வசதி இனிமேல் வரும் என்கிறார்கள். இந்த அறுவைச் சிகிச்சை எங்களைப் பொறுத்தவரை ஜீவமரணப் போராட்டம். இதில் நல்லபடியாக அறுவைச் சிகிச்சை முடிந்து, 40 நாட்களுக்குப் பிறகு எங்கள் சமூகத்தில் செய்யப்படும் சடங்கு நிகழ்ச்சிதான் இந்த “பால் ஊத்துற விழா’. சந்தோஷிமாதா தெய்வத்திற்கு 21 இனிப்புகளைக் கொண்டு படையல் போடுவோம். பெண்ணாக மாறியவர்கள், மூத்த அரவாணிகளிலிருந்து தங்களின் மாமியாரைத் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாமியார்கள் தங்கள் மருமகள்களுக்கு புதுத் துணி, நகைகள், அணிந்து சீர் செய்வார்கள். காலம்காலமாக நடக்கும் இந்த பாலூத்தற விழாவை எங்கள் சமூகத்திற்குள்தான் நடத்திக் கொள்வோம். இந்த விழாவிற்கு எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கூட வந்திருந்தனர். சமூகத்தோடு எங்களின் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பாகத்தான் இந்த விழாவை நான் பார்க்கிறேன்” என்றார் ராஜேஸ்வரி.

“”இந்த விழா எங்களின் குலக் கடவுளான சந்தோஷிமாதாவுக்கு நன்றி செலுத்தும் விழா. இருபத்திரண்டு வயதில் நான் மீண்டும் பிறந்ததைப் போல் உணர்கிறேன். என்ன பாக்கறீங்க? சுகன்யாவாகிய நான் பிறந்து 40 நாள்தான் ஆகிறது!” என்றார் பெண்ணுக்கேயுரிய நாணத்துடன் சுகன்யா.

Posted in AIDS, Ali, Aravaani, Aravani, Awareness, Bisex, Bisexual, Community, Foundation, GLBT, Health, HIV, NGO, Thirunangai, Thulir, Transgender, Transgenders | Leave a Comment »

Health Education – Teaching about adulthood, sex & biology to Students

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

அலசல்: பட்டாம்பூச்சிகளின் மேல் கல்லை வைக்கலாமா?

ரவிக்குமார்

பாரம்பரியத்திலும் கலாசாரப் பெருமையிலும் ஊறிய இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5.7 மில்லியன் என அலறுகிறது ஒரு புள்ளிவிவரம்.

பெண் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான இந்திய அமைப்பு இந்தியாவில் 53 சதவிதம் குழந்தைகள் பால் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தியாவையே கலக்கியது ஒரு மல்ட்டி மீடியா மெசேஜ் (எம்.எம்.எஸ்). எட்டாவது படிக்கும் மாணவன் அவனுடைய சக மாணவியிடம் நடத்தியிருக்கும் பால் ரீதியான குறும்புகளை அவனே செல்போனில் படம் எடுத்த காட்சிகள்தான் அவை.

மேற்சொன்ன கொடுமைகளிலிருந்து எதிர்கால இந்தியாவின் இளைய தலைமுறையைக் காப்பாற்றுவதற்கு என்ன வழி? என்று யோசித்த அரசாங்கம், இந்த ஆண்டு முதல் யுனிசெஃப் அமைப்பால் வடிவமைக்கப்பட்ட (ஏ.இ.பி.) வளர்இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தக் கல்வித் திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக விஷயங்களைப் பற்றி சிலரிடம் கேட்டோம்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம், பால் ரீதியான விழிப்புணர்வை வழங்கி வரும் சென்னையைச் சேர்ந்த “துளிர்’ அமைப்பின் இயக்குனர் வித்யா ரெட்டி, “”வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை அவர்களிடம் ஆலோசிக்காமல் வடிவமைக்கக் கூடாது. இன்னொரு விஷயம், இந்தக் கல்வித் திட்டத்தை குழந்தைகளின் பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், உளவியல் அறிஞர்கள் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் கல்வித் திட்டத்தைச் சாதாரணமாக மற்ற வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது பத்தோடு, பதினோராவது வகுப்பாக முடிந்துவிடும்.” என்றார்.

“”நமக்கென்று ஒரு கலாசாரப் பின்னணி இருக்கிறது. அதன் அஸ்திவாரத்தையே ஆடவைக்கும் பல வேலைகளில் ஒன்றாகத்தான் இதையும் பார்க்கிறேன். வளர் இளம் பருவத்தினருக்கான இந்தக் கல்வித் திட்டத்தை பெற்றோர்களின் வழிகாட்டுதலோடுதான் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகத்தான் போய் முடியும். முதலில் பெரியவர்களுக்கே பால் ரீதியான கல்வியில் பெரியதாகத் தெளிவு இல்லாதபோது, குழந்தைகளுக்கு அது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” என்றார் சுயம் அறக்கட்டளையின் தாளாளரான உமா.

“”இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி ஒருசில வீடுகளில் தான் இருக்கும். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. குடிதண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படும் கிராமங்களில் கூட வீட்டுக்கு வீடு பெரும்பாலும் டிவி இருக்கிறது. கூடவே கேபிள் கனெக்ஷனும். நாளுக்கு நாள் மீடியாவில் விதவிதமான திரைப்பாடல்கள் எந்தவிதமான சென்சாரும் இல்லாமல் அரைகுறை ஆடைகளுடன் அப்படியே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோதாததற்கு செல்போன், இன்டர்நெட்… என்று எத்தனையோ தகவல் தொடர்புச் சாதனங்கள். அதைப் பயன்படுத்தி எந்த மாதிரியான தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை. மீடியா இன்றைக்கு எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் தற்போதுள்ள சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்கள் படிக்கும் முறை, மிகவும் தாராளமாக அவர்களிடம் புழங்கும் செல்போன்கள் எல்லாமே அடுத்தகட்டத்துக்கு அவர்களை மிக அவசரமாகத் தூண்டுபவையாக இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு வளர் இளம் பருவத்தினருக்கான பால்ரீதியான விழிப்புணர்வுக் கல்வி அவசியம் என்றுதான் நினைக்கிறேன். இந்த பருவத்தின் வாயிலில் இருப்பவர்களுக்குத்தான் நிறைய குழப்பங்கள் இருக்கும். பால் ரீதியான அவர்களின் குழப்பங்களுக்குச் சரியான விளக்கங்களை அவர்களுக்கு பெற்றோர்களும் விளக்குவதற்கு முன்வரமாட்டார்கள். பருவ வயதை அடையும் பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாறுபாடுகளை “இது இயல்பான ஒன்றுதான்’ என்று பெண்ணுக்கு எடுத்துச் சொல்வதற்கு யோசிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? பெண்களுக்கு இப்படி என்றால், ஆண் பிள்ளைகளுக்கும் உடலில் இயல்பான மாற்றங்கள் நடக்கும். இந்தச் சமயத்தில் பெற்றோர்களின் அனுசரனை இல்லாதபோது,

அவர்களுக்கு கேட்காமலேயே கிடைப்பது சக நண்பர்களிடம் கிடைக்கும் ஆலோசனைகள்தான். அவை பெரும்பாலும் தவறான அறிவுரைகளாகவே இருக்கும். முதலில் அவர்களின் உடலை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நல்லவிதமான தொடுதல் என்பவை எது, கெட்டவிதமான தொடுதல் என்பவை எவை என்ற புரிதல்கள் எல்லாம்,இந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் அறிவுறுத்தப்படவேண்டும். கலாசாரம், பாரம்பரியம் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு இந்த விஷயத்தை அணுகாமல், அடுத்த தலைமுறைக்கு இன்றைய சமூகத்தில் இருக்கும் ஆபத்துகளை எதார்த்தமான முறையில் நாம் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார் உளவியல்பூர்வமான ஆலோசனைகளை கிராமத்தில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்துவரும் சி.ஆர். செலின்.

“”ஸ்டேட்-போர்டு, மெட்ரிகுலேஷன் போர்ட் என எல்லா வகையான கல்வி அமைப்பிலும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை வழங்குவதில் தவறில்லை. இதனால் எண்ணற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பெரிதும் பயன் விளையும். பொதுவாக மேல்தட்டு மக்கள் பெருவாரியாகப் படிக்கும் பள்ளிகளில், வளர் இளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கு “கவுன்சலிங்’ கொடுப்பதற்கென்றே தனியாக வசதி செய்திருப்பார்கள். வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை தகுந்த அறிதலுடன் அறிவியல் பூர்வமான புரிதல்களுடன் கற்றுக்கொடுப்பதற்கு ஆசிரியர்கள் ஆத்மார்த்தமான பங்களிப்பை அளிக்கவேண்டும். அதேநேரத்தில் எல்லா பள்ளிகளிலும் நிச்சயமாக “புகார் பெட்டி’ வைக்கப்படவேண்டும். அவை மாவட்ட கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். கல்வித் துறையில் ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே இதை வலியுறுத்துகிறோம்.” என்றார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்வா.

“”பட்டாம்பூச்சியின் மேல் கல்லை வைப்பது போன்ற செயல்தான் இது. நாகரிகத்தில் நம்மை விட முன்னேறிய நிலையில் இருக்கும் மகாராஷ்டிரம் மாநிலத்திலேயே இந்தச் செக்ஸ் கல்விக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு, அன்னிய நாடுகளின் இத்தகைய கல்வி முறைகள் தேவையே இல்லை. நம் வீடுகளிலேயே நாம் காலம்காலமாக கடைப்பிடிக்கும் ஒழுக்கமுறைகள் அப்படியேதான் இருக்கின்றன. இத்தகைய செக்ஸ் எஜுகேஷன்களால் தேவையில்லாத சந்தேகங்கள்தான் மாணவர்களிடேயே ஏற்படும். அப்படி பால் ரீதியான சந்தேகத்தை செக்ஸ் எஜுகேஷன் தெளிவுபடுத்துவதாகவே இருக்கட்டும். ஆறாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாத தெளிவுதானே? குழந்தைகள் பால் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகும் கொடுமையைக் காரணம் காட்டி செக்ஸ் எஜுகேஷனை ஆதரிக்க முடியாது. வெளிநாடுகளில் கூட இத்தகைய செக்ஸ் எஜுகேஷன் எதிர்மறையான விளைவுகளையே அளித்திருக்கிறது. இந்த கல்வித் திட்டத்துக்குப் பின், முறைகேடான பால் உறவுக்குப் பின் காலை வேளையில் கர்ப்பத் தடைக்காக தயாரிக்கப்பட்ட மாத்திரைகளின் விற்பனையும், அதையும் தாண்டி இளம் குழந்தைத் தாய்மார்களின் எண்ணிக்கையும்தான் செக்ஸ் எஜுகேஷனால் வெளிநாட்டிற்கு கிடைத்த பரிசு என்பது “ரெட் அலர்ட்’ என்னும் புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கே பதினெட்டு வயது ஆனவுடன்தான் அனாடமி வகுப்புகள் நடக்கின்றன. ஆறாம் வகுப்பிலேயே இதைத் தெரிந்து கொள்ளட்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?” என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை செüந்தரராசன்.

“”அடலசன்ட் எஜுகேஷன் புரோக்ராம் என்பது செக்ஸ் எஜுகேஷன் அல்ல என்பதை சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இன்னமும் இதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்படவில்லை. இந்த ஆண்டே பள்ளிகளில் இந்தத் திட்டத்தை தொடங்குவார்களா என்றும் தெரியாது. அதற்குள் இவ்வளவு எதிர்ப்புகள்.” என்றார் டி.ஏ.வி. பள்ளியின் முதல்வரான டாக்டர் சதீஷ்.

– எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் சாதகமான விஷயங்களும் பாதகமான விஷயங்களும் நிச்சயம் இருக்கும். அதிலிருக்கும் குறைகளைப் போக்கிவிட்டால் எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் திட்டங்கள்தான்.

Posted in A, abuse, adult, adulthood, Adults, AIDS, Awareness, Biology, Boy, Brain, Censor, Chat, Children, Cinema, Computer, Condom, Controversy, Culture, Development, discussion, Education, Exposure, Female, Formal, Gentleman, Girl, Glamour, Health, HIV, Imagination, Insights, Intercourse, Interview, Issue, Kid, Kiss, Lady, Love, Lust, male, masturbate, masturbating, Mature, Media, menstruation, MMS, Movies, NC-17, Opinions, Period, PG, Physchology, PMS, Private, Rape, Rating, Sex, SMS, solutions, Students, Suggestions, Tamil, Teachers, Teen, Teenage, Textbooks, Thamizh, TV, UNICEF, Violence, VT, Vulgar, WHO | Leave a Comment »

Organization Halts Clinical Trial For Potential Microbicide For Preventing HIV Infection

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

பெண்களுக்கு எயிட்ஸ் பரவாமல் தடுக்கும் மருந்தின் சோதனை நிறுத்தம்

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆபிரிக்கப் பெண்
எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆபிரிக்கப் பெண்

எயிட்ஸ் நோய்க் கிருமி பெண்களுக்கு தொற்றாமல் பாதுகாக்கக் கூடிய மருந்து ஒன்றின் ஆரம்ப மருத்துவப் பரிசோதனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

மைக்ரோபைசைட் என்று பெயரிடப்பட்ட ‘களி’ போன்ற இந்த மருந்து பெண்களுக்கு உதவாமல், அவர்களுக்கு நோய் தொற்றும் வகையில் அவர்களைப் பலவீனமாக்கியது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

தென்னாபிரிக்கா, பெனின், உகாண்டா மற்று இந்தியா ஆகிய நாடுகளில் 1300க்கும் அதிகமான பெண்கள் மீது இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது.

நைஜீரியா நாட்டில் நடத்தப்பட்டுவந்த இதேபோன்ற பரிசோதனையும் நிறுத்தப்பட்டது.

இந்த மருந்து ஏன் செயற்படவில்லை என்று தெரியவில்லை என்று இந்தப் பரிசோதனைக்கு உதவி வழங்கிய உலக சுகாதார நிறுவனமும், ஐ.நா எயிட்ஸ் ஒழிப்பு நிறுவனமும் கூறியுள்ளன.

Posted in AIDS, cellulose sulfate, CONRAD, Healthcare, HIV, Medicine, microbicide, Nigeria, Prevention, Research, Science, UN, Women, WTO | Leave a Comment »

Libyan Court Sentences Health Workers to Death in AIDS Case

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

எயிட்ஸ் நோயைத் தொற்றச் செய்த குற்றச்சாட்டில் மருத்துவ பணியாளர்களுக்கு லிபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

குற்றஞ்சாட்டப்பட்ட சிலர்
 

நூற்றுக் கணக்கான சிறார்களுக்கு வேண்டுமென்றே எச்.ஐ.வி வைரஸை தொற்றச் செய்தார்கள் என்று குற்றங்காணப்பட்டதை அடுத்து, 5 பல்கேரிய நாட்டுத் தாதிமாருக்கும் மற்றும் ஒரு பாலஸ்தீன மருத்துவருக்கும் லிபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

ஏழு வருடங்களாகத் தொடர்ந்து நடந்த இந்த வழக்கு, சர்வதேச கண்டனத்தைத் தூண்டியுள்ளது.

ஒப்புதல் வாக்கு மூலம் வழங்குமாறு தாம் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

இது இந்த வழக்கின் அரச சட்டவாதிகள் தரப்பை வலுவாக்கியிருந்தது.

இவர்கள் குற்றமற்றவர்கள் என்று லிபிய உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்த பின்னர், இந்த வழக்கு இரண்டாவது தடவையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த வழக்கில் லிபியத் தலைமை தலையிடுவதற்கு உகந்த நேரம் இது என்று பல்கேரிய துணைப் பிரதமர், ஈவயில் ஹால்பின் அவர்கள் கூறியிருக்கிறார்.

ஆனால் சர்வதேச அழுத்தங்களுக்கு தமது அரசாங்கம் பணியாது என்றும், உச்ச நீதிமன்றமே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் லிபிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

Posted in AIDS, Benghazi, Bulgaria, Capital punishment, Children, conviction, Death Sentence, HIV, Judgement, Jury, Law, Libya, Murder, Nurses, Order, Palestine, Poor, Tamil, Virus | Leave a Comment »