Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Himachal Pradesh’ Category

Analysis of Himachal Pradesh Assembly 2007 Election Results

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

அபாய எச்சரிக்கை

“வெற்றிக்குச் சொந்தம் கொண்டாட நூறாயிரம் பேர்; ஆனால், தோல்வியின் பழியைச் சுமக்க ஆளேயில்லை’ என்பார்கள். இமாசலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்று யாராவது கேட்டால், அதற்கு சரியான பதில் இதுதான்~கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்ன காரணமோ அதேதான் காரணம்!

பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து இப்போது இமாசலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருப்பது, அந்தக் கட்சிக்குப் பெருகிவரும் ஆதரவைக் காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இமாசலப் பிரதேச வெற்றிக்கு முக்கியமான காரணம் பாஜக ஆதரவு அலை என்பதைவிட காங்கிரஸ் எதிர்ப்பு அலை என்பதை மறந்துவிட முடியாது.

தேர்தலுக்குத் தேர்தல் ஆளும் கட்சியை மாற்றுவது என்கிற வழிமுறையை இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்காளர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர் என்று தோன்றுகிறது. இதற்குக் காரணம், எந்த ஆட்சியாலும் மக்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியாமல் இருப்பதா அல்லது வேறு வழியில்லாததால் ஆட்சியை மாற்றி மக்கள் தங்களது கோபத்தைக் காட்டுகிறார்களா என்று தெரியவில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாறுகிறதே தவிர காட்சிகள் மாறவில்லை என்பதுதான் உண்மை. சென்ற தடவை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்னென்ன காரணங்கள் கூறப்பட்டனவோ, அதே ஊழல், நிர்வாகத் திறமையின்மை, உள்கட்சிப் பூசல்கள் போன்ற குற்றச்சாட்டுகள்தான் இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

இன்றைய இமாசலப் பிரதேசத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் டாக்டர் ஒய்.எஸ். பர்மார். சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து இமாசலப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். அவர்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது மட்டுமல்ல, அவருக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக அமைந்த எந்த அரசுமே, அவரது ஆட்சியால் பெற முடிந்த மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அதற்குக் காரணம், அவரது கறைபடியாத கரங்களும், தன்னலமற்ற மக்கள்தொண்டும்தான்.

தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் ஆட்சியை மாற்றும்போது, வெற்றி பெற்றுவிட்டோம் என்கிற களிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், எந்த அரசியல் கட்சியும் தோல்வி அடைந்த கட்சியின் செயல்பாடுகளிலிருந்து பாடம் படிப்பதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இந்த விஷயத்தில், காங்கிரஸýம் சரி, பாஜகவும் சரி, மற்ற மாநிலக் கட்சிகளும் சரி, கொஞ்சமும் மாறுபாடே இல்லாமல் காட்சி அளிக்கின்றன.

இமாசலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துகிறது. பாரதிய ஜனதா ஒரு மதவாத சக்தி என்று மேடைக்கு மேடை முழங்குவதால் காங்கிரஸ் கட்சி பலமடைந்துவிடாது என்பதுதான் அது. மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்சியைத் தேடுகிறார்கள். தங்களது தேவைகளைப் புரிந்துகொண்ட, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியை விரும்புகிறார்கள். அதைத் தர முடியாத வரையில், மதவாத கோஷம் வெற்றியைத் தேடித் தராது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.

நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி, மக்களவைத் தேர்தலில் மத்திய ஆட்சியைப் பிடிக்க உத்தரவாதம் அளிக்குமா என்று கேட்டால், உதட்டைப் பிதுக்குவதைத் தவிர வழியில்லை. அதேநேரத்தில், மாநிலங்களில் காணப்படும் ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி, மத்திய அரசின் மீதும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? விவசாயிகளின் மனக்குமுறலும், விலைவாசி உயர்வும், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டமும் மத்திய அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

பல தொகுதிகளில் போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 சதவிகித வாக்குகளைப் பெற்று காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைத் தடுத்திருக்கிறது என்பதையும், பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சி உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலம் என்று அதிகரித்து வருவதையும் இத்தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸின் இமாசலப் பிரதேசத் தோல்வி, அடுத்து தேர்தல் நடக்க இருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்குமே ஓர் அபாய எச்சரிக்கை என்றுதான் கூற வேண்டும்.

Posted in 2007, Alliance, Analysis, Bahujan Samaj Party, Bharatiya Janata Party, BJP, BSP, Campaign, Citizen, Coalition, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dhumal, election commission, Elections, Gujarat, Himachal Pradesh, Himachal Vikas Party, HP, HVC, HVP, Polls, Prem Kumar Dhumal, PremKumar Dhumal, Results, Sonia, Sukh Ram, SukhRam, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttarakhand Kranti Dal, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Vijai Singh Mankotia, Vote, voters | Leave a Comment »

Rajasthan CM – Gujjars talks: Quota’s macabre face in Rajasthan Gujjar ire and police brutality

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மீனா சமூகத்தினர் எதிர்ப்பு

ஜெய்ப்பூர், மே 30: பழங்குடியினர் பட்டியலில் குர்ஜார் சமூகத்தினரைச் சேர்த்தால் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீனா சமூகத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘ராஜஸ்தானில் மீனா சமூகத்தினர் மட்டுமே பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். அதில் பிற பிரிவினரைச் சேர்ப்பதை ஏற்க முடியாது. அவ்வாறு சேர்ப்பதைத் தடுக்க எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக தியாகங்களைச் செய்ய தயாராக உள்ளனர்’ என்று ராஷ்ட்ரீய மீனா மகாசபை தலைவர் பன்வர் லால் மீனா கூறினார்.

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் வசுந்தரா ராஜே அரசு சேர்த்தால் அவர் மீண்டும் பதவிக்கு வர முடியாது என்றும் அவர் கூறினார்.

தௌசா, பண்டி மாவட்டங்களில் நடந்த தீவைப்பு சம்பவங்களுக்கு மீனா சமூகத்தைச் சேர்ந்த காவல்துறையினரே காரணம் என்று கூறப்படுவது குறித்து கேட்டபோது, “இது ஆதாரமற்ற, முட்டாள்தனமான குற்றச்சாட்டு” என்றார்.

———————————————————————————————-
07.06.07 ஹாட் டாபிக்
குமுதம் ரிப்போர்ட்டர்
நேற்று நந்திகிராம்
இன்று ராஜஸ்தான்

தொடரும் துப்பாக்கிச்சூடு கலாசாரம்

இருள் விலகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. சரக்கு லாரிகளும், ஏர் பஸ்களும் சீரான இடைவெளியில் ராஜஸ்தான் மாநிலம் தௌசாவின் _ ஜெய்ப்பூர் _ ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தன. அத்தனை அதிகாலையில் அந்த நெடுஞ்சாலையில் திடீரென பொதுமக்கள் குழும ஆரம்பித்தனர். பேருந்தில் சென்றவர்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் யோசித்தபடியே சென்று கொண்டிருந்தனர். அதிகாலை ஐந்து மணிக்கு வெறும் நான்காயிரம் பேர்தான் கூடியிருந்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பொதுமக்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்தது.

விஷயம் கேள்விப்பட்ட காவல்துறை, சம்பவ இடத்துக்கு விரைந்தது. என்ன ஏது என்று விசாரித்ததில் அவர்கள் எல்லாம் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் தங்கள் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடவே குழுமியிருப்பதாகவும் தெரிய வந்தது. அவ்வளவுதான். அடுத்த அரை மணி நேரத்தில் தடியடி. கண்ணீர்ப் புகை. துப்பாக்கிச்சூடு. கலவரம். ரத்தத் தெறிப்பு. எல்லாம் வரிசைக்கிரமமாக நடந்தது. இரண்டு காவலர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பதினான்கு உயிர்கள் காவு வாங்கப்பட்டன.

நந்திகிராமத்தில் நடந்ததற்குக் கொஞ்சமும் சளைக்காமல் நடந்துள்ள இந்தச் சம்பவம் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. துணை ராணுவப்படை எல்லாம் குவிக்கப்பட்டுள்ளது. பதற்றம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது. ராஜஸ்தானின் முக்கிய மாவட்டங்களான டோங்க், ஜெய்ப்பூர், தௌசா, புண்டி, சவாய் மதோபூர், கரௌலி ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? யார் இந்த குஜ்ஜார் மக்கள்? அவர்களுடைய பின்னணி என்ன?

குஜ்ஜார் என்பது கிழக்கு ராஜஸ்தானில் அதிக அளவில் வசிக்கும் மக்களின் இனப்பெயர். குர்ஜார் என்றும் சொல்வார்கள். இவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, ஒசாமா பின்லேடன் புகழ் ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறார்கள். பர்வேஸ் முஷாரப் இருக்கும் பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள். இந்த இனத்தில் சுமார் ஐநூறு உட்பிரிவுகளும் இருக்கின்றன. ஆரம்பத்தில் குஜ்ஜார் இனத்தில் இந்துக்கள் மட்டும்தான் இருந்தனர். பின்னர், அராபிய முஸ்லிம்கள் இந்த இனத்தால் கவரப்பட்டு, அந்த இனத்தோடு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு, தங்கள் பெயரோடு குஜ்ஜார் என்பதையும் சிலர் இணைத்துக் கொண்டனர். உதாரணம் குஜ்ரன் வாலா, குஜார் கான். இதனால் இந்தியாவில் இந்த இனம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிந்தது. இந்து குஜ்ஜார்கள், முஸ்லிம் குஜ்ஜார்கள். இவை எல்லாமே எட்டாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை நடந்த சங்கதிகள்.

இந்தியாவில் மட்டும் இந்த இன மக்களின் எண்ணிக்கை மூன்று கோடியைத் தாண்டும். இவர்கள் அனைவருக்கும் பொதுவான மொழி கோஜ்ரி. ஆனால், தாங்கள் வசிக்கும் இடத்தில் என்ன மொழி புழக்கத்தில் இருக்கிறதோ, அதைப் பழகிக் கொண்டனர். சர்தார் வல்லபபாய் படேல், இந்தர் குமார் குஜ்ரால், ஃபக்ருதீன் அலி அகமது, ராஜேஷ் பைலட் ஆகிய அரசியல் ஜாம்பவான்கள், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் போன்றோர் இந்த இனத்தவர்கள்தாம். இந்த இன மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், மாடு வளர்ப்பு, பால் விற்பனை.

கிழக்கு ராஜஸ்தானில் மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள். கண்ணை மூடிக் கொண்டு கை சின்னத்துக்கு வாக்களிப்பவர்கள். ராஜஸ்தானில் குஜ்ஜாரைப் போலவே மேலும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. ஜாட் மற்றும் மீனா. இவர்களில் ஜாட் இனத்தை 1999_ல் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர்.

ஏற்கெனவே தங்கள் இனம் அரசு வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுகிறது, ஜாட் இன மக்களே உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்று மனம்புழுங்கிக் கொண்டிருந்த குஜ்ஜார் மக்களை, இந்த அறிவிப்பு சிந்திக்க வைத்தது. ‘இனிமேல் வேலைவாய்ப்பு விவகாரங்களில் ஜாட் இனத்தவரோடு போட்டி போட வேண்டியிருக்கும். இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்குச் சமம். ஆகவே, எங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துவிடுங்கள்’ என்று போராட ஆரம்பித்தனர்.

இந்தச் சமயத்தில்தான் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது குஜ்ஜார் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தான் உதவுவதாக வசுந்தரா வாக்குறுதி அளிக்கவே, அதுநாள்வரை காங்கிரஸை ஆதரித்த அவர்கள் தாமரைக்குக் கை நீட்டினர். ஆட்சிக்கு வந்தார் வசுந்தரா ராஜே. அவ்வளவுதான். அத்தோடு எல்லாவற்றையும் மறந்துவிட்டு தனது பணிகளில் பிஸியாகிவிட்டார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குஜ்ஜார்கள் போராட்டத்தில் குதித்தனர். விளைவு.. இப்போது பன்னிரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல் குறித்து குஜ்ஜார் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் பைய்ஸ்லா, “எங்கள் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரானது’’ என்று கொதித்துள்ளார்.

“சாலை மறியலில் ஈடுபடுவது நமது போராட்ட முறைகளுள் ஒன்று. இதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தி மரண தண்டனை கொடுத்திருக்கிறது பா.ஜ.க. அரசு. இதற்குத் தகுந்த பதிலை அவர்கள் சொல்லியாக வேண்டும்’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சின் பைலட். இவரும் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்தான்.

“நான் எந்த வாக்குறுதியையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்து, சரிசெய்யவேண்டிய விஷயம். இருந்தாலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளேன். இதுகுறித்து ஒரு முடிவெடுக்க குறைந்தது 15 நாட்களாவது அவகாசம் தேவை. அதுவரை பொறுமை காப்பது அவசியம்’’ என்று கூறியுள்ளார் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.

ஆனால், இதுகுறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பாதவரை போராட்டம் நிறுத்தப்படாது என்று கூறியிருக்கின்றனர் குஜ்ஜார் அமைப்பினர்.

‘இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் விதமாக குஜ்ஜார் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று திடீரென போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர் ராஜஸ்தானின் மீனா இன மக்கள். இவர்கள்தாம் ராஜஸ்தானில் இருக்கும் ஒரே பழங்குடியின மக்கள். ஆக, ஒரு பிரச்னையின் தீர்வு அடுத்த பிரச்னைக்கான ஆரம்பமாக இருக்கக்கூடாது. ஆகவே, மிகவும் எச்சரிக்கையாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ராஜஸ்தான் அரசு! ஸீ

– ஆர். முத்துக்குமார்

—————————————————————————-

அன்னியப்பட்ட ஆட்சியாளர்கள்!

நீரஜா சௌத்ரி – தமிழில்: சாரி

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜர் என்ற சமூகத்தவர் தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி, வன்செயல்களுடன் மேற்கொண்ட கிளர்ச்சி உச்ச கட்டத்தை அடைந்திருப்பதைப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து வருகிறோம்.

ஆண்டுக்கு 9.5% பொருளாதார வளர்ச்சியை எட்டிவரும் நாட்டில், 21-வது நூற்றாண்டில் கால்பதித்துள்ள நிலையில் நடைபெறக்கூடிய சம்பவங்கள் அல்ல இவை. ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்கள்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.

அரசு வேலை வாய்ப்புக்காகத்தான் குஜ்ஜர்கள் திடீரென்று இப்படியொரு வன்முறைக் கிளர்ச்சியில் இறங்கினார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. அரசுப் பணியிலும் அரசுத் துறைகளிலும் மட்டும் அல்லாது தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று வலியுறுத்திவரும் நேரம் இது.

இட ஒதுக்கீட்டுக்காக இப்படி வன்முறையில் இறங்க வேண்டிய அவசியம் குஜ்ஜர்களுக்குக் கிடையாது. அப்படியானால் வன்செயல்கள் ஏன் நிகழ்ந்தன, அவர்களுடைய உண்மையான நோக்கம்தான் என்ன?

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, பிற்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது என்று வி.பி. சிங் தலைமையிலான அரசு எடுத்த முடிவையடுத்து காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் பின்னாலிருந்து தூண்டிவிட்டு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்தன.

ஆனால் பிறகு தேர்தலில் வெற்றிபெற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும் அவசியம் என்பதால் காங்கிரஸ், பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இட ஒதுக்கீட்டு கொள்கையை ஏற்று, அமல்படுத்த ஆரம்பித்தன.

ராஜஸ்தானில் ஜாட் சமூகத்தவருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்தை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அளித்தது.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதலில் தீர்மானித்த வி.பி. சிங்கால் கூட அமல்படுத்த முடியாத காரியம் அது. ஜாட் சமூகத்தவருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகையை அளித்திருந்தால் தேவிலாலின் ஆதரவு வி.பி. சிங்குக்குத் தொடர்ந்திருக்கும், மத்திய ஆட்சியும் பிழைத்திருக்கும். வட இந்திய அரசியல் வரலாறுகூட மாறியிருக்கும்.

வாக்கு வங்கிகள் மூலமே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதால், இட ஒதுக்கீடு என்பதை இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று புரிகிறது. நேற்று ஜாட் சமூகத்தவர் போராடிப் பெற்றனர். இன்று குஜ்ஜர்கள் போராடுகின்றனர். நாளை மற்றொரு சமூகம் போராடத் தொடங்கலாம்.

குஜ்ஜர்கள் சமீபகாலமாக மிகவும் கொந்தளிப்பாக இருக்கின்றனர் என்பது உண்மையே. ராஜஸ்தான் மாநில மக்கள் தொகையில் 5% ஆக இருக்கும் குஜ்ஜர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகின்றனர்.

ஜாதீய அடுக்கில் மேலே உள்ள ஜாட்டுகளுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்து தரப்பட்டதும், இட ஒதுக்கீட்டின்கீழ் வரும் பதவிகளையும் இடங்களையும் அவர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டனர். எனவேதான் குஜ்ஜர்கள் இப்போது பழங்குடி அந்தஸ்து கேட்டுப் போராடுகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இமாசலத்திலும் குஜ்ஜர்கள் பழங்குடி சமூகத்தவராகவே பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ராஜஸ்தான் மக்கள் தொகையில் 10% ஆக இருக்கும் “”மீனா” வகுப்பினர், குஜ்ஜர்களுக்கு பழங்குடி அந்தஸ்து தரப்படுவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அப்படித் தந்தால் தங்களுக்குரிய இடம் குறைந்துவிடும் என்பதுதான் அவர்களுடைய அச்சம்.

தெüசா மாவட்டத்தில் மீனா-குஜ்ஜர் இடையிலான மோதலில் 8 பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இவ்விரு சமூகத்தவரும் அருகருகில் வசிக்கின்றனர். இருவரும் க்ஷத்திரியர்கள். எனவே மோதல் தீவிரமானால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்னால், குஜ்ஜர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தவர் வசுந்தரா ராஜ சிந்தியா என்பது உண்மை. ஆட்சிக்கு வந்த பிறகு அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விஷயம் குறித்துப் பரிசீலிக்க 18 மாதங்களுக்கு முன்னால் ஒரு கமிட்டியை நியமித்தார். அதைப்பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்புகூட வெளியிடப்படவில்லை. அந்தக் கமிட்டியில் இருக்கிறோம் என்பதே சில உறுப்பினர்களுக்குத் தெரியாது!

வாக்குறுதிகளைத் தருவதும் ஆட்சிக்கு வந்தபிறகு அதை மறப்பதும் ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை. ஆனால் சில அரசியல்வாதிகள், இப்படிப்பட்ட நிலைமை தோன்றியவுடனேயே சுதாரித்துக் கொண்டு, நிலைமை முற்றாமல் ஏதாவது செய்துவிடுவார்கள். ஆனால் வசுந்தராவோ அகந்தையின் உச்சத்தில் இருக்கிறார். அவரை கட்சித் தொண்டர்கள்கூட எளிதில் பார்க்க முடிவதில்லை.

தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயகத்தில் அனுமதித்துள்ளபடி கிளர்ச்சி செய்தனர் குஜ்ஜர்கள். ஆட்சியாளர்கள் சொல்லாமல் போலீஸôர் அடித்து நொறுக்கமாட்டார்கள். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிலருடைய மார்பிலே குண்டுகள் பாய்ந்துள்ளன. வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதாக இருந்தால்கூட காலில்தான் சுட்டிருக்க வேண்டும்.

இச் சம்பவம் நடந்த 48 மணி நேரத்துக்குப் பிறகுகூட, “”கிளர்ச்சிக்காரர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்று முதல்வர் பேசியிருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல இருந்தது. பிறகு பாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் தில்லியிலிருந்து அளித்த நெருக்குதல் காரணமாக, குஜ்ஜர் சமூகத் தலைவர்களுடன் பேச குழுவை நியமித்தார். பிறகு வழக்கமாக அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தார்.

இட ஒதுக்கீட்டின்படி ஒதுக்கிய இடங்கள் முழுவதையும் ஜாட் சமூகத்தவரே கைப்பற்றிவிடாமல் தடுக்க, பிகார் பாணியில் “”இணைப்பு 1”, “”இணைப்பு 2” என்று ஜாட்டுகளுக்கும் குஜ்ஜர்களுக்கும் தனித்தனியாக இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை அளித்திருக்கலாம். ஆனால் குஜ்ஜர்களும் இந்த இட ஒதுக்கீட்டை வேலைக்காக மட்டும் கேட்கவில்லை.

இப்போது ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பழங்குடிகளுக்கென்று 31 தனித் தொகுதிகள் உள்ளன. அவற்றை மீனாக்கள் பெற முடிகிறது. பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலுமே சேர்த்து மொத்தம் 7 குஜ்ஜர்கள்தான் வெற்றிபெற முடிந்தது. இதனால் அரசியல்ரீதியாக அதிகாரம் செலுத்தும் இடத்தில் குஜ்ஜர்கள் இல்லை. இதற்காகத்தான் அவர்கள் தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்திய சமுதாயத்திலே புதிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அரசியல் கட்சி வாரியாக மக்கள் இப்போது அணி திரள்வதில்லை. அவரவர் சமூகத்தின் பின்னணியில்தான் அணியாக உருவெடுத்து வருகின்றனர்.

கலிங்க நகர், சிங்கூர், நந்திகிராமம், தெüசா ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி உணர்த்துவது இதுதான். புதிய பொருளாதார வளர்ச்சியின் பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

சமுதாயரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரே சமூகமான மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் போராட ஆரம்பித்துள்ளனர்.

இதை உணரமுடியாத அளவுக்கு ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து மிகவும் அன்னியப்பட்டு நிற்கின்றனர். இது நம்நாட்டு ஜனநாயக முறைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

Posted in AA, abuse, Agitation, Ashok Gehlot, Assembly, Attack, Banjaras, BC, BJP, brutality, Caste, Community, Conflict, Congress, Crisis, Dausa, dead, Devi lal, Devilal, Education, EEO, Elections, Employment, FC, Gadia Lohars, Gujar, Gujjar, Gujjar Sangharsh Samiti, Gujjars, Himachal Pradesh, HP, institution, J&K, Jaipur, Jammu, Jammu & Kashmir, Jammu and Kashmir, Jobs, Karauli, Kashmir, Kirori Lal Meena, Law, Lohars, Mandal, Mathur, MBC, Meena, Meena-Gujjar, Meenas, Nadhigram, Nandhigram, Nandigram, OBC, OC, Order, Police, Polls, Power, Protest, Quota, Rajasthan, Raje, Rajnath, Rajnath Singh, Reservation, SC, scheduled tribes, Shiv Charan Mathur, ST, State, Talks, Tribes, UPA, Vasundhra, Vasundhra Raje, Violence, VP Singh | 3 Comments »