Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Green’ Category

Handicraft products from Betelnut – Tea Cups, Paper Plates from areca tree

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

இளமை பக்கம்

பாக்கு பட்டையிலும் பணம் கொழிக்கும்!

ஜி.மீனாட்சி,

இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்பு மிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் -கோவை துடியலூரைச் சேர்ந்த கே.மல்லிகா.

உபயோகிக்க ஏற்றதல்ல என்று வீணாக்கப்படும் பாக்கு மரப் பட்டைகளில் (மட்டைகள்) இருந்து விதவிதமான தட்டுகள், கப்புகள், சூப் கோப்பைகள் என்று இயற்கை வழி பொருட்களைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தயாரித்து சாதனை படைத்து வருகிறார் இவர்.

மல்லிகா இந்தத் தொழிலுக்கு வந்தது எதிர்பாராதது. அதை அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்:

“”நான் எம்.எஸ்ஸி பட்டதாரி.

திருமணமாகி புகுந்தவீடு வந்தபின், ஏதாவது ஒரு தொழில் செய்யவேண்டும் என்று விரும்பியபோது,

எங்கள் தோட்டத்தில் வீணாகும் பாக்கு மரப் பட்டைகளை உபயோகித்து ஏதாவது செய்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன். பாக்கு மரப் பட்டைகளிலிருந்து தட்டுகள், கப்புகள் செய்யும் இயந்திரம் மைசூரில் கிடைப்பதாய்ச் சொன்னார்கள். அங்கிருந்து முதலில் இயந்திரத்தை வரவழைத்தோம். பின்னர் தயாரிப்பு முயற்சியில் இறங்கினோம்” என்று விவரிக்கிறார் மல்லிகா.

எந்த ஒரு வெற்றியுமே எடுத்த உடனேயே நம் வசப்படுவதில்லை. தொடர் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாதனை சாத்தியமாகிறது. அது மல்லிகா விஷயத்திலும் நடந்தது.

எத்தனை முயற்சி செய்தும் வேண்டிய வடிவத்தில் தட்டுகளையோ, கப்புகளையோ தயாரிக்க முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியிருக்கிறார் மல்லிகா.

“தட்டு’த் தடுமாறித்தான் தட்டு அவர் கைக்கு வசப்பட்டது.

துவக்கத்தில் இருந்த இரண்டு இயந்திரங்கள், 34 இயந்திரங்களாகப் பெருகின. சொந்தத் தோட்டத்துப் பாக்கு மரப் பட்டைகள் போதாதென்று, வெளியிலிருந்தும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்தார். தொழில் வளர்ச்சிக்கு வங்கியிலிருந்து நிதி உதவி பெற்றார். 12 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி தயாரிப்பை முடுக்கிவிட்டார்.

தரமான தயாரிப்புகள், சுத்தம் போன்ற நுட்பமான காரணங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார். நீல்கிரீஸ், கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்கள் இவரது தயாரிப்பைத் தேடி வந்தன. திருமணங்கள், கோயில் விசேஷங்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் இவரது தயாரிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆர்டரின்பேரில் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்.

“”நான் இந்தத் தொழிலைத் தொடங்கும்போது போட்டியாளர்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் இப்போது நிறையப் பேர் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்கள். பாக்கு மரப் பட்டைகளுக்கான தட்டுப்பாடு, தயாரித்த பொள்களைச் சந்தைப்படுத்த முடியாமை போன்ற பல காரணங்களால் ஏராளமானோர் இத் தொழிலைவிட்டே போய்விடுகிறார்கள்….” என்று நடைமுறைச் சிக்கல்களைக் கோடிட்டுக் காட்டும் மல்லிகா, தயாரிப்பு முறை பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்:

“”பச்சையாகக் கிடைக்கும் பாக்கு மரப் பட்டைகளை விவசாயிகளிடமிருந்து வாங்கி, வெயிலில் காயவைத்துக் கொள்கிறோம். காய்ந்த மட்டைகளில் ஒட்டியிருக்கும் தூசி, மண் போன்றவற்றைத் தண்ணீரில் பலமுறை அலசிக் கழுவுகிறோம். மீண்டும் அந்த மட்டைகளைக் காயவைத்து, இயந்திரத்தில் உள்ள அச்சில் பொருத்தி வேண்டிய பொருட்களைத் தயாரிக்கிறோம். தயாரிப்புக்கென உபயோகிக்கப்படும் இயந்திரங்கள் முற்றிலும் பணியாளர்களால் இயக்கப்படுகிறது” என்கிறார்.

தட்டுகள், கப்புகள் தயாரித்தது போக எஞ்சியிருக்கும் பாக்கு மரப் பட்டைகளை, அடுப்பு எரிக்கப் பயன்படுத்தலாம் அல்லது உரம் தயாரிக்க உபயோகிக்கலாம்.

பாக்கு மரப் பட்டை கப் ஒன்று 40 பைசாவிலிருந்து, ஒரு ரூபாய்க்குள் கிடைக்கிறது. தட்டின் அளவுக்கேற்ப, ரூ.1.50-ல் இருந்து ரூ.2 வரை விலை போகிறது.

திருமணம் போன்ற விசேஷங்களில் “பஃபே’ விருந்துகள் பிரபலமடைந்து வரும் நிலையில், பாக்கு மரப்பட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

“”உபயோகித்தவுடன் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்புகளைவிட பாக்கு மரப் பட்டை கப்புகள், தட்டுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவை. அத்துடன் இதில் பரிமாறப்படும் உணவு வகைகள் சூடு குறையாமல், சுவை மாறாமல் இருக்கும். தட்டுகளைப் பிடித்து சாப்பிடுபவரின் கைகளையும் சூடு தாக்குவதில்லை. முக்கியமாக, பாக்குமரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், எளிதில் மட்கும் தன்மை உடையதாய் இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படுவதில்லை” என்று நன்மைகளைப் பட்டியலிடும் மல்லிகாவிடம், இத் தொழிலில் தீமைகளே இல்லையா என்று எதிர்க்கேள்வி எழுப்பினோம்.

“”குளிர்காலத்தில் இந்தப் பொருட்களில் ஒரு விதமான பூச்சி தாக்குகிறது. தயாரிக்கப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே இவை உபயோகிக்க ஏற்றவை என்பதால், நிறையத் தயாரித்து பாதுகாத்து வைக்க முடியாது. விற்பனையாகவில்லையென்றால் தேங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி ஒரு சில பிரச்னைகள் உள்ளன…” என்கிறார்.

வெற்றிகரமான தொழில் முனைவோராய் வளர்ந்த பிறகு, பெண் தொழில் முனைவோர்களுக்காக “வுமன் பிஸினஸ் என்டர்பிரைசஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன்’ என்ற அமைப்பைத் துவக்கி பல்வேறு தொழில் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்துள்ளார் மல்லிகா. இந்த பெண் தொழில்முனைவோர்கள் அவ்வப்போது ஒன்றுகூடி தொழில்துறைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைந்து பெண் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தையும் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார்.

“”அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. திருமணத்துக்குப் பிறகு பெண்களின் ஆர்வம் அப்படியே தேங்கிப் போகிறது. குடும்பம், குழந்தைகள் என்று அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பி விடுகிறது. பெண்கள் தங்கள் திறமைகளை வீணாக்காமல், குடும்பத்துக்கு ஒதுக்கிய நேரம் போக எஞ்சியிருக்கும் ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும். பொருளாதார ரீதியில் தங்களை பலப்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்” என்னும் மல்லிகாவின் வார்த்தைகள், பெண் தொழில்முனைவோருக்கு நிச்சயம் உற்சாக டானிக்காக இருக்கும்.

Posted in areca, areca nuts, Arts, betelnuts, Biz, Business, Commerce, Cups, Exports, Forest, fruit, Green, Handicrafts, Handlooms, Ideas, nuts, Plant, Plates, Small, Tree | 1 Comment »

The dangers lurking behing ethanol & other alternate fuels – Environment & Deforestation Impact

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

தாவர எண்ணெயின் விபரீதம்

ந. ராமசுப்ரமணியன்

உலக அரங்கில் கச்சா எண்ணெய்க்கு மாற்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தாவர எண்ணெயே எனப் பேசப்பட்டு வருகிறது.

தாவர எண்ணெயால் ஏற்படும் விபரீதங்களை அறியாததே இதற்குக் காரணம்.

வான்வெளியில் கரிமல வாயு உள்ளது. அதை உள்வாங்கி வளரும் தாவரங்கள் மூலம் “எத்தனால்’ மற்றும் “பயோ டீசல்’ போன்ற எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த எரிபொருள்கள் மூலம் கார்பன் அளவு அதிகரிக்காது. மாறாக, நிலத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உபயோகத்தால் கார்பன் வெளியீடு பல மடங்கு உயர்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிகரித்து வரும் எரிபொருள் எண்ணெய் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெயே என உலக அளவில் பேசப்பட்டு, அதன் உபயோகமும் அதிகரித்து வருகிறது.

நிலத்தடியில் பல கோடி ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த தாவர வகைகளே கச்சா எண்ணெயாக மாறுகிறது.

ஆனால் தாவர எண்ணெய், தற்போது விளையும் தாவரங்கள், சூரியகாந்தி, பனை, சோயாபீன்ஸ், கரும்பு, தென்னை, சோளம், கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடனடியாகத் தயாரிக்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி பெற்ற பிரேசில் நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பு கரும்பு பயிரிடுவதும், சர்க்கரை உற்பத்தியுமாகும். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 65 சதவீதம் இணைத்து, அந்நாட்டு வாகனங்கள் ஓட்டப்பட்டு வந்தன.

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஆண்டு உற்பத்தி 1790 கோடி லிட்டர் அளவு உள்ளது. பிரேசில் நாட்டில் 83 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்கள் எத்தனாலுடன் சேர்க்கப்பட்ட பெட்ரோல் மூலமாக இயங்குகின்றன. மேலும் நாட்டின் மொத்த எரிஎண்ணெய் உபயோகத்தில் எத்தனால் பங்கு 55 சதவீதம் என உள்ளது.

1925-ம் ஆண்டு ஹென்ரி போர்ட் தனது “போர்ட்’ காரை அறிமுகப்படுத்தும்போதே எதில் ஆல்கஹால் எனும் தாவர எண்ணெயை உபயோகித்தார்.

தாவர எண்ணெயே எதிர்கால எரிபொருளாகப் போகிறது எனவும் கணித்தார்.

அதிக அளவில் அமெரிக்காவும் எதனால் தயாரிக்கும் நாடு. ஆனால் பிரேசிலைப்போல அல்லாமல் கோதுமை, அரிசி, ஓட்ஸ், சோளம், சோயா போன்ற பல தானியங்களிலிருந்து அமெரிக்கா தாவர எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

அமெரிக்க அயோவா மாநிலத்தில் எத்தனால் தயாரிப்பிற்காக 28 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.

டெக்ஸôஸ் மற்றும் இதர மாநிலங்களிலும் இத்தகைய ஆலைகள் அதிக அளவு இயங்க ஆரம்பித்துவிட்டன.

தற்போது தயாராகும் எத்தனால் காற்றிலுள்ள நீரை உட்கொள்வதால் கார் எந்திரங்கள் விரைவில் துருப்பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

தாவர எண்ணெய் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு தரும் “பசுமை எண்ணெய்’ என ஒருபுறம் புகழப்படுகிறது.

கார்பன்டை ஆக்ûஸடை இழுத்து, வளரும் தாவரம், அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கும்போது, கார்பன்டை ஆக்ûஸடை வெளியிட்டு விடுகிறது. இது எப்படிப் பசுமை எண்ணெய் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.

டச்சு ஆலோசக நிறுவனமான டெல்ப்ட் ஹைட்ராலிக்ஸ், “ஒரு டன் பனைத் தாவர எண்ணெய் தயாரிக்கும்போது 33 டன் கார்பன் வெளியீடு ஏற்படுகிறது. இது பெட்ரோலியப் பொருள்கள் வெளியீட்டை விட பத்து மடங்கு அதிகம்.

இது எப்படி பசுமை எண்ணெய் ஆகும்?’ என்று வினா எழுப்பியுள்ளது.

ஐ.நா. ஆய்வு அறிக்கை ஒன்றில் தாவர எண்ணெய், பெட்ரோலியத்தை விட உலகிற்குக் கேடு அதிகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் “எத்தனால்’ தொழிலால் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப் புல்வெளிகள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு கரும்புத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன.

காடுகள் வெட்டப்படுவதால் கார்பன் வெளியீடு அதிகமாகிவிட்டது. இதனால் பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் அழிதல், மண் சக்தியிழத்தல் ஆகிய கேடுகள் நடைபெறுகின்றன.

இப்படி தயாரிக்கப்படும் தாவர எண்ணெயை வாங்குதல் தகாது என பல ஐரோப்பிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.

பிரேசிலில் கரும்பு பயிரிடுவதற்காக மிக அரிய மரங்களையும், சோயா பயிரிடுவதற்காக அமேசான் மழைக் காடுகளையும் அழிக்கத் தொடங்கியுள்ளது பாதகமான செயலாகும்.

மெக்சிக்கோவில் சோளம் போன்ற தானியங்களை தாவர எண்ணெய்க்குப் பெரிதும் பயன்படுத்துவதால், மற்ற உணவுப் பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.

இதனால் உணவுக்காகப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

உலகத் தாவர எண்ணெய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாவர எண்ணெய் திட்டத்தைக் கைவிடும்படி சீனா, இந்தியா போன்ற நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளன.

சொகுசு கார்களில் செல்வந்தர்கள் பவனி வருவதற்காக உலக மக்களின் சோற்றில் மண்ணைப்போடும் பயங்கரத்திட்டம் தாவர எண்ணெய்த்திட்டம் என்ற எதிர்ப்பு மேலோங்கி வருகிறது.

ஆக கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெய் இல்லை என்பது தெளிவாகிறது.

—————————————————————————————————————————————–

பருவநிலை மாற்றம்: தேவை அவசரத் தீர்வு

என். ரமேஷ்

மனித சமுதாயத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் புவி வெப்ப அதிகரிப்பால், இதுவரை காணாத அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

இதை அறிவியல் உலகம் ஏற்கெனவே உறுதி செய்து விட்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட, பருவநிலை மாறுபாடுகள் குறித்த பன்னாட்டு அரசுகள் கூட்டமைப்பின் (ஐபிசிசி) நான்காவது மதிப்பீட்டின் தொகுப்பு அறிக்கை இதை உறுதி செய்துள்ளது.

நடப்பாண்டில், வங்கதேசத்தில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரை பலி கொண்ட சூறாவளி, பிகாரில் 1.4 கோடி மக்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிய வெள்ளப் பெருக்கு, இத்தாலியில் எப்போதுமில்லாத வகையில் 300 பேருக்கு சிக்குன் குன்யா நோய்த் தொற்று எனப் பல்வேறு அறிகுறிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

மின் உற்பத்தி, போக்குவரத்து போன்றவற்றுக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற படிவ எரிபொருள்களை எரிப்பதே வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்கக் காரணம்.

2005 ஆம் ஆண்டு இந்த வாயுவின் அளவு 10 லட்சத்தில் 379 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 6.5 லட்சம் ஆண்டுகளில் நிலவியதில் உயர்ந்தபட்ச அளவாகும். (தொழில் புரட்சி ஏற்பட்ட 18ஆம் நூற்றாண்டில் – 280).

புவியின் தற்போதைய சராசரி வெப்பநிலை 14.5 டிகிரி சென்டிகிரேட். உலகம் தற்போதைய வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்தால் புவியின் சராசரி வெப்பநிலை 6.4 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு அதிகரிக்கும். கடல் மட்டம் 3.7 மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும்.

புவி வெப்பம் 2 டிகிரி அளவு அதிகரித்தாலே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள் முற்றிலும் மூழ்கிவிடும்; கடற்பகுதியால் சூழ்ந்துள்ள வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இந்நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்.

இத்தகைய புவி வெப்ப அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படப்போவது உலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள (ஏறத்தாழ 400 கோடி) ஆசியக் கண்டம்தான்.

கடல் நீரால் சூழ்தல், நன்னீர்ப் பற்றாக்குறை, மகசூல் குறைவால் உணவுப் பஞ்சம், நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரிப்பு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில்தான் பசுமைக் குடில் வாயுக்களைக் குறைத்தல், ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் – நிகழ உள்ள பருவநிலை மாற்றத் தாக்கங்களுக்கு தகவமைத்தல் போன்ற அம்சங்களை விவாதிக்க இந்தோனேசியாவின் பாலி நகரில் டிசம்பர் 3 முதல் 14 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 195 நாடுகளின் 13-வது மாநாடு நடைபெற உள்ளது.

36 வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட கரியமில வாயு அளவில் சராசரி 5.2 சதவீதத்தை, 2008-12 ஆம் ஆண்டுகளுக்குள் குறைக்க வகைசெய்யும் கியோட்டோ ஒப்பந்தம் 1997-ல் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த காலத்துக்குப் பிந்தைய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க பூர்வாங்கப் பணிகளை இந்த மாநாடு மேற்கொள்ள உள்ளது.

தொழில்புரட்சிக்கு முன்பு நிலவியதைவிட 2 டிகிரி சென்டிகிரேட் வரை மட்டுமே புவி வெப்பம் அதிகரிக்கும் நிலையை உருவாக்க, உலகம் முழுவதும் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்பன்டை ஆக்சைடு அளவில் 50 சதவீதத்தை மட்டுமே 2050 ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும்.

இதற்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது வெளியீட்டில் 80 சதவீதத்தைக் குறைக்க வேண்டும்; இந்தியா போன்ற வளரும் நாடுகள் 20 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன.

(20 சதவீதம் குறைக்க முடியாது; தனிநபர் சராசரி கணக்கில் கொள்ள வேண்டும் என திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்).

இந்த அளவுக்கு குறைத்தால் “வளர்ச்சி’ தடைபடும் என்ற வாதங்களுக்குப் பதில், இப்போது குறைக்காவிடில் வரும் காலங்களில் பருவநிலை மாறுபாட்டால் விளையும் பேரழிவுகளால் “வளர்ச்சியே’ கேள்விக்குறியாகும் என்பதுதான்.

இந்த இலக்குகளை எட்ட உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.6 சதவீதத்தைக் குறைத்தால் மட்டும் போதுமானது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை.

அதுமட்டுமன்றி, மாற்று எரிசக்தி, போக்குவரத்து தொழில்நுட்ப உருவாக்கத்தால் வேலைவாய்ப்பு நிலையைச் சரிக்கட்டிவிட வாய்ப்புள்ளது.

மேலும், வளரும் நாடுகளுக்கு கரியமில வாயுவை வெளியிடாத “தூய்மையான’ தொழில்நுட்பங்களை வளரும் நாடுகள் வழங்குவதற்கு அமைப்பை உருவாக்குவது; ஏற்கெனவே, அளவுக்கதிகமாக வெளியிடப்பட்ட வாயுக்களால் ஏற்பட உள்ள தாக்கங்களைச் சமாளிக்க குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்வது; வெளியிடப்படும் 20 சதவீத கரியமில வாயுவுக்கு வனங்களின் அழிவு ஒரு காரணம் என்பதால் காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குவது ஆகியவை தொடர்பான அம்சங்களையும் பாலி மாநாடு விவாதிக்க உள்ளது.

கியோட்டோ ஒப்பந்த நடைமுறைகள் 2012 – ல் முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலையில், இடைவெளியின்றி புது ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும்.

இத்தகைய ஒப்பந்தம் 2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டால்தான், அதற்கு உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் 2012 – க்குள் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த முடியும்.

கியோட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அமெரிக்கா, கட்டாய இலக்குகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.

மாநாட்டின் இறுதிப் நிகழ்ச்சியில் 130 – க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமான பாதக விளைவுகள் தொடங்கிவிட்ட நிலையில், பேரழிவுகளிலிருந்து பூவுலகைக் காக்க உள்ள கால அவகாசம் மிகக் குறைவே.

எனவே, பாலி மாநாட்டின் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக அமைய வேண்டும்.

—————————————————————————————————————————————–

பசுமை இந்தியா சாத்தியமா?

அன்ஷு பரத்வாஜ்

பிலிப்பின்ஸ் நாட்டின் பாலித் தீவில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்ட புவி வெப்ப மாற்றங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, நச்சு இல்லாத புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா எதிர்பார்க்கும் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டின் மின் சக்தி தேவை 4,000 பில்லியன் கிலோவாட் என்று திட்டக் கமிஷன் மதிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் 20,000 பில்லியன் கிலோவாட் மின் சக்தி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்துள்ளது,

இந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யப்போகிறோம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும்.

இந்த மின் உற்பத்தியின் தேவையில் ஒரு பகுதி கரியமில வாயு இல்லாத தொழில்நுட்பங்களின் மூலம் கிடைக்கும்.

நிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருள்களின் மூலம் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 97 சதவிகிதம் கிடைக்கிறது.

கரியமில வாயு இல்லாத பல மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் இதுவரை பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. மரபு எரிசக்தித் துறையில் இருந்து மரபுசாரா எரிசக்தித் துறையில் உற்பத்தியை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

எதிர்காலத் தேவையில், 15 சதவிகித உற்பத்தியை கரியமிலம் இல்லாத தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குவதை ஒரு வழிமுறையாகக் கொள்ளலாம். இதற்கு என்னென்ன வாய்ப்புகள்தான் உள்ளன?

காற்றாலை மின் உற்பத்தி நல்லதொரு நம்பகமான தொழில்நுட்பம். இந்தியாவில் தற்போது காற்றாலை மூலம் 7,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் காற்றின் வேகம் குறைவுதான். இதன் காரணமாக காற்றாலை விசிறிகள் முழு வேகத்தில் இயங்க முடியவில்லை.

காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்தாலும், இது தேவையில் ஒரு சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும். இதனால், காற்றாலை மின் உற்பத்தி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.

அடுத்துள்ளது தாவரங்களைக் கொண்டு மின் உற்பத்தி. எண்ணெய் சத்து உள்ள தாவரங்கள் மூலம் பயோடீசலை உற்பத்தி செய்ய முடியும்.

சர்க்கரை ஆலைகளில் மொலாசிஸில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியும். கரும்புச்சக்கை, உமி போன்றவற்றில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

மின் உற்பத்திக்கு தாவரங்களையும் பயன்படுத்தலாம். இந்தியாவில் விளைச்சலுக்கு தகுதியான 30 மில்லியன் ஹெக்டேர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதில் 20 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் சத்துள்ள தாவரங்களை சாகுபடி செய்ய பயன்படுத்தினால் 25 மில்லியன் டன் தாவர எண்ணெய் உற்பத்தியாகும். இதன் மூலம் 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.

எத்தனால் மூலம் 100 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இந்தியாவின் மின் உற்பத்தித் தேவையில் 2 சதவிகிதத்தையே பூர்த்தி செய்ய முடியும்.

இந்தியாவில் புனல் மின் நிலையங்கள் மூலம் 84,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், தற்போது 34,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. புனல் மின் உற்பத்தி மூலம் குறிப்பிட்ட இலக்கை எட்டினாலும், அதுவும் மொத்த தேவையில் 2 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைப்பது நிலக்கரி. அனல் மின் நிலையங்கள் மூலம் 51 சதவிகித மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில், இந்தியாவின் மின் உற்பத்தியில் நிலக்கரியே முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.

இருந்தாலும், நிலக்கரி மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது. ஒரு கிலோ கரியமில வாயுவும் வெளியேற்றப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டேயாக வேண்டும். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான தொழில்நுட்பம் பல மடங்கு செலவை இழுத்துவிடும்.

அணு மின் நிலையங்கள் மூலம் தற்போது 4,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கும் குறைவுதான்.

உள்நாட்டில் மிகக் குறைந்த அளவே யுரேனியம் கிடைக்கிறது. இதனால் புளுடோனியம், தோரியம் தொழில்நுட்பங்களைக் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிடலாம்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இலகுரக நீர் மின் உற்பத்தி சாதனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இதைப் பயன்படுத்தி 24,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.

இந்தியாவின் பெரும்பகுதியில் சூரிய சக்தி நன்றாக கிடைக்கிறது. 20 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரிய சக்தி மூலம் 24,000 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி கிடைக்கும். இது நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவை வெளியிடாது.

சூரிய சக்தி அனல் மின் நிலையங்கள் மற்றொரு வாய்ப்பாகவே அமைகிறது. காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 20 கி.மீ. சுற்றளவு கொண்ட நிலத்தில் சூரிய சக்தி மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யமுடியும். இது எட்டு அனல் மின் நிலையங்களின் உற்பத்திக்குச் சமமாகும்.

கரியமில வாயுவை வெளிப்படுத்தாத மின் உற்பத்திக்கு முயற்சிக்க வேண்டும் என்றால், நம்மிடம் உள்ள எல்லா மூலப் பொருள்களையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழில்: டி.எஸ். ஸ்ரீநிவாசன்

Posted in Agriculture, Alternate, Amazon, America, Analysis, Auto, Automotive, Brazil, Cane, Carbon, Cars, CO, CO2, Commerce, Consumption, Corn, Deforestation, Dhals, Diesel, Earth, Eco, Economy, emissions, energy, Environment, ethanol, Farming, Food, Foodgrains, Ford, Forests, Fuel, Gas, Grains, Green, Impact, Industry, Iowa, Land, LNG, Natural, Nature, Oats, oil, Palm, Petrol, Plants, Pollution, Prices, Pulses, Rainforest, Research, rice, Sector, Solar, Sources, Soya, Sugar, Sugarcane, Sunflower, Trees, US, USA, Vegetables, Vehicles, Wheat, Wind | Leave a Comment »

State of Northeastern states – Neglect & Growth of extremist forces

Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2007

அவர்களும் இந்நாட்டு மன்னர்களே!

எஸ். சையது இப்ராஹிம்

தீவிரவாதச் செயல்கள் தொடர்பாக உளவுத் துறை அண்மையில் மத்திய அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில், “வடகிழக்கு மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக தீவிரவாதம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொழிலில் புழங்கிய தொகை ரூ. 250 கோடி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  • அருணாசலப் பிரதேசம்,
  • அசாம்,
  • மணிப்பூர்,
  • மேகாலயா,
  • மிஜோரம்,
  • நாகாலாந்து,
  • திரிபுரா ஆகியவை வடகிழக்கு மாநிலங்கள் ஆகும். இவை 7 சகோதரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சீனா, மியான்மர், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 3 கோடி.
நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் இன்னும் 6 மாநிலத் தலைநகரங்களுக்கு ரயில் வசதி இல்லை. இடாநகர் (அருணாசலப் பிரதேசம்), கொஹிமா (நாகாலாந்து), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய தலைநகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட விமான நிலையங்கள் இல்லை.

இயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தும், நவீன வேளாண்மை நுட்பம் தெரியாததால் ஆண்டுதோறும் ரூ. 3500 கோடிக்கு அத்தியாவசியப் பொருள்களைப் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் அவலம் நிலவுகிறது.

நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் மூன்றில் இரு பங்கு, பிளைவுட் உற்பத்தியில் 60 சதவீதத்தை அளித்தாலும் வருவாயில் ஒரு பைசா கூட திரும்ப முதலீடு செய்யப்படுவதில்லை. கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன. இன்னும் மின்சாரத்தைப் பார்க்காத பல கிராமங்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மத்திய நிதி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்த ரூ. 50 ஆயிரம் கோடியில் அசாம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது வெறும் ரூ. 114 கோடி. நாகாலாந்துக்கோ ரூ. 4 கோடி மட்டுமே. மற்ற மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.

இதனால் உணவுப்பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளில் சிக்கி இந்த மாநிலங்கள் திணறுகின்றன. அசாமின் கடன்சுமை ரூ. 10 ஆயிரம் கோடி.

இந்த நிலைக்கு யார் காரணம்? அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது?. வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. புறக்கணிப்புக்கு இதுதான் காரணம் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி விட முடியாது. புறக்கணிப்பின் விளைவு தீவிரவாதம்.

“1960-களில் ஷில்லாங் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கியிருந்தால் நாங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்று மிஜோ தேசிய அமைப்பின் தலைவர் லால்தெங்கா தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கூறுவதும் உண்மைதான்.

ஆரம்பத்தில் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை ஏவி மக்களை ஆயுதம் தூக்க வைத்தது மத்திய அரசு என்றால் மிகையல்ல. இருப்பினும் அரசின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

நாகாலாந்தில் நாகா சோஷலிஸ்ட் தேசிய கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கையால் அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி இது.

ஆனால், அசாம் மாநிலத்தில் உல்ஃபாவுடன் மத்திய அரசு செய்து கொண்ட உடன்படிக்கை 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன என்பதை அண்மைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதை மனதில் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கீழ்கண்டவற்றையும் செய்யலாம்.

வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள மக்கள் நலனுக்கு எதிரான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் பரிந்துரைப்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். குறிப்பாக “வடகிழக்கு ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கி சேவை அளிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் 7 மாநிலங்களில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே அறிவித்த வடகிழக்கு மாநிலங்களுக்கானக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தலாம். மியான்மர் சாலையைத் திறந்துவிடலாம்.

இது போன்ற நடவடிக்கைகள் வடகிழக்கு மாநில மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தினால், பேச்சுவார்த்தையே ஒருவேளை தேவையில்லாமல் போய்விடும்.

இருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 கோடி மக்களும் நம் சகோதரர்கள், அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இப் பிரச்னையில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்துமா?

Posted in abuse, AGP, Ahluwalia, AP, Arunachal, Arunachal Pradesh, Asom, Assam, Bangladesh, Banks, Bengal, Bhutan, Budget, Burma, Bus, Capital, Care, Center, China, coffee, Commerce, defence, Defense, Destination, Development, Dilse, Drought, Electricity, Employment, Environment, Exports, Extremism, Flights, Floods, Forest, Funds, GDP, Govt, Green, Growth, IMF, Imports, Improvements, Industry, ISI, Itanagar, Jobs, Kohima, Loans, Mahantha, Manipur, Manirathnam, Maniratnam, Manisha, Manufacturing, Megalaya, Meghalaya, Military, Misa, Mizoram, Montek, Mynamar, Naga, Nagaland, Nature, NE, Neglect, Northeast, Pakistan, Party, Planes, Plants, Plywood, Politics, Pollution, POTA, Power, Preity, Railways, Rains, Roads, Rubber, Shahrukh, Shillong, State, Students, Surface, TADA, Tea, Teak, Terrorism, Terrorists, Tourist, Trains, Transport, Travel, Trees, Tripura, ULFA, Uyire, Water, WB, Wood, Youth, Zinta | Leave a Comment »

Presidental Elections in France – SEGOLENE ROYAL vs. NICOLAS SARKOZY

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 24, 2007

பிரான்ஸ் நாட்டுத் தேர்தலின் அடுத்த கட்ட போட்டிக்குத் தயாராகும் இரு வேட்பாளர்கள்

அடுத்த கட்டத் தேர்தலுக்குத் தயாராகும் வேட்பாளர்கள்
அடுத்த கட்டத் தேர்தலுக்குத் தயாராகும் வேட்பாளர்கள்

பிரான்ஸில் மே மாதம் ஆறாம் திகதி நடக்கவுள்ள இறுதி முடிவுக்கான, இரண்டாவது கட்ட அதிபர் தேர்தல் வாக்களிப்புகளுக்கு முன்னதாக, முதற்சுற்றில் வெற்றி பெற்றவர்களான வலதுசாரி நிக்கொலஸ் சர்கோஷி மற்றும் சோசலிஸ எதிர்க்கட்சியைச் சேர்ந்த செகொலென் றோயல் ஆகியோர் தமது இரு வாரகால பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.

சர்கோஷி அவர்கள் டிஜொனிலும் றோயல் அவர்கள் தென்கிழக்கே வலன்ஸிலும் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.

முதற்சுற்றில் சர்கோஷி அவர்கள் 30 வீத வாக்குகளையும், றோயல் அவர்கள் 26 வீத வாக்குகளையும் பெற்று, போட்டியிட்ட 12 வேட்பாளர்களில் முதல் இரு இடங்களைப் பெற்றனர்.

ஆகவே அடுத்த வாக்கெடுப்பில் இவர்கள் இருவர் மாத்திரம் போட்டியிடுவார்கள்.

அதிரடி மாற்றத்துக்கான வேட்பாளராகப் பார்க்கப்படுகின்ற சர்கோஷிக்கும், தாராளவாத இடதுசாரியாகப் பார்க்கப்படுகின்ற றோயல் அவர்களுக்கும் இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது மே மாதம் 6 ஆம் திகதிதான் தெளிவாகும்.

Posted in Bayrou, centrist, Chirac, Communism, Communist, Elections, France, Francois Bayrou, French, Green, Jacques Chirac, Jean-Marie Le Pen, Jospin, Left, LePen, Lionel Jospin, National Front, NICOLAS SARKOZY, Party, Popular Movement Union, President, Right, Royal, Sarkozy, SEGOLENE, SEGOLENE ROYAL, Socialist, UDF, UMP, Union for French Democracy, Vote, voters | Leave a Comment »

Environmental Impact – 10 More Years Left

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2006

உலகம் பேரழிவைச் சந்திக்க இன்னும் பத்தே ஆண்டுகள்தான்!

கே.என். ராமசந்திரன்

ஒரு பரிசலை கொஞ்சமாகச் சாய்த்தால் அது தானாக நேராகி விடும். அதை ஓரளவுக்கு மேல் சாய்த்தால் கவிழ்ந்து விடும். அத்தகைய ஒரு கவிழ் வரம்பை (tipping point்) உலகம் வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் பயமுறுத்தியிருக்கிறார்கள். ஜேம்ஸ் லவ்லாக் (James Lovelock) என்ற விஞ்ஞானி Gaia என்று ஒரு கொள்கையை வெளியிட்டுப் பூமி தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்ளும் திறமையுள்ள ஓர் உயிரி என்று வர்ணித்தார். அவரே இப்போது நாம் மீள முடியாத வரம்புகளைத் தாண்டிப் போய் விட்டோம் என்கிறார். இதுவரை விஞ்ஞானிகள் தென் துருவத்திலும் வட துருவத்திலும் 2 முதல் 3 கிலோமீட்டர் வரை தடிமனுள்ள நிரந்தரப் பனிப்பாளங்கள் உலகளாவிய வெப்பநிலை உயர்வு காரணமாக மெல்ல மெல்லத்தான் உருகும் என்றும் அவை முழுவதுமாக உருகப் பத்தாயிரம் ஆண்டுகளாவது ஆகும் என்றும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நிரந்தரப் பனிப்பாளத்தில் பல விரிசல்கள் இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. பனிப்பாளங்களின் மேல்பரப்பில் உருகும் நீர், விரிசல்களில் இறங்கிப் பத்தே விநாடிகளுக்குள் பனிப்பாளங்களுக்கடியில் உள்ள தரைப்பரப்பை எட்டி விடுகிறது. பனிப்பாளம் தரையை விட்டு நீரில் மிதக்கத் தொடங்கி வேகமாகக் கடலை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. கிரீன்லாந்தின் பனியாறுகள் இந்த விதமாகக் கடலை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டன. அட்லாண்டிக் கடலுக்குள் விழும் பனியாறுகளின் பருமம் 1996-ஆம் ஆண்டிலிருந்த ஆண்டுக்கு 100 கன கிலோமீட்டர் என்ற அளவிலிருந்து 2005-இல் 220 கன கிலோமீட்டராக உயர்ந்திருக்கிறது. சைபீரியாவின் வட பகுதியிலும் பனியாறுகள் அதிக அளவில் உருகத் தொடங்கியுள்ளன. இங்கிலாந்திலுள்ள வனவிலங்குகள் வளிமண்டல வெப்பநிலை உயர்வு காரணமாக வடக்கு நோக்கிக் குடிபெயர்ந்து கொண்டிருக்கின்றன. வழக்கமாக உறைந்து போகும் பல காயல்களில் கப்பல் போக்குவரத்து சாத்தியமாகும் அளவுக்கு நீர் நிறைந்திருக்கிறது. துருவப் பனிமலைகள் கண்ணெதிரே காணாமற் போய்க் கொண்டிருக்கின்றன.

துருவப் பனிப்படலங்கள் தம் மீது விழும் சூரிய வெப்பத்தில் 80 சதவீதம் வரை வானில் திருப்பியனுப்பி விடுகின்றன. கடல் நீர் 7 சதவீத வெப்பத்தைத்தான் பிரதிபலிக்கிறது. பனிப்படலங்கள் பரப்பு குறைவதும் கடல்களின் பரப்பு அதிகமாவதும் இவ்வாறு திருப்பியனுப்பப்படும் வெப்பத்தைக் குறைத்து உலகளாவிய வெப்பநிலையை அதிகமாக்கும்.

துருவப்பகுதிகளின் நிரந்தரப் பனிப்பாளங்களில் சுமார் 450 பில்லியன் டன் அளவுக்குக் கரிம வாயுக்கள் சிக்கியுள்ளன. வட சைபீரியாவின் பனிப்பாலைகளில் மீதேன் விரைவாக வெளியே கசிந்து வருவதாக அலாஸ்கா பல்கலையைச் சேர்ந்த கேட்டிவால்டர் (Katey Walter) கண்டுபிடித்திருக்கிறார். கரிம வாயுக்கள் பசுமைக்குடில் வாயுக்கள். அவை உலகளாவிய வெப்பநிலையை அதிகமாக்கும்.

மண்ணிலும் கிருமிகள் மீதேன் வாயுவை உற்பத்தி செய்கின்றன. தரை வெப்பநிலை உயர்ந்தால் அவ்வாறு உருவாகும் மீதேனின் அளவும் அதிகமாகும். பனிமலைகள் உருகினால் அவற்றிலிருந்து ஏராளமான பசுமைக்குடில் வாயுக்கள் வெளிப்பட்டுப் பூமியின் சராசரி வெப்பநிலையை மேலும் உயர்த்தும். இது ஒரு நச்சுச் சூழலாக மாறி விடும்.

உலகளாவிய வெப்பநிலை 3 செல்சியஸ் டிகிரி உயர்ந்தால் உலகிலுள்ள காடுகளில் பாதிக்கு மேல் அழிந்து சிதைந்து கரிம வாயுக்களை வெளியிடத் தொடங்கும். இன்றிலிருந்து உடனடியாகப் பசுமைக்குடில் வாயுக்களை வெளிப்படாமல் தடுத்து நிறுத்தினால்கூட வளிமண்டல வெப்ப நிலையில் 2 செல்சியஸ் டிகிரி வரை உயர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பட்டு வரும் வெள்ளம், வறட்சி போன்ற உற்பாதங்கள் பத்தாண்டுகளுக்கொரு முறை நிகழத் தொடங்கும். இந்த நிலை நீடித்தால் துருவங்களில் முதலைகளும் நீர் யானைகளும் வசிக்கத் தொடங்கி விடும். பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் கொதித்து ஆவியாகிக் கொண்டிருக்கும். 135 கோடியாண்டுகளுக்கு முன் பூமியின் நிலை அப்படித்தான் இருந்தது. இன்று வெள்ளிக்கிரகத்தில் அதேபோன்ற நிலை நிலவுகிறது. இதற்கெல்லாம் காரணம் பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும் மீதேனும் கரியமில வாயுவும்தான். அவை ஓரளவுக்குச் சூரிய வெப்பத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு உலகம் ஒரேயடியாகக் குளிர்ந்து போய்விடாமல் செய்கின்றன என்றாலும் அதுவே அளவுக்கு மீறும் போது ஆபத்தாகி விடுகிறது.

1765-ஆம் ஆண்டில் ஜேம்ஸ்வாட் நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்துத் தொழிற்புரட்சியைத் தொடங்கி வைத்தது முதல் கரியையும் எண்ணெயையும் எரித்து மனித இனம் வளி மண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்களைப் பரப்பத் தொடங்கிவிட்டது. பீட்டர் காக்ஸ் (Peter Cox்) என்ற ஆங்கிலேய வானிலை வல்லுநர் ஊர்திகளும் விமானங்களும் மின்னுற்பத்தி நிலையங்களும் வெளியிடும் கரியமில வாயுவை வளிமண்டலம் சமாளிக்க முடியாமல் போகிற நிலை இன்னும் பத்தே ஆண்டுகளுக்குள் வந்துவிடலாம் என்கிறார். தற்போது மனித நடவடிக்கைகளால் உருவாக்கப்படும் கரிம வாயுக்களில் கிட்டத்தட்டப் பாதியளவைத் தரையும் தாவரங்களும் கடலும் உட்கவர்ந்து கொள்கின்றன. வெப்பநிலை உயர்ந்தால் அவை அந்த வாயுக்களை வெளிப்படுத்தத் தொடங்கிவிடும். சில விநாடிகளில் பல பில்லியன் டன் கரிம வாயுக்கள் கடலிலிருந்து பொங்கி வெளிப்பட்டு வளி மண்டலத்தில் கலந்து விட முடியும். இதேபோன்ற ஒரு சம்பவம் 5.5 கோடியாண்டுகளுக்கு முன் நிகழ்ந்து பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முற்றாய் அழிந்து போயின.

இந்த நிலைமைச் சீரழிவைத் தடுக்கப் பலரும் பல வழிகளைப் பரிந்துரைக்கிறார்கள். வானில் பல கோடி டன் அளவுக்குக் கந்தக டையாக்சைடைப் பரப்பினால் அது சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்துத் திருப்பியனுப்பி விடும் என்று சிலர் யோசனை கூறியிருக்கிறார்கள். பலூன்கள் மூலம் அவ்வாறு பரப்பலாம். ஆனால் அது பெரும் செலவு பிடிக்கிற விஷயம். அத்துடன் அது ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தி விடக் கூடும்.

விண்வெளியில் சூரியனுடைய நிறையீர்ப்பும் பூமியின் நிறையீர்ப்பும் சமமாக உள்ள இடத்தில் இரண்டடி அகலமுள்ள லென்சுகளைக் கோடிக்கணக்கில் பரப்பிச் சூரிய வெப்பத்தில் ஒரு பகுதி பூமிக்கு வராமல் திசைதிருப்பி விடலாம் என ஒரு யோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இது தொழில்நுட்பச் சிக்கல்கள் நிறைந்த நடவடிக்கை.

வானில் கடல்நீரைப் பீய்ச்சி ஆவியாக்கி நிறைய மேகங்கள் உருவாகும்படி செய்தால் அவை அதிக அளவில் சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்துத் திருப்பியனுப்பி விடும் என்று ஒரு கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் அத்தகைய மேகங்கள் சில நாட்களே நீடிக்கும். கடல்நீரைத் தொடர்ந்து வானத்தில் பீய்ச்சிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும்.

கடலிலும் தரையிலும் ஏராளமான பிரதிபலிப்புப் பொருள்களைப் பொருத்தி ஓரளவு வெப்பத்தைத் திருப்பியனுப்பலாம். வெள்ளையான பிளாஸ்டிக் நுரைப்பலகைகளைக் கடல்களிலும் பாலைவனங்களிலும் பரப்பி வைக்கலாம் என்று சிலர் யோசனை சொல்லுகிறார்கள். ஆனால் அவற்றின் வெள்ளை நிறம் அதிக காலம் நீடிக்காது. அவற்றின் செயல்திறன் குறைந்துவிடும்.

கடல்களில் இரும்புச் சத்தைக் கலந்தால் பைட்டோபிளாங்டன்கள் என்ற நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகிக் கரியமில வாயுவை உட்கவர்ந்து கொள்ளும். அவை இறந்ததும் கடலடித் தரையில் போய்க் குவிந்துவிடும். அதனால் கரியமில வாயு பல நூற்றாண்டுகளுக்கு அங்கேயே தங்கியிருக்கும் என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அதை நம்ப முடியாது.

நமது வாழ்க்கை நடவடிக்கைகளை உடனடியாக மாற்றிக்கொண்டு பசுமைக்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் கலப்பதைத் தடுக்க வேண்டும். அப்படிச் செய்யத் தயங்கினால் உலகம் இன்னும் பத்தே ஆண்டுகளில் பேரழிவைச் சந்திக்கும். ஏழை நாடுகளுக்குப் பணம் கொடுத்து அவற்றிலுள்ள காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தப் பணக்கார நாடுகள் முன்வர வேண்டும் என காக்ஸ் கூறுகிறார்.

Posted in Antartic, Arctic, Carbon dating, Cleanliness, emissions, Environment, Global Warming, Green, Recycle, tipping point, Trash, waterworld | Leave a Comment »