Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Grams’ Category

Self-suffiency in Foodgrain Production – KB Prabhakaran

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 23, 2007

உணவு தன்னிறைவு… நிஜமா?

கே.பி. பிரபாகரன்

நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகளான நிலையில், உணவுத் துறையில் திட்டமிடுதல் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்த நிலையில் “இந்தியா உண்மையிலேயே உணவு தன்னிறைவுடன் உள்ளதா?’ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

நாட்டு மக்களுக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லையெனில் “விடுதலை’ என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியா பெருமளவில் கோதுமையை இறக்குமதி செய்து வருகிறது.

எந்த ஒரு தன்மானமிக்க நாடும் இறக்குமதி செய்யப்பட்ட உணவைக் கொண்டு வாழ்வதில்லை; அதிலும் – நாமே நமக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது உணவுப் பற்றாக்குறையால் மட்டுமே அப்போதைய வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது என்ற புனைவு சரியல்ல. இந்தியாவின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உணவை, தங்களது போர் நடவடிக்கைகளுக்காகக் கொண்டு சென்றதாலும் எந்த இடத்தில், எந்த நேரத்தில் உணவு தேவையோ அங்கு உணவுப் பொருள்களை அளிக்காததாலுமே அந்தப் பஞ்சம் ஏற்பட்டது. இதேபோலத்தான் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், ஒரிசா போன்ற பகுதிகளில் பட்டினியால் மக்கள் வாடிக் கொண்டிருந்த போது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கு விற்கும் விலையைவிடக் குறைந்த விலையில் கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி ஒரு மோசடி நடவடிக்கை.

1980 ஆம் ஆண்டுகளில் 2.85 சதவிகிதமாக இருந்த உணவு தானிய உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1990-களில் 1.6 சதவிகிதமாகக் குறைந்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் முதல் முறையாக, உணவு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைவிட மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதிகரிப்பது நிகழ்ந்தது. இருப்பினும், உணவு உற்பத்தியில் இந்தியாவின் “தன்னிறைவு’ குறித்து மார்தட்டிக் கொள்ளும் வேளாண் வல்லுநர்கள் இந்த மோசமான நிலையை பார்க்கத் தவறிவிட்டனர். இந்தச் சிக்கல் உலகமயத்தால் மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், 2001 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஒரேநேரத்தில் 2,000 பொருள்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கியது; இதில் பெரும்பான்மையானவை வேளாண்மை சார்ந்தவை. இதனால், பெருநகரங்களில் பல்பொருள் அங்காடிகளில் அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆப்பிள்கள் குவிந்தன; மலிவு விலையிலான வியத்நாம் மிளகு, குவாதமாலா ஏலம் ஆகியவையும் இந்தியச் சந்தைகளில் குவிந்தன.

விளைபொருள்கள் வருவாயிலிருந்து, இடுபொருள் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலைக்கு இந்தியாவின் சிறு, குறு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

450 கிராம் பி.டி. ரக பருத்தி விதைகளை ரூ.1,950 என்ற விலைக்கு வாங்க கட்டாயப்படுத்தப்பட்ட விதர்பா பகுதி விவசாயிகள், மகசூல் வெகுவாகக் குறைந்தபோது, ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர்.

வேளாண் வளர்ச்சி 2 சதவிகிதத்துக்கும் குறைவான அளவில் தேக்கமடைந்தது. வேளாண்மையில் ஏற்பட்ட இந்த மிகப் பெரிய நெருக்கடி குறித்து கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பிரதமர் மன்மோகன் சிங், 2005 நவம்பரில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் “வேளாண்மையில் அறிவாற்றல் முன்முயற்சி’ என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை மையமாகக் கொண்டது.

உணவுப் பற்றாக்குறையைப் போக்க மரபணு மாற்றுப் பயிர்கள் தீர்வு அல்ல. நாட்டின் 14.2 கோடி ஹெக்டேர் பயிர்ச் சாகுபடி பரப்பில் பாசன வசதி பெற்ற 4.7 கோடி ஹெக்டேர் நிலத்திலிருந்து 56 சத உணவு தானியம் கிடைக்கிறது. மீதமுள்ள 9.5 கோடி ஹெக்டேர் பரப்பு வானம் பார்த்த பூமியாகும்.

பெருமளவு முதலீடு செய்திருந்த போதிலும், நீர்ப் பயன்பாடு குறித்த தவறான திட்டமிடல் காரணமாக, மானாவாரிப் பகுதிகள் அளிக்கும் வாய்ப்புகள் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை. பிரம்மாண்டமான பாசனத் திட்டங்களுக்குத் தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்ததே இதற்குக் காரணம்.

இதற்கு மாற்றாக, தண்ணீர் சேகரிப்பை உள்ளடக்கிய, அந்தந்தப் பகுதி நீர் வளத்தை மையப்படுத்திய, பரவலாக்கப்பட்ட சிறிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான வேளாண் அறிவியல் மையங்களை 0.9 சத விவசாயிகளே பயன்படுத்துகின்றனர் என்பது கவலை தரும் அம்சம். வேளாண் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அறியாமல் உள்ள ஏறத்தாழ 50 ஆயிரம் கிராம, வட்டார விரிவாக்க அலுவலர்கள், அரசுக்கு நிதிச் சுமையாக உள்ளனரே தவிர, அவர்களால் பயன் ஒன்றும் இல்லை.

இவர்களுக்கு நேர் எதிராக, சீனாவில் 15 லட்சம் வேளாண் தொழில்நுட்ப முகவர்கள், விவசாயிகளின் வயல்களில் அவர்களுடன் தோளோடு தோளாக வேலை செய்து கொண்டே, அந்நாட்டு மண்ணின் மகசூல் அதிகரிக்க புதுமைகளைப் புகுத்திய வண்ணம் உள்ளனர். இந்தியாவில் நிலைமை, இதற்கு நேர்மாறு.

இந்தியாவின் வேளாண் கொள்கை தானியங்களை மையப்படுத்தியதாக அமைய வேண்டும். சீனாவிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் கோதுமை விலை நமக்கு அபாய அறிவிப்பு செய்கிறது; ஒரே ஆண்டில் 80 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டு நமது துறைமுகங்களுக்கு வந்து சேரும் கோதுமையின் விலை டன்னுக்கு ரூ. 14,000-க்கு குறையாது. இந்த நிலையில், நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 900-க்கும் அதிகமாக விலை தருவதற்கு யோசிக்கிறது மத்திய அரசு.

உணவுத் துறையில் முறையான திட்டமிடல் மூலம், நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், மத்திய அரசு தொடர்ந்து அதிக விலைக்கு கோதுமையை இறக்குமதி செய்வது, நமக்கு அவமானம்.

ஆயிரக்கணக்கான தென்னிந்தியக் குடும்பங்களில் அரிசி உணவின் இடத்தை சப்பாத்தி பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரைவை ஆலை உரிமையாளர்கள் கோதுமையைக் கொள்முதல் செய்ய அலைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அரைவையாளர் கூட்டமைப்பில் சேர்த்து, சிறப்பு கோதுமை மண்டலங்களில் கோதுமை உற்பத்தியில் ஈடுபடுத்தினால் என்ன?

கிழக்கு இந்தியாவில், குறிப்பாக பிகாரில், பயன்படுத்தப்படாமல் உள்ள வளமான நிலப் பகுதியை கோதுமை சாகுபடிக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தலாமே!

——————————————————————————————————————-

வேளாண்மை மேம்பட..!

சி. வேழவேந்தன்

நமது நாடு தொழில் வளர்ச்சியில் 9 சதவிகித அளவை எட்டிவிட்டாலும், வேளாண் துறை வளர்ச்சியில் 2.8 சதவிகிதமாகவே உள்ளது. விவசாயிகளுக்குக் குறைந்தவட்டியில் தேவையான அளவு கடன் வழங்குவதே வேளாண்மை மேம்பாட்டுக்கு அடிப்படைத் தேவை.

கிராமங்களில் விவசாயத்தை விட்டுவிட்டு மாற்றுத்தொழிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பருவ மழை தவறுவதும், விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததும், மத்திய, மாநில அரசுகளின் தவறான வேளாண் கொள்கைகளும்தான்.

நஷ்டமானாலும் பரவாயில்லை, தமது நிலத்தை உழவுசெய்யாமல் போடக்கூடாது என்பதே இன்றைய விவசாயிகளின் உணர்வோட்டமாக உள்ளது.

இன்று விவசாயிகள் முன் உள்ள பெரிய பிரச்னை கடன்தான். விதர்பா பகுதியில் நடப்பதைப்போல, தற்கொலை என்ற தவறான முடிவுக்கு இதுவரை தமிழக விவசாயிகள் வரவில்லை. விவசாயமும் கடனும், நகமும் சதையும்போல பிரிக்க முடியாதவை. சிறிய விவசாயிகளுக்கு சிறிய அளவிலும், பெரிய விவசாயிகளுக்கு அதிக அளவிலும் கடன் உள்ளது.

விவசாயிகளின் கடன்சுமையைப் போக்குவதற்காகத் தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்தது. இதனால், கிராமப் பகுதிகளிலுள்ள விவசாயிகள் பெரிதாகப் பயனடையவில்லை.

கட்சி வேறுபாடு இல்லாமல் கூட்டுறவு வங்கியில் தொடர்புடையவர்களும், அவர்களின் உறவினர்களுமாக “பெரிய விவசாயிகள்’ ஒவ்வொருவரும் வாங்கிய பல லட்சம் மதிப்புள்ள கடன்கள்தான் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய விவசாயிகளுக்கு இதனால் பெருமளவில் பலன் ஏற்பட்டதாகக் கூறமுடியாது.

இந்தக் கடன் தள்ளுபடியால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்பட்டுள்ளன. இன்று தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. கடன் தள்ளுபடியான பின்னர் கூட்டுறவு வங்கிகளால் டெபாசிட் செய்திருந்தவர்களுக்கு முதிர்வு காலத்திற்குப் பின்னரும் வைப்புத்தொகையை திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

விவசாயிகள் இதற்கு முன் மற்ற வங்கிகளை விட, கூட்டுறவு வங்கிகளிலேயே தங்களது நகைகளை அடகுவைத்து கடன்பெற்றனர். இன்று நகைக்கடன்களுக்குக்கூட பணம் கொடுக்க முடியாமல் அவ்வங்கிகள் திணறுவதைக் காணமுடிகிறது.

நிலவள வங்கிகளை மூட அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலவள வங்கிகள் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு மட்டும் பயனளித்து வந்த வங்கிகள். நிலவள வங்கிகள் செய்த பணியை தற்போது கூட்டுறவு வங்கிகளும், மற்ற வங்கிகளும் ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவில் விவசாயிகளுக்குக் கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உண்மையாக எத்தனை வங்கிகள் விவசாயிகளுக்கு கடன்கொடுக்க முன்வருகின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

குடும்பம் குடும்பமாகக் கிராமங்களை விட்டு நகரங்களைநோக்கி விவசாயிகள் இடம் பெயர்வதால் விவசாயத்தின் நிலை சில ஆண்டுகளில் என்ன ஆகுமோ என்ற பேரச்சம் ஏற்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு உளுந்து விலை ஏற்றம் விவசாயிகள் நெஞ்சில் பால் வார்த்தது. 20 – 30 ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்த விவசாயிகள் கூட இதுவரை எந்தப் பயிரிலும் அதிக லாபம் பார்த்ததில்லை.

இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சி இந்த ஆண்டு தொடருமா என்பது கேள்விக்குறியே. காரணம் வெளிநாடுகளுக்கு உளுந்து போன்ற பயறுவகைகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தடைதான்.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு இன்றைய முக்கியத் தேவை, போதிய அளவில் வங்கிக்கடன்தான்.

சில விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கினால் திருப்பிச்செலுத்த வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளனர் என்பது உண்மையே. இதைப்போக்க விவசாயிகளுக்கு முதலில் சிறிய தொகையைக் கடனாகக் கொடுக்கலாம். அதை முறையாகத் திருப்பிச் செலுத்தும்பட்சத்தில், அந்தத் தொகையை அதிகரித்துக்கொண்டே செல்லலாம்.

விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் போதுமான அளவு வங்கிகள் கடன் அளித்து, புதிய விஞ்ஞான முறைகளைப் புகுத்தினால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் வகையில் வேளாண்மைத் துறையில் வளர்ச்சியைக் காண முடியும்.

Posted in Agriculture, Apples, Arid, Australia, Bengal, China, Commerce, Dhal, Drought, Eat, Economy, Farmer, Farming, Flood, Food, Foodgrain, Foodgrains, GDP, Grains, Grams, Growth, GWB, Loans, Orissa, Policy, Poor, Rains, rice, Rich, Storage, Sudeshi, Sudesi, Sudheshi, Sudhesi, Suicides, Swaminathan, Tamil, Tariffs, Tax, Vidharba, Vidharbha, Vietnam, Vitharba, Vitharbha, War, WB, Wheat | Leave a Comment »

Online trading increases the prices of essential grains, pulses & grams

Posted by Snapjudge மேல் ஜனவரி 23, 2007

ஆன்-லைன் வர்த்தகம் எதிரொலி: பருப்பு விலைகள் ஒரே நாளில் அதிரடி உயர்வு

சென்னை, ஜன. 23: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பருப்புகளின் விலை திங்கள்கிழமை அதிரடியாக உயர்ந்தது.

ஆன்-லைனில் நடைபெறும் வர்த்தக சூதாட்டமே இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் திங்கள்கிழமை காலை ஒரு மூட்டை (100 கிலோ) துவரம் பருப்பின் விலை ரூ.4,000 ஆக இருந்தது. ஆனால், மாலையில் திடீரென விலை உயர்ந்து ரூ. 4,500 ஆக விற்கப்பட்டது.

அதாவது, கிலோவுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.45 ஆக விற்கப்பட்டது.

இதேபோன்று, உளுத்தம் பருப்பும் மூட்டைக்கு (100 கிலோ) ரூ. 5,800 வரை விற்கப்பட்டது. ஒரே நாளில் உளுத்தம் பருப்பு விலை கிலோவுக்கு ரூ. 4 உயர்ந்தது.

“”ஏற்கெனவே, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், திடீரென ஒரே நாளில் அதிரடியாக விலை உயர்ந்து இருப்பதற்கு ஆன்-லைனில் நடைபெறும் வர்த்தகமே காரணம்” என்றார் கொளத்தூரில் மளிகைக் கடை வைத்திருக்கும் செண்பகராஜ்.

என்ன நடக்கிறது ஆன்-லைனில்…ஆன்-லைனில் வர்த்தகத்தின் போது, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு உள்ளிட்டவை மொத்தமாக முன்பதிவு செய்து வாங்கப்படுகிறது. இதற்கு, மொத்தக் கட்டணத்தில் 5 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும்.

மொத்தமாக, முன்பதிவு செய்யும் போது பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்.

இதன்பின்பு, தினந்தோறும் சந்தை நிலவரத்தை தினமும் ஆன்-லைனில் பார்க்கும் வர்த்தகர்கள் “நல்ல வாய்ப்பு’ கிடைக்கும் போது தங்களின் சரக்கை விற்கின்றனர்.

“”இந்த நிச்சயமற்ற தன்மையால் சில்லறை வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்தியாவின் சில முக்கிய நிறுவனங்கள் இந்த வர்த்தக சூதாட்டத்தில் ஈடுபட்டு, விலை ஏற்றத்துக்கு காரணமாகின்றன” என்றார் வணிகர் சங்கப் பிரமுகர் ஒருவர்

Posted in Cooking, Economy, Finance, Grams, Masoor Dal, Masoor Dhal, Moong Dal, Moong Dhal, Online Trading, Prices, Profits, Pulses, Speculation, Spices, Toor Dal, Toor Dhal, Urad Dal, Urad Dhal | Leave a Comment »

Dhal Exports – Govt. get 1 lac fine for stopping pulse shippings

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, நவ. 21- குஜராத் மாநிலத்தில் உள்ள “ஏசியன் புட் இன்ட்ஸ்டிரிஸ்” என்னும் நிறுவனம் மேற்காசிய நாடுகளுக்கு பருப்பு உள்ளிட்ட உணவு தானிய வகைகளை ஏற்றுமதி செய்ய ஆர்டர்கள் பெற்றிருந்தது. மொத்தம் 107 கண்டெய்னர்களில் தானி யங்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த ஜுன் மாதம் 22-ந் தேதி குஜ ராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் இருந்து 20 கண்டெய்னர்கள் அனுப்பப்பட்டன. மீதமுள்ள 87 கண்டெய்னர்களை அனுப்ப சுங்க இலாகாவிடம் அனுமதி பெறப்பட்டது.

இந்த நிலையில் ஜுன் மாதம் 22-ந் தேதி மத்திய அரசு திடீரென தானிய வகைகளை வெளிநாடுளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித்தது. இதைத் தொடர்ந்து 87 கண்டெய்னர் தானிய வகைகளை வெளிநாடு களுக்கு அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் தடை விதித்தனர்.

இதனால் ஏசியன் புட் இண்டஸ்டிரிஸ் நிறுவனம் அரசுக்கு பல தடவை கோரிக்கை விடுத்தது ஆனால் எந்த பலனும் கிடைக்க வில்லை.

இதையடுத்து ஏசியன் புட்இண்டஸ்டிரிஸ் நிறுவனம் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தானிய வகைகளை ஏற்று மதி செய்யலாம் என்று உத்தர விட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அப்பீல் செய்தது. அந்த மனுவை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், “தானிய ஏற்றுமதிக்கு ஜுன் மாதத்துக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது” என்று கூறி மத்திய அரசுக்கு கண்ட னம் தெரிவித்தனர்.

சரியாக ஆராயாமல் அப்பீல் செய்ததற்காக மத்திய அரசுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் சுப்ரீம் கோர்ட்டு நீதி பதிகள் உத்தரவிட்டனர்.

Posted in Asian Food Industries, Beans, Customs, Dhals, Export, Fine, Grams, Paruppu, restrictions | Leave a Comment »

Organic Foods & Soft Drinks – Harmful chemicals in Drinking Water, Milk, Rice

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

தரநிர்ணய அளவுகோல்

மக்கள் சீக்கிரத்தில் மறந்து போகிறார்கள். அரசியல் என்று மட்டுமல்ல. எல்லா விஷயங்களிலும் இதே நிலைதான்!

கோக-கோலா, பெப்ஸி பானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் நச்சுப்பொருள் எச்சம் உள்ளது என்று 2003-ல் அறிவியல்-சுற்றுச்சூழல் மையம் அறிக்கை வெளியிட்டது. அப்போது அந்த மென்பானங்களுக்கு எதிராகப் பலத்த போராட்டங்கள் நடந்தன; எல்லாரும் மென்பானங்களை உடைத்தனர். பின்னர் மீண்டும் நினைவுபடுத்தியது. மீண்டும் உடைத்தார்கள். மீண்டும் மறந்தார்கள்.

கோக-கோலா பானத்துக்கு கேரள அரசு விதித்த தடையை நீக்கிய கேரள உயர்நீதிமன்றம்,””தயாரித்து விற்பனைக்குத் தயாராக உள்ள பொருள்களில் (ஃபினீஷ்டு புராடக்ட்) நச்சுப்பொருள் எச்சத்தைச் சோதிக்கும் தரநிர்ணய அளவுகோல்களை இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (பி.ஐ.எஸ்.) சொல்லியிருக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

2003-ல், இப்பிரச்சினை எழுந்தபோது, மென்பானங்கள், ஜூஸ் மற்றும் இதர பானங்களில் நச்சுப்பொருள் மற்றும் பாதுகாப்புத் தரநிர்ணயம் குறித்து பரிந்துரைக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரையின்படியே அறிவியலாளர் குழுவும் பி.ஐ.எஸ் அதிகாரிகளும் பங்கேற்ற பல அமர்வுகளுக்குப்பின் அக்டோபர் 2005-ல் மைசூரில் நடந்த கூட்டத்தில் மென்பானங்களுக்கான (கார்பனேட்டட் பீவரேஜ்) தரநிர்ணயம் இறுதிவடிவம் பெற்றது. ஆனால், “வேறுபல தகவல்களையும் சேகரிக்க வேண்டும் என்பதால் முடிவைத் தள்ளிப்போடுங்கள்’ என மத்திய அரசு கூறியதால் தரநிர்ணயம் தீர்மானிக்கப்படவில்லை.

முடிவுகளை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இது மக்களின் உடல்நலன் குறித்தது அல்லவா! இதைப் போராட்டம் நடத்திய எவரும் கேட்டதாகத் தெரியவில்லை. மக்களுக்கு விஷயங்களை நுட்பமாகப் பார்க்கத் தெரிவதில்லை. இந்த வரிசையில், நம் உணவுப் பொருள்களில் உள்ள நச்சு பற்றியும்கூட யாரும் கவனிப்பதில்லை.

வெண்ணெய் நீக்கப்பட்ட பால் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பால் நிறுவனங்கள் கலக்கும் ரசாயனப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது என்று ஆய்வுத் தகவல்கள் எச்சரித்தன. ஆனால் அதுபற்றி யாரும் பேசுவதில்லை.

அரிசி, பருப்பு, காய்கறிகளிலும் பூச்சிமருந்து எச்சங்கள் இருக்கின்றன. அதற்காக ஒரே நாளில் இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப முடியாது என்று வாதிடலாம். ஆனால் அதை நோக்கிய முயற்சிகளில் முனைப்பும் ஊக்கமும் நிச்சயம் வேண்டும். இடையில், பூச்சி மருந்துகளைக் கட்டுப்படுத்தவும், நஞ்சின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் முடியும்.

தமிழகத்தில் பவானியிலும் பாலாற்றிலும் சாயப்பட்டறை மற்றும் தோல் தொழிற்கூடங்களால் நீரே நஞ்சாகிக் கிடக்கிறது. மென்பானங்களைவிட அதிக நச்சுப்பொருள் இந்த ஆற்று நீரில் உள்ளது. இதைத்தான் குளோரின் கலந்து குடிநீராகத் தருகிறது நம் அரசு.

குடிநீர், அரிசி, பருப்பு, பால் ஆகிய இன்றியமையா உணவுப் பொருள்களில் அனுமதிக்கப்பட்ட நச்சுப்பொருள் எச்சம் எவ்வளவு இருக்கலாம் என்கிற தரநிர்ணயம் இன்றைய அவசியத் தேவை. இத்தகைய தர நிர்ணயத்தால் விலை அல்லது வரி கூடுதலாகலாம். ஆனால் நச்சுப்பொருள் எச்சத்தால் ஏற்படும் நோய்களுக்காக நாம் செலவிடுவதைக் காட்டிலும் குறைவாகத்தான் இருக்கும்.

மென்பானங்களை எப்போதும் எந்நேரமும் நாம் குடித்துக் கொண்டிருப்பதில்லை என்று சமாதானம் கூறிக் கொள்வோர் இருக்கலாம். ஆனால், குடிநீர், அரிசி, பால், பருப்பு இவை நம் அன்றாட வாழ்வாதாரம் என்பதை மறந்துவிடக் கூடாது.

Posted in chemicals, Coke, Dhal, Grams, milk, organic, Pepsi, pesticides, rice, Soft Drinks, Tamil, Water | Leave a Comment »

Dhal Prices increase in Tamil Nadu too due to Online Trading

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்வு

கே.வாசுதேவன்

திருநெல்வேலி, செப். 26: தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தால் நமது நாட்டில் தங்கம் மற்றும் வைரம் போன்ற ஆடம்பர பொருள்களில் விலைகள் மட்டும் உயர்ந்து வந்தது. தற்போது மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரத் தொடங்கி இருக்கிறது.

ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு பொருளின் மதிப்பில் 4 -ல் ஒரு பங்கு பணத்தை செலுத்தினாலே அந்த பொருளை வாங்குபவர் தனக்குரியதாக்கி விடலாம். அதாவது ரூ.1 கோடி மதிப்புள்ள பொருளுக்கு ரூ.25 லட்சம் செலுத்தினாலே அந்த பொருளை வாங்கி விடலாம். இதில் அந்த பொருளை வாங்கியவர், அடுத்தவருக்கு அந்த பொருளை விற்கும்போது தான் அந்த பொருளுக்குரிய முழு பணத்தையும் கொடுக்கின்றார்.

இதையே பெரிய வியாபாரிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்களை சில லட்சங்களை மட்டும் செலுத்தி அந்த பொருளை குடோன்களை விட்டு வெளியேறி விடாதவாறு செய்து விடுகின்றனர். இதேபோல் பல வியாபாரிகள் செய்வதினால் அந்த குறிப்பிட்ட பொருள் சந்தைக்கு வராமல் விலை கடுமையாக உயருகிறது.

இதில் கடந்த 2 மாதங்களில் மட்டும் அத்தியாவசிய பொருள்களின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

பருப்பு வகைகள்

ஆன் லைன் வர்த்தகத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது பருப்பு வகைகள் தான். ஜூலை மாதத்துக்கு முன்பு வரை கிலோ கடலை பருப்பு ரூ. 34 இருந்தது தற்போது ரூ. 45 ஆக உயர்ந்து உள்ளது. இதே போல் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசி பருப்பு என்று அனைத்து ரகங்களுமே கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்து உள்ளன.

வட மாநிலங்களில் அதிக மழை பெய்ததினாலும் பொதுவாக இந்த மாதங்களில் பருப்புகளின் விலை அதிகரிக்கும். ஆனால், இந்த ஆண்டு பருப்புகளின் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஆன்லைன் வர்த்தகம் தான் என்கிறார் திருநெல்வேலியை சேர்ந்த பருப்பு மொத்த வியாபாரி.

இதில் அந்த பொருள் வைத்திருந்த காலத்திற்காக போடப்படும் வட்டி நுகர்வோரிடம் இருந்தே மறைமுகமாக வசூலிக்கப்படுகிறது.

ஆன் லைனால் பருப்பின் விலை உயர்ந்தது போல், தற்போது சீரகம், பூடு, மைதா, ரவை, கடலை மாவு போன்ற பொருள்களின் விலையும் உயர்ந்து உள்ளது. இதில் கடலை மாவு கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆக விலை உயர்ந்து இருக்கிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஏழை மக்கள் மேலும் ஏழையாக்க படுவதை தடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

அன்புள்ள ஆசிரியருக்கு…: ஆன்லைன் வர்த்தகம்

“ஏறினால் இறங்குவதில்லை’ – தலையங்கம் (17-2-07) படித்தேன்.

பயறு வகைகள் விளைச்சல் முடிந்து, அறுவடையாகி, வழக்கமாக பிப்ரவரி மாதத்திலேயே விற்பனைக்குக் கடைகளுக்கு வருவது வழக்கம். அப்போது பயறு விலை கணிசமாகக் குறைந்திருக்க வேண்டும்.

ஆனால் கடந்த ஆண்டு விலை குறையாததற்கு வடமாநிலங்களில் பெய்த பெருமழையில் பயிர்கள் சேதமடைந்துவிட்டதே காரணம் எனக் கூறப்பட்டது.

இந்த ஆண்டு கனமழை இல்லை. பயிர்களும் சேதமடையவில்லை. அப்படி இருந்தும் விலை குறையவில்லை. எனவே பயறு வகைகள் விலை உயர்வுக்கு ஆன்லைன் வர்த்தகமே காரணம் என பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எனவே மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் “ஏறிய விலைகள் இறங்கலாம்’.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

முன்பேர வர்த்தக தடை எதிரொலி: கோதுமை விலை சரிவு; அரிசி விலை மாற்றமில்லை
புதுதில்லி, மார்ச் 2: கோதுமை முன்பேர வர்த்தகத்துக்கு மத்திய அரசு விதித்த தடையைத் தொடர்ந்து, கோதுமை விலை குறையத் தொடங்கியுள்ளது.

முன்பேர வர்த்தகத்தில் அரிசி பரிவர்த்தனை குறைவு என்பதால், அரிசி விலை மாற்றமின்றி அப்படியே நீடிக்கிறது என மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆலைகளுக்கான தாரா கோதுமை விலை குவிண்டாலுக்கு ரூ.1020 -ரூ.1035-ல் இருந்து, ரூ.1000 -1005 ஆகக் குறைந்தது. நாட்டு கோதுமை விலை குவிண்டாலுக்கு ரூ.1390 -ரூ.1590-ல் இருந்து ரூ.1200 -ரூ.1,550 ஆகக் குறைந்துள்ளது.

முன்பேர வர்த்தகத் தடையைத் தொடர்ந்து, இருப்பு வைத்திருப்பவர்களிடம் இருந்து, கோதுமையை வாங்குவதில் மாவு மில்களிடையே சுணக்கம் ஏற்பட்டதால் விலை குறையத் தொடங்கியுள்ளது.

Posted in Collars, Commodities, Contracts, Deflation, Dhal, Exchanges, Futures, Globalization, Grams, Impact, Increases, Inflation, Monetrary, Online, Options, Price, Recession, rice, Tamil, Tamil Nadu, TN, Trade, Trading, Wheat | 1 Comment »