Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Genetic’ Category

Ven Kushtam? Disorder Awareness – Melanin deficiency

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

விழிப்புணர்வு: வெண்குஷ்டம் அல்ல… வெண்புள்ளிகள்

ரவிக்குமார்


“”எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி நடத்தவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் நீண்ட காலமாக சருமத்தில் வெண்புள்ளிகளுடன் இருப்பவர்களை, இன்னமும் இந்தச் சமூகம் “வெண்குஷ்டம்’ வந்தவர்கள் என்ற தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறது. இதை வெண்புள்ளிகள் என்று அழைப்பதுதான் சரி. நோயே இல்லாத இதை தொழுநோய் என்று அழைப்பது தவறு.” என்று தன்னுடைய ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தினார், கே.உமாபதி. இவர், “வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்- இந்தியா’ என்னும் அமைப்பின் பொதுச் செயலாளர். இவரும் இந்தப் பாதிப்போடு இருப்பவர்தான். வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் ஏற்படுத்துவதுடன், வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தகுந்த சிகிச்சை முறைகளை அறிவுறுத்தி வருகிறார் கே.உமாபதி. வெண்புள்ளிகள் இயக்கத்தின் செயல்பாடுகளைக் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“”நம் உடலின் மிகப் பெரிய உறுப்பே தோல்தான். தோலில் உள்ள “மெலனின்’ என்ற நிறமி இழப்பினால் சருமத்தில் உண்டாவதுதான் இந்த வெண்புள்ளிகள். இந்த மெலனினை நம் உடலில் உற்பத்தி செய்வது தோலில் உள்ள “மெலனோûஸட்’ என்ற பெயருடைய அணுக்களின் வேலை.

நம் உடலில் கிருமிகளின் பாதிப்பு வரும்போது, அதை எதிர்ப்பது ரத்த வெள்ளை அணுக்களின் வேலை. இதனால் இந்தச் செல்களை “மிலிட்டரி செல்கள்’ என்று அழைப்பர். இந்த மிலிட்டரி செல்கள், கிருமி என நினைத்து “மெலானோûஸட்டை’ அழிக்கின்றன. அவ்வாறு மெலனோûஸட் செல்கள் அழிக்கப்படும் இடங்களில் வெண்புள்ளிகள் தோன்றி அது அப்படியே பரவத் தொடங்கும்.

இந்த வெண்புள்ளிகள் பாதிப்பு எந்த வயதிலும், யாருக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் வெண்புள்ளிகள் பாதிப்புக்கு உள்ளானோர்கள் 18 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பார்கள். இந்தியா முழுவதும் சுமார் 4 கோடி பேருக்கு இருக்கும். உலக மக்கள் தொகையில் இரண்டு சதவிகிதம் பேருக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருக்கின்றது.

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்களே வித்தியாசமாக நடத்தும் நிலை மாறவேண்டும். குறிப்பாக இந்தப் பாதிப்புடன் இருக்கும் பெண்களை குடும்பத்தின் விசேஷங்களில் பங்கேற்காமல் ஒதுக்கி வைப்பது, தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்தால் அவர்களிடமிருந்து விலகி இருப்பது போன்ற செயல்களால், உளவியல்ரீதியாகப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெண்புள்ளிகள் தொற்றக்கூடியதோ, பரம்பரையாகத் தொடரும் பிரச்சினையோ இல்லை என்பதை மக்கள் கூடும் பொதுஇடங்களிலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வுப் பிரசாரங்களைச் செய்துவருகிறோம். வெண்புள்ளிகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துகளை விளக்கும் வகையில், சமீபத்தில் கூட, பள்ளி மாணவர்களைக் கொண்டு 9 கி.மீ. தூரத்துக்கு மனிதச் சங்கிலி அமைத்தோம்.

ஓர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரிக்கு இந்த வெண்புள்ளிகள் பாதிப்பு இருந்தது. ஆனால் அவரது மனைவிக்கோ, அவரின் இரண்டு பெண்களுக்கோ இந்தப் பாதிப்பு இல்லை. ஒரு பெண் எம்.பி.ஏ.வும், இன்னொரு பெண் எம்.சி.ஏ.வும் படித்திருந்தனர். அப்பாவுக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பதால் அவரின் பெண்களுக்கு பல வருடங்களாகத் திருமணம் ஆகாமலேயே இருந்தது. மனம் வெறுத்துப் போன அந்தப் பெண்களின் தந்தை, “”உங்கள் திருமணம் தடைபடுவதற்குக் காரணமாக நானே இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லி திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இப்படி வெண்புள்ளிகளின் பாதிப்பால் விளைந்த வேதனையான நிஜச் சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால் பெண்கள் அவர்களை அனுசரித்துப் போவதைப் பரவலாகப் பார்க்கமுடிகிறது. அதுவே பெண்ணுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால், அந்தப் பெண்ணின் வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடுகிறது. வேலை வாய்ப்பில் தொடங்கி, திருமணம் ஆவதற்கே கூட தடையாக இருக்கிறது. இதனால் நாங்கள் வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பவர்களுக்குள்ளாகவே பேசி, இதுவரை எட்டு திருமணங்களை நடத்தியிருக்கிறோம். வெண்புள்ளி பாதிப்பு இருந்தாலும் இந்த சாதியில்தான் பெண் வேண்டும், பையன் வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பவர்களுக்கு நாங்கள் உதவமுடியாதுதான். வெண்புள்ளிகளை விடவும் சமூகத்தில் புரையோடிப் போயிருப்பது சாதிதானே!

வெண்புள்ளி பாதிப்பிற்கு என்னைப் பொறுத்தவரையில் அலோபதி மருத்துவம் சரிப்படாது. சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை வைத்தியம் போன்ற வைத்திய முறைகளில் இதை பரவாமல் தடுப்பதற்கு வழியிருக்கிறது. அதிலும் பஸ்பம் (மெட்டல்) கலக்காத மருந்தைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம். சித்தா மற்றும் பரம்பரையாக மருத்துவம் பார்க்கும் நிபுணர்களை ஒன்றிணைத்து உருவாக்கியிருக்கும் மருத்துவக் குழுவினரின் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளை எங்களிடம் ஆலோசனைக்கு வருபவர்களுக்குப் (தொலைபேசி எண்: 044-65381157) பரிந்துரைக்கிறோம்.

பல நிறுவனங்களோடு பேசி வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம். வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் யாரிடமும் நன்கொடை பெறக்கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. எங்களுக்கு எந்த வகையிலாவது உதவவேண்டும் என்று நினைப்பவர்கள், வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்துகளை, இந்த பாதிப்பு இருப்பவர்களிடமும், இல்லாதவர்களிடமும் கூட கூறுங்கள். விழிப்புணர்வு- பாதிப்பு இருப்பவர்களுக்கும் தேவை. இல்லாதவர்களுக்கும் தேவைதானே!” என்றார் உமாபதி.

Posted in Advice, AIDS, albinism, Awareness, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bias, Blood, cancer, Cells, Color, Colour, cure, Deficiency, disadvantage, Discoloration, Disease, Disorder, Dots, genes, Genetic, Hereditary, HIV, hypomelanism, hypomelanosis, inferiority, Kushtam, Leper, Leprosy, medical, Melanin, melanocytes, Oppression, pigment, privilege, Race, racialism, racism, Racist, RBC, Skin, Society, Status, superiority, unaani, Unani, Venkushtam, Vennkushtam, WBC, White, Yunaani, Yunani | 20 Comments »

Impact of MNCs and pricing pressures by Govt. Policy – Harming the local farmer

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2007

ஊருக்கு இளைத்தவன்…

உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.

உலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.

தோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.

தில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.

உலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

உலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.

10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.

வாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.

யூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.

கார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.

கார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.

இந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.

கோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.

மத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.

Posted in Agriculture, Banana, Biz, Brookebond, Brookebonds, Business, Cadburys, Chips, Commerce, Consumer, Copyrights, Customer, Dalit, Deflation, DNA, Doha, Economy, Exports, Farmer, Farming, Fertilizer, Food, Foodgrains, Genetic, harvest, Imports, Inflation, markets, MNC, Monsanto, Natural, Needy, organic, peasant, Poor, Potato, Prices, Pricing, Recession, rice, Rich, Seeds, Shares, Shopping, Shweppes, Sivaji, Statistics, Stats, Stocks, Subsidy, Suicide, Suicides, Talks, Tax, Tea, Trade, Trademark, Unilever, Urea, Vidharaba, Vidharabha, Vitharabha, Wal-Mart, Walmart, Wealthy, Weeds, Wheat, WTO | Leave a Comment »

Elephantiasis gene secrets mapped – BBC Tamil

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2007

யானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது கால்கள்
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது கால்கள்

உலக அளவில் பல நாடுகளில் லட்சக் கணக்கான மக்களை தாக்கும் யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம், யானைக்கால் நோய்க்கான மருந்துகள் அல்லது நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க வழிபிறக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

உலக அளவில் இந்த நோயின் காரணமாக, 13 கோடி மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்புக்கு அடுத்தபடியாக உலக அளவில் வலது குறைவுக்கான, இரண்டாவது காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் உலகில் 80 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. கொசுக்கடி காரணமாகவே இந்த நோய் பரவுகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சிகள் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலும், மேலும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிலும் நடைபெற்றபோதே இந்த நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம், அந்த மரபணுவில் எவ்வகையான புரதங்கள் உள்ளன என்று தெரியவந்திருப்பதாகவும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தடுப்பு முறைகளை முன்னெடுக்கவும் பெரும் வாய்ப்பு ஏற்படும் என இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் குய்லியானோ கூறியுள்ளார்.

இந்த முடிவுகள் மேலும் பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பலருக்கு தங்களது ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Posted in aanaikkaal, aanaikkal, Bacteria, Biotech, Blockbuster, Burkina Faso, Cases, Challenged, Chemists, China, cure, disability, Disabled, Disease, DNA, doctors, Drugs, Elephantiasis, eradicate, Eradication, genes, Genetic, Genetics, genitals, genome, immunisation, India, infected, Infection, legs, Medicine, Mosquito, parasite, R&D, Research, RnD, Science, Scientists, Sri lanka, Srilanka, Treatment, Vaccines, Viral, Virus, worms, yaanaikkaal, Yaanaikkal | Leave a Comment »

Cultural Anthropology series – A Marx in Kumudham Theeranathy: Sociology & Sanjay Subramanian

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

சஞ்சய் சுப்ரமணியத்தின் ‘உள்ளடக்கப்பட்ட மோதல்களும் இணைப்புண்ட வரலாறுகளும்’ :: அ மார்க்ஸ்
01.07.07
குமுதம் தீராநதி

வேறெந்த அறிவுத்துறையையும் போல வரலாற்றுத்துறையை மட்டும் அதன் துறை சார்ந்த கல்வியாளர்களிடம் விட்டுவிட்டு நாம் வாளாவிருக்க இயலாது. இதன் பொருள் நாம் அதில் மூக்கை நுழைக்க வேண்டுமென்பதல்ல. ஆனால், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்கிற அறிதலும் பிரக்ஞையும் சமூகப் பிரச்சினைகளில் அக்கறையுள்ளவர்களுக்குத் தேவை. காலம், இடம் என்கிற இரு அம்சங்களிலும் வேறெப்போதைக் காட்டிலும், வேறெங்கைக் காட்டிலும் இன்று, இங்கு இது முக்கியமாவதை விரிவாக விளக்க வேண்டியதில்லை.

சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் மார்க்சீய அணுகல் முறை எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. ஆசிய உற்பத்தி முறை குறித்த விவாதங்கள், சோழர்கால மற்றும் முகலாயர் கால நிலவுடைமை பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கால் பகுதியில் ‘அடித்தள மக்கள் ஆய்வுகள்’ (Subaltern Studies), ‘பின் காலனிய ஆய்வுகள் (Post Colonial Studies) ஆகியன மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தன. இவை இரண்டும் இந்திய வரலாற்றாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவற்றோடு Segmentary State’ என்கிற மாதிரியைப் பயன்படுத்தி சோழ, விஜயநகரப் பேரரசுகளை ஆய்வு செய்த பர்ட்டன் ஸ்டெய்னின் புகழ்பெற்ற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

அடித்தள மற்றும் பின் காலனிய ஆய்வுகள் இன்று ஒரு தேக்கத்தை எட்டியுள்ளதை யாரும் உணர இயலும். இந்தப் பின்னணியில், இன்று உலக அளவில் முக்கிய வரலாற்றாசிரியர்களில் ஒருவராக அறியப்படும் சஞ்சய் சுப்ரமண்யத்தின் ‘உள்ளடக்கப்பட்ட மோதல்கள்’ (Contained Conflicts) மற்றும் ‘இணைப்புண்ட வரலாறுகள்’ (Connected Histories) ஆகியன, நாம் அவசியம் பரிச்சயப்படுத்திக் கொள்ளத்தக்கவையாக உள்ளன.

சீனம் மற்றும் மத்திய ஆசியாவின் வரலாறுகளை எழுதிய ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோசப் ஃப்ளெட்சரின் ஒருங்கிணைக்கப்பட்ட வரலாறு

(Integrative History) என்கிற கருத்தாக்கத்திலிருந்து தனது இணைப்புண்ட வரலாறு எழுதியலை உருவாக்கியுள்ளார் சஞ்சய். ‘Early Modern Period’ எனப்படும் நவீனத்துவத்தின் தொடக்க காலத்திய (அதாவது பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னதான மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள், இந்திய வரலாறு இவரது ஆய்வுப் பொருள். ‘இந்தியா’, ‘இந்தியக் கலாச்சாரம்’, ‘முகலாயப் பேரரசு’ என்கிற நெகிழ்ச்சியற்ற இறுக்கமான கருத்தாக்கங்களின் அடிப்படையில் அன்றைய உலக நிகழ்வுகளிலிருந்து பிரித்துத் தனியே இக்கால கட்டத்தின் வரலாற்றை எழுதுவது சாத்தியமில்லை. இத்தகைய எழுதுமுறையே பல்வேறு அபத்தமான இருமை எதிர்வுகளுக்கும் (எ.டு: கீழைத்தேயம் x மேலைத்தேயம்), அச்சுப் பதிவுகளுக்கும் (Stereo Types எ.டு. கீழைத்தேய எதேச்சாதிகாரம், மாற்றமற்ற மரபு வழிப்பட்ட இந்தியா, கிராம சமுதாயம், Homo Hiirarchicus, மேலைத் தேயத்தின் கொடையாக நவீனத்துவத்தின் வடுகை) இட்டுச் சென்றன.

‘பிராந்திய ஆய்வுகள் area studies) மற்றும் ‘கலாச்சார ஆய்வுகள்’ என்கிற பிரசித்தமான பல்கலைக்கழக ஆய்வு நெறிகள் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவா. தேசங்கள், கலாச்சாரங்கள் என்பதெல்லாம் இணைக்க இயலாத பாழ்களால் பிரிக்கப்பட்டவை அல்ல. ஏதோ நவீனமான தொழில் நுட்பங்களும், தொடர்புச் சாதனங்களும்தான் இந்தப் பிளவை அழித்தொழிப்பதாக நாம் கருத வேண்டியதில்லை. நுண் நிகழ்வுகளை, தொடர்புடைய உலகளாவிய செயற்பாடுகளுடன் இணைத்து ஒரு அகன்ற திரையில் நாம் வரலாற்றைத் தீட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ‘‘இந்தியாவின் வரலாற்றை இந்தியாவுக்கு வெளியே செல்லாமல் நம்மால் புரிந்து கொள்ளவோ விளக்கவோ இயலாது’’ என்கிற அஷிம் தாஸ் குப்தாவின் கருத்தைச் சுட்டிக் காட்டுவார் சஞ்சய். இதன் பொருள், எல்லோரும் கடந்து செல்ல வேண்டுமென்பதல்ல. மாறாகப் பிற வரலாறுகள், சமூக மாற்றத் திசை வழிகள் (societal trajectoria) குறித்த ஒரு திறப்பு வரலாற்றாசிரியனுக்குத் தேவை. வங்கத்தின் வரலாற்றை குஜராத்துடன் இணைத்துப் புரிந்து கொள்வதைக் காட்டிலும், பர்மியக் கடற்கரையுடனும் தாய்லாந்துடனும் பிணைத்துப் பார்ப்பது சில கணங்களில் அவசியமாக இருக்கலாம். முகலாயர்களின் வரலாற்றை ஐபீரியாவின் இந்திய ஆளுகை (Estat de India), ஆட்டோமான் மற்றும் சஃபாவித் பேரரசுகள், தக்காண சுல்தான்களின் ஆட்சி ஆகியவற்றிலிருந்து தனித்துப் பிரித்துப் பார்க்க இயலாது.

வழக்கமான காலப்பாகுபாடு (periodization), தேச எல்லை ஆகிய எல்லாவற்றையுமே நாம் ஒதுக்கித் தள்ளுதல் தவிர்க்க இயலாததாகிறது. இந்தியாவுக்கான தனித்துவமான வரையறைகளை வற்புறுத்துவது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்தமாக இராது. இத்தகைய தனித்துவங்களை அதிகபட்சமாக வற்புறுத்திய பாஷம் (இந்தியா என்கிற வியப்பு’) போன்றோரின் கட்டமைப்புகள் வேதப் பொற்கால அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு வேண்டுமானால் உதவலாம். நமது ‘இந்திய வரலாற்றுப் பேராயத்தை (Indian History Congress) எடுத்துக் கொள்ளுங்கள். ‘மத்திய காலம்’ என்றே வரையறையில் 1757 வரை அது அடக்குவதை என்ன சொல்வது? பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின் இங்கு உருவான கடல்வழித் தொடர்புகள் ஆட்சிமுறையிலும், கருத்தியலிலும், பார்வைக் கோணங்களிலும் ஏற்படுத்திய மாற்றங்களை எப்படிப் புறந்தள்ளுவது? வேறுபட்ட பல மனிதர்கள் (பாதிரிகள், தூதுவர்கள், வணிகர்கள், படைத் தலைவர்கள், ஆளுநர்கள் மருத்துவர்கள், வரலாற்றுப் பதிவாளர்கள் பயணிகள்…), வணிகப் பொருட்கள், கருத்தியல்கள், ஆயுதங்கள், மொழிகள் எழுதுமுறைகள் இவற்றின் இடையறாத பயணங்களுக்கு வாய்ப்பளித்த ஒரு ‘குறுக்குச் சாலை’யாக இந்தியா மாறவில்லையா? ‘நவீனம்’ அல்லது ‘தொடக்க நவீனம்’ முதலான கருத்தாக்கங்களில் எவ்வளவுதான் பிரச்சினை இருந்த போதிலும், ‘மத்திய காலம்’ ‘முஸ்லிம் இந்தியா’ என்பவற்றைக் காட்டிலும் உலகளாவிய சில மாற்றங்களுடன் இவை தொடர்புடையதாக அமைவது கவனிக்கத் தக்கது.

‘இந்தியா’, ‘இந்து’ என்கிற வரையறைகளும் பிரச்சினைக்குரியவைதான். ‘அல்_ஹிந்த்’ என்கிற இடைக்கால அராபியச் சொல்லிலிருந்து உருவானது அது. ‘சிந்து’ என்கிற முந்தைய, மேலும் குறுகிய வரையறையிலிருந்து இந்த அல்_ஹிந்த் உருவாகியது. அராபியத் தகவல் களஞ்சிய ஆசிரியர்கள் மற்றும் புவியியலாளர்களின் எழுத்துக்களில் இவ் வரையறை பல வகைப்பட்டதாக அமைகிறது. எல்லோரும் இந்தோ கங்கைச் சமவெளியை (பஞ்சாப் முதல் வங்கம் வரை) உள்ளடக்குகின்றனர். ஆனால் தென்னிந்தியத் தீபகற்பகம் உள்ளடக்கப்படுத்துவதில் தெளிவில்லை. ‘ஹிந்த்’. ‘ஹிந்துஸ்தான்’ என்பன பல நேரங்களில் தக்காணத்தையும் நர்மதைக்குத் தென் பகுதிகளையும் உள்ளடக்குவதில்லை. இன்னொரு பக்கம் ‘ஹிந்த்’ என்பதற்குள் தென் ஆசியா முழுவதையும் (கம்போடியா, தாய்லாந்து), ஏன் ஏமன் (தெற்கு அரேபியா) வரைக்கும் உள்ளடக்கும் போக்கும் இருந்தது. அராபிய நூற்களில் மூன்று புவியியற் பகுதிகள் காணக் கிடைக்கின்றன. (ஹிந்தி, சின் (சீனா), அஜம் (பெர்சிய மொழிப் பகுதி). இவற்றின் எல்லைகள் எப்போதும் ஒன்றே போல வரையறுக்கப்பட்டதில்லை. சில நேரங்களில் ‘அஜம்’ காணாமற் போய் விடுகிறது.

பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த ‘அக்பர் அங் சின் வால் ஹிந்த்’ எனும் அரபுப் பிரதி அராபியர், சீன அரசு, ரூம் அரசு, காதுகளைத் துளையிட்டுக் கொள்ளும் வழக்கமுடையவர்களின் பல்லஹா_ராய் அரசு ஆகியவற்றைக் குறிக்கிறது. பல்லஹா ராயின் ஆட்சியிலுள்ள, ‘ஹிந்த்’தின் சமூக அமைப்பைச் சொல்ல வரும்போது, ‘‘இங்கே புலவர்களும், மருத்துவர்களும் குடும்பங்களுக்குரியவர்களாக உள்ளனர். அக் குடும்பங்களே அத் தொழில்களைச் செய்ய முடியும்’’ என்கிறது. ‘ஹ¨தூத் அல் அலம்’ என்கிற பெர்சியப் பிரதி (10ம் நூ.) ‘‘ஹிந்துஸ்தான் முழுவதும் மத சட்டவிரோதமானதாகவும், முறை தவறிய பாலுறவு (adultary) சட்டபூர்வமானதாகவும் உள்ளது… எல்லோரும் சிலை வணக்கத்தை ஏற்பவர்கள். தங்கம், வெள்ளியில் செய்யப்பட்ட ஏராளமான சிலைகள் பிராமணர்கள் மற்றும் சாமியார்களால் பாதுகாப்பில் உள்ளன… ஒரே ஒரு நகரத்திலாவது தலைவன் சாகும்போது அவனுக்குக் கீழே உள்ள கீழ்மக்கள் எல்லோரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்’’ என்று பதிவு செய்கிறது. இந்நூல் வரையறுக்கும் ‘ஹிந்த்’ லாகூர், முல்தான், காஷ்மீர், கன்னோஜ் பகுதிகளை மட்டுமின்றி காமரூபம் (அஸ்ஸாம்), சம்பா, கேமர் (கம்போடியா), ஃபன்சூர் (சுமத்ரா) ஆகியவற்றையும் உள்ளடக்குகிறது.

இப்படி நிறையச் சொல்லலாம். சமஸ்கிருத வரலாற்றைக் குதூகலமாக எழுதும் ஷெல்டன் பொல்லாக் சமஸ்கிருதமொழி ஆளுகையின் எல்லைக்குள் கம்போடியா, சம்பா வரை கொண்டு செல்வதும் குறிப்பிடத் தக்கது. ‘அகண்ட இந்தியா’ கோட்பாட்டாளர்கள் இவை குறித்து மகிழ்ச்சி சொள்ளத் தேவையில்லை. மேற்கண்ட வரையறைகளில் தென்னிந்தியா உள்ளடக்கப்படாதது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் 16_ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆட்டோமன் வரலாற்றுப் பதியரான (Chronicler) செய்ஃபி செலபி ‘ஹிந்த்’ மன்னர்களைப் பட்டியலிடும்போது, மொகலாயப் பேரரசர் ஜலாலுதீன், அக்பரை விட்டுவிடுவதும் தக்காண அரசர்களில் தொடங்கி ‘பெகு’ (பர்மா), ‘செரன்தீப’ (ஸ்ரீலங்கா) அரசர்களையும் ‘அசோஹ்’ சுல்தான்களையும் (இந்தோனேஷியா) உள்ளடக்குவதும் அகண்ட பாரதக்காரர்களுக்கு எந்த அளவு உவப்பளிக்கும் என்பது தெரியவில்லை.

வெளியிலிருந்து பார்த்தவர்கள் இருக்கட்டும், உள்ளிருந்தவர்கள் எந்த அளவிற்கு ‘ஹிந்த்’ என்கிற வரையறையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்? யார் ‘உள்நாட்டவர்’? யார் ‘அந்நியர்’? 13,14,15 நூற்றாண்டுகளில் இந்திய வரம்பு குறித்த கருத்துக்கள் புறவயமான வரையறைகளாகத்தான் இருந்தனவேயழிய உள்ளிருந்து உரிமை கோரப்பட்டவையாக இல்லை என்கிறார் சஞ்சய்.

‘‘நாகரிகம்’’ என்கிற கருத்தாக்கம் (இந்திய நாகரிகம், ஐரோப்பிய நாகரிகம்,) இத்தகைய பரந்துபட்ட அளவிலான இணைப்புண்ட வரலாறு எழுதியலுக்குப் பெருந்தடையாக உள்ளது. அச்சுப் பதிவான இக் கட்டமைப்புகளை உருவாக்கியவர்கள் தென்கிழக்கு ஆசியா (கம்போடியா, இந்தோனேசியா, ஜாவா, சுமத்திரா முதலான இந்தியப் பெருங்கடற் தீவுகள்)வுக்கு இந்தத் தகுதியை வழங்கியதில்லை. தொடக்கத்தில் இந்திய நாகரிகம், பின்னாளில் இஸ்லாமிய நாகரிகம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகவே தென்கிழக்கு ஆசியா கருதப்பட்டது. ஆனால் பிரம்பணான், போரோபோதூர் ஆகியவற்றின் மகத்தான கலை வெளிப்பாடுகள் தென்னிந்தியாவில் கோயிற் கலை உருவாக்கத்திற்கு முன்னதாகவே தோன்றியவை என்பதை யாரும் சிந்திப்பதில்லை.

பல்வேறு கலாச்சாரங்கள் பயணிக்கும் குறுக்குச் சாலையாக இந்தியா அமைந்ததை ஏற்காததன் விளைவுதான், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி முதலானோர் விஜயநகரப் பேரரசை தக்காண சுல்தான்கள், டில்லி முகலாயர்கள் ஆகியோரின் கலாச்சார அரசியல் விரிவாக்கத்திலிருந்து தன்னைக் காத்துக் கொண்ட வீரமிக்க இந்துப் பேரரசாக உருவகிப்பது. பர்ட்டன் ஸ்டெய்ன், பிலிப் வாகோனர் முதலான இன்றைய விஜயநகர வரலாற்றாசிரியர்கள் இந்தக் கருத்துப் பிழையை வெளிப்படுத்துகின்றனர். விஜயநகரக் கலை வடிவங்கள் மட்டுமின்றி, பாசனமுறை, இராணுவ மற்றும் நிதி நிர்வாகம், பெயர் சூட்டிக் கொள்ளும் முறை வரை புறவயச் செல்வாக்குகளுக்கு ஆட்பட்டவையாகவே இருந்தன. வட இந்தியா, தக்காணம், ஹ¨ர்முஸ், பெர்சிய வளைகுடா ஆகிய பகுதியிலிருந்து விஜய நகரத்தின் மீது இத் தாக்கங்கள் அமைந்தன. ‘இந்து விஜயநகரம்’ ‘முஸ்லிம் எதிரிகள்’ என்கிற கட்டமைவு ரொம்பச் சிக்கலானது. போர்த்துக்கீசியத் தலையீட்டைக் கணக்கில் கொள்ளாது இதைப் புரிந்து கொள்ள இயலாது. பிரிட்டிஷ் வருகைக்கு முந்திய போர்த்துக்கீசிய ஆசியாவில் போர்த்துக்கீசியர்களுக்கும் முகலாயர்களுக்குமிடையிலான ஒத்துழைப்பு அல்லது உறவு என்பது ஒருவரை ஒருவர் பல்வேறு தந்திரங்கள், ஒப்பந்தங்கள், நடைமுறைகளினூடாக மடக்கிப் போடுகிற முயற்சியாகவே இருந்தது? நேரடியான போர்கள் இல்லை என்பதற்காக உள்ளடக்கப்பட்ட மோதல்களை நாம் புறக்கணித்துவிட இயலாது.

1572_3 ஆண்டுகளில் அக்பர் குஜராத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபோது, கோவா மற்றும் டையூவில் உறுதியாகக் கால் பதித்திருந்த போர்த்துக்கீசியர் துணுக்குற்றனர். அக்பரது ஆளுநரின் ஆட்சியில் குஜராத் இருந்த போதும் சூரத்திலும் கம்பயாத்திலும் போர்த்துக்கீசியர் சுதந்திரமாக வணிகம் செய்யவும் டையூ துறைமுகத்திற்கு வந்து சேரும் கப்பல்களிடம் சுங்கம் வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். பதிலாக, செங்கடல் வழியாக சூரத்திலிருந்து செல்லும் ‘ஹஜ்’ யாத்ரீகர்களுக்கு கடலாதிக்கத்தில் வலுவாக இருந்த போர்த்துக்கீசியர் பாதுகாப்பு அளித்தனர். இந்தப் பாதுகாப்பிற்காக முகலாயர்கள் ஏராளமான இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. அக்பரின் அத்தை (சித்தி?) குல்பதன் பேகம் 1575_ல் ஹஜ் யாத்திரை செல்வதற்குத் திட்டமிட்டபோது சுமார் ஓராண்டுக் காலம் சூரத்திலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, டாமனுக்கு அருகிலுள்ள புல்சார் என்னும் பிரதேசத்தை விட்டுக் கொடுத்த பின்னரே 1576 அக்டோபரில் அவர் கப்பலேற அனுமதிக்கப்பட்டார். ஆட்டோமன் பேரரசுக்கும் முகலாயர்களுக்குமிருந்த பகையை போர்த்துக்கீசியர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஹஜ் பயணிகளின் கடற்பயணப் பாதுகாப்பிற்கு போர்த்துக்கீசியர்களையே அவர்கள் சார்ந்திருக்க வேண்டி இருந்தது. ஆட்டோமன்கள் தம்மை ‘கலீஃபா’ என்கிற உயர் அந்தஸ்துடையவர்களாக உரிமை கோரியதை எதிர்த்தே அக்பர் ‘தீன் இலாஹி’ என்கிற புதிய மரபை (லீமீtக்ஷீணீறீஷீஜ் sமீஸீt) உருவாக்கித் தன்னை ஒரு ‘மெனஸா’ நிலையில் ‘பாத்ஷா_இ_இஸ்லாம்’ ஆக அறிவித்துக் கொண்டார். இதனால் சன்னி முஸ்லிம்களின் எதிர்ப்புகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

பதேபூர் சிக்ரியில் சேசு சபைப் பிரிவை ஏற்படுத்த அனுமதி அளிக்க நேர்ந்தது எனக் கதை நீள்கிறது.

இத்தகைய ‘உள்ளடக்கப்பட்ட மோதல்’ என்கிற பின்னணியில்தான் விஜய நகரப் பேரரசின் முஸ்லிம் எதிர்ப்பைப் பார்க்க வேண்டும். முகலாயர்களுக்கு (மோர்கள்) எதிரான மாற்று வம்ச (ரீமீஸீtவீநீ) அரசு ஒன்றை போர்த்துக்கீசியர் ஊக்குவித்தனர். இந்த அரசியல் நோக்கத்தின்பாற்பட்டதே விஜயநகரத்தின் எதிர்ப்பு. இந்து ஙீ முஸ்லிம்; சிலுவை ஙீ பிறை என்கிற இருமை எதிர்வுகளெல்லாம் எந்த அளவிற்கு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்தமானவை என்பது கேள்விக்குறியே. கிறிஸ்தவ வணிக நலன்களுக்கு இடையேயும் முஸ்லிம் அரசுகளுக்கு இடையேயும் இருந்த வேறுபாடுகள் கிறிஸ்தவ ஙீ முஸ்லிம் வேறுபாடுகளைக் காட்டிலும் கூர்மையாக இருந்த தருணங்கள் உண்டு.

பேரரசுகளின் விரிவாக்கம், காலனிய நடவடிக்கைகள், தேசிய உருவாக்கம் ஆகியன குறித்த இறுக்கமான ஒற்றை மாதிரிகளுக்கும் இணைப்புண்ட வரலாற்றில் இடமில்லை. ஐரோப்பாவை மையமாகவும் (Center), இந்தியா முதலானவற்றை விளிம்பாகவும் (Periphery) கொண்டு உருவாக்கப்படும் ‘உலக அமைப்புக் கொள்கை’ (World System Theroy்)யும் கூட பிரச்சினைக்குரியதே. இத்தகைய அணுகல் முறையில் மூன்று விதப் பிழைகள் சாத்தியமாகின்றன என்கிறார் சஞ்சய்.

1. கால வழு: ஒரே காலகட்டத்தில் பேரரசுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இருந்த உறவும், பேரரசுக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இருந்த உறவும் வேறுபட்டவையாக இருந்தன. 15_ம் நூற்றாண்டின் முற்பகுதியில், லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து ஹேப்ஸ்பர்க் பேரரசிற்குப் பெரிய அளவில் கப்பம் சென்றது. விலை உயர்ந்த உலோகங்கள் கொண்டு செல்லப்பட்டதோடு கட்டாய உழைப்பு, அடிமைச் சேவகம் ஆகிய வடிவங்களில் உபரியும் கொள்ளை கொண்டு செல்லப்பட்டது. எனினும் இவை அனைத்தும் மையத்தை வளப்படுத்த மட்டுமே பயன்பட்டதாகவும் கருத வேண்டியதில்லை. பணவீக்கத்திற்கும் ஏற்றத்தாழ்வான பொருளாதார அமைப்பிற்கும் இவை காரணமாயின. இதே நேரத்தில், ஐபீரிய மையத்திற்கும் (போர்த்துக்கீசிய & ஸ்பெய்ன்) ஆகிய நாடுகளுக்குமான கேப் (‘நன்னம்பிக்கை முனை’) வழியிலான வணிகம் இத்தகைய சுரண்டல் தன்மை உடையதாக இல்லை. மையத்திலிருந்து தங்கம், வெள்ளி இறக்குமதியாகி, ஈடாக மிளகு, இன்டிகோ முதலான பொருட்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டன. முதற்கட்டத்தில் பெரிய அளவு உபரி கொள்ளையிடப்பட்டதில்லை.

2. இட வழு.: ஒரே இடத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் பேரரசு மையத்திற்கும் வெளியிலுள்ள நாடுகளுக்குமான உறவு ஒரே மாதிரியாக இருந்ததில்லை. ஆசிய நாடுகளுக்கும் ஐபீரியப் பேரரசிற்குமிடையே தொடக்க நவீன காலத்தில் (1450_1750) இருந்த உறவு பெரிய அளவில் சுரண்டல் அடிப்படையில் இல்லை என்றோம். ஆனால், பின்னால் உருவான பிரிட்டன்/பிரான்சுப் பேரரசுகளுக்கும் இந்தியாவிற்குமான உறவு அப்படியானதல்ல. முந்தைய கட்டத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் (புதிய ஸ்பெய்ன் மற்றும் பெரு முதலியன) இருந்த கொடுமையான சுரண்டல் உறவுக்குச் சமமானது இது. எனவே ஒரு இடத்தில் நிலவிய ஏகாதிபத்திய உறவையும் நாம் ஒரே மாதிரிப் பார்க்க வேண்டியதில்லை.

பின் காலனியக் கோட்பாட்டாளர்கள் இங்குதான் பிரச்சினைக்குள்ளாகின்றனர். பின் காலனியம் என்கிற வரையறையை, இந்தியாவையும் லத்தீன் அமெரிக்காவையும் ஒன்றே போல இவர்கள் உள்ளடக்குகின்றனர். லத்தீன் அமெரிக்காவில் பின் காலனியம் என்பது 19_ம் நுற்றாண்டின் பிற்பகுதி. இந்தியாவிற்கு இது பொருந்தாது. இங்கே அது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய நிகழ்வுகளையே குறிக்கும் எல்லாப் பேரரசுகளும் காலனியப் பேரரசுகளல்ல, எல்லாம் ஒரே மாதிரியான பொருளாதார, கலாச்சார தர்க்கத்திற்குள் அடங்கா. காலனிகளுக்கும் பேரரசுகளுக்கும் இடையிலுள்ள பொருளாதாரச் சுரண்டல் ஒன்றே இவற்றுக்கிடையிலான மொத்த உறவுகளையும் குறித்து விடாது. பல்வேறு வகைப்பட்ட உள் சுரண்டல்கள், மோதல்கள் ஆகியவற்றிற்கு மேற்குறிப்பிட்ட வரையறை இடமளிக்காது. இதன் பொருள் ஏகாதிபத்தியம், விளிம்புகளிலிருந்து மையங்களை நோக்கி உபரி செல்லுதல் முதலான கருத்தாக்கங்களைக் கைவிட வேண்டுமென்பதல்ல. மிகுந்த எச்சரிக்கையுடன் இவற்றைக் கையாள வேண்டும் என்பதே.

3. ஐபீரியப் பேரரசும், பிரிட்டிஷ் பேரரசும் வேறு வேறு; அல்லது ஐபீரியப் பேரரசின் முதற்கட்டமும் அடுத்தடுத்த கட்டங்களும் வேறு வேறு என்கிற ரீதியில் இதற்கு விளக்கமளித்துவிட முடியாது. அய்ரோப்பாவை மையமாகக் கொள்ளும் பின் காலனிய அணுகல் முறை ‘நவீனத்துவம்’ குறித்த அருதப் பழசான ஒரு விளக்கத்தை அளிக்கிறது. நவீனத்துவம் என்பது ஐரோப்பாவின் ஏகபோகம். இங்கிருந்தே விளிம்புகளுக்கு நவீனத்துவமும் அதன் அரசியல் வெளிப்பாடான தேசிய அரசும் ஏற்றுமதியாகிறது என்கிறது பின் காலனிய அணுகல்முறை. ஆனால் தேசிய உருவாக்கம் நான்கு வழிகளில் ஏற்படுகிறது.

1. அருகருகே உள்ள அரசமைவுகள் ஒருங்கிணைந்து தேசம் உருவாதல் (19_ம் நூ. இத்தாலி, ஜெர்மனி).

2.பெரிய அரசுகள் உடைந்து, இன, மொழி அடிப்படையில் தேசங்கள் உருவாதல் (அயர்லாந்து, மலேசியா முதலியவை இனம் என்பதைத் தேச உருவாக்கத்தின் சாராம்சமான காரணியாகக் கருத வேண்டாம் என எச்சரிக்கிறார் சஞ்சய்)

3. தேச அரசே ஒரு ஏகாதிபத்திய மையமாக உருவாதல் (பிரிட்டன், ஸ்பெய்ன், போர்த்துகல், நெதர்லான்ட்) 4. தேச அரசு பேரரசுப் பண்புடன் தொடர்தல் (சோவியத் யூனியன், சீனா, இந்தியா _ பேரரசுப் பண்பு என்பது அளவில் பெரிதாகவும் பல்வேறு மொழி, இன அடையாளங்களையும் உள்ளடக்குவதாகவும், ஓரளவிற்கு காப்புத் தன்மை உடையதாகவும் அமைவது).

சுருக்கமாகச் சொல்வதானால் தொடக்க நவீன காலத்திற்குமான ஒற்றை ஏகாதிபத்திய மாதிரி எதுவும் கிடையாது. தேச அரசு உருவாக்கத்திற்கான வழிகளும் ஒற்றைத் தன்மையானதல்ல.

ஒரே நிகழ்வு குறித்த ஐரோப்பிய வரலாற்றுப் பதிவுகளும் அராபிய, பெர்சிய மற்றும் உள்ளூர் வரலாற்றுப் பதிவுகளும் வேறுபட்டு நிற்கும் தன்மைகள் சுவாரசியமானவை. இவை ஒவ்வொன்றும் தத்தம் பக்கத்து அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாகச் சுருக்கிப் பார்த்துவிட இயலாது. நிகழ்வுகளைப் பொருத்து இப் பிரதிகளின் நிலைபாடுகள் வேறுபடுகின்றன. சில நிகழ்வுகளில் ஐரோப்பியப் பதிவுகள் நம்பிக்கைக்குரியனவாகவும், சில நேரங்களில் உள்ளூர்ப் பதிவுகள் கூடுதலாக உண்மையைப் பேசுபவையாகவுமுள்ளன. ஏகாதிபத்திய விரிவாக்கக் கொடுமைகளை அதிக அளவு பட்டியலிடும் ஐரோப்பியப் பிரதிகளுமுண்டு. பேரரசின் கருணையைப் பதிவு செய்யும் உள்ளூர்ப் பிரதிகளும் உண்டு. நவீனமான பிரதியியல் அணுகல் முறைகள், ஒப்பீடு, இதர சான்றுகள் மற்றும் நிகழ்வுகளுடன் தொடர்புறுத்திப் பார்த்தல் ஆகியவற்றின் மூலமாகவே ஒரு சுமாரான வரலாற்றுச் சித்திரத்தை நாம் வரைய முடியும். அப்படியும் கூட வரலாற்றின் சில பக்கங்களை நாம் நிரப்ப முடியாமலே போகலாம். சில கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாமலேயே முடியலாம். அதை ஏற்றுக் கொள்ளும் தைரியமும் நேர்மையும் ஒரு வரலாற்றாசிரியனுக்குத் தேவை.

ஆக, தேசத்திலிருந்து வரலாற்றைத் தப்புவிப்பது நமது உடனடிக் கடமையாகிறது.

விட்டுப் போனவை: 1. சஞ்சய் தனது நூலுக்கு மகுடமாக ஏற்கும் எஸ்ரா பவுண்டின் எட்டாவது கேன்டோ:

குங் சொன்னான், ‘‘வாங் பொறுத்துக் கொள்ளக் கூடிய ஆட்சியைத் தந்தான். அவனது காலத்தில் அரசு நன்றாகக் காக்கப்பட்டிருந்தது.

எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் வரலாற்றாசிரியர்கள் தமது எழுத்துக்களில் நிரப்பப்படாத பகுதிகளை விட்டுச் சென்றனர். நான் என்ன சொல்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியாதவற்றை நிரப்பாமல் சென்றனர். ஆனால், அந்தக் காலம் இப்போது மறைந்து வருவதாகத் தோன்றுகிறது. ஒரு நாள் வரலாற்றாசிரியர்கள் தமது எழுத்துக்களில் நிரப்பப்படாத பகுதிகளை விட்டுச் சென்றனர். ஆனால் அந்தக் காலம் இப்போது மறைந்து வருவதாகத் தோன்றுகிறது.’’

2. சஞ்சய் சுப்ரமண்யத்தின் இரு நூற்கள் Explonations in connected History (i) Tagus to the Ganger (ii) Mughals and .…. ஆக்ஸ்போர்டு வெளியீடுகளாகக் கிடைக்கின்றன.றீ

Posted in A Marx, adultery, Analysis, Anthropology, Cultural, Culture, Genetic, Kumudam, Kumudham, Marx, Op-Ed, Periphery, Sanjai, Sanjay, Sociology, Subramanian, Theeranadhi, Theeranadhy, Theeranathi, Theeranathy, World System Theory | Leave a Comment »

Bt paddy trials raise a din in Tamil Nadu

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2006

பி.டி.படாமல் போகுமா?

கோவை அருகே ஆலாந்துறையில் தனியார் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பி.டி. நெற்பயிர்களை சில விவசாய அமைப்பினர் அழித்தனர்.

நவம்பர் 10-ல் சம்பவம் நடந்தது. பி.டி.நெற்பயிரை சாகுபடி செய்திருந்த நிறுவனம் இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்ததாகவோ, விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. இது குறித்து தமிழக அரசின் வேளாண்மைத் துறையும் வெளிப்படையான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. இந்த அமைதியில், நியாயத்தின் நிழல் தெரியவில்லை.

இதேபோன்ற சம்பவம் அக்.28-ம் தேதி ஹரியாணாவில் நடைபெற்றது. மரபீனி மாற்று பயிர்களுக்கு எதிரான அமைப்பினர் இந்த பி.டி.நெற்பயிரை அழித்தனர். இந்தியாவில் 9 இடங்களில் பி.டி. நெல் உற்பத்திக்கான சோதனைக் களங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவில் மரபீனி மாற்று பருத்தி உற்பத்திக்கு மட்டுமே இதுவரை அரசின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பருத்தி (மனிதரின்) உணவுப் பொருள் பட்டியலில் இல்லை. இருப்பினும், பருத்திக்கொட்டைப் புண்ணாக்கை மாடுகளும் பசுவின் பாலை மனிதரும் சாப்பிடுவதை அரசு கணக்கில் கொள்ளவில்லை.

தற்போது மரபீனி மாற்று நெற்பயிரை அறிமுகம் செய்ய, சோதனைக்களம் அமைத்து விதை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தச் சோதனைக்களத்தில் விளையும் நெல்மணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, பின்னர் அதன் புள்ளிவிவரங்களை அரசுக்குத் தெரிவித்து, அனுமதி பெறும் முயற்சி “முறைப்படி’ நடக்கும்.

இந்தியாவில் நெல் உற்பத்தியில் எந்தப் பாதிப்பும் இல்லை. எந்த மாநிலத்திலும் அரிசித் தட்டுப்பாடு இல்லை. வெளிச்சந்தையில் கிடைப்பதுடன், கடத்தலுக்கும் நிறைய அரிசி மூட்டைகள் கிடைக்கின்றன. அப்படியிருக்க எதற்காக இந்த பி.டி.நெற்பயிரைத் திணிக்கும் முயற்சி?

பி.டி. நெல் ரகம் என்பது நெற்பயிரைத் தாக்கக்கூடிய முக்கிய புழுக்கள், நோய்களை எதிர்க்கும் மரபீனிகளைக் கொண்டுள்ளதால் பூச்சிகொல்லி செலவுகள் மிச்சமாகும் என்பது மட்டுமே மேலோட்டமாகச் சொல்லப்படும் தகவல். ஆனால் இதனை உணவாகச் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று யாராலும் உறுதி கூற முடியாது. சுற்றுச்சூழல், உடல்நலக் கேடுகள் என்பதைவிட இதில் வேறுவகையான அரசியலும் கலந்திருப்பதை உணர்ந்தால் இந்திய அரசு இதில் மெத்தனம் காட்டாது.

உயர்ரக அரிசி உள்பட பல்வேறு வகை அரிசிகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கும் அன்னியச் செலாவணி ஆண்டுக்கு ரூ.7000 கோடி. நாம் ஏற்றுமதி செய்யும் அரிசியை வாங்கும் நாடுகள் பூச்சிகொல்லி மற்றும் மரபீனி மாற்று பயிர்களுக்கு எதிரானவை. இந்திய மண்ணில் பி.டி. நெல் ரகங்களை மலிவு விலையில் அறிமுகம் செய்து உற்பத்தி நடக்கும் நேரத்தில் “இந்தியாவில் பல லட்சம் எக்டேரில் பி.டி. நெல் சாகுபடி’ என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் செய்திகள் (உள்நோக்கத்துடன்) வெளியாகும். இந்திய அரிசி அனைத்தையும் அந்நாட்டினர் சந்தேகத்துடன் வாங்கத் தயங்குவர். இந்திய நெல்லுக்கு சந்தை வாய்ப்பு வீழ்ச்சியடையும். இது ஒருவகையில் வர்த்தகப் பயங்கரவாதம்.

பி.டி. ரகப் பயிர்களைச் சோதனை அடிப்படையில் பயிரிடும்போது, சோதனைக்களம் அமைந்துள்ள பஞ்சாயத்துக்கு இது பற்றிய தகவலைத் தெரிவிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட விதி வலியுறுத்துகிறது. ஆலாந்துறையில் நிலத்தை குத்தகைக்கு விட்ட விவசாயிக்கு பி.டி.நெல் பற்றி தெரிந்திருக்கவில்லை. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது.

================================================

மீண்டும் பிரச்சினை

மரபீனி மாற்றப்பட்ட விதைகள் மீண்டும் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளன. மரபீனி மாற்றப்பட்ட விதைகளின் நச்சுத்தன்மை குறித்த புள்ளிவிவரங்களைத் தருவதற்கு மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை மறுத்துள்ளது.

கிரீன்பீஸ் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த திவ்யா ரகுநாதன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு தகவல்களைக் கேட்டு இத்துறையிடம் சென்ற ஆண்டு மனு கொடுத்தார். முதல் கோரிக்கை – மரபீனி மாற்றப்பட்ட நெல், கத்தரிக்காய், கடுகு ஆகியன பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ள இடங்கள் யாவை? இதற்கான பட்டியலை உயிரி தொழில்நுட்பத் துறை தெரிவித்தது.

இரண்டாவது கோரிக்கை – இந்த மரபீனி மாற்றப்பட்ட நெல், கத்தரிக்காய், கடுகு ஆகியவற்றில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் ஒவ்வாமை குறித்த தகவல்கள். இதை உயிரி தொழில்நுட்பத் துறை தர மறுத்துவிட்டது. இதற்காக அவர் உயர்நிலைக் குழுவுக்கு முறையீடு செய்துள்ளார். ஒருவேளை அவருக்கு அப் புள்ளிவிவரங்கள் கிடைத்தாலும் கிடைக்கும்.

இருப்பினும், உயிரி தொழில்நுட்பத் துறை சொல்லும் காரணம் பொதுமக்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்பதுதான் கவலை அளிப்பதாக உள்ளது. “தகவல் அறியும் சட்டத்தின் பகுதி 8.1.டி-யின்படி, வர்த்தக நிறுவனங்கள், தொழில் அல்லது அறிவுக் காப்புரிமை ரகசியங்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதன் மூலம் அந்த நிறுவனத்தின் தொழில்போட்டியில் பின்னடைவு ஏற்படுமெனில் அத்தகவல்களை வெளியிட வேண்டியதில்லை’ என்பது ஏற்புடையதாக இல்லை.

மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் மூலமாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிட்டால் நிச்சயமாக எந்த நோயும் பின்விளைவும் ஏற்படாது என்று எந்த ஆய்வுக் கூடமும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இன்னும் சில ஆண்டுகளில் மரபீனி மாற்றப்பட்ட அரிசியும் காய்கறிகளும் இந்தியச் சந்தையை நிறைக்கப் போகின்றன. இந்த உணவுப் பொருள்கள் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களில் விளைந்தவை என்ற அறிவிப்புடன் விற்கப்படும் என்பதும் நிச்சயமில்லை. இதை உண்ணும் இந்தியர்கள், அதன் புள்ளிவிவரங்களை அறிந்துகொள்ளாமலேயே சாப்பிடலாம் என்பது தற்கொலைக்குச் சமமானது.

மரபீனி மாற்றப்பட்ட நெல், கத்தரிக்காய் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்படும் இடங்களின் பட்டியலைத் தெரிவித்தவுடன் இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் அந்தப் பகுதிகளுக்குச் சென்று அப்பயிர்களை நாசம் செய்த சம்பவம் உயிரி-தொழில்நுட்பத் துறைக்கு சில சங்கடங்களைத் தந்திருக்கக் கூடும் என்பது உண்மையே. அதற்காக, ஒரு நிறுவனத்தின் தொழில்போட்டி பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி கோடிக்கணக்கான இந்தியர்களின் உயிரையும் உடல்நலத்தையும் புறக்கணிப்பது சரியான முடிவாக இருக்குமா?

பாரம்பரிய வேளாண்மையில், குறிப்பிட்ட பூச்சியை, நோயை எதிர்த்து வளரும் பயிர்களின் விதைகளைத் தனியே பிரித்து, அவற்றை மீண்டும் மீண்டும் பயிரிட்டு, அதிலிருந்து விதை உற்பத்தி செய்வார்கள். ஆனால், மரபீனி விதைகளில் வேறு ஒரு மரபீனியை உட்செலுத்துவதன் மூலம் ஒரே சாகுபடியில் அதன் போக்கை மாற்றுகிறார்கள். இதனால்தான் அதன் பின்விளைவு எந்தத் திசையில் செல்லும் என்பதை உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. ஆகவே இதற்கு எதிர்ப்பு உள்ளது.

பாரம்பரிய வேளாண்மையில் நோய் தாங்கும் பயிர் விதைகளை உற்பத்தி செய்ய குறைந்தது 5 ஆண்டுகளாகும். மரபீனி விதைகளை ஒரே சாகுபடியில் உற்பத்தி செய்துவிடலாம். ஆனால், அதன் விளைபொருளைச் சாப்பிடுவோருக்கு ஏற்படும் நோய்க்கான காரணங்களை அறிந்துகொள்ள 5 ஆண்டுகள் ஆகும். சிறிய வேறுபாடுதான்! ஆனால் இதுதான் சிக்கலாக இருக்கிறது.

Posted in Agriculture, Andhra Pradesh, Bt paddy, Chhattisgarh, Climate, Consumption, Environment, Exports, Farming, Food, Genetic, Genetic Manipulation, genetically-engineered, Government, Greenpeace, K Chellamuthu, Karnataka, maharashtra, Maharashtra Hybrid Seed Company, Mahyco, Monsanto, P Nammalwar, Paddy, rice, S Martin, Science, scientist, Surjit Choudhary, Tamil Nadu, Tamil Nadu Farmers’ Association, Uttar Pradesh, V Duraimanickam, West Bengal | 1 Comment »