Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Garbage’ Category

Compact Fluorescent lamp (cfl) & Incandescent Bulb – Global Warming

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007

குறு ஒளிர் விளக்குகள் } நல்ல தீர்வா?

என். ரமேஷ்

தொழிற்சாலைகள், போக்குவரத்து உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் பயன்படுத்தப்படும் நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட எரிபொருள்களால் உருவாகும் கரியமில வாயு காரணமாக புவி வெப்பம் அதிகரித்து வருகிறது; இதனால் கடல் நீர்மட்டம் உயர்வு, புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, உணவு உற்பத்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை உலக சமுதாயம் உணரத் தொடங்கியுள்ளது.

புவி வெப்பத்தால் ஏற்படக் கூடிய பேரழிவிலிருந்து தப்பிக்க, வளர்ச்சியடைந்த நாடுகள் வெளியிடும் கரியமில வாயு அளவைக் குறைக்க வகை செய்யும் கியோட்டோ ஒப்பந்தம் உள்ளிட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இப் பிரச்னையின் தீர்வுக்கு, உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை நேரடியாக வழங்க வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள டங்ஸ்டன் இழை கொண்ட “குண்டு பல்பு’களை குறு ஒளிர் விளக்குகளாக (compact fluorescent lamp-cfl) மாற்ற வேண்டும் எனப் பெரும் இயக்கமே நடைபெற்று வருகிறது.

பிரேசில், வெனிசுலா போன்ற நாடுகள் “குண்டு பல்பு’களை சிஎஃப்எல்-ஆக மாற்றும் இயக்கத்தைத் தொடங்கிவிட்டன. ஆஸ்திரேலியா 2010-க்குள்ளும், கனடா 2012-க்குள் முழுமையாக சிஎஃப்எல்-லுக்கு மாற முடிவு செய்துள்ளன.

இந்தியாவில் கிரீன் பீஸ் போன்ற தன்னார்வ அமைப்புகளும், தில்லி மாநில அரசு – அங்கு செயல்படும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் இந்த இயக்கத்தில் முனைப்புடன் செயல்படுகின்றன.

சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள பெரும்பாலான மேல்தட்டு, நடுத்தரக் குடும்பங்கள் தற்போது சிஎஃப்எல்-லுக்கு மாறி வருகின்றன. சிஎஃப்எல் எனப்படும் இந்த குறு ஒளிர் விளக்குகள், குண்டு பல்புகளைவிட ஏறத்தாழ ஐந்து மடங்கு குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. 100 வாட் குண்டு பல்பு வழங்கும் ஒளியை 20 வாட் சிஎஃப்எல் விளக்கு வழங்குகிறது. இதன்மூலம் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரச் செலவையும், அதற்குரிய கட்டணத்தையும் குறைக்க முடியும்.

மேலும், ஒரு குண்டு பல்பு செயலிழக்கும் வரை, சராசரியாக 1,000 மணி நேரம் எரியும் என்றால், சிஎஃப்எல் விளக்குகள் அதைவிடப் பலமடங்கு நேரம் எரியக் கூடியவை. இதனால் ஆண்டுக்கு ஒரு சிஎஃப்எல் பயன்பாடு மூலம், அதற்குக் கொடுக்கும் கூடுதல் விலை உள்ளிட்ட அனைத்துச் செலவும் போக, ரூ. 300-க்கும் அதிகமாகச் சேமிக்க முடியும்.

நுகர்வோருக்கு நேரடியாகக் கிடைக்கும் இந்த லாபம் தவிர்த்து, மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் நிலக்கரி, தண்ணீர் போன்றவற்றின் பயன்பாட்டு அளவும் குறைகிறது. 1,000 மணி நேரம் ஒரு குண்டு பல்பு மின்சாரம் வழங்க 71 கிலோ நிலக்கரி தேவையென்றால், சிஎஃப்எல்லுக்கு 14.2 கிலோ மட்டும் போதுமானது. இதேபோன்று, குண்டு பல்புக்கு 535 லிட்டர், சிஎஃப்எல்லுக்கு 107 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு குண்டு பல்பு 1,000 மணி நேரம் எரிவதற்கான மின் சக்தி உற்பத்தியில் 99.7 கிலோ கரியமில வாயு வெளியிடப்படும். ஆனால், சிஎஃப்எல் எரிவதால் 19.94 கிலோ மட்டும் வெளியிடப்படும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் சல்பர்-டை-ஆக்சைடு, நுண் துகள்கள், எரி சாம்பல் போன்றவையும் சிஎஃப்எல் பயன்பாட்டால் குறையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் பலர் கூறுகின்றனர்.

ஆனால், “டாக்சிக்ஸ் லிங்’ (Toxics Link) என்ற தன்னார்வ அமைப்பு, சிஎஃப்எல்-லுக்கு மாறுவதற்கு முன் ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது என எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. இதற்குக் காரணம், சிஎஃப்எல், நாம் வழக்கமாக பயன்படுத்தும் குழல் விளக்குகள் போன்ற ஒளிர் விளக்குகளில் பயன்படுத்தப்படும் பாதரசம் மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தது என்பதுதான்.

நமது சூழலில் மிகச் சிறு அளவில் இருந்தாலும் நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் கைகால் அசைவு, நினைவாற்றல் ஆகியவற்றையும் பாதிக்கக் கூடியது பாதரசம்.

ஒரு சராசரி சிஎஃப்எல் விளக்கில் 0.5 மில்லி கிராம் பாதரசம் உள்ளது. இந்த விளக்குகள் உடைந்தால் பாதரச ஆவி வெளிப்பட்டு வீட்டில் உள்ளோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். உடையாமல் செயலிழந்து (ப்யூஸ்) போன பின்னரும் வழக்கமாக இவை மாநகராட்சி, நகராட்சி குப்பைக் கிடங்குகளுக்கே செல்கின்றன. அங்கு இவை உடைக்கப்பட்டாலும் அந்த பாதரச ஆவி நமது சுற்றுச்சூழலில் கலந்து பாதிப்பை உருவாக்கும்.

தற்போது இந்தியாவில் எரியும் விளக்குகளில் 10 சதம் சிஎஃப்எல் விளக்குகள். ஆண்டுதோறும் சிஎஃப்எல் விளக்குகள் தயாரிப்பில் 56 டன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. முழுவதும் சிஎஃப்எல் விளக்குக்கு மாறினால் இந்த அளவு ஆண்டுக்கு 560 டன்னாக உயரும். எனவே, பசுமைக் குடில் வாயுக்களைக் குறைப்பதற்காக மற்றொரு ஆபத்தை விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை என பாதரசத்தை எதிர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

சிஎஃப்எல்-லுக்கு மாற்றாக ஒளி உமிழும் டையோடுகளைப் ( Light Emitting Diodes-எல் ஈ டி) பயன்படுத்த முடியும் என இவர்கள் வாதிடுகின்றனர். பாதரசத்தைப் பயன்படுத்தாத இவை சிஎஃப்எல்களைவிடக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதுடன் பல்லாயிரம் மணி நேரத்துக்கு மேல் எரியக் கூடியவை.

ஆனால், நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போதும் பாதரசம் வெளியாகிறது. சிஎஃப்எல்லைப் பயன்படுத்தும் போது இந்த பாதரசம் வெளியாகும் அளவு குறைய வாய்ப்புள்ளது. ஆனால், மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மட்டும் பாதரசம் வெளியாவதைக் கட்டுப்படுத்துவது எளிதானது. கோடிக்கணக்கான வீடுகளில், குப்பை மேடுகளில் வெளியாகும் போது கட்டுப்படுத்துவது கடினம்.

எனவே, எல்ஈடி போன்ற மாற்றுகள் பரவலான பயன்பாட்டுக்கு வரும் வரை, இடைக்கால ஏற்பாடாக கனடா போன்ற நாடுகளில் சிஎஃப்எல்-களைப் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாதரசத்தை மீட்டு எடுக்கலாம். செயலிழந்த சிஎஃப்எல்களைத் திரும்பப் பெறுவது, மறுசுழற்சி செய்வது போன்றவற்றுக்கு ஆகும் செலவை சிஎஃப்எல்லைப் பெருமளவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஏற்கச் செய்யலாம்.

———————————————————————————————————–
நதியோரம் தேயும் நாகரிகம்!

இரா. சோமசுந்தரம்

வாழ்வின் எல்லா நேரங்களிலும் நாம் ஒருவகையில் அன்றாடம் காய்ச்சிகளின் மனநிலையில்தான் இருக்கின்றோம். அன்றைய தேவை நிறைவடைந்தால் சரி.

அது தேர்தல் என்றாலும், ஊழல் என்றாலும் அல்லது , கொலை, கொள்ளை, விபத்து, மரணங்கள், குண்டுவெடிப்பு – எதுவென்றாலும் சரி, அன்றைய நாளுடன் மறக்கப்படும்.

இந்தப் பட்டியலில் தண்ணீரும் ஒன்று. வீட்டு இணைப்பில் குடிநீர் வந்தது என்றால் அத்துடன் அதை மறந்துவிடுகிறோம். ஆனால் அந்த குடிநீரை வழங்கும் நதிக்கு எத்தகைய கேடுகளைச் செய்து வருகிறோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.

இந்திய நதிகள் யாவும், அவை பெரியன என்றாலும் சிறியவை என்றாலும், மழைக்காலத்தில் வெள்ளமும் மற்ற நாட்களில் சாக்கடையும் ஓடும் என்ற நிலைக்கு மாறிவிட்டது. எல்லாக் கழிவுகளும் நதிகளில் கலக்கின்றன.

இது காலங்காலமாக நடந்து வருவதுதானே? இப்போது மட்டும் என்ன புதிதாகத் தீங்கு வந்துவிட்டது?

காலங்காலமாக நதியில் குளித்த மனிதர்கள் வேதிப்பொருள் கலந்த சோப்பைப் பயன்படுத்தவில்லை. அவர்களுக்கு “தோல் வெளுக்க சாம்பலுண்டு. துணி வெளுக்க மண்உண்டு’. அவர்கள் ஆற்றோரம் திறந்தவெளிகளையும், வயல்வரப்புகளையும் கழிப்பிடமாகப் பயன்படுத்தினார்கள். அப்போதெல்லாம் தொழிற்சாலைகள் இல்லை. அன்றைய சாயத் தொழில்கூட மரம், செடி, மலர், மரப்பட்டைகள் என இயற்கைப் பொருள்களைக் கொண்டு நடந்தது. யாருக்கும் பாதிப்பில்லை.

இன்றோ நிலைமை வேறு; இவை யாவும் தலைகீழாக மாறிவிட்டன.

தற்போது நதியில் கலக்கும் மாசுகளில் 80 சதவீதம் மனிதக் கழிவுகள்! ஏனையக் கழிவுகள் தொழில்துறையைச் சேர்ந்தவை.

எல்லா வீடுகளிலும் “ஃபிளஷ் அவுட்’ நவீன கழிப்பறை உள்ளது; இன்று இது தவிர்க்கமுடியாத ஒன்று.

ஒரு குடும்பத்துக்கு சுமார் 1.5 கிலோ மலஜலத்தை “”சாக்கடையில் தள்ளிவிட” குறைந்தது 300 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்தத் தண்ணீரும் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல. பெரும்பாலும், மாநகராட்சி அல்லது நகராட்சி சுத்திகரித்து, வீட்டு இணைப்பில் வழக்கும் குடிநீர்தான்.

சில வெளிநாடுகளில் இத்தகைய ஃபிளஷ் அவுட்களில் பயன்படுத்த மறுசுழற்சி-நீர் விநியோகம் உண்டு. இந்தியாவில் அதற்கு வாய்ப்பே கிடையாது.

உள்ளாட்சி அமைப்புகள், இந்தக் கழிவுகளை ஊருக்கு வெளியே ஒன்றுதிரட்டி, அவற்றை ஓரளவு சுத்திகரித்து பின்னரே நதியில் கலக்கவேண்டும் என்பதற்கு முயற்சிகள் பல எடுக்கப்பட்டன.

அதன் விளைவுதான் நதிகள் பாதுகாப்புத் திட்டம். பல ஆயிரம் கோடி ரூபாயை, இத்திட்டத்திற்காக “ஒதுக்கினார்கள்’.

நகரத்தின் சாக்கடையைச் சுத்திகரித்து இயற்கை உரங்கள் தயாரிப்பு, கீரை காய்கறி வளர்ப்பு – என்றெல்லாம் செய்திகள் வந்தனவே தவிர, நடைமுறையில் எதுவுமே நடக்கவில்லை. சுத்திகரிக்கப்படாத வீட்டுச் சாக்கடைக் கழிவுகள் நேரடியாக நதிகளில் கலந்துகொண்டே இருக்கின்றன. இன்றளவும்!

ஒரு மனிதனின் மல, ஜலத்தில் அவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு உணவுப் பொருளை விளைவிக்கப் போதுமான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் அனைத்தும் உள்ளன. ஆனால் அவற்றைப் பயன்படுத்த இயற்கை சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. நீரில் கரைந்து நீர்த்துப்போகிறபோதுதான் சிறுநீர் ஒரு நல்ல உரமாக மாறும். வெயில் காய்ந்து கிருமிகள் அழிந்த உலர்மலம்தான் தீங்கற்ற உரமாக மாறும். ஆனால் இதற்கு மனித நாகரிகம் இடம் இல்லாமல் செய்துவிட்டது. ஆகவே மலக்கிருமிகள் நேரடியாக நதியைச் சென்றடைகின்றன.

ஓடும் நதிக்கு தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ளும் சக்தி உள்ளது என்பது உண்மையே. நதியில் கலக்கும் உயிர்க்கழிவுகளின் மூலக்கூறுகளைச் சிதைத்து, உருமாற்றம் செய்ய போதுமான அளவு ஆக்சிஜன் நதிநீரில் இருக்க வேண்டும்.

ஆனால் ரசாயன கழிவுகள் நீரை மாசுபடுத்தி, அதன் இயற்கையான சக்தியை ஒடுக்கிவிடுகின்றன. இயற்கையான சுத்திகரிப்புக்கு ஆற்றுமணல் அவசியம். அதுவும் இப்போது பெருமளவில் சுரண்டப்படுகிறது.

நதிநீரைக் காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டும்; இல்லையெனில், குடிநீருக்காகப் பெரும்பணத்தைச் செலவிட நேரும்.

மனிதன் பெரிய அறிவுஜீவிதான்!

அதற்கு ஒரு சின்ன உதாரணம்:

ஒரு மாநகராட்சிப் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறைகளை இணைத்து, அதிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை அந்த வளாகத்தில் உள்ள டீ கடைகள், ஹோட்டல்களில் பயன்படுத்தினால் எரிபொருள் செலவு மிகமிகக் குறையும் என்ற திட்டத்தை முன்வைத்தபோது, காது, கண், மூக்கு எல்லாவற்றையும் மூடிக்கொண்டு “அய்யய்யே..எப்படி வியாபாரம் நடக்கும்?’ என்று எதிர்த்தார்கள்.

அதே கழிப்பறைகளின் மலஜலம் அனைத்தையும் பக்கத்தில் உள்ள நதியில் கலந்து, அந்த தண்ணீரைத்தான் மீண்டும் விநியோக்கிறோம் என்று அதிகாரிகள் சொன்னபோது, “சுடுகாடு கூடத்தான் ஆத்தோரம் இருக்குது. எல்லாம் வெள்ளத்துல போறதுதானே’ என்றார்கள்.

Posted in Alternate, Atomic, Biogas, Brazil, Burn, Carbon, Cauvery, CFL, Coal, Conservation, Crap, dead, Degradable, Detergents, Diesel, Disposal, Drill, Drinking, Drought, Earthquake, Electricity, Emission, emissions, energy, Environment, ethanol, Flowers, Flush, Food, Fuel, Ganga, Ganges, Garbage, Gas, Gore, Incandescent, Integration, Interlink, Kyoto, Lamps, Laundry, LED, Lights, Lignite, Lumniscent, Mercury, Mineral, Motor, Nature, Nuclear, Ozone, Petrol, Plants, Pollution, Power, Pump, Purify, Rain, Recycle, Removal, Restrooms, River, Shit, Soaps, Toilets, Toxics, Trash, Trees, Tsunami, Tube, Tubelight, Underground, Urea, Urine, Warming, Waste, Water, Well | 1 Comment »

Waste Management – Power generation from Garbage

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

நகர்ப்புற திடக்கழிவுகளிலிருந்து எரிசக்தி!

என். விட்டல்

அரசியல்வாதிகளுக்கும் காந்தியவாதிகளுக்கும் கிராமப்புறங்கள் புனிதமானவை. கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்று உணர்ந்ததால், இந்தியாவின் எதிர்காலத்தையே கிராம ராஜ்யத்தின் வலுவோடு வளப்படுத்த காந்திஜி கனவுகண்டார்.

பெரும்பாலான வாக்காளர்கள் இன்னமும் கிராமங்களில்தான் வாழ்கின்றனர் என்பதால் நமது அரசியல்வாதிகளுக்கும் கிராமப்புறம் புனிதமானதாகத் திகழ்கிறது.

எது எப்படியிருந்தாலும் இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் நகர்மயமாதல் அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு நகரங்களில்தான் என்பதால் நம் நாட்டின் 40 சதவிகித மக்கள் நகரங்களில்தான் இப்போது வசிக்கின்றனர். எல்லா ஊர்களிலும் பெரு நகரங்களிலும் சேரிப்பகுதிகள் வளர்ந்து கொண்டே வருவது இதற்கு நல்ல ஆதாரம்.

நகர்ப்புற வசதிகளைக் கிராமங்களிலேயே ஏற்படுத்தினால், நகர்ப்புறமயத்தைத் தடுக்கலாம் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் ஐ.ஐ.டி.யின் பேராசிரியர் பி.வி. இந்திரேசனும் எப்போதிருந்தோ கூறி வருகின்றனர். இருந்தாலும், இந்தியா மேலும் மேலும் நகர்மயமாவதைத் தடுக்க முடியாது. நகர்ப்புறப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றைத் திறமையாக, ஒழுங்காக நிர்வகிப்பது எப்படி என்று ஆலோசிப்பதே இப்போதைய தேவை.

நகரப்பகுதிகளுக்கு மிகவும் சவாலான பணியாக இருப்பது, குப்பைகளை எப்படி அகற்றுவது அல்லது பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்பதுதான். நகரங்களில் சேரும் குப்பைகளின் அளவும், தரமும் நகரவளர்ச்சியோடு நேரடியாகத் தொடர்பு உடையது என்பது வேடிக்கையானது! இந்தியாவில் நகர்ப்புறங்களில் ஒரு நாளில் ஒரு நபருக்கு 400 கிராம் வீதம் குப்பைகள் சேருவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் நபர் வாரி குப்பை அளவு தலா ஒன்றரை கிலோ முதல் 2 கிலோ வரை இருக்கிறது. இதுதான் உலகிலேயே அதிகபட்ச அளவாகும்.

இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் வீதம் குப்பை சேருகிறது. இதில் பெரிய நகரங்களின் பங்கு 60 சதவிகிதத்துக்கும் மேல். அதாவது 40 சதவிகித மக்கள்தொகை 60 சதவிகித குப்பைகளைக் கொட்டுகின்றனர்.

குப்பைகளை அகற்றுவதும், அவற்றைப் பயனுள்ளதாக மாற்றுவதும் நகர நிர்வாகங்களுக்குச் சவால் விடும் வேலையாகும். பொதுவாக நகர்ப்பகுதிகளில் குப்பைகளை அகற்றினால் அவற்றைத் திறந்த வெளியில் எங்காவது பள்ளம் பார்த்து கொட்டி நிரப்புவதே நடைமுறையாக இருக்கிறது.

இப்படி குப்பைகளைத் திறந்தவெளிப் பள்ளங்களில் கொட்டி நிரப்பிய பிறகு அடுத்த சுகாதார பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. அவற்றைப் பெருச்சாளிகளும் பன்றிகளும் தோண்டி துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குப்பைகளிலிருந்து வடியும் கழிவுநீர் நிலத்தில் ஊறி, நிலத்தடி நீர்மட்டத்தையும் தரைக்கடியில் உள்ள நீரோட்டத்தையும் பாழ்படுத்துகிறது. அதுமட்டும் அல்ல, “”குப்பையை எங்கள் பகுதியில் கொட்டாதே!” என்று ஆங்காங்கே போர்க்குரல்கள் எழுகின்றன. எங்கு பணக்காரர்கள் இல்லையோ, எங்கு செல்வாக்கானவர்கள் இல்லையோ அந்த இடம் பார்த்து குப்பைகளைக் கொட்டிவிடுகின்றனர் உள்ளாட்சிமன்ற அதிகாரிகள்.

குப்பைகளை அகற்றுவதற்கு 3 வழிகள் உள்ளன.

1. குப்பைகளை எரிப்பது. அதன்மூலம் 90 சதவிகித குப்பைகளைக் குறைத்துவிடலாம்.

2. மண்புழுக்கள் போன்றவை மூலம் குப்பைகளை மக்கவைத்து எருவாக மாற்றுவது.

3. குப்பைகளைத் தொட்டியில் போட்டு, வெளிச்சமும், காற்றும் படாமல் மறைத்து அதிலிருந்து மீத்தேன் வாயுவைத் தயாரிப்பது.

இதே குப்பை மலைபோலக் குவிந்தால் இந்த மூன்று முறையில் ஏதாவது ஒன்றை கடைப்பிடிப்பது கூட கடினமான பணிதான்.

இப்படி குப்பைகளைப் பரத்தி கொட்டவும் பிறகு வேறு வடிவத்துக்கு மாற்றவும் நிறைய நிலப்பகுதியும் ஆள்பலமும் தேவை. அவை உள்ளாட்சி மன்றங்களிடம் இல்லை. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, வேறு வடிவத்துக்கு மாற்றவும் எரிபொருளாகப் பயன்படுத்தவும் முன்னுரிமை தரவேண்டும்.

மேலை நாடுகளில் குளிர்காலத்தின்போது வீடுகளை கதகதப்பாக வைத்திருக்க எரிபொருள்களைப் பயன்படுத்துகின்றனர். அந்த எரிபொருளை உள்ளாட்சி மன்ற நிர்வாகம் குப்பைகளிலிருந்து தயாரித்து குழாய் வழியாக எல்லா வீடுகளுக்கும் அனுப்புகிறது. இதனால் குப்பையும் பயனுள்ள பொருளாகிறது, எரிபொருள் செலவும் மிச்சப்படுகிறது. பெட்ரோல், டீசல் போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் செலவும் கணிசமாக மிச்சப்படுகிறது.

ஐரோப்பா முழுவதும் 5 கோடி டன் எடையுள்ள குப்பைகளை, 400 சிறு ஆலைகள் மூலம் எரிபொருளாக மாற்றிப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் மக்கள் நெருக்கமாக வாழும் நகரங்களில் இந்த வழியையே பின்பற்றுகின்றனர். அமெரிக்காவில் உள்ள இத்தகைய 100 ஆலைகள் 2,800 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கின்றன. இதனால் 104 கோடி காலன் எரிபொருள் மிச்சப்படுகிறது. 2002-ல் அமெரிக்காவின் 15 மாநிலங்கள், இத்தகைய எரிசக்தி ஆலைகளுக்கு 85 சதவிகித குப்பைகளை அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குப்பையை எரிபொருளாக மாற்றுவது இரண்டு நிலைகளைக் கொண்டது. முதல் பகுதி கழிவுகளிலிருந்து எரிபொருளைத் தயாரிப்பது. கரி உருண்டைகளைப் போல சிறு கழிவு உருண்டைகளைத் தயாரிப்பது முதல் கட்டம். நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கு இந்த கரி உருண்டைகள் மிகவும் பயன்படும்.

உதாரணத்துக்கு ஹைதராபாதில் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.1,800. குப்பையிலிருந்து பெறப்படும் கரி உருண்டையின் விலை ரூ.1,000. இதை ஹைதராபாத் பகுதி தொழிற்சாலைகளும் ஏழைகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த உருண்டைகளைத் தயாரிக்கும் ஆலைகள் டன்னுக்கு ரூ.200 கூடுதலாக விலை வைத்தாலும் வாங்குகிறவர்களுக்கு அது குறைந்த விலைதான். கரி உருண்டையைத் தயார் செய்யும் ஆலைக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

தொழில்நுட்ப வளர்ச்சி வாரியம் என்ற உயர் அமைப்பு ஆந்திரத்தின் ஹைதராபாத், விஜயவாடா ஆகிய இரு நகரங்களில் சோதனை அடிப்படையில் இத்தகைய கரி உருண்டைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ஆலையை நிறுவியது. இரண்டின் உற்பத்தித்திறன் தலா 6 மெகாவாட். இதில் ஹைதராபாத் ஆலை 50 சதவிகிதம் திறனுடனும், விஜயவாடா ஆலை 80 சதவிகிதம் திறனுடனும் செயல்படுகின்றன. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கரி உருண்டைகளைத் தயாரிப்பது, மின்சாரத்தைத் தயாரிப்பதைவிட லாபகரமானது.

இதேபோன்ற ஆலைகளை நாடு முழுவதும் நிறுவி, அன்றாடம் 50 டன் குப்பைகளைக் கையாண்டு கரி உருண்டைகளைத் தயாரித்தால் 20 டன் எடையுள்ள கரி உருண்டைகளைப் பெறலாம். இது ஒவ்வொன்றும் 10 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும். இந்த ஆலைக்கு மிகக்குறைந்த நிலப்பரப்பு இருந்தால் போதும். இதனால், சுகாதாரம் சீர்கெடுவதும் தடுக்கப்படும்.

50 டன் எடையுள்ள குப்பைகளை அன்றாடம் கையாளும் திறன் உள்ள எரிபொருள் தயாரிப்பு ஆலையை நிறுவ ரூ.80 லட்சம் செலவாகும். கரி உருண்டைகளை டன் ரூ.1,000 என்று விற்கலாம். இந்த ஆலை மழைக்காலத்தில் செயல்படாது. எனவே ஆண்டில் 10 மாதங்கள்தான் இதில் உற்பத்தி இருக்கும். அன்றாடம் 20 டன் கரி உருண்டைகளைத் தயாரிக்க முடியும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் இதில் வருமானம் கிடைக்கும்.

இந்த ஆலையின் வடிவமைப்பு, இயங்கு திறன் ஆகியவற்றை மேலும் சீரமைத்து, ஆலைக்கான பாகங்களை நல்ல தரத்தில் தயாரித்து நாடு முழுவதும் வழங்கினால் இதன் உற்பத்தித்திறன் பலமடங்கு அதிகரிக்கும். அடுத்து இந்த ஆலையை நிறுவ வங்கிகளைத் தேர்வு செய்து அல்லது நிதியங்களை நியமித்து அவற்றின் மூலம் முதலீடு செய்யலாம்.

மாநில அரசுகளும் உள்ளாட்சி மன்றங்களும் இதில் தீவிர அக்கறை காட்டி, அன்றாடம் 50 டன் குப்பைகளைக் கையாளும் எரிபொருள் உற்பத்தி ஆலைகளை நிறுவலாம். குப்பைகள் கிடைப்பதைப் பொருத்து இந்தத் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம். காலவரம்பு நிர்ணயித்து இதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் நிர்வாகத்துடன் ஊழியர்களும் லாபத்தைப் பகிர்ந்துகொள்ளும் அதே வழிமுறையைக் கையாண்டால் இந்த ஆலைகளால் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பும் நல்ல வருவாயும் கிடைக்கும். நகர்ப்புற திட்டமிடலில் தொடர்புள்ள அனைவரும் இதில் கவனம் செலுத்துவது நல்ல பொருளாதார பலன்களைத் தரும்.

(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்.)

Posted in Alternate, Andhra, AP, APJ, Bhogi, Bogi, Burn, City, Coal, Disposal, Electricity, Employment, energy, Factory, Fuel, Gandhi, Garbage, Gas, Hyderabad, Jobs, Kalam, Mahathma, Mahatma, Management, Megawatt, Methane, Metro, Municipality, MW, Pongal, Poor, Power, Recycle, Rich, Rural, Sprawl, Suburban, Trash, Vijayawada, Villages, Waste, Water | 6 Comments »

SC’s nod to Maharashtra for barrage across Godavari

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே மகாராஷ்டிரம் பாப்லி அணை கட்ட உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுதில்லி, ஏப். 27: கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே பாப்லி அணை கட்டும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த அணை கட்டுமானத் திட்டத்துக்கு ஆந்திர மாநிலம் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத் தக்கது.

கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் வறட்சியால் வாடும் தெலங்கானா பகுதியில் குறைந்தது 5 கிராமங்களாவது பாதிக்கப்படும் என்று கூறி, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆந்திர மாநிலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், டி.கே.ஜெயின் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், அணை கட்டும் பணியை மகாராஷ்டிரம் தொடரலாம் என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் அடுத்த உத்தரவு வரும் வரை அணையின் மதகை திறக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆந்திர மாநில அரசு தவிர, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல எம்.பி.கள் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

————————————————————————————–

சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நீர்மட்டம் பாதியாக குறைந்த நர்மதா நதி

ஓம்காரேஷ்வர், (ம.பி) ஜூன் 8: சுற்றுச் சூழல் சீர்கேட்டினாலும், காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதினாலும் நர்மதா நதியின் நீர்மட்டம் 50 சதவீதம் குறைந்துள்ளது.

“”நர்மதா நதியின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என மத்திய நிலத்தடி நீர் அமைப்பு எச்சரித்துள்ளதாக மத்தியப் பிரதேச பாஜக துணைத் தலைவர் அனில் தாவே நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

மலைகள் மற்றும் காடுகளினால் ஆண்டு தோறும் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. ஆனால், தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதால் மழையளவு மட்டுமின்றி நதியின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.

1213கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த நதியில் 41 உபநதிகள் கலந்தாலும் வளர்ந்து வரும் சுற்றுச் சூழல் சீர்கேடானது, உயிரினங்கள் வாழ தகுதியில்லாத இடமாக மாற்றி விடக்கூடும்.

புண்ணிய நதியாக நர்மதா நதியை மக்கள் போற்றி வருகின்றனர். ஆனால், தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களின் அன்றாட தேவைகளான குளியல், துவைத்தல் போன்ற பணிகளுக்கு இந்த நதியைப் பயன்படுத்துகின்றனர்.

நதியை அசுத்தமாக்காமலும், அதே சமயம் சுற்றுச் சூழல் சீர்கேடு அடையாமலும் நீரைப் பயன்படுத்தும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Posted in Andhra, Andhra Pradesh, AP, Conflict, Court, Dam, Districts, Drought, Environment, Famine, Floods, Forests, Garbage, Godavari, Godavari Water Disputes Tribunal, GWDT, Irrigation, Issue, maharashtra, Mountains, Narmada, Narmadha, Pollution, Rain, River, SC, Scarcity, Sriram Sagar, Supreme Court, Telengana, Telungana, Tribunal, Waste, Water | 1 Comment »