Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Financing’ Category

Don’t rush to cut policy rates: Monetary, fiscal recipe for overheating India

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

வங்கிகளில் அரசு தலையீடு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.

அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.

வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.

இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.

விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.

வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.

நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.

அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.

ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.

இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.

இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?

நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in Agriculture, Assets, Auto, Automotive, Banking, Banks, BOB, Bonds, BSE, Cars, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chit Funds, Chitfunds, Chithambaram, Commerce, Cooperative, Credit, CRR, Deflation, Deposits, Dollar, Economy, Enforcement, Exchange, Farmers, FD, Finance, Financing, fiscal, Govt, HDFC, ICICI, Index, Indices, Inflation, Insurance, Interest, investments, IOB, KVB, Land, liquidity, Loans, markets, Micro-financing, Microloans, Minister, Monetary, Motor, NIFTY, NSE, Overnight, Overnite, Parts, Policy, Property, Rates, RBI, reserves, ROI, Rupee, Rupees, Rupya, SBI, Schemes, Shares, Spare, Stocks, Student, Treasury | Leave a Comment »

Finance ministry against Govt nominees in Punjab & Sind Bank: Board in open war

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

வங்கிகளும் அரசியல் தலையீடும்!

அரசியல் தலையீடு அதிகரித்து விட்டது என்கிற மனக்குறை இல்லாத அதிகாரி யாரும் இருக்க முடியாது. பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களின் தலையீடுதான் என்று ஆதங்கப்படாத அதிகாரிகளே இருக்க முடியாது.

“எல்லாவற்றையும் முழுமையாக அதிகாரிகளிடமே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு அடித்தள மக்களின் பிரச்னைகள் எதுவும் தெரியாது’ என்று இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து பதில் வரும். இரு தரப்புக் கூற்றிலுமே ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், அரசியல் தலையீடு என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பொதுத்துறை நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் ஆளும்கட்சி அனுதாபிகளை இயக்குநர்களாக நியமிப்பது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இயக்குநர்களின் சிபாரிசில் பலருக்கும் கடனுதவி வழங்கப்படுவதும், அதில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்படுவதும் எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாடிக்கையான விஷயம். அரசியல் தலையீடு தளர்த்தப்படாவிட்டால் இதுபோன்ற வாராக் கடன்களைத் தடுக்க முடியாது என்று நிதியமைச்சகத்திடம் முறையிடாத தேசியமமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களே கிடையாது.

முதன்முறையாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் இந்தப் பிரச்னையை பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது. பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர்- மேலாண் இயக்குநர் தான் இந்தப் பிரச்னையை பொது சர்ச்சைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

மாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில், வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதுபோல, வங்கிகளின் செயல்பாடுகளும் புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடு பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்கள் இயக்குநர்களாக இருப்பதுதான் வங்கிகள் முன்னேற்றத்திற்குத் தேவையே தவிர, எல்லா விஷயத்திலும் அநாவசியமாகத் தலையிடும் அரசியல்வாதிகள் அல்ல. மக்களின் சேமிப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவை வங்கிகள். ஆகவே, வங்கியை நிர்வகிக்க வேண்டியவர்கள் வல்லுநர்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. இதுதான் பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர் கூறியிருக்கும் கருத்தின் சாராம்சம்.

அவரது கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் அவர் கூறியிருப்பதைப்போல வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளின் இயக்குநர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், இந்த விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதிகள் இல்லாத நிலையில், வல்லுநர்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகளை நிர்வகிப்பது என்பது, கேள்வி முறையற்ற அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்?

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் உதவுவது போன்றவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகளிடமும் காணப்படும் குறைபாடு என்பதை மறந்துவிடக்கூடாது. பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற நபர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதுதான் அதிகாரிகள் தவறிழைக்காமல் இருக்க உதவும். கட்சி விசுவாசத்துக்குத் தரும் வெகுமதியாக இந்தப் பதவிகள் மாறியிருப்பதுதான் குறையே தவிர அந்தப் பதவியே வேண்டாம் என்பது சரியல்ல.

நிதியமைச்சகத்தின் முன்அனுமதி இல்லாமல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தலைவர் ஒருவர் இந்த விஷயத்தை பத்திரிகைகளிடம் பகிரங்கப்படுத்தி இருக்க முடியாது. வங்கி நிர்வாகத்தில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். அனால், அந்தப் பிரதிநிதிகள் அப்பழுக்கற்ற பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆளும்கட்சியின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தால் அது ஏற்புடையதல்ல.

ஒரு தேவையான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் பஞ்சாப் சிந்த் வங்கித் தலைவர். தேசிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது என்பதில் சந்தேகமில்லை.

Posted in abuse, Assets, Balance, Banking, Bankruptcy, Banks, Benaami, Benami, Board, Bribery, Bribes, Cabinet, Campaign, CEO, CFO, chairman, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, CMD, Commerce, Congress, COO, Corruption, Director, Finance, Financing, Gopalakrishnan, Govt, Influence, kickbacks, Loans, Management, Manmogan, Manmohan, MD, Members, Moopanaar, Moopanar, Mooppanaar, Mooppanar, Nominee, Op-Ed, Options, panel, Penami, Power, Prathiba, Prathibha, Proxy, PSB, Punjab, Punjab & Sind Bank, reconstitution, regulations, SBI, Sind, Sindh, State Bank, Statements, Trading, Trustees, VP | Leave a Comment »

APJ Abdul Kalam – Power Grids & Oil Imports: Dependence on Foreign Resources

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

கலாம் சொன்னது கவனிக்கத்தக்கது!

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் தருணத்தில், நமது மின்சாரத் தேவை குறித்தும், பெட்ரோல்- டீசல் இறக்குமதி குறித்தும் உரிய வகையில் எச்சரித்திருக்கிறார் அப்துல் கலாம். நம் நாட்டின் செல்வ வளத்தையே வற்ற வைக்கக்கூடிய அளவுக்குச் சென்று கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் நுகர்வைக் குறைப்பதும், மாற்று எரிசக்தியைக் கண்டறிந்து பயன்படுத்துவதும் மிகமிக அவசியம் மட்டும் அல்ல, அவசரமும் கூட என்று உணர்த்தியிருக்கிறார்.

பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதிக்காக மட்டும் நாம் இப்போது ஆண்டுதோறும் 2 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் மொத்த பெட்ரோலியத் தேவையில் 75 சதவீத அளவுக்கு இறக்குமதி செய்கிறோம்.

25 சதவீத அளவுக்கு மட்டுமே உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு சமாளிக்கிறோம். நியாயமாகப் பார்த்தால், இந்தக் கவலை மத்திய திட்டக் கமிஷனுக்குத்தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும். “”கார்கள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களும் அவ்வளவு அத்தியாவசியமானவை அல்ல; அவை நுகர்வுப் பொருள்கள்தான். அவற்றின் உற்பத்திக்கும் விற்பனைக்கும் இந்த அளவுக்கு அனுமதி தரக்கூடாது; அவற்றை ஓட்டுவதற்குத் தேவைப்படும் பெட்ரோல் நம் நாட்டில் கிடைக்கும் பொருள் அல்ல” என்று திட்டக்கமிஷன்தான் மத்திய அரசுக்கு எடுத்துரைத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் குறைந்த சம்பளத்துக்கு ஊழியர்களும் தொழிலாளர்களும் கிடைக்கிறார்கள் என்பதால் பன்னாட்டு மோட்டார் கார் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை நிறுவி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. நம் நாட்டவருக்கு வேலை கிடைக்கிறது, நமக்கு விளம்பரம் கிடைக்கிறது என்ற மகிழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகள் இந்த ஆலைகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கின்றன.

இவை ஒருபுறம் உண்மைதான் என்றாலும், பெருவாரியான மத்தியதரக் குடும்பங்களை இந்த மோட்டார் வாகன மோகம் கடனாளியாக்கி இருக்கிறது என்பதும், தேவையில்லாமல் நமது பெட்ரோலியத் தேவையை அதிகரித்திருக்கிறது என்பதும் கவனிக்கப்படாத விஷயம். நம் நாட்டின் ஏழ்மையைப் போக்கவோ, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவோ இவை எந்த விதத்திலும் உதவியாக இருக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.

அரசு தரும் உபசாரங்கள் போதாது என்று வங்கித் துறையும் கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் வாங்க குறைந்த வட்டியில் உடனடியாகக் கடன் தருகிறது. வீடு கட்டத் தந்த கடனுக்குக்கூட வட்டி வீதத்தை உயர்த்திவிட்டனர். வாகனங்களுக்கான கடனுக்கு வட்டியை ஏற்றத் தயங்குகின்றனர்.

இதே போன்ற போட்டி மனோபாவம் விவசாயத்துக்குக் கடன் தருவதில் இருக்கிறதா என்றால் இல்லை. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் எண்ணிக்கை பல மடங்காக (தேவையில்லாமல்தான்) உயர்ந்து வருகிறது. அதிலும் தமிழ்நாடுதான் மிகவும் முன்னணியில் இருக்கிறது.

“”99 ரூபாய் கொடுத்து ஸ்கூட்டரை எடுத்துச் செல்லுங்கள்” என்கிறது ஒரு விளம்பரம். தமிழ்நாட்டில் 31.3.2006 கணக்கெடுப்பின்படி மொத்தம் 82 லட்சத்து 21 ஆயிரத்து 730 வாகனங்கள் உள்ளன. அவற்றில் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபெட்டுகள் போன்ற இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சத்து 75 ஆயிரத்து 328. அதாவது மொத்த வாகனங்களில் இவை 82.10 சதவீதம்.

பஸ் போன்ற பொது பயன்பாட்டுக்கான வாகனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 102. இது மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 2.98 சதவீதம் மட்டுமே.

தமிழக அரசு பஸ் போக்குவரத்தில் “”ஏக-போக” முதலாளியாக இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவையை அளிப்பதா அல்லது நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்வதா என்பதில் மிகப்பெரிய சந்தேகம் அதற்கு ஏற்பட்டிருக்கிறது. போதிய எண்ணிக்கையில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தாமல் மக்களை வாட்டுவதாலேயே இன்று பட்டிதொட்டியெங்கும் சைக்கிளைப் போலவே “”டூ-வீலர்கள்” பெருகியுள்ளன.

கலாம் சுட்டிக்காட்டிய மற்றொரு விஷயம் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவது பற்றியது. மின்சார உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றிருந்தாலும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதை எல்லா வீடுகளிலும் இயக்கமாகவே ஏற்று நடத்த அரசு புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

“”சிறுதுளி பெருவெள்ளம்” என்பதைப்போல எல்லா வீடுகளிலும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தால் கணிசமான அளவுக்கு மின்சாரத்தைச் சேமிக்க முடியும். மழை நீர் சேமிப்பில் முன்மாதிரியாக இருந்ததைப்போல இதிலும் தமிழகம் நாட்டுக்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

Posted in Agriculture, Alternate, Analysis, APJ, Auto, Banks, Biz, Bus, Business, Consumer, Customer, Diesel, Economy, Electricity, energy, Expensive, Exports, Finance, Financing, Gas, Imports, Info, Kalam, Loans, Motor, oil, Petrol, Power, Prices, Resources, Rich, Scooters, solutions, Statz | Leave a Comment »