Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘External Affairs’ Category

Jeyaraj Fernandopulle to take the place of Sri Lankan Foreign Minister Rohitha Bogollagama as interim in-charge of External Affairs

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 1, 2008

இலங்கையின் தற்காலிக வெளிநாட்டமைச்சராக ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே நியமனம்

இலங்கையின் தற்காலிக வெளிநாட்டமைச்சராக ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், பிரதான கொறடாவுமான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ வியஜமொன்றினை மேற்கொண்டிருப்பதாலும், பிரதி வெளிநாட்டமைச்சர் ஹுசைன் பைலா மத்திய கிழக்கு நாடுகளுக்கான கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருப்பதாலும் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தின் பின்னணியிலேயே, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நாடு திரும்பும் வரைக்கும் பதில் வெளிநாட்டு அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனாலும் வெளிநாட்டமைச்சிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படி, பாகிஸ்தானுக்கான தனது விஜயத்தினை முடித்துக்கொண்டு நாளைய தினமே வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நாடு திரும்பவிருப்பதாகத் தெரியவருகிறது.

ரோஹித்த போகொல்லாகம பாகிஸ்தானிலிருந்து திரும்பும் வரையில் தன்னை தற்காலிகமாக வெளியுறவு அமைச்சராக இருக்கச்சொல்லி ஜனாதிபதி பணித்ததால் தான் இன்று இப்பொறுப்பை ஏற்றுள்ளதாக
வெளியுறவு அமைச்சரும் துணையமைச்சரும் நாட்டில் இல்லாத இந்த நேரத்தில் சில முக்கியப் பணிகளுக்கு உடனடியாக ஆட்களை நியமிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் தான் தற்காலிக அமைச்சராகப் பொறுப்பேற்றதாகவும் அதன் பின்னர் கனடாவுக்கான தூதரை இன்று தான் நியமித்ததாகவும் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டபோது ஜெயராஜ் ஃபெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

நாடு திரும்பிய பின்னர் போகல்லகம வெளியுறவு அமைச்சராகத் தொடருவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபுடன் அமைச்சர் போகல்லகம

இதேவேளை, பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, அங்கு ஜனாதிபதி ஜெனரல் பெர்வேஸ் முஷாரஃப், பிரதமர் மற்றும் அரச உயர்பிரதிநிதிகளையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியிருக்கிறார்.

இலங்கையின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைபாட்டிற்கும் பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜெனரல் முஷாரஃப், இலங்கை அரசு பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் தொடந்தும் தனது ஆதரவினை வழங்கிவருமென்று உறுதியளித்திருப்பதாகவும் இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்திருக்கிறது.


சேது சமுத்திரத் திட்டத்துக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் வரும் என்று கவலைப்படத் தேவையில்லை: இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில்குமார் கருத்து

இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில் குமார்

சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதற்க்கு விடுதலைப் புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கவலைப்படுவது தேவையற்றது என்று இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில்குமார் பிபிசி தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் தொடர்பாக, சமீப காலமாக, கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தாவும், கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் ஆர்.எப். கான்ட்ராக்டரும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். சேது கால்வாய் மூலம், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்று கவலை வெளியிடப்பட்டிருந்தது.

இது குறித்து தமிழோசையில் கருத்து வெளியிட்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில் குமார், “துரதிர்ஷ்டவசமாக, சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான விவாதம் சிறிது குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. துறைமுகம், கால்வாய், முக்கிய மின் திட்டம், அணுசக்தித் திட்டம் என எந்த ஒரு பெரிய கட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், அது பாதுகாப்பு தொடர்பான சில கவலைகளை ஏற்படுத்தும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தக் கால்வாய்த் திட்டம், கடல்வழி தொடர்பை மேம்படுத்தும் நிலையில், அதைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பார்க்கத் துவங்கினால், உலகில் எந்த இடத்திலும் வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்த முடியாது” என்றார்.

எந்தத் திட்டத்தையும் சாதமாகன முறையில் பார்க்க வேண்டுமே ஒழிய, எதிர்மறை கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. மக்களுக்கு ஒரு திட்டம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கடலோரக் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை போன்றவை எல்லாம் அதற்குத்தான் இருக்கின்றன என்று கருத்துத் தெரிவித்தார் அட்மிரல் சுஷில்குமார்.

இலங்கைத் தாக்குதலில் 18 பேர் பலி

இலங்கை மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புள்ள எனுமிடத்தில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற பாரிய பஸ் குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த 18 பொது மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் 50ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அனுராதபுரத்துக்குப் போய்க் கொண்டிருந்த இந்த பஸ் வண்டி தம்புள்ளை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அதில் குண்டு வெடித்தது

கொல்லப்பட்டுள்ளவர்களில் 14 பேர் பெண்கள், நால்வர் ஆண்கள், மிகவும் மோசமான நிலையில் இருந்த இருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தம்புள்ள மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர். சுதர்ஷன் அரம்பேகெதர அவர்கள் காயப்பட்டவர்கள் மொத்தம் 93 பேர் கொண்டுவரப்பட்டதாகக் கூறுகிறார்.

பஸ்ஸினுள் வைக்கப்பட்ட இந்தக் குண்டு தூர இயக்கியால் வெடிக்க வைக்கப்பட்டது என்ற பொலிஸ் விசாரணையின் ஆரம்பகட்டத் தகவல்கள் கூறுகின்றன.

மத்திய மாகாணத்துக்கான உயர் போலீஸ் அதிகாரியான கிங்ஸ்லி எக்கநாயக்க அவர்கள் இந்தக் குண்டு மாத்தளையில் பஸ்சுக்குள் வைத்திருக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தம்புள்ளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் மீது இலங்கை இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 பிப்ரவரி, 2008

கொழும்பு இரயில் நிலையத்தில் தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 11 பேர் பலி

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் தலைநகர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினுள் இடம்பெற்ற பெண் தற்கொலைக்குண்டு தாக்குதலில் குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள்.

கொழும்பு நகரின் இதயப்பகுதியில், மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இடத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் குண்டுத்தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, ஞாயிறு பிற்பகல் மீரிகம பிரதேசத்திலிருந்து வந்த இரயில் வண்டியொன்று மூன்றாவது மேடையில் வந்து நின்றதும், அதிலிருந்து இறங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைக்குண்டுதாரியொருவரே இந்தச் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பினை நடத்தியிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் தகவல் வெளியிட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துப்பிரிவு வைத்திய அதிகாரியொருவர், இந்தக் குண்டுத்தாக்குதலில் காயமடைந்த சுமார் 100 பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இவர்களில் சுமார் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இரயில் நிலையத்தில் தற்போது மேலதிக துருப்பினர் குவிக்கப்பட்டு, விசேட தேடுதல் மற்றும் விசாரணைகள் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

திங்கட்கிழமையன்று, இலங்கையின் அறுபதாவது சுதந்திரதினம் கொழும்பு காலிமுகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி நாட்டின் சகல பாகங்களிலும் குறிப்பாகத் தலைநகர் கொழும்பையும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் ஞாயிறன்று இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 


இலங்கை வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய பயணிகள் போக்குவரத்திற்கு தடை

வெறிச்சோடி இருக்கும் வவுனியா இரயில் நிலையம்
வெறிச்சோடி இருக்கும் வவுனியா இரயில் நிலையம்

இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பயணிகள் போக்குவரத்துக்கள் அனைத்தும் ஞாயிற்றுகிழமை முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் அறிவித்திருக்கின்றன.

வவுனியாவில் இருந்து மதவாச்சி மற்றும் அனுராதபுரம் ஊடாகத் தெற்கு நோக்கிச் செல்லும் பிரதான வீதியாகிய ஏ9 வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக மறு அறிவித்தல்வரை மூடப்பட்டிருப்பதாக, வவுனியாவில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவை அதிகாரிகளுக்குப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் போக்குவரத்துக்கள் அனுராதரபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று காலை தம்புள்ள நகர பஸ் நிலையத்தில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்தே இத்தகைய இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலதிக விபரங்களைக் கேட்கலாம்.


இலங்கை சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள்: மக்கள் கருத்து

இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர்
இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர்

இலங்கை சுதந்திரமடைந்து 60 ஆண்டு காலமாகின்றது என்றாலும் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னும் எட்டப்படாமலேயே இருந்து வருகிறது. இதன் விளைவாக தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம் சிங்கள மக்களும் பாதிப்பிற்கு இலக்காகி வருகின்றனர். எனவே இந்தப் பிரச்சினைக்கான தீர்வு உடன் எட்டப்பட வேண்டும். இதன் மூலமே இந்த நாட்டில் நிரந்தர சமாதானமும் அமைதியும் உருவாக முடியும் என்று திருகோணமலைவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணம் கல்வித்துறையில் முன்னேறி வருகின்றது. எனினும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது உரிய கல்வித் தரத்தினை இன்னும் எட்டவில்லை என்றே கூறவேண்டும். தற்போதைய போர்ச் சூழலின் விளைவாக இந்த மாகாணத்தில் 32 பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட 50 பாடசாலைகளின் கட்டிடப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. கிழக்கு மாகாண கல்வித் தரத்தை முன்னேற்ற முயன்றுவருவதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் சுகாதாரப் பணிகளை இயன்றவரை முன்னெடுத்துச் வருவதாகவும், பின் தங்கிய கிராமங்களிலும் இத்தகைய சேவைகளை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் திருகோணமலைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர்.ஞானகுணாளன் கூறியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் இன்றளவும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். மனிதர்கள் தங்கள் சொந்த இடங்களில் வாழ்வதுடன் அவர்கள் விரும்பிய தொழிலையும் மேற்கொள்ளும் நிலைதான் உண்மையான சுதந்திரம். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மூதூர் பிரதேச சபை உறுப்பினர் மொஹமது ரஜீஸ் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 பிப்ரவரி, 2008

அனுராதபுரம் மாவட்டத்தில் பேருந்து மீது கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதல்; 13 பேர் பலி

காயமடைந்தவர்களுக்கு அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது

இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வெலிஓயா பகுதியில் எத்தாவெட்டுணுவௌ என்னுமிடத்தில் திங்கட்கிழமை பிற்பகல் அரசு பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 5 இராணுவத்தினர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பராக்கிரமபுரவிலிருந்து ஜானகபுர என்னுமிடத்தை நோக்கிச் சென்ற பேருந்து வண்டி மீது கொப்பேகடுவ சந்திக்கு அருகில் இந்தக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

காயமடைந்தவர்கள் பதவியா மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாடெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இடம்பெற்ற 3 ஆவது பெரிய குண்டுத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என அரசு குற்றம்சுமத்தியுள்ளது. எனினும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுகுறித்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


புலிகளுக்கு எதிரான போரை வென்று வருகிறோம்: வைரவிழா சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி உரை

முப்படை தளபதிகளுடன் இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமது அரசு வெற்றிபெற்று வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

தலைநகர் கொழும்பில் நாட்டின் 60 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளின்போது இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் அறுபதாவது சுதந்திரதினம் இன்று கொழும்பு காலிமுகத் திடலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் முப்படைகள் மற்றும் பொலிசாரின் படைபலத்தையும், ஆயுத பலத்தையும் எடுத்துக்கூறும் நோக்கில் கண்கவர் இராணுவ அணிவகுப்புகளும் இடம்பெற்றன.

இராணுவ அணிவகுப்பு
இராணுவ அணிவகுப்பு

இலங்கைக்கு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நாட்டுக்காகப் போராடி உயிர்நீர்த்த சகலரையும் நினைவு கூறும்வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியின் பின்னர், கல்லூரி மாணவிகள் தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசியக்கொடியை ஜனாதிபதி ராஜபக்ஷ வைபரீதியாக ஏற்றிவைத்தார்.

பின்னர் இராணுவத்தினரின் பீரங்கி மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

நாட்டுமக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, இலங்கை கொடிய பயங்கரவாதத்தை முறியடிப்பது மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது என்ற இருபெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து வருகிறது என்றும், இந்தச் சவால்களை துணிவாக எதிர்கொண்டு நாட்டினை வெற்றிப் பாதையில் இட்டுச்செல்ல தானும் தனது அரசும் தயாராகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதிகளில் சுதந்திர தினம்

வவுனியாவில் நடந்த சுதந்திர தின வைபவத்தில் மதத் தலைவர்கள்

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அரச செயலகங்கள், பொலிஸ் மற்றம் இராணுவ தளங்களில் தேசிய கொடியேற்றலுடன் சுதந்திர தின வைபவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திர தினத்தையொட்டி, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வீதிச் சோதனைகளும் தீவிரமாக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

வவுனியா அரச செயலகத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சி.சண்முகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின வைபவத்தில் மதத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள், செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த அரச வைபவத்தில் மக்கள் பிரதிநிதிகளோ அல்லது சமூக முக்கியஸ்தர்களோ பொதுமக்களோ கலந்து கொள்ளாதது துரதிருஷ்டவசமானது என இங்கு உரையாற்றிய அரசாங்க அதிபர் சி.சண்முகம் குறிப்பிட்டார்.


தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் என்று கூறுவது வீண்பழி: முதல்வர் கருணாநிதி

தமிழக முதல்வர்

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக காங்கிரசார் அவ்வப்போது புகார் கூறிவரும் நிலையில், முதல்வர் கருணாநிதி, அவையெல்லாம் வீண்பழியென்றும், இப்படியெல்லாம் ஒரு பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு தனது கட்சியினை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றால் அதனைச் சந்திக்கத் தயார் என்று இப்போது கூறியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு விடுதலைப்புலிகளின் வேட்டைக்காடாகிவிட்டது என்ற ரீதியில் பேசியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் இப்பிரச்சினை குறித்து அரசு மீது அபாண்டமாக குற்றச்சாட்டுககள் வீசப்பட்டபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் மௌனமாக இருந்திருககிறார்கள், இதெல்லாம் தனக்கு மிகுந்த மனவருத்தத்தினை அளிப்பதாகவும் கருணாநிதி கூறியிருககிறார்.

கடந்த வாரம் சட்டமன்றத்தில் சட்டஅமைச்சர் துரைமுருகன் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் மீது உரிய நடவடிக்கை எடுககப்படும் என எச்சரித்திருந்தார். இருந்தும் தொடர்ந்து காங்கிரசார் இவ்வாறு குறைகூறுகின்றனர், இதற்குமேலும் இப்பிரச்சாரம் தொடர்ந்தால் பதவியிழக்கவும் தயார் என்று கருணாநிதி கூறியிருந்தார்.

காங்கிரஸ் தரப்பில் முதல்வரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கத் தயங்குகின்றனர். சிறிதுநேரம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழநாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வர் தெரிவிப்பது போன்று நாகர்கோவிலில் எதையும் அவர்கள் பேசவில்லையென்றும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுககு ஆதரவாக எவரும் செயல்பட அனுமதிக்கப்படக்கூடாது என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என்றும் கூறினார்.

தொடர்ந்து கருணாநிதி பேசியது குறித்து கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.


அறுபது வருடகால சுதந்திரத்தின் பின் இலங்கை: பெட்டகம்

பிரித்தானிய காலணித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம்பெற்று 60 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால் தெற்காசியாவிலேயே உயர்ந்த அளவு என்று சொல்லக்கூடிய சுமார் 90 வீதமான படித்த ஜனத்தொகையையும், பல்வேறு இயற்கைவளங்களையும் தன்னகத்தே கொண்ட இலங்கை இன்னமும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்துவருகிறது.

இது குறித்துக் பல்வேறு தரப்பினரின் கருத்துகளுடன் எமது கொழும்பு செய்தியாளர் பி.கருணாகரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Posted in Affairs, Bhaila, Bogollagama, defence, Defense, Deputy, Eelam, Eezham, External, External Affairs, Fernandopulle, Foreign, Hussein, Hussein Bhaila, interim, Jeyaraj, LTTE, Minister, Navy, Ram, Rama, Raman, Ramar, Rohitha, Sea, Sethu, Setu, Sri lanka, Srilanka | Leave a Comment »

State of SAARC – South Asian Association for Regional Cooperation

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!

மு. இராமனாதன்


“சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) வெறும் “பேச்சு மடம்’ என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

“சார்க்’ கூட்டமைப்பு 1985 முதல் இயங்கி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய ஏழு நாடுகள் அணி சேர்ந்தன.

“சார்க்’ ஒரு பொருளாதார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது. பரஸ்பர அரசியல் கருத்து வேற்றுமைகள் “சார்க்’ அமைப்பிற்குள் வரலாகாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் அமைப்பின் செயல்பாட்டை பரஸ்பர பேதங்கள் பாதிக்கவே செய்தன.

கடந்த ஏப்ரல் மாதம் புதுதில்லியில் நடந்த “சார்க்’ மாநாடு, தெற்காசிய ஒத்துழைப்பிற்கான சில அடித்தளங்களை அமைத்துக் கொடுத்தது. அதேவேளையில் அவை போதுமானதாக இல்லை என்கிற விமர்சனங்களும் வலம் வருகின்றன.

இந்த மாநாடு 22-வது ஆண்டுக் கூட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது 14-வது கூட்டம்தான். உறுப்பு நாடுகளிடையே, குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பகைமை காரணமாக பல ஆண்டுக்கூட்டங்கள் நடைபெறவே இல்லை.

தெற்காசிய நாடுகள், 60 ஆண்டுகளுக்கு முன்வரை காலனி ஆதிக்கத்தில் இருந்தவை. இப்போதும் வறுமையும் கல்லாமையும் உள்நாட்டுப் பிரச்னைகளும் தெற்காசியாவின் மீது சூழ்ந்திருக்கின்றன. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் தெற்காசியர்கள்தாம்.

ஆனால் அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உழல்கின்றனர். எல்லா “சார்க்’ மாநாடுகளிலும் குடிமக்களுக்குக் கல்வியும் சுகாதாரமும் வேலைவாய்ப்பும் தடையின்றிக் கிடைக்க வேண்டுமெனத் தலைவர்கள் பேசுவதோடு சரி. செயலாக்கம்தான் இன்றுவரை இல்லை.

இம்முறை “சார்க்’ அமைப்பின் எட்டாவது உறுப்பினராக ஆப்கானிஸ்தான் இணைந்தது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்ஸôயின் உரையில் உறுதியும் துணிவும் இருந்தது.

தமது நாடு மத்திய ஆசியாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையே ஓர் இணைப்பாக விளங்கும் என்றார் அவர்.

மேலும், கிழக்காசியாவின் பிரதான சக்திகளான சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முதல்முறையாக “”பார்வையாளர்”களாகப் பங்கேற்றன. சார்க் நாடுகளில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை தனது அரசு ஊக்குவிக்கும் என்றார் சீன வெளியுறவு அமைச்சர்.

27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டு முதல் ஈரானும் “சார்க்’ அமைப்பின் பார்வையாளர்களாகப் பங்கேற்க உள்ளன.

உறுப்பு நாடுகளுக்கிடையில் வணிகத்தை மேம்படுத்துவதிலும் இம்மாநாடு கவனம் செலுத்தியது.

சார்க் பிராந்தியத்திற்குள் இறக்குமதித் தீர்வைகளைக் குறைக்க வேண்டும் என்பதை சார்க் நாடுகள் 1993 ஆம் ஆண்டிலேயே ஒப்புக்கொண்டன.

ஆனால் உள்நாட்டுச் சநதையில் பாதிப்பு ஏற்படுத்தாமல், எந்தெந்தப் பொருள்களுக்கு தீர்வைகளை விலக்கிக் கொள்வது அல்லது படிப்படியாகக் குறைப்பது என்பதில் உறுப்பினர்களுக்கிடையில் இணக்கம் ஏற்படவில்லை.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தடையற்ற வணிகம் சில ஆண்டுகளாகவே அமலில் இருந்து வருகிறது. மற்ற “சார்க்’ நாடுகளுக்கும் தீர்வைகளிலிருந்து விலக்களிக்க இந்தியா தயாராகவே இருந்தது.

ஆனால் மற்ற நாடுகளும், எதிர்வினையாக, தமது பொருள்களுக்குத் தீர்வைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வந்தது. இது நிறைவேறவில்லை.

வளர்ச்சி குன்றிய வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் இறக்குமதிகளுக்கு இனி இந்தியா தீர்வைகள் விதிக்காது என்று அறிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங். இது பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பலன் பெறும் நாடுகள் சலுகையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்போவதாக “சார்க்’ மாநாட்டிலேயே அறிவித்தன.

இதனால் அந்நாடுகளின் இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும். தவிர, இந்திய இறக்குமதிகளுக்கு அவை தீர்வைகளைப் படிப்படியாகக் குறைக்கும் சாத்தியங்களும் அதிகரிக்கும்.

வணிகம் வளரும்போது சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, துறைமுக வளர்ச்சி ஆகியவை மேம்படும். மேலும், பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்திற்குள் நல்லெண்ணத்தை வளர்க்கவும் உதவும்.

மற்ற உறுப்பு நாடுகளைவிட பலமடங்கு பெரிய நாடான இந்தியா “சார்க்’ அமைப்பிற்குள் “பெரியண்ணனை’ போல் செயல்படுவதாக நிலவி வரும் நீண்டநாள் குற்றச்சாட்டை மட்டுப்படுத்தவும் உதவும்.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை இந்தியாவுடன் வணிகத்தை மேம்படுத்த இயலாது என்று கூறிவருகிறது பாகிஸ்தான்.

அமைதிப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றமும் விவேகமும் தென்படும் இப்போதும்கூட பாகிஸ்தான் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவில்லை. காலத்திற்கு ஒவ்வாத இந்த நிலைப்பாடு தேவையா என்பதை பாகிஸ்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தெற்காசியப் பல்கலைக்கழகம், சார்க் உணவு வங்கி போன்ற திட்டங்களும் “சார்க்’ மாநாட்டின் கூட்டறிக்கையில் இடம்பெற்றன. நீராதாரங்கள் பங்கீடு, மின்சக்தி, உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிலும் கூட்டு முயற்சிகள் வலியுறுத்தப்பட்டன. இவை புதியவை அல்ல. எனினும் முதல் முறையாக இவற்றை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

“சார்க்’ மாநாட்டின் அறிக்கைகளிலும் தீர்மானங்களிலும் உள்ள பல்வேறு அம்சங்களை வெளிக்கொணர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அண்டை நாடுகளிடையே நட்புறவும் வணிகமும் கல்வியும் வேலைவாய்ப்பும் வளரும். “சார்க்’ அமைப்பு உலக அரங்கில் ஒரு சக்தியாக உருவெடுக்க இயலும்.

(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்)

Posted in Actions, Asean, Asia, Bangaldesh, Bhutan, Burma, Chat, China, Colombo, Cooperation, Economy, Eelam, Eezham, EU, Exim, Exports, External, External Affairs, extradition, FERA, Finance, Foreign, Govt, IMF, Imports, LTTE, Maldives, Myanmar, NATO, Neighbor, Neighbours, Nepal, Op-Ed, Pakistan, Power, Process, Relations, SAARC, Sri lanka, Srilanka, Talks, Tariffs, Tax, Tibet, UN, WB, WTO | Leave a Comment »

FRANCE’S FUTURE Sarkozy Vows Reform: How Far Can He Go?

Posted by Snapjudge மேல் மே 8, 2007

பிரான்ஸ் மக்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன்: புதிய அதிபர் உறுதி

பாரீஸில் உள்ள கன்கார்டு சதுக்கத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றுகிறார், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள (இடமிருந்து 2-வது) நிகோலஸ் சர்கோசி. உடன் (இடமிருந்து) பாதுகாப்புத் துறை அமைச்சர் மிச்செலா எலியட் மேரி, சர்கோசியின் மனைவி செசிலியா மற்றும் அவரது ஆலோசகர் பிரங்காய்ஸ் ஃபில்லன் (வலது ஓரம்).

பாரீஸ், மே 5: பிரான்ஸ் மக்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார் பிரான்ஸின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வலதுசாரித் தலைவர் நிகோலஸ் சர்கோசி (52).

அமெரிக்க அதிபர் புஷ், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், ஜெர்மன் பிரதமர் (சான்சலர்) மெர்க்கரா ஏஞ்சல் மற்றும் பல ஐரோப்பியத் தலைவர்கள் சர்கோசிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தற்போது பிரான்ஸின் அதிபராக உள்ள ஜேக்கஸ் சிராக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பாரீஸிலும் பிற நகரங்களிலும் நூற்றுக்கணக்கில் திரண்ட சர்கோசி எதிர்ப்பாளர்களை போலீஸôர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், நீரைப் பீய்ச்சியடித்தும் கலைத்து விரட்டினர்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் நிகோலஸ் சர்கோசி, 53 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. வலதுசாரி (பழமைவாத) தலைவரான இவர், பிரான்ஸில் அடிப்படைவாதச் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என குரல் கொடுத்து வருபவராவார். இவரது கருத்துகளுக்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் உள்ளன.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சித் தலைமையகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சர்கோசி, “”எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்காகவும் குரல் கொடுப்பேன்” என்றார்.

“”என்னைப் பொருத்த வரையில், நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் பிரான்ஸ் தேசம் என்பது அதையெல்லாம் தாண்டி ஒன்றுதான். பிரெஞ்சு மக்கள் அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன். அவர்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன்” என்று கூறியுள்ளார் சர்கோசி.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சேஷலிஸ்டு கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.


அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு தயாராகிறது பிரான்ஸ்

பிரான்சின் புதிய அதிபர் நிகோலோ சர்கோசி
பிரான்சின் புதிய அதிபர் நிகோலோ சர்கோசி

பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக வலதுசாரி அரசியல்வாதியான நிக்கோலோ சர்கோசி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 53 சதவீத வாக்குகளைப் பெற்று சோஷலிசக் கட்சியின் வேட்பாளாரான செகொலீன் ரோயேலை அவர் வெற்றி கொண்டுள்ளார்.

அவரது வெற்றியை தலைநகர் பாரிஸில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அவரது வெற்றியின் மூலம் பிரான்ஸ் ஒரு அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தத்த காலத்திற்கு தயாராகி வருகிறது.

இம்மாதம் 16 ஆம் தேதியன்று பதவியேற்கவுள்ள அவர், பதவி விலகும் அதிபர் ஜாக் சிராக் அவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த கொள்கைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யவுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக அடுத்த மாதம் பிரான்ஸில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியை கைப்பற்ற அவர் முயற்சிகளை மேற்கொள்வார் என செய்தியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.


மாறுதல் வரும்!

பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பிரான்ஸýக்கு எடுத்த காரியத்தை முடிக்கும் ஆளுமை உள்ள தலைவர் அவசியத் தேவை. நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சர்கோசி அத்தகைய ஆளுமை உள்ள மனிதர்தான்.

அவருக்கு வாக்களித்த மக்கள் பலரும் அவரை ஒரு செயல்வீரராகக் கருதுகிறார்கள். “சர்கோசி எப்போதும் நினைத்ததைச் சாதிக்காமல் ஓயமாட்டார். எப்போதும் ஓர் அடி முன்னால் இருப்பவர்’ என்கின்றனர். அவரை எதிர்ப்பவர்கள் பயப்படுவதற்குக் காரணமும் இந்த அதிவேகம்தான்.

இருப்பினும் இன்றைய அதிரடி நடவடிக்கைகள்தான் பிரான்ஸ் பொருளாதாரத்தை மீண்டும் தூக்கி நிறுத்த முடியும்.

பிரான்ஸில் வேலையில்லாத் திண்டாட்டம் 9 சதவீதமாக உள்ளது. 24 வயதுக்குள்பட்ட இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு வேலை இல்லை. வேலை அளிக்கப்படும் முறையும் பணிப்பாதுகாப்பு அளிப்பதாக இல்லை. இதனால் பிரான்ஸில் இளைஞர்கள் வீதியில் இறங்கி, போராட்டங்களையும் வன்முறைகளையும் நடத்தினர்.

அனைவருக்கும் வேலைவாய்ப்பைத் தரும் வகையில் பிரான்ஸ் அரசு கொண்டுவந்த “வாரத்துக்கு 35 மணி நேர வேலைத் திட்டம்’ பணியாளர்களுக்கும் பயனளிக்கவில்லை; நிறுவனங்களுக்கும் பயனளிக்கவில்லை. கொடுத்த சம்பளத்துக்கு வேலை வாங்க இயலாத நிலை ஏற்பட்டதால் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.

பணியாளர்களுக்கு சம்பளம் உயராத நிலையில் பொருள்களின் விலை மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பதும் மற்றொரு பிரச்சினை. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பிரெஞ்சு அரசால் முடியவில்லை. பிரெஞ்சு நாணயத்தைக் கொடுத்து ஐரோப்பிய நாணயமாக மாற்றுவதில் ஒவ்வொரு நாளும் சிக்கல். தீர்மானிக்க இயலாதபடி விலைஉயர்வில் ஏற்றத் தாழ்வுகள்.

சர்கோசின் தேர்தல் முழக்கமே அதிகபட்சம் 35 மணிநேர வேலை உறுதி என்பதை குறைந்தபட்சம் 35 மணி நேர வேலை உறுதி என்று மாற்றுவேன் என்பதுதான். பிரெஞ்சு மக்களுக்கான வேலைவாய்ப்புகள் வேறு நாடுகளுக்குப் போவதைத் தடுப்பேன் என்றும் அவர் உறுதி கூறியுள்ளதால் நல்ல மாற்றத்தை எதிர்நோக்கலாம்.

மத அடையாளச் சின்னங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவது தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருவதும் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிந்து வருவதும் பிரச்சினைக்குரியதாக மாறின. வெற்றி உரையாற்றியபோது “பர்தா அணியும் பெண்களை விட்டுவிடமாட்டோம்’ என்று கூறியிருப்பதன் மூலம் புதிய மாற்றங்கள் வரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரான்ஸில் வசிக்கும் 20 சதவீதம் பேர், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்த பிரெஞ்சு காலனிகளிலிருந்து வந்தவர்கள். இவர்கள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். என்றாலும் இன்றைய பொருளாதார நெருக்கடிகளும், வேலையில்லாத் திண்டாட்டமும் பிரெஞ்சு “மண்ணின் மைந்தர்களிடம்’ புதிய மனநிலையை உருவாக்கியுள்ளன. பிரெஞ்சு காலனியிலிருந்து வந்தவர்களையும் குடிபெயர்ந்தவர்களாகவே கருதும் நிலை உருவாகியுள்ளது. இவர்களுக்காக அரசு செலவிடும் தொகை வீணானது அல்லது அளவுக்கு அதிகமானது என்ற கருத்து உள்ளது.

உதாரணமாக, இந்தியாவில் புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதோடு சரி. ஆனால் பிரெஞ்சு மக்களுக்கு அளிக்கப்படும் அத்தனை சலுகைகளும் இவர்களுக்கு உண்டு. விசா இல்லாமல் பிரான்ஸýக்கு செல்லலாம். மாதம்தோறும் உதவித்தொகைகளும் வந்து கொண்டிருக்கின்றன.

அதிபர் சர்கோசி முறையற்ற குடிபெயர்வுக்கு எதிரான மனிதர். இதனால் புதுச்சேரியில் சர்கோசிக்கு எதிர்ப்பு அதிகம். அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் அவர் படங்கள் கிழித்தெறியப்பட்டன.


 

Posted in Election, EU, Europe, External, External Affairs, Foreign, France, French, Indo-French, Indo-US, IndoFrench, NICOLAS SARKOZY, Polls, President, Reform, Relations, Sarkozy, US-French, Victory | 2 Comments »

Neeraja Chowdhry – Pranab’s Iran & Pakistan visit a signal to the US

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 13, 2007

பாகிஸ்தான், ஈரான் பயணத்தில் பிரணப் சாதித்தது என்ன?

நீரஜா செüத்ரி

தமிழில்: சாரி.

வெளியுறவுக் கொள்கையில் மீண்டும் நடுநிலைப் பாதைக்குத் திரும்பியிருக்கிறார் பிரணப் முகர்ஜி.

சமீபத்தில் தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாதுக்கும் சென்று திரும்பிய அவர், “”உள்நாட்டு அரசியல் தேவைகளுக்கு ஏற்ப” வெளிநாட்டுக் கொள்கையை வழிநடத்தும் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார்.

இன்றைய உலகில் ஒரெயொரு வல்லரசுதான் (அமெரிக்கா) ஆதிக்கம் பெற்றுத் திகழ்கிறது. அத்தோடு ஒத்திசைவாகச் செல்வதால் எத்தனை ஆதாயங்கள் கிடைக்கும் என்ற உண்மை காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும்; எனினும் உள்நாட்டில் 15 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காங்கிரûஸயே எப்போதும் ஆதரிக்கும் வாக்கு வங்கிகளாகத் திகழ்கிறார்கள் என்பதை அதனால் ஒதுக்கித்தள்ள முடியாது.

உள்நாட்டு முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியைவிட்டு விலக ஆரம்பித்துள்ளனர்; “”இந்தியா இப்போது அமெரிக்காவுக்குச் சாதகமாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டது” என்ற எண்ணம் முஸ்லிம் நாடுகளிடையே எழ ஆரம்பித்திருக்கிறது. இந்த இரண்டையும் சரி செய்யத்தான் அவருடைய இஸ்லாமாபாத், தெஹ்ரான் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பிரணப் முகர்ஜியின் பாகிஸ்தான் பயணத்தால் அசாதாரணமான முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டுவிடாது என்று அனைவருக்குமே தெரியும் என்றாலும், அது ஏதோ அதிமுக்கியமான பயணம் என்ற பிரமை ஊட்டப்பட்டது. பிரதமருடன் செல்வதைப் போல தில்லியிலிருந்தே 30 சிறப்பு நிருபர்கள் இஸ்லாமாபாத் சென்றனர். ஒரே நாளில் போய்த் திரும்ப வேண்டிய பயணம் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

பாகிஸ்தானுடனான பேச்சில் ஏதேனும் முக்கிய திருப்பம் நேரிட்டுவிட்டால் ஹிந்து-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான பதற்றம் கணிசமாகக் குறைந்துவிடும்; மக்கள் மத அடிப்படையில் அணி திரள்வது தடுக்கப்பட்டுவிடும். ஆனால் சியாச்சின் உள்பட எந்த விஷயத்திலும் அப்படி அதிரடியாக சுமுகத் தீர்வு காண நிலைமை இடம் தரவில்லை. அப்படி ஏதும் முயற்சி செய்யக்கூடாது என்பதை நமது ராணுவ தலைமை தளபதி ஜே.ஜே. சிங் ஏற்கெனவே எச்சரித்திருக்கிறார். வெளியுறவு அமைச்சரான பிரணப் முகர்ஜியும் படிப்படியாகத் தீர்வு காண்பதையே விரும்புகிறார். எனவே இப்பயணம் முஸ்லிம்களைச் சமாதானப்படுத்தவே என்பது தெளிவு.

அடுத்தது, ஈரானுக்கு பிரணப் மேற்கொண்ட பயணம். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பாரம்பரிய உறவையும், பாகிஸ்தான் வழியாக பெட்ரோலிய எரிவாயுவை இந்தியா வாங்கும் சாத்தியத்தையும் பற்றி பிரணப், தெஹ்ரானில் சுட்டிக்காட்டினார். அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்குப் பயன்படுத்த ஈரானுக்கு எல்லா உரிமையும் உண்டு என்று கூட அடித்துப் பேசினார். அதே வேளையில், அணு ஆயுதப் பரவல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை ஈரானும் மதித்து நடக்க வேண்டும் என்று அடிக்குரலில் கூறி முடித்தார்.

இவை அத்தனையையும் அமெரிக்கா உற்று கவனித்துக் கொண்டிருந்தது. அதை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் மல்போஃர்டு தில்லியில் ஒளிவுமறைவில்லாமல் தெரிவித்தார். “”பயங்கரவாதத்துக்கு துணை போவதாகக் கருதப்படும் ஈரானுடன் பெட்ரோலிய எரிவாயுவுக்கான உடன்பாட்டை இந்தியா செய்துகொள்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்று மென்று விழுங்காமல் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

சரி அதனால் என்ன, அடுத்த மாதம் வாஷிங்டனுக்குச் சென்று அமெரிக்கத் தலைவர்களையும் வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து, “”இரு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த” ஏதாவது பேசி சமாதானப்படுத்தினால் ஆயிற்று என்றுகூட பிரணப் நினைத்திருக்கலாம்.

வெளியுறவுக் கொள்கையில் இடைப்பாதையை பிரணப் எடுத்ததற்குக் காரணம் சோனியா காந்தியாகவும் இருக்கலாம். பிரணப் கூறி சோனியா கேட்கிறாரா, சோனியா சொல்வதை பிரணப் கேட்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாதுக்கும் செல்வதற்கு முன், தனியாக சோனியாவுடன் அவர் நீண்ட நேரம் பேசிவிட்டுத்தான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுடன் சுமுக உறவுக்காக, எதையாவது விட்டுக்கொடுத்து உடன்பாடு செய்து கொண்டால், அதையே ஒரு பெரிய பிரச்சினையாக்கி, அரசியல் ஆதாயம் அடைய பாரதீய ஜனதா தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் காங்கிரஸýக்கு இருக்கிறது. அதேசமயம் உத்தராஞ்சல், உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத் போன்ற முக்கிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற வேண்டியிருக்கிறது. அங்கு கணிசமான எண்ணிக்கையில் வாழும் முஸ்லிம்களைக் கவர வேண்டிய கட்டாயமும் காங்கிரஸýக்கு இருக்கிறது.

முக்கிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருப்பதாலும், பிறகு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நெருங்குவதாலும் ஏழைகளுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் நெருக்கமான கட்சியாக காங்கிரûஸ சித்திரிக்க வேண்டிய கடமை சோனியாவுக்கு இருக்கிறது.

அதனாலேயே, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்துவதிலும், சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்களை அனுமதிப்பதிலும் எச்சரிக்கை தேவை என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பிரணப் முகர்ஜியின் இடைப்பாதை என்பதும் இதை அடியொற்றித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில்: சாரி.

Posted in Congress, Congress (I), Defense, Digniatry, energy, External Affairs, Foreign Relations, Gas, Indira Congress, Iran, Islam, Islamabad, JJ Singh, Kashmir, Liquefied Natural Gas, LNG, Mani Shankar Aiyar, Military, Muslim, natural gas, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Niraja Chowdhry, NPT, Nuclear, oil, Pakistan, Petrol, Petroleum, petroleum and natural gas, pipeline, Prana, Pranab Mukherjee, Siachen, Sonia Gandhi, Tehran, United States, US, US ambassador, USA, Visit | Leave a Comment »

KV Ramaraj – Requirement for Association of Asian Nations

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2007

தேவை ஆசிய ஒன்றியம்

கே.வீ. ராமராஜ்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) உச்சி மாநாடு புதுதில்லியில் வரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இத் தருணத்தில் ஆசிய ஒருமைப்பாடு குறித்தும் பிராந்திய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வது அவசியமாகும்.

இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 1967-ல் “ஆசியான்’ அமைப்பை உருவாக்கின. பின்னர் புருனை, கம்போடியா, வியத்நாம், மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகள் உறுப்பினராயின. தற்போது இவ்வமைப்புடன் சீனா தடையில்லா வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 2007 ஜூலை மாதத்துக்குள் ஆசியான் நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தத்தை செய்து கொள்ள இந்தியா முயற்சி செய்து வருகிறது.

இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக் கடல் நாடுகள் அமைப்பில் தடையில்லா வணிக ஒப்பந்தத்தை அடுத்த உச்சி மாநாட்டில் இறுதி செய்வதென ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகியவை இணைந்து 1985-ல் தொடங்கிய “சார்க்’ அமைப்பிலும் இந் நாடுகளிடையே தடையற்ற வணிகம் குறித்த திட்டம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு நடந்த கொரிய போர் (1950 – 53), வியத்நாம் பிரச்சினை, இந்தியா – சீனா போர், இந்தியா – பாகிஸ்தான் போர்கள் போன்ற கசப்பான அனுபவங்களை மறந்து நட்புறவை மேற்கொள்ளவே தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகள் விரும்புகின்றன.

இருப்பினும் காஷ்மீர்ப் பிரச்சினை, வடகொரிய அணு ஆயுதத் திட்டம், இலங்கை உள்நாட்டுப் போர் போன்றவை இப் பிராந்தியத்தில் அமைதியின் தடைக்கற்களாக உள்ளன. மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை அரேபிய கூட்டமைப்பு, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றில் இடம் பெற்றுள்ளன.

பாலஸ்தீன விவகாரம், இராக் பிரச்சினை, ஈரானின் அணு ஆயுத விவகாரம், ஆப்கான் பிரச்சினை போன்றவை இப் பிராந்தியத்தில் பதற்றத்தை தொடர்ந்து நிலவச் செய்கின்றன.

சர்வதேச அரசியலில் பிராந்திய உணர்வு மற்றும் பிராந்திய அமைப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய அமைப்புகள் உருவானதை அதன் சாசனத்தின் வாயிலாகவே வரவேற்கிறது. ஐ.நா. சாசனத்தின் 33, 52, 53, 57 ஆகிய கோட்பாடுகள் பிராந்திய அமைப்புகள் பற்றி தெரிவித்துள்ளது.

“ஆசியான்’, “சார்க்’ அமைப்புகள் ஒரே பிராந்தியத்தில் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளிடையே கூட்டுறவுக்காக ஏற்பட்ட உடன்பாடாகும். ஆனால் 1954-ல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட தென்கிழக்காசிய உடன்படிக்கை அமைப்பும் (சீட்டோ) 1956-ல் பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட மத்திய கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பும் (சென்டோ) மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செய்த ராணுவக் கூட்டுகளாகும்.

1949-ல் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அமெரிக்காவின் தலைமையில் உருவானதன் தொடர்ச்சியாக ஆசியாவில் மேலை நாடுகள் தமது செல்வாக்கை அதிகரிக்க “சென்டோ’, “சீட்டோ’ அமைப்புகளை உருவாக்கின. “சீட்டோ’ ராணுவக் கூட்டில் சேர அழைப்பு வந்தபோது இந்தியா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போரில் ஒன்றுக்கொன்று எதிராகப் போரிட்ட நாடுகள் கூட ஐரோப்பாவில் போரில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவை அகற்ற ஒருங்கிணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கின.

பிராந்திய ஒற்றுமைக்காக, தற்போது இவ்வமைப்பு தடைற்ற வர்த்தகம், ஒரே நாணயம் போன்ற பல அம்சங்களுடன் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆசிய நாடுகளில் நிலவிய அன்னிய ஆட்சிகள் காரணமாக ஆசியக் கண்டம் சீரழிவுக்குள்ளாகி இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசிய நாடுகளான இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் ஆங்கில ஆதிக்கமும் வியத்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் பிரெஞ்சு ஆதிக்கமும் இந்தோனேசியா, சுமத்ரா, ஜாவா, போர்னியா மற்றும் கிழக்கத்திய தீவுகளில் டச்சு ஆதிக்கமும் இருந்தது.

இந்நாடுகள் சுதந்திரம் அடைந்து பின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஆதிக்க சக்திகளாக விளங்கிய மேலைநாடுகளுடன் பொருளாதார, ராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டன. இதன் காரணமாக ஆசிய நாடுகளின் விவகாரங்களில் மீண்டும் மேலைநாடுகளின் தலையீடு நீடித்தது.

1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு துருவநிலை மாறியது. உலகில் பன்முகத் துருவநிலை ஏற்பட ஆசிய நாடுகள் அனைத்தும் ஒரு கூட்டுப் பிராந்திய அமைப்பை ஏற்படுத்துவது அவசியமாகிவிட்டது. இதன் மூலம் ஆசியாவில் ஒற்றுமையை உருவாக்க இயலும். மேலும் சர்வதேச அமைதிக்கான சிறந்த பங்களிப்பையும் ஏற்படுத்த இயலும்.

பயங்கரவாத ஒழிப்பு, எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுமூலம் தீர்வு, போக்குவரத்து மேம்பாடு ஆகியவற்றுக்கு இவ்வமைப்பு பெரிதும் உதவும்.

உலகில் சக்திச் சமநிலை தழைக்கவும் ஐ.நா. சபை ஆக்கபூர்வமாகச் செயல்படவும் ஆசிய ஒருமைப்பாடு பயனுள்ளதாக இருக்கும். சார்க் மாநாட்டுக்கு அழைக்க பாகிஸ்தான் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஐரோப்பிய நாடுகள் பகைமைகளை மறந்து ஒருங்கிணைந்தது குறித்து பேசியதையும் ஆசியான் மாநாட்டில் வான் பயணம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதையும் இவ்விடத்தில் நினைவுகூறலாம்.

ஆசிய நாடுகளின் உறவுகள் பற்றி விவாதிக்க ஆசிய மாநாடு 1947-ல் தில்லியில் கூட்டப்பட்டது. இந்தோனேசியாவில் டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தை அகற்ற 1948-ல் ஆசிய மாநாட்டை இந்தியா கூட்டியது.

1954-ல் ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் “பாண்டுங்’ மாநாட்டில் இந்தியா காலனியாதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 1961-ல் அணிசாரா இயக்கம் தொடங்க இந்தியா முக்கியப் பங்காற்றியது.

சர்வதேச அமைதி, அணிசாரா கொள்கை, பிற நாட்டு விவகாரங்களில் தலையிடாமை ஆகிய முக்கிய அம்சங்களை வெளியுறவுக் கொள்கையாக இந்தியா பின்பற்றி வருகிறது. எனவே ஆசிய அமைப்பை உருவாக்க வேண்டிய தருணம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இதற்கான செயல்வடிவம் பற்றி சிந்தனையாளர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும், அதன் அடிப்படையில் ஆசிய மாநாட்டைக் கூட்டி ஆசிய அமைப்பு ஒன்றைத் தொடங்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இக் கருத்தை “சார்க்’, “ஆசியான்’ ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள நாடுகளிடம் இந்தியா எடுத்துரைக்க வேண்டும்.

உலக ஒற்றுமைக்காக ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியா கோரிவருகிறது. இதே ரீதியில் ஆசியாவிலும் அமைதியை நிலைநாட்ட ஆசிய ஒன்றியத்தை உருவாக்க பாடுபட வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.

(கட்டுரையாளர்: ஓசூர் நகர வழக்கறிஞர்).

Dinamani Editorial (Feb 12, 2006)

“சார்க்’ கூட்டமைப்பு

“சார்க்’ பிராந்திய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் இந்தியாவுக்குக் கிடையாது; பரஸ்பர வளர்ச்சிக்கான ஒத்துழைப்பையே இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜி தெளிவுபடுத்தியுள்ளார்.

தில்லியில் “சார்க்’ நாடுகளின் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பேசுகையில் அவர் இவ்விதம் கூறினார்.

இந்தியா இதற்கு முன்னர் பல தடவை இவ்விதம் கூறியுள்ளது. இப்போது மீண்டும் அதைக் கூறுவதற்குக் காரணம் உள்ளது. “சார்க்’ அமைப்பின் புதிய உறுப்பினராக 2005-ம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால் இந்த அமைப்பில் 8 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இவற்றில் இந்தியா ஒன்றுதான் மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் பெரியதாகும். மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய இதர நாடுகள் சிறியவையே. ஆகவே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்த முற்படலாம் என்ற அச்சம் இயல்பாக எழக்கூடியதே.

இந்த அச்சத்தைப் போக்க இந்தியா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உறுதி அளிக்க வேண்டியுள்ளது. நடைமுறையில் “சார்க்’ அமைப்பின் இதர நாடுகளுக்கு இந்தியா பல விஷயங்களில் விட்டுக்கொடுத்துள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

“சார்க்’ அமைப்புடன் ஒப்பிட்டால் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய “ஏசியான்’ கூட்டமைப்பில் இப்படிப்பட்ட அவநம்பிக்கை அம்சம் கிடையாது. இக் கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவில், பெரிய நாடு என எதுவும் இல்லை. அக் கூட்டமைப்பானது பிற நாடுகள் மெச்சத்தக்க அளவில் ஒத்துழைத்து முன்னேற்றம் கண்டுள்ளது.

25-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவை பொருளாதாரத் துறையில் மட்டுமன்றி அரசியல்ரீதியிலும் ஒரே அமைப்பாக இணைவதில் ஈடுபட்டுள்ளன. ரஷியா தலைமையிலான பல மத்திய ஆசிய நாடுகள் இதேபோல கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஒத்துழைத்து வருகின்றன.

ஆனால் 1985-ல் தொடங்கப்பட்ட “சார்க்’ அமைப்பு 21 ஆண்டுகள் ஆகியும் மிக மெதுவான முன்னேற்றமே கண்டுள்ளது. இதற்கு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரம் முக்கியக் காரணம் என்று சொல்ல முடியும். ஆனால் இது ஒன்றுதான் காரணம் என்று கூற இயலாது.

பாகிஸ்தானிலும் சரி, வங்கதேசத்திலும் சரி; தங்களது பிரச்சினைகளுக்கெல்லாம் இந்தியாவே காரணம் என்று கூறி பூச்சாண்டி காட்டும் அரசியல் சக்திகள் உள்ளன. அண்மைக்காலம்வரை பாகிஸ்தானின் கல்வி அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் இடம்பெற்றிருந்தது. தவிர, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இன்னமும் இயங்கி வருகின்றன.

“சார்க்’ அமைப்பின் முக்கிய நோக்கம் இந்த நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வழி செய்வதாகும். படிப்படியாக காப்பு வரிகளைக் குறைப்பது என்று டாக்காவில் 1993-ல் நடந்த “சார்க்’ மாநாட்டில் திட்டமிடப்பட்டபோதிலும் அதற்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதற்கான வழியில் உருப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“சார்க்’ அமைப்பின் 14-வது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்ரலில் தில்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிலாவது பொருளாதார ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுமா என்பது தெரியவில்லை.

காஷ்மீர் விவகாரத்தில் ஒருவகை உடன்பாடு ஏற்படாதவரையில் “சார்க்’ கூட்டமைப்பு முன்னேற பாகிஸ்தான் இடம்கொடுக்காது என்பது நிச்சயம்.

இதற்கிடையே இந்த அமைப்பில் சீனாவை முழு உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் பாகிஸ்தானும் வங்கதேசமும் முனைப்புக் காட்டி வருகின்றன. ஆனால் “சார்க்’ கூட்டமைப்பில் இன்னும் முழு அளவில் ஒத்துழைப்பு ஏற்படாத நிலையில் சீனாவைச் சேர்த்துக் கொள்வதை இந்தியா விரும்பவில்லை.

2010-க்குள் ரூ.92 ஆயிரம் கோடி வர்த்தகம்: சார்க் நாடுகள் திட்டம்

மும்பை, பிப். 20: சார்க் நாடுகளுக்கிடையே 2010-ம் ஆண்டுக்குள் 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்ய மும்பையில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான 13 அம்ச கொள்கை சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்தனர்.

சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் மாநாடு மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 சார்க் நாடுகள், உலக வங்கி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். வர்த்தகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதன் மூலம் 92 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை எட்ட முடியும் என இம் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. சார்க் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், தடையில்லா வான்வெளிப் பகுதியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது.

இது தவிர, எரிசக்தி, மின்னணு ஊடகங்கள், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவேண்டும் என இம்மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

==============================================================
பேசிப் பயனில்லை

தெற்காசிய பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தபின்னும் குறிப்பிடத்தக்க எந்தப் பெரிய சாதனைகளையும் நிகழ்த்த முடியாமல் போனதற்கு முதல் காரணம், இதில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் பல விஷயங்களில் முரண்படுவதுதான்.

அந்த நிலைமை 14-வது மாநாட்டிலும் தொடர்கிறது.

“”கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பதிலேயே நமது ஆற்றல் செலவாகிவிடுகிறது. “சார்க்’ அமைப்பின் லட்சியத்தைப் பின்தங்கச் செய்கிறது” என்று சொல்லும் பாகிஸ்தான் பிரதமர் செüகத் அஜீஸ், “காஷ்மீர்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடாமல், “இப் பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கும் நம்பிக்கை வறட்சித் தடைகள் நீக்கப்பட வேண்டும், கருத்துவேறுபாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டும்’ என்கிறார்.

கடந்த மாநாட்டில் (2005-ல்) உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான், இம் மாநாட்டில் முதல்முறையாகப் பங்கேற்பதால், ஒருவேளை, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினையையும் சூசகமாகச் சேர்த்தே பேசியிருப்பாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இந்த எல்லைப் பிரச்சினை காரணமாக, “சார்க்’ நாடுகள் அமைப்பில் ஆப்கானிஸ்தான் இடம்பெறுவதை பாகிஸ்தான் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை.

இந்த மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜியை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கசூரி சந்தித்துப் பேசினாலும், காஷ்மீர் பற்றி பேசவில்லை. வழக்கம்போல சுமுகமான, சங்கடம் தராத விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள்.

மாநாட்டில்கூட, நிறைய விஷயங்கள் குறித்து பேசப்படுகிறதே தவிர, நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாக அவை இல்லை. “முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் நெருக்கடியில் “சார்க்’ நாடுகள் உள்ளன. முதல் நடவடிக்கையாக “சார்க்’ நாடுகளின் தலைநகரங்களை நேரடி விமானப் போக்குவரத்தால் இணைப்போம். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், நோயாளிகளுக்கான விசா வழங்குவதில் “சார்க்’ நாடுகள் ஒன்றுபோல நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியிருப்பது இந்த அமைப்பு எவ்வளவு நிதானமாகச் செயல்படுகிறது என்பதற்குச் சான்று.

ஐரோப்பிய ஒன்றியம்போல “சார்க்’ நாடுகளை ஓர் ஒன்றியமாக்கி, பொதுநாணயம் (காமன் கரன்சி) உருவாக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலையும் தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாதத்தையும் குறிப்பிட்டுள்ள இலங்கை, இது குறித்து “சார்க்’ நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று கூறியபோதிலும், யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.

“சார்க்’ அமைப்பு ஏற்பட்டதன் அடிப்படை நோக்கமே தடையற்ற வர்த்தகத்தை இந்நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொள்வதுதான். ஆனால் அந்த நோக்கம்கூட இன்றளவிலும் முழுமையடையவில்லை.

“சார்க்’ நாடுகள் தங்களுக்குள் பொருள்களின் வரி, விலையைக் குறைக்க “தெற்காசிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கை’யில் கையெழுத்திட்டன. தடையற்ற வர்த்தக மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. 2006 ஜூலையில் நடைமுறைக்கு வந்திருக்கவேண்டிய இந்த உடன்படிக்கையின்படி 2007-ம் ஆண்டில் இந்நாடுகளுக்கு இடையே அனைத்து ஏற்றுமதி, இறக்குமதி சுங்க வரியில் 20 சதவீதம் குறைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்ததால் இது நடைமுறைக்கு வரவில்லை. இதற்கு அரசியல் சூழ்நிலைகளே காரணம்.

வர்த்தகத்தைவிட முக்கியமாக தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் ஒத்துழைப்புக்கான தேவை இந்நாடுகளுக்கு இருக்கிறது.

உறுதியான எந்த முடிவும் காணப்படாமல், இந்த மாநாடும் வழக்கம்போல கூடி, பேசிக் கலைவதாகவே அமைந்துள்ளது.
==============================================================

Posted in Afghanistan, Afghanisthan, Asean, Asia, Asian Union, Association, AU, Bangaladesh, Bargaining, Bhutan, Burma, China, Cooperation, Country, Defense, Economy, EU, Expenditure, External Affairs, Finance, Govt, India, Indonesia, Kashmir, Madives, Malaysia, Myanmar, Nations, NATO, Nepal, Pakistan, Phillipines, Power, Region, Rhetoric, SAARC, Singapore, South Asia, Sri lanka, Super power, Superpower, Talks, Terrorism, Thailand, Tibet, UN, Waste | 2 Comments »

AIMPLB – Majlis Ittehadul Muslimeen seeks extradition of Taslima Nasrin

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

சர்ச்சைக்குரிய வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமாவை நாட்டைவிட்டு வெளியேற்ற முஸ்லிம் சட்ட வாரியம் வலியுறுத்தல்

புது தில்லி, ஜன. 19: வங்கதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தியுள்ளது.

“லஜ்ஜா’ என்னும் சர்ச்சைக்குரிய நாவலை முஸ்லிம் எழுத்தாளரான தஸ்லிமா எழுதினார். அதையடுத்து, வங்கதேசத்தில் அவருக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதனால் அங்கிருந்து 1994-ல் அவர் வெளியேறினார். தற்போது அவர் கோல்கத்தாவில் வசித்துவருகிறார்.

அவர் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதியிருக்கும் கட்டுரையில், “”முஸ்லிம் பெண்களே புர்க்காவைத் தூக்கி எறியுங்கள்; பெண்களுக்குப் பாரபட்சம் காட்டும் அந்த உடையை உதறுங்கள்; அதைக் கொளுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“”அந்தக் கட்டுரை முஸ்லிம்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் இருக்கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அக் கட்டுரையை அவர் எழுதியிருக்கிறார். அது கண்டனத்துக்கு உரியது; எனவே, தஸ்லிமாவை இந்தியாவைவிட்டு வெளியேற்ற வேண்டும்” என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினரான கமால் பாரூக்கி வியாழக்கிழமை கூறினார்.

அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அணுகி வற்புறுத்த உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Posted in AIMPLB, All-India Muslim Personal Law Board, Bangladesh, Burqa, Dress, External Affairs, extradition, Islam, Kamal Farooqi, Lajja, Let's burn the Burqa, Majlis Ittehadul Muslimeen, Ministry, Muslim, Novel, Outlook, Tasleema Nasreen, Tasleema Nasrin, Taslima Nasreen, Taslima Nasrin, Writer | 1 Comment »

Pranab gets MEA, Anthony named Defence Minister

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

மத்திய மந்திரி சபை இன்று இரவு மாற்றம்: நடிகர் அம்பரீஷ் மந்திரி ஆகிறார்

புதுடெல்லி, அக். 24-

மத்திய மந்திரிசபையில் பல இலாகாக்களுக்கு மந்திரிகள் நியமிக்கப்படாமல் உள்ளனர். வெளியுறவு மந்திரியாக இருந்த நட்வர்சிங் ஈராக்கின் உணவுக்கு எண்ணை திட்ட ஊழலில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தார்.

  • தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருந்த தெலுங் கானா கட்சி தலைவர் கே.சந்திரசேகர்ராவ்,
  • நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்த ஏ.நரேந்திரா,
  • நீர் வள ஆதார மந்திரியாக இருந்த ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஜெய் பிர காஷ் நாராயணன் யாதவ் ஆகியோரும் ராஜினாமா செய்ததால் அவர்கள் வகித்த இலாகாக்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் மத்திய மந் திரி சபையில் இன்று சிறிய அளவில் மாற்றம் செய் யப்படுகிறது.

ராணுவ மந்திரியாக இருக்கும் பிரணாப்முகர்ஜி இலாகா மாற்றம் செய்யப் படுகிறது. அவரை வெளியுறவு மந்திரியாக நியமிக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்து இருக்கிறார். பிரணாப் முகர்ஜிக்கு பதில் புதிய ராணுவ மந்திரி நியமிக்கப்படுகிறார்.

காங்கிரஸ் பொது செயலாளராக இருக்கும் ஏ.கே.அந்தோணி தொழிலாளர் நலத்துறை மந்திரியாக நியமிக்கப்படுகிறார். ஐ.என்.டி.சி. தலைவர் சஞ்சீவரெட்டியும் மந்திரியாக பதவி ஏற்கிறார்.

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மத்திய மந்திரிசபையில் இடம் பெறுகிறார். இவர் 1998-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு தேர்தலிலும், 2004-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று 3-வது முறையாக எம்.பி. பதவி வகித்து வருகிறார்.

நடிகர் அம்பரீஷ் தமிழில் ரஜினிகாந்த் நடித்த பிரியா படத்தில் ஸ்ரீதேவிக்கு காதலனாக நடித்துள்ளார். 200-க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.

இவரது மனைவி நடிகை சுமலதா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ள ஏராளமான படங்களில் நடித்தவர். அம்பரீசுடன் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு 1992-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

கன்னட பட உலகில் முன் னணி நடிகராக இருந்த அம் பரீஷ் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் குதித்தார்.

புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கிறது. ஜனாதிபதி அப்துல் கலாம் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Posted in A K Antony, Ambareesh, Chandra Sekhar Sahu, Defence Minister, External Affairs, Information and Broadcasting, J P Yadav, Jaiprakash Narayan Yadav, Karnataka, Manmohan Singh, Minister of State, Mukherjee, Oscar Fernandes, Pranab, Prime Minister, Rural Development, Sumalatha, Water Resources | 1 Comment »

Musharraf – In the Line of Fire : Memoirs Criticism

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

யோசனைகள் இலவசம்

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் எழுதி வெளியாகியுள்ள “நெருப்புக் கோட்டினில்: ஒரு நினைவுக் குறிப்பு‘, இந்தியா – பாகிஸ்தான் – காஷ்மீர் பற்றிய பல்வேறு விவாதங்களைப் “பற்ற’ வைத்துள்ளது. காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக “தனிப்பட்ட முறையில் தனது யோசனை’ என்று அவர் நான்கு விஷயங்களை அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

1. பாகிஸ்தானும் இந்தியாவும் உரிமைகோரும் பகுதிகளைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து பேசித் தீர்த்துக்கொள்ளலாம்

2. இப்படியாகத் தீர்மானிக்கப்படும் பகுதியில் இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.

3. இப்பகுதிக்கு தன்னாட்சி அளிக்கவேண்டும்.

4. அந்தத் தன்னாட்சியைப் பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர் ஆகிய மூன்று பகுதியினரையும் கொண்ட குழு அமைத்து கண்காணிப்போம்.

பிரச்சினைக்குரிய பகுதிகளை விட்டுக் கொடுத்துத் தீர்மானிக்க முடிந்தாலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினை முடிந்துபோகிறது. அதன் பின்னர் அவரவர் பகுதியில் அவரவர் ஆட்சி தானே அமைந்துவிடும்.

ஆனால் முஷாரப், அதற்கும் மேலே போய், தன்னாட்சி வழங்க வேண்டும், வாருங்கள் மூவரும் ஒன்றாகக் கண்காணிப்போம் என்கிறார். அதாவது – இரண்டு வீடுகளுக்கு இடையில் எல்லைப் பிரச்சினையா? குறுக்கே சுவர் எழுப்பு! இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சினையா? குறுக்கே ஒரு நாட்டை எழுப்பு!

முஷாரப் சொல்லும் நான்கு யோசனைகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு புதிய நாடு முளைப்பதை உணரலாம். இன்றைய காலக்கட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் உறவு என்பது வெறும் காஷ்மீர் எல்லைப் பிரச்சினை என்பதாக இல்லை. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் நுழைவதைத் தடுப்பதுதான் இந்திய நட்புக்கு பாகிஸ்தான் அளிக்கக்கூடிய முதல்மரியாதையாக இருக்க முடியும். ஆனால் அதைப் பற்றி முஷாரப் தனது “சர்வதேச உறவுகள்‘ அத்தியாயத்தில் விவாதிக்கக் காணோம்.

“பாகிஸ்தானில் பயங்கரவாதிகள்’ என அமெரிக்கா, இந்தியா இரு நாடுகளும் குற்றம் சாட்டும்போது இரு நாடுகளுக்கும் இரண்டு விதமான எதிர்வினைகளைத் தருகிறது பாகிஸ்தான்.

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றதற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்று இந்தியா சொன்னபோது வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் பாகிஸ்தான் அளித்த கோபமான பதில்: “”இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும் பாகிஸ்தான் காரணம் என்கிறார்கள்”.

ஆனால், இதே குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் நடந்துகொள்ளும் விதம் அலாதியானது. நியூயார்க்கில் உலக வர்த்தகக் கட்டடம் அல் காய்தாவால் தாக்கப்பட்டதும், “”பயங்கரவாதத்தை ஒழிக்க (அல்லது பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை ஒப்படைக்க) ஒத்துழைக்காவிட்டால் நாட்டையே குண்டுபோட்டு அழிப்போம். கற்காலத்துக்குப் போய்விடுவீர்கள்” என்று மிரட்டிய விஷயத்திற்காக, அமெரிக்கா செல்லும் லண்டன் விமானங்களில் குண்டுவெடிக்க நடத்தப்பட்ட சதியை முறியடிக்கத் “துப்பு’ கொடுத்து “நடமாடும் நாயகருக்கு நல்லபிள்ளை நானே’ என்று பேர் வாங்கிக் கொண்டபின்னர், இப்போதுதான் அந்த மிரட்டல் பற்றி மூச்சு விடுகிறார் முஷாரப்.

ஆகையால், பேசிப் பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே என்று இந்தியா கவலை கொள்ளத் தேவையில்லை. உலகம் தோன்றிய நாள் முதலாய் “வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’.

கெஞ்சினால் மிஞ்சுவர், மிஞ்சினால் கெஞ்சுவர்.

Dinamani Editorial – March 5, 2007

காஷ்மீரில் துருப்புகள்

காஷ்மீரில் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க இப்போதைக்குத் திட்டம் எதுவும் கிடையாது என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஒருபுறம் ஹுரியத் மாநாட்டுக் கட்சியும் மறுபுறம் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியும் வீணாகக் கிளப்பியுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து பிரதமர் இவ்வாறு அறிவிக்க வேண்டியதாயிற்று. ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் பரூக், காஷ்மீரில் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஓர் அறிக்கையில் கூறினார். காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியோ துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்று தீவிர இயக்கமே நடத்தி வருகிறது.

இக் கட்சியின் தலைவரான மெஹபூபா, சில நாள்களுக்கு முன்னர் தில்லியில் பல தலைவர்களைச் சந்தித்து துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தவிர, காஷ்மீரில் ராணுவப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரி வருகிறார். காஷ்மீரில் நிலைமை முன்னேறியுள்ளதால் துருப்புகளைக் குறைக்கலாம் என்பது அவரது வாதம். இப்படிக் குறைத்தால் தீவிரவாதிகளின் தாக்குதல் குறையும் என்றும் அவர் வாதிக்கிறார். இக் கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சய்யீத், காஷ்மீரில் துருப்புகள் குறைக்கப்பட வேண்டும் என்பது தங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கை என்று வர்ணித்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் காங்கிரஸýம் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகிறது. இக் கட்சிகள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி 2002-ம் ஆண்டிலிருந்து முதல் மூன்று ஆண்டுக்காலம் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சய்யீத் முதல்வராக இருந்தார்.

2005-லிருந்து காங்கிரஸின் குலாம்நபி ஆசாத் முதல்வராக இருந்து வருகிறார். காஷ்மீர் சட்டமன்றத்தின் ஆயுள்காலம் 6 ஆண்டுகளாகும். ஆகவே, அடுத்த ஆண்டு தேர்தல் நடந்தாக வேண்டும். இதை மனத்தில்கொண்டு மக்கள் ஜனநாயகக் கட்சியினர் துருப்புகள் எண்ணிக்கைக் குறைப்பை ஒரு தேர்தல் கோஷமாக ஆக்க, இப்போதிருந்தே குரல் எழுப்ப முற்பட்டுள்ளதாகக் கூறலாம்.

ஆளும் கூட்டணிக்குள்ளாக இருந்துகொண்டு அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுவது சரியா என அக் கட்சியினர் சிந்தித்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில், துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க காலம் இன்னும் கனியவில்லை என முதல்வர் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

வருகிற நாள்களில் மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தங்களது சுருதியை மாற்றிக் கொள்வார்களா அல்லது மேலும் உரத்தகுரல் எழுப்புவார்களா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் தங்களது இயக்கத்தை முடுக்கிவிட்டால், அது கூட்டணி அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஊறு விளைவிக்கலாம்.

உள்ளபடி காஷ்மீரில் ராணுவப் படையினர் இரண்டுவிதப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் எல்லையிலிருந்து ஊடுருவல் நடைபெறாதபடி எல்லையைக் காப்பது முதல் பணி. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளால் காஷ்மீர் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படாதபடி பாதுகாப்பது இரண்டாவது பணியாகும்.

காஷ்மீரில் பயங்கரவாதம் அடியோடு அகன்று விட்டதாகக் கூற முடியாது. காஷ்மீர்ப் பிரச்சினை பற்றி இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் காஷ்மீரில் இன்னும் முழு அமைதி ஏற்பட்டுவிடவில்லை. அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்ட பிறகே படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றிச் சிந்திக்க முடியும். பிரதமர் இதைத்தான் எடுத்துக் கூறியுள்ளார்.

Posted in Army, Azad Kashmir, Bomb Blasts, Book, Criticism, Critique, defence, Defense, External Affairs, Foreign Affairs, In the Line of Fire, India, Kashmir, Military, Mumbai, Musharraf, Pakistan, POK, Prime Minister, Relations, review, Tamil, Terrorism | Leave a Comment »

External Affairs Minstry – Conundrum for Prime Minister

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

யார், புதிய வெளியுறவு அமைச்சர்?

நீரஜா செüத்ரி :: தமிழில்: லியோ ரொட்ரிகோ

அணிசாரா நாடுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பியதும் வெளியுறவுத் துறைக்குப் புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என்று உறுதி அளித்திருந்தார் பிரதமர். அதைத் தொடர்ந்து, அப் பதவியைப் பிடிப்பதற்கான போட்டியும் நெருக்குதல்களும் காங்கிரஸ் கட்சியில் அதிகரித்துவிட்டன.

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு உறுதியாகும் வரையில் வெளியுறவு இலாகாவைத் தன் வசமே வைத்துக்கொள்ளவே பிரதமர் விரும்புவார் என பலர் கருதுகின்றனர். நேரம் வரும்போது புதியவரின் பெயரையும் அறிவித்து நியமனமும் செய்துவிட்டுப் போகலாம். முன்னறிவிப்பை வெளியிட்டதன் மூலம் பல்வேறு தரப்புகளில் இருந்தும் நெருக்குதல்களை வரவழைத்துக் கொண்டுவிட்டார் பிரதமர்.

இது ஒருபுறம் இருக்க; அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டைப் பொருத்தவரை, அது வெற்றி பெற்றால், பிரதமரின் கிரீடத்தில் வைத்த வைரக்கல்லாக அது கருதப்படும். ஒருவேளை தோல்வி அடைந்தாலும், “அமெரிக்க நெருக்குதலுக்கு அடிபணிந்துவிடவில்லை’ என்ற பெருமை அவருக்குக் கிடைத்துவிடும். அதனால் அவரது மதிப்பும் உயர்ந்துவிடும். நாடாளுமன்றத்தில் திட்டவட்டமான உறுதிமொழியை அளித்திருக்கும் அவரால், அதிலிருந்து பின்வாங்குவது இயலாத காரியம்.

மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றம் எதையும் மேற்கொள்ளும் உத்தேசம் பிரதமருக்கு இல்லை. ஏனென்றால், ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து நெருக்குதல்களை வரவழைப்பதாக அது அமைந்துவிடும்.

பாதுகாப்புத் துறை அமைச்சரான பிரணப் முகர்ஜி வெளியுறவுத் துறைக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார்; அனுபவத்தில் மூத்தவர், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட 35-க்கு மேற்பட்ட அமைச்சரவைக் குழுக்களுக்குத் தலைமை வகித்திருப்பவர்; எதிரும் புதிருமாக நாடுகள் அணி சேர்ந்திருக்கும் இன்றைய உலகச் சூழலில், இந்தியாவுக்கு வரக்கூடிய நெருக்குதல்களைச் சமாளிக்கக்கூடியவர். ஆனால், பாதுகாப்புத் துறையிலிருந்து வெளியுறவுக்கு மாற்றப்படுவதை அவர் விரும்பவில்லை.

தெளிவாகச் செயல்படக்கூடிய ப. சிதம்பரமும் அப் பொறுப்புக்குப் பொருத்தமானவர்தான். ஆனால், தமிழரான அவருக்கு, இலங்கை தொடர்பான கொள்கையை ~ அதிலும் குறிப்பாக அங்கு நிலைமைகள் மேலும் சிக்கலடைந்துள்ள நேரத்தில் ~ கையாள்வது சங்கடமானதாக இருக்கக்கூடும். அதோடு, நிதித் துறையை அவர் கையாள்கிற விதமும் பிரதமருக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது.

புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக கரண் சிங், எஸ்.எம். கிருஷ்ணா, கமல் நாத், கபில் சிபல் ஆகியோரில் யாராவது ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அண்மைக் காலமாக அரசியல் வட்டாரத்தில் அடிபட்டுக்கொண்டு இருந்தது. சிதம்பரத்துக்கு எப்படி இலங்கை விவகாரமோ, அதேபோல கரண் சிங்குக்கு பாகிஸ்தான் விவகாரம். காங்கிரஸ் கட்சியின் வெளியுறவு விவகாரக் குழுவுக்கு அவர்தான் தலைவர்; அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவர்; பிரதமரின் தூதராக நேபாள விவகாரத்தைத் திறமையாகக் கையாண்டவர். இருந்தபோதிலும், அவர் ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற அம்சம் அவருக்குப் பாதகமாக இருக்கிறது.

வெளியுறவுத் துறையில் புத்தெழுச்சியுடனும் உத்வேகத்துடனும் செயல்படக் கூடியவர்தான் கபில் சிபல். பிரதமரின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. கூர்மையாகவும் சிந்தனைத் தெளிவுடனும் செயல்படக்கூடியவர்; சட்டம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அறிவும் அவருக்கு இருக்கிறது. பாரம்பரியமாக இந்தியாவின் நண்பர்களாக இருப்பவை இஸ்லாமிய நாடுகள்; ஆயினும், அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு, ஈரான் விவகாரம் ஆகியவற்றில் இந்தியா எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக அவை அதிருப்தி அடைந்துள்ளன. எனவே, அவற்றுடன் மீண்டும் நெருங்கிய உறவை ஏற்படுத்துவது புதிய அமைச்சருக்கு முன்னுள்ள சவால்களில் ஒன்று. கபில் சிபலுக்கு சிறுபான்மைச் சமுதாயத்தினருடனும் நல்ல உறவு இருக்கிறது. ஆனால், அப் பதவிக்கு நியமிக்கும் அளவுக்கு அவர் மூத்தவரல்லர்; பலருக்கு “இளையவர்’ என்று கருதப்படுவதான் அவருக்கு உள்ள சிக்கல். அதோடு, கட்சியில் அவருக்கு எதிராக இருக்கும் சக்திகளும் பலமாக உள்ளன.

அனுபவத்தால் மெருகேறிய, மகாராஷ்டிரத்தின் ஆளுநராக இருக்கும் எஸ்.எம். கிருஷ்ணா, வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அண்மைக் காலத்தில் அடிபட்டது. மத்திய அரசியலில் தீவிரமாக இறங்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு சில காலமாக இருந்துவருகிறது. ஆனால், அவருக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர், அண்மைக் காலத்தில் மத்திய அரசியலில் செல்வாக்கும் பலமும் மிக்கவராக உருவெடுத்திருக்கும் வீரப்ப மொய்லி ஆவார். பல்வேறு கமிட்டிகளின் தலைவராக, பிரதமரால் நியமிக்கப்பட்டிருப்பவர் அவர். கர்நாடகத்தைச் சேர்ந்த இருவர், ஒரே நேரத்தில் தில்லி அரசியலில் அதிகார மையங்களாகச் செயல்பட முடியாது.

கடைசியாக வெளியுறவுத் துறைப் பொறுப்புக்கு காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்ட பெயர் சிவராஜ் பாட்டீல்; உள் துறையில் குறிப்பிடும்படி செயல்படாத அவர், வெளியுறவுத் துறைப் பொறுப்புக்கு மாற்றப்பட்டு, தற்போது மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் சுஷில் குமார் ஷிண்டே, உள் துறை அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என்ற பேச்சு அடிபட்டது.

கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே பிரதமர் செயல்பட வேண்டியுள்ளது. பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷி, சைபுதீன் சோஸ் உள்பட 8 மத்திய அமைச்சர்கள் தமது துறைச் செயலர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இப்போது அந்த வேலையில் இறங்கினால், அது குழவிக்கூட்டைக் கலைத்தது போலாகிவிடும் என்று அதைத் தவிர்த்துவருகிறார் பிரதமர்; எனவே, அமைச்சரவையில் மாற்றத்தைச் செய்வது அதைவிடச் சிக்கலானதாகிவிடும்.

இருந்தபோதிலும், வெளியுறவுத் துறைக்குப் புதிய அமைச்சரை நியமிக்கும் விஷயத்தைக் காலவரையின்றி மன்மோகன் சிங் தள்ளிப்போட முடியாது. வெளியுறவுத் துறை அமைச்சரின் பணிகளை பிரதமர் கவனித்துக் கொண்டிருக்க முடியாது; இந்தியாவுக்கு வருகை தருகின்ற பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை மன்மோகன் சந்தித்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், ஒரு நாட்டுக்கு வரும் வெளியுறவுத் துறை அமைச்சரை அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்தான் சந்திக்க வேண்டும் என்பது அரச நடைமுறையாகும். எனவே, இந்தியாவுக்கு வரக்கூடிய வெளிநாட்டு வெளியுறவு அமைச்சர் எவரும், இணை அமைச்சரைச் சந்திப்பதை விரும்ப மாட்டார்கள்.

இராக்கிய எண்ணெய்க்கு உணவுத் திட்ட ஊழல் தொடர்பாக விசாரித்த விசாரணைக் குழு, “நட்வர் சிங் குற்றமற்றவர்‘ என்று அறிவிக்கும் பட்சத்தில், அப் பொறுப்புக்கு அவர் மீண்டும் நியமிக்கப்படுவார் என்பதை அவருக்குத் தெரிவித்து, அவரை அமைதிப்படுத்தும் நோக்கத்தில்தான், முதலில் அப் பதவி நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிலைமைகள் வேறு விதமாக அமைந்துவிட்டன. நேரு, இந்திரா காந்தி, நரசிம்ம ராவ் போன்றவர்கள் நீண்ட காலத்துக்கு வெளியுறவுத் துறைப் பொறுப்பையும் சேர்த்துக் கவனித்து வந்திருக்கின்றனர். ஆனால், அக் காலச் சூழல் வேறு. இன்று, வெளியுறவுக் கொள்கையானது மிகவும் சிக்கலானதாகிவிட்டது; அப் பொறுப்பைக் கவனிக்கத் தனியாக ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுவும், பிராந்திய வல்லரசாக இந்தியா உருவெடுத்துவரும் நிலையில் அதற்கான அவசியம் மேலும் அதிகரித்திருக்கிறது.

தமிழில்: லியோ ரொட்ரிகோ

Posted in Analysis, Cabinet, Dinamani, External Affairs, India, Kamal Nath, Kapil Sibal, Karan Singh, Leo Rodrigo, Manmohan Singh, Minsiter, Minstry, NAM, Neeraja Chowdhry, Op-Ed, Pa Chidambaram, Pakistan, Pranab Mukherjee, Prime Minister, SM Krishna, Sri lanka, Tamil | Leave a Comment »