Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Experiences’ Category

RAW book row – CBI Raids: Violation of Official Secrets Act

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2007

நியாயமில்லை, நியாயமேயில்லை…!

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி குறிப்பிட்ட காலவரம்புக்குப் பிறகு தனது அனுபவங்களையும் பதவிக்காலத்தில் சந்தித்த பிரச்னைகள் மற்றும் சம்பவங்களையும் புத்தகமாக எழுதலாமா கூடாதா? எழுதக் கூடாது என்று தனது துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு ( Research and Analysis Wing).  இந்திய அரசின் வெளியுறவு ரகசியப் புலனாய்வுத் துறைதான் “ரா’ ( RAW) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் பிரிவு.

இப்படியோர் உத்தரவு பிறப்பித்ததற்குக் காரணம், இந்தப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வி.கே. சிங் என்பவர் தனது பணிக்கால அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டதுதான். “ரா’ அமைப்பில் புரையோடிப் போயிருக்கும் ஊழலையும், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகங்களையும், ரகசியக் கண்காணிப்புக்காக அரசால் ஒதுக்கப்படும் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் தனது புத்தகத்தில் அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்ததுதான் நமது புலனாய்வுத் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

புலனாய்வுத் துறையைப் பற்றிய விமர்சனங்கள் எழக்கூடாது என்பதாலும் அதைப் பற்றி பேசினாலோ கேள்வி கேட்டாலோ அது தேசத் துரோகம் என்பதுபோலக் கருதப்படுவதாலும் அதிகாரிகள் எந்தவிதக் கேள்வியும் கேட்கப்படாமல் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர் என்கிற அந்த அதிகாரியின் குற்றச்சாட்டு பெரிய சர்ச்சையை எழுப்பியதோ இல்லையோ புலனாய்வுத் துறையினரிடம் கோபத்தை ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை. மத்திய புலனாய்வுத் துறை ( C.B.I) யின் மூலம், அந்த ஓய்வுபெற்ற அதிகாரி மற்றும் அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர் ஆகிய இருவரின் வீடுகளும் சோதனையிடப்பட்டன.

அந்தப் புத்தகத்தில் இரண்டு முக்கியமான பிரச்னைகளை எழுப்பி இருக்கிறார் மேஜர் ஜெனரல் சிங். முதலாவது, “ரா’ அமைப்பு, ஆட்சியாளர்களால் எதிர்க்கட்சியினருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பது. மக்கள் வரிப்பணம் புலனாய்வு என்கிற பெயரில் கணக்கு வழக்கே இல்லாமல் செலவழிக்கப்படுவதால், “ரா’ அமைப்பின் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் செலவுகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் சிங் ஆலோசனை கூறியிருக்கிறார்.

மேஜர் ஜெனரல் கூறியிருக்கும் சம்பவங்களும் குற்றச்சாட்டுகளும் தவறு, உண்மைக்குப் புறம்பானவை என்றால், அவர் மீது கிரிமினல் சட்டப்படி வழக்குத் தொடர்வதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர் எழுப்பி இருக்கும் பிரச்னைகளும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்களும், அரசு ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார் என்கிற வரம்பிற்குள் உட்படாது. இந்த நிலையில், அவர் மீது தொடுக்கப்பட்ட மத்திய புலனாய்வுத் துறை சோதனை, அந்தத் துறை எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், “ரா’ அமைப்பிலுள்ள அதிகாரிகள் எந்த அளவுக்குத் தங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதையும்தான் காட்டுகிறது.

இந்தப் பிரச்னையில் இன்னொரு விஷயமும் அடங்கும். 1923-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் அடிமை இந்தியாவை அடக்கியாள உருவாக்கப்பட்ட அரசின் ரகசியக் காப்புச் சட்டம் ( Official Secrets Act) இப்போதும் தொடர வேண்டிய அவசியம்தான் என்ன? எந்தவிதக் கேள்வியும் இல்லாமல், சாட்சிகள் இல்லாமல், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் தேசநலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறிக் கைது செய்து சிறையிலடைக்கும் வெள்ளையர் கால அரசின் ரகசியக் காப்புச் சட்டம் இப்போதும் தொடர்கிறது என்பதிலிருந்து என்ன தெரிகிறது?

இந்தியக் குடியரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்திபடைத்த குடிமகன், அடக்குமுறை ஏகாதிபத்திய ஆட்சிக் கால சட்டங்கள் காரணமாக சுதந்திரமாக நடமாட முடியாது என்றால் அது நியாயமில்லை. எந்தவொரு துறையும் மக்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருப்பது என்பது நியாயமே இல்லை.

Posted in Abuses, Airforce, Army, Author, Books, CBI, Center, Contempt, Experiences, FBI, General, Govt, Intelligence, leak, Major, Military, Navy, Non-fiction, Officer, Oppression, OSA, Politics, Power, Publisher, Raids, RAW, Secrets, Singh, Violation, Writer, Writing | 1 Comment »

Experiences with Congress Leader Kamarajar – Kumari Ananthan

Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2007

நம் இதயத் தலைவர்

குமரி அனந்தன்
(கட்டுரையாளர் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்)

அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் வேலைக்குச் சேர்ந்தால் கட்சிப் பணிகளுக்குச் செல்ல முடியாதென்பதால், மதுரையில் தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து தமிழ்த்துறை தலைவராகப் பணி புரிந்தேன்.

மதுரையிலும், சுற்றியிருக்கின்ற மாவட்டங்களிலும் சொற்பொழிவிற்குச் செல்வேன். மாலையில் வகுப்புகள் முடிந்த உடன், பேருந்தில் ராமநாதபுரம் சென்றால், கூட்டம் பேசி முடிப்பதற்குள் கடைசிப் பேருந்து போய்விடும். மதுரைக்கு லாரியில் திரும்பி காலை வகுப்புகளுக்குச் சென்று வருவேன். இதனால் மதுரை அன்பர்களிடம் நல்ல பெயர் வாங்கியிருந்தேன்.

அன்று மதுரை மொட்டைப் பிள்ளையார் கோயிலுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டம், கலந்து கொள்வது யாரென்றால் காமராஜ்! ஈ.வே.கி. சம்பத்தும் அவரோடு சுற்றுப் பயணத்திலிருந்தார். காமராஜ் இந்தக் கூட்டத்திலே பேசுவதாக ஏற்பாடு.

கூட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக தலைவர் வரும் வரை என்னைப் பேசச் சொன்னார்கள். பேசிக் கொண்டிருந்தேன். அதோ! தலைவரின் கார் வந்துவிட்டது. மேடையருகில் காரிலிருந்து இறங்கிய தலைவரைக் கண்டதும் “”எனவே பெரியோர்களே”… என்று என்னுடைய பேச்சை நிறைவு செய்ய எண்ணி முத்தாய்ப்பு வைப்பதற்கு முனைந்தேன்.

வந்து மேடையில் அமர்ந்திருந்த தலைவர், முதுகில் ஒரு தட்டு தட்டி “”பேசுன்னேன்” என்றார். அந்த உற்சாகத்திலேயே நெஞ்சிலிருந்த சொற்கள் வேகமாக வெளிவந்தன. மற்ற தலைவர்கள் பேசிய பின் பெருந்தலைவர் பேச கூட்டம் நிறைவடைந்தது. ஓரிரு நாள்களில் என்னை சொல்லின் செல்வர் சம்பத் தொலைபேசியில் அழைத்து “”உன்னை ஐயா சென்னைக்கு வந்து அவரைப் பார்க்கச் சொன்னார்” என்றார்.

நான் சென்னைக்குச் சென்றதும் திருமலைப்பிள்ளை வீதியிலிருந்த ஐயா வீட்டிற்குச் சென்றேன்.

ஐயா “”உன்னை கட்சி வேலைக்கு எடுத்துக்கலாமின்னு நினைக்கிறேன். ஆனா உனக்கு குடும்பம் இருக்கு… இப்ப வேலை பார்த்துக்கிட்டிருக்க! சம்பளம் வரும்ல. அதனால குடும்பத்தைப் பார்த்துக்கிட்டே காங்கிரசில பணம் கிணம் எதுவும் வராதுன்னேன். உங்க மாமனார் பங்களா நுங்கம்பாக்கத்திலே இருக்கே. அத நான் தான் திறந்து வச்சேன். அவர் வசதியானவர்… அவர் வந்து உன் குடும்பத்தைப் பார்த்துக்கிடுவேன்னு சொல்லச் சொல்லுன்னேன்”…என்றார்.

இத்தகவலைச் சொன்னவுடன், உடனேயே வந்து தலைவரிடம் தன் சம்மதத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார், என் மாமனார் சங்கு கணேசன்.

அப்போதும் தலைவர் காமராஜ் கட்சியில் எனக்கு என்ன பணி என்று சொல்லவில்லை.

“”சத்தியமூர்த்தி பவன் போய் ராவன்னா கினாவை பாருன்னேன்” என்று கூறினார்.

மறுநாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ரா. கிருஷ்ணசாமி நாயுடுவைப் போய் பார்த்தேன்.

அவர் “ஐயா, உன்னைத் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக நியமிக்கச் சொல்லி உள்ளார்’ என்று தெரிவித்தார்.

இந்த நியமனத்தை முறைப்படி செய்ய வேண்டியவர் தான் அதைச் சொல்ல வேண்டுமென்று நினைத்தார் பெருந்தலைவர் காமராஜ்.

அப்போது சென்னை மாநகருக்கு 100 வட்டங்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை வட்டம்தோறும் சென்று சத்திய சோதனை வகுப்பு நடத்தி, சுதந்திரப் போராட்ட வரலாற்றை இளைஞர்களுக்குச் சொல்லுவோம்.

இதை அறிந்த தலைவர், எனக்கென்று ங.ந.ய. 9835 என்ற எண் உடைய பியட் காரை ஒதுக்கிக் கொடுக்கச் சொன்னார். அதற்கு ஓட்டுநர் ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸôல் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டார்.

ஒருநாள் வீட்டிலிருந்து சத்தியமூர்த்தி பவனுக்குக் கொண்டு இறக்கி விட்டு எதற்கோ வெளியே சென்று விட்டார் ஓட்டுநர்.

உள்ளே நிர்வாகியாக இருந்த ராமண்ணா “”அனந்தன்! உன்னை ஐயா உடனே வரச் சொன்னார்” என்றார்.

வெளியே ஓட்டுநர் இல்லை! வரட்டும் என்று காத்திருந்தேன்.

உள் அறையில் ஏதோ வேலை பார்த்துவிட்டு அப்போது வெளியே வந்த ராமண்ணா, என்ன…? நீ இன்னும் போகவில்லையா. ஐயா சீக்கிரமா வரச் சொன்னாரப்பா… என்றார்.

உடனே நான் வெளியே போனேன். அப்போதும் ஓட்டுநர் அங்கே இல்லை. நானே காரை எடுத்துக் கொண்டு ஐயா வீட்டிற்குச் சென்றேன்.

நான் முன் வாசலில் செல்கின்ற நேரம் ஐயா எதற்காகவோ அங்கே வந்தார்.

ஐயாவைக் கண்டதும் காரை நிறுத்திவிட்டு இறங்கி நான் வேகமாக ஐயாவை நோக்கிச் சென்றேன். ஐயா, வியப்புடன், “”ஏம்பா! உனக்கு கார் ஓட்டத் தெரியுமான்னேன்” என்றார்.

“”ஆமா! ஐயா!”

பிறகு எதற்காகக் கட்சி சம்பளத்திலே ஒரு டிரைவர்னேன் என்றார்.

அன்றிலிருந்து நானே ஓட்ட ஆரம்பித்தேன்!

ஒரு நாள் வழக்கம்போல் ஐயா வீட்டிற்குச் சென்றேன்.

“”ஆமா நீ நல்லா பேசறதா எல்லாரும் சொல்றாங்க, நீ தான் பேசுவியே! நல்லாத்தான் இருக்கும். கூட்டத்திலே பேசுறதுக்கு காசு தாறாங்களாமில்ல… எவ்வளவு தாறாங்க?”

“”ஐயா! நூறு ரூபாய் தருவாங்க!”

“”ஆமா அப்படின்னா கட்சியிலே பெட்ரோலுக்கு ஏன் பணம் வாங்கிறீங்கன்னே! நீயே போட்டுக்கன்னேன்” என்றார்.

கட்சிப்பணம் செலவாகக் கூடாது என்பதில் என்ன அக்கறை!

அப்போது பெட்ரோல் விலையோ காலனுக்கு (5 லிட்டர்) 3 ரூபாய் ஐம்பத்தாறு பைசா தான். 1965 ஆண்டில் அது தானே விலை.

காலம் பல கடந்தது. பல கூட்டங்கள், பல ஊர்வலங்கள், பல மாநாடுகள் என்று பல்வேறு கட்சிப் பணிகளில் உழைத்ததோடு தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரிகளுக்குச் சென்று இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தேன்.

தமிழ்நாடு காங்கிரஸிலிருந்த பல தலைவர்களில், ஒரு தலைவர்மட்டும் நான் என்ன தான் உழைத்தாலும் அதை அங்கீகாரம் செய்யவே மாட்டார்.

நானும் பொறுத்துப்பொறுத்துப் பார்த்து ஒரு நாள் ஐயாவிடம், இதனால் ஏற்பட்ட மனக்குறையைத் தயங்கித் தயங்கி வெளியிட்டேன்.

ஐயா சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

பின் என்னை உற்றுப் பார்த்தார். “”உட்காருன்னேன்” என்றார் நின்று கொண்டிருந்த நான் அமர்ந்தேன்.

“”உனக்குப் பக்கத்து ஊர்ணு வச்சுக்க. அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம படுத்திருக்காங்க. நீ மருந்து வாங்கிட்டு போகணும். நீ நடந்து போற பாதையிலே ஒரு பாறை விழுந்து கிடக்குண்ணு வச்சுக்க… என்ன பண்ணுவ!

“”பாறையை அசைக்க முடியாது. மருந்து கொண்டு போயாகணும்…

அம்மாவுக்கல்லவா மருந்து!”

“”யாராவது பாறையை எடுத்துப் போடட்டும், போகலாம்ணு அங்கேயே நிப்பியா?…” மருந்து கொண்டு போகணுமில்ல… என்ன செய்வேன்னேன்…?

பாறையைச் சுற்றிப் போவேன் ஐயா!

“”இப்பவும் சுற்றிகிட்டு போ! தாய்க்கு மருந்து கொண்டு போறது போல கட்சி வேலைன்னேன்…”

“”பாறை கிடக்குதா?

சுற்றிப் போன்னேன்… போறத நிறுத்தாதேன்னேன்.

இந்தச் சொற்கள் அவர் இதயத்திலிருந்து வந்தவை…

என் இதயத்தைத் தொட்டன.

அவர் இமயத் தலைவர் “”நம் இதயத் தலைவர்”!

Posted in Biosketch, Congress, Experiences, Faces, Kamaraj, kamarajar, Kamraj, Kumari Ananthan, Leaders, people | 4 Comments »

London Diary – London Eye: Eraa Murugan

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

லண்டன் டைரி: “லண்டன் ஐ!’

இரா. முருகன்

தேம்ஸ் நதிக்கரை எம்பாங்க்மெண்ட் படித்துறையில் படகு காத்திருக்கிறது. உள்ளே நுழைந்தபோது, கீழ்த்தட்டில் ஒரு கூட்டம் முந்திய நாள் வெஸ்ட்ஹாம் மைதானத்தில் நடந்த கால்பந்து விளையாட்டைப் பற்றி உரக்க விவாதிக்கும் இரைச்சல். மத்திய வயசு ஆண்கள். எல்லோர் கையிலும் பியர் குவளை. எனக்கு முன்னால் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு கையில் ஜபமாலையோடு நடந்து கொண்டிருந்த கன்னியாஸ்திரிகள் ஒரு வினாடி தயங்கி, கப்பலின் மேல்தட்டுக்குப் படியேறுகிறார்கள். நானும்தான். பெரிய பறவைபோல் இரண்டு தடவை ஒலியெழுப்பிவிட்டுப் படகு நதியில் மெல்ல நகர்கிறது.

கரையில் பிக்பென் கடியாரக் கோபுரத்தைக் கழுத்து வலிக்கப் பார்க்கும் சகபயணிகளைக் கவனிக்கிறேன். ஜெர்மானிய டூரிஸ்ட்டுகள். அவர்கள் மொழியில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வழிகாட்டி. ரொம்பக் கடுமையாகக் காதில் விழுகிற மொழி அது. “”உன்னைக் காதலிக்கிறேன்” என்று காதலியிடம் அன்போடு சொல்வது கூட ஜெர்மன் பாஷையில்,

“”நமூனாவை மூணு காப்பி எடுத்து ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, தாசில்தாரிடம் அட்டஸ்டேஷன் வாங்கி ஒரு வாரத்துக்குள் அனுப்பிவைக்காவிட்டால், அபராதம் செலுத்தவேண்டிவரும்”

என்று அரசாங்க அறிவிப்பைக் கேட்கிறமாதிரி இருக்கும். முன்வரிசை ஜெர்மன் யுவதி காதலன் காதில் ஏதோ சொல்ல அவன் ஆற்றில் குதிப்பதுபோல் போக்குக்காட்டுகிறான். ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கிவரச் சொல்லியிருப்பாள்.

கன்னியாஸ்திரீகளின் கைகள் ஜபமாலையை நிதானமாக உருட்டிக் கொண்டிருக்க, நதிக்கரையில் வலதுபுறம் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடம் கடந்துபோகிறது. பக்கத்தில்தான் அந்தக்கால லண்டன் கார்ப்பரேஷன் என்ற கவுண்டி ஹால் இருந்ததாம். கவுன்சிலர்களின் சத்தம் தாங்காமலோ என்னமோ, அதை இடித்துவிட்டு அங்கே அடுக்குமாடிக் குடியிருப்பையும், கீழ்த்தளத்தில் மீன் காட்சி சாலையையும் கட்டிவிட்டார்கள். மீன்கள் சத்தம் எழுப்பாமல் வாயைத் திறந்துகொண்டிருக்க, கவுன்சிலர்கள் வேறு இடத்தில் சண்டையைத் தொடர்கிறார்கள்.

அடுத்து வருவது லண்டன் ஐ. இது “மெட்ராஸ் ஐ’ போல கண் சிவந்து ரெண்டு நாள் காஷுவல் லீவு போட்டுவிட்டு கறுப்புக் கண்ணாடியோடு வீட்டில் உட்கார்ந்து கேபிள் டிவி பார்க்கிற சமாச்சாரமில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆண்டு 2000 பிறந்து, இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடங்கியதைக் கொண்டாட எழுப்பப்பட்டது “லண்டன் ஐ’. பொருட்காட்சி ஜயண்ட் வீலுக்குச் சத்துணவு கொடுத்து இன்னும் முப்பது மடங்கு பெரிதாக்கப்பட்டதுபோல சுழலும் இந்த “லண்டன் கண்’ சக்கரத்தில் ஏறி நின்றால் முழு லண்டனையும் சுற்றுப்புறத்தையும் தெளிவாகப் பார்க்கலாம். எனக்கென்னமோ, இந்தச் சக்கரம் லண்டனின் பாரம்பரியம் மிக்க சரித்திரத்தோடு ஒட்டாமல் தனியாக நிற்பதுபோல் தோன்றுகிறது. யார் கண்டது? இன்னும் இருநூறு வருடத்தில், இதுவும் புராதனப் பெருமையோடு சுழலலாம்.

“”கிளியோபாத்ரா மூக்கு”. ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்த ஒரு கன்னியாஸ்திரி சொல்கிறார். உலகப் பேரழகி கிளியோபாத்ராவும் அவளுடைய மூக்கும் திடீரென்று இவருக்கு நினைவுவரக் காரணம் என்னவாக இருக்கும்? என்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறேன். அவர் கரையில் நீட்டி நிமிர்ந்து நிற்கும் ஒரு கருங்கல் தூணை மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார். மூவாயிரத்து ஐந்நூறு வருடம் முன்னால் எகிப்தில் உருவாக்கிய இந்த நீளமூக்குத் தூணை, வெறும் இருநூறு வருடம் முன்னால் எகிப்திய மக்கள் இங்கிலாந்துக்கு அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்கள். ஈராக் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று அந்தக் காலத்திலேயே பிரிட்டனிடம் சூசகமாகச் சொல்லியிருப்பார்களோ என்னமோ.

சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் கன்னியாஸ்திரிகள் நெஞ்சில் சிலுவை வரைந்துகொள்கிறார்கள். நதிக்கரையை ஒட்டி கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது செயின்ட் பால் தேவாலயம். 1666-ம் ஆண்டு லண்டன் மாநகரத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் பழைய ஆலயம் சேதமடைய, இரண்டாம் சார்லஸ் மன்னன் கட்டுவித்தது. பக்கத்திலேயே ஆங்கில நாடக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்புகளை அரங்கேற்றிய க்ளோப் தியேட்டர். அதுவும் பழைய வனப்பு சேதமடையாமல் புத்தம் புதியதாக எழுந்து நிற்கிறது. வெகு அருகில் டேட் ஓவிய, சிற்பக் கூடம். நவீனப் படைப்புகளுக்கான அரங்கம் இது. புதுமையில் எனக்கு விருப்பம் உண்டுதான். ஆனாலும் இந்த டேட் காலரியில் ரொம்பவே புதுமையாக சில மாதங்கள் முன்னால் இடம் பெற்ற படைப்பு -அழுக்கான அசல் கழிப்பறைப் பீங்கான் , உபயோகித்த சுவட்டோடு சிறுநீர் கழிக்கும் கோப்பை, தகர டப்பாவில் மனிதக் கழிவு, கூடவே, வாடை எல்லாம் போக, எதிரே ஒரு பெரிய மின்விசிறியின் ஓவியம்.

உலகின் பழைய மதுக்கடையைக் கடந்து படகு முன்னே போய்க்கொண்டிருக்கிறது. நங்கூர மது அரங்கம் என்ற இந்த ஆங்கர் டேவர்னில் நங்கூரமிட்டு சுதி ஏற்றிக்கொண்டுதான் ஷேக்ஸ்பியர் சாகாவரம் பெற்ற நாடகங்களை எழுதியிருக்கிறார். இங்கே கோப்பையும் கையுமாகக் குடியிருந்துதான் இலக்கிய மேதை சாம்யுவெல் ஜான்சன் ஆங்கிலப் பேரகராதியைத் தொகுத்திருக்கிறார். கொஞ்சம் படகை நிறுத்தினால் நானும் இறங்கிப்போய் ஒரு காப்பியம் எழுத முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது. தமிழ் இலக்கியத்துக்கு அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் படகு நிற்காமல் விரைகிறது.

டவர் பாலம் பக்கம் பெரிய கப்பல் ஒன்று ஓய்வெடுத்துக்கொண்டு நிற்கிறது. எச்.எம்.எஸ். பெல்ஃபாஸ்ட் என்ற போர்க் கப்பல் அது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் இங்கிலாந்து கடற்படையில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, ஜெர்மனியை முறியடித்த 1944 ஜூன் மாத இறுதிக்கட்டப் போரில் இந்தக் கப்பலுக்கும் பெரும் பங்கு உண்டு. தற்போது ரிடையராகி தேம்ஸ் நதியில் நங்கூரம் பாய்ச்சி நின்றாலும், இங்கிலாந்து அரசுக்கு இந்தக் கப்பலால் அதிக வருமானமே தவிர ஒரு காசு பென்ஷன் செலவு கிடையாது. கிட்டத்தட்ட ஆயிரம் போர் வீரர்கள் தங்கிப் போரிட்ட கப்பல் தற்போது யுத்தகால அருங்காட்சி சாலையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. “இரண்டாம் உலக யுத்தம் முடிந்தது -இங்கிலாந்து வெற்றி’ என்று இன்றைக்குக் காலையில்தான் பத்திரிகையில் படித்த பரபரப்போடு ஒரு பெரிய கூட்டம் கப்பலுக்குள் விரைந்து ஏறிப் போய்க்கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. “”நெசம்தான்” என்று ஆமோதித்தபடி இன்னொரு கூட்டம் வெளியே வந்துகொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டும் மூன்று லட்சம் பேர் இப்படிக் காசு கொடுத்து கப்பலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, உள்ளே ஓட்டலில் சூடாக ஒரு காப்பி குடித்துவிட்டு இறங்கியதாகத் தகவல்.

“”இது கக்கோல்ட் முனை”. ஏதோ உலக ரெக்கார்டை ஏற்படுத்தப் போவதுபோல் தொடர்ந்து பியர் குடித்தபடி கீழ்த்தளத்திலிருந்து மேலே வந்த கூட்டத்திலிருந்து ஒரு குரல். “”சொல்பேச்சு கேட்காத பெண்டாட்டியை வில்லியம் கக்கோல்ட் இங்கேயிருந்துதான் பிடிச்சுத் தள்ளிவிட்டானாம். திரும்பிப் பார்த்தால், பெரிய கும்பல். என் வீட்டுக்காரியையும் தள்ளி விட்டுடுய்யான்னு அவனவன் க்யூவிலே நின்னு கெஞ்சறான். நோ ப்ராப்ளம்னு ஒருத்தருக்கு ஒரு பென்ஸ் காசு கூலி வாங்கிப் போட்டுக்கிட்டு அப்புறம் அவன் முழுநேரம் இதே உத்தியோகம்தான் பார்த்தானாம்”.

“”தனியாளாக ரொம்பக் கஷ்டப்பட்டு உழைச்சிருப்பான் பாவம்”. கையில் பிடித்த பியர் தரையில் சிந்த, சிரிப்புச் சத்தம் உயர்கிறது. இவர்களைப் பிடித்துத் தேம்ஸ் நதியில் தள்ளிவிட்டால் என்ன என்று யோசித்தபடி டவர் பிரிட்ஜ் படித்துறையில் இறங்குகிறேன்.

Posted in Cruise, England, Era Murugan, Era Murukan, Experiences, German Language, Ira Murugan, Ira Murukan, London Diary, Raayar kaapi klub, Raayarkaapiklub, Rayar kapi klub, Rayarkaapiklub, RKK, St Paul Church, Thames, Tour, Tourists, UK | Leave a Comment »

London Diary: Ira Murugan – Indian Food, Desis in UK

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2006

லண்டன் டைரி: ஈஸ்ட் ஹாம் கடைவீதியும்… மாம்பலம் ரங்கநாதன் தெருவும்!

இரா. முருகன்

சுரங்கப்பாதை கும்மிருட்டு வழியாக இரண்டு ஸ்டேஷன், அப்புறம் மேலே தரைக்கு வந்து, வெய்யில் காய்ந்து கொண்டிருக்கிற அடுத்த ஸ்டேஷன், திரும்ப சுரங்கம் என்று குஷியாகக் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு லண்டன் டிஸ்ட்ரிக்ட் லைனில் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரயில் பெட்டியில் நான். மற்றும், போன ஸ்டேஷனில் குழந்தையோடு ஏறிய ஒரு பெண்.

குழந்தையைத் தோளில் சார்த்தியபடி, அந்தப் பெண் கையில் காகிதக் காப்பிக் கோப்பையோடு என்னை நோக்கிப் புன்னகையுடன் நடந்து வருகிறாள். பக்கத்தில் வந்து கோப்பையைக் குலுக்கியபடி, “”சில்லறை இருந்தா போடு, ப்ளீஸ்” என்கிறாள். போலந்து தேசத்திலிருந்து வந்திருக்கிறாளாம். சிநேகிதன் கைவிட்டுவிட்டு ஒரு சீனப் பெண்ணோடு போய்விட்டானாம். தடுமாறும் ஆங்கிலத்தில் அவள் சொல்லும்போது குழந்தை விழித்துக்கொண்டு அழ ஆரம்பிக்கிறது. நான் சட்டைப் பையில் தேடிப் பார்த்து ஒரு பவுண்ட் நாணயத்தைக் குவளையில் போடுகிறேன். அடுத்த ஸ்டேஷன் வரும்போது குவளை கைப்பையில் மறைய, குழந்தையைச் சமாதானம் செய்தபடி அவள் இறங்குகிறாள்.

ஈஸ்ட் ஹாம் ரயில் நிலையத்துக்கு வெளியே வருகிறேன். லண்டனின் புறநகர்ப் பகுதி இது. ஐம்பது அறுபது வருடம் முன்னால் கிட்டத்தட்ட கிராமம் தான். அப்போது வெறும் ஆறாயிரம் பேர்தான் மொத்த ஜனத்தொகையே. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஜெர்மன்காரர்கள் வெறியோடு இங்கே குண்டு வீசித் தாக்கி விளைவித்த சேதம் கணிசமானது. ஆனாலும் இப்போதைய ஈஸ்ட் ஹாமில் ஜனத்தொகை பழையதைவிடக் கிட்டத்தட்டப் பத்து மடங்கு அதிகம். இதில் பெரும்பகுதி சுறுசுறுப்பான தமிழர்கள்.

ஈஸ்ட் ஹாம் கடைவீதி கொஞ்சம் விஸ்தாரமான, அதிகம் கூட்டமில்லாத மாம்பலம் ரங்கநாதன் தெரு போல் விரிந்து கிடக்கிறது. தமிழில் பெயர் எழுதிய ஜவுளிக் கடை வாசல் கண்ணாடிக் கூண்டில் சிக்கென்று புடவை கட்டிய விளம்பரப் பொம்மைப் பெண் கை கூப்பித் திரும்பத் திரும்ப வணங்குகிறாள். அசல் தங்க நகை (சேதாரம், செய்கூலி என்ன ஆச்சு?) விற்கிற கடை. சீடை முறுக்கு, சாம்பார்ப்பொடி, ரசப்பொடிக் கடை. தெருவிலிருந்து கொஞ்சம் விலகி மகாலட்சுமி அம்மன் கோயில். அங்கே இன்றைக்கு ராத்திரி “ருக்மிணி கல்யாணம்’ பக்திப் பேருரை என்று அறிவிக்கும் நோட்டீசு ஒட்டிய சுவரில் பக்கத்திலேயே பாப் மியூசிக் நிகழ்ச்சிக்கான சுவரொட்டி.

வீடியோ, ஆடியோ காசெட் விற்கிற கடையில் “அவளுக்கென்ன அம்பாசமுத்திரம் ஓட்டல் அல்வா’ என்று என்னத்துக்காகவோ ஆக்ரோஷமும் அவசரமுமாக ஒலிக்கிற சினிமாப் பாட்டின் அடுத்த வரியை எதிர்பார்த்தபடி பத்திரிகைக் கடையில் நுழைகிறேன். கொஞ்சம் ஆறிப்போன சரக்குகள். அதாவது போன வாரத்திய தமிழ் வாரப் பத்திரிகைகள், முந்தா நாளைய சென்னைப் பதிப்பு, தினசரிகள். ஆச்சரியகரமாக, இலக்கியச் சிற்றிதழ் ஒன்று. “”மூணு பவுண்ட் சார்”. கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ரூபாய். சென்னையில் இருக்கும்போது அந்தப் பத்திரிகை ஆசிரியர் “ஆண்டு சந்தாவைப் புதுப்பிக்க நூற்றிருபது ரூபாய் அனுப்பவும்’ என்று அவ்வப்போது அனுப்பிய தபால் அட்டைகளைக் கண்டுகொள்ளாமல் விட்ட குற்றத்துக்குத் தண்டனையாக மூன்று பவுண்ட் கொடுத்து, ஓரத்தில் பழுப்பேறிய ஒரு பிரதியை வாங்குகிறேன். “”பஞ்சாங்கம் வேணுமா சார்?”. எடுத்துப் புரட்டிப் பார்க்கிறேன். லண்டன் அட்சரேகை தீர்க்கரேகைக்குப் பிரத்தியேகமான திருக்கணிதப் பஞ்சாங்கம். இலங்கை மட்டுவில் பகுதியில் கணித்து வெளியிடப்பட்டது. ஈழத் தமிழர்களை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ரங்கநாதன் தெரு பிரமையை இன்னும் கொஞ்சம் அசலாக்குகிறதுபோல, பக்கத்திலேயே “சரவண பவன்’ ஓட்டல். லண்டன் கிளை. ஜவுளிக் கடையில் ஷிபான் சாரி. மேட்சிங் பிளவுஸ் பீஸ், மல்வேட்டி வாங்கிவிட்டு, நகைக்கடையில் அட்டிகை விலை விசாரித்துவிட்டு, பாத்திரச் சீட்டுக் கட்டிய பிறகு, சரவண பவனில் படியேறி மசால் தோசைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிற ஒரு கூட்டம் உள்ளே நிரம்பியிருக்கும் என்பது நிச்சயம். அங்கே மட்டுமில்லாமல், கொஞ்ச தூரத்தில் “சென்னை தோசா’, இன்னும் தெருவோடு நடந்தால் இரண்டு சாப்பாட்டுக் கடைகள் என்று ஈஸ்ட் ஹாம் முழுக்க சாம்பார் வாடை கமகமக்கிறது.

லண்டனில் இந்தியச் சாப்பாடுக்கு நிறைய வரவேற்பு. “டாமரிண்ட்’, “இம்லி’ என்று பெயரிலேயே புளி அடைத்த இந்திய ஓட்டல்கள் மதிய நேரங்களில் லண்டன் அலுவலகங்களுக்குச் சுடச்சுட டிபன் பாக்ஸில் சாப்பாடு அனுப்பி வைக்கிற பிசினஸ் சக்கைப்போடு போடுகிறதாம். இன்டர்நெட்டில் தோசை ஆர்டர் செய்தால் வீடு தேடிவந்து டெலிவரி செய்ய தோசைக்கடைக்காரர்கள் ஏற்பாடு செய்வதாகக் கேள்வி.

இனிப்பு, இரண்டு இட்லி, பொங்கல், தோசை, வடை, காப்பி எல்லாம் சேர்த்து காலைச் சாப்பாடு ஐந்து பவுண்ட் மட்டும் என்று தகவல் தரும் ஓட்டலில் நுழைகிறேன். கேபிள் டிவி தமிழ் திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளில் மாறிமாறி விவேக்கும் வடிவேலுவும். நடுவில் ஐந்து நிமிடத்துக்கு பழைய படத்தில் செந்தில் கவுண்டமணியிடம் உதை வாங்கிவிட்டு ஓடுகிறார். “கேபிள் டிவி சந்தாவைப் புதுப்பித்தால் எம்.பி த்ரீ பிளேயர் இலவசம்’ என்ற அறிவிப்பு திரையின் கீழே ஓடியபடி இருக்கிறது. ஓட்டல் கல்லாவில் விநாயகர் படம், லட்சுமி படம். தமிழ் நாட்காட்டி, ஊதுபத்திப் புகை. சாப்பிட்டவர்கள் பணத்தோடு கொடுத்துவிட்டுப் போகிற பில்லைக் குத்தி வைக்கிற கழுமரம் மாதிரியான இரும்புக் கம்பி ஒன்று இருந்தால் அபாரமாக இருக்கும் எப்படி மறந்தார்கள் என்று தெரியவில்லை.

“”டாடி, எதுக்கு இங்கே வந்து சாப்பிடணும்னு அடம் பிடிக்கறே? வீட்டிலே இருந்து ஃபோன் செஞ்சா, கொண்டு வந்து கொடுத்திட மாட்டாங்களா?” மேசை மேசையாகக் கையில் எடுத்துச் சாப்பிட்டபடி இருக்கும் கூட்டத்தைப் பார்த்தபடி லேசான முகச் சுளிப்போடு அடுத்த டேபிளில் ஒரு சிறுமி முனகுகிறாள். தோசையைக் கத்தியால் குத்தி முள் கரண்டியால் பிய்த்து சாம்பாரில் தோய்க்க முயன்று தோற்றுப் போனவள், அப்பா வற்புறுத்தியபடிக்கு அப்புறம் கையால் சாப்பிட ஆரம்பிக்கிறாள்.

“”ரேபு சிரஞ்சீவி பிலிம். வெங்கடராவ் டிவிடி இச்சாரு”. எதிர் டேபிள் ஆந்திர இளைஞர்கள் முகத்தில் தீர்க்கமான மகிழ்ச்சி. அது இட்லியைத் தொட்டுக்கொண்டு கார சட்னி சாப்பிடுகிற சந்தோஷமா, ரகசியமா டிவிடி கிடைத்து லேடஸ்ட் தெலுங்குப் படம் பார்க்கப் போகும் மகிழ்ச்சியா என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

“”எதுக்குய்யா பாங்குலே போய்ப் பணம் அனுப்பறே. நான் சொல்ற இடத்துலே கட்டு. கம்மி சார்ஜ். உத்தரவாதமா, நாளைக்கு சாயந்திரம் மண்ணடியிலேருந்து உங்க வீட்டுக்குப் போய்ச் சேந்திடும்.” அடுத்த மேஜையில் டிபன் சாப்பிட்டபடி ஒருத்தர் சிநேகிதரிடம் அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறார். “ஹவாலா வேணாம்’ என்று சர்வர் கொண்டு வந்த ஹல்வாவை ஒதுக்கிவிட்டு இட்லியோடு யுத்தம் புரிய ஆரம்பிக்கிறேன்.

Posted in Dinamani, England, Era Murugan, Era Murukan, Experiences, Ira Murugan, Ira Murukan, Kathir, London Diary, UK | Leave a Comment »