Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Eviction’ Category

Law on protection of waterbodies vs Govt buildings encroachment – Environment

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசு கட்டடங்கள்

வி. கிருஷ்ணமூர்த்தி

தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் அகற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்னர்தான் ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வழி வகுக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சுமார் 38 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசித்து வருவதாகத் தெரிய வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நீர்நிலைகளின் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால், நீர்நிலைகளை ஒட்டுமொத்தமாக அழிக்கும் வகையில் பல்வேறு அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி.

நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக்கூடங்கள், நூலகங்கள், பஸ் நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் நீர்நிலைகளையொட்டியே அமைந்துள்ளன.

மதுரை உலகனேரி கண்மாயில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் உள்ள அத்திகுளம், செங்குளம் கண்மாயில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட அப்போதைய தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. தாம்பரத்தை அடுத்த கோவிலம்பாக்கம் ஏரி என பல்வேறு நீர்நிலைகளில் அரசு பள்ளி உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

2006 ஆகஸ்டில் சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கத்தில் “ரெட்டைக் குளத்தை’ வணிக வளாகமாக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “”அரசியல் சட்டத்தின் 51-ஏ (ஜி) பிரிவின்படி ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. எனவே, அவற்றில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்காமல், ஏற்கெனவே இடம்பெற்றிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்” என்றனர்.

இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய குளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2005 ஜூன் 27-ல் ஆக்கிரமிப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோர் அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இப்போது போலவே அப்போதும் கால வரம்பு நிர்ணயித்தனர்.

1997-ல் உச்ச நீதிமன்றம், நீர்நிலைகளை பொதுப் பயன்பாடு என்ற காரணத்துக்காக எடுப்பதும் தவறு என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

2005 ஜூனில் ஏரி பாதுகாப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கற்பகவிநாயகம், சி. நாகப்பன் ஆகியோர் மேற்கூறிய தீர்ப்பை தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டி நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகளை நீதித்துறையினரும், நீர்நிலைகளில் அரசு சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தங்கள் அலுவலகங்களாக ஏற்றுக்கொள்ளும் நீதித்துறையினரை அதிகாரிகளும் எப்படி பார்க்கிறார்கள் என்பதே மக்களிடம் எழுந்துள்ள கேள்வி.

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அரசும் குறிப்பாக, வருவாய்த்துறையினரும் ஆர்வம் காட்டுவதில்லை. தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாததும் ஒருவகையில் நீதிமன்ற அவமதிப்பே. எனவே, இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளின் செயலை நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து, அவமதிப்பு வழக்காக ஏன் எடுத்துக்கொள்வதில்லை?

எத்தனை தீர்ப்பு வந்தாலும், எத்தனை சட்டம் போட்டாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்ற அதிகாரிகளின் மனப்போக்கு மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உறுப்பினர்களும் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். இதற்கு அதிகாரம் அளிப்பதற்காகவே தற்போது சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஏழைகள் என்பதற்காக ஏரி, குளங்களை ஆக்கிரமித்தவர்களை விட்டுவிட முடியாது. என்றாலும், அவர்களுக்கு உரிய விலையில் உறைவிட வசதிகளை அரசு அளிக்கத் தவறுவதே, பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். அதேவேளையில், நீர்நிலைகளைப் பொதுப் பயன்பாட்டுக்காக அரசுத் துறைகள் ஆக்கிரமிப்பதை எந்த விதத்திலும் அனுமதிக்கவும் கூடாது.

விவசாயம், நீர்ப்பாசனம் என்பதோடு நிற்காமல் நிலத்தடி நீர் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சமநிலை ஆகியவையும் இந்த நீர்நிலைகளைச் சார்ந்தே இருக்கிறது. ஏரி, குளங்களை நமது முன்னோர் உருவாக்கியது ஏன் என்பதை அனைவருக்கும் குறிப்பாக, நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. அரசு கட்டடமோ, தனியார் குடியிருப்போ எதுவாக இருந்தாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் புதிய ஆக்கிரமிப்புகள் வராமல் தடுப்பதும்தான் தற்போதைய அவசர, அவசியத் தேவை.

————————————————————————————–

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் மவுனம்: ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்துமா அரசு?


சென்னை: ஏரி, குளம், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு விதித்துள்ள ஐகோர்ட் உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது ஒட்டு மொத்த பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குடிநீர் ஆதாரமாக 300 ஏரிகள் உள்ளன. இதில், சென்னை நகரில் 30 ஏரிகளும், புறநகரில் 270 ஏரிகளும் உள்ளன. ஒவ்வொரு ஏரியும் குறைந்தபட்சம் நுõறு ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்டது.

ஏரிகள் அனைத்தும் “மராமத்து’ முறையில் அந்தந்த கிராம மக்களே துõர்வாரி, கரையை பலப்படுத்தி வந்தனர். இப்பணி பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 30 ஆண்டுகளில் சென்னை மற்றும் புறநகர் பகுதி அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தது. குடியிருப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. இதன் விளைவாக விவசாய நிலங்கள் அனைத்தும் பட்டா நிலங்களாக மாற்றப்பட் டன.

ஏரியை சுற்றி குடியிருப்புகள் வளர்ந்ததால் ஒவ்வொரு ஆண்டு பருவ மழைக்கும் ஏரி நிரம்பி உபரி நீர் கலங்கலில் வெளியேறி போக்கு கால்வாய் வழியாக கடலில் கலந்தது.

ஏரிகள், நீர் இல்லாமல் தரிசு நிலம் போல காட்சியளித்தன. அரசும் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள சில ஏரி நிலங்களின் ஒரு பகுதியை வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் என பல தரப்பட்ட துறைக்கு பிரித்து கொடுத்தது. ஏரியின் பரப்பளவு மூன்றில் ஒரு பங்காக சுருங்கியது. இதைப் பார்த்த அரசியல்வாதிகள், உள்ளூர் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக விரோத கும்பல்களுக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வழி கிடைத்தது.

சென்னை புறநகரில் உள்ள பல ஏரிகளின் ஒரு பக்க கரையை உடைத்து ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த இடங்கள் கூறு போட்டு அப்பாவி பொதுமக்களுக்கு சொற்ப விலைக்கு விற்கப்பட்டன. ஆக்கிரமித்த இடங்களுக்கு பல துறையினர் “மாமுல்’ பெற்று சாலை வசதி, மின் இணைப்பு மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்டவை வழங்கி ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருக்க அனுமதியும் அளிக்கப் பட்டது.

இதனால், சென்னை மற்றும் புறநகரில் நீர்நிலைகளுக்கு ஆதாரமாக உள்ள பல நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஏரிகள் காணாமல் போயின. மிகப்பெரிய ஏரிகளாக விளங்கிய வேளச்சேரி ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் பல மடங்கு சுருங்கின.அதேபோல, ஒவ்வொரு ஏரிக் கும் கலங்கல் இருந்தது. அந்த கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீர் கடலில் கலக்க நுõறடிக்கும் மேற்பட்ட அகலம் கொண்ட போக்கு கால்வாய் இருந்தது.

சில ஆண்டுகளாக மழை பொய்த் ததால் பெரும்பாலான வாய்க் கால்கள் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்து விட்டனர். நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு ஐகோர்ட் காலக்கெடு விடுத்துள் ளது. ஐகோர்ட்டின் உத்தரவை தமிழக அரசு மதித்து ஏரிகள், போக்கு கால் வாய் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாவண்ணம் ஏரி யை கம்பிவேலி போட்டு பாதுகாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இதனால், குடிநீர் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஆக்கிரமிப்புகள் அகற்ற கெடு:

ஏரியை காப்பாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுநல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

* நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் நவம்பர் மாதத்திற்குள் ஒரு திட்டம் இறுதி செய்யப்பட வேண்டும்.

* ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க அரசு பரிசீலிக்கலாம்.

* நீர் நிலை ஆக்கிரமிப்புகளை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை சிவில் கோர்ட் அனுமதிக்கக்கூடாது.

* பாதிக்கப்பட்டவர் ஐகோர்ட் டை அணுகலாம்.

* நீர் நிலைகளை ஆக்கிரமித்து நிலங்களை விற்றவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* எதிர்காலத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தால் நோட்டீஸ் வழங்காமலே ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்.

* ஆக்கிரமிப்புகள் அகற்றியது குறித்து வரும் 2008ம் ஆண்டு ஜூன் 15ம் தேதிக்குள் பொதுப்பணித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Posted in activism, Activists, Adambakkam, Agriculture, Assets, Boundary, Buildings, Civic, Drink, Drinking, encroachers, encroachment, encroachments, Enforcement, Environment, Evict, Eviction, Farmers, Govt, Ground water, groundwater, harvest, harvesting, Irrigation, KANCHEEPURAM, Lakes, Land, Law, Order, Original, Pallavaram, peasants, Peerkankaranai, penal, Private, Protection, Public, Rain, Rajakilpakkam, resettlement, rice, River, structures, Tambaram, Tanks, Temple, Ullagaram, Water, waterbodies, waterbody | Leave a Comment »

Slum Clearance Board housing collapses – Daily Routine of the Poor

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்

சென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.

“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.

வசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.

“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.

குடிசைப் பகுதி தடையா? நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

“”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.

மாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

——————————————————————————————————————-

குறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்

எம். மார்க் நெல்சன்

Kalainjar DMK Slum Clearance board abuse power Karunanidhi banner

சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.

சென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.

ஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.

சுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சுவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.

இதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.

ஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.

ஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.

பொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.

ஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்துள்ளனர் அதிகாரிகள்.

ஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.

Posted in 50, Ad, Advt, Affordability, Area, Banner, Board, Celebrations, City, Civil, Clearance, collapses, Construction, Cost, Daily, Disabled, DMK, Dwelling, Education, eligibility, encroachments, Engineering, Eviction, facilities, facility, Flats, Floods, Free, Functions, Government, Govt, Handicapped, Hoardings, Home, Houses, Housing, Huts, Hygiene, improvement, Income, infrastructure, Issues, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kottoor, Kottur, Kotturpuram, kutcha, Labor, Labour, Lands, Loss, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maintenance, migration, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, multistorey, Necessity, NGO, Party, Plots, Politics, Poor, Poster, Power, Problems, Rain, Rehabilitation, Rent, revenue, Routine, Rural, sanitation, Santhome, settlements, shelter, Sleep, Slum, Society, Structure, Tenements, TN, TNSCB, TV, unhygienic, Worker, Youth | 1 Comment »