Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Essays’ Category

Interview with Writer Meena Kandhasamy – Translator, English Author from Tamil Nadu

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

முகங்கள்: இரண்டு மடங்கு பணி! நான்கு மடங்கு வேகம்!

அவர் ஐந்து புத்தகங்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதற்குப் புகழ்பெற்ற எழுத்தாளர் கமலாதாஸ் முன்னுரை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் நிறையக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்.

அவர் 24 வயதேயான மீனா கந்தசாமி. இவ்வளவு சிறிய வயதில் இத்தனை புத்தகங்களை, அதுவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒரே தமிழ்ப்பெண்ணாக இவர்தான் இருக்கக்கூடும்.

பாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஓய்ந்துவிடுவது அல்லது வெற்றுப் பேச்சுகளில் மூழ்குவது என்றிருக்கும் நமது இளம்வயதினரிடையே மீனா கந்ததாமி ஒரு வித்தியாசமான பெண்ணாய்த் திகழ்கிறார்.

ஆங்கிலத்தில் முதுகலை பயின்றிருக்கும் அவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி.

மீனா கந்தசாமியை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். நேரில் பார்க்கும்போது நமது ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.

உங்களுடைய புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

நான் தமிழில் இருந்து 5 புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் இரண்டு புத்தகங்கள் தொல்.திருமாவளவனுடையது. அவர் இந்தியா டுடே இதழில் எழுதிய 34 கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அது நூலாக வெளியாகியுள்ளது. அப்போது எனக்கு வயது 19. அதுபோல அவருடைய சொற்பொழிவுகளை மொழிபெயர்த்தேன். அதுவும் புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டிக்காக ஒரு புத்தகமும், நக்கீரன் கோபாலின் புலனாய்வு இதழியல் குறித்த புத்ககம் ஒன்றையும் மொழிபெயர்த்தேன். கவிஞர் காசி ஆனந்தனின் “நறுக்குகள்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.

நான் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் “டச்’ என்கிற பெயரில் 2006 இல் வெளிவந்தது. அதற்கு பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் ஓர் அருமையான முன்னுரை கொடுத்துள்ளார். அவர் கைப்பட எழுதிய அந்த முன்னுரையை நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

இதுதவிர ஆங்கிலத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதிவருகிறேன். அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது.

இவ்வளவு சிறிய வயதில் இப்படிக் கடுமையாக உழைக்கிறீர்களே, என்ன காரணம்?

சமூகத்தில் பலருக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதிப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.

நமது நாட்டில் வாய்ப்புகள் ஓர் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. வாய்ப்புகளை யார் போய் அள்ளிக் கொள்கிறார்களோ அவர்களே முன்னேற முடியும். வாய்ப்புகளை அள்ளிக் கொள்ள பிறரைவிட 2 மடங்கு வேலை செய்ய வேண்டும். 4 மடங்கு வேகமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும். ஏனென்றால் சமூக ஏற்றத் தாழ்வு காரணமாக நமது சமூகத்தில் எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் நிலை வந்தால் இப்படிக் கஷ்டப்படத் தேவையிருக்காதோ, என்னவோ?

உங்களுக்குத் தாய்மொழி தமிழாக இருக்கும்போது ஆங்கிலத்திலேயே எழுதுகிறீர்களே?

தமிழில் நிறையப் பேர் எழுதுகிறார்கள். அவர்கள் செய்யும்போது நான் எதற்கு? ஆங்கிலத்தில் நான் எழுதக் கூடிய விஷயங்களை எழுதுபவர்கள் மிகவும் குறைவு. எனவே ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

மேலும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் உண்மையான இந்திய வாழ்க்கையைக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த உலகத்தை அவர்களுடைய கோணத்தில் காட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடத்தை அவர்கள் கொடுப்பதில்லை. இந்தியா என்றால் தாஜ்மஹால் உள்ள நாடு என்பது போல சர்வதேச அளவில் இந்தியாவின் முகத்தைக் காட்டுகிறார்கள். இது, இருக்கிற நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தைக் காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே இந்தியாவின் உண்மையான நிலை இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் தெரிய வேண்டும். அதன்மூலம் பின்தங்கியுள்ள மக்கள் வளர்ச்சி நோக்கி மேல் எழுந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் இளம்வயதினருக்கு உண்மையான நாட்டுநிலை கண்ணில் தெரிய வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

கவிதையில் நாட்டம் ஏன்?

ஒரு விஷயத்தைக் கூர்மையாகவும், அந்த விஷயத்தின் சாரத்தையும் சொல்ல கவிதை ஒரு நல்ல வடிவம்.

எனது கவிதைகள் பெரும்பாலும் அரசியல் கவிதைகள். சமூகம் சார்ந்த கவிதைகள். காதல் கவிதைகள் சில எழுதியிருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு சமூகம் சார்ந்த பார்வையிருக்கும்.

கவிதை மொழியைக் கொண்டு செயல்படுவது. மொழியை மறுஉருவாக்கம் செய்யக்கூடியது.

மொழி என்பது எல்லாருக்கும் பொதுவான ஒரு கருவி என்றாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்த முடியும். மொழியைப் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆணாதிக்கத்தன்மை இப்போது உள்ளது. எனவே பெண்ணியம் சார்ந்த கவிதைகள் அதற்கான புதிய மொழியை உருவாக்கி மொழியை மறுஉருவாக்கம் செய்கின்றன என்று சொல்லலாம்.

சிறுகதை நூல் வெளியிடப் போவதாகச் சொன்னீர்கள். அதைப் பற்றி?

டெல்லியில் உள்ள ஸýபான் பதிப்பகம் 40 வயதுக்குக் கீழ் இருக்கும் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் 21 பேரின் சிறந்த கதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில் நான் எழுதிய சிறுகதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ஒரு பத்துக் கதைகள் சேர்ந்துவிட்டால் ஒரு தொகுப்புக் கொண்டுவரலாம் என்றிருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கில இலக்கியத்தில் இடம் தருவதற்காகப் புத்தகம் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். அதை அவர்களுடைய தாய்மொழியில் எழுதுவதுதானே சிறந்தது?

பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய நேரடியான களப்பணியில் ஈடுபடுவதே சரி. புத்தகம் எழுதுவது சரியாகாது. நான் அவர்களுடைய வாழ்க்கையை, பிரச்சினைகளை எனது புத்தகங்களில் பதிவு செய்கிறேன்.

என்னை மாதிரி வாழ்நிலை உள்ளவர்களுக்கு } ஆங்கிலம் படித்தவர்களுக்கு } என்னுடைய கருத்துகள் போய்ச்சேர வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் புத்தகங்களை எழுதுகிறேன். கட்டுரைகளை எழுதுகிறேன்.

இதற்கு ஆங்கிலத்தை ஒரு கருவியாக நான் பயன்படுத்துகிறேன்.

படங்கள் : ஏ.எஸ். கணேஷ்

Posted in Anna, Authors, English, Essays, Fiction, Interview, Kamaladas, Kamaladoss, Kandasamy, Kandhasami, Kandhasamy, Kanthasami, Kanthasamy, Kasi Anandhan, Kasi Ananthan, Literature, Meena, Nakkeeran, Nakkiran, Ph.d, Poems, Researchers, Reviews, Story, Tamil Nadu, TamilNadu, Translations, Translators, Writer | Leave a Comment »

Amrutha Publications: Interview with Prabhu Thilak on Chennai Book Fair 2008

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

முகங்கள்: படித்தது மருத்துவம் பிடித்தது புத்தகம்!

அவர் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர். தற்போது சேலம் வினாயக மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் மருத்துவக் கல்லூரியில் மயக்க மருந்தியல்துறையில் எம்.டி.படிக்கும் மாணவர். ஆனால் அவர் புத்தகங்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். அம்ருதா பதிப்பகம் என்கிற பெயரில் நல்ல நூல்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் பிரபுதிலக்.

அவர் காவல்துறை உயர் அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதியின் மகன்.

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கான புத்தக வெளியீட்டில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்…

“”நான் படித்தது மருத்துவம் என்றாலும் இலக்கியங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம். காரணம் எங்கள் வீட்டு கிச்சன் முதல் பெட்ரூம் வரை புத்தகங்கள் எப்போதும் இருக்கும். அம்மா ஒரு பெரிய இலக்கியவாதி. இந்தச் சூழலில் வளர்ந்த எனக்குப் புத்தகங்களின் மேல் எப்போதும் விருப்பம் அதிகம்.

அம்ருதா அறக்கட்டளையின் சார்பாக இந்தப் பதிப்பகத்தை 2005 இல் ஆரம்பித்தோம். இதுவரை 40க்கும் மேற்பட்ட தலைப்பில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.

ஏற்கனவே நிறையப் பதிப்பகங்கள் இருக்கின்றன. எனவே நாங்கள் புத்தகப் பதிப்பில் இறங்கும் போது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.

புத்தக வெளியீடு என்பது இப்போது வியாபாரம் ஆகிவிட்டது. இதற்கு எழுத்தாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன. பதிப்பாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன.

நிறைய எழுத்தாளர்களுக்கு தங்களுடைய புத்தகங்களை வெளியிட நல்ல பதிப்பகம் அமைவதில்லை. தான் எழுதியவை புத்தகமாக வெளிவருமா என்று புத்தகம் வெளியிட வாய்ப்புக் கிடைக்காத எழுத்தாளர்கள் ஏங்கும் நிலை உள்ளது.

அதிலும் கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு பெரும்பாலான பதிப்பகங்கள் முன் வருவதில்லை.

சில பதிப்பகங்கள் எழுத்தாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களை வெளியிடுகின்றன.

இம்மாதிரியான சூழ்நிலையில் அதிகம் அறிமுகம் ஆகாத எழுத்தாளர் என்றாலும் தரமான படைப்பு என்றால் வெளியிடுகிறோம். உதாரணமாக சேலம் இலா.வின்சென்ட் என்பவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாப்லோ அறிவுக் குயிலின் “குதிரில் உறங்கும் இருள்’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாலுசத்யாவின் “காலம் வரைந்த முகம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டோம்.

மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் நிறைய வெளிவந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் அதிலும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். மொழிபெயர்ப்பு நூல்கள் என்றால் முதலில் ரஷ்ய நூல்கள், அமெரிக்க நூல்கள், பிரெஞ்ச் நூல்கள் என்றுதான் மொழிபெயர்த்தார்கள். இப்போது லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அவற்றிற்கு நிகரான இலக்கிய வளம் நமது ஆசிய நாட்டு இலக்கியங்களுக்கு உள்ளது. மிகப்பெரிய அமெரிக்காவைப் போரில் வீழ்த்திய வியட்நாம் அதன் ஆயுத பலத்தால் மட்டுமா வீழ்த்தியது? அதன் ஆன்மபலமும் அல்லவா அமெரிக்காவின் வீழ்ச்சிக்குக் காரணம்? அமெரிக்கா போன்ற நாடுகள் செல்வ வளத்தில் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் ஞான வளம் ஆசிய நாடுகளுக்கே உரியது. நபியாகட்டும், கன்பூசியஸ் ஆகட்டும், கெüதம புத்தராகட்டும் எல்லாரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களே. நமது இந்தியாவிலேயே சிறந்த சிந்தனையாளர்கள், வளமான இலக்கியங்கள் உருவாகவில்லையா? அந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடத் தீர்மானித்தோம்.

மலையாள இலக்கியவாதி என்றால் பெரும்பாலோருக்கு தகழி சிவசங்கர பிள்ளையைத் தெரியும். வைக்கம் முகம்மது பஷீரைத் தெரியும். பிற எழுத்தாளர்களை அவ்வளவாகத் தெரியாது. பொற்றேகாட், கேசவதேவ், மலையாற்றூர் ராமகிருஷ்ணன், சி.ஏ.பாலன் போன்றோரைச் சிலருக்குத்தான் தெரியும்.

பால்சக்கரியாவின் “அன்புள்ள பிலாத்துவுக்கு’ என்ற நாவலை வெளியிட்டோம். நாங்கள் பலருக்கும் தெரியாத பி.சுரேந்திரன் என்ற மலையாள எழுத்தாளரின் “மாயா புராணம்’ என்ற நாவலை வெளியிட்டோம். கோயில் நுழைவுப் போராட்டத்தை மையமாக வைத்து கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய நாவலை “பாரதிபுரம்’ என்கிற பெயரில் வெளியிட்டிருக்கிறோம். தாகூரின் “சிதைந்த கூடு’ நூலை வெளியிட்டிருக்கிறோம்.

எங்கள் பதிப்பக வெளியீடுகள் எந்தக் குறிப்பிட்ட சார்புநிலையும் எடுப்பதில்லை. மனித மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்கு உதவும் நூல்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். யாரையும் யாரும் காயப்படுத்தக் கூடாது. இவைதான் எங்கள் நோக்கம். விருப்பம்.

நமது மகாபாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் இல்லாத விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா?

நல்லது கெட்டது, கெட்டதில் உள்ள நல்லது எல்லாம் மகாபாரதத்தில் உண்டு. எல்லாரும் மன்னிக்கும்தன்மையுடனும் பெருந்தன்மையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய இதிகாசங்கள் தோன்றின. ஆனால் இன்றைய வாழ்க்கை எப்படி உள்ளது? கொலை, கொள்ளை, வெறுப்பு, இப்படி ஆரோக்கியமில்லாத சமூகமாகிவிட்டது. அர்த்தமுள்ள பொழுது போக்குகள் இல்லை. இவற்றை மாற்றி நல்ல சமுதாயத்தை அமைக்க விரும்பும் பலர் குதிரைக்குக் கண்பட்டை அணிந்ததுபோல் ஒரே கோணத்தில் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல் மனித மேம்பாட்டுக்கு உரிய நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.

அதனால்தான் “கிறிஸ்து மொழிக் குறள்’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம். “நபி(ஸல்) நமக்குச் சொன்னவை’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம்.

“சல்வடார் டாலி’ என்ற பெண்ணியச் சிறுகதைகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம். இதில் இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். இதில் பெண்ணின் வாழ்வு யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது, பெண்ணிய நோக்கில். பெண்ணியம் என்றால், “நீ சிகரெட் பிடித்தால் நான் சிகரெட் பிடிப்பேன்’ “நீ ஜீன்ஸ் போட்டால் நானும் போடுவேன்’ என்கிற மாதிரியான பெண்ணியம் அல்ல. பெண்ணின் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு.

விட்டல்ராவ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். இன்றைய எந்த இலக்கியக் குழுவிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். அவர் தமிழ்நாட்டின் பல கோட்டைகளுக்கும் நேரில் போய் அந்தக் கோட்டைகளின் வரலாறு, புவியியல், மக்கள் வரலாறு , மக்களின் கலை, கலாச்சாரம் எனப் பலவற்றை ஆராய்ந்து “தமிழகக் கோட்டைகள்’ என்ற நூல் எழுதியுள்ளார். அந்த அருமையான நூலை முக்கியமான பதிப்பகங்கள் வெளியிடத் தயங்கிய சூழ்நிலையில் நாங்கள் அதை வெளியிட்டோம்.

சிறந்த எழுத்தாளர்கள் 18 பேரின் சிறந்த பத்துக் கதைகளைத் தொகுத்து மாணவர் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வம் குறைந்து வருகிறது. அதுவும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களிடம் தமிழ் இலக்கியத்தைப் படிக்கும் போக்கு அறவேயில்லை. முந்திய தலைமுறையைச் சேர்ந்த எம்.வி.வி., ந.பிச்சமூர்த்தி, தி.ஜ.ர. போன்றவர்களைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்கு அதிகம் தெரியாது. ஏன் இன்னும் சொல்லப் போனால், ந.பிச்சமூர்த்தியின் இனிஷியல் “ந’ வா? “நா’ வா? என்று கேட்டால் பல இலக்கியவாதிகளே குழம்பினார்கள். எனவே மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நூல் வரிசையைக் கொண்டுவந்திருக்கிறோம்.

இன்று மல்டி நேஷனல் கம்பெனிகள் வந்துவிட்டன. பணம் சம்பாதிப்பதே நோக்கமாகக் கொண்ட சமூக மனோபாவம் வந்துவிட்டது. ஆனால் பணம் சம்பாதிப்பது சந்தோஷத்திற்கான வழிகளில் ஒன்று. பணத்தால் வெளியே ஜில்லென்று குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஏஸியை வாங்கிவிடலாம். ஆனால் மனதுக்கு குளிர்ச்சியைப் பணத்தால் ஏற்படுத்த முடியுமா? அது நல்ல இலக்கியங்களாலும், நூல்களாலும்தான் முடியும். அதனால்தான் இந்தப் பதிப்பக முயற்சியில் “அணில் கை மணல் போல’ நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு ஈடுபட்டிருக்கிறோம்.

Posted in Amruta, Amrutha, Authors, Books, Chennai, Collections, Culture, Essays, Fiction, History, Kannada, Karnataka, Kerala, Literature, Malayalam, publications, Publishers, Readers, Students, Tagore, Tamil, Thilagavathi, Thilagavathy, Thilakavathi, Thilakavathy, Thinkers, Translations, UR, URA, Writers | Leave a Comment »

14 Tamil Scholars & Authors works gets nationalised by Mu Karunannidhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

14 தமிழ்ச் சான்றோரின் நூல்கள் நாட்டுடமை

சென்னை, பிப். 12: மாயூரம் வேதநாயகம் பிள்ளை உள்பட தமிழ்ச் சான்றோர்கள் 14 பேரின் நூல்களை நாட்டுடமையாக்கி முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

தமிழ்ச் சான்றோர்கள் 14 பேரின் குடும்பத்தாருக்கும் தலா ரூ. 6 லட்சம் வீதம் பரிவுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றிச் சிறப்புமிக்க நூல்களைப் படைத்துள்ள தமிழ்ச் சான்றோர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவர்களின் படைப்புகள் பெருமளவில் மக்களைச் சென்றடையும் நோக்கிலும், அவர்களது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன.

அவர்தம் வாரிசுகளுக்கு பரிவுத் தொகைகளை அரசு அளித்து வருகிறது. தமிழ்ச் சான்றோர்கள் விவரம்:

1. மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

2. சக்தி வை.கோவிந்தன்.

3. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.

4. த.நா.குமாரசாமி.

5. கா.சு.பிள்ளை.

6. புலவர் குலாம் காதிறு நாவலர்.

7. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்.

8. டாக்டர் சி.இலக்குவனார்.

9. மகாவித்வான் தண்டபாணி தேசிகர்.

10. தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர.).

11. நாரண துரைக்கண்ணன்.

12. டாக்டர் மா.ராசமாணிக்கனார்.

13. டாக்டர் வ.சுப.மாணிக்கம்.

14. புலவர் கா.கோவிந்தன்.


 

தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ. 66 லட்சம்: முதல்வர் வழங்கினார்

சென்னை, மார்ச். 22:தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ. 66 லட்சம் பரிவுத் தொகையை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.

சிறந்த தமிழறிஞர்களின் படைப்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற சீரிய நோக்கில், அவர்களது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு பரிவுத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி வருகிறார்.

திமுக அரசு பொறுப்பேற்றதும் 17 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டு அவர்களது மரபுரிமையர்க்கு ரூ. 1.29 கோடி பரிவுத் தொகை வழங்குவதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

தற்போது 14 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ. 6 லட்சம் வீதம் ரூ. 84 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் 11 தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ. 6 லட்சம் வீதம் ரூ. 66 லட்சத்துக்கான சான்றாவணத்தை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.

  1. மாயூரம் வேதநாயகம் பிள்ளை,
  2. சக்தி வை. கோவிந்தன்,
  3. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்,
  4. த.நா. குமாரசாமி,
  5. கா.சு. பிள்ளை,
  6. புலவர் குலாம் காதிறு நாவலர்,
  7. டாக்டர் சி. இலக்குவனார்,
  8. தி.வை. பண்டாரத்தார்,
  9. மகாவித்வான் தண்டபானி தேசிகர்,
  10. தி.ஜ. ரங்கநாதன் (திஜர),
  11. நாரண. துரைக்கண்ணன்,
  12. மா. ராஜமாணிக்கனார்,
  13. டாக்டர் வா.சுப. மாணிக்கம்,
  14. புலவர் கா. கோவிந்தன் ஆகியோரது மரபுரிமையர் முதல்வரிடமிருந்து பரிவுத் தொகைக்கான சான்றாவணத்தை பெற்றுக் கொண்டனர்.

 

நாட்டுடைமையாகும் நூல்களும் பரிவுத்தொகையும்

எஸ்.கே. அரவிந்தன்
முன் எப்போதும் இல்லாத புதுமையாய், முதல் தடவையாகப் பதினான்கு தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை ஒருசேர நாட்டுடைமையாக்கப்பட்டு, ஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களான மரபுரிமையருக்கு ரூ. 6 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

சான்றோர் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர்களின் வாரிசு உரிமையுள்ளவர்களுக்குக் கணிசமாக ஒரு தொகையினை அளிப்பது முன்பெல்லாம் மிகவும் அரிது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகள்தாம் முதன்முதலில் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.

அன்றைய தமிழ்நாடு உள்ளிட்ட சென்னை ராஜதானியில் நூல்கள் நாட்டுடைமையாகப் பெறும் இலக்கியப் படைப்பாளி என்கிற கௌரவம் பாரதியாருக்கு அவர் மறைந்து இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டியது.

இந்த இருபத்தேழு ஆண்டுகளில் அவர் விட்டுச் சென்ற துணைவியார் செல்லம்மா தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் படாத பாடுகள் எல்லாம் பட்டு முடித்துவிட்டிருந்தார்! இருப்பினும் வாழ்க்கையின் இறுதிக்காலத்திலேனும் விடியலைக் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது ஆறுதலான விஷயந்தான். செல்லம்மாவைச் செல்வம் மிக்க அம்மாவாகச் செய்தது, பாரதி நூல்கள் நாட்டுடைமை.

பின்னர், 1971ல் மு. கருணாநிதியின் தலைமையில் தொடர்ந்த தி.மு.க. ஆட்சியிலிருந்துதான் இலக்கியப் படைப்பாளிகளின் நூல்களை நாட்டுடைமையாக்கும் நடைமுறை தொடரலாயிற்று. வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு நடைமுறை வழக்கத்திற்கு வரவில்லை.

நாட்டுடைமையாக்குவதால் சான்றோரின் நூல்கள் எளிதாகவும் பல பதிப்பகங்கள் மூலமாகவும் வாசகர்களுக்குப் பரவலாகக் கிடைப்பது ஒரு நன்மை என்றால் சான்றோரின் வாரிசுதாரர்களுக்குக் கணிசமான ஒரு தொகை பரிவுத் தொகையாக அரசிடமிருந்து கிடைத்துவிடும். பதிப்பகத்தாரிடமிருந்து தவணை, தவணையாகக் கிடைக்கக்கூடிய தொகையைக் காட்டிலும் அது மிகவும் கூடுதலாகவும் இருக்கும்.

ஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களுக்கும் பரிவுத் தொகை ரூபாய் ஆறு லட்சம் என்னும்போது அது ஒரு கணிசமான தொகையாகத் தெரிந்தாலும் ஒரு சான்றோருக்கு அதிக எண்ணிக்கையில் வாரிசுதாரர்கள் இருக்கும்பட்சத்தில் அது பலவாறாகப் பகிர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் கிடைக்கும் தொகை மிகவும் அற்பமாகப் போய்விடும் சாத்தியக்கூறும் உள்ளது.

ஒவ்வொரு முறையும் சான்றோரின் நூல்கள் நாட்டுடைமையாவதையொட்டி அறிவிக்கப்படும் பரிவுத்தொகையின் அளவை ஒப்பிட்டுப் பார்க்கையில் பரிவுத்தொகை வெவ்வேறாக இருப்பது தெரிய வரும்.

இவ்வாறு சான்றோர்களிடையே பேதம் ஏற்படுவதற்கு இடமளிக்காமல் சான்றோர் அனைவர் நூல்களுக்கும் உரிய பரிவுத்தொகை ரூபாய் பத்து லட்சம் என நிரந்தரமாக நிர்ணயம் செய்து விடுவது பொருத்தமாக இருக்கும்.

ஓர் ஆண்டில் இருபது சான்றோரின் நூல்களை நாட்டுடைமையாக்கினாலும் அதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய மொத்தச் செலவு இரண்டு கோடி ரூபாய்தானே!

மேலும், ஒரு சான்றோரின் வாரிசுதாரர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் சரிசமமாக இருப்பார்கள் எனக் கருதுவதற்கில்லை. ஒரே குடும்பத்தில் ஒருவர் கூடுதலான வருவாய் பெற்று வசதியாக வாழ்க்கையில் இன்னொருவர் வறிய நிலையில் திண்டாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

சான்றோரின் வாரிசுதாரர்களில் ஒருவருக்கு நாட்டுடைமையின் பயனாகக் கிடைக்கும் தொகை அவரது சேமிப்பை மேலும் கூடுதலாக்கும் அதிர்ஷ்டப் பரிசாக அமைந்துவிடுகையில் அதே சான்றோரின் மற்றொரு வாரிசுதாரருக்கு அந்தத் தொகை பற்றாக்குறையாக இருக்கக்கூடும்.

குடும்ப நபர்களின் எண்ணிக்கை, மருத்துவச் செலவு, கல்வி எனப் பல காரணிகளால் ஒரு வாரிசுதாரருக்குப் பரிவுத்தொகை கிடைத்தாலும் அது போதிய பயன் தராது போய்விடக்கூடும்.

எனவே நாட்டுடைமையினையொட்டி ஒரு சான்றோரின் வாரிசுகளான மரபுரிமையர் அனைவருக்கும் பரிவுத்தொகையைச் சரிசமமாகப் பகிர்ந்தளிப்பதைவிட, வாரிசுதாரர் ஒவ்வொருவரின் செல்வ நிலை, வருமானம் ஆகியவற்றை விசாரித்தறிந்து, தேவை மிகுதியாக உள்ள வாரிசுதாரர்களுக்குக் கூடுதலாகவும், தேவையே இல்லாத அளவுக்கு செல்வந்தர்களாக இருப்பவர்களுக்கு ஓரளவுக்குமேல் மிகாமலும் பரிவுத்தொகையினைப் பகிர்ந்தளிப்பது பொருள்மிக்கதாக இருக்கும்.

வாரிசுதாரர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு பரிவுத்தொகையினை விகிதாசார முறையில் பங்கிட்டு அளிப்பது அவர்களிடையே பிற்காலத்தில் பூசல்கள் எழ வாய்ப்பில்லாமலும் செய்துவிடும் அல்லவா?


மிகச்சிறந்த படைப்புகளை படைத்தவர்களின் இலக்கியங்களே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்கிறார் வல்லுநர்

தமிழக அரசின் தலைமைச் செயலகம்
தமிழக அரசின் தலைமைச் செயலகம்

தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே இலக்கியவாதிகளின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டு அதற்குண்டான தொகை அந்தப் படைபாளியின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தை ஆளும் திமுக அரசால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 36 படைப்பாளிகளின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழக அரசு

  • குன்றக்குடி அடிகளார்,
  • கி.ஆ.பெ,
  • கி.வா.ஜ ஆகியோரின் படைப்புகள் உட்பட பலரது படைப்புகள் நாட்டுடையாக்கப்படுவதாக அறிவித்தது.

ஆனால் உலக அளவிலும் சரி, இந்தியாவின் வேறு மாநிலத்திலும், இவ்வாறாக இலக்கியத்தை நாட்டுடமையாக்கும் வழக்கும் இல்லை என்றும், காந்தி, தாகூர் போன்றவர்களின் படைப்புகள் கூட நாட்டுடமையாக்கப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார் தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்த வரலாற்று ஆய்வாளரும் சென்னை வளர்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான ஆ. இரா. வெங்கடாஜலபதி.

பல்வேறு தமிழக அரசுகள், தமிழ் வளர்ச்சிக்கு ஆதரவு தருவதாக காட்ட வேண்டிய அரசியல் நெருக்கடிகளின் போது, பல்வேறு எழுத்தாளர்களுடைய படைப்புகளை நாட்டுடமையாக்குவதாக தொடர்ந்து அறிவித்து வருகிறது எனக் கருத்து கூறும் அவர், மறைந்த எழுத்தாளர்களுடைய குடும்பத்திற்கு உதவுவதற்காக இவ்வாறாக செய்வதைவிட அரசு வேறு வகையில் அவர்களுக்கு உதவும் வகையில் கடமையாற்ற வேண்டும் என்றும் கூறினார். மிகச்சிறந்த படைப்புகளே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வாதிடுகிறார்.


 

Posted in Analysis, Authors, Backgrounder, Culture, Dr C Lakkuvanaar, Dr Ma Rasamanickanaar, Essays, Fiction, Heritage, Insights, Kaa Govindhan, Kaa Su Pillai, Karunanidhi, Literature, Mahavidhwan Thandapani Desikar, Mayooram Vedhanayagam Pillai, Nationalisation, Nationalization, Non-fiction, Op-Ed, Publishers, Pulavar Kulam Kaathiru Navalar, Sakthi vai Govindhan, Solution, Story, Tamil Nadu, Tamil Works, Tha Naa Kumarasamy, The Po Meenakshi Sundharanaar, The Po Meenakshisundaranaar, Thi Ja Ranganathan, Thi Vai Sadasiva Pandarathaar, Va Subha Manickam, Works, Writers | 2 Comments »