Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Enrichment’ Category

Nuclear Power & Technology – Hiroshima, Nagasaki, Destruction

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 6, 2007

ஒரு கோடி சூரிய ஒளி – கறுப்பு மழை!

என். ரமேஷ்

1945ஆகஸ்ட் 6. காலை 8.15. அதுவரை மனித குலம் அறிந்திராத, அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் அழிவுசக்தி கோரத்தாண்டவமாடியது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில். அந்நகரின் மீது “ஒரு கோடி சூரியன்கள்’ கண நேரம் ஒளியூட்டி மறைந்தது போன்ற தோற்றம். தொடர்ந்து காரிருள் சூழ்ந்தது; “கறுப்பு மழை’ பெய்தது. அமெரிக்க போர் விமானம் அந்த நகரின் மீது அணுகுண்டு வீசிய ஒரு சில நிமிடங்களில் இவை நிகழ்ந்தன.

அந்தக்கணம் குறித்து, தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த (அப்போது 12 வயதான) காஸ் சூயிஷி கூறுகிறார்,”ஒரு விநாடிக்கு முன் சொர்க்கம் போன்று ஒளிர்ந்தது; மறு விநாடி நரகமாகிவிட்டது’

நகரில் ஆங்காங்கே தீப்பற்றி எரியத் தொடங்கியது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் தயாரிக்கப்பட்ட அந்த அணுகுண்டால் ஏற்பட்ட வெடிப்பு, வெப்பம், தீப் பிழம்புகள், கதிரியக்கத்தால் உடலில் தீப்பற்றி, நுரையீரல் வெடித்து, மூச்சுத் திணறி அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 90,000 பேர் உடனடியாக இறந்தனர். 1945-ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்தது.

ஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வீசப்பட்ட புளுட்டோனிய அணுகுண்டால் 70,000 பேர் இறந்தனர்.

அணு வெடிப்புக்குப் பிந்தைய 62 ஆண்டுகளில், பின் விளைவுகளால் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

ஹிரோஷிமா, நாகசாகி அழிவைக் கண்ணுற்ற மகாத்மா காந்தி கூறியது: “அணுகுண்டு விளைவித்த மாபெரும் சோகம் நமக்கு கூறும் நீதி – அணு குண்டை எதிர் – அணுகுண்டு மூலம் அழிக்க முடியாது; வன்முறையை, எதிர்வன்முறையைக் கொண்டு வீழ்த்த முடியாது என்பதைப்போல. அகிம்சையின் மூலமே வன்முறையிலிருந்து உலகம் மீண்டு வர வேண்டும். அன்பால் மட்டுமே வெறுப்பை வெல்ல முடியும்’ என்றார்.

எனினும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக் கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகு தற்போது உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவற்றில்,

  1. அமெரிக்காவில் 9,938 அணு ஆயுதங்கள் உள்ளன.
  2. ரஷியா – 16,000,
  3. பிரிட்டன் – 200,
  4. பிரான்ஸ் – 350,
  5. சீனா – 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத
  6. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
  7. இஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.

இவற்றில் 12,000 அணு ஆயுதங்கள், ஏவுகணை உள்ளிட்ட தாங்கிகளில் பொருத்தப்பட்டு தயாராக உள்ளன; இதில் 3,500 ஆயுதங்கள் ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் செலுத்திவிடக்கூடிய தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான ஆயுதங்கள், நேரில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத, பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் பெரு நகரங்களைக் குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தவறான தகவல்கள், தகவல் இடைவெளிகள் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதத் தாக்குதல் நடக்கக்கூடிய சூழலில் நாம் வாழ்கிறோம்.

1945 முதல் இதுவரை நிகழ்த்தப்பட்ட 2,051 அணு வெடிப்பு சோதனைகள் காரணமாக ஏற்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் பேரழிவு ஏற்பட்ட 62-வது ஆண்டு நினைவு தினத்தின் போது வரும் செய்திகள் போரற்ற உலகை விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதங்களுக்கான குழு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அண்மையில் அளித்த அறிக்கையில்,”அமெரிக்கா, தன்னுடைய நேசநாடுகளின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணு ஆயுதங்களின் பெருக்கத்துக்கே வழிவகுக்கும் என இந்திய, உலக சமாதான இயக்கங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.

கதிரியக்கம், மரணம் என்ற வகையில் மனித குல அழிவுக்கு நேரடியாகவும், கல்வி, குடிநீர்த் திட்ட நதிகளை மடைமாற்றுவதன் மூலம் மறைமுகமாகவும் காரணமாக உள்ள அணு ஆயுதங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள சமாதான இயக்கங்களின் கோரிக்கையாக உள்ளது.

ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996 ஜூலை 8ஆம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும். “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.

அணு ஆயுதக் கலைப்புக்கு வழிகோலும் சர்வதேச பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அணு ஆயுதக் கலைப்பை சர்வதேச கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்துவது அனைத்து நாடுகளின் சட்டப்பூர்வ கடமை’ என்பதே அது.

ஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்குவிடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை “அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது’ ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை “முற்றிலும் ஒழிப்பது’ ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கு உலக நாடுகளின் அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளின் குடிமக்களும், மனித குல அழிவுக்கு வழிவகுக்கும் இவற்றைக் கைவிட வேண்டும் என தங்களது அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்.

——————————————————————————————————————-
போர் இன்னும் முடியவில்லை!

உதயை மு. வீரையன்

புகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு நண்பர் கேட்டார்: “”மூன்றாவது உலகப் போரில் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்?…”

அதற்கு அவருடைய பதில்: “”மூன்றாவது உலகப் போரினைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரில் கல்லும், வில்லும் பயன்படுத்தப்படும்…”

இதன் பொருள் என்ன? மூன்றாவது உலகப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் உலகம் சுடுகாடாகிப் போகும். அதன் பின் புதிய மனிதர்கள் உருவாக வேண்டும். அந்த கற்காலத்தில் கல்லும், வில்லும்தானே கருவிகளாகும்?

அணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப்பதைக் குறிப்பால் உணர்த்தவே, அந்த அணு விஞ்ஞானி இவ்வாறு உலகை எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்த எச்சரிக்கை யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உலக நாடுகள் மனம்போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றன.

ஹிரோஷிமா, நாகசாகி என்ற பெயர்களை உச்சரித்த உடனேயே அணு ஆயுத அழிவுதான் கண் முன்னே காட்சி தரும். இரண்டாம் உலகப் போரின்போது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்த இரு நகரங்களும் “பொடியன்’, “தடியன்’ என்னும் இரு ஆயுதங்களால் சில நொடிகளில் ஏற்பட்ட பேரழிவு மனித சிந்தனைக்கே அப்பாற்பட்டதாக இருக்கிறது.

அணுகுண்டு வீச்சின் விளைவாக மக்கள் நெருக்கமும், கட்டடப் பெருக்கமும் கொண்ட இருபெரு நகரங்களும் இருந்த இடம் தெரியாமல் அந்த நொடியே அழிந்து நாசமாயின. ஹிரோஷிமா நகரில் 76 ஆயிரம் கட்டடங்களில் 92 சதவிகிதத்துக்கும்மேல் வெடித்தும், இடிந்தும், எரிந்தும் போயின. நாகசாகியிலிருந்த 51 ஆயிரம் கட்டடங்களில் 36 சதவிகிதம் அவ்வாறு அழிந்து நாசமாயின.

ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரில் இருந்ததாகக் கணக்கிடப்பட்ட மூன்றரை லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு மேல் 1950 வாக்கில் மடிந்தார்கள். நாகசாகியில் ஆகஸ்ட் 9 அன்று இருந்ததாகக் கணக்கிடப்பட்ட 2,70,000 பேரில் சுமார் 1,40,000 பேர் மாண்டு போயினர்.

இலக்குப் பகுதிகளில் சாவும் அழிவும் கண்மூடித்தனமாக நடந்தேறின. குழந்தைகள், பெண்கள், இளைஞர், முதியோர், படைகள், குடியிருந்தோர், வருகை புரிந்தோர், வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் } எவையும் விட்டுவைக்கப்படவில்லை. பலியானவர்களில் 90 சதவிகிதத்தினர் பொதுமக்கள். இப்போதும், அந்தக் குண்டுவீச்சு தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த அரைமணி நேரம் கழித்து காலை 8.45 மணியளவில் பெருந்தீ மூண்டது. அப்பகுதியிலிருந்த காற்று சூடேறி விரைவாக மேலே போனது. உடனே எல்லாத் திசைகளிலிருந்தும் குளிர்காற்று உள்ளே புகுந்தது. “தீப்புயல்’ விரைவில் வீசத் தொடங்கியது. மணிக்கு 65 கி.மீ. வேகம். காலை 11 முதல் மாலை 3 வரை வன்மையான சுழல்காற்று நகர மையத்திலிருந்து வடமேற்காகச் சுழன்றது. மாலைக்குள் காற்று தணிந்துவிட்டது. அதற்குள் வெடிப்பு மையத்திலிருந்து 2 கி.மீ. ஆரத்திற்கு நகரம் தீப்புயலால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.

நாகசாகியில் குண்டு வெடித்த ஏறக்குறைய 90 நிமிடங்கள் கழித்து பல இடங்களில் தீப்பிடித்தது; அது பரந்து பரவி பெருந்தீயாக வளர்ந்தது. இரவு 8.30 மணி வரை நீடித்த அந்தத் தீயால் ஒரு பரந்த நிலப்பரப்பே எரிந்து பாலைவனமாகப் பாழடைந்து போய்விட்டது.

விமானத் தாக்குதல்கள் மற்றும் பிற அவசரத் தேவைகளுக்கு இந்த இரு நகரங்களும் ஆயத்தமாக இருந்தபோதிலும் அணுகுண்டின் ஆற்றல் அத்தனையையும் பயனற்றதாக ஆக்கிவிட்டது. விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு தரும் காப்பிடங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் அங்கு புகுந்த வெப்பக் காற்றினால் வெந்து போனார்கள். இதனால் அதிகப்படியான சாவுகள் ஏற்பட்டது என்று கூறலாம்.

ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6 அன்று காலை 9 மணி முதல் 4 மணிவரை நகரின் சில இடங்களிலும், காற்று வீசும் திசையிலிருந்த கிராமப்புறப் பகுதிகளிலும் “கருமழை’ பெய்தது. “கருமழை’ பெய்த இடங்களில் ஆறுகளில் பெருமளவில் மீன்கள் செத்திருக்கக் கண்டனர். பிசுபிசுப்பான மழையால் மாசுபட்ட புல்லை மேய்ந்த கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மழை பெய்த இடங்களில் குடியிருந்த பலருக்கும் பேதி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்கள்.

அதுபோலவே நாகசாகியிலும் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடத்தில், அழிவுக்குத் தப்பித்திருந்த மறுபாதி நகரில் “கருமழை’ பெய்தது. இவ்வாறு அணு ஆயுத மேல்படிவின் தீங்குகளினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

கதிர்வீச்சின் பிந்தைய விளைவுகளால் பாதிப்படைந்தோர் தொடர்ந்து துன்புற்றார்கள் அல்லது இறந்தார்கள். பிந்தைய விளைவுகளில் மிக முக்கியமானது புற்று; உயிருக்கு ஆபத்தான ரத்த வெள்ளையணுப் புற்று; கண்படலம் உருவாதல்; வயதுக்கு முந்தி கிழட்டுத்தன்மையடைதல் போன்றவை.

இவைதவிர, பிறவிக் குறைபாடுகளும் தோன்றுகின்றன. அதிகக் கதிர்வீச்சினால் கருமூல அணுக்கள் சாகின்றன. விந்தையோ முட்டையையோ உற்பத்தி செய்யும் திறனை இழக்கின்றன. அணுத்தாக்குதல் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மனிதர்களில் அயனிமயக் கதிர்வீச்சின் மரபின / பிறவிப் பாதிப்புகள் பற்றி உறுதியான இறுதி முடிவுகளை அறிய இந்தக் கால அளவு போதாது என்றே அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

அணுக்கருவிகள் மூன்று வகைகளில் தனித்தன்மை கொண்டிருக்கின்றன: பெருமளவில் உடனடியாக சாவையும் அழிவையும் உண்டாக்குகின்றன; மனித சமூகத்தில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து விடுகின்றன; பாலைவனமாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் சிக்கலானதும், நெடுங்காலத்ததுமான சமூக, உளவியல் விளைவுகளை உருவாக்குகின்றன.

அணுகுண்டு போடப்பட்டு இவ்வளவு காலம் கழிந்த பிறகும் அது இன்னும் தொடர்ந்து உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஹிரோஷிமாவில் உள்ள கதிர்வீச்சு விளைவு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஷிங்கேமத்சு இந்த அழிவைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா?

“”இவர்களுக்கும், குண்டுவெடிப்பில் பிழைத்திருக்கும் பிறருக்கும் போர் இன்னும் முடியவில்லை. அணுகுண்டின் விளைவான இந்தக் கதிர்வீச்சு நோய்கள் தம்மிடமிருந்து தீருமா? எப்போது தீரும்? என்று அவர்கள் எல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…”

போர், நாசத்தை விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அணு ஆயுதங்கள் எதிரிகளை மட்டுமல்ல, ஏவியவர்களையே அழித்து விடும்; உலகத்தையே சுடுகாடாக மாற்றிவிடும்; யாருக்காகவும் அழ யாரும் இருக்க மாட்டார்கள்.

வெள்ளைப் புறாவைப் பறக்கவிடுவதால் மட்டும் உலக அமைதி உண்டாகிவிடாது. வெண்புறாவைப் பறக்கவிடுவதும் நாம். அதனைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவதும் நாம். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். காலத்தின் கட்டளை இது. ஆம், போர் இன்னும் முடியவில்லை!

(கட்டுரையாளர்: சமூக ஆர்வலர்).

Posted in Agni, America, Arms, Atom, Baikonur, bhopal, Bombs, Britain, China, dead, Death, Deficiency, Deformity, Destruction, Effects, Electricity, England, Enriched, Enrichment, Fights, France, Hiroshima, Impact, International, Israel, Japan, Killed, leak, London, medical, Missile, Mohawk, Nagasaki, Nuclear, Pakistan, Palestine, Peace, Power, Russia, Technology, Tragedy, UK, Ukaraine, Ukraine, Uranium, US, USA, USSR, War, Weapons, World | 1 Comment »

Nuclear Power – India’s Right

Posted by Snapjudge மேல் மார்ச் 20, 2007

அணுசக்தி: இந்தியாவின் உரிமை

அணு உலைகளில் எரிபொருள்கள் எரிந்து தீர்ந்த பின்னர் அவற்றை எடுத்துச் சுத்தப்படுத்தி உபயோகமான கதிரியக்கப் பொருள்களைத் தனியே பிரித்து எடுப்பதற்கான உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை அணுசக்தி கமிஷனின் தலைவர் அனில் ககோட்கர் எடுத்துக் கூறியுள்ளார்.

ஆக்கப்பணிகளுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில் இந்தியாவுடன் அமெரிக்கா ஒத்துழைப்பது தொடர்பாகக் கடந்த ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தில் இந்தியா குறித்த சில நிபந்தனைகள் உள்ளன. இது அமெரிக்கச் சட்டம் என்பதால் அவை இந்தியாவைக் கட்டுப்படுத்தாது. இந்தியாவுக்கு அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்திக்கான அணு உலைகளை விற்கலாம் என அனுமதி வழங்குவதே அச் சட்டத்தின் பிரதான நோக்கமாகும். மற்றபடி அணுசக்தி ஒத்துழைப்பு பற்றி “123′ ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டாக வேண்டும்.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகுதான் அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் இந்தியாவுக்கு மின் உற்பத்திக்கான அணு உலைகளை விற்க ஆரம்பிக்கும். நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு இவ்வித அணுமின் நிலையங்கள் நிறையத் தேவைப்படுகின்றன. இந்த அணு உலைகள் மட்டுமன்றி இவற்றில் பயன்படுத்துவதற்கான யுரேனிய எரிபொருளும் வெளிநாடுகளிடமிருந்து பெறப்படும்.

எந்த ஓர் அணுஉலையானாலும் அதில் யுரேனிய எரிபொருள் எரிந்து தீர்ந்த பின்னர் மிஞ்சும் யுரேனியத்திலிருந்து புளுட்டோனியம் என்ற பொருளை மிக நுட்பமான முறையில் தனியே பிரித்தெடுக்க முடியும். அந்தப் புளுட்டோனியத்தைப் பயன்படுத்தி அணுகுண்டு தயாரிக்க முடியும். ஆகவேதான் மின்உற்பத்திக்கான அணுஉலைகளை விற்கும்போது இவ்விதம் பிரித்தெடுக்கிற முறையைக் கைக்கொள்ளக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்படும். அதற்கான கண்காணிப்பு முறைகளும் அமல்படுத்தப்படும். அணு ஆயுதங்களைப் பெற்றிராத நாடுகள் மீது இத்தகைய நிபந்தனைகளை விதிப்பதில் அர்த்தமிருக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் சில தரப்பினர் இந்தியா மீதும் அவ்வித நிபந்தனைகளை விதிக்க விரும்புகின்றனர். ஏற்கெனவே அணுகுண்டுகளைத் தயாரித்து வெற்றிகரமாக அவற்றை வெடித்துச் சோதித்துள்ள இந்தியா மீது இவ்வித நிபந்தனைகளை விதிக்க முற்படுவது வீண் எரிச்சலை உண்டாக்குவதாகவே இருக்கும். தவிர ஏற்கெனவே அணுஆயுத வல்லரசு நாடாகிவிட்ட இந்தியா மீது இவ்வித நிபந்தனைகளை விதிப்பது பாரபட்சமான செயலாக இருக்கும். ஏனெனில் இப்போது அணுகுண்டுகளைப் பெற்றுள்ள வல்லரசு நாடுகள் மீது இவ்விதத் தடை கிடையாது.

இந்தியா இனிமேல் அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்கலாகாது என்றும் இந்தியா மீது தடை விதிக்க ஒரு முயற்சி உள்ளது. இதுவும் பாரபட்சமானதே. ஏனெனில் வல்லரசு நாடுகள் மீது இவ்விதத் தடை கிடையாது. 1998-ல் நிலத்துக்கடியில் ஒரேசமயத்தில் பல அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்த இந்தியா இப்படிப்பட்ட சோதனையை மேற்கொண்டு நடத்த உத்தேசம் கிடையாது என்று தெரிவித்தது. இந்தியா தானாக இப்படி சுயகட்டுப்பாட்டை விதித்துக் கொள்வது என்பது வேறு; வல்லரசு நாடுகள் இந்தியா மீது இவ்விதத் தடையை விதிப்பது என்பது வேறு.

இவையெல்லாம் ஒன்றைக் காட்டுகின்றன. இந்தியா முழு அளவில் அணு ஆயுத வல்லரசு ஆகிவிட்டது என்பது உறுதியாக்கப்பட்டுவிட்டது. அப்படியும்கூட வல்லரசு நாடுகளுக்கு இந்தியா பெற்றுவிட்ட அந்த அந்தஸ்தை ஏற்க மனம் இல்லை.

===================================================

தெரியுமா..?: அச்சுறுத்தும் உண்மை

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மூன்றாவது தூண் எனக் குறிப்பிடப்படும் அம்சம், “ஆக்கப் பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தும் உரிமை’. அணு ஆயுதத்தைப் பெற்றிராத உறுப்பு நாடுகள், நடைமுறையில் இந்த உரிமையைக் கூட அனுபவிக்க முடியாத நிலையில்தான் உள்ளன.

இந்த அம்சத்தைப் பொருத்தவரையில், அணு உலைகளில் பயன்படுத்துவதற்கு யுரேனியத்தைச் செறிவூட்ட உரிமை உண்டு என பொருள் கொள்ளப்படுகிறது. ஆக்கப் பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்துவது இறையாண்மை பெற்ற அரசுகளின் பிரிக்க முடியாத உரிமை என ஒப்பந்தம் வரையறுக்கும் அதே சமயம், உறுப்பு நாடுகள் செறிவூட்டல் நடவடிக்கையில் ஈடுபடுவது, ஒப்பந்தத்தின் முதலிரண்டு அம்சங்களோடு முரண்படுகிறது. அணு உலையில் எரிபொருளாக பயன்படுத்துவதற்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் அரசுகளின் திறனும், அணு ஆயுதத் திட்டங்களுக்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனும் ஒப்பந்தத்தில் தெளிவாக வேறுபடுத்தப்படவில்லை. இது ஒப்பந்தத்தின் பலவீனமான அம்சம்.

ஆக்கப் பணிகளுக்கு பயன்படுத்த, ஒன்று, யுரேனியத்தை உறுப்பு நாடுகள் தாமே செறிவூட்ட வேண்டும் அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேசச் சந்தையில் வாங்கியாக வேண்டும். ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்த யுரேனியத்தைச் செறிவூட்டுவதாக வடகொரியா முன்னர் கூறியது. ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கான அணு உலை அதனிடம் இல்லை என்பதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இப்போது ஈரானின் முறை. இடையில் லிபியா ரகசிய அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டத்தைத் தொடங்கி பின்னர் டிசம்பர் 2003-ல் கைவிட்டது.

இதுவரை வெளியாகி உள்ள விவரங்களின்படி 13 நாடுகள் யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனைப் பெற்றுள்ளன. அணு ஆயுதங்களைப் பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நாடுகள் 8. இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளது. எனினும் அதை உறுதிப்படுத்த மறுத்து வருகிறது. இந்த தகவல்கள் ஒருபுறமிருக்க, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி தலைவர் முகமது எல்பரேடி கூற்றுப்படி விருப்பப்பட்டால் 40 நாடுகள் அணுகுண்டுகளைத் தயாரிக்க முடியும். உண்மையிலேயே உலகை அச்சுறுத்தும் உண்மை இது.

=========================================================================
அணுமின் நிலைய பாதுகாப்பை கண்டிப்புடன் கடைப்பிடித்தால் இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை: ஆஸ்திரேலியா அறிவிப்பு

மெல்போர்ன், ஏப். 3: தன் நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை சர்வதேச அணுவிசை ஏஜென்சியின் கண்காணிப்புக்கு உள்படுத்த இந்தியா அனுமதிக்க வேண்டும்; அணுசக்தி நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு ஒப்புக்கொண்டால், இந்திய அணுமின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனிய எரிபொருளை ஆஸ்திரேலியா சப்ளை செய்யத் தயாராக இருக்கிறது என்று அந் நாட்டுப் பிரதமர் ஜான் ஹோவர்ட் கூறியுள்ளார்.

இந்தியா ~ அமெரிக்கா இடையிலான, ஆக்கபூர்வ அணுசக்தித் திட்ட ஒத்துழைப்பு உடன்பாட்டை அங்கீகரிக்கவும் ஆஸ்திரேலியா தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத் தகவலை “தி ஏஜ்’ என்னும் ஆஸ்திரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது.

அணுசக்தித் தொழில்நுட்பம் மற்றும் அணுமின் நிலைய எரிபொருள் சப்ளை செய்யும் நாடுகள் அமைப்பில் ஆஸ்திரேலியாவும் இடம்பெற்றுள்ளது.

இந்தியா ~ அமெரிக்கா இடையிலான உடன்பாட்டை அந்த அமைப்பு ஏற்றுக்கொண்டால், அதில் இடம்பெற்றுள்ள நாடுகள், அணுமின் நிலையத்துக்குத் தேவையான சாதனங்கள், யுரேனிய எரிபொருள் ஆகியவற்றை இந்தியாவுக்கு சப்ளை செய்ய முன்வரும்.

எனினும், சர்வதேச அளவிலான, அணுசக்தித் தொழில்நுட்ப பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்பிடி) கையெழுத்திடும் நாடுகளுக்குத்தான் அணுமின் நிலைய எரிபொருளை ஆஸ்திரேலியா சப்ளை செய்யலாம் என்று அந்த நாட்டுச் சட்டம் கூறுகிறது. ஆனால், என்பிடி-யில் இந்தியா கையெழுத்திடவில்லை.

இந்தியா ~ அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தில், இந்திய அரசின் சிறப்புத் தூதராக சியாம் சரண், ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவர், கான்பெர்ரா நகரில் பிரதமர் ஜான் ஹோவர்டை சந்திக்கவுள்ளார். இந்திய அணுமின் நிலையத்துக்கு யுரேனிய எரிபொருளை ஆஸ்திரேலியா வழங்க வேண்டும் என்றும் அவர் ஹோவர்டிடம் கோரிக்கை விடுப்பார்.

இந் நிலையில், மேற்கண்ட நிபந்தனையை முன்வைத்துள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர்.

அதே நேரத்தில், “”இந்தியாவைப் பொறுப்புணர்வுள்ள நாடாக நாங்கள் கருதுகிறோம். அதனுடனான எங்களது உறவு வளர்ந்துவருகிறது. இந்தியா விஷயத்தில் வேறுபல அம்சங்களையும் நாங்கள் கருத்தில் கொள்வோம்” என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே, இந்தியாவைப் பொருத்தவரை, “என்பிடி’ உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் என்னும் நிபந்தனையை ஆஸ்திரேலியா தளர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
=========================================================================
இந்தியாவும், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தமும்

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, நேட்டோ நாடுகளுக்கிடையே ரகசிய அணு ஆயுதப் பகிர்வு ஒப்பந்தம் இருந்தது. இதன்படி, அமெரிக்கா பிற நேட்டோ நாடுகளில் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. போர் தொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் ஒழிய, அணு ஆயுதங்களின் மீதான கட்டுப்பாடு நேட்டோ நாடுகளுக்கு மாற்றித் தரப்படாது என அமெரிக்கா கூறி வருகிறது என்றாலும், இது ஒப்பந்தத்தை மீறுகிற செயலாகும்.

அமெரிக்காவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இடையிலான இந்த ரகசிய ஒப்பந்தம் பற்றி சோவியத் யூனியன் போன்ற சில நாடுகளுக்கு தெரியும் என்றாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பல நாடுகளுக்கு இந்த விவரம் தெரியாது.

2005-ம் ஆண்டு கணக்குப்படி, பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அணுகுண்டுகளை வழங்கியுள்ளது. இதுவும் ஒப்பந்தத்தை மீறுகிற செயலாகும்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் பற்றி மறுபரிசீலனை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை அமெரிக்கா தனது நோக்கங்களைச் சாதித்துக் கொள்ளத்தான் பயன்படுத்துகிறது. சான்றாக, மே 2005-ல் நடைபெற்ற 7-வது பரிசீலனை மாநாட்டில் அமெரிக்காவுக்கும், பிற நாடுகளுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிற நாடுகள், அதிகாரபூர்வ அணு ஆயுத நாடுகள் ஆயுதக் குறைப்பு செய்வதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின. ஆனால் அமெரிக்காவோ ஈரானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கவனப்படுத்துவதில் முனைப்பு காட்டியது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளின் முக்கியமான வாதம் இதுதான்: ஒப்பந்தமானது அணு ஆயுதங்களைப் பெற்றுள்ள மிகச்சில நாடுகள், அணு ஆயுதங்கள் இல்லாத பல நாடுகள் என இருபிரிவாக உலகைப் பிரிக்கிறது. அதாவது 1967-க்கு முன்னர் அணு ஆயுதச் சோதனை நடத்திய நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது. எந்த அறநெறிகளின் அடிப்படையிலும் இது சரி அல்ல. இந்த அடிப்படையில்தான் இந்தியா அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.

இந்தியா அணு ஆயுதங்களைப் பெற்றுள்ளபோதும், எக்காரணம் கொண்டும் முதலில் அதைப் பயன்படுத்துவதில்லை என தானே முன்வந்து உறுதி வழங்கியுள்ளது.

=========================================================================
இந்தியாவுக்கு யுரேனியம்

இந்தியாவுக்கு யுரேனியம் அளிக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவார்டு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். இந்தியாவில் அணுமின் நிலையங்கள் மூலம் மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்கு இந்த யுரேனியம் உதவியாக இருக்கும்.

இந்தியா 1998-ல் நிலத்துக்கடியில் அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தபோது இந்தியாவை மிகக் கடுமையாகக் கண்டித்த ஒருசில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். அப்போதிலிருந்து இந்தியாவுடன் அணுசக்தி விஷயத்தில் எந்த ஒத்துழைப்பும் கூடாது என்று ஆஸ்திரேலியா சில ஆண்டுகாலம் கூறி வந்தது. எனினும் அண்மைக்காலமாக ஆஸ்திரேலியாவின் போக்கில் பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே கடந்த சில ஆண்டுகளாக உறவுகள் நெருக்கமாகியுள்ளது ஒரு காரணமாகும். இதல்லாமல் இந்தியா – அமெரிக்கா இடையில் ஏற்பட்ட அணுசக்தி உடன்பாடு அதைவிட முக்கியக் காரணமாகும்.

உலகில் மொத்த யுரேனிய உற்பத்தியில் பாதி கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் உற்பத்தியாகிறது. உலகிலேயே மிகப்பெரிய யுரேனிய சுரங்கம் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது. அங்கு யுரேனிய உற்பத்தியை இரட்டிப்பாக்குவது பற்றி ஆஸ்திரேலிய அரசு ஆராய்ந்து வருகிறது. மேலைநாடுகளில் புதிதாக அணுமின் நிலையங்களை அமைப்பது நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் இந்தியா, சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில்தான் புதிதுபுதிதாக அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக உலகில் யுரேனியத்தின் விலை ஏறுமுகமாக உள்ள நிலையில் யுரேனிய ஏற்றுமதி மூலம் கூடுதல் வருமானம் பெற ஆஸ்திரேலியா விரும்புகிறது. இப் பின்னணியில்தான் ஆஸ்திரேலியாவிடமிருந்து யுரேனியம் பெறுவது தொடர்பாக இந்தியாவின் சிறப்புத் தூதர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பேச்சு நடத்தியுள்ளார்.

வருகிற ஆண்டுகளில் நாட்டில் பெருகி வரும் மின்சாரத் தேவையை அணுமின் நிலையங்கள் மூலமே பூர்த்தி செய்ய முடியும் என இந்திய அரசு முடிவு செய்து, அதற்கான வழியில் ஈடுபட்டுள்ளது. அணுசக்தி தொடர்பான இந்திய – அமெரிக்க உடன்பாடு அதற்கான முதல்கட்டமாகும். அமெரிக்காவுடன் மேலும் விரிவான உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. இதுதான் பச்சைக்கொடி காட்டுகிற உடன்பாடாக இருக்கும். அதாவது உலகில் யுரேனியத்தை உற்பத்தி செய்கின்ற நாடுகளும் அணு உலைகளை உற்பத்தி செய்கின்ற முன்னேறிய நாடுகளும் தங்களுக்குள்ளாக கூட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. பரஸ்பரம் விவாதித்து முடிவு எடுத்தாலொழிய எந்த நாட்டுக்கும் இவற்றை விற்கலாகாது என்பது இவற்றின் இடையிலான உடன்பாடாகும்.

அணுமின் நிலையங்களில் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்ற அதேநேரத்தில் சிறப்பு முறைகள் மூலம் அணுகுண்டுகளையும் செய்ய முடியும் என்பதே இதற்குக் காரணம். ஆகவேதான் இதுவிஷயத்தில் பல கட்டுப்பாடுகள்.

இந்தியாவுக்குத் தேவையான அணுஉலைகளையும் அத்துடன் யுரேனியத்தையும் தங்கு தடையின்றி பெறுவதற்கு இன்னும் பல நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டியாக வேண்டும். ஆனால் இச் சிக்கல்கள் பெரிய தடையாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஏனெனில் இந்தியாவுக்கு யுரேனியத்தை அல்லது அணு உலைகளை விற்பதில் நாடுகளிடையே போட்டாபோட்டி மூளும்போது இவை இயல்பாக அகன்றுவிட வாய்ப்பு உள்ளது.

இந்தியாவுக்கு அணுஉலைகளை விற்க பிரான்ஸ் ஏற்கெனவே தயாராக உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பல பெரிய நிறுவனங்களும் தீவிர அக்கறை காட்டி வருகின்றன. தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் அணுமின் நிலையங்களை அமைத்துக் கொடுக்கும் ரஷியாவும் மேலும் பல அணு உலைகளை விற்கத் தயாராக உள்ளது. ரஷியாவில் ஓரளவுக்கு யுரேனியம் கிடைக்கிறது.

இந்தியாவில் நமது தேவையைப் பூர்த்தி செய்கின்ற அளவுக்கு யுரேனியம் கிடைப்பதில்லை என்பதால்தான் இவ்வளவு பாடு.

=========================================================================

Posted in America, Atomic, Australia, Bombs, defence, Electricity, Enrichment, Generation, Industry, infrastructure, Lignite, Melbourne, Military, NPT, Nuclear, Op-Ed, Plants, Power, Proliferation, Security, Superpower, Treaty, UN, Uranium, USA | 1 Comment »

Interview with D Rambabu – Publisher & Editor of English to Telugu to Tamil Dictionary

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

முகங்கள்: தமிழுக்கு ஒரு புது வரவு!

ந. ஜீவா

சிலர் ஒன்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நினைத்துச் செய்வார்கள். ஆனால் அது பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்துவிடும். ஆனால் சிலர் செய்யும் செயல்களோ அவர்களே எதிர்பாராத வகையில் சிறப்பாக அமைந்துவிடும். தமிழ் வழிக் கல்வி என்றாலே ஏளனமாகப் பார்க்கும் இக்காலத்தில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் நர்சு பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் ஏன் நோயாளிகளுக்கும் பயன்படும் விதமாக மருத்துவத்துறையில் வழக்கத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சொற்களுக்கு ஓர் அகராதியைத் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார், டி.ராம்பாபு. இது ஆங்கிலம் – தெலுங்கு – தமிழ் அகராதியாகும்.

சென்னை விஜயா குரூப் ஆஃப் ஹாஸ்பிட்டலின் நிதி, கணக்குப் பிரிவின் பொது

மேலாளராகப் பணிபுரியும் ராம்பாபு,

தமிழுக்கோ, தெலுங்குக்கோ பெரிய தொண்டு செய்வதாக நினைத்தெல்லாம் இதைச் செய்யவில்லை.

அவரைச் சந்தித்துப் பேசிய போது…

தமிழிலும் தெலுங்கிலும் இப்படியொரு மருத்துவ அகராதியைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

நான் விஜயா குரூப் ஆப் ஹாஸ்பிட்டலில் 1984 ல் வேலைக்குச் சேர்ந்தேன். நிறைய பேஷன்ட்ஸ் ஆந்திராவிலிருந்து இங்கு வந்து அட்மிட் ஆவார்கள். எனது பூர்வீகம் ஆந்திரா என்பதால் டாக்டர்கள் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்த மருத்துவக் குறிப்புகள் என்னவென்று தெரியாமல் அவர்கள் என்னிடம் வந்து கேட்பார்கள். எனக்குத் தெரிந்த அளவுக்கு த் தெலுங்கில் அவர்களுக்குச் சொல்வேன். ஆனால் பல வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. அதற்காக எத்தனையோ டிக்ஷனரிகளைப் புரட்டியிருக்கிறேன். இருந்தும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது.

ஆங்கிலத்தில் உள்ள மருத்துவத் துறை சொற்களுக்குத் தமிழிலோ, தெலுங்கிலோ பொருள் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று உணர்ந்தேன். எனவே நான் கண்டறிந்த சொற்களுக்கான பொருளைத் தொகுத்து ஓர் அகராதியாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியது.

நீங்கள் தயாரித்துள்ள இந்த அகராதி யாருக்குப் பயன்படும்?

சாதாரண மனிதனுக்கே இந்த அகராதி பயன்படும். டாக்டர் தனது மெடிக்கல் ரிப்போர்ட்டில் ஏ/பஎன்று போட்டிருப்பார். இதற்கு என்ன அர்த்தம் என்று பேஷன்ட்டுக்குத் தெரியாது. இந்த அகராதியைப் பார்த்தால் ஏ/ப என்றால் ஹைப்பர் டென்சன் என்றும் தமிழில் மிகை ரத்த அழுத்தம் என்றும் தெரிந்து கொள்ளலாம். க்ஷ.ண்.க். என்று மருந்துச் சீட்டில் குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு அர்த்தம் ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று இந்த அகராதியின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு, நர்சிங் பயிலும் மாணவர்களுக்கு இந்த அகராதி பயன்படும். ஆங்கிலத்தில் புரியாத சொற்களுக்கு தமிழில், தெலுங்கில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக நர்ஸ்களுக்கு அதிகம் பயன்படும். டாக்டர் என்ன எழுதியுள்ளார், மெடிக்கல் ரிப்போர்ட் என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து வேலை செய்ய வேண்டியவர்கள் அவர்கள். அவர்களுக்கு இது அதிகம் பயன்படும்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகள் எதற்கு?

தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்குச் சென்று மருத்துவம், நர்சிங் பயிலும் மாணவர்கள் இருக்கின்றனர். அதுபோல ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வந்து பயிலும் மாணவர்களும் உள்ளனர். எனவே இருமொழிக்காரர்களுக்கும் பயன்படும்விதமாக இந்த மருத்துவ அகராதியைத் தயாரித்தேன். மேலும் எனக்குத் தாய்மொழி தெலுங்கு என்பதால் இந்தப் பணி சிரமமாகத் தெரியவில்லை.

மருத்துவ அகராதியைத் தயாரிப்பது என்பது வேறு; புத்தகப் பதிப்புத் துறை என்பது வேறு. அப்படியிருக்க நீங்களே இதை ஏன் வெளியீட்டீர்கள்?

அடிப்படையில் நான் டாக்டர் இல்லை. நான் அக்கவுன்ட்ஸ் படித்தவன். மருத்துவமனையில் நீண்டநாள் பணி புரிந்தாலும் நிறைய மருத்துவர்களுடன் பழக்கம் வைத்திருப்பதாலும் இந்த டிக்ஷனரியைத் தொகுக்க முடிந்தது. மேலும் நீங்கள் நினைப்பது மாதிரி புத்தகப் பதிப்புத் துறை எனக்குப் புதியதல்ல. நான் ஏற்கனவே “அனைத்து தேவதை காயத்ரி மந்திரங்கள்’ என்ற சிறு புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன். அது இப்போது மூன்று பதிப்புகள் வந்துவிட்டது. எனவே எனக்குப் புத்தகத் தயாரிப்பு புதியதல்ல.

ஒரு டாக்டர் அல்லாத நீங்கள் இப்படி ஓர் அகராதியைத் தொகுத்ததற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

இது நூலாக வெளிவரும் முன்பு ஆந்திராவில் உள்ள ஒரு டாக்டரிடம் கையெழுத்துப் பிரதியைக் காட்டினேன். “நீ ஒரு டாக்டரா?’ என்று கேட்டார். “இல்லை’ என்றதும் கையெழுத்துப் பிரதியைப் புரட்டிக் கூடப் பார்க்கவில்லை. ‘சர்ய்-ம்ங்க்ண்ஸ்ரீஹப் – ஆ இருந்துக்கிட்டு எப்படி எழுதுற? நீ மெடிக்கல் ஆள் இல்ல. அதனால பார்க்க மாட்டேன்’ என்று சொன்னார். மூன்று வருடங்களுக்கும் மேலாக இரவு இரண்டு மணி வரை கண்விழித்து செய்த முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பு. ரொம்பவும் மனம் வருத்தப்பட்டேன். ஆனால் சென்னை ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் காலேஜின் டாக்டர் தணிகாசலம் என்னை மிகவும் பாராட்டினார். இதைப் புத்தகமாக வெளியிடணும்

என்று என்கரேஜ் பண்ணினார். “இது மருத்துவத்துறை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலை, நீங்க

பண்ணியிருக்கீங்க’ன்னு புகழ்ந்தார். அது எனக்கு மிகுந்த

தெம்பைக் கொடுத்தது. அப்புறம் எனக்குப் பழக்கமான நிறைய டாக்டர்கள் அகராதியைத் தொகுக்கும் போது ஏற்பட்ட நிறையச் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர். அவர்கள் கொடுத்த ஊக்கத்தினால்தான் இது எனக்குச் சாத்தியமானது.

ஆங்கிலத்தில் உள்ள மருத்துவத் துறை சொற்களுக்கு தமிழில் பொருள் கண்டுபிடிப்பது சிரமமான காரியமாயிற்றே?

இந்த மருத்துவ அகராதியில் உள்ள எல்லாச் சொற்களையும் தொகுத்தது, அதற்கு விளக்கமளித்தது என் வேலையாக இருந்தது. அதை மொழிபெயர்த்தவர் வி.வி.ரத்னஸ்ரீ. என்றாலும் மொழிபெயர்க்கும் போது உடனிருந்து அதிலும் பங்கு பெற்றவன் என்கிற முறையில் அதன் சிரமங்களை அறிவேன். மேலும் இந்த அகராதி தயாரிப்பதற்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என்று மொழிகள் மட்டும் தெரிந்தால் மட்டும் போதாது. மருத்துவத்துறை தொடர்பான அறிவும் அவசியம். இல்லையென்றால் சரியாக மொழிபெயர்க்க முடியாது.

தெலுங்கைவிட தமிழில் மொழிபெயர்க்கச் சிரமப்பட்டோம். காரணம், தெலுங்கில் நிறைய எழுத்துகள் உள்ளன. உதாரணமாக தெலுங்கில் நான்கு “க’ உள்ளது. தமிழிலோ ஒன்றே ஒன்றுதான். அதுபோல ந, ண, ழ, ள, ல போன்றவற்றில் எந்த “ந’ போடுவது, எந்த “ல’ போடுவது என்பது பிரச்சினையாக இருந்தது. இது எங்களுடைய முதல் முயற்சி என்பதால் எங்களுக்கே தெரியாமல் பிழைகள் இருக்கக்கூடும். சுட்டிக்காட்டினால் அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்திக் கொள்வோம்.

இப்போது தமிழ்வழிக் கல்வி கற்பதில் ஆர்வம் குறைவாக உள்ளது. அப்படியிருக்க இந்த அகராதி மாணவர்களுக்கு எப்படி உதவும்?

நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மையிருக்கிறது. என்றாலும் ஆங்கில வழி பயிலும் மாணவர்கள் என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழில் அதைத் தெரிந்து கொண்டால் சிறப்பாகப் படிக்க முடியும். மேலும் ஆங்கிலத்தில் உள்ள ஒரு மருத்துவம் தொடர்பான சொல்லுக்குத் தமிழில் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ள இந்த அகராதி உதவும்.

சினிமாவை ரசிக்கப் புரிந்து கொள்ள மொழியே தேவையில்லை என்றாலும் எத்தனை டப்பிங் திரைப்படங்கள் வருகின்றன? டி.வி.யிலும் கூட டப்பிங் படங்களை ஒளிபரப்புகிறார்களே! எனவே தாய்மொழிக்கெனத் தனிச் சிறப்பு இருக்கவே செய்கிறது.

உங்களுடைய அகராதியில் மருத்துவத் துறை தொடர்பான சொற்களுக்கான பொருள்கள் தவிர வேறென்ன சிறப்பு அம்சம் உள்ளது?

இந்த அகராதியில் நிறைய மருத்துவம் தொடர்பான பொதுவிஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அகராதி மொத்தம் 6 பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதியில் மனித உடல், உடல்நலன் தொடர்பான பொதுவான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு நோய்க்கும் என்னென்ன உணவு சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் சுருக்கக் குறியீடுகளுக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நான்காம் பகுதியில் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் எல்லாவற்றையும் பற்றிய விளக்கம் உள்ளது. ஐந்தாம் பகுதி அகராதி. ஆறாம் பகுதியில் மனித உடலின் பல்வேறு பாகங்களின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புத்தகத்திற்கு வரவேற்பு?

சாதாரண மனிதனுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் என்ற நோக்கத்தில் தான் இந்த அகராதியைத் தொகுத்து வெளியிட்டேன். ஆனால் அது தமிழுக்குச் செய்த சேவையாகக் கருதப்படுவது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.

Posted in Accountant, Andhra Pradesh, AP, Books, D Rambabu, Dictionary, Dinamani, Doctor, Editor, Education, English, Enrichment, Explanation, Help, Interview, Kathir, Language, Learn, Medicine, service, Students, T Rambabu, Tamil, Teach, Technical, Telugu, Terminology, Translation, Vijaya Hospital | Leave a Comment »

Iran Indicates that Uranium Enrichment cannot be stopped

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006

யூரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த முடியாது என இரான் தெளிவாக சமிக்ஞை

இரானின் அணுசக்தி கட்டமைப்பு ஒன்று
பொருளாதார தடை விதிக்க ஐ.நா பாதுகாப்பு சபையில் முயற்சி தொடரும்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கேட்டபடி, யூரேனியம் செறியூட்டும் திட்டத்தினை தாம் கைவிட முடியாது என்று இரான் முதற்தடவையாக தெளிவாக காட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக்கொள்கை தலைவர் ஹாவியே சோலானாவுக்கு இரான் இந்த அறிகுறியை காட்டியதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இரானிய அரசின் மூத்த அதிகாரிகளுக்கும், சோலானவுக்கும் இடையில் வாரக்கணக்கில் நடந்த பேச்சுவார்த்தைகள் எதுவித முன்னேற்றத்தையுமே ஏற்படுத்தவில்லை என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

பிபிசி யின் இராஜதந்திர முகவர் கருத்து வெளியிடும்போது, இருதரப்பினருக்கும் இடையில் பேச்சுக்கள் தொடர்ந்தாலும், இரானிய அரசின் மீது பொருளாதார தடை ஒன்றை வரைய பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் மத்தியில் முயற்சிகள் தொடரும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படியான தடைகள் எதையும் அங்கீகரிக்க சீனாவும், ரஷ்யாவும் தயக்கம் காட்டுவதற்கான காரணத்தால், இது போன்ற திட்டங்கள் பாதுகாப்பு சபையில் முன்னர் பிளவுப்படுத்தின.

எனவே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும் என்றால், பக்குவமான பேச்சுவார்த்தைகள் அவசியம் என்று பிபிசியின் ராஜதந்திர முகவர் கூறுகிறார்.

Posted in China, Enrichment, EU, Iran, Nuclear, Russia, Tamil, Uranium | Leave a Comment »