Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Employers’ Category

Sixth Pay Panel recommends hefty pay hikes for government staff: Deficit may widen

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

மத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீதம் ஊதிய உயர்வு: 6-வது ஊதியக் குழு பரிந்துரை

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 6 வது ஊதியக்குழுத் தலைவர் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா.

புதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

புதிய ஊதிய விகிதத்தை 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

முன் தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி, இரு தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஊதியக் குழு தனது பரிந்துரைகளை நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.

இந்தப் பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஆய்வு செய்து அதை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். மத்திய அமைச்சரவை இப் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தும்.

இதன் மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

புதிய ஊதிய உயர்வு விகிதப்படி மத்திய அமைச்சரவைச் செயலரின் ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செயலரின் ஊதியம் ரூ. 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அதன் அடிப்படையில் புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 2.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

திறமைக்குப் பரிசு: திறமையான ஊழியர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையில் “திறமை அடிப்படையிலான ஊதிய உயர்வு’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

வீட்டு வாடகைப்படி: வீட்டு வாடகைப்படி உள்பட பெரும்பாலான படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. குழந்தைகளின் கல்வி செலவு உதவித் தொகை ரூ. 50-லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் 40 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் உள்ள 35 கிரேடுகளை (பணி நிலை) 20 கிரேடுகளாக குறைக்கவும் ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஊதியம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ வீரர்களுக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஊதியக் குழு சிபாரிசு செய்துள்ளது.

ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு இணையான பதவி வரை மாதப்படி ரூ. 6000- ஆக உயர்த்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியக் குழு பரிந்துரைகளால் அரசுக்கு 2008 – 09 நிதியாண்டில் ரூ. 12,561 கோடி கூடுதல் செலவாகும்.

முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி தொகைக்கு ஆகும் செலவு ரூ. 18,060 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

* அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் உயர்வு

* 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி

யிலிருந்து அமல்படுத்த வேண்டும்.

* முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி இரு தவணை

களாக வழங்கப்பட வேண்டும்.

* அதிகபட்சமாக அமைச்சரவை செயலரின் ஊதியம் ரூ. 90,000

* கீழ்நிலை ஊழியரின் குறைந்தபட்ச

சம்பளம் ரூ. 6600

* ஓய்வு பெறும் வயது 60 என்பதில் மாற்றமில்லை

* பணி நிலை 35 கிரேடுகள் என்பது 20 கிரேடுகளாக குறைப்பு

* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவத்தினருக்கும் ஊதியம்

* பிரிகேடியர் பதவி வரை மாதப் படி

ரூ. 6000-ஆக உயர்வு

* வார வேலை நாள் 5 என்பதில் மாற்றமில்லை

* ஆண்டுதோறும் ஊதிய உயர்வு 2.5 சதவீதம்

* திறமை அடிப்படையில் கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு

* மத்திய அரசு ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு

* வீட்டு வாடகைப் படி உள்பட பெரும்பாலான படிகள் இரு மடங்காக உயர்வு

* குழந்தைகளின் கல்விச் செலவுக்கான உதவித் தொகை ஆண்டுக்கு 50-திலிருந்து ரூ. 1000-ஆக உயர்வு

* விடுதி மானியம் ரூ. 3 ஆயிரமாக உயர்வு

* ஒரு பணி நிலையில், அதிகபட்ச ஊதியத்தை எட்டிய ஓராண்டுக்கு பிறகு, அவருக்குப் பதவி உயர்வு வழங்காவிட்டாலும் அடுத்த பணி நிலைக்கு உரிய ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.

—————————————————————————————————————————————————–
உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு

புதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள 6500 – 10,500 என்ற சம்பள விகிதத்தை 8700 – 34,800 என்று மாற்றி கிரேடு சம்பளம் ரூ. 4600-வுடன் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர் பணிகளை இணைத்து அப் பதவிகளுக்கான ஊதிய விகிதம் 18,400 – 22,400 தற்போது 39,200 – 67,000 என்று உயர்த்தி கிரேடு ஊதியம் 9 ஆயிரத்துடன் வழங்கப்படும்.

4 ஆண்டுகள் பணி முடிந்த சீனியர் ஜூடிசியல் உதவியாளர், சீனியர் தனி உதவியாளர், ரீடர், சீனியர் ஜூடிசியல் மொழி பெயர்ப்பாளர், நீதிமன்ற அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஊதியம் 6,500 – 10,500 என்பது தற்போது 8,000 – 13,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்று பல்வேறு பணிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————–
முப்படைத் தளபதிகளுக்கு ரூ. 90,000 ஊதியம்

புதுதில்லி, மார்ச் 24: தரைப்படை, விமானப் படை, கடற்படை தளபதிகளுக்கு ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.

தற்போது முப்படைத் தளபதிகளுக்கும் மாத ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 60 ஆயிரம் உயர்த்தி மொத்தம் ரூ. 90 ஆயிரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் மத்திய அமைச்சரவை செயலருக்குத்தான் ரூ. 90 ஆயிரம் வழங்க ஊதியக்குழு சிபாரிசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த ராணுவ வீரர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————–
ஆணையத் தலைவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை ஊதியம்

புதுதில்லி, மார்ச் 24: பங்கு பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் “செபி’ அமைப்பு, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்கு முறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களின் தலைமைப் பதவிகளுக்கு மாத ஊதியம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தி 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

திறமையான நபர்களை வெளியிலிருந்து இப் பதவிக்கு ஈர்க்கும் நோக்கில் ஊதியம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஊதியக் குழு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.

இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ. 1.5 லட்சமும் ஆணையத்தின் தலைவருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கார் மற்றும் வீடு அளிக்கப்படாவிட்டால் தலைமைப் பதவிக்கு ரூ. 3 லட்சமும் உறுப்பினர் பதவிக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க குழு சிபாரிசு செய்துள்ளது.

—————————————————————————————————————————————————–
வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட்

ஹைதராபாத், மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கருத்துக் கூறியுள்ளது.

மத்திய அரசுப் பணி நிலைகள் 35 கிரேடுகளில் இருந்து 20 கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.

மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு வெகுவாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு கணிசமாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்தியா போன்ற ஏழை நாடுக்கு இது தேவையில்லை என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
ஊதியக் குழு பரிந்துரைகள்: மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம்

சென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் கூறினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

எங்களுடைய அனுபவத்தில் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும் ஊதியக் குழு அறிக்கையாக இது இருக்கிறது. நான்காம் நிலை ஊழியருக்கும், உயர்நிலை அதிகாரிக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு 12 விழுக்காடு அளவுதான் இருக்க வேண்டும் என்றபோதிலும், அந்தக் கோட்பாடு இப்போது மீறப்பட்டுள்ளது.

நான்காம் நிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு 18 முதல் 25 விழுக்காடு வரைதான் உள்ளது. அமைச்சரவைச் செயலர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வரும் காலத்திற்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ.17 லட்சம் வரை வரும்.

சமூகத்தில் மிகவும் பின்தங்கியோர் அதிக அளவில் வேலைபார்க்கும் நான்காம் நிலை ஊழியர் பணிகள் இனிமேல் இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் காப்பீடு, வங்கித் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம் செய்யப்படுகிறது. அவருடைய மேற்பார்வையில் இயங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியத் திருத்தம் செய்யப்படுகிறது. அதிலும்கூட நான்காம் நிலை ஊழியர்களுக்கு 18 விழுக்காடுதான் உயர்வு கிடைத்துள்ளது.

விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது மிகவும் ஏமாற்றமான விஷயம்தான்.

இதைக் கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக அகில இந்திய அளவில் ஆலோசனை செய்து, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
6-வது ஊதியக் குழு பரிந்துரை: “தனியாருடன் ஒப்பிடக் கூடாது’

சென்னை, மார்ச் 24: நிதித்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்:

இந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடும் வகையில் ஏதும் இல்லை. தேர்தல்கால அறிவிப்புகள் போலத்தான் இதுவும் இருக்கிறது. உயரதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு நன்றாக இருக்கிறது என்றாலும், கீழ்நிலை அலுவலர்களுக்கு அதைப் போன்ற நிலை இல்லை. அதனால் அவர்கள் போராடக் கூடிய நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை. நான்காம் நிலை பணியிடங்களை ஒழித்துவிட மறைமுகமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பொருத்தவரை, தனியார் துறையில் தரப்படும் ஊதியத்துடன் ஒப்பிடக் கூடாது. அரசுப் பணியில் உள்ளவரை, வீட்டு வசதி, மருத்துவ வசதி, வாகன வசதி, கல்வி வசதி போன்றவை இருப்பதை மறந்துவிடக் கூடாது. பணிக் காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனியார் துறையில் இதைப் போன்ற எந்த வசதியும் கிடையாது.

எனவே, அரசுத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனியார் துறைக்குப் போய்விடுவார்கள் என்பதில் உண்மை ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தரும் சம்பளம் மிகவும் குறைவுதான்’

நமது சிறப்பு நிருபர்

சென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி பெரும்பாலான அதிகாரிகளுக்கு உயர்த்தப்படும் ஊதியத்தில் 33 சதவீதம் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்பதால், அவர்களின் கைக்குக் கிடைக்கும் கூடுதல் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர்.

மத்திய அரசில் வருவாய்த் துறைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற எம்.ஆர். சிவராமன் (படம்) இதுபற்றிக் கூறியதாவது:

இப்போது உயர்த்தப்படும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் போக அரசுச் செயலாளர்களுக்கு ஏறத்தாழ ரூ.13,000 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். அதன்படி பார்த்தால், அறிக்கையில் உள்ளவாறு நிறைய ஊதிய உயர்வு தரப்படுவதைப் போலத் தோன்றினாலும், வருமான வரி மூலமாக கணிசமான தொகை அரசுக்கே திரும்பச் சென்றுவிடும். அதனால், அரசுக்கு நிகர செலவு என்பது குறைவாகத்தான் இருக்கும்.

இயக்குநர், செயலாளர், இணைச் செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் ஏறத்தாழ 14 மணி நேரம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டியுள்ளது. அவர்கள் மீது நிறைய பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊதியம் நிர்ணயித்திருக்க வேண்டும்.

தனியார் துறையில் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட இது மிகவும் குறைவானதாகும். செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்களின் செயல்பாடுகளுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் என சம்பளம் தரலாம்.

இதுபோன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு முன்பாக, பொதுமக்கள் முன்பாக நிறுத்தி, அவரின் சொத்து விவரம், பணித் திறன் போன்றவற்றைக் கேட்டுப் பதிவு செய்யலாம். அதில் திருப்தி ஏற்பட்டால் அப் பதவிக்கு நியமிக்கலாம். தகுதி, பணித் திறன் அடிப்படையில் அதிகமான சம்பளத்தைத் தரலாம் என்பதுதான் சரியானதாக இருக்கும்.

வெளிநாடுகளில் உயரதிகாரிகளுக்கு வாகனங்கள் தரப்படுவதில்லை. இந்தியாவில் வாகனங்கள், அதற்கு ஓட்டுநர்கள் என தேவையற்ற செலவுகள் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரு சம்பளத்தை உயரதிகாரிக்குக் கொடுத்துவிட்டால், வாகன ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்பு போன்ற செலவுகள் அரசுக்கு மிச்சமாகும்.

மேலும், சில துறைகளில் செயலர் அந்தஸ்துக்கு மேல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் இருப்பது தேவையற்றது என்று அவர் கூறினார்.

தற்போது தமிழக அரசுப் பணியில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியதாவது:

15 முதல் 20 ஆண்டு வரை அனுபவம் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் தருவதற்குத் தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந் நிலையில் இப்போது செயலர் அளவில் ரூ.80 ஆயிரம் என சம்பளம் நிர்ணயித்திருப்பது போதுமானதல்ல. இதில் வரிகள் பிடித்தம் போக ரூ.50 ஆயிரம் அளவுக்குதான் கைக்கு வரும். ஆக, ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருப்பதைவிட கூடுதலாக ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.

அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தச் சம்பள விகிதம் உதவாது. ஊதியக் குழு அறிக்கை அமலுக்கு வருவதற்காக பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்து, நிலுவைத் தொகைகள் கைக்கு வந்ததும் சில மாதங்களில் அவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்வார்கள்.

வெளியில் மாதம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதிலும் பெரும் பகுதி வருமான வரி பிடித்தத்தில் வராத வகையில் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். அதனால், அதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.

20 ஆண்டு அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளியேறினால், அதிக அனுபவம் இல்லாத, புதிய அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசு நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.

எனவே, அனுபவம் பெற்றவர்கள் வெளியேறாமல் தடுக்க வேண்டுமானால், தனியார் துறையில் உள்ள சம்பளத்துக்கு இணையான அளவுக்கு சம்பளம் தர அரசு முன் வர வேண்டும். ஏனெனில், 20 வருட அனுபவம் பெற்றவர்களை திடீரென உருவாக்கிட முடியாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் துறையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்ப்பதே சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

—————————————————————————————————————————————————–
ஊதியக் குழு பரிந்துரை: “பண வீக்கம் அதிகரிக்கும்’

சென்னை, மார்ச் 24 : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவருமான என். முருகன் கூறினார்.

ஊதியக் குழு பரிந்துரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள்:-

“”மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விலைவாசி வெகுவாக உயர்ந்துவிட்டது. மேலும் பண வீக்கமும் 4 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக அதிகரித்துவிட்டது. ஊதியக் குழு பரிந்துரை அமலாகும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும். இது தன்னிச்சையாக ஏற்படும்.

சம்பள உயர்வு அவசியம்: இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சம்பளக் கமிஷன்கள், விலைவாசி உயர்வு, தகுந்த ஊதிய ஊக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு விகிதத்தை பரிந்துரை செய்தன.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலக தாராளமயமாக்கலுடன் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டு விட்டதாலும் தனியார் துறையில் மிக அதிக அளவு தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகள் பெருகியதாலும் அவற்றில் வேலை செய்வோருக்கு சம்பள விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன.

இதனால் பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு தனியார் வேலைக்குப் போக துணிந்து விட்டனர். அரசு வேலையில் சம்பளம் எனும் விஷயம்போக, சம்பளம் அல்லாத பல சலுகைகள் (உதாரணம்: பங்களா வசதி, வாகன வசதி உள்ளிட்டவை) இருப்பதால் கவர்ச்சி இருந்தது. ஆனால், தனியாரும் இத்தகைய வசதிகளைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

எனவே இந்த ஊதிய உயர்வு பரிந்துரை மிகவும் தேவையான ஒன்று. இந்த ஊதிய உயர்வாவது இல்லையெனில் அரசுப் பணிக்கு திறமையானவர்கள் வர மாட்டார்கள்.

ஊதியக் குழு பரிந்துரை காரணமாக அரசுக்கு ரூ.12,561 கோடி செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. விவசாயக் கடன் ரூ.60,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி, வருமான வரி வரம்பை அதிகரித்தது போன்ற சலுகைகளைக் கணக்கில் கொள்ளும்போது இது ஒன்றும் பெரிய செலவு அல்ல.

குறிப்பாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 3.2 கோடி சம்பளதாரர்களுக்கு அளிக்கப்பட்ட வருமான வரி வரம்பு உயர்வுச் சலுகையினால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய இழப்பு ரூ.30,000 கோடி.

ஆனால், இந்த சம்பள உயர்வு பரிந்துரையைப் பார்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஊழியர்களுக்கும் அதே விகிதத்தில் மாநில அரசுகள் கொடுத்து விடும். இதுதான் நமது பழைய அனுபவம்.

இவ்வாறு கொடுப்பது மாநில நிதி நிலைமையை வெகுவாகப் பாதிக்கும். ஏனெனில் மத்திய அரசின் பொருளாதார நிலை வேறு, மாநில அரசுகளின் பொருளாதார நிலை வேறு” என்றார் முருகன்.

—————————————————————————————————————————————————–

Posted in 6, Army, Bonus, Bribery, Bribes, Commission, Compensation, Corruption, defence, Defense, Deficit, Economy, employee, Employers, Employment, Females, Finance, Flexitime, Government, Govt, hikes, Hours, Income, Increases, Increments, Inflation, job, kickbacks, Ladies, Military, Navy, panel, Pay, pension, Raises, recommendations, Remuneration, retrospective, salaries, Salary, She, SriKrishna, Staff, Timings, Women | Leave a Comment »

The management of MRF Limited: lockout & strikes – Viduthalai Editorial

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் அணுகுமுறை மாறட்டும்!

சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூரில் கடந்த 43 ஆண்டுகாலமாக நடந்துவரும் எம்.ஆர்.எஃப். டயர் நிறுவனம் 3.12.2007 முதல் சட்ட விரோதமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1500 தொழிலாளர் குடும்பங்கள் பெரும் அவதியில் சிக்கியுள்ளனர். முன்னறிவிப்பு ஏதுமின்றி சட்ட விரோதமாகக் கதவடைப்புச் செய்யப்பட்டுள்ளது.

சிறு முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றைய தினம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொழிலாளர்களின் நேர்மையான உழைப்பும், திறனும்தான்.

இந்த நிறுவனம் அய்ந்து கிளைகளோடு மிகுந்த இலாபகர மாக இயங்கிக் கொண்டு இருந்தும், தொழிலாளர்களை வதைப்பதில் ஏன் இவ்வளவு பேரார்வம் கொண்டு நிருவாகம் நடந்துகொள் கிறதோ தெரியவில்லை.

உரிமை கேட்டுக் குரல் கொடுத்ததற்காக தொழிற்சங்க நிருவாகிகள் இருவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல, தொழிலாளர்கள் 24 பேர்களும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரு தொழிலாளர்களை வேலை நீக்கமே செய்துவிட்டது.

இதுகுறித்து தொழிலாளர் ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 28.11.2007 அன்று தொழிலாளர் ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தி கீழ்க்கண்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

(1) தொழிலாளர்கள் ஏற்கனவே அளித்து வந்த உற்பத்தி அளவினைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்.

(2) நிருவாகம் விசாரணையை நிலுவையில் வைத்து, இப்பிரிவுகளில் பணிபுரிந்த தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் தற்காலிக வேலை நீக்கத்தை விலக்கிக்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட வேண்டும்.

(3) புதிய இயந்திரம் நிறுவப்பட்ட எஃப் 270 பான்பரி பிரிவில் அதற்குரிய உற்பத்தி அளவு, தொழிலாளர்களின் எண்ணிக்கை நிர்ணயம் மற்றும் இதரத் தொடர்புடைய இனங்கள் குறித்து நிருவாகமும், தொழிற்சங்கமும் அதன் முன்னர் நடைபெறும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு தீர்வு காண ஒத்துழைக்கவேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டது.

ஆனாலும், நிருவாகம் அரசின் இந்த ஆணையைப் பொருட்படுத்தவில்லை என்பதிலிருந்தே, இதில் அடாவடித்தனம் செய்பவர்கள் யார் என்று தெரியவில்லையா?

28.11.2007 இல் தொழிலாளர் துறை ஆணையரின் ஆணை பிறப்பிக்கப்பட்டும் அதன்மேல் சீரான அணுகு முறையை மேற்கொள்ளாமலேயே தொழிலாளர்களைப் பழி வாங்கும் நோக்கத்தோடு நிருவாகம் கதவடைப்பு செய்து வருகிறது.

அரசின் ஆணையை நிறைவேற்றாமல் தடை செய்ய வழக்கம்போல நீதிமன்றத்தை நாடி இடைக்காலத் தடையையும் பெற்றுள்ளது நிருவாகம்.

நாள்தோறும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைக் குரல்களை எழுப்பி வருகிறார்கள். பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்களும் உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர்.

எதற்கும் நிருவாகம் அசைந்து கொடுப்பதாகத் தெரிய வில்லை. இதன் காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை நாளும் வளர்ந்து வருகிறது. அடுத்தகட்டமாக இது வேகப்படும்பொழுது பிரச்சினைகள் வேறு பரிணாமத்தை எட்டக்கூடும். அதற்கு நிருவாகமே பொறுப்பேற்கவேண்டி வரும்.

வேலை வாய்ப்பு என்பது இந்தியாவில் பெரும் பிரச்சினை யாக இருக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கும் நிறுவனங்கள் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்குமானால், அதன் விளைவு எங்கே கொண்டு போய் விடும் என்பதைச் சிந்திக்கவேண்டும்.

தொழிற்சங்கங்கள் இதனை ஏதோ தொழிற்சங்கப் பிரச்சினையாக மட்டும் கருதி, அந்த வட்டத்துக்குள்ளேயே இதுபற்றிப் பேசிக் கொண்டு இராமல் பொதுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்லவேண்டும்.

தொழிலாளர்கள் பொதுமக்களின் ஓர் அங்கம்தான். அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் மீது பொதுமக்களுக்கும் அக்கறை உண்டு என்று நிரூபிக்கவேண்டும். அப்பொழுது தான் ஆணவத்தோடு நடந்துகொள்ளும் முதலாளிகள் கொஞ்சம் அடங்கி வருவார்கள்.

மற்ற நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களும் எம்.ஆர்.எஃப். நிறுவனத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்க, போராட முன்வருவார்களாக!

Posted in Ads, Advt, Editorial, employees, Employers, Employment, Expenses, Jobs, lockout, Loss, Management, MRF, Poor, Productivity, Profit, Revenues, Rich, Strikes, Tyres, Union, Viduthalai, Work | Leave a Comment »

Malaysia: Over 200 Indian workers claim being abused

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

மலேசியத் தமிழர் போராட்டம் பற்றிய செவ்விகள்

அமைச்சர் டத்தோ சாமிவேலு
அமைச்சர் டத்தோ சாமிவேலு

மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவழியினரின் நியாமான உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாகக் கூறி, அங்குள்ள தமிழர்கள் கடந்த சில தினங்களாக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் மலேசிய இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் தலைவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டங்களில் நியாயம் இல்லை என்று மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அந்நாட்டு பொதுப்பணித் துறை அமைச்சருமான டத்தோ சாமிவேலு தமிழோசையிடம் தெரிவித்தார். அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழக் கூடிய நாட்டில், உரிமைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் நூறு சதவீத உரிமைகள் எல்லோருக்கும் வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

மலேசியாவில் அரசின் அனுமதி பெற்றுக் கட்டப்பட்டுள்ள இந்துக் கோயில்களுக்கு அரசு மானியங்கள் கூட வழங்கிவருவதை சுட்டிக் காட்டிய மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கோயில்களை எந்த அரசுமே ஏற்றுக் கொள்ளாது என்றும் கூறினார்.

ஆனாலும் தொடர்ந்து தமிழ் பள்ளிகள் மூடப்படுவது, தமிழ் மாணவர்களுக்கு உயர்கல்விகளில் வாய்ப்புகள் மறுக்கப்படுவது, கோயில்கள் உடைக்கப்படுவது போன்ற காரணங்களே தமது போராட்டத்துக்கான காரணங்கள் என்று இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தும் அமைப்பான இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் தலைவர் கணபதி ராவ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் தாங்கள் அரசுக்கு பல மனுக்கள் கொடுத்திருந்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

நாட்டில் புதிதாக உருவாக்கப்படும் நகரங்களில் தமிழ்ப் பள்ளிகள், கோவில்கள் ஆகியவை கட்டப்படுவது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மலேஷியாவின் இந்திய வம்சாவழித் தமிழர்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கவலை

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மலேஷியாவின் இந்திய வம்சாவழியினர் பற்றி இன்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், “இது நமக்குக் கவலையளிக்கக்கூடிய பிரச்சினை. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களோ, வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரோ எப்போது பாதிக்கப்பட்டாலும், அது நிச்சயமாக இந்தியாவுக்குக் கவலையை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

மலேஷியாவில் சம-உரிமை கோரி் போராட்டம் நடத்திய இந்திய வம்சாவழியினரின் போராட்டத்தை அடுத்து ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, அந்த நாட்டு அரசுடன் இந்தியா தொடர்பு கொண்டு வருவதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை அடக்க காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவர்களின் நலனைப் பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஜெயலலிதா உள்ளிட்ட மற்ற தலைவர்களும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்கள்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள்.

இதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமையன்று அந்தப் பிரச்சினை குறித்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி.

“வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினர் நலனில் அரசு எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. மலேஷியாவில் கணிசமான அளவில் உள்ள இந்திய வம்சாவழியினர் அந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கிறார்கள். மலேஷியாவுடன் இந்தியா நல்ல நட்புறவு கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, மலேஷிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வருகிறோம்” என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.


வரம்பு மீற வேண்டாம்!

“”மலேசியத் தமிழர் பிரச்னைப்பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி கவலைப்படத் தேவையில்லை. அவருடைய மாநிலத்திலேயே ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் அவர் கவலைப்படவேண்டுமே தவிர மலேசியப் பிரச்னையில் கருணாநிதி கருத்துத் தெரிவித்துப் பேசாமல் இருந்தால் போதும்”- இப்படிக் கூறியிருப்பது மலேசிய அமைச்சர் நஸ்ரி அஜீஸ். தகவலை வெளியிட்டிருப்பது, கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் “நியு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ்.

அப்படி என்னதான் தவறாகப் பேசியிருப்பார் தமிழக முதல்வர்? மலேசியாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அந்தத் தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதினார். இதைக்கூட ஒரு தமிழக முதல்வர் செய்யாமல் இருந்தால் அவர் முதல்வராக இருப்பதிலேயே அர்த்தமில்லை என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும்.

மலேசிய மக்கள்தொகையில் ஏழு சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள். அந்த இந்தியர்களிலும் பெருவாரியானவர்கள் தமிழர்கள். சொல்லப்போனால், மலேசியாவில் குடியேறி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழும் தமிழர் குடும்பங்கள் ஏராளம். ஆனால், சிங்கப்பூரில் இருப்பதுபோல், மலேசியவாழ் தமிழர்களுக்கு உரிமைகள் எதுவும் தரப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் எப்பொழுதுமே இரண்டாம் தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட்டு வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், ஹிந்துக் கோயில்கள் பல இடிக்கப்படுகின்றன. மலேசியப் பல்கலைக்கழகங்களில் இந்தியர்களுக்கு இடம் தரப்படுவதில்லை. புதிய தொழில்களை இந்தியர்கள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பன போன்ற ஏராளமான மனக்குறைகள் மலேசியவாழ் இந்தியர்களுக்குப் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. இத்தனைக்கும் மலேசிய அரசிலும் அரசியலிலும் “டத்தோ’ சாமிவேலு போன்ற தமிழர்கள் பங்கு பெற்றும் நிலைமையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.

மலேசிய அமைச்சர் “டத்தோ’ சாமிவேலுவை பலவீனப்படுத்தும் எண்ணத்துடன்தான், அங்குள்ள தமிழர்கள் எதிரணியினரால் திரட்டப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும், தங்களது உரிமைகளைக் கேட்டு அகிம்சா வழியில் போராடுவது எப்படித் தவறாகும்? தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 10,000 பேருக்கும் அதிகமான இந்தியர்கள் கோலாலம்பூரில் நடத்திய பிரமாண்டமான பேரணியை மலேசிய போலீஸôர் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கலைக்க முற்பட்டபோது பலர் படுகாயம் அடைய நேரிட்டது.

அகிம்சை வழியில் போராட்டம் நடத்திய தமிழர்களை அந்நாட்டு போலீஸôர் நடத்திய விதம் தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும், மலேசிய தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதியை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும்.

மலேசிய தமிழர் பிரச்னை பற்றிப் பேசினால், அந்த அரசு நமக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவிடும். அதனால் பல்லாயிரம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு போய்விடும் என்றெல்லாம் கூறப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதற்காக, அடிப்படை உரிமைகள் மீறப்படுவதையும் அடக்குமுறையையும் மௌனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதை நம்மால் அங்கீகரிக்க முடியவில்லை. சிங்கப்பூரில் இருப்பது போல, மலேசியாவிலும் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தரவேண்டிய கடமை இந்திய அரசுக்கு நிச்சயம் உண்டு.

அதெல்லாம் ஒருபுறம் இருக்க, முதல்வர் கருணாநிதி எப்படி இப்படியொரு கடிதம் எழுதலாம் என்று கேள்வி எழுப்பியிருக்கும் மலேசிய அமைச்சரைக் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி -தமிழர்களுக்காகத் தமிழக முதல்வர் குரல் கொடுக்காமல், தான்சானியா பிரதமரா குரல் கொடுப்பார்? வரம்பு மீறியிருப்பது தமிழக முதல்வரல்ல, மலேசிய அமைச்சர்தான்!

Posted in abuse, Allegations, Citizen, Condemn, Condemnation, dead, Disparity, employees, Employers, Employment, Exploitation, Freedom, Govt, Hindu, Hinduism, Illegal, Independence, India, Islam, Jail, job, Law, Liberation, Malaysia, Muslim, Order, Passport, Prison, Protests, Race, Racists, Religion, rights, Samivelu, Slaves, Tamils, Visa, workers | Leave a Comment »

State of Job Growth in India – Employment & Business Opportunities

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2007

வேலைவாய்ப்பு: துளிர் விடும் நம்பிக்கை!

எஸ். கோபாலகிருஷ்ணன்


இந்தியா அடைந்து வரும் அபரிமிதமான வளர்ச்சி ஏழை, எளிய மக்களைச் சென்றடையவில்லை. ஏற்கெனவே பண வசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும், படித்த, நகர்ப்புற இளைஞர்கள் நல்ல வேலைகளைத் தேடிக் கொள்வதற்குமே இந்த வளர்ச்சி உதவுகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவில்லை என்கிற நியாயமான கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ச.ந.ந.ஞ. எனப்படும் “”தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு” வேலைவாய்ப்புகள் குறித்து அண்மையில் வெளியிட்டுள்ள தனது 61வது சுற்று ஆய்வு முடிவுகள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.

1993ம் ஆண்டுமுதல் 1999ம் ஆண்டுவரை, இந்தியாவில் வேலைவாய்ப்பு வெறும் 0.98 சதவிகிதமாக அதிகரித்து வந்த நிலை இப்போது மறைந்துவிட்டது. மாறாக, 1999 – 2000 முதல் 2004 – 05 வரையிலான காலத்தில், வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதம் 2.89 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்கிறது ஆய்வு அறிக்கை.

இங்கு நாம் சுமார் 24 ஆண்டுகள் பின்நோக்கிப் பார்த்தோமேயானால், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கத்தையும் அதற்கான காரணங்களையும் அறியலாம்.

முதலாவதாக, 1983 முதல் 1993 – 94 வரையிலான காலகட்டத்தை எடுத்துக் கொள்வோம். அப்போது, என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வின்படி வேலைவாய்ப்பு ஆண்டுதோறும் 2 சதவீத வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. பொதுமக்களின் கருத்துப்படியும், அந்த காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியதாகச் சொல்ல முடியாது. பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், ரயில்வே இலாகா உள்ளிட்ட பல அரசுசார்ந்த துறைகள் கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தன. அதுமட்டுமல்லாமல், சிறுதொழில்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து ஊக்குவிப்பு கிடைத்து வந்தது. வங்கிகளும் சிறு தொழில்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்குவதில் முனைப்பு காட்டின. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 40 சதவிகிதம் சிறுதொழில்கள் மூலம் கிடைத்தன. அதேபோல், விவசாயமும் குறிப்பாக, சிறு விவசாயிகள், முன் உரிமை அடிப்படையில் ஓர் அளவு கடனுதவி பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே, தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின்படி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதமாக அப்போது இருந்தது என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

இரண்டாவதாக, 1993 – 94 முதல் 1999 – 2000 வரையிலான காலத்தில் என்ன நேர்ந்தது? வேலைவாய்ப்பு ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக, அதாவது 0.98 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்தது. 1992-ம் ஆண்டு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. அப்போதுதான், பொருளாதாரத் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற சித்தாந்தங்கள் அறிமுகமாயின. சிறு தொழில்களுக்கும், விவசாயத்துக்கும் அரசு அளித்து வந்த ஊக்குவிப்பும் உதவிகளும் சுணக்கம் அடைந்தன. எங்கும், எதிலும் கணினிமயம் என்ற நிலை ஏற்படத் தொடங்கியது. ஆனால், வேலைவாய்ப்பு உருவாக்கம் தொய்வடைந்தது. இதை உறுதி செய்வதாகவே தேசிய மாதிரி ஆய்வு அறிக்கை தெரிவித்தபடி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதத்திலிருந்து வெறும் 0.98 சதவிகிதமாகச் சரிந்தது.

மூன்றாவதாக, அண்மையில் வெளியான அறிக்கையின்படி, 1999 – 2000 முதல் 2004 – 05 காலத்தில், முந்தைய சரிவு சரிசெய்யப்பட்டு, 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது, உண்மையிலேயே ஒரு மைல் கல் வளர்ச்சி என்பது தெளிவு. இந்த ஆறு ஆண்டு காலத்தில் மக்கள்தொகையில், வேலைக்குப் போகக்கூடிய வயதுடையவர்களின் எண்ணிக்கை, முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. அப்படி அதிகரித்த பின்னரும், வேலைவாய்ப்பு வளர்ச்சி முந்தைய 0.98 சதவிகிதத்திலிருந்து 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இது ஓரளவு ஆறுதல் தரக்கூடிய ஒன்று என்றாலும், கவலை அளிக்கும் அம்சங்களும் உள்ளன. துறைவாரியாகப் பார்க்கும்போது, விவசாயம் மற்றும் அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி, 59.8 சதவிகிதத்திலிருந்து 58.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்பதே அது.

அதேநேரம், எண்ணிக்கை அடிப்படையில் 3 கோடி பேருக்கு விவசாயத்துறையில் புதிய வேலைகள் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை புதிதாக அதிகரித்துள்ள வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையில் சரி பாதி எனலாம்.

நகர்ப்புறம், கிராமப்புறம் என்னும் வித்தியாசம் இல்லாமல், பரவலான அடிப்படையில், சுயவேலை வாய்ப்பைத் தேடிக் கொண்டவர்களின் எண்ணிக்கை முன்எப்போதையும்விட கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படி சுயவேலைவாய்ப்பைத் தேடிக் கொண்டுள்ளவர்கள் 26 கோடி பேர்.

அதேநேரம், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில், வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், போதிய ஊதியம் மற்றும் குறைந்தபட்ச வசதிகள் கிடைக்கவில்லை என்பது வெளிப்படை.

வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் பசிக்கொடுமையைக் குறைத்திட இந்தியா செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது என்பதை சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி அமைப்பு தயாரிக்கும் “உலகளாவிய பசிக்கொடுமை குறியீடு’ (எகஞஆஅக ஏமசஎஉத ஐசஈஉல) என்னும் தரப்பட்டியல் அடங்கிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சர்வதேச அமைப்பு, சில தினங்களுக்குமுன், ஒரு தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது, பசிக்கொடுமையால் வாடும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்திட முயலும் 118 நாடுகளைக் கொண்ட பட்டியல் அது. அதில், இந்தியா 94வது இடத்தில்தான் உள்ளது என்பது வேதனை தரும் விஷயம். மிகவும் பின்தங்கிய நாடாகிய எத்தியோப்பியாகூட நம்மைவிட முன்னேறிய நிலையில், 93வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 88வது இடத்திலும் சீனா 47வது இடத்திலும் உள்ளன. நாம் தினமும் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

நமது வளர்ச்சி வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியாக மாறுவது எப்போது? இதற்கு விடையளிக்கும்வகையில், மிகவும் மதிக்கப்படும் பொருளாதார நிபுணரும், பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்ட குழுவின் தலைவருமான டாக்டர் சி. ரங்கராஜன் அண்மையில் எழுதியுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.

1999 – 2000 முதல் 2004 – 05 காலகட்டத்தில் என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வில் காணப்படும், அதே சாதகமான அம்சங்கள் நீடிக்கும்பட்சத்தில், ஜி.டி.பி. 9.1 சதவிகிதமாகத் தொடர்ந்து இருக்குமேயானால், விவசாயத்துறை வளர்ச்சி சற்று குறைந்தால்கூட, 2009ம் ஆண்டு முடிவிற்குள், வேலைவாய்ப்பு வளர்ச்சி நமது முழு தேவையை பூர்த்தி செய்துவிடும் என்கிறார்.

ஒருவேளை, இது நிறைவேறாதபட்சத்தில் டாக்டர் ரங்கராஜன் முன்வைக்கும் இன்னொரு சாத்தியக்கூறு வருமாறு:

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 8.5 சதவிகிதமாகவே இருந்து, விவசாய வளர்ச்சி வீதம் 2 சதவிகிதமாக மட்டுமே இருக்குமானால், வேலைவாய்ப்பு வளர்ச்சி நாட்டின் முழுத்தேவையையும் பூர்த்தி செய்வதற்கு 2017ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்கிறார்.

ஆக ஊரக மேம்பாட்டுக்கு திறவுகோல் விவசாய வளர்ச்சியே. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அணுகுமுறை ஆவணத்தில் (Approach Paper) விவசாய மேம்பாட்டுக்கும், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கத்துக்கும் கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. காலம் தாழ்ந்தேனும், இந்த அவசியத்தை அரசு உணர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏழ்மை மற்றும் பசியை ஒழிப்பதற்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் மட்டும் போதாது. அந்த வேலைகளுக்கான – அதிலும் குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் உருவாக்கப்படும் வேலைகளுக்கான – ஊதியம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

Posted in Biz, Business, City, Commerce, Compensation, Divide, Economy, employee, Employers, Employment, GDP, Growth, Industry, Jobs, Loans, Metro, Poor, Rich, Rural, Self-employed, Small Business, unemployment, Village, Villages | Leave a Comment »