Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘emissions’ Category

2008 – International year of sanitation, languages, planet Earth and the potato

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 2008

இதற்கு முந்தைய ஆண்டுகளை விட புதிய 2008ம் ஆண்டு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக உள்ளது.

  • சர்வதேச சுகாதார துாய்மை ஆண்டு,
  • சர்வதேச மொழிகள் ஆண்டு,
  • சர்வதேச புவி ஆண்டு மற்றும்
  • சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டாக 2008ம் ஆண்டை ஐ.நா., அறிவித்து, பெருமைப்படுத்தியுள்ளது.

இந்த நான்கு முக்கிய நோக்கங்களுடன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஐ.நா., முயற்சி செய்து வருகிறது. சர்வதேச சுகாதார துாய்மை ஆண்டு: நாம் வாழும் பகுதியை துாய்மையாக வைத்திருந்து சுகாதாரம் பேணுவதே 2008ம் ஆண்டின் நோக்கமாக ஐ.நா., அறிவித்துள்ளது. உலகில் 260 கோடி மக்களுக்கு கழிப்பிட மற்றும் சுகாதார வசதி இது வரை கிடைக்கவில்லை.

இவர்கள் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 41 சதவீதம். இதனால், 20 கோடி டன் மனிதக்கழிவுகள் திறந்த வெளியில் நோய் உற்பத்திக் கூடங்களாக உள்ளன. வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும், இது பிரச்னையாகவே உள்ளது. இது போன்ற சுகாதார சீர் கேட்டால் எளிதில் தவிர்த்துவிடக்கூடிய வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்றுக் நோய்களுக்கு ஏழைகள் ஆளாகிறார்கள். இந்த பிரச்னையால், உலக அளவில் 20 வினாடிக்கு ஒரு குழந்தை இறப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. தடுக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 15 லட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க முடியும். 2015ம் ஆண்டுக்குள் உலகில் அடிப்படை சுகாதார வசதி இல்லாத மக்களில் பாதிப்பேருக்காவது அந்த சுகாதார வசதி கிடைக்க செய்ய வேண்டும் என்ற ஐ.நா.,வின் மில்லினிய இலக்குக்காகத்தான் இந்த ஆண்டை கடைபிடிக்க 2006ம் ஆண்டிலேயே ஐ.நா., முடிவு செய்தது.
சர்வதேச மொழிகள் ஆண்டு: உலகின் பல்வேறு மொழிகளை சிறப்பிக்கும் வகையில் சர்வதேச மொழிகள் ஆண்டாக 2008ஐ கடைபிடிப்பது என ஐ.நா., பொதுச்சபை முடிவு செய்துள்ளது. உலகின் வேறுபட்ட கலாசாரம், பன்முகத்தன்மையை இது வளர்க்கும் என்று ஐ.நா., நம்புகிறது.

  1. அரபு,
  2. சீனம்,
  3. ஆங்கிலம்,
  4. பிரெஞ்சு,
  5. ரஷ்யன் மற்றும்
  6. ஸ்பானிஷ்

ஆகிய ஆறு மொழிகள் ஐ.நா.,வின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. இந்த ஆறு மொழிகளுடன் இந்தி மற்றும் போர்ச்சுக்கீசிய மொழிகளுடன் மொத்தம் 8 மொழிகள்தான் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றன.உலகம் முழுவதும் 6 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.இவற்றில் பெரும்பாலான மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. 417 மொழிகள் மிக மோசமான நிலையில் உள்ளன. கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றை அளவிடும் அளவுகோல்களாக மொழிகள் கருதப்படுகின்றன. மொழி அழிவது ஒரு சமூகம் அழிவதையே குறிப்பிடும். ஆகவே, அவற்றை காப்பாற்றும் பொறுப்பு அரசுகளுக்கு உண்டு. இதையடுத்து யுனெஸ்கோ நிறுவனம், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் அழியும் நிலையில் உள்ள மொழிகளை காப்பாற்ற அழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச புவி ஆண்டு: சர்வதேச புவி ஆண்டாக 2008 அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட முக்கிய விஷயங்களில், இந்த ஆண்டு கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இயற்கை மற்றும் மனித முயற்சிகளால் நாம் வாழும் உயிர்கோளத்துக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது.

இயற்கை மாற்றத்தால் உடல்நலப் பாதிப்புகளை தவிர்ப்பது, மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது.

ஒரு குறிப்பிட்ட இயற்கை வளத்தை அதிகமாக பயன்படுத்தி, இயற்கை சேதப்படுத்துவதை விட, புதிய இயற்கை வளங்களை கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்வது.

நகர்ப்புறங்களில், மக்கள் வாழ்வதற்கு தகுந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவது.

பருவ நிலை மாற்றத்தால் வாழும் மக்களுக்கு நன்மை விளைய வேண்டும். தீமைகளை தவிர்க்க முயற்சி செய்வது.

நிலத்தடி நீர் வளத்தை முறையாக பயன்படுத்துதல். தற்போது உலகம் முழுவதும் 4 லட்சம் புவி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் உள்ளனர். இவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழகங்களில் புவி தொடர்பான அறிவியல் பாடங்களை அதிகமாக அறிமுகம் செய்ய வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு அரசுகள் பொறுப்புடன் நடந்து கொண்டு உயிர் வாழ்வதற்கு உள்ள இந்த ஒரே உயிர்கோளத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஐ.நா., தெரிவித்துள்ளது.


சீனாவுக்கு இயற்கை விடும் சவால்!

க. ரகுநாதன்


கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உறை பனியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது சீனா.

சீனாவின் மத்திய, தெற்கு மாகாணங்களில் பனி படர்ந்த சாலைகளால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் விமானப் போக்குவரத்தும் நின்றுவிட்டது. இருக்கும் ஒரே வழி ரயில்வே மட்டுமே.

பிப்.7-ம் தேதி தொடங்கிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இப்பகுதியில் இருந்து சென்ற லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்துப் போயினர். 4 லட்சம் பேருக்கு 3 ஆயிரம் ரயில்களே இயக்கப்பட்டன. மின் உற்பத்தி பாதிப்பால் பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன. ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இயற்கை விடுத்த சவாலை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் சீன அரசு உள்ளது.

ஒருபுறம் தனது பொருளாதார வலிமை, உள்கட்டமைப்பு பிரமாண்டம் ஆகியவற்றை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் பொன்னான வாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியை சீனா கருதுகிறது. மறுபுறம் ஜனநாயக சக்திகள் சீன அரசின் அடக்குமுறையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தயாராகி வருகின்றன. இன்னொரு புறம் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசு அரசுக்குப் பெரும் சவாலாக உள்ளது.

ஒலிம்பிக் வீரர்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாரத்தான் போன்ற ஒரு சில போட்டி அட்டவணை மாற்றப்படலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதனால் காற்று மாசடைவதைத் தடுக்க சீன சுற்றுச்சூழல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், போட்டியின்போது மழை வந்துவிடக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்க அரசும், விஞ்ஞானிகள் குழுவும் தயாராகி வருகின்றன. இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

கடும் உறை பனிக்கு “லா நினோ’ எனும் கடலடி குளிர் நீரோட்டமே காரணம் என்று அரசு கூறினாலும், இதற்கு புவி, வெம்மை அடைவதுதான் முதன்மைக் காரணம் எனலாம்.

உலகின் ஓரிடத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றோரிடத்தில் நிச்சயம் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இதைப் போன்ற காலநிலை மாறுபாடுகள் உதாரணம்.

உலகில் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, நிலக்கரி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டால் எழும் புகை ஆகியவற்றால் வெளியேறும் கரியமில வாயு வளிமண்டத்தில் டன் கணக்கில் கலந்துள்ளது. இவைதான் புவி வெப்பம் அதிகரிக்க மூல காரணம். இது கடலடி நீரோட்டத்தையும் பாதிப்பதால் நிலப் பகுதியில் இது போன்ற பருவநிலை மாறுபாடு ஏற்படுகிறது.

பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க 1997-ம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தம் உலக நாடுகளால் கொண்டு வரப்பட்டது. அது 2012-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.

மரபுசாரா எரிசக்தியை அதிகரிப்பதன் மூலம் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவதை 2008-12ம் ஆண்டுக்குள் 5 சதவீத அளவுக்கு வளர்ந்த நாடுகள் குறைக்க வேண்டும் என்பது முக்கிய விதி.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டாலும், தொழிலதிபர்கள் நிர்பந்தம், அரசியல் காரணங்களால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதுவரை ஒப்புதல் பெறப்படவில்லை (கடந்த டிசம்பரில் செனட் சபை மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது). இதனால் அதை நிறைவேற்றும் நிர்பந்தம் அரசுக்கு இல்லை. இதை நிறைவேற்றினால் தங்களது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறிவருகிறது.

உலக அளவில் இந்தியாவும், சீனாவும் 10 சதவீத வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும், உலக பசுமைக்குடில் வாயுவை 10 சதவீதமே வெளியேற்றுகின்றன. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் 42 சதவீதம் வெளியிடுகின்றன.

வாயுக்கள் வெளியாவதைக் குறைப்பதற்காக தங்களது தொழில் வளர்ச்சிக்குத் தடையான கொள்கைகளை ஏற்க வளரும் நாடுகள் தயங்குகின்றன. வளர்ந்த நாடுகளும் (குறிப்பாக அமெரிக்கா) தங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மறுக்கின்றன. இதனால் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு எத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யாமல் டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடந்த பருவநிலை மாறுபாட்டுக்கான மாநாடு முடிந்துள்ளது.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், விவசாய மானியத்தைக் குறைக்கக் கோரும் உலக வர்த்தக ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களை வற்புறுத்தி உலக நாடுகளைப் பணியவைக்கும் அமெரிக்கா, உலகையே அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற மறுப்பது வேடிக்கையானது.

எல்லாவற்றிலும் தனது முன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புவி வெம்மையைக் குறைக்க முன்வர வேண்டும்.

உலக வெம்மை அதிகரிப்பால் புயல், பெரும் மழை வெள்ளம், கடும் வறட்சி, கடும் உறை பனி, அதன் காரணமாக உணவு உற்பத்தி பாதிப்பு, பஞ்சம் என்று பல்வேறு இன்னல்களை மனித குலம் சந்திக்க வேண்டி வரும். இவை முதலில் பாதிக்கப்போவது ஆப்பிரிக்க, ஆசியக் கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளைத்தான்.

பொருளாதார வளர்ச்சியைவிட முக்கியமானது, நாம் வாழும் பூமி வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பது. இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெறும் சமுதாயம் நீண்ட காலம் நிலைக்காது. எனவே இயற்கை வளத்தைப் பெருக்கி, பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால உலக நலனுக்கு உகந்தது என்பதை வளரும் நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளும் உணர வேண்டும்.

இல்லாவிடில் காதல் போயின்…காதல் போயின்…மட்டுமல்ல, பசுமை போயினும் சாதல்தான்!

Posted in 2007, 2008, 2009, 3899810, Arabic, Carbon, China, Chinese, Culture, Earth, emissions, Environment, France, French, Heritage, Hindi, International, Languages, Latin, Mandarin, Nature, Pollution, Portugese, portuguese, Potato, Russia, Russian, sanitation, Spanish, Tamil, UN, UNICEF, Year | Leave a Comment »

Ramar Sethu Project – Adams Bridge: Environmental Impact & Scientific facts

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

சேதுத் திட்டம் யாருக்காக?

டி.எஸ்.எஸ். மணி

கடந்த செப்டம்பர்-18, 2007 அன்று “வாஷிங்டன் போஸ்ட்’டில் ஒரு கட்டுரை. “கடல் கால்வாய்த் திட்டம் இந்தியாவில் ஒரு மத உணர்வு தடங்கலால் தடைப்பட்டுள்ளது’ என்ற ராமலட்சுமியின் கட்டுரை.

அதில், “சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் வாழ்வுரிமைக்கான ஒரு போராட்டம், மத முத்திரையுடன் கெடும் வாய்ப்பாக திசை திரும்பிவிட்டது’ என முடிக்கப்பட்டிருந்தது.

“சுற்றுச்சூழலை அழிக்கும் ஆபத்துகளை, இந்தச் சேது கால்வாய்த் திட்டம் எப்படியெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் திட்ட ஏற்பாட்டாளர்கள் முன் வைத்த, “”சுற்றுச்சூழல் தாக்கல் பற்றி மதிப்பீடு” மீதே நாம் காணமுடியும்.

* இந்த வங்காள விரிகுடா-பாக் விரிகுடா பகுதி அநேகமாக மென்மையிலிருந்து கடினம் வரையான களிமண்ணை இயற்கையாகக் கொண்டுள்ளது. தனுஷ்கோடிக்கு வடக்கிலும் தெற்கிலும் மணலைக் கொண்டுள்ளது. அதனால்தான் இந்தக் கால்வாய்த் திட்டத்தை, நடைமுறைப்படுத்த முடியாது என 140 ஆண்டுகளாகத் தள்ளிப் போடப்பட்டது. தூர்வாரி ஆழப்படுத்தல் மூலம் கால்வாய் தோண்டினால் ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டி வரும். அதன் செலவு கணக்கிலடங்காது.

* தூத்துக்குடி அருகே உள்ள “வான் தீவு’ ஆதம்பாலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. “தேசிய கடல் பூங்கா’விலிருந்து 25 கி.மீ.க்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது என்ற “வனவிலங்குச் சட்டம்’ கூறுகிறது. “தேசிய கடல் பூங்கா’ எனவும், “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ எனவும், மன்னார் வளைகுடா, யுனெஸ்கோவால் வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய “சுற்றுச்சூழல் விதிகளை’ மீறி இந்தத் திட்டம் வருகிறது.

* ஏற்கெனவே பாக் விரிகுடா மண்ணில் அதிகளவு கடின உலோகக் குவிதலும், எண்ணெயும் காணப்படுகிறது. அதனால் மாசுபட்டுள்ளது. அங்கே கால்வாய்த் திட்டம் வருமானால் “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ மேலும் கெட்டுவிடும்.

* கடல் விசிறி, கடல் பஞ்சு, முத்துச் சிப்பி, சங்கு, கடல் அட்டை ஆகிய வகைவகையான உயிரியல் ஊற்றுகள் அழியத் தொடங்கும்.

* இங்கு 600 வகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் 200 வகைகள் வணிக முக்கியம் பெற்றவை. அவற்றின் அழிவு வருமானத்தை இழக்கவைக்கும். மீனவர் வாழ்வுரிமையையும் பறித்துவிடும்.

* 1992 முதல் 1996 வரை இந்தப் பகுதியில் மீன் உற்பத்தி 55 ஆயிரம் டன்னிலிருந்து, 2001-ம் ஆண்டு 2 லட்சம் டன்னாக 4 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த உற்பத்திக்கு இந்தத் திட்டம் ஊறு விளைவிக்கும்.

* தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில், உயிரினங்கள் மன்னார் வளைகுடாவிலிருந்து, பாக் விரிகுடா செல்லும். மற்ற காலத்தில் மறுதிசை செல்லும். அவை பாம்பன் பாலம் வழியாகவும், அரிமுனை வழியாகவும் செல்லும். கால்வாய் தோண்டுவதால் அந்த உயிரினங்களின் நடமாட்டம் தடைப்படும்.

* தூர்வாரி ஆழப்படுத்தினால், கடலுக்கு அடியில் உள்ள தாவர, விலங்கு இனங்கள் அழிந்துவிடும்.

* “அரிதான உயிரினமான’ கடல் பசுக்கள், பருவ மாற்றத்தில் இடம் பெயர்பவை. அவை அழிந்துவிடுமென, மறைந்த பேராசிரியர் சென்னை பல்கலைக்கழக “மானுடயியல்’ துறை தலைவர் சுதர்சன் எச்சரித்திருந்தார்.

* “தமிழ்நாடு அறிவியல் கழக’ முன்னாள் தலைவரான மறைந்த பேராசிரியர் சுதர்சன், “சேது கால்வாய்த் திட்டம்’, சுற்றுச்சூழலையும், மீனவர் வாழ்வுரிமையையும் அழித்து விடுமென ஓர் ஆய்வு அறிக்கையை 2004-ம் ஆண்டே வெளியிட்டார்.

* கட்டுமான காலத்திலும், செயல்படும் காலத்திலும் கடலை மாசுபடுத்தும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் துளிகள், கிரீஸ், பெயிண்ட், பிளாஸ்டிக் பைகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்கள், கடல் நீரோட்டத்தில் கலந்து இயற்கையைத் தொடர்ந்து அழித்து வரும்.

* கப்பல் போக்குவரத்தால், அந்நிய பொருள்களும், உயிர்களும், வங்காள விரிகுடாவிலிருந்து, இந்துமகா கடலுக்கும், திசைமாறிப் பயணமாகி, பகுதிசார் உயிரின வகைகளை, சிதறடித்துவிடும் ஆபத்து அதிகமாக உள்ளது.

* “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதி’ யாக இருக்கும் மன்னார் வளைகுடாவின் செழிப்பான இயற்கை சூழலும், அதன் விசித்திரமான வளமாக இருக்கும் தாவர இனமும், விலங்கு இனமும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.

* திட்டமிடப்பட்டுள்ள சிறிய கால்வாய் வழியாகச் செல்லும்போது, கப்பல்கள் முட்டிக் கொண்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. அப்போது சிதறும் எண்ணெய், அடித்தள வண்ணப் பூச்சுகள் ஆகியவை கடல் வாழ் உயிரினங்களுக்கும், அவற்றின் வாழ்விற்கும் எதிரானவை.

* அமெரிக்கக் கடலில், 1990 முதல் 1999 வரை 50 ஆயிரம் எண்ணெய் சிதறல்களை, “எண்ணெய் அல்லாத இதர சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்களே’ ஏற்படுத்தியுள்ளன. அதன் விளைவாக அமெரிக்க கடலில் இப்போதெல்லாம் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் குறைந்துவிட்டன.

* கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய எண்ணெய் அல்லாத சரக்கு கப்பல்கள்தான், “சுற்றுச்சூழலை’ கடுமையாகப் பாதித்துள்ளன.

* பவளப்பாறைகள் “மன்னார் வளைகுடா’வின் சிறப்பு அம்சம். அவை கிடைக்கும் தீவுகள் ராமேசுவரத்திற்கும், தூத்துக்குடிக்கும் மத்தியில் உள்ளன. இவை “எண்ணெய் சிதறல்களால் அழிந்துவிடும்.

* கடல் ஆமைகள் இங்கே அதிகம் உள்ளன. கட்டுமானப் பணியே கூட அவற்றின் உயிரைப் பறித்துவிடும்.

* தூர்வாரி ஆழப்படுத்துதலால் ஏற்படும் கடல் நீரோட்ட பாதிப்புகளைப் பற்றி திட்ட ஆதரவாளர்கள் கவலைப்படுவதில்லை.

* தூத்துக்குடிக்கும், ராமேசுவரத்திற்கும் இடையில் இருக்கும் 21 தீவுகள்தான், சுனாமி தாக்குதலிலிருந்து அந்த இரண்டு கரையோர நகரங்களையும் காப்பாற்றியவை. அத்தகைய தீவுகள் இத்திட்டத்தால் அரிக்கப்பட்டு, அழியும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

* ஐ.நா.வின் ஆய்வில், இந்தியாவில் “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதிகளாக’ 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

“யுனெஸ்கோ’வின் அந்தத் தேர்வில், மிக முக்கிய பகுதிகளாக மூன்றை முடிவு செய்தார்கள். அவை நந்தாதேவி, நீலகிரி மற்றும் மன்னார் வளைகுடா. அதில் , “மன்னார் வளைகுடா’வின் பல்லுயிரியலை பாதுகாக்க’ ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்திற்கு (UNDP) பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பு முயற்சி, சேது கால்வாய்த் திட்டத்தால் வீணாகி விடுமென மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

* மத்திய அமைச்சரவை இதை “கிழக்கின் சூயஸ் கால்வாய்’ என அழைக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து, மன்னார் வளைகுடா செல்ல அதிகபட்சம் 24 மணிநேரம் மிச்சப்படும் என்பது அவர்களது வாதம்.

அத்தகைய வாதம் ஒரு மாயை என்பதை கப்பல் துறை நிபுணர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.

* பனாமா, சூயஸ் கால்வாய்கள் நிலத்தில் தோண்டப்பட்டவை. சேது கால்வாய் கடல் நீரில் தோண்டப்படுகிறது. பனாமாவும், சூயசும் 1.50 லட்சம் டன் எடையுள்ள கப்பல்கள் பயணிக்க உதவும். ஆனால் சேது கால்வாயில், வெறும் 30 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்களை மட்டுமே அனுமதிக்க முடியும்.

ரூ. 2600 கோடி முதல் ரூ. 3500 கோடி வரை சேதுத் திட்டத்துக்குச் செலவாகும். இதுவரை ரூ. 300 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

* ஜேகப் ஜான் என்ற பொருளாதார நிபுணர் மேற்கண்ட ஆய்வில், “திட்ட அறிக்கை நகல்’ அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியில் லாபம் இல்லை என்கிறார்.

“எகனாமிக் அண்ட் பொலிடிகல்’ வீக்லி-2007, ஜூலை-2ல் வெளியான அவரது கட்டுரையில், இத்திட்ட ஆதரவாளர்களின் வாதம் தவறு என விளக்கியுள்ளார். “எந்த ஓர் இந்திய மேற்கு கடற்கரை நகரிலிருந்து, இந்திய கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் கப்பலும், சேது வழி செல்வதால் எந்தப் பலனும் பெறப்போவதில்லை. சேது கால்வாய் உள்ளே செல்லவும் திரும்ப வெளியே வரவும் , “பைலட் கப்பல்’ இரண்டு மணி நேரம் எடுக்கும். தனியான சர்வதேச வாடகைக் கட்டணம் கோரப்படும். கால்வாய் வழியே செல்வதற்கு தனிக் கட்டணமும் வசூலிக்கப்படும். இவை கப்பலின் செலவைக் கூட்டிவிடும் என்கிறார் அவர்.

* தூத்துக்குடியிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு 22 மணி நேர பயணம் குறையும் என்றால், ஐரோப்பாவிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு வெறும் 8 மணி நேரத்தை மட்டுமே மிச்சப்படுத்தும். ஆகவே, வெளிநாட்டுக் கப்பல்களுக்கு சேது கால்வாய் அதிகம் தேவைப்படாது. இதனால் திட்டத்திற்கு ஆகும் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் இழப்புதான் மிஞ்சும் என்கிறார் அவர்.

(கட்டுரையாளர்: மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்)

————————————————————————————————————————————–

சேது: அபாயத்தின் மறுபக்கம்!

ச.ம. ஸ்டாலின்


சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் “தமிழினத் துரோகிகள்’ என முத்திரை குத்தியிருக்கிறது திமுக அரசு.

உலகெங்கும் சூழலியல் மாற்றங்கள் குறித்த பேரச்சமும் விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்து வரும் நிலையில், இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு திட்டத்தை இத்தனை சாதாரணமாக நிறைவேற்ற எத்தனிக்க முடியாது.

சூழலியல் மாறுபாடுகளிலேயே மிக அபாயகரமானதும் மர்மமானதும் கடல் சூழல்தான். இந்தியாவைப் பொருத்தவரையில் இதற்குச் சரியான உதாரணம் சேது சமுத்திரத் திட்டம். ஆழம் குறைந்த இந்திய – இலங்கை கடற்பகுதியில் கால்வாய் அமைப்பதன் மூலம் இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்தை கால்வாய் வழியே மேற்கொள்வதற்கான திட்டம் இது.

தமிழர்களின் நூற்றாண்டு கனவாகவும் மாபெரும் பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் புனையப்பட்டிருக்கும் இத்திட்டத்துக்கு 1860-ல் அடித்தளமிட்டவர் கமாண்டர் டெய்லர். தொடர்ந்து டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்ட்சன், ஜான்கோட், பிரிஸ்டோ எனப் பலரால் இத்திட்டத்துக்கான சாத்தியம் குறித்து சாதகமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் ஆங்கிலேயே அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டியது.

சுதந்திர இந்தியாவில் ஏ. ராமசாமி முதலியார், சி.வி. வெங்கடேசுவரன், நாகேந்திர சிங், எச்.ஆர். லட்சுமிநாராயணன் என அனைவரும் சாதகமான அறிக்கைகளையே அளித்தனர். இவர்கள் அனைவரின் அறிக்கைகளிலும் உள்ள முக்கிய ஒற்றுமை – சூழலியல் பிரக்ஞை இல்லாததுதான்.

இத்தகைய திட்டங்களைச் செயலாக்கும் முன் தீவிரமான பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தைப் பொருத்தவரையில் அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடலியல் விஞ்ஞானிகள், மீனவர்களின் யோசனைகள் ஏற்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் நம் விஞ்ஞானிகளின் வாய்கள் அரசால் இறுகக் கட்டப்பட்டுள்ளன. மீனவர்கள் ஊமைகளாக்கப்பட்டுள்ளனர். சூழலியல் சார்ந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரே ஆய்வு “நீரி’ (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) மேற்கொண்ட விரைவு சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மட்டுமே. அதுவும் முழுமையானது அன்று; கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கடல் வெறும் நீர்ப்பரப்பன்று; அது ஓர் உலகம். கடல் எனக் குறிப்பிடப்படுவது அதனுள் இருக்கும் ஆயிரமாயிரம் உயிரினங்களையும் அற்புதங்களையும் அபாயங்களையும் உள்ளடக்கியதுதான்.

சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் மன்னார் வளைகுடா பகுதி ஆசியாவின் உச்சபட்ச பராமரிப்பு கோரும் கடற்கரை உயிரியக்கப் பகுதிகளில் ஒன்று. 5,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருந்த இப்பகுதியில், ஏற்கெனவே, கடல் சூழல் மாசால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்துவிட்டன. தற்போதுள்ளதாகக் கருதப்படும் 4000 உயிரினங்களில் 1500 வகைகள் அருகிவரும் வகைகளாகக் கண்டறியப்பட்டவை.

மேலும், இப்பகுதிக்கு கிடைத்துள்ள பெருங்கொடை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய பவளப்பாறைகள், படிமங்கள். பவளப்பாறை இனங்களில் உலகிலுள்ள 82 சத வகையினங்கள் இங்கு காணப்படுகின்றன.

இத்திட்டத்தால் கடலின் நீரியங்குதிசை, நீரோட்டத்தின் ஒழுங்கு, அலைகளோட்டம், சூரிய ஒளி ஊடுருவல் மாறுபடும். இதன் தொடர்ச்சியாக உயிரினங்களின் வாழ்வியல்பு, உறைவிடம், இடப்பெயர்வு பாதிக்கப்படும்.

சூழலியல் முக்கியத்துவமிக்க இப்பகுதி பேராபத்தானதும்கூட. வானிலையாளர்களால் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படும் இப்பகுதி இயற்கைச் சீற்றங்களுக்கு அதிகம் இலக்காகும் அபாயமிக்க பகுதி. இங்கு ஏற்படும் எந்த மாற்றமும் தென்னிந்திய கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இத்தகைய ஒரு பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் போன்ற அசுரத்தனமான திட்டங்களை மேற்கொள்வதற்கும் அணுகுண்டுகளை வெடித்துப்பார்ப்பதற்கும் அதிக வேறுபாடில்லை.

ஒருபுறம், அடிப்படையிலேயே நகர்வுத்தன்மை வாய்ந்த கடலில் கால்வாயின் நிரந்தரத்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியிலான கேள்வி எழுப்பப்படுகிறது. மறுபுறம், இத்திட்டத்துக்கான செலவு, பராமரிப்பு, சுங்க வரி ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக அமையுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னொருபுறம் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், சூழலியலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமிக்க இத்திட்டத்தைச் செயலாக்கத் துடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்றளவும் அறிவியல்பூர்வமான – நேர்மையான பதில் அரசிடம் இல்லை.

Posted in Adams, Analysis, Aquarium, Bay, Bay of Bengal, Boats, Bribery, Bridge, Carbon, Catamaran, Commerce, Consumption, coral, Corruption, Eco, Ecology, Economy, emissions, energy, Environment, Exports, Facts, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Fishing, Freight, Gas, Hindu, Hinduism, Hindutva, Impact, Information, infrastructure, kickbacks, Leaks, Life, Mannaar, Mannar, Money, Nature, Nautical, Ocean, oil, Palk Straits, Petrol, Pollution, Project, Ram, Ramar, Rameshvaram, Rameshwaram, Ramesvaram, Rameswaram, RamSethu, Reefs, Religion, Science, Scientific, Sea, Seafood, Sethu, Setu, Ships, Straits, Study, Tourism, Tourists, Transport, Transportation, Trawlers, Tsunami, Tuticorin, UN, UNDP, UNESCO, Water | 1 Comment »

The dangers lurking behing ethanol & other alternate fuels – Environment & Deforestation Impact

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

தாவர எண்ணெயின் விபரீதம்

ந. ராமசுப்ரமணியன்

உலக அரங்கில் கச்சா எண்ணெய்க்கு மாற்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தாவர எண்ணெயே எனப் பேசப்பட்டு வருகிறது.

தாவர எண்ணெயால் ஏற்படும் விபரீதங்களை அறியாததே இதற்குக் காரணம்.

வான்வெளியில் கரிமல வாயு உள்ளது. அதை உள்வாங்கி வளரும் தாவரங்கள் மூலம் “எத்தனால்’ மற்றும் “பயோ டீசல்’ போன்ற எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த எரிபொருள்கள் மூலம் கார்பன் அளவு அதிகரிக்காது. மாறாக, நிலத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உபயோகத்தால் கார்பன் வெளியீடு பல மடங்கு உயர்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிகரித்து வரும் எரிபொருள் எண்ணெய் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெயே என உலக அளவில் பேசப்பட்டு, அதன் உபயோகமும் அதிகரித்து வருகிறது.

நிலத்தடியில் பல கோடி ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த தாவர வகைகளே கச்சா எண்ணெயாக மாறுகிறது.

ஆனால் தாவர எண்ணெய், தற்போது விளையும் தாவரங்கள், சூரியகாந்தி, பனை, சோயாபீன்ஸ், கரும்பு, தென்னை, சோளம், கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடனடியாகத் தயாரிக்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி பெற்ற பிரேசில் நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பு கரும்பு பயிரிடுவதும், சர்க்கரை உற்பத்தியுமாகும். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 65 சதவீதம் இணைத்து, அந்நாட்டு வாகனங்கள் ஓட்டப்பட்டு வந்தன.

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஆண்டு உற்பத்தி 1790 கோடி லிட்டர் அளவு உள்ளது. பிரேசில் நாட்டில் 83 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்கள் எத்தனாலுடன் சேர்க்கப்பட்ட பெட்ரோல் மூலமாக இயங்குகின்றன. மேலும் நாட்டின் மொத்த எரிஎண்ணெய் உபயோகத்தில் எத்தனால் பங்கு 55 சதவீதம் என உள்ளது.

1925-ம் ஆண்டு ஹென்ரி போர்ட் தனது “போர்ட்’ காரை அறிமுகப்படுத்தும்போதே எதில் ஆல்கஹால் எனும் தாவர எண்ணெயை உபயோகித்தார்.

தாவர எண்ணெயே எதிர்கால எரிபொருளாகப் போகிறது எனவும் கணித்தார்.

அதிக அளவில் அமெரிக்காவும் எதனால் தயாரிக்கும் நாடு. ஆனால் பிரேசிலைப்போல அல்லாமல் கோதுமை, அரிசி, ஓட்ஸ், சோளம், சோயா போன்ற பல தானியங்களிலிருந்து அமெரிக்கா தாவர எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

அமெரிக்க அயோவா மாநிலத்தில் எத்தனால் தயாரிப்பிற்காக 28 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.

டெக்ஸôஸ் மற்றும் இதர மாநிலங்களிலும் இத்தகைய ஆலைகள் அதிக அளவு இயங்க ஆரம்பித்துவிட்டன.

தற்போது தயாராகும் எத்தனால் காற்றிலுள்ள நீரை உட்கொள்வதால் கார் எந்திரங்கள் விரைவில் துருப்பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

தாவர எண்ணெய் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு தரும் “பசுமை எண்ணெய்’ என ஒருபுறம் புகழப்படுகிறது.

கார்பன்டை ஆக்ûஸடை இழுத்து, வளரும் தாவரம், அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கும்போது, கார்பன்டை ஆக்ûஸடை வெளியிட்டு விடுகிறது. இது எப்படிப் பசுமை எண்ணெய் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.

டச்சு ஆலோசக நிறுவனமான டெல்ப்ட் ஹைட்ராலிக்ஸ், “ஒரு டன் பனைத் தாவர எண்ணெய் தயாரிக்கும்போது 33 டன் கார்பன் வெளியீடு ஏற்படுகிறது. இது பெட்ரோலியப் பொருள்கள் வெளியீட்டை விட பத்து மடங்கு அதிகம்.

இது எப்படி பசுமை எண்ணெய் ஆகும்?’ என்று வினா எழுப்பியுள்ளது.

ஐ.நா. ஆய்வு அறிக்கை ஒன்றில் தாவர எண்ணெய், பெட்ரோலியத்தை விட உலகிற்குக் கேடு அதிகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் “எத்தனால்’ தொழிலால் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப் புல்வெளிகள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு கரும்புத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன.

காடுகள் வெட்டப்படுவதால் கார்பன் வெளியீடு அதிகமாகிவிட்டது. இதனால் பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் அழிதல், மண் சக்தியிழத்தல் ஆகிய கேடுகள் நடைபெறுகின்றன.

இப்படி தயாரிக்கப்படும் தாவர எண்ணெயை வாங்குதல் தகாது என பல ஐரோப்பிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.

பிரேசிலில் கரும்பு பயிரிடுவதற்காக மிக அரிய மரங்களையும், சோயா பயிரிடுவதற்காக அமேசான் மழைக் காடுகளையும் அழிக்கத் தொடங்கியுள்ளது பாதகமான செயலாகும்.

மெக்சிக்கோவில் சோளம் போன்ற தானியங்களை தாவர எண்ணெய்க்குப் பெரிதும் பயன்படுத்துவதால், மற்ற உணவுப் பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.

இதனால் உணவுக்காகப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

உலகத் தாவர எண்ணெய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாவர எண்ணெய் திட்டத்தைக் கைவிடும்படி சீனா, இந்தியா போன்ற நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளன.

சொகுசு கார்களில் செல்வந்தர்கள் பவனி வருவதற்காக உலக மக்களின் சோற்றில் மண்ணைப்போடும் பயங்கரத்திட்டம் தாவர எண்ணெய்த்திட்டம் என்ற எதிர்ப்பு மேலோங்கி வருகிறது.

ஆக கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெய் இல்லை என்பது தெளிவாகிறது.

—————————————————————————————————————————————–

பருவநிலை மாற்றம்: தேவை அவசரத் தீர்வு

என். ரமேஷ்

மனித சமுதாயத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் புவி வெப்ப அதிகரிப்பால், இதுவரை காணாத அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

இதை அறிவியல் உலகம் ஏற்கெனவே உறுதி செய்து விட்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட, பருவநிலை மாறுபாடுகள் குறித்த பன்னாட்டு அரசுகள் கூட்டமைப்பின் (ஐபிசிசி) நான்காவது மதிப்பீட்டின் தொகுப்பு அறிக்கை இதை உறுதி செய்துள்ளது.

நடப்பாண்டில், வங்கதேசத்தில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரை பலி கொண்ட சூறாவளி, பிகாரில் 1.4 கோடி மக்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிய வெள்ளப் பெருக்கு, இத்தாலியில் எப்போதுமில்லாத வகையில் 300 பேருக்கு சிக்குன் குன்யா நோய்த் தொற்று எனப் பல்வேறு அறிகுறிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

மின் உற்பத்தி, போக்குவரத்து போன்றவற்றுக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற படிவ எரிபொருள்களை எரிப்பதே வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்கக் காரணம்.

2005 ஆம் ஆண்டு இந்த வாயுவின் அளவு 10 லட்சத்தில் 379 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 6.5 லட்சம் ஆண்டுகளில் நிலவியதில் உயர்ந்தபட்ச அளவாகும். (தொழில் புரட்சி ஏற்பட்ட 18ஆம் நூற்றாண்டில் – 280).

புவியின் தற்போதைய சராசரி வெப்பநிலை 14.5 டிகிரி சென்டிகிரேட். உலகம் தற்போதைய வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்தால் புவியின் சராசரி வெப்பநிலை 6.4 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு அதிகரிக்கும். கடல் மட்டம் 3.7 மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும்.

புவி வெப்பம் 2 டிகிரி அளவு அதிகரித்தாலே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள் முற்றிலும் மூழ்கிவிடும்; கடற்பகுதியால் சூழ்ந்துள்ள வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இந்நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்.

இத்தகைய புவி வெப்ப அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படப்போவது உலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள (ஏறத்தாழ 400 கோடி) ஆசியக் கண்டம்தான்.

கடல் நீரால் சூழ்தல், நன்னீர்ப் பற்றாக்குறை, மகசூல் குறைவால் உணவுப் பஞ்சம், நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரிப்பு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில்தான் பசுமைக் குடில் வாயுக்களைக் குறைத்தல், ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் – நிகழ உள்ள பருவநிலை மாற்றத் தாக்கங்களுக்கு தகவமைத்தல் போன்ற அம்சங்களை விவாதிக்க இந்தோனேசியாவின் பாலி நகரில் டிசம்பர் 3 முதல் 14 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 195 நாடுகளின் 13-வது மாநாடு நடைபெற உள்ளது.

36 வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட கரியமில வாயு அளவில் சராசரி 5.2 சதவீதத்தை, 2008-12 ஆம் ஆண்டுகளுக்குள் குறைக்க வகைசெய்யும் கியோட்டோ ஒப்பந்தம் 1997-ல் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த காலத்துக்குப் பிந்தைய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க பூர்வாங்கப் பணிகளை இந்த மாநாடு மேற்கொள்ள உள்ளது.

தொழில்புரட்சிக்கு முன்பு நிலவியதைவிட 2 டிகிரி சென்டிகிரேட் வரை மட்டுமே புவி வெப்பம் அதிகரிக்கும் நிலையை உருவாக்க, உலகம் முழுவதும் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்பன்டை ஆக்சைடு அளவில் 50 சதவீதத்தை மட்டுமே 2050 ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும்.

இதற்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது வெளியீட்டில் 80 சதவீதத்தைக் குறைக்க வேண்டும்; இந்தியா போன்ற வளரும் நாடுகள் 20 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன.

(20 சதவீதம் குறைக்க முடியாது; தனிநபர் சராசரி கணக்கில் கொள்ள வேண்டும் என திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்).

இந்த அளவுக்கு குறைத்தால் “வளர்ச்சி’ தடைபடும் என்ற வாதங்களுக்குப் பதில், இப்போது குறைக்காவிடில் வரும் காலங்களில் பருவநிலை மாறுபாட்டால் விளையும் பேரழிவுகளால் “வளர்ச்சியே’ கேள்விக்குறியாகும் என்பதுதான்.

இந்த இலக்குகளை எட்ட உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.6 சதவீதத்தைக் குறைத்தால் மட்டும் போதுமானது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை.

அதுமட்டுமன்றி, மாற்று எரிசக்தி, போக்குவரத்து தொழில்நுட்ப உருவாக்கத்தால் வேலைவாய்ப்பு நிலையைச் சரிக்கட்டிவிட வாய்ப்புள்ளது.

மேலும், வளரும் நாடுகளுக்கு கரியமில வாயுவை வெளியிடாத “தூய்மையான’ தொழில்நுட்பங்களை வளரும் நாடுகள் வழங்குவதற்கு அமைப்பை உருவாக்குவது; ஏற்கெனவே, அளவுக்கதிகமாக வெளியிடப்பட்ட வாயுக்களால் ஏற்பட உள்ள தாக்கங்களைச் சமாளிக்க குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்வது; வெளியிடப்படும் 20 சதவீத கரியமில வாயுவுக்கு வனங்களின் அழிவு ஒரு காரணம் என்பதால் காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குவது ஆகியவை தொடர்பான அம்சங்களையும் பாலி மாநாடு விவாதிக்க உள்ளது.

கியோட்டோ ஒப்பந்த நடைமுறைகள் 2012 – ல் முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலையில், இடைவெளியின்றி புது ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும்.

இத்தகைய ஒப்பந்தம் 2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டால்தான், அதற்கு உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் 2012 – க்குள் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த முடியும்.

கியோட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அமெரிக்கா, கட்டாய இலக்குகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.

மாநாட்டின் இறுதிப் நிகழ்ச்சியில் 130 – க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமான பாதக விளைவுகள் தொடங்கிவிட்ட நிலையில், பேரழிவுகளிலிருந்து பூவுலகைக் காக்க உள்ள கால அவகாசம் மிகக் குறைவே.

எனவே, பாலி மாநாட்டின் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக அமைய வேண்டும்.

—————————————————————————————————————————————–

பசுமை இந்தியா சாத்தியமா?

அன்ஷு பரத்வாஜ்

பிலிப்பின்ஸ் நாட்டின் பாலித் தீவில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்ட புவி வெப்ப மாற்றங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, நச்சு இல்லாத புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா எதிர்பார்க்கும் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டின் மின் சக்தி தேவை 4,000 பில்லியன் கிலோவாட் என்று திட்டக் கமிஷன் மதிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் 20,000 பில்லியன் கிலோவாட் மின் சக்தி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்துள்ளது,

இந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யப்போகிறோம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும்.

இந்த மின் உற்பத்தியின் தேவையில் ஒரு பகுதி கரியமில வாயு இல்லாத தொழில்நுட்பங்களின் மூலம் கிடைக்கும்.

நிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருள்களின் மூலம் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 97 சதவிகிதம் கிடைக்கிறது.

கரியமில வாயு இல்லாத பல மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் இதுவரை பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. மரபு எரிசக்தித் துறையில் இருந்து மரபுசாரா எரிசக்தித் துறையில் உற்பத்தியை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

எதிர்காலத் தேவையில், 15 சதவிகித உற்பத்தியை கரியமிலம் இல்லாத தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குவதை ஒரு வழிமுறையாகக் கொள்ளலாம். இதற்கு என்னென்ன வாய்ப்புகள்தான் உள்ளன?

காற்றாலை மின் உற்பத்தி நல்லதொரு நம்பகமான தொழில்நுட்பம். இந்தியாவில் தற்போது காற்றாலை மூலம் 7,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் காற்றின் வேகம் குறைவுதான். இதன் காரணமாக காற்றாலை விசிறிகள் முழு வேகத்தில் இயங்க முடியவில்லை.

காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்தாலும், இது தேவையில் ஒரு சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும். இதனால், காற்றாலை மின் உற்பத்தி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.

அடுத்துள்ளது தாவரங்களைக் கொண்டு மின் உற்பத்தி. எண்ணெய் சத்து உள்ள தாவரங்கள் மூலம் பயோடீசலை உற்பத்தி செய்ய முடியும்.

சர்க்கரை ஆலைகளில் மொலாசிஸில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியும். கரும்புச்சக்கை, உமி போன்றவற்றில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

மின் உற்பத்திக்கு தாவரங்களையும் பயன்படுத்தலாம். இந்தியாவில் விளைச்சலுக்கு தகுதியான 30 மில்லியன் ஹெக்டேர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதில் 20 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் சத்துள்ள தாவரங்களை சாகுபடி செய்ய பயன்படுத்தினால் 25 மில்லியன் டன் தாவர எண்ணெய் உற்பத்தியாகும். இதன் மூலம் 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.

எத்தனால் மூலம் 100 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இந்தியாவின் மின் உற்பத்தித் தேவையில் 2 சதவிகிதத்தையே பூர்த்தி செய்ய முடியும்.

இந்தியாவில் புனல் மின் நிலையங்கள் மூலம் 84,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், தற்போது 34,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. புனல் மின் உற்பத்தி மூலம் குறிப்பிட்ட இலக்கை எட்டினாலும், அதுவும் மொத்த தேவையில் 2 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைப்பது நிலக்கரி. அனல் மின் நிலையங்கள் மூலம் 51 சதவிகித மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில், இந்தியாவின் மின் உற்பத்தியில் நிலக்கரியே முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.

இருந்தாலும், நிலக்கரி மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது. ஒரு கிலோ கரியமில வாயுவும் வெளியேற்றப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டேயாக வேண்டும். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான தொழில்நுட்பம் பல மடங்கு செலவை இழுத்துவிடும்.

அணு மின் நிலையங்கள் மூலம் தற்போது 4,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கும் குறைவுதான்.

உள்நாட்டில் மிகக் குறைந்த அளவே யுரேனியம் கிடைக்கிறது. இதனால் புளுடோனியம், தோரியம் தொழில்நுட்பங்களைக் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிடலாம்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இலகுரக நீர் மின் உற்பத்தி சாதனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இதைப் பயன்படுத்தி 24,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.

இந்தியாவின் பெரும்பகுதியில் சூரிய சக்தி நன்றாக கிடைக்கிறது. 20 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரிய சக்தி மூலம் 24,000 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி கிடைக்கும். இது நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவை வெளியிடாது.

சூரிய சக்தி அனல் மின் நிலையங்கள் மற்றொரு வாய்ப்பாகவே அமைகிறது. காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 20 கி.மீ. சுற்றளவு கொண்ட நிலத்தில் சூரிய சக்தி மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யமுடியும். இது எட்டு அனல் மின் நிலையங்களின் உற்பத்திக்குச் சமமாகும்.

கரியமில வாயுவை வெளிப்படுத்தாத மின் உற்பத்திக்கு முயற்சிக்க வேண்டும் என்றால், நம்மிடம் உள்ள எல்லா மூலப் பொருள்களையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழில்: டி.எஸ். ஸ்ரீநிவாசன்

Posted in Agriculture, Alternate, Amazon, America, Analysis, Auto, Automotive, Brazil, Cane, Carbon, Cars, CO, CO2, Commerce, Consumption, Corn, Deforestation, Dhals, Diesel, Earth, Eco, Economy, emissions, energy, Environment, ethanol, Farming, Food, Foodgrains, Ford, Forests, Fuel, Gas, Grains, Green, Impact, Industry, Iowa, Land, LNG, Natural, Nature, Oats, oil, Palm, Petrol, Plants, Pollution, Prices, Pulses, Rainforest, Research, rice, Sector, Solar, Sources, Soya, Sugar, Sugarcane, Sunflower, Trees, US, USA, Vegetables, Vehicles, Wheat, Wind | Leave a Comment »

Thorium Power: Fuel & Energy – commercial nuclear reactors

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2007

தோரிய வளம்-இந்திய பலம்!

எஸ். ராஜாராம்

இந்தியா – அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் அபரிமித தொழில் வளர்ச்சியால் பெருகிவரும் மின்சாரத் தேவையை ஈடுகட்ட இந்த அணுசக்தி ஒப்பந்தம் அவசியம் என்பது மத்திய அரசின் வாதம்.

அணுசக்தி திட்டத்திற்கு முக்கிய தேவையான யுரேனியத்தைப் பெற இந்த ஒப்பந்தம் துணைபுரியும். ஆனால், மாற்று எரிசக்தி உத்தியில் ஆர்வம் காட்டும் விஞ்ஞானிகள், யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தைப் பயன்படுத்தலாம் என்கின்றனர்.

தோரியமும் யுரேனியத்தைப்போல கதிர்வீச்சுத் தன்மை கொண்டதுதான். ஆனால், யுரேனியம் அளவுக்கு ஆபத்தானது அல்ல என்ற கருத்தும் உள்ளது.

அணுஉலைகளில் தோரியத்தைப் பயன்படுத்தும் ஆராய்ச்சியில் ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. இருப்பினும், இத் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம்.

உலகில் முதன்முதலில் அணுஉலைகளில் தோரியம் எரிபொருளைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்த நாடு இந்தியாதான். 1995-ல் குஜராத்தில் உள்ள காக்ரபார்-1 அணுமின் நிலையத்தில் தொடர்ந்து 300 நாள்களும், காக்ரபார்-2 அணுமின் நிலையத்தில் தொடர்ந்து 100 நாள்களும் தோரியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

தோரியத்தை நேரடியாக அணுஉலைகளில் எரிக்க இயலாது. அதனுடன் யுரேனியம் குறைந்த அளவில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது- இது இந்திய தொழில்நுட்பம். யுரேனியத்தைவிட தோரியம் சிறந்தது என்பதற்கு பல ஆதாரங்களைக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

“”யுரேனியத்தைப் பயன்படுத்திய பின்னர் மிஞ்சும் கழிவின் கதிர்வீச்சுத்தன்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும். ஆனால், தோரியக் கழிவின் கதிர்வீச்சுத் தன்மை சுமார் 500 ஆண்டுகளுக்கே இருக்கும்.

பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தி இல்லாமல் மின் உற்பத்தி செய்ய வேண்டுமானால் தோரியமே சிறந்தது” என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹஷேமி-நிஜாத்.

உலகம் முழுவதும் சுமார் 4.5 மில்லியன் டன் தோரியம் இருப்பு உள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது. இதில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் இந்தியாவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து, ஆஸ்திரேலியா, நார்வே, அமெரிக்கா, கனடா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தோரிய வளம் மிகுதியாக உள்ளது.

“”உலகில் உள்ள மொத்த யுரேனியம் இருப்பையும் மின் உற்பத்திக்காக ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், அது 10 அல்லது 20 ஆண்டுகளுக்கே வரும். எனவே, நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பம் மூலம் தோரியத்தைப் பயன்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். அதிகரித்து வரும் அணுசக்தி தேவைக்கு தோரியம் முக்கியமான, சிறந்த தீர்வு”- சமீபத்தில் வியன்னாவில் நடைபெற்ற ஐஏஇஏ கூட்டத்தில் இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கர் தெரிவித்த கருத்து இது.

தற்போது, அணுஉலைகளில் மின் உற்பத்திக்குப் பிறகு யுரேனியக் கழிவுகளைப் பாதுகாக்க மிகுந்த பொருள்செலவு ஏற்படுகிறது. எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அணுக் கதிர்வீச்சு கசியும் அபாயமும் (செர்னோபில் விபத்து போன்று) உள்ளது. யுரேனியக் கழிவுகளில் இருந்துதான் புளுட்டோனியம் பிரித்தெடுக்கப்பட்டு அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்பதால், தீவிரவாதிகளின் கையில் அது சிக்காமலும் பாதுகாக்க வேண்டியுள்ளது.

ஆனால், தோரியக் கழிவுகளில் இந்த அளவுக்கு அபாயம் இல்லை. பொதுவாகவே தோரியத்தில் வெடிக்கும் மூலக்கூறுகள் இல்லை என்பதால், அதன் கழிவுகளில் இருந்து அணுஆயுதத் தயாரிப்புக்காகப் பிரித்தெடுக்க எதுவும் இல்லை.

மேலும், தோரியத்தை ஆதாரமாகக் கொண்ட தொழில்நுட்பத்தை அணுஉலைகளில் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்தபிறகு, அதன் கழிவுகளை மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி, கதிர்வீச்சுத் தன்மையை முற்றிலும் குறைக்கும் தொழில்நுட்பத்திலும் (இப்ர்ள்ங்க் சன்ஸ்ரீப்ங்ஹழ் ஊன்ங்ப் இஹ்ஸ்ரீப்ங்) இந்தியா முன்னேற்றப்பாதையில் உள்ளது.

வியன்னா கூட்டத்தில் இந்தியாவின் இந்தத் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ள உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அதிக ஆர்வம் காட்டினர்.

ஏற்கெனவே யுரேனியம் செறிவூட்டுதலிலும், மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்திலும் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது. தற்போது தோரிய தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது. இருப்பினும், தோரியத்தை ஆதாரமாகக் கொண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வணிகரீதியாக, முழுவீச்சில் மின்உற்பத்தி செய்வதற்கு மேலும் உயர் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

அவ்வாறு முழுமையான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அதீத தோரிய வளம் மூலம் அணுசக்தி உலகில் முதன்மையான இடத்தை இந்தியா பெறும் என்பது உறுதி!

Posted in Atom, Atomic, Chemical, Danger, dead, Death, Degradable, Development, Electricity, Element, emissions, energy, Environment, Exposure, Fuel, Minerals, Nuclear, Pollution, Power, Radiation, reactors, Research, Researchers, Risk, Science, Scientists, Thorium, Uranium | Leave a Comment »

Compact Fluorescent lamp (cfl) & Incandescent Bulb – Global Warming

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007

குறு ஒளிர் விளக்குகள் } நல்ல தீர்வா?

என். ரமேஷ்

தொழிற்சாலைகள், போக்குவரத்து உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் பயன்படுத்தப்படும் நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட எரிபொருள்களால் உருவாகும் கரியமில வாயு காரணமாக புவி வெப்பம் அதிகரித்து வருகிறது; இதனால் கடல் நீர்மட்டம் உயர்வு, புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, உணவு உற்பத்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை உலக சமுதாயம் உணரத் தொடங்கியுள்ளது.

புவி வெப்பத்தால் ஏற்படக் கூடிய பேரழிவிலிருந்து தப்பிக்க, வளர்ச்சியடைந்த நாடுகள் வெளியிடும் கரியமில வாயு அளவைக் குறைக்க வகை செய்யும் கியோட்டோ ஒப்பந்தம் உள்ளிட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இப் பிரச்னையின் தீர்வுக்கு, உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை நேரடியாக வழங்க வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள டங்ஸ்டன் இழை கொண்ட “குண்டு பல்பு’களை குறு ஒளிர் விளக்குகளாக (compact fluorescent lamp-cfl) மாற்ற வேண்டும் எனப் பெரும் இயக்கமே நடைபெற்று வருகிறது.

பிரேசில், வெனிசுலா போன்ற நாடுகள் “குண்டு பல்பு’களை சிஎஃப்எல்-ஆக மாற்றும் இயக்கத்தைத் தொடங்கிவிட்டன. ஆஸ்திரேலியா 2010-க்குள்ளும், கனடா 2012-க்குள் முழுமையாக சிஎஃப்எல்-லுக்கு மாற முடிவு செய்துள்ளன.

இந்தியாவில் கிரீன் பீஸ் போன்ற தன்னார்வ அமைப்புகளும், தில்லி மாநில அரசு – அங்கு செயல்படும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் இந்த இயக்கத்தில் முனைப்புடன் செயல்படுகின்றன.

சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள பெரும்பாலான மேல்தட்டு, நடுத்தரக் குடும்பங்கள் தற்போது சிஎஃப்எல்-லுக்கு மாறி வருகின்றன. சிஎஃப்எல் எனப்படும் இந்த குறு ஒளிர் விளக்குகள், குண்டு பல்புகளைவிட ஏறத்தாழ ஐந்து மடங்கு குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. 100 வாட் குண்டு பல்பு வழங்கும் ஒளியை 20 வாட் சிஎஃப்எல் விளக்கு வழங்குகிறது. இதன்மூலம் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரச் செலவையும், அதற்குரிய கட்டணத்தையும் குறைக்க முடியும்.

மேலும், ஒரு குண்டு பல்பு செயலிழக்கும் வரை, சராசரியாக 1,000 மணி நேரம் எரியும் என்றால், சிஎஃப்எல் விளக்குகள் அதைவிடப் பலமடங்கு நேரம் எரியக் கூடியவை. இதனால் ஆண்டுக்கு ஒரு சிஎஃப்எல் பயன்பாடு மூலம், அதற்குக் கொடுக்கும் கூடுதல் விலை உள்ளிட்ட அனைத்துச் செலவும் போக, ரூ. 300-க்கும் அதிகமாகச் சேமிக்க முடியும்.

நுகர்வோருக்கு நேரடியாகக் கிடைக்கும் இந்த லாபம் தவிர்த்து, மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் நிலக்கரி, தண்ணீர் போன்றவற்றின் பயன்பாட்டு அளவும் குறைகிறது. 1,000 மணி நேரம் ஒரு குண்டு பல்பு மின்சாரம் வழங்க 71 கிலோ நிலக்கரி தேவையென்றால், சிஎஃப்எல்லுக்கு 14.2 கிலோ மட்டும் போதுமானது. இதேபோன்று, குண்டு பல்புக்கு 535 லிட்டர், சிஎஃப்எல்லுக்கு 107 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு குண்டு பல்பு 1,000 மணி நேரம் எரிவதற்கான மின் சக்தி உற்பத்தியில் 99.7 கிலோ கரியமில வாயு வெளியிடப்படும். ஆனால், சிஎஃப்எல் எரிவதால் 19.94 கிலோ மட்டும் வெளியிடப்படும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் சல்பர்-டை-ஆக்சைடு, நுண் துகள்கள், எரி சாம்பல் போன்றவையும் சிஎஃப்எல் பயன்பாட்டால் குறையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் பலர் கூறுகின்றனர்.

ஆனால், “டாக்சிக்ஸ் லிங்’ (Toxics Link) என்ற தன்னார்வ அமைப்பு, சிஎஃப்எல்-லுக்கு மாறுவதற்கு முன் ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது என எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. இதற்குக் காரணம், சிஎஃப்எல், நாம் வழக்கமாக பயன்படுத்தும் குழல் விளக்குகள் போன்ற ஒளிர் விளக்குகளில் பயன்படுத்தப்படும் பாதரசம் மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தது என்பதுதான்.

நமது சூழலில் மிகச் சிறு அளவில் இருந்தாலும் நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் கைகால் அசைவு, நினைவாற்றல் ஆகியவற்றையும் பாதிக்கக் கூடியது பாதரசம்.

ஒரு சராசரி சிஎஃப்எல் விளக்கில் 0.5 மில்லி கிராம் பாதரசம் உள்ளது. இந்த விளக்குகள் உடைந்தால் பாதரச ஆவி வெளிப்பட்டு வீட்டில் உள்ளோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். உடையாமல் செயலிழந்து (ப்யூஸ்) போன பின்னரும் வழக்கமாக இவை மாநகராட்சி, நகராட்சி குப்பைக் கிடங்குகளுக்கே செல்கின்றன. அங்கு இவை உடைக்கப்பட்டாலும் அந்த பாதரச ஆவி நமது சுற்றுச்சூழலில் கலந்து பாதிப்பை உருவாக்கும்.

தற்போது இந்தியாவில் எரியும் விளக்குகளில் 10 சதம் சிஎஃப்எல் விளக்குகள். ஆண்டுதோறும் சிஎஃப்எல் விளக்குகள் தயாரிப்பில் 56 டன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. முழுவதும் சிஎஃப்எல் விளக்குக்கு மாறினால் இந்த அளவு ஆண்டுக்கு 560 டன்னாக உயரும். எனவே, பசுமைக் குடில் வாயுக்களைக் குறைப்பதற்காக மற்றொரு ஆபத்தை விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை என பாதரசத்தை எதிர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

சிஎஃப்எல்-லுக்கு மாற்றாக ஒளி உமிழும் டையோடுகளைப் ( Light Emitting Diodes-எல் ஈ டி) பயன்படுத்த முடியும் என இவர்கள் வாதிடுகின்றனர். பாதரசத்தைப் பயன்படுத்தாத இவை சிஎஃப்எல்களைவிடக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதுடன் பல்லாயிரம் மணி நேரத்துக்கு மேல் எரியக் கூடியவை.

ஆனால், நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போதும் பாதரசம் வெளியாகிறது. சிஎஃப்எல்லைப் பயன்படுத்தும் போது இந்த பாதரசம் வெளியாகும் அளவு குறைய வாய்ப்புள்ளது. ஆனால், மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மட்டும் பாதரசம் வெளியாவதைக் கட்டுப்படுத்துவது எளிதானது. கோடிக்கணக்கான வீடுகளில், குப்பை மேடுகளில் வெளியாகும் போது கட்டுப்படுத்துவது கடினம்.

எனவே, எல்ஈடி போன்ற மாற்றுகள் பரவலான பயன்பாட்டுக்கு வரும் வரை, இடைக்கால ஏற்பாடாக கனடா போன்ற நாடுகளில் சிஎஃப்எல்-களைப் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாதரசத்தை மீட்டு எடுக்கலாம். செயலிழந்த சிஎஃப்எல்களைத் திரும்பப் பெறுவது, மறுசுழற்சி செய்வது போன்றவற்றுக்கு ஆகும் செலவை சிஎஃப்எல்லைப் பெருமளவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஏற்கச் செய்யலாம்.

———————————————————————————————————–
நதியோரம் தேயும் நாகரிகம்!

இரா. சோமசுந்தரம்

வாழ்வின் எல்லா நேரங்களிலும் நாம் ஒருவகையில் அன்றாடம் காய்ச்சிகளின் மனநிலையில்தான் இருக்கின்றோம். அன்றைய தேவை நிறைவடைந்தால் சரி.

அது தேர்தல் என்றாலும், ஊழல் என்றாலும் அல்லது , கொலை, கொள்ளை, விபத்து, மரணங்கள், குண்டுவெடிப்பு – எதுவென்றாலும் சரி, அன்றைய நாளுடன் மறக்கப்படும்.

இந்தப் பட்டியலில் தண்ணீரும் ஒன்று. வீட்டு இணைப்பில் குடிநீர் வந்தது என்றால் அத்துடன் அதை மறந்துவிடுகிறோம். ஆனால் அந்த குடிநீரை வழங்கும் நதிக்கு எத்தகைய கேடுகளைச் செய்து வருகிறோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.

இந்திய நதிகள் யாவும், அவை பெரியன என்றாலும் சிறியவை என்றாலும், மழைக்காலத்தில் வெள்ளமும் மற்ற நாட்களில் சாக்கடையும் ஓடும் என்ற நிலைக்கு மாறிவிட்டது. எல்லாக் கழிவுகளும் நதிகளில் கலக்கின்றன.

இது காலங்காலமாக நடந்து வருவதுதானே? இப்போது மட்டும் என்ன புதிதாகத் தீங்கு வந்துவிட்டது?

காலங்காலமாக நதியில் குளித்த மனிதர்கள் வேதிப்பொருள் கலந்த சோப்பைப் பயன்படுத்தவில்லை. அவர்களுக்கு “தோல் வெளுக்க சாம்பலுண்டு. துணி வெளுக்க மண்உண்டு’. அவர்கள் ஆற்றோரம் திறந்தவெளிகளையும், வயல்வரப்புகளையும் கழிப்பிடமாகப் பயன்படுத்தினார்கள். அப்போதெல்லாம் தொழிற்சாலைகள் இல்லை. அன்றைய சாயத் தொழில்கூட மரம், செடி, மலர், மரப்பட்டைகள் என இயற்கைப் பொருள்களைக் கொண்டு நடந்தது. யாருக்கும் பாதிப்பில்லை.

இன்றோ நிலைமை வேறு; இவை யாவும் தலைகீழாக மாறிவிட்டன.

தற்போது நதியில் கலக்கும் மாசுகளில் 80 சதவீதம் மனிதக் கழிவுகள்! ஏனையக் கழிவுகள் தொழில்துறையைச் சேர்ந்தவை.

எல்லா வீடுகளிலும் “ஃபிளஷ் அவுட்’ நவீன கழிப்பறை உள்ளது; இன்று இது தவிர்க்கமுடியாத ஒன்று.

ஒரு குடும்பத்துக்கு சுமார் 1.5 கிலோ மலஜலத்தை “”சாக்கடையில் தள்ளிவிட” குறைந்தது 300 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்தத் தண்ணீரும் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல. பெரும்பாலும், மாநகராட்சி அல்லது நகராட்சி சுத்திகரித்து, வீட்டு இணைப்பில் வழக்கும் குடிநீர்தான்.

சில வெளிநாடுகளில் இத்தகைய ஃபிளஷ் அவுட்களில் பயன்படுத்த மறுசுழற்சி-நீர் விநியோகம் உண்டு. இந்தியாவில் அதற்கு வாய்ப்பே கிடையாது.

உள்ளாட்சி அமைப்புகள், இந்தக் கழிவுகளை ஊருக்கு வெளியே ஒன்றுதிரட்டி, அவற்றை ஓரளவு சுத்திகரித்து பின்னரே நதியில் கலக்கவேண்டும் என்பதற்கு முயற்சிகள் பல எடுக்கப்பட்டன.

அதன் விளைவுதான் நதிகள் பாதுகாப்புத் திட்டம். பல ஆயிரம் கோடி ரூபாயை, இத்திட்டத்திற்காக “ஒதுக்கினார்கள்’.

நகரத்தின் சாக்கடையைச் சுத்திகரித்து இயற்கை உரங்கள் தயாரிப்பு, கீரை காய்கறி வளர்ப்பு – என்றெல்லாம் செய்திகள் வந்தனவே தவிர, நடைமுறையில் எதுவுமே நடக்கவில்லை. சுத்திகரிக்கப்படாத வீட்டுச் சாக்கடைக் கழிவுகள் நேரடியாக நதிகளில் கலந்துகொண்டே இருக்கின்றன. இன்றளவும்!

ஒரு மனிதனின் மல, ஜலத்தில் அவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு உணவுப் பொருளை விளைவிக்கப் போதுமான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் அனைத்தும் உள்ளன. ஆனால் அவற்றைப் பயன்படுத்த இயற்கை சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. நீரில் கரைந்து நீர்த்துப்போகிறபோதுதான் சிறுநீர் ஒரு நல்ல உரமாக மாறும். வெயில் காய்ந்து கிருமிகள் அழிந்த உலர்மலம்தான் தீங்கற்ற உரமாக மாறும். ஆனால் இதற்கு மனித நாகரிகம் இடம் இல்லாமல் செய்துவிட்டது. ஆகவே மலக்கிருமிகள் நேரடியாக நதியைச் சென்றடைகின்றன.

ஓடும் நதிக்கு தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ளும் சக்தி உள்ளது என்பது உண்மையே. நதியில் கலக்கும் உயிர்க்கழிவுகளின் மூலக்கூறுகளைச் சிதைத்து, உருமாற்றம் செய்ய போதுமான அளவு ஆக்சிஜன் நதிநீரில் இருக்க வேண்டும்.

ஆனால் ரசாயன கழிவுகள் நீரை மாசுபடுத்தி, அதன் இயற்கையான சக்தியை ஒடுக்கிவிடுகின்றன. இயற்கையான சுத்திகரிப்புக்கு ஆற்றுமணல் அவசியம். அதுவும் இப்போது பெருமளவில் சுரண்டப்படுகிறது.

நதிநீரைக் காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டும்; இல்லையெனில், குடிநீருக்காகப் பெரும்பணத்தைச் செலவிட நேரும்.

மனிதன் பெரிய அறிவுஜீவிதான்!

அதற்கு ஒரு சின்ன உதாரணம்:

ஒரு மாநகராட்சிப் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறைகளை இணைத்து, அதிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை அந்த வளாகத்தில் உள்ள டீ கடைகள், ஹோட்டல்களில் பயன்படுத்தினால் எரிபொருள் செலவு மிகமிகக் குறையும் என்ற திட்டத்தை முன்வைத்தபோது, காது, கண், மூக்கு எல்லாவற்றையும் மூடிக்கொண்டு “அய்யய்யே..எப்படி வியாபாரம் நடக்கும்?’ என்று எதிர்த்தார்கள்.

அதே கழிப்பறைகளின் மலஜலம் அனைத்தையும் பக்கத்தில் உள்ள நதியில் கலந்து, அந்த தண்ணீரைத்தான் மீண்டும் விநியோக்கிறோம் என்று அதிகாரிகள் சொன்னபோது, “சுடுகாடு கூடத்தான் ஆத்தோரம் இருக்குது. எல்லாம் வெள்ளத்துல போறதுதானே’ என்றார்கள்.

Posted in Alternate, Atomic, Biogas, Brazil, Burn, Carbon, Cauvery, CFL, Coal, Conservation, Crap, dead, Degradable, Detergents, Diesel, Disposal, Drill, Drinking, Drought, Earthquake, Electricity, Emission, emissions, energy, Environment, ethanol, Flowers, Flush, Food, Fuel, Ganga, Ganges, Garbage, Gas, Gore, Incandescent, Integration, Interlink, Kyoto, Lamps, Laundry, LED, Lights, Lignite, Lumniscent, Mercury, Mineral, Motor, Nature, Nuclear, Ozone, Petrol, Plants, Pollution, Power, Pump, Purify, Rain, Recycle, Removal, Restrooms, River, Shit, Soaps, Toilets, Toxics, Trash, Trees, Tsunami, Tube, Tubelight, Underground, Urea, Urine, Warming, Waste, Water, Well | 1 Comment »

Depletion of world Mineral reserves – Consumption of Antimony, Gallium, Tantalum, Indium

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்

நெல்லை சு.முத்து

பூமி சூடேறி வருவதால் பனிப்படலங்கள் வட துருவப் பிரதேசத்தில் இருந்து உருகி அட்லாண்டிக் கடலில் கலக்கின்றன. இது பழைய செய்தி. ஆனால் ஒவ்வொரு 40 மணி நேரமும் கிரீன்லாந்து பனிப்படலங்கள் ஒரு கன கிலோமீட்டர் அளவுக்குக் கரைந்து வருகிறதாம். பாசதேனாவில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் எரிக் ரிக்னாட் தரும் தகவல் இது.

இந்த நீர், சென்னை போன்ற பெரு நகரங்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் தண்ணீர் அளவுக்குச் சமம். தமிழ்நாடு முழுவதும் 8 மில்லிமீட்டர் தண்ணீர் நிறைந்த மாதிரி. சென்னையில் மட்டும் இந்த வடதுருவப் பனி உருகிய நீரைக் கொண்டு வந்து ஊற்றினால் இரண்டு மாடி வீடுகள் நீருக்குள் மூழ்கிவிடும்.

சுற்றுச்சூழல் என்றதுமே நம்மவர் நினைவுக்கு வருவது

  • ஓசோன்,
  • கரியமில வாயு,
  • வாகனப்புகை – உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுச் சமாச்சாரங்கள் மட்டும்தாம். எல்லாரும் இன்று வாகனப்புகை பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறோம். “”மீட்டர் போட்ட ஆட்டோ வேண்டும். புகைவிடாத லாரி வேண்டும்” என்று புதுக்கவிதை பாடுகிறோம். ஆனால் அதைக் காட்டிலும் இன்னோர் அபாயம் காத்திருக்கிறது.

தர்மம் தலைகாக்கும் என்ற நம்பிக்கை இங்கு பலருக்கு இல்லை. தலைக்கவசம் அணிந்துதான் பயணம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 67 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவற்றால் சாலைகளில் பெரும் போக்குவரத்து நெருக்கடி.

இங்கிலாந்தில் கார்டிஃப் பல்கலைக் கழகத்தின் புவிவளப் பேராசிரியை ஹேசல் ப்ரிச்சார்டு என்ற பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். “”இங்கு தெருவெல்லாம் இவ்வளவு சுத்தமாக இருக்குதே” என்று அசந்து போனார். சாலையில் ஒரு வண்டி கூட இல்லையே என்ற அர்த்தத்தில் அல்ல. வியப்புக்குக் காரணம்- வீதி உண்மையிலேயே துடைத்துப் போட்ட மாதிரி இருந்ததாம். தெருவின் புழுதி எல்லாம் பாதசாரிகளின் காலணிக்குள் அல்லவா தஞ்சம் புகுந்து இருந்தது.

காலுறைகளில் வெறும் வியர்வை நாற்றம்தான்; ஆனால் காலணியின் புறப்பகுதியில் சகதி, சாணி போன்றவை ஒட்டி இருக்கும். அவர் காலணியிலோ கொஞ்சம் பிளாட்டினம் படிந்து இருந்ததாம். காலில் வெள்ளிக் கொலுசு அணியலாம். தங்கக் காப்பு கூட தரிக்கிறார்கள். ஆனால் பிளாட்டினம் அணிந்த உலகின் முதல் பெண்மணி ஹேசல் ப்ரிச்சார்டு. பிளாட்டினம் உண்மையில் மிகவும் அரிய வகை உலோகம். பூமியில் பிளாட்டினமோ, ரேடியமோ, சுமார் 79,840 டன்கள் செறிந்து உள்ளது. 89,700 டன்கள் தங்கம்; ஆனால் பிளாட்டினத்திற்குத் தங்கத்தைக் காட்டிலும் விலை அதிகம்.

அது சரி, இந்தப் பிளாட்டினம் காலில் ஒட்டியது எப்படி? வேறு என்ன, வாகனப் புகைதான். பெட்ரோல், டீசல் எரிவாயுக்களால் ஏற்படும் மாசு மட்டுமே நம்மை மூச்சு முட்டப் பண்ணுகிறது. அந்த வாயுக்களை வாகன எஞ்ஜினில் எரியச் செய்யும் மின்பொறியில் பிளாட்டினம் தகடு இருப்பது நமக்குத் தெரியாது. அதனைக் காற்றில் புகையுடன் கலக்கப்போவது யாரு? நீங்கள்தாம். ஒவ்வொரு முறையும் ஸ்கூட்டர், கார், லாரி, ஆட்டோக்களை இயக்கும்போது பிளாட்டினம் தேய்ந்து காற்றில் கலக்கிறதாம்.

இந்தத் தகவல் அதிர்ச்சி அளிக்கிறதா? ஆனால் சமையல் மணக்கச் செய்யும் வனஸ்பதி தயாரிப்புத் தொழில்துறையில் கிரியா ஊக்கியே இந்தப் பிளாட்டினம்தான். பூமியில் இந்த உலோகப் புதையல் வறண்டு வருகிறது. ஏறத்தாழ 50 கோடி வாகனங்களை இத்தகைய எரிமின் கலன்களில் இயக்கினால் அவ்வளவுதான். அடுத்த 15 ஆண்டுகளில் பிளாட்டினம் இல்லாத பாலைவனம் ஆகிவிடும் நம் பூமி. பூமியில் கையிருப்பே 79,840 டன்கள்தான்.

பிளாட்டினம் மட்டுமா, வேறு பல அரிய உலோகங்களையும் நாம் சுரண்டி வருகிறோம். மணல் முதல் சணல் வரை அனைத்து வணிக ஒப்பந்தங்களும் கட்சிக்காரர்களுக்கே வாய்க்கும். உலோகச் சுரங்கம் தோண்டலில் மட்டும் கட்சி பேதம் இல்லை.

உலகில் வறண்டு வரும் மற்றோர் அரிய உலோகம் இண்டியம். இது ஏறத்தாழ 6000 டன்கள் செறிந்து உள்ளது. ஆனால் இன்று இந்த உலோகத்தைத் தகவல் தொழில்நுட்பக் கருவிகளுக்கான எல்.சி.டி தயாரிக்கும் துறை விழுங்கி வருகிறது. நவீனத் தொலைக்காட்சி, கணினித் திரைகள் வடிவமைப்பில் இடம்பெறும் திரவப் படிக ஒளிர் முனையங்கள் இவை. அடுத்த பத்தாண்டுகளில் இண்டியம் வளமும் மறையும் நிலை என்கிறார் ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானி.

2003 ஜனவரியில் கிலோ 60 டாலருக்கு விற்ற இண்டியம் இன்று 1000 டாலர். நான்கே ஆண்டுகளில் பதினாறு மடங்கு விலையேற்றம். இதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படும் நிலை இல்லை.

பூமி கஜனாவில் காலியாகிவரும் இன்னோர் அரிய உலோகம் காலியம். சூரிய மின்கலன்கள் தொழில்நுட்பத்தின் இதயம் போன்றது இது. இண்டியம் – காலியம் ஆர்சனைடுப் பொருளால் ஆனவையே. மின்னணுவியலில் பெரிதும் பயன்படுவது. இனி வரும் காலங்களில் சூரிய மின்கலன்களின் ஒரு சதவீதத் தேவைக்கு மட்டுமே இந்த காலியம், இண்டியம் உலோகங்கள் கைகொடுக்கும். நெதர்லாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழக நிபுணர் ரேனே க்ளெய்ஜின் கணிப்பு இது.

கணிப்பொறித் திரைதான் பூமியை விழுங்கி ஏப்பம் விடுகிறது என்றால் நம் காதோரம் நெருங்கி உறவாடும் செல்ஃபோன் கூட பூமியின் வளத்தைப் பறித்து வருகிறதாம். என்ன செல்பேசித் தொழில்துறையினர் டான்டலம் என்கிற மற்றோர் அரிய உலோகத்தை இதற்காக அபகரித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் உலோகத் தாதுக்களில் பாதி டான்டலம் தானாம். அடுத்தபடி யுரேனியம். நாலில் ஒரு பங்கு. ரஷியாவிலோ அங்குள்ள உலோகங்களில் ஆறில் ஒரு பங்கு யுரேனியம். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் உலோகச் செல்வத்தில் பத்தில் ஒரு பங்கு யுரேனியம். உலகின் யுரேனிய வளம் 33 லட்சம் டன்கள். அணுமின் சக்தித் துறையினால் இந்த யுரேனியத்தின் பற்றாக்குறை வேறு தலைவிரித்து ஆடப்போகிறது.

உலகில் மிக அதிகமாகக் காணப்படும் உலோகத் தாதுக்களில்

  1. முதலிடம் பெறுவது அலுமினியம் -அதாவது 3235 கோடி டன்கள்.
  2. அடுத்தபடி தாமிரம் (94 கோடி டன்கள்),
  3. குரோமியம் (78 கோடி டன்கள்),
  4. துத்தநாகம் (46 கோடி டன்கள்),
  5. நிக்கல் (14 கோடி டன்கள்) போன்ற புழக்கத்தில் உள்ள உலோகங்களுக்கும் அடுத்த தலைமுறைக்குள் தட்டுப்பாடு வரும். ஆன்டிமனிக்கும் இதே முடிவுதானாம். அடுத்த பத்தாண்டுகளில் இதன் வளமும் வறண்டுவிடும்.

இன்று – “கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்’ என்று தலைவாழையில் உலோகங்களை உண்ணும் பகாசுரர்கள் யார்?

அமெரிக்காவில் 30 கோடி மக்கள். ஒவ்வொருவரும் ஆண்டுதோறும்

  • 107 கிலோ பாஸ்வரம்,
  • 20.3 கிலோ அலுமினியம்,
  • 8.1 கிலோ தாமிரம்,
  • 4.5 கிலோ துத்தநாகம்,
  • 5.3 கிலோ காரீயம் உண்டு வருகிறார்கள்.

நாமோ “பிளாட்டினம் இட்லி, வெள்ளித் தோசை, தங்கச் சோறு, பாஸ்வரச் சாம்பார், குரோமியக் குழம்பு, காரீயச் சட்னி, துத்தநாகத் துவையல்’ எல்லாம் சாப்பிடப் போவது மாதிரி நடந்து கொள்கிறோம். துறைதோறும் பணத்தைச் சுரண்டுவதற்கே வாதங்கள் புரிகிறோம். சுற்றுச்சூழல் என்ற உச்சரிப்பிலேயே “ஊழல்’ ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் எப்படி கனிமவள வறட்சியைத் தடுக்கப்போகிறோம் என்பதே இப்போதைய கேள்வி.

Posted in Air, Alloys, Aluminium, Antimony, Arctic, Auto, Automotive, Carbon, Cars, Cell, Cellphone, Chromium, Cooking, Copper, Earth, emissions, Empty, Environment, Expiry, Exploration, Gallium, Gas, Indium, Land, legs, Metals, Minerals, mines, Mobile, Natural, Nickel, oil, Ozone, Phones, Platinum, Pollution, Protection, Research, Rich, Shoes, Slippers, Socks, Surface, Tantalum, tantulum, Traffic, Warming, Water, Zinc | 1 Comment »

Carbon emissions are confused with Carbon dioxide – Environment, Backgrounders

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007

உலகை மிரட்டும் வாயு!

என்.ராமதுரை

அண்மையில் அறிவியல் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் (வானொலியிலோ அல்லது தொலைக்காட்சியிலோ என்பது நினைவில்லை) கரியமிலவாயு ஒரு “”நச்சுப்புகை” என்று வருணிக்கப்பட்டது. இது ஒரு நச்சு வாயுவே அல்ல. அது நம்மைச் சுற்றிலும் இருப்பது. நமது மூச்சுக் காற்றுடன் வெளியே வருவது. நாம் சாதாரணமாக அருந்தும் சோடா போன்ற பானங்களில் அடங்கியுள்ளது. (பீர் பானத்திலும் உள்ளது) செடி கொடிகள் மரங்கள் கரியமில வாயுவை பகல் நேரங்களில் கிரகித்து தமது உணவைத் தயாரித்துக்கொள்கின்றன.

கரியமிலவாயுவுக்கு ஒரு “தம்பி’ உண்டு. அதுதான் மோசமான வில்லன். அதன் பெயர் கார்பன் மோனாக்சைட். அண்மையில் சென்னையில் காரை நிறுத்திவிட்டு கண்ணாடி ஜன்னல்களை மூடிவிட்டு உள்ளே ஏ.சி. போட்டுக்கொண்டதன் விளைவாக காருக்குள் இருந்தவர்கள் உயிரிழந்த இரு சம்பவங்கள் நடந்தன. இந்த இரண்டிலும் உயிரைப் பறித்தது கார்பன் மோனாக்சைட் ஆகும்.

ஆனால் கரியமிலவாயு அப்படி உயிரைப் பறிக்கின்ற வாயுவே அல்ல. அதற்கு நிறம் கிடையாது. வாசனை கிடையாது. அது கண்ணுக்கே தெரியாதது. பலரும் கரியமிலவாயுவையும் புகையையும் சேர்த்துக் குழப்பிக் கொள்வார்கள். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறானவை.

கரியமிலவாயு, மீத்தேன் வாயு, ஆவி வடிவிலான நீர் ஆகியவை காற்றுமண்டலத்தில் எப்போதும் வெவ்வேறு விகிதாசாரத்தில் இருக்கின்றன. இவைதான் பூமியில் உயிரினத்தைக் காத்து வருவதாகவும் கூறலாம். பூமியில் அனைத்தும் கடும் குளிரால் உறைந்து விடாமல் இவைதான் தடுக்கின்றன. அதாவது பகல்நேரத்தில் சூரியனிலிருந்து பெறுகின்ற வெப்பத்தை, பூமி பின்னர் முற்றிலுமாக இழந்துவிடாதபடி காப்பது இந்த வாயுக்களே.

ஊட்டி, கொடைக்கானல் போன்று குளிர் நிலவுகின்ற இடங்களில் வீடுகளில் கண்ணாடி ஜன்னல்களே இருக்கும். அதுமட்டுமன்றி பக்கவாட்டுச் சுவர்கள், கூரை ஆகிய அனைத்தும் கண்ணாடியால் ஆன கட்டுமானங்களும் காணப்படும். இவற்றுக்குள் செடிகொடிகளை வளர்ப்பர். பகல் நேரங்களில், செடிகளுக்கு கண்ணாடிகள் வழியே சூரிய ஒளிக்கதிர் கிடைக்கும். ஆனால் இரவு நேரங்களில் வெளியே உள்ள குளிர், செடிகளைப் பாதிக்காதபடி கண்ணாடிப் பலகைகள் தடுத்துவிடும். இதன் மூலம் கண்ணாடி கூடாரத்துக்குள் செடிகளுக்கு இதமான வெப்பம் தொடர்ந்து இருக்கும். அதாவது பகலில் சூரிய ஒளிக்கதிர் மூலம் கிடைத்த வெப்பம், வெளியே போய்விடாதபடி கண்ணாடி தடுக்கிறது. இவ்வித கண்ணாடிக் கட்டடத்துக்கு பசுமைக்குடில் என்று பெயர். இக் கட்டடத்தில் ஏற்படுகின்ற விளைவுக்கு பசுமைக் குடில் விளைவு என்று பெயர்.

பூமியைப் போர்த்தியுள்ள காற்று மண்டலத்தில் அடங்கிய கரியமிலவாயு, மீத்தேன், ஆவி வடிவிலான நீர் போன்றவை கிட்டத்தட்ட கண்ணாடி போல செயல்பட்டு பூமி, தான் பெறுகின்ற வெப்பத்தை இழந்துவிடாதபடி தடுக்கின்றன. ஆகவே இந்த வாயுக்களுக்குப் பசுமைக் குடில் வாயுக்கள் என்று பொதுவான பெயர் உண்டு.

காற்றுமண்டலத்தில் சேரும் கரியமிலவாயு அளவு அதிகரித்துக்கொண்டே போனால் பூமியில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகுமே என்று கேட்கலாம். ஆனால் காற்றுமண்டலத்தில் கரியமிலவாயு சேருகின்ற அதே நேரத்தில் அந்த வாயு காற்றுமண்டலத்திலிருந்து தொடர்ந்து அகற்றப்பட்டு வந்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள செடி, கொடி, மரம் அனைத்தும் பகல் நேரத்தில் இந்த வேலையைச் செய்கின்றன. கடலில் மிதந்தபடி வாழும் பிளாங்கட்டான் என்ற நுண்ணுயிரிகளும் இதைச் செய்கின்றன. காற்று இயக்கம் காரணமாகவும் கடலில் கரியமிலவாயு கரைகிறது. இதை கார்பன் சுழற்சி என்று சொல்வர். கடந்த பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக காற்றுமண்டலத்தில் கரியமிலவாயு சேருவதிலும் அகற்றப்படுவதிலும் ஒருவித சமநிலை காணப்பட்டு வந்துள்ளது.

ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் தோன்றிய தொழிற்புரட்சியைத் தொடர்ந்து -மனிதனின் செயல்களால் காற்றுமண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக, நிலக்கரியைப் பயன்படுத்துகிற அனல் மின்நிலையங்கள், எரிவாயுவைப் பயன்படுத்தும் ஆலைகள், பெட்ரோல், டீசல் போன்றவற்றைப் பயன்படுத்தும் எண்ணற்ற வாகனங்கள் போன்றவற்றின் மூலம் கரியமிலவாயு பேரளவில் காற்று மண்டலத்தில் சேர்ந்து வருகிறது. இதனால் பூமியின் சராசரி வெப்பநிலை உயரலாயிற்று. இப்படி சராசரி வெப்பநிலை உயர்ந்து கொண்டே போனால் உலகில் விபரீதங்கள் ஏற்படும். தென், வட துருவங்களில் உள்ள நிரந்தரப் பனிப் பாளங்களும் இமயமலை போன்ற உயர்ந்த மலைகள் மீதுள்ள உறைந்த பனிக்கட்டிகளும் உருக ஆரம்பிக்கும். கடலில் நீர் மட்டம் உயரும். உலகில் பல இடங்களில் கடல் ஓரமாக அமைந்த நகரங்கள் கடலில் மூழ்க ஆரம்பிக்கும். பருவநிலை மாறும். புயல்கள் அதிகரிக்கும். கோதுமை விளைந்த இடங்களில் நெல் சாகுபடி செய்கிற நிலைமை ஏற்படும். சில பகுதிகள் பாலைவனமாகிவிடும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இயற்கையால் இயல்பாக ஜீரணிக்க முடியாத அளவில் கரியமிலவாயு சேர்மானம் அதிகரித்துக்கொண்டே போகிறது. கரியமிலவாயு சேர்மான அதிகரிப்பு குறிப்பாக 1950-களிலிருந்து நன்கு காணப்படுகிறது. இப் பிரச்னை குறித்து உலக நாடுகள் கவலை அடைந்து அவ்வப்போது உலக அளவிலான மாநாடுகளை நடத்தி விவாதித்தன. கடைசியாக ஜப்பானில் கியோட்டோ என்னுமிடத்தில் 1997-ல் ஐ.நா. சார்பில் நடந்த மாநாட்டில் உடன்பாடு ஏற்பட்டது.

கரியமிலவாயு உள்பட பசுமைக் குடில் வாயுக்கள் காற்றுமண்டலத்தில் மேலும் மேலும் சேருவதைக் கட்டுப்படுத்தி 1990 வாக்கில் இருந்த நிலையை எட்ட வேண்டும் என்பது மாநாட்டின் முக்கிய முடிவாகும். இதுவரை 160க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டின் முடிவுகளை ஏற்றுக்கொண்டுள்ளன. முதலில் இதை ஏற்பதாகக் கூறிய அமெரிக்கா, பின்னர் 2001-ல் பல்டி அடித்தது. இந்த உடன்பாட்டை ஏற்பதனால் அமெரிக்காவின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும் என்பதால் இதனை ஏற்க முடியாது என்று அறிவித்தது. அத்துடன் நில்லாமல் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வயல்களிலிருந்தும் அத்துடன் கால்நடைகளின் வயிற்றிலிருந்தும் நிறைய மீத்தேன் வாயு காற்றில் கலப்பதாக குதர்க்கம் பேச முற்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆண்டுதோறும் காற்றுமண்டலத்தில் கூடுதலாகச் சேரும் கரியமிலவாயுவில் 21 சதவிகிதம் அமெரிக்காவினால் தோற்றுவிக்கப்படுவதாகும்.

எனினும் அண்மைக் காலமாக அமெரிக்காவின் போக்கில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உலகம் தழுவிய அளவில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது.

(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்).

Posted in AC, beer, Carbon, Carbon di oxide, Carbon dioxide, CO, CO2, Colorless, emissions, Environment, Gas, Methane, O3, Odorless, Oxygen, Ozone, Poison, Pollution, Protection, Radiation, Soda, Vapor, Water | Leave a Comment »

Koodankuam is waiting for a disaster – Nuclear Energy or Uranium Enrichments?

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

அணுசக்தி மூலம் மின்சாரம் :: கூடங்குளம் பயங்கரம் (கல்கி)
Kalki 24.06.2007
– ஜி.எஸ்.எஸ்.

“பூச்சி மருந்தில்கூட அனுமதிக்கப்பட்ட அளவு என்பது (permissible level) உண்டு. ஆனால், கதிரியக்கத்தைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு (safe dose) என்பதே கிடையாது.” அணுக் கதிரியக்கத்தின் விளைவுகள் தொடர்பாக ஐ.நா. அறிவியல் குழு இவ்வாறு அறிக்கை அளித்திருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை மீண்டும் முழு வீச்சோடு தலையெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, அங்குள்ள இரண்டு அணு உலைகள் போதாதென்று மேலும் நான்கு அணு உலைகள் அமைக்க முடிவெடுத்துச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு.

கூடங்குளம் என்று குறிப்பிடப்பட்டாலும் அதற்கு அருகே உள்ள கிராமமான இடிந்தகரையில்தான் அணுமின் நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் உதவியுடன் நிறுவப்படும் இந்த அணுமின் நிலையம் கடல் நீரைக் கொண்டு அணு உலைகளைக் குளிர்ப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கூடங்குளத்தில் இதை நிறுவியிருக்கிறார்கள்.

கூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்க, அரசும் தன் முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

“இதெல்லாம் கண்துடைப்பு நாடகம். நான்கு அணு உலைகளுக்குமான அனைத்து திட்டங்களையும் எல்லா ஏற்பாடுகளையும் அரசு செய்துவிட்டது. இதற்கான ஒப்பந்தங்களும் ரஷ்ய அதிகாரிகளுடன் கையெழுத்திடப்பட்டுவிட்டன. பிறகென்ன கருத்துக் கேட்புக் கூட்டம்?” என்று கொதிக்கிறார்கள் மக்கள்.

இது குறித்துச் சுற்றுப்புற ஆய்வாளரும் லயோலா கல்லூரிப் பேராசிரியருமான டாக்டர் வின்சென்ட்டைக் கேட்டபோது “நம் நாட்டில் மின்சாரம் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. மரபுசார்ந்த எரிபொருட்கள் (பெட்ரோல், டீசல் போன்றவை) மிக வேகமாகக் குறைந்து வருகின்றன. மரபுசாராத சக்திகள் – காற்றாலைகள், சூரியசக்தி போன்றவை மிக அதிக தயாரிப்புச் செலவு பிடிப்பவை. தவிர பொது மக்களால் இவை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

வளர்ந்து வரும் நாடு என்பதிலிருந்து வளர்ந்த நாடு என்ற நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அணுசக்தியை மாற்றாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது ஏற்கத்தக்கது தான். பாதுகாப்பு உணர்வு, வீண் பொருட்கள் வெளியேற்றம் இந்த இரண்டு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். இந்த இரண்டையும் கவனித்து கண்காணிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எனவே, கவலை வேண்டாம். அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வரை அணு சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் நம் நாடும் சுயச் சார்போடு விளங்க அணுசக்தி உற்பத்தி அவசியம்தான் என்றார். ஆனால், கல்பாக்கம் ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மருத்துவக் குழு’வின் உறுப்பினரான டாக்டர் புகழேந்தி இந்தக் கருத்திலிருந்து
வேறுபடுகிறார்.

“தமிழகம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. வரவிருக்கும் அணு உலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இரண்டிலுமாகச் சேர்ந்து, மொத்தம் பத்து அணு உலைகள் தமிழகத்தில் செயல்படப் போகின்றன.

“அணுமின் நிலையம் தேவையா? என்பது முதல் கேள்வி. இதனால் பாதிப்பு உண்டா? என்பது அடுத்த கேள்வி.

“அணுசக்தியின் மூலம் மின்சாரம் என்று கூறப்படுவதே ஒரு பொய். அணுகுண்டு தயாரிக்கதான் இந்த உலைகள் உருவாக்கப்படுகின்றன. மின்சாரம் என்பது இதில் ஒரு உபரிப் பொருள், அவ்வளவு தான். தவிர, அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது அதிக செலவு பிடிப்பது. இதனால் மக்களுக்குப் பயன் இராது.

“மாறாக, கதிரியக்கம் என்பது நாம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தாக இருக்கப் போகிறது.

“2005 ஜனவரி 31 அன்று அமெரிக்காவின் பொது சுகாதாரத் துறை அளித்த அறிக்கையின்படி எக்ஸ்ரே, நியூட்ரான், காமா கதிர்கள்
ஆகியவை கார்சினோஜின்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கார்சினோஜின் என்பது புற்றுநோயை உண்டாக்கும் காரணி. இதுவரை இவற்றால் புற்றுநோய் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதுபோல் கூறிக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்தப் பாதிப்புகள் நிச்சயம் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.

கல்பாக்கத்தில் அறிவியல் பூர்வமான ஒரு சோதனையை மேற்கொண்டோம். ‘மல்டிபிள் மைலோமா’ என்ற நோய் குறித்த
ஆராய்ச்சியை மேற்கொண்டோம். இது கதிரியக்கத்தால் எலும்பு மஜ்ஜையில் உருவாகக் கூடிய ஒரு வகை புற்றுநோய். கல்பாக்கம் பகுதியில் ஒன்றரை வருடங்களுக்கு நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் அணு உலைகளில் பணியாற்றிய இரண்டு பேரும், கல்பாக்கம் நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகம் ‘ஆண்களில் ஒரு லட்சத்தில் 1.7 பேரும், பெண்களில் ஒரு லட்சத்தில் 0.7 லட்சம் பேரும் இதனால் இறக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது. அதாவது, ஒரு லட்சத்துக்கு 2.4 நபர்கள்.

ஆனால் கல்பாக்கத்தின் மக்கள் தொகை அதிகபட்சம் 25,000தான். பாதிப்போ மூன்று பேருக்கு – அதாவது, பொதுவான விகிதத்தைவிட நான்கு மடங்கு அதிகம்!

“மேலும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிப்பார்கள். அமெரிக்காவில் இதற்கெனவே ஒரு (எனர்ஜி எம்ப்ளாயீஸ் ஆக்ட்) சட்டம் உண்டு. இங்கே சட்டமும் கிடையாது. இழப்பீடும் கிடையாது” என்று குமுறினார்.

இந்த வாதங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியவை. சோவியத் யூனியனின் (இன்றைய உக்ரைன்) செர்னோபில் அணுமின் நிலைய விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அணுசக்தி இல்லாமலேயேகூட விஷவாயுவின் கோரத் தாண்டவத்தை போபாலில்
அனுபவித்திருக்கிறோம். மார்ச் 1999-ல் கல்பாக்கத்தில் கனநீர்க் (heavy water) கசிவு ஏற்பட்டபோது ‘அதெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள்தான்’ என்றனர் அதிகாரிகள்.

‘இன்னும் எதையெல்லாம் அனுமதிக்கப் போகிறோம்?’ என்பதுதான் அச்சுறுத்தும் கேள்வி.

– ஜி.எஸ்.எஸ்.

—————————————————————————————-

நாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை தொடக்கம்
ஜாம்ஷெட்பூர், ஜூன் 26: நாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜாம்ஷெட்பூர் அருகேயுள்ள டுராம்டியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் ஆலையை தொடங்கி வைத்தார்.

நாள் ஒன்றுக்கு 3000 டன் யுரேனியம் தாதுவை பதப்படுத்தும் திறன் கொண்ட இந்த தொழிற்சாலை, இந்திய யுரேனியம் நிறுவனத்தால் ரூ.350 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் யுரேனியம் தாது இந்த புதிய தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.

முன்னதாக இந்திய யுரேனியம் நிறுவனத்தால் கடந்த 1967-ம் ஆண்டு முதல்முதலாக யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜடுகோராவில் துவங்கப்பட்டது.

————————————————————————————————————–

அணுமின் நிலையங்களால் ஆபத்தா?

வீர. ஜீவா பிரபாகரன்

அணுசக்தியை ஆக்க சக்தியாகவும் பயன்படுத்த முடியும்; அழிவு சக்தியாகவும் பயன்படுத்த முடியும். அணுசக்தியால் பாதிப்புக்கு உள்ளான ஜப்பான், அதே அணுசக்தியால் முன்னேற்றமும் கண்டது என்று பலரும் சுட்டிக் காட்டுவது உண்டு.

ஆனால், ஜப்பானில் தற்போது நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவடைந்துள்ளது. அணுமின் நிலையத்தில் ஏராளமான கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையான பாதிப்பு விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

தற்போது நில நடுக்கத்தால் ஜப்பான் நாட்டில் சேதம் அடைந்துள்ள அணுமின் நிலையம் உலகிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம். நில நடுக்கத்துடன், கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1986-ம் ஆண்டு ரஷியாவில் செர்னோபில் விபத்தில், அணுக்கதிர் வீச்சு வெளிப்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம். இவ்விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக் கணக்கானோர் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். விபத்தின் பாதிப்பு இன்றளவும் தொடர்கிறது.

2007 ஜனவரி 31 நிலவரப்படி நமது நாட்டின் மொத்த மின் உற்பத்தி சுமார் 1 லட்சத்து 28 ஆயிரத்து 200 மெகாவாட். இதில் அனல்மின் நிலையங்கள் மூலம் 84 ஆயிரத்து 150 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர, சுமார் 34 ஆயிரம் மெகாவாட் நீர் மின் நிலையம் மூலமும் 3,900 மெகாவாட் அணு மின்நிலையம் மூலமும், இதர புதுபிக்கத்தக்க எரிசக்தி மூலம் 6190 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அணுமின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

1969-ம் ஆண்டு முதல் இதுவரை 17 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் 7 அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் கூடங்குளத்தில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் இரண்டு அணு உலைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது.

2030-ம் ஆண்டுக்குள் நமது நாட்டின் அணுமின் உற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி, மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இருப்பினும், இன்றளவும் அணுமின் உற்பத்தி அவசியமா, ஆபத்தானதா என்ற விவாதம் தொடர்கிறது.

ஒரு நாட்டின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை மின்சாரம். அனைத்து வளர்முக நாடுகளிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், மின் உற்பத்திக்குத் தேவையான நீர், நிலக்கரியின் வளம் குன்றி வருகிறது. காற்று, சூரியசக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல வகையிலான விசை ஆதாரங்களின் உற்பத்தியில் அரசு கவனம் செலுத்தினாலும், அவற்றின் உற்பத்தி போதுமானதாக இல்லை. எனவே, மின் தேவையைப் பூர்த்திசெய்வதில் அணுமின் நிலையங்களின் பங்களிப்பைத் தவிர்க்க இயலாது என்கின்றனர் ஒருசாரார்.

அதேநேரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் உயிர்ப்பலி பெருமளவில் இருக்கும்; பல தலைமுறைகளுக்கும் பாதிப்பு தொடரும்; அணுமின் கழிவு அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும். இது உலகின் அழிவுப்பாதைக்கு வித்திடும்; அணுமின் உலைகள் அமைப்பதற்கான நிர்மாணச் செலவும் மிக அதிகம்; அணுக்கழிவைக் கையாளுவது குறித்து வெளிப்படை அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்கின்றனர்.

ஆனால், அணுமின் அவசியத்தை வலியுறுத்துபவர்களோ, ரயில் விபத்து, சாலை விபத்தில்கூட ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். அதற்காகப் பயணங்களை எவரும் தவிர்ப்பதில்லை. நவீனமுறை விமானப் பயணங்கள், கப்பல் பயணங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர். அதுபோன்று அணுமின் தயாரிப்பும் தவிர்க்க இயலாதது.

கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் கொந்தளிப்பு, நில நடுக்கம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படாது. இது நவீனத் தொழில்நுட்பத்தில் அமைந்தது என அதன் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அவசியமான அடிப்படைத் தேவையில் மின்சாரம் பிரதானமாக உள்ளது. மின் உற்பத்தியில் அணுசக்தியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் அணுமின் நிலையங்கள் உள்ளன.

ஒவ்வோர் அணு உலை அமைக்கும்போதும் அந்த நாடுகள் மிகவும் எச்சரிக்கையோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.

ஆனால், உலைகள் அமைக்கும்போது வெவ்வேறான தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் ஒன்றில் ஏற்படும் குறைபாடு, பாதிப்பு மற்றோர் இடத்தில் அதை நீக்கப் பயன்படுகிறது.

அணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்பது உண்மைதான் என்றாலும், பெருகிவரும் மின் தேவையைக் கருத்தில்கொண்டால், வேறு வழியில்லை என்கிற நிலையில், அது தவிர்க்க முடியாத விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

Posted in Agni, Arms, Atom, Banduhurang, Bhatin, bhopal, Bombs, Capacity, Chernobyl, Compensation, dead, Development, Disaster, DMK, Economy, Electricity, emissions, Employment, energy, Enrichments, Environment, Growth, GSS, Industry, infrastructure, Jadugora, Jamshedpur, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jobs, Kalki, Kharswan, Koodangulam, Koodankulam, Koodankulam Nuclear Power Project, Kremlin, Manufacturing, Mineral, mining, mishap, Missiles, Mohuldih, Narwapahar, Nature, Nuclear, Op-Ed, Payload, Pollution, Precautions, Prithvi, Project, Research, Russia, Safety, Saraikela, Saraikela-Kharswan, Science, Sciences, Singhbhum, Technology, Tragedy, Turamdih, Uranium, USA, Warhead, Weapons | 1 Comment »

Breath with care – Oxygen Supply, Carbon Monoxide poisoning

Posted by Snapjudge மேல் மே 18, 2007

நெட்டில் சுட்டதடா…: சுவாசிக்கும் முன் யோசி!

ராமன் ராஜா

சென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய கார் ஒன்று சர்வீசுக்காக வந்து நிற்கிறது. ராத்திரி முதலாளி வீட்டுக்குக் கிளம்பின பிறகு, பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறார்கள். காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டு என்ஜினை ஆன் செய்கிறார்கள். கோடையின் புழுக்கத்துக்கு இதமாக ஏ.ஸியை முழு வேகத்தில் திருப்பிக் கொள்கிறார்கள். நாள் முழுவதும் ஸ்பானர் பிடித்த களைப்பில் சுகமாகத் தூக்கத்தில் நழுவுகிறார்கள்…. ஆனால் காலையில் பார்க்கும்போது இருவரின் உயிரற்ற உடல்கள்தான் காரில் இருக்கின்றன. ஒரு காயமில்லை, ரத்தமில்லை, விஷம் சாப்பிட்ட அறிகுறியும் இல்லை. என்னதான் நடந்திருக்கும்?

சில மாதங்களுக்கு முன்னால் -பூனாவில் ஒரு கல்லூரி ஹாஸ்டல். பத்தொன்பது வயது மாணவி அர்ச்சனா, நள்ளிரவில் தனியாகப் படித்துக் கொண்டிருக்கிறார். டிசம்பர் குளிருக்கு எல்லாக் கதவு ஜன்னலும் நன்றாக அடைத்திருக்கிறது. திடீரென்று பவர் கட். மறுநாள் பரீட்சை என்பதால், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படிப்பைத் தொடருகிறார் மாணவி. வட இந்தியா பக்கமெல்லாம் கிடைக்கும் வாசனை மெழுவர்த்தி; ஓர் அடி நீளம் இருக்கும். பெரிய சுடர்… சற்று நேரத்தில் அர்ச்சனாவின் கண் சொக்குகிறது. அப்படியே ஒரு பத்து நிமிடம் டேபிளில் சாய்ந்து தூங்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அடுத்த நாள் காலையில் பரீட்சை எழுதுவதற்கு அர்ச்சனா இல்லை. விடுதி வார்டன் கதவை உடைத்துக் கொண்டு போய்ப் பார்த்தபோது கிடைத்த ஒரே சாட்சி, முழுவதும் எரிந்து முடிந்த மெழுகுவர்த்தியின் மிச்சங்கள்தான்.

கத்தியின்றி ரத்தமின்றி ஏற்பட்ட இந்த மூன்று மரணங்களின் மர்மம், போஸ்ட் மார்ட்டத்தில்தான் தெரிய வந்தது. இவர்கள் எல்லோரும் கார்பன் மோனாக்ûஸடு வாயுவை சுவாசித்ததால் இறந்திருக்கிறார்கள். இந்த கார்பன் மோனாக்ûஸடு (சுருக்கமாக கா.மோ.) என்பது கரியும், ஆக்ஸிஜனும் சரிவிகிதத்தில் கலந்தது. எங்கே எது எரிந்தாலும் இந்த வாயு வெளிப்படும். பொருள் எரிவதற்குப் போதுமான காற்று சப்ளை இல்லாவிட்டால் ஏராளமாக கா.மோ வாயுதான் உற்பத்தியாகும். வாகனங்கள், விறகு-கரி அடுப்பு, பர்னர் சரியில்லாத ஸ்டவ், ஜெனரேட்டர் செட்டுகள் எல்லாம் கார்பன் மோனாக்ûஸடைத் துப்பும் எமன்கள்! (சிகரெட் புகைத்தாலும் சுருள் சுருளாக கா.மோ.தான் ஜாக்கிரதை). புகைபோக்கி வைத்துப் பாதுகாப்பாக வெளியே விட்டால் உலகம்தான் குட்டிச்சுவராகுமே தவிர, நமக்கு உடனடி ஆபத்தில்லை. அதுவே மூடின சின்ன அறையில், அல்லது காருக்குள் ஆளைச் சூழ்ந்துகொண்டால் சில நிமிடங்களில் மரணம்தான்.

கார்பன் மோனாக்ûஸடைப் பார்க்க முடியாது. வாசனை எதுவும் இருக்காது என்பதால் கண்டுபிடிப்பது கஷ்டம். ரத்தத்தில் உள்ள ஹிமோக்ளோபினைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு மூளையைச் செயலிழக்கச் செய்துவிடுவதால், எழுந்து ஜன்னலைத் திறக்கவேண்டும் என்ற எளிய செயலைக் கூடச் செய்ய முடியாமல் கை கால் ஓய்ந்துவிடும். உலகத்தில் வருடா வருடம் சில நூறு பேர் கார்பன் மோனாக்ûஸடைச் சுவாசித்து இறக்கிறார்கள். மேலை நாடுகளில் கா.மோ சூழ்ந்திருப்பதைக் கண்டுபிடிக்கக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் கூடத் தேவையில்லை; நமக்கு கார்பன் மோனாக்ûஸடு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை அறிவது சுலபம்: காற்று புகுந்து புறப்பட இடமில்லாமல் பெட்டி மாதிரி அடைபட்ட அறையில் இருக்கிறீர்களா? அடுப்பு, கணப்பு, ஜெனரேட்டர் செட் ஏதாவது புகைகிறதா? தலை வலி, மறதி, மனக்குழப்பம், அசதி, வாந்தி என்று சித்த வைத்தியசாலை விளம்பரத்தில் வரும் அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா? ஆம் எனில் அனேகமாக நீங்கள் அளவுக்கு மீறி கா.மோ.வை சுவாசித்திருக்கக் கூடும். கதவைத் திறந்து வையுங்கள்; காலாற நடந்து போய் சுத்தமான காற்றை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு வாருங்கள்; சரியாகிவிடும். கார்பன் மோனாக்ûஸடிலிருந்து தப்பிக்க ஒரே வழி, காற்றோட்டம் ஏற்படுத்துவதுதான். காரில் போனால், எஞ்சினை ஓட விட்டுக் கொண்டு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கக்கூடாது.

மூடிய அறைக்குள்தான் இந்த ஆபத்து என்றால், நாகரிக உலகில் ஜன்னலைத் திறந்து வைத்தால் வெளியிலிருந்து வேறுவிதமான பேராபத்து காத்திருக்கிறது! போபால் நகரத்தில் யூனியன் கார்பைட் கம்பெனியிலிருந்து விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததை, இறந்து கொண்டிருப்பதை மறக்க முடியுமா? அந்த மரண இரவில், கதவு ஜன்னல்களை டைட்டாக அடைத்துக்கொண்டு ஏ.ஸி. அறையில் தூங்கியவர்கள் பலர் பிழைத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளின் விஷ வெளிப்பாடுகளால் உடனடியாக மரணம் நேர்ந்தால்தான் தலைப்புச் செய்தியாகிறது; ஆனால் பல ஊர்களில், எந்தப் பேப்பரிலும் பிரசுரமாகாமல் தினம் கொஞ்சம் கொஞ்சமாக ஜனம் செத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுடைய அவல ஓலத்தைக் கேட்க முடியாமல் அதிகாரிகள் காதில் சில்லறை நாணயங்கள் அடைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது.

கடலூருக்குப் பக்கத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றின் பக்கம் மாலை வேளைகளில் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் போனால் விதவிதமான வாசனைகள் மூக்கைத் துளைக்கும். நெயில் பாலிஷ், கொசுவர்த்திச் சுருள், முட்டைக்கோஸ், அழுகின சப்போட்டாப் பழம், செத்த எலி, என்று பத்தடிக்கு ஒரு நறுமணம். அங்கே இருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையின் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியாகும் கெமிக்கல் புகைதான் இத்தனை விதத்தில் நாறுகிறது. இடிப்பாரை இல்லாத ஏமரா அரசாங்கம், 1980 வாக்கில் தொழிலை வளர்க்கிறேன் பேர்வழி என்று கண்ட கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கும் வரிவிலக்கு, விதி விலக்கு எல்லாம் கொடுத்துப் புகுந்து விளையாடச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டது. அவர்கள் அம்மோனியா, அசிடேட் என்று அகர வரிசைப்படி ஆரம்பித்து ஊரிலுள்ள அத்தனை விஷப் பொருள், வேதிப் பொருள்களையும் உற்சாகமாக ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். பொழுதன்னிக்கும் இதைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களுக்குத்தான் பாவம், போக்கிடமே இல்லை. சில சமயம் அவர்கள் இருமல் தாங்க முடியாமல் காறித் துப்புகிற கோழை கூட பஞ்சுமிட்டாய் நிறத்தில் வருகிறது. பயங்கரம்!

நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு நிமோகோனியாசிஸ் என்ற வியாதி வரும். கரித் தூசியைச் சுவாசித்து சுவாசித்து, நுரையீரல்கள் முழுவதும் ரயில் இஞ்சினின் பாய்லர் மாதிரி கறுத்துவிடும். சீக்கிரமே வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு கொடைக்கானல் மாதிரி நிறைய இயற்கைக் காற்று கிடைக்கும் ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டால் ஓரளவுக்கு உடல் தேற வாய்ப்பு உண்டு. மணல் அள்ளுவது, கல் குவாரி வேலை போன்றவை செய்பவர்களுக்காக இதைவிட அருமையான ஒரு வியாதி இருக்கிறது: ‘நிமோனோ…’ என்று ஆரம்பித்து, இடையில் ஏகப்பட்ட எழுத்துகளை இட்டு நிரப்பி, ‘… கோனியாசிஸ்’ என்று முடியும் 45 எழுத்து வியாதி. இந்த நுரையீரல் நோயின் பெயர்தான் இப்போதைக்கு ஆங்கில அகராதியிலேயே மிக நீளமான வார்த்தை! (பெருமையாகச் சொல்லிக் கொள்ளவாவது உதவும்.)

டோக்கியோ போன்ற பெரு நகரங்களில் டிராபிக் போலீஸ்காரர்கள் நாள் முழுவதும் வாகனப் புகையில் நிற்பதால் அவர்களுக்கு ஆக்ஸிஜன் முகமூடி கொடுத்திருக்கிறார்கள். நம்ம ஊரிலும் இதற்கு சற்றும் குறையாத மாசுதான். தூசுதான். ஆனால் முகத்தில் சும்மா ஒரு கர்சீப் சுற்றிக்கொண்டு காவலர்கள் கடமையாற்றுவதைப் பார்க்கும்போது அனுதாபம் ஏற்படுகிறது. (அடுத்த முறை அந்தப் பத்து ரூபாயைக் கொடுக்க நேரும்போது பல்லைக் கடிக்காமல் கொடுத்தால் என்ன?) மேலை நாடுகளில் ஆக்ஸிஜன் பார்லர்கள் இருக்கின்றன.

இவற்றில் ஒரு கட்டணம் செலுத்தினால் கொஞ்ச நேரம் சுத்தமான காற்றைச் சுவாசித்து விட்டு வரலாம். இப்போது சென்னை உள்படப் பல நகரங்களிலும் வந்துவிட்டது. நாம் சாய்வு நாற்காலியில் ஓய்வாகப் படுத்திருக்க, பின்னணியில் அமைதியான இசை ஒலிக்க, கிராம்பு சந்தனம் என்று மெல்லிய நறுமணம் கலந்த ஆக்ஸிஜன் ஒரு குழாய் வழியே மூக்கில் இறங்க, க்ரெடிட் கார்டு கடன் தொல்லைகளைக் கூட மறந்து மனது அமைதியாகும் அந்த நிலையைத்தான் ஞானிகள் பேரின்பம் என்றார்கள். இதற்காகும் செலவு? அரை மணி மூச்சு விடுவதற்கு இருநூற்றைம்பது ரூபாய் வரை ஆகும்.

கவலைப்படாதீர்கள். இப்போது நாம் குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதில்லையா? அது போல மூச்சுக் காற்றையும் எல்லோரும் விலைக்கு வாங்கித்தான் சுவாசிக்க வேண்டும் என்ற நிலை கூடிய சீக்கிரம் வரும்போது, ஆக்ஸிஜன் விலையும் கணிசமாகக் குறைந்துவிடும்.


கல்கத்தா பொலிஸாருக்கு பிராணவாயு ஊக்குவிப்புக் கருவிகள்

கல்கத்தா போக்குவரத்துப் பொலிஸார்
கல்கத்தா போக்குவரத்துப் பொலிஸார்

இந்திய நகரான கல்கத்தாவில் தெருக்களில் பணிபுரியும் போக்குவரத்துப் பொலிஸார், அங்கு சுற்றாடலில் காணப்படும் மாசுபடிந்த வாயுவின் பாதிப்பைத் தவிர்த்துக் கொள்வதற்காக, அவர்களுக்கு பிராண வாயுவின் மட்டத்தை ஊக்குவிக்கும் சிறப்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த நகரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

8 மணிநேர பணியை முடித்த பிறகு குறைந்தபட்சம் பொலிஸார் 20 நிமிடங்களுக்காவது பிராணவாயுவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளதாக, கல்கத்தாவின் போக்குவரத்துப் பொலிஸின் தலைவர் கூறியுள்ளார்.

அந்த நகரவாசிகளில் சுமார் 70 வீதமானவர்கள், ஒருவகையான சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் போக்குவரத்துப் பொலிஸாரும் அடங்குகிறார்கள் என்றும் தேசிய புற்றுநோய் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in Air, Auto, bhopal, Breath, Calcutta, cancer, Carbon, Carbon Monoxide, Coal, emissions, Environment, Factory, Fuel, Fumes, Gas, Global Warming, Health, Healthcare, Kolkata, Lignite, Lung, Mine, mines, Oxygen, Ozone, Petrol, Poison, poisoning, Pollution, Poor, Ramanraja, Tamil, toxic, Tunnel, UCC, vehicle, Warming, Worker | 1 Comment »

Groups Slam Japan’s Waste Colonialism

Posted by Snapjudge மேல் மே 2, 2007

ஜப்பானின் நச்சுக் கழிவுகள் இந்தியாவில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு

சென்னை, மே 3: ஜப்பானின் நச்சுக் கழிவுகள் இந்தியாவில் கொட்டப்படுவதற்கு சென்னையிலுள்ள “கார்ப்பரேட் அக்கவுண்டபிலிட்டி டெஸ்க்’ என்ற தன்னார்வ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் ஆலோசகர் நித்யானந்த் ஜெயராமன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

இந்தியாவிற்கு கடந்த 2003 முதல் 2006 வரை 2 ஆயிரம் டன் குப்பைகளை ஜப்பான் ஏற்றுமதி செய்துள்ளது.

இதைத் தவிர 70 கப்பல்களை “ஆலங்க்’ கப்பல் உடைக்கும் தலத்துக்கு அனுப்பியுள்ளது.

ஜப்பான் நாடு ஏற்றுமதி செய்துள்ள கழிவுகளில் தடைசெய்யப்பட்ட துத்தநாகம், ஈயம் உள்பட 270 டன் நச்சுக் கழிவையும் அந்நாடு ஏற்றுமதி செய்துள்ளது.

இது பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகளைவிட இந்தியாவுக்கு குறைந்த அளவு நச்சுக் கழிவுகளையே ஜப்பான் ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது இந்தியா -ஜப்பான் இடையே ரகசியமாக நடைபெற்று வரும் பொருளாதார ஒப்பந்தத்தின் மூலம் மருத்துவக் கழிவுகள், நச்சுக்கழிவுகள் கொட்டும் இடமாக இந்தியா மாற வாய்ப்புள்ளது.

Posted in accountability, Carbon, Corporate, corporate accountability desk, Credits, Developing, Dumping, emissions, Environment, Environmental, Government, Govt, India, Japan, medical, Pollution, Tokyo, Trash, Waste, World | Leave a Comment »

Pa Ilankumaran: World Forests day – City Gardens & Wild woods

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

நகர வனம் நன்மை தரும் வனப்பு

ப. இளங்குமரன்

இயற்கையின் எதிர்விளைவால் பூமியின் பயன்பாட்டு அளவு சுருங்கிக்கொண்டு வருகிறது.

இதனால் எரிமலைகள் உமிழ்தல், கடல் நீர் உட்புகுந்து பூமி பரப்பு குறைதல், ஏரிகள் அளவு குறைதல், நில நீர் மட்டம் தாழ்ந்து பாலைவனமாக மாறுதல், வளி மண்டலத்தில் பழுப்பு மேகம் மூலம் அமில நீர் பொழிவு, பருவ நிலையில் கோளாறு, உயிரின மண்டலம் பரிதவிப்பு, உயிரினங்கள் அழிவு என பல்வேறு பாதக விளைவுகள்.

மனிதன் நாகரிக காலத்தில் என்று அடி எடுத்து வைத்தது முதல் இயற்கைக்கும் உயிரினச் சுற்றுச்சூழல் மூலாதாரங்களுக்கும் சீர்கேடுகளை உருவாக்கத் தொடங்கினான். இதன் பலன் புவி வெப்பமுறல், காலச்சூழ்நிலையின் மாற்றம், வெள்ளம், பூகம்பம், வறட்சி போன்றவையுடன் மண்ணில் உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், நீர்நிலைகள், அவற்றின் தனித்தன்மையை இழந்து ஆறுகள் நீர் அற்றனவாகவும், பனிமலைகள் வறண்டும் காடுகள் அழிந்தும் காணப்படுகின்றன.

காடுகள் சுரண்டப்பட்டதன் விளைவு மண்ணின் மகத்துவ குணம் மாறி வருகிறது.

உலக நாடுகளில் நகரங்களினால் உருவாக்கப்பட்ட இயந்திரத் தொழிற்சாலைகளில் இயற்கைச் சூழல் கட்டமைப்பு சிதைந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு மூலகாரணமாகச் சமன் செய்யக்கூடிய வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என்றும் வாகனப் போக்குவரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர்.

தற்போது நகரங்களின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெப்பம் அதிகரிப்பு, மன உளைச்சல், வெப்ப நோய்கள் இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. உலகத்தில் சராசரி வெப்ப நிலை 1950 ஆம் ஆண்டு 13.83 செல்சியஸ் அளவு இருந்தது. இன்று 14.36 செல்சியஸ் அளவுக்கு மேற்பட்டு வருகின்றது.

நகர வனம் என்பது நகரப் பகுதிகளில் சாலை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பது மட்டுமல்லாமல் “மாதிரிக் காடுகளை’ குறைந்த பரப்பளவில் ஏற்படுத்துவதும் ஆகும்.

நகரை ஒட்டிய பகுதிகளில் சுமார் 100 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் வனங்களை உருவாக்குவது ஆகும். இந்த வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இப்பகுதிகளில் கசிவு நீர் குட்டைகளையும் உருவாக்க வேண்டும்.

இம்மாதிரி வனப்பகுதிக்கான நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். தற்போது அரசு கட்டடம், சாலைகள், பேருந்து நிலையம், அரசு தொழிற்சாலைகள் அமைக்க எவ்வாறு நிலங்களை கையகப்படுத்துகிறோமோ அதைப்போன்றே நகரவனம் உருவாக்க நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.

“நகர வனத்தில்’ நீண்ட நாள்கள் மற்றும் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களை நட வேண்டும். சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் வனம் ஏற்படும்போது நகரின் வெப்பம் குறையும். நகரின் காற்றுமாசு சமன் செய்யப்படும்.

நிலைத்து நீடிக்கும் சுற்றுச்சூழலை உருவாக்க இதுபோன்ற வனம் பல வழிகளில் உதவி செய்யும். உயிரின மாற்றம் ஏற்பட்டு மனித சுகாதாரம் மேம்பாடு அடையும். நகரின் காற்று சீர்பட்டு தரமான காற்றை சுவாசிக்க முடியும். நகரின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

நீர்வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்ணின் உயிரின சூழல் பாதுகாக்கப்படும். மரங்களின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.

செழிப்பான பூமி என்பது இயற்கை சீர்கேடு விளைவிக்கும் காரணிகளை வேரறுத்து வனப்புமிக்க மரங்களை நடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

நாம் இன்றைய தினம் இயந்திரத் தொழில் நுட்பத்தில் முன்னேறிச் சென்றாலும் இயற்கை பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பின்னடைந்து வருகிறோம்.

எனவே இயற்கை மூலாதாரங்களைப் பெருக்கும் வகையில் இயற்கை மறுசீரமைப்பு பணிகளில் பயணிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

(இன்று உலக காடுகள் தினம்).


குடிநீர் வள நெருக்கடி அதிகரிக்கிறது, ஐ.நா மன்றம் எச்சரிக்கை

குடிநீர் நெருக்கடி
தண்ணீரைத் தேடி….

உலக குடிநீர் தினமான இன்று ஐ.நா மன்றம் வெளியிட்ட ஒரு எச்சரிக்கையில், முக்கியமான இந்த குடிநீர்வளம் வழங்கப்படுவது எல்லாக் கண்டங்களிலும் கடும் அழுத்தத்தில் வருவதாக கூறியுள்ளது.

உலகின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், அதாவது, 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்று மிகச்சமீபத்திய ஐ.நா மன்ற புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

சீதோஷ்ண மாற்றம் வறட்சியை அதிகரித்து, மழை பெய்யும் பருவங்களை மாற்றி, மலைகளின் பனிமுகடுகளிலிருந்து பனி உருகி தண்ணீர் கிடைப்பதைக் குறைக்கும் நிலையில் , இந்த நிலைமை அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் மோசமடையக்கூடும் என்று ஐ.நா மன்றம் கூறுகிறது.

2025ம் ஆண்டு வாக்கில் பூமியில் உள்ள மக்களில் மூன்றில் இரு பங்கினர் குடிநீர் பற்றாக்குறையில் வாழக்கூடும் என்று அது கூறுகிறது.

இந்த ஆண்டின் நீர் தினத்தன்று தண்ணீரை சேமிப்பதன் அவசியம் மற்றும் கிடைக்கும் தண்ணீரை அனைவரும் நியாயமாக பகிர்ந்து கொள்வதன் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.


துருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும்

இரா. நல்லசாமி

ஆண்டுதோறும் மார்ச் 23-ஆம் நாளை உலக வானிலை ஆய்வுக் கழகமும் அதன் 187 உறுப்பு நாடுகளும் “உலக வானிலை ஆய்வு நாளாக’ கொண்டாடுகின்றன.

1950-ல் உலக வானிலை ஆய்வுக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1951 முதல் ஐக்கிய நாட்டு சபையின் சிறப்பு முனையமாக அங்கீகரிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்நாள் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும். இவ்வாண்டின் மையக்கருத்து “துருவப் பகுதி வானிலையும் அதன் உலகளாவிய தாக்கமும்’ என்பதாகும்.

2007 – 08 உலக துருவப் பகுதி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துருவப் பகுதி ஆண்டு அனுசரிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். துருவப் பகுதிகளின் வானிலை ஏனைய உலகப் பகுதிகளின் வானிலையோடு நுணுக்கமான தொடர்புடையது.

1882 – 83ஐ முதல் துருவப்பகுதி ஆண்டாகவும், 1932 – 33ஐ இரண்டாம் துருவப்பகுதி ஆண்டாகவும் அனுசரிக்கப்பட்டது. மேலும் 1957 – 58இல் “உலக மண்ணியற்பியல் ஆண்டு’ கொண்டாடப்பட்டது.

துருவப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி குறைவாகையால் வானிலை ஆய்வு நிலையங்களும் குறைவு. எனவே இப்பகுதிகளின் வானிலையைப் பற்றி அறிய “துருவசுற்று செயற்கைக்கோள்களையே’ பெரிதும் நம்பியிருந்தனர். துருவப்பகுதிகளில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாகவும், அடுத்த ஆறு மாதங்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும்.

தற்போது செயற்கைக்கோள்களில் சிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகளின் மூலம் தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரையிலான துருவப் பகுதிகளின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் திசைவேகம், உறைபனிப் பாறைகளின் அளவு, அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற வழியேற்பட்டுள்ளது.

மேலும் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் மேலும் பல தகவல்களைத் தருகின்றன.

துருவப் பகுதி வானிலை ஆய்வுகளுடன் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தொடர்பு 1981-ல் தொடங்கியது. இந்தியாவின் முதல் “அண்டார்டிகா அறிவியல் பயணம்’ அந்த ஆண்டு தொடங்கியது. அண்டார்டிகாவில் “தக்ஷிண்கங்கோத்ரி’ என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஒரு தாற்காலிக வானிலைக் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

தரைநிலை வானிலைத் தகவல்கள், பனிப்படலத்தின் இயற்பியற் தன்மைகள், பெறப்படும் சூரிய வெப்பம், பனிப்படலங்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி ஆகியவை அந்நிலையத்தில் அளந்தறியப்பட்டது.

1984-ம் ஆண்டு முதல் “ஆண்டு முழுவதும் துறை அதிகாரிகளால் பராமரிக்கப்படும் நிலையமாக’ இது செயல்படத் தொடங்கியது. இரண்டாவது வானிலை கண்காணிப்பு நிலையம் அண்டார்டிகாவின் கிர்மேகர் மலைப்பகுதியில் “மைத்ரி’ என்ற இடத்தில் 1988 – 89-ல் அமைக்கப்பட்டது.

ஒன்பதாவது அண்டார்டிகா அறிவியல் பயணத்தின்போது தொடங்கப்பட்ட இந்நிலையம் ஒரு நிரந்தர வானிலை நிலையமாகும். 1990 முதல் “மைத்ரி’யில் மட்டும் நமது வானிலைக் கண்காணிப்பு நிலையம் செயல்படுகிறது “தக்ஷிண்கங்கோத்ரி’ நிலையம் மூடப்பட்டுவிட்டது.

உலக வானிலையோடு தொடர்புடைய பல தகவல்கள் “மைத்ரி’ வானிலைக் கண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படுகின்றன. “மைத்ரி’ நிலையத்தின் முக்கியமான பணிகள் வருமாறு:

தரைநிலை வானிலைத் தகவல்களைச் சேகரித்தல், சேகரிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் உலக வானிலை மையங்களுக்கு அனுப்புதல். தரைநிலை ஓசோன் மற்றும் வளிமண்டல ஓசோன் பற்றிய கணிப்புகளைச் சேகரித்தல். இதற்கென வளிமண்டலத்தில் பலூன் அனுப்பித் தகவல் சேகரிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.

கதிரவனின் பல்வேறு கதிர்வீச்சுகளால் வளிமண்டலத்தில் ஏற்படும் “வெப்பக் கலப்பு’ எவ்வளவு என்பதை “சன் – போட்டோமீட்டர்’ கொண்டு அளக்கப்படுகிறது.

துருவசுற்று செயற்கைக்கோள் மூலமாக மேகங்கள் பற்றிய தகவல்களும் வளிமண்டல வெப்பம், காற்று பற்றிய தகவல்களும் சேகரித்தல், பனிப்புயல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல். 1981-ல் தொடங்கி 2000 முடிய இருபது “அண்டார்டிகா அறிவியல் பயணங்கள்’ மேற்கொள்ளப்பட்டுள்ளன.

துருவப் பகுதி வானிலையை அறிய வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.

துருவப் பகுதிகள் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் கணிசமான அளவில் கிடைக்கும் இடங்களாகும். இது சம்பந்தமான பணிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகள் தேவைப்படுகின்றன. அங்கு வாழும் “எஸ்கிமோக்கள்’ போன்ற பழங்குடியின மக்களையும் “பனிக்கரடி’, “பென்குயின்’ ஆகிய துருவப் பகுதி விலங்குகளையும் பாதுகாக்க வானிலை ஆய்வுகள் பயன்படுகின்றன.

மேலும் பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் குழுக்கள் துருவப் பகுதிகளில் பல்துறை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பான பயணம், வாழ்க்கை ஆகியவற்றுக்கும் துருவப் பகுதி வானிலை பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன.

மேலும் துருவப் பகுதிகளின் வானிலை உலகின் ஏனைய பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. பூமத்தியரேகைப் பகுதி, துருவப் பகுதிகளைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிக சூரிய வெப்பசக்தியைப் பெறுகிறது.

இதன் தொடர்வினையாக பெருங்கடல்களும் வளிமண்டலமும் இவ்வெப்பச் சக்தியை துருவப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் துருவப் பகுதியின் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் உருகும்போது, கடல் நீரோட்டங்களின் தன்மை மாறிவிடும் அபாயம் உள்ளது. கடல் நீரோட்டங்களின் தன்மை மாறும்போது உலக வானிலையில் பெருமாற்றங்கள் தோன்றலாம். சுருங்கிவரும் பனிப்படலத்தின் காரணமாக கடல்நீரின் மட்டம் உயரக்கூடும்; உப்புத்தன்மை குறையக்கூடும்; கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும்; உறைபனி, துருவப்பகுதி வானிலை மாற்றத்தால் உருகத்தொடங்கும்போது பசுங்குடில் வாயுக்களில் ஒன்றான “மீத்தேன்’ வெளியிடப்படும். இது ஓசோன் படலத்தில் மாறுதல்களையும் அதன் தொடர்ச்சியாக உலகளாவிய வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

வரையறுக்கப்படாத எல்லைகளை உடைய அறிவியல் துறைக்கு “வானிலையியல்’ ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். “துருவப்பகுதி வானிலை’ இவ்வாண்டில் இயற்பியல், உயிரியல், வானிலையியல் மற்றும் சமூகவியல் அறிஞர்களால் மிக நுணுக்கமாக ஆராயப்படும் என்பதே இதனை நன்கு புலப்படுத்தும்.

உலகம் வளர்ச்சி பெற, துருவப்பகுதி வானிலையைக் கண்காணித்தலும், சரிவரப் புரிந்துகொள்வதும் மிக மிக அவசியமாகும். அதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

(கட்டுரையாளர்: உதவி வானிலை விஞ்ஞானி, மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை).

Posted in Acid Rain, Air, Antarctica, Arctic, Building, Carbon, City, Climate, Concerns, Drought, Dry, Earth, Earthquakes, emissions, Environment, Extinct, Floods, Forests, Gardens, Greenery, Ice, Impact, Industrialization, Issue, Kyoto, Lakes, Land, Nature, Ozone, Plants, Pollution, Population, Quality, Research, Rivers, satellite, Science, Snow, Trees, Village, Warming, Water, Weather | 5 Comments »

Global Warming – Environmental Pollution: Analysis, History, Current Developments

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

வேலியே பயிரை மேயும் நிலை!

ந. ராமசுப்ரமணியன்

உலக வெம்மையின் மூல காரணம் எனக் கருதப்படும் நச்சு வாயுவான கார்பன் வெளியீட்டினால் உலகம் பல்வேறு துயரங்களை எதிர்கொள்ளும் என ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுமம் அச்சம் அடைந்தது.

எனவே 1988-ல் ஒரு சிறப்பு அமைப்பை ஏற்படுத்தியது. இதில் பல்வேறு நாடுகளும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி, 1997ம் ஆண்டு ஜப்பான் நாட்டு கியோட்டோ நகரில் ஓர் அரசியல் உடன்பாட்டை தயார் செய்தன.

அதன்படி 1990ஆம் ஆண்டு உலக கார்பன் வெளியேற்ற அளவிலிருந்து 5.2 சதவீதம் கார்பன் அளவை 2008ம் ஆண்டிலிருந்து 2012 வரை குறைக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த உடன்பாட்டில் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கையெழுத்திடவில்லை. 140 நாடுகள் கையெழுத்திட்டு, இந்த ஒப்பந்தம் 2005 பிப்ரவரி 16ம் தேதி அமலுக்கு வந்தது. தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் சீனா, இந்தியா போன்ற நாடுகள் அப்போது பொருளாதார, தொழில் வளர்ச்சியில் மந்த நிலையில் இருந்ததால், கார்பன் அளவு குறைப்புப் பொறுப்பு குறித்து கருத்தில் கொள்ளப்படவில்லை.

ஆக, கார்பன் வெளியீட்டைக் குறைக்க, உலக வெம்மையைத் தணிக்க உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் புனிதக் கோயிலாக கியோட்டோ நகரம் கருதப்படுகிறது.

சமீபத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றிய சில முக்கிய ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் மிக முக்கிய அறிக்கை 2007 பிப்ரவரியில் ஐ.நா. சபையின் அரசுகளுக்கிடையேயான சீதோஷ்ண மாறுதல் பற்றிய குழு சமர்ப்பித்தது ஆகும்.

இந்த அறிக்கையின் சாராம்சங்களைப் பார்ப்போம்

ஐரோப்பாவில் தாங்க முடியாத அளவுக்கு கோடை வெம்மை அதிகரிக்கும். இந்தோனேஷியாவின் 2000க்கும் மேற்பட்ட தீவுகள் 2030க்குள் மறையும். இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தென் பகுதிகள் தாழ்வான பகுதியாக இருப்பதாலும், நீண்ட கடற்கரை அமைந்ததாலும் பெருமளவு பாதிக்கப்படும். 2050ல் உலகப் பொருளாதாரம் 0.5 முதல் 1 சதவீதம் வரை பாதிக்கப்படும்.

2500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால், 130 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆறு ஆண்டு காலத்தில் தயார் செய்யப்பட்ட இந்த ஆய்வறிக்கை, 1990ம் ஆண்டிலிருந்து தயாரிக்கப்பட்ட நான்காவது உலக வெம்மை பற்றிய அறிக்கையாகும்.

இதைப்போல் மற்றோர் ஆய்வறிக்கை பிரிட்டனின் உலக முன்னேற்றத் துறையால் தயாரித்து வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் வற்றாத ஜீவநதிகள் எனப்படும் கங்கை, யமுனை, சிந்து, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் இன்னும் 40 ஆண்டு காலத்தில் வற்றிவிடும்.

உலக வெம்மையின் காரணமாக இமயமலைப் பனிக்கட்டிகள் அதிக அளவில் உருக ஆரம்பித்துவிட்டன. 1962ம் ஆண்டு 2077 சதுர கிலோமீட்டர் அளவிலிருந்து உறைந்த பனிக்கட்டிகள் சுமார் 21 சதவீதம் உருகி தற்போது 1628 சதுர கிலோமீட்டர் அளவு எனக் குறைந்துவிட்டது.

இதன் மற்றொரு விளைவாக 50 கோடி மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்பது போன்ற மிகவும் கவலை தரக்கூடிய செய்திகள் வெளியாகியுள்ளன.

சுருக்கமாகச் சொல்வதென்றால், கியோட்டோ ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, தனி மனிதர்களுக்கும், உலக நாடுகளுக்கும் உலக வெம்மையைக் குறைப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் தொழில் வளர்ச்சி 1973ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது மும்மடங்காகிவிட்டது. இதன் காரணமாக, ஜப்பான் நாட்டில், 1990ம் ஆண்டு இருந்த கார்பன் வெளியீட்டு அளவைவிட தற்போதைய கார்பன் வெளியீடு 14 சதவீதம் அதிகரித்துவிட்டது என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

உலகில் கார்பன் வெளியீடு குறைப்பு விவகாரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழிகாட்டியான ஜப்பான் நாடும், கியோட்டோ போன்ற நகரங்களும் தங்களது போதனையை தாங்களே நடைமுறைப்படுத்த இயலவில்லை. கார்பன் வெளியீடு அதிகமாகி உலக வெம்மை அதிகரித்துவிட்டது. இந்நிலையில் வேலியே பயிரை மேயும் நிலை வந்துவிட்டதோ?

“”கியோட்டோ நகரமே! நீயுமா?” என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.

(கட்டுரையாளர்: நிறுவனர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, மண்ணிவாக்கம், சென்னை).

===================================================

நீர்வளம் காப்போம்!

ஆ. மோகனகிருஷ்ணன்

இன்று உலக நீர்வள நாள்.

ஆண்டில் சில நாள்களைச் சிறப்பாகக் கொண்டாடும் முறை நம்நாட்டிலும் உலக அளவில் அன்னிய நாடுகளிலும் இருந்து வருகிறது.

இதில் மார்ச் மாதம் 22-ஆம் நாளை உலக நீர்வள நாள் என்றும் ஏப்ரல் 22ஆம் நாளை உலக பூமி நாளென்றும் குறிப்பிட்டு வருகிறோம்.

நீரின்றி மண்ணில் தோற்றம் இல்லை. மண்ணின்றி நீருக்குப் பயனில்லை. மண்ணும் நீரும் இணைந்தே செயல்படும். இரண்டுமே நமக்கு இயற்கையாகக் கிடைத்துள்ள அரிய சொத்துகள். காப்பாற்றப்பட வேண்டியவை. வீணாக்கக்கூடாதவை. வழிபட வேண்டியவை.

சூரியனின் வெப்பத்தினால் நீர் ஆவியாகி, மேல்நோக்கிச் சென்று மழையாகப் பொழிந்து மண்ணை வளமாக்குகிறது. அதில் ஒரு பகுதி மண்ணில் ஊடுருவி கீழ்நோக்கிச் செல்ல, மற்றது ஓடைகளிலும் ஆறுகளிலும் பாய்ந்து பயன்படுத்தியது போக மிஞ்சியது கடலில் சங்கமம் ஆகிறது. இதைத்தான் “நீரின் சுழற்சி’ எனக் கொள்கிறோம். இச் சுழற்சி எங்கும் எப்போதும் இடையறாது நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

புவியில் வாழும் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத நீரைப் பெறுவதற்கு ஒரே ஆதாரம், பெய்யும் மழைதான். அந்த மழையும் காலத்திலும் இடத்திலும் மாறி வருவதால், மழையினால் பெருகும் நீர்வளமும் வேறுபட்டே காணப்படும். பூமியின் மேற்பரப்பில் நிகழும் நீரோட்டமும் நிலத்தடியில் நகரும் நீரும் மழையைப் பொறுத்தே அமையும்.

இன்றைய நிலையில் உலக அளவில் கண்டம் வாரியாக நீர்வளத்தைத் தோராயமாகக் கணக்கிட்டால், ஆண்டொன்றிற்கு ஐரோப்பிய கண்டத்தில் 3,210 பில்லியன் கனமீட்டரென்றும், ஆசிய கண்டத்தில் 14,410 பில்லியன் கனமீட்டரென்றும், ஆப்பிரிக்க கண்டத்தில் 4,570, வடஅமெரிக்காவில் 8,200, தென் அமெரிக்காவில் 11,760, கடலில் ஆங்காங்கே பரவியுள்ள சில தீவுகளிலெல்லாம் சேர்த்தால் 2,388 என்றும் ஆக மொத்தம் 44,538 பில்லியன் கனமீட்டரென்று கொள்ளலாம்.

இதைப் பார்த்தோமானால், ஆசிய கண்டத்தில்தான் மிக அதிகமான நீர்வளம் இருப்பதை அறிகிறோம். ஆனால் ஆசியாவின் மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 59 சதவீதம். நபரொன்றுக்குக் கணக்கிட்டால் ஆண்டில் கிடைப்பது 4,745 கனமீட்டர் என்றாகும். அடுத்தபடி நீர்வளம் மிகுந்த கண்டம் தென் அமெரிக்கா.

ஆண்டில் ஒரு நபருக்குத் தேவையான நீர் அளவு 1,700 கன மீட்டர் ஆகும். அந்த அளவு நீர் கிடைத்தால் வாழ்க்கை வளமுடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நாட்டில் 1000 கனமீட்டர் தான் பெறமுடியுமென்றால் அந்த நாடு நீர்வளம் குன்றிய நாடென்றே கொள்ள வேண்டுமென்றும், 1000 கனமீட்டருக்கும் குறைந்தால் அந்நாட்டில் நீர்ப்பற்றாக்குறையோடு பஞ்சம் ஏற்படும் நிலை உண்டாகுமென்றும் உலகளவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் நீர்வளம் அதற்கீடான பல நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து திருப்திகரமாகவே உள்ளது எனலாம். நாட்டின் நிலப்பரப்பு உலக நிலப்பரப்பின் 2.45 சதவீதம், நீர்வளம் சுமார் 4 சதவீதம். ஆனால் மக்கள்தொகையோ 16 சதவீதம். எனவே, பெருகிவரும் மக்கள்தொகையை முடிந்தவரை கட்டுப்படுத்தி, கிடைக்கும் நீர்வளத்தை மாசுபடாமல் காத்து, வீணாக்காமல், மக்கள் பயனுள்ள வகையில் உபயோகிக்க வழிவகை செய்ய வேண்டும்.

இதில் யாருக்குப் பொறுப்பு என்று தேடாமல் எல்லோருக்கும் பொறுப்புண்டு என்பதை உணர வேண்டும். நீர்வளத்தை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்யும் செயல்பாடுகளில் அனைவரும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். இந்த நீர்வள நன்னாளில் இதற்கான உறுதியை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நீர்ப்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்து வருவதை நாம் அறிவோம். தமிழ்நாட்டின் நிலப்பரப்பு இந்திய நாட்டின் பரப்பில் 4 சதவீதம். ஆனால் மக்கள்தொகையோ 7 சதவீதம். நீர்வளம் 2.4 சதவீதம்தான். 2001-ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நீர்வளம் ஒரு நபருக்கு ஆண்டிற்கு 575 கனமீட்டரே. இதனால்தான் நீர்வளம் மிகுந்த அண்டை மாநிலங்களை அணுகி நீரைப் பெறும் கட்டாயத்தில் நாம் உள்ளோம். பெற்று வந்த நீரைப் பறிபோகாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

பின் சந்ததியாரும் நலமாக வாழ, நாம் நீர் உபயோகத்தைக் கட்டுப்படுத்தி, கிடைக்கும் நீரை வீணாக்காமல், ஒவ்வொரு துளியும் நற்பயனைத் தர ஆவன செய்ய வேண்டுமென்று உலக அளவில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, வளர்ந்து வரும் மக்கள்தொகையையும் குறைந்து வரும் நீர் வளத்தையும் கருத்தில் கொண்டு, 1977-ல் முதன்முறையாக தானே முன்வந்து ஒரு பெரிய கருத்தரங்கை நடத்தியது.

அதன் விளைவாக “”சர்வதேச குடிநீர் மற்றும் துப்புரவு” செயல்திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு, பல நாடுகளில் அதற்கான பணிகளை மேற்கொள்ள நிதி உதவியும் தந்தது. அச்சமயம் இந்திய நாடும் சிறிது பயன்பெற்றது.

இதைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டில் “”நீரும் சுற்றுப்புறச் சூழலும் மனித வளர்ச்சியும்” என்ற தலைப்பில் விவாதிக்க ரியோடி ஜெனிரோ நகரில் ஒரு மாபெரும் சர்வதேச மாநாட்டைக் கூட்டி, அதில் சில கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவும் அதில் பங்கேற்றது. இவை யாவும் இயற்கையில் நமக்குக் கிடைக்கும் நீரினைச் சிறந்த முறையில் மேலாண்மை செய்ய வலியுறுத்தின. அதன் விளைவே ஐக்கிய நாடுகள் குழுமம் நிறுவிய “”உலக நீர்வளக் கூட்டாண்மை” தோற்றுவித்த, “”ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மை”.

மண்ணுக்கும் மழைக்கும் இணைப்பு உள்ளதால்தான் இப்புவியில் உயிர்கள் தோன்றி, வளர்ந்து, மடிகின்றன. நீரின் பயன்பாடு பல வகை. குடிக்க சுத்தமான நீர், குளிக்க, துப்புரவுக்காக, மற்ற உபயோகத்திற்காக நீர், உணவு உற்பத்திக்காக பாசன நீர், தொழிற்சாலைகளில் உபயோகம், நீர்மின் நிலையங்களில் உபயோகம். இப்படி பல உபயோகங்கள்.

ஆனால் அத்தனை உபயோகங்களுக்கும் தேவையான நீர் போதுமானதாக கிடைக்காத நிலை நேரலாம். நீரை ஆள்பவர்களும் மேலாண்மை செய்ய கடமைப்பட்டவர்களும் பல நிறுவனங்களாகவோ, பல அரசுத் துறைகளாகவோ இருக்கலாம். ஆயினும் அவர்கள் செயல்பாடுகள் அனைத்தும் பயனீட்டார்களின் நலனைக் கருதி அவர்களின் முழு ஒத்துழைப்புடன் அமைய வேண்டும்.

நீரும் நிலமும் இதர வாழ்வாதாரங்களும் ஒன்றோடு ஒன்று சார்ந்து வளர்வதை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறையே ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை எனலாம்.

இதற்கு அடிப்படையாக நீரைப் பங்கிடுவோரிடமும், நீரைப் பயன்படுத்துவோரிடமும், முரண்பாடுகளின்றி ஒத்துழைப்பு வளர வேண்டும். இதை வளர்க்கும் பொறுப்பு நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு என உலக நீர்வள நாளான இந்நன்னாளில் நாம் யாவரும் உணருவோமாக.

(கட்டுரையாளர்: நீர்வள ஆலோசகர்- தமிழக அரசு).

Posted in Al Gore, Alternate, An Incovenient Truth, Analysis, Biofuel, Carbon, Developments, Economy, emissions, energy, Environment, EU, Europe, Fuel, Gas, Global Warming, History, Kyoto, Natural, Petrol, Pollution, UN, Water | 2 Comments »

Global Warming – Environmental Pollution: Reports, History, Current Developments

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

“உலக வெம்மை’ ஏமாற்று வேலையா?

ந.ராமசுப்ரமணியன்

மனித குலத்திற்கே மிகப் பெரிய எதிரியாகவும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிய தடைக் கல்லாகவும் “குளோபல் வார்மிங்’ எனும் உலக வெம்மைதான் விளங்கப் போகிறது என பல விஞ்ஞான ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

“கார்பன்’ வெளியீட்டினால் ஏற்படும் உலக வெம்மை அதிகரிப்பைத் தடுக்க வேண்டும் என்று உலக நாடுகள் முடிவெடுத்து, கியூட்டோ ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

கியூட்டோ நகரம் ஜப்பானில் உள்ளது. இந்நகரில்தான் கியூட்டோ ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் 150-க்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட்டன.

ஆனால் உலக வெம்மைக்குப் பெரிய காரணகர்த்தாவான அமெரிக்கா “கியூட்டோ’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது. வளர்ச்சி பெற்ற ஆஸ்திரேலியாவும் கையெழுத்திடவில்லை.

தற்போது மிக முக்கியமான இயற்கையின் தீவிரவாதம் உலக வெம்மைதான். இதற்கு மனித இனத்தின் பொறுப்பற்ற செயல்களே காரணம் என விஞ்ஞான உலகம் அறிவித்துவிட்டது.

உலக வெம்மையால் ஏற்பட உள்ள அபாயங்கள்: அதிக கார்பன் வெளியீட்டால் உண்டாகும் ராட்சத சக்தி கொண்ட “எல்நினோ’வினால் பயங்கரமான சூறாவளிகள் ஏற்படும் என அமெரிக்க நாசா விஞ்ஞானிகளும், அமெரிக்க விஞ்ஞான தேசிய அகாதெமியும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

30 ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு 0.2 செல்சியஸ் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு துயரங்களை உலகம் சந்திக்க இருக்கிறது என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

“நிலத்தின் நண்பர்கள்’ எனும் சமூக ஆர்வலர் நிறுவனம், நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞான, பொருளாதார ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆராய்ந்து 2100-ம் ஆண்டு நிறைவடைந்ததும் உலகப் பொருளாதாரம் ஆண்டுக்கு ரூ.900 லட்சம் கோடி அளவு பொருளாதார இழப்பை எதிர்கொள்ளும் எனக் கணித்துள்ளது.

நாசாவின் காட்டர்ட் விண்வெளி ஆய்வு நிலையம், தனது 2005-ம் ஆண்டு அறிக்கையில், தொழிற் புரட்சி தொடங்கியபோது பத்து லட்சத்துக்கு 280 கார்பன் துகள்கள் விண்வெளியை மாசுபடுத்தின; தற்போது இதன் அளவு 10 லட்சத்துக்கு 380 கார்பன் துகள்களாக அதிகரித்து, மேலும் தொடர்ந்து அதிகரிக்க உள்ளது.

மேலும் மனிதனால் ஏற்படும் கார்பன் தீங்கினால் உலக வெம்மை இன்னும் 1 டிகிரி செல்சியஸ் என்று அதிகரித்தால், 10 லட்சம் ஆண்டுகளில் உலகம் காணாத அளவுக்கு, உலக வெம்மை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

பொருளாதார ரீதியாக 2050-ம் ஆண்டு வாக்கில் உலகம் ரூ.315 லட்சம் கோடிகளை (அதாவது உலக பொருளாதார வளர்ச்சியில் 20%) இழக்கும்.

விவசாய உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டு, நோய்கள் ஏராளமாகப் பரவும், மின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும் என ஸ்டர்ன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹாக்கி மட்டை வரைபடம்: மைக்கேல் மேன் என்பவர், கி.பி. 900 ஆண்டு முதல் உலக வெம்மை எவ்வாறு அதிகரித்துள்ளது என்பது பற்றிப் பல்வேறு சோதனைகளை நடத்தியுள்ளார். பல்வேறு சாதனங்களைக் கொண்டும், மரவளையம் போன்றவற்றை வைத்தும், வெம்மை அதிகரிப்பைக் கணக்கிட்டுள்ளார். இதன்படி உலக வெம்மை மிகவும் அதிகரித்துள்ளது.

உலக வெம்மை எனும் மோசடி: இந்நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற அமெரிக்க நாட்டு “வால் ஸ்’டிரீட் ஜெர்னல்’ எனும் பத்திரிகை 2006 ஜூலை மாதம் 14-ம் தேதி இதழில் “ஹாக்கி மட்டை வரைபடம் வெறும் பிதற்றல்’ என்று தலையங்கம் எழுதியுள்ளது.

பல கற்பனைகளுடன், இரண்டுங்கெட்டான் வழிமுறைகளைப் பின்பற்றி, விஞ்ஞான உண்மைகளுக்குப் புறம்பான வகையில் “ஹாக்கி மட்டை வரைபடம்’ ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. உலக வெம்மை என்பது விஞ்ஞான பூர்வமான விளக்கமில்லை என்று கொல்ம்பியா பல்கலைக் கழக புவியியல் ஆய்வு நிறுவன இயக்குநர் ஜெப்ரிசாச் கடுமையாகச் சாடியுள்ளார்.

1960-களில் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிறது. இது அதிகரித்து குளிர்மிகுந்து, உலகம் குளிர்ச்சி அதிகரிப்பால் உறைந்து அழியும் என்ற ஒரு விஞ்ஞான ஆய்வுக் கட்டுரை வெளியானது.

1945-லிருந்து 30 ஆண்டுகள் அதாவது 1975 வரை உலகம் மிகவும் குளிர்ச்சியடைந்தது. இதையொட்டி 1975-ல் “நியூஸ் வீக்’ எனும் உலகப் புகழ் பெற்ற பத்திரிகை அட்டைப் படக் கட்டுரையாக “அடுத்த ஊழிப் பனிக்காலம் உலகத்தை நெருங்குகிறது’ என்ற விஞ்ஞான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது.

தற்போது உலக வெம்மை என்று பேசப்படுகிறது. அப்படியானால், உலகம் குளிர்ந்து போகும் என்ற விஞ்ஞான ஆய்வுக்கு அர்த்தமென்ன?

ஆக இத்தகைய கணிப்புகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. 1970களில் “உலகக் குளிர்ச்சி’ என்ற கணிப்பு எவ்வாறு சரியில்லையோ, அதேபோல தற்போதைய கணிப்பான “உலக வெம்மை’ என்பதும் விஞ்ஞான அடிப்படையில் அமைந்ததல்ல. இவைகளெல்லாம் சோதிடம் போன்றதே.

“கியூட்டோ’ ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடாதது சரியே. இந்தியாவும் உலக வெம்மை என்ற விஞ்ஞானத்திற்கு ஒவ்வாத வாதத்தை ஒதுக்கி விட்டு, உற்பத்தி அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி என்ற வகையில் முனைப்பைக் காட்ட வேண்டும்.

உலக வெம்மையால் 2100-ல் உலகம் பல்வேறு பயங்கர இழப்புகளை சந்திக்கும் என்பது மோசடியே என்ற வகையிலும் பல ஆய்வுக் கட்டுரைகள் தற்போது வெளியாகின்றன.

(கட்டுரையாளர், சென்னை மண்ணிவாக்கம், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனர்).

Posted in Actions, Al Gore, Auto, Carbon Cost, Cars, emissions, Environment, Global Warming, History, Kyoto, Plan, Pollution, Report | Leave a Comment »

India’s Rice production hampered by Global Warming

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2006

சீதோஷணநிலை காரணமாக இந்தியாவில் நெல் உற்பத்தி பாதிப்பு

சீதோஷணநிலை மாற்றத்தால் நெல் உற்பத்தி பாதிப்பதாக ஆய்வு
தஞ்சையில் உள்ள ஒரு நெல் வயல்

கரும்புகை போன்ற மாசு ஏற்படுத்தும் வாயுக்கள் மற்றும் புவி வெப்பமடைவதற்கு காரணமாக இருக்கும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் ஆகியவைகள் சீதோஷ்ணநிலை மீது ஏற்படுத்திய தாக்கம் மட்டும் இல்லாதிருந்தால், 1990களில் இந்தியாவின் நெல் உற்பத்தி, இன்னும் 25 சதவீதம் வரை அதிகமாக இருந்திருக்கும் என்று அமெரிக்க அறிவியல் சஞ்சிகை ஒன்றில் பிரசுரமான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

தெற்காசியாவெங்கும் காணப்படும், பழுப்பு நிற மேகங்கள் சூரிய வெளிச்சத்தையும் மழைபொழிவையும் குறைத்ததன் மூலம், அரிசி உற்பத்திமீது எதிர்மறையான தாக்கத்தை விளைவித்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சீனா மற்றும் இந்தோனேசியா போன்ற சுற்றுப்புற சூழல் மாசுபட்டுள்ள பிற நாடுகளிலும், இதே போன்ற ஆய்வை மேற்கொள்ள இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Posted in Agriculture, China, emissions, Environment, Farming, Global Warming, Greenhouse, India, Indonesia, Irrigation, Pollution, Production, Rain, rice, South Asia, Sun, Water | Leave a Comment »

Environmental Impact – 10 More Years Left

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2006

உலகம் பேரழிவைச் சந்திக்க இன்னும் பத்தே ஆண்டுகள்தான்!

கே.என். ராமசந்திரன்

ஒரு பரிசலை கொஞ்சமாகச் சாய்த்தால் அது தானாக நேராகி விடும். அதை ஓரளவுக்கு மேல் சாய்த்தால் கவிழ்ந்து விடும். அத்தகைய ஒரு கவிழ் வரம்பை (tipping point்) உலகம் வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் பயமுறுத்தியிருக்கிறார்கள். ஜேம்ஸ் லவ்லாக் (James Lovelock) என்ற விஞ்ஞானி Gaia என்று ஒரு கொள்கையை வெளியிட்டுப் பூமி தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்ளும் திறமையுள்ள ஓர் உயிரி என்று வர்ணித்தார். அவரே இப்போது நாம் மீள முடியாத வரம்புகளைத் தாண்டிப் போய் விட்டோம் என்கிறார். இதுவரை விஞ்ஞானிகள் தென் துருவத்திலும் வட துருவத்திலும் 2 முதல் 3 கிலோமீட்டர் வரை தடிமனுள்ள நிரந்தரப் பனிப்பாளங்கள் உலகளாவிய வெப்பநிலை உயர்வு காரணமாக மெல்ல மெல்லத்தான் உருகும் என்றும் அவை முழுவதுமாக உருகப் பத்தாயிரம் ஆண்டுகளாவது ஆகும் என்றும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நிரந்தரப் பனிப்பாளத்தில் பல விரிசல்கள் இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. பனிப்பாளங்களின் மேல்பரப்பில் உருகும் நீர், விரிசல்களில் இறங்கிப் பத்தே விநாடிகளுக்குள் பனிப்பாளங்களுக்கடியில் உள்ள தரைப்பரப்பை எட்டி விடுகிறது. பனிப்பாளம் தரையை விட்டு நீரில் மிதக்கத் தொடங்கி வேகமாகக் கடலை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. கிரீன்லாந்தின் பனியாறுகள் இந்த விதமாகக் கடலை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டன. அட்லாண்டிக் கடலுக்குள் விழும் பனியாறுகளின் பருமம் 1996-ஆம் ஆண்டிலிருந்த ஆண்டுக்கு 100 கன கிலோமீட்டர் என்ற அளவிலிருந்து 2005-இல் 220 கன கிலோமீட்டராக உயர்ந்திருக்கிறது. சைபீரியாவின் வட பகுதியிலும் பனியாறுகள் அதிக அளவில் உருகத் தொடங்கியுள்ளன. இங்கிலாந்திலுள்ள வனவிலங்குகள் வளிமண்டல வெப்பநிலை உயர்வு காரணமாக வடக்கு நோக்கிக் குடிபெயர்ந்து கொண்டிருக்கின்றன. வழக்கமாக உறைந்து போகும் பல காயல்களில் கப்பல் போக்குவரத்து சாத்தியமாகும் அளவுக்கு நீர் நிறைந்திருக்கிறது. துருவப் பனிமலைகள் கண்ணெதிரே காணாமற் போய்க் கொண்டிருக்கின்றன.

துருவப் பனிப்படலங்கள் தம் மீது விழும் சூரிய வெப்பத்தில் 80 சதவீதம் வரை வானில் திருப்பியனுப்பி விடுகின்றன. கடல் நீர் 7 சதவீத வெப்பத்தைத்தான் பிரதிபலிக்கிறது. பனிப்படலங்கள் பரப்பு குறைவதும் கடல்களின் பரப்பு அதிகமாவதும் இவ்வாறு திருப்பியனுப்பப்படும் வெப்பத்தைக் குறைத்து உலகளாவிய வெப்பநிலையை அதிகமாக்கும்.

துருவப்பகுதிகளின் நிரந்தரப் பனிப்பாளங்களில் சுமார் 450 பில்லியன் டன் அளவுக்குக் கரிம வாயுக்கள் சிக்கியுள்ளன. வட சைபீரியாவின் பனிப்பாலைகளில் மீதேன் விரைவாக வெளியே கசிந்து வருவதாக அலாஸ்கா பல்கலையைச் சேர்ந்த கேட்டிவால்டர் (Katey Walter) கண்டுபிடித்திருக்கிறார். கரிம வாயுக்கள் பசுமைக்குடில் வாயுக்கள். அவை உலகளாவிய வெப்பநிலையை அதிகமாக்கும்.

மண்ணிலும் கிருமிகள் மீதேன் வாயுவை உற்பத்தி செய்கின்றன. தரை வெப்பநிலை உயர்ந்தால் அவ்வாறு உருவாகும் மீதேனின் அளவும் அதிகமாகும். பனிமலைகள் உருகினால் அவற்றிலிருந்து ஏராளமான பசுமைக்குடில் வாயுக்கள் வெளிப்பட்டுப் பூமியின் சராசரி வெப்பநிலையை மேலும் உயர்த்தும். இது ஒரு நச்சுச் சூழலாக மாறி விடும்.

உலகளாவிய வெப்பநிலை 3 செல்சியஸ் டிகிரி உயர்ந்தால் உலகிலுள்ள காடுகளில் பாதிக்கு மேல் அழிந்து சிதைந்து கரிம வாயுக்களை வெளியிடத் தொடங்கும். இன்றிலிருந்து உடனடியாகப் பசுமைக்குடில் வாயுக்களை வெளிப்படாமல் தடுத்து நிறுத்தினால்கூட வளிமண்டல வெப்ப நிலையில் 2 செல்சியஸ் டிகிரி வரை உயர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பட்டு வரும் வெள்ளம், வறட்சி போன்ற உற்பாதங்கள் பத்தாண்டுகளுக்கொரு முறை நிகழத் தொடங்கும். இந்த நிலை நீடித்தால் துருவங்களில் முதலைகளும் நீர் யானைகளும் வசிக்கத் தொடங்கி விடும். பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் கொதித்து ஆவியாகிக் கொண்டிருக்கும். 135 கோடியாண்டுகளுக்கு முன் பூமியின் நிலை அப்படித்தான் இருந்தது. இன்று வெள்ளிக்கிரகத்தில் அதேபோன்ற நிலை நிலவுகிறது. இதற்கெல்லாம் காரணம் பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும் மீதேனும் கரியமில வாயுவும்தான். அவை ஓரளவுக்குச் சூரிய வெப்பத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு உலகம் ஒரேயடியாகக் குளிர்ந்து போய்விடாமல் செய்கின்றன என்றாலும் அதுவே அளவுக்கு மீறும் போது ஆபத்தாகி விடுகிறது.

1765-ஆம் ஆண்டில் ஜேம்ஸ்வாட் நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்துத் தொழிற்புரட்சியைத் தொடங்கி வைத்தது முதல் கரியையும் எண்ணெயையும் எரித்து மனித இனம் வளி மண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்களைப் பரப்பத் தொடங்கிவிட்டது. பீட்டர் காக்ஸ் (Peter Cox்) என்ற ஆங்கிலேய வானிலை வல்லுநர் ஊர்திகளும் விமானங்களும் மின்னுற்பத்தி நிலையங்களும் வெளியிடும் கரியமில வாயுவை வளிமண்டலம் சமாளிக்க முடியாமல் போகிற நிலை இன்னும் பத்தே ஆண்டுகளுக்குள் வந்துவிடலாம் என்கிறார். தற்போது மனித நடவடிக்கைகளால் உருவாக்கப்படும் கரிம வாயுக்களில் கிட்டத்தட்டப் பாதியளவைத் தரையும் தாவரங்களும் கடலும் உட்கவர்ந்து கொள்கின்றன. வெப்பநிலை உயர்ந்தால் அவை அந்த வாயுக்களை வெளிப்படுத்தத் தொடங்கிவிடும். சில விநாடிகளில் பல பில்லியன் டன் கரிம வாயுக்கள் கடலிலிருந்து பொங்கி வெளிப்பட்டு வளி மண்டலத்தில் கலந்து விட முடியும். இதேபோன்ற ஒரு சம்பவம் 5.5 கோடியாண்டுகளுக்கு முன் நிகழ்ந்து பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முற்றாய் அழிந்து போயின.

இந்த நிலைமைச் சீரழிவைத் தடுக்கப் பலரும் பல வழிகளைப் பரிந்துரைக்கிறார்கள். வானில் பல கோடி டன் அளவுக்குக் கந்தக டையாக்சைடைப் பரப்பினால் அது சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்துத் திருப்பியனுப்பி விடும் என்று சிலர் யோசனை கூறியிருக்கிறார்கள். பலூன்கள் மூலம் அவ்வாறு பரப்பலாம். ஆனால் அது பெரும் செலவு பிடிக்கிற விஷயம். அத்துடன் அது ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தி விடக் கூடும்.

விண்வெளியில் சூரியனுடைய நிறையீர்ப்பும் பூமியின் நிறையீர்ப்பும் சமமாக உள்ள இடத்தில் இரண்டடி அகலமுள்ள லென்சுகளைக் கோடிக்கணக்கில் பரப்பிச் சூரிய வெப்பத்தில் ஒரு பகுதி பூமிக்கு வராமல் திசைதிருப்பி விடலாம் என ஒரு யோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இது தொழில்நுட்பச் சிக்கல்கள் நிறைந்த நடவடிக்கை.

வானில் கடல்நீரைப் பீய்ச்சி ஆவியாக்கி நிறைய மேகங்கள் உருவாகும்படி செய்தால் அவை அதிக அளவில் சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்துத் திருப்பியனுப்பி விடும் என்று ஒரு கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் அத்தகைய மேகங்கள் சில நாட்களே நீடிக்கும். கடல்நீரைத் தொடர்ந்து வானத்தில் பீய்ச்சிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும்.

கடலிலும் தரையிலும் ஏராளமான பிரதிபலிப்புப் பொருள்களைப் பொருத்தி ஓரளவு வெப்பத்தைத் திருப்பியனுப்பலாம். வெள்ளையான பிளாஸ்டிக் நுரைப்பலகைகளைக் கடல்களிலும் பாலைவனங்களிலும் பரப்பி வைக்கலாம் என்று சிலர் யோசனை சொல்லுகிறார்கள். ஆனால் அவற்றின் வெள்ளை நிறம் அதிக காலம் நீடிக்காது. அவற்றின் செயல்திறன் குறைந்துவிடும்.

கடல்களில் இரும்புச் சத்தைக் கலந்தால் பைட்டோபிளாங்டன்கள் என்ற நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகிக் கரியமில வாயுவை உட்கவர்ந்து கொள்ளும். அவை இறந்ததும் கடலடித் தரையில் போய்க் குவிந்துவிடும். அதனால் கரியமில வாயு பல நூற்றாண்டுகளுக்கு அங்கேயே தங்கியிருக்கும் என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அதை நம்ப முடியாது.

நமது வாழ்க்கை நடவடிக்கைகளை உடனடியாக மாற்றிக்கொண்டு பசுமைக்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் கலப்பதைத் தடுக்க வேண்டும். அப்படிச் செய்யத் தயங்கினால் உலகம் இன்னும் பத்தே ஆண்டுகளில் பேரழிவைச் சந்திக்கும். ஏழை நாடுகளுக்குப் பணம் கொடுத்து அவற்றிலுள்ள காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தப் பணக்கார நாடுகள் முன்வர வேண்டும் என காக்ஸ் கூறுகிறார்.

Posted in Antartic, Arctic, Carbon dating, Cleanliness, emissions, Environment, Global Warming, Green, Recycle, tipping point, Trash, waterworld | Leave a Comment »