Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Duty’ Category

Petroleum minister asks for zero duty on crude oil – Cuts to cost around Rs 4K cr, fiscal deficit may go up

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 4, 2008

இறக்குமதி வரியைக் குறைக்காவிடில் பெட்ரோலிய நிறுவனங்கள் திவாலாகும்: பிரதமரிடம் முரளி தேவ்ரா தகவல்

புது தில்லி, ஏப். 3: கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியைக் குறைக்காவிடில் பெட்ரோலிய நிறுவனங்கள் கடன் சுமையால் திவாலாகிவிடும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா குறிப்பிட்டுள்ளார்.

கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை முற்றிலுமாகக் குறைக்க வேண்டும் என்று பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார்.

இறக்குமதி வரியை நீக்காவிடில் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ரூ. 1,30,000 கோடியைத் தாண்டும் என்றும், இதனால் அவை திவாலாகும் சூழல் ஏற்படும் என்று பிரதமரிடம் அவர் சுட்டிக்காட்டினார். புதன்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பின்போது தனது கருத்தை அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இது குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் முரளி தேவ்ரா கூறியது:

சமையல் எண்ணெய் விலையைக் குறைக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை அரசு ரத்து செய்தது. அதைப் போல சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை எட்டியுள்ளது. தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை முற்றிலும் நீக்க வேண்டும்.

2007-08-ம் நிதி ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ. 77,304 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு நடப்பு நிதி ஆண்டில் ரூ. 1,30,000 கோடியை எட்டும் என தெரிகிறது.

கடன் பத்திர வெளியீடு மூலம் எண்ணெய் நிறுவனங்கள் திரட்டிய தொகை போதுமானதல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் ரூ. 20,333 கோடியும் பிறகு ரூ. 12,675 கோடியும் திரட்டப்பட்டது. இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி), மற்றும் இந்திய நிலவாயு ஆணையம் (“கெயில்’) ஆகியவை அளித்த மானியம் ரூ. 12,000 கோடி. இருப்பினும் எண்ணெய் நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பை ஈடுகட்டும் அளவுக்குப் போதுமானதாக இல்லை.

இறக்குமதி வரிக் குறைப்பு யோசனையை பிரதமர் ஏற்கவில்லை. அதற்குப் பதில் மேலும் கடன் பத்திரங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கூறியதாகத் தெரிகிறது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு ரூ. 450 கோடி இழப்பைச் சந்தித்து வருகின்றன. இதை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவும் அரசு அனுமதிக்கவில்லை. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 10.78-ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 17.02-ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 316.06-ம் நஷ்டம் ஏற்படுகிறது. கெரசினுக்கு லிட்டருக்கு ரூ. 25.23 நஷ்டத்தை சந்திக்கின்றன.

ஒரு பேரல் கச்சா எண்ணெய் 32 டாலராக இருந்தபோது 5 சதவீத இறக்குமதி வரி விதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது 100 டாலரைத் தாண்டிய நிலையில் அரசுக்கு எண்ணெய் இறக்குமதி மூலமான வருவாய் அதிகரித்துள்ளது. 2007-08-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் ரூ. 7,804 கோடி இறக்குமதி வருவாய் அரசுக்குக் கிடைத்துள்ளது. அதேசயம் 2006-07-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஓராண்டுக்கும் கிடைத்த தொகை ரூ. 10,043 கோடியாகும்.

கச்சா எண்ணெய்க்கு இறக்குமதி வரி விலக்கு அளிப்பதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ஓரளவு தவிர்க்க முடியும் என்ற சூழல் நிலவியது. ஆனால் அதற்கு பிரதமர் அனுமதிக்கவில்லை.

Posted in Cost, Customs, Deficit, Diesel, Duty, Economy, energy, Exports, Finance, fiscal, Gas, Imports, Petrol, Petroleum | Leave a Comment »

Nuke Deal With US Draws Domestic Opposition – Indian Communists Say US Nuclear Accord Lacks House Support

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

எண்ணங்கள்: 1…2…3… ஷாக் – ஞாநி – ஓ பக்கங்கள் பதில்


இடதுசாரிகளின் இரட்டைவேடம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும், இடதுசாரிகளின் தயவில்தான் இந்த அரசு ஆட்சியினைத் தொடர்கிறது என்பதையும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதும் இடதுசாரிக் கட்சிகள்தான். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தது முதல் அதை எதிர்த்து வருவதும் அதே இடதுசாரிக் கட்சிகள்தான்.உண்மையிலேயே, இந்த ஒப்பந்தம் ஏற்படுவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று இடதுசாரிகள் கருதியிருந்தால், ஆரம்ப நிலையிலேயே இந்த முயற்சியைக் கைவிடச் செய்திருக்க முடியும். தொழிலாளர் காப்பீட்டுத் திட்டப் பிரச்னையிலும், பொதுத்துறை நிறுவனங்களின் விஷயத்திலும் அரசை அடிபணிய வைக்க முடிந்த இடதுசாரிகளால் இதுபோன்ற தேசத்துக்கே ஆபத்தான விஷயத்தில் ஏன் தலையிட்டுத் தடுத்து நிறுத்த முடியவில்லை?

இந்திய மற்றும் அமெரிக்க தரப்பினர், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்திற்கு ஒரு முழுவடிவமும் கொடுத்து, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நவம்பர் மாதம், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அமெரிக்கக் காங்கிரசுக்கு உரிமை உண்டே தவிர, இந்த ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றங்களையும் இனிமேல் செய்ய முடியாது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம்.

இந்தியத் தரப்பைப் பொருத்தவரை, இதுபோன்ற ஒப்பந்தம் என்பது ஓர் அரசின் நிர்வாக உரிமை (Executive Prerogative). அரசு சம்மதித்தால், இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஆனால், அமெரிக்கக் காங்கிரசுக்கு இதில் மாற்றம் செய்ய எப்படி உரிமை இல்லையோ, அதேபோல, இந்திய நாடாளுமன்றமும் இந்த உடன்படிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இதை நிராகரிக்கும் உரிமையும் கிடையாது.

இதெல்லாம், இடதுசாரிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆரம்பம் முதலே, தாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதுபோலப் பேசுகிறார்களே தவிர, இந்த ஒப்பந்தம் கூடாது என்று அரசைத் தடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடருமானால் எங்களது ஆதரவு இந்த அரசுக்குக் கிடையாது என்று இடதுசாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தால், அரசு இந்த விஷயத்தைக் கைவிட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.

அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில், எந்தவித பயமுமின்றி மன்மோகன் சிங் அரசு செயல்பட்ட விதத்தில் இருந்து, இடதுசாரிகளின் மறைமுக ஆதரவுடன்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இல்லையென்றால், “”அணுசக்தி ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லை” என்று தைரியமாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதிலிருந்தே, இந்த விஷயத்தில் இடதுசாரிகளிடம் பேசி வைத்துக் கொண்டுதான் அரசு செயல்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக இந்த ஒப்பந்தம் பற்றி இதுவரை நாடாளுமன்றத்தின் அனுமதி பெற அவசியம் இல்லாமல், நிர்வாக விஷயமாக இதைக் கையாண்டிருக்கிறது அரசு. இனிமேல், நாடாளுமன்றம் வேண்டாம் என்று நிராகரித்தால் மட்டும் போதாது. இந்த அரசு கவிழ்ந்தால் மட்டுமே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும். இந்த நிலைமை ஏற்படும்வரை இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, ஒப்பந்தத்தைக் கைவிட நிர்பந்திக்கவில்லையே, ஏன்?

நாளைக்கே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு என்று வந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றுவோம் என்கிறார் ஜோதிபாசு. அதாவது, “இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை’ என்று பிரதமர் கூறுவதை சொல்லாமல் சொல்கிறார் அவர்.

தேச நலனுக்கு ஆபத்து என்று தெரிகிறது. தங்களது கட்சியின் கொள்கைகளுக்கு மாறானது என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அரசுக்கு ஆதரவு மட்டும் தொடரும் என்கிறார்கள்.

ஏன் இந்த இரட்டை வேடம்?

——————————————————————————————————————————-
அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதியா?

என். ராமதுரை

இந்தியாவில் அமெரிக்காவும் பிற நாடுகளும் அணுமின் நிலையங்களை அமைக்க வழி செய்வது தொடர்பாக அமெரிக்கா – இந்தியா இடையே இப்போது விரிவான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதுபற்றி நாட்டில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விட்டது போல ஒரு சாரார் கூறுகின்றனர். ஆளும் கட்சித் தரப்பினரோ இதை வன்மையாக மறுக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான ஒப்பந்தம் ஏற்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியாவில் அமெரிக்க உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதும் முதல் தடவையல்ல. சொல்லப்போனால் இப்படியான ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க உதவியுடன் 1969-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையம் மும்பை அருகே தாராப்பூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல கனடாவின் உதவியுடன் ராஜஸ்தானில் 1972-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையமும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

அணுமின் நிலையம் தொடர்பான கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் இப்போது இந்தியா மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாக நினைத்தால் அதுவும் தவறு. தாராப்பூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும், கனடிய உதவியுடன் ராஜஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும் நாம் இப்போது சொல்லப்படுகிற கட்டுதிட்டங்களை – கண்காணிப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தோம்.

தமிழகத்தில் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் அணுமின்சார நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது குறித்து ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சகலவித கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் கீழ்தான் செயல்படும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஒப்பந்தங்களில் இவை அடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ரஷியாவுடனான ஒப்பந்த விவரங்கள்~அவசியமில்லை என்ற காரணத்தால்~ வெளியிடப்படவில்லை.

ஆகவே அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டால் அது அமெரிக்காவிடம் சரணாகதி ஆவது போலவும் ரஷியாவுடன் அதே மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால் அப்படியான சரணாகதி இல்லை போலவும் வாதிப்பதும் தவறு.

அணுசக்தி விஷயத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா ஒரு விதமாகவும் ரஷியா வேறு விதமாகவும் நடந்து கொள்வதாக நினைத்தால் அதுவும் தவறு. அணுசக்தியைத் தவறாக (அணுகுண்டு தயாரிப்புக்கு) பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு நாட்டுக்கும் அணுசக்தி எரிபொருள், அணுஉலை இயந்திரங்கள், அணுமின் நிலைய இயந்திரங்கள் முதலியவற்றை அளிக்கக்கூடாது என்று கூறும் 45 நாடுகள் அடங்கிய குழுவில் அமெரிக்காவும் ரஷியாவும் அங்கம் வகிக்கின்றன.

இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க ஆரம்பத்தில் உதவிய அமெரிக்காவும் கனடாவும் பின்னர் பின் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இந்தியா 1974ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதைச் சார்ந்த பல நாடுகளும் இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான எந்த உதவியையும் அளிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இந்தியா மீது பல தடைகளை அமல்படுத்தின. 1988-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் பல அணுகுண்டுகளை வெடித்தபோது இத் தடைகள் நீடித்தன. இந்தியா மீது 1974-க்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகள் இந்தியாவுக்கு ஒருவகையில் நல்லதாகியது. இந்தியா சொந்தமாக அணு ஆராய்ச்சி உலைகளை அமைத்துக் கொண்டது. சொந்த முயற்சியில் பல அணு மின் நிலையங்களை அமைத்துக் கொண்டது. தேவையில்லை என்று கருதி அமெரிக்கா பின்பற்றாத தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பாக முன்னேறியுள்ளது. அது தோரியத்தைப் பயன்படுத்துகிற முறையாகும்.

ஆனால் இவ்வளவு முன்னேற்றம் இருந்தும் எதற்கு நாம் சுமார் 30 ஆண்டுக்காலத்துக்குப் பிறகு அணுசக்தி விஷயத்தில் பிற நாடுகளின் உதவியை நாட வேண்டும்? முதலாவதாக இப்போது இந்தியாவுக்கு மின்சாரப் பசி உள்ளது. அணுசக்தி மூலம் தான் இதைத் தீர்க்க முடியும். இந்தியா சொந்தமாக உருவாக்கியுள்ள அணுமின் நிலையங்கள் பெரும்பாலானவற்றின் திறன் 220 மெகாவாட் அளவில் உள்ளது. அண்மையில்தான் 500 மெகாவாட் அணுமின் உலையை நிர்மாணித்துள்ளோம். 1000 மெகாவாட் திறனை எட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம். தவிர, “”நாட்டில் போதுமான யுரேனியம் இல்லை” என்று இந்திய அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த யுரேனியத்தை நாம் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அணுசக்திப் பொருள் அளிப்போர் குழு பின்பற்றும் கட்டுதிட்டங்கள், சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகள் ஆகியவை குறுக்கே நிற்கின்றன.

தோரியம் முறை இருக்கிறதே என்று கேட்கலாம். இத் தொழில்நுட்பம் சிக்கலானது. சுருங்கச் சொன்னால் முதலில் யுரேனியத்தை அணு ஆலைகளில் “”அவிக்க” வேண்டும். பிறகு ஈனுலைகளில் (Breeder Reactors) யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பயன்படுத்தி தோரியத்தை “”அவிக்க” வேண்டும். இப்படியான பல கட்டங்களுக்குப் பிறகுதான் அணுமின் நிலையங்களுக்கான யுரேனியம் – 233 என்ற அணுப் பொருள் கிடைக்கும். இதற்கெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

அணுசக்தி விஷயத்தில் உலகில் பல கட்டுதிட்டங்கள் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அணுமின் நிலையம் இருந்தால்போதும். ஒரு நாடு அணுகுண்டு தயாரித்துவிட முடியும். உலகில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட நாடுகள் அணுகுண்டு தயாரித்து உலகை மிரட்டும் நிலை ஏற்படக்கூடாது என்பதே இவற்றின் நோக்கம். அணு உலையில் (அணுமின் நிலையத்திலும்) யுரேனியம் அடங்கிய நீண்ட குழல்கள் உண்டு. அணுமின் நிலையம் செயல்படும்போது “”முக்கால் வேக்காட்டில்” இந்த தண்டுகளை வெளியே எடுத்தால் ஏற்கெனவே ஓரளவு எரிந்துபோன யுரேனியத்தில் வேறு பல அணுசக்திப் பொருள்கள் இருக்கும். இவற்றில் புளூட்டோனியமும் ஒன்று. இந்த புளூட்டோனியத்தைத் தனியே பிரித்தால் அதைக் கொண்டு அணுகுண்டு செய்து விடலாம். ஆகவே எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் யுரேனியத் தண்டுகள் எப்போது வெளியே எடுக்கப்படுகின்றன அவை என்ன செய்யப்படுகின்றன என்பதற்கு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தானியங்கி கேமராக்களும் வைக்கப்படும்.

இந்தியா இப்போது எல்லா அணுமின் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற உடன்பட்டுள்ளது. ஆனால் ஒன்று. இந்தியா ராணுவ காரியங்களுக்கான அணு உலைகள் என்று பட்டியலிட்டு அறிவிக்கின்ற அணு உலைகளில் இந்தக் கண்காணிப்பு இராது. ஆகவே இந்தியா அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதைப் பொருத்தவரையில் எந்தப் பிரச்னையும் கண்காணிப்பும் இராது. எரிந்த யுரேனியத் தண்டுகளிலிருந்து அணுப் பொருள்களைப் பிரிப்பதில் இந்தியாவின் உரிமை பறிபோய்விட்டது போல கூக்குரல் கிளப்பப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சு நடத்தி இதற்கான ஆலை அமைக்கப்படும் என இப்போதைய ஒப்பந்தம் கூறுகிறது. தவிர, இந்தியாவில் உள்ள ராணுவ காரிய அணு உலைகளுக்கு இது விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது.

இந்தியா விரும்பினால் மேற்கொண்டு அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்க இயலாதபடி இப்போதைய ஒப்பந்தம் தடுப்பதாகக் கூறுவதும் தவறு. அணுகுண்டுகளை மேலும் செம்மையாகத் தயாரிக்க அணுகுண்டுகளை அடிக்கடி வெடித்துச் சோதிக்கும் முறையை மேலை நாடுகள் முன்பு பின்பற்றின என்பது வாஸ்தவமே. ஆனால் இப்போதெல்லாம் புதிய வகை அணுகுண்டின் திறன் எப்படி இருக்கும் என்பதை கம்ப்யூட்டர் மூலமே கண்டறியும் முறை வந்து விட்டது. ஆகவே புது வகை அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தாக வேண்டிய அவசியமும் இல்லை எனலாம்.

இப்போது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது நாம் அமெரிக்காவிடமிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அணுமின் நிலைய அணு உலைகள், தேவையான இயந்திரங்கள் ஆகியவற்றையும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கும் உதவி புரியும்.

இப்படியாக வாங்குவது எல்லாம் அடிப்படையில் வர்த்தக பேரங்களே. இவற்றை அளிக்கப்போவது அந்தந்த நாடுகளின் தனியார் நிறுவனங்களே. அவை இந்தியாவுக்கு இவற்றை விற்றுப் பணம் பண்ணத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு அவ்வப்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு அரசின் மீது நிர்பந்தத்தைச் செலுத்தி~இந்தியாவுக்கு சாதகமான வகையில்~ பிரச்னையைத் தீர்க்க முயலும். ஆகவே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

——————————————————————————————————————————-

அரசுக்கு “கெடு’ ஆரம்பம்?

நீரஜா செüத்ரி

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டு அமல் செய்யக்கூடாது, அப்படியே கிடப்பில் போட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýக்கு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, “”இரண்டின் எதிர்காலம்” என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதில் ஒன்று, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதிர்காலம், மற்றொன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம்.

இந்த அரசு போய்விடுமா என்பதல்ல, இப்போதுள்ள கேள்வி, இந்த அரசு எப்போது போகும் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2008 ஜனவரியிலோ அல்லது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளோ நடைபெறலாம்; அது காங்கிரஸின் விருப்பத்தைப் பொறுத்தது.

இனி அரசியல் களத்தில் அரங்கேறக்கூடிய காட்சிகளைப் பின்வருமாறு ஊகிக்கலாம்.

காட்சி 1:

பிரதமர் எடுத்த முடிவுப்படி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க விருப்பம் இருந்தால் எங்கள் அரசை ஆதரியுங்கள், இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள் என்று இடதுசாரிகளிடம் முகத்துக்கு நேராகக் கூறிவிடுவது. இப்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் கெüரவத்தைக் காக்க இதுவே நல்ல வழி என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.

நாட்டு நலனில் அக்கறை கொண்டுதான் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்று மக்களிடம் விளக்கி, அடுத்த பொதுத் தேர்தலை இடதுசாரிகள் போன்ற தோழமைக் கட்சிகளின் துணை இல்லாமல் சந்தித்து, வெற்றிபெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை அமைப்பது; அப்படியே ஒப்பந்தத்தையும் தொடர முடியும் என்று அத் தலைவர்கள் கூறுகின்றனர்.

அப்படி என்றால் உடனே தேர்தலை நடத்தியாக வேண்டும். தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன்தான் தீர்மானிக்கும் என்றாலும், அரசு கவிழ்ந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம்.

மன்மோகன் அரசு ஆட்சியை இழந்தால், இடைக்கால அரசால் ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்க முடியாது, எனவே ஒப்பந்தமே ரத்தாகிவிடும்.

காட்சி 2:

இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் சிறுபான்மை அரசாகவே காலம் தள்ளுவது, அப்படி இருக்கும்போதே இந்த ஒப்பந்தத்தை அமல்செய்ய தொடர் நடவடிக்கைகளை எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானிப்பது. அதற்காக மாயாவதி கட்சியின் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அந்தக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஆளும் கூட்டணியின் வலுவை 219-லிருந்து 237 ஆக உயர்த்துவது.

ஆதரவை விலக்கிக் கொண்டாலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து இடதுசாரி கட்சிகள் வாக்களிக்காது, எனவே மேலும் சில மாதங்களுக்கு அரசை இப்படியே ஓட்டலாம்.

அப்போது இடதுசாரிகளுக்கு தருமசங்கடமான நிலைமை ஏற்படும். தாங்கள் தீவிரமாக எதிர்த்த ஒப்பந்தத்தை அமல் செய்யும் அரசை நீடிக்க விடுவதா, அல்லது அதைக் கவிழ்ப்பதற்காக மதவாதிகள் என்று முத்திரை குத்திய பாரதீய ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதா என்பதே அது.

காட்சி 3:

ஏதாவது ஒரு சாக்கு சொல்லி, அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவிடுவது, அரசை காப்பாற்றிக் கொண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் ஆவது.

அப்படி என்றால் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்க முடியாது. அவர்தான் இந்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார், எனவே தார்மிக அடிப்படையில் அவர் விலகியே தீரவேண்டும்.

அதே சமயம் பிரதமரின் முடிவுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி விலகி இருக்க முடியாது. அவரது கருத்தைத்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஆதரித்தது, சோனியா காந்தியும் ஒப்புதல் வழங்கினார்.

“”இந்த ஒப்பந்தம் இறுதியானது, இதை ஏற்க முடியாவிட்டால் ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று பேசி இடதுசாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் உசுப்பிவிட்டதை, சோனியா காந்தி விரும்பவில்லை.

அதிகாரிகளுடன் பேசுவதையும் செயல்படுவதையும் மிகவும் விரும்பும் மன்மோகன் சிங், “”இடதுசாரிகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்” என்று அவர்களில் யாரோ சொன்ன மந்திராலோசனையைக் கேட்டு, பெரிய வம்பில் மாட்டிக்கொண்டுவிட்டார்.

சிங்குர், நந்திகிராம் விவகாரங்களில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாலும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உள்பூசல் உச்ச கட்டத்தில் இருப்பதாலும் உடனடியாக மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடப்பதை இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் என்றாலும் வேறு வழியில்லாவிட்டால், அதற்கும் அவர்கள் தயாராகிவிடுவார்கள்.

காட்சி 4:

பிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை மாற்றிவிட்டு, புதியவரைக் கொண்டுவருவது. சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆறப்போடுவது. மக்களை பாதிக்கும் விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி மக்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பது. அமெரிக்காவுடன் நெருங்கியதால் புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு மருந்து போடுவது.

இதையெல்லாம் செய்யக் கூடியவர், மார்க்சிஸ்டுகளையும் பாரதீய ஜனதாவையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரிந்தவர் – ஜார்ஜ் புஷ்ஷை சமாதானப்படுத்தக்கூடியவர் – பிரணாப் முகர்ஜிதான். வங்காளியான முகர்ஜியைப் பிரதமராக்குவதற்காகவே இடதுசாரிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனரோ என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளூர சந்தேகம் இருக்கிறது.

இந்தச்சூழலைக் கையாளும் திறமை முகர்ஜியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மையே ஆனாலும், “”இவரைப் பிரதமராக்கினால் நாளை நம் செல்வாக்கு என்ன ஆகும்” என்ற அச்சம் சோனியா காந்திக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.

————————————————————————————————————————————————

விதியின் விளையாட்டு!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினால், இப்போது அது சிறிது அதிகபட்சமாகத் தோன்றும். அதுவும், அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கும் மனப்போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசுக்குக் கடிவாளம் போல இடதுசாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வாறு கூறுவது கொஞ்சம் அதிகமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சற்று உற்றுநோக்கினால், நமது பார்வைகள் மாறுகின்றன. சர்வதேச விவகாரமொன்றில் தேசிய நலனைக் காப்பதற்காக பிரகாஷ் காரத் போராடிக்கொண்டிருக்கிறார்; ஆனால், முக்கியமான மாநிலங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் தனது கட்சியைச் சேர்ந்த சொந்தத் தோழர்களையே கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவிப்பது தெரிகிறது. இதுதான் பிரச்சினை.

தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலம் பொருந்தி இருப்பதற்குக் காரணம், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கே ஆகும். மேற்கு வங்கக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை காரத்தால் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், “காலத்துக்கு ஏற்ப கட்சியின் கொள்கைகளில் மாற்றம் தேவையா? புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா?’ என்பது போன்ற தத்துவார்த்தப் பிரச்சினைகள்தான் மேற்கு வங்கத்தில் எழும் பிரச்சினை. அதோடு, புத்ததேவ் பட்டாச்சார்ஜி, ஜோதி பாசு போன்ற பெருமைக்குரிய தலைவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, மேற்கு வங்க அரசுக்கும் கட்சிக்கும் இடையே செயல்பாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது.

ஆனால், கேரளத்தில் இதற்கு நேர்மாறான நிலை. அக் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்கும் உள்பூசல், பொறுத்துக்கொள்ளத் தக்க எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டது. முதலாளித்துவ ஊழல் கூட்டத்தின் பிடியில் கட்சி சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது; அதைக் கண்டு அக் கட்சியின் தோழர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அங்கு ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிடுவதைப்போல ஒரு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுத்தது. ஆனால், இன்னும் ஒழுங்கீனம்தான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், கட்சியின் மாநிலக் குழுச் செயலாளரையும் முதலமைச்சரையும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது கட்சி; அவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதை அந் நடவடிக்கையால்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல்வரின் ஆதரவாளர்களைக் “கட்டுப்படுத்தி’ வைக்கும் மாநிலச் செயலரின் நடவடிக்கைகளுக்கு இப்போதைக்கு அரசியல் தலைமைக் குழு தடை போட்டிருக்கிறது. அந்தத் தடையால் பயன் விளையும் என்று யாரும் நினைக்கவில்லை.

கேரளத்தில் மக்களின் நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இவ்வளவு வேகமாக இழந்துவிட்டது என்பது குறித்துத்தான் இப்போது பிரகாஷ் காரத் கவலைப்பட வேண்டும். தமது கட்சி மீது எந்த விமர்சனம் வந்தாலும் பொறுத்துக்கொள்வார்கள்; ஆனால், ஊழல் புகார்கள் கூறப்படுவதைத்தான் தொழிலாளி வர்க்கத்தாலும் இடதுசாரி அறிவுஜீவிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அனைத்துப் புகார்களுமே ஒரு குறிப்பிட்ட கோஷ்டியின் மீதே கூறப்படுகின்றன. அதைச் சீர்படுத்துவதற்கு பெயரளவுக்குத்தான் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நோய் குணமாக வேண்டுமானால் அறுவைச் சிகிச்சையே செய்ய வேண்டும் என்னும் பொழுது, அமிர்தாஞ்சன் பூசிக்கொண்டிருக்கிறது, கட்சியின் அரசியல் தலைமைக் குழு. இதைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட மாட்டார்கள்.

இதைத் தவிர, காரத் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இடது முன்னணியே தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளத்தில் ஒரு வரலாற்றையே உருவாக்கக்கூடிய அளவுக்கு அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களையெல்லாம் கைப்பற்றுவதற்கான அதிரடி நடவடிக்கையை கேரள அரசு எடுத்தபொழுது, அந்த அளவுக்கு பொதுமக்கள் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடக்கத்தில், உயர் நீதிமன்றமே அதற்கு ஆதரவாக இருந்தது.

ஆனால், விரைவிலேயே தான் அத்தகைய நிலையை எடுத்ததற்கு வெட்கப்படுவதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம், அரசின் அந்த நடவடிக்கைகளையெல்லாம் அப்பட்டமான அதிகாரப் போட்டி சீர்குலைத்துவிட்டதுதான். அந்தச் சீர்குலைவுச் செயலில் முன்னிலையில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இடது முன்னணி ஆட்சிக்கு நீடித்த பெருமையைத் தேடித் தந்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையானது, அதிகாரப் போட்டியால், ஓர் அவமானகரமான அத்தியாயமாக மாறிவிட்டது. அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, அடுத்துக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே மக்களால் தூக்கி எறியப்படத்தக்க நிலைக்கு இடது முன்னணி அரசின் மதிப்பு தாழ்ந்துவிட்டது.

கேரளத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.க்களே தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால் என்ன செய்வார் காரத்? பிரகாஷ் காரத் போன்ற பலமான தலைவரைக் கொண்ட வலுவான இடதுசாரிக் கட்சியொன்று தில்லியில் இருக்க வேண்டியது இன்று நாட்டின் தேவை. ஆனால், கொழுத்த மோசடிப் பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட பணக்கார நிறுவனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டதென்றால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்; சுய லாபத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இவ்வளவு சுலபமாக சீர்குலைவுச் செயலில் ஈடுபடுமென்றால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இறுதியில், தான் நினைத்ததை ஜார்ஜ் புஷ் சாதித்துக்கொள்ள காரத் அனுமதிப்பாராயின், அதுவே விதியின் இறுதி விளையாட்டாக ஆகிவிடும்!

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

———————————————————————————————————-

தேர்தலைச் சந்திக்க கட்சிகள் தயாரா?

நீரஜா செüத்ரி

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸýக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதை அடுத்து, “கால அவகாசம் தேடும்’ அரசியல் விளையாட்டுதான் தில்லியில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

எந்தக் கட்சியும் இப்போது தேர்தலைச் சந்திக்கத் தயாரில்லை. எனினும், 2008, மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கும், கட்சி அமைப்புகளைத் தயார் செய்வதற்கும் இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் நல்லது என்றே ஒவ்வொரு கட்சியும் நினைக்கும்.

“ஹைட் சட்ட’த்தின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலமும் அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னையில், “”ஒன்று, நீங்கள் திருப்திகரமான விளக்கத்தைத் தாருங்கள்; அல்லது, நாங்கள் உங்களுக்குத் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கிறோம்” என்ற நிலையில் காங்கிரஸýம் இடதுசாரிக் கட்சிகளும் நிற்கின்றன. அடுத்த இரு மாதங்களிலும் தமது நிலைகளை விளக்கிப் பிரசாரம் செய்ய இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.

பிரகாஷ் காரத் சென்னையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்; ஏ.பி. பரதன் கோல்கத்தாவிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார். இரு பிரசாரப் பயணங்களும் விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பிரமாண்ட பேரணியுடன் நிறைவடைகின்றன. இரு அணுமின் உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பைக்குச் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் மூலமாக, நாட்டின் அணுமின் திட்டங்களில் எந்த சமரசத்தையும் தாம் செய்துகொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கம்.

அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டால், அதாவது சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுப்பதற்கு, அக் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்திருக்கிறது. ஆனால், அக் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு இப்போது தேர்தலைச் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நந்திகிராமும் சிங்குரும் அக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.

ஹால்டியாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸýடன் மம்தா பானர்ஜி உடன்பாடு செய்துகொண்டதே அதற்குக் காரணம். மக்களவைத் தேர்தல் வந்தால் அதிலும் இது தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மம்தாவும் அதை மறுக்கவில்லை; அதோடு, அணுசக்தி உடன்பாட்டில் பிரதமரின் நிலையை ஆதரித்துள்ளார் அவர்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உள்கட்சிப் பூசலைப் பார்க்கும் பொழுது, தற்போதைய ஆதரவை அங்கு அக் கட்சி நிலைநிறுத்திக்கொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான நிலையை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருப்பதால் நாடு முழுவதும் முஸ்லிம்களின் ஆதரவு அதற்குக் கிடைக்கக்கூடும். ஆனால், அதை வாக்குகளாக மாற்றுவது அக் கட்சிக்குக் கடினம். ஏனென்றால், நாட்டின் பல பகுதிகளில் அக் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை. 10,000-த்திலிருந்து 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அக் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளில் வேண்டுமானால், அக் கட்சிக்குப் பயன் கிடைக்கலாம்.

பாரதீய ஜனதாவும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. இடதுசாரி ~ ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3-வது அணி) ஆகியவற்றுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் நடுவில் சிக்கி நசுங்கிப் போய்விடுவோம் என்று அஞ்சுகிறது பாரதீய ஜனதா கட்சி. தேர்தலுக்கு அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னை காரணமாகிவிட்டால், இடதுசாரிகளின் மறுபிரதியாகக் குறுகிப் போய்விடுவோம் என்று பாஜகவில் உள்ள பல தலைவர்கள் கருதுகின்றனர். விலைவாசி உயர்வுப் பிரச்னையோடு, தமக்கே உரித்தான பிரச்னை ஏதாவது கிடைக்காதா என்று அவர்கள் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்றைய சூழலில் தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதாவுக்குத் தலைமை தாங்கக்கூடிய தகுதி படைத்த தலைவர் எல்.கே. அத்வானிதான். இயல்பாகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராகவும் அவர்தான் இருக்க முடியும். வாஜ்பாயோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்; ராஜ்நாத் சிங்கின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்-ûஸப் பொருத்தவரை விரும்பத்தகாத நபராக ஆகிவிட்டார் அத்வானி. பாரதீய ஜனதாவின் முடிவுகளில் தான் தலையிடாமல் விலகிக்கொள்வதாக ஆர்எஸ்எஸ் இப்போது கூறக்கூடும். ஆனால், பூசல்களால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டதுதான்.

நவம்பரில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் பாஜக வெற்றிபெற்றால், மக்களவைத் தேர்தலிலும் அது அக் கட்சிக்கு உதவுவதாக இருக்கும். அத்வானியின் செல்வாக்கிலும் அதன் தாக்கம் இருக்கும்.

காங்கிரûஸப் பொருத்தவரை, அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அது பின்வாங்க முடியாது. அதன் சாதக, பாதகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தினால், காங்கிரஸின் அதிகாரத்தை அது பாதிக்கக்கூடும்; சர்வதேச அளவில் அதன் மதிப்பைக் குறைக்கக்கூடும்; இடதுசாரிகளின் நெருக்குதலுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு அதைத் தள்ளிவிட்டுவிடும்; அதோடு, தேச நலனுக்கு விரோதமான எதையோ அக் கட்சி செய்ய முனைந்தது போன்ற ஒரு கருத்தையும் ஏற்படுத்திவிடும்.

இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது பிரதமரது கெüரவம் மட்டுமல்ல; காங்கிரஸýம் அதன் தலைவர் சோனியா காந்தியும் அந்த உடன்பாட்டைப் பகிரங்கமாக அங்கீகரித்து இருப்பதால் அவர்களின் கெüரவத்தையும் பாதிக்கக்கூடியதாகிவிட்டது இப் பிரச்னை. சோனியாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன்தான் அமெரிக்காவுடன் அந்த உடன்பாட்டை விவாதித்து முடிவு செய்தார்.

எனவே, உடன்பாட்டுக்கு ஆதரவாகப் போராடுவதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இல்லை.

எனவே, 2008 ஏப்ரலில் தேர்தலை எதிர்கொள்வது என்பது அவ்வளவு மோசமான முடிவல்ல என காங்கிரஸ் நினைக்கிறது. அதோடு பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. தேர்தல் வந்தால், ஆந்திரத்திலும் அசாமிலும் காங்கிரஸýக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்; ஆனால், மம்தாவின் துணையுடன் மேற்கு வங்கத்தில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்; கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டுடன் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்.

இன்றைய சூழலில் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவையும் காங்கிரஸ் பெறக்கூடும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அதோடு, முஸ்லிம்களிடமிருந்தும் அக் கட்சி அன்னியப்பட்டு நிற்கிறது.

காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற வெற்றியை இப்போதும் பெறுமா என்று கூற முடியாது. எனவே, மம்தா, எச்.டி. தேவெ கெüடா மற்றும் பல மாநிலங்களில் உள்ள சிறிய குழுக்களின் ஆதரவு காங்கிரஸýக்கு மிக முக்கியமானதாகிவிடும்.

மக்களவை உறுப்பினர்களிடம் தேர்தலைப் பற்றிப் பேசினாலே கதிகலங்கிவிடுகிறார்கள். இடைத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக தேசிய அரசை அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்றுகூட கடந்த வாரம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.

இப்போதைய நெருக்கடியின் இறுதி முடிவு எப்படி இருந்தாலும் சரி; இதுவரை சில விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த அணுவிசைப் பிரச்னை குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்கள் விவாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் கோயில் ~ மசூதி போன்ற உணர்ச்சிகரமான விஷயங்கள் தேர்தல் பிரச்னைகளாக இருந்ததற்குப் பதிலாக, வரவிருக்கும் தேர்தல்களில் அணுசக்தியும் வெளியுறவுக் கொள்கையும் பிரச்னைகளாக இருக்கும் என்பது நிச்சயம்!

Posted in abuse, Accord, Alliance, America, Army, Artillery, Assembly, Atom, Atomic, Attack, Bombs, Brinda, China, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Comunists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), deal, defence, Defense, Duty, EU, Europe, Force, House, Jothibasu, Karat, Left, LokSaba, LokSabha, Manmohan, Marines, MP, Navy, NCC, NSS, Nuclear, Nuke, Opposition, Pakistan, Party, Planes, Pokhran, Politics, Power, Prakash, Rajasthan, Reserve, Russia, Somnath, Sonia, Soviet, support, US, USA, USSR, Wars | 1 Comment »

Dinamani op-ed: TJS George – East India Company still rocks on as World Bank

Posted by Snapjudge மேல் ஜூலை 22, 2007

கிழக்கிந்திய கம்பெனி சாகவில்லை, உயிரோடு இருக்கிறது!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

எவ்வளவு சுலபமாக நாடுகள் தங்களுடைய வரலாற்றை சலவைக்குப் போட்டுவிடுகின்றன! இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் செய்த அக்கிரமங்கள் என்ன என்று அந்நாட்டின் புதிய தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. வியத்நாமில் அமெரிக்கா செய்த அக்கிரமங்கள் அந்நாட்டு பள்ளிக்கூட குழந்தைகளுக்குத் தெரியாது.

ஆரியர்கள் திருநைனார்குறிச்சியிலிருந்தும், திராவிடர்கள் குலு பள்ளத்தாக்கிலிருந்தும் வந்தார்கள் என்று நம் நாட்டின் சில பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகின்றனர்!

உண்மை எது என்பது, (வரலாற்று) குப்பையைப் பெருக்க வந்தவர்களின் கண்களில்தான் இருக்கிறது.

பிரிட்டிஷ்காரர்கள்தான் தங்களுடைய ரயில்வே மூலமும் தடையற்ற வர்த்தக நடைமுறைகள் மூலமும் இந்தியாவுக்கு வாழ்வையும் வளத்தையும் கொண்டுவந்து சேர்த்தார்கள் என்று இந்தியாவில் படித்த பெரும்பாலானவர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்னவோ தலைகீழாக இருக்கிறது. இந்தியாவின் செல்வமும் இயற்கை வளங்களும்தான் பிரிட்டனுக்குப் புது வாழ்வைத் தந்தன.

இந்தியாவின் வளமான பகுதிகள் பல, பிரிட்டிஷாரின் நன்மைக்காக இங்கே அடியோடு அழிக்கப்பட்டன. பிரிட்டனின் “மான்செஸ்டர் டி-73′ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் பூண்டோடு அழிக்கப்பட்டது. அந்தத் துணியை நெய்த திறமைவாய்ந்த நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டி வீசினர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனித் துரைமார்கள்!

ஏகாதிபத்திய காலத்தில் நிலவிவந்த உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டுவரும் வேலையை, ஆய்வு நூல்கள் மூலம் அவ்வப்போது மேற்கொள்கின்றனர் மேற்கத்திய நாடுகளின் அறிஞர்கள்.

இப்போதுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் (எம்.என்.சி.) முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கிந்திய கம்பெனி எப்படி ரத்த வெறி பிடித்து அலைந்தது என்பதை நிக் ராபின்ஸ் என்பவர் தன்னுடைய ‘The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multinational’ என்ற நூலில் அற்புதமாக விளக்கியிருக்கிறார்.

அச்சத்தில் உறைந்தே போகும் அளவுக்குச் சில உண்மைகளை அவர் அந் நூலில் தெரிவித்துள்ளார். ராபர்ட் கிளைவ், கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்துக்குள் “ஒரு உள் வியாபாரம்’ செய்து பெரும் தொகையை அள்ளியிருக்கிறார். கம்பெனியின் தலைவரும் அவரே என்பதால் மோசடி செய்வது அவருக்குக் கடினமான வேலையாக இருக்கவில்லை.

பிரிட்டனிலோ, கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமிருந்தும் அரசிடமிருந்தும் அவ்வப்போது சலுகைகளைத் தொடர்ந்து பெற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து லஞ்சம் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.

“மேலை நாடுகளின் நாகரிகத்தின் பின்னால் இருப்பது, ஈரானிய எண்ணெய் வயல்களில் அடித்த கொள்ளையில் கிடைத்த லாபம்தான்’ என்று ஈரானிய அதிபர் அகமதி நிஜாத் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவனை, “மரை கழன்றவன்’ என்றும் “மேலைநாடுகளுக்கு எதிரானவன்’ என்றும் முத்திரை குத்தும் அளவுக்கு எல்லோருடைய மூளையும் அற்புதமாகச் சலவை செய்யப்பட்டிருக்கிறது.

அகமதி நிஜாத் என்ன சொன்னாரோ அது உண்மைதான்! 1950-களின் ஆரம்பத்தில் ஈரானில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த மூசாதேக் என்பவர் ஈரானின் மன்னரான ஷாவை நாட்டைவிட்டே ஓடவைத்தார். பிறகு ஈரானின் எண்ணெய் வயல்களை தேச உடைமையாக்கினார். எண்ணெய் வயல்களைச் சொந்தமாக வைத்திருந்த பெரும் பணக்காரர்களும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் சில மாதங்களுக்கெல்லாம் இணைந்து செயல்பட்டு மன்னர் ஷாவை மீண்டும் ஈரானுக்கு அழைத்துவந்து முடிசூட்டின. மூசாதேக் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

இது தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. சூயஸ் கால்வாயை கமால் அப்துல் நாசர் தேச உடைமையாக்கியபோது, எகிப்துடன் யுத்தத்துக்குச் சென்று மூக்குடைபட்டு திரும்பியது பிரிட்டன்.

பனாமா கால்வாய் யாருக்குச் சொந்தம் என்ற நீண்ட கால பிரச்னை முற்றி, 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு எதிரான கலவரமாக உருவெடுத்தது. அப்போது அமெரிக்கா பனாமா மீது படையெடுத்து, அதன் அதிபர் மேனுவல் நோரிகாவை போதைப் பொருள் கடத்தல் சட்டப்படி கைது செய்தது.

ஏகாதிபத்தியத்திடம் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்ற பிறகும் காலனியாதிக்கம் முடியவில்லை; 19-வது நூற்றாண்டில் பிரிட்டன் செய்த வேலையை இப்போது அமெரிக்கா எடுத்துக் கொண்டுவிட்டது. வியாபாரத்தில் உள்ளடி வேலை செய்யும் “உள்-வர்த்தகம்’ என்ற அயோக்கியத்தனத்தை அது கையாள்கிறது. என்ரான், வேர்ல்ட் காம். போன்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் அடையாளம் இல்லாமல் மறைந்த கதையைப் பார்த்தாலே இந்த பித்தலாட்டம் புரியும்.

அரசியல்ரீதியான ஊழல் என்பதை, வாஷிங்டனில் “ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தரகுக் கூட்டம்’ என்று நிலைநிறுத்திவிட்டது அமெரிக்கா. அத்தோடுகூட, அது தனது ராணுவ பலத்தையும் மிதமிஞ்சிப் பயன்படுத்துகிறது.

இராக்கில், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் காலடி எடுத்து வைத்தது அங்குள்ள எண்ணெய் வளத்துக்காகத்தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?

இப்போது “கிழக்கிந்திய கம்பெனி’ உலகம் முழுக்க பரவியிருக்கிறது. ராபர்ட் கிளைவும் வாரன் ஹேஸ்டிங்ஸýம் இன்னமும் உலா வருகின்றனர். அவர்களின் பெயர்தான் “உலக வங்கி’, “உலகமயமாக்கல்’ என்று மாற்றி வழங்கப்படுகிறது!

————————————————————————————————————–
யாருக்காக மானியங்கள்?

விவசாயத்துக்கான மானியங்கள் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருக்கிறார். அதே சமயம், உரங்களுக்குத் தரப்படும் மானியத்தை புதிய முறையில் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்து அடுத்த ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டுவரலாம், இந்த ஆண்டு பழைய முறையிலேயே மானிய உதவியை அளிக்கலாம் என்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பிரதமர் முடிவெடுத்திருக்கிறார்.

விவசாயத்துக்கு மானியம் என்பது அவசியம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இதில் இருவித கருத்துகள் இல்லை. அதே சமயம், உர மானியம் என்பது யாருக்குப் போகிறது, அது நீடிப்பது அவசியமா என்பதைக் கட்டாயம் தீர்மானித்தாக வேண்டும்.

கடந்த ஆண்டு உர மானிய நிலுவை ரூ.8,000 கோடி என்றும் இந்த ஆண்டு ரூ.40,000 கோடி என்றும் அரசே வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மத்திய புள்ளியியல் துறை கணக்கெடுப்பின்படி, 2000-01-ம் ஆண்டில் உர மானியமாக ரூ.13,800 கோடி, மின்சார மானியமாக ரூ.6,449 கோடி, பாசன மானியமாக ரூ.13,681 கோடி, இதர மானியங்களாக ரூ.854 கோடி என்று மொத்தம் ரூ.34,784 கோடி விவசாயத்துக்காக தரப்பட்டுள்ளது.

உணவு தானிய கையிருப்பைப் பொருத்தவரை, 3 மாத கையிருப்பு, 6 மாத கையிருப்பு என்பதெல்லாம், பொது விநியோக முறைக்கு மாதந்தோறும் எடுத்துக்கொள்ளப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றின் அளவைப் பொருத்ததே தவிர உண்மையில் நம் நாட்டு மக்களின் தேவையைப் பொருத்தவை அல்ல.

லட்சக்கணக்கான டன்கள் கோதுமை, அரிசி கையிருப்பில் இருக்கும் அதேவேளையில் 20 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இரவில் பட்டினியோடு படுப்பவர்கள் பற்றிய புள்ளிவிவரம் ஏதும் திரட்டப்படுவதில்லை.

“வேலைக்கு உணவு திட்டம்’ என்ற முன்னோடி திட்டம்கூட, தேர்வு செய்யப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் முனைப்பாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் உதவியோடு மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

உர மானியம் தொடர்பாக அடிக்கடி பேசப்படும், அதே வேகத்தில் மறக்கப்படும் இரு விஷயங்கள் நினைவுபடுத்தப்பட வேண்டியவை. உர உற்பத்தியில் பொதுத்துறை (அரசு) நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. உர உற்பத்திக்கு அரசு நிறுவனங்கள் எவ்வளவு (விரயமாக) செலவு செய்தாலும், எந்த அளவு உற்பத்தி செய்தாலும் அவற்றை அரசு வாங்கிக் கொண்டு மானியத்தையும் கையோடு வழங்கிவிடுவதால், அரசின் மானியம் விரயமாகிறது என்பது முதல் குற்றச்சாட்டு. நவீனத் தொழில்நுட்பத்தில், செலவைக் குறைத்து தயாரிப்பது அவசியம் என்ற நிர்பந்தம் இல்லாமல் பழைய முறையிலேயே தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பது இக்குற்றச்சாட்டின் சாரம்.

அடுத்தது, ரசாயன உரங்களால் நிலம் தன்னுடைய இயற்கையான சத்தை இழப்பதுடன், சாகுபடியாகும் உணவு தானியங்களும் உண்பவர்களுக்குத் தீங்கை விளைவிப்பனவாக இருக்கின்றன என்பதாகும். எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கிய எருவையும், மண்புழுக்களையும் நிலங்களில் இட்டு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்ற கூக்குரல் எங்கும் கேட்க ஆரம்பித்துவிட்டது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் இதையும் வலியுறுத்துகின்றனர்.

விவசாய விலை நிர்ணயக் குழு என்ற உயர் அமைப்பில், சாகுபடியாளர்களின் நேரடிப் பிரதிநிதிகளை அதிக அளவில் சேர்த்து, அவர்களைக் கொண்டே பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையில் கொள்முதல் விலைகளையும் சிறப்பு மானியங்களையும் நிர்ணயிக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ளபடி, சந்தையில் நிலவும் விலைக்குக் குறையாமல் கொள்முதலுக்கு விலைதரப்பட வேண்டும். குறைந்தபட்ச கொள்முதல் விலை என்பது, விவசாயிகளின் அடிவயிற்றில் அடிப்பதாக இருப்பதைக் கைவிட வேண்டும். வேளாண் பொருள்களின் விலை உயர்ந்தால் பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று “”நிபுணர்கள்” மிரட்டுவதை கேட்டுக் கொண்டு விவசாயத்தைப் படுகுழியில் தள்ளக்கூடாது.

Posted in abuse, Affairs, Agriculture, America, bank, Barrier, Biz, Business, Canal, Center, CIA, Consumer, Corn, Corporation, Current, Customer, Divide, Duty, Economy, Electric, Electricity, England, ethanol, Exploit, Exploitation, External, Farming, Farms, Fertilizer, Fertilizers, Finance, Foreign, GDP, Govt, Growth, IMF, Incentive, Incentives, Income, Industry, International, Iran, Irrigation, IT, MNC, multinational, Needy, NRI, Panama, Poor, Power, Queen, Relations, Rich, State, Subsidy, Suez, Tamil, Tariffs, Taxes, Trade, UK, Unipolar, USA, War, warlord, WB, Wealthy, World, world bank | Leave a Comment »

Living with a strong rupee – Impact on Exports & Commerce

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும்

எஸ். கோபாலகிருஷ்ணன்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 9 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு டாலர் ரூ. 44.12 ஆக இருந்த மதிப்பு, தற்போது ரூ. 40.50 என்ற அளவை எட்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.

ரூபாயின் மதிப்பு உயருவதால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு குறையும். ரூபாயின் மதிப்பு உயர்ந்து டாலரின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்பவர்கள் செலுத்த வேண்டிய பணம் குறைகிறது. இது நன்மை.

அதேநேரம், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலரின் மதிப்பு சரிந்திருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது நமக்குப் பாதகமானது.

கடந்த காலங்களில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தபோது, ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பது வழக்கம். அதாவது, சந்தையில் பெரிய அளவில் டாலரை வாங்குவதன் மூலம் வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பை ரிசர்வ் வங்கி சரி செய்துவிடும். ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்விதம் செய்யவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அண்மைக் காலமாக, ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய அரசும் சரி, கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ரூபாய் மதிப்பின் உயர்வை, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டன.

டாலர் சரிந்திருப்பதால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை குறைந்துள்ளது. இது விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு உதவியது.

இதனாலும் ரிசர்வ் வங்கியின் இதர நடவடிக்கைகளாலும் பணவீக்கம் தற்போது 4.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், ரூபாய் மதிப்பின் உயர்வால் விளைந்துள்ள பாதகங்களை இனியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாகாது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து வருகிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 26.3 சதவிகித அளவு வளர்ச்சி கண்டது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 19.3 சதவிகிதமாகச் சரிந்தது. ரூபாய் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்திருக்கும் நடப்பாண்டின் முன்பாதியில் எந்த அளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது என்னும் விவரங்கள் அடுத்த ஓரிரு மாதங்களில்தான் தெரியவரும்.

ரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதன் விளைவாக, ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஜவுளி, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருந்து உற்பத்தியாளர்கள், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் பொறியியல் தொடர்பான தொழில்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 35 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் அனுப்பப்படுகிறது. ஜவுளி ஏற்றுமதியில் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டது இந்தியாவுக்கு நல்லவாய்ப்பாக அமைந்தது. உற்சாகமாக, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில், ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்று, உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்திய ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும்போது டாலரின் மதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சரக்கை அனுப்ப வேண்டிய நேரத்தில் டாலரின் மதிப்பு சரிந்துவிட்டது. இதனால் பலகோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் தினசரி ரூ. 3.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஜவுளித்துறையில் 3.50 கோடி பேர் பணியாற்றுகின்றனர். எனவே தற்போதைய நிலை கவலை அளிக்கக்கூடியாதக உள்ளது.

சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதியாளர்கள் நாணயப் பரிமாற்றத்தால் பாதிக்கப்படவில்லை. அந்த நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை கடந்த பல ஆண்டுகளாக ஒரேநிலையில் வைத்திருக்கின்றன. இதனால் அமெரிக்கச் சந்தையில் சீனாவின் ஜவுளி விலை உயராது. ஆனால் இந்தியாவின் ஜவுளி விலை அதிகரிக்கும்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கான லாபம் கணிசமாகச் குறைந்துள்ளது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் போட்டியிடும் சக்தி அவர்களுக்கும் குறையும்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடும் தொழில்கள் கடும் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளன. அந்த வகையில், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வோர் நிலை சற்று ஆறுதல் அளிக்கக் கூடியது. இவர்கள் உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வெளிநாடுளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். கற்களை பட்டைதீட்டியும் புதிய ஆபரணங்களாகத் தயாரித்தும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவர்களுக்கு இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறைகிறது. இந்த உபரி லாபம் ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய உதவுகிறது.

பொறியியல் ஏற்றுமதியைப் பொருத்தவரை, 2006-07-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 30 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில் இந்த வளர்ச்சி 23.92 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஒருபுறமிருக்க, புதிய வேலைவாய்ப்புகள் பறிபோனதுதான் பெரும் சோகம். ஜவுளி ஏற்றுமதி குறைந்ததால், 2007-08ம் ஆண்டில் 5,79,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று இந்திய ஜவுளி சம்மேளனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் 2.72 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மற்றும் தொடர்புடைய தொழில்களில் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகளும் அடங்கும்.

விசைத்தறி நெசவாளர்களும் புதிய சூழ்நிலையில் வருவாய் இழப்பை எதிர்கொள்ள நேரும். ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் டாலரின் சரிவு, இந்திய ஏற்றுமதியை, தொழில் வளர்ச்சியை குறிப்பாக, வேலைவாய்ப்புகளை மோசமாகப் பாதித்துள்ளது என்பது கண்கூடு. எனவே இதற்குரிய பரிகாரம் தேடியாக வேண்டும். பணவீக்கம் ரூபாய் மதிப்பு ஆகிய இரு பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கம்பிமேல் நடப்பது போல்தான். எனினும் பாரத ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இதில் தீவிரகவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டது.

இது ஒருபுறமிருக்க, நீண்டகால அடிப்படையில் மின்சாரம், போக்குவரத்து, துறைமுகங்களில் நேரும் காலதாமத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாடுதான் ஏற்றுமதிக்கு உதவும். ஏற்றுமதியாளர்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொண்டு, உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். தங்கள் லாபத்துக்கு எல்லா நேரங்களிலும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்க முடியாது.

எனினும், தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு உடனடி தீர்வாக ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது பொருத்தமாக இருக்கும். உதாரணமாக, Duty Drawback எனப்படும் ஏற்றுமதிக்கான சலுகைத் தொகையை அதிகரிக்கலாம். ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்குதல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80 ஏ.ஏ.இ. பிரிவின் கீழ் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகை, சேவை வரித் தள்ளுபடி ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

Posted in Agriculture, Appreciation, APR, Balancesheet, Banks, Biz, Call-Centers, Call-Centre, Capital, Commerce, Commodity, Currency, Deals, Deflation, Deposits, Diesel, Dollar, Duty, Economy, Employment, Euro, Exchange, Expenses, Exports, FDI, Finance, Fluctuations, forecasts, Garment, Gas, GDP, Growth, IMF, Imports, Industry, Inflation, Inflows, InfoTech, Interest, International, investments, Jobs, Loans, markets, MNC, Money, oil, Outflows, Outsourcing, Petrol, Portfolio, pound, Pricing, Productivity, Profit, Profits, Rates, RBI, Recession, Rupee, Sales Tax, service tax, slowdown, Software, Statement, Strength, Tax, Telecom, Textiles, Trading, Transfer, US, USA, Valuation, volatility, WB, World, Yen | Leave a Comment »

WTO, G8, EU, NATO, US Interests vs Developing Countries Financial Development – Focus on Agriculture

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

வளரும் நாடுகளின் பொருளாதாரம் சிதைவதா?

உ.ரா வரதராசன்

உலகமயப் பொருளாதாரத்தை வழிநடத்தும் சர்வதேச மும்மூர்த்திகளில் ஒன்றான உலக வர்த்தக (டபிள்யூடிஓ)அமைப்பு, சர்வதேச வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் வளரும் நாடுகளின் மீது செலுத்தி வரும் பொருளாதார நிர்பந்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

உலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி-இறக்குமதி (சர்வதேச) வர்த்தகத்திற்கான விதிமுறைகளை வகுத்து வழிநடத்தும் டபிள்யூடிஓ, அதன் இன்றைய ஸ்தாபன வடிவத்தைப் பெற்றது 1995-ம் ஆண்டில்தான். 150 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள டபிள்யூடிஓவின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் டபிள்யூடிஓ அமைச்சர்கள் மட்ட உச்சி மாநாடுதான்.

டபிள்யூடிஓவின் அமைச்சரவை மட்ட நான்காவது உச்சி மாநாடு 2001 நவம்பரில் கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்றது. விவசாயம், தொழில் மற்றும் சேவைப் பணித்துறைகள் உள்ளிட்ட ஒரு நீண்ட பட்டியலில் இடம் பெற்ற பல்வேறு விஷயங்களின் மீது ஒரு புதிய சுற்றுப்பேச்சு வார்த்தையைத் தொடங்க தோஹாவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தப்புதிய சுற்றுப்பேச்சுவார்த்தைக்கு தோஹா வளர்ச்சித் திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முற்றுப்பெற்று, 2005 ஜனவரிக்குள் உடன்பாடு எட்டப்படவேண்டும் என்பது தோஹாவில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு. இன்னும் நீண்டு கொண்டே போகிறது.

தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் பகீரத முயற்சிகளின் ஒரு பகுதியாக, டபிள்யூடிஓ உறுப்பு நாடுகள் சிலவற்றை இணைத்து நடைபெறும் “துணை’ மாநாடுகள் பலவும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பங்கு கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையை வைத்து இந்தத் துணை மாநாட்டுக் குழுக்களுக்கு ஜி-4,ஜி-6,ஜி-20, ஜி-33 என்றெல்லாம் பெயரிடப்பட்டன.

இவற்றில் ஒன்றான ஜி-4 குழு நாடுகளான அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு, பிரேசில், இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கிடையே, ஜெர்மனியில் பாட்ஸ்தாம் நகரில் ஒரு துணை மாநாடு அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு வெளியாகியது. விவசாயப் பொருள்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளில் யுஎஸ்ஸýம் ஐரோப்பிய யூனியனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க, இந்தியாவும் பிரேசிலும் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்ததுதான் இந்தப் பேச்சுவார்த்தை முறிவுக்குக் காரணம்.

பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இந்தியா திரும்பிய நமது வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் வளர்ச்சியடைந்த நாடுகள் (குறிப்பாக யுஎஸ், ஐரோப்பிய யூனியன் ) மீது இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஒன்று, அவை தத்தம் நாடுகளின் பணக்கார விவசாயிகளுக்கு வழங்கிவரும் அதீதமான மானியங்களை ஒரு நியாயமான வரம்புக்குகூடக் குறைத்துக்கொள்ள மறுத்துப் பிடிவாதம் பிடிக்கின்றன என்பதாகும்.

இரண்டாவது குற்றச்சாட்டு வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகளின் ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்கின்றன என்பதாகும்.

ஜி-4 குழுவில் சேர்ந்து இந்தியாவும் பிரேசிலும் யுஎஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனோடு தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதை இதர வளரும் நாடுகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றன. ஜி-6 என்று இன்னொரு குழுவில் இந்த நான்கு நாடுகளோடு, ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும் மற்றொரு ஏற்பாட்டையும் இதர வளரும் நாடுகள் குறைகூறி வருகின்றன. இந்தப் பின்னணியில் “ஜி-4 செத்துவிட்டது’ என்று பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தை முடிவில் கமல்நாத் அறிவித்தது ஒரு விதத்தில் நன்மையே! “ஜி-4′ செத்துவிட்ட பின்னர், “ஜி-6’க்கு எப்படி உயிரூட்ட முடியும் என்று ஆஸ்திரேலியா கவலை தெரிவித்துள்ளது! எனினும், வளரும் நாடுகளின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதில் இந்தியாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், வளர்ச்சியடைந்த நாடுகளோடு சேர்ந்து துணை மாநாடுகள் நடத்துவதற்கான “ஜி-4′, “ஜி-6′ குழுக்களுக்கு மீண்டும் உயிரூட்டும் முயற்சிக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது.

பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பிரேசிலும் சொந்த நாட்டின் விவசாயிகள் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது என்று நிலை எடுத்தது,. இரு நாடுகளின் விவசாயிகளுக்கு சாதகமானதுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், கமல்நாத்தின் பேச்சும், பேட்டியும் பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தை விவசாய மானியங்களைப் பற்றியது மட்டுமே என்ற தோற்றத்தை ஏற்படுத்த முற்படுவது பாதி உண்மை மட்டுமே! தோஹா வளர்ச்சித் திட்டம் என்று வருணிக்கப்படுகிற டபிள்யூடிஓவின் இப்போதைய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில், விவசாயம் மட்டுமன்றி, தொழில் மற்றும் சேவைப் பணிகள் துறைகளும் பிரதானமான இடம் பெற்றுள்ளன என்று ஏற்கெனவே குறிப்பிட்டோம். இதில் வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகளுக்கு மிகுந்த அக்கறையுள்ள அம்சம், விவசாயம் அல்லாத மற்ற வர்த்தகத்திற்கு வளரும் நாடுகளின் சந்தையில் நுழைவதற்கான முயற்சியான “நாமா’ (Non Agricultural Market Access) என்பதாகும். விவசாயம் அல்லாத இதர தொழில்துறைகளின் உற்பத்தி சரக்குகளுக்கு, வளரும் நாடுகள் தங்கள் சந்தையை அகலத் திறந்துவிட வேண்டும். இறக்குமதிகள் மீதான சுங்கத் தீர்வைகளை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகள் “நாமா’ தொடர்பாக அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றன.

இந்த “நாமா’ பேச்சுவார்த்தையில், வளரும் நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ள இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ஒன்று சேர்ந்து “நாமா-11′ என்றொரு குழுவை அமைத்து, வளர்ச்சியடைந்த நாடுகளுடன் உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் விவசாயத்திற்கான மானியங்களைக் குறைக்கும் பட்சத்தில், “நாமா’ பிரச்னையில் ஒரு சமரசத்திற்கு இணங்கி வர இந்த “நாமா-11′ நாடுகள் குழு தயார் என்று ஏற்கெனவே சமிக்ஞை காட்டியுள்ளன என்பது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.

பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில், இந்த “நாமா’ பிரச்னையை மையமாக வைத்து ஒரு பேரம் நடத்தப்பட்டது என்பதும், அதிலும் யுஎஸ், ஐரோப்பிய யூனியனுக்கு திருப்திகரமான ஒரு முடிவு வரவில்லை என்பதும், இந்தப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்னணியாக இருந்தது.

வளர்ச்சியைடைந்த நாடுகளில் கணிசமான மானியங்களைப் பெறும் விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை வளரும் நாடுகளுக்கு கொண்டுவந்து, விற்பனை செய்யும்போது, அவர்களோடு உள்நாட்டு விவசாயிகள் போட்டிபோட்டு வியாபாரம் செய்யத் திணறுகிறார்கள். இதனால் வளரும் நாடுகளின் விவசாயம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. விவசாயத்திற்கான இடுபொருள்களின் விலை உயர்வு, விளைபொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைக்காதது ஆகியவை வளரும் நாட்டு விவசாயிகள் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்.

இந்தப் பின்னணியில் “நாமா’ பேச்சுவார்த்தையின் விளைவாக, வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில்துறை உற்பத்திப் பொருள்கள் வளரும் நாடுகளின் சந்தையை ஆக்கிரமிக்க அனுமதித்தால், அது மிகப்பெரிய தொழில்சிதைவுக்கு வழிவகுத்துவிடும். எனவே, டபிள்யூடிஓ பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு, விவசாயிகளின் நலன்களையும் பாதுகாப்பது என்ற நிலைப்பாட்டோடு நின்றுவிடாமல், நாட்டின் தொழில்களையும், வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்கும் திசையில் “நாமா’ கோரிக்கைகளையும் உறுதியாக எதிர்க்க வேண்டியது அவசியம். பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் “நாமா’ சம்பந்தமாக பேசப்பட்டது என்ன என்பதைப் பற்றி கமல்நாத் மெüனம் சாதிப்பது ஒரு மிகப்பெரிய அபாயத்தைத் திரையிட்டு மறைக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பாட்ஸ்தாம் பேச்சு தோல்வியின் விளைவாக, தோஹா வளர்ச்சித் திட்டப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறியிருக்கிறது. தோஹா சுற்றில் “ஏதாவதொரு’ உடன்பாடு “எப்படியாவது’ எட்டப்படுவதன் பாதகங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், எந்த உடன்பாடும் ஏற்படாமல் இருப்பதேகூட வளரும் நாடுகளுக்கு நன்மையாக அமையும் என்பது தெளிவு. உலக வர்த்தக அமைப்பு வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதற்கோ, மக்களின் வாழ்வாதாரத்தைக் குலைப்பதற்கோ அனுமதிக்கக் கூடாது என்ற எச்சரிக்கையோடு, மத்திய அரசு செயல்படவேண்டும் என்பதே நமது விருப்பம்.

Posted in Agriculture, America, Asean, Banking, Biz, Business, Commerce, Companies, Conference, Country, Cultivation, Development, Doha, Duty, Economy, EU, Exchanges, Exports, Farmers, Finance, Fine, G8, Imports, Industry, International, Law, markets, NATO, Poor, Protection, Rich, SAARC, Shares, Stocks, Talks, Tariff, Tax, Trade, Treaty, USA, World, WTO | Leave a Comment »