காளி கோயிலில் பூஜை செய்த மார்க்சிஸ்ட் கட்சி அமைச்சர்: ஜோதிபாசு கண்டனம்
கோல்கத்தா, செப். 16: காளிகோயிலில் பூஜைசெய்து வணங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் நடவடிக்கை கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது நடவடிக்கையை கட்சியின் முதுபெரும் தலைவரான ஜோதிபாசு ஏற்க மறுத்துவிட்டார்.
மேற்கு வங்க மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் சுபாஷ் சக்கரவர்த்தி. இவர் பிர்பும் மாவட்டம் காலிகட் என்ற இடத்தில் உள்ள பிரபலமான காளிகோயிலில் வியாழக்கிழமை பூஜை செய்து வணங்கினார். மலர்களைத் தூவி வழிபட்ட அவரது நடவடிக்கை கடுமையான விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
ஆனால் தனது நடவடிக்கை கம்யூனிச கோட்பாட்டுக்கு எதிரானது அல்ல என அவர் நியாயப்படுத்தினார் அவர்.
ஜோதிபாசு கருத்து: கண்ணால் பார்க்காத ஒன்றுக்கு எப்படி பூஜை செய்யமுடியும். காளி உயிருடன் இருக்கிறாரா? பார்க்காத ஒன்றை எப்படி அவர் வழிபட்டார். அவரது விளக்கத்தை ஏற்கமுடியாது என கட்சியின் முதுபெரும் தலைவர் ஜோதிபாசு தெரிவித்தார்.
ஜோதிபாசு எனது கடவுள்: நான் ஒரு இந்து. பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். மரபுகளை என்னால் மீறமுடியாது. மாஸ்கோவில் உள்ள லெனின் நினைவிடத்துக்கு செல்கிறோம். அங்கு செல்லும் யாராக இருந்தாலும் முஷ்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நமது நடவடிக்கைகளை நம்மைச் சுற்றிய சூழ்நிலைகள்தான் தீர்மானிக்கின்றன. ஜோதிபாசு எனது கடவுள். அவரது கருத்தை விமர்சிக்க விரும்பவில்லை என சக்கரவர்த்தி தெரிவித்தார்.