Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Documentary’ Category

Interview with ‘Ramanujan’ Documentary filmmaker MV Bhaskar – Dinamani Kathir

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

ஆவணம்: “”கலையும் அறிவியலும் கலந்த இடம்தான் கோவில்!”

சமூகத்தில் பிரமிக்கதக்க சாதனைகளைச் செய்திருப்பவர்களைப் பாருங்கள். பெரும்பாலும் சப்தமே இல்லாமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.வி. பாஸ்கர் – பன்முக ஆளுமை.

விளம்பரத் துறையில் பாஸ்கருடைய பணிகள் சர்வதேச அளவிலான விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன. அவருடைய “ராமானுஜன்’ ஆவணப் படம், கணித மேதை ராமானுஜன் பற்றிய காட்சிப் பதிவுகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. யேல் பல்கலைக்கழகத்துக்காக அவர் செய்த “ஊர்’ விவரணப் படம் தமிழ் மரபின் ஆதார வேர்களைத் தேடிச் சென்றது. பழங்குடியின மக்களின் கலாசாரத்தை, அவர்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்த “ட்ரைபாலஜி’ ஆவணப் படத்தில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.

“”கலையும் அறிவியலும் சந்திக்கும் இடங்கள் எனக்கான தளங்கள்” எனக் குறிப்பிடும் பாஸ்கர், தமிழில் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவர்.

மறைந்து கொண்டிருக்கும் சுவரோவியங்களைப் பதிவுகளாக்கி அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.

ஒரு வரலாற்று ஆய்வாளனின் வேட்கையோடு கலை, அறிவியல், இசை, ஒளிப்பதிவு, இயக்கம், மின்பதிப்பு எனப் பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் பாஸ்கரைப் பற்றி எழுதுவதைவிடவும் முக்கியமானது அவரிடம் பேசுவது. தமிழில் பாஸ்கரைப் பற்றிய முதல் பதிவு இது. இனி பாஸ்கருடன்…

வெவ்வேறு துறை அறிமுகம் பலமா, பலகீனமா?

பலம்தான். ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்ப செய்வது அயர்வையே தருகிறது. மாறாக வெவ்வேறு விஷயங்கள் மீதான ஈடுபாடு, நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது. தவிர, ஒரு துறையில் பெற்ற அனுபவம் மற்றொரு துறையில் ஏதேனும் ஒரு வகையில் உதவும். அதுவே உங்களை வித்தியாசப்படுத்தவும் செய்யும்.

விளம்பரப் படமும் ஆவணப் படமும் இருவேறு உலகங்கள். உங்களிடம் இவை இரண்டையும் இணைத்தது எது?

ஒரு படைப்பாளி எத்தனை ஈடுபாட்டுடன் செய்தாலும் விளம்பரங்கள் பிறருடைய திருப்தியையே முதல் நோக்கமாகக் கொண்டவை. மிகைப்படுத்தலும் போலித்தனமும் அங்கு அதிகம். தொடக்கக் காலத்திலிருந்தே இது என்னை அழுத்திக் கொண்டிருந்தது. நாம் செய்ய வேண்டிய காரியங்கள் வேறு என்பதை நன்கு உணர்ந்திருந்தேன்.

இந்நிலையில்தான், ராமானுஜத்தின் நூற்றாண்டையொட்டி அவர் பற்றிய ஆவணப் படத்தை இயக்கினேன். அப்போது அது எனக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது.

ஓர் இடைவெளிக்குப் பின்னர், “ட்ரைபாலஜி’ செய்தோம். ஒரிஸôவில் வாழும் பழங்குடி இன மக்களின் கலாசாரம் குறித்த பதிவு அது. அதன் பின்னர், “ஊர்’. பேராசிரியர் இ. அண்ணாமலை எனக்கு அளித்த வேலை அது. வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் நமது கலை, கலாசாரம், பாரம்பரிய மரபுகள் பற்றிய ஓர் அறிமுகமாகவே அப்பணியைச் செய்தோம்.

நவீன வாழ்வு பழங்குடிகளைப் பாதித்திருக்கிறதா?

பழங்குடிகள் குறித்த நமது பார்வை மலிவானவை. பழங்குடிகளில் இன்றைய நவீன வாழ்வின் அனைத்து வசதிகளோடும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்; தன் ஆதி அடையாளம் மாறாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

பணம் இல்லாத ஒரு வாழ்வை ஒரு கணமேனும் நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா? ஆனால், பணமே இல்லாத ஒரு வாழ்க்கை அவர்களுக்குச் சாத்தியமாகி இருக்கிறது. அவர்களுடைய வீடுகளை அவர்களே கட்டுகிறார்கள். அவர்களுடைய உணவை, உடைகளை அவர்களே தேடிக் கொள்கிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு தேவையையும் அவர்களால் சுயமாக அடைய முடிகிறது. இயற்கையோடான அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்வது.

“ஊர்’ அனுபவம் எப்படி?

தமிழின் உன்னதங்கள் உறைந்திருக்கும் 88 இடங்களுக்கு அந்தப் படத்துக்காகச் சென்றோம். உண்மையாகவே சொல்கிறேன். நம்மைவிடவும் மோசமான ஒரு சமூகம் இருக்க முடியாது. உலகளவில் போற்றத்தக்க எத்தனையோ கலைகள், கலைப் படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. அவை அனைத்தையும் சாகடித்துக் கொண்டிருக்கிறோம் நாம். நம்முடைய மோசமான செயல்பாட்டுக்கு கோயில்களின் இன்றைய நிலை ஓர் உதாரணம்.

கோயில்கள் அழிந்து கொண்டிருக்கின்றனவா?

ஆமாம். நம்முடைய வாழ்க்கை முறையே கோயில் சார்ந்ததாகத்தான் இருந்திருக்கிறது. கோயில்கள்தான் எல்லாமும். கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் கூடிய அங்குதான் எல்லா கலைகளும் வாழ்ந்திருக்கின்றன.

கலையும் அறிவியலும் ஒன்றுகூடிய இடம் கோயில். இன்றைய நிலையோ வேறு. மதம் சார்ந்த விஷயமாக மட்டுமே கோயில் அணுகப்படுகிறது. உன்னதமான சிற்பங்களும் சுவரோவியங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன. கோயில் சார்ந்த கலை மரபுகள் வழக்கொழிந்து வருகின்றன. கலைஞர்கள் அருகி வருகிறார்கள். கலையின் அழிவும் கலைஞர்களின் அழிவும் ஒரு சமூகத்தினுடைய அடையாளத்தின் அழிவு.

நம் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்வது?

நிறைய பணிகள் இருக்கின்றன. முக்கியமாகத் திணிப்பு கூடாது. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுக்கான கதைகள், இசை, கலை என எதையும் நாம் சிந்திப்பதே இல்லை. அவர்களை, பணம் பண்ணும் இயந்திரமாக்க நாம் துடித்துக்கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகளை முதலில் வீடுகளைவிட்டு வெளியே அழைத்து வர வேண்டும்; எந்தவித நோக்கமும் இல்லாமல். அதாவது, ஊர் சுற்றுவதுபோல்.

வாசிக்கும் பழக்கமும் ஊர் சுற்றும் பழக்கமும் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். வாழ்க்கை கொண்டாட்டத்துக்குரியது. கொண்டாட்டங்களின் – கேளிக்கைகளின் ஒரு வடிவம்தான் கலை. நம்முடைய கலை, கலாசார ஆதாரங்களை அடுத்தத் தலைமுறைக்கு எப்படியேனும் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ் சமூகம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் அதுதான்.

Posted in Ads, Advertisements, Advt, Archeology, Arts, Bhaskar, Castes, Cinema, Community, Culture, Documentary, Films, Heritage, Hindu, Hinduism, History, Movies, MV Bhaskar, MV Bhaskhar, Paintings, Raamanujan, Raamanujar, Ramanujan, Ramanujar, SC, Science, ST, Temples, Tribes, Vaishnavism, Vaishnavite | Leave a Comment »

Chennai Gana specialist Viji – A Docufilm by V Ramu: Dinamani Kathir

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

சமூகம்: விதி வரைந்த பாதை!

வானுயர்ந்த கட்டிடங்கள். பளபளக்கும் தார்ச்சாலை. நுனி நாக்கில் ஆங்கிலம் என்று பார்த்துப் பழகின நமக்குச் சென்னையின் மறுபக்கத்தை அறிமுகப்படுத்துகிறது, “மாநகர் ஜித்தன் மரண கானா விஜி‘ என்ற ஆவணப்படம். வி. இராமு படமாக்கியிருக்கிறார். சாலையோரங்களில், குப்பங்களில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களின் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் பல விதங்களில் உள்ளன. இந்த மக்களின் மகிழ்ச்சியை, சோகத்தைப் பாடல்களாக அந்த மக்களே பாடுகின்றனர். இந்த விளிம்புநிலை மக்களின் தவிர்க்க முடியாத இசை, கானா பாடல்கள். நம் கிராமங்களின் இழவு வீட்டில் ஒப்பாரி பாடுவது போல் சென்னை மாநகரங்களில் மரண கானா பாடப்படுகிறது.

இந்த ஆவணப் படத்தின் நாயகன் விஜி சுமார் மூவாயிரம் சாவுகளுக்குப் பாடல் பாடி உள்ளார். “”அப்பா, அம்மா யாருன்னே தெரியாது. பேப்பர் பொறுக்கும் சிறுவர்களே என் சிறுவயது நண்பர்கள். எந்த வேலையும் தெரியாது. பீச்சுக்கு வர்றவங்ககிட்டே திருடறது. விபச்சாரத் தொழிலுக்குத் தூது வேலை பார்க்கறதுனு பொழப்பு ஓடுச்சு. அப்பவே ஏங்கூட இருந்தவங்க நானூறு, ஐநூறு சம்பாரிப்பாங்க. ஆனா எல்லா ரூபாயையும் போதைக்குதான் செலவு பண்ணுவாங்க. இப்படி போய்கிட்டிருந்த என் வாழ்க்கையில கானா நுழைஞ்சது” என்று தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் விஜி.

“”தண்டையார் பேட்டை பக்கம் ஒரு அம்மா தீபாவளி, கார்த்திகை நேரத்தில எங்களை மாதிரி ஆளுகளுக்குச் சாப்பாடு போடுவாங்க. செவப்புனா செவப்பு அப்படி ஒரு செவப்பு. அந்தம்மாவுக்கு முதுகில அழகா ஒரு மச்சம் இருக்கும். ஒரு தடவ நான் அதைத் தொட்டேன். “அப்படிலாம் தொடக்கூடாது ராசா. நீ எனக்கு புள்ள மாதிரி’னு சொன்னாங்க. மனசு உருகிப் போச்சு. அப்புறம் அந்தம்மாவப் பார்க்கல. கொஞ்ச நாள்ல அந்தம்மா, உடம்பு சீரியஸôகி ஹாஸ்பிடல்ல சேர்ந்திருக்கிறதா சொன்னாங்க. ஓடிப் போய் பார்த்தேன். நான் போனபோது அவங்க இறந்து போயிட்டாங்க. அந்தம்மாவுக்கு யாருமில்ல. ஒரே ஒரு பொண்ணு மட்டும் பக்கத்தில அழுதுகிட்டிருந்தது. அந்தம்மாவோட மக’னு சொன்னாங்க. ஏதோ சேட்டோட தயவுல இருந்தாங்கனு தெரிஞ்சது. பொண்ணு கையில அம்பது, அறுபது ரூபாதான் இருந்துச்சு. பேப்பர் பொறுக்கிறவங்க போட்டு வைச்சிருந்த பழைய டயர், பிளாஸ்டிக் வாளி எல்லாம் கிடந்துச்சு. அதை விலைக்குப் போட்டதுல 300 ரூபா கிடச்சுது. நானும் அந்தப் பொண்ணும் கண்ணம்மா சுடுகாட்டுல அந்தம்மாவுக்கு ஈமச் சடங்கு பண்ணினோம். மரண கானா ஆரம்பிச்சது அங்கதான்.

அந்தப் பொண்ணுக்குத் தெரிஞ்சவங்க யாரும் இல்லாததால ஹாஸ்டல்ல விடலாம்னு பார்த்தா வேண்டாம்னு சொல்லிடுச்சு. எனக்குத் தெரிஞ்சவங்க வீட்ல விட்டுட்டு ஜெயிலுக்குப் போயிட்டேன். கஞ்சா வித்த கேசுல அரெஸ்ட் பண்ணுவாங்க. நாங்க வித்ததில்ல. யாரோ விப்பாங்க. நாங்க ஜெயிலுக்குப் போவோம். சும்மா கணக்குக்காக அரெஸ்ட் பண்ணுவாங்க. அப்படி போனதுல பதினைஞ்சாயிரம் கிடைச்சது. ஜெயில்ல மாமுல் போக பனிரெண்டாயிரம் கிடைச்சது. அத வெச்சுகிட்டு நானும் அந்தப் பொண்ணும் வாழறோம். ரெண்டு குழந்தைங்க இருக்கு” என்கிறார் விஜி.

இந்த ஆவணப் படம் சென்னையின் பூர்வகுடி மக்களை, அவர்களுடைய வாழ்க்கையை- பண்பாட்டை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த மனிதர்கள் வாழ்க்கை குப்பைகளிலும், சேரிகளிலும், சாலை ஓரங்களிலும் சுடுகாட்டிலும் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மாதிரி இடங்களில் படப்பிடிப்பை நிகழ்த்தாமல் ஓவியக் கல்லூரியில் படத்தை எடுத்திருப்பது நெருடுகிறது.

“பம்பரக் கண்ணாலே’ என்ற சந்திரபாபு பாட்டு கானா வகையைச் சேர்ந்தது. இந்த மாதிரி கலைஞர்களுக்குச் சமூகத்தில் அங்கீகாரம் வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்வது இன்னமும் எட்டா கனியாகவே இருக்கிறது. இந்த விளிம்புநிலை கலைஞர்களை ஆவணப்படுத்திய வி. இராமு இந்தச் சமூகம் அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தை உணர வைக்கிறார்.

விதிக்கும் விஜிக்கும் ஓரெழுத்து வித்தியாசம்தான். எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து மரணங்களை நம்பி வாழும் இந்த மனிதர்களின் வாழ்க்கையும் மனித சமுத்திரத்தின் ஒரு துளிதானே?

முத்தையா வெள்ளையன்

Posted in Arrest, Audio, burial, Chennai, dead, Documentary, Faces, Films, Funeral, Gana, Jail, Kana, Madras, Movies, music, names, people, Poor, Raamu, Ramu, Rites, Slum, Songs, Viji | Leave a Comment »

Tamil Cinema History – ‘Pesamozhi’ documentary on movies

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

ஆவணம்: தொலைந்து போன சினிமா சரித்திரம்!

தமிழ்மகன்

இந்திய தேச வரை படத்தில் இருந்து ஒரு கிராமமே காணாமல் போய்விட்டதை ஒரு சினிமாவில் சுவாரஸ்யமாகச் சொன்னார்கள். தமிழின் 30 ஆண்டு சினிமா சரித்திரமே காணாமல் போயிருக்கிறது என்கிறது “பேசாமொழி’ ஆவணப்படம்.

இரண்டாண்டு கடும் முயற்சிக்குப் பிறகு இந்த ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. தயாரித்தவர் ம.செந்தமிழன். இந்த ஆவணப் படம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட “பகீர்’ கருத்துகள் இவை.

தமிழ்த் திரைப்பட வரலாறு 1931-ல் வெளியான “காளிதாஸ்’ படத்திலிருந்து ஆரம்பமாகிறது. அதற்கு முன்னர் மெüன மொழிப் படங்கள் இங்கே திரையிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் எத்தனை மெüன மொழிப் படங்கள் தயாரானது என்று தெரியவந்துள்ளதா? வேறு பகுதியில் தயாரான படங்கள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டதாகச் செய்தி உண்டா?

1897-ல் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாகச் சென்னை விக்டோரியா ஹாலில் சினிமா திரையிடப்பட்டது. அதற்கு 6-7 மாதங்களுக்கு முன்புதான் மும்பையில் இந்தியாவின் முதல் திரையிடல் நடைபெற்றது. 1905- ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாகப் படங்களைத் திரையிட ஆரம்பித்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். ரயில்வே பொறியாளரான அவர், படத் தயாரிப்புக்கு முன்பே “லைஃப் ஆஃப் ஜீஸஸ் கிரைஸ்ட்’ என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த “ரயிலின் வருகை’ (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள் இங்குத் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.

அப்போது திரைப்படங்கள் வெளியிட திரையரங்குகள் இருந்தனவா?

இல்லை. நிரந்தரத் திரையரங்குகள் உருவாகாத நேரத்தில் அவரே அதற்கான உபகரணங்களோடு தமிழகம் முழுதும் சுற்றி படங்களைத் திரையிட்டிருக்கிறார். ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக அப்போது வெளிநாட்டில் இருந்த படம் தயாரிக்கும் கம்பெனியிடம் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். சினிமா மீது மக்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு தமிழகம் முழுதும் டெண்ட் திரையரங்குகள் நிறைய உருவாக்கியிருக்கிறார். மின்வசதி இல்லாத நேரத்தில் மெக்னீஷியத்தைப் பயன்படுத்தித்தான் ஒளி உண்டாக்கிப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள். படம் பார்ப்பதற்கு அணாவாகவோ, அல்லது நெல்- தானியங்களோ வாங்கப்பட்டன. மெüனப் படம் அதன் கதையை விளக்குவதற்காகக் கையில் குச்சியுடன் திரையருகே நின்றிருப்பார். 1928-ல் படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். நிரந்தர திரையரங்குகளைக் கட்டியிருக்கிறார். தென்னிந்தியாவில் அவருக்கு 18 திரையரங்குகள் இருந்தன. கோயம்புத்தூரில் இருந்த வெரைட்டி ஹால் திரையரங்கு அவருடையதுதான். இன்று அந்தச் சாலை வெரைட்டி ஹால் சாலை என்றே அழைக்கப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்தித் திரையிட்ட நாட்களில் மின்வசதியால் இயங்கும் தியேட்டர் என்று சாலையில் கூவி விளம்பரம் செய்வார்கள். அதனால்தான் தென்னிந்தியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட தியேட்டரின் பெயரே எலக்ட்ரிக் தியேட்டர் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்தக் கட்டடம் இப்போது சென்னை அண்ணா சாலை போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ளது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தாதா சாகிப் பால்கேதான் இந்திய சினிமாவின் முன்னோடியாகக் கருதப்பட்டு வருகிறார். ஆனால் பால்கேவுக்குத் திரைப்பட ஆர்வம் வருவதற்கே காரணமாக இருந்தது சாமிக் கண்ணு காண்பித்தத் திரைப்படங்கள்தான்.

அவரைப் போல வேறு யாரெல்லாம் இருந்தார்கள்?

நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக மருதமுத்து மூப்பனார். அவர் இங்கிலாந்து சென்று இளவரசரின் திருமணத்தைப் படம் பிடித்து வந்து இங்குத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். 1916-ல் “கீசகவதம்’ என்ற படத்தை நடராஜ முதலியார் உருவாக்கியிருக்கிறார். இவர்கள் எடுத்தப் படங்களோ, அல்லது இவர்களைப் பற்றிய விவரங்களோகூட யாருக்கும் தெரியவில்லை. திரைத்துறை சம்பந்தமாகப் படிப்பவர்களுக்குக்கூட இவர்களைப் பற்றி பாடம் நடத்தப்படுவதில்லை. நேராக கிரிபித், ஹிச்காக், பெலனி என்றுதான் பாடம் நடத்துகிறார்கள். மருதமுத்து மூப்பனாரின் புகைப்படம்கூட காணக் கிடைக்காததுதான் வேதனை.

ஏன் இந்த நிலை? உங்கள் கருத்து என்ன?

பேசும் படம் வந்த பின்புதான் அது அந்த மொழியின் திரைப்படம் என்ற கருத்து நிலவுகிறது. மற்ற மொழிகளில் அப்படியில்லை. அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டில் பேசா மொழி படத்திலிருந்தே அவர்களின் திரைப்பட வரலாற்றைப் பார்க்கிறார்கள். மற்றெல்லா மொழிகளிலும் அப்படித்தான். அவர்களின் மக்கள் தயாரித்த அவர்களின் மக்கள் நடித்த அவர்கள் பகுதியில் எடுக்கப்பட்ட எல்லாப் படங்களும் அவர்களின் மொழிப்படம்தான். இங்கே ஆந்திரத்திலும் கேரளத்திலும்கூட அவர்களின் பேசா மொழிப் படங்களின் ஆவணங்கள் காணக் கிடைக்கின்றன. இங்கே விஸ்காம் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பேசும் படங்கள் வந்தபின்புதான் தமிழ் சினிமாவின் சரித்திரம் தொடங்கியதாகப் பாடம் நடத்துகிறார்கள். பேசாமொழிப் படங்கள் நம் படங்கள் இல்லை என்ற இந்தப் போக்கும் அவற்றை இழக்க ஒரு காரணமாகிவிட்டது. இந்த ஆவணப் படத்தில் பாமரன் சொல்லுவது போல, தமிழர்களுக்கு வரலாறு இருக்கிறது. ஆனால் வரலாற்று பதிவுகளைப் பாதுகாக்கும் பழக்கம்தான் இல்லை.

இந்தப் படத்தின் விளைவுகள் ஏதேனும் உண்டா?

கோவையில் உள்ள சாமிக் கண்ணு வின்சென்டின் வாரிசுதாரர்கள் படத்தைப் பார்த்துவிட்டுப் பேசினார்கள். அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் ஆவணங்களையும் அளித்தார்கள். அமெரிக்காவில் இருந்து ஒரு பெண்மணி பேசினார். அவர், சாமிக்கண்ணுவிடம் பணியாற்றியவரின் மகள். அவரும் பல தகவல்களைப் பகிரிந்து கொண்டார். விவரங்கள் எங்கோ கொட்டிக் கிடக்கின்றன. நாம் ஒரு அடி எடுத்து வைத்தால்தான் அவை நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைக்கும். அந்த ஓர் அடிதான் இந்தப் பேசா மொழி.

Posted in Arts, Cinema, Docufilms, Documentary, Films, Heritage, History, India, Language, Lost, Movies, Silent, Theaters, Theatres | 4 Comments »

Poongaa – Adyar Park: Documentary Film & backgrounder

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

‘டாக்குமென்டரி’ படம் மெய்சிலிர்க்க வைக்குமாம்…

அடையாறு பூங்காவைப் பார்வையிட வரும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் அனைவருக்கும் தனி குளிரூட்டப்பட்ட அறையில் ஏழு நிமிடம் ஓடக்கூடிய அடையாறு பூங்கா பற்றிய குறும்படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த இயற்கை நம் கண் முன் வராதா? என்ற ஏக்கத்தை இந்த ‘டாக்குமென்ட்ரி’ படம் ஏற்படுத்தும் என்கிறார்கள்.

அடையாறு பூங்காவின் மக்கள் பங்கேற்பு உறுதி செய் அலுவலர் ரெக்ஸ்வாஸ் கூறுகையில், ” இங்கு அரிய மூலிகை தாவரங்கள் கொண்டு வந்து வைத்த சில நாட்களிலேயே பல வண்ண வண்ண பட்டாம் பூச்சிகள் வர ஆரம்பித்து விட்டன. பசுமை மாறா வெப்ப மண்டலக் காடுகள், குளங்கள் உள்ளிட்ட வற்றை உருவாக்கினால் அரிய பறவையினங்கள், விலங்கினங்கள் வர ஆரம்பித்து விடும். ஏழு நிமிட குறும்பட திட்ட அறிக்கையை பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் அமைப்புகள் விரும்பினால், அவர்களது இடத்திற்கே சென்று ஒளிபரப்பி கருத்து, ஆலோசனைகளை கேட்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார். இரண்டாண்டுகளில் அடையாறு பூங்கா உருவாக்கப்பட்டு அடையார் திரு.வி.க., மேம்பாலம் அருகில் உள்ள பழைய மேம்பாலம் பார்வையாளர்களுக்கான தளமாக மாற்றப்படும் திட்டமிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு: 9443885979 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். www.adyarpoonga.com என்ற இணைய தளத்திலும் பூங்காவைத் தேடலாம்.

Posted in Adyar, Chennai, Docufilm, Documentary, Environment, Film, Forest, Madras, Nature, Plants, Poonga, Poongaa, Shrubs, Trees | Leave a Comment »

Losing our heritage & Folk Arts Tradition – Interview with World cultural forum் Member

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

புதிய பார்வை: “”நாட்டுப்புறக் கலைகளை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!”

உலகமயத்தினால் கிராமப்புறம் அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டைத் தொழில்மயம் ஆக்கவேண்டும் என்பதற்காக மேற்கத்தியமயமாக்கி விட்டார்கள்.

நமக்கு நல்ல ரோடே இல்லை. ரோல்ஸ்ராய்ஸ், ஃபோர்டு, பென்ஸ் போன்ற கார்கள் இங்கு அவசியமா?”

-இப்படியெல்லாம் ஆவேசப்படுகிறார், World cultural forum் என்கிற அமைப்பின் உறுப்பினரான சாரதா ராமநாதன்.

இவர் ஒரு திரைப்பட இயக்குநரும் கூட. தேவதாசிகளின் வாழ்வை மையமாக வைத்து இவர் எடுத்த திரைப்படம் “சிருங்காரம்’ சென்ற ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

அவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

உலகமயத்தால் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

உலகமயம், தொழில்மயம் என்கிற பெயரில் நாம் கிராமப்புறங்களைக் கவனிக்க மறந்துவிட்டோம். அதனால் கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். இதனால் கிராமப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன.

உலகமயத்தால் ஓரளவுக்கு பலன் பெற்றது நடுத்தர மக்கள்தாம். நடுத்தர மக்கள் மட்டும்தான் இந்தியாவா? எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா? அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார்? உணவு எப்படிக் கிடைக்கும்?

தொழில்மயத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் விவசாயத்திற்குக் கொடுக்கவில்லை. நம்மிடம் தண்ணீரைச் சீராகப் பயன்படுத்துவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை.

கிராமப்புறம் நசிந்து போனால் நாட்டுப்புறக் கலைகள் உயிர்வாழ்வது எப்படி? நமது பாரம்பரியச் செவ்வியல் கலைகள் கோயில் குளத்தைச் சுற்றி வளர்ந்தவை. நாட்டுப்புறக்கலைகள் கிராமப்புறத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்வைச் சுற்றியும் வளர்ந்தவை. நாட்டுப்புறக் கலைகள் மேம்பட வேண்டுமானால் நாட்டுப்புறம் மேம்பட வேண்டும்.

சினிமாவிலும் டிவியிலும் இன்று நாட்டுப்புறப் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலர் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து ஆடியோ கேசட் வெளியிடுகிறார்கள். அப்படியானால் நாட்டுப்புறக் கலைகள் வளர்வதாகத் தானே அர்த்தம்?

டிவியிலும் சினிமாவிலும் நாட்டுப்புறக் கலைகளைப் பிசினஸ் ஆக்கிவிட்டார்கள். இதனால் நாட்டுப்புறக் கலைகளில் ஒரிஜினாலிட்டி போய்விட்டது. நாட்டுப்புறக் கலைகள் சுயமாக வளர வேண்டும்.

நாட்டுப்புறப் பாடல்களை ஆடியோ கேசட்களிலும், சிடியிலும் சிலர் பதிவு செய்து விற்கிறார்கள். ஆனால் அது தாத்தா போட்ட பாட்டு. இவர்கள் என்ன நாட்டுப்புறப் பாடலுக்குப் புதிதாகச் செய்தார்கள்? என்பதுதான் கேள்வி. சினிமாவில் கானாப் பாட்டு அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது.

கானாப்பாட்டில் சினிமாத்தனம் வந்துவிட்டது. மக்கள் பாடும் கானாப் பாட்டில் இருந்த அந்த உயிர்ப்பு எங்கே? உணர்வு எங்கே?

கிரியேட்டிவிட்டிக்கு முழுச் சுதந்திரம் அவசியம். நாட்டுப்புறக் கலைகள் வளர எந்தத் தடையும் இல்லாத முழுச்சுதந்திரம் அவசியம். சினிமாவுக்கோ, டிவிக்கோ லாபம்தான் முக்கியம். லாப நோக்கம் வருகிறபோது சுதந்திரம் அடிபட்டுப் போகிறது. லாப நோக்குடன் இயங்கும் சினிமாவால் கிரியேட்டிவ் கலைகளான நாட்டுப்புறக் கலைகளை எப்படி வளர்க்க முடியும்? இயல்பான அகத் தூண்டுதலால் ஒருவர் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. பெயின்டிங் பண்ணினால் லண்டனில் நல்ல விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்காகப் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. அது இயல்பானதல்ல; அங்கே கிரியேட்டிவிட்டிக்கு இடமில்லை. பணத்துக்குத்தான் இடம். பணம் பண்ணும்போது கிரியேட்டிவிட்டி அடிபட்டுப் போகிறது.

உலகமயத்தின் விளைவாக நமது நாட்டில் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது? வளர்ச்சியை மறுக்க முடியுமா?

உலகமயத்தால் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. இதனால் பலன் பெற்றோர் நடுத்தர வர்க்க மக்களே. நடுத்தர வர்க்க மக்கள் கோட், சூட், டை அணிவதற்காக கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கிராமப்புறத்தை நாம் அமுக்கினோம் என்றால் நாமும் சேர்ந்து அமுங்கிவிடுவோம் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள்.

“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புறத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் காந்தியின் குறிக்கோள்.

ஆனால் நமது அரசியல்வாதிகள் ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெற முடியும்.

இன்றையச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க வாய்ப்பே இல்லையா?

நம்மிடம் பழம்பெருமை பேசும் பழக்கம் உள்ளது. பழம் பெருமை பேசுவதைவிட பழைமையை உயர்த்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

நமது பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற செவ்வியல்கலைகள், நாட்டுப்புறப் பாடல், ஆடல் போன்ற நாட்டுப்புறக் கலைகள், நமது பாரம்பரிய இலக்கியங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

“நமக்காகப் பணம்’ என்பது போய் “பணத்திற்காக நாம்’ என்று ஆகிவிட்டதுதான் பிரச்சினை.

உலகமயம் வந்தபின்னால் எதுவுமே இயற்கையாக இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறதா? ஆக்சிஜன் கிடைக்கிறதா? எதுவுமே இயற்கையாகக் கிடைத்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க நேரடியாக அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்வதுதான் வழி. அது போல கிராமப்புற மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதைவிடக் கிராமப்புறத்தில் வளர்ச்சி ஏற்பட்டால்தான் நாட்டுப்புறக் கலைகளும் அதன் இயல்பான போக்கில் வளர்ச்சி அடையும்.

கிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. நமது அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள் உலகமயத்தை மறந்துவிட்டு கிராமப்புறத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திரும்பினால்தான் இதற்கு விடிவு ஏற்படும்.

கம்ப்யூட்டர் தொழில் அதிபர் நாராயணமூர்த்தி தேசிய ஹீரோவா? நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா? என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி.

Posted in Artistes, artists, Arts, Chrungaram, Cinema, Crafts, Culture, Dance, Docu Drama, Documentary, Faces, Films, Folk, Folklore, global, Globalization, Goa, Heritage, Interview, Mime, Movie, people, Performance, Performers, Pride, Sarada, Saradha, Saratha, Sharada, Sharada Ramanathan, Sharadha, Sharatha, Srungaram, Srunkaram, Street, Tradition | Leave a Comment »

Kumutham Theernadhi – Black Friday: Movie Experiences by Viswamithran

Posted by Snapjudge மேல் ஜூன் 7, 2007

குமுதம் தீராநதி
இந்திய சினிமா – விஸ்வாமித்திரன்
கருப்பு வெள்ளிக்கிழமை

ஆசிய சினிமா வரலாற்றில் அரசியல்ரீதியாக நிகழ்ந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படங்கள் சில நூறுகளுக்குள் அடங்கிவிடக் கூடியதுதான். அவற்றில் குறிப்பிடத்தக்க, நமது மனதிலிருந்து என்றும் அகலாத சமகாலப் படங்களாக, தென்கொரிய இயக்குநரான ஜேங்க் சன் வூவினது ‘பூவிதழ்’ (A Petal), இந்தோனேசிய இயக்குநரான கெரின் நுகரோகோவினது ‘கவிஞன்’ (A Poet) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை அரசியல் சினிமா என்பது பற்றாக்குறை மிக்க பரப்பாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் பொதுவாக சினிமா போக்கென்பது. தனிமனித சுகதுக்கங்களைப் பற்றிய வரையறைகளுடன் எஞ்சிவிடுமாறே பெரும்பாலும் நிகழ்கின்றன.

அவற்றுள் ‘நல்ல சினிமா’ என்பது அவற்றை மேம்பட்ட உண்மையுடனும் யதார்த்தத்துடனும் வழங்கினவை மாத்திரமே. அவை பல்வேறுபட்ட போக்குகளை திரைப்பரப்புள் கொண்டு வந்திருந்தாலும், அனைத்தும் கதாபாத்திரப் பார்வைச்சார்புடனேயே அணுகப்பட்டவையாகும். ஒருவிதத்தில் அந்நிலை ஏற்கத்தக்கதுதானெனினும், நம்மைக் கடந்துவிட்ட அல்லது நாம் கடந்துகொண்டிருக்கிற அரசியல் வரலாற்றுத் தடங்களைப் பற்றிய சித்திரிப்புக்களை அவை நேரடித்தன்மையுடன் சுட்ட உதவியதில்லை. உதாரணத்திற்கு, தமிழில் வெளியான ‘ஹே ராம்’ படத்தை எடுத்துக் கொண்டால், மையக் கதாபாத்திரமான சாகேத் ராமினது பார்வைச் சார்பு மதிப்பீட்டின்படியே காந்திய நிலைப்பாடுகளை அப்படம் கணக்கிட்டுப் பார்த்தது. தனிமனித பாதிப்பின் நீண்டதூரப் பழிவாங்கலாக மாத்திரமே அப்படம் தனித்துவிடுகிறது. ‘பம்பாய்’, ‘இந்தியன்’ ஆகிய திரைப்படங்களையும் இவ்வகையில் இணைக்கலாம். இதைப்போலவே தமிழில் வந்த பல படங்கள் மையக் கதாபாத்திரங்களின் மனமதிப்பீட்டிற்கு ஏற்பவே தாம் கடக்கும் வரலாற்றுத் தடங்களைப் பதிவு செய்பவையாக இருப்பதுவே நடைமுறை.

எனவே, அரசியல் சினிமாவை நேரடித் தேவையுடன் திரைப்பரப்பிற்கு எடுத்துவரும் திரைப்படங்கள் ஏறக்குறைய இல்லை என்கிற நிலைதான் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. எனினும், படைப்பொளி மேலோங்கிக் கொண்டிருக்கும் இந்தி சினிமாவில் அக்குறைபாட்டை தீர்க்கவென ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ (Black Friday்) என்கிற இந்தித் திரைப்படம் 2007 பிப்ரவரி மாதத்தில் வெளியானது. வழக்கமான ஒரு இந்தி நடுநிலைத் திரைப்படமாக இருக்கும் என்று நம்பிச் செல்பவர்கள் ஆச்சரியங்களுடனும் அதிர்வுகளுடனும் அரங்கத்திலிருந்து வெளியேறுவது உறுதி. ‘லகான்’ திரைப்படத்திற்குப் பின்பு நீண்ட இடைவெளியில் உலகத் திரைப் பார்வையாளர் சமூகமே தலைநிமிர்ந்து பார்க்கும்படியான வாய்ப்பை ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ அளித்திருப்பது உலகளாவிய நல்ல சினிமாவை இந்திய/தமிழ் மட்டத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம் முதலில் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய விஷயம். ஏனெனில் இந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஆவணப் புனைவுப் படங்கள் (DocuFiction) ஆவணத்தன்மையையும் பெறாமல் புனைவுத்தன்மையையும் பெறாமல் இரண்டும் கெட்டானாகத் தேங்கிப் போய்விடுபவையாக உள்ளன. பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றிய தமிழ்த் திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம். இப்படத்தின் முக்கியத்துவம் கருதி படத்தின் தேவையை நாம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலும், சினிமா என்கிற காட்சியூடக மொழியின் வெளிப்பாட்டினை (Expression of Film Language) இப்படம் பெற்றிருக்கவில்லை என்கிற குறைபாட்டை நாம் சமாதானப்படுத்திக் கொள்ளமுடியாது. நல்லதொரு வரலாற்று நாடகத்தன்மையையே அப்படம் கொண்டிருந்தது. இயக்குநர் திரைமொழியைவிட கதாபாத்திரத்தின் வரலாற்றைப் பதிவுபடுத்தும் மட்டற்ற ஆர்வத்தின் வெளிப்படுதலாகவோ அல்லது திரைமொழி குறித்த அவரது ஆர்வமற்ற நிலைப்பாட்டின் வெளிப்படுதலாகவோ இந்தப் பிழைகளை நாம் கணிக்கலாம். மணிரத்னம் போன்றவர்கள் இவ்விரு தளங்களையும் சமனாகக் கையாள முயன்றிருப்பினும் (இருவர், பம்பாய், மற்றும் குரு), கதாபாத்திரங்களின்மீது திணிக்கப்படும் காதல் ஈடுபாடு காரணமாக படத்தின் மூலச்செய்தி கைதவறிப் போய் விடுகிறது. கவர்ச்சிபூர்வமான அணுகல்தான் (Romanticised Approach) இத்தகைய படங்களின் வீர்யத்தை மட்டுப்படுத்திவிடும் ஒரு கூறாக அமைந்துவிடுகிறது. இந்தப் பலகீனங்களின் பின்னணியில்தான், ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ திரைப்படத்தின் உச்சபட்ச கலை, அரசியல் வெளிப்பாடுகளின் முக்கியத்துவத்தை நாம் மதிப்பீடு செய்ய நேர்கிறது.

1993ஆம் ஆண்டு நடந்தேறிய பம்பாய் குண்டுவெடிப்புச் சம்பவங்களை முன்வைத்து ஹ§சேன் சேய்தி எழுதின புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. 1993, மார்ச் 9ஆம் தேதி பம்பாய் நகரைச் சுற்றி 12 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. எதிர்பாராத இந்தத் திடீர் தாக்குதலில் சிக்கி 300_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1600_க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அந்தக் கொடிய சம்பவம் நடந்தது ஒரு வெள்ளிக்கிழமையன்று. மனித கூக்குரல்களும் ரத்த வீறிடல்களும் புகையின் கரிய அடர்த்தியும் படிந்த அந்த வெள்ளிக்கிழமைத் துயரின் சம்பவ விவரிப்பையும் அதன் சதித்திட்டங்களையும் பின்பு நேரும் கைதுவிசாரணைகளையும் தொகுத்து வழங்குகிறது ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ திரைப்படம்.

மார்ச் 9, 1993இல் பம்பாயிலுள்ள நவ் படா காவல்நிலையத்தில், காட்சிகள் தோன்றாத இருட்பின்னணியில் சிறைக்கதவு பலமாக ஓங்கியறையப்படும் சத்தத்தோடு துவங்குகிறது. அந்தச் சத்தமே படத்தின் தீவிரத்தன்மையை நோக்கிய நமது கவனத்தைக் கூர்மைப்படுத்திவிடுகிறது. தொடர்ந்து பூட்ஸ் காலோசை. காட்சி பரவ, சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட குல் மொஹமத் எனும் இளைஞனொருவன் காவல்துறையினரால் நீரில் மூழ்கடிக்கப்பட்டு வதைக்குள்ளாகிறான். நடைபெற்ற கலவரமொன்றில் அகப்பட்ட அவன், தனது சகோதரர்களுடன் கைதுசெய்யப்பட்டவன். ஆனால் உண்மையில் அவனது சகோதரர்களுக்கு அந்தக் கலவரத்தில் எந்தப் பங்கெடுப்பும் இல்லை. அவர்களை விடுவித்துவிடுமாறு அழுது புலம்புகிறான். பின்பு (சகோதர்களை விடுவிக்கச்செய்யும் விழைவின்பொருட்டாலும்) பயம் கலந்த அழுகையுனூடாக பம்பாயில் இன்னும் 3 நாட்களில் ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வெடிக்கப்போகும் சதித்திட்டம் பற்றிக் காவல்துறையினரிடம் கூறுகிறான். ஸ்டாக் எக்சேஞ்ச், மந்த்ராலயா மற்றும் சேனா பவன் ஆகிய இடங்கள் வெடிவைத்துத் தகர்க்க குறிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறான். ஆனால் காவல்துறையினர் அதை நம்புவதாக இல்லை. ‘எளிதாக தரைமட்டமாக்க அவ்விடங்களெல்லாம் என்ன இனிப்புத் துண்டங்களா?’ என்று ஏளனத்துடன் பதிலளிக்கின்றனர். ஆனால் உண்மையில் வெடிப்பு நிகழப்போகிறது என்பதை அடுத்த காட்சி நமக்கு உறுதிப்படுத்தத் துவங்குகிறது.

சதி ஏற்பாட்டாளரான டைகர் மேமனது குழுவுரை ‘மார்ச் 12ஆம் தேதி திட்டம் நிகழ்த்தப்படவேண்டும்’ என்று நிகழ்கிறது. அடுத்து ஆங்காங்கு குண்டுகள் பொருத்தப்படும் செயல் விரிவாக காட்டப்படுகிறது. பம்பாயின் கடற்கரையோர புறாக்கள் உற்சாகமாகப் பறந்துகொண்டிருக்கின்ற வெள்ளிக்கிழமை. மதியம் 1.25 மணித்துளியில் ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டடம் காட்டப்படுகிறது. மக்கள் அபாயமறியாது நெரிசலாக தத்தமது பணிகளைத் தாங்கி நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கட்டடத்தில் மணியோசை எழும்ப, திரைப்படத்தின் நகர்வு மெதுத்தன்மையை (Slow Motion) அடைகிறது. காலம் உறையத் துவங்குவதான மெதுத்தன்மை. மனித இரைச்சல் கரைந்து கட்டடத்தின் அடிப்பகுதிக்குள் வைக்கப்பட்டிருக்கும் குண்டின் ஒலி மேலெழுகிறது. ஏறக்குறைய இதயத்தின் ஓசை நிதானத்திலிருந்து மெதுவாக பதற்றமடைந்து செல்வதைப் பிரதிபடுத்தும் சத்தம் அது. ஓசை வேகப்பட, கட்டடத்தின் அடிமட்டம் வெடித்துச் சிதறுகிறது. செவியின் தாங்கும்ஓசை அறுபட்டு அருகிருப்பவர்கள் மயக்கத்திலாழும்போது எழும்பும் பீதியடைந்த மௌனஇரைச்சல் திரைசூழ்கிறது. உயிரோடிருப்பவர்கள் நடந்ததை இன்னும் உணராவண்ணம் திக்பிரமை பிடித்து சுற்றிப்பார்த்துக் கொள்கிறார்கள். ரத்தம் மழைநீரெனச் சூழ, உடல்கள் சிதறி அசைவற்றுக் கிடக்கின்றன. குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நாம் நின்றிருந்து தப்பித்துவிட்டால் நமது நினைவு சிதறின பிரமையில் எவ்விதம் அச்சூழலைக் காண்போமோ, அச்சூழல் அப்படியே திரைப்பரப்பில் ஞாபகப்படுத்தப்படுகிறது. அக்காட்சியின் தீவிரப் படமாக்கம் திரைப்படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை அநேகமாக அழித்துவிட்டு குண்டுவெடிப்பு பிறப்பித்துவிடும் கோரத்தை நாம் கண்ணெதிரே கண்டுணர்வதுபோன்ற பிரதிபலிப்பைத் தந்துவிடுகிறது. ஐரோப்பிய சினிமாவில் மாத்திரமே யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் இத்தகைய தொழில் நுட்பக் கூறுகளை நாம் காணமுடியும். இப்படத்திலும் இத்தகைய கூறுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய சினிமாவிற்குப் புதியதுதான்.

2.45 மணித்துளிக்கு வோர்லி பாஸ்போர்ட் அலுவலகத்தினருகே நிறுத்தத்தில் வந்து நிற்கும் பேருந்து மீண்டும் புறப்படும்போது குண்டுவெடித்துத் தகர்க்கப்படுகிறது. தொடர்ந்து நிஜமாக படம்பிடிக்கப்பட்ட வீடியோக் காட்சிகள் தொலைக்காட்சி செய்திவடிவில் காட்டப்படுகின்றன. குறுகிய நிமிட இடைவெளிகளில் செஞ்சுரி பஜாரில் உள்ள பேருந்துநிறுத்துமிடம், ஏர் இந்தியா கட்டடம், தாதரிலுள்ள சிவசேனா பவனிற்கு அருகிலிருக்கும் லக்கி பெட்ரோல் பம்ப், ஜூகு சென்டர் ஹோட்டல் மூன்றாம் மாடியிலுள்ள அறை, சவேரி பஜாரின் வீதி, மக்கிமேர் காலனி, பிளாசா திரையரங்கில் வாகனம் நிறுத்துமிடம், பந்த்ராவிலுள்ள ஸீ ராக் ஹோட்டலின் 18வது மாடி, சாந்தா குருஸ் விமான தளத்திற்கருகிலுள்ள மற்றொரு சென்டர் ஹோட்டல் என துல்லியமான திட்டத்தின் அடிப்படையில் தகர்ப்புக்கள் நடத்தப்படுகின்றன. பம்பாய் நகரமே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப் போகும்படி புகை குடித்த கருப்பு நாளான அவ்வெள்ளிக்கிழமை வலிகளடர்ந்த பொழுதாக உருவடைகிறது.

5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட படத்தின் முதல் பகுதி முதல் கைதுப் படலம். மகிம் எனும் பகுதியில், அல் ஹ§சைனி கட்டட விலாசத்திலுள்ள ரூபினா சுலைமான் மேமன் வீட்டிற்கு காவல்துறையினரோடு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியான ராகேஷ் மரியா செல்கிறார். அங்கு யாருமிருப்பதில்லை. பக்கத்து வீட்டாரிடம் விசாரிக்கையில் டைகர் பாயின் (டைகர் மேமன்) மூத்த சகோதரன்தான் சுலைமான் எனவும் அவரது துணைவியார்தான் ரூபினா என்பதும் தெரியவருகிறது. ஆனால் குண்டுவெடிப்பிற்கு முதல்நாள் டைகர் பாய் தனது உறவினருடன் துபாய்க்குத் தப்பிச்சென்றுவிட, இந்தக் குண்டுவெடிப்பில் டைகர் பாய் தொடர்புபட்டிருப்பது தெளிவுபடுகிறது. மார்ச் 14ஆம் தேதி டைகர் பாயின் அந்தரங்கக் காரியதரிசியான அஸ்கர் முகாதெம் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகிறான். இந்தக் காட்சி மிகவும் நுட்பமான வகையில் எடுக்கப்பட்டிருப்பது இக்காட்சியின் தீவிரத்தை தேர்ச்சிப்படுத்துகிறது. ஒளிப்பதிவு அறையில் மேல் மூலையிலிருந்து கவனிப்பதாக அடர் சிவப்பு நிறத்தின் ஒளிப்பின்னணியில் நிகழும் இக்காட்சியில், ஒரு விசாரணைக் கைதியின் பதட்டத்தை மிகத் தேர்ச்சியாக அஸ்கர் கதாபாத்திரம் ஏற்ற நடிகர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக காவல் அதிகாரி குடிக்குமாறு கூறி தேநீர் தரும்போது விபரீதமான அபாயம் தன்னைச் சூழ்ந்திருப்பதை உணர்ந்து அஸ்கர் அந்தத் தேநீரைக் குடிக்கத் தயங்குவது நுட்பமான வார்ப்பில் படமாக்கப்பட்டிருக்கிறது. அப்பாவித்தனத்துடன் தோன்றும் அந்தப் பாத்திரம் இந்தச் சதியின் விபரீதத்தை முழுக்க உணராமலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை அவனது வாக்குமுலம் சொல்கிறது. தொடர்ச்சியாக குண்டுவெடிப்பிற்காக ஏவப்படும் இளைஞர்கள் தமக்கு கூறப்பட்ட இடங்களில் குண்டுகளை பொருத்துவது பற்றிய விவரணை மிகவும் துரிதமான காட்சிகளால் சித்திரிக்கப்படுகின்றன. இக்காட்சியில் கோர்க்கப்பட்டிருக்கும் இசை, அந்த அபாயச் செயலின் பதற்றவேகத்தை பிரதிபலிக்கும்விதமாக கையாளப்பட்டிருக்கிறது. உண்மையில் யோசித்தால் படத்தின் ஒவ்வொரு காட்சியின், கதாபாத்திரங்களின் தன்னியல்பான வெளிப்பாடுகள் மட்டுமின்றி, இதர வேலைப்பாடுகளான ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, சத்தப் பின்னணி, நகரச் சூழல் என யாவுமே இணையான தரமேன்மையுடன் அணுகப்பட்டிருப்பது இந்திய சினிமாவில் வியப்பிற்குரிய ஒன்றாகவே தோன்றுகிறது. ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ போன்ற திரைப்படங்களை எளிதாக இயக்கிவிட முடியாது. இப்படத்தின் ஒவ்வொரு கணநேரக் காட்சிகளையும் கூர்ந்து கவனிக்கும்போது மிகத் தேர்ச்சிபெற்ற பல்துறைக்கலைஞர்கள் பங்கேற்புச் செய்திருப்பது எளிதாகத் தெரியவரும்.

இரண்டாம் பகுதி மார்ச் ஏப்ரல் 1993இல் நடைபெறும் கைது மற்றும் கைதிவிசாரணைப் படலம். காவல்துறைக்குச் செய்தி தருபவன் (Informer) மூலம் பர்வேஸ், சோயிப் கன்சாரி, முஸ்தாக், இம்தியாஸ் கவேத் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. பல அப்பாவி இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். காவல்துறையின் அணுகல்கள் ‘வன்முறை’ என்பதையும் தாண்டி அன்றாட நிகழ்வுகளின் இயல்புத்தொனியுடன் காட்சிக்குள் வந்துசெல்கின்றன. இம்தியாஸ் கவேத்தை விரட்டிப் பிடிக்கும் காட்சியில், விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் சுவாரசியமாக அமைக்கப்பட்ட காட்சி இது. கவேத்தை பிடிக்கும் வினாடிகளில் திரும்பத் திரும்ப அவன், தப்பித்துவிடுகிறான். காட்சியின் வேகமும் பின்புறத்தில் ஒலிக்கும் இசையின் தாளகதியும் இந்த நீண்ட காட்சியை உயிரோட்டப்படுத்துகிறது. கடினமுயற்சிக்குப் பின் அவன் அகப்பட்டதும், விசாரணையறையில் வதைபடும் காட்சியும், சுத்தியலால் கைவிரல்கள் நசுக்கப்படும் அவன், குற்றக் கோப்பில் கையெழுத்துப் போட வலியுறுத்தப்படும் நிலையில், நசுங்கிய கையால் பேனாவைப் பிடிக்கவியலாமல் அவன் கதறும் காட்சியும், அவன் குற்றவாளி எனும் நிலையிலும், நம்மைப் பதறச் செய்துவிடுகிறது. ஏனெனில், இந்தத் திரைப்படம் சாமான்ய மனிதர்கள் சக சூழ்ச்சிகளுக்குப் பலியாகி தமது வாழ்வை அழித்துக் கொள்வதைப் பற்றியதாக இருக்கிறது. அப்பாவி மக்கள் இறந்துவிடுவார்கள் என்கிற பதட்டம் ஒருசிறிதுமின்றிதான் சதி வேலைகளை ஏதோ ஆக்கபூர்வமான வேலை செய்வதுபோல ஈடுபாட்டுடன் இவர்கள் செய்கிறார்கள். அதனுடைய பிரதிபலனை பின்பு வருத்தத்துடன் அனுபவிக்கிறார்கள். எனினும், அவர்களுக்குள்ளும் தலைமறைவாக இருக்கும் எளிய உள்ளங்களைப் பற்றிய நுண்ணிய சித்திரிப்புக்களையும் இந்தப்படம் வழங்கத் தவறவில்லை.

மூன்றாவது பகுதி ஓடும் படலம். இப்பகுதி, டெல்லியிலிருக்கும் மசூதியன்றிலிருந்து துவங்குகிறது. சதியின் வெற்றிக்குப் பிறகு, பாத்ஷா கானும் பஷீர் கானும் டைகர் பாயிடமிருக்கும் தமது பாஸ்போர்ட்டுகளைப் பெற்று இந்தியாவிலிருந்து தப்பிவிடும் நோக்கத்தில் டெல்லியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். டைகர் பாயைத் தொடர்பு கொள்ளும்போது ‘ஏன் டெல்லியில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? அகப்படவா?’ என்று வினா எழுப்பி, உடனே எங்காவது சென்று தலைமறைவாக இருக்கும்படி கூற, உடனே இருவரும் பாத்ஷா கானின் சொந்த ஊரான ராம்பூருக்கு (உத்தரப்பிரதேசம்) செல்கிறார்கள். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்லும்படியும், அங்கிருந்து துபாய்க்குச் செல்ல தான் ஏற்பாடு செய்வதாகவும் டைகர் பாய் மீண்டும் தொலைபேசித் தொடர்பில் உறுதியளிக்க, இருவரும் நம்பிக்கையுடன் செல்கிறார்கள். அங்கு சக சதியாளர்களோடு உரையாடும்போது அனைவரது பாஸ்போர்ட்டும் எரிக்கப்பட்டுவிட்டதை அறிந்து பாத்ஷா கொதிப்படைகிறான். தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்கிறான். எனினும், டைகர் பாய் அனைவரையும் காக்கும்பொருட்டுத்தான் ஜெய்ப்பூருக்கு வரச் சொல்லியிருப்பதாகவும் புதிய பாஸ்போர்ட்டுகள் பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிலவும் செய்தியன்றால் சமாதானமடைகிறான். எனினும் உள்மனதுள் தான் கைவிடப்பட்டதாக பாத்ஷா எண்ணுகிறான். மீண்டும் ராம்பூருக்கு வர, மறுநாள் காலையில் பஷீர், பாத்ஷாவிடம் சொல்லாமல் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றுவிட, தனிமையின் வெம்மையோடும் பயத்தோடும் பாத்ஷா பழைய தில்லி, கல்கத்தா என அலைக்கழிக்கப்படுகிறான். டைகர் பாயிடம் தொடர்பு கொள்வதும் கடினமாகி கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில், மீண்டும் ராம்பூருக்குத் திரும்புகிறான்.

கரிய இருளாக இருப்பின் சுமை அடரத்துவங்கும் ஒரு நாளில் (மே 10, 1993) காவல்துறை அவனது இல்லம் வந்து கைதுசெய்துகிறது. பின்பு விசாரணையறைக்கு அழைத்துவரப்படுகிறான் பாத்ஷா. ராகேஷிற்கும் அவனுக்கும் இடையே அரசியல்ரீதியான விவாதம் நடைபெறுகிறது. ‘எத்தனைபேர் உயிரை இழந்தார்கள் என்பதையும் இந்த நகரம் எத்தனை துன்பப்பட்டது என்பதையும் அறிவாயா? உனக்கென்ன, நீ தப்பித்துச் செல்ல இந்த உலகத்தில் எத்தனையோ இடங்கள் இருக்கிறது’ எனும் ராகேஷிடம், ‘தான் குற்றமேதும் செய்யவில்லை’ என்று பதில்கூறுகிறான் பாத்ஷா. பின்பு மெதுவாக தனது வாதத்தை முன்வைக்கத் தொடங்குகிறான். ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் எமது மக்கள் மீதான வன்முறையும் இத்தகைய செயலைச் செய்ய எங்களைத் தூண்டியது’ என்று கூறுகிறான். வசனங்கள் படத்தில் நேரடித் தன்மையுடன் பிரயோகப்பட்டிருப்பதும் ஆவணப்படத்தில் மட்டுமே காணமுடிகிற அம்சங்களை தயக்கமின்றி புகுத்தியிருப்பதும் வியப்பாகவே இருக்கிறது. இந்த மூன்றாவது பகுதியே கதைகூறலின் அடிப்படையிலும் காட்சிகளை கட்டமைத்ததன் அடிப்படையிலும் படத்தின் மிகச் சிறந்த பகுதியாக பரிணமிக்கிறது. பாத்ஷாவாக நடித்த ஆதித்யா ஸ்ரீவத்சவா நடிப்பின் உச்சம் தொடுகிறார்.

நான்காம் பகுதி, யாகூப் கான் மற்றும் ஆர்.டி.எக்ஸ் படலம். ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தைக் கடத்துபவனும் சதிவேலையில் ஈடுபட்டவனுமான யாகூப்கானினது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும்பொருட்டு அவனது சகோதரரும் எம்.கே. பில்டர்ஸ் அதிபருமான மஜித்கானும் அவரது துணைவி நபிசாவும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். இதனை அறியும் யாகூப் தலைமறைவான இடத்திலிருந்து காவல்துறைக்கு தொலைபேசி வழி தனக்கும் குண்டுவெடிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனவும், மஜிதையும் நபிசாவையும் விட்டுவிடும்படியும் போதையேறின நிலையில் அழுதுபுலம்புகிறான். தொடர்ந்து டைகர் பாயிடம் தொலைபேசி வழி பேசுகிறான். எதிர்ப்புறமிருந்து ‘இந்தப் புனிதப்போரில் பலியாவது தவிர்க்கவியலாதது’ எனப் பதில்வருகிறது. தாவுத் பாயிடம் (தாவுத் இப்ராகிம்) பேசிப்பாருங்கள் எனக் கோரிக்கை விடுக்கிறான் யாகூப். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றறிந்த நிலையில், காவல்துறையினரிடம், ‘எனது சகோதரரை விடுவித்தால் ஒரு தகவலைக் கூறுவேன்’ என்று கோரிக்கை வைக்கிறான். அதிகாரி விடுவிக்க முயலுவதாகக் கூற, அம்ருத் நகரிலுள்ள காய்ந்த மீன்கள் நிரப்பப்பட்ட உணவுக்கிடங்கில் டைகர் பாய் பதுக்கிவைத்திருக்கும் ஆர்.டி. எக்ஸ் வெடிமருந்து இருப்பதாகத் தகவல் தர, காவல்துறை சென்று மருந்தை பறிமுதல் செய்கிறது. தொடர்ந்து, அருகிலிருக்கும் நக்லா பந்தர் சிற்றோடையிலும் (மார்ச் 30, 1993) பல ஆர்.டி.எக்ஸ் பதுக்கப்பட்ட சாக்குமூட்டைகள் கண்டெடுக்கப்படுகின்றன.

யாகூப் மீண்டும் தொலைபேசி வழி காவல்துறையினருக்கு பிலு கான் அடிக்கடி வரும் உணவுவிடுதி பற்றின தகவலைத் தருகிறான். அவனது பழிவாங்கல் காட்டிக்கொடுப்பதாக உருமாறுகிறது. விசாரணையின்பேரில் அந்த உணவுவிடுதியின் அதிபரான ராஜ்குமார் குரானாவை கைதுசெய்கிறார்கள். அவருக்கு ஏதும் தெரியாது என்கிற நிலையிலும் சிறையிலடைக்கப்படுகிறார். அவரது கண்முன்னே பெண்கைதிகளின் மீதான மானபங்கம் நிகழ்த்தப்பட, மனம் ரணமுற்று அவதிப்படுகிறார். குறுகிய நாட்களில் விடுவிக்கப்பட்ட பின்பும் தனது குடும்பத்திற்கு அவமானம் நேர்ந்து விடுமோ என்கிற அச்சத்தினாலும் துக்கத்தாலும் மனைவி, பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிறார். படத்தின் ஒரு கிளைச் சிறுகதை போல வரும் இப்பகுதியில், ராஜ்குமார் குரானாவாக வரும் நடிகர் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. சில நிமிட நேரங்களிலேயே நடந்துமுடிந்துவிடும் அவரது கதாபாத்திரத்தின் திரைவாழ்வு நமது எண்ணத்துள் நீங்கவியலாமல் ஒட்டிக்கொள்கிறது. எல்லா சூழ்ச்சிகளுக்கும் பின்பாக அப்பாவிகளும் பலியாவதற்கு உதாரணமாக இந்தக் கதாபாத்திரம் வந்துசெல்கிறது.

ஐந்தாம் பகுதி சதியாலோசனைப் படலம். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை நன்குணர்ந்த பாத்ஷாகான் அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளிக்கும் பகுதி இது. இதன் தொடர்ச்சியில், தாவுத் பான்சே என்கிற கடத்தல் வியாபாரி கைதுசெய்யப்படுகிறான். டைகர் பாயிடம் ஒருவருட காலமாகப் பணிபுரிபவன். தாவுத் பாயுடனான வியாபார நம்பகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் பான்சேயை துபாயிலுள்ள தாவுத் இப்ராகிம் இருப்பிடத்திற்கு டைகர் அழைத்துச் செல்கிறான். நிஜமாகவே உருக்கொண்டு வந்தாற்போல அமைந்திருக்கிறது தாவுத் இப்ராகிம் வந்துசெல்லும் காட்சி. தாவுத்தாக வரும் நடிகர் தோற்றத்தில் அச்சுப்பிசகாமல் தாவுத்தை மறுபிரதி செய்யும் வண்ணமாக இருக்கிறார். படத்தின் நீளத்தால் ஏற்படும் பார்வையாளரது அயர்வை தாவுத் இப்ராகிமின் வருகை அகற்றிவிடுகிறது.

பின்பு, சதியில் ஈடுபடுமுன் அனைவரும் பாகிஸ்தானிலுள்ள பெயரறியா இடமொன்றிற்குப் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள். தீவிரமான ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியாளன் ஆர். டி. எக்ஸ் வெடிகுண்டை அறிமுகப்படுத்துகிறான். அவை இரண்டாம் உலகப்போருக்குப்பின்பு தயாரிக்கப்பட்ட குண்டுகளெனக் கூறி, தூரமாக எறிந்து வெடித்துக் காட்டுகிறான். காண்பவர்கள் கலங்கிப்போகும் அளவு அதன் சத்தமும் சிதிலமும் புழுதியெழுப்புகிறது. உணர்வுபூர்வமான மத உரைகளின்மூலமும் பழிவாங்கும் உன்மத்தம் எழுப்பப்படுகிறது. இத்தகைய இனத்துவேஷப் பழிதீர்த்தலுக்கான பின்னணி படத்தில் நிஜமான ஆவணக் காட்சியாக இப்பொழுது காண்பிக்கப்படுகிறது பாபர் மசூதி இடிக்கப்படும் சம்பவத்தின் நேரடிக் காட்சி. தொடர்ந்து பம்பாயில் ஏற்பட்ட இனக் கலவரம். இரு அணியாளர்களும் கொலைசெய்வதும் பாலியல்பலாத்காரம் மேற்கொள்வதும் எனத் தொடரும் வன்செயல்கள். 600 பேர் கொல்லப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களோடும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழந்தும் வேதனையி லாழ்த்தப்படுகின்றனர். உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலையில், சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள் துயரமும் அச்சமும் கசிய அகதிகளாகின்றனர்.

ஒரு சிறுமி, ‘தனது தந்தையும் தாயும் தம்பியும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தனது தாத்தாவும் பாட்டியும் காணாமல் போய்விட்டார்கள்’ எனவும் அனைத்தையும் இழந்துவிட்ட கையறுநிலையின் தீவிர மறியாமல் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பொன்றில் சொல்கிறாள். ஒரு முஸ்லிம் பெண்மணி, ‘நீங்களனைவரும் பம்பாயைவிட்டு வெளியேறிவிடுங்கள், உங்களுக்கு இங்கிருக்க இடமில்லை’ என எதிரணியினர் கூறுவதாக கவலையுறுகிறார். பொருளாதார நிலைகள் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன. டைகர் பாயின் அலுவலகமும் இரவோடு இரவாக எதிரணியினரால் கொளுத்தப்படுகிறது. மறுநாள் காலையில் அலுவலகம் வந்து கொதித்துப்போகும் டைகர் பாய் பழிவாங்கும் நோக்கத்தில் சூளுரைத்துவிட்டு துபாய்க்குப் பறந்துசெல்ல, அங்கு சதியாலோசனை நடைபெறுகிறது. எங்கெங்கு வெடிப்பு நிகழ்த்துவதென இடங்கள் குறிக்கப்படுகின்றன. அடுத்த காட்சியிலேயே படத்தின் முதல்காட்சியில் நாம் கண்ட தொடர் வெடிப்புக்கள் மீண்டும் காட்டப்படுகின்றன. மனித உடல்கள் சிதறி ரத்தம் பீறிட்டு வழிய, வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட பலியுற்ற அப்பாவி மனித உடல்களை காண்பித்தபடியே திரைப்பரப்பில் இருள் நிறைகிறது.

இந்தத் திரைப்படம் ஒரு சாராரின் வன்செயல்களை மட்டுமே சித்திரித்திருந்தால் நிலவும் சூழலில் ஆபத்தைப் பிரயோகிக்கும் படமாகக் கருதப்பட்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு அரசியல் வன்முறைக்கும் மற்றொரு அரசியல் வன்முறை வேராக பின்னியங்குகிறது என்கிற அறிந்துணர்வை படம் நமது பொதுப்பார்வைக்கு ஏற்படுத்தித் தருகிறது. இருவேறு தன்னுணர்ச்சி மற்றும் துவேஷக் கணக்குகளால் நஷ்டப்படுவது சாமான்ய மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்களே என்பது படத்தின் மூலச் செய்தியாகிறது. இந்த வன்முறைகளை நாம் செய்வதறியாது பார்த்துக் கடந்ததுபோல திரைப்படமும் பார்த்தபடி கடந்துசெல்கிறது. இத்தகைய சாய்வற்ற அரசியல் சமன்பார்வைகளை இந்தியாவின் சிறந்த ஆவணப்பட இயக்குநரான ஆனந்த பட்வர்த்தனது ஆவணப்படங்களில் மட்டும்தான் நாம் காணவியலும். அவற்றிற்கிணையான பார்வைகளை (புனைவாக்கம் என்னும் வரையறையையும் மீறி) இந்தப்படமும் வழங்குகிறது என்பது சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஓர் அம்சம்.

2006 மத்தியிலேயே வெளிவந்திருக்க வேண்டிய இந்தப் படம் சமகால வழக்கிலிருக்கும் மத/அரசியல் பிரச்சினையை சித்திரிப்பதால் உடனடியாக வெளியாவது ஒத்திவைக்கப்பட்டது. இப்போது வழக்கு முடிவடைந்திருக்கும் நிலையில் படம் வெளியாகியிருக்கிறது. படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப், இந்திய சினிமாவின் வலுவான குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்திருக்கும் இளைஞர். ராம்கோபால் வர்மாவினது ‘சத்யா’ மற்றும் படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர் அனுராக். மணிரத்னத்தின் ‘யுவா’ படத்திற்கு வசனமெழுதியவர். ‘குரு’ படத்திலும் தீபா மேத்தாவின் ‘வாட்டர்’ படத்திலும் அவரது பங்களிப்பு உண்டு. அவரது உரைநடை வளம் ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ படத்திற்கு மிகவும் உந்துதலான வீர்யத்தை அளித்திருக்கிறது. உள்ளீடான கதையம்சமும் சாய்வற்ற அரசியல் பார்வையும் திரைமொழி குறித்த அறிவாற்றலும் ஒருசேர வாய்ப்பது அரிது. அனுராக்கிற்கு அந்த ஒன்றிணைவு வாய்த்திருக்கிறது. நல்ல திரைப்படங்களை தொடர்ந்து அளிப்பார் என நம்பிக்கை கொள்வோம்.

‘ஒளிப்பதிவு செய்திருப்பதை உணர்த்தாத படங்களே சிறந்த ஒளிப்பதிவை கொண்டிருப்பவை’ என்கிற பார்வை ஒன்றுண்டு. ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ படத்தில் ஒளிப்பதிவின் தேவையற்ற குறுக்கீட்டு முன்னிலையை நாம் எங்குமே காணமுடியாது. கதையம்சத்தின், கதாபாத்திர உணர்வோட்டத்தின் நிழலெனவே ஒளிப்பதிவு தொடர்கிறது. ராம்கோபால் வர்மாவின் படங்களில் இடம்பெறும் சதவீதங்களையும் தாண்டி, இதுவரை இந்தித் திரைப்படங்களில் நேர் யதார்த்தத்துடன் காணாமலிருந்த மும்பை மைய புறநகர வீதிகளை காட்சிக்குள் கொண்டுவந்திருக்கிறது இப்படத்தின் ஒளிப்பதிவியக்கம். ஒளிப்பதிவாளர் நடராஜ சுப்பிரமணியன். இவர் தமிழரும்கூட. அரிதாகவே கைவரப்பெறும் ஒளிப்பதிவின் நேரிய தன்மையை திரைப்பரப்பில் உலவவிட்ட அவரது உயர்ந்தபட்ச திரைப்பங்கேற்பிற்காக (தமிழர் என்கிற நிலையிலும்) தமிழ்ச்சமூகம் பெருமைப்பட வேண்டும். இன்னும் பல காட்சிகள் கண்களுக்குள் மறக்கவொண்ணாமல் கிளையாடுகின்றன. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் காட்டப்படும்போது பதற்றமும் வேதனையும் அழிக்கக்கூடிய நீலநிற ஒளிக்கலப்பு குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்களை கைதுசெய்யும் தேடல்படலத்தில் குழப்பமும் சூன்யமும் காட்டும் மெல்லிய மஞ்சள் நிறம் கைதிகள் விசாரிக்கப்படும் காட்சியில் வன்முகம் காட்டும் சிகப்பு நிறம் என காட்சிகளின் மனவோட்டத்திற்கேற்ப பல்வேறு வண்ணங்களை பிரயோகித்திருக்கிறார்.

டைகர் பாயாக வரும் பவன் மல்ஹோத்ராவையும், காவல்துறையதிகாரியாக வரும் கே. கே மேனனையும் உள்ளிட்டு படத்தில் பங்கேற்ற அனைத்து நடிகர்களுமே தமது படைப்பாற்றலை பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் மற்றொரு பலமான படத்தொகுப்பைச் செய்திருப்பவர் ஆர்த்தி பஜாஜ். காட்சிகளின் தொகுப்பை சிற்ப வேலைப்பாட்டு கவனத்துடன் அணுகியிருக்கிறார். படத்தின் உணர்ச்சிகளுள் நம்மை மூழ்கடித்துவிடும்படியான இசையை இந்தியன் ஓசியன் தந்திருக்கிறது. இனிவரும் எதிர்கால அரசியல் திரைப்படங்களுக்குச் சிறந்த முன்னோடியாக ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ என்றுமே தன்னிருப்பு பெற்றிருக்கும் என்பதுவும் இறுதியாகச் சொல்லவேண்டியது.

Posted in 9-11, 9/11, Arms, Arts, Awards, Babri Masjid, BJP, Black Friday, Blasts, Bollywood, Bombay, Bombs, Cinema, Classic, dead, Dec6, DocuFiction, Documentary, Drama, Extremism, Extremists, Film, guns, Hindi, Hindu, Hindutva, Incident, Islam, mani Rathnam, Manirathnam, Masala, Masjid, massacre, Mosque, Movie, Mumbai, Murder, Muslim, National, Panaroma, Politics, RDX, revenge, Reviews, RSS, Shiv Sena, Terrorism, terrorist, Violence, Vishvamithiran, Vishvmithran, Vishwamithiran, Vishwamithran, Visvamithiran, Visvamithran, Viswamithiran, Viswamithran, War, WTC | Leave a Comment »

Ma Aranganathan – A Short film by Ravi Subramanian: Interview

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

லைட்ஸ்-ஆன்: மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்…

எம்.கே. மனோஜ்

அனுதினமும் அல்லல்களால் அலைக்கழிக்கப்பட்டு ஆறுதல் தேடி அலையும் மனிதர்களுக்கு தாய்மடியாய்த் திகழ்வது கலைகளே. அக்கலைகள் பல வடிவங்களில் வாழ்ந்துகொண்டிப்பதற்குக் காரணம் கலைஞர்களே. அத்தகைய கலைஞர்களில், பெரும்பாலான மக்களால் அதிகம் அறியப்படாதவர்களும் உண்டு. வெகுஜனங்களின் பார்வையையும், விளம்பர வெளிச்சத்தையும் அதிகம் பொருட்படுத்தாத மனிதர்களைப் பொருட்படுத்தும் நோக்கில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.

சதா நேரமும் பொருள் தேடவும், தன்னையும் தன் சுற்றத்தையும் மட்டுமே பிரதானப்படுத்திக்கொள்ள முயலும் மனிதர்கள் மத்தியில், அதிக கவனத்துக்குள்ளாகாத எழுத்தாளர் மா.அரங்கநாதன்!

இந்த ஆச்சரியமான மனிதரை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தன் கைப்பொருளை வைத்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்ரமணியன். நாற்பது நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த ஆவணப்படத்தின் பெயர் “மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்’.

மா. அரங்கநாதன் “வீடுபேறு’, “ஞானக்கூத்து’, “காடன் மலை’ போன்ற சிறுகதை நூல்களையும், “பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலையும், “பஃறுளியாற்று மாந்தர்’ என்ற புதினத்தையும் எழுதியுள்ளார். “முன்றில்‘ இலக்கிய இதழை நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. தற்போது ஒரு மாத இதழில் வெளிவந்த இவரின் “தேட்டை’ என்ற சிறுகதையும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

திரைப்படங்களில் நல்ல படைப்புகள் குறைந்து வரும் சூழலில், ரசிகர்களுக்கு அவ்வப்போது ஆறுதல் அளிப்பவை ஆவணப்படங்களும், குறும்படங்களும்தான் என்பது இப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கிய உலகுக்கு அதிக எண்ணிக்கையில் பெண் கவிஞர்களும், எழுத்தாளர்களும் வர வேண்டியதன் அவசியம், பெண்கள் ஆபாசமாக எழுதுவதைப் பற்றிய தனது கருத்து, ஓர் எழுத்தாளனுக்கு அரசியல் தேவையா? தான் சார்ந்துள்ள இயக்கத்துக்கு ஆதரவாக கண்மூடித்தனமாக எழுதுவது, பக்தி இலக்கியப் பாடல்கள் மீதான அவரது வித்தியாசமான பார்வை.. எனப் பல விஷயங்களைப் பற்றி மா.அரங்கநாதன் இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரவிசுப்ரமணியன் தமிழின் குறிப்பிடத்தக்க ஆவணப்பட இயக்குநர்களில் ஒருவர். கவிதைகளும், கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வரும் இவர், கவிதைகளுக்காக தமிழக அரசு விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர். தற்போது சாகித்ய அகாதெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருக்கிறார். இவருடைய கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இவருடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். கர்நாடக இசையிலும் நல்ல புலமை பெற்றிருக்கும் ரவிசுப்ரமணியத்தைச் சந்தித்தபோது…

எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்க ஏன் மா.அரங்கநாதன்?

அதற்குக் காரணம் அவருடைய படைப்புகளே. அவர் எழுதியது சொற்பம்தான் என்றாலும் அவை ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம். கவிஞர் அல்லாமல் கவிதையியல் தொடர்பாக புதிய சிந்தனைகளை வாசகர்களிடம் புகுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணிபுரிந்த அரங்கநாதன், தன்னுடைய வருமானத்தில் 1986 முதல் 1996 வரை “முன்றில்’ என்ற இலக்கிய இதழை நடத்தி வந்தார். இதுவரை அவருக்கு சொந்த வீடு கூட கிடையாது. அவர் போன்றவர்களை மரியாதை செய்வதற்கான ஒரு முயற்சிதான் என்னுடைய படம். அரங்கநாதனைப் பற்றிய ஆவணப்படம் என்பதால் மற்ற எழுத்தாளர்களைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று பொருள் அல்ல.

அவருடைய படைப்புகளின் தனித்தன்மையாகத் தாங்கள் கருதுவது?

தமிழ் வாழ்வின் அடையாளங்கள்; வாழ்க்கை பற்றிய விசாரணை; ஒரு மாயத்தன்மையோடு கூடிய மெல்லிய தத்துவச் சரடு; படைப்பினை வளர்த்தெடுக்கும் விமர்சனப் போக்கு; சைவ இலக்கிய பரிச்சயம்; மரபின் மீதான காதல்; நவீனத்துவத்தை முணுமுணுக்காமல் ஆதரிக்கும் விதம் போன்றவற்றைக் கூறலாம்.

இதுபோன்ற படங்களால் இலக்கிய ஆர்வத்தையோ மா.அரங்கநாதன் போன்றவர்களையோ மக்களிடையே கொண்டு செல்ல முடியுமா?

நிச்சயமாக முடியும். பணத்தை எதிர்பார்த்தால்தான் தவறு. மக்களின் ரசனைத் திறனில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படும் முயற்சிகள் தோற்பதில்லை என்பதே என் கருத்து. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சதானந்தம், ஒளிப்பதிவாளர் வடக்கரா மோகன்தாஸ், படத்தொகுப்பாளர் லெனின் ஆகியோர் ஒரு சிறு தொகை கூட வாங்காமல் பணியாற்றியிருக்கிறார்கள் எனும்போது எங்கள் முயற்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் ஓர் எழுத்தாளரின் மொத்த படைப்புகளைப் பற்றிய விவரங்களை ஓர் ஆவணப்படத்தில் எளிதாகக் கூற வாய்ப்பு இருக்கிறது. இதனால் இதுபோன்ற படங்களைப் பார்ப்பவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் படைப்புகளைப் படிக்கும் எண்ணம் ஏற்படும்.

மேலும் திரைப்பட இயக்குநரை விட ஆவணப்பட இயக்குநர்களின் வேலை சிரமமானது என்பது என் கருத்து. ஆவணப்பட இயக்குநர் ஆதாரங்களைத் தேடித் தொகுக்கும் துப்பறிவாளராகவும் இருக்க வேண்டும். தேடிய ஆதாரங்களை அப்படியே காட்டவும் முடியாது. எழுத்தாளரைப் பேச வைத்துக்கொண்டே இருக்கவும் முடியாது. அவருடைய எழுத்துலகம் காட்சிப்படுத்தப்படும் விதம் முக்கியம். அந்த வகையில் நான் சரியாகவே செய்திருக்கிறேன் என்ற திருப்தி உள்ளது.

– வெகுஜன வாசகர்கள் பெரும்பாலும் அறியாத மா. அரங்கநாதன் போன்றவர்களை, ஆவணப்படத்தின் மூலம் கெüரவிப்பதும் ஒரு சேவைதான். ரவிசுப்ரமணியத்தின் இந்தச் சேவைக்கு இலக்கிய உலகம் கடமைப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.

Posted in Documentary, Ma Aranganadan, Ma Aranganadhan, Ma Aranganathan, Ma Arankanathan, Maa Aranganathan, Movie, Ravi Subramanian, Short Film | Leave a Comment »

Jegamathy Kalaikkoodam’s Regai – Docu-drama review by Ravikkumar

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

ஆவணம்: அது இருண்ட காலம்!

ரவிக்குமார்

இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துவங்கி அறுபது ஆண்டுகள் ஆகின்றது. மாபெரும் ஜனநாயகக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு ஐம்பத்தேழு ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் நாட்டில் எல்லோரின் சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் இருக்கின்றதா? இரட்டைக் குவளை முறை ஒழிந்துவிட்டதா? உத்தரப்பிரதேசத்திலிருந்து அசாமிற்குச் செல்லும் மக்களைக் கொன்று குவிக்கும் உல்ஃபா தீவிரவாதம் மறைந்துவிட்டதா? ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் சாதியின் பெயராலும், இனத்தின் பெயராலும் அவர்களால் விதைக்கப்பட்ட வேற்றுமைகள் இன்றுவரையிலும் அப்படியேதான் இருக்கின்றன” என்னும் ஆதங்கத்தை சற்று உரக்கவே சொல்கிறது ஜெகமதி கலைக்கூடம் வெளியிட்டிருக்கும் “ரேகை’ என்னும் ஆவணப்படம்.

“”பிரிட்டிஷ் ஆட்சி செய்த நாடுகளில் அதற்கு எதிராகச் செயல்பட்ட இனக்குழுக்களையும், சமூகங்களையும் அடக்குவதற்கு பலவிதமான வழிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் கடைப்பிடித்தது. அதில் முக்கியமான ஒன்றுதான் “குற்றப் பழங்குடிகள் சட்டம்.’ இந்தச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட குழுக்களில் இருக்கும் ஆண்கள் அத்தனை பேரும், அவர்கள் பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் உள்ள பதிவேட்டில் தங்களின் கைவிரல் ரேகையைப் பதித்துவிட்டு, இரவு முழுவதும் தங்கியிருக்கவேண்டும். இந்த அடக்குமுறைச் சட்டத்தை உலகம் முழுவதும் தான் ஆட்சி செய்த நாடுகளில் பிரயோகித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் முடிவடைந்ததும், ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக்கள் எவையெவை என நாடு முழுவதும் சர்வே எடுக்கப்பட்டது. விவசாய நாடான இந்தியாவில், விவசாயம் செய்வதற்குப் பயன்படும் மண்வெட்டி, கதிர் அறுக்கும் அருவா வைத்திருந்த விவசாயிகள் கூட பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் 200 க்கும் அதிகமான சாதிக் குழுக்களை இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் 90-க்கும் அதிகமான சாதிகளைப் பதிவு செய்திருக்கின்றனர். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிடியில் நாம் அனைவருமே குற்றப்பரம்பரைகளாக இருந்தவர்கள் தான். அப்போது ஒற்றுமை என்ற ஒன்று இருந்ததால்தான், ஆசியாவிலேயே இந்தச் சட்டத்தை நம்மவர்களால் முதன்முதலாக எதிர்க்கமுடிந்தது. ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு, அன்றைக்கு ஒற்றுமையாக இருந்த சாதிகளுக்குள் இன்று பகைமையை வளர்த்துக் கொண்டிருப்பது சரியா? என்ற கேள்வி, ரேகை ஆவணப்படத்தைப் பார்ப்பவர்களின் மனதில் எழும்ப வேண்டும். இதுதான் இந்தப் படத்தின் நோக்கம்” என்றனர் தயாரிப்பாளர் தீனதயாள பாண்டியனும், இயக்குனர் தினகரன் ஜெய்யும்.

ரேகை ஆவணப்படமாக இருந்தாலும், அதில் முழுக்க முழுக்க ஆவணங்களுக்கும், குறிப்புகளுக்கும் மட்டுமே இடம் தராமல், தேவையான இடங்களில் போராட்டக் காலத்தை நம் கண்முன்னே நிறுத்தும் வகையில் சிறந்த நடிகர்களைப் பயன்படுத்தி “டாக்கு-டிராமா’ யுக்தியில் படம்பிடித்துள்ளனர். நிறைய காட்சிகளுக்கு தெய்வாவின் ஓவியங்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

“”இந்தக் குற்றப் பழங்குடி சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மக்களிடமும் இருந்தது. சுபாஷ் சந்திர போஸ் பிறந்த சாதியையும் இந்தச் சட்டத்தை எதிர்த்ததற்காக குற்றப் பழங்குடியினர் லிஸ்ட்டில் சேர்த்திருந்தனர். ஆந்திராவில் உச்சாலியா என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தின் வேரையே இந்தச் சட்டம் நிர்மூலமாக்கியிருக்கிறது.” என்றார் இயக்குனர் தினகரன் ஜெய்.

மதுரைக்கு அருகிலிருக்கும் பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பதினேழு பேர்கள்தான், ஆசியா கண்டத்திலேயே இந்தச் சட்டத்தை எதிர்த்து முதன்முதலாகக் களப்பலி ஆனவர்கள். இவர்களில் மாயக்காள் என்னும் பெண்ணும் ஒருவர். மாயக்காளாக “விருமாண்டி’ படத்தில் நடித்த சுகுணா பாத்திரத்தின் தன்மை உணர்ந்து மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சம்பவத்தை நம் கண்முன்னே நேர்த்தியான ஆவணமாக்கியிருக்கிறது-“ரேகை’

Posted in British Rule, Deenathayala Pandiyan, Deenathayala Panidyan, Dheenadhayala Panidyan, Dheenathayala Pandian, Dheenathayala Panidyan, Dhinakaran Jai, Dinakaran Jai, Docu Drama, Documentary, Independence, India, Jegamadhy Kalaikoodam, Jegamathy Kalaikoodam, Jekamadhy Kalaikkoodam, Jekamathy Kalaikoodam, Mayakkaal, Movies, Ravikkumar, Ravikumar, Regai, Rekai, Republic, Short Films, Suguna, Suhuna, Sukuna, Terrorism, Tribes, ULFA, Virumandi | 2 Comments »

Rajni acts in Kaavalar – Ungal Sevakar by the Tamil Nadu Police department

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

ரஜினி-இன்காவலர் உங்கள் சேவகர்

சென்னை மாநகரக் காவல் துறையின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரஜினி, கமல், நயனதாரா, அசின் உள்ளிட்ட பிரபலங்களுடன் மற்றும் முதல்வர் கருணாநிதி, மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண், இணை ஆணையர் ரவி உள்ளிட்டோர் இணைந்து நடிப்பில் காவலர் உங்கள் சேவகர் என்ற படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர காவல்துறையின் வயது 150. ஜனவரி 4ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இதையொட்டி சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழா கொண்டாட்டப் பணிகளைக் கவனிப்பதற்காக 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும், சென்னை மாநகர காவல்துறையின் சிறப்புகளை விளக்கும் வகையிலும் காவலர் உங்கள் சேவகர் என்ற டாகுமென்டரி தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதில்

  • ரஜினிகாந்த்,
  • கமல்ஹாசன்,
  • விக்ரம்,
  • சூர்யா,
  • நயனதாரா,
  • அசின் உள்ளிட்டோர் நடிக்கினறனர். முக்கிய வேடத்தில் வழக்கமான காமெடி வெடிகளுடன்
  • வடிவேலுவும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் ஷýட்டிங் அபிராமி தியேட்டரில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் ஷýட்டிங்கில் வட சென்னை இணை ஆணையர் ரவி, துப்பாக்கி முனையில் ரவுடிகளை சுட்டுப் பிடிப்பது போன்ற காட்சியை படமாக்கினர். இதில் இணை ஆணையர் ரவி படு தத்ரூபமாக நடித்தார்.

அதேபோல கிழக்குக் கடற்கரைச் சாலையில், கொள்ளைக் கும்பலை துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடிப்பது போன்ற காட்சியில் மத்திய சென்னை இணை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடித்தார்.

இந்தக் காட்சிகளை பொதுமக்களும் திரளாக கூடி வேடிக்கை பார்த்தனர். போலீஸ் என்கவுண்டர்கள் குறித்து செய்தித்தாளில் படித்த அனுபவத்தை மனதில் ஓட்டியவாறு இந்த சினிமா என்கவுண்டரைப் பார்த்து மெய் சிலிர்த்தனர்.

அதேபோல ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் நடத்தப்படும் விசாரணை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

தரமணி டைடல் பூங்கா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், ஷேர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்படும் பெண்ணை மீட்பது போன்ற காட்சி ஷýட் செய்யப்பட்டது. இந்தக் காட்சியில் ஆணையர் லத்திகா சரண், போலீஸாருக்கு வயர்லஸ் மூலம் உத்தரவிடுவது போல நடித்தார்.

மற்றொரு காட்சியில், குடிபோதையில் வானம் ஓட்டும் நபரை போலீஸார் பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதில் போக்குவரத்து இணை ஆணையர் சுனில் குமார் கலந்து கொண்டு நடித்தார்.

வடிவேலுவின் பகுதிதான் படு சுவாரஸ்யமானது. செல்போன்களில் பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பது, ஆபாசப் படங்களை எஸ்.எம்.எஸ். மூலம் ரவுண்டு விடுவது ஆகியவை தவறு என்று விளக்கும் காட்சியில் வடிவேலு நடிக்கிறாராம். அதை தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை ததும்ப நடித்துக் கொடுக்கவுள்ளாராம் வடிவேலு.

உச்சகட்டமாக முதல்வர் கருணாநிதியும் ஒரு காட்சியில் நடிக்கவுள்ளாராம். இப்படி திரையுலகின் ஒத்துழைப்போடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரது நடிப்பில் உருவாகும் இந்த டாகுமென்டரி படத்தை ஜனவரி 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவுள்ளனராம்.

சென்னை மாநகர காவல்துறையின் பெருமைகள், சிறப்புகளை விளக்கும் வகையில் இருக்கும் படம் என்பதால் இப்படத்தைப் பார்க்க சென்னை போலீஸாரே படு ஆவலாக இருக்கிறார்கள்.

சினிமாக்காரர்களின் ஷýட்டிங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீஸாரே ஷýட்டிங்கில் கலந்து கொண்டு நடித்ததைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டுப் போயினர்.

இந்தப் படத்தில்

  • கவர்ச்சி நடிகை ரிஷா, ஷேர் ஆட்டோவில் கடத்தப்படும் சாப்ட்வேர் என்ஜீனியராக நடித்தார். இவர்கள் தவிர
  • கே.ஆர்.விஜயாவின் தங்கச்சியான கே.ஆர்.வத்சலா,
  • அப்சரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
  • வைரமுத்து டைட்டில் பாடலை எழுதியுள்ளார்.
  • மணிசர்மா இசையமைத்துள்ளார்.

Posted in Amnsetry International, Asin, Correctional, Docu Drama, Documentary, Drunken driving, DUI, ECR, Encounter, Human Rights, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kizhakku Kadarkarai Saalai, Lathika Charan, Latika Saran, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mani Sharma, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, Nayan Dhara, Nayanthara, Order, Police, Rajini, Rajiniganth, Rajinikanth, Sandeep Roy Rathore, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Tamil Nadu, Tharamani, TIDEL Park, Variramuthu, Vikram | Leave a Comment »

SCARF welcomes Short Films

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

குறும்பட போட்டியில் பங்கேற்க வாய்ப்பு

திரைப்படங்கள், அதிலும் குறும்படங்கள் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சென்னையில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி மையம் (SCARF) ஒரு போட்டியை அறிவித்துள்ளது.

மனநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி தவறான, எதிர்மறையான எண்ணங்கள் சித்திரிக்கப்பட்டு அவை நம் மனதில் பதிந்துவிட்டன. இவற்றை மாற்றுவதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும்.

மனநலம் மற்றும் மனநோய் சம்பந்தப்பட்ட மிக நுண்ணிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் வகையில் குறும்படங்களை உருவாக்கி இந்த மையத்துக்கு அனுப்ப வேண்டும்.

இந்தப் போட்டியில் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் மட்டுமின்றி மனநலம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் கொண்ட யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். 3 முதல் 5 நிமிடங்கள் கொண்ட குறும்படங்கள்தான் போட்டியில் பங்கேற்க முடியும்.

இப்படங்கள் கற்பனை கதை வடிவமாகவோ, செய்திப் படமாகவோ, இரண்டும் கலந்ததாகவோ இருக்கலாம். திரைப்படங்கள் எந்த வடிவமைப்பில் எடுக்கப்பட்டிருந்தாலும் டி.வி.டி.யாகத்தான் போட்டிக்கு அனுப்பப்பட வேண்டும்.

படங்கள் ஆங்கில மொழியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஆங்கில மொழிமாற்றம் செய்யப்பட்டதாக (Subtitles்) இருக்க வேண்டும். நுழைவுக்கட்டணம் எதுவும் இல்லை.

தேர்ந்தெடுக்கப்படும் படங்கள் அக்டோபர் 6, 7 தேதிகளில் சென்னையில் நடைபெறும் திரைப்பட விழாவின் போது திரையிடப்படும்.

போட்டிக்கான கடைசி நாள்: 30.09.2006.

Address: SCARF (INDIA), R/7A, North Main Road, Anna Nagar (West Extn.), Chennai -600 101.

Posted in Challenged, Chennai, Cine Festival, Contest, Disabled, Docu Dramas, Documentary, Movies, SCARF, Short Films, Tamil | Leave a Comment »

Jury announced for Granting Govt. Subsidies for Tamil Cinema

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

திரைப்படங்களுக்கு அரசு மானியம்: குழு அமைப்பு

சென்னை, செப். 7: அரசு மானியம் பெற தகுதியுடைய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2005 ஆம் ஆண்டில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அரசு மானியம் பெறுவதற்கு தகுதியுடைய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு நீதிபதி பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சரோஜா தங்கவேலு, ஸ்ரீபிரியா ஆகியோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

Posted in Art, Culture, Docu Drama, Documentary, Government, Grants, Justice Bhaskaran, Kollywood, Movie, Saroja Thangavelu, Short Film, Sri Priya, Subsidy, Tamil, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu, TN | Leave a Comment »

Marudhu Paandiyar – Short Film : Kaalaiyaar Kovilpuram

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 20, 2006

விடுதலை வேள்வியில்..: மருதிருவர்

ரவிக்குமார்

பீரங்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டும், கால வெள்ளத்தால் கரைக்கப்பட்டும் சிதிலமடைந்து காட்சியளிக்கும் அரண்மனைகள்… பிரம்மாண்டமான காளையார் கோவில் கோபுரம்… இவற்றின் பின்னணியில் துவங்குகிறது “மருதிருவர்’ ஆவணப்படம். நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட இரண்டு மாவீரர்களை நாம் மறந்ததற்கு அடையாளமாய் அவர்களின் அரண்மனையும், மருது மன்னர்களின் இறைப்பணிக்கு அடையாளமாய் உயர்ந்து நிற்கும் கோபுரங்களும் நம்மை 18-ம் நூற்றாண்டுக்கு கைபிடித்து அழைத்துச் செல்கின்றன.

கதவுகளே இல்லாத அரண்மனை, காவலர்களே இல்லாமல் மக்களை சந்தித்து, மருதிருவர் ஆட்சி செய்த முறை. கோபுரங்களைக் கட்டித் தருவது, மண்டபங்களைக் கட்டித் தருவது என 87 கோயில்களில் மருது பாண்டியர்கள் இறைப்பணி செய்திருக்கும் விவரம், இந்துக் கோயில்களைத் தவிர, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆலயங்களிலும் நற்பணிகளைச் செய்திருக்கும் விவரம், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை போன்ற சக பாளையத்துக் காரர்களிடமும், திப்பு சுல்தானின் தளபதியாக இருந்த துந்தா ஜீவாக் ஆகியோரிடமும் நட்பு பாராட்டிய விதம், ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் போராளி அணியில் இருந்து வெளியிடப்பட்ட முதல் சுதந்திரப் போராட்ட அரசியல் பொது அறிக்கையை மருது பாண்டியர்கள் வெளியிட்ட நிகழ்ச்சி குறித்த தகவல்கள் இந்த ஆவணப் படத்தில் உள்ளன.

மருதிருவரைப் பற்றி சரித்திரத்தின் பக்கங்களில் காணமுடியாத பல விஷயங்கள், இந்த ஆவணப் படத்தில் பதிவாகியிருக்கின்றன.

இந்த ஆவணப்படத்தை தயாரித்திருப்பவர் தீனதயாள பாண்டியன். இவர், பெரியமருதுவின் எட்டாவது வாரிசு. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் “ஃபர்ஸ்ட் கார்மென்ட்ஸ் மேன்யுஃபாக்சரிங் கம்பெனி’யின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். மருதிருவர் ஆவணப்படத்தின் சி.டி.யை தமிழக ஆளுனரின் கையால் வெளியிட்டிருக்கும் தீனதயாள பாண்டியனிடமும், படத்தின் இயக்குனர் தினகரன் ஜெய்யிடமும் பேசியதிலிருந்து…

மருதிருவரின் வாரிசுகள் அனைவரையும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தினர் கொன்று விட்டதாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்…நீங்கள் பெரியமருதுவின் எட்டாவது வாரிசு என்கிறீர்களே..?

நீங்கள் கேள்விப்பட்டதும் உண்மைதான். நான் சொல்வதும் உண்மைதான். பெரிய மருது, சின்ன மருதுவோடு சேர்த்து ஏறக்குறைய 500 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றினர். அதோடு அவர்களின் கழுத்தை வெட்டிச் சாய்த்த சம்பவமும் நடந்திருக்கிறது. மருதுபாண்டியர்களின் ஆண் வாரிசுகளை நாடு கடத்திவிட்டார்கள். பெண் வாரிசுகளை விட்டுவிட்டார்கள். நான் பெண் வாரிசின் வம்சாவளியில் வந்தவன்தான்.

சுதந்திரப் போராட்டத்தில் மருதுபாண்டியர்களின் பங்களிப்பு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது?

வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றிருக்கும் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் 1857-ல் நடந்த சிப்பாய் கலகம்தான். மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கலகம், சலசலப்புதானே தவிர, போர் இல்லை. அதோடு இந்த கலகத்துக்கு சுதந்திரப் போராட்ட உணர்வை விட, மத அடிப்படையான காரணங்களே அதிகம் இருந்ததும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

ஆனால் சிப்பாய் கலகம் நடப்பதற்கு 57 ஆண்டுகளுக்கு முன்பே, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக பல பிரிவுகளில் இருப்பவர்களும் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மருதிருவரால் திருச்சி மலைக்கோட்டையிலும், ஸ்ரீரங்கத்திலும் ஒட்டப்பட்ட “ஜம்புத்வீபப் பிரகடனம்’, (ஒஹம்க்ஷன்க்ஜ்ண்ல்ஹம் ஙஹய்ண்ச்ங்ள்ற்ர்) விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள் என அனைத்துப் பிரிவினரையும் சுதந்திரக் கிளர்ச்சிகளில் பங்கேற்கும் உத்வேகத்தைத் தந்தது. 30 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகே சிவகங்கை கோட்டையை ஆங்கிலேயர்களால் பிடிக்கமுடிந்தது.

அப்படியும் ஆங்கிலேயர்களால் மருதிருவரைப் பிடிக்கமுடியவில்லை. 150 வீரர்களுடன் மருதிருவர் நடத்திய கொரில்லா போர்முறையை ஆங்கிலேயர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கொதிப்படைந்த ஆங்கிலேயர்கள் மருதிருவர் கட்டிய காளையார் கோவில் கோபுரத்தை தகர்க்கப் போவதாக செய்தி பரப்புகின்றனர். அதேசமயத்தில், மருதிருவரை உயிரோடோ, பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு 4000 கூலிச்சக்கரம், அவர்களின் சந்ததிகளுக்கு 3000 கூலிச்சக்கரம் பரிசு என்று அறிவிக்கின்றனர்.

ஒரு கூலிச்சக்கரம் என்பது மூன்று ரூபாய்க்குச் சமம். கோபுரத்தை காக்கும் பொருட்டு போரை நிறுத்தி விட்டு, பதுங்கியிருந்த மருதிருவரை பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த மண்ணின் மைந்தர்களே காட்டிக் கொடுக்கின்றனர். வீரத்தில் தொடங்கி துரோகத்தால் முடிந்த மருதிருவரின் சரித்திரத்தை ஆவணப்படுத்துவது எங்களின் கடமை என்று நினைத்தோம். செய்து முடித்தோம்.

நீங்கள் மருதிருவரின் வாரிசு என்பதால் இதைச் செய்ய வேண்டும் என நினைத்தீர்களா?

அது மட்டுமே காரணம் இல்லை. இந்தப் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, திப்புசுல்தான், அவரின் தளபதி என மருதிருவரின் சமகாலத்தில் வாழ்ந்த போராளிகளைப் பற்றியும் நிறையக் குறிப்புகள் இருக்கின்றன. கடவுளின் கருணையால் நேரிடையாகவும், மறைவாகவும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பணியை அளிக்கும் நிலையில் இருக்கிறேன். அதனால் இந்த சி.டி.யை விற்பனைக்காக நான் தயாரிக்கவில்லை.

இந்த சி.டி.யை மக்களுக்கு நேரிடையாகக் கொண்டுசெல்லும் வகையில் அறிமுகக் கூட்டங்களை நடத்துகிறோம். வாரிசு என்பதால் மருதிருவர் பற்றிய படத்தை எடுத்திருக்கிறேன் என்கிறீர்கள். அடுத்து நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் படம், ஆங்கிலேயர் காலத்தில் வழக்கத்திலிருந்த “குற்றப்பரம்பரை’ என்ற சட்டத்தைப் பற்றியது. இந்தச் சட்டத்தின்படி படையாச்சி, கள்ளர்கள், மறவர்கள்…போன்று இந்தியா முழுவதும் 231 சாதிப் பிரிவில் இருக்கும் ஆண்கள் தினமும் இரவில் தங்களின் ரேகையை காவல் நிலையத்திலிருக்கும் பதிவுப் புத்தகத்தில் பதித்துவிட்டு, அங்கேயே தூங்கிவிட்டு, காலையில்தான் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்ற நிலை இருந்தது.

“ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நாம் எல்லோருமே குற்றப்பரம்பரையினராகத்தான் இருந்தோம். அப்படியிருக்கும்போதுநமக்குள் இன்றைக்கு ஏன் இவ்வளவு பிரிவினை? என்ற கேள்வியை சற்று உரக்கவே எழுப்பும் “ரேகை’ ஆவணப்படம்.

-என்றார் தீனதயாள பாண்டியன்.

இனி, இயக்குனர் தினகரன் ஜெய், “”வரலாற்று அறிஞர்களின் பார்வையில் ஜம்புத்வீபப் பிரகடனம் என்பது பிரெஞ்சுப் புரட்சியின்போது நிகழ்த்தப்பட்ட பாஸ்டில் சிறைத் தகர்ப்புக்கு இணையானதாக கருதப்படுகின்றது. 15 வயதான சின்ன மருதுவின் மகன் உள்பட 73 புரட்சியாளர்கள் நாடு கடத்தப்பட்டதாக குறிப்பு இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 57 வருடங்களுக்குப் பின்தான் மருதிருவரின் அஞ்சல்தலையை அரசு வெளியிட்டிருக்கிறது. அந்த வீரர்களின் சிதிலமான கோட்டைகளை, வாழ்விடங்களை, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை அரசுடமையாக்கிப் பாதுகாக்க வேண்டும். அதுதான் அந்த மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் நிஜமான மரியாதையாக இருக்கும்!” என்கிறார் தினகரன் ஜெய்.

Posted in Documentary, East India Company, Freedom, Independence, India, Kattabomman, Kings, Marudhu Paandiyar, Short Film, South India, Tamil, Tamil Nadu, War | 3 Comments »