Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Doctor’ Category

Red cross questions Doctor for treating HIV+ patients: Deivanayagam – President, Health India Foundation

Posted by Snapjudge மேல் ஜனவரி 9, 2008

எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதா?: டாக்டருக்கு செஞ்சிலுவைச் சங்கம் நோட்டீஸ்

ஜே. ரங்கராஜன்

சென்னை, ஜன. 8: எச்ஐவி, எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் டாக்டரின் கிளினிக்கை உரிய காரணம் எதுவும் இன்றி மூடுமாறு இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழ்நாடு கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை மாண்டியத் சாலையில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளை வளாகத்தில் நெஞ்சக நோய் மருத்துவ நிபுணரும் இந்திய நலவாழ்வு நல்லறம் (“ஹெல்த் இந்தியா ஃபவுண்டேஷன்’) அமைப்பின் தலைவருமான டாக்டர் செ. நெ. தெய்வநாயகம் சிறிய புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவை 2002-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

அரசுப் பணியில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள டாக்டர் செ.நெ.தெய்வநாயகம், எச்ஐவி நோயாளிகள் உள்பட இதுவரை மொத்தம் 6,045 நோயாளிகளுக்கு இந்த புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்துள்ளார். மொத்த நோயாளிகளில் 3,000 பேர் எச்ஐவி நோயாளிகள். திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை இந்த இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்த கிளினிக்கில் மருத்துவ ஆலோசனைக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பதிவுக் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளி அளிக்கும் ரூ.50 பதிவுக் கட்டணத்திலிருந்து, ரூ.10-ஐ செஞ்சிலுவைச் சங்கத்துக்கு வாடகையாக அளித்து வந்தனர்.

அலோபதி – சித்த மருத்துவ கூட்டு சிகிச்சை முறையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மீதமுள்ள கட்டணத்தில் இரண்டு சித்த மருத்துவர்களுக்கு மாதம் தலா ரூ,.8,000, ரூ.5,000 சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. அலோபதி மருத்துவ நிபுணரான செ.நெ.தெய்வநாயகம், சித்த மருத்துவ நிபுணர்களான ஜி.சிவராமன், தெ. வேலாயுதம் ஆகியோர் ஊதியம் பெறாமல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தனர்.

திடீர் நோட்டீஸ்:

இந் நிலையில் கடந்த ஜன.2-ம் தேதியன்று இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளையின் தலைவராக உள்ள டாக்டர் விமலா ராமலிங்கத்திடமிருந்து அவரது செயலர் மூலம் டாக்டர் தெய்வநாயகத்துக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

“”அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம், இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கம், ஜெர்மனி செஞ்சிலுவைச் சங்கம், ஸ்வீடன் செஞ்சிலுவைச் சங்கம், இங்கிலாந்து செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்டவை நிதியுதவி செய்யும் திட்டங்களைச் செயல்படுத்த போதிய இடம் இல்லாததால் உங்களது இடத்தை புதன்கிழமை (9.1.2008) முதல் காலி செய்து விடுங்கள்” என்று அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆளுநர், முதல்வருக்கு பேக்ஸ்:

இதையடுத்து ஆளுநரும் இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளையின் தலைமை காப்பாளருமான பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு டாக்டர் தெய்வநாயகம் பேக்ஸ் அனுப்பியுள்ளார்.

“இறக்கும் நிலையில் உள்ள எச்ஐவி நோயாளிகளுக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் செஞ்சிலுவைச் சங்கம் விடுதி நடத்துகிறது; தென்னாப்பிரிக்கா கேப்டவுனில் குழந்தை எச்ஐவி நோயாளிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மருத்துவமனை நடத்துகிறது. இந் நிலையில் தமிழக செஞ்சிலுவைச் சங்கம் செய்ய வேண்டிய பணியைச் செய்துவரும் “ஹெல்த் இந்தியா பவுண்டேஷன்’ சிகிச்சைப் பிரிவு மூடும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த பேக்ஸ் செய்தியில் டாக்டர் தெய்வநாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Posted in AIDS, Allegations, Deivanayagam, Deivanayangam, Deiyvanayagam, Dheivanayagam, Dheiyvanayagam, Doctor, Fear, Health India Foundation, HIV, Hospital, Law, medical, Order, patients, Red Cross, Theivanayagam, Theivanayangam, Theiyvanayagam, Treatment | Leave a Comment »

Safe Disposal of Medical Waste: Biological hazards – ☣

Posted by Snapjudge மேல் திசெம்பர் 27, 2007

அச்சுறுத்தும் மருத்துவக் கழிவுகள்!

சா. ஜெயப்பிரகாஷ்

மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், கால்நடை சிகிச்சை மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றிலிருந்து மனித, கால்நடைகளின் உறுப்புகள், ரத்தம் மற்றும் திரவங்கள், அவற்றைத் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட பஞ்சு உள்ளிட்ட திடப் பொருள்கள், காலாவதியான மருந்துகள், உடைந்த ஆய்வகக் கண்ணாடிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கழிவுகளாக நாள்தோறும் வெளியேறுகின்றன.

மாநிலம் முழுவதும் இவ்வாறு வெளியேறும் மருத்துவக் கழிவுகள் நாளொன்றுக்கு மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் கிலோ என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இவற்றை அழிக்கும் முறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மனித உள்ளுறுப்புகளின் கழிவுகள், திசுப் பகுதிகள், கால்நடை மருத்துவமனைகளில் வெளியாகும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு பொசுக்க வேண்டும் அல்லது ஆழமான குழியில் புதைக்க வேண்டும்.

நுண்ணுயிரியல் ஆய்வகங்களில் இருந்து வெளியாகும் கழிவுகள், மனித மற்றும் விலங்கு செல்களின் “கல்சர்’ பொருள்கள் போன்றவற்றை “ஆட்டோ கிளேவ் அல்லது மைக்ரோ வேவ்’ ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.

கூர்மையான ஊசிகள், கத்திகள், கண்ணாடி- கண்ணாடித் துகள்கள் ஆகியவற்றை உடைத்துத் தூளாக்கி அழிக்க வேண்டும். காலக்கெடு முடிந்த மருந்துப் பொருள்களை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆழமான குழியில் இட்டு அழிக்க வேண்டும்.

ரத்தத்தால் மாசுபட்ட பொருள்கள், உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள் துடைக்கப்பட்ட பஞ்சு, காரத்துணி, அழுக்கான துணிகள், படுக்கைகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆட்டோகிளேவ், மைக்ரோ வேவ் ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.

இவை மட்டுமல்ல… மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் திரவக் கழிவுகளையும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிட்டு கழிவுநீர்க் கால்வாய்களில் வெளியேற்ற வேண்டும் என்றும் விதிகள் கடுமையாக எச்சரிக்கின்றன.

ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட முறையில் வெப்ப உலையில் இட்டு அழிக்கும்போது ஏற்படும் சாம்பலையும் நகராட்சிக் கழிவு உரக் கிடங்கில் ஆழமாகக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்றும் எச்சரிக்கைகள் நீள்கின்றன. ஆனால், இந்த எச்சரிக்கைகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன? சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள உயிரி மருத்துவக் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகளின்படி, விதிகளை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகும் விதிமீறல் தொடரும் என்றால், ஒவ்வொரு நாளைக்கும் ரூ. 5000 வீதம் அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது. ஆனால், மாநிலத்தின் எந்த ஒரு தனியார் மருத்துவமனை மீதும் இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், எல்லா நகரங்களிலும் குப்பைக் கழிவுகளுக்கிடையே பஞ்சுகளையும், சிரிஞ்சுகளையும் மிகச் சாதாரணமாகப் பார்க்க முடிகிறதே எப்படி?

அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பரிசோதனைக் கூடப் பணியாளர்கள் போன்றோருக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகளை அளிக்கவும், கண்காணிப்புக் குழுக்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இவை எதுவும் மாநிலத்தின் எந்த மூலையிலும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

மாநிலத்தின் 5 மையங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, கழிவுகளைப் பெற்று, அழிக்கப்படுகின்றன.

அரசு மருத்துவமனைகளுக்கு இந்த வாய்ப்புகள் கிடையாது. இதற்கென அரசு தனியாக நிதி ஒதுக்கவில்லை. ஏற்கெனவே இவர்கள் செய்து வந்த அரைகுறை முறையும் சுகாதாரமற்றது என்று தடை செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில், உலக வங்கியின் உதவியுடன் “சுகாதார முறைகளை மேம்படுத்தும் திட்டம்’ தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, மாவட்டத்திலுள்ள அரசு மருத்துமனைக் கழிவுகளை தனியாரிடம் ஒப்படைத்து அழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

என்றாலும், திட்டங்கள் தொடங்கப்படும் போது இருக்கும் வேகம் நிறைவு பெறும் போதும் அதே அளவுக்கு வேகத்துடன், எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுத்தப்படுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.

தமிழகத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதனைப் பார்க்கும்போது அப்போதுமட்டும் “மூக்கைப் பொத்திக் கொண்டு’ செல்லும் நம்மவர்களின் மன நிலை மாற வேண்டும்.

சுருங்கச் சொல்லவேண்டுமானால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு தேவை.

Posted in Animals, Bacteria, bacterial, biohazard, Biological, CDC, Disease, diseases, Disposal, Doc, Doctor, Environment, Harmful, hazard, Hazards, hazmat, Health, Hospital, Human, Infection, Infectious, medical, microorganism, Microwave, Needles, organism, Precautions, Risk, Safe, Safety, Threat, Toxin, Viral, Virus, Warfare, warning, Waste | Leave a Comment »

Influenza, Flu – Illness, Symptoms, Transmission, Diagnosis & Treatment

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2007

ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் – சிகிச்சையும்

ஃப்ளூ என்று பொதுவாக அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்சா என்பது ஒரு வைரஸ் காய்ச்சல். இது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளைத் தாக்குகிறது.

மூச்சுக் குழல் எனப்படும் சுவாசக் குழலைப் பாதிக்கும் மற்ற வைரஸ்களைவிட இன்ஃப்ளூயன்சா வைரஸ், தீவிரமாக நோய்க் கிருமிகளையும், சிக்கல் நிறைந்த நோய்த்தன்மையையும் கொண்டது. இன்ஃப்ளூயன்சா ஏ, பி மற்றும் சி ஆகிய 3 வைரஸ்களால் இந்த காய்ச்சல் ஏற்படலாம். இதில் ஏ ரக வைரஸ் பரவலாக தொற்றக் கூடியது, இது தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.

இந்த ஏ டைப் வைரஸ் சீரான முறையில் வளர்ந்து சில ஆண்டு களுக்கு ஒரு முறை தொற்று நோய்ப் பரவலை ஏற்படுத்தக் கூடியது. இதில் டைப் பி, டைப் சி வைரஸ்களால் சிறு சிறு உபாதைகளே தோன்றி மறையும்.

இன்ஃப்ளூயன்சாவிற்கு வயது வித்தியாசமோ, வயது வரம்போ கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும், எப்போதும் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படலாம். பொதுவாக குளிர்காலத்திலேயே இந்தவகை வைரஸ் காய்ச்சல் தொற்றக்கூடியது. இந்த காய்ச்சல் ஏற்பட்டோரின் இருமல், சளி ஆகியவை மூலம் இது பிறருக்கும் தொற்றுகிறது.
இன்ஃப்ளூயன்சா திடீரென, உடனடியாகத் தோன்றும். முதலில் அதிக காய்ச்சல், குளிர், வேர்வை, தசை வலி மற்றும் தலைவலி போன்ற தொடக்க அறிகுறிகள் ஏற்படும். தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை கட்டு மற்றும் சூரிய ஒளிக்கு ஒத்துக் கொள் ளாமல் கண்ணீர் வழியும் கண்கள் என்று இதன் நோய் அறிகுறிகள் விரிவடையும். இந்த உடனடி தீவிர அறிகுறிகள் சாதாரணமாக 3 அல்லது 5 நாட்களுக்கு இருக்கும், பொதுவாக 48 மணி நேரத்தில் நோய்க்கூறுகள் அதிகரிக்கத் தொடங்கும்.
ஃப்ளூ வைரஸ்களால் கூடுதலாக, எலும்பு உட்புழை, காது மற்றும் மூச்சுக்குழல் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகள் ஏற்படுகின்றன. சில சமயம் ஃப்ளூவால் நியுமோனியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நியுமோனியாவானது இன்ஃப்ளூயன்சா வைரசால் மட்டுமோ அல்லது இரண்டாம் கட்ட நோய்க்கிருமிக்கு காரணமாகும் பாக்டீரியாவாலோ தோன்றலாம்.

அறிகுறிகள்

  • 104 டிகிரி வரை காய்ச்சல்
  • தலைவலி
  • தசைவலி மற்றும் பிடிப்பு
  • மூக்கிலிருந்து தண்ணீர் போல் சளி வருதல்
  • இருமல்
  • மூச்சு விடுதலில் சிரமம்
  • நடுக்கம்
  • தளர்ச்சி
  • வியர்வை
  • பசியின்மை
  • மூக்கடைப்பு
  • தொண்டைக்கட்டு

இது சாதாரண ஃப்ளூ காய்ச்சலாக இருந்தால் மருத்துவர்கள் காய்ச்சல் எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்து கட்டுப்படுத்துவர். ஆனால் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், வயதானவர்கள், இருதயம், நுரையீரல் மற்றும் கிட்னி ஆகியவற்றில் நீண்ட நாளைய பழுது இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் இருப்பது 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டால் அமான்ட டின், ரிமான் டடின் ஆகிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப் படுவது இயல்பு.
குழந்தைகளை இந்த வைரஸ் நோய் தாக்கினால் சிகிச்சை பொதுவாக தேவையில்லை என்று கருதப்படுகிறது. ஆனால் இதன் மூலம் வேறு நோய்கள், வேறு உறுப்புகளில் பழுது என்ற நிலை தோன்றுவதுபோல் தென்பட்டால் சிகிச்சை அவசியம் தேவைப்படும். குழந்தைகளுக்கு ஆஸ்ப்ரின் கொடுக்கக் கூடாது, ஏனெனில் இது ஆபத்து மிகுந்தது. ஆஸ்ப்ரினுக்கும் சுநலந’ள ளலனேசடிஅந என்ற புது வகை ஃப்ளூவிற்குமான தொடர்பு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் அவசியம்.
அதிக திரவங்களை உட்கொண்டால் எலும்பு உட்புழை மற்றும் நுரையீரலில் உள்ள சளிச்சவ்வு மெலிதடைந்து உடலிலிருந்து விரைவில் வெளியேறும்.
பொதுவாக இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை குறைக்காமல் அதன் முழுக்காலத்தை கடக்கவிடுவதே சிறந்தது. ஆனால் குழந்தை களுக்கும், வயதானவர்களுக்கும் சிகிச்சை அவசியம் தேவை. இது பிறருக்கு தொற்றாமல் இருக்க பாக்டீரியா – தடுப்பு சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுதல் நலம்.
பிற உறுப்புகளில் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா தாக்கினால், மேலும் சிக்கல் நிறைந்த நோய்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது என்பது தவிர இதனால் பெரும் ஆபத்து எதுவும் இல்லை.
ஆரோக்கியமாக இருந்து வரும் நபர்களுக்கு இன்ஃப்ளூயன்சா 7 முதல் 10 நாட்களில் குணமாகி விடும். வயதானவர்கள், உடல் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், நீண்ட நாள் இருதய, கிட்னி மற்றும் நுரையீரல் நோய் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் மேலும் ஆபத்தானதாக மாறுவதற்குக் கூட வாய்ப்புகள் அதிகம்.

Posted in Advice, Antibody, bacterial, Bio, Care, Cold, Congestion, diagnosis, Doc, Doctor, Fever, Flu, Health, Illness, Immune, immunity, Infection, Influenza, medical, Medicine, Science, Shot, Sick, Symptoms, Transmission, Treatment, Viral, Virus, Wellness | Leave a Comment »

Tamil Nadu State Health Minister MRK Panneerselvam’s lethargy

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

நேரம் ஒதுக்குவாரா அமைச்சர்?

ஜி. சிவக்குமார்

சென்னை, டிச. 5: சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மூலம் நியமன உத்தரவை வழங்க அதிகாரிகள் முயற்சி செய்வதால், அரசின் பணி நியமன ஆணைக்காக 16 பல் டாக்டர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2006-ம் ஆண்டில் காலியான உதவி பல் டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு தேர்வு ஆணையம் மூலம் கடந்த ஜூன் 24 – ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற 43 பேர் செப்டம்பர் 6 – ம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

இவர்களில் இறுதியாக 16 பேர் தேர்வு செய்யப்பட்டதாகத் தேர்வு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவருக்கும் பணியிடம் தொடர்பாக அக்டோபர் 14 – ம் தேதி சென்னையில் கவுன்சலிங் நடத்தப்பட்டது. கவுன்சலிங் மூலம் டாக்டர்களுக்கான பணியிடமும் உறுதி செய்யப்பட்டது.

திடீர் ஒத்திவைப்பு:

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17 – ம் தேதி பல் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவிருந்தது. ஆனால், திடீரென்று பணி நியமன ஆணை வழங்குவது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்வான டாக்டர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒத்திவைப்புக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என பல் டாக்டர்கள் தெரிவித்தனர்.

அமைச்சருக்காக தாமதம்…:

ஆனால், ஒரு சில பல் டாக்டர்கள் மருத்துவ உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கேட்டபோது, நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முன்னிலையில் பணி நியமன ஆணை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந் நிலையில், தேர்வில் வெற்றி பெற்றும் தங்களுக்குப் பணி நியமன ஆணை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது தேர்வான டாக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தாமதம் ஏற்படுவதால் தங்களால் மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் பல் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Posted in BDS, Conference, Counseling, Counselling, Delay, Dental, DMK, Doctor, Efficiency, employees, Employment, Exam, Govt, Health, Hygiene, Jobs, Lethargy, medical, MK, MRK Paneerselvam, MRK Panirselvam, MRK Panneerselvam, MRK Pannirselvam, Nellai, Paneerselvam, Panneerselvam, Pannirselvam, Postponed, Signature, Stalin, Time, Work | Leave a Comment »

Ayurvedha Corner – S Swaminadhan: How to use ‘Simla Athi’

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கழிவுகளை அகற்றும் அத்தி!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771

சத்தியமங்கலத்துக்கு அருகிலுள்ள கடம்பூர். அங்குள்ள மலைத் தொடரில் உள்ள எங்கள் தோட்டத்தில் “சிம்லா அத்தி’ என்னும் பெரிய அத்தி மரம் உள்ளது. அது வருடம் முழுவதும் பழங்களைக் கொடுத்துக் கொண்டுள்ளது. இந்தப் பழங்களை எவ்வாறு சத்துக் குறையாமல் பதப்படுத்துவது, அத்திப் பழத்தின் மருத்துவக் குணங்கள் என்ன? என்பதைப் பற்றிக் கூறவும்.

உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப் பழமும் ஒன்று. நம்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுபவை அத்தியும் பேயத்தியுமாகும். நீங்கள் குறிப்பிடும் சிம்லா அத்தி சீமை அத்தி வகையைச் சார்ந்ததாக இருக்கலாம்.

இந்தியாவில் சீமை அத்தி, பூனா, பல்லாரி, அனந்தபூர் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. எனவே வெளிநாடு, இந்திய காடுகள், தோட்டங்கள், மலைகள் என உற்பத்தியாகும் இடங்களைக் கொண்டும், வெண்மை, சிவப்பு, கறுப்பு என நிறங்களைக் கொண்டும் சீமை அத்தி பல ரகமாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றுள் வெண்மை, சிவப்பு ஆகிய இனத்தவை பெரும்பாலும் பழமாக உண்பதற்கும், கறுப்பு நிறத்தது மருந்துகளுக்கும், போதைதரும் பானங்கள் செய்வதற்கும் உபயோகிக்கப்படுகிறது. உற்பத்தியாகும் இடத்தில் பச்சையாக உபயோகப்படினும் கடைகளில் உலர்ந்த பழங்களே நமக்குக் கிடைக்கின்றன.

இவற்றை விசேஷ முறைப்படி இறக்கியோ அல்லது தானாகப் பழுத்து உதிரும் வரை காத்திருந்து சேமித்தோ பதம் செய்கின்றனர். தானாகப் பழுத்து உதிரும் நிலையில் இவை முக்கால் பங்கு உலர்ந்தே இருக்கும். இவ்விதம் சேமித்த பழங்களைத் தட்டுகளில் நெருக்கமில்லாமல் பரப்பி சிறிது கந்தகப் புகை காட்டிப் பின்னர் வெய்யிலில் சில நாட்கள் உலர்த்தி, அழுத்தி சப்பையாகச் செய்து நடுவே துளையிட்டு நாரில் கோர்த்து வெளியிடங்களுக்கு அனுப்புவதால் நீண்ட நாட்கள் கெடாமலிருக்கும். அவற்றின் மிருதுத் தன்மையையும் சுவையையும் பரிமளிக்கச் செய்ய உப்புக் கலவையில் நனைத்துப் பதப்படுத்திக் கட்டி வெளியிடங்களுக்கு அனுப்பலாம். இக் கனிகளுள் சிறிய வண்டுகள் இருக்க வாய்ப்புள்ளதால் கவனத்துடன் உபயோகிக்க வேண்டும். இவை அனைத்தும் சற்றேறக் குறைய ஒரே குணங்கள் கொண்டவையெனினும் பேயத்தியைக் காட்டிலும் அத்தியும், அத்தியைக் காட்டிலும் சீமையத்தியும் தரத்திலும் குணத்திலும் சிறந்தவை.

இவற்றின் இனிப்புச் சுவையும் குளிர்ச்சி தரும் தன்மையும் துவர்ப்புச் சுவையும் காரணமாக உடலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் திரவங்களை ஓரளவு தடுத்து நிறுத்துகிறது. அதிகமான வயிற்றுப்போக்கு, பெண்களுக்குத் தோன்றும் அளவுக்கு மீறிய மாதவிடாய் போக்கு, வாய், மூக்கு மற்றும் வியர்வை நாளங்கள் வழியே ரத்தமாக வெளியேறும் ரத்தபித்த நோய் , ரத்த மூலம் ஆகியவை குணமடைகின்றன. மேலும் புண் சுத்தமாவதற்கும் விரைவில் ஆறுவதற்கும் இதன் துவர்ப்புச் சுவை உதவுகிறது.

இனிப்புச் சுவை, குளிர்ச்சித்தன்மை, நெய்ப்புத்தன்மை ஆகியவை செயல்படுவதால் மனதிற்கு ஒரு தெளிவையும் உடலுக்குப் புஷ்டியையும் ஏற்படுத்துவதுடன் மலச்சிக்கலையும் அகற்றுகிறது. பித்தத்தின் சகஜ நிலை மாற்றத்தால் தோன்றும் மயக்கம், உடல் எரிச்சல் , தண்ணீர் தாகம், சோர்வு முதலியவையும் குணமடைகின்றன. உதடு, நாக்கு, வாய் இவற்றில் உண்டாகும் புண்ணும் வெடிப்பும் குணமடைகின்றன.

கபம் மூச்சுக் குழாய்களின் உள்ளே படிந்து இருமல், மூச்சுத் திணறல் முதலியவற்றை உண்டாக்குகின்றது. அந்த நிலைகளில் அத்திப் பழங்களை உபயோகிப்பதால் கபத்தின் அடைப்பு விடுவதுடன் இருமலும் குறைகிறது. கபமும் எளிதில் கோழையாக வெளியேறுகிறது.

இக்கனிகளில் பல உலோகச் சத்துகளுடன் இரும்புச் சத்தும் இருப்பதால் இவை ரத்தத்தை அதிகரிக்கவும், ரத்தத்தின் தரக் குறைவால் உண்டாகும் பாண்டு, காமாலை, வீக்கம் ஆகிய நிலைகளிலும் ரத்தத்தின் மற்ற கோளாறுகளால் உண்டாகும் அரிப்பு, சொரி, குஷ்டம் போன்ற தோலைப் பற்றிய வியாதிகளிலும் உபயோகிக்கச் சிறந்தது.

அத்திப் பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறு சுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. ஆகையால் ஈரல், குலைக்கட்டி கண்ட குழந்தைகளும் இக்கனிகளை உட்கொள்ளலாம். சிறுநீர்க் கல்லடைப்பு தடங்கலை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது.

ஆங்காங்கு இறுகிய கழிவுப் பொருள்களைப் பக்குவப்படுத்தி இளக்கி வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது. சிறுநீரில் சர்க்கரை உள்ளவர்கள் கூட இக்கனியை உபயோகித்துக் குணம் பெறலாம். இக்கனிகளை அரைத்துக் கட்டிகளின் மேல் பழுப்பதற்காகப் பூசுவதுமுண்டு.

உபயோகிக்கும்விதம்:

1.பழங்களைப் பிரித்துத் தேனிலும் பொடித்த கற்கண்டிலும் துவைத்து உட்கொள்ளலாம்.

2.பிரித்த பழத்தினுள் பொடித்த கற்கண்டுத் தூளைச் செலுத்தி இரவு பனியில் வைத்திருந்து காலையில் உண்டுவர உடல் சூடு தணியும்.

3.அத்திப் பழம், பாதாம்பரும்பு, அக்ரோட் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரப் பருப்பு, பூனைக்காலி விதைப் பருப்பு, ஆப்பிள் விதை, ஏலக்காய், கல்கண்டு இவற்றைச் சம எடையாகப் பொடித்து, பசுவின் நெய்யில் கலந்து அத்துடன் சிறிது குங்குமப் பூ சேர்த்து, ஒரு வாரம் ஊறிய பின்னர் தினம் 10 – 15 மி.லி. வீதம் காலையில் உட்கொள்வதால் பலம், புஷ்டி ஏற்படும். ஆண்மை பெருகும்.

Posted in Alternate, Athi, Aththi, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Doctor, Herbs, Medicine, Natural | Leave a Comment »

Ayurvedha Corner – S Swaminathan: Natural therapy for Diabetes (High Sugar)

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை நோய் வருவது எதனால்?

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

வயது 63. கடந்த 25 வருடங்களாக சர்க்கரை நோயாலும், உயர் ரத்த அழுத்தத்தாலும் சிரமப்படுகிறேன். தற்போது வலது கை, இடது கால் மரத்துப் போகிறது. கால் பாத எரிச்சலும் உள்ளது. கூடவே மலச்சிக்கலும். பிராஸ்டெட் சுரப்பி வீக்கத்தின் காரணமாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் தூக்கமும் கெடுகிறது. இவை நீங்க வழி என்ன?

“குணகர்மவிகல்பம்’ என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவாகட்டும், செய்யும் செயலாகட்டும், சாப்பிடும் மருந்தாகட்டும் இவை அனைத்திலும் குணமும்; கர்மமும் நிறைந்துள்ளன. குணத்திற்கு உதாரணமாக எளிதில் செரிக்காதவை, எளிதில் செரிக்கக்கூடியவை, குளிர்ச்சியானவை, சூடானவை, எண்ணெய்ப் பசையை உடலுக்குத் தருபவை, வறட்சியை ஏற்படுத்துபவை போன்ற உணவு வகைகளைக் குறிப்பிடலாம். கர்மம் என்றால் செயலைச் செய்பவை, உதாரணமாகக் கடுக்காய்த் தோலைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்குகிறது, தேன் சற்று தூக்கலாகவும், நெய் சற்று குறைவாகவும் குழைத்து வாய்ப்புண்ணில் பூச அது விரைவில் குணமடைவதும் செயல்திறனால் ஏற்படுகின்றன.

இந்தக் குணமும் கர்மமும்தான் சர்க்கரை வியாதியையும் தோற்றுவிக்கின்றன. ஒரே இருக்கையில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்யும் உத்யோகம், அதிக நேரம் படுக்கையில் படுத்து உறங்குதல், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, நீர்வாழ் மிருகங்களையும் அதிகமாக உணவில் சேர்த்துச் சாப்பிடுதல், அடிக்கடி பால் சாப்பிடுதல், புதிய அரிசி, வெல்லத்தினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுதல் போன்ற காரணங்களால் நம் உடலில் நெய்ப்பு, குளிர்ச்சி, உடல்கனம், மந்தநிலை, ரத்தத்திலும், சதையிலும் கொழுப்பு, வழுவழுப்பு போன்ற குணங்கள் அதிகரிக்கின்றன. இதை வெளியேற்றுவதற்கான வழியை உடல் தேடுகிறது. சிறுநீரகம் இந்தக் குணங்களை இழுத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. இதை அறியாது காரணத்தைத் தொடரும்போது இந்தக் குணங்கள் ரத்தத்திலும் சிறுநீரிலும் மிகைப்பட்டு காணுவதால் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர்ப் பரிசோதனையில் நாம் சர்க்கரை நோயாளி என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு அதன்பிறகு தினமும் ஒரு பயம் காலந்த வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.

முன் குறிப்பிட்ட காரணங்களுக்கு நேர் எதிரான செயல்களைச் செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். அதாவது ஓர் இருக்கையில் அதிகம் அமர வேண்டாம், குறைந்தது ஒருமணிநேரமாவது நடக்கவேண்டும். பகல் தூக்கம் கூடாது, மாமிச உணவில் கட்டுப்பாடு, அரை லிட்டர் அளவுதான் பால், அரிசியைக் குறை, இனிப்புப் பண்டங்கள் வேண்டாம் போன்ற மருத்துவரின் கட்டளைகளை ஏற்று அவற்றிற்கு நேர் எதிரான கசப்பு, துவர்ப்பு, காரச் சுவைகளை உணவில் சேர்க்கத் தொடங்கும்போது பல ரஸôயன மாற்றங்களை நம் உடல் சந்திக்கிறது. இந்தச் செயல்களின் வாயிலாக, குடலில் வாயுவின் சீற்றம் மிகைப்படுகிறது. காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை வாயுவிற்கு மிகவும் அனுகூலமானவை. வாயுவின் சீற்றம் ஏற்படுவதால் நீங்கள் குறிப்பிடும் மரத்துப் போதல், கால் பாத எரிச்சல், மலச் சிக்கல், பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் போன்றவை ஏற்படும்.

குடலில் வாயுவின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த விளக்கெண்ணெய் நல்ல மருந்தாகும். விளக்கெண்ணெய்யை இளஞ்சூடாக வயிற்றின் மீது உருட்டித் தேய்க்கவும். வலது கீழ் வயிற்றுப் பகுதியில் தொடங்கி இடது பக்கமாகக் கீழ் வயிற்றுப் பகுதி வரை சுமார் 20-25 நிமிடங்கள் தடவி விடவும். தொப்புளின் உள்ளேயும் நன்றாக எண்ணெய்யை ஊறவிடவும். கை, கால் மரத்துப் போன பகுதிகளிலும், கால் பாதத்திலும் விளக்கெண்ணெய்யை வெதுவெதுப்பாகத் தடவவும். நன்றாக ஊறிய பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.

விளக்கெண்ணெய்யைக் கலந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளும் தங்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடும். சுகுமாரம் கஷாயத்துடன் 1/4, 1/2 ஸ்பூன் ஹிங்குதிரிகுணம் எனும் எண்ணெய் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. இம்மருந்து மலச்சிக்கலைப் போக்கி, பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். குடல் வாயுவின் சீற்றத்தை அடக்கி, நரம்புகளுக்கு வலுவூட்டும்.

Posted in Alternate, Blood sugar, Bloodsugar, Body, Cures, diabetes, Disease, Disorder, Doctor, Gas, insulin, Liver, medical, Natural, Potassium, Prostate, Restroom, Sodium, Sugar, Swaminathan, Therapy, Toilet, Urine, Water | 1 Comment »

Ayurvedha Corner – How to avoid knee pains & Arthritis cure: S Swaminathan

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூட்டு வலி குணமாக…

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

வயது 56. தொழுகையின்போது தரையில் தலை வைத்து எழுந்திருக்கும் போது, இருகால் முட்டியில் சத்தம் வருகிறது. வலியும் இருக்கிறது. குளிர் நாட்களில் மூட்டுக்கு மூட்டு வலி உள்ளது. தொண்டை கரகரப்புக்கு மருந்து சாப்பிடாவிட்டால் இருமல், தும்மல், மூச்சிரைப்பு ஏற்படுகிறது. இவை நீங்க மருந்து கூறவும்.

மூட்டுக்கு மூட்டு வலி வருவது இன்று பெருமளவில் காணப்படுவதற்கான காரணத்தை ஆயுர்வேதம் கீழ்க்காணும் வகையில் கூறுகிறது.

உப்பையும் புளியையும் காரமான சுவையையும் உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கும், சூட்டைக் கிளப்பும் உணவுப் பண்டங்களுடன் எண்ணெய்யைக் கலந்து அஜீரண நிலையில் சாப்பிடுவது, அதாவது மசாலா பூரி, பேல் பூரி, சமோஸô போன்றவை, குடலில் பிசுபிசுப்பை ஏற்படுத்தும் பிரட், சாஸ் வகைகள், நீர்ப்பாங்கான நிலைகளில் வாழும் உயிரினங்களை மாமிச உணவாகச் சாப்பிடுதல், புண்ணாக்கு, பச்சை முள்ளங்கி, கொள்ளு, உளுந்து, அவரைக்காய், தயிர், புளித்த மோர் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிடுதல், கடுங்கோபத்துடன் உள்ள மனநிலையில் உணவைச் சாப்பிடுதல், சாப்பிட்ட பிறகு பகலில் படுத்து உறங்குதல், இரவில் கண்விழித்து தூக்கத்தை கெடுத்துக் கொள்ளுதல் போன்றவை நம் உடலில் ரத்தத்தை கெடுக்கும். அதன்பிறகு செய்யப்படும் சைக்கிள் சவாரி, பஸ்ஸில் நின்றுகொண்டு செய்யும் பயணம் ஆகியவற்றால் ஏற்படும் வாத தோஷத்தின் சீற்றம், கெட்டுள்ள ரத்தத்துடன் கலந்து கால்பாதத்தின் பூட்டுகளில் தஞ்சம் அடைந்து பூட்டுகளில் கடும் வலியை ஏற்படுத்துகின்றன.

சூடு ஆறிப்போன பருப்பு வடை, பஜ்ஜியை சாப்பிட்டு, அதன்மேல் சூடான டீ குடித்து, சிகரெட் ஊதுபவர்கள் இன்று அதிகமாக டீ கடைகளில் காணப்படுகின்றனர். இவர்களுக்கு விரைவில் ரத்தம் கேடடைந்து மூட்டு வலி வர அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பூட்டுகளின் உள்ளே அமைந்துள்ள சவ்வுப் பகுதியும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயாமலிருக்க அவற்றின் நடுவே உள்ள எண்ணெய்ப் பசையும் தங்கள் விஷயத்தில் வரண்டுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு ஆகும் பட்சத்தில் எலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டு, அவை ஒன்றோடு ஒன்று உரசும் தருவாயில் வலியை ஏற்படுத்துகின்றன. பூட்டுகளின் அசைவுகள் எளிதாக இருக்க அதனைச் சுற்றியுள்ள தசை நார்கள் உதவி செய்கின்றன. குளிர்நாட்களில் தசை நார்கள் சற்றே இறுக்கம் கொள்வதால் பூட்டுகளின் அசைவுகள் எளிதாக இல்லாமல் மேலும் வலியை அதிகப்படுத்துகின்றன. நம் உடல் பாரத்தை தாங்குவதற்கான வேலையை கால் முட்டிகளும், கணுக்கால் பூட்டுகளும் முக்கியமாகச் செய்வதால் அவைகளை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய உடல் பகுதிகளாகும்.

உங்களுக்கு தொண்டை கரகரப்புக்கு மருந்து சாப்பிட வேண்டிய நிர்பந்தமும் உள்ளது. பூட்டுகளில் ஏற்பட்டுள்ள வலியும் போக வேண்டும். வாத-கப தோஷங்களின் சீற்றத்தை அடக்கி அவைகளை சம நிலைக்குக் கொண்டு வரும் மருந்துகளால் உங்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், ரத்தத்தில் உள்ள கேட்டையும் அகற்ற வேண்டும். அவ்வகையில் ஆயுர்வேத கஷாயமாகிய மஹாமஞ்சிஷ்டாதி சாப்பிட நல்லது. 15 மிலி கஷாயத்தில், 60 மிலி கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். குறைந்தது 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை மருந்தைச் சாப்பிடவேண்டும். முதல் பாராவில் குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்கவேண்டும்.

குளிர் நாட்களில் வலி கடுமையாக இருந்தால் முருங்கை இலை, எருக்கு இலை, புளி இலை, வேப்பிலை, ஆமணக்கு இலை, நொச்சி இலை, ஊமத்தை இலை, ஆமணக்கு இலைகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டுக் காய்ச்சிய வென்னீர் ஒத்தடம் கொடுக்க நல்லது. நொச்சி இலை, ஊமத்தை இலை, ஆமணக்கு இலை இம்மூன்றையும் நன்கு சிதைத்து வேப்பெண்ணெய்யுடன் விட்டுப் பிசிறி அடுப்பின் மேல் இரும்பு வாணலியிலிட்டு சிறிது வேகும்படி பிரட்டி, இளஞ்சூட்டுடனிருக்கும் போது அப்படியே வலியுள்ள பூட்டுகளில் வைத்துக் கட்ட வலி குறையும். வீக்கம் இருந்தால் அதுவும் வாடிவிடும்.

முட்டைக் கோஸ் இலை இலையாகப் பிரியக் கூடியது. ஒரு இலையை லேசாக தோசைக் கல்லில் சூடாக்கி முட்டியில் வலி உள்ள பகுதியில் போட்டு, 15, 20 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடவும். இது நல்ல வலி நிவாரணியாகும். பக்கவிளைவில்லாத எளிய சிகிச்சை முறையாகும். காலை இரவு உணவிற்கு முன்பாக இதுபோல செய்வது நலம்.

நீங்கள் உணவில் பருப்பு வகைகளைக் குறைக்கவும். குளிர்ந்த நீரைக் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்த வேண்டாம். வென்னீர்தான் நல்லது. பகலில் படுத்து உறங்கக் கூடாது. தினமும் சிறிது விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் சமமாகக் கலந்து இளஞ்சூடாக மூட்டுகளில் தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகுக் குளித்து வர, முட்டிகளில் சத்தம் வருவது நிற்பதோடு, வலியும் நன்றாகக் குறைந்து விடும்.

Posted in Advice, Alternate, arthritis, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, cure, Doc, Doctor, Fat, Herbal, Joints, Knee, legs, Medicine, Natural, pains, Swaminathan, Therapy | 2 Comments »

Adithan, Balachander, Nadar conferred honorary doctorates – Madras University convocation ceremony

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

சிவ்நாடார், வ.அய்.சுப்ரமணியம் உள்ளிட்ட 10 பேருக்கு டாக்டர் பட்டம்

“சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில்

  • பிரதமர் மன்மோகன் சிங்,
  • காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும்
  • முதல்வர் கருணாநிதிக்கு

கவுரவ டாக்டர் பட்டம் வழங்க திட்டமிடப்பட்டது. சில காரணங்களுக்காக அந்நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் 150வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமையில் நடந்த விழாவில்

  • எச்.சி.எல்., நிறுவனர் சிவ்நாடார்,
  • புள்ளியியல் பேராசிரியர் சி.ஆர்.ராவ்,
  • சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன்,
  • நரம்பியல் வல்லுனர் சி.யு.வேல் முருகேந்திரன்,
  • கல்வியாளர் உமையாள் ராமநாதன்,
  • தினத்தந்தி குழுமத்தின் இயக்குனர் சிவந்தி ஆதித்தன்,
  • சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சாந்தப்பா,
  • சினிமா இயக்குனர் பாலச்சந்தர்,
  • சாந்தலிங்கர் மடத்தின் தலைவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார்,
  • தமிழறிஞர் வ.அய்.சுப்ரமணியம்

ஆகிய 10 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பொருளாதாரத் துறை ஆய்விற்காக

  • மாநில திட்டக் குழு துணைத் தலைவர் நாகநாதனுக்கும்,

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை ஆய்விற்காக

  • ஏகாம்பரநாதனுக்கும் டி.லிட்., பட்டங்கள் வழங்கப்பட்டன.

கடல்சார் கல்வித் துறை ஆய்விற்காக

  • சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன்,
  • விலங்கியல் துறை ஆய்விற்காக முனுசாமி,
  • பயோகெமிஸ்டரி ஆய்விற்காக தேவராஜ்

ஆகியோருக்கு டி.எஸ்சி., பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் தன்னாட்சி கல்லுõரிகள், தொலைதுõரக் கல்வித் திட்டத்தில் பயின்றவர்கள் என மொத்தம் 59 ஆயிரத்து 23 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. சில காரணங்களுக்காக அந்நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப பல்கலைக் கழகங்களும், கல்லுõரிகளும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்கள் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு முதல்வர் கருணாநிதியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

பட்டமளிப்பு விழா உரையாற்றிய கவர்னர் சுர்ஜித்சிங் பார்னாலா, “ஆரம்பத்தில் இரண்டு பேருக்கு பட்டம் வழங்கிய சென்னை பல்கலைக் கழகம், தற்போது ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வருகிறது. பல்கலைக் கழகம் பட்டம் வழங்குவதுடன், மாணவர்களை முழு மனிதனாக உருவாக்க வேண்டும். வாழ்க்கையில் நிகழும் சவால்களை சந்திக்க அவர்களை தயார்படுத்த வேண்டும். பட்டம் பெறுவதுடன் கல்வி முடிவடைவதில்லை. அது ஒரு தொடர் நிகழ்வு. கற்பதற்கு உள்ள பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நாடு இளைஞர்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறது. இளைஞர்களின் கடின உழைப்பு தேசத்தை முன்னேற்றும்’ என்றார்.

சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் வரவேற்றார்.

Posted in Adithan, B Sivanthi Adithan, Balachandar, Balachander, Balachandhar, Balachanthar, Barnala, Ceremony, Chennai, convocation, Daily Thanthi, Doctor, doctorates, HCL, Honorary, Madras, Nadar, Pomudi, SivanthiAdithan, Thinathanthi, Thinathanthy, University | Leave a Comment »

Spurious Drugs – Health of the common citizen: Dinamani Editorial

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மருந்துகளில்கூட போலியா?

மருந்துகளில்கூட போலியா என்று, விவரம் தெரிந்தவர்கள் கேட்க மாட்டார்கள்; ஆனால் எந்த அளவுக்குப் போலி என்று யாருக்கும் தெரியாது.

உலக சுகாதார ஸ்தாபனம் என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.) இந்தியாவில் புழங்கும் மருந்துகளில் 35% போலி என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. இது உண்மைதானா என்று ஆராய மத்திய அரசு தீவிர முடிவெடுத்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருப்பது வயிற்றில் பாலை வார்க்கிறது.

இத்தகைய குற்றச்சாட்டுகளை ஆராயாமல் விடக்கூடாது என்று தீர்மானித்துள்ள அன்புமணி, அதற்காக 5 கோடி ரூபாயைத் தனியே ஒதுக்கியிருக்கிறார். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் தயாரிக்கப்படும், விற்கப்படும் மருந்துகளின் 3 லட்சம் மாதிரிகளை எடுத்து மத்திய, மாநில ஆய்வுக்கூடங்களில் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டிருக்கிறார்.

மருந்துகளின் தரம், விலை ஆகியவற்றை நிர்ணயிக்கவும் கண்காணிக்கவும், “மத்திய மருந்து ஆணையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற மசோதா தயாராகிவிட்டது. இது இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கிறது. இதை நாடாளுமன்றம் ஏற்று சட்டமாகிவிட்டால், எல்லா மருந்து, மாத்திரைகளும் மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களில் தொடர்ந்து சோதிக்கப்படும்.

கலப்படமோ, தரக்குறைவோ கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். புகாரின்பேரில் போலீஸ்காரரே வழக்குப் பதிவு செய்து மருந்து உற்பத்தியாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றங்களை நிறுவவும் அரசு உத்தேசித்துள்ளது.

இதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களை நவீனப்படுத்தி விரிவுபடுத்தவும், ஆய்வக ஊழியர்களுக்கு நவீன பயிற்சிகளை அளித்து, அதிக எண்ணிக்கையில் பணியில் அமர்த்தவும், மருந்து-மாத்திரைகளைக் கடைகளில் சோதிக்க அதிக எண்ணிக்கையில் மருந்து ஆய்வாளர்களை நியமிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆர்.ஏ. மஷேல்கர் தலைமையிலான நிபுணர் குழு ஏற்கெனவே இந்த விஷயத்தை ஆராய்ந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்து-மாத்திரைகளில் 10% தரக்குறைவானவை, 1% கலப்படமானவை என்று அந்தக்குழு அறிக்கை அளித்திருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.3,500 கோடிக்கு மருந்து மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

டாக்டர்கள், நுகர்வோர், அதிகாரிகள், மருந்து விற்பனையாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இணைந்து அக்கறையுடன் செயல்பட்டால், வெறும் லாப நோக்கத்துக்காக மருந்து தயாரிப்பில் ஈடுபடும் போலி நிறுவனங்களை விரட்டி விடலாம்.

விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கையின் கீழ் இப்போது 74 மருந்துகள் உள்ளன. இந்த வகையில் மேலும் 354 மருந்துகளைக் கொண்டுவர உரம், ரசாயனங்கள் துறை அமைச்சகம் உத்தேசித்துள்ளது. ஆனால் இதை மத்திய திட்டக்குழுவின் ஓர் பிரிவு எதிர்க்கிறது. இப்படிச் செய்தால் தொழில்முனைவோர் இத்துறையில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என்று எச்சரிக்கிறது. எந்த வியாபாரியும் சமுதாய நோக்கிலோ, சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவோ மருந்துகளைத் தயாரிப்பதில்லை என்பது உண்மைதான் என்றாலும், வெறும் லாப நோக்கு மட்டுமே உள்ளவர்களை இந்தத் துறையில் அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.

எந்தக் காலத்திலும் ஏழைகளால் வைத்தியச் செலவைத் தாங்க முடியாது என்பதைக் குறிக்க, “”ஏழைக் குடும்பம்-ராஜ வைத்தியம்” என்ற பழமொழியே உண்டு. எனவே தரம், விலை ஆகியவை தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைள் வரவேற்கத்தக்கவை. அதற்கு மக்களுடைய ஆதரவு என்றும் உண்டு.

Posted in Brand, Citizen, City, Criminal, dead, Disease, Doc, Doctor, druggists, Drugs, Duplicate, Fake, Fatal, godowns, Health, Healthcare, Hospital, ingredients, IT, Lab, Law, Manufacturing, Medicine, Metro, Needy, Operation, Order, Overdose, Patient, Pharma, Pharmaceuticals, Pharmacy, Poor, Rich, Rural, Sick, Spurious, Sting, Suburban, Tablets, Today, Village, Wealthy, WHO | Leave a Comment »

Education as basic right

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

அடிப்படை உரிமையாகுமா கல்வி?

எஸ். சையது இப்ராஹிம்

“நாடு முழுவதும் 90 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளில் கரும்பலகையே இல்லை. இவற்றுள் 21 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை’ என்ற அதிர்ச்சியூட்டம் புள்ளிவிவரம் அண்மையில் வெளியாகியுள்ளது.

கல்வித் திட்டமிடல், நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் என்ற அமைப்பின் உயர்குழு 35 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 11 லட்சத்து 24 ஆயிரத்து 33 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு இவ்வாறு அறிவித்தது.

கரும்பலகை இல்லாத பள்ளிகளை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் (8848), ஜார்க்கண்ட் (7645), பிகார் (5535) முன்னிலை வகிக்கின்றன.

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் கிராமங்களில் 83 சதவீதம் அரசுப் பள்ளிகள். கட்டடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்தப் பள்ளிகள் தவிக்கின்றன. சுமார் 1 லட்சம் ஆரம்பப் பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையில் நடந்து வருகின்றன. பல லட்சம் பள்ளிகளுக்கு அந்த வசதியும் கிடைக்காமல், மரத்தடியில் நடைபெற்று வருகின்றன.

பண்டைய காலத்தில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நாடு இந்தியா. உலகின் மிகவும் தொன்மையான நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது இந்தியாவில்தான். இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயின்றுச் சென்றனர். உலகப் பொதுமறை திருக்குறளில் கல்வியின் சிறப்பை வலியுறுத்தும் தனி அதிகாரமே உள்ளது.

இவற்றையெல்லாம் விட, உலகிலேயே கல்வியைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் இருப்பது இந்தியர்களிடம் மட்டுமே. கலைமகள் அல்லது சரஸ்வதி வழிபாடு இதையே காட்டுகிறது.

ஆனால், சுதந்திரம் அடைந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், இந்தியப் பள்ளிகளின் அவலம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் பாராமுகமே இதற்கு காரணம்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒவ்வோராண்டும் ஆரம்பப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2006-07-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. 2007-08-ம் கல்வியாண்டில் இது ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

2006-07-ம் ஆண்டு தொடக்கக் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 17,133 கோடி. இது 2007-08-ம் ஆண்டில் ரூ. 23,142 கோடியாக உயர்த்தப்பட்டாலும் இந்தத் தொகை போதுமானது இல்லை.

இதன் விளைவு என்ன? பொற்றோர்கள் வேறுவழியின்றி தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? மத்திய பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், கல்விக்கு சொற்பத்தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வருங்கால சந்ததியினரைத் தீர்மானிக்கும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பட்ஜெட்டில் பிற துறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும்.

ஒவ்வோராண்டும், மத்திய பட்ஜெட் தயாரிப்பின்போது தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டுக்கு முன் கல்வியாளர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மத்திய நிதியமைச்சர் கேட்க வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்த போது, விவசாயம் மற்றும் தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அரசின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது. இதை உதாரணமாகக் கொண்டு, நாட்டின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்விக்காக ஒரு ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ், கல்வி என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதனால், மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக் கழித்து வந்தது. இதைத் தடுக்க கல்வியை மத்திய -மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். எழுத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமைப் போல் கல்வியையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.

——————————————————————————————————————-
உயர்கல்வியில் குளறுபடி!

தமிழக அரசின் உயர்கல்விக் கொள்கையில் குழப்பம் நிலவுகிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த விஷயத்தில் உயர்கல்வி அமைச்சகத்தை மட்டுமே குறைகூற வழியில்லை. உயர்கல்வித் துறை பற்றிய தொலைநோக்குப் பார்வை நமது ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இந்தக் குளறுபடி.

எண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் அனுபவித்து வருகிறது. அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்களும் பொறியியல் வல்லுநர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையினரும் உலக அரங்கில் செயல்படுவதற்குக் காரணமே, அன்றைய அரசு, சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்ததால்தான். தனியார் பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 9 மட்டுமே; படிப்போர் 3662 பேர்; ஆனால், சுயநிதிக் கல்லூரிகளோ 238. கற்போரோ 70,145 பேர்.

அரசிடம் எந்த மானியமும் பெறாமல், தங்களது சொந்த முயற்சியில் இடங்களை வாங்கி, மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்புகளில் அனுமதியும் பெற்று, வங்கிகளில் கடன் வாங்கி இந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்களிடம் நன்கொடை வசூலித்து அவர்கள் வாங்கிய கடனை அடைக்கவும் செய்கிறார்கள்.

அவரவர் முயற்சியால் ஏற்படுத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கவோ, அவர்களது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தவோ அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது பரவலாக எழுப்பப்படும் கேள்வி. அது தனியார் நிறுவனமானாலும் சரி, பொதுத்துறை நிறுவனமானாலும் சரி, அதைக் கண்காணிக்கவும், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் நிச்சயமாக ஓர் அரசுக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் உண்டு. அப்படி இல்லாதபட்சத்தில், அந்த அரசுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும்.

அரசால் போதிய கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாத நிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் செயல்பாடுகளும் அவர்கள் வசூலிக்கும் கட்டணத் தொகையும் நிச்சயமாக அரசின் கண்காணிப்புக்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டதாக அமைந்தே தீரவேண்டும். அப்படி இல்லாமல்போனால், வசதி படைத்தவர்கள் மட்டும்தான் உயர்கல்வி பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடும்.

அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை இந்த சுயநிதிக் கல்லூரிகளில் பின்பற்றப்படும்போது, அரசின் கட்டணக் கொள்கை மட்டும் ஏன் பின்பற்றப்படக் கூடாது? அரசு சில வரன்முறைகளை விதித்து, அனைத்துக் கல்லூரிகளின் கட்டணமும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி உத்தரவிடுவதுதான் முறை. அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத கல்லூரி நிர்வாகத்தினரிடமிருந்து, அரசே அந்த சுயநிதிக் கல்லூரிகளை ஏற்று நடத்த முற்படுவதுதான் நியாயம்.

தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் நிதியுதவியும் கடனும் நிச்சயமாக அரசுக்குக் கிடைக்காதா என்ன? தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும்? இப்படியொரு சிந்தனையே அரசுக்கு ஏன் எழவில்லை என்பதுதான் புரியவில்லை.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணமும் இதர கட்டணங்களும் சேர்த்தே ரூ. 9 ஆயிரம்தான். தனியார் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கே ரூ. 3 லட்சம் வரை.

பயிற்சிக் கட்டண நிர்ணயம் என்பது இன்றியமையாதது. அதேபோல, நன்கொடை வசூலிப்பதற்கும் ஒரு காலவரம்பு விதிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஏன் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை என்பதுதான் புதிர். தெரிந்தும் தெரியாததுபோல் இருத்தல், மன்னிக்கவே முடியாத குற்றம்.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் கல்வி என்கிற நிலைமை ஏற்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமான விஷயம் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் கல்வியின் பயன் போய்ச் சேர வேண்டும் என்பது. பணமில்லாததால் படிக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்களின் ஆட்சியில் நிலவுதல் கூடாது!

—————————————————————————————————————-
மனித உரிமைக் கல்வி!

ஆர். நடராஜ்

வழக்கமாக நாம் காணும் ஒரு காட்சி – காலையில் சீவி முடித்து, சீருடை அணிந்து ஆரவாரத்துடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்; கிராமப்புறங்களில் இக்காட்சி இன்னும் அழகு. அணிஅணியாய் நடந்து செல்லும் காட்சி மனதுக்கு ரம்யமானது, நிறைவைத் தருவது.

“”பள்ளிக்குச் செல்வோம்”, என்று குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டியதை அறிவுறுத்தும் அரசு விளம்பரப்படம் எல்லோரையும் கவர்ந்திருக்கும். கல்விச் செல்வத்தின் சிறப்பினை திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.

10 ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் கல்வி தரவேண்டும் என்பதை அரசியல் சட்டம் வலியுறுத்தியுள்ளது. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21-ல் உள்ள தனிமனிதனின் சுதந்திரம்பற்றி விவரிக்கும்பொழுது, தரமான கல்வி இந்த அடிப்படை உரிமையில் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 2002-ஆம் ஆண்டு, அரசியல்சாசனத்தில் 21-ஏ பிரிவு சேர்க்கப்பட்டு, 6 முதல் 14 வயதுவரை குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று முக்கிய அடிப்படை உரிமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது, கல்வியானது, மனித உரிமைகளில் மிகவும் முக்கியமானது என்று பிரகடனப்படுத்தியுள்ளது.

கட்டாயக்கல்வி அடிப்படை உரிமை என்பதோடு, 14 வயதுக்கு உள்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத் தடையை மீறி, சிறுவர்களைப் பணியில் ஈடுபடுத்துபவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும் சில இடங்களில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது, வேதனை அளிக்கிறது.

சம்பந்தப்பட்ட அமலாக்கப்பிரிவு, குற்றம்புரிவோர்மீது நடவடிக்கை எடுத்தாலும், சமுதாயத்திற்கும் பொறுப்பு உள்ளது. சட்டத்துக்குப்புறம்பாகச் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்தும் நிறுவனங்களின் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சிறார் தொழிலாளர் உள்ள உணவு விடுதிகளை ஆதரிக்கக்கூடாது. உள்ளாட்சித்துறைக்குப் புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

தமிழகத்தில், ஆரம்பப் பள்ளிகள் 34,208, நடுநிலைப் பள்ளிகள் 8,017, உயர்நிலைப் பள்ளிகள் 5,046, மேல்நிலைப் பள்ளிகள் 4,536 உள்பட மொத்தம் 51,807 பள்ளிகள் உள்ளன. அடிப்படை வசதியோடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியிலும், மென்பொருள் வடிவமைப்பிலும் இந்தியர்கள் உலக அளவில் தலைசிறந்து விளங்குகிறார்கள். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நிலை, ஒவ்வொரு துறையிலும் வியாபித்துள்ளது. 2020-ல் இந்தியா முன்னணி நாடாக விளங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னேற்றத்தால் எல்லோரும் பயனடைய வேண்டும்; இந்த அபரிமித வளர்ச்சியின் நன்மைகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்தால்தான் சமுதாயம் ஆரோக்கியமாக விளங்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஆங்காங்கே நிகழும் தீவிரவாத சம்பவங்களும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் விரக்தியின் பிரதிபலிப்பு என்பதை உணர வேண்டும்.

தரமான கல்வி மூலம் இளைஞர்களின் மேன்மையான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. கல்வியால் பெறக்கூடிய முன்னேற்றமும் வாய்ப்புகளும் சாமானியர்களைச் சென்றடைய வேண்டும். சாதாரண கல்வி, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் என்ற நிலையை மட்டும் உருவாக்கும். ஆனால் இன்றைய தேவை, தரமான கல்வி.

சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்கள் பலர், பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்காக, விநாயகர் சிலைகளைக் கடலுக்குள் நீந்திச்சென்று கரைத்தனர். அச்சிறுவர்களில் பலர் பள்ளிக்குச் செல்வதில்லை, சென்றவர்கள் பாதியில் நிறுத்தியவர்கள்.

இவர்களது எதிர்காலம் என்ன? இவர்களின் நிலை உயர்வது எப்போது? இம்மாதிரி படிப்பை நிறுத்தியவர்களைக் கணக்கிட்டு, மேல்படிப்பைத் தொடர்வதற்கும், படிப்பை நிறுத்தாமல் பாதுகாப்பதையும் ஓர் இலக்காகக் கல்வித்துறை கொண்டுள்ளது. இருந்தாலும் இவ்விஷயத்தில் சமுதாயத்தின் பொறுப்புணர்ச்சியும், விழிப்புணர்ச்சியும் மிகவும் முக்கியம்.

திசை தெரியாமல், சமுதாய முன்னேற்றத்தில் பங்குபெறாமல் பரிதவிக்கும் இளைஞர்கள் தீயசக்திகளின் வலையில்சிக்கிச் சிதைவதோடு, சமுதாயத்திற்கும் ஊறுவிளைவிக்கும் நிலை ஏற்படும்.

கல்வி தனி மனிதனின் சொத்து அல்ல; சமச்சீர் கல்வி எல்லோருடைய பிறப்புரிமை. அதைப் பகிர்ந்துகொள்ள மறுப்பதும், விரிவடைய உதவாமல் இருப்பதும் ஒருவகை ஏகாதிபத்தியமே.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம், மனித உரிமைக் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 2004-ம் ஆண்டை மனித உரிமைக் கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது. மனித உரிமைக் கல்வி மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மேலும் பத்து ஆண்டுகள் முயற்சி தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டால், உரிமைகள் பறிக்கப்படும்பொழுது கேள்வி கேட்கும் உணர்வு ஏற்படும்.

உள்நாட்டு அமைதியைப் பாதுகாப்பதில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், சில மனித உரிமைமீறல் சம்பவங்கள் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. பிகார் மாநிலம் பாகல்பூரில் குற்றவாளியின் கண்களைக் குடைந்த சம்பவம், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும் ஜம்மு காஷ்மீரிலும் எழுந்துள்ள மனித உரிமைப் பிரச்னைகள், பிகாரில் காவல்துறை உதவி ஆய்வாளர், குற்றவாளியை மோட்டார்சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்ற சம்பவம், குஜராத்தில் “”சோராபுதீன் மர்ம மரணம்” – இவ்வாறு தொடர்ந்து மனித உரிமை மீறல் பிரச்னைகள் தலைதூக்குவது, காவல்துறைக்கு தலைக்குனிவு, சமுதாயத்திற்குப் பாதிப்பு.

மனித உரிமைகளைக் காக்கவேண்டிய காவல்துறையினரே மனித உரிமைகளை மீறினால் எப்படி? சீருடை அணிந்த காவல்துறையினர் சீறாமல், சீராகப் பணிபுரிய வேண்டும்; சீறிப்பாய்ந்தால்தான் மக்கள் மதிப்பர் என்பது தவறான அணுகுமுறை.

காவல்துறையின் செயல்பாடுகள் சீராகவும் மனிதநேயத்தை அடிப்படையாகவும் கொண்டிருக்க வேண்டும் என்றால் கல்வி வளர்ச்சி பெறவேண்டும்.

எழுத்தறிவில் பின்தங்கிய இடங்களில் மனித உரிமை மீறல் பற்றி முறையிட வேண்டும் என்ற விழிப்புணர்வு இருக்காது. தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஆண்டுதோறும் சராசரி 8,000 மனுக்கள் பெறப்படுகின்றன.

பொதுமக்களை அவமதிப்பது, குறைகளைக் கேட்க மறுப்பது, உரிய தகவல்தராமல் தட்டிக் கழிப்பது, வேண்டியவர்களுக்கு வசதிசெய்து தருவது, கையூட்டு பெறுவது, விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவது, அரசு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை பெற்றுத்தராமல் இருப்பது போன்றவையும் ஒருவகை மனித உரிமை மீறல்கள்தான்.

மக்கள் புகார் செய்வார்கள் என்ற நிலை இருந்தால்தான் அரசுத் துறைகளில், மனித உரிமை மீறல்கள் கூடாது என்ற உணர்வு மேலோங்கும். மனித உரிமை மீறல்களும் நாளடைவில் குறையும். இதற்கு அடிப்படை – கல்வி, எழுத்தறிவு, மனித உரிமை குறித்த கல்வியே!

(கட்டுரையாளர்: காவல்துறை கூடுதல் இயக்குநர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு).

Posted in Allocation, Analysis, BE, Bihar, Boards, Budget, Colleges, Doctor, DOTE, Education, Engg, Engineering, Expenses, Fees, Finance, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, MBBS, medical, Medicine, Planning, Price, Professors, Rajasthan, rights, Sarasvathi, Sarasvathy, Saraswathi, Saraswathy, Schools, Slates, Statistics, Stats, Statz, Students, Study, Teachers, Tech, Technology, University | 1 Comment »

Compulsory rural service required for Doctor graduation – Medical Education

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

State of MBBS – Analysis on Medical education « Tamil News


கட்டாய கிராமப்புற மருத்துவ சேவைஜி.ஆர்.ரவீந்திரநாத்

“கிராமப் பகுதிகளில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்கிறார்கள் என்ற காரணத்தைக் கூறி’ எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் கட்டாய சேவைசெய்ய வேண்டுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. இந்தச் சேவையை முடித்த பிறகுதான் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு தொழில் செய்ய முடியும். இதற்கேற்ப எம்பிபிஎஸ் படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தவும் மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.இச்சட்டம் இளம் டாக்டர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்கள் மருத்துவம் பயில்வதைத் தடுத்துவிடும். நமது மருத்துவக் கல்வி, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுக் கொள்கை ஆகியவற்றில் உலக வங்கியின் விருப்பங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலும் 70 சதவீத மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலும் இருப்பது வருந்தத்தக்கது. இதற்கு நமது சமூகப் பொருளாதார நிலைமைகளே காரணம். இந்தியாவில்

  • 3,043 சமுதாய மருத்துவ மையங்களும்
  • 22,842 ஆரம்ப சுகாதார மையங்களும்
  • 1, 37, 311 துணை மையங்களும்

உள்ளன என்று 2003-ம் ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13.3% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சமுதாய மருத்துவமனைகளில்

  • 48.6% அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள்,
  • 47.9% மகப்பேறு மருத்துவர்கள்,
  • 46.1% பொது மருத்துவர்கள்,
  • 56.9% குழந்தை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கிராமப் புறங்களில்

  • 75% அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும்
  • 73% மகப்பேறு மருத்துவர்களும்
  • 86% குழந்தை மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.

காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் அக்கறை காட்டாததும் பணி நியமனத் தடை ஆணையும்தான் இந்த நிலைக்குக் காரணம்.
நிரந்தர வேலைவாய்ப்பை வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகமாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிப்பதால் மருத்துவர்கள் அரசுப்பணிகளில் சேரத் தயங்குகின்றனர்.

கிராமப்புற மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தாததும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தங்க குறைந்தபட்ச வசதிகளைக்கூட செய்து கொடுக்காததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. பல சமுதாய மருத்துவ மையங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடமே இல்லை. நூற்றுக்கணக்கான மையங்களில் கழிப்பிட வசதியே இல்லை.

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்க கட்டாய கிராமப்புற சேவைதான் தீர்வு என்கிறது அரசு. கட்டாய கிராமப்புற சேவை பயனளிக்காது என்பதோடு, மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்பதுதான் இளம் மருத்துவர்களின் எதிர்வாதம்.

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 0.9% மட்டும் ஒதுக்கப்படுகிறது. உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதிஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஊரகப்புற மருத்துவமனைகளுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவம் தனியார் மயம் ஆவதும், பெரிய நிறுவனங்களாவதும் மருத்துவர்களை நகரங்களிலேயே குவியச் செய்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவமனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள்ளது. 1980களில் மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பு 22% ஆக இருந்தது. இன்று 16% ஆகக் குறைந்துவிட்டது.

மருத்துவர்களை நிரந்தர ஊழியர்களாகப் நியமித்து கிராமப்புறங்களில் 2 ஆண்டு கட்டாய சேவை செய்த பின்னரே பணிவரன்முறை செய்யப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வரவேண்டும். டாக்டர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. டாக்டர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.

கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றுவோருக்குக் கூடுதல் சம்பளமும் பதவி உயர்வில் முன்னுரிமையும் இதர சலுகைகளும் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம். இத்தகைய மருத்துவமனைகளில் மருத்துவர்களை பணியமர்த்த தனியாகவே சிறப்புப் பணி நியமன முறையைக் கையாளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடமாறுதல் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் மருத்துவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கலாம். ஒழுங்காகப் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

ஊழல் முறைகேடுகளை ஒழிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். கட்டாய கிராமப்புறச் சேவையில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களை பணியாற்ற வைப்பதால் மக்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. அரசின் புள்ளிவிவரப்படியே மகப்பேறு, குழந்தைகள்நல, பொது மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் பற்றாக்குறையே கிராமப்புறங்களில் உள்ளது. இதற்கு முதுநிலை படிப்பு படித்த டாக்டர்கள்தான் கிராமப் பகுதிகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர்.

இக்குறைபாட்டைப் போக்க இப்படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளித்து அவர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்பு படிக்கும் தனியார் மருத்துவர்களை ஓராண்டு காலம் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் முழு ஊதியத்துடன் பணியாற்றச் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் இந்தக் கட்டாயச் சேவையைக் கூட ரத்து செய்ய வேண்டும்.

தற்சமயம் ஆண்டுதோறும் இந்தியாவில் 29, 500 டாக்டர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆகஉயர்ந்துவிடும். ஒவ்வோராண்டும் இவர்களைக் கட்டாய கிராமப்புறச் சேவையில் தாற்காலிகமாகப் பணியமர்த்தினால் அது 40 ஆயிரம் டாக்டர்களுக்கான பணியிடங்களை நிரந்தரமாக ஒழித்துக் கட்டிவிடும். மேலும் இந்த திட்டத்துக்கான எம்பிபிஎஸ் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது சரியல்ல. ஒரு நபர் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்கி எந்தவிதமான தடங்கலும் இன்றி எம்சிஎச், டிஎம் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க குறைந்தபட்சம் 13 ஆண்டுகளாவது அவசியம்.

எம்பிபிஎஸ் படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தினால் அது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மருத்துவம் பயிலும் ஆர்வத்தைக் குறைத்துவிடும். திருமணம் போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பெண்களை மருத்துவ படிப்புக்கு அனுப்பத் தயங்குவர். பணபலம் உள்ள ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக் கல்வி மாறிவிடும்.

தற்பொழுது பிளஸ்2வில் உயிரியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இவ்வாண்டு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்த பலர், பொறியியல் படிப்புக்கு மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் வேலைவாய்ப்பை, உரிமைகளைப் பாதிக்காத வகையில் கிராமப்புற மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய ஆக்கப்பூர்வமாக அரசு முயலவேண்டும்.

(கட்டுரையாளர், சமூக சமதுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர்.)

——————————————————————————————————-
மாறட்டும் மருத்துவமனை நடைமுறைகள்!

இரா. சோமசுந்தரம்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், வெளியிடத்தில் “தனி ஆலோசனைகள்’ வழங்குவதும், தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் செய்வதும் நடைமுறையில் உள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அறுவைச்சிகிச்சைகள் மூன்று வகையாக நடைபெறுகின்றன.

அவை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கேயே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ஓரளவு குணமாகும்வரை தங்கி, பின்னர் வீடு திரும்புவோர். அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று, அதே அரசு மருத்துவர் ஆலோசனையின்பேரில் தனியார் மருத்துவமனையின் அறுவைக்கூடத்தில் சிகிச்சை முடித்துக் கொண்டு, தொடர் மருத்துவத்துக்கு அரசு மருத்துவமனை படுக்கைக்குத் திரும்புகிற அல்லது புறநோயாளியாக வந்து மருந்து பெற்றுச் செல்வோர். அரசு மருத்துவமனைக்கே வராமல், அரசு மருத்துவரின் தனிஆலோசனையைப் பெற்று, அவர் சொல்லும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை முடித்து வீடு திரும்புவோர்.

எந்தவொரு மருத்துவச் செலவையும் ஏற்கும் சக்தி இல்லாத பரம ஏழைகள்தான் முதல் வகை சிகிச்சை பெறுகின்றனர்.

“கார்ப்பரேட்’ மருத்துவமனைகளில் ரூ.50 ஆயிரம் செலவழிக்க வசதியில்லாமல், ரூ.20 ஆயிரத்தில் சிகிச்சையை முடித்துக் கொள்ள விரும்புவோர் மூன்றாவது வகையைத் தேர்வு செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை குறைவு.

நடுத்தர வருவாய்க் குடும்பத்தினர்தான் இரண்டாவது சிகிச்சையை மிக அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களால் மருத்துவத்துக்குத் தனியாக செலவு செய்யும் சேமிப்புகள் ஏதுமில்லை. நோய்வந்த பிறகே அந்த நோய்க்கான சேமிப்பு அல்லது செலவுத் தொகை ஒதுக்கப்படுகிறது. கார்ப்பரேட் மருத்துவமனை வாசலைக்கூட இவர்களால் மிதிக்க முடியாது. தனியார் மருத்துவமனைகளில் ஆலோசனை பெற்று, மருந்து வாங்கும் சக்தி இருந்தாலும், அறுவைச்சிகிச்சை, ஒரு வாரம் படுக்கையில் இருப்பது ஆகிய செலவுகள் அவர்களது ஓராண்டு வருமானத்தை விழுங்கக்கூடியவை. இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதே நேரத்தில் அறுவைச்சிகிச்சையை மட்டும் தரமான இடத்தில் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இந்த நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு இருக்கிறது.

அரசு மருத்துவமனையை நாடவும், அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தில்லாத சிகிச்சையை விரும்பவும் செய்யும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் இந்த தற்காப்பு முயற்சியை அரசு ஏன் சட்டப்படி முறைப்படுத்தக்கூடாது?

தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ வசதிகள் கொண்ட அறுவைக்கூடங்கள் உள்ளன. இவற்றில் நவீன துணைக் கருவிகளைக் கொண்டுள்ளவை மிகச் சிலவே.

தாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகளில் பல கோடி ரூபாய் செலவழித்து எவ்வளவு நல்ல எக்ஸ்-ரே கருவிகள், ஸ்கேன் கருவிகள் வாங்கி வைத்தாலும், அவை சில மாதங்களில் நிச்சயம் பழுதாகிவிடுகின்றன.

ஆகவே, எல்லா நகரங்களிலும் பரவலாக உள்ள தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக்கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ள சரியான அணுகுமுறையை அரசு உருவாக்கினால் பயனுள்ளதாக அமையும்.

தனிஆலோசனையின்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, என்டோஸ்கோபி, ஈசிஜி, எக்ஸ்-ரே, மருந்துகள், அறுவைக்கூடம் வாடகை எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் 15 சதவிகிதம், ஊக்கத்தொகையாக மருத்துவருக்கு அவர்களால் வழங்கப்படுவது என்பது ஊர் அறிந்த ரகசியம். இந்த ஊக்கத் தொகையை அரசு சட்டப்படி வழங்க முன்வந்தால், மருத்துவத்தில் பட்டுப்போன மனிதாபிமானம் மீண்டும் தளிர்க்கும்.

அரசு மருத்துவமனை மருத்துவர்களும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவது குற்றமல்ல. அவர்கள் திறமையானவர்களாக இருந்து அவர்களைத் தேடிவரும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகரிக்கும்போது அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனை அறுவைக்கூடங்களுக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் 20 சதவிகிதத்தை சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும், 20 சதவிகிதத்தை மருத்துவமனைக்கும் அளிக்க வகை செய்யலாம்.

வருமான வரி ஏய்ப்பு குறித்த தகவலைத் தருபவருக்கு, கண்டுபிடிக்கப்பட்ட வரிஏய்ப்புத் தொகையில் ஒரு பங்கை அரசாங்கமே அளிக்கும்போது, உயிரைக் காக்கும் மருத்துவருக்கும் அரசே சட்டப்படி கமிஷன் கொடுத்தால் என்ன தவறு?

தற்போது அரசு மருத்துவமனையில் பணியாற்ற திறமையான மருத்துவர்கள் தயங்குவதன் காரணம், அவர்களுக்கு வெளியில் நிறைய வருவாய் கிடைக்கிறது என்பதுதான். அந்த வாய்ப்பை அரசு மருத்துவமனையிலேயே ஏற்படுத்திக் கொடுத்தால் தவறில்லை; பணிபுரிய நிறைய மருத்துவர்கள் முன்வருவார்கள்.

விபத்து, தற்கொலை, வெட்டு, குத்து என்றால் முதலில் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்ற நிலைமை இப்போது இல்லை. தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று, காவல்நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யும் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இதேபோன்று தனியார் மருத்துவமனைகளின் அறுவைக்கூடங்களைப் பயன்படுத்தவும், அங்கே அரசு மருத்துவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கவும் புதிய மாற்றங்கள் இன்றைய தேவையாக இருக்கிறது.

———————————————————————————————————–
“கருணை’ என்பது கிழங்கு வகை!

இரா. சோமசுந்தரம்
மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்கு கிராமங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை மருத்துவ மாணவர்கள் எதிர்க்கின்றனர். போராட்டங்கள் நடத்துகின்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள், “நாங்கள் மக்களுக்கு எதிரியல்ல’ என்ற வசன அட்டைகளைத் தாங்கும்போதும் “குக்கிராமத்திலும் சேவை செய்ய நாங்கள் ரெடி, நிரந்தர வேலைதர நீங்கள் ரெடியா?’ என்ற வசன அட்டையை ஏந்தி நிற்பதைப் பார்க்கும்போதும் மருத்துவக் கவுன்சிலின் மெய்யான நோக்கத்தைப் புரிந்துகொண்ட பின்புதான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்களா என சந்தேகம் வருகிறது.

தற்போது நான்கரை ஆண்டுகள் படிப்பு, ஓராண்டு மருத்துவமனையில் தொழில் பழகுதல் என்ற அளவில் ஐந்தரை ஆண்டுகளாக உள்ள மருத்துவப் படிப்பு, கிராமப்பகுதியில் ஓராண்டு சேவையை வலியுறுத்துவதன் மூலம் ஆறரை ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் மருத்துவம் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

மருத்துவக் கவுன்சிலின் புதிய நடைமுறைப்படி, இந்த இளம் “மருத்துவர்கள்’ கிராமப்பகுதிகளில் ஓராண்டு பணியாற்றிய பின்னர் அவர்களது மருத்துவப் படிப்புக்கான சான்றிதழ் அளிக்கப்படும். அதன் பின்னரே அவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளை, சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர முடியும்.

மேற்படிப்புக்குத் தடையாக, ஓராண்டு கிராம மருத்துவ சேவை குறுக்கே வந்து நிற்பதை இம்மாணவர்கள் விரும்புவதில்லை. இந்தப் போராட்டத்தின் அடியிழையாக இருப்பது இந்த நெருடலான விஷயம்தான்.

கிராமங்களில் பணியாற்ற மருத்துவர்கள் வருவதில்லை என்பதுதான் அரசின் பிரச்னை. இந்த மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றத் தயார் என்றால் இவர்களுக்கு நிரந்தர வேலை தருவதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்?

மருத்துவக் கவுன்சில் குறிப்பிடும் ஓராண்டு கால கிராம மருத்துவ சேவைக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மாணவர்கள் முன்வைத்தால் அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புதிய திட்டத்திலும்கூட ஓராண்டு முழுவதும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அவசியம் ஏற்படாது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு தாலுகா அளவில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். நான்கு மாதங்களுக்கு சமுதாய நலக் கூடங்களில் பணியாற்ற வேண்டும். இதன்படி பார்த்தால், கடைசி நான்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்பகுதியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

அதிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்கள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைமை இருப்பதை மறுக்க முடியாது.

தங்களுடன் சமகாலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், நான்காவது ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைக்கப்பெற்று, கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றால், மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் ஆறரை ஆண்டுகள் என்று கேள்வி எழுப்புவது சரியானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.

சொல்லப்போனால், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் 5 ஆண்டுகள் படிப்பு மற்றும் ஓராண்டு தொழில் பழகுதல் என 6 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பட்டச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரி நீங்கலாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் பட்டம்பெறும் ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் அரசு மறைமுகமாக ஏற்கும் செலவினங்கள் பல லட்சம் ரூபாய் வரை ஆகின்றது என்பது இவர்களுக்குத் தெரியாதது அல்ல.

இவர்களில் 69 சதவிகிதத்தினர் அரசு இடஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்றவர்கள். அரசு தங்களுக்கு அளித்ததை ஈடு செய்யும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவும் ஓராண்டு மருத்துவ சேவையின்போது தங்கள் மருத்துவ அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இதனை ஏன் கருதக்கூடாது?.

படிப்பின் குறிக்கோள் பணம் என்றாகிவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல } மருத்துவப் பேராசிரியர்களுக்கும்!

அதிக அளவு தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்றைய சிக்கல் விநோதமானது. கற்பிக்கப் பேராசிரியர்கள் இல்லை.

திறமையானவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்காகச் சென்றுவிட்டனர். மிக அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லை.

குறைந்த மதிப்பெண்களுடன் பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது. அத்தோடு, ஏழையின் நோய்க்கு சிகிச்சையும் கிடையாது. புதுமைப்பித்தன் சொன்னதைப்போல, “கருணை’ என்பது கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டுவிட்டது!

———————————————————————————————————-
மருத்துவம் வெறும் வியாபாரமல்ல!

Dinamani Op-ed Sep 6, 2007/Thursday
படித்தவர்கள் பெரும்பாலும் சுயநலத்துடன் செயல்படுகின்றனர் என்பதற்கு இப்போதைய உதாரணம், கிராமசேவை செய்ய மறுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம். ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர்கள் ஓராண்டு காலம் கிராமப்புறங்களில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை இவர்கள் எதிர்ப்பது ஏன் என்பது புரியவில்லை. மருத்துவர்களுக்கு சமூகக் கடமை உண்டு என்பதை இவர்கள் உணர மறுப்பது நியாயமில்லை.

நம் நாட்டில் மருத்துவ வசதி நகரங்களில்தான் கிடைக்கிறது, கிராமப்புறங்களில் கிடைப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் பல கிராமங்கள் இப்போதும் நாட்டு வைத்தியத்தையும், முறையாக மருத்துவப் படிப்பு படிக்காத அரைகுறை போலி மருத்துவர்களையும் நம்பித்தான் இருக்கின்றன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. போதிய மருத்துவ வசதி இன்மையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவையும் ஒப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ). அமெரிக்கா மற்றும் வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில் ஆயிரம் பேருக்கு மூன்று அல்லது நான்கு மருத்துவர்கள் என்கிற நிலைமை இருக்கும்போது, இங்கே இன்னும் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமைகூட ஏற்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

ஒரு விஷயத்தை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் குக்கிராமம்வரை ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி மருத்துவ வசதி கிராமப்புறங்களைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் நமது மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டன. இதற்காக, நிதிநிலையறிக்கையில் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1951-ல் வெறும் 725 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தன. இப்போதோ ஏறத்தாழ 2 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் 5,842 பேருக்கு ஒரு மருத்துவர் என்றிருந்த நிலைமை மாறி இப்போது சுமார் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்போது, இந்தியாவில் சுமார் 6,50,000 மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது மருத்துவக் கழகக் குறிப்பு. ஆனால் இந்த மருத்துவர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் நகரங்களில்தான் இருக்கிறார்களே தவிர கிராமங்களில் இருப்பதில்லை. தங்களுக்கு வசதியான வாழ்க்கையும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடங்களும் கிராமங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களது வாதம்.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 73 விழுக்காடு மக்கள் வாழும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றிலும் மருத்துவர்கள் பெயருக்கு அவ்வப்போது வந்து போகிறார்களே தவிர சேவை மனப்பான்மையுடன் அங்கே தங்கிப் பணியாற்றுகிறார்களா என்றால் இல்லை. பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 11,000. இவர்களில் சென்னை உள்பட நகரங்களில் பணிபுரிபவர்கள்தான் சுமார் 7,500 பேர். அதேபோல, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் சுமார் 35,000 பேர் என்றால் இவர்களில் 21,000 பேர் நகரங்களில்தான் மருத்துவசேவை செய்கிறார்கள். சமூக சேவை, சமுதாயத்துக்குத் தங்களது பங்களிப்பு என்கிற வகையில், அசௌகரியங்களையும் வருமான இழப்பையும் கருதாமல் ஓராண்டு காலம் நமது மருத்துவர்கள் கிராமப்புற சேவையாற்ற முன்வர மறுப்பது, மருத்துவத் துறையின் மகத்தான சேவைக்கே களங்கம்.

மருத்துவப் படிப்பு தனியார்மயமாக்கப்பட்டதன் தொடர் விளைவுதான், “நாங்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற மாட்டோம்’ என்கிற மருத்துவர்களின் பிடிவாதத்துக்குக் காரணம். கிராமங்களில் சேவை செய்தால் வேலை நிரந்தரம் செய்து தர முடியுமா என்கிற எதிர்க்கேள்வி அர்த்தமில்லாததாகத் தெரிகிறது. இந்தியாவையும் இந்தியாவின் பெருவாரியான மக்களையும் அவர்களது அவலநிலையையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மருத்துவர்கள் இருந்தும் என்னதான் பயன்? இவர்களை உருவாக்க அரசும் சமுதாயமும் தனது வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும் என்று கேள்வி கேட்க யாருமே இல்லை என்பதுதான் அதைவிட வருத்தமான விஷயம்.

ஓராண்டு காலம் கிராமப்புற சேவையாற்றும் திட்டம் என்பது கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலைகளை நமது மருத்துவர்கள் அறிவதற்கு நிச்சயமாக வழிகோலும். வரவேற்கப்பட வேண்டிய இந்தத் திட்டத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு சமூக சிந்தனை இல்லை என்று சொல்வதா, இல்லை சுயநலத்திற்கு அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று சொல்வதா? மருத்துவம் வெறும் வியாபாரமல்ல என்பதை மறந்துவிடக் கூடாது!

———————————————————————————————————————————————————————-

தேவை, கிராமப்புற கட்டாய மருத்துவச் சேவை

நள்ளிரவைத் தாண்டிய நேரம்! தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனையின் வாயிலை ஒரு மாட்டுவண்டி அவசரமாகத் தாண்டுகிறது. அந்த வண்டி மகப்பேறு மருத் துவப் பிரிவை நோக்கி வருகிறது. வண்டியில் ஒரு பெண்ணின் முனகல் சப்தம்.
பயிற்சி மருத்துவர்களாகிய நாங்கள் அவ் வண்டியை நோக்கி ஓடி, வைக்கோலுக்கு நடுவே பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த அந்த கிராமத்துப் பெண்ணை, கைத்தாங்கலாகப் பிடித்து வந்து பிரசவ வார்டில் படுக்க வைத்தோம். பிரசவத் தின்போது தலை வருவதற்குப் பதிலாக குழந் தையின் ஒரு கை வெளியே வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கொண்டி ருப்பது தெரிந்தது.
உடனே மருத்துவச் சிகிச்சை அளித்தும் – குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிய வில்லை; அதிக உதிர இழப்பு காரணமாக தாயைக் காப்பாற்ற முடியவில்லை; ஏன் முடி யவில்லை? உடனே மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை; ஏன் முடியவில்லை? அவர்கள் இருந்த கிராமத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறப்பு மருத் துவ உதவி இல்லை. அந்தப் பெண் செய்த பாவம் ~ அவள் கிராமத்தில் வாழ்ந்ததுதான்.
இதைப்போல கிராமத்துத் தாய்மார்கள் சரியான சிகிச்சை கிடைக்காமல் இன்றும் மாண்டு போகிறார்கள். தாய்மார்களின் பிர சவ கால உயிரிழப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அப்படியே பிரசவமானா லும் பச்சிளங்குழந்தைகள் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறக்கும் விகிதத்தை நம் மால் கணிசமாகக் குறைக்க முடியவில்லை.
நாட்டின் முன்னேற்றத்துக்கு சுகாதார மேம் பாடும் முக்கியம். நிலைமை வேறாக உள்ளது.
கிராமத்தில் அனைவருக்கும் அடிப்படை மருத்துவ வசதி அத்தனையும் கிடைக்க வேண்டும். கனடா நாட்டிற்கு மேல்படிப்பு பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது அங்கு நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அவச ரமாகக் கொண்டு வருவதைக் கண்டு வியந்து போனேன். நம் நாட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு அடித்தளத்தில் இயங்குவது போல் டொரண்டோ நகரில் 20-வது மாடியின் மேல் தளத்தில் குழந்தைகள் மருத்துவமனை இயங் குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அங்கே கனடா மக்களின் உயிரைக் காக்க உல கத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை காப் பீட்டு உதவியுடன் அரசுதான் நடத்து கிறது. பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்க ஹெலிகாப்டர்கள் விரைந்து வருகின்றன. இங்கே வெள்ளத்தில் எத் தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதனைப் பார்க்க அமைச்சர் பெரு மக்களையும் அதிகாரிக ளையும் தான் ஹெலிகாப் டர் சுமந்து வருகிறது.
என்ன வித்தியாசம்! தாஜ்மகாலை உலக அதிசயம் என்று கொண்டாடுகிறோம். ஆனால் அது தன் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய காதல் மாளிகை என்றுதான் பலருக்குத் தெரியும்.
ஆனால் அவரது மனைவியார் பிரசவத்தின் போது இறந்ததையடுத்து அந்த தாஜ்மகால் கட்டப்பட்டது என்பது தனி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் ஒரு மருத்துவராக அந்த தாஜ்மகாலைப் பார்க்கும்போது எனக்கு அதன் கலைநயம் கண்ணுக்குத் தெரி யாது. பிரசவகால மரணங்களைத் தடுக்கும் ஒரு சின்னமாக இருக்க வேண்டும் என்ற எண் ணமேதான் மேலோங்கும். நமது மருத்துவர் கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமெரிக்கா வில் மட்டும் இருக்கிறார்கள் என்பது பெரு மையாக இருக்கிறது. அதனால் நம் நாட்டுக் குப் பயனில்லையே.
நம் நாட்டில் ஏறத்தாழ 450 மருத்துவக் கல் லூரிகளில் ஆண்டுக்கு 30,000 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றும், இன்னமும் கிரா மப் பகுதிகளில் தேவையான மருத்துவர்கள் இல்லை. 75 சதவிகிதம் இந்தியர்கள் கிராமத் தில் வாழ்ந்தாலும், அங்கே பணிபுரிவது வெறும் 20 சதவிகிதம் மருத்துவர்கள் மட் டுமே. போதாக்குறைக்கு அங்கே போலி மருத் துவர்கள் தொல்லை வேறு.
வெளிநாடு சென்ற மருத்துவர்கள் குண் டுக்கு அஞ்சி திரும்பியிருக்கிறார்களே தவிர, தொண்டு செய்வதற்காகத் திரும்பி வருவதில் லையே? 2020-ல் வல்லரசு நாடுகளில் ஒன் றாக நம் நாடு வளர வேண்டும் என்று நாம் கனவு காணும் வேளை யில், மகப்பேறு காலத்தில் தாய்மார் கள் உயிரிழக்கும் பரிதாபம், பெண் சிசுக்கொலை, பச்சிளம் குழந்தைக ளின் மரண விகிதம் போன்றவை இன்னும் நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. பிர சவ கால உயிரிழப்பை வளர்ந்த நாடுகள் தடுத் துவிட்ட நிலையில் நம் நாட்டில் அது தொட ரும் அபாயம் உள்ளது.
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக் கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் உயிரிழப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கி றது. இதுபோன்ற அவல நிலையை அடி யோடு நிறுத்த, மத்திய சுகாதாரத்துறையின் கிராமப்புற சேவைத்திட்டம் வரவேற்கத்தக் கதே. ஆனால் இளம் மருத்துவர்களைப் படித்து முடித்த கையோடு கிராமப்புறத்திற்கு அனுப்பி வைப்பதால் மட்டும் கிராமங்களில் மருத்துவத் தேவைகள் பூர்த்தியாகி விடாது.
கிராமப்புற மருத்துவப் பணிக்கான அடிப்ப டைக் கட்டமைப்பைச் சரி செய்ய வேண்டும்.
பணிமுதிர்ச்சி பெற்று ஓய்வு பெற்ற மருத்து வர்களை, கர்நாடக அரசு செய்வது போல் பணியமர்த்தி அவர்களின் மேற்பார்வையில் இளம் மருத்துவர்கள் கிராமங்களில் பணி யாற்றச் செய்யலாம். அவர்களுக்கான ஊதி யம் 8 ஆயிரம் என்பது இந்தக் காலகட்டத்தில் குறைவு என்பதை அரசு உணர்ந்து அதிகப்ப டியான ஊதியத்தை பணி ஊக்கக் கொடை யாக அளிக்க வேண்டும்.
அவர்கள் பணி செய்யும் இடங்களில் தங்கு மிடம், தொலைபேசி வசதி, வாகனவசதி எல் லாம் செய்து தர வேண்டும். மருத்துவக் கல் லூரிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தத்தெ டுத்து – ஆண்டு முழுவதும் மருத்துவ மாண வர்களை பயிற்சி காலத்திலேயே கிராம சேவைக்குப் பழக்க வேண்டும்.
ஒரு பக்கம் டெலிமெடிசின், மெடிக்கல் டூரி ஸம் என்று பெருமை பேசிக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் கிராமங்களின் மருத்துவ அவ லங்களை மறக்கவோ, மறைக்கவோ கூடாது.
ஏழை மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவக் கல்வி பெறும் மாணவர்கள் அவர் களுக்கு நன்றிக் கடனாக சிறிது காலம் சேவை செய்ய மறுத்து வெளிநாடு செல்ல நினைப் பது தவறுதான். இதில் போராடத் தேவை இல்லை. மருத்துவ மாணவர்கள் தங்கள் சமு தாயக் கடமையை உணர வேண்டும்.
கிராம சேவைத்திட்டத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டு மருத்துவர்கள் இறைவ னுக்கு அடுத்தபடியானவர்கள் என்ற மக்க ளின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டும். அரசும் அதற் கேற்ற மாதிரித் திட்டங்களை வகுக்க வேண் டும். தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்க ளையும் இதில் கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும்.
ஆசிரியர் தொழிலும் மருத்துவத் தொழி லும் புனிதமான பணிகளாக ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டவை. எனவே மருத் துவர்கள் தங்களுக்குள் ஓர் ஆத்ம பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் மருத்துவம் ஒரு சேவைத் துறையாக இருந்தது. தற்போது மருத்துவ மனை சார்ந்த தொழிலாகியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இளம் மருத்துவ மாணவர்களுக்கு சேவைக்கான நல்வழி காட்ட வேண்டியது அனைவரது கடமை.
மருத்துவச் சேவைக்கான அரிய வாய்ப் பைப் பெற்ற மருத்துவ மாணவர்கள் படித்து முடித்தபின் ஓராண்டு கிராம மக்களுக்கு மருத்துவம் செய்வதைப் பெரும் பேறாகக் கருதி இன்முகத்துடன் ஏற்றுச் செல்ல வேண் டும்.
அங்கே ஏழைகளின் சிரிப்பில் இறைவ னைக் காணலாம். அவர்களை கருணையு டன் தொட்டு வைத்தியம் பார்த்தால் நோய் பறந்து விடும். அங்கேதான் நீங்கள் கடவுளாக மதிக்கப்படுவீர்கள்!

கட்டுரையாளர்: நிறுவனர், பெண்சக்தி இயக்கம்.
———————————————————————————————————————————————————————-
நல்லது நடக்கிறது!

சுதந்திர இந்தியாவில் மருத்துவச் சேவையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். மருத்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளும் சென்னையில் இருக்கும் அளவுக்கு மற்ற பெருநகரங்களில் இல்லை என்றுதான் கூற வேண்டும். அதனால்தானோ என்னவோ, இந்தியா வின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், ஏன் உலகின் பல பாகங்களிலி ருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் நோயாளிக ளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது.
தனியார் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் தமிழக மருத்துவத்துறை, சாமானிய மக்களுக்குப் பயன்படும் அரசுத்துறை யில் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி யாருமே சிந்திப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால், அரசு மருத்துவம னைகளின் செயல்பாடு தனியார் துறைக்கு எள்ளளவும் குறையாத அளவுக்குத் தரத்திலும், சேவையிலும் இருக்கிறது என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். காரணம், அரசு மருத்துவமனைகளின் வெளிப்புறத் தோற்றமும், அன்றாடப் பராமரிப்பும்தான்! 29 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள்; 156 தாலுகா அரசு மருத்துவமனைகள்; 1418 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; இவையெல்லாம் போதாதென்று 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள். இத்தனை மருத்துவமனைகள் இருந்தும் மருத்துவச் சேவை அனைத்துத் தரப்பு மக்களையும் போய்ச் சேரவில்லை என் றால் அதற்கு முக்கியமான காரணம், மக்கள்தொகைப் பெருக்கம் தான்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியுள்ளவர் கள் கூடுமானவரை அரசு மருத்துவமனைகளை நாடுவதில்லை.
இதற்குக் காரணம் அவர்களது வறட்டு கௌரவம் அல்லது அரசு மருத் துவமனைகளில் சரியான சிகிச்சை கிடைக்காது என்கிற தவறான கண்ணோட்டம் போன்றவை. முடிந்தவரை அரசை நம்பாமல் தனி யார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடும்போது, உண்மையி லேயே வசதியற்றவர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அரசு மருத் துவமனைகளுக்குக் கிடைக்கிறது என்பதால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.
இப்போதும்கூட, பெருவாரியான நோயாளிகள் மருத்துவச் சிகிச் சைக்கு அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பி இருக்கின்றனர் என்ப துதான் உண்மை நிலை. விபத்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என் கிற தவறான கண்ணோட்டம் இப்போதும் இருப்பதால், அவசர சிகிச் சைப் பிரிவுகள் எந்தவொரு நேரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருக் கும் நிலைமை தொடர்கிறது.

தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 11.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாகவும் இவற்றில் 6.5 லட்சம் பிரசவங்கள் அரசு மருத் துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்கிற புள்ளிவிவரத்தை சமீபத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், கிராமப்புற மருத்துவ வசதிக்காகத் தமிழக அரசு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் அறிவித்தி ருக்கிறார்.

இப்போதும், சுமார் அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தனியார் மருத்துவமனைக ளில் பெரும் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாத நிலைமை தான். மருத்துவச் செலவுக்குக் கடன் வாங்கி அதனால் வறுமையில் வாடும் கிராமப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மருத்துவச் சேவையை ஏழை எளியோரும் பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும் என்கிற அரசின் நல்லெண்ணம் கட்டாயமாக வர வேற்கப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில், அரசு மருத்துவ மனைகளைத் துப்புரவு செய்தல், அடிப்படை வசதிகளை அதிகரித் தல் போன்றவைகளுக்குத் தன்னார்வ நிறுவனங்களையும், சமூக சேவை நிறுவனங்களையும் ஈடுபடுத்தினால் என்ன? அரசு ஏன்முயற் சிக்கக் கூடாது?

———————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 நவம்பர், 2007

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது

மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள்.

இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார்.

இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களை நியமிக்க கோரி பா.ம.க., போராட்டம்: ராமதாஸ்துõத்துக்குடி: “தமிழகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி பா.ம.க., போராட்டம் நடத்தவுள்ளதாக’ அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

துõத்துக்குடியில் அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதியை சந்தித்த மருத்துவ மாணவர்கள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இன்று வரை நுõதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நானும் ஒரு டாக்டர் தான். டாக்டர்கள் நலனுக்கெதிராக செயல்பட மாட்டேன்.

“கடந்த ஆட்சியில் மாதம் எட்டாயிரம் ரூபாயில் தொகுப்பூதியத்திற்கு அரசு டாக்டர்களை நியமித்த’ ஜெயலலிதா, தற்போது கிராமப்புற சேவையை எதிர்த்து போராடுவது கண்டனத்திற்குரியது. மருத்துவ மாணவர்களின் ஓராண்டு கட்டாய கிராமப்புற சேவை, வெறும் பேச்சளவில் தான் உள்ளது. அரசாணையோ, பார்லியில் சட்ட முன்வரைவோ, மசோதாவோ தாக்கல் செய்யப்படவில்லை. பிரச்னை விவாதப்பொருளாகத்தான் உள்ளது.

கட்டாய கிராமப்புற சேவை குறித்து மருத்துவ மாணவர்களிடம் மூன்று மணி நேரம் பேசிய மத்திய அமைச்சர் அன்புமணி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் குழு அமைத்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத போராட்டம் தமிழகத்தில் நடக்கிறது. மத்திய அமைச்சர் அன்புமணி டில்லியில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும், கிராமப்புற சேவை திட்டத்தை வரவேற்று உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் அதில் கலந்து கொண்டார். கையெழுத்து வேண்டுமானால் அமைச்சர் போடாமல் இருந்திருக்கலாம். தமிழக அமைச்சர் அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது ஏன்?

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அவர்கள் அபராதத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டு மருத்துவமனைகளில் அமெரிக்க தர சிகிச்சை தருவதற்குத்தான், மத்திய அரசு கட்டாய கிராமப்புற சேவை திட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது.

இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை துõண்டிவிட்டு அதை அரசியலாக்குகின்றனர். தமிழகத்திலுள்ள ஆயிரத்து 417 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரம் டாக்டர்களின் பணியிடம் காலியாக உள்ளது. நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அங்கு சென்று டாக்டர்கள் பணியாற்றலாம்.

அரசு மருத்துவக் கல்லுõரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு டாக்டராவதற்கு மக்கள் வரிப்பணம் ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து 645 டாக்டர்கள் படிப்பு முடிந்து வெளியே வருகிறார்கள்.

கிராமப்புற கட்டாய சேவை குறித்து மருத்துவ மாணவர்களுடன் பேச நானும், மத்திய அமைச்சர் அன்புமணியும் தயாராகவுள்ளோம். அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள டாக்டர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும், அங்கு மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த பா.ம.க., முடிவு செய்துள்ளது. அதுகுறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
————————————————————————————————————–

“அன்புமணிக்கு அருகதை இல்லை’: தா. பாண்டியன்

சென்னை, டிச. 14: எங்களைப் பற்றி பேச மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு அருகதை இல்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்களை, கிராம மக்களின் எதிரிகள் என்று அன்புமணி வர்ணித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸýம் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை அனைத்துக் கட்சிகள் மீதும் கூறிவருகிறார். இதை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது.

சிகிச்சை அளிப்பதால் மட்டுமே கிராம மக்களுக்கு சேவை கிடைத்துவிடும் என்று கூற முடியாது. கிராம மக்கள் சேவை என்றால், அவர்களுக்கு வேலை தரவேண்டும், தகுந்த ஊதியம், உற்பத்தி செய்கின்ற பொருள்களுக்கு நியாயமான விலை, கிராமங்களை இணைக்க தரமான சாலைகள், குடிநீர் வசதி மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு சரிவர ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். இதில் கடைசியில் வருவதுதான் மருத்துவ சிகிச்சை.

கேபினட் அமைச்சர் என்ற வகையில் அன்புமணி அங்கம் வகிக்கும் மத்திய சுகாதாரத் துறை, ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வித் துறைகளில் இதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை.

கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவராவது இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனரா? அல்லது ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனரா? என்ற விவரத்தை அன்புமணி வெளியிடவேண்டும்.

அதன் பின்னரே கிராம மக்கள் மீது அவர் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கைமீது இதுவரை நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்படவில்லை.

உண்மையில் கிராமப்புற சேவை செய்யவேண்டும் என்றால், மத்திய அமைச்சரவை செய்யத் தவறி இருப்பதை அன்புமணி கண்டித்திருக்கவேண்டும். இதைச் செய்யத் தவறிய அவருக்கு, குறைகளைச் சுட்டிக் காட்டும் எங்களைக் குறித்துப் பேச அருகதை இல்லை.

எம்.ஆர்.எஃப். தொழிலாளர் பிரச்னையை சுமூகமாக தீர்த்துவைத்து, கதவடைப்பை நீக்க நிர்வாகம் முன்வரவில்லை என்றால் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏரி மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு லட்சம் குடியிருப்புகளை இடிக்கப்போவதாக அறிவித்திருக்கும் பொதுப்பணித் துறையின் எச்சரிக்கையை நிறுத்திவைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் கோவையில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக, மக்கள் குடியிருக்கும் பகுதிகளை இடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதை தவிர்க்க மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னையைப் போக்க, அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து மின் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தா. பாண்டியன்.
————————————————————————————————————–

Posted in +2, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Biz, Business, Childbirth, Children, City, Clinic, College, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Compulsory, Consumer, Cost, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Critic, Customer, Doctor, Economy, Education, Empty, Engg, Engineer, Engineering, Extortion, facilities, Females, Force, Foreign, Free, GH, GI, Govt, Graduate, Graduation, Health, Healthcare, Higher, Hospitals, HSS, Info, infrastructure, Justice, Law, MBBS, MD, medical, Medicine, Metro, MMC, Money, Moore, Munnabai, Munnabhai, Needy, ObGyn, Op-Ed, Operation, Opportunity, Permanent, PlusTwo, Poor, Postgraduate, Postgraduation, Practice, Pregnancy, Private, Ramachandra, Ramadas, Ramadoss, Rich, Rich vs Poor, Royapettah, Rural, School, seats, service, Sicko, Specialization, Stanley, State, Statistics, Stats, Study, Suburban, surgery, University, Urban, voluntary, Volunteer, Wealthy, WHO, Women | 14 Comments »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to purify your Blood

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கருங்காலி!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

எனக்குத் தலையில் சிகப்பாக மருபோல் ஆங்காங்கே வளர்ந்துள்ளது. வளர்ந்து கொண்டே வருகிறது. சீப்பைத் தலையில் வைக்க முடியவில்லை. முனைப்பகுதி கூராக உள்ளது. வலியுடன் கெட்டியாக உள்ளது. மூக்கின் நுனியில் கருப்பாக முட்கள்போல் உள்ளன. இவை ஏன் வருகின்றன? மருந்து கூறவும்.

தலை மற்றும் மூக்குப் பகுதியில் அமைந்திருக்கும் தோல் பகுதியில் தங்களுக்கு ரத்தம் கெட்டுப் போய் மாமிசப் பகுதியில் உறைந்த நிலையில் இருப்பதையே இந்தக் குறிகள் தெரிவிக்கின்றன. தோலில் சஞ்சரிக்கும் ரத்தம் கெடுவதற்கு வெளிக் காரணங்களும் உட்புறக் காரணங்களும் பலவகையில் உள்ளன. பிறர் உபயோகிக்கும் சீப்பு, டவல், சோப், தலை கிளிப், தலையணை, தொப்பி, கைக்குட்டை, பவுடர் போடப் பயன்படுத்தும் பஃப், ரசாயனக் கலவை கொண்ட முகப்பூச்சுகள் போன்றவை சில வெளிப்புறக் காரணங்கள். ரத்தத்தைக் கெடவைக்கும் அதிக சினம், வருத்தம், அச்சம், பட்டினி கிடத்தல், உடல் சூட்டைக் கிளப்பும் காரம், புளி, உப்புச் சுவை கொண்ட உணவுப் பொருள்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுதல், எண்ணெய், புண்ணாக்கு, கொள்ளு, கடுகு, மீன், ஆட்டிறைச்சி, தயிர், திரிந்த மோர், புளிப்பான பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவது உட்புறக் காரணங்கள். பகல் தூக்கம், நெருப்பின் அருகில் வேலை செய்தல், வெயிலில் அலைதல், வெயிலில் அலைந்து வந்தவுடன் குளிர்ந்த தண்ணீரில் உடனே குளித்தல், குடித்தல் போன்ற செய்கைகளாலும் உடலில் பித்தமும் ரத்தமும் கேடடைந்து தோலில் நீங்கள் குறிப்பிடும் உபாதைகளைத் தோற்றுவிக்கின்றன.

வந்துள்ள இந்த உபாதை நீங்குவதற்கு நீங்கள் மேற்குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்க வேண்டும். அதன் பிறகுதான் மருந்துகளைச் சாப்பிட முழுப் பலனை எதிர் பார்க்க இயலும். தோல் பகுதியின் அடியில் சீற்றமடைந்துள்ள கெட்ட ரத்தத்தை கொத்தி எடுப்பதன் மூலமாக உடனடி நிவாரணம் கிடைக்க வாய்ப்புண்டு. மருந்துகளைச் சாப்பிடுவதால் அவை குடல் பகுதியிலிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் வழியாகத் தலைப்பகுதியிலுள்ள தோல் பகுதிக்கு வந்து கெட்டுள்ள ரத்தத்தைச் சுத்தம் செய்வதற்குக் காலதாமதமாகலாம்.

நீங்கள் பெண் என்பதாலும் இது விஷயத்தில் சகிப்புத்தன்மை குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாலும் இரண்டாவது வகையான மருந்து சாப்பிடுவதையே சரியென தீர்மானிக்கலாம். அந்த வகையில் ஆயுர்வேத மருந்தாகிய சோணிதாமிர்தம் எனும் கஷாயத்தை 15 மிலி எடுத்து 60 மிலி கொதித்து ஆறிய தண்ணீருடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. “சோணிதம்’ என்றால் ரத்தம், அதற்கு அமிருதம் போன்றதால் இந்தக் கஷாயத்தை சோணிதாமிர்தம் என்று குறிப்பிடுகிறார்கள். மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மஹாதிக்தகம் எனும் கஷாயத்தை மேற்குறிப்பிட்ட கஷாய அளவில் சாப்பிட ரத்தசுத்தி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் தலைக்கும் மூக்கினருகிலுள்ள கருப்பு முட்கள் போன்ற பகுதிகளில் நால்பாமராதி தைலத்தை ஊறவைத்து பச்சைப்பயிறு, வேப்பிலை, ஆரஞ்சுப்பழத்தோல் பொடியினால் கழுவ பயன்படுத்தவும். இந்தத் தைலத்தைக் காலை இரவு இருவேளை உணவிற்கு முன்பாக ஒரு மணி நேரம் ஊற விடவும்.

ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதில் கருங்காலி வைரத்திற்கு (கட்டை) நிகராக எதையும் குறிப்பிட இயலாது என்பதால் பத்து கிராம் கருங்காலியை அரை லிட்டர் தண்ணீரில் சீவிப்போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி சாதாரண தண்ணீருக்குப் பதிலாகக் குடிக்கப் பயன்படுத்தவும். மனதில் பதட்டம், படபடப்பு போன்றவை ஏற்படாத வண்ணம் அமைதியாக இருக்க பழகிக் கொள்ளவும். “தைவவியபாச்ரயம்’ எனும் தைவ வழிபாடும் மிகவும் உயர்ந்த முறையாகவே ஆயுர்வேதம் குறிப்பிடுவதால் “சண்முககவசம்’ எனும் முருகனுக்கு உகந்த பாடலை மனமுருகப் பாடி கோயிலுக்குச் சென்று கல் உப்பு கொட்டி வரவும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Blood, cure, Doc, Doctor, haemoglobin, Health, Healthcare, Hindu, Hinduism, Iron, medical, Medicine, Nutrition, Plasma, Platelets, Rbh, Religion, Swaminathan, Tablet | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Nochi for Asthma

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

மூலிகை மூலை: ஆஸ்துமாவுக்கு நொச்சி!

விஜயராஜன்

மூன்று அல்லது ஐந்து கூட்டு இலைகளை எதிர் அடுக்கில் பெற்ற சிறுமர வகையைச் சேர்ந்தது. இலைகள் வெகுட்டல் மணம் உடையவை. இலை சிறு நீர் பெருகுவதற்கும் நோய் நீக்கி உடலைத் தேற்றுவதற்கும் மாதவிலக்கை ஒழுங்கு செய்வதற்கும் நுண் புழுக்களைக் கொல்லுவதற்கும் பயன்படுகிறது. பட்டை, காய்ச்சல் போக்கும். தமிழகம் முழுவதும் தானாகவே வளரும்.

வேறு பெயர்கள்: அக்கினி, அதிக நாரி, அணிஞ்சில், அதிகனசி, அதி கற்றாதி, அதியூங்கி, அரி, கொடிவேலி, சிற்றாமுட்டி, செங்கோடு வேலி, முள்ளி.

வகைகள் : கருநொச்சி, வெறி நொச்சி.

கருநொச்சி : இலைகள், பட்டைகள் கருப்பு நிறமாக அமைந்து இருக்கும். இதன் இலைகள் உள்ளங்கையளவு நீள அகலத்தில் இருக்கும்.

ஆங்கிலத்தில் : vitex negundo, liss; Verbenaceae.

மருத்துவ குணங்கள்:

நொச்சி, நுனா, வேம்பு, பொடுதலை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் மிளகு 4, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளை 3 நாளுக்குக் கொடுக்க மாந்தம் குணமாகும்.

நொச்சியிலை 1 கைப்பிடியளவு, மூக்கிரட்டை வேர், காக்கரட்டானி வேர் வகைக்கு 1/2 கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு 1, மிளகும், சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு தினமும் 2 வேளையாக, 1 வாரம் குடித்துவர தொடக்க நிலையில் உள்ள இளம் பிள்ளை வாதம் (போலியோ) குணமாகும்.

நொச்சி இலை 2, மிளகு 4, இலவங்கம் 1, சிறிய பூண்டுப் பல் 4 சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இரைப்பிருமல் (ஆஸ்துமா), மூச்சுத் திணறல் குணமாகும். தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும்.

நொச்சி இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, மிளகுத்தூள் 1 கிராம், சிறிது நெய்யும் சேர்த்து கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்து, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். (இச்சா பத்தியத்துடன், பாகற்காய், அகத்தி, மீன், கருவாடு நீக்கி உணவு உட்கொண்டு தீவிர ஆசையைத் தவிர்க்க வேண்டும்).

நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பை மேனி, ஆடா தொடை, நாயுருவி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து, முக்கால் அளவு நீருள்ள வாய் அகன்ற மண் கலத்தில் கொதிக்க வைத்துச் சூடு செய்த செங்கல்லைப் போட்டு வேது பிடிக்க வாதம் அனைத்தும் குணமாகும். வாரத்துக்கு 2 முறை செய்யலாம்.

நொச்சியிலையைத் தலையணையாகப் பயன்படுத்த மண்டை இடி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்புவலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) குணமாகும்.

நொச்சி இலைச் சாறு 5 மில்லியளவு எடுத்து பசுங் கோமியம் 5 மில்லியளவுடன் கலந்து 2 வேளை குடித்து வர கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் வீக்கம் குணமாகும்.

நொச்சி இலைச் சாறை கட்டிகளின் மீது இரவில் பற்றுப் போட்டுவர கட்டிகள் கரைந்துவிடும்.

நொச்சிச் சாற்றை நரம்புப் பிடிப்பு, தலைநோய், இடுப்புவலிக்குத் தேய்த்துவர குணமாகும்.

Posted in Alternate, Asthma, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Doc, Doctor, Health, Healthcare, Herbs, Medicine, Mooligai, Naturotherapy, Nochi, Tablets | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Manathakkali & Nilavembu

Posted by Snapjudge மேல் ஜூலை 19, 2007

மூலிகை மூலை: குடல் புண்ணைக் குணமாக்கும் மணத்தக்காளி

விஜயராஜன்

கொப்பும் கிளையுமாக 3 அடி வரை செழுமையாக வளரும். வேர்கள் கொத்துச் செடிகளுக்கு இருப்பதுபோல இருக்கும். மிளகைவிட சற்றுப் பெரிய காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். இது சிறுசெடி இனம். இதைக் கீரையாகவும் பயன்படுத்தலாம். தமிழகம் எங்கும் மழைக் காலத்தில் ஈரப் பசை உள்ள இடங்களிலும் தோட்டங்களிலும் தானாகவே வளரும். இதில் கருப்பு, சிவப்பு என இரு வகையுண்டு. இரண்டுக்கும் பெரிய வேற்றுமை இல்லை.

வேறு பெயர்கள்:

மணித்தக்காளி, மிளகுத் தக்காளி, உலகமாதா, விடைக்கந்தம், கண்ணிகம், காகதேரி, காளி, துகமாசி, குட்டலத் தக்காளி, வனங்காத்தாள், காகசிறுவாசல், ரெத்தத்திர மானப் பழத்தி, சுரனாசினி, வாயசம், காமமாசி.

ஆங்கிலத்தில்: Solanum Nigrum.

மருத்துவக் குணங்கள் :

இதன் பழத்தைச் சுத்தம் செய்து கொஞ்சம் தயிர் கலந்த உப்பில் சிறிது நேரம் ஊற வைத்து வெயிலில் காய வைத்து கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்தவும். இதை வற்றலாக எண்ணெய் விட்டு வறுத்து சாப்பிட்டுவர, உடல் சூட்டைச் சமப்படுத்தி, மலச்சிக்கலைப் போக்கும். ஆனால் வயிற்றுக் கழிச்சல் உள்ளவர்கள் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.

இதன் கீரையை உணவுடன் சேர்த்து உண்டு வர மூலம் நாளடைவில் குணமாகும்.

மணத்தக்காளி இலைச் சாறுடன் சிறிது நெய் கலந்து பூசிவர அக்கி குணமாகும்.

மணத்தக்காளி சாறு 50 கிராம் அளவு எடுத்து அத்துடன் காயத்துண்டு பொடியுடன் சேர்த்து 2 முறை குடித்துவர இடுப்பில் வலி, பிடிப்பு குணமாகும்.

மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்து அதில் சிறிது நெய்விட்டுக் காய்ச்சி தண்ணீர்ப்பதம் நீங்கியவுடன் அதை வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்துவர ஈரலில் உள்ள வீக்கம், குடல்புண் நெஞ்சு எரிச்சல், வயிற்றில் உள்ள கட்டிகள் கரையும்.

மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்துக் காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர உடம்பில் உள்ள துர்நாற்றம் பேதியாகி வெளியேறும். இதே ரசத்தில் சிறிது தேன் கலந்து வாய் கொப்பளிக்க நாள்பட்ட வாய்ப்புண் ஆறும்.

மணத்தக்காளி இலையைக் கசக்கி 1/2 சங்களவு குழந்தைகளுக்குக் கொடுத்துவர, மலபந்தம் நீங்கும்.

———————————————————————————————-

நிலவேம்பு

கசப்புச் சுவையுடைய நீண்ட இலைகளையும் நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளையும் உடைய சிறுசெடி இனமாகும். கொப்பும் கிளையுமாக 2 1/2 அடி வரை வளரும். செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. காய்ச்சலைப் போக்கவும், பசி உண்டாக்கவும் தாதுவைப் பலப்படுத்தவும், முறை நோயைப் போக்கும் குணமும் உடையது. எல்லா மண்ணிலும் தானாகவே வளரக்கூடியது.

வேறு பெயர்கள்: சாகண்ட தித்தம், நித்தார கோசா, கிராதித்தம், கிரார்த்தம், பூ நிம்பர், சாரி தீர்த்தம், கயிராதோ, லேமசனம், சிலேத்து மாதி சோபாக்னி.

ஆங்கிலப் பெயர் : Andrograpis paniculata, Nees

மருத்துவக் குணங்கள்:

நில வேம்பு இலை, கண்டங்கத்திரி வேல் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து, சுக்கு 10 கிராம், சேர்த்து அரைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வர, மலேரியா காய்ச்சல் குணமாகும்.

நிலவேம்பு இலையுடன், குப்பை மேனி, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சமஅளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பசும் பாலிலோ அல்லது ஆட்டுப் பாலிலோ கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, மஞ்சள் காமாலை குணமாகும்.

நில வேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்திக்கொடி வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவாக மூன்று வேளை குடித்து வர, குழந்தைகளுக்கு வருகின்ற எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Doc, Doctor, Health, Healthcare, Herbs, Manathakkaali, Manathakkali, medical, Medicine, Mooligai, Moolikai, Naturotherapy, Neem, Nilavembu, Nilavempu | 23 Comments »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to overcome Diabetes

Posted by Snapjudge மேல் ஜூலை 19, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்!: உப்பைக் குறைக்கும் வழி!

பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன்

சர்க்கரை வியாதி பதினெட்டு ஆண்டுகளாக உள்ளது. கால்கள் வீங்கி இருக்கிறது. டாக்டர் உப்பு அதிகமாக உள்ளது என மாத்திரை கொடுத்தார். சரியாகவில்லை. வலியினால் வலது கையை சரியாகத் தூக்கக்கூட முடியவில்லை. உப்பைக் குறைக்க வழி என்ன?

நீரில் உப்புள்ளவர்கள் உப்பைக் குறைப்பதால் அல்லது உப்பை அறவே நீக்குவதால் சிலருக்குக் குணமாகிறது. சிலருக்கு எத்தனை உப்பில்லாப் பத்தியமிருந்தாலும் குறைவதில்லை. நோய்க்கும் பத்திய உணவிற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்வது அவசியம். உடலில் உள்ள கப தாதுவான லஸீகை (albumin)சிறுநீர் வழியே வெளியேறுவதே இந்நோய். கப தாதுவை நீர் வழியே வெளியேறாமல் தடுக்கும் சக்திபெற்ற சீறு நீரகங்கள் இதைத் தடுப்பதில்லை. அதற்குக் காரணம் அவை முழுவதிலுமோ சில பகுதிகளிலோ புண்ணாகி அந்தப் பலவீனத்தால் இது வெளியேறக்கூடும். ரத்தத்திலுள்ள இந்த லஸீகை அதன் இயற்கைத் தடிப்பு குறைந்து சிறுநீரகங்களின் சல்லடைகளில் தங்காமல் வெளியேறியிருக்கலாம். சிறுநீரகங்களில் ரத்த ஓட்ட அழுத்தம் அதிகமாகி அழுத்தத்தால் அது வெளியேற்றப்படலாம். இப்படிப் பல காரணங்களால் கபாம்சமான ஆல்புமின் எனும் லஸீகை சிறுநீரில் காணக்கூடும். எல்லா நிலைகளிலும் உப்பை நீக்குவதும் அல்லது அளவைக் குறைப்பதும் உதவலாம். ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றிவரும் இந்த லஸீகை கேடுற்றால் ஆங்காங்கு தங்கி ரத்த ஓட்டத்தைத் தடை செய்து வீக்கத்திற்குக் காரணமாகும். கேடடைந்த லஸீகையினால் சிறுநீரகங்களும் கெடக்கூடும். இத்தகைய நிலைகளில் உப்பைக் குறைப்பது உதவுகிறது.

பொதுவாகவே இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையுள்ளவை கபத்தை அதிகப்படுத்தும். கபம் கெட்டுள்ள நிலையில் இவற்றைச் சேர்க்க கெட்ட கபத்தின் அளவும் செயலும் அதிகமாகும். இவற்றைக் குறைக்க கபம் குறையும். இம்மூன்று சுவைகளிலும் குறிப்பாக உப்பு கபத்தின் பிசுபிசுப்பைக் குறைத்து நீர்க்கச் செய்து அளவில் அதிகமாக்கும். சிறுநீரின் வழியே வெளியாகும். லஸீகை நீர்த்து அதிக அளவில் வெளியாவதால் கபத்தின் அந்த வளர்ச்சியை அதிகப்படுத்தும் உப்பைக் குறைப்பதால் ரத்தத்தில் கபம் வளரத் தக்க சூழ்நிலை அகற்றப்படுவதால் உடல் வீக்கம் குறைகிறது. ரத்த ஓட்டத் தடை குறையக் குறைய ரத்தக்குழாய்களின் உட்புறப்பூச்சு தடிப்பும் குறைய குழாய்கள் பூர்ண அளவில் விரிந்து சுருங்குகின்றன. ரத்த ஓட்டம் அதிகமாக அதிகமாக உடலில் ஆரோக்கியம் ஏற்படுகிறது.

நீங்கள் உணவில் உப்பை நீக்க வேண்டும் என நினைத்து இட்லி, தோசையில் அதைச் சேர்க்காமல் சாப்பிட்டாலும் உங்கள் உபாதை குறைய வாய்ப்பில்லை. காரணம் இட்லி, தோசையிலுள்ள உளுந்து நுண்ணிய ரத்தக் குழாய்களின் உட்பூச்சை அதிகப்படுத்தி குழாய்களைத் தடிக்கச் செய்யும். உப்பு சேர்க்காததால் வரும் வினையிது. உப்பு சேர்த்தால் இட்லி, தோசை போன்றவை எளிதில் செரித்துவிடும். உப்பில்லாத பண்டம் எளிதில் செரிக்காததால் அதன் சத்து பிரிக்கப்படாமலேயே உடலில் குப்பை கழிவுப் பொருள் தேங்கும் பெருங்குடலில் போய்ச் சேரும். அப்படியே வெளியாகும். செரிக்காத உணவே மறுபடியும் கபதோஷ வளர்ச்சிக்குக் காரணமாகி வளர்ந்து நோய் மாறுவதில்லை.

பாகற்காய், சுண்டைக்காய், வாழைக்கச்சல், கொள்ளு, பாசிப்பருப்பு, வாழைப்பூ, மணத்தக்காளி, கறிவேப்பிலை, நெல்லிமுள்ளி, நன்கு கடைந்து ஆடை எடுத்த மோர், ஆடை புடைக்க இளந்தீயில் காய்ச்சி ஆடை நீக்கிய பசுவின் பால், வல்லாரைக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை முதலியவை உணவில் சேரச்சேர கபம்தானே குறைந்து சிறுநீர் தெளிவாக வெளியேறுவதை உணரலாம். தயிர், பச்சரிசி, அதிக இனிப்பு, வெல்லம், பகல் தூக்கம், உளுந்து முதலியவற்றைத் தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற கபம் சம்பந்தப்பட்ட நீர் நோய்களில் கசப்பும் துவர்ப்பும் மிக்க மருந்து சரக்குகளைக் கொண்ட கஷாயங்கள் நல்ல பலனைத் தருகின்றன.

Posted in Advice, Alternate, Avoid, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, cure, diabetes, Diet, Doc, Doctor, Health, Healthcare, Herbs, medical, Medicines, Natural, Patient, Salt, Sugar, Swaminathan, Tablet, Tips, Treatment | 1 Comment »