Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Disruption’ Category

TN faces power crisis – Unannounced Electricity cuts to end by capacity addition & private participation

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

இதர மாநிலங்களிலிருந்து மின்சாரம்: ஆர்க்காடு வீராசாமி

சென்னை, நவ. 26: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க அசாம், ஹரியாணா மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறப்படும் என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார். நிருபர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 7,500 மெகாவாட். தி.மு.க. அரசு ஏற்பட்ட பிறகு, தொழில் வளம் பெருக, புதிய தொழில்நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதனால், மின் தேவை கடந்த காலத்தை விட அதிகரித்து தற்போது 8,800 மெகாவாட்டை எட்டிவிட்டது.

தொழில் வளம் காரணமாக, மின் தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மின் விநியோகமும் குறைந்துள்ளது. இந்நிலை டிசம்பர் வரையில் நீடிக்கும். பின்னர் சீராகும்.

மின்சாரத் தேவையைச் சமாளிக்க பல்வேறு மாநிலங்களுடன் தமிழகம் பேசி வருகிறது. இது குறித்து மாநில மின் வாரியத் தலைவர்கள் பேசி வருகின்றனர். இதற்கான உடன்பாடு இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாகிவிடும். இந்த மாநிலங்களிலிருந்து மொத்தம் 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின் பற்றாக்குறையின் விளைவாக கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற யோசனையை தமிழக முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார்.

ரூ.32 ஆயிரம் கோடியில் மின்நிலையம்: தமிழகத்தில் மொத்தம் ரூ.32 ஆயிரம் கோடியில் இரு புதிய மின் உற்பத்தி நிலையங்களை மத்திய அரசு தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக மரக்காணம், கடலூர் ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசே முழு அளவு முதலீட்டையும் செலுத்தும்.

இந்த இரு மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 8 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படும். இதில் 50 சதவீதத்தைத் தமிழகத்துக்கு அளிக்கும்படி கோரப்படும்.

ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையத்தை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியில் 90 சதவீதம் பூர்த்தியாகிவிட்டது. மீதியும் விரைவில் முடிந்துவிடும். தற்போது, சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 18 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் அளிக்கப்படுகிறது. அது போல் நெசவாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. அத்துடன், 10 லட்சம் குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் உற்பத்தி அடுத்த ஆண்டுதான் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மின் உற்பத்தியை விரைவுபடுத்துமாறு பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த மின் நிலையம் ஜனவரியில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரியில் சீராகும்

தொழில் வளம் காரணமாக மின் தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை நேர்ந்துள்ளது. மத்திய அரசின் மின் விநியோகமும் குறைந்துள்ளது. இந்நிலை டிசம்பர் வரையில் நீடிக்கும். நிலைமை சரியானதும் ஜனவரியில் சீராகும்.

இருந்தாலும் மின்சாரப் பகிர்மானத்தின்போது இழப்பு நேர்வது இதர மாநிலங்களை விட பெரிய அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
—————————————————————————————————————————-

வணிக மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி: ஆர்க்காடு வீராசாமி

சென்னை, நவ. 26: தமிழகத்தில் முதல் முறையாக வணிக அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். இதன்படி 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்கும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சார நிலைமை குறித்து தொழிலதிபர்களுடன் அவர் திங்கள்கிழமை காலையில் விவாதித்தார்.

அதையடுத்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வணிக ரீதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்து மூன்று மாதங்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் உருவான கருத்தை ஆராய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

வணிக அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எந்தெந்த தொழில் நிறுவனங்கள் முன் வருகின்றனவோ, அவை தமிழ்நாடு மின்வாரியத் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை வாரியம் பரிசீலிக்கும். அதன் அறிக்கை அரசு நியமிக்கும் குழுவிடம் அளிக்கப்படும். அக்குழு விண்ணப்பித்துள்ள நிறுவனம் எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும் என்று ஆராய்ந்து தலைமைச் செயலரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும். பிறகு, முதல்வரின் ஒப்புதலை அடுத்து ஆணை பிறப்பிக்கப்படும்.

இதுவரை வணிக ரீதியில் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக 10 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான விண்ணப்பம் குறித்து குழு ஆராய்ந்து வருகிறது. இது இம்மாத இறுதிக்குள் அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்.

மின் பற்றாக்குறை:

தமிழகத்தில் இந்த ஆண்டு காற்றாலை மூலம் கிடைக்க வேண்டிய மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக, நெய்வேலி அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய 1,500 மெகாவாட் மின்சாரம் ஆயிரம் மெகாவாட்டாகக் குறைந்துவிட்டது.

இருந்த போதும், மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க உரிய ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது குறித்து தொழிலதிபர்களுடன் விவாதிக்கப்பட்டது.

சில தொழிலதிபர்கள் தங்களது ஜெனரேட்டர்களுக்குப் பயன்படுத்தும் எரி எண்ணெய் (ஃபர்னஸ் ஆயில்) மீதான மதிப்புக் கூட்டு வரியில் (வாட்) சலுகை அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அது குறித்து முதல்வர், நிதியமைச்சர், நிதிச் செயலருடன் கலந்து பேசப்பட்டது. அதையடுத்து வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அந்நிறுவனங்களின் மீதான வாட் வரியை விலக்கிக் கொள்ளப்படுகிறது.

தொழிலதிபர்களுடன் நடைபெற்ற கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர், உறுப்பினர் (விநியோகம்) ஆகியோர் பங்கேற்றனர். எதிர்காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க இக்கூட்டம் பெரிதும் உதவியது. இதன் மூலம் மின்வெட்டு ஏற்படாமல் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு உறுதி அளித்தது. தவிர்க்க இயலாத நிலை ஏற்பட்டால், ஒரு சில பகுதிகளில் அதிகபட்சமாக அரை மணி நேரம் மின்சாரத் தடையை ஏற்படுத்தும் நிலை வரலாம். அதையும் தவிர்க்க மின்வாரியம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றார் ஆர்க்காடு வீராசாமி.

Posted in Aarkadu, addition, Alternate, Arcadu, Arcaud, Arcot, Arcot N Veerasamy, Assam, Atomic, Bills, Capacity, Center, Centre, Climate, Coal, Construction, Consumers, Crisis, Cuddalore, Dabhol, Demand, Disruption, Electricity, energy, Enron, Govt, Haryana, households, Industry, infrastructure, investments, mega power, megapower, Megawatts, Monsoon, MW, Natural, NLC, Nuclear, Power, Powercut, Powercuts, Prices, Private, Rains, Rathnagiri, Ratnagiri, Resources, Shortage, Solar, State, Supply, Veerasami, Veerasamy, veeraswami, veeraswamy, Windmills | Leave a Comment »

Nationwide strike by bank staff from March 28 to 30 (called off)

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

மார்ச் 28 முதல் வங்கிகள் ஸ்டிரைக்: 6 நாள் சேவை இல்லை

சென்னை, மார்ச் 21: ஏற்கெனவே அறிவித்தபடி நாடு முழுவதும் உள்ள 9 லட்சம் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரும் 28-ம் தேதி முதல் மூன்று நாள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

இதனால் ஸ்டிரைக், விடுமுறை நாள்கள், நிதியாண்டு கணக்கு முடிப்பு நாள் காரணமாக தொடர்ந்து ஆறு தினங்கள் பொது மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஏப். 3-ம் தேதிதான் (செவ்வாய்க்கிழமை) பொது மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்கும்.

பிரதமர் மன்மோகன் சிங்குடன் தில்லியில் திங்கள்கிழமை நடந்த பேச்சுவார்த்தை, வங்கிகளின் நிர்வாகத் தரப்பு அமைப்பான இந்திய வங்கிகள் சங்கத்தின் உயர் அதிகாரிகள் குழுவுடன் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் பலன் ஏதும் ஏற்படவில்லை.

இதையடுத்து திட்டமிட்டபடி மார்ச் 28, 29, 30 ஆகிய மூன்று தினங்கள் பாரத ஸ்டேட் வங்கி உள்பட அனைத்து வங்கிகளையும் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில பொதுச் செயலர் ஏ. ரங்கராஜன் தெரிவித்தார்.

மார்ச் 31 (சனிக்கிழமை) மகாவீர் ஜயந்தி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது; ஏப்.1 ஞாயிற்றுக்கிழமை. நிதி ஆண்டு கணக்கு முடிப்பு தினம் ஏப்.2-ம் தேதி (திங்கள்கிழமை) பொது மக்களுக்கு வங்கிகளின் சேவை கிடைக்காது.

வங்கிகளில் உள்ள ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும், பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வங்கி ஊழியர் இறக்கும் நிலையில் மனைவிக்கு அல்லது வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை, வங்கிப் பணிகளை தனியார்வசம் ஒப்படைக்கக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

Posted in Association, Banking, Banks, Capitalism, Communism, Disruption, Employment, IBA, Inertia, job, Jobless, Marxism, Serivices, Socialism, Staff, Strike, Unemployed, Venkatachalam | Leave a Comment »

Bihar Fodder Scam Investigation – CBI Director apologises for transferring police officers

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007

தீவன ஊழல் வழக்கு: மன்னிப்பு கேட்டார் சிபிஐ இயக்குநர்ராஞ்சி, ஜன. 12: பிகார் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், நீதிமன்ற அனுமதி பெறாமல், மூத்த புலனாய்வு அதிகாரியை மாற்ற முயன்றதற்காக, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இயக்குநர் விஜய் சங்கர், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, தலைமை நீதிபதி எம்.கே.விநாயகம் தலைமையிலான உயர் நீதிமன்ற பெஞ்ச் முன்னிலையில், இந்திய சொலிசிட்டர் ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி உடன் வர, சிபிஐ இயக்குநர் விஜய் சங்கர் வியாழக்கிழமை நேரடியாக ஆஜரானார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் கூறியதாவது:

நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு சிறிதளவும் இல்லை. நடந்தவற்றுக்காக என் சார்பிலும், நான் தலைமை வகிக்கிற துறை சார்பிலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்.

தில்லியில் சிபிஐ போலீஸ் கண்காணிப்பாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்பதால், அந்த இடங்களுக்கு தகுந்த அதிகாரிகளை நியமிக்க அல்லது இடமாறுதல் செய்வதற்கான வாய்ப்புகளைத்தான் நான் பரிசீலித்தேன் என்று விஜய் சங்கர் அதில் கூறியிருந்தார்.

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை அடுத்து அவருக்கு எதிரான நடவடிக்கைகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்.சி.செüத்ரிக்கு இடமாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, சொந்தக் காரணங்களின் அடிப்படையில் விருப்ப ஓய்வு பெற செüத்ரி முன்வந்ததைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 17-ம் தேதி சிபிஐ இயக்குநர் விஜய் சங்கருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் அந்த அதிகாரிக்கு மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று அந்த நோட்டீஸில் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றம் தலையிட்டதன் பேரில், செüத்ரிக்கு அளிக்கப்பட்ட இடமாறுதல் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

Posted in Bihar, CBI, Disruption, Fodder Scam, GI Vaaganwathi, GI Vaahanvathi, Investigation, Jharkand, Jharkhand, Lalloo Prasad Yadav, Laloo, Lalu, MK Vinayagam, MK Vinayakam, Obstruction of Justice, Vijay Sankar | Leave a Comment »

Trade union strike shuts down three communist-ruled states

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

பொது வேலைநிறுத்தத்துக்கு நாடு முழுவதும் ஓரளவு ஆதரவு: மேற்கு வங்கம், கேரளத்தில் முழு வெற்றி – ரூ.2000 கோடி இழப்பு: “அசோசெம்’ தகவல்

புது தில்லி, டிச. 15: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பொருளாதார மற்றும் தொழிற் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதித்தது.

குறிப்பாக இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றது.

அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விரிவான சட்டம் இயற்றுவது, அரசுப் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் நிறைவேற்றுவதைத் தடை செய்வது, லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தத்துக்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்திருந்தன.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் ரயில், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அதேபோல் மருந்து தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் மற்றும் சிறு வணிகர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

நாட்டின் சில இடங்களில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில்லறை வணிகர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாநிலத்தில் தொழில் நகரங்களான பாரக்பூர், துர்காபூர் மற்றும் ஹூக்ளியில் தொழிற்சாலைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன. விவசாயிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். நிலக்கரி சுரங்கங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தேயிலைத் தோட்டங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இந்த வேலைநிறுத்தத்தில் அனைத்துத் தரப்பினரும் தாங்களாகவே முன்வந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது என்று சிஐடியு.வின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் ஷியாமளா சக்கரவர்த்தி தெரிவித்தார். அதேசமயம் மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வித பாதிப்புமின்றி வழக்கம்போல் இயங்கின.

கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றதால் ரூ.2000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை கூட்டமைப்பான “அசோசெம்’ தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள 39 ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள் மற்றும் தபால்துறைப் பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் அமைப்பு ரீதியிலான தொழிலாளர்கள் 30 லட்சம் பேர் பங்கேற்றனர். மாநிலத்தில் தடையுத்தரவை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

பொது வேலைநிறுத்தம்: திருப்பூரில் ரூ.30 கோடி உற்பத்தி பாதிப்பு

திருப்பூர், டிச. 15: மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக திருப்பூரில் 60 சதத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்படாததால் சுமார் ரூ.30 கோடி மதிப்பிற்கு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த பொது வேலைநிறுத்தத்தால் திருப்பூரில் 60% பனியன் நிறுவனங்கள், சார்பு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. நகரில் நடந்த பொது வேலைநிறுத்தத்திற்கு சிஐடியூ, ஏஐடியூசி ஆகிய 2 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

எம்எல்எப், ஏடிபி, ஐஎன்டியூசி, எல்பிஎப் ஆகிய தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை.

பொது வேலைநிறுத்தத்தினால், பனியன் நிறுவனங்களில் சுமார் ரூ.30 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஒருநாள் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கிகள் முழுஅளவில் செயல்படாததால், அன்னியச் செலாவணி பரிமாற்றமும் தடைப்பட்டது.
பொது வேலைநிறுத்தம்: 38 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

சென்னை, டிச. 15: தமிழகம் முழுவதும் நடந்த பொதுவேலை நிறுத்தம் தொடர்பான மறியல் போராட்டத்தில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நடந்த மறியல் போராட்டத்தில் 4,417 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பொது வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பெரும்பாலான பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின. மாநில அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் வழக்கம் போல் இயங்கின.

ஆனால் வங்கி, இன்சூரன்ஸ் அலுவலங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

மாநிலம் முழுவதும்: மாநிலம் முழுவதும் 340 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. 13 இடங்களில் ரயில் மறியல் நடந்தது. இதுதொடர்பாக, 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மறியல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் சிவபுண்ணியம், உலகநாதன், ராஜசேகரன் ஆகியோர் கைதாகினர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சென்னையில் அண்ணா சாலை, அண்ணா சிலை, தி.நகர், பாரிமுனை, குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் மேற்கொண்டனர்.

Posted in Activists, AITUC, Arrest, Banks, Chennai, CITU, Communism, Communist parties, Communists, CPI, CPI(M), Disruption, Economy, Factory, Finance, Imapct, India, Insurance, Kerala, Kolkata, Labor, Labour, Law, Left, Madras, Mraxist Communist, Order, Orissa, Police, PSU, SBI, Strike, Tamil, Tiruppur, trade unions, Tripura, unemployment, UPA, WB, West Bengal, Worker | Leave a Comment »