Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Dinathanthi’ Category

Tamil Cinema Faces – Ku Sa Krishnamoorthy: Biosketch (Dinathanthy)

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

திரைப்பட வரலாறு 873
எம்.ஜி.ஆர். நடித்த “அந்தமான் கைதி”
கதை, வசனம், பாடல் எழுதிய கு.சா.கிருஷ்ணமூர்த்தி


எம்.ஜி.ஆர். நடித்த “அந்தமான் கைதி” படத்துக்கு கதை, வசனம், பாடல் எழுதி புகழ் பெற்றவர் கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. “ரத்தக்கண்ணீர்” படத்தில் சிதம்பரம் ஜெயராமன் பாடிய “குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது” என்ற பாடல் இவர் எழுதியதே.

ma-po_si_kalainjar.jpg

நாடக உலகிலும், பிறகு சினிமா துறையிலும் புகழ் பெற்று விளங்கியவர், கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி.

இவர், 1914-ம் ஆண்டு மே 19-ந்தேதி கும்பகோணத்தில் பிறந்தார். பெற்றோர் சாமிநாதபிள்ளை – மீனாட்சி அம்மாள்.

நாடக ஆசை

கிருஷ்ணமூர்த்தி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, நாடக ஆசை தொற்றிக்கொண்டது. எனவே, படிப்பை விட்டு விட்டு, பாய்ஸ் நாடகக் கம்பெனி ஒன்றில் சேர்ந்தார்.

இவர் நாடக நடிகராக இருந்தபோது, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், விஸ்வநாததாஸ், வேலுநாயர் போன்றோர், நாடகத்துறையில் புகழ் பெற்று விளங்கினார்கள். இவர்கள் ஸ்பெஷல் நாடகங்கள் நடத்த இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா முதலிய நாடுகளுக்குச் சென்றபோது, கு.சா.கிருஷ்ணமூர்த்தி அந்தக் குழுக்களிலும் இடம் பெற்றார். ஒரு காலகட்டத்தில், கிருஷ்ணமூர்த்திக்கு நாடக வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது. அதனால் புதுக்கோட்டையில் ஒரு பதிப்பகத்தையும், படக்கடையையும் தொடங்கினார்.

அந்தமான் கைதி

இந்த சமயத்தில், வயதான ஒருவருக்கு இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி, கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தில் நடந்தது. அந்த சம்பவம் அவர் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “அந்தமான் கைதி” என்ற நாவலை எழுதினார். அதை நாடகமாக்கி, நண்பர்களுடன் சேர்ந்து நடத்தி வந்தார்.

நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, அதை புத்தகமாக அச்சடித்து, 11/2 ரூபாய் விலை போட்டு விற்பனை

செய்தார்.டி.கே.எஸ்.சகோதரர்கள், நாடக உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது. டி.கே.சண்முகத்துக்கு, “அந்தமான் கைதி”யின் நாடகப் பிரதி ஒன்றை கிருஷ்ணமூர்த்தி அனுப்பி வைத்தார்.

அதைப்படித்த டி.கே.சண்முகம், “எடுத்தேன்; படித்தேன்; முடித்தேன். அற்புதம், அற்புதம், அற்புதம்!” என்று கிருஷ்ணமூர்த்திக்கு பதில் எழுதினார். “இந்த நாடகத்தை, என் நாடக சபை மூலம் மேடை ஏற்ற விரும்புகிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு கிருஷ்ணமூர்த்தி சம்மதம் தெரிவித்தார். “ஒருநாள் நாடகத்துக்கு, ராயல்டியாக (ஆசிரியருக்கான சம்பளம்) நாலணா கொடுத்தால் போதும்” என்றும் குறிப்பிட்டார்.

மூன்று வார ஒத்திகைக்குப்பின், “அந்தமான் கைதி” நாடகத்தை டி.கே.எஸ்.சகோதரர்கள் அரங்கேற்றினர்.

நாடகம் பெரிய வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், எழுத்தாளர்கள் “கல்கி”, “வ.ரா” போன்றோர், நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினர்.

சினிமா

“அந்தமான் கைதி” நாடகத்தை, 1952-ம் ஆண்டில் ராதாகிருஷ்ணா பிலிம்சார் படமாகத் தயாரித்தார்கள்.

எம்.ஜி.ஆர். வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைத்திருந்த நேரம் அது. அவர் இப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். “அந்தமான் கைதி” நாடகத்தில் கதாநாயகியாக நடித்த எம்.எஸ்.திரவுபதி, திரைப்படத்திலும் கதாநாயகியாக (எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக) நடித்தார்.

மற்றும் பி.கே.சரஸ்வதி, எஸ்.டி.சுப்புலட்சுமி, திக்குரிச்சி சுகுமாரன் நாயர், டி.எஸ்.பாலையா, கே.சாரங்கபாணி ஆகியோரும் நடித்தனர். லலிதா – பத்மினி – ராகினியின் நடனமும் இப்படத்தில் இடம் பெற்றது.

இந்தப் படத்துக்கு கதை, வசனம், பாடல்களை கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதினார். அக்காலத்து பிரபல இசை அமைப்பாளர் ஜி.கோவிந்தராஜ×லு நாயுடு இசை அமைத்தார்.

“அந்தமான் கைதி”, ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. கதையின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் பெரிதும் பாராட்டப்பட்டன.

இந்தப் படத்தில் ஒரு பாடல். ஒரு பெரிய பை நிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு வரும் பி.கே.சரஸ்வதி, “அஞ்சு ரூபா நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி, மிச்சமில்லே. காசு மிச்சமில்லே. கத்திரிக்காய் விலை கூட கட்டு மீறலாச்சு; காலம் கெட்டுப்போச்சு” என்று பாடுவார்!

இது அன்றைய விலை நிலவரம். இப்போது அந்தக் காட்சியை எடுத்தால், “நூறு ரூபா நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி…” என்றுதான் பாடலை மாற்றவேண்டும்!

ரத்தக்கண்ணீர்

தொடர்ந்து, பல படங்களுக்கு கு.சா.கிருஷ்ணமூர்த்தி பாடல்கள் எழுதினார்.

எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படத்தில் சிதம்பரம் ஜெயராமன் இசை அமைத்துப் பாடிய “குற்றம் புரிந்தவன், வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது!” என்ற பாடல் கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதியதுதான்.

இந்தப்பாடல் பெரிய `ஹிட்’ ஆகி, கு.சா.கிருஷ்ணமூர்த்திக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது. இதில் பலருக்கும் தெரியாத ஒரு செய்தி: கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் இந்தப் பாடலை, சிதம்பரம் ஜெயராமன் ஏற்கனவே இசை அமைத்துப்பாடி, அது தனி இசைத்தட்டாகவும் வந்துவிட்டது! அதையேதான், “ரத்தக்கண்ணீர்” படத்திலும் பயன்படுத்திக் கொண்டார்கள். இடையிடையே எம்.ஆர்.ராதா பேசும் வசனத்தை சேர்த்துக் கொண்டார்கள். அது மட்டுமே புதிது.

சின்னப்பா நடித்த “மங்கையர்க்கரசி” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கு.சா.கிருஷ்ணமூர்த்திக்குத்தான் வந்தது. ஆனால், இளைஞரான சுரதாவை பட அதிபரிடம் அழைத்துச் சென்று, “இவர் திறமைசாலி. இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இதனால், வசனம் எழுதும் வாய்ப்பு சுரதாவுக்கு கிடைத்தது. கு.சா.கிருஷ்ணமூர்த்தியும், கம்பதாசனும் பாடல் எழுதினார்கள்.

ku_saa_krishnamoorthy.jpg
750 பாடல்கள்

கு.சா.கிருஷ்ணமூர்த்தி திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் சுமார் 750. அவற்றில் மிகவும் பிரபலமான பாடல்கள்:-

* “நிலவோடு வான் முகில் விளையாடுதே…” (“ராஜராஜன்” படத்தில் ஏ.பி.கோமளாவும், சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து பாடிய பாடல்)

* எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்… (“தை பிறந்தால் வழி பிறக்கும்” படத்தில் டி.எம்.சவுந்தரராஜன் பாடும் பாட்டு)

* “சொல்லாலே விளக்கத் தெரியலே” (“சக்ரவர்த்தி திருமகன்” படத்தில் பி.லீலா பாடிய பாட்டு)

* “அகில பாரத பெண்கள் திலகமாய்…” (ஏவி.எம். “பெண்” படத்தில் வைஜயந்திமாலா பாடுவதுபோல் அமைந்த காட்சி. பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி)

* “காதல் கனிரசமே” (“மங்கையர்க்கரசி” படத்தில் பாடியவர் பி.யு.சின்னப்பா.)

அனுபவங்கள்

கு.சா.கிருஷ்ணமூர்த்தி, தன் கலை உலக அனுபவங்கள் பற்றி ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

“திரை உலகில், நான் முதன் முதலில் பாடல் ஆசிரியனாகத்தான் நுழைந்தேன். “ஆண்டாள்”, “போஜன்” முதலிய படங்களுக்கு பாடல் எழுதினேன்.

“அந்தமான் கைதி” நாடகம் படமானபோது, கதை, வசனம், பாடல் எழுதினேன்.

நான் சென்னை வர காரணமாக இருந்தவர், ஜுபிடர் அதிபர் சோமு. அவர் என்னிடம் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்து, என்னை நிரந்தரமாக சென்னையில் குடியேறச் சொன்னார். ஜுபிடர் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தேன்.

ஜுபிடர் பிக்சர்சார் “சந்திரகாந்தா” கதையை படமாக்க ஏற்பாடு செய்தனர். அதில் சுண்டூர் இளவரசன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில், நம்மாழ்வார் என்ற நடிகரை நடிக்க வைக்க இருந்தார்கள். நாடகங்களில் நடித்து வந்த பி.யு.சின்னப்பாவைத்தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நான் வாதாடி, வெற்றியும் பெற்றேன். சின்னப்பாவுக்கு முதன் முதலாகப் புகழ் தேடித்தந்த படம் சந்திரகாந்தா.

வகீதா ரஹ்மான்

டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மருமகன், “ஒன்றே குலம்” என்ற படத்தைத் தயாரித்தார். அதற்கு கதை – வசனம் எழுதியது

நான்தான்.அப்போது ஒரு சிறு பெண், தன் தாயாருடன் வந்தார். “ஒரு சிறு வேடமாக இருந்தாலும் எனக்கு வாங்கிக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அந்தப் படத்தில் நர்ஸ் வேடம் வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பெண்தான், பிற்காலத்தில் அகில இந்தியப் புகழ் பெற்ற நடிகை வகீதா ரஹ்மான்!

மெட்டு

பொதுவாக, நான் எழுதும் பாடல்களுக்கு நானே மெட்டமைத்து, பாடிக்காட்டுவேன். பிரபல இசை அமைப்பாளரான ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், சுதர்சனம் போன்றோர், நான் போட்ட மெட்டையே `ஓகே’ செய்வதுண்டு.

டி.கே.எஸ். சகோதரர்களின் “அவ்வையார்” நாடகத்தில், நான் எழுதிய “பெருமை கொள்வாய் தமிழா” என்ற பாடலை டி.கே.சண்முகம் உணர்ச்சி பொங்கப் பாடுவார். நாகர்கோவிலில் இந்த நாடகம் நடந்தபோது, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வந்திருந்தார். இந்தப்பாடல் பாடப்பட்டபோது, அதை எழுதியது நான்தான் என்று கவிமணியிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள். அவர் என் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். மெய்சிலிர்த்துப்போனேன்.”

இவ்வாறு கு.சா.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம்

கு.சா.கிருஷ்ணமூர்த்தி, 1943-ல் புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி அமைப்பாளராக இருந்தார். அப்போது, புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக (மன்னர் ஆட்சியில்) இருந்தது. அங்கு மக்கள் ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி முக்கிய பங்கு கொண்டார்.

“சிலம்புச் செல்வர்” ம.பொ.சி.யின் நெருங்கிய சீடர்களில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவர். தமிழரசு கழகத்தை ம.பொ.சி. தொடங்கியது முதல், அதில் செயற்குழு உறுப்பினராக அங்கம் வகித்தார். எல்லைப் போராட்டங்களில் பங்கு கொண்டார்.

சுரதா, கு.மா.பாலசுப்பிரமணியம், ஏவி.எம்.ராஜன், அவிநாசிமணி ஆகியோரின் திரை உலகப் பிரவேசத்துக்கு உறுதுணையாக இருந்தவர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி.

“தமிழ் நாடக வரலாறு”, “அருட்பா இசை அமுதம்”, “என் காணிக்கை”, “அந்தமான் கைதி” முதலான நூல்களை எழுதியுள்ளார்.

1966-ல் தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்ற கு.சா.கிருஷ்ணமூர்த்தி, 1990-ம் ஆண்டு மே 13-ந்தேதி தமது 76-வது வயதில் காலமானார்

Posted in Biosketch, Cinema, Dinathanthi, Dinathanthy, Faces, Films, Krishnamoorthy, Krishnamurthy, Movies, people | 1 Comment »

‘Abhirami’ Ramanathan: Dinathanthi Biosketch – Tamil Movie History – Notable Faces

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(801)
படத்தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர்
3 துறைகளில் `அபிராமி’ ராமநாதன் சாதனை

தியேட்டர் அதிபர், திரைப்பட வினியோகஸ்தர், சினிமா தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட `அபிராமி’ ராமநாதன், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

திரை உலகில் பல முக்கிய பொறுப்புகளை வகிக்கும் `அபிராமி’ ராமநாதனின் சினிமாப் பிரவேசம், எடுத்த எடுப்பில் நிகழ்ந்து விடவில்லை. என்ஜினீயருக்கு படித்து விட்டு தொழில் துறையில் அடியெடுத்து வைத்தவர், அடுத்து தியேட்டர் நிர்வாகத்துக்கு வந்தார். பட வினியோகத் தொழிலை ஆரம்பித்தார். பட அதிபராகவும் ஆனார்.

அபிராமி ராமநாதனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி. தந்தை சிவலிங்கம் செட்டியார். தாயார் மீனாட்சி ஆச்சி.

திரை உலகுக்கு வந்தது எப்படி என்பது பற்றி அபிராமி ராமநாதன் கூறியதாவது:-

அபிராமி ராமநாதன்

“என் கலை உலக வாழ்க்கையை, அப்பாதான் ஆரம்பித்து வைத்தார். அப்பா 1956-ம் ஆண்டில் பல படங்களுக்கு `பைனான்ஸ்’ செய்து வந்தார். படங்களை வாங்கி வெளியிடும் வினியோகத் துறையிலும் இருந்து வந்தார்.

அப்பா இப்படி வினியோக முறையில் வாங்கி வெளியிட்ட முதல் படம் அப்போது ஜெமினியின் “வஞ்சிக்கோட்டை வாலிபன்” இந்தப் படத்தை சென்னை நகர உரிமைக்கு அப்போதே
2 லட்சம் ரூபாய்க்கு `அவுட் ரேட்’ முறையில் வாங்கினார் அப்பா. ஒரு லிட்டர் பெட்ரோல் 14 பைசாவாக இருந்த நாளில், ஒரு படத்தின் மீது நம்பிக்கை வைத்து 2 லட்ச ரூபாய்க்கு உரிமை வாங்கியிருந்தார் என்றால் தனது தொழிலின் மீது அப்பாவுக்கு எவ்வளவு நம்பிக்கை!

சென்னையில் வெலிங்டன், பிரபாத், சரசுவதி ஆகிய தியேட்டர்களில் படத்தை திரையிட்டார். அப்போதெல்லாம் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நாலணா, எட்டணாதான். ஆனால் வெலிங்டன் தியேட்டரில் மட்டும் 21/2 ரூபாய் கட்டணம். அந்த தியேட்டர் “பால்கனி” அமைப்புடன் ரசிகர்களை கவரும் விதத்தில் இருந்ததே இதற்குக் காரணம்.

அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே அப்பா வினியோகம் செய்த படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பேன். ரசிகர்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். இப்போது ஒரு படத்தை பார்த்ததும் அது எப்படி ஓடும் என்று என்னால் கணிக்க முடிகிறது என்றால், அது அன்றே எனக்குள் விழுந்த விதை.

விவேகானந்தா கல்லூரியில் “பி.ï.சி” முடித்து விட்டு, கிண்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தேன்.

ஓமியோபதி மருத்துவப் படிப்பிலும் சேர்ந்து தேறினேன்.

வருமானம்

பள்ளியில் படிக்கிற நாட்களிலேயே எனக்கு எழுதுவதில் ஆர்வம் வந்துவிட்டது. பத்தாவது படிக்கும்போது `ஸ்டூடண்ட்’ என்ற மாணவர் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனேன்.

கல்லூரிக்கு வந்த பிறகு ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அப்பா என் கைச்செலவுக்கு மாதம் 30 ரூபாய் அனுப்பி வைப்பார். என் தேவைகளுக்கு இன்னும் சம்பாதிக்க விரும்பியபோது எனக்கு கைகொடுத்தது ஒரு கேமரா. நான் ஏழாவது படித்த நேரத்தில் ஒரு கேமரா வாங்கித் தந்திருந்தார். அப்போது சினிமா ஸ்டில் போட்டோ கிராபராக இருந்த `அப்பர்’ என்பவரிடம் கேமரா இயக்க கற்றுக்கொண்டேன்.

இந்த கேமரா அனுபவம் எனக்கு கைகொடுத்தது. கல்லூரி விழாக்களை நான்தான் படம் எடுப்பேன். நண்பர்கள் வீட்டு திருமணங்களில் நான்தான் ஆஸ்தான போட்டோகிராபர்!

இப்படி படிப்போடு, வருமானமும் எனக்கு உயர்ந்து வந்தது. என் சொந்த வருமானத்தில் ஒரு மோட்டார் பைக் வாங்கினேன்.

இதெல்லாம் போதாதென்று நான் இருந்த ஹாஸ்டலிலும் பெட்டிக்கடை வியாபாரம் செய்தேன்! என் ரூம் ஜன்னல் வழியாகத்தான் வியாபாரம். சிகரெட், பாக்கு, பீடா, கடலை மிட்டாய் எல்லாம் கிடைக்கும்!

சின்ன வயதில் அப்பா என்னிடம் “நேர்மையான முறையில் எதை வேண்டுமானாலும் செய்” என்று கூறினார். எனவேதான் போட்டோகிராபர், பெட்டிக்கடை என்று என் `வியாபாரத்தை’ விஸ்தரித்ததில், 1970-ல் என் பேங்க் பேலன்ஸ் 10 ஆயிரம் ரூபாயை தொட்டது. படிப்பிலும் நன்றாகவே தேறினேன்.

சொந்தத் தொழில்

கல்லூரி படிப்பு முடிந்த கையோடு அப்பா என்னை தொழில் துறையில் பழக்குவிக்க நினைத்தார். கீரனூரில் எங்களுக்கு ஆயில் மில் இருந்தது. அதில் என்னை சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தில் என்னிடம், “வேலைக்கு போகிறாயா? கம்பெனியில் சேருகிறாயா?” என்று அப்பா கேட்டார்.

சொந்தமாய் தொழில் செய்ய விரும்புவதாகக் கூறினேன்.

உன்னிடம் “முதல் (பணம்) இருக்கிறதா?” என்று கேட்டார்.
“10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது” என்று பெருமையாக கூறினேன்.அப்பா மறுபேச்சு பேசவில்லை. “சரி! செய்” என்றார்.

சென்னை அசோக் நகரில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தேன். எனக்கு அனுபவமில்லாத அந்த தொழிலில் சறுக்கல் ஏற்பட, ஆறே மாதத்தில் 10 ஆயிரமும் நஷ்டம்.

விஷயத்தை அப்பாவிடம் சொல்லியாக வேண்டுமே. சொன்னேன்.

“பூரா பணமும் போய்விட்டதா?” என்று அப்பா கேட்டார்.

“ஆமாம்” என்று நான் தலையசைத்ததும், “தொழிலை ஒழுங்காக கற்றுக்கொள்” என்று சொல்லி விட்டு கீரனூரில் உள்ள எங்கள் ஆயில் மில்லுக்கு என்னை அனுப்பினார். அங்கு ஒரு வருடம் இருந்தேன். சமையல்காரர்கூட கிடையாது. என் தேவைகளை நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் அப்பா கண்டிப்பாக இருந்தார்.

சோதனையில் தேறிவிட்டதால், அடுத்தபடியாக ஆந்திராவில் இருந்த எங்கள் காட்டன் மில்லுக்கு என்னை அப்பா அனுப்பி வைத்தார். அங்கே ஜுனியர் என்ஜினீயர் என்ற நிலையில் ஆரம்பித்து, புளோர் என்ஜினீயர், புளோர் சூப்பர்வைசர், உதவி மானேஜர், மானேஜர், டைரக்டர் என்று படிப்படியாக உயர்ந்தேன்.

`அபிராமி’ உதயம்

இந்த நேரத்தில்தான் அப்பா சென்னை புரசைவாக்கத்தில் ஒரு இடத்தை வாங்கி, அங்கே தியேட்டர் கட்ட முடிவு செய்தார். என்னை அழைத்த அப்பா, “நீ என்ஜினீயருக்குத்தானே படிச்சே. நீயே தியேட்டர் வேலையை கவனி. சைட் என்ஜினீயரா இரு” என்று கூறினார். அதனால், புரசைவாக்கத்தில் “அபிராமி”, “பாலஅபிராமி” என 2 தியேட்டர்களைக் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன்.

1974-ல் ஆரம்பித்த தியேட்டர் கட்டும் பணி 1976-ல் முடிந்தது. 1976 ஜுலை 2-ந்தேதி “அபிராமி”யை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திறந்து வைத்தார்.

Posted in Abhirami, Abirami, Biosketch, Biz, Cinema, Dinathanthi, Distributor, Enetrtainment, Faces, Films, History, Industry, Movie, Movies, Producer, Rajni, Ramanadhan, Ramanathan, Sivaji, Theaters, Theatres | Leave a Comment »